ஈழநூல் 95  
நூல் 

போர்ப்பறை (ஒரு பகுதி)

ஆசிரியர்

மு. தளையசிங்கம்

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

போர்ப்பறை

மு. தளையசிங்கம்

பகுதி 1

-----------------------------------------------------

போர்ப்பறை

மு. தளையசிங்கம்

------------------------------------------------------

நண்பர்களுக்கு

"இன்றைய நாகரிகத்தின் விளைவு தனி நபர்களுடைய மனதைப் பாதித்து அவர்கள் நல்ல வழியில் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டதாகும். கலாசாரப் பண்புகள் மறைந்து இயந்திரம்போல் இயங்கும் நிலையை மனிதன் அடைந்துவிட்டான், உடலுழைப்பும், உடற்சுகமும் பெரிதாகிவிட்டது. உள்ளத்தைப்பற்றிக் கவனிப்பார் இல்லை.

" நவீன நாகரிக மனிதன் மகிழ்ச்சியுடன் இல்லை. புதிய பாதையில் நடைபோடத் துணிவு கொண்டவனாகவும் இல்லை. உழைப்பு ஒன்றுதான் அவனுக்கு மிஞ்சியது. இதே நிலை தொடர்ந்து எவ்வளவு நாட்களுக்கு இருக்க முடியும்? சலிப்புமிக்க இந்த வாழ்வே கடைசியில் அவனது முடிவுக்கும் காரணமாகிவிடும். அவனிடம் சாந்தி குடிகொண்டிருக்கவில்லை. அதனால் மகிழ்வுடன் இருக்க இன்னும் அவன் கற்றுக்கொள்ளவில்லை. புதிய வாழ்க்கை முறைகளைக் கண்டுபிடிக்க அவனுக்குத் தெரியாது. இன்றைய நாகரிகத்தின் கடைக்கால் மகிழ்வு ததும்பும் வாழ்வுக்கு விரோதமானது. இந்த அஷ்திவாரத்தின் மீது மகிழ்ச்சி என்னும் மாளிகையை எழுப்புவது எப்படி? புதிய கலாசாரம் உருவானால்தான் இன்றைய மனிதனுடைய உள்ளம் நிறைவு பெறும். பழைய பாதையிலேயே சென்றால் வழி பிறக்காது, இதில் மற்றொரு வருந்தத்தக்க விசயம் புதிய பாதையைப்பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு, பழைய வழியைப்பற்றியே மனிதன் சிந்தித்துக் கொண்டிருப்பதுதான்".

உலக வரலாறு பற்றி ஆராயும் தன் 'சரித்திர சக்கரம்' என்ற புகழ்பெற்ற நூலில் டாக்டர் ராம்மனோகர் லோகியா இன்றைய மனித குல வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்தபின் கூறுபவை இவை.

நவீன விஞ்ஞானத்திலும், அது தனக்கு வகுத்துச் செல்லும் பாதையிலும் அபார மோகமும், நம்பிக்கையும் கொண்ட இக்கால மனிதன், அது மெத்த வளர்ந்த மேற்கிலே žரழிவு துவங்கிவிட்டதைக் காண்கிறான். வளர்ச்சிக்கும் எல்லையுண்டு, சுற்று சூழ்நிலைக் கேடு, அணு ஆயுத ஆபத்து என்ற அலரல் நாளுக்கு நாள் உறத்துக் கேட்க துவங்கிவிட்டது.

இந்த நிலையில்தான் எங்கெங்கும் அதிருப்தியும், அதன் தொடர்பாக மோதல்களும் நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. முற்றி வெடிக்கும் நிலையை நோக்கி வேகமான வளர்ந்து வரும் இந்த நெருக்கடிக்கு நிச்சயம் ஒரு தீர்வு இருந்தே ஆக வேண்டும்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில்- அடுத்த வளர்ச்சி ஒரு புதிய கட்டத்தை, திசை திருப்பதை தருவதாகும் என்றும், சடம், உயிர், மனம் என்று உணர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது என்றும் திரு. தளையசிங்கம் கூறுகிறார்.

அந்த நிலையே, அந்த நிலையை அடைவதே மனித குலத்துக்கு சாசுவதமான விடுதலை தந்து, மனிதனுக்கு சாந்தியையையும், மகிழ்ச்சியையும் தர வல்லது என்று அறிவு பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் புதிய கருத்துக்களை திரு. தளையசிங்கம் நம்முன் வைக்கிறார்.

வரப்போகும் புதிய சகாப்தத்துக்கு பாரத நாடும், காந்தியும், காந்தி காட்டிய சர்வோதயமுமே வழி காட்டிகள் என 50 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி தீர்க்க தரிசனம் போல் பாடினான்:

பாரி லுள்ள பலநாட்டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்க
லுற்றதிங் கிந்நாள் - உலகெலாம் புகழ
இன்ப வளஞ் செறி பண்பல பயிற்றுங்
கவீந்திர னாகிய ரவீந்திர நாதன்
சொற்றது கேளீர்- "புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,
தர்மமே உருவாம், மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தி" யென் றுரைத்தான்.
அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலுமே
வெற்றி தருமென வேதஞ் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள். இதனாற் படைஞர்தஞ்
செருக்கொழித் துலகி லறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் - விரைவிலே.
(வெற்றி கூறுமின்; வெண் சங் கூதுமின் !)

இந்த நம்பிக்கையையே திரு. தளையசிங்கம் பலபட ஆணித்தரமாக அறிவும் மிளிர தம் கதைகளிலே, கட்டுரைகளிலே கவிதைகளிலே திறம்பட நிலை நாட்டுகிறார்.

அறிவையும், அழகையும் போலவே உண்மை, நேர்மை, சத்தியம் அவர் எழுத்துக்களிலே ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது. அவரது நூலைப் படிக்கும் எவரும் இதை உணரலாம்.

மனித குலத்துக்கு சாந்தியும், மகிழ்ச்சியும் அளிக்க வல்ல ஒரு புதிய கலாசாரம் தோன்றுவதற்கான அடிப்படையைத் தெளிவாகக் காட்டும் தளையசிங்கத்தின் சிந்தனைகள் நம்பிக்கையூட்டுவதாகும்.

புதிய கலாசாரத்தை துவக்கி வளர்க்கும் இயக்கத்திற்கு இனி கலைஞர்களும், இலக்கிய கர்த்தாக்களுமே முன்னணியில் நிற்க வேண்டும். அப்பணியை ஏற்று நடக்க தோன்ற வேண்டிய படைப்பாளிகள் இயக்கத்திற்கு தமிழில் தளையசிங்கத்தின் நூல்கள் அனைத்தும் வெளி வருவது துணைபுரியும் என நம்புகிறோம். தளையசிங்கத்தின் நூல்களை வெளியிட அன்பு கூர்ந்து அனுமதி அளித்த அவரின் சகோதரர் திரு. மு.பொன்னம்பலம் அவர்களுக்கும், மற்றும் அவரது நண்பர்களுக்கும், குறிப்பாக திரு.பத்பனாப ஐயர் அவர்களுக்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.

திரு. தளையசிங்கத்தையும், அவரது முக்யத்துவம் வாய்ந்த அபூர்வமான தனிச் சிறப்புகளையும் தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் திரு. சுந்தர ராமசாமி, திரு.தளையசிங்கத்தின் நூல்களை வெளியிடும் வாய்ப்புக்கு வகை செய்தவர் நண்பர் திரு. கி. ராஜநராயணன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.


சி. கோவிந்தன்,
பதிப்பாளன்.

--------------------------------------------------------

"ஓர் அடி எனக்கு, ஆனால் மனித குலத்துக்கோ
ஓர் பெரும் பாய்ச்சல்"

- நீல் ஆம்ஸ்ட்ரோங், சந்திரனில்
காலடி வைக்கும்போது.


ஓர் அடி

உலகெங்குமுள்ள மாணவர்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றன. ஆனால் யாரும் பிரச்னையின் ஆழத்தைக் கண்டதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்திவரும் மாணவர்களுக்கே அவர்களின் நடத்தைக்குரிய அர்த்தம் பூரணமாகத் தெரிந்ததாய் இல்லை. ஏதோ அவர்களே பூரணமாக அறியாத ஓர் அதிருப்தி அவர்கள் வாழும் இடங்களிலுள்ள சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் அமைப்புக்கு எதிராக அவர்களைப் போராடத் தூண்டி வருகிறது.

அமெரிக்கர் சந்திரனில் இறங்கியுள்ளனர். ஆனால் அதே நாட்டின் சமூக அமைப்பையும் வாழ்க்கைமுறையையும் துறந்து நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் "பீட்னிக்ஸ்", "ஹ’ப்பீஹ்" ஆகியோரின் துறவு சந்திர யாத்திரையைவிட மிக முக்கியமானது என்பதைப் பலரும் அறிவதில்லை. ஒரு காலத்தில் இந்தியாவெங்கும் சமண, பௌத்த, இந்து சந்நியாசிகள் எப்படிச் சமூக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விலகி உண்மையைத் தேடி திரிந்தார்களோ அதேபோல் இன்று அமெரிக்கர் குறிப்பாக நாட்டின் ஆட்சியையே ஏற்று நடத்தக் கூடிய திறமையும் கல்வியறிவுமுள்ள அமெரிக்கச் சமூகத்தோடு ஓத்தோட மறுத்து புதுயுகத் துறவிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் அதே அதிருப்திதான்.

அதிருப்தி, அப்படிச் சொல்வதுதான் சரி. எல்லாருக்கும் பொருத்தமான பொதுக் காரணமாக அதை மட்டுந்தான் சொல்லலாம். அந்தந்த இடங்களிலுள்ள அமைப்பு ஏற்படுத்தும் அதிருப்தி. அந்த அதிருப்தி முதலாளித்துவ அமைப்புக்கும் சரி, பொதுவுடமை அமைப்புக்கும் சரி ஒத்துப் பொருந்துவதாகவே இருக்கிறது. žனாவில் நடந்த கலாசாரப் புரட்சி உலகெங்கும் காணப்படும் அதே அதிருப்தியின் வெளிக்காட்டல்தான். ஆனால் அங்கு அது ஒழுங்குபடுத்தப்பட்டு அமைப்புக்கு ஏற்ற வகையிலேயே ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறது. மாசேதுங்கின் கெட்டித்தனமே அதுதான். அதிருப்திதானாக வெடித்து அமைப்புக்கு எதிராக மாறிவிடாமல் இருப்பதற்காக அமைப்பே அதை ஆற்றுப்படுத்தி அதன் தாக்குதலுக்குரிய இலக்கையும் காட்டித் தன்னைக் காப்பாற்ற முயன்றிருக்கிறது; அதே அதிருப்தியையே தன் பக்கபலமாகத் திரட்டியிருக்கின்றது: மற்றைய நாடுகளிலுள்ள சமூக பொருளாதார அமைப்புகளை விட மாசேதுங்கின் தலைமையிலுள்ள žனாவின் பொதுவுடமை அமைப்பு அந்தளவுக்கு யதார்த்தமாக இயங்க முயன்றிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். சமூக அமைப்பின் தேக்கத்துக்கு எதிரான தீவிர வளர்ச்சி மாற்றமே மக்களிடையே இயல்பாக ஏற்படக் கூடிய அதிருப்தியை நீக்கிவிடக்கூடியது என்பதை žன அரசாங்கம் உணர்ந்து இயங்குவதாகத் தெரியவில்லை. ஆனால் சமூக அமைப்பின் வளர்ச்சி மாற்றம் எதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்? சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் எந்த இலட்சியத்தை நோக்கி வளர்க்கப்படவேண்டும்?

