| ஈழநூல் 86 | |
| நூல் |
வம்ச விருத்தி (பகுதி 1, பகுதி 2) |
| ஆசிரியர் |
அ.முத்துலிங்கம் |
| மின்னூலாக்கம் |
இ. பத்மநாப ஐயர் |
| மின்பதிப்பு | ஈழநூல் |
வம்ச விருத்தி
அ.முத்துலிங்கம்
பகுதி
1
-----------------------------------------------
வம்ச
விருத்தி
அ.முத்துலிங்கம்
------------------------------------------------
பதிப்பரை
'யாதும்
ஊரே யாவரும் கேளிர்' என்பது சங்க காலத்து செந்நாப் புலவன் ஒருவன் கற்பித்த இனிய
உலகம். அந்த உலகளாவிய மனித நேயம் போற்றப்பட்ட சங்கச் சான்றோர்ன் ஈழத்து பூதன்
தேவனார். இவர் ஈழத் தமிழரின் தாய்மொழி நேசிப்பை நாட்டினார் என ஈழத் தமிழர்
கொண்டாடுவர். இது வரலாறல்ல; ஐதிகமே என்று சொல்வாரும் உளர். ஆனால், சென்ற
நூற்றாண்டில் ஆறுமுகன் என்னும் இளைஞன் தமிழ்நாடு சென்றான். தனது சொல் வன்மையினால்
'நாவலர்' என்று மகிமை பெற்றார். அவருடைய தமிழ் வசன ஆளுமையைத் தமிழ்நாடு ஏற்றது.
இந்த நூற்றாண்டில் விபுலாந்த அடிகளாரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தனது முதலாவது
தமிழ் பேராசிரியராய் சிறப்பித்தது, ஆஹா, தமிழகத்திற்கம் ஈழத்துக்கும் இடையில்,
எத்தகைய நாகரிகமான புரிந்துணர்வும், பரஸ்பர வித்துவ அங்கீகரிப்பும்
நிகழ்ந்தது!
பிறகு, சமன்பாடுகள் மாறின. தமிழகத்திலே, வியாபாரத்திலே முதன்மை
பெற்ற சஞ்சிகைகள் சில, தமிழ் இலக்கியப் படைப்புத் தங்களுடைய ஏகபோகம் என்று சத்தம்
போட்டன. இலங்கை அரசியலில் 'காலாள்கள்' போல நகர்த்தப்பட்ட ஈழத்தமிழர் சிலர்,
'தமிழகச் சஞ்சிகைகளுக்குத் தடை விதியுங்கள்' என்ற கோஷங்கள் வைத்து ஆர்ப்பரித்தனர்.
இரண்டு தவறுகள் இணைத்து ஒரு சரியாகி விடுமா? இல்லை என்பது தான் உண்மை.
இப்பொழுது மீண்டும் சமன்பாடுகள் மாறியுள்ளன. தமிழ்நாடு - ஈழம் ஆகிய இரு
நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாலும், தமிழ் இலக்கியப் படைப்பும் பகிர்வும் நடைபெறும்
நிதர்சனம் விடிந்துள்ளது. உலகளாவிய இந்தத் தமிழ் இலக்கிய வியாபித்தலினால், தமிழே
செழிப்பும் சேமமும் பெறும் என்கிற இதம் தமிழ் நாட்டில் கனிந்துள்ளது. இத்தகைய ஒரு
சகாயச் சூழலிலே, புலம் பெயர்ந்த ஈழத் தமிழருடைய இலக்கியப் படைப்புகள் உரிய வகையிலே
தமிழ் நாட்டில் பிரசித்தமாகுதல் வேண்டும். அவ்வாறே தமிழ் நாட்டின் ஆதர்சமான
படைப்புகள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் வாசகர்களைச் சென்றடைதல் வேண்டும். இந்தப்
பணியினை முன்னெடுத்துச் செல்வதையும் மித்ர வெளியீடு தனது இலக்கிய ஊழியமாக
வரித்துள்ளது.
'வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக்குப் புதிது.
இதுவரை தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தாத புதிய கதைக் களங்களையும், கதைப்
பொருளுக்கான புதிய அக்கறைகளையும் இத்தொகுதியின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு அ.
முத்துலிங்கம் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்ச் சுவைஞர்கள் மட்டுமன்றி,
தமிழ்க்கதைப் படைப்பாளிகளும் 'வம்சவிருத்தி' யினாலேயே பயனடைவார்களென்று
நம்புகின்றேன்.
டாக்டர் பொன். அநுர
என்னுரை
'ஒஸ்கார்
வொயில்டு' என்ற சிறந்த ஆங்கில அறிஞர் ஒரு நாள் முழுக்க எழுத்து வேலைகளில்
மும்முரமாக இருந்தார். அவர் மதிய உணவு அருந்துவதற்காக வந்தபோது அவருடைய நண்பர்
ஒருவர் 'நீங்கள் நிறைய எழுதி முடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே?' என்றார். அதற்கு
ஓஸ்கார் வொயில்டு 'ஆமாம், ஒரு காமா போட்டேன்' என்று கூறினாராம். அன்று இரவு
மறுபடியும் அதே நண்பர் அவரிடம் 'இரவு வந்தது கூடத் தெரியாமல் விழுந்து விழுந்து
எழுதிக் கொண்டிருந்தீரே! என்ன? இன்னொரு காமா போட்டீரா?' என்று கிண்டலாகக் கேட்டார்.
அதற்கு ஓஸ்கார் வொயில்டு, மூச்சுவிடும்நேரம் கூட எடுக்காமல், 'இல்லை, ஏற்கனவே போட்ட
காமாவை மீண்டும் அடித்துவிட்டேன்' என்று கூறினாராம்.
இந்த நிலைதான் அநேகமான
எழுத்தாளர்களுக்கு. ஆனால் என்னுடைய நிலைமையோ இன்னும் மோசமானது. நான் தமிழ் பண்டிதன்
அல்லன். என் அநுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து
கொள்ளவேண்டும் என்ற அடக்க முடியாத அவாவிலே புறப்பட்ட சாதாரணன். ஒவ்வொரு வார்த்தையாக
பொறுக்கி எடுத்து அவற்றை நேர்த்தியாகக் கோத்து, நகாசு வேலை செய்து சிறுகதை
வடிவங்களாக தருவதற்க பல மாதங்களாகிவிட்டன. இந்தக் கருக்கள் வடிவமின்றி என் மனதிலே
தூங்கிக் கொண்டிருந்த காலமோ மிகப் பெரியது. ஆனால் அவற்றை எழுத்து வடிவத்திலே கொண்டு
வருவதற்குத்தான் இவ்வளவு ஆக்கினைப் படவேண்டி வந்துவிட்டது.
முப்பது வருட
அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு திரும்பவும் இலக்கியம் படைக்க வந்தது ஏன்? இதுதான்
பலருடைய கேள்வி? தமிழ்கூறும் நல்லுலகம் நட்டப்பட்டு போகாமல் மிகவும்
ஆரோக்கியமாகத்தானே இருக்கிறது. அப்படியிருக்க, திடீரென்று எழுத வேண்டும் என்ற
உத்வேகம் பிறந்தது எப்போது? சம்பந்தரைப்போல ஞானப்பால் குடித்து பிறக்கவில்லை என்பது
நிச்சயம்; காளமேகப் கவியைப்போல எச்சில் தம்பலத்தை சுவைத்தபின் எழுந்த உற்சாகத்தில்
எழுத்தாணியை எடுக்கவில்லையென்பதும் நிகம். பிரம்மாவே வந்து வால்மீகிக்கு சந்தம்
எடுத்துக் கொடுத்தது போன்ற பாக்கியமும் எனக்கு கிட்டவில்லை; எனக்குக்
கிடைத்ததெல்லாம் ஒரு நண்பருடைய முழங்கை இடிதான்.
தமிழ்நாட்டில் ஓர்
இசைவிழாக் கச்சேரியை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த நண்பர்
சள்ளையிலே ஒரு இடி இடித்து இதற்கு கால்கோள் விழா நாட்டினார். அவர் உசுப்பிவிட்டதைத்
தொடர்ந்து மற்ற நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உசாரும்தான் இதற்குக் காரணம்.
நான் சிறுவனாக இருந்தபோது அம்ம எனக்கு அடிக்கடி கதைகள் சொல்லுவார். அந்தக்
கதைகளை 'கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது' என்று சொல்லி முடிப்பார்கள்.
கதைக்கும், கத்தரிக்காய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நான் பல நாட்களாக கற்பனை
செய்து வைத்திருந்தேன். கத்தரிக்காய் காய்த்தால் காய்த்துவிட்டு போகட்டும். ஆனால்
என் கதைகள் 'முடிவது' எனக்கு சம்மதமில்லை. அவைகள் 'நிறைவு பெறுவதையே' நான்
விரும்புகிறேன். தமிழ் வாசகர்களின் கற்பனை விலாசத்திலும், மதியூகத்திலும் எனக்கு
நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே என் கதைகளின் கடைசி வரிகளைப் படித்த வாசகர்களின்
கற்பனை ஓட்டத்திலே அந்தக் கதைகள் பூர்த்தியடைவதையே நான் இச்சிக்கிறேன். அவைதான்
சிறப்பான கதைகளென்றும் எண்ணுகிறேன்.
நான் அளப்பரிய மரியாதை வைத்திருக்கும்
ஓர் எழுத்தாளர், அண்மையில் ஒரு பத்திரிகையில் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். கதை
படிக்க மிகவும் ரசமாக இருந்தது. நகைச்சுவை இழையோடி சில இடங்களில் வாய்விட்டுச்
சிரிக்கக்கூடத் தோன்றியது. ஆனால் கடைசி வாக்கியம் முடிந்தபோது கதையும்
'முடிந்துவிட்டது'. ஒரு நீண்ட விகடத்துணுக்கை படித்தது போலத்தான் எனக்கு இருந்தது.
வெங்காயத்தை உரித்து, உரித்து கடைசியிலே ஒன்றுமே இல்லாமல் ஆகியதுபோல எனக்கு பெரும்
ஏமாற்றமாகப் போய்விட்டது. இவ்வளவுக்கும், அந்த கதையானது சிறுகதை இலக்கணத்துக்குள்
மிகவும் கச்சிதமாகப் பொருந்தித்தான் இருந்தது.
இப்பவெல்லாம் அடிக்கடி
அழகுப் போட்டிகள் நடப்பதைப் பார்க்கிறோம். உலக அழகுப் போட்டிகளெல்லாம் Beauty with
a Purpose என்ற முறையில் நடைபெறுகின்றன. 'அழகுக்கு ஒரு குறிக்கோள்' என்று சொல்லிக்
கொண்டு இந்த அழகிகள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து மனிதவளத்தை மேம்படுத்தும்
நற்பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்புபோல் உடல் அழகையோ, முக லட்சணத்தையோ ஆராதித்த
சகாப்தம் போய் திருவாதபூரரடிகள் போற்றிய 'சித்தம் அழகியவரை' உலக அழகியராக
தேர்ந்தெடுக்கும் காலம் வந்துவிட்டது.
