| ஈழநூல் 74 | |
| நூல் |
முற்றத்து ஒற்றைப் பனை |
| ஆசிரியர் |
செங்கை ஆழியான |
| மின்னூலாக்கம் |
தமிழச்சு |
| மின்பதிப்பு | ஈழநூல் |
முற்றத்து ஒற்றைப் பனை
'செங்கை
ஆழியான்'
-----------------------------------------------------------
முற்றுத்து
ஒற்றைப் பனை
நகைச்சுவை நவீனம்
'செங்கை ஆழியான்'
ஒரு
'சிரித்திரன்'
பிரசுரம்
-------------------------------------------------------------
முதலாம்
பதிப்பு, யூன், 1972
முற்றத்து ஒற்றைப் பனை.
(C) செங்கை ஆழியான், (க.
குணராசா, B. A. Hons, C. A. S.)
அச்சுப்பதிவு: ஸ்ரீ லங்கா அச்சகம்,
யாழ்ப்பாணம்.
ஓவியம்: 'கணேஷ்'
ஆசிரியரின் ஏனைய நு}ல்கள்
1)
ஆச்சி பயணம் போகிறாள் 2-00
2) நந்திக்கடல் 2-00
3) சுருட்டுக்கைத்தொழில்
1-00
4) அலைகடல்தான் ஓயாதோ? 1-25
5) சித்திரா பௌர்ணமி -/80
6) ஒரு
பட்டதாரியும் பல்கலைக்கழகமும் (அச்சில்)
'சிரித்திரன்' பிரசுரம்,
67,
பிறவுன் வீதி,
யாழ்ப்பாணம்.
-------------------------------------------------------------
1
சோளகம்
பெயர்ந்துவிட்டது.
சித்திரைமாதக் கழிவில் ஏற்படும் இடி மின்னற் புயுலுடன்
சோளம் வீசத் தொடங்கிவிட்டது. மூன்று நாட்கள் இடைவிட்டு விட்டு மழை பொழிந்து
தீர்த்தது.
"ஒரு வரியமும் இல்லாதமாதிரி, இந்தமுறை சித்திரைக் குழப்பம் ஓமோம்
சரியான மழை.....!" என்று வாங்கு மூலையில் இருந்த படி பொன்னு ஆச்சி முணுமுணுத்தாள்.
பொன்னு ஆச்சி முணு முணுத்தது, தலைவாசல் திண்ணையில் குந்தி இருந்து குளிருக்கு
அடக்கமாகச் சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த கொக்கர்' மாரி முத்தரின் காதுகள்
விழவே செய்தது.
'என்ன முணுமுணுக்கிறாய்' என்பதுபோல மனைவியை நிமிர்ந்து
பார்த்தார்.
உர்'ரென்ற இரைச்சலோடு வீசிய காற்றினால், முற்றத்துப்
பனையிலிருந்து பிடிகழன்ற கங்குமட்டை ஒன்று 'தொப்'பென்று தலைவாசல் கூரையில்
விழுந்து, முற்றத்தில் தாவியது. வாங்கில் இருந்த படியே பனைமரத்தை அண்ணார்ந்து
பார்த்தாள், பொன்னு ஆச்சி.
முற்றத்து ஒற்றைப்பனை சோளகக் காற்றுக்கு முன்னும்
பின்னும் ஆடியது, பொன்னு ஆச்சிக்குப் பேயொன்று பலிகேட்டு ஆடு வதுபோலப்
பட்டது.
"நானும் ஒவ்வொரு நாளும் கத்துறன் ......இந்தப் பாழாய்ப் போன
பனைமரத்தைத் தறியுங்கோ என்று!..... ஆராவது கேட்டால்தானே?..... பலிகேட்கிற முனிபோல
அது சோளகக் காத்துக்குத் தலைவிரித்து ஆடுவது!..... கொஞ்சநஞ்ச உயரமே?..... நிலைச்சு
நிக்க..... ஆடுகால்போல மூன்றுபனை உயரத்துக்கு வளர்ந்து நிக்குது....! எக்கணம்
இந்தமுறை வீட்டுக்கு மேலே பிரளாமல் விடாது...."
கொக்கர்
காறித்துப்பினார்.
"சும்மா....கத்தாதை அப்பா.....அது ஒன்றும் பாறி விழுந்து
விடாது!.... உனக்கு எப்ப பார்த்தாலும் உந்தப் பனைமரம் தான் கணணுக்கை குத்துது!
சின்னவன் வீடு கட்டப்போறன்.... பனையைத் தறி அப்பு என்றதுக்கே நான் தறிக்க
விடவில்லை! இது எத்தனை சோளகத்தைக் கண்டது!...... கனகனிட்டை சொன்னான், இண்டைக்கு
வாறன் எண்டவன்...ஓலை வெட்டுறதுக்கு...." என்றார், மாரிமுத்தர்.
பொன்னு ஆச்சி
துள்ளிக்குதித்தாள். வயது அறுபது மேல் என்றாலும், வயிரம் பாய்ந்த உடம்பு.
மூன்றுபனைச் சுற்றளவு.
"கனகனை ஓலை வெட்டுறதுக்கோ வரச் சொன்னீங்கள்.....?"
என்று ஏளனம் தொனிக்கக் கேட்டாள், ஆச்சி.
"ஏன்.....ஏன்?.... வேறை என்னத்தை
வெட்டுறதுக்கு..?" என்று கேட்டார், முத்தர்.
"இன்னும்
சின்னப்பிள்ளைதானே?.... பேரன் பேத்தியும் கண்டு, பூட்டன் பூட்டியும்
காணப்போறம்..... உவர் என்னவெண்டால், இன்னும் கொடி ஏத்துறதிலை நிக்கிறார் கொடி!....
வரியம் வரியம் கொடி ஏத்தாட்டிச் சாப்பாடு இறங்காது.....! பனை மரத்திலை, கொடி
ஏத்துறதுக்கு விட்டம்போடக் கனகனை வரச்சொல்லி இருக்கிறியயள்...!"
முத்தர்
'கடகட'வெனச் சிரித்தார்.
"கொடி ஏத்துறது ஒரு கலையடி, பொன்னு! இந்த
மாரிமுத்தனைக் கொடி ஏத்துறதிலை வெல்ல ஒருவன் இல்லை.... எட்டுமுலை, கொக்கு,
பிராந்துக் கொடிகளை நு}லிழை பிசகாமல் கட்டி, வானத்திலை கம்பீரமாகப் பறக்கவிட வேறு
ஆர் இருக்கினம்?..."
"உங்கடை வீரப்பிரதாபங்கள் எனக்கு வேண்டாம்.... நீங்கள்
ஆடாத ஆட்டம் எல்லாத்தையும் ஆடுங்கோ! நான் கேட்க வரவில்லை! ஆனால், இந்த ஒற்றைப்
பனையை மட்டும் இந்தமுறை தறிச்சு விடுங்கோ!....."
"விஷர் கதை கதைக்கிறாய்?
இந்தப் பனையைத் தறிச்சால், நான் எங்கை விட்டம் போடுறது?...."
"எங்கையாவது
பனை வடலியிலை போடுங்கோ...."
"விஷரி....விஷரி.... பனை வடலியிலை விட்டம்
போட்டுக் கொடி ஏத்த முடியுமே?..."
"அப்பா....வயல்வெளிக்குப் போய்
ஏத்துங்கோ....!"
"விசயம் விளங்காமல் கதையாதை!....... ஒருக்கா ஏற்றிய கொடியை
ஐந்தாறு நாளுக்கு நான் கீழை இறக்கிறதில்லை வயல் வெளியிலை போய் ஏத்திப்போட்டு
வீட்டிலை கொண்டுவந்து கட்டலாமே?..... எத்தனை வரியமா இந்தப் பனையை நான் கண்ணும்
கருத்துமாப் பாதுகாத்து வருகிறன்! சின்னவன் வீடு கட்டுறன், தறி அப்பு என்றான்!
பக்கத்து வீட்டு 'அலம்பல் காசி' தன்ரை கல் வீட்டிற்கு மேலை விழுந்துவிடப் போகுது
தறி என்று விதானையாரையும் கூட்டிவந்தான் விட்டானா? விடுவனா?.... நான் உசிரோடை
இருக்குமட்டும் இந்தப் பனையை ஒருத்தன் தறிக்க ஏலாது......"
"பெரிய
கெட்டித்தனந்தான்.... இந்தக் கோதாரிப் பனையாலை தானே காசி அண்ணர்
பகையானவர்!....."
"அந்த விசரன்ரை கதையை எனக்குச் சொல்லாதை, நீ! அவன்ரை
வீட்டிலை பெண் எடுத்ததுக்காக நாங்கள் அவன் சொல்லுறபடி கேட்கவேணுமோ? காசிக்கு இப்ப
கொஞ்சநாளா மூளைப் பிசகாம்....."
"உவர்தான் வைத்தியம்
பார்த்தவர்....."
சோளகக் காற்று மீண்டும் 'உர்'ரென்ற இரைச்சலோடு வீசியது.
தலைவாசல் திண்ணையை விட்டு, கொக்கர் மாரிமுத்தர் அம்மான் எழுந்தார்.
அப்போது-
படலையைத் திறந்துகொண்டு கனகசபை
வந்தான்.
2
மாரிமுத்தர் அம்மானைத் தெரியாதவர்கள் வண்ணார்பண்ணையில்
கிடையாது. 'கொக்கர் மாரிமுத்து' என்றால் வயதுபோன யாவரும் அவர் யார் என்று
தெரிந்துவிடும். காற்றாடி கட்டி ஏற்றுவதில் மாரிமுத்தரை எவரும் மிஞ்சிவிடமுடியாது.
சிறுவயதில் இருந்தே விதம்விதமான காற்றாடிகளைக் கட்டி, சோளகக் காற்றிலே பறக்க
விட்டிருக்கிறார். எழுபது வயதாகியும் காற்றாடி விடுகிற அந்தப் பழக்கம்,
வெறிதீரவில்லை. கொக்குக்கொடி கட்டுவதில் மாரிமுத்தர் வெகு திறமைசாலி; ஆளும் ஆறரைஅடி
உயரம். அதனால் 'கொக்கர்' என்ற பட்டமும் அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. 'முத்தர்
அம்மான்' என்றால் யாழ்ப்பாணத்து இளம் 'பொடியளு'க்கு அவரைத் தெரியும். கலகலப்பும்
குழந்தைத்தனமும் நிறைந்த அவரை அவர்களுக்கு வெகுவாகப் பிடிக்கும். சோளகம்
வீசத்தொடங்கியதும், முத்தர் அம்மானுக்குக் 'சூஷி' பிறந்துவிடும். காற்றாடிகளை
விதம்விதமாகக் கட்டுவதிலும், அவற்றை வானில் மிதக்க விடுவதிலும் அவர் பொழுது
கழியும். அவரோடு அயல் சிறுவர்களும், அவரது 'கொட்டில்' கூட்டாளிகளும் சேர்ந்து
கொள்வார்கள். கனகசபையைக் கண்டதும் முத்தர் அம்மானின் முகம் மலர்ந்தது; பொன்னுஆச்சி
முகத்தைக் சுளித்துக்கொண்டாள்.
"என்ன அம்மான், வரச்சொன்னியளாம்.... என்ன
விஷயம்?...... வீடு மேயவேணுமே?...." என்று கேட்டான், கனகசபை.
"அப்படி
ஒன்றுமில்லைக் கனகு..... சோளம் பிறந்திட்டுது..... முற்றத்துப் பனையிலை விட்டம்
போடவேணும்...."
"கொடி ஏத்தப்போறியளாக்கும். போனவரியம் நீங்கள் ஏத்தின எட்டுமூலை
ஏழுநாள் இறக்காமல் வானிலை பறந்தது..... எனக்கு இப்பவும் அதின்ரை 'விண்' ஒலி
'ங்.......ங்.....' காதிலை கேட்குது அம்மான்.....சோக்கான கொடி..... ஐந்தடி உயரம்
எல்லோ....? ஐஞ்சு இறாத்தல் இளக்கயிறெல்லே அதுக்கு வாலாகத்
தொங்கினது....."