அதை இன்று எந்த நாடும் žராக உணர்ந்ததாகக் தெரியவில்லை. காந்தி காலத்து இந்தியா அதை உணர்ந்திருந்த அளவுக்கு இன்று எந்த நாடும் அதை உணர்ந்திருப்பதாய்த் தெரியவில்லை. žனாவும் சரி வேறு பொதுவுடமையைப்பு நாடுகளும் சரி சமூக பொருளாதார மாற்றங்களை சமூக பொருளாதாரக் காணரங்களுக்காகவே கொண்டுவர விரும்புகின்றனவேயொழிய அவற்றுக்கு அப்பால்பட்ட வேறு ஒன்றின் எழுச்சிக்குரிய தளமாக அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவனவாக இல்லை. பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பால்பட்ட உண்மை என்ற ஏதாவது ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. ஆனால் அதை இன்று எந்த நாட்டு அரசாங்கமும் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டு அந்த உண்மையை வெளிக்காட்டும் வகையில் தங்களின் நிர்வாகத்தை நடத்துவதில்லை. ஏற்றுக்கொள்ளும் இரண்டொரு அரசாங்கங்களும் அந்த உண்மையைத் தங்களின் அறியாமை- ஆணவைத்துக்குரிய பூச்சாகவே பயன்படுத்த முயல்கின்றன. மற்றவையோ அப்படி ஒரு உண்மை இருப்பதாக நினைப்பதேயில்லை. ஆனால் அந்த உண்மைக்குரிய தளங்களாக சமூக, பொருளாதார, அரசியல், கலாசார அமைப்பு தீவிரமாக மாற்றியமைக்கப்படாத வரைக்கும் இன்று எங்குமுள்ள அதிருப்தி அடங்கப்போவதில்லை. இன்னும் தீவிரமாக பரவி வளர்ச்சியடையவே செய்யும். சில சமயம் திசை தப்பிப்போய் அழிவையும் ஏற்படுத்திவிடலாம். ஆனால் அந்த உண்மைக்கு அந்த அழிவும் அவசியமாகவே படும். தன்னை வெளிக்காட்ட மறுப்பதோடு தனக்குப் பூரண தடையாகவும் மாறக்கூடிய ஓர் அமைப்பை அது பூரணமாக அழித்துவிடவே செய்யும். அந்த அழிவில் தனக்குரிய žரான அமைப்பை அதற்க உருவாக்கவும் முடியும்.அந்த உண்மை எது?

அதுதான் சத்தியம். சத்தியமே கடவுள் என்கிறார் காந்தி. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியமேதான், உண்மையேதான். கடவுளை ஏற்க விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை அந்தச் சத்திய நிலையாக எடுத்துக் கொள்ளலாம். பௌத்தர் கடவுளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கடவுளை ஏற்றுக் கொள்வோர் அந்த நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ளத்தயார். கடவுள் இல்லை என்று விவாதிக்கும் பௌத்தரிடம் கடவுளை நம்புவோர் கேட்டுக்கொள்வது இதுதான்: முதலில் நீங்கள் நிர்வாணத்தைத் தேடுங்கள். நிர்வாணத்தை அனுபவித்தபின் கடவுள் இல்லையா இருக்கிறாரா என்ற பிரச்னையே எழாது. அது தேவைப்படாது. நீங்கள் கடவுள் மயமாகவே இருப்பீர்கள், அதுவரைக்கும் உங்கள் நிர்வாணத்தையே சத்தியம் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சத்தியத்தையே, அதன் பல கோணப் பார்வையிலும், நாம் கடவுள் என்கிறோம்!

நிலையான திருப்தியை அளிக்கக்கூடிய நிலை இந்த நிர்வாண நிலைதான், இந்த சத்திய நிலைதான். அப்படி ஒரு நிலை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்வதுடன் அந்தச் சத்திய நிலை முழுச் சமூகத்திலும் எழுச்சியடைவதற்குத் தளம் அமைக்கும் வகையில் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பைத் தீவிரமாக மாற்றியமைக்கவும் முயலாதவரைக்கும் அதிருப்தி என்பது பரவலாக நிலவலத்தான் செய்யும். ஆனால் அந்த நிர்வாண நிலை பரவலாக ஏற்பட பின்பும் பரிணாமம் என்பது நின்றுவிடப்போவதில்லை. அதற்குப் பின் அது எடுக்கக்கூடிய பரிணாம வகையையும் திசையையும் இப்போது சொல்லமுடியாது. அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம் ஆகிய தற்போதைய நிலைகளையும் தாண்டி விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம் ஆகிய தற்போதைய நிலைகளையும் தாண்டி விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம் ஆகிய நிலைகளுக்கு மனித குலம் பரவலாககப் பாயும்போது ஏற்படக்கூடிய உருவ, ஞான பரிணாமங்களைப் பற்றி இப்போதே சொல்லிவிடமுடியாது. அந்தவகையில் எதிர்காலப் பரிணாம வளர்ச்சி இருக்கக் கூடிய தாய்த் தெரியும்போது இக்காலப் பொதுவுடமை அமைப்பும் சரி முதலாளித்துவ அமைப்பும்சரி உடனடியாக அடுத்து வர விருக்கும் சத்திய எழுச்சிக்குரிய, பரவலான விஞ்ஞானமய கோச நிலைக்குரிய அமைப்பாக மாறாதவரைக்கும் இப்போது நிலவும் அதிருப்தி நீங்கிவிடப் போவதில்லை. முதலாளித்துவ அமைப்பைவிட பொதுவுடமை அமைப்பு சத்திய எழுச்சிக்கு எதிரான பெருந் தடையாக மாறிவரும் ஆபத்தும் தெரிகிறது. அதன் காரணமாய் žனாவில் சமூக மாற்றத்துக்குரிய சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருவதுபோல் தெரியினும் அங்குதான் சத்திய எழுச்சிக்கு எதிரான அறியாமையும் அதிகமாக வளர்க்கப்பட்டுவரும் ஆபத்து தெரிகிறது.

எனவே சமூக பொருளாதார மாற்றங்கள் சமூக பொருளாதாரக் காணரங்களுக்காகமட்டும் ஏற்படுத்தப்படுவதால் பிரச்சனை தீரப்போவதில்லை. அவை நிரந்தர திருப்தியை அளிக்கக்கூடிய சத்திய எழுச்சிக்கான சமூக, பொருளாதார மாற்றங்களாக வளர்க்கப்படவேண்டும். ஆனால் இன்று எந்த நாட்டு அரசாங்கமும் அதைத் தெளிவாக உணர்ந்ததாய் இல்லை. இருக்கும் நிலையில் அதிருப்திபட்டு ஆர்பாட்டம் நடத்தும் மாணவர்களும் புரட்சிக்காரர்களும் அரசியல்வாதிகளும் அறிஞர்களுங் கூட பிரச்னையின் ஆழத்தைப் பூரணமாக உணராமல் ஏதோ அறிவுக்கு எட்டாத அடிமன உந்தலுக்கு உட்பட்டவர்களாய் நடந்துகொள்ளும்போது அரசாங்கங்கள் எப்படி அதைத் தெளிவாக உணர்வது?

அதிருப்தி என்பது எப்போதும் இருக்கிறதுதானே? அதை இப்போது மட்டுமேன் சத்திய எழுச்சிக்குரிய அதிருப்தியாய்க் காணவேண்டும்?

அப்படிக் கேட்பது நியாயமானதுதான். ஆனால் அதுவே உயிரினங்களின், குறிப்பாக மனித இனத்தின், பரிணாம வளர்ச்சியில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சி உச்சத்தையும் அந்த உச்சம் ஏற்படுத்தும் திசை திருப்பத்தையும் அழுத்துவதாய் இருக்கிறது.

சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச்செல்ல முயல்கிறது, செல்லும் நிலை வந்துவிட்டது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் நிர்வானத்தின், சத்தியத்தின் பூரண பிரவாகம் உட்புக முடியும். இதுவரை தனிப்பட்ட சில ஞானிகள்தான் அதை அனுபவித் திருக்கின்றனர். அவர்களிடம் எழுந்த அந்தச் சத்தியப்பிரவாகத்தை, சத்திய எழுச்சியை, மனிதகுலம் முழுவதும் பரவலாக, சர்வோதயமாக காணமுயலும் கட்டந்தான் இப்போதைய கட்டம். அதனால் இந்தக் கட்டத்தில் ஏற்படும் எந்தவகையான அதிருப்தியையும்-அரசியல், சமூக, கலாசார, பொருளாதார அதிருப்தியையும்- இந்தக் காலக் கட்டத்துக்குரிய பூரணப் பரிணாமத் தேவையின் ஆழம்வரை விரித்துப் பார்ப்பது அவசியமாகிறது. அப்போதுதான் அந்த அதிருப்தியை யார் அதிகமாக அனுபவிக்கிறார்களோ அவர்களே மாற்றத்தைக் கோரிப் போராடத் தயாராய் இருக்கிறார்கள். அதனால் அவர்களிடமே முதலில் இக்காலக் கட்டத்துக்குரிய சத்திய எழுச்சி தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர்களின் ஒவ்வொரு இயக்கமும் தனக்குரிய பூரணமான அர்த்தத்தைப் பெற்று சந்திய இயக்கமாக மாறவேண்டும். அப்போதுதான் அந்த இயக்கம் இன்று பூரணமாக வெற்றிபெறவும் முடியும். உதாரணமாக நம் ஈழத்துத் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் தாங்கள் நடத்தும் போராட்டத்தையும் žர்திருத்த முயற்சியையும் தாழ்த்தப்பட்ட தங்களின் சமூக எழுச்சிக்குரிய போராட்டமாகமட்டும் காணக்கூடாது. முழு மனிதகுலத்துக்குமுரிய "ஆலயப்பிரவேச" ப் போராட்டமாகவும் சத்திய எழுச்சிக்குரிய இயக்கமாகவும் தங்களின் தனி முயற்சியை விரித்துக் காணவேண்டும். அப்போதுதான் தன்னால் எடுக்கக்கூடிய பூரண சக்தியைப் பெறவும் தன்னால் அளிக்கக்கூடிய பூரண நற்பலனைத் தரவும் அந்த இயக்கத்தால் முடியும். ஈழத்துத் தமிழர்களின் அரசியல் போராட்டமும் அதேவகையில் தனிப்பட்ட தமிழர்களின் உரிமைப் போராட்டமாகமட்டும் குறுக்கப்பட்டுவிடாமல் தமிழர், சிங்களவர், முழு உலகத்தவர் ஆகிய எல்லாருக்குமுரிய சத்தியப் போராட்டமாகவும், சர்வோதய இயக்கமாகவும் விரித்து நடத்தப்படவேண்டும். அதேபோல் அமெரிக்க நீக்கிரோக்களின் போராட்டமும் உலகத் தொழிலாளர்களின் போராட்டமும் சுதந்திரத்தையும் ஞானத்தையும் சமாதானத்தையும் தேடும் அறிவாளிகளின், கலைஞர்களின் இயக்கங்களும் மாணவர்களின் ஆர்ப்பாட்டமும் இக்காலக் கட்டத்தின் மனிதகுலத்தின் பரிணாமத்தில் வரவிருக்கும் சத்திய எழுச்சிக்குரிய போராட்டங்களாக மாற்றி வளர்க்கப்படவேண்டும்.