'இதுபோல நாங்கள் எழுதும் கதைகளிலும்
ஏன் ஒரு 'குறிக்கோள்' இருக்கக்கூடாது? அது என்ன அப்படி ஒர்அபவித்திரமான வார்த்தையா?
இப்படித்தான் ஒர் எண்ணம் எனக்கு அடிக்கடி வரலாயிற்று.
இதன் காரணமாகத்தான்
இந்தத் தொகுதியில் நீங்கள் படிக்கும் கதைகள் சிறிது மாறுபட்டவையாக இருப்பதைக்
காண்பீர்கள், இந்தியா, இலங்கை, அமெரிக்க, கனடா ஆகிய நாடுகள் எல்லாம் கதைக் களங்களாக
அமைக்கப்பட்டு இருக்கின்றன. கதை மாந்தர்களும் அப்படியே. கதையின் கருப்பொருளும்
சிறிது வித்தியாசமானதாகவே இருக்கும். நகைச் சுவைக்காகவோ, வாசகர்களை
கிச்சுகிச்சுமூட்டவோ எழுதப்பட்டவையல்ல இந்தக் கதைகள். பொழுதுபோக்கிற்காக எத்தனையோ
கதைகள் வெளிவருகின்றனவே! அந்தக் கணக்கில் இவை தவறியும் சேர்ந்துவிடக் கூடாது என்ற
எச்சரிக்கையில் படைக்கப்பட்டவை.
அமெரிக்காவில் ஒரு தலைசிறந்த நாவிதரிடம்
ஒருவர் தலை அலங்காரம் செய்து கொள்ளப் போனாராம். அந்த நாவிதர் ஐந்து நிமிடங்களிலேயே
காரியத்தை முடித்து விட்டு நூறு டொலர் கேட்டாராம். திடுக்கிட்டுப் போன அந்த
வாடிக்கையாளர் 'என்ன இது? நாலு முடியை வெட்டியதற்கு நூறு டொலரா?' என்று கேட்டார்.
அதற்கு அந்த நாவிதர் 'ஐயா, இந்த சன்மானம் வெட்டிய தலைமுடியின் அளவை வைத்து
தீர்மானிக்கப்படவில்லை; வெட்டாமல் தலையிலே விட்டுவைத்த சிகையை வைத்தல்லவோ
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது' என்று கூறினாராம்.
நான் இந்தக் கதைகளை அந்தக்
கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். சொல்ல வந்த விஷயத்தை தெம்பாகப் பிடித்துக்கொண்டு
மீதியைத் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கிவிட்டிருக்கிறேன். இதன் காரணமாக, என்
மனதிற்கு வெகு பிரியமாயும், இதயத்திற்கு கிட்டவுமுள்ள 'உயிர் நேயம், பிரபஞ்சநேயம்'
ஆகியவை இந்தக் கதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் அதற்கு என் பேராசை தான் காரணம்.
வாசகர்களுடைய மன்னிப்பை அச்சாரமாக இப்பவே கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில்
ஒரு தமிழ்நாட்டு நண்பருடன் கதைத்த போது அவர் 'உங்கள் கதைகளை படித்தேன்; மிகவும்
நன்றாக இருந்தன. யாழ்ப்பாணத் தமிழ் தொல்லை கொடுக்கவில்லை' என்று கூறினார். எனக்கு
சிரிப்பாக வந்தது. யாழ்ப்பாணத் தமிழ் இப்படி தமிழ்நாட்டு வாசகர்களை 'ஆட்டி
வைக்கும்' விஷயம் எனக்கு அன்றுவரை தெரியாது. இந்தத் தொகுப்பில் வரும் கதைக்களங்கள்
அநேகமாக அந்நிய நாடுகளில் ஊன்றியிருந்தாலும், 'கதை சொல்லி' மாத்திரம் ஒரு
யாழ்ப்பாணத்தவன் என்றபடியால் இடைக்கிடை ஓர் உண்மைத் தன்மையை நிலைநாட்ட 'அந்தத்
தமிழ்' தலைகாட்டும். கதையில் உண்மைக்கும், அழகுக்கும் சத்தியத்துக்கும் அவை உதவும்
என்றே நம்புகிறேன்.
சிறுகதையின் உருவம் மாறிக்கொண்டே வருகிறது. அதில்
சந்தேகமே இல்லை. ஆனால் 'இதுதான் சிறுகதையின் வடிவம்' என்று யாரால்தான்
திட்டவட்டமாகக் கூற முடியும்? ஒரு 'கதைசொல்லி' தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு
நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப்
பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம்.
உருவத்துக்காக வில்லுக்கத்தியை மடக்குவதுபோல கதையை மடித்துப் போட்டுவிட்டால்
கதையின் யோக்கியத் தன்மை கெட்டு விடும்.
இது பற்றி நான் மிகவும் மதித்து
போற்றும் இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. கி.ராஜநாராயணன் என்ன
கூறுகிறார் என்று பார்ப்போம். "ஒரு சம்பவத்தை (நடப்பை) அப்படியே சொகமாக வர்ணித்து
முடிக்கிறீர்கள். விமர்சகர்கள் இதைச் சிறுகதை வடிவம் இல்லை என்று சொல்வார்கள்.
'இப்படியும் எழுதலாம்' என்பதே என் கருத்து. சிறுகதை வடிவம் உடைந்து மறுவடிவம்
எடுப்பது என்பது இப்படித்தான்; புதுக்கவிதைபோல. மரத்திலிருந்து வித்தியாசமான ஒரு
கிளையை வெட்டி எடுத்து முன்னும் பின்னும் தறித்துவிட்டு அதை வரவேற்பு அறையில்
நிறுத்தி வைக்கிறோம். அதில் செதுக்கல் இல்லை; சிறப்மில்லை; என்றாலும் அதில் ஒரு
அபூர்வ வடிவம் தெரியும்; அதுபோல."
பூக்களைத் தொடுத்துக் கொண்டு நிற்கும்
நார்போல ஓர் ஒருமைத் தன்மையுடன் கதையிருக்க வேண்டும். நானூறு வருடங்கள் நடந்த ஒரு
கதையை நாலு வரியில் சொல்லலாம்; நாலு நிமிடங்களில் நேர்ந்த ஒரு சம்பவத்தை நாற்பது
பக்க கதையாகவும் விரிக்கலாம். ஆனால் கதையினுடைய 'தொணி' மாத்திரம் மாறாமல் கதையை
ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
காகித விரயத்தில் எனக்கு உவப்பில்லை. ஒரு காகிதத்தை கசக்கி எறியும்போது ஒரு
மரத்தின் இலை கண்ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான். இந்தத்
தாள்களில் அச்சாகி வரும் கதைகளால் ஒரு வித பயனுமில்லை என்றால் இந்தக் காகிதங்களைத்
தருவதற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்காக நான் கண்ர் வடிக்கிறேன். ஓ மரங்களே!
என்னை மன்னிப்பீர்களாக!
இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வருவதற்க உறுதுணையாக
இருந்த அன்புள்ளங்களை நான் மறக்க முடியாது. தலைக்குமேல் இருந்த வேலைத்
தொல்லைகளுக்கிடையிலும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் ஒவ்வொன்றையும் படித்து
அருமையான முறையில் முன்னுரை வழங்கிய பெருமதிப்பிற்குரிய திரு.மாலன் அவர்களக்கும்,
நண்பனாய், வழிகாட்டியாய் என்னை உற்சாகப்படுத்தி, ஆலோசனைகள் தந்து இந்தப் புத்தகத்தை
சிறப்பாக வெளியிடுவதற்க தூண்டுகோளாக இருந்த என் நெடுநாளைய நண்பர் எஸ்
பொன்னுத்துரைக்கும், தக்க படங்கள் வரைந்துதவிய ஓவியர் மருதுவுக்கம், என் பளுவைத்
தன் பளுபோல் சுமந்த நண்பர் வி.சுந்தரலிங்கத்துக்கும், தன்னலம் கருதாது ஓயாது
உழைத்துதவிய கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுக்கும், அச்சிடும் வேலைகளை அககறையுடன் கவனித்த
இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானுக்கும், புத்தகத்தை செம்மையாக பதிப்பித்த மித்ர
நிறுவனத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
அ.முத்துலிங்கம்
19ம் நாள்,
தை மாதம், 1996.
House no.32
street 4
F 8/3. Islamabad
PAKISTAN.
முன்னுரை
இன்றைக்கு வந்த தபால்களை உடைத்து மேசையில் கொண்டு
வந்து வைத்தார்கள்.
"இன்டர் நெட் போன்ற வசதிகள் வந்துவிட்டனவே அவை நமது
கற்பனைக்குச் சமாதி கட்டிவிடுமோ, புதினம் என்பதே அழிந்து போகுமோ?" என்றொரு வாசகர்
கேள்வி எழுப்பியிருந்தார்.
யோசிக்க வைத்த கேள்வி.
தமிழன்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழில் நுட்ப அதிசயங்கள், புலம்பெயரும்
நிர்ப்பந்தங்கள், அவனது கலையாத கல்விக்கும் குலையாத திறமைக்கும் பரிசுகளாகக்
கிடைத்த அயல் கலாசார சிநேகங்கள், இவையெல்லாம் தமிழனது பழைய வாழ்க்கையை மெல்ல
மெல்லத் தூர்த்து வருகின்றன. அவனது வாழ்க்கை இனி யாழ்ப்பாணத்துப் பனங்காட்டிலும்,
கொழும்பு திணைக்களத்துக் கதிரைகளிலும், சென்னைப் புழுதியிலும், கரிசல் காட்டு
வெக்கையிலும் மட்டும் விரிந்து கிடக்கவில்லை. அது நார்வேப் பனியில் உறைந்து
கிடக்கிறது; நீயு ஜெர்சி ஷாப்பிங் மால் ட்ராலிகளில் நகர்ந்து வருகிறது; ஆப்ரிக்க
நுளம்புகளின் ரீங்காரத்தில் எதிரொலிக்கிறது. இனி நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர்
மகிமையில்லை.
களங்களும், தளங்களும், மனங்களும்கூட மாறிவிட்ட இந்தப் புதுத்
தமிழனைப் பதிவு செய்ய யார் இருக்கிறார்கள்?
இந்தக் கதைகளைப் படித்தபோது
அலுத்துக் கொள்ள அவசியமில்லை என்றுதான் தோன்றியது.
இந்தத் தொகுதியில் உள்ள
கதைகள் தமிழுக்குப் புதிது. தமிழனுக்குப் புதிய அனுபவம் தருபவை.