முத்தர் அம்மான் பூரித்துப்போனார்-அவருடைய மூன்று
ஆண்பிள்ளைகளும் பெரிய உத்தியோகங்களில் நல்ல செழிப்பாக இருக்கிறார்கள்; அவருக்குப்
பெருமைதரக் கூடியவர்கள். அவருடைய பிள்ளைகளைப்பற்றி எவராவது பெருமையாகக் கூறினால்கூட
முத்தர் அம்மான் அவ்வளவுது}ரம் பூரித்துப்போகமாட்டார். கனகசபை முற்றத்துப்
பனைமரத்தை நிமிர்ந்து பார்த்தான். சோளகக் காற்றுக்குத் தாக்குக் கொடுத்தபடி
தலைவிரித்து அது ஆடியது.
"அம்மான்!..... இந்தப் பனையின்ரை உசரத்தைப் பார்க்கத்
தலையைச் சுத்துது, அம்மான்! எழுபது எழுபத்தைந்து முழம் குறையாது..... ஏறிப் பனை
வட்டுக்கை இருந்தால் கால் உதறும், அம்மான்.... ஓலையளையும் வெட்டாமல்
விட்டிட்டியள்....."
முத்தர் அம்மான் சிரித்தார்:
"இந்தப் பனை இன்னும்
கொஞ்சம் உயரம் காணாது..... கனகு, இந்தப் பனை முத்தத்திலை இல்லாதுபோனால், கொடி
ஏத்தமுடியுமே?...... சனம் நெருக்கமும், மரம்தடியளும் நிறைந்த இந்த ஊரிலை எங்கை
இருக்குது கொடிஏத்த வெளி? விட்டம் போட்டுத்தான் ஏத்தலாம்..... அப்படி இருக்க என்ரை
மனிசி இந்தப் பனையைத் தறிச்சு வீழ்த்து என்று ஒற்றைக்காலிலை நிக்குது..... நீ ஏன்
பார்த்துக்கொண்டு நிக்கிறாய் விறுவிறென்று அலுவலை பார், கனகு!...."
வலிமையான,
மெல்லிய காட்டுத்தடி ஒன்றைக் கனகசபை எடுத்தான்.
"எட்டரை அடியிலை சரியாகத்
தறி.... இந்தா இந்த வாளி வளையத்தைத் தடியின்ரை நுனியிலை கம்பியாலை வரிஞ்சு
கட்டு..... இந்தமுன் வளையத்திலை கோக்கிறதுக்கு மட்டக்களப்பு கயிறு இல்லை.....
நைலோன் கயிறு வேண்டி வைச்சிருக்கிறன் நு}ற்றிருபது முழம்..... இந்தா செம்பு
வளையம்....."
கனகசபை வாளி வளையத்தைத் தடியில் கம்பியால் இறுக்கிக் கட்டினான்;
கட்டியதும் முத்தர் அம்மான் அசைத்துப் பார்த்துத் திருப்தி அடைந்தார். சின்னவிரல்
தடிப்பான நைலோன் கயிற்றின் ஒரு நுனியில் செப்பு வளையத்தைக் கட்டி, வாளி வளையத்தில்
அதனை நுழைத்து எடுத்து, கயிற்றின் மறு நுனியையும் செப்பு வளையத்தில் கட்டி
முடிந்;தான்.
"அவன்கள் மாடுமாதிரி உழைச்சு அனுப்புற காசை இப்படியே கரியாக்க
வேணும்...." என்று பொன்னு ஆச்சி முணுமுணுத்தாள்; பாம்புக்காது
கிழவருக்கு.
"எடியேய்." என்றார், முத்தர் அம்மான்; "மாடு மாதிரியே
உழைக்கிறான்கள்.... கையெழுத்துப் போடுற வேலை; அவங்களைப் பெத்து வளர்த்துப்
படிப்பித்துப் பெரிய வேலையிலை அமர்த்தி இருக்கிறன்; கலியாணங்களும் கட்டி பக்குவமாக
வைச்சிருக்கிறன்! அவங்கள் மாதாமாதம் எங்கடை சீவியத்துக்கு அனுப்புறாங்கள்..... அது
அவங்கடை கடமையடி! நான் எப்படிச் செலவழிச்சால் என்ன?..... கேட்பாங்களா?.... எனக்கு
முன் நிமிர்ந்து கதைப்பான்களா?...."
பொன்னு ஆச்சி மௌனமாகிவிட்டாள். எதிர்த்துப்
பேசக்கூடிய அளவிற்கு மாரிமுத்தர் அம்மான் குடும்பத்தை உருவாக்கவில்லை. நல்ல
கணவராய், நல்ல தந்தையாக வா பவர். ஒருவித குறையும் தெரியாமல் பிள்ளைகளை வளர்த்து
உருவாக்கியவர். கனகசபை பனைமரத்தில் ஏறத் தயாரானான்.
"அம்மான், வட்டுக்கை
விட்டத்தைக் கட்டவேணுமோ? கொஞ்சம் பதித்துக் கட்டலாமே?...."
"வட்டுக்கை கட்டு....
அசையாமல் கட்டவேணும்.... விட்டத் தடி சரியாகத் தென்கிழக்குத் திசையிலை நிற்கவேணும்,
தடியிலை பனை மட்டையளையும் பிடிச்சுக்கட்டு!... கட்டிப்போட்டு பக்கத்து ஓலையளை
வெட்டிப்போடு, கனகு!..... முதலிலை வட்டுக்கை போய் வசதியாக் குந்திக்கொண்டு,
கயிற்றைவிட்டுத் தடியை மேலே இழு.... அப்பதான் சுகம்...." என்றார்,
கிழவர்.
"கவனமடா, கனகு!.... இந்த மனுசன் குழந்தைக்கு விளையாடுது..... நீ கவனமாக
ஏறு.... காத்தும் வீசுது!...." என்று பொன்னு ஆச்சி எச்சரித்தாள்: "ஓலையளை
வெட்டும்போது கூரைக்குமேலே போட்டிடாதை... பழம் கூரை...."
"ஏன் ஆச்சி!
கல்வீடொன்றைக் கட்டினால் என்ன?...." என்ற படி 'தளநாரை'க் காலில் மாட்டினான்,
கனகசபை.
"பொடியன்கள் கல்வீடு கட்டிவிடுகிறம் என்று நிக்கிறான்கள்..... இந்த
மனிசன் விட்டால்தானே? வளவுக்கு நடுவிலை யமன்போல நிக்கிற இந்தப் பனையைத் தறியாமல்,
எப்படி வீடு கட்டுறது? இப்படியே கொட்டிலிலை கிடந்து சாகவேண்டியதுதான்...." என்று
அலுத்துக் கொண்டாள், ஆச்சி.
"அவவோடை கதை கொடுக்காமல் நீ உன்ரை அலுவலைப்
பார்...." என்றார், அம்மன். முற்றத்து ஒற்றைப் பனையிலை விட்டம் கட்டப்படுகின்ற
அற்புதக் காட்சியை முத்தர் அம்மான் மகிழ்வோடு பார்த்தார். பக்கத்து வேலிக்கு
அப்பால் இதே காட்சியைக் கண்ட அலம்பல் காசிநாதருக்குப் 'பகீர்' என்று வயிறு
எரிந்தது:
"உவன் துவங்கீட்டான்.... இனி நித்திரை கொண்டமாதிரித் தான்......
இரவிரவாக இனி விண்ணின்ரை இரைச்சல்தான்!... கோதாரி விழுவான்ரை பனை ஆடுற ஆட்டத்தைப்
பார்.... வீட்டிற்கு மேலே எப்ப சரியுதோ?.... இண்டைக்கு இதற்கு ஒருமுடிவு எடுக்க
வேணும்... உடனை விதானையாரைப் போய்ப் பார்த்து ஒரு 'பெட்டிசம்' எழுதிக்
கொடுக்கவேணும்...."
-இவ்வாறு காசிநாதர் முடிவு செய்தார். சால்வையைத் து}க்கித்
தோளில் போட்டுக்கொண்டு விதானையாரைப் பார்க்கப் புறப்பட்டார். கொக்கர் மாரிமுத்தர்
அம்மான், தக்காளிப் பழம்போல இருப்பார்; தளதளுப்பும் பளபளப்பும் நிறைந்த தேகம்.
வெள்ளைவெளேர் என்ற வேட்டி; சால்வை. புளி உருண்டை அளவிலை சிறிய குடுமியும்
இருந்தது.
"முந்தி எனக்கு இருந்த மயிரைப் பார்க்கவேணும்......... சும்மா.
மயிலின்ரை தோகைபோல இருக்கும் ஒரு சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து முழுகிப்போட்டு
தலையைக் காய விரிச்சுப்போட்டு நிண்டன்!.... கொச்சியற்றை பிராந்துக் கிழவி
வந்துது..... 'ஆ உதென்ன மயிரடா ஒரு பொம்பிளையளுக்கும் கூட இப்படி இராது' என்று
ஏங்கியதுதான்..... அன்றைக்குப் பட்ட கண்!.... படிப்படியாகக் கொட்டுண்டு இண்டைக்கு
கொட்டைப் பாக்கு அளவிலை இருக்குது...." என்று முத்தர் அம்மான் அடிக்கடி
கூறிக்கொள்வார். கனகசபை விட்டம் கட்டிவிட்டுப் போனபிறகு, பொன்னு ஆச்சி நல்லெண்ணெய்
போத்திலை எடுத்துவந்து முத்தர் அம்மானுக்குப் பக்கத்தில் வைத்தாள்.
'ஓ
இண்டைக்குச் சனிக்கிழமை எண்டதை மறந்துபோனன்' என்று மனைவியைப் பார்த்துச்
சிரித்தார்: "ஏனப்பா, இன்னும் கோபமே?....."
பொன்னு ஆச்சி குளிர்ந்துபோனாள்.
"எனக்கென்ன ? இந்தப் பனையாலை அயல் அட்டையெல்லாம்
பயப்படுகுது....."
"சரிசரி..... அதெல்லாம் தறிப்பம்.... தம்பன்
வந்தவனே?...."
"ஓம் முட்டியோடை ஆட்டுக் கொட்டிலுக்கை வைச்சிட்டுப் போறான்
இறைச்சிப் பங்கும் கொண்டு வந்தவன்! நீங்கள் எண்ணெயைக் குளிர வையுங்கோ! கறி
அடுப்பலை...."
முத்தர் அம்மான் சனிக்கிழமை தவறாது முழுகுவார். தலை உச்சியில்
இருந்து பாதம்வரை நல்லெண்ணெயால் குளிப்பாட்டி, அரப்புத் தேய்த்து முழுகிச்
சாப்பிட்டுவிட்டு நல்ல து}க்கம் ஒன்றும் போட்டு எழும்புவார். உடம்பெல்லாம் தோயத்தோய
எண்ணெய் வைத்துவிட்டு, முட்டியை எடுக்க எழும்புகிற வேளையில்தான் விதானையார்,
படலையைத் திறந்துகொண்டு வந்தார்.
"முத்தர் அம்மான், இருக்கிறியளோ? நாய் கட்டி
இருக்குதோ?....."
"உதார்.... ஒ..... எங்கடை விதானையார்.... வா தம்பி, வா!....
உன்னை இந்தப் பக்கம் கண்டு கனகாலம்!... நாய் இங்கினேக்கை தான் நிக்கும்... அது
கடியாது....!"
விதானையார் உலகநாதர் தலைவாசல் திண்ணையில், முத்தர் அம்மானுக்குப்
பக்கத்தில் அமர்ந்தார். அவருடைய கண்கள் முற்றத்துப் பனைமரத்தில் படிவதை முத்தர்
அம்மான் கவனிக்கத் தவறவில்லை.
"தம்பி, இப்ப வேலையள் எப்படி?...."