காந்தி அதைத்தான் செய்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை இந்தியாவுக்குமட்டும் உரிய போராட்டமாகவோ அல்லது வெறும் அரசியல் சுதந்திரத்துக்குரிய போராட்டமாகவோ அவர் காணவில்லை. அவர் அதையே சத்தியத்தின் எழுச்சிக்குரிய போராட்டமாகவும் விரித்துப் பார்த்தார். அப்படியே அதை நடத்தினார். காந்திக்குப் பின்பு எந்த இயக்கமும் சத்திய எழுச்சிக்கு எதிரான இயக்கமாக இருக்கக்கூடாது என்றாகிவிட்டது. சத்திய இயக்கமே, சர்வோதயமே, முற்போக்காகவும் மற்றவை எல்லாம் பிற்போக்காகவும் மாறிவிட்டன.

இந்தப் பார்வைப் பின்னணியிலேயே எனது முயற்சியையும் பொருத்திப் பார்க்க வேண்டும். எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் சிந்தனையாளனுக்கும் இன்றுள்ள பொறுப்பும் பங்கும் பிரமாண்டமானவை. மிக நுணுக்கமான உணர்வும் அகலமான மனவிரிவும் ஆழமான சிந்தனையும் எங்கு இருக்கின்றனவோ அங்கு இக்காலக் கட்டத்குரிய பரிணாம வளர்ச்சியாகிய பரவலான சத்திய உதயத்தின் சமிக்ஞை அலைகள் žக்கிரமே தட்டுப்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அலைகளைத் தெளிவுபடுத்தும் பணியும் அவற்றுக்கு உருவங் கொடுக்கக்கூடிய தனத்தைத் தங்களிடமும் சமூகத்திடமும் உருவாக்கும் பொறுப்பும் அவர்களுக்கேயுரியது. தனிப்பட்ட ஞானிகளை ஒத்த நிலைக்கு முழு மனித குலமும் உயரவேண்டுமானால் இடையில் ஒரு சிறு கூட்டம், அதையடுத்துப் பெருங்கூட்டம் என்ற படிகள் வரவேண்டியிருப்பதும் இயற்கையே தான். முதலில் ஒரு பெருமனித இனம் தோன்றும் என்று அரவிந்தர் கூறுகிறார். அந்த முதல் கட்டம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், žர்திருத்தவாதிகள் ஆகியோரின் கூட்டமாகவும் இருக்கலாம். அத்துடன் இவர்கள் பல்வேறுவகையான துளைகளில் ஈடுபடுபவர்களாய்த் தெரியினும் சத்தியத்தின் அடிப்படையில் ஒரேவிதமான தொழிலைச் செய்வபவர்களாகவும் அதனால் ஒரு துறையில் மற்றத் துறைக்குரிய வழிமுறைகளைக் கையாளுபவர்களாகவும் தெரிவர். உதாரணமாக காந்தியும் வினோபாவும் இக்காலத்துக்குரிய புதுமுறை விஞ்ஞானிகளேதான். எவ்வாறு சத்தியத்தைச் சமூகத்தில் பரவலாக எழுப்பலாம் என்று விஞ்ஞானரீதியாகச் சோதனை செய்தவர்கள் அவர்கள்தான். அதே வகையில் சந்திரனில் கால் வைத்துள்ள நீல் ஆம்ஸ்ட்ரோங், அல்ட்ரின், பீன், கொன்ராட் ஆகியோர் இக்காலத்துக்குரிய புதுமுறை யோகிகளாகவும் விளங்குகின்றனர். அதாவது அவர்கள் வெளியுலகின் ஆழத்தை அளப்பவர்கள். அதேவகையில் இன்றைய கலைஞர்களும் எழுத்தாளர்களும் சமயவாதிகளாகவும் விஞ்ஞானிகளாகவும் விளங்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். அடுத்த மரிணாமத்தைத் தங்களளவிலும் சமூகத்திலும் கொண்டுவர வேண்டியிருக்கிறது என்ற தேவையை உணர்பவர்களே அதைச் செய்துகாட்ட வேண்டியவர்களாகவும், அதற்குரிய பரிசோதனைகளைப் பல்வேறு துறைகளிலும் நடத்தவேண்டியர்வகளாகவும் இருக்கின்றனர். புது யுகப் பரிணாமத்தின் பரிமாணங்களைத் தன்னளவு அனுபவவித்த அரவிந்தர் ஓர் பெருங் கலைஞனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞானிகளும் தங்களளவில் கலைஞர்களாகவே வாழ்ந்தனர். எனவே கலைஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றோரே ஞானிகள் கூறும் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிக்கு சமூகத்தை ஞானிகளுக்கு அடுத்த படியாகத் தயார்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். மனிதகுலத்தில் பரவலாக ஏற்படவிருக்கும் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் முதல் கூட்டமாக அவர்களே இருக்கலாம். அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையெனினும் அப்படியும் இருக்கலாம் என்று நினைத்து முயல்வதே அப்படியே இருப்பதற்கு வழிவகுத்துவிடும். அப்படி நினைத்து முயலக்கூடிய தகுதி இந்த கலைஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் கூட்டத்திடம் அதிகம் இருக்கிறது. அதனால் அவர்களிடமே முழு மனித குலத்துக்கும் வழிகாட்டும் பொறுப்பும் இன்று அதிகமாக இருக்கிறது. அதனால் அவர்களிடமே முழு மனித குலத்துக்கும் வழிகாட்டும் பொறுப்பும் இன்று அதிகமான இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதற்காக அவர்கள் தங்களை ஒர் "உயர் இனம்" ("Kultur Race") என்று நினைத்துத் தங்களைச் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்ப்பவர் என்று தவறுதலாகக் கணக்கிட்டுவிடக் கூடாது. அவர்களே எல்லாரையும்விட எளிமையையும் தாழ்மையையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பர். சத்தியம் எங்கும் இருப்பதால் அச்சத்திய எழுச்சியை அனுபவிப்பவன் தன்னைத் தணித்துப் பிரித்துப் பார்க்க முடியுமா? அவனிடம் தட்டுப்படும் சத்திய அலைகளே உண்மையான பொதுவுடமையினதும் சகோதரத்துவத்தினதும் அலைகளாகும். அவற்றுக்கு உருவமும் ஒலியும் கொடுத்து தன்னிலும் சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் அவற்றை வாழவைப்பதற்குத் தளம் அமைப்பவனும் அவனாகவே இருப்பான்.

இப்புதுயுகத்தின் சமிக்ஞை அலைகளை என்னளவில் வெளிப்படுத்தும் முயற்சியே "போர்பறை" யாகும். இச்சமிக்ஞை அலைகள் "பீட்னிக்ஸ்", " ஹ’ப்பீஸ்" முதல் பேராதனை மாணவர்களின் போராட்டம்வரை பல்வேறுவகையில் வெளிப்படுத்தப்படுகின்றன. அவற்றைப்பற்றிய சுய உணர்வும் எந்தளவுக்க அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு அவை முழுமையை எட்டுகின்றன. அடிப்படையில் அவை எல்லாம் அறிவுநிலைக்குரிய; அதாவது நனவுநிலைக்குரிய (consciousness), தரவித்தியாசங்கள்தான். சத்தியம் என்பது அடிப்படையில் சித்தே தான். ஆனால் இப்போ தட்டுப்படும் சமிக்ஞை அலைகள் எல்லாம், இதுவரை மனிதனக்குத் தெரிந்த அறிவின் எல்லைகளை அல்லது நனவுநிலையைத் தாண்டிய பரவலான பேரறிவை நோக்கிய (Super Consciousness) புதுயுக ஞான அலைகள் தான். அவற்றின் வெளிக்காட்டல்கள் பூரணமாகத் தங்களை உணர்ந்த வெளிக்காட்டல்களாக இருக்காமல் அடிமன உந்தல்களாக இருக்கும்போது சகோதரி நிவேதிதா கூறியதுபோல் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டுவரும் அறிவின் தரத்துக்கு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் படலாம். ஆனால் அடுத்து வரும் புதுயுகப் போறிவின் பிறப்புக்குக் கட்டியங் கூறுபவை அவையேதான். அசிங்கம் என்று கூறும் இப்போதைய அறிவு நிலையின் முகஞ் சுளிப்பு அநாகரிகமாகிக் கொண்டிருக்கும் ஓர் நிலைக்குரிய, தேக்கத்துக்குரிய, முகச் சுளிப்பேதான், பீட்னிக்ஸ்-ஹ’ப்பீஸ’ன் போக்கு நடைமுறையிலுள்ள அமைப்புக்கும் அதை ஏற்கும் அறிவுக்கும் அசிங்கமாகப்படலாம். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டமும் žனாவின் கலாசாரப்புரட்சிச் செங்காவலர்களின் ஆர்ப்பாட்டமும் žனாவின் கலாசாரப் புரட்சிச் செங்காவலர்களின் நடத்தையும் கியூபா நாட்டுப் புரட்சிவீரன் சே குவேராவின் தாசர்களினது போராட்டமும் நடைமுறையிலுள்ள அமைப்புக்கும் அதை அங்கீகரிக்கும் தற்போதைய அறிவுநிலைக்கும் ஆத்திரத்தையூட்டலாம். ஆனால் பேரறிவின் பிறப்புக்கும் அந்தப் பேரறிவுக்குரிய புதிய பௌதீக - இயற்கை-சமூக-பொருளாதார அரசியல் - கலாசாரப் பேரமைப்புக்கும் சொந்தமான ஆரம்பப் பிரக்ஞை அலைகளின் வெளிக்காட்டல் அவையேதான். அப்பேரறிவு ஓரிடத்தில் பூரணமாக முழுமையடையும் போரே (பழைய சாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களைச் சரியாக விளங்கிக் கொள்கின்றன. ஆனால் அந்தப் பேரறிவின் முழுமை பிறக்கும் வரைக்கும், இத்துளி அலைகளே - அவை ஆபாசமாகவும் அசிங்கமாகவும் தெரிந்தாலுங்கூட- அந்த முழுமையின் பிறப்புக்கு மிக அத்தியாவசியமான தேவைகளாக இருக்கின்றன. அவையே அந்த முழுமையின் பிறைப்பை கொண்டு வருகின்றன. அல்லது அந்த முழுமையே தனது வருகையை தெரிவிக்கும் வகையில் இந்த ஆரம்ப அறிகுறிகளை, முதலில் வெளிக்காட்டுகின்றது, அந்த முழுமைதான் பிறக்கவிருக்கும் புதுயுக ஞான அலையின் சிகரம் அல்லது முடி என்றால் இவையெல்லாம், அதாவது ஆரம்ப அறிகுறிகளெல்லாம் அந்த அலையேதான்.

