கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். | ||
மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை | ||
புதுமெய்க் கவிதைகள் | ||
தா. இராமலிங்கம். |
புதுமெய்க் கவிதைகள் தா. இராமலிங்கம். -------------------------------------------- காணிக்கை என் ஆங்கிலக் கல்விக்கு அடிகோலி வழிவகுத்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியர் பி.ரி. சின்னத்துரை B.A. அவர்கட்கு -------------------------------------------------- பொருளடக்கம் பக்கம் ஆய்வுரை நான் 1 ஊற்றுமறை நோக்கி 2 காமம் 2 என்று மறைந்திடுமோ? 4 நிலையாமை 4 எவ்விதம் வந்தன? 5 ஆசைக்குச் சாதியில்லை 6 பெருஞ் செல்வம் 7 மாணிக்கம் 7 இனி ஏது? 8 மனம் வருகுதோ? 9 கிழியட்டும் முக்காடு 11 எள்ளிச் சிரிக்கிறது 11 ஏதும் தெரிந்தில 12 இளைத்துவிட்ட ஆத்திரம் 12 தேன் 13 வேண்டாம் பூட்டு 13 தலைப்பாரம் 14 முற்றிப் பழுத்திடுவேன் 14 கைக்குட்டை 14 அவர் 15 இன்பம் தெரிகிறது 15 அடை கிடக்கு 16 பயம் 16 பருவம் 17 தொடுவானம் 18 ஏன் சுணங்கிறீர்? 19 கழுவு! தெரியும்! 20 முதல் பெருப்பீர் 20 தலை குனிந்தேன் 21 வழி தெரியுது 21 அது முறிந்து போயிற்று 22 வெறும் பூச்சு 23 சாயலை என்செய! 23 கரைகாண முடியாத கடல் இல்லை 24 இன்பச் சுரங்கம் 24 பறக்க வழியுண்டோ? 25 துயிலுகையில் பயங்கரங்கள் 25 --------------------------------------------------- ஆய்வுரை திரு. தா. இராமலிங்கம் அவர்களின் புதுமெய்க் கவிதைகள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது படைப்புகள் இன்று நம் மொழியில் வெளியாகும் சராசரிக் கவிதைகளினின்றும் வேறுபட்டு நிற்கின்றன. அவரது ஒவ்வொரு பாட்டு ம ஒவ்வொரு யன்னவாக இருக்கிறது ஒவ்வொரு யன்னலூடும் ஒவ்வோர் உலகு தெரிகிறது. ஒரே உலகின் பல்வேறு கூறுகளே வெவ்வேறு கோணங்களில் தெரிகின்றன. திரு. இராமலிங்கம் காட்டும் காட்சிகள். நோக்கப்படும் கோணங்கள் அசாதாரணமானவை. அவ்வாறிருப்பதுதான் இவ்வெறுத்துக்களிற் பொதுளிநிற்கும் வீரியம் எனலாம். இவ்வெபத்துக்களின் பிறிதொரு முக்கியமான பண்பு இவற்றுக்குக் கருத்தும் நோக்கமும் இருப்பதாகும். கவிதைக்குக் கருத்தும் நோக்கமும் வேண்டும் என்பதைச் சொல்லிக்காட்டவா வேண்டும் என்று சிலர் வியப்படையலாம். எழுத்து என்றாலே அதற்குக் கருத்தும் இருந்துதானே ஆகவேண்டும் என்ற வினாவும் எழலாம். ஆனால் இன்றைக்குப் புதுக்கவிதை பரிசோதனை செய்கிறோம் என்று கிளம்பியிருக்கும் பலரின் படையல்களை ஊற்றிப்படிக்கும்போது அவர்களது குறிக்þ‘ளின் உறுதிப்பாட்டைப்பற்றி ஐயம் தோன்றுகிறது. என்ன எழுதுகிறோம் என்ற தெளிவு இவர்களிடம் உண்டோ இல்லையோ என்று சமுசயம் உண்டாகிறது. அதனால் எழுத்துக்குக் கருத்தும் நோக்கமும் உண்டு என்பதை வெளிப்படையாகச் சொல்லிக்காட்ட வேண்டிய விசித்திரமான நிலைமை உண்டாகியிருக்கிறது. மேற்படி பரிசோதனை காரர்களிடம் இவ்வாறான குழப்பம் உள்ளமைக்குப் பிறமொழிக் கவிதைப் பரிசயமும் ஒரு காரணமாகலாம். தாய்மொழியல்லாத அயல்மொழிக் கவிதைகளைப் படித்து அவற்றின் பரிபூரணமான கருத்துச் செழுமையையோ பொருண்மையையோ கிரகித்துக்கொள்வது மிகவும் கடினமானதொரு சாதனையாகும். வாழ்ச்சூழல், பண்பாட்டுப் பின்னணி, மரவு-இவற்றிலுள்ள வேறுபாடுகள் மேற்படி சாதனையை மேலும் கடினமாக்கும் அம்சங்கள். சாதாரண கவிதைகளைப் பொறுத்தவரையிற்கூட மேற்படி கூற்று உண்மையாய் இருக்க, எளிமை குறைந்து சிக்கல் மல்கிவிட்டதொரு நவீன வாழ்வின் பெறுபேறாகக் கிடைத்த பிறமொழி நவீன கவிதைகளை விளங்கிக்கொள்வது நம்மவர்களுக்கு மேலும் இடர்மிகுந்த ஒரு வேலையாக ஆகிவிட்டதில் வியப்பில்லை. எனினும் நமது இந்த விளக்கக் குறைவுக்குக் காலாக உள்ள உண்மையான ஏதுக்களை அறியாது. விளக்கமின்மை அல்லது தெளிவின்மை என்பது நவீன கவிதைகளின் ஒரு பண்பு என்று பிழைபட விளங்கிக்கொண்டு அதே மலைவுகளையும், மயக்கங்களையும் தமிழ் எழுத்துக்களிலும் இவர்கள் கொணர முயலும்போதுதான் இரங்கத்தக்க விளைவுகள் பல ஏற்படுகின்றன. 