"முந்தின
காலம்போலவே, அம்மான்! விதானையார் என்றால் இப்ப ஒரு சொட்டு மதிப்புமில்லை! சும்மா
ஏதோ வயிற்றுப் பிழைப்பு" என்றார், விதானையார்; "அம்மான், உங்களிலை இப்ப ஒரு
பெட்டிசம் வந்திருக்குது..... அதை விசாரிக்கத்தான்
வந்தனான்....."
"பெட்டிசமோ?....."
ஏன் அம்மான், ஒன்றுக்கை ஒன்று
சச்சரவுப்படுகிறியள்? காசிநாதர் ஆர்....? உங்கடை சம்பந்தி....."
முத்தர் அம்மான்
குறுக்கிட்டார்.
"ஆர் இல்லை என்றது....? அலம்பல் காசி என்ரை சம்பந்தி
தான்.... என்ரை கடைக்குட்டி பரமநாதன், காசியின்ரை நடுமோளை விரும்பிட்டாள் அதைத்
தடுக்கக்கூடாது....! கலியாணம் செய்து வைச்சன்.... அந்தப் பிள்ளை அருமையான பெண்....
தப்பித்தவறி காசிக்குப் பிறந்திட்டுது! அதுக்காக இந்தக் காசிக்கு நான்
அடங்கிறதோ?..."
"அம்மான் அயலுக்கை கொளுவக்கூடாது பாருங்கோ? காசிநாதர் இப்ப
உங்களிட்டை என்ன கேட்கிறார், இந்தப் பனையைத் தறிக்கச்சொல்லித்தானே? தன்ரை
வீட்டுக்கு மேலை விழுந்திடும் என்று பயப்படுகிறார்..."
"அவற்றை வீடாமோ? அது
என்ரை மருமோளின்ரை சீதன வீடு சீதனமாக் கொடுத்தபிறகு உவருக்கென்ன
உரிமை..."
"அம்மான், கோவியாதையுங்கோ! காசிநாதர் மட்டுமல்ல..... இன்னும் பலரும்
பெட்டிசம் போட்டிருக்கினம்!... வீட்டிற்கும் ஆபத்துத்தானே அம்மான்..."
"தம்பி
இது ஆண்பனை.... வைரப்பனை, கண்டியோ? இலேசிலை விழாது!.... ஒருவரும் பயப்படத்
தேவையில்லை.."
"அம்மான், என் வரையிலை மட்டுமல்ல, ஜி. ஏ. வரையிலை என்ன....?
நீதான் 'றிப்போட்' அனுப்புறது...... தம்பி, இரு, வாறன்....."
முத்தர் அம்மான்
ஆட்டுக்கொட்டில் பக்கமாகப் போனார். விதானையார் பனைமரத்தை அண்ணார்ந்து பார்த்தார்!
'என்ன உசரம்? உதைத் தறிப்பிக்காமல் விடக்கூடாது.'
முத்தர் அம்மான் கள்ளு
முட்டியோடு வந்தார். உச்சி வெயில், விதானையாருக்குப் பரம சந்தோஷம்.
"பொன்னு....
இறைச்சிக் குழம்பு வைச்சிட்டியே ரெண்டு சிரட்டைக்கே கொண்டுவா...."
பனங்கள்ளும்
இறைச்சிக் கறியும் உச்சி வெயிலும் விதானையாருக்குக் காற்றில் பறப்பதைப் போன்ற
உணர்வைத் தந்தன.
"அம்மான்...!" என்றார். "உங்களுக்கு மேலை ஒருத்தன்
பெட்டிசம் போடுறதோ? அதைப் பார்த்துக்கொண்டு நாங்க இருக்கிறதோ? நீங்கள்
கவலைப்படாதையுங்கோ, அம்மான்! நான் அதையெல்லாம் பாக்கிறன்... உதென்ன, பத்துமுழப்
பனைமரம்தானே? உது விழுமே?..... விசர்க்கதை... நான் வாறன்" என்றபடி விதானை யார்
எழுந்தார்.
கடித்துத் துப்பிய எலும்புத்துண்டைச் சுவைத்துக்கொண்டிருந்த முத்தர்
அம்மானின் நாய் வீமாமீது. தவறிப்போய'; காலை விதானை யார் வைத்துவிட்டார்.
"ள்....
வொள்..."
நல்ல வேளை, நாய் கடிக்கவில்லை.
"கோபியாதை, மச்சான்" என்று நாயைத்
தடவிக் கொடுத்துவிட்டு விதானையார் நடந்தார். முத்தர் அம்மானின் இதழ் கோடியில்
புன்னகை மலர்ந்தது.
"அடேய், அலம்பல் காசி..... பெட்டிசமா போடுகிறாய்,
பெட்டிசம்!..."
அம்மான்கோவில் வடக்குவீதியில் திரும்பும்போது, தம்பையாண்ணை
சைக்கிலில் வருவதை முத்தர் அம்மான் கண்டார். முத்தர் அம்மானைக் கண்டதும் சைக்கிலில்
இருந்து தம்பையாண்ணை கீழே குதித்தார்.
"எங்கை அம்மான், வெயிலுக்கை
கிளம்பிவிட்டியள்... வீட்டிலை இருக்கிறதுக்கு என்ன?" என்று கேட்டார், தம்பையாண்ணை.
இருவரும் வேலியோரப் பூவரச நிழலில் ஒதுங்கினர்
"மூங்கில் தடி ஒன்று
தேவைப்படுவது... சாண்டார் தெருப்பக்கம் போறன்..."
"ஏன்? புட்டுக்குழல் செய்யப்
போறியளே?"
"இந்தக் காலத்திலை புட்டுக்குழலிலை ஆர் புட்டு அவிக்கினம்..... ஏதோ
ஸ்hPமராம் அதிலை கொட்டி இருக்கிறாளவை! சோளகம் வீசுது.... அதுதான்..." என்றார்
முத்தர் அம்மான்.
"சோளகம் வீசுறத்தாலை கள்ளும் சுவைகெட்டு, விலையும் படிப்படியா
ஏறுது முந்தநாள் இருபதுசதம் வித்தது..... இண்டைக்கு ஐம்பதுசதமாப் போச்சுது!
சோளகத்தாலை பாளையளை விட்டு முட்டியள் விலகிவிட்டதாம் என்கினம்! அதுசரி உங்களுக்கு
ஏன் மூங்கில் அம்மான்...?" என்று தம்பையாண்ணை சிரித்தார். சிரித்து விட்டுக்
காறிக்காறித் துப்பினார். கண்களும் சிவப்பேறிக்கிடந்தன.
"கொடி கட்டப் போறன்
இம்முறை பெரிய ஆறடிக் கொக்குக் கட்டப்போறன் பனையிலை நேற்று விட்டமும்
போட்டிட்டன்....!"
"கொடி கட்டவே?.. யாழ்ப்பாணத்துப் பனையள் எல்லாம் கொடி ஏறி
இறக்கிறகாலம்!..... நீங்கள் கொடி ஏத்தப் போறியள்!... அம்மான், உங்களுக்கு என்ன
குறை? மூன்று பிள்ளையளும் மாதா மாதம் பணமா அனுப்புறாங்கள்! சொக்கா வாங்கிச்
சாப்பிட்டுவிட்டு விளையாடிறியள் எங்களைச் சொல்லுங்கோ.... அன்றாடம்
காய்ச்சிகள்!..... தரகு வேலையிலை எங்கை கிடைக்குது.... அம்மான், உங்கடை மூன்று
புள்ளையளுக்கும் கொழுத்த சீதனத்தோடை கலியாணம் முற்றாக்கினது நான் அம்மான்! உங்கடை
மூத்தவன் கனகரெத்தினத்துக்குக் குடக்கர் பகுதியிலை செய்துவைச்சன்! இரண்டாமவன்
தம்பிநாதனுக்கு உடையாற்றை பகுதியிலை பரநாதனுக்கு... அலம்பல் காசிநாதர்
வீட்டிலை.."
"பரமநாதன் தானாகச் செய்துகொண்டவன், தம்பையா! அது.."
"லவ்
மரேஜ்.... என்றாலும் அம்மான், பேச்சுக்காலைத் தொடக்கினது நான்தானே? அதிலை தான்
நீங்கள் பிழைவிட்டிட்டியள்.."
"தம்பையா, பரமநாதன்ரை கலியாணத்துக்கும் நீ தரகு
காசு கேட்டால்.... தரமுடியுமோ? அதெல்லாம் சரி. இப்ப எங்கை
போட்டுவாறாய்..?"
தம்பையாண்ணை எண்ணெய் ஊறிய தலையைத் தவிடக் கொண்டார்; "சும்மா...
தெரியாதே, அம்மான் சாண்டாதெருவுக்கே போறியள்.... நானும் அங்கை ஒரு அலுவலாப்
போகவேணும்! நடந்துபோகப் போறியளே? வாங்கோ, அம்மான்... சைக்கிலிலை
போவம்..."
"இரண்டுபேரோ? சீச்சி, நீ போ தம்பையா, நான் நடந்தே
போறன்..."
"சும்மா, வா அம்மான்! வெயிலுக்கை போறதென்கிறயள்....
பயப்படுகிறியள்..."
முத்தர் அம்மான் சைக்கிலைப் பார்த்தார். கறள் பிடிப்பதற்கு
இனி இடமில்லை.
"வேண்டாம்.... எனக்குச் சைக்கிலிலை பின்னாலை இருந்து நல்ல
பழக்கமில்லை... நீயும் ஆடுறாய்...."
"போ, அம்மான், மூன்று போத்தில் சாராயத்தைக்
குடிச்சிட்டே அசையாமல் சைக்கில் விடுவன் நீ ஏறு அம்மான்!"
முத்தர் அம்மானை
வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துச் சைக்கில் கரியரில் தம்பையாண்ணை ஏற்றினார்.
தம்பையாண்ணை புடலங்காய்போல இருப்பார். ஆதனால், நின்றபடியே காலைத்து}க்கி,
சைக்கிலில் ஏறினார்.
"கவனமடா, தம்பையா! கவனம்.... பள்ளறோட்டு.... உளக்காமலேயே
சைக்கில் ஓடும்.... பிறேக் இருக்கே...? கவனம்! கவனம்.... விழுத்தியடிச்சுப்
போடாதை..."
தம்பையாண்ணை வெற்றிச் சிரிப்புச் சிரித்தார். பஞ்ச கலியாணிக்
குதிரையில் காதலியை ஏற்றிய பெருமிதம்.
"இறுக்கிப்பிடி, அம்மான்!" என்றபடி, பெடலை
ஒரு மிதி மிதித்தார். 'பறக்.... பறக்..."
"என்னடா...."
"செயின்
கழண்டுபோச்சுது, அம்மான்! ஒரு நொடியிலை மாட்டுறன்....."
ஒரு விதமாகப் பஞ்ச
கலியாணிக் குதிரை அசைந்தது; வேலிக்கும் வேலிக்குமாகக் கிளித்தட்டு மறித்துவிட்டு,
ஒருவிதமாக நேரே ஓடியது. அம்மான் கோவில் பின்வீதி உண்மையில் சாய்வானது. சைக்கில்
வேகமாக உருளத் தொடங்கியது.
"மெதுவா மெதுவா !" என்று அம்மான் அலறினார்.
தம்பையாண்ணை தனது கெட்டித்தனத்தைக் காட்ட 'மிதிமிதி' என்று மிதித்தார்.
சைக்கிலுக்குச் சற்று முன்னால் அலம்பல் காசிநாதருடைய மூத்தபேரன் வேலாயுதம் என்ற
சூலாயுதம் (முத்தர் அம்மான் வைத்த பெயர்) பழைய சைக்கில் 'றிம்' மொன்றை
உருட்டிக்கொண்டு வலு வேகமாக வந்தான். பஞ்சகலியாணி தறி கெட்டு வந்ததை அவன்
கவனிக்கவில்லை. முன்னால், சூலாயுதம் வருவதைக் கண்ட தம்பையாண்ணை 'பிறேக்'
பிடித்தார், பிடித்தால் தானே? ஒரு சூலாயுதம் இரண்டாகி.... இரண்டு நான்காகி
நான்கு... நு}றாகி... வேலாயுதம் என்ற சூலாயுதம் வேலியோடு ஒதுங்கிக்கொண்டான்.