"போர்ப்பறை" முழுமையை நோக்கிய அந்த அலையின் குரல்தான், முழுமையான அலைமுடியின் அல்லது சிகரத்தின் ஒளியேறிய ஒலியல்ல. இருப்பினும் ஏற்கனவே இப்புதுயுக அலை பிறப்பித்துள்ள அடிமன உந்தல்களுக்குரிய தெளிவைப் பெருமளவுக்கு இதில் காணக்கூடியதாய் இருப்பது போல் இனி வரவிருக்கும் முழுமையின் சிகரத்தைத் தொடும் வேகத்தையும் தரிசன வீச்சையும் இதில் காணலாம். அதனால் ஏற்கனவே வெளிவந்துள்ள எனது "புதுயுகம் பிறக்கிறது" தொகுதிக்குரிய தெளிவையும் இனி வரவிருக்கும் சிருஷ்டிகளின் திசையையும் இதுவே காட்டி நிற்கிறது. பிறக்கவிருக்கும் புதுயுக ஞான அலையை என்னளவுக்கு அனுபவித்த ஆரம்ப அடிமன உந்தல்களாக "புதுயுகம் பிறக்கிறது" சிறுகதைகள் இருக்கின்றன. நடைமுறைலுள்ள இக்கால சமூக வாழ்க்கை அமைப்பிலும் அதை அங்கீகரிக்கும் அறிவுநிலையிலும் அதிருப்தி கொண்டு அவற்றையே இக்காலத்துக்குரிய ஆத்மாவின் "வீழ்ச்சி" யாகக் கண்டு அந்த ஆத்ம வீழ்ச்சியை மீற முயலும் பல்வேறுவகைப் புரட்சிகளைப் படம் கதைகள். ஆனால் அதில் மீட்சியாக நான் கண்ட "வெளி" சமயத்துறையில் பௌத்தர், சங்கரர் ஆகியோர் புகட்டு ம துறவாகும் (சங்கரர் அத்தகைய விடுபட்ட துறவைத் தன் வாழ்க்கையில் கடைப் பிடித்ததில்லை. ஆனால் அவருடைய தத்துவம் அத்தகைய வாழ்க்கைக்குத்தான் செயலைத் துறந்த சிந்தனைவாதியாகவும் முனைப்பை மாயையாகக் கருதி, இருக்கும் நிலையோடு திருப்திப்படும் விடுபட்ட துறவியுமாகவே தெரிகிறான். கொலின் வில்சன் கண்டு பிடித்த "அவுட்சைடர்" என்பவனின் சங்கர வேதாந்த ரகம். அதுவே தொகுதியில் காணப்படும் உச்சம், புரட்சி உச்சம், அதையே அப்போது நான் மீட்சிக்குரிய வழியாகவும் கண்டேன். ஆனால் அது இப்போதைய என நிலையில் திருப்தியளிக்க முடியாது. ஆனால் தொகுதியில் யாரும் "தேடல்" கதையில் வரும் நல்லதம்பியைப்போல் இருக்க விரும்பவில்லை என்பது மட்டும் எப்பவும் எனக்கு திருப்தியளிக்கக்கூடியது. அதை நல்லதம்பியே இறுதியில் விரும்பவில்லை. ஆனால் அதை அவன் கண்டுபிடிப்தற்கு ஒருமுறையோ செத்துப்பிறக்க வேண்டியிருக்கிறது. ஆனால் "நல்லதம்பி" தான் இப்போதைய நடைமுறை அமைப்புக்குரிய பண்பாட்டு உச்சமாகவும் உருவமாகவும் இருக்கிறான். நல்லதம்பியே இறுதியில் வெறுத்துத் தப்பும் நல்லதம்பி! அத்தகைய நல்ல தம்பிகள், நடைமுறையிலுள்ள சமூக அமைப்பு பண்பாடாகவும் ஒழுக்கமாகவும் பூசிமறைத்துக் காட்டும் கோழைத் தனத்தினதும் இயலாமையினதும் வாழும் உருவங்களேதான். அந்த நல்லதம்பிகளுக்கு, "நல்ல சிவம் " (தேடல் என்ற கதையில் வரும் பாத்திரம்) போன்றோரின் முயற்சிகள் எல்லாம் ஆபாசமாகத்தான் தெரியும். புதுயுகம் பிறக்கிற கதைகள் அப்படித்தான் எங்கள் நாட்டு "நல்லதம்பிகளால்" விமர்சனம் செய்யப்பட்டன. ஆனால் உண்மையில் நிவேதிதா கூறும் புதுயுக ஞான அலையின் என்னளவுக்குரிய ஆரம்பம் அவையேதான். அந்த அலையின் உந்தலைப்பற்றி அறியாதவர்களுக்கும் உணராதவர்களுக்கும் அவை அசிங்கமானவை யாகத்தான்படும். நான் அறிந்தவரையில் தமிழ் இலக்கியத்துறையில் பாரதிக்குப்பின் அந்த அலையின் உத்தலை உணர்ந்தவர்கள் இதுவரை இரண்டொருவராகத்தான் இருக்கின்றனர். புதுமைப் பித்தனின் கதைகள் நடைமுறையிலுள்ள ஆத்ம வீழ்ச்சியைக் கேலி செய்யும் முயற்சிகள்தான். புதுயுக ஞான அலையின் ஆரம்பம் அவரிடம் இல்லை. அல்லது இருக்கிற அமைப்பைக் கேலி செய்யும் அளவுக்குத்தான் அவர் உதை உணர்ந்திருக்கிறார். மார்க்žய முற்போக்கு எழுத்தாளர்கள் அந்த அலையை உணர்ந்தாலும் அதற்குப் பிழையான அர்த்தம் கொடுத்து இடையிலேயே அதைத் திருகிச் சாகடித்து விடுகின்றனர். அவர்கள் காட்டும் இலக்கோடு அந்த அலை நின்றுவிடக் கூடியதல்ல. அத்துடன் அவர்கள் ஆதரிக்கும் சர்வாதிகாரம் அதற்கு நேர் எதிர்மாறானது. புதுமைப் பித்தனிடம் காணப்படும் கேலி உணர்ச்சியும் இயலாமை உணர்வும் இவர்களது சர்வாதி காரத்துக்கப் பின்னால் பெருமளவுக்கு மறைந்து கிடக்கிறது. அதை இவர்கள் உணர்வதில்லை. புதுயுக ஞான அலை பிறப்பிக்கப்போகம் வீரத்துக்கும் செயல் வேகத்துக்கும் முன்னால் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் மார்க்žயத்தின் இயலாமையும் தாழ்வுச் சிக்கலும் தெரியவரும். காந்தி பலருக்குப் பிற்போக்கு வாதியாகப்படலாம். மார்க்žய வாதிகளுக்குப் பெரும்பாலும் அப்படித்தான் அவர் தெரிவதுன்டு. ஆனால் அவரின் முயற்சியின் உண்மையான அர்த்தப் பின்னயின் மார்க்žயச் சர்வாதிகாரம் கோழைத்தனமாகவும் இயலாமை எழுப்பிய சிக்கலாகவுமே தெரியும்."முற்போக்கு" மார்க்žய எழுத்தாளர்கள் புதுயுக ஞான அலையைப் பிழையாக புரிந்துகொண்டவர்கதான். அதனால் அவர்கள் "புதுயுகம் பிறக்கிறது" கதையில் வரும் கனகரத்தினத்திடம் காணப்படும் கையாலகத் தனத்தின் உருவங்களாகவே இருக்கின்றனர். புதிய அலையின் உந்தலை அதிகமாக உணர்பவர்கள் மார்க்žயவாதிகளோடும், அவர்களது தர்க்க நியாயங்களோடும் அவர்கள் காட்டும் அமைப்போடும் திருப்திப்படமுடியாது. இதுவரை நானறிந்தவரையில் தமிழ் இலக்கியத்தில் பாரதிக்குப் பின்பு இப் புதுயுக அலையின் பிறப்பு பிரக்ஞை பூர்வமான அளவுக்க வளர்ந்திருப்பது ஜெயகாந்தனின் "பிரம்மோபதேசம்", "விழுதுகள்", "பிரளயம்" என்ற கவிதைத் தொகுதியிலுந்தான். ஜெயகாந்தனிடம் அது திரண்டு பெருத்த சத்தியாய் உருவெடுத்து வருகிறது. ஆனால் அது அவரிடம் பிரக்ஞையின் எல்லையைப் பூரணமாகத் தொடுவதற்கு முன்பே பொன்னம் பலத்தின் அக்கினிக்குஞ்சு தன் சின்னச் சொண்டுகளால் ஓட்டைக் கொத்தி உடைத்துக்கொண்டு வெளிவந்துவிட்டது.

