கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நாவலர்  
 

வரதர்

 

நாவலர்

வரதர்

----------------------------------------

நாவலர்
சுருக்க வரலாறு

வரதர்

வரதர் வெளியீடு

-----------------------------------------

நாவலர்
திருத்திய முதலாம் பதிப்பு: டிசம்பர் 1979
மறுபதிப்பு: ஜனவரி 1980
ஆக்கம்: 'வரதர்'
மேலட்டை ஓவியம்: 'ரமணி'
பதிப்புரிமை: வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிவு: ஆனந்தா அச்சகம், யாழ்ப்பாணம்.
விலை ரூபா 2-00

---------------------------------------------


நாவலர்

"ஆறுமுகநாவலர்" என்ற பெயர் தமிழ் படித்தவர்கால் மறக்கப்பட முடியாத ஒரு பெயர்.

"ஆறுமுகம்" என்பது அவருடைய தகப்பனார் கொடுத்த பெயர்.

"நாவலர்" என்பது அவருக்குக் கிடைத்த பட்டப்பெயர்: அவருடைய சம்பாத்தியம். அவருடைய அறிவாற்றலையும், பேச்சுத் திறனையும் கண்டு வியந்து மகிழ்ந்த திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு நாவலர் என்ற பட்டத்தை அளித்துப் பெருமை பெற்றது. அன்றைய திருவாவடுதுறை ஆதீனம் ஒருவகையில் இன்றைய பல்கலைக்கழகம் போன்றது; அதைவிட உயர்ந்தது என்றும் சொல்லலாம்.

ஆறுமுகத்தின் தந்தையார் கந்தர் ; தாயார் சிவகாமி. யுhழ்ப்பாணத்து நல்லூரிலே பரம்பரையாகத் தமிழ் அறிவும் செல்வாக்குமுள்ள குடும்பம். ஆவர்களுடைய பன்னிரண்டு பிள்ளைகளில் ஆறுபேர்கள் ஆண்கள், அவர்களுள் இளையவர் ஆறுமுகம்.

கந்தர் அரசாங்க உத்தியோகம் வகித்தவர். தமிழ் படிப்பதும், நாடகம் எழுதுவதும் அவருடைய இதயத்தின் விருப்பங்கள். ஒருநாள் எழுத்தாணியைக் கையிற் பிடித்து ஏட்டிலே ஒரு நாடகம் எழுதிக் கொண்டிருந்தபோது சடுதியாக அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

ஆறுமுகத்திற்கு அப்போது வயசு ஒன்பது. தமது ஐந்தாவது வயசிலேயே ஏடு தொடக்கப் பெற்று, சுப்பிரமணிய உபாத்தியாயர் என்பவரிடத்தில் ஆறுமுகம் தமிழ் படித்து வந்தார்.

தகப்பனார் அவருடைய கடைசி நேரத்தில் எழுதிக் கொண்டிருந்த ஏட்டை ஆறுமுகம் ஒருநாள் எடுத்துப் பார்த்தார்.

பிறகு-

தகப்பனாருடைய எழுத்தாணியை எடுத்து மளமள என்று எழுதி முடித்து விட்டார் ஆறுமுகம், அந்த ஒனபது வயசிலேயே!

இந்த 'வாற்பேத்தை' செய்த வேலையை அவருடைய தமையன்மார் கண்டு கொண்டனர். அவர்களுக்கு ஒருபுறம் ஆச்சரியம். மறுபுறம் பெரிய ஆனந்தம். "இனிமேலும் இவனை இந்தச் சிறிய பள்ளிக் கூடத்தில் விட்டுக் காலததை வீணாக்கக் கூடாது. இவனுக்குள்ளே பெரிய 'ஆள்' இருக்கிறான்" என்று துணிந்த தமையன்மார், அந்தக் காலத்தில் சிறந்த ஆசிரியர்களாக விளங்கிய வேலாயுதம்பிள்ளை, சரவணமுத்துப் புலவர், சேனாதிராய முதலியார் என்பவர்களிடம் அனுப்பிச் சிறப்புப் படிப்புக்கு ஒழுங்கு செய்தார்கள்.

2

'படிப்பு' என்றால் ஆறுமுகத்திற்கு கற்கண்டு. அதகாலையில் எழுந்தால் இரவு பத்துமணிவரை படிப்புத்தான் வேலை. தமக்குக் கிடைத்த உபாத்தியாயர்களிடம் கற்கக் கூடியன யாவற்றையும் அவர் கற்றார். தாமாகவும் அமைதியான இடங்களில் போயிருந்து கொண்டு படித்துக் கொண்டிருப்பார். இலக்கியமும் இலக்கணமும் ஆறுமுகத்திற்குள்ளே குடிபுகுந்து கெண்டன.

அந்தக் காலத்திN யாழ்ப்பாணத்தில் கநதபுராணம் விரிந்து, மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஒரு அறிஞர் 'பயன்' (உரை) சொல்லுவார். ஊர் மக்களெல்லாம் கூடியிருந்து ஆவலோடு கேட்டு மகிழ்வார்கள். புராணம் படிப்பவருக்கும், பயன் சொல்லுபவருக்கும் ஊரிலே மிகுந்த மதிப்புண்டு.