தம்பையாண்ணையும் முத்தர் அம்மானும் ஒரு வீட்டின் படலையோடு அலமலக்க விழுந்தார்கள்.
சூலாயுதம் ஒரே ஒட்டமாகப் பொன்னு ஆச்சியிடம் வந்தான்.
'ஆச்சி.... ஆச்சி!...
தம்பையாண்ணையும் முத்தர் அப்பவும் நல்லாக் குடிச்சுப்போட்டு, ஒரு சைக்கிலில்
'டபிள்' வந்து..... பொலிசுக்காரரிட்டை அடியும் வாங்கி.... சுப்பற்றை படலையோடு
விழுந்து கிடக்கினம் மண்டையும் உடைஞ்சுபோச்சுது..... கால் கையும்
முறிஞ்சிருக்கும்..."
பொன்னு ஆச்சி 'ஐயோ.... கோதாரியிலை விழுந்த மனிசன் என்று
அலறிக்கொண்டு படலையைத் திறந்துகொண்டு ஓடினாள். தம்பையாண்ணைக்கு படலைக் கப்பு
இடித்து நெற்றியில் இரத்தம் கன்றிவிட்டது; இரண்டு காலிலும் சிராய்புக் காயம்.
முத்தர் அம்மானுக்கு வெளிக்காயம் ஒன்றுமில்லை. ஆனால், முதுகு குத்த விழுந்ததால்
பின்புறம் எக்கச்சக்கமான அடிபட்டுவிட்டது. மூன்று நாளாகப் படுக்கையில்
கிடந்தார்.
"ஆச்சி என்னைப் பெத்தவளே....!" என்று ஓயாது கத்தினார். பொன்னு ஆச்சி
கத்திக்கத்தி, சாராயம் பூசிப்பூசி, ஒத்தனம் கொடுத்தாள்.
"மூங்கில் வெட்டப்போறன்
என்று சொல்லிப்போட்டுக் கொட்டிலுக்குப் போனியளே? வீட்டிலை எடுத்துக் குடிக்கிறது
காணாது என்று, பிள்ளையளைப் பரிசு கெடுக்கப் போனனீங்களே? பொலீசிட்டையும் அடி
வாங்கினீங்களே....?" என்று புலம்பினாள்.
"சிவ சத்தியமா அப்பா, நான்
கொட்டிலுக்குப் போகவில்லை பொலீசிட்டை அடிவாங்கவுமில்லை" என்று எப்படிக் கூறியும்
பொன்னு ஆச்சி நம்பத்தயாராகவில்லை. தம்பையாண்ணை இரண்டு மூன்றுதரம் முத்தர் அம்மானை
வந்து பார்த்துவிட்டு, பொன்னு ஆச்சியின் ஏச்சுக்களையும் கட்டிக்கொண்டு
போனார்.
"நீ திமிரிலை திரிகிறாய்..... கிழடுகட்டையளை ஏன் சைக்கிலிலை ஏத்துறாய்?
சாகடிக்கவே..?"
"இல்லை, அக்கை, சத்தியமா இல்லை. ஏதோ நடந்துபோச்சுது" என்று
தலையைச் சொறிந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்டு, அலம்பல் காசிநாதரும் பகையை மறந்து
ஓடிவந்தார். உள்ளுக்குள் காசியருக்கு வலு சந்தோஷம், என்றாலும், முற்றத்துப்பனை
அவருக்குமேலே புரளாமல், சைக்கிலால் புரண்டது கொஞ்சம் கவலைதான்.
"என்ன
முத்தர், எக்கச்சக்கமான அடியே? இந்த வயதிலை உனக்கேன் இந்தச் சைக்கில் ஓடுகிற
ஆசை.... சாப்பிட்டுவிட்டு முலையிலை கிடக்காமல்..... ஒட்டகப்புலத்தான்ரை புக்கை
ஒருக்காக் கட்டு..." என்றபடி காசி வந்தார்.
"எல்லாம் இந்த ஊர்ச் சனத்தின்ரை
கண்.." என்று முத்தர் அம்மான் எரிந்து விழுந்தார். வெகுநேரம் தன் மகளைப் பற்றியும்
மருமகனைப் பற்றியும் கொழும்பில் அவர்கள் நடத்துற வாழ்க்கையைப் பற்றியும் புழுகித்
தள்ளினார்.
'என்ரை மகனைப்பற்றி எனக்கே புளுகுகிறான், பொறுக்கி' என்று முத்தர்
அம்மான் எண்ணிக் கொண்டார். பொன்னு ஆச்சிக்கு மகனையும் மருமகளையும் பற்றிக்
கேட்பதில் பரமதிருப்தி
"என்னை ஒருக்காக் கொழும்புக்கு வந்து இரண்டு மாசம்
தங்கிக் செல்லும்படி மருமேன் நேற்றுக் கடிதம் எழுதியிருக்கிறார்! பிளேன்ரிக்கற்று
எடுத்து அனுப்புறதாகவும் எழுதியிருக்கிறார்..." என்றார் அலம்பல்காசி. முத்தர்
அம்மான் நிமிர்ந்து உட்கார்ந்தார், முதுகு நோவையும் மறந்து.
"ஆகாச விமானத்திலை
போறதுக்கோ?...." என்று வியப்புடன் கேட்டார்.
"ஓமோம்.... பிளேன்தான் ரிக்கற்று
வந்ததும் கொழும்புக்கு போகப்போறன்.." எள்றார் காசி
'பஸ்ஸிலையே சரியாகப் போய்ப்
பழக்கமில்லாத அலம்பல் காசி பிளேனிலை போகப்போகுதோ? இது விசர் அலம்பல் இவன் எனக்கு
ரிக்கற்று அனுப்பாமல், மாமனுக்கு அனுப்பப்போறான் படுவா....' என்று முத்தர் அம்மான்
எண்ணினார்.
'சைக்கிலிலேயே சரியாக இருக்கத்தெரியாத கொக்கரை, பிளேனிலை
ஏற்றிவிட்டால்....' என்று அலம்பல் காசியர் எண்ணினார்; 'மலையோடுதான் மோதி விழுவார்'
விடைபெறுகிற நேரத்தில் காசிநாதர் கேட்டார்;
"முத்தர் கடைசியாகக் கேட்கிறன்!
நீ இந்தப் பனையைத் தறிக்க மாட்டியே? ஆடுற ஆட்டத்தைப் பார்த்தால் பாறிவிழும் போல
கிடக்குது குஞ்சுகுருமான் வாழுற வீடு வேணுமென்றால் நானே காசி கொடுத்துத்
தறிப்பிக்கிறன்....."
முத்தர் அம்மான் கோபத்தோடு கத்தினார் :
"இஞ்சை
காசில்லாமல் ஒரு மசிரும் இருக்கவில்லை, காணும்!..... நீரும் பெட்டிசம் போட்டுத்
தறிக்கப் பார்க்கிறீர்..... உது ஒன்றும் நானிருக்குமட்டும் சரிவராது ! பனையைத்
தறிக்கவும் மாட்டன்! கொடி ஏத்தாமல் விடவும் மாட்டன்...."
"கனக்கத் துள்ளாதை....
நீ இந்தமுறை கொடி ஏத்துறதை நானும் பார்க்கத்தான் போறன்.... 'பிறைம்மினிசர்' வரை
இந்த விஷயத்தை எடுத்துப் போகப்போறன்..... பிளேன் ரிக்கற்று வரட்டும்.....
பிறைம்மினிசரைக் கண்டிட்டுத்தான் வருவன்.... அப்ப என்ன செய்வாய் பார்ப்பம்...."
முத்தர் அம்மானுக்குப் 'பிறைம்மினிஸ்ரர்' என்றது விளங்கவில்லை.
"நீ எந்தப்
பிறக்கிறாசியை வேணுமானாலும் போய்ப்பார்!..... என்ரை உசிருள்ளவரை பனையைத் தறிக்க
விடமாட்டான்....."
காசியர் பொன்னு ஆச்சி பக்கம் திரும்பினார்:
"தங்கச்சி,
உனக்காகப் பார்க்கிறன்.... இன்னும் பத்து நாளுக்கை இந்தப்பனை தறிக்கப்படாட்டி
இலேசிலை விடமாட்டான்.... இங்கை ஒரு கொலை விழும்..."
பொன்னு ஆச்சிக்குத் தலையைச்
சுற்றியது. மயக்கமாயும் வந்தது.
"போடா.... பொறுக்கித்தின்னி...!" என்று
உறுமினார், முத்தர் அம்மான். 'பொறுக்கித்தின்னி' போய்விட்டது. நீண்ட நேரம் முத்தர்
அம்மான் பேசிஏசிக் கொண்டே இருந்தார். பொன்னு ஆச்சி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்:
'பொடியன்களுக்குக் கடதாசி போடவேண்டியதுதான், அவர்களைக் கூப்பிட்டுத் தான் ஒரு
முடிவெடுக்க வேணும்.....'
கொப்பிப் பேப்பர் மூன்று எடுத்து, பென்சிலால் மக்கள்
மூன்று பேருக்கும் கடிதங்கள் எழுதினாள்:
'சிவபெருமான் கிருபையை முன்ணிட்டு
வாளும் என்மேல் பட்சம் மறவாத மகனும் மருமோளும் பேரப்புள்ளையளும் அறிய வேண்டியது.
நான் நல்ல சுகம். அப்பவும் நல்ல சுகம். அப்பு ஊரெல்லாம் கொளுத்தாடு பிடிக்கிறார்.
அந்த ஆளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வயசுபோன காலத்திலை எனக்கு ஏன் இந்தத்
தலைவிதி. நீங்கள் எல்லாரும் ஒருக்கா வந்து சரிபண்ணிவிட்டுப்
போகவும்.
இப்படிக்கு,
பட்சமுள்ள அம்மா,
மா.
பொன்னாச்சிப்பிள்ளை
-கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மூன்று
இடங்களுக்கும் கடிதங்கள் பறந்தன. ஆச்சி நிம்மதியாகப்
பெருமூச்சுவிட்டாள்.
வேலை முடிந்து, வீட்டிற்குத் திரும்பி வந்து
கொண்டிருந்த தம்பையாண்ணை, மாரிமுத்தர் அம்மானின் வீட்டுப் படலையில் தரித்து
நின்றார். அவருக்கு ஒரே வியப்பாக இருந்தது.
'இதென்ன..... முத்தர் அம்மான்
வீட்டிலை ஒரே சனமாக இருக்கு. ஊர்க்குஞ்சு குருமான் எல்லாம் இங்கை தான் போலக்
கிடக்குது! முத்தர் அம்மான் விடிய நல்லாத்தான் இருந்தவர் இருந்தாற்போல தீடீரென
ஏதாவது நடந்திட்டுதுபோலக் கிடக்கு.... அழுகுரலைக் காணேல்லை...'
முத்தர்
அம்மானின் படலையைத் திறந்துகொண்டு வேலாயுதம் என்ற சூலாயுதம் வெளியே ஓடி
வந்தான்.
"தம்பி... என்ன விசேஷம்..?" என்று தம்பையாண்ணை கேட்டார்.
"அப்பு
இண்டைக்குக் கொடியேத்தப் போறார்... பெரிசு கொக்குக்கொடி..." என்றான்
சூலாயுதம்.
"அப்படியே....?" என்றபடி, தம்பையாண்ணையும் படலையைத் திறந்த படி
நுழைந்தார்.
முத்தர் அம்மான் கலியாண மும்மரமாக இயங்கிக் கொண்டிருந்தார்.