"போர்ப்பறை" அந்தச் சின்னக்குஞ்சு, பாரதியாரின் அக்கினிக்குஞ்சு, ஞானச் சேவலாகித் தன்னை யாரென்று உணரும்போது வெளியிடும் கன்னிக்கூவல்தான். அதன் முற்றிய வெற்றிக்கூவல் இனித்தான் வரவேண்டும். எங்கிருந்து வருமோ எப்போ வருமோ எப்படி வருமோ இப்போது சொல்ல முடியாது. எங்கு புது அலையின் முழுச் சிகரமும் பூரணமாகிறதோ அங்கிருந்து அது பிறக்கும். ஆனால் அது அலையின் சிகரம் இம்முறை பலவிடங்களிலும் பூரணமாகும் கட்டம் ஆரம்பமாகிறது. அதனால் வரப்போகும் அவதாரம் பல இடங்களிலும் பூரண ஞானமாய்த் தன்னை எழுப்பப்போகும் அவதாரமாய் இருக்கும். பரவலாக மனிதகுலம் முழுதுமே பேரறிவுக்குள் இறங்கும், சத்தியகுமல்லவா இனி வரப்போகிறது? எது எப்படியாய் இருப்பினும் என்னிடமும் (புதுயுகம் பிறக்கிறது), பாரதி ஆரம்பித்துவைத்த தற்காலத் தமிழ் இலக்கியத்திடமும் கருக்கூட்டிக் கொண்டிருந்த புதுயுக நனவுநிலை நனவு அலை, தன்னை இதுவரை வந்திராத பேரறிவு நிலையாக உணரத் தொடங்கும் கட்டம் வந்துவிட்டது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். "போர்ப்பறை" கூறும் செய்தி அதுதான். அப்படிப் பார்க்கும்போது சர்வ தேசமெங்கும் தற்காலக் கலைஞர்களும் எழுத்தாளர்களம் அனுபவித்துவரும் பிரசவவேதனைக்குங்கூட இப்போர்ப்பறையே அர்த்தம் கற்பிக்கிறது எனலாம். அமெரிக்கக் கனவை உடைக்க முயலும் நோமன் மெய்லர் (Norman Mailer) அடிக்கடி தான் எழுதப் போவதாகக் கூறும் பெரும் நாவலுக்கு அர்த்தம் கற்பிப்பதும் இதுவேதான். கொலின் வில்ஸன் (Colin wilson) எழுப்பிய "பிறத்தியான்" பிரச்சனைக்கு தீர்வுகாட்டுவதும் இதுவேதான். "பிறத்தியானைக் கடந்த கட்டம்" (Beyond the Outsider) எப்படி இருக்கும்? பிறத்தியான் உள் நுழைவதுதான் இனி வரும் புதுக்கட்டமாக இருக்கும். ஆனால் அவன் உள் நுழையும் போது அவனோடு வெளியே நின்ற, வெளியே விடுபட்டுச் சாட்சியாய் நின்ற, சத்திய ஞானசக்தியும் உள் நுழைந்து ஆட்சியை ஏற்று நடத்தும் புதுயுகம், சத்தியயுகம் பிறந்துவிடும். கிழக்கத்தைய சமயஞானம் வாழ்கையையும் சமூகத்தையும் துறக்கத்தூண்டிய மாயை என்று கேலி செய்தனர் விஞ்ஞானிகள். ஆனால் இன்று விஞ்ஞானமே மேற்கில் அதே தவறைச் செய்துவருகிறது. அமெரிக்கச் சமூக பொருளாதார அமைப்பை மாற்றியமைக்காது சந்திரனக்கப் போய்த்தான் என்ன பயன் என்று திருப்பிக் கேட்க தோன்றுகிறதல்லவா? அது விஞ்ஞான சமூகம் விடும் தவறு இன்று. நீகிரோக்களின் "சேரிகள்" இருக்கும்வரை சந்திர யாத்திரை பழைய காசி யாத்திரையாகத்தான் இருக்கும். சாதிப்பாகுபாட்டையும் சமூகத் தேக்கத்தையும் ஆதரிக்கம் சமய ஞானத்தைப்போலவே இன்றைய அமெரிக்க விஞ்ஞானமும் இருக்கிறது. அந்த விஞ்ஞான சமூகத்தை துறந்து வெளிவரும் புதுயுகத் துறவிகளாகவே பீட்னிக்ஸ், ஹ’ப்பீஸ் இருக்கின்றனர். திரும்பவும் சமயமே சமூகத்தை மட்டுமல்ல விஞ்ஞானத்தையுங்கூட ஏற்று நடத்தும் சத்தியயுகம் வந்துவிட்டது. அதற்குரிய போர்ப்பறை தான் இது. இதன் மெல்லிய குரல்களைத்தான் வில்லியம்பறோஸ், ஜக்கெரோவாக், அலன் கின்ஸ்பேக், மெய்லர் போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள் முதல் அலன் சிலிற்றோ, கொலின்வில்லன், ஜோன் ஓஸ்போன், பெக்கட், ஐயமெனஸ்கோ, ரொபட்கிரிலே, ஜேனே போன்ற பலதரப்பட்ட ஐரோப்பிய எழுத்தாளர்களுடாக சாத்தர் ரக இருப்புவாதிகள், மயகொவ்ஸ்கி, பஸ்ற்றர்னக், சொல்ஹென்ஸ்டைன் ஆகியோர்வரை இதுவரை பலர் அறிவிக்க முயன்றுவருகின்றனர். ஆனால் அவர்களிடம் எழும் குரல் தன்னை இன்னும் இனங்கண்டதாய் இல்லை. புதுயுக ஞான அலையின் அறிகுறிகள் மெல்லிய அடிமன உந்தல்களாகவே சர்வதேசக் கலை, இலக்கிய, தத்துவப் பரப்பெல்லாம் சிதறித்தெரிகின்றன. அந்த வகையில் பார்க்கும்போது "போர்ப்பறை" சர்வதேசக் கலை, இலக்கிய, தத்துவப் போக்குக்குமுரிய கன்னிக் கூவல்தான். இதன்மூலமே அவர்கள் எல்லாரும் தங்களை உணரத் தொடங்குகின்றன. இதுவரை அவர்களின் குரல் žரழிந்த (decadent) குரலாகவே தெரிந்தது. žரழிவு என்றும் ஆபாசம் என்றும் தீர்ப்பளிக்கும் அமைப்பு பிறக்கத் துடிக்கும் புதுயுகப் பேரறிவு நிலைக்கு ஏற்ற அமைப்புமல்ல; அதைத் தாங்கிக்கொள்ள கூடியதுமல்ல. இருக்கிற அமைப்பு பேரறிவின் இறக்கத்தை மூர்க்கத்தனமாக எதிர்ப்பது அதனால்தான். பேரறிவு அலை தன்னை அடிமன உந்தல்களாக வெளிக்காட்டும் ஆரம்பநிலையில் அந்த எதிர்ப்பை மூன்று விதமாகச் சந்திக்கலாம். இருக்கிற அமைப்புக்கும் தனக்கும் ஒத்துவராது என்று நினைத்து மயகொவ்ஸ்கி செய்ததுபோல் தன்னையே நசுக்கித் தற்கொலை செய்துகொள்ளலாம். அல்லது வேண்டுமென்றே இருக்கிற அமைப்புக்கு ஏற்காத விதத்தில் தன்னை ஆபாசமானதாகவும் அசிங்கமானதாகவும் žரழிந்ததாகவும் காட்டிக்கொள்ளலாம், அல்லது கொலின் வில்சனின் "பிறத்தியான்" (Outsider) மாதிரி விலகிவிடுபட்டு வெளியே நிற்கலாம். ஆனால் இன்மூன்று நிலைகளம் பிறக்கவிருக்கும் பேரறிவைச் சிற்றறிவானது அடிமன உந்தல்களாக, உணர்ந்த, அதோடு தன்னை இணைத்து அதன்மூலம் தன் சக்தியையும் தன் பொறுப்பையும் அறிந்து நடைமுறையிலுள்ள அமைப்புக்குள் தானே உன் நுழைந்து அதைக் கைப்பற்றித் தனக்கேற்ற முறையில் தீவிரமாக மாற்றியமைப்பதற்குரிய ஆரம்ப நிலைகள்தான். ஆமாம் எல்லாவற்றையும் சித்துக்குரிய, சித்தத்துக்குரிய விளையாட்டுகளாகவே காணவேண்டும். அதுவே சத்தியமுமாகும். தற்காலச் சர்வதேசக் கலை, இலக்கியம், அரசியல், சமூகப் பரப்பெங்கும் காணப்படும் துடிப்பெல்லாம் இருக்கிற அமைப்புக்குரிய அறிவுநிலை அல்லது நனவுநிலை பேரறிவாக அல்லது ஞானமாகப் பிறப்பதற்குரிய பிரசவவேதனைதான். அந்தப் பேரறிவான சத்தியத்தை சிற்றறிவு வெறும் அர்த்தமற்ற அடிமன உந்தல்களாகக் பண்ட நிலையையும் தாண்டி ஓரளவுக்குப் பூரணமாக உணரும் நிலை இன்று வந்துள்ளது. இனி அதற்காகப் போராடவும் வேண்டியிருக்கிறது. கலை, இலக்கியத்துறையில் அந்த உணர்வின் வெளிக்காட்டலையும் அது நடத்தவேண்டி சத்தியப் போராட்டத்தையுமே "பிரபஞ்ச யதார்த்தம்" அல்லது "ஆத்ம யதார்த்தம்" என்கிறேன் நான். இனிமேல் சிருஷ்டி இலக்கியமானது அரவிந்தரையும் ஆர்த்தர் கிளாக்கையும் டோஸ்டோயொவ்ஸ்கியையும் கோர்க்கியையும் இணைத்தும் அவர்களையும் கடந்து செல்லும் புதுயுக காப்பியங்களாகவே அமையும். காலம், இடம் கடந்த பிரபஞ்ச-ஆத்ம உணர்வு ஊருடுவி நிற்கும் காப்பியங்கள், கிராமம் முதல் பிரபஞ்சம் வரையும் அவற்றுக்கு அப்பாலும் செல்லும் ஆத்ம யதார்த்த உணர்வு செறிந்த காப்பியங்கள், சிறுகதைகள், கவிதைகள் எழமுடியாதென்றில்லை. ஆனால் அவற்றிலும் அதே காப்பியப் பண்பே காணப்படும்.

கலை இலக்கியத்தில் பிறக்கும் அதே பேரறிவின், சக்தியத்தின் எழுச்சி எல்லாத் துறைகளிலும் பரவுவதையே "சர்வோதயம்" குறிக்கிறது. எல்லாவற்றுக்குமுரிய எழுச்சி எல்லாவற்றுக்கும் சுயமாகவுள்ள சத்தியத்தின் உதயமாக இருக்கும்போதுதானே உண்மையான எழுச்சியாக இருக்க முடியும்? அதுதான் சர்வோதயமாகும்.