ஆறுமுகம் இந்தப் புராணப் படிப்பிலும் பயன் சொல்வதிலும் பங்கு கொள்ளத் தொடங்கினார். வழககமாக எல்லோரும் சொல்லுகின்ற கருத்துக்கெல்லாம் மேலாகப் புதிது புதிதாகச் சிறந்த கருத்துக்களையும் சொல்லத் தொடங்கினார். பிழையாப் பயன் சொல்வோரைக் கண்டால் அந்த இடத்திலே கண்டிக்கவும் அவர் தவற மாட்டார். அப்போதே ஆறுமுகத்தின பெயர் மதிப்பிற்குரிய பெயர் ஆகிவிட்டது.

அப்போது ஆறுமுகம் பன்னிரண்டு வயசுப் பையன்.

3

தம்பி ஆறுமுகம் மகவும் கெட்டிக் காரனாக வருவதைத் தமையன்மார் கவனித்தார்கள். தங்களைப்போலவே, தங்களுக்கும் மேலாகவே இவன் நல்ல அரசாங்க உத்தியோகத்தில் சேரவேண்டுமென்று அவர்கள் நினைத்தார்கள்.

தமிழிலக்கிய இலக்கண நூல்களை எவ்வளவுதான் கற்றபோதிலும் அரசாங்கத்தில் உத்தியோகம் கொடுப்பார்களா? ஆறுமுகத்தை ஆங்கிலம் படிக்க அனுப்ப வேண்டுமென்று தமையன்மார் தீர்மானித்தார்கள். அவரை பேர்சிவல் பாதிரியாருடைய ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். யாழ்ப்பாண நகரிலே 'மத்திய கல்லூரி' என்ற பெயரோடு இப்போது செழித்து நிற்கும் கல்லூரியின் ஆரம்பம் அங்கேதான் ஆங்கிலம் படிக்கப்போனார்.

ஆறுமுகத்திற்கு ஆங்கிலமும் நன்றாக வந்தது. அந்தப் பாடசாலையிலே தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச் சிறந்த மாணவன் என்ற பெயர் ஏற்பட்டது. பாடசாலை அதிபரான பேர்சிவல் பாதிரியாரும் ஆறுமுகத்தை மிக அக்கறையோடு கவனிக்கலானார்.

பேர்சிவல் பாதிhயார் அந்தக் காலத்தில் இருந்த மற்றைய பாதிரிமார்களுக்கு விதிவிலக்காய் இருந்தவர். எதிரியேயாயினும் அவருடைய திறமைக்கு தமது நெஞ்சுக்கு நீதி செய்தவர்.

ஆறுமுகத்தின் திறமையை நன்குணர்ந்த பேர்சிவல் பாதிரியார், அரை மேல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழும் , கீழ் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலமும் படிக்கும்படி சம்மதத்து வேதனம் எதுவும் வாங்காமலே அந்தக் கடமையைச் செய்து வந்தார்.

4

யாழ்ப்பாணம தொன்றுதொட்டு சைவத் தமிழ் மக்கள் நிரம்பிய ஊராகவிருந்தது. தமிழரசரின் ஆட்சி மறைந்து, போhதுக்கீசர்களும் அவர்களுக்குப் பின்னால் ஒல்லாந்தரும் வந்து பலாத்காரத்தினால் பரப்ப முனைந்தார்கள். தங்கள் சமயத்தைப் பரப்புவதை விட, சைவசமயத்தை அழித்து நாசமாக்குவதிலேயே அவர்கள் மிகக் கருத்தாக இருந்தார்கள்.

ஒல்லாந்தருக்குப் பிறகு வந்த ஆங்கிலேயரும் கிறிஸ்தவ சமயத்தை இங்கு பரப்புவதில் மிகவும் அக்கறையோடு இருந்தார்கள். இவர்கள் மக்களைப் பெரிதும் பலாத்காரம் செய்யாமல் பொருள், செல்வாக்கு. ஆங்கிலப்படிப்பு, உத்தியோகம் முதலியவற்றின் மீது ஆசைகாட்டியும், சைவசமயத்தை பொய்சசமயம் என்று மதமாற்றம் செய்தார்கள். இவர்களது வழி ஓரளவு வெற்றியும் கொடுத்தது.

பர்சிவல் பாதிhயாரின் கோட்டைக்குள் புகுந்து கிறிஸ்தவரின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த, அறிவும் வயசும் வளர்ந்த ஆறுமுகத்துக்குள்ளே அப்பொழுதே 'நாவலர்' உருவம் கொள்ளத் தொடங்கியது.

நாவலருடைய சுய அபிமானம் வீரிட்டு எழுந்தது. தம்முடைய மக்களுக்குச் செய்யப்படும் அநீதி கண்டு அவருடைய நெஞ்சு கொதித்தது.