தலைவாசல் திண்ணையில் நான்கு அடி நீளத்திற்குக் குறையாத கொக்குக் காற்றாடி ஒன்று
'மினுமினு'த்தபடி கிடந்தது. பக்கத்தில் பெரிய உருண்டை நு}ல் பந்து ஒன்று: நு}ல்
பென்சில் தடிப்பிருக்கும். பெரிய கொக்கு ஒன்று இறகுகளை விரித்தபடி கொண்டையும்
கழுத்தையும் மேலே து}க்கியவாறு மல்லாந்து கிடப்பதுபோல இருந்தது. இறகுகளின்
விரிப்பு, வாலிறகின் பரவல், கழுத்தின் வளைவு என்பன யாவும் அளவோடு காற்றின் பரப்பில்
மிதக்க வைக்கத்தக்கனவாக அமைந்திருந்தன. வெள்ளை வேளேர் என்ற நிறம்: கழுத்துச்
சிற்றிறகுகள் கூட அற்புதமாக இருந்தன. சிறிய மணிக்கண்கள் வேறு.
முத்தர்
அம்மானின் அற்புதப்படைப்பைக் கண்ணிமைக்காது தம்பையாண்ணை பார்த்தார். மூங்கில்
தடியும், நு}லும், கடுதாசியும் முத்தர் அம்மானின் கைவண்ணமும் சேர்ந்து உருவான
கலையைப் பார்த்தார்.
"என்ன தம்பையா, திகைச்சுப்போய் நிக்கிறாய்...?" என்றபடி
முத்தர் அம்மான் வந்தார்.
"ஒன்றுமில்லை அம்மான், தமிழன்ரை பல வகையான பழைய கலைகள்
படிப்படியாக அழிந்து போவதை எண்ணினன்!..... சத்தியமா அம்மான், உங்களுக்குப்பிறகு
வண்ணார்பண்ணையில் கொடிகட்டி ஏத்த ஆர் இருக்கினம்? நுட்பமாகக் கட்டுவதற்கு ஆர்
இருக்கினம்...."
முத்தர் அம்மான் பெருமிதத்தோடு சிரித்தார்.
"நீ போயிடாதை
இரு... நாலடிக்கொடி கண்டியோ...! இழுவை சரியாக இருக்கும்! நு}ல்பிடிக்க
வேணும்..."
பொன்னுஆச்சி மூக்குப்பேணியோடு தேநீர் கொண்டு வந்து தம்
பையாண்ணைக்குக் கொடுத்தாள். பொன்னுஆச்சி என்ன தான் கத்தினாலும் கணவனின் கொடி ஏத்திற
திறமையிலை பெருமைதான். விமானம் ஒன்று இரைந்தபடி வானில் சென்றது.
"அப்பு, நீங்க
ஏத்துறகொடி இந்தப் பிளேனைத் தொடுமே?..." என்று சூலாயுதம் கேட்டான்.
"அதுக்கும்
அங்காலை போகும்..." என்றார், முத்தர்.
"நம்மடை காசிநாதரும் பிளேனிலை
கொழும்புக்குப் போகப் போறாராம்....." என்றார் தம்பையாண்ணை.
"உது விசர்க்கதை.....
அலம்பல் காசியாவது பிளேனிலை போறதாவது..." என்றார் முத்தர் அம்மான் மனதுக்குள்
எரிச்சலாக இருந்தது.
"அப்பு கொடியை ஏத்துங்கோவன்..." என்று அவசரப்படுத்தினான்
சூலாயுதம். முத்தர் அம்மான் இறுதிப்பரிசோதனைகளைச் செய்தார். கொக்குக் காற்றாடியின்
இறகுகளின் மேற்புறத்தில் நீளமாகக் கட்டப்பட்டிருந்த மூங்கில் தடியை வில்லாக
வளைத்தார். மெல்லிதாக வாரப்பட்ட பிரம்பு நாரை நாணாகப் பிடித்துப் பிடிப்புக்,
கட்டைகளைச் செருகினார். 'விண்' தயாராகிவிட்டது.
"குறைஞ்சது ஐந்துமைல்
சுற்றாடலுக்கு இந்த விண் கேக்கும், தம்பையா!..."
"உது என்னென்று சத்தம் போடும்,
அப்பு!" என்று கேட்டான், சூலாயுதம்.
முத்தர் அம்மான் அவனைப்
பார்த்தார்.
"ஒரு தடியை எடுத்துக் காற்றுக்குக்குறுக்கே வீசினால், சத்தம்
கேட்குமல்லே! அதைப்போலத்தான்... இந்தப் பிரம்பு நாரிலை காற்று மோத 'ங்...ங்...'
என்ற இரைச்சல் எழும்...." என்றவர், கொக்குக் காற்றாடியின் முடிச்சில் (முச்சை)
இலாவகமாகப் பிடித்துத் து}க்கி, தன்னைச் சுற்றி ஒரு சுற்றுச்
சுழற்றினார்.
"குவாங்...ங் ங்...." என்ற ஒலி இனிய நாதமாக எழுந்தது. சிறுவர்கள்
ஆரவாரித்தார்கள். முத்தர் அம்மான் விட்டத்துத் தடக்கயிற்றைக் கீழே இறக்கி, செப்பு
வளையத்தில் நு}லைக் கோர்த்து ஒரு நுனியைத் தம்பையாண்ணையிடம் பிடிக்கக்
கொடுத்துவிட்டு, தடக்கயிற்றை வலித்து இழுத்தார். நு}லைத் தாங்கிய செப்பு வளையம் பனை
விட்டம் மட்டும் ஏறி வாளி வளையத்தோடு இணைந்து நின்றது. தடக்கயிற்றைப் பனைமர அடியோடு
பிணைத்து விட்டு, தம்பையாண்ணை பிடித்திருந்த நு}ல் முனையில் கொக்குக் கொடியின்
முடிச்சை வலுவாகப் பிணைத்தார். எல்லாம் தயார். சோளகக் காற்றும் வேகமாக வீசியது.
நு}லின் மறுபக்கத்தை மெதுவாக இழுக்கக் கொக்குக்கொடி 'நங்....ங்....' என்று முனுகிக்
கொண்டு பனை விட்டம் வரை உயர்ந்தது. மேல் காற்று அதன் உடலில் வலுவாகத் தாக்கி மேலே
உயர்த்தியது.
ஆடி அசைந்து கொடி வானில் கிளம்பியது. முத்தர் அம்மானும்
தம்பையாண்ணையும் நு}லை மெதுவாக விட்டுக் கொண்டே வந்தார்கள். உயரே எழும்பி எழும்பி.
அதன் வடிவமும் சிறுத்து.... உயர்வானில் எழில்வடிவாக அசைந்தது.
'குவாங்....
ங்.... ங்....' என்ற நாதஓசை இடைவிடாது எழுந்து பரவியது.
"அம்மான், சோக்கான
கொடி.... வண்டி போடாமல், தளும் பாமல் நிக்குது பாருங்கோ.... விண் இரைவது நாதமாகக்
கிடக்குது...! இனி எப்ப இறக்கப் போறியள்.....?" என்று கேட்டார்,
தம்பையாண்ணை.
"மூன்று நாளைக்கு இறக்க மாட்டன்...." எள்றார், முத்தர் அம்மான்.
அவர்முகம் பூரித்துக் கிடந்தது. சிறுவர்கள் காற்றாடியின் நு}ல் கயிற்றைப் பிடித்து
இழுத்துப் பார்த்தார்கள். அவர்களையே து}க்கிக்கொண்டு போய்விடும் போல இழுவை
இருந்தது. கொக்குக்கொடி விண்ணில் இரைந்தபடி பறப்பதைத் தன் வீட்டு முற்றத்தில்
நின்று கொண்டு பார்த்தார், காசிநாதர்.
"இண்டைக்கு இரவு இதுக்கு ஒரு முடிவு
கட்டுறன்!... மூன்று நாளைக்கு இறக்கமாட்டியோ?..... அந்தக் கடுப்பையும்
பார்க்கிறன்.... என்று பொருமினார். அந்தவேளை முத்தர் அம்மான் வீட்டு வாசலில்
தபால்காரனின் மணியோசை கேட்டது.
முத்தர் அம்மானின் பிள்ளைகள் கடிதங்கள்
எழுதிருந்தார்கள்.
"இதென்னனை.... அதிசயமாக கிடக்குது! பத்தாம்தேதிதான் காசோடை
கடிதம் போடுவான்கள்.... இன்றைக்குச் சொல்லி வைச்சாற்போல மூன்று பேரும்
போட்டிருக்கிறான்கள்.... நீ ஏதாவது கடுதாசி எழுதினனியே?..."
"ஓமோம்.... உங்கடை
ஆட்டத்தை எழுதினனான்...." என்றபடி பொன்னுஆச்சி வந்தாள்:" இஞ்சை
கொண்டாங்கோ..."
"ஏன் அவசரப்படுகிறாய் படிக்கிறன் கேளன்...." என்றபடி ஒரு
கடிதத்தைப் பிரித்தார். விண்ணில் பறந்து கொண்டிருந்த கொக்கின் 'ங்....' என்ற ஓசை
சற்று நின்றதுபோல இருந்தது. முற்றத்துக்கு வந்து நிமிர்ந்து பார்த்துவிட்டுத்
திருப்தியோடு திண்ணையில் அமர்ந்து கடிதத்தைப் படித்தார். இரண்டாவது மகன்
தம்பிநாதனின் கடிதம் அது; மட்டக்களப்பில் இருந்து எழுதி இருந்தான்.
"அன்பும்
பட்சமுள்ள ஆச்சி, அப்பு அறிவது, வணக்கம் பல. கடிதம் கிடைத்தது. அப்பாவுக்கு ஏன்
கோதாரிவேலை. வீட்டில் சும்மா இருக்காமல் குடிச்சுப்போட்டு ஏன் சைக்கில் ஓடினவர்?
எங்களுக்கு எவ்வளவு பரிசுகேடு? அப்புவிட்டை சொல்லுங்கோ குழப்படி செய்யாமல் வீட்டோடு
இருக்கும்படி..." வாசிப்பதை நிறுத்திவிட்டு மனைவியை அம்மான் நிமிர்ந்து பார்த்தார்:
"நீ பிள்ளையளிட்டைச் சொல்லி என்னைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறாய்...! இந்தா, இனி
நீயே வாசி. மசிர் எனக்கு முன்னுக்கு நின்று ஒரு வார்த்தை கதைக்கமாட்டார்.
கடிதத்திலை எழுதிப் போட்டார்..."
பொன்னுஆச்சி பேசாமல் நின்றாள்.
முத்தர்
அம்மான் இரண்டாவது கடிதத்தைப் பிரித்தார். மூத்தமகன் கனகரெத்தினம், மனைவியைக்
கொண்டு கடிதம் எழுதிவித்திருந்தான்:
"பட்சமுள்ள மாமாவுக்கும் மாமிக்கும்
மூத்தமருமகளின் நமஸ்காரங்கள்......'
முத்தர் அம்மானுக்கு உச்சிகுளிர்ந்து
விட்டது. பனையாலை இறக்கின உடனேயே குடித்த கள் மாதிரி இருந்தது.
"மருமகள் என்றால்
மருமகள்தான்......" என்று கூறியவாறு தொடர்ந்து படித்தார்:
"மாமி, மாமா அப்படிச்
செய்யக் கூடியவரல்ல. நாங்க நம்ப மாட்டோம். வயதான காலத்திலை சிலபல தவறுகள் நடப்பது
சகஸம் தான். நிங்கள் இரண்டுபேரும் ஊரிலை தனிய இருக்காமல் இங்கை எங்களோடு வந்து
இருக்கலாமே? எங்களுக்கும் துணையாக இருக்கும். உங்களது மூத்த பேத்தி லலிதாவுக்கு
ஓரிடத்தில் மாப்பிள்ளை பார்த்து முற்றாக்கி இருக்கிறோம்...."
முத்தர்
அம்மானுக்குக் கோபம் வந்துவிட்டது: "நானொருவன் குடும்பத்துக்குப் பெரியவனாக இருக்க,
என்னை ஒரு வார்த்தை கேளாமல் கலியாணம் முற்றாக்கிப் போட்டினம்.... இந்தக்
கலியாணத்துக்குப் போகமாட்டன்..."