எல்லாவற்றினதும் எழுச்சி எல்லாவற்றிலும் ஏற்படும் எல்லாவற்றுக்கும் இயல்பாயுள்ள சத்தியத்தின் எழுச்சியாக இருப்பதே சர்வோதயமாகும். அதுதான் சர்வோதயத்துக்கு நாம் கொடுக்கும் அர்த்தம், அந்தவகையில் "சர்வோதயம்" என்பது சர்வமத முழுமையையும் அதன் பூரண எழுச்சியையும் விரும்பும் நமது இலட்சியத்துக்கு ஏற்ற சரியான பெயராக இருப்பதுடன் நமது இலட்சியத்தை ஒர் விடுபட்ட தனித்த போக்காகக் காட்டாமல் அதற்குரிய சரியான பின்னணியுடன் பொருத்திக் காட்டவும் உதவுகிறது. ஆனால் அதனால் ஏற்படும் தடையும் இல்லாமலில்லை. அடுத்த பரிணாமக் கட்டத்துக்குரிய தத்துவ வாசலில் நிற்கும் நாம் இதுவரை மனிதகுலம் கண்டறிந்த அத்தனை நல்லவற்றையும் நமக்குரிய சொத்துக்களாகவும் தவறுகளை நமக்கு எரியச் சரிக்கைகளாகவும் காணகிறோம். அதனால் நமக்கு விஞ்ஞானம், சமயம், அரசியல் என்ற பாகுபாடு கிடையாது. சத்தியத்துக்கு அந்தப் பாகுபாடு கிடையாது என்பதுடன் புதுப் பாய்ச்சலை ஆரம்பிக்கும் நமக்கு எல்லாத்துறைகளிலுமிருந்து பூரணமாகச் சத்தி திரட்டப்படுவது அவசியமாகவும் இருக்கிறது. அதனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தத்துவங்கள் எல்லாவற்றையும்விட முற்போக்கானதாகவும், எல்லாச் சமயங்களையும் இணைத்த சமயமாகவும் விஞ்ஞானத்தையும் வெல்லும் விஞ்ஞானமாகவும் சிந்தனைக்கேற்ற தீவிரமான செயல்திட்டமாகவும் நமது "சர்வோதயம்" இருக்க வேண்டும். அது அப்போதைக்கப்போது ஆழமாகக் கண்டு பிடிக்க முயலும் உண்மையின் தரிசனத்துக்கு ஏற்றவிதத்தில் தனது தத்துவக் கோட்பாட்டையும் செயல் திட்டத்தையும் சதா திருத்தி வளர்க்க வேண்டியதாயும் இருக்கிறது. அதனால் சர்வோதயம் ஓர் தத்துவமென்றால் அது தத்துவங்களைக் கடந்த தத்துவமாகவே இருக்க முடியும். திட்டவட்டமான நிரந்தர சிந்தனை அமைப்பையும் தேக்கத்தையும் அது ஆதரிக்காது. ஆனால் நடைமுறையில் சர்வோதயம் என்பது அந்தளவுக்கு அர்த்த விரிவைக் காட்டக் கூடியதாகப் பின்பற்றப் படுகிறதா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்லப்பட வேண்டும். நடைமுறையிலுள்ள 'சர்வோதயம்' என்ற பெயர் நமது இலட்சியத்தைச் žராக வெளிக்காட்டவிடாத தடையாக இருக்கிறது என்பதும் ஒருவகையில் உண்மைதான். நமது இயக்கத்தின் பெயரைக் கேட்டு முகஞ் சுளிக்கும் பலருக்க சர்வோதயம் என்பது பிற்போக்கான தேக்கமாகவேபடுகிறது. அந்தவகையான அர்த்தத்தைப் பரப்புவதற்கு காந்தியத்தையும் சர்வோதயத்தையும் பின்பற்றும் பலரின் வாழ்க்கை மிகப்புரட்சிகரமான வாழ்க்கை என்பதையும் சர்வோதயம் ஆதரிக்கும் சமயம் விஞ்ஞானத்தையும் வெல்லும் விஞ்ஞானம் என்பதையும் சர்வோதயத்தை இதுவரை அதரித்து வருபவர்களே இன்னும் பூரணமாக உணர்ந்தவர்களாய் இல்லை. அதனால் பிறரால் கூறப்பட்ட எதுவும் நாம் காணும் சர்வோதயத்தை விளக்கப்போதாது என்பதை நாம் சதா உணர்ந்தவர்களாய் இருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் காந்தியும், வினோபாவும் சென்ற நூற்றாண்டின் சோஷலிஸ இயக்கத்தின் முன்னோடிகளைப் போன்ற சர்வோதய முன்னோடிகளாகவே தெரிகின்றனர். றொபட் ஓவன், சென்சிமொன் போன்றோர், சர்வோதயத்துக் குரிய சத்தி லெனினம் ட்ரொட்ஸ்கியும் சத்திய மாசேங்கும் இனித்தான் வரவேண்டியிருக்கிறார்கள் என்பதே நமது நம்பிக்கையாகும்.

புதுயுக ஞான அலையின் உச்சமும் சிகரமும் இனித்தான் வரவேண்டியிருக்கிறது. காந்தியும் வினோபாவும் சமூக, பொருளாதார, அரசியல், சமயத்துறையில் புதுயுக ஞான கலை, தத்துவ, இலக்கியத் துறைகளில் நாம் குறிப்பிட்ட கன்னிக் கூவலை ஒத்த கூவல். முற்றிய வெற்றிக் கூவல் இனித்தான் வரவேண்டும். அது இனி எங்கு எழும் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஆனால் எங்கு சத்திய எழுச்சியை ஏற்கும் வகையில் முழு நாடளவிலும் முழு நாட்டு மக்கள் அளவிலும் பூரண துறவும் தியாகமும், அவை எழுப்பும் செயலும் சிந்தனையும் எழுகின்றனவோ அங்கு சர்வோதயம் தனது உச்ச வலுவையும் ஞான விரிவையும் காட்டவேபோகிறது. அங்கு புதுயுக ஞான அலையின் முழுமை, அல்லது புதுயுக அவதாரம், பிறக்கவே போகிறது. அதுமட்டும் நிச்சயம், ஆனால் அதைத் தனிப்பட்டவர்களின் செயலாகக் கருதிவிடக்கூடாது. எங்கும் எழுவிருக்கும் பேரொளியே இதுவரை எல்லாவற்றையும் செய்வித்துவருகிறது. அதுவே இருக்கிற இயற்கை அமைப்பில், இருக்கிற உடல்-உள்ள அமைப்பில், இருக்கிற சர்வதேச சமூக - பொருளாதார - அரசியல் அமைப்பில் தன்னை வெளிப்படையாகப் பிறப்பிக்கப் போகிறது. அந்தந் பேரறிவான சத்தியம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் எங்கும் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் செய்விக்கிறது. அந்த ஒருமையை எல்லாரும் உணர்வதே சர்வோதய எழுச்சியின் முதல் பண்பாகும்.

இறுதியாக இதில் அடங்கியுள்ள கதைகள், கட்டுரைகளைப்பற்றிச் சிறிது குறிப்பிடவேண்டும். இதில் அடங்கியுள்ள கதைகள் இதில் அடங்கியுள்ள கட்டுரைகளுக்கு முன்பே எழுதப்பட்டவை. "புதுயுகம் பிறக்கிறது" கதைகளின் தொடர்ச்சியாகவே இவற்றைப் பார்க்கவேண்டும். மூன்று வருடங்களுக்கு முன் இன்னோர் சிறுகதைத் தொகுதியை வெளியிட முயன்றேன். முடியவில்லை. அதிலுள்ள மூன்று கதைகள் இதில் இடம்பெறுகின்றன. மிகுதிக் கதைகள் அப்படியே இருக்கின்றன, இவற்றைத்தவிர எழுதிமுடித்து இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் "ஒரு தனி வீடு", "யாத்திரை", "கல்கி புராணம்" ஆகிய நாவல்களும் பாதியிலேயே நின்றுவிட்ட "ஒளியை நோக்கி"நாவலும் "குருþக்ஷத்திரம்" "எதிரிகள்" "ஓமாக்கினி" என்ற வேறு புது முயற்சிகளும் இருக்கின்றன. எல்லாம் "ஒளியை நோக்கியே" "சுஸ”ல்" முயற்சிகள்தான். இவற்றின் பயனாகவும் அடித்தளம்வரை தேடலை நடத்துவதற்கு எனக்குக் கிடைத்துள்ள வழிகாட்டியின் பலனாகவும் எனக்கு ஏற்பட்டுள்ள தெளிவே போர்ப்பறைக் கட்டுரைகளாக இப்போ வெளிவருகின்றன. அதனால் நான் கூறும் பிரபஞ்ச யதார்த்தத்தின் புதிய வார்ப்புகளுக்குரிய மாதிரிகளை இக் கதைகளில் காணமுயலக்கூடாது. புதிய வார்ப்புகளைப் பற்றிய பிரக்ஞையைப் பூரணமாக என்னிடம் எழுப்ப உதவிய தேடல் சிருஷ்டிகளே இவையெல்லாம். புதிய பிரக்ஞையை ஓரளவுக்கு பூரணப்படுத்த உதவியது ஏறக்குறைய நான்கு வருடங்களக்கு முன்பு நான் எழுதி முடித்துள்ள "கல்கி புராணம்" என்ற நாவலேதான். எனவே இதையடுத்து அதையே வெளியிட விரும்புகிறேன். இருப்பினும் கதைகள் காட்டியதைக் கட்டுரைகள் தெளிவுபடுத்தியது போல் கட்டுரைகள் கண்டுபிடித்தவற்றின் பூரண உதாரணங்களை இனிதான் படைக்கவேண்டும். ஆர்த்தர், சி.கிளாக்கின் "2001, அண்டவெளி ஒடிசி" யைப் படிக்கும்போது அதன் அவசியத்தை இப்போ அதிகமாக உணர்கிறேன். வரவர விஞ்ஞானமானது சமயத்திலிருந்து தன் சத்தியைப் பெறுகிறது. காலங் கடத்தாது "கல்கி புராணத்தை" வெளியிடவேண்டும் என்ற உணர்வோடு கைவிட்ட "ஓமாக்கினி" பிரபஞ்ச ஆத்ம யதார்த்தக் காவியத்தையும் திரும்பவும் எடுத்து எழுதி முடித்துவிட வேண்டுமென்ற ஆவேசமும் எழுகிறது. அத்துடன் "நாடும் வீடும்" என்ற பெயரில் பாதி திருத்தப்பட்டுக் கிடக்கும் "ஒது தனி வீடு" ம் தன்னை நினைவூட்டிக் கொள்கிறது. 56க்குப்பின் இலங்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை ஓரளவுக்கு யதார்த்த பூர்வமாகத் தொட முயன்ற முதல் நாவல் அதுதான் பின்னணியின் ஆழம் "வீடு" வரை போவது நல்லது என்று நினைக்கிறேன். ஓரளவுக்கு அதில் தீர்க்கதரிசனம் இருப்பதாகவும் ஓர் எண்ணம். காரணம் என்னைப் பொறுத்தவரையில் 56க்குப்பின் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் வெறும் சமூக, பொருளாதார, அரசியல் கலாசார மலர்ச்சியையும் சிக்கல்களையும் போராட்டங்களையும் மட்டும் எழுப்பும் நிகழ்ச்சிகளாகத் தெரியவில்லை. அவையே சர்வதேசங்களுக்கும் வழிகாட்டக் கூடியவகையில் இலங்கை மிக விரைவில் நடத்தக் கூடியதாய் இருக்கும் அடித்தளம்வரை தொடும் ஆத்மீகப் போராட்டத்தினதும் அடுத்த கட்டப் பரிணாம இயக்கத்தின் தும் அறிகுறிகளாகவும் எனக்குத் தெரிகின்றன. அதன் எல்லைகள் காட்டும் அளவுக்கும் "நாடும் வீடும்" திருத்தப்பட்டு எழுதப்பட்டால்? அப்படி ஒரு துடிப்பு. ஆனால் இவற்றையெல்லாம் இலக்கியமாக எழுதுவதா அல்லது எழுதுவதைப் பிறரிடம் அல்லது எதிர்காலத்திடம் ஒப்படைத்து விட்டு (அல்லது எழுதிக் கொண்டே) இயக்கத்தில் ஈடுபடுவதா என்ற ஓர் சந்தேகமும் இல்லாமலில்லை.