தாழ்வுற்ற
வறுமை மிஞ்சிய சியாரா லியோனை வாழ்விக்க வந்த இத்தாலியனைப் பற்றி, மீந்த பழங்களை
நடுச்சாமத்தில் நீரில் அலம்பித் தின்னும் ரக்கூன் என்ற மிருகத்தைப் பற்றி, இடருற்ற
உயிரினம் என்ற அறிவிக்கப்பட்டு விட்ட மலை ஆட்டைப் பிடிக்க பாகிஸ்தானின் வடக்கு
மலைப் பிராந்தியத்தில் அலைகிறவனின் வம்ச விருத்தியைப் பற்றித் தமிழில் எத்தனை கதை
வந்திருக்கும்?
பொருள் புதிது. தமிழ்நாட்டுப் பத்திரிகை வாசகனுக்கு
சொல்லும் புதிதாகத்தான் இருக்கம் ("இந்த நேரத்தில்தான் அவள் ஆத்தாமல் போய்
கீழிறங்கி வந்து சங்கை கெட்ட ஹவுஸ் மெய்ட் வேலைக்க மனுப் போட்டாள்.")
எனக்கு நடை மிகவும் பிடித்திருந்தது. கடலோர வீட்டில் காற்று உலவுவது போலச்
சுகமான, லகுவான நடை. ஒரு சாம்பிள் பாருங்களேன். "புதுக்கப் புதுக்க அவளைப்
பார்ப்பது போலிருந்தது அவருக்கு - இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள்
துணுக்குறவும் இல்லை. கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி அவர் கண்களை நிதானமாகப்
பார்த்தாள். நல்லூர் சப்பரம் போல மெள்ள மெள்ள நகர்ந்து இவர் இருக்கைக்குக் கிட்டே
வந்தாள்."
புதுமைப் பித்தன் தன்னுடைய நடையைத் தவளைப் பாய்ச்சல் நடை என்று
சொல்லிக் கொள்வதுண்டு. முத்துலிங்கத்தின் நடையும் அப்படித்தான், மேலே உள்ள
விபரணைக்கு அடுத்த பத்தி எப்படி ஆரம்பிக்கிறது தெரியுமா? "அவர்களுடைய திருமணம்
ஆடம்பரமின்றி ஓரு கிராமத்துச் சர்ச்சில் நடைபெற்றது."
கிண்டலும்கூட
புதுமைப்பித்தன் ஜாடையில் இருக்கிறது. குழந்தையோடு, கணவனால் கைவிடப்பட்ட பெண் மதுக்
கடையில் நடனமாடும் வேலையில் சேர்கிறாள். "அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை
பிறந்தது. இது எப்படி என்று சமத்காரமான கேள்விகள் கேட்கக்கூடாது. கற்பு பற்றித்
திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் மேற்கோள்கள் காட்டி வியாக்கியானங்கள் இல்லாத
ஆப்ரிக்காவில் அப்படித்தான்."
இதழியலில் show. don't tell என்று ஒரு உத்தி
உண்டு. இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வார்த்தைகளைக் கொட்டி அளந்து
கொண்டிராமல், நடந்ததைக் காட்சியாகத் தீட்டிக் காண்பிப்பது வலுவான தாக்கம்
ஏற்படுத்தும் என்பது அதன் பின்னுள்ள நம்பிக்கை. வார்த்தைகளை அளந்தெடுத்துக்
கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை.
சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார்.
விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன்
தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி
எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது.
இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும்,
இந்த நூலாசிரியரின் பிற நூல்களைப் புதினங்களை இதற்கு முன்பு நான் படித்ததில்லை,
அவரைச் சந்தித்ததோ, அவரது பொழிவு எதனையும் கேட்டதோகூட இல்லை. அவரது பெயரைத் தவிர
வேறெதுவும் அறியேன். ஆனால், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித
நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப்
புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள்.
சென்னை -41 மாலன்
18 மார்ச் 96
முன்னீடு
வம்ச
விருத்தி, நண்பா அ.முத்துலிங்கத்தின் மூன்றாவது கதைத் தொகுதி. முதலாவது தொகுதியான
'அக்கா முப்பது ஆண்டுகளக்க முன்னர் வெளிவந்தது. யாழ்ப்பாண வாழ்க்கையின் அழகிலும்
சலனங்களிலும் தோய்ந்தவாறு அவர் எபதிய பதினொரு கதைகள் அதில் அமைந்தன. உலகளாவிய
வாழ்க்கை அநுபவங்களிலே மூன்று தசாப்தங்கள் முதிர்ந்தவராக, அவர் எழுதிய பதினொரு
கதைகளைக் கொண்ட தொகுதி இது. இடையில், 'திகடசக்கரம்' என்கிற கதைத் தொகுதியையும்,
இரண்டு நூல்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார். ஆங்கில நூல்கள் தொழில் சார்ந்த
நுட்பத்திலே அவர் பெற்ற ஞானப்பகிர்வின் ஆசை பற்றிய ஆக்கங்கள். இந்த 'முன்னீடு'வை
எழுதும் பணியில் அமர்கையில், அவருடைய ஆங்கில நூலிலே (Getting to know visual basic
proceduresan introduction to macro language) வரும் பகுதி ஒன்று மனசிலே மின்னல்
சொடுக்கின்றது.
The king is seated on the golden throne. Shakuntala
raises her eyes and sees her beloved. For a moment she forgets everything. The
earth stands still. And then in a clear voice she says: `My son, make your
obeisance to the king, your father'.
They are direct simple and precise,
without waste. A good macro should be like that.
விரயமற்ற,
நேரான-எளிமையான-திட்டமான சொல்திறன்! கம்புயூட்டர் பயன்பாட்டிற்கு உதவும் MACRO மொழி
பற்றிய தேடலிலேகூட, சகுந்தலாவின் ஆளுமை வீச்சுக்கு முத்துலிங்கம் மசிகிறார்.
படைப்பாளியின் உள்ளத்திலே வாழும் சுவைத்திறன் உறங்குவதே இல்லை. அவனுடைய
தேடல்களுக்கு அந்தமும் இல்லை....
தேடல் அற்புதமான அநுபவமே! தொலைந்து போன
இனத்துவ கௌரவம், சுயம்புவான சுயமரபு ஆகியன தேடல்களில் ஈடுபட்டிருக்கும் பரதேசி
நான். தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடலும் காவியமயமானது. அல்லையேன், ஆயிரத்து
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது சிருஷ்டி அற்புதத்தினால் உலக மஹாகவியாக உயர்ந்த
காளிதாஸனின் 'அபிஞாத சகுந்தலா' உலக இலக்கியச் சுவைப்புக்கு வாய்த்திருக்குமா?
அப்சரஸ் மகளான சகுந்தலா அழகுக் கொழுந்தாய்; இயற்கையின் செப்பம்; விண்ணையும்
மண்ணையும் ஒருமைப்படுத்தும் தத்துவ விளக்கம்; மன அமைதி; வாழ்க்கையின் தலையாய
இலட்சியம்; - எனப் பல சுருதிகளாய் இந்நாடகக் காவியம் நம் சுவைத் தாகங்களை அசத்தும்.
மனிதம் பற்றிய தேடலின் ஒரு சாயலாக, மனிதன் அடையக்கூடிய இன்பங்களுக்கு ஆதாரமாய்
அமைவது இயற்கையுடன் கூடிய வாழ்க்கை என்று இயற்கையின் உறவை முழுமையான உவமைப்
பொருத்தங்களுடன் நிறுவும் காளிதாஸனின் சிருஷ்டி நுட்பம் ஓர் ஆதர்ஷம். சேக்ஸ்பியரின்
படைப்பு ஓர்மத்துக்குத் துதி பாடுதல் வஞ்சகமற்ற இலக்கிய நயப்பு என்று ஞானப்
பகிர்வினை அகலித்துக் கொண், காளிதாஸனின் கலாமேதையை ஆரிய மாயை என்று நிந்தித்தல் ஞான
அறத்துக்கு ஏற்றதா? அதனை இந்திய சிருஷ்டிப் பண்பாட்டின் அடையாளமாக இனங்கண்டு,
அந்தத் தனித்துவமே அதற்கு சமஸ்தத்தினையும் அமரத்துவத்தினையும் அருளின எனப் பூரித்து
என் வசப்படுத்துதல் என் அறத்துக்கும் என் தேடலுக்கம் உகந்தது; இலக்கியத்தின்
பரமார்த்த பக்தனான பரதேசி என்கிற என் தளத்திற்கும் ஏற்றது. விஞ்ஞானம் பற்றிய புதுப்
புனைவுகள் பற்றிய தேடல்கள் நமது ஞானத்தை அகலிப்பதுடன், வாழ்க்கையின் சௌகரியங்களைப்
பெருக்கித் தரத்தை உயர்த்துவன உண்மை. இருப்பினும், நியூட்டன் இல்லாவிட்டால்,
இன்னொருவன். அவன் தத்துவத்தைத் திருத்திச் செப்பம் உரைப்பதற்கு ஐன்ஸ்டீன்
இல்லாவிட்டால், இன்னொருவன். வான் பறப்பிலே ரைட் சகோதரர்கள் முந்திக் கொண்டார்கள்.
அவ்வளவுதான். ஆனால் காளிதாஸனின்றி, இலக்கியத்தினைச் சதா வளப்படுத்தும் அபிஞாத
சகுந்தலா தோன்றியிருத்தல் சாத்தியமே அல்ல. இலக்கிய ஞானியின் படைப்பாற்றல்,
பல்வேறுபட்ட சமூகக் காரணிகளுக்கும் அநுபவங்களுக்கும் உட்பட்ட போதிலும், சில
வேளைகளில் அவற்றின் வனைவிலேயே ஸ்தூல வடிவம் பெற்றாலுங்கூட, படைப்பாளியின் தனித்துவ
ஆளுமை என்கிற ஓர்மை அவனுக்கே உரியது. அந்த ஓர்மத்தை வாலாயப்படுத்துதலும், அதன்
உபாசகனாய உழைத்தலும் இந்தப் பரதேசிக்கும் உவப்பான மதமாய் அமையும். மதத்துக்கு
அநுஷ்டானங்கள் மட்டுமல்ல, வெறியும் உண்டு.
'வம்ச விருத்தி' என்னும்
இக்கதைத் தொகைக்கு முன்னீடு எழுதும் யோகத்திலே ஈடுபடும்பொழுது, என் மனசு
இப்படியெல்லாம் குதியன் குத்துகிறது. அடுத்த நூற்றாண்டின் கதை முயற்சிகளுக்குக்
கட்டியமாக அமையும் படைப்புகள் சிலவற்றை இதில் படிக்க நேர்ந்ததினாலும், இந்த அவதி.
இக்கதைகளைத் தமிழ்ச் சுவைஞர்கள், உரிய முறையிலே தரிசித்தலைத் தடுக்கும் நந்திகள்,
புத்திஜ“விகள் போர்வையில், தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும்,
தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும், பரமார்த்த பக்தியும் ஜெயிக்கணும்.