'நாம் என்னவும் எழுதலாம். யாராவது விமரிசகர் கொடுக்காமலா விடப்போகிறார்?' என்ற மனப்பான்மையும் சிலரிடம் முளைகொண்டு விடுமானால், கவிஞன் நொடிஞனாக மாறவேண்டியதுதான். கவிஞன் நொடி சொல்ல, திறனாய்வாளன் அதை அவிழ்த்துக் கொண்டிருப்பான் போலும்! 'புதுமெய்க் கவிதைகளில்' மேற்சொன்ன நொடிப்பான்மை இல்லை என்பது ஆறுதல் தரும் ஒரு செய்தியாகும். கருத்துக்களே இவ்வெழுத்துக்களின் உயிர்கள். அவ்வுயிர்களுக்கு ஏற்ற உடல்களைக் கண்டுகொள்ளும் வேலையினையே படைப்பாளியின் கற்பனை செய்கிறது. "..........கவிஞனின் சுழலும் மயல்விழி சொர்க்கம் துழாவி மண்ணிலம் வரைக்கும் வரும். அவன் கற்பனை அறியாப்பொருள் உருச்சுவடு காணவும் கவிஞனின் பேனா கனஉடல் கொடுத்துக் காற்று நிகர்த்த இம்மைகள் தமையும் ஊரும் பேரும் உடையனவாக்குமே" என்று ஷேக்ஸ்பியர் பாடுகிறான். சூக்குமமான கருத்துகளுக்கும் கனவுடல் கொடுத்து உள்ளூரிலே குடியிருத்திப் பேர்சூட்டும் இந்த வேலையின்போது, உணர்ச்சியும் புத்தியும் ஒருங்கிசைந்து செயலாற்றிருப்பது 'புதுமெய்க் கவிதைகளைப்' படிப்போருக்குப் புலனாகிறது. "கையால் இறாஞ்சிப் பொத்திக் கொண்டு ஓட்டம் எடுத்தன். விரல் ஊடுகளைப் பீறிக்கொண்டு ஒளி எறிக்குது....." ".....அவன் குளிந்து காமத் திரியினிலே தீக்குச்சி தட்டிவைத்தான்..." "...ஆசார முட்டையிலும்.... கறுப்பு மயிர் கண்டேன்" "துவக்கும் கையுமாய் மனிதன் துரத்துகிறான் என்ன அநியாயம்! நான் படுத்த சுடலையிலே கள்ளமாய்க் காமம் உறவாடும் மனிதரைப்பார்" என்றெல்லாம் வரும் படிமங்களின் ஆற்றல் வலிமையின் ஆட்சிப்புலம், புதுமெய்க் கவிதைகளின் படிமப் பலத்துக்குச் சான்றுகளாம். "அறம் செய்ய விரும்பு", "ஆறுவது சினம்" - என்ற பாணியிலே போதனை செய்யும்- புத்தி புகட்டும் ஆசானாகவோ, வாசகர்களுக்கு வாழைப்பழத் தோலை உரித்துவிட்டுத் தீத்துவதுதான் நல்லது என்று நினைக்கும் அதிகப் பிரசங்கியாகவோ திரு. இராமலிங்கம் காட்சிதரவில்லை. உள்ளுறை உவமம். இறைச்சி என்னும் உபாயங்களைக்கொண்டு சொல்லாமற் சொல்லும் சங்கத்தமிழர்களின் குரல் முற்றிலும் புத்தம் புதிய ஒரு நவீனமான சூழலிலே ஒலிப்பது கேட்கிறது. புதுமெய்க் கவிதையின் யாப்பைப்பற்றியும் சில சொல்லவேண்டும். வழமையான யாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. கையாளப்பட்ட சொற்கள் தமிழ் மொழியைச் சேர்ந்தனவாகையால், எழுதப்பட்டுள்ளது தமிழ்க் கவிதையாதலால், அச்சொற்களின் இயல்பான ஒலிகள் இசைந்து பல்வேறு ஓசை ஓவியங்களை ஆக்குகின்றன. எனினும் அந்த ஓவியங்கள் போதிய அளவுக்கு நெறிப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். சங்கமருவிய காலத்துக்குப் பின்னர் தமிழ்க்கவிதையே எழுதப்படாமலிருந்து, அந்தப் பெருத்த இடைவெளிக்குப் பின்னர் திரு. இராமலிங்கம் எழுதியுள்ள கவிதைகளே வெளிவருகின்ற ஒரு நிலைமையை கற்பனைசெய்து பார்த்தால், இப்புதுமெய்க் கவிதைகளின் யாப்பு பொருத்தமான ஒன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் உண்மை அவ்வாறில்லையே! சங்கமருவிய காலத்தின் பின்னரும் தமிழ்க் கவிதை யாப்பிலே எண்ணிறந்த பல மாற்றங்கள், வளர்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றின் பயனான