அந்தச் சந்தேகம் வளர வளர என் சுயரூபமும் அதிமாகத் தெரிவதுபோல் இருக்கிறது. என்னையே நான் கண்டு பிடிப்பது போன்ற ஓர் உணர்வு. எழுதுவது மட்டும் வரவர என் தொழிலாக இப்போ தெரியவில்லை. ஒரு காலத்தில் எழுத்தாளனாக இருப்பதற்காக எல்லாவற்றையும் துறந்துவிடக்கூடத் தயாராய் இருந்ததுமுண்டு. உண்மையான "பிறஸ்ற்றேஷன்" அல்லது விரக்தி எனக்கு வருமென்றால் அது இலக்கியத்தைத் துறந்தால்தான் வரும் என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் இலக்கியம் என்னில் வளர்த்த துறவு இலக்கியத்தையே துறக்குமளவுக்கும் வந்துவிடும் என்பதை இப்போ நான் உணர்கிறேன். சாதாரண மனிதன் எதை எதைப் பெரிதாக நினைத்து ஈடுபடுகிறானோ அவற்றிலெல்லாம் ஈடுபடாது விடுபட்டு வெளியே நின்று வேடிக்கை பார்த்துச் சிரிக்கும் "பிறத்தியான்" போக்கை என்னில் இலக்கியப்பற்று வளர்த்திருக்கிறது. இலக்கியப்பற்றால் அது ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது. ஏற்கனவே இருந்த ஓர் சுபாவத்தை இலக்கியப் பற்று தீவிரமாக வளர்த்திருக்கிறது என்பதே சரி. ஆனால் அதே இலக்கியப்பற்றையும் துறக்குமளவுக்கு அது வளர்த்த துறவு வளர்ந்திருக்கிறது இன்று. அது மட்டுமல்ல. இப்போ முந்திய விடுபட்ட உணர்வு விடுபடாமலேயே எல்லாத் துறைகளுள்ளும் விழுந்து "தலைமுழுகி" விடும் "ஈடுபாடான விடுபாடும்" வந்திருப்பதாகவும் உணர்கிறேன். சத்தியத்தின் எழுச்சிக்காக ஒருவன் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துச் செயல்படும்போது (துறவு அதற்குரிய தயாரிப்புத்தான்) உள்ளிருந்து எழும் சத்தியத்தின் சக்தியை ஒரு கோணத்துக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது என்பதையே இப்போ அதிகமாக உணர்ந்துவருகிறேன். அத்துடன் ஏற்கனவே கலைஞனாகவும் எழுத்தாளனாகவும் தன்னைக் கருதிய ஒருத்தன் சத்தியத்தனத்தைத் தொடமுயலும்போது சத்தியமே எல்லாவற்றுக்கும் அடித்தனமாய் இருப்பதால், சக்தியும், திறமையும் சகல பக்கமும் விரிந்து பரவுவதை உணர்வதோடு அவை எல்லாமே கலையாக இருப்பதையும் உணர்வான். அப்படி உணர்வதால் அவை எல்லாவற்றிலும் சமவிருப்பத்தோடும் பற்றற்ற விடுபாட்டோடும் அவள் ஈடுபடவும் தயாராய் இருப்பான். வரவர அதை அதிகமாக உணரத் தொடங்கியுள்ள எனக்கு என் எதிர்கால முயற்சி எந்தத் திசையில் இருக்கும் என்று சொல்லமுடியாதிருக்கிறது. எழுத்தை பிற வேலைகளிலிருந்தும் பிரிந்து விடுபட்டிருப்பது எனக்குப் பிடிக்காத ஒன்றாக இப்போ மாறிவருகிறது. அந்த வகை எழுத்தாளர்களையும் அதிகம் விரும்புவதாய் இப்போ இல்லை. அத்துடன் பேரறிவின் உந்தலை உணரத் தொடங்கியவுடன் தன்னுள் அதன் பூரண இறக்கத்தை வேண்டி நிற்கும் இந்தச் சிற்றறிவு தன்னையே துறக்கத் தயாராய் இருக்கிறதே ஒழிய அந்த இறக்கத்துக்கு பின்பு வரக்கூடிய நிலையைப்பற்றித் தீர்மானிக்கத் தயாராய் இல்லை. அந்தத் தீர்மானங்களைப் பேரறிவின் பொறுப்பிலேயே அது விட்டுவிடுகின்றது.

இம்முயற்சிகூட அதனிடமே ஒப்படைக்கப்படுகிறது. இறங்கி வரும் புதுயுக அவதாரமான அப்பேரறிவுக்கே இது சமர்ப்பணம். அகிலமெங்கும் அதன் வரவுக்காய்த் தயார்ப்படுத்தும் ஓர் பேரியக்கத்துக்கு ஒவ்வொரு மனிதனையும், குறிப்பாக ஒவ்வொரு படைப்பாளியையும் ஒத்துழைக்குமாறும் தன்னையே அர்பணிக்குமாறம் அதன் பெயரில் இது அழைக்கிறது.


மு. தளையசிங்கம்.



பொருளடக்கம்

பதிப்புரை - 4
முன்னுரை (ஓர் அடி) 8

புதுக்குரல்கள் (கதைகள்)

1. உள்ளும் வெளியும் 35
2. வெள்ளையானை 71
3. புதுக்குரல்கள் 82

புதிய வார்ப்புகள் (கட்டுரைகள்)

1. படைப்பாளிகள் இயக்கம் 104
2. புதிய வார்ப்புகள் 122
3. சர்வோதயம் புதுயுகப் பெருந்தத்துவம் 160
4. சமயமும் சத்தியமும் 181

புதுத்திசைகள் (கவிதைகள், கட்டுரைகள்)

1. சுயாட்சி 195
2. விஞ்ஞானமும் சமயஞானமும் 209
3. இரவுகள் 216
4. போர்ப்பறை... 220
5. கலை - ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு 230
6. நான் - அதன் பரிமாணங்கள் 278


புதுக்குரல்கள் (கதைகள்)

இன்று தேவர்களை அழைக்கிறோம்.

இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருதயுகத்தை நாட்டும் பொருட்டாக.

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராட்சசக் கூட்டங்களையழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக.

இன்று தேவர்களை அழைக்கிறோம், எம்மை ரிஷ’களாகக் செய்து தரும் பொருட்டு எமது குற்றங்களையெல்லாம் நீக்கி கோணல்களை நிமிர்த்தி எமக்கு அமர இன்பத்தைத் தரும் பொருட்டு.

- பாரதியார்.

அவதாரத்தின் குரல் ஒர் புதுச்சமய உணர்வைப் பிறப்பிப்பதில்லை.

கீழ்த்தரமானவையாகவும் அசிங்கமானவையாகவும் தெரிபவற்றின் பொது இதயக்குரலே ஓர் புதுச்சமய உணர்வைப் பிறப்பிக்கிறது. வெறுத்து ஒதுக்கத் தூண்டும் பலாத்காரமும் ஆர்ப்பாட்டங்களும் தன்னை இன்னும் பூரணமாக உணராத ஓர் சமய உந்தலின் மெல்லிய பரிசோதனைக் குரலேதான்.

அந்த வகையில் அந்தப் புதுச் சமய உணர்வு பலரின் கற்பனைகளாலும் மனச்சாட்சியாலும் விரிந்து வளர்க்கப்பட்ட பின்பே, அதையே ஓர் உருவமாகக்கொண்ட ஓருவன் எழுகிறான். அவனே தலைவனாகவும் குருவாகவும் எல்லாராலும் போற்றப்படுகிறான். காரணம் தலைவனாகவும் குருவாகவும் எல்லாராலும் போற்றப்படுகிறான். காரணம் அவர்கள் தாழ்ந்த வாழ்க்கைக்குரிய விளக்கத்தையும் வியாக்கியானத்தையும் அவனே அளிக்கிறான். அவர்கள் பேசத் துடித்த வார்த்தைகளை அவனே பேசுகிறான். அவனே அலையின் சிகரமாவான். ஆனால் அவன் அலையின் சிகரமென்றால், அடுத்தவையெல்லாம் அந்தச் சிகரத்தை எழுப்பிய அலையேதான்.

- சகோதரி நிவேதிதா (அன்னை காளி)


உள்ளும் வெளியும்

அமைதிவழியும் சரயு நதிக்கரையில் அந்த ஆசிரிமம் இருந்தது. சாப விமோசனத்துக்குப் பின்னர் மிதிலை எல்லையை விட்டுவந்த கௌதமரும் அகலிகையும் அங்குதான் தங்கியிருந்தனர். சந்தடியற்ற சரயு நதிச்சூழல் அவர்களின் ஏகாந்த வாழ்வுக்கு மிகப் பொருத்தமான இடந்தான். ஆசிரமத்துக்குப் பின்னால் ஒடிய சரயுவின் சலசலப்பும் சூலலெங்கும் நின்ற ஆற்றங்கரை மரங்களின் சரசரப்பும் மௌனத்தின் குரல்களாகவே இருந்தன. கௌதமர் அதைத் தெரிந்துதான் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் இடத்திலேயோ எல்லாம் இருந்தன? அகத்திலே சூறாவளி வீசிக்கொண்டிருந்த அகலிகைக்கு இடத்தின் அமைதி தெரியவில்லை. எல்லாவற்றையும் அவள் மறுக்க முயன்று கொண்டிருந்தாள்; அவளைப் பொறுத்தவரையில் சாபவிமோசனத்துக்கப் பின்னர்தான் "வீழ்ச்சி" ஆரம்பித்திருந்தது. அதனால் எதிர்பார்த்ததுக்கு மாறாக எல்லாமே அவளுக்குப் பெரிதாகத்தான் தெரிந்தன. அமைதியின் உருவமாய் ஆசிரமத்துக்குப் பின்னால் ஓடிய சரயுவின் துடிப்புக் கூட அவளுக்குப் பேரிரைச்சலாகவே கேட்டது. ஆசிரமத்தைச் சூழவுள்ள மரங்களின் சரசரப்பும் ஆயிரம் பேர்கள் உள்ளே நுழையும் பயங்கரப் காலடி ஓசைகளாகவே அவளுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. ஆமாம், ஆயிரங் கண்ணானில் அவளுக்கிருந்த பயந்தான் ஆயிரம் காதுகளின் கூர்மையை அவளுக்குக் கொடுத்துவிட்டிருந்தது.