நந்தன் கடைத்தேறவேண்டும்! அதைத் தடுக்கும் கொடுமையிலே நந்திகள் வெற்றி சுகித்தல்
கூடாது. இந்த விநோதப் புத்திஜ“விகள் நாளையைச் சென்றடைய வேண்டி இலக்கியத் தரத்தினை
நிர்ணயிக்க வல்ல ஏகபோகம் தங்கள் வசத்தே என்று சாமி ஆடுதல் மகா கொடுமை.
'....பாரதியார் கருத்து முதல்வாதி; இருப்பினும் இயங்கியல் பார்வை இருந்தது; பாரதி
மார்க்ஸை படித்திருப்பதாகக் கருதச் சான்றுகளில்லை....' என்று பாரதியாரின் கவிதா
வீரியத்தினையே உரைத்துப் பார்க்கும் இவர்கள், பாவம் காளிதாஸனை எப்படி எல்லாம்
மிதித்துத் தள்ளுவார்கள்? மார்க்ஸ’ய வேதம் பேட்டை ரௌடிகளின் நாட்டு
வெடிகுண்டாக்கப்பட்ட அவலம் ஒருபுறம். ரொமன்டிஸம், நச்சுரலிஸம், ரியலிஸம், சோஷலிஸ்ட்
ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம் (இடது) ஸர்ரியலிஸம், மஜிக் ரியலிஸம்,
எக்ஸ’ஸ்டென்ஷ’யலிஸம், ஸ்ட்ரக்சுரலிஸம், போஸ்ட் மார்டனிஸம் என்று மேலைத் திசையிலே
உருண்டோடிய பதங்களை வைத்துக்கொண்டு தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிலே சொக்கட்டான்
ஆடும் கிலிசகேடு மறுபுறம். அந்த வார்த்தைகள் சுமக்கும் கருத்துவங்கள் பற்றிய ஞானம்
வியர்த்தம் என்பதல்ல என் கட்சி. அறிவு சார்ந்த சேகரம் என்பதற்கு அப்பால், அவை தமிழ்
மரபுகளுடனும் நிகழ் காலத் தமிழர்தம் அநுபவங்களுடனும் செமிபாடடைந்து படைப்பு
வீரியமாக முகிழவில்லை என்பதுதான் என் வியாகூலம். அவை பிறந்த மண்ணிலேயே வலுவிழந்து
நீர்த்துப்போன நிலையிலேயேஇ தமிழுக்குப் பெயர்க்கப்படுகின்றன. இலக்கியத்தின்
சங்கதி-உள்ளீடு-உயிர்ப்பு இடையறாத தேடலின் விளைவு. அஃது நனுபவத்தினாலும்,
பக்குவத்தினாலும் வனையப்படுவது. நேர்த்தியான கலைப் படைப்பாகப் பட்டை தீட்டி
எடுப்பதற்கு உபகாரமாய் அமையும் பாங்கத்திற்க-கோலத்திற்கு-உருவத்திற்கு அவை எவ்வாறு
உதவலாம் என்கிற உசாவலும் முயற்சியுங்கூட இவர்களுக்குப் பூஜ்யம். menopause எய்திய
கருப்பையிலே புதியனவற்றின் படைப்பு என்று வற்புறுத்துதல் வித்துவ வக்கிரஞ்
சார்ந்தது என்கிற பிரக்ஞைகூட இந்தக் கோஷதாரிகளுக்குக் கிடையாது. இந்தப் புத்தி
ஜ“விதத் தண்டால்களை ஒதுக்கி வைத்துவிட்டு. பெருவணிகச் சஞ்சிகைகளம் பத்திரிகைகளும்
படைப்பிலக்கியத்தை அற்ப நுகர் பொருளாக்கி, எழுத்தாளர்களை 'லேபிள்' ஒட்டும்
சிற்றூழியர்களாக மாற்றும் வணிகப் பணியில் ஈடுபட்டுள்ளன. அரசியலிலே லஞ்ச ஊழல்கள் கூட
நியாயப்டுத்தப்படுவது போலவேஇ நலிந்து போன கோஷங்கள் இலக்கியத்திற்கான தொனிப்
பொருள்களாக வற்புறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு 'அரோகரா' போடும் புழுக்களும்
பெருகியுள்ளன. சினிமா வாய்ப்புகள் என்கிற அங்கலாய்ப்புகளும் அவர்களை
அலைக்கழிக்கின்றன. உலகளாவியதாக முளைவிடும் தமிழ் இலக்கிய ஓர்மத்துக்குத் தலைமை
தாங்கும் தத்துவத்தினைத் தமிழ்நாடு இவ்வாறு நிராகரிக்கும் பாதையைத்
தேர்ந்தெடுத்திருப்பது மகா விசனத்துக்குரியது. இப்போக்குகளினால் பொதுவாகவே தமிழ்
இலக்கியம் முட்டுப்படும் என்பதும் மெய்தான்!
'இருபத்தியோராம் நூற்றாண்டின்
தமிழ் இலக்கியம் சர்வதேச மயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுடைய
படைப்பாற்றல் தலைமை தாங்கும்' என்கிற சுவிசேஷத்தை இரண்டு ஆண்டுகளக்கு முன்னர் நான்
மேற்கொண்ட இலக்கிய யாத்ராவின்போது பிரசித்தஞ் செய்தேன். இது மண்பற்றிலும் அதீத
இனமான உள்ளுணர்வு என்று பொய் செப்ப ஒப்பேன். தமிழ் நாட்டு இலக்கியக் களத்திலே
உருவாகியுள்ள அவலங்கள் என்கிற பின்னணியில், 'புதிய வானம், புதிய பூமி' என்று
தினமும் புதிய அநுபவங்களின் தாக்கங்களுக்கு உட்பட்டு, ஆனாலும் புதிய சூழல்களின்
அசுர வசதிகளுக்கு முற்றிலும் அடிபணியாது, தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களைத்
தங்களுடனும், தங்கள் வம்ச வேர்களுடனும் தக்க வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்கிற
விடுதலை வெறியிலும், பக்திச் செறிவிலும் புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழ்
எழுத்தாளர்கள் ஈடுபட்டுள்ள இடையறாத தேடல்கள், இதனைச் சாத்தியப்படுத்தும் என்பதை
மட்டிடுவதற்குப் புத்தி ஜ“வித மிடுக்குத் தேவையில்லை.
அந்த இலக்கிய
யாத்ராவின்போது, இருபத்தியோராம் நூற்றாண்டின் புதிய கதைக் கலையின் சாங்கங்களைச்
சுட்டும் வகையில், முப்பத்தொன்பது கதைகளைத் தொகுக்கும் பணியிலே ஈடுபட்டமை தற்செயலே.
அந்தப் பணியிலே நண்பர் இந்திராபார்த்தசாரதியின் ஒத்துழைப்பும் துணை நின்றது.
அத்தொகுதியில் இடம்பெற்ற ஆக்கங்கள் பலவற்றை வரவேற்று, மதிப்பீடு செய்து, அவற்றைப்
பிரசித்தப்படுத்துவதிலே நண்பர் சுஜாதா முதன்மையான அக்கறை காட்டினார். 'பனியும்
பனையும்' என்கிற அத்தொகுதியில் கதை படைத்த ஒரு சிலரேனும், இருபத்தியோராம்
நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்துக்கு வளமூட்டக்கூடியவர்களாகத் தேறுவார்கள் என்கிற
நம்பிக்கை ஊட்டுபவர்கள். ஆனாலும், அத்தகையவர்களுடைய வகை சிறந்த ஆக்கங்கள் அதிலே
இடம்பெற்றன என உரிமை பாராட்டுவதற்கில்லை. ஒரு காலக்கூறின் இடைவெளியிட்டு இப்பொழுது
அதனை வாசிக்கும்பொழுது, பெரும்பாலான கதைகளிலே புகுந்துள்ள பலவீனங்கள் தெரிகின்றன.
புதிய நாடுகளுக்குப் புலமபெயர்ந்து செல்லும் எத்தனங்களிலே குறுக்கிடும் இடர்கள்;
புதிய நாடுகளிலே வதிவிட உரிமை கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பின் சஞ்சலங்கள்; சொந்த
மண்ணிலே விட்டு வந்த கடன்கள்-கடமைகள்-உறவுகள் ஆகியன தொற்றிய சுமைகள்; புதிய
தட்பவெட்பச் சூழல்களையும் தொழில் உறவுகளையும் எதிர்கொள்வதிலுள்ள சவால்கள்;
இனப்படுகொலை மேலாதிக்கத்திலிருந்து எந்தத் தனித்துவத்தைப் பேணி அடுத்த தலைமுறையிடம்
ஒப்படைக்க முடியுமா என்கிற சந்தேகங்கள்; - இவை அனைத்துமே அவர்களுடைய நிகழ்கால
எழுத்துக்களைப் பாதிக்கின்றன. அவலங்கள்-ஏக்கங்கள்-ஆசைகள்-இச்சாபங்கள்-இயலாமைகள்
ஆகிய உணர்வுகளிலிருந்து விடுபட இயலாத ஆக்கினை! இதனால், துயர்-சோகம்-ஏலாமை ஆகிய
சுருதிகளின் ஓங்காரம் மிகும். அகதி முகாம்களிலே வாழும் குறுக்கத்தின் புழுக்கம்
வெளிப்படும். self-pity என்கிற பலவீனம், pessimistic பார்வையை மேலோங்கச் செய்து,
நம்பிக்கை வரட்சியைத் தூலமாகத் தொனிக்கும். இந்தக் கோலங்கள் தவிர்க்க இயலாத passing
phase மனித நேயத் தேடலிலே, வாழ்கையை நம்பிக்கையுடன் அணுகும் தரிசனமே ஆகுமானது. அந்த
நம்பிக்கைதான் நாளையையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை என்பது
கொதிக்கும் கொப்பரையிலிருந்து, எரி நெருப்புக்குள் வீழ்ந்து கருகுவதல்ல. புதிய
நிர்ப்பந்தங்களின் அடிமையாவதல்ல. புதிய சூழலை வசப்படுத்துதல்! புதிய சூழலிலும் நாம்
இழக்கத் தயாராக இல்லாத தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டே, புதிய சூழலிலே
குதிரும் வாகான புதிய சுருதிகளை இனங்கண்டு, அவற்றைத் தமிழின் அனைத்து
உயர்வுகளுக்கும் இசைவாக்கிப் புதிய நம்பிக்கைகளை வென்றெடுத்தல்!
அவலங்களை-அக்கிரமங்களை-அட்டூழியங்களை-அவ நம்பிக்கைகளை நாணவைக்கும் தேடல்கள் நமது
படைப்புகளிலே கதைப்பொருள்களாகக் கனிதல் வேண்டும். எனவே, 'பனியும் பனையும்' தொகையிலே
இடம் பெற்ற கதைகள் பலவற்றை pilot-project ஆகத் தரிசித்தலே பொருந்தும். நடுங்க
வைக்கும் குளிர் பணியைத் தொடர்ந்து, கோடைவெயில் எரிக்கவே செய்யும்!