ஓசைக் கோலங்கள் நமது மொழியின் முதுசொத்தாகவும், மூலவளமாகவும் திரண்டிருக்கின்றன. இவை தேவையில்லை என்று விட்டுவிடலாமாயினும், இவை இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. நம்பிடையே புதிதியற்றமுனைகிறவர்கள், தாம் உழைத்து ஈட்டியவற்றோடு கூட முதுசொத்திலிருந்தும் ஏற்ற அளவுக்கு எடுத்துச்சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் போக்கு. நாட்டம் புதுமெய்க் கவிதைகளில் அறவே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. "மேலுள கீழ்ச்செல இடையுள மேலெழ அடியுறை பொருளினில் ஏதும் தெரிந்தில..." "இமயமலைக் கடும்பாறை பிறந்தெடுத்த பொருங்கல்லைச் சுமப்பதென்றால்......?" போன்ற அடிகளில், யாப்பு மூலவளங்களுக்கு நாணயம் பூட்டும் போக்கு புலப்படுகிறது. ஆயினும் இந்தப்போக்கு மேலும் அறிவறிந்து அழுத்தம்பெறின் எவ்விதத்திலும் மேதக்க கவிதைகள் நமக்குக் கிடைக்கும் என எண்ணுகிறேன். தன் பொருளுக்கு ஏற்ற யாப்பினைத் தேர்ந்தெடுப்பதற்கும்,இயற்றிக்கொள்வதற்கும் கவிஞனுக்குச் சுதந்திரம் உண்டு. எனினும் அவ்வாறு தேர்கையிலும், இயற்றுகையிலும், இதுவரை ஈட்டப்பட்டவற்றைப் புறக்கணித்துக் கண்மூடாது பூரணவிழிப்போடு இருப்பது வலுமிகுந்த ஆக்கங்கள் பிறப்பதற்கு வழி வகுக்கும். திரு.இராமலிங்கத்தின் வருங்காலக் கவிதைகளுக்கு இவ்விதமான வலுவும் வாய்க்குமாக என்று வாழ்த்தும் அதே சமயத்தில், போற்றத்தகுந்த அம்சங்கள் பலவும் பொருந்திய 'புதுமெய்க் கவிதைகள்' வெளியாவது, நம்மவர் நடுவில் ஒரு 'வேறான நோக்கும், வெளிச்சமும்' தோன்றுதற்கு ஏதுவாகும் எனவும் நம்புகிறேன். - முருகையன். 25/3, லோரீஸ் வீதி, பம்பலப்பிட்டி, 20-10-64. --------------------------------------------------- நான் என்னைத் தவிர்த்து வேறொருவர் இன்றென்று காட்டும் குருட்டிருளில் நான் கிடந்தேன்! ஓ என்று ஒலி எழுந்து காதைத் துளைத்தருட்ட கண்திறக்க மனமின்றிக் கண் விழித்து, எழுந்தேகி, எருது நுகம் பூட்டி ஏரை அதிற் கொழுவி உழுது வருகையிலே காலை இளங்கதிரும் கீழ் வானிற் தோன்றிவிட, என்னுடலில் எங்கோ ஒரு வியர்வை தோன்றிக் கழன்றோட, கண்டேன் என்நிழலை மங்கல் இளம் வெயிலில் அப்பாடா! நான் பெரியன்! மிகப் பெரியன்!! பாதி உழுதுவிட்டேன். ஒளிப் பிழம்பும் தலை நோக்கிப் பாதிவழி வந்துவிட்டான் பெரும்பாகம் உடலிலே வியர்வை கழிந்தோட என் நிழலைப் பார்த்தேன் நான் சிறயன்! மிகச் சிறயன்!! முழுவதும் உழுது முடியுந்தறுவாயில் தலை சேர்ந்துவிட்ட ஒளிப் பிழம்பினாலே எங்கும் உடல்முழுதும் வியர்வைப் பெருவெள்ளம் கழிந்து வழிந்தோட என்நிழலை நோக்கினேன்: நான் இல்லையெனச் சிறியன்! ஏதும் இல்லையெனச் சிறியன் !! ஊற்று மறை நோக்கி...... அடிவீழ் அருவியினின் ஊற்றுச்சி காணவென்று அருவிவிழும் பாறை மேலேறிச் செல்கின்றேன் வழுக்கல் வரும் போது தவழ்ந்தூர்ந்து போகின்றேன் சறுக்கி விழுங்கின்றேன்! உடைவு தடையில்லை உறுதி தளரவில்லை வழுக்கல் நிலம் கடந்த வினோதம் தெரியவில்லை! அருவி சலசலத்து விழுகின்ற வீச்சினிலே தளர்ந்து வீழ்கின்றேன் தடுமாறி எழுகின்றேன் உறுதிகொழுந்தெறிய உன்னி மேலேறி விட்டேன் ஊற்றுமறை தேர்தல் நோக்கி நான் செல்கின்றேன். காமம் கண்ணாடித்திரை யன்னலூடாய்ப் பார்வை செலுத்திநின்றான் காளைமாடொத்த இளைஞன் அவன்! என்றும் மூப்புப் பிணியில்லை மார்க்கண்டேயன்! தெருவில் பார்வை செலுத்திநின்றான்: கன்னி ஒருத்தி கலக்குப் பருவமவள் ஈ என்று இதழ் விரித்துச் சுட்டுவிரற் சுண்ணாம்பு பல்நுனியாற் கிள்ளி வெற்றிலை அசைபோட்டுப் பதம் பார்க்கும்போது சுரக்கின்ற செஞ்சாறு உதடெல்லாமூறிக் துளிர்க்கின்றதை............. திரைமறைந்து முலையிணைகள் குறிபார்த்து நிற்கிறதை........ பெண்மைமுகில் எல்லாம் கண்ணிற் கூடி முழங்காமல் மோதி மின்னல் எறிகிறதை........ கண்ணாடித்திரை யன்னலூடாய் நோக்கினன். பாய்ந்து வெளிக் குதித்தான்! துள்ளிச் சென்று, அவளை அணைத்து நெரித்து இதழ் இதழாய்ச் சுவைத்துநின்றான். உருவற்ற அவனை அவளால் உணரவும் முடியாது. நடுத் தெருவில் இதழ் இதழாய்ச் சுவைத்து ருசிகூர்ந்தான். மயக்க வெறி மிகுந்து மெதுவாய் உட்சென்றான். கண்ணாடித்திரை யன்னலூடாய்ப் பார்வை செலுத்தி நின்றான். என்று மறைந்திடுமோ? குறைமதி என்று எல்லாரும் கூறுகிறார். நான் ஆய்ந்தேன்; மதியிற்குறையில்லை; மண்ணின் கறைகண்டேன் மனத்தின் அழுக்காறு திரண்டு குண்டாகியதோ? குறைமதியாய்க் காட்டும் பூமியின் புன்மைதான் என்று மறைந்திடுமோ? நிலையாமை வெள்ளம் நிறைந்திருக்கும் நீண்டகன்ற பள்ளக் குளமொன்று! வெளியோர் கண்ணிற்படாது படலமாய் ஓங்குகிற ஊத்தை கசிகின்ற எண்ணெயெனப் பிசுபிசுக்கும் வருபவர்கள் வாயைப் பிளந்து காற்றுப் பருகிநிற்பர். தலைமறைவாய் இருக்கின்ற முதலையினைக் கண்டு நடுங்கி நகர்ந்திடுவார். பருவம் பெயரக் கோடைக் கொதிநோயில் நீர்வற்றச் சுற்றி எங்கும் காய்ந்து நிலம் வெடிக்கச் சிறுநடுவில் கையிற் பிளாக்கோலி அள்ளி நிறைத்தாலும் குடநீரும் தேறாத குழி நீரோ சிச்ž! குடலைப் பிரட்டும் பச்சைக் கிருமிக் கூழ்! வழிப் போக்கர் நாற்றம் பொறுக்காது மூக்கைச் சுழித்து எட்ட அடிவைத்தே ஊறிவரும் உமிழ்நீரை நூறு முறை துப்புகிறார். துடித்தெழுற சிறுமீனோ வெளி விழுந்து பிரண்டு துடி துடித்து உள்ளே விழுந்து நெடுமூச்செறிகிறது! எவ்விதம் வந்தன ? ஆழியின் ஆழத்தில் அலைந்திடும் மீன்வகை அறியவோ உறக்கமாம் மரக்கலம் ஏறி நான் கனவினை வீசினன்? மரக்கலம் இறங்கி நான் ஏங்கியே போயினேன். அன்னையர் தங்கையர் புணர்ந்திடும் மீன்களோ! ஆழ்கடல் எவ்விதம் வந்தன இவ்வகை? குழந்தையில் தாய்முலை பருகிய இன்பமும் இளமையில் தங்கையைக் கொஞ்சிய இன்பமும் இவ்வகை மீன்களைக் கருக்கொள முடியுமோ? ஆசைக்குச் சாதியில்லை வேளாளர் குடிப்பிறந்து பிறர் ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும் மேற்சாதி நான்! என்றாலும் மருந்துக்கு நல்லதென்றால் கள் அருந்துவதில் என்ன குற்றம்? கள் பருகச் சென்þற்...... முற்றத்தில், முட்டியிலும் சட்டியிலும் ஈக்கள் நுரை மிதக்கும் கள்ளு நிறைந்திருக்க, "நயினார் இருங்கள் !" என்று பள்ளர் குடிப்பிறந்தாள் இட்ட பன்னாங்கிலே உட்கார்ந்தேன் பிளாவில் கள் நிறைத்துக் கைநீட்ட அவள் குனிந்து காமத்திரியினிலே தீக்குச்சி தட்டிவைத்தாள். கண்ணி பிளாக் கோலிக் கள்ளு நிறைத்திருக்கும் பெண்ணின் நெஞ்சு முட்டி வழிகின்ற பருவம் பருகுதற்குக் கையைப் பிடித்தேன் திடுக்கிட்டு நடுநடுங்கிக் கள் சிந்த எனை நோக்கிக் கையை உதறிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டாள். பின்னாலே நான் நகர்ந்தேன். உதட்டுக்கு முட்டி கட்ட வாய்துடித்து அவள் முன்னாலே நின்றேன். கூசாது. "தீயணைக்கும் படை இரங்கி இயக்கு கிளி!" எனக் கெஞ்சி இரந்து இன்பம் நுகர்ந்தேன் என் ஆசாரமுட்டையிலும்.....ஆசாரமுட்டையிலும்... கறுப்பு மயிர் கண்டேன். பெருகுஞ் செல்வம் மாமலையின் சிந்தனையில் ஊறிஎழும் எண்ணத் தெளிவின் தொகுப்பருவி ஆறின் வளம் பெருக்கி மண்ணின் மனம் துளிர்க்கக் கிடைத்த பெருஞ் செல்வம்! கடலும் முகம் சிரித்து ஏற்று மனம் கொழிக்க உயர்ந்த அரும் பேறு! மாணிக்கம் மண்ணிலே மாணிக்கம் தோண்டுதற்கு மண்வெட்டி அலவாங்கு பிக்கானோடு மலைஏறும் கூட்டத்தைக் கண்டபோது எழுந்தது ஒரு நம்பிக்கை! மனத்தினை அகழ்ந்து சென்றால் மாணிக்கம் அகப்படாதோ? மேசையில் நூல்கள் பழையதும் புதியதும் குவிந்தன. தாள்களின் கட்டுகள் நிறைந்தன. அகழ்ந்தேன்....