"முட்டையிலை மயிர்பிடுங்காதையுங்கோ
!"
முத்தர் அம்மான் மூன்றாவது கடிதத்தைப் படித்தார்; கொழும்பில் இருந்து
பரமநாதன் எழுதியிருந்தான்.
"டியர் மம்மி.... அன்பான அப்பு "
முத்தர் அம்மான்
மனைவியைப் பார்த்தார்:" உன்னை டியர் மம்மியாம்..... என்னை அப்புவாம்..."
"அவன்
கடைக்குட்டி நெடுக உப்பிடித்தான்.... மம்மி என்று செல்லமாகக் கூப்பிடுகிறவன் "
என்றாள் பொன்னு ஆச்சி:" வாசியுங்கோ!" முத்தர் அம்மான் வாசித்தார்:
"அப்பு எங்கே
ஆடு பிடித்தவர்? கொழுத்தஆடு என்று எழுதியுள்ளீர்கள். அதை ஏன் கட்டி அவிழ்க்க
முடியாது இருக்கிறது. கஷ்டம் என்றால் கனகசபையைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாமே?
கொழும்பில் ஆட்டிறைச்சி கிடைப்பதில்லை. இன்னும் பத்துப் பதினைந்து நாளில் வந்து
சரிப்பண்ணுவோம். எல்லாருக்கும் சுகம் சொல்லுக."
முத்தர் அம்மானுக்கும் பொன்னு
ஆச்சிக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
"உவன் என்ன கோதாரியை எழுதியிருக்கிறான்.....
நீ என்ன எழுதினனீ?......" என்று மனைவியை வியப்போடு முத்தர் அம்மான்
கேட்டார்.
"என்னத்தை எழுதினனான்... அப்பு அயலுக்கை கொளுத்தாடு பிடிக்கிறார்.
அந்த ஆளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வந்து சரிப்பண்ணுங்கோ என்பதுதான்
எழுதினனான்" முத்தர் அம்மான் கலகலவெனச் சிரித்தார்.
"உவனுக்குத் தமிழ்
விளங்காது...... விசர்ப் பொடியன்..... பிழையாய் அர்த்தம் பண்ணிப்போட்டான்! கொழும்பு
பார்....... ஆட்டிறைச்சிக் கெடுவிலை கடிதமும் சரிவரப்புரியவில்லை. சரிப்பண்ண
வரப்போகிறார்...."
பொன்னு ஆச்சிக்கும் சிரிப்பு வந்தது.
"அவங்களையும்
புள்ளையளையும் பார்த்தும் எவ்வளவு காலமாகுது.... ஒரு கடுதாசி போடுங்கோ எல்லாரையும்
வரச்சொல்லி! கனகனிட்டை சொல்லி நல்ல கிடாயாய் எங்கையாவது பத்துப் பன்னிரண்டு
பவுனுக்குப் பார்க்கச் சொல்லுங்கோ....."
முத்தர் அம்மான்
ஓய்வாகப்படுத்திருந்தார். கொக்குக் காற்றாடி சரியாகப் பறக்கிறதா என்று நு}லை
இழுத்துப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டார். முற்றத்தில் சாய்மனைக் கதிரையைத்
து}க்கிப் போட்டுவிட்டு, நீலவானில் வெண் கொக்கு மிதப்பதைப் பார்த்தும், விண்ணின்
'ங்...ங்...' நாதத்தைக் கேட்டுக் கொண்டும் படுத்திருந்தார். இருந்தாற்போல காசிநாதர்
வீட்டு எல்லைவேலிக்குள்ளால் நாயோ ஆடோ நுழைவது போன்ற சத்தம் எழுந்தது. திரும்பிப்
பார்த்தார். கறையான் அரித்த பழையவேலி. கீழ்ப்பொட்டு ஒன்றுக்குள்ளால் வேலாயுதம் என்ற
சூலாயுதம் தலையை நீட்டியேதோடு, உடம்பையும் நுழைத்துக்கொண்டிருந்தான்.
"டேய்.....டேய்.... என்னடா செய்யிறாய்?"
"கொடியைப் பார்க்கிறன்,
அப்பு...."
"பொட்டுக்குள்ளாலையே கொடியைப் பார்க்கிறாய்...? திருட்டுப் பயலே...!"
என்றபடி முத்தர் அம்மான் 'விருட்' டென்று எழுந்தார்.
"ஆரடா, கள்ளப்பயல்.....
கொக்கா....!" என்று அலம்பல் காசியரின் குரல் எழுந்தது,
"டேய்.... புடோய்....
கதைகதைச்சியெண்டால் பல்லைத் தட்டித் தருவன், பொறுக்கி....." என்று முத்தர் அம்மான்
கத்தினார்.
"ஆரடா.... பொறுக்கி..... இங்காலை வாடா, உன்ரை குடலை மாலையாப்
போடுறன்..."
முத்தர் அம்மானும் அலம்பல் காசியரும் வெகுநேரம் வாக்கு
வாதப்பட்டார்கள். குட்டித் து}க்கம் போட்டுக் கொண்டிருந்த பொன்னுஆச்சி விழித்துக்
கொண்டாள். வேலிக்கு இப்பாலும் அப்பாலும் நின்று இரண்டு கிழவர்கள்
பேச்சுப்பட்டனர்.
"ஐயோ.... கடவுளே..... இந்தப் பனையாலையும் கொடியாலையும் இங்கை
கொலைதான் விழப்போகுது..." என்று ஒப்பாரி வைத்தாள். அயலவர்கள் கூடி விட்டார்கள்.
ஒரு விதமாகச் சண்டை அடங்கியது. அலம்பல் காசியர் துவாயைத் து}க்கித் தோளில்
போட்டுக் கொண்டு புறப்பட்டார்.
"இண்டைக்கு இரண்டிலை ஒன்று பார்க்கப்போறன்....
விதானையன் வந்து பனையைத் தறிக்கப்போறானா? அல்லது மணியகாரனை நேரே கூட்டிவந்து
தறிப்பிக்கிறன்...."
பொன்னுஆச்சியைக் கவலை சூழ்ந்து கொண்டது. 'இதெல்லாம் எங்கை
போய் முடியப்போகுதோ? ஒருக்காத் தம்பையாவைக் கண்டு, ஒருவிதமாக இந்தப் பனையைத்
தறிப்பிக்க வேணும்.... அவன் தான் இந்தாளுக்குப் புத்தி சொல்லுவான்....'
தம்பையாண்ணைக்கும் பனையைத் தறிப்பிப்பதில் ஆட்சேபமில்லை. ஏனெனில், அவருடைய வீடும்
பக்கத்திலேயே இருந்தது. பனை விழுந்தால் பாதிப்பு உண்டு.
"முத்தர் அம்மானை
வழிக்குக் கொண்டுவாறது லேசான காரியமல்ல, அக்கை! பிடிவாதம் பிடித்தால் விடாது...
ஆர்தான் எப்படித்தான் சொன்னாலும் கேட்காத மனிசன்! உதுக்கு ஒரு வழிதான்
இருக்குது....!"
"என்ன, தம்பையா?"
"முத்தர் அம்மானை எங்கையாவது நான்கு அஞ்சு
நாட்களுக்கு அனுப்பிவைக்கவேணும்.... அவர் திரும்பி வாறதுக்குள்ளை நாம் பனையைத்
தறிச்சுப்போட்டு, பாறி விழப்பாத்துது தறிச்சம் என்று சொல்லவேணும்.... இதுதான் சரி!
வேறை வழியில்லை...."
நீண்ட நேரம் பொன்னுஆச்சி யோசித்துப் பார்த்தாள்.
தம்பையா சொல்வது சரிபோலவேபட்டது.
"முத்தர் அம்மானுக்குப் பிளேனிலை பறக்கவேணும்
என்று கொஞ்சநாளா ஆசை இருக்குது போலத் தெரியுது..... நீ அக்கை, பரமநானுக்கு ஒரு
கடுதாசி எழுது..... அப்புவுக்குக் கொழும்புக்கு வர விருப்பம். ஒரு பிளேன் ரிக்கற்று
வாங்கி அனுப்பச் சொல்லி... கொழும்புக்கு இவரை அனுப்பிப்போட்டு நாங்கள் அலுவலைப்
பார்ப்பம்..... என்றார் தம்பையாண்ணை.
பொன்னுஆச்சி ஒருமுடிவோடு வீட்டிற்கு
வந்தால்.
மூன்று இரவுகளாக 'அலம்பல்' காசிநாதர் நித்திரையின்றித் தவித்தார்.
அமைதியான இரவின் மோனத்தைக் குலைத்தபடி 'ங்....குவாங்.....ங்' என்ற இரைச்சலோடு
'கொக்கர்' முத்தர் அம்மானின் கொக்குக்கொடி வானில் 'விண்' கூவியபடி நாட்களாகப்
பறந்து கொண்டிருந்தது.
'ங்.... ங்....' என்ற விண் கூவல், காசிநாதரின் காதுகளில்
கருங் குளவிகளாக நுழைந்து கொண்டிருந்தன. நித்திரையின்றி காசியரின் விழிகள்
சிவந்ததோடு, முகமும் வீங்கிவிட்டது. வேதனையும் கோபமும் அவரைப் பற்றிக் கொண்டன.
முத்தர்அம்மான், ஆறடி உயரத்தில் இன்னொரு எட்டுமூலைக் காற்றாடி. மூன்று விண்களோடு
கட்டிக்கொண்டிருப்பதாக அவருக்குச் செய்தி எட்டியிருந்தது. கொக்குக் கொடியின் ஒரு
விண்ணே கருங் குளவிகளாக அலம்பல் காசியைக் கொட்டின. அப்படியிருக்க, எட்டு மூலையின்
மூன்று விண்கள்....? நினைக்கவே அவருக்குத் தலையைச் சுற்றியது.
யோசித்து
யோசித்துப் பார்த்தார். மாரிமுத்தரின் இந்தக் கொடுமையைத் தடுத்தாக வேண்டும்.
ஒற்றைப் பனை எப்போது வீட்டின் மீது சரியுமோ என்ற பயப்பிராந்தியோடு, விண் கூவல்களின்
கொடூரமும் சேர்ந்து கொண்டது.
"எளிய முத்தா.... எளிய வடுவா..." என்று பல தடவைகள்
திட்டிச் சாபமிட்டார். இறுதியில் ஒருமுடிவிற்கு வந்தார்.
'விதானையின் கையிலை ஒரு
ஐஞ்சு பத்தை வைச்சாவது விஷயத்தை முடிக்கவேணும்! ஒன்றில் பனையைத் தறிப்பிக்க வேணும்!
அல்லது விண் பூட்டாமல் கொடியை ஏற்றச் செய்யவேணும்!'
சால்வையை எடுத்துத் தோளில்
போட்டுக்கொண்டு விதானையாரைத் தேடி அலம்பல் காசியர் புறப்பட்டார். விதானையார்
இம்முறை காசியர் பக்கம். உடனேயே, தனது ,டைரி'யில் காசியரின் விண்ணப்பத்தைப் பதிவு
செய்து கொண்டு, முத்தர் அம்மானை விசாரிக்கப் புறப்பட்டார். முத்தர் அம்மான்
விதானையாரை அமோகமாக வரவேற்றார்.
"என்ன விதானையார், கொடி ஏத்துறத்தைப் பார்க்க
வந்தியளோ?...... இன்றைக்குப் பின்னேரம் எட்டுமூலையும் மூன்று விண்ணோடு
ஏத்தப்போறன்...."
"அம்மான், விதானைமார் ஒழுங்காகக் கடமை புரிவதென்றால் உங்களைப்
போன்றோர் உதவியாக இருக்க வேணும்....." என்றார் விதானையார்.
"ஓமோம்....
தம்பி!.... உங்கடை சம்பளத்துக்கு எங்களைக் போன்றவற்றை உதவியும் இல்லாவிட்டால்
கஷ்டம்
தானே?... அலம்பல்காசி புதிதாக ஏதாவது பெட்டிசம் போட்டிருக்குதே?...."