புலம்
பெயர்ந்த ஈழத் தமிழருடைய இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைக் கோலங்களுக்கு
வெள்ளோட்டமாக அமையும் கதைத் தொகுதியைத் தேடுகிறீர்களா? கவலையைவிடுங்கள். இதோ,
அ.முத்துலிங்கத்தின் வம்ச விருத்தி இருக்கிறது. நான் கருவியாய் அமைந்து பரம்பிய
சுவிசேஷத்தின் சத்தியத்தை எண்பிக்கும் வகையில் பல கதைகளை இத்தொகுதியிலே படைத்துத்
தந்து, வெள்ளோட்டத்தினை அவர் வெற்றியாக நடத்தியிருத்தல் மிகுந்த மன மகிழ்ச்சியைத்
தருகின்றது. மகிழ்ச்சியைப் பகிர்தலும் மனிதம்!
நான் தசாப்தங்களுக்கு
முன்னர், 'ஊர்வலம்' என்ற சிறுகதை மூலம் 'தினகரம்' பண்ணையிலே முத்துலிங்கம் கதைஞராய்
அறிமுகமானார். 1960இல் 'பக்குவம்' கதைக்கு முதல் பரிசு பெற்றார். தமிழ் விழா
மலருக்கு அவருடைய 'அக்கா' மணமூட்டியது, இவ்வாறு, ஈழத்துக் கதைஞர் வரிசையிலே கௌரவம்
பெற்ற அவருடைய பதினொரு கதைகள் அடங்கிய 'அக்கா' தொகுதி அறுபதுகளின் நடுப்பகுதியில்
வெளிவந்தது. 'நான் கண்ட, கேட்ட, அநுபவித்த சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் என்
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்' எனத் தம்மைச் சாமானியனாக அறிமுகப்படுத்திக்
கொண்டாலும், 'அக்கா' மூலம் தமிழ்ச் சுவைஞர்களுடைய அபிமானத்தை மட்டுமன்றி, கைலாசபதி
போன்ற விமர்சகர்களுடைய பாராட்டையும் சம்பாதித்தார். பிறகு, அவர் எழுத்தூழியத்திலே
ஒதுக்கம் காட்டிய காலத்தில். அவருடைய முகவரியைத் தொலைத்து விட்டேன். விசாரித்ததில்,
ஆபிரிக்க நாடொன்றில், உயர் உத்தியோகம் பெற்றுச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது.
ஆபிரிக்கா எங்கே? மட்டக்களப்பு எங்கே? ஊழ் என்னையும் துரத்தியது. ஆபிரிக்க
இலக்கியம் கற்பிக்கும் ஆசானாய் நான் ஆபிரிக்க நாடொன்றுக்குச் செல்ல நேர்ந்தது.
பக்கத்து வீட்டுக்குக் குடியேறிய மனோ நிலையில் மீண்டும் முகவரியைத் தேடினேன். அவர்
உலகவங்கி உத்தியோகத்திலே சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்ததும் என் தேடுதல் ஓய்ந்தது.
கடைசியாக 'பனியும் பனையும்' தொகுதி மூலம் எங்களுடைய இலக்கிய உறவு
மீளுயிர்ப்புப் பெற்றது! தேடி ஓய்ந்தது, தேடாத வேளையிலே கிட்டும் அஃது ஒரு வகையில்
பொசிப்பு!
தொலைபேசி, Fax போன்ற நவீன தொடர்புச் சாதனங்கள் மூலம்,
பாகிஸ்தானுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடைப்பட்ட தூரம் குறுகியது. இடைக்காலத்தில்
அவர் வெளியிட்ட 'திகட சக்கரம்' என்ற கதைத் தொகுதியை என் சுவைப்பிற்கு அனுப்பி
வைத்தார். கைவசமிருந்த என் நூல்களை அவருக்கு அனுப்பினேன். 'பனியும் பனையும்'
தொகுதியிலுள்ள குறை நிறைகளைப் பற்றிப் பேசினோம். மூன்று தசாப்த இடைவெளியில் நடந்த
இலக்கிய சமாசாரங்களிலே சல்லாபித்தோம். புதிய படைப்புகள் பற்றிய கனவுகளிலே
ஈடுபட்டோம். அடுத்த நூற்றாண்டின் கதைக் கலையின் கோலங்கள் பற்றி உரத்துச்
சிந்தித்தோம். யாழ்ப்பாண வாழ்க்கையிலும், ஆபிரிக்க அநுபவங்களிலும் நனவுகளிலும்
தோய்ந்தோம். ஆபிரிக்க வாழ்க்கை அநுபவங்களைத் தமிழ் இலக்கிய மாக்குவதிலுள்ள பயன்
குறித்துப் பேசினோம். தொலைந்தன கிட்டுதல் காளிதாஸனின் சகுந்தலாவுக்கு மட்டுமல்ல,
மனிதனுக்குமே இனிமை தரும்.
முதலில் ஆபிரிக்கப் பின்னணியில் எழுதப்பட்ட
கதைகளை என் சுவைப்புக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ஏனையன, என் 'முன்னீடு'வுடன்
இணைத்து, இவ்வாறு வெளியிடுதல், நாளைய இலக்கியப் பணிகளிலே இருவரும் இணைந்து
பணியாற்றும்வோம் என்கிற சங்கையின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.
இனி, வம்ச
விருத்தியில் இடம்பெறும் கதைகளுக்குள் நுழைவோம்.
முத்துலிங்கம் ஆசியா,
ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளிலே
வாழ்ந்து தமது அநுபவங்களைப் பெருக்கிக் கொண்டவர். இந்நாடுகள் பலவற்றைக் கதைக்
களங்களாகக் கொண்டு, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வாழக் கூடிய தமிழ்க் கதை மாந்தர்
சிலரை அறிமுகப்படுத்தி அவர்களுடைய கதைகளை இங்கு சொல்லியுள்ளார். serious writing
என்பது விளக்கெண்ணெய் சாப்பிடும் முகத்தையும் உணர்வையும் எழுத்திலே
ஏற்படுத்துவதல்ல. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வாழ்க்கையை Positive ஆக நோக்கும்
Optimism முத்துலிங்கத்தின் கதைப் பாணியிலே மிளிர்கின்றது. இடுக்கண் கண்டு நகும்
ஓர் உறுதி; மனித நேய நட்புணர்வுகளை அணைக்கும் அட்டகாசமில்லாத நகைச்சுவை; கதைக்
களங்களின் யதார்த்தம்; கதை நிகழ்வுகளுடன் ஒட்டிப் பயணிக்கும் அக்கறை ஆகியன அவருடைய
கதை சித்தரிக்கும் உபாயத்திற்குக் கை தருகின்றன.
'துரி', 'ஒரு சாதம்' ஆகிய
இரண்டும் அமேரிக்காவையும் கனடாவையும் பின்னணியாகக் கொண்டு, அந்நாடுகளின் வாழ்க்கை
அநுபவங்களை இணைத்துக் கொள்ளுகின்றன. 'விழுக்காடு', 'முழுவிலக்கு', 'ஞானம்' ஆகிய
மூன்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வாழ்க்கைக் கோலங்களுள் நம்மை அழைத்துச்
செல்கின்றன. 'கிரகணம்', 'வம்ச விருத்தி' ஆகிய இரண்டு கதைகளும் பாகிஸ்தான் நாட்டின்
முஸ்லிம் பின்னணியைக் கொண்டன. 'பருத்திப் பூ' வட ஆபிரிக்க சுடான் நாட்டின், பாரிய
நீர்ப்பாசனத் திட்டத்தின் அயலுக்கு அழைத்துச் செல்கின்றது. 'பீஃனிக்ஸ் பறவை'
சுவீடன் நாட்டினைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட போதிலும், சுற்றுச் சூழலை
இயற்கை நிலையில் வைத்திருக்கும் பக்குவத்தினை வசப்படுத்தும் இருபத்தோராம்
நூற்றாண்டின் மிக முன்னேறிய மனித சமூகத்திலே ஏற்படக்கூடிய புதிய பிரச்சினைகளே கதைக்
களமோ என்கிற நிறப்பிரிகை ஜாலமும் காட்டுகிறது.
மனிதம் பற்றிய இறையறாத
தேடலாகவும் இலக்கியத்தினைச் சம்பாவனை செய்தல் என் சுபாவம். மனிதனின் விடுதலை அல்லது
விமுக்தி ஆநந்த. அதுவே வீடு! அறம்-பொருள்-இன்பம் ஆகியன அந்த வீட்டினை அடைவதற்கான
செம்மைகள் என்கிற நம்பிக்கை நமது மரபின் முதுசொம். பழையன கழிந்து புதியன புனைதலும்
மரபு. மாறாத žர்மையும் மரபு. சுழலும் சக்கரத்தின் அசையாப் புள்ளி! பிறிது பிறிதாகி
விடாது, வாழ்க்கைத் தொடர்ச்சியையும் முன்னோர் அளித்த அருஞ்செல்வங்களுக்கு நம்மையும்
உரிமைக்காரராய் நியமிப்பதற்கான தகுதியையும் மரபு நமக்கு அளிக்கின்றது. இதனை
ஒதுக்கும் புதுமைகள் வெறும் Fads! பித்தங்கொண்டு சந்நதமாடும் வேகத்திலே
மறைந்துவிடும் போலிகள். இந்த அவதானம் இருபத்தியோராம் நூற்றாண்டின் இலக்கியப்
படைப்பாளிக்கு அவசியம். இந்த அவதானம் இத்தொகுதியின் கதைகள் பலவற்றிலும்
பற்றிப்படர்கின்றது. இந்தப் படர்வே ஒரு நிறைவும்.
அதே சமயம்,
இத்தொகுதியிலுள்ள சில கதைகளேனும் மனித நேயத்துக்குப் புதிய பரிமாணந் தேடுகின்றன.
தொகுதியின் முகப்புக் கதை 'துரி' அமேரிக்க வாழ்க்கையின் கோலங்களைத் தரிசிப்பதற்கு
துரி என்றழைக்கப்படும் நாய் நாயக பாத்திரமாக உயர்வு பெறுகின்றது. அமேரிக்க
நாய்க்கும், மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பாத்திரத்திற்கம் அபூர்வ முடிச்சொன்று
போடப்படுகின்றது. உயிர் நேசிப்பிலே நட்புக்கும் தோழமைக்கம் உள்ள உறவுகள்
ஆராவாரமின்றி இக்கதையில் பிரஸ்தாபம் பெறுகின்றன. நாயை நண்பனாய்-தோழனாய்ப்
பாராட்டுதல் எத்தகைய மானிட நேசிப்பு! 'ஞானம்'கதையிலே, Ph.D. பட்டம் பெறுவதற்கான
ஆராய்ச்சிகளை நடத்துவதற்கான அமேரிக்கப் பல்கலைக் கழக மாணாக்கர் இருவர் ஆபிரிக்க
நாடொன்றுக்கு வருகிறார்கள். அங்கு வாழும் கொலபஸ் குரங்குகளைப் பிடித்து ஆராய்ச்சி
நடத்த வந்தவர்கள், ஆபிரிக்க மக்களுடைய மூட நம்பிக்கையினால் சாகப் போகும்
ஆந்தையையும் குஞ்சுகளையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த
ஆந்தைகள் ஆபிரிக்க உணவு உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவுகின்றன. அவை வாழவேண்டும்.