அகழ்ந்தேன்..... அகப்பட்டது...... எல்லாம்.......போலிகள் ! சலியாது உழைத்தேன். பெறுமதி குறைந்தவை கிடைத்தன. நம்பிக்கை பொங்கிச் சரித்தது. அகழ்ந்தேன்......அகழ்ந்தேன்..... கிடைத்தது ஒரு கல்! பத்திரமாய் அறுத்து, பக்குவமாய்த் தேய்த்துப் பார்த்தேன். நான் என்ன பசுக்கன்றோ? துள்ளிக் குதிக்கிறனே? அதனுள் என்ன காலையோ? கதிர் வீசும் சூரியனைக் காண்கின்றேனே! இனி ஏது? எங்கிருந்து வந்தþதுவோ இந்தக் காற்று தழுவிநிற்கும் மூங்கில் இரண்டு உராண்ந்து பறக்கிறது சினப் பொறிகள் தீப்பொறியாய்! காய்ந்த சருகு சுள்ளி விறகுகளைப் பற்றி, எரியுது பட்ட மரங்களிலும் சேர்ந்து பெருகு நெருப்பு! தளிர்ச் சிரிப்பால் குளிர்விக்கும் செடிகொடிகள், கொத்துக் கொத்தாய்க் பூத்துத் துலங்குகிற செம்மலர்கள் இன்னும் பலவகைகள், குலைகுலையாக் காய்த்துத் தூங்குகிற காய்வகைகள் கனிவகைகள் எல்லாம் வெம்பி வெதும்புவதோ? கருவண்டு முகந்தெரியும் முதுகோட்டுச் சிறகு ஊதி வந்து தேன் உறிஞ்ச.... இனி ஏது? கூர்ச் சொண்டுச் சிறுபறவை கூட்டமாய் வந்து கனிகொத்த..... இனி ஏது? மனம் வருகுதோ? இருண்டு வெகு நேரமாச்சு! கரிச்சட்டி கையிலேந்தி வெட்டவெளி எல்லாம் சுற்றி வந்தன். நாகபாம்பு இரத்தினக்கல் சுக்கிவிட்டு இரை மேயும்போது சட்டியால் மூடிவிட்டால் நாளை எடுக்கலாம். அதிலே தெரிவதென்ன? இரத்தினக்கல்லோ! இல்லை நட்சத்திரத்தை விழுங்கிவந்து கக்கிவிட்டதோ! சட்டியால் மூடிவிட்டுச் செல்ல மனம் வருகுதோ? காலை அது மாற்றார் கண்ணில் பட்டுவிடாதோ? கையால் இறாஞ்சிப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுத்தன். விரல் ஊடுகளைப் பீறிக்கொண்டு ஒளி எறிக்குது! நாகபாம்பு žறிக்கொண்டு துரத்தி வந்தது தூரவீசி எறிந்துவிட்டுப் பறந்து ஓடினன்! வீட்டை வந்து திரும்பிப் பார்த்து மூச்சு விட்டன். நெஞ்சு பக்குப் பக்குப் பக்கு என்று இடித்துக்கொள்ளுது. கிழியட்டும் முக்காடு காலை வகுத்தளித்த ஒழுக்கம் என்ற முக்காடிட்டு ஒளி என்றே மகுடம் சூட்டி அதனுள் களங்கமற்ற மனிதன் என நடித்துவந்த ஞாயிறே! உன் உண்மைநிலை உணர்ந்திடுவாய்! மண்மகள் உன் மனைவிதான் அது தெரியும்! ஆனால் மனத்தில் எழும் உணர்ச்சிகளை ஏன் மறைப்பான்? மாலையைக் கண்டு ஏன் துடைநடுக்கம்? அவன் žர்திருத்தவாதிதான்! முக்காடு கிழிப்பதுதான் அவனின் வேலை கிழிக்கட்டும்! கிழித்து நெருப்பில் வீசட்டும்! புதிய வழி பிறக்கும். உண்மை! ஏன் ஓடி மறைகின்றாய்! வானத்தில் பூத்திருக்கும் வெள்ளிமீன்கள் உன் உள்ளத்தில் சிக்கிவிட்ட மங்கையர் என்றோ? வெட்கம் வேண்டாம்! கிழிக்கட்டும்! கிழித்து நெருப்பில் வீசட்டும்! புதிய வழி பிறக்கும். உண்மை! ஏன் ஓடி மறைகின்றாய்? வானத்தில் பூத்திருக்கம் வெள்ளிமீன்கள் உன்உள்ளத்தில் சிக்கிவிட்ட மங்கையர் என்றோ? மனத்தின் இயல்புதான். வெட்கம் வேண்டாம்! கிழிக்கட்டும்! புதிய வழி பிறக்கட்டும்! எள்ளிச் சிரிக்கிறது நரைக்குப் பசை பூச, மண்டை மயிர் கொட்டுகுது! வாயைத் திறந்தாலோ மணிஇலையான் மொய்த்துவிடும் காமம் கொழுந்தெறிந்து, ஊனை உருக்கி உறிஞ்சி எரிகிறது! எலும்பு சட்டைக்குள் எள்ளிச் சிரிக்கிறது! இறுதிப் படுக்கையிலும் இழுக்கின்ற மூச்சு காமக்கஞ்சி ஊற்றுஎன்று காத்துக் கிடந்திடுமோ! ஏதும் தெரிந்தில தெளிந்த நீர்த் துரவிலே தொம் என விழுந்திட்ட