நாவலருடைய மனதிற்குள்ளே பல திட்டங்கள் உருவாகத் தொடங்கின.

பேர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் பகல் நேரத்தில் கடமையைச் செய்து விடடு இரவிலும், ஓய்வு நாட்களிலும், தமது தமிழ், சமய அறிவைப் பெருக்கிக் கொண்டார். தாம் மாத்திரம் படித்தால் போதாது: இன்னும் பல பேர் படிக்க வேண்டும்: அவர்கள் நல்ல உபாத்தியாயர்களாக வரவேண்டும்: அந்த உபாத்தியாயாகள் ஊர் தோறும் பாடசாலைகள் அமை;துத் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று பலவாறாக நாவலர் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினார்.

5

பேர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் நாவலர் படித்ததும், படிப்பித்ததும் ஏழு வருடங்கள். அவருக்குப் பத்தொன்பது வயசு ஆயிற்று. நாவலரோடு பழகிய பேர்சிவலுக்குத் தாமும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. தமக்குத் தமிழ் சொல்லித்த தரும்படி அவர் நாவலரிடம் வேண்டுகோள் விடுத்தார். நாவலர் நிபந்தனைகளுடன் அதற்குச் சம்மதித்தார். தாம் எந்த நேரமும் சவசின்னங்களான விபூதி, உருத்திராக்கம் அணிந்pருப்பார் என்பதும், சைவசமயத்தை இழித்துரைப்போரைக் கண்டனம் செய்வதை நிறுத்தமாட்டார் என்பதுமே அவர் நிபந்தனைகள். பேர்சிவல் ஒரு சிரிப்புடன் அந்த நிபந்தனைகளை ஏற்று நாவலரிடம் தமிழ் கற்று வந்தார். நாவலரை விட்டால் அவரைப் போலச் சிறந்த தமழ்பண்டிதர் தமக்குக் கிடைக்க மாட்டார் என்பது ஒரு புறமிருக்க, இந்த hதிரி நேர்மையும் சுய அபிமானமுள ஒரு உயர்ந்த மனிதரோடு பழகுவதில் அவர் பெரு விருப்பங் கொண்டிருத்தல் வேண்டும். அவர் நல்ல நீதிமான்.

நாவலர் எதிர்பார்த்தபடியே சில கிறீஸ்வர்ள் பேர்சிவலிடம் சென்று "எங்கள் சமயத்தின் பெரிய எதிரியுடன் நீங்கள் உறவு வைத்திருக்கலாமோ" என்று தங்கள் கருத்தை வெளியிட்டார்கள். பேர்சிவல், "என்ன செய்வது, வேறு நல்ல் பண்டிதர் கிடைக்கவில்லையே! " என்று ஒருமாதிரிச் சமாதானம் சொல்ல அவர்களை அனுப்பிவிட்டு, நாவலரிடம் வந்து "அவர்கள் இப்படிச் சொல்கிறார்களே..." என்று முறித்துப் பதில் சொன்னார். உள்ளுக்குள் முகிழ்ந்த மகிழ்வு புன்சிரிப்பாய் வெளிப்பட, போசிவல் அந்த அளவில் அந்தப் பேச்சை நிறுத்திவிட்டார்.

நீதியையும் நியாயத்தையும் ஒழுக்கத்தையும் தம்பால் கொண்டிருந்ததால் நாவலருடைய தலை எந்த மனிதருடைய மிடுக்குக்கும் ஒருபோதும் தாழ்ந்தது கிடையாது.

6

பேர்சிவல் பாதிரியாருக்கு நாவலர் தமிழ் மொழியைக் கற்பித்துக் கொண்டிருந்த காலத்தில் நாவலரிடம் இன்னுமொரு பெரிய வேலையையும் பேர்சிவல் ஒப்படைத்தார். கிறீஸ்தவ வேத நூலாகிய 'பைபிள்' நூலைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆவல் அப்போது தமிழ்க் கிறீஸ்தவர்களிடம் இருந்தது. அந்த மொழி பெயர்ப்பு வேலையைத் திறம்படச் செய்வதற்கு நாவலரை விடச் சிறந்த அறிஞர் வேறு எவரும் இல்லை என்று பேரிசிவல் பாதிரியார் கருதி, அப்பெரும்பணியைச் செய்து தரவேண்டுமென்று நாவலரை வேண்டினார். உள்ளன்போடு தம்மை நேசித்த பேரிசிவல் பாதிரியாரின் வேண்டுகோளை மீறமாட்டாமல் நாவலரும் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

சைவசமயத்தை இழித்துரைத்த பாதிரிமார்களுக்கு நாவலர் விரோதி. ஆனால் கிறீஸ்து சமயத்தின் விரோதியல்லர்.

யாழ்ப்பாணத்தில் நாவலர் பைபிளை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த அதே காலத்தில் தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள கிறீஸ்தவ அறிஞர்களும் பைபிளுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்புச் செய்துகொண்டிருந்தார்கள்.

நாவலருடைய மொழிபெயர்ப்பு நிறைவு பெற்றதும