அவற்றை வாழவைப்பதற்காக ஏற்படும் பின்னடைவுகள் ஒரு பொருட்டல்ல. 'உயிர் நேயம்' என்கிற
சங்கதி இக்கதையிலே எத்தகைய விஸ்வரூபம் பெறுகின்றது. மானிட நேசிப்பு உயிர்
நேசிப்பாகவும் பிரபஞ்ச நேசிப்பாகவும் விரிவடைதல் வேண்டும் என்ற அக்கறைகளைப்
பிரசாரத் தொனியின்றிச் சில கதைகள் ஏற்படுத்துகின்றன. 'வம்ச விருத்தி'யிலே
பாகிஸ்தானின் வடமலைப் பிரதேசத்தில் பயணிக்கிறோம். இக்கதையில் இஸ்லாமிய மக்களுடைய
ஆசாராங்களும் அநுட்டானங்களும் விரவிக்கிடக்கின்றன. இவை அனைத்துமே கதையின்
பின்னணியாகப் பின் தள்ளப்பட்டு, இடருற்ற உயிரினத்தின் Endangered species)
பாதுகாப்பு கதையின் இறுதியிலே ஓங்காரம் பெறுகின்றது. பிரபஞ்ச நேசிப்பின் இன்னொரு
வடிவமாக இந்த அக்கறையை நாம் தரிசித்தல் தகும். மனிதனைப் பலிவாங்கும் லீ என்ஃபீல்டு
துப்பாக்கி, 'ரத்தப் பணம்' என்கிற கொலை நாகரிகத்தின் உடாக அழைத்துச் சென்று, மலை
ஆட்டின் மரணம் மகா அநியாயமானது என்கிற உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்துதல் žர்மை
நிறைந்த கலைத்திறன். 'இலங்கையில் தமிழன் ஓர் (Endangeed Species) என்கிற ஓர் எண்ணம்
என்பிடரியைக் கடித்தது. சுவைஞனின் கற்பனை விகசிப்பு இன்னொரு பரிமாணம். ஆக்கியோனின்
தயாளம் இத்தகைய சிலிர்ப்பினை அனுமதிக்கும். பாகிஸ்தானைக் களமாகக் கொண்ட இன்னொரு கதை
'கிரகணம்' இந்தக் கதையிலே வரும் பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு கதை முழுவதையும்
அப்புகிறது. அவள் எழுப்பும் மதிநுட்பக் கேள்விகள் மலைக்க வைக்கின்றன. சாதாரண
sentiments மண்டிய கதையோ என்று ஏறபடக்கூடிய ஓர் உணர்வை பஸ்மினாவின் பாத்திர
வார்ப்பு விழுங்கி ஏப்பமிட்டு விடுகின்றது! இதன் வாகு இது.
'விழுக்காடு'
சியரா லியோனைப் பின்னணியாகக் கொண்ட கதை. சுபீட்ச நிலையில் அடிமட்ட நாடான அங்கே,
ஐக்கிய நாடுகள் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் வியர்த்தமாகும் பின்னணியிலே,
அந்நாட்டின் வாழ்க்கை அவலங்களைப் பிரசாரத் தொனியின்றிச் சித்தரித்து, அந்த
அவலங்களின் மத்தியிலே, ஆண்-பெண் உறவாகக் கனியுங் காதல்கூட மனித நேசிப்பின் இன்னொரு
ஸ்திதியாக இக்கதை கோலங் காட்டுகிறது. மேற்கு ஆபிரிக்க அநுபவங்களின் மிகுதியால்,
உருவாகியுள்ள இன்னொரு கதை 'முழுவிலக்கு'. 'பாம்பு தின்னும் ஊருக்குப் போனால்
நடுமுறி எனக்கு' இது பழமொழி ஆபிரிக்க நாடொன்றை புலம் பெயரும் நாடாக வரித்துக்
கொண்டால், உணவுப் பழக்கம் எவ்வாறு அமையும் என்பது நயமான நகைச்சுவை. தொகுக்கப்படும்
மலர்கள் நளினமான சிரிப்பை எழுப்புபவை. அவற்றைத் தொடுக்கும் நாரிலே சோகச் சுருதி
மண்டிக் கிடக்கிறது. இஃது அசாதாரண உபாயம். Menopause ஏற்படுத்தும் உள-உடல்
பாதிப்புகளை இது விசாரணை செய்கிறது. சங்கீதாவைச் சுற்றி எழும் சோக அலைகள்கூட ஒரு
positive note சிலேயே முற்றுப்பெறுகின்றது. மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக
சிறப்பிப்பது இந்த அழுங்குப்பிடியான நம்பிக்கைதானே? குடியேறிய நாட்டின் நன்மைக்கும்
தேவைக்கும் ஏற்ப இசைவாக்கம்' பெறுவதை நுட்பமாகச் சித்தரிக்கின்றது 'ஒரு சாதம்' food
clothing and shelter ஆகிய மூன்றிலும் ஏற்படும் இசைவாக்கம்! இந்த இசைவாக்கம்
வாழ்க்கையை வசதிப்படுத்தும்; அதுவே வாழ்க்கையின் வெற்றியல்ல. அறிவாற்றலைப்
பிரயோகித்து, முன்னேறும் முயற்சியில் சதா நடத்தும் தேடலே வெற்றியைச் சம்பாதித்துத்
தரும் என்கிற நம்பிக்கையை இக்கதை பிரசித்தஞ் செய்கின்றது. Oru Satham என்பது ஒரு
சாதமா அல்லது ஒரு சத்மா? நல்ல பசுடி!
'பருத்திப் பூ'வின் நாயக பாத்திரம்
குணசிங்கம் யாழ்ப்பாணத்து உரும்பிராய் மண்ணிலே விளைந்த அசல் 'கிழங்கு'! ஆயிரம்
கன்று வாழைத் தோட்டத்துக்கு பாத்தி கோலிய காலத்திலேயே, தண்ரின் செட்டான
உபயோகத்திற்கும் உயிர் வாழ்தலுக்குமுள்ள ஆத்மார்த்த தொடர்பிலே ஞானம் பெற்ற
சம்பந்தரும் இன்று என்ஜினியர், நீர்வள நிபுணர், கண்டிப்பு-கடின உழைப்பு,
நேர்மை-சிக்கனம் ஆகியன அவருடைய வாழ்க்கையை ஒழுங்கு செய்பவை. ஆனால், தெற்கிலிருந்து
அகதியாக வடக்கே புலம் பெயர்ந்து வந்த அந்தக் குடியானவக் கிழவியை 'எஃத்திராம்' என
வாஞ்சை பாராட்டி அழைக்க வைத்தது எது? அக்கிழவியின் வாழ்க்கை உயர்வுக்காக, தமது
வேலையையும் கௌரவத்தையும் இழக்கத் தயாராக இருக்கும் அவருடைய செயல், மானிட நேசிப்பின்
உந்நதம் அல்லவா? கதையை வாசித்து முடித்த பிறகும், குணசிங்கம் நமது நெஞ்சத்திலே
உறைந்து கொள்ளுகிறார். அவரைப் பற்றிய உலகமொன்று நமது பிரக்ஞையை வžகரித்துக்
கொள்ளுகிறது. 'ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன்
சிறிது நேரம் ஓடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய
சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓட வேண்டும்....இது என்னுடைய
சித்தாந்தம்' என்று 'திகடசக்கரம்' என்ற தமது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில்
முத்துலிங்கம் குறிப்பிடுகின்றார். இந்தக்கதையில் அவருடைய சித்தாந்தம் முழு வெற்றி
பெறுகின்றது. நல்லதொரு கதையை வாசித்த திருப்தி பல நாள்களாக என் மனசை மகிழ்வித்தது.
'பீஃனிக்ஸ் பறவை' நாளைய இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் கழிந்த
ஒரு நாளைய உலகத்திற்குள் நம்மை லாகவமாக அழைத்துச் செல்கின்றது. சுற்றாடலை
மாசுபடுத்தாச் செம்மையிலே வெற்றி காணும் அந்த உலகத்திலேகூட, நிறைவேறாத மனித ஆசைகள்
புதிய பரிமாணங்களையும் தேடல்களையும் கொண்டிருக்கும் என்கிற தொனிப் பொருளை இந்தக்
கதை சாமர்த்தியமாகச் சித்திரிக்கின்றது. நாளைய உலகின் சித்திரிப்பிலே விஞ்ஞான ஞானம்
விஸ்வரூபத்திற்குள் இந்த விஞ்ஞானம் ஞான ஒடுக்கமும் பெறுகிறது.
இவற்றிலிருந்து வேறுபட்ட களங்களை மற்றைய இரண்டு கதைகளும் கொண்டுள்ளன.
கிரேக்க புராணங்களிலே பிரஸ்தாபிக்கப்படும் கோர்டியன் முடிச்சிலே துவங்கி, இடையில்
'நொடிகள்' போல, கந்தையா வாத்தியார், ஹென்றி மொஸ்லே, நமது 'தொந்தி' விநாயகர் ஆகியோர்
சம்பந்தப்பட்ட பல முடிச்சுகளின் அறிமுகத்துடனேயே 'முடிச்சு' ஆரம்பிக்கின்றது. இந்த
ஆரவாரங்களுக்குப் பிறகுதான் கதை. முடிச்சுகள் என்கிற குகையின் ஊடாக, ஒளியை நாடிய
தேடல் திருவண்ணாமலை வரை நீளுகின்றது. அங்கே விசித்திரமான யோகியார். அவரிடமிருந்து
அறிவுரையோ, ஆசியோ கிட்டாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாததுபோல பேசி, அறிவைத் தூண்டி
விடுதல் யோகியாரின் speciality! இந்துதர்ம சிந்தனைகள் தீர்வுகள் அல்ல. மன
ஒடுக்கத்துக்கம் ஞான விடிவுக்கும் தொடர்பு இருக்கலாம். தேடும்பொழுது ஞானம் எத்தகைய
அற்பங்களிலிருந்து வெளிப்படுகின்றது! முடிச்சுகளை அவிழ்க்க நடத்தும் தேடல்
ஞானமுமாம். 'சிலம்பு செல்லப்பா' 'இலங்கை மண்ணின் வாழ்க்கைக் கோலங்களுக்குள்
ஆசிரியர் மீள்பிரவேசம் செய்யும் எத்தனம். பழைய சம்பவங்களை அசைபோடும் கோலமும்
புகுந்து கொள்ளுகிறது. சமாந்திரமாகவே சிலப்பதிகாரம் பற்றிய உசாவல்களும். ஆனால்,
சுழல் பாவிப்புப் பற்றிய awarenessஐ, தயிர்ச் சட்டியுடன் தொடர்புபடுத்தி சுழல்
பாவிப்புக்கு மாதவி எழுதிய ஓலையின் சுழல் பாவிப்புக்கும் அபூர்வ முடிச்சுப் போட்டு,
நம்மை குலுக்கி எடுக்கிறார். சிரிப்பிலா? சிந்தனையிலா? என் பிடிமானத்துக்குள்
சிக்கவில்லை. உங்களுக்கு?