என்று சிரித்தார், முத்தர் அம்மான்.
விதானையாரும் சிரித்துக்
கொண்டார்.
"அம்மான். நீங்கள் கோபிக்கக்கூடாது.... இந்த முற்றத்துப் பனையை
நீங்கள் தறிக்கத்தான் வேணும்.... அயலவர்களின் நன்மைக்காக....."
முத்தர் அம்மான்
கோபத்தோடு விதானையாரைப் பார்த்தார் அம்மானின் முகக்குறிப்பைக் கண்ட விதானையார்
தொடர்ந்தார்;
"பனையைத் தறிக்காவிடில்... நீங்கள் கொடிக்கு விண்பூட்டி ஏத்தக்
கூடாது!..... இரவிரவாக விண் கூவுவதால் அயலார் நித்திரை கொள்ள முடியவில்லை என்று
'கொம்பிளேயின்' பண்ணுகினம்....."
"விதானையார்.... விண்பூட்டாமல் ஒரு கொடி
ஏத்தமே?...."
"அப்படியென்றால், நீங்கள் இரவிலை கொடி ஏத்தக்கூடாது.....
அம்மான், நான் உங்களுக்கச் சொன்னதிலை ஒன்றையாவது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லாவிடில், உங்கள் மீது வழக்குத் தொடரும்படி காசிநாதருக்கு நான் ஆலோசனை கூறவேண்டி
வரும்..."
முத்தர் அம்மான் விதானையாரை ஏறிட்டுப் பார்த்தார். பொன்னுஆச்சி
'வழக்கு' 'கோட்டடி' என்று கேள்விப
;பட்டதும் திகைத்துப் போனாள்.
"ஐயோ....!"
என்றாள்.
முத்தர் அம்மான் சற்றுநேரம் மௌனமாக இருந்தார்இ பின்-
"அலம்பல்
காசியை வழக்கு வைக்கச் சொல்லும்... இந்த மாரி முத்தனை வழக்காடி வெல்லக் காசியனாலை
முடியுமா என்று பார்க்கிறன்.... இரவிலை அவருக்கு நித்திரை குழம்புதாமோ?....
இண்டைக்கு அதுக்கும் ஒருவழி பண்ணுறன்....."
விதானையார் கோபத்தோடு வெளியேறினார்.
அன்று மாலை காசியர், வேலியால் வீட்டை ஒரு நோட்டம் விட்டார். கொக்குக் காற்றாடியை
அம்மான் 'வலிச்சு'க் கீழே இறக்குவது தெரிந்தது.
"முத்தர் பயந்துபோனார்......
அதுதான் கொடியை இறக்குகிறார்...." என்று காசிநாதர் திருப்திப்பட்டுக் கொண்டார்.
அரைமணிக்குள் அவருடைய திருப்தியில் மண் விழுந்தது. முத்தர் அம்மான் மூன்று விண்
பூட்டிய எட்டுமூலைக் காற்றாடியை பனை விட்டத்தில் மாட்டினார். ஆறடி உயரமான அக்
காற்றாடி பதினைந்து அடி வாலைக் கொண்டிருந்தது. தம்பையாண்ணையும் முத்தர் அம்மானின்
உதவிக்கு வந்து சேர்ந்தார்.
"அம்மான், இந்தக் கொடியிலை ஆளையே கட்டி
ஏத்தலாம்போல இருக்குது.....!"
"ஆளையல்ல, தம்பையா! பூனையைக் கட்டி
ஏத்தப்போறன்...."
"அம்மான்...?"
"மெய்யாத்தான்.... அதோபார், அந்தப்
பெட்டிக்குள் பொரிச்ச மீனைத் தின்றுகொண்டு நிக்குது, வானவெளியிலை மிதக்கப்போகிற
பூனை....! கொடியின் வாலிலை, பெட்டியைப் பிணைக்கப் போகிறன்..."
"அம்மாள், இது ஒரு
சாதனைதான்... ரஷியாக்காரன் றொக்கெட்டிலை நாய்களை அனுப்பினான்! அமெரிக்கன் மனிசரை
அனுப்பினான்! தமிழன் காற்றாடியிலை பூனையை அனுப்புறான்...." என்றார்
தம்பையாண்ணை.
"சாதனைக்காக அல்ல, தம்பையா! அலம்பல் காசி விண் கூவலினால் நித்திரை
கொள்ள முடியாமல் தவிக்கிறாராம்.... வழக்கும் போடப் போறாராம்.....! இன்றைக்கு இரவு
மூன்று விண்ணின் கூவலோடு சேர்ந்து என்ரை பூனையும் ஆகாசத்தில் இருந்து குரல்
கொடுக்கப் போகுது.....!" என்று கடகடவென வயிறு குலுங்க முத்தர்அம்மான்
சிரித்தார்.
"உப்பிடிச் செய்தால் இரவைக்குக் கொடியின்ரை நு}லை ஆராவது அறுத்துப்
போடுவினம், அம்மான்..."
"பாவி மனிசன் மல்லுக்கு நிக்குதே? இதெல்லாம் எங்கை போய்
முடியப்போகுதோ?... பரமநாதனுக்கு எழுதின கடிதத்திற்குப் பதிலையும் காணோம்....
அம்மாளாச்சி, நீதான் துணை....." என்று பொன்னு ஆச்சி கலங்கினாள்.
ஒரு
மணித்தியாலம் கழிந்தது.
'குவாங்.... வாங்....' என்ற பேரிரைச்சலோடு விண்
கூவியபடி, முத்தர் அம்மானின் எட்டுமூலை வானில் ஏறியது. அத்தோடு 'மியால்....
யாவ்..... மியாவ்...' என்ற அவலக்குரலும் சேர்ந்து ஒலித்தது. காசியரின் காதுகளுள்
கருங்குளவிகளோடு, மட்டத்தேள்களும் நுழைந்தன.
விண்ணில், காற்றாடியோடு
பூனையையும் சேர்த்துப் பறக்கவிட்டுள்ள செய்தி ஊரெங்கும் வேகமாகப் பரவியது. முத்தர்
அம்மானின் திறமையைப் பாராட்டவும், விண்ணில் எட்டுமூலையோடு பூனையும் பறப்பதைக்
காணவும் அம்மானின் வீட்டில் இரவு பத்துமணி வரை சனக்கும்பல். எட்டுமூலையின் நீண்ட
பாம்புபோன்ற வாலில் சிறு பெட்டி ஒன்று பிணைத்திருப்பதை நிலவு ஒளியில் காண
முடிந்தது. சோளகத்தின் அசைவிற்கு இணங்க, நீண்ட வால் பாம்பாக நெளிந்து
அலைவீசியது.
"மியாவ்.... மியாவ்..." என்று பூனையின் அலறல்.
பொன்னு ஆச்சி மனம்
கேளாமல் சொன்னாள்.
"தயவுசெய்து கொடியை இறக்கிப் பூனையைக் கீழை விடுங்கோ...
வாயில்லாத சீவன்...." தம்பையாண்ணையும் அதையே சொன்னார். வேறு பலரும் அதையே
சொன்னார்கள். முத்தர் அம்மானுக்கும் அது சரியாகவேபட்டது. கொடியை இறக்கிப் பூனைப்
பெட்டியைக் கழற்றிவிட்டு, மீண்டும் கொடியைப் பறக்கவிட்டு விட்டுப் படுக்கைக்குப்
போக இரவு பன்னிரண்டு மணியாகிவிட்டது. சற்றுக் கண்ணயர்ந்திருப்பார். இருந்தாற் போல
அவருடைய நாய் வீமா குரைத்தது; அதைத் தொடர்ந்து பொன்னு ஆச்சியின் குரலும்
எழுந்தது.
"கள்ளன்.... கள்ளன் உந்தச் சீமைக்கிளுவைக்குப் பக்கத்திலை நிண்டிட்டு
ஓடுகிறான்.... கள்ளன்..... ஐயோ கள்ளன்......"
"கள்ளன்.... கள்ளன்..." என்று
ஓலமிட்டபடியே முத்தர் அம்மானும் எழுந்தார்; பக்கத்தில் கிடந்த பொல்லையும் எடுத்துக்
கொண்டார். வீமா முருக்கமரம் ஒன்றைச் சுற்றிச் சுற்றி வந்து 'வொள்..... வொள்...'
என்று குரைத்தது. மரத்தில் தாவவும் முயன்றது. மரத்தில் இருந்து ஒரு குரல்
அடிக்..அடிக்' என்றது. பொன்னு ஆச்சி போட்ட கூக்குரலில் அயலவர்கள் பலர் வேலியால்
ஏறிப் பாய்ந்து முத்தர் அம்மானின் வளவிற்குள் வந்துவிட்டார்கள். தம்பையாண்ணை,
பேத்தைவல்லி எல்லாரும்.
"கள்ளன் முருங்கையிலை இருக்கிறான்... வீமா அவனை இறங்க
விடாமல் பிடிச்சிருக்குது..." எல்லாரும் முருங்கை மரத்தை நோக்கிப் பாய்ந்தார்கள்.
தம்பையாண்ணை 'ரோச்லையிற்'றை அடித்துப் பார்த்தார். முருங்கைமரக் 'கெவரி'ல் கையில்
ஒரு சிறு வில்லுக்கத்தியோடு 'மலங்க மலங்க' விழித்தபடி அலம்பல் காசிநாதர்
உட்கார்ந்திருந்தார்.
எல்லாரும் ஒருகணம் திகைத்துப்போனார்கள்.
"அடப்பாவி..."
என்றார் அம்மான்.
"என்னதான் கோபம் இருந்தாலும், வில்லுக்கத்தியாலை குத்துற
அளவுக்கு உங்களுக்கு ஆத்திரம் வரக்கூடாது, காசி அம்மான்! கொலை செய்யிறதுக்காகக்
கத்தியும் கையுமாக வந்திருக்கிறியளே.....?" என்று தம்பையதண்ணை
கேட்டார்.
"பாவி.... பாவி... என்ரை தாலியைப் பறிக்கக் கத்தியோடை வந்தியே?...."
என்று பொன்னு ஆச்சி ஓலமிட்டாள்.
"பொலீசைக் கூப்பிட வேண்டியதுதான்..." என்றார்
பேத்தை வல்லி.
"ஐயோ... சிவசத்தியமாச் சொல்லுறன்.. நான் கொலைசெய்ய வரவில்லை.....
தம்பையா! கொடியை அறுத்துவிடத்தான் வந்தன்..." என்று அலம்பல் காசி கண்ணீர் விட்டார்.
வேலிப் பொட்டுக் குள்ளாலை வந்தன்.... என்னை நம்பு, பொன்னு! உன்ரை புரியனைக்
கொலைசெய்ய வரவில்லை!... முத்தர், அம்மாளாச்சி ஆணை!.... கொடியை அறுக்கத்தான்
வந்தன்..."
"விசர் மனிசன்..." என்றார், முத்தர் அம்மான். எட்டுமூலைக் காற்றாடி
விண் கூவியபடி வானில் மிதந்துகொண்டிருந்தது. பொன்னு ஆச்சி நம்பவில்லை: காசியர்
தன்னுடைய தாலியை அறுக்கவே வந்தவர் எனப் பிடிவாதமாக நம்பினாள் தனது தாலிக்கு யமனாக
முற்றத்து ஒற்றைப்பனை வளர்ந்து நிற்பதாகவும் நம்பினாள்.
'பேத்தை வல்லி'
என்று வண்ணார்பண்ணையில் செல்லமாக அழைக்கப்படுகின்ற வல்லிபுரத்தைப் பற்றிச் சிறிது
சொல்லவேண்டும்.
"கொழுவிவிட்டுக் கூத்துப்பாக்கிற மனிசன்..." என்பது
தம்பையாண்ணையின் கருத்து.