அன்றுமாலை அகலிகை தனியாகவே ஆசிரமத்தில் இருந்தாள். வழக்கம்போல் கௌதமர் அந்த நேரத்தில் வெளியே போய்விட்டிருந்தார். ஆசிரமம் இருந்தாலும், தியானம் செய்வதற்கென்று சரயு நதியோரம் தனியாகவே வேறு இடம் இருந்தது அவருக்கு. இடவித்தியாசங்களைப் பற்றி அவர் இப்போ கவலைப்படுபவரல்ல. தியானம் செய்ய வேண்டுமென்ற நிலையிலுமில்லை. இருந்தாலும் அகலிகைக்காக வேண்டி இன்னும் அந்தச் சம்பிரதாயங்களை அவர் அனுட்டித்தே வந்தார்.

தன்னந்தனியாய் அகலிகை ஆசிரம வாயிலில் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே அடங்கியிருப்பது பாதுகாப்பானதுதான். ஆனால் அவளைப் பொறுத்தவரை€யில் பயமானது. எனவே வெளி வாயிலிலேயே அவள் உட்கார்ந்திருந்தாள். ஆபத்து வந்தால் ஓடிவிடலாம் என்ற கற்பனை. ஆனால் அதே ஆபத்தை எதிர்பார்த்துக் கார்த்திருப்பதுபோலவும் அவனின் நிலை தெரியாமலில்லை.

மேற்குவானில் செவ்வரி பூத்துத் தேய்த்து கொண்டிருந்தவேளை. மரங்களுக்கிடையே வீழ்ந்துவந்து ஆசிரம வாயிலுக்குள்ளும் கோடு கிழித்த மாலை மஞ்சள் வெய்யில் மறைந்துவிட்டிருந்தது. மெல்ல மெல்ல ஒளியும் நிழலும் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில் ஆசிரம முற்றத்தின் வலது பக்கமாகத் திடீரென்று எழுந்த ஓர் அசாதரணமான அசைவு கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள் அகலிகை. அந்தப் பக்கமாக யாரும் வருவதில்லை. வராத பக்கத்தால் ய்‘ர் வருகிறார்?

நெஞ்சு படபடக்க எழுந்து நின்ற அகலிகைக்குப் பயமாகவும் இருந்தது. அடுத்தகணம் ஆச்சரியமாகவும் இருந்தது. அவள் கண்ட காட்சி அவள் அதுவரை கண்டறியாத காட்சி. ஆசிரமத்தின் வலது மூலைப்பக்கமிருந்து முற்றத்தை நோக்கி இரண்டு பாம்புகள் இடம் வலமாக ஒன்றையொன்று துரத்திப் பிணைந்தவாறு வளைந்து நழுவிக்கொண்டிருந்தன. பார்ப்பதற்குப் பயமாகவும் இருந்தது, அருவருப்பாகவும் இருந்தது, அதேசமயம்....

ச்சிக் மாயை!

முகத்தை அருவருப்போடு கோணலாக்கியவாறு அகலிகை வெடுக்கெனத் தனக்குள்ளேயே கூறிக்கொண்டாள். காறித்துப்பாத குறை.

மாயை! தொடர்ந்து அதே முணுமுணுப்பு. மாயை, மாயை, ஆனால் ஆசிரம வாயிலைவிட்டு அவளின் கால்கள் மட்டும் நகரவில்லை. கண்களும் முற்றத்துக் காட்சியையே வைத்ததில்லை வாங்காது பார்த்துக்கொண்டிருந்தன.

நழுவிவந்த பாம்புகள், வெள்ளைப்பட்டாய் விரிந்து கிடந்த ஆசிரமத்து முற்றத்து மணல்வெளியில் தொடர்ந்து பிணைந்து பிணைந்து வழுவிக்கொண்டிருந்தன. வழுவிக் தழுவி, தழுவி வழுவி, வழுவி நழுவி, நழுவி வழுவி அவை பிணைந்து கொண்டிருந்தன.

மாயை!

வாயும் மனமும் அகலிகைக்குப் போதித்தன. ஆனால் போதனைக்கேற்ப அவளால் நடந்துகொள்ள முடியவில்லை. அவள் கண்ட அந்தக் காட்சி அவளின் சுயமனோவசியத்தையும் வென்றுவிட்டது.

ஓடிப் பிணையும் பாம்புகள் அழுத்திச் செல்லும் புணர்ச்சித் தடங்கள், கூட்டிவிட்ட முற்றத்து மணல் விரிப்பில் வளைந்து வளைந்து சளிந்து தெரிந்தன. ஓடி ஏறும்போது ஒன்றையொன்று எவ்வளவு தூரம் அழுத்திக்கொள்கின்றன என்பதற்குரிய அளவுகளாய் அந்தத் தடத்தின் சளிந்த வளைவுகள் தெரிந்தன. அவளை அறியாமலேயே அகலிகையின் உடலில் முதுகுத்தண்டு நீட்டுக்கு ஏதோ ஒன்று சளித்து நெளிவது போன்ற உணர்ச்சி.

அகலிகை அதைக் கிள்ளி எறிந்துவிட முயன்றான்.

மாயை!

ஆனால் அதற்காக அந்த ஓட்டம் நின்றுவிடவில்லை.

சளிந்த தடங்கள் இன்னும் சளியச், சளிய அவை ஒன்றின் மீது ஒன்று உராய்ந்தவாறே ஏறி ஏறி நழுவிக் கொண்டிருந்தன. அந்த நழுவலோடு சேர்ந்து மெல்ல மெல்ல மாயை என்ற முணுமுணுப்பும் அகலிகையின் வாயிலே கரைந்து நழுவத் தொடங்கிற்று. அந்த முணுமுணுப்புக்குப் பதிலாக முதல்முதலாக அப்படி ஒரு காட்சியைக் காண்கிறோம் என்ற ஆச்சர்யம் நிறைந்த ஆவல் ஒன்று பெறுகத்தொங்கிற்று. அதில் எது சாரை? சளியவைத்தவாறு ஓடி ஓடி மேலே தழுவி ஏறவதா மூக்கன்?

மேலே ஏறியது வழுவிக் சறுக்கிவிட கீழே சளிந்தது முன்னால் நழுவிற்று. நழுவியதைத் தொடர்ந்து சறுக்கி விழுந்தது ஓடித் தழுவி மேலே ஏறிற்று. கீழே கிடந்தது கீழே சளிந்து நழுவ, மேலே கிடந்தது மேலே சளிந்தவாறு நழுவ மண்ணும் சளிந்தது. மற்றதும் சளிந்தது. மண்ணில் நழுவியதன்மேல் மற்றது நழுவ, இரண்டும் சதா நழுவிக்கொண்டுதான் இருந்தன. படமெடுத்துப் படமெடுத்து நழுவிக்கொண்டிருந்தன. அந்த நழுவலிலேதான் தழுவல், தழுவலிலேதான் நழுவல்.

அகலிகை அப்படியே அசையாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். முதுகுத்தண்டில் தொடர்ந்து அதே விறுவிறுப்பு.

பிணைந்த பாம்புகள் இரண்டும் பிணைந்தவாறே மெல்ல மெல்ல முற்றத்தையும் கடந்து அப்பால் போய் தூரவுள்ள மரங்களுக்குள்ளும் மறையத்தொடங்கின. தழுவி நழுவிப் பிணைந்தவாறே மறைந்தும் போயின.

அகலிகை இன்னும் பார்த்துக்கொண்டே நின்றாள். மறைந்த பின்பும் இன்னும் அவை அப்படியே முன்னலுள்ள முற்றத்தில் பிணைந்து கொண்டிருப்பன போலவே தெரிந்தது அவளுக்கு. சளிந்து சளிந்து வளைந்த தடங்கள், வளைந்து வளைந்து சளிந்த தடங்கள், பிணைந்து பிணைந்து புணர்ந்த தடங்கள்......

அகலிகை திரும்பவும் தன்னைச் சுதாரித்துக்கொண்ட போது மாயை என்று வாயும் மனமும் திரும்பவும் முணுமுணுக்கத்தொடங்கின. ஆனால், அவள் உடல் ஏனோ அதை இப்போ நம்பத் தயாராய் இல்லை. மாயைதான் மாயைதான். ஆனால்...ஆனால்...என்று ஒப்புக்கொள்வதும் ஒப்புக்கொள்ளாததுமாய் அது இப்போ தானே முற்றத்தில் தன்னந்தனியாய் நழுவித் தழுவ முயன்றுகொண்டிருந்தது.

அகலிகை தன் உடலை இப்போ தானே தடவிட்டுக்கொண்டாள். தனிமையில் இரகசிய மறைவில் தன்னையே ஒருக்கால் தனியாக ஆராய விரும்பினாள். வாயிலைவிட்டு உள்ளே நழுவின கால்கள். மனமும் உடலும் ஒத்து நழுவின.

சாபம் தீர்ந்த நாள்முதல் அகலிகை அந்த ஒன்றைத்தான் ஒப்புக்கொள்ள மறுத்துவந்தாள். கலவியல் இச்சை. கல்லான காலத்தோடு அதே இச்சையும் தீர்ந்துவிட்டது என்பது அவளுடைய கற்பனை. இனி இந்திரனுக்கும் இந்திரனானவன் இறங்கிவந்தால்கூட அந்த எண்ணம் எந்தப் பிறப்பிலும் ஏற்படப் போவதில்லை என்பது அவளுடைய எண்ணம். எண்ணம் என்பதைவிட அதை அவளின் நடிப்பு என்று சொல்வதுதான் சரி. ஆனால் அதை ஒரு நடிப்பாகக் கருதாமல், தான் அப்படி நடித்தாள் என்பதையே மறந்து அதையே தன் சுபாவமாக, தன் இயற்கையான குணமாக மாற்ற முயன்றாள் அவள். கலவியல் என்ற ஒன்று இருப்பதாகவே அவள் நினைக்க விரும்பவில்லை. கல்லாகியதற்குரிய காரணத்தையும் கல்லாகிக் கிடந்த காலத்தையும் மறப்பதற்கு, தன்னிடமிருந்தே மறைப்பதற்கு அவள் கையாண்ட முறை அது. முன்பு கல்லாகியவள் இப்போ குழந்தையாக மாற முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அது அத்தனை இலகுவில் முடியக்கூடிய காரணமா?

எதிலிருந்து அவள் தப்பமுயன்றாளோ அது சதா அவளுக்கு முன்னாலேயே நின்றுகொண்டிருந்தது. விஸ்வாமித்திரரும் இராம இலக்குவரும் அவளைக் கௌதமரோடு விட்டுச்சென்ற நாள் தொட்டு அவள் சதா அதைத்தான் கௌதமரின் உருவில் சந்தித்துக்கொண்டிருந்தாள். கௌதமரின் தோற்றம், குரல், அசைவு எல்லாம் பழைய வீழ்ச்சியைத்தான் அவளுக்கு ஞாபகமூட்டின. ஞாபகம் என்பது அவளைப் பொறுத்தவரையில் குற்றவுணர்வுதான்