அனைத்துக் கதைகளிலும், கதை நிகழ் களங்களின்
வாழ்க்கை அழகுகளிலே, பிராசாரத் தொனி இல்லாமல் படைப்பாளியின் சுய
விருப்பு-வெறுப்புகளைத் திணிக்காமல், நம்மையும் பயணிக்கச் செய்து, புதிய
அனுபவங்களிலே தோய்த்து எடுப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம், தமது
மனசுக்கு உவப்பான வாழ்க்கையையும் விழுமியங்களையும் அழுத்திச் சொல்வதற்கும் அவர்
தயங்கவில்லை. அதிலே நழுவல் கிடையாது. சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு, சுழல்
பாவிப்பு, மானிட நேயம், பிரபஞ்ச நேயம் ஆகியன பற்றிய ஆசிரியரின் அக்கறை சத்தியமானது
என்கிற உணர்வை அவர் பதிக்கின்றார். இதனை, 'ஒரு காகிதத்தைக் கசக்கி எறியும்போது
எங்கோ ஒரு மரத்தின் இலை கண்ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான்'
என்று தமது 'என்னுரை'யிலே மீள வலியுறுத்தவும் அவர் வெட்கப்பவில்லை.
இந்தக்
கதைகள் அனைத்தும் சிறுகதை இலக்கண விதிகளுக்குள் அமையுமா என்பது குறித்து
விவாதிக்கும் அரிப்பு சிலருக்கு ஏற்படலாம். அரை நூற்றாண்டுக்கு முன்னரே, 1940-ஆம்
ஆண்டில், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவந்தது. அதற்கு
ரா.ஸ்ரீ.தேசிகன் அவர்கள் காத்திரமான முன்னுரை ஒன்று எழுதியிருந்தார். 'இலக்கியம்
ஓர் அகண்ட நந்தவனம்' எனத் துவங்கி, 'ஜனங்கள் சிறுகதை மலர்களின் மனத்தை அதிகமாய்
விரும்பவே, இலக்கிய நந்தவனத்திலே அந்தப் பூக்கள் அதிகமாகப் பயிரிடப்பட்டன'
எனக்கூறி, சிறுகதை இலக்கிய வடிவத்தின் உலகளாவிய தோற்றம் என்னும் படுதாவிலே, 'முகம்'
அறியாத புதுமைப்பித்தனின் தமிழ்ச் சாதனையை அவர் சிலாகித்தார். தமிழ்ச் சிறுகதை
இலக்கியத்தின் வளர்ச்சிக் கட்டத்திலே அதற்கு ஒரு தனிக் கௌரவம் சம்பாதிப்பதிலும்,
மேலை நாட்டிலே பயின்ற உருவ அமைதிக்குத் தமிழ் முழுமம் வடிப்பதிலும் புதுமைப்பித்தன்
அடைந்த வெற்றி, அரிய இலக்கியச் சாதனையே. சந்தேகமில்லை. ஆனால்இ அன்று சிறுகதை
உருவத்துக்கு உலக அங்கீகாரம் பெற உழைத்தவர்கள் (மாபஸான் உட்பட) வாழ்ந்த நாடுகளிலேயே
சிறுகதை இலக்கிய வடிவம் தனது மவுசினை இழந்துவிட்டது. 'அவசர யுகத்திலே சிறுகதை
இலக்கியமே நின்று வாழும்' என முன் வைக்கப்பட்ட கருதுகோள்கூடப் பொய்த்துவிட்டது.
அவசரத்திலும் அவசரயுகம் இது. இருப்பினும், நீள் கதைகளுக்கும் நாவல்களுக்குத்தான்
வரவேற்பு. விஷயம் இதுதான். காளிதாஸனுக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே,
கதை சொல்லலும் கேட்டலும் மனித ரஸனைக்கு ஏற்றதாகவே இருந்து வந்தது. கதை சொல்லும்
முனைப்பும் கதை கேட்கும் (அல்லது வாசிக்கும் அல்லது பார்க்கும்) ஆர்வமும் தொடரும்.
வித்துவ-தத்துவக் கடைசல்களுக்கு 'டோக்கா' கொடுக்கும் என்றுமுளதான மனித ரஸனை இது.
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். புதுமைப்பித்தனின் தோள்களிலே நின்று கதைக்
கோலங்களைப் பார்க்கும் வசதி நமக்கிருக்கிறது. புதிய கதைக் கோலங்களை உருவாக்கும்
நிர்ப்பந்தமும் தேவையும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைஞனுக்கும் நிச்சயம்
ஏற்படும். புதிய தேவைகள் இலக்கிய சமாசார சல்லாபம் மட்டுமல்ல. வாழ்க்கையின் புதிய
அநுபவ ஞானப் பகிர்வினைப் பகிர்ந்து கொள்ளும் அவதியும். கதைக் கலையிலே புதிய
வடிவங்கள் உருவாக வேண்டும். உருவாகும். அவற்றை ஏற்கும் சுவை விசாலம்
தமிழ்ச்சுவைஞர்களுக்குத் தேவை. 'புதுமைப் பித்தனை விட்டால் ஆளில்லை' என்று பழசிலே
தொங்கிக் கொண்டு பொச்சடித்தல்கூட, தமிழ் நாட்டின் புத்திஜ“வித வித்துவ வக்கிரமாகக்
கொச்சைப்படுத்தலும் சாலும். இத்தகைய வைதீக வயிற்று வலிக்கு, புதிய ஆக்கங்கள்
பலியாகிவிடக்கூடாது. இந்தத் தொகுதியிலே புதிய வடிவங்கள் அறிமுகமாகவில்லை. உண்மை
ஆனால், மரபு ரீதியான சிறுகதை இலக்கணம் பல இடங்களிலே நெகிழ்த்தப்பட்டிருக்கின்றது.
இந்த நெகிழ்த்தலே, புதிய வடிவங்களுக்கு வழி சமைக்கும் என்கிற சேதநை
முத்துலிங்கத்திற்கு இருக்கலாம்.
உருவம்-உள்ளீடு-பாணி-பாங்கம்-சித்திரிப்பு-கலைத்துவம் ஆகியன எழுத்தாளனின்
சுதர்மத்திற்கும் சுயாதீனத்துக்கும் உரியன என்பது என் கட்சி. என் அறத்தைப்
பறிப்பதற்கு எந்த இலக்கியக் கொம்பனும், விமர்சன வித்துவானக்கும் உரிமை இல்லை
என்பதும் என் இலக்கிய மதம். இத்தகைய மதமூர்க்கம், என்னிலும் பார்க்க, அடுத்த
நூற்றாண்டின் படைப்பாளிகளுக்கு அதிகமாகவே இருக்கும் என்று
எதிர்பார்போமாக!
புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளுடைய இலக்கிய
ஊழியத்தை உரிய முறையிலே தரிசிப்பதற்கு உதவும் இன்னொன்றையும் இங்கு பிரஸ்தாபித்தல்
அவசியம்.
தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடல், சகுந்தலா, படைப்புக்கு
முன்னரே இருந்து வந்துள்ள ஒன்றுதான். ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதி கந்தாயத்திலே,
தொலைத்தலும் தேடலும் ஈழத் தமிழர்களுடைய வாழ்க்கையில் புதிய அர்த்தமும் சுருதியும்
கொண்டுள்ளன. இலங்கையின் புத்த ஹாமுத்ருக்கள் புத்த பகவான் போதித்த
அகிம்ஸை-தயை-காருண்யம் தர்மம்-žலம் அனைத்தையும் தொலைத்துவிட்டார்கள். ஆட்சியாளர்கள்
இறைமாட்சி அறத்தையும் ஜனநாயக நாகரிகத்தையும் தொலைத்துவிட்டார்கள். சமதர்மம் பேசிய
இடதுசாரிகள் மார்க்ஸ’ய வேகத்தைத் தொலைத்துவிட்டார்கள். இந்த அனைவரும் மேலாதிக்க
உன்மத்தத்தில், மானிடத்தின் அடிப்படை உரிமைகள் பற்றிய நினைவையே
தொலைத்துவிட்டார்கள். இவற்றால், ஈழத் தமிழர்கள் தர்ம நியாயம்-மனநிம்மதி-தாயக
மண்-தமிழ்மொழி-சுய கௌரவம்-மனித வாழ்க்கை.... என நிரல்படுத்தக்கூடிய அனைத்தையும்
தொலைக்க நேர்ந்தது. தொலைக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்டன! சொந்த மண்ணிலும் அகதிகள்;
புகுந்த நாடுகளிலும் அகதிகள். தனித்துவ அடையாளங்களை மட்டுமல்ல, முகத்தையும் இழந்த
மனிதர்கள். தொலைத்தவற்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தேடலோ நெடியது; கொடியது.
இத்தேடல் தொற்றிய சோகங்கள்-இழப்புகள்-சமர்கள்-அநுபவங்கள்-யாகங்கள்-தவங்கள்
அனைத்துமே இன்றைய தமிழுக்குப் புதிது. இந்தப் புதிதும் இணைந்ததுதான் இருபத்தியோராம்
நூற்றாண்டின் தமிழ் இலக்கியம்.
ஒரு விஷயத்தில், செந்தமிழ் நாட்டினர்
பாக்கியவான்களும்! 'நீலத் திரைக்கடல் ஓரத்தில் நின்று தவஞ் செய்குமரி; வடமாலவன்
குன்றம்' என்று தமது தாயக மண்ணின் எல்லைகளைக் கவித்துவமாக நினைத்துக் கொள்ளும்
உரிமை அவர்களுக்கு இருக்கிறது. தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண்ணிலே,
நிலவினில்றமுதூட்டித் தழுவிய மண்ணிலே, ரா.ஸ்ரீ.தேசிகன் ஆற்றுப்படுத்தியவாறு, அகண்ட
நந்தவனங்கள் அமைப்பதற்கும், அதன் பாங்கரிலே சிறுகதைத் தோட்டங்கள் அமைத்துப்
பராமரிப்பதற்கும் தோதும் வசதியும் அவர்களுக்கு வந்து பொருந்தலாம். பெண்ணியத்திற்கு
ஒரு புதிய பாய்ச்சல்; தலித் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணம் என்று 'கதை
அளப்பத'ற்கும் ஓய்வு உண்டு. சினிமா நாயக-நாயகியரை இரட்சகர்களாயும் கடவுளர்களாயும்
உயர்த்துவதற்கு 'விசில்' அடித்துக்கொண்டே, 'ஜூனியர் விகடன்' 'நக்கீரன்' ஆகியன தரும்
investigative கதைகளை விழுந்து விழுந்து வாசித்துக் கொண்டே,
மாதவியா-கண்ணகியா-கோப்பெருந்தேவியா கற்பிற் சிறந்தவள் என்ற மிகு ஆராய்ச்சிகள்
நடத்திக் கொண்டே, serious இலக்கியம் பற்றி ஒரு changeற்காகப் பேசுவதற்கும்
அவர்களுக்கு வசதிகளும் உள. இத்தகைய சுகபோகங்கள் அவர்களுக்குக் கொள்ளையாகக்
கிடைப்பதுபற்றி அழுக்காறு கொள்ளத் தானும் ஈழத் தமிழருக்கு நேரமில்லை. பாவம்,
அவர்கள் சபிக்கப்பட்டவர்களும்! இருப்பினும், தாங்கள் மேற்கொண்டுள்ள இரட்சண்ய
யாத்திரையையும், தங்களுடைய தேடல்களையும் மனித நேயத்துடன் புரிந்துகொள்ளும் பக்குவம்
or at leat அநுதாப மனோநிலை, பேசும் மொழியால் உடன்பிறப்புகளான செந்தமிழ்
நாட்டினருக்கு ஏற்படுதல் வேண்டுமென்று பிரார்த்திக்கும் உரிமையாவது ஈழத்
தமிழருக்குக் கிடையாதா?