கலக்கிடும் கல்லினால் தளம்பிடும் நீரிலே மேலுள கீழ்ச்செல இடையுள மேலெழ அடி உறை பொருளினில் ஏதும் தெரிந்தில. இளைத்துவிட்ட ஆத்திரம் பருத்து நெடுநெடுத்த பனையோடு சொறி தேய்த்துநின்ற யானையின்மேல் விழுந்தது ஒரு பனங்காய்! சினங்கிளர்ந்த யானை பனையை முறித்துவிட அசைத்தால்...... பனையா முறிகிறது? இளைத்துவிட்ட ஆத்திரத்தில் பக்கத்தில் நின்ற வடலியினை இழுத்தெறிய விசுக்கிய கை கருக்குமட்டை நறுக்கிவிட வெறி கொதித்து, சிறுமரங்கள் செடிகொடிகள் எல்லாம் பிடுங்கி மிதித்துழக்கித் தீர்க்கிறது! தேன் ஒளி சொரிய உள்ளமலர் ஆயிரம் இதழ் முறுவலிக்க, தேன் ஊறி வழிகிறது! வேண்டாம் பூட்டு வெளியில் உள்ளவர்கள் ஓட்டை துருவுகிறார் வீட்டுக்குள் நிற்பவரோ பூட்டை உடைக்க வகையற்றுத் தவிக்கின்றார். கள்ளர் அனுபவிக்க வெள்ளர் புதைக்கின்றார். சிந்தை முழுதும் செலவாகிவிடுகிறது. பூட்டற்ற வீடாய் அமைக்க முயன்றிடுவோம். காட்டு விலங்கினிடம் கற்றிடலாம் இப்பாடம். தலைப்பாரம் இமயமலைக் கடும்பாறை பிளந்தெடுத்த பெருங்கல்லைச் சுமப்பதென்றால்.........? தலை நெரிந்து விழி பிதுங்கிக் கீழ்மூச்சு மேல்மூச்சு எறியக் கனகனும் விசயனும் நடை தடுமாறுகிறார்! முற்றிப் பழுத்திடுவேன் பிஞ்சிலே வெம்பவில்லை முற்றிப் பெருக்கின்றேன் பெருங்காற்றுப் பேய்மழையில் அசையாது வளர்கின்றேன். அணில் விலங்கை நான் அண்டேன். புகை ஊத நான் விரும்பேன் இயற்க ஒளியினிலே தானாய்ப் பழுத்திடுவேன் முற்றின்பம் நுகர்கையிலும் கொட்டை முளைத்தங்கே இன்பம் பலர் நல்க முற்றிப் பழுத்திடுவேன்! புகை ஊத நான் விரும்பேன். கைக் குடை வெட்டை வயல் வெளியில் காற்றுக் கடும் மழையில் சுழன்றடிக்கக் கையைப் பிய்த்து இழுக்கும் கருங்குடையோ வட்டு விட்டுக் கைப்பிடியில் பறக்கிறது! கொட்டுகுது குமிழ் மழையும்! குடுகுடென்று நடுங்குகுதுஉடல் முழுதும் மண்டை வலிக்கிறது! மயிர் எழுந்து குத்துகுது! குலைப்பன் உதறுகுது!! காற்றுவழியினுக்குக் கைக்குட்டையை நம்பியதால் கேடு விளைந்திருக்கு! அலர் பொழுதுபடும் வேளை வான்வெளியில் கோலங்கள் பூத்துக் குலுங்குகின்ற நேரத்தில் துடிப்புகளும் உணர்வுகளும் கிளர்ந்து எழுவது இயல்புதானே! மலைமுகட்டில் முகில் இரண்டு ஆசையின் இழுவையிலே நிலைதளர்ந்து மெய்மறந்து கூடிக் குலாவிய குறையில் குலைந்து ஓடுகின்ற காரணம் என்? பாய்ந்துவரும் இருள் கண்ணில் பட்டுவிட்டதாற்தானே! ஒடித்தான் என்ன? ஒளித்துத்தான் என்ன? இருளுக்குக் கண்கூர்மை அதன் ஓட்டம் பெரும் வேகம்! தப்பவே முடியாது! இன்பம் தெரிகிறது ஐந்துநதி பெருகி விழ அலை நுரைக்கும் சிந்தைப் பெருங்கடலின் ஆழவடியினிலே முத்து விளைகிறது மனத்தைக் குறிசெலுத்தி மூச்சை வளப்படுத்தி முத்துக்கள் அள்ளிவர நித்தம் முயலுகையில் இன்பம் தெரிகிறது. அடை கிடக்கு கிளறிக் கிளறி மறைநெல் துருவிக் கேர்ந்து, முட்டை இட்ட பேடு சோர்ந்து அடை கிடக்கு! தூக்கி மேல் எறிந்து குனுகி வந்து கிடக்கு! பயம் துவக்கும் கையுமாய் மனிதன் துரத்துகிறான். என்ன அநியாயம்! நான் படுத்த சுடலையிலே கள்ளமாய்க் காமம் உறவாடும் மனிதரைப் பார்! அந்தக் காலத்தில் நான் ஆண்ட ஆட்சி: இரவில் நடுவழியில் வடலி உருவெடுப்பேன். பல்லியாய் வீட்டில் நச்சு மொழி பகர்வேன். பாம்பாய்த் தெருவில் குறுக்கே அரைந்திடுவேன் இப்போது என்ன என்றால் துவக்கும் கையுமாய் என்னைத் துரத்துகிறான். மனிதனே! என்னைப் பிடித்தழிக்க உன்னால் முடியாது. உன் உள்ளத்தில் நீ இறங்க முடியாத ஆழத்தில் பேராசைப் புற்றின் அடித்தளத்தில் நான் உள்ளேன். தருணம் வரும்போது கொத்திக் கிளித்திடுவேன்! பருவம் நூல் விரித்தாள்: பூஞ்சோலை! மொட்டரும்பும்: முறுவலிக்கும்; இதழ்விரியும் தேன் கமழ்ந்து தேங்கிநிற்கும் தேர்ந்துறிஞ்சிக் களி கூர்ந்து மூடிவைத்தாள். இன்பவெறி! வெம்முலையோ விம்மி எழும்! * * * மறியாடு ஓயாது கத்துகுது கிடாய் தேடப் போய்விட்டான் அம்மாவும் ஆசிரியர் வீடு ஏகின் இன்னொரு நூல் பெற்றிடலாம். அம்மா வந்தால் போகவிடாள்; மாலை என்பாள். * * * கொடிஎறி கூந்தல் தூக்கி வாரி புசல்மா முகம் தடவி அழுத்தம் ஏற்றி வியப்புக்குறி போன்று வரைந்து பொட்டும் நாவால் இதழ் தேய்த்துப் பசுமை ஊட்டி..... இளமை எழில் ததும்ப எதிர்ப்பட்டோர் நிலை கலங்க ஆசிரியர் வீடடைந்தாள். * * * இந்நூல் முடித்துவிட்டேன் இன்னொன்று தாருங்கள்! * * எம்பாவை இன்புறுறேன் இடை குழம்ப மனம் வருமோ கொஞ்சம் பொறுத்திடுவாய் முடித்துவிட்டுத் தந்திடுறேன்! * * இருளுகுது பிபரீதம் நான் தேடி எடுக்கின்றேன் * * * புத்தகம் தேடும் நிலை எல்லாம் பருவம் வழியும் ஓவியங்கள் திரும்வெம்பாவை மனம் செலுமோ தேடிக் கொடுக்க முன்வந்தார், * * இருவருமாய்த் தேடுகையில் மெய்முட்டிப் புலன் மோத ஆசிரியர் இதழினிலே புன்முறுவல் படம்விரிக்க நோக்கிநின்ற திருமுகத்தை நாணம் கவிழ்த்து நிற்க களவாகச் செவ்விதழில் காமம் தவழ்ந்துவர கால்விரல்கள் நிலத்தில் அதைக் குறிப்பாய்ப் படம் வரைய அணைக்கிறார் ஆசிரியர். காதோடு ரகசியங்கள் இசைவில் தலையசைவு பிறகென்ன கதவடைப்பு. தொடுவானம் மாதுளை மா வாழை பலா தென்னை பனை இன்பம் வழங்கும் செம்மண் பரப்பு அது! அங்கேதான் குலவுகுது தொடுவானம்! அடைதல் வேண்டும்! வழியெலாம் விரைகிறேன்! தோப்பு நுழைந்து செழுமை நுகர்ந்தபின்னர் அப்பால் நகர்ந்தேன் தொடுவானம் இங்கில்லை கழிநீருக்கு அப்பாலே விரிந்த கடற்பரப்பில் குலவுகுது தொடுவானம்! அதை நோக்கி நான் போறேன். ஆழ்கடல் கடந்தேன் தான்: என்றாலும்............ தொடுவானம் இங்கில்லை அகமும் புறமும் மலர்ந்து வரவேற்கும் சின்ன வயல்கள் செறிந்த வெளியினிலே குலவுகுது தொடுவானம்! அடைதல் வேண்டும்! வழியெலாம் விரைகிறேன்! வரம்புநடை தடுக்க வீழ்வதும் எழுவதுமாய் வெளி கடந்துவிட்டேன் நான் ஆனால் தொடுவானம்...........? இங்கில்லை; எங்கோ தெரிகிறது. அங்கே நான் போகின்றேன். ஏன் கணங்கறீர்? படியில் வரைநுனி ஏறிடு! சிவன்ஒளி கதிர்சொரி கவிபொழி ஞாயிறு இன்புறு! கீழ்ப்படிதொட்டு மேல்நுனிவரை அண்ணாந்து அளந்தும் ஏங்கியே போயினம்! எப்படி ஏறுவம்? இடைவழி மிகுபலர் திறன் உடல் தீய்ந்ததால் ஒய்வு எடுக்கிறார்! கூடி நடக்கலாம் ஏன் சுணங்கிறீர்? கழுவு! தெரியும்! இருள் அகம் நீங்கும் பலகணி ஆடி படி கறை கறை கழுவு எனக் கழுவினேன் ஒளி அகம் பொழியுது! உள்ளுள், சிலந்தி வலை பின்னி இரை பிடிக்க பூனை ஒலி அஞ்சி எலி ஒடுங்க žறித் தலை விரித்து நாகம் குடியிருக்கு! முதல் பெருப்பீர் வெற்றி! வெற்றி என்று கூவித் தூக்குகிறீர் தோள்மீது பாரம் பெரிதலவோ! போட்டுவிட மாட்டீரோ? தழுவிப் பிடித்தாலும் நழுவிவிட மாட்டேனோ? நல்லாய் முதல் பெருப்பீர் இப்பொழுது விட்டிடுவீர்! தலை குனிந்தேன் கல்லுக் கிடக்குது என்று காலாலே தட்டிவிட்டு என் பாட்டில் சென்றேன் கூடி வழி வந்தோன் கூர்ந்து அதை நோக்கித் தூக்கி எடுத்தான் மாணிக்கம் எனக்கூறி வாயூறி மகிழ்ந்துநின்றான் கல்லை உரைத்துக் கதிர் சொரிதல் காட்டியதும் அதனருமை நான் உணர்ந்தேன். கலை அறியா நிலை எண்ணி வெட்கித் தலை குனிந்தேன். வழி தெரியுது ஆழக் கடல்! அடியில் சிறியதைப் பெரியது விழுங்கூது முக்குளிப்பு! சிப்பி விளையும் உடனுறையும் பெருமை எமக்குண்டு மூச்சுவிடக் கற்றுக்கொள்! முத்தி அடையவழி! நீர் பெய்த சிறுநீரில் தேனெடுக்க மூச்சுத் திணறுவதோ? மோட்டுக்கடல்கிழித்து மேலேநான் ஏறிடுறேன். .......... ஏறிவிட்டேன்! சுற்றிவர வானத்தை ஒன்றிவிட்ட கடற்பரப்பு நீந்துகிறேன்........ ..................... நீந்திவிட்டேன்! ஒளி தெரியுது இருள் தெரியுது கடல் தெரியுது நிலம் தெரியுது மரந் தெரியுது மலை தெரியுது வெளி தெரியுது வழி தெரியுது! அது முறிந்து போயிற்று சுற்றிக் கொழுந்தெறிந்து படர்வது சிறு கொடி! குலைத்துவிடு அது பிரிந்து போகட்டும்! குலைத்துவிடக் குலைத்துவிட மீண்டும் எனைப் பற்றுகுதே என்செய்ய? இழுத்தெறியேன் ஏன் பார்த்து நிற்கின்றாய்? இழுத்தெறிந்தேன் .......அது முறிந்துபோயிற்று! பூங்கொடி பிணைத்துவிடு சுற்றிப் படரட்டும்! பிணைத்துவிடப் பிணைத்துவிட அது பிரிந்து போகிறதே என் செய்வேன்? ஏன் பார்த்து நிற்கின்றாய் இழுத்து இறுக்கிச் சுற்றிவிடேன்! இழுத்திறுக்கிச் சுற்றுகையில் .......அது முறிந்து போயிற்று! வெறும் பூச்சு பச்சை சிவப்பு மஞ்சள் பால்வண்ணக் குமிழ்களிலே மின்சாரம் மினங்கச் சிகரம் பளபளக்க..... பூவானம் துளி பொழிந்து இரவு தந்த மகிழ்ச்சியில் உறங்கிவிட்டன்! காலையிலே விழித்தெழுந்தன் கதிர் உமிழும் பகலினிலே மின்சாரம் மழுங்கி ஒன்றும் எழில் இல்லை சிகரம் வெறுந்த தகரம் வண்ணம் வெறும் பூச்சு! சாயலை என்செய! இரவெலாம் மின்சாரம் கொளுத்தியே கருமம் ஆற்றிப் பகல் உறங்குவோர் அடுத்த வீட்டினில் குடி இருப்பவர். விடிந்தது! ஒளிக்கதிர் வீட்டினுள் புகுந்தது விழித்திடு ! என்று எத்தனை எத்தனையோ முறை எழுப்பிடும் சாயல் வெளிச்சத்தை என்செய! பயில்துயில் குலைவோ பன்முறை விடிந்ததோ தெரியலை என் செய! பிந்தியே பதைத்து விழித்தனன்! கரைகாண முடியாத கடல் இல்லை செரித்துப் பயிர் அடர்ந்து தவிர்த்துப் பதர் பிடிப்புக் கொத்துக் கதிர் ஈன்று முத்துப் புதர் போன்று žர்த்த விளைநிலமே! புகழோ இனிக் குன்று! எட்டாத ஏணி நுனி ஏறி முட்டாத கொக்கை மிக உயர்த்தி கொட்டாவி விட்டாலும் கிட்டாதாம்! யார் சொன்னார் இந்த உரை? கறள் நீங்கித் திறன் தீட்டி நீ ஏகு! மனம் ஏற முடியாத வரை இல்லை! கரைகாண முடியாத கடல் இல்லை. இன்பச் சுரங்கம் முருக்கம்பூ கமழ்வதில்லை முல்லைப்பூ வண்ணமில்லை தாழம்பூ பாம்பிருக்கும் கானல்நீர் எனநம்பிப் பலபூக்கள் பார்க்கவில்லை ஒவ்வொன்றாய்த் தள்ளிவர எஞ்சியதோ ஒன்றுமில்லை. கிடைத்துவிட்டாள் கன்னி இன்பச் சுரங்கமடா! முழுநிலவு கண்ட கடல் திரை எழுந்து கெம்புதடா! பிதுங்குகிற இன்பமெலாம் சொட்டி உறிஞ்சிடுவேன்! கூந்தலோ விரல் கோதக் கையோடு வந்தது. பல்லோ இதழ் உறிஞ்சக் கோவையாய்க் கழன்றது. மார்பினுள் கைநுழைந்து கோறைதான் கண்டது. ஆடையை நீக்கினால்...பாலைவனம் அது! பறக்க வழியுண்டோ? தேன்கமழ் மாங்கனி கட்டிவிட உடலெலாம் ஊறியே ஒன்றுசேர்ந்து ஓடூது உள்ளத்தில் வெண்ணருவி மெய்யெலாம் முழ்கினேன் இன்பவெள்ளம் இன்று விருப்பற்றேன் ஆனால் பறக்க வழியில்லை பார்முழுதும் கடக்க வல்ல பச்சைச் சிறகு பாதி அரிபட்டுக் கூட்டில் கிடக்கின்றேன். உள்ளே உடல் தியங்க இரும்புக் கம்பி ஊடுவெளி தலைநீட்டி அகிலம் அளக்கின்றேன். கொய்யா மரத்தினிலே கொந்தல் சிரிக்கிறது! துயிலுகையில் பயங்கரங்கள் துயிலுகிறேன்! கனவுலகில் நிகழுழுது பயங்கரங்கள்: சூரியனின் அனற்பிழம்பு வெடித்து வீழ்கிறது சமுத்திரத்தில்! திரை மோதுகுது பனைஉயரம் ஆவிகக்கிக் கரைமீறி நிலமேவி ஓடுகுது கொதிவெள்ளம்! மரஞ்செடிகள் விலங்குமக்கள் அவிந்து வெம்பி வதைந்தழிய ஓங்குகுது பிணப்படையல்! ஊன்கரைந்து சேறுபட வீசுகுது கெடுநாற்றம்! கனவுலகில் நிகழுவன பயங்கரங்கள். முற்றும்.... |