"அண்டல் வைக்கிறதிலை சூரன்..." என்பது முத்தர்
அம்மானின் அபிப்பிராயம். பனங்கள்ளையும் தென்னங் கள்ளையும் முட்டி முட்டியாகக்
குடித்ததினால் வயிறு, பொங்கள் பானைபோல முன்னால் தொங்கியது; வெண்மண்டை; கால்களும்
கைகளும் மிக மெலிந்தவை. பெயரும் வலு பொருத்தம். பேத்தை வல்லியர் தனிக்கட்டை.
கிடைத்த இடத்தில் சாப்பிட்டுச் சுவைகண்ட மனிசன். முத்தர் அம்மானுக்கும் அலம்பல்
காசியருக்கும் இடையில் பகைமை வளர்ந்திருப்பதைக் கண்டார். இரண்டு பேரையும் நடு
வீதியில் 'கொளுவி' விட்டுக் கூத்துப்பார்க்க ஆசைகொண்டார். வசதியாக ஒரு செய்தியும்
கிடைத்தது. விடிய எழுந்ததும் முகம் கழுவிவிட்டு, அலம்பல் காசியரைப் பார்த்துவரப்
புறப்பட்டார். காசியருக்கு வல்லியரில் சற்றுக் கோபம்.
"நீ வல்லி, என்னைப்
பொலீசிலை பிடிச்சுக்கொடு என்று சொன்னனி...." என்றார், காசி.
"சத்தியமாக் காசி...
இருட்டிலை நீ என்று தெரியவில்லை.... ஆரோ கள்ளன் என்றுதான் அப்படிச் சொன்னனான்! நீ
என்றால் சொல்லுவனே?... உண்மையாக் கேக்கிறன்... சத்தியமா நான் ஒரு தருக்கும்
சொல்லவில்லை நீ முத்தரைக் குத்துறக்குத்தானே போனனீ?" என்று வல்லி கேட்க, காசிநாதர்
திகைத்துப்போனார். முகம் எல்லாம் வியர்த்துக் கொட்டியது.
"விசர்க்கதை பேசாதை...
எனக்கென்ன விசரே..."
"உனக்கு விசரிலைதான் குத்த வந்தனீ என்று முத்தர்
சொல்லுறார்..."
"எனக்கோ..? விசரோ?... அவனுக்குத்தான் விசர்... எளிய ராஸ்கல்...
படுவா..! எனக்கு வாயிலை வருகுது... அவருக்கு ஒரு பாடம் படிப்பிக்காமல்
விடுகிறதில்லை..." பேத்தை வல்லியர் புதியதொரு வயிற்றெரிச்சலான விடயத்தை
அவிழ்த்துவிட்டார்:
"மாரிமுத்தர் ஆகாசக் கப்பலிலை கொழும்புக்குப் போறாராம்..."
"என்ன என்ன?..." துடித்துப் பதைத்துக் கேட்டார், காசியர்.
"என்ன
தெரியாதமாதிரிக் கேட்கிறாய்...! பரமநாதன் அதுதான் உன்ரை மருமோன் நேற்று ஆகாசக்
கப்பல் ரிக்கற்று எடுத்துக் கொழும்புக்கு வரச்சொல்லி அனுப்பி இருக்கிறானாம்....
நாளையண்டைக்குப் போறாராம்... ஊரெல்லாம் இதுதான் கதையாய் இருக்குது.... உனக்குத்
தெரியாதே, காசி!...."
காசியருக்கு அடிவயிற்றில் ஏதோ கொழுந்துவிட்டு எரிந்தது.
"மருமோன் என்னைத்தான் கொழும்புக்கு வரச்சொல்லி எழுதி இருந்தவன். பிளேன்
ரிக்கற்று அனுப்பிறன் என்றும் காசிதம் வந்தது!.... காகிதக்காரன் எனக்கு வந்த பிளேன்
ரிக்கற்றை மாறிக்கொண்டுபோய் முத்தரிடம் கொடுத்துவிட்டான் போல
இருக்குது...."
"இருக்கும்...... இருக்கும்..... அப்படித்தான்
இருக்கும்!......."
காசியருக்கு தன்னிலேயே சந்தேகம் வந்துவிட்டது.
"காகிதக்காறன் மாறிக் கொடுத்திருக்க மாட்டான். முத்தன் தான் நான் போறன் என்று
கேள்விப்பட்டதும், மகனுக்குக் காகிதம் போட்டு எனக்கு முதல் பிளேன் ரிக்கற்று
எடுத்திட்டான்.... பார்க்கிறன், உவர் பிளேனிலை கொழும்புக்குப்போற கொழுப்பை..."
"உதென்ன கதை.... எப்படி உங்களாலை நிற்பாட்ட முடியும்...?" என்றார் பேத்தை
வல்லி.
காசியர் மெதுவாகச் சிரித்தார்.
"நீ பேப்பர் வாசிக்கிறதில்லைப் போல
இருக்குது. எத்தனை பிளேனுகளை, கைக்குண்டுகளையும் துவக்கு
களையும் காட்டிக்
கடத்திக் கொண்டு போயிருக்கிறான்கள் தெரியுமே?....."
பேத்தை வல்லிக்குச்
சிதம்பரசக்கரத்தைப் பேய்பார்த்த மாதிரி இருந்தது.
"அதுக்கும் உதுக்கும் என்ன
சம்பந்தம்...?"
"உனக்கு இது விளங்காது, வல்லி! நீ இருந்துபாரன் இந்தக் காசியன்
செய்யப்போற வேலையை...! பிளேனிலை பறக்கப்போறாராமோ பிளேனிலை! அதையம் ஒருக்காப்
பார்ப்பம்...!"
பலாலி விமான நிலையம். முத்தர் அம்மான் விமானப் பிரயாணத்திற்கு
ஆயத்தமாகக் கதிரை ஒன்றில் அமர்ந்திருக்கிறார். அவரைப் போலப் பலர் விமானநிலைய
மண்டபத்தில் குழுமி நிற்கின்றார்கள். வெள்ளை வெளேர் என்ற வேஷ்டி சால்வை. சந்தனப்
பொட்டு; குடுமி சகிதம், சிறிய ஒரு சூட்கேசுடன் அம்மான் காட்சி தந்தார். அந்த
வடிவத்தில் அவரைத் தவிர வேறு எவரும் விமான நிலையத்தில் இல்லைஇ மேனாட்டு
நாகாPகத்தின் பிரதிநிதிகளாகவே காட்சி தந்தார்.
விமானம் வருவதற்கு இன்னும்
பத்து நிமிடங்களே இருந்தன. முத்தர் அம்மானின் இதயம் சுவர்க் கடிகாரம் போல
'திக்...திக்' என்று அடித்துக் கொண்டது; இனந் தெரியாத ஒரு வகைப் பயம் அவரைக்
கௌவிக்கொண்;டது. நெற்றியில் வியர்வைத் துளிகள்: "அம்மாளாச்சி..... நீதான்
துணை..."
முத்தர் அம்மானின் கதிரைக்கு முன் இருந்த கதிரையில் ஒரு பெண் வந்து
அமர்ந்தாள். 'கொளோன்' வாசனை மூக்கில் ஏறியது. 'ரையிற்' அணிந்திருந்தாள். கதிரையில்
இருந்ததும். உடை மேலேறியது.
"மறைக்க வேண்டியனவற்றை மறைக்காமல் இந்தப்பிள்ளை,
மறைக்கத் தேவையற்றனவற்றை மறைச்சிருக்குது..." என்று அம்மான் முணுமுணுத்தார்:
"கோதாரி, போவாளவையின்ரை உடுப்பும்..... நடப்பும்...."
"என்ன அம்மான்,
உங்களுக்குள்ளை கதைக்கிறியள்...." என்ற குரல் எழவே, முத்தர் அம்மான் திரும்பிப்
பார்த்தார்; ஆளை அடையாளம் தெரியவில்லை.
"நான்தான் மயில்வாகனத்தாற்றை பேரன்....
விசுவலிங்கம்.... கொழும்பிலை டி. எல். ஓ. வாக இருக்கிறன்..."
"ஓ ஓ..
தம்பியே?.... உடையாற்றை பேத்தியை நீதானே கலியாணம் செய்தனி.....! முந்திச்
சின்னப்பொடியனாக இருந்தாய்.... இப்ப அடையாளமே தெரியவில்லை... தம்பி, எங்கே?
கொழும்புக்கே...? நானும் கொழும்புக்குத்தான்.. மகன் பிளேன் ரிக்கற்று அனுப்பினவன்
எப்ப வருகுதாம்?..." என்று முத்தர் அம்மான் கேட்டார்.
"இண்டைக்கு அரைமணி
லேற்றாம்!.. நான் முந்தநாள் ஒரு அலுவலா வந்தனான்!... இண்டைக்குப் போறன்!... பொன்னு
ஆச்சி சுகமே? இப்பவும் கொடி ஏத்துறனீங்களே....?" எள்றான்,
விசுவலிங்கம்.
"ஏத்தாமல்.... இப்பவும் எட்டுமூலை ஒன்றை ஏத்திப் போட்டுத்
தான் வந்தனான்.. உந்தக் கொழும்புக்குப் போற பிளேனுக்கு என்ரை வீட்டிற்கு மேலாலைதான்
பாதை.... ஒவ்வொரு நாளும் அதாலைதான் போறது! போகேக்கை கொடிக்குப் பக்கத்தாலை
போகும்.... வடிவாப் பாhக்கலாம்...! இண்டைக்குக் கொஞ்சம் உசரமாகப் போகச் சொல்லவேணும்
தம்பி! என்ரை வீட்டு முற்றத்துப் பனைமரம் வலு உசரம்..... தட்டிக்கிட்டிப்
போடும்...!"
விசுவலிங்கம் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டான். அவனது கண்கள்
அம்மானின் பக்கத்தில் இருந்த 'சூட்கேசில்' பதிந்தன.
"ஏன் அம்மான், வீணாக இதைக்
காவிறியள். அவங்களே பிளேனிலை ஏத்தி, நம்பரின்படி இறக்கித்
தருவாங்களே.....!"
"ஏன் அவங்களுக்கு வீண் கஷ்டம்..... கோச்சியிலை இரண்டு
றங்குப்பெட்டியை ஏத்திவிடுகிறதுக்கு புகையிரத நிலையத்திலை நிக்கிற கறுப்புச்
சட்டைக்காரர் இரண்டு ரூபா கேட்கிறான்கள்! அதைப் போல, இவங்களும் அநியாயக் கூலி
கேட்பான்கள், தம்பி, அதோடை, உதுக்குள்ளை, என்ரை மனிசி தன்ரை பேரப்புள்ளையளுக்கு
ஆசையாச் செய்துதந்த தின்பண்டங்களும் இருக்குது..."
விசுவலிங்கம் சிரித்தான்.
சற்றுநேர மௌனத்தின் முத்தர் அம்மான் கேட்டார்:
"தம்பி, பிளேனிலை போறது
பயமில்லையே?...."
"ஏன்?.... என்ன பயம்....?"
"இல்லைத் தம்பி, எங்கையாவது போய்
மோதிக்கீதி விழுந்தால்? மேலாலை பறக்கேக்கை பழுது பட்டுப்போனால்...? பெற்றோல்
காணாட்டில்? இப்ப அடிக்கடி. பிளேனைக் கடத்திக்கொண்டும் போறான்களாமே?... பாதச்சூட்டை
மாட்டிக்கொள்ளலாம் என்றான்கள்....."
"பாரசூட் அம்மான்.... வீணாப்
பயப்படாதையுங்கோ....! ஒரு மணித்தியாலத்துக்குள்ளை கொழும்புக்குப் போயிடும்...!"
விமானம் ஒன்று பேரிரைச்சலோடு வந்து இறங்கியது. முத்தர் அம்மான்
சிறுபிள்ளைக்குரிய ஆவலோடு பார்த்தார். பலர் இறங்கி வந்தார்கள்.
அரைமணி நேரம்
கழிந்தது.
இருந்தாற் போல, இரண்டு பொலீஸ் ஜீப் வண்டிகள் விமான நிலையத்தில் வந்து
நின்றன. 'படபட'வென பொலீசார் பல