'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று மக்கள்
voteற்குத் தூண்டில்போடும் மேடைகளிலே ஒலிப்பதுடன் தமிழ்ப்பற்று ஓய்ந்துவிடலாகாது,
ஓய்தல் செய்யும் சௌகரியம் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. 'விலங்குகளாய் அடிமைகளாய்,
உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கேட்டு வாழமாட்டோம்' என்று
சினந்தெழுந்தவர்கள், ஈழத்தமிழர்கள்! போரே தர்மமாக அவர்கள்மீது திணிக்கப்பட்ட
பொழுது, அதனை ஏற்றார்கள். தர்ம ஆவேசத்துடன் ஏற்றார்கள். விடுதலை அவர்கள்
வெறியாகியது. தமிழின் சேவிப்பே அவர்களது மதமும் பக்தியுமாகியது. இந்த நூற்றாண்டிலே,
மொழியின் நிமித்தம் இத்தகைய ஆக்கினைகளை எந்த மனித இனம் எதிர் கொண்டது? இந்த
ஆக்கினைகளுக்கு அவர்கள் பணியவில்லை. பகர்களாகவில்லை. ரட்சிப்புக்காக
முள்முடிதரித்து, சிலுவை சுமந்து திரிகிறார்கள். முள்முடியும் சிலுவையும்
குறியீடுகளே. குறியீடுகளின் அர்த்தங்கள் பக்குவத்து ககும் ஞானத்துக்கம் ஏற்ப
விரியும். ஆக்கினைகளின் சங்காரத்திலே விடுதலை வெறியானவனவன் எதற்கும் அஞ்சான்.
மானிடத்தின் விமுக்தி அவன் வாழ்க்கை ஊரியமாய்க் கனியும். இந்நிலையில் அவனுடைய
படைப்பின் சரஸ் பிரவகிக்கும். இலக்குப் புதிது' பார்வை புதிது. இந்நிலையை ல்,
'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்' என்பது கோஷமல்ல;
வாழ்க்கையின்-எழுத்தின்-தமிழின் பிரிக்க ஒண்ணா அம்ஸம்!
இத்தகைய எண்ணங்கள்
என்னைப் பரவசப்படுத்தும் நிலையிலே, 'வம்ச விருத்தி' கதைத் தொகுதியை இன்னொரு தடவை
புரட்டுகின்றேன். 'லொட்டோ' எண்ணைப் போன்று வந்த பக்கத்தில், முத்துலிங்கம் என்ன
எழுதுகின்றார்? அதனை உங்களுடன் சேர்ந்து வாசிக்க ஆசை:
'அடுத்த நாள்
அதிகாலையிலே சத்தம் கேட்டு விழித்துக் கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே
வந்து பார்த்தோம். தலைக்குடி மகனை கயிற்றுப் பல்லக்கில் தூக்கியபடி பல்லக்குக்
காவிகள் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தார்கள். மலையைப் போன்ற உடம்பை
நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடி மகன்.
'சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன், பானுகோபன் என்று மாறி மாறி
வரும். உடம்பு ஒன்று; தலை மாத்திரம் மாறும். சகடையில் வைத்துத் தள்ளி வரும் போது
புன்னாலைக் கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து
இடமும் வலமும் ஆட்டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும்.
நாங்கள் சூப்புத்தடியை நக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தைப் பார்த்துக்கொண்டு
இருப்போம். அப்ப 'பானுகோபன், பானுகோபன்' என்று சத்தம் கேட்கும். என்று சத்தம்
கேட்கும். சூரனுடைய மகன், பதுமகோமளைக்குப் பிறந்தவன், சிறுபிள்ளையாக இருந்தபோது
கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன், தலையை இரண்டு பக்கமும்
ஆட்டியபடி வருவான். நாங்கள் பயத்துடன் பெரியவர்களுடைய கையைப் பிடித்துக்
கொள்ளுவோம்.
'அது போலத்தான் தலைக்குடிமகன் வந்து
கொண்டிருந்தார்....'
புலம் பெயர்ந்து, அமேரிக்காவிலுள்ள கலிபோர்னியா
பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டே, ஆபிரிக்கக் காட்டிலே ஆராய்ச்சியில்
ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழன் 'ஞானம்' என்ற கதையிலே தன் அநுபவத்தை மேற்கண்டவாறு
சொல்லுகிறான். இன்றைய அநுபவத்தைச் சித்தரிக்கும் பொழுது, பிறந்த மண்ணின் நினைவுகள்
இயல்பாகவே, குறுக்கிழையில் ஓட, கோலச் சித்திரம் நெசவாகின்றது. அந்த இடத்தில்
கொக்குவிலானான முத்துலிங்கம் மறுஜனனம் எடுத்து விட்டான்! சூப்புத்தடி நக்கும்,
பொய்மை அறியாப் பாலகன். சூரன்போர், சகடை, தச்சனார் என்று காவிய மயமான ஓவிய சுகம்
அவன் நெஞ்சை நிறைக்கின்றது! அந்த நேரத்தில், அவன் எழுத்து சத்தியக் கனலிலே புனிதம்
கண்டு, அழகியல் காயகல்பத்தில் இளமை பூண்டு...அஃது எழுத்தின் அமரநிலை. இந்த அமர
நிலை, பிறந்த மண்ணின் நினைவுகள். தாயின் மடியிலும், மண்ணின் புழுதியிலும் பயின்ற
தமிழிலேதான் சாத்தியப்படும். மண்ணும், அதன் நினைவும், அந்த நினைவுகள் கூத்தாடும்
மொழியும் புலம் பெயர்ந்தவனின் நித்திய தியானத்தில் மண்டிக் கிடப்பவை. அவை இன்றி
அவன் வெறுமை; வெறும் பூஜ்யம். எனவே, இவ்வாறு சித்திரிப்பதே இயல்பு; அழகு; உண்மை.
'எந்த இடத்தில் அழகும் உண்மையும் தாண்டவமாடுகின்றவோ, அவ்விடத்தைக் கை கூப்பித்தொழு
வேண்டும்; அதுதான் கோயில்' என்று ரா.ஸ்ரீ.தேசிகன் அரை நூற்றாண்டுக்கு முன்னரே
மகிழ்ந்தார். எத்தகைய ரஸனைப் பக்குவம்! இதனை விடுத்து, புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்
எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம்
இருக்கிறது என்றும்; இதனால், சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப்
புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்து விடுகின்றன என்றும்
முறையீடு செய்வது வடிவில்லை.
`கோவைத் தமிழ் கரும்பு. கல்லுப்
போலிருந்தாலும் அத்தனையும் இனிப்பு. திட்டும்போது கூடத் தித்திப்பை
விட்டுவிடாதவர்கள் அவர்கள். நடுராத்திரியில் அவித்துக் கொடுக்கும் இட்லியைப்போல
மதுரைத் தமிழ் மென்மையானது. ஆனால், அவர்களது விமர்சனமோ மிளகாய்ப்பொடி. என்ன
இருந்தாலும் நக்கீரன் நடமாடிய தலம் அல்லவா? நெல்லைத் தமிழ் கவிதைத் தமிழ்.
ஒலிநயமும் உவமையும் ஊடும் பாவுமாய் ஓடும் தமிழ். திட்டவே தெரியாது
திருநெல்வேலிக்காரர்களக்கு' என்று வட்டார வழக்குச் சிலவற்றுக்குச் 'குமுத'மான
பாராட்டு உண்டு. சென்னைத் தமிழ், அக்ரகாரத் தமிழ், கரிசல் காட்டுத் தமிழ், நாஞ்சில்
தமிழ், தலித் தமிழ்....இவை அனைத்தும் தனித்தும், இணைந்தும் செந்தமிழ் நாட்டின்
இன்றைய படைப்பிலக்கியத்தின் கருவிகளாய் உயர்ந்துள்ளன. இந்த வட்டார வழக்கினால்
தேசியம் சங்கை கெட்டது என்று சொல்வாரும் உளரோ? ஈழத் தமிழை உரிய முறையிலே
அங்கீகரிப்பதிலே, கலைமகள் கி.வா.ஜ.காலத்திலிருந்தே ஒருவித பஞ்சி தமிழ்நாட்டு
இலக்கியவாதிகள் பலருக்கு இருக்கிறது. இதற்கான ஏது என் பிடிமானத்திற்குள்
சிக்குப்படுவதாகவும் இல்லை. தாம்பூலந் தரித்து நாநோகாத் தமிழ் சல்லாபம் புலம்
பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சுகிக்க முடியாத ஒன்று. எதுகை மோனை செய்து,
பட்டிமன்றங்களிலே வித்தும் ஊன்றும் 'பேறு' அவர்களுக்கு இல்லை. இலக்கியமும் அதன்
படைப்பும் அவர்களுக்க சௌந்தர்ய உபாசனையல்ல. கலை ஆராதனையுமல்ல. எழுத்துக் கலை
அவர்களுக்குக் கிளர்ச்சியின் வெளிப்பாடு. ஞானத்தின் பகிர்வு. சத்தியத்தின் பதிவு.
சுயமானத்தை இழந்து விடாத அக்கறை. மானிட மேன்மையின் தேடல். விடுதலையின் உள்ளொளி.
இவையே அவர்களுடைய எழுத்து ஊழியத்திற்கான உந்து விசைகள். பணமும் புகழும் விடுதலைக்கு
ஈடு அல்ல. படைப்பு முனைப்புக்கூட விடுதலையின் இன்னொரு ஸ்திதி என்கிற சம்பாவனையே!
தொழிலிலும் புறவாழ்விலும் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றவர்கள். வீட்டு மொழியாக
மட்டுமே தமிழை வசப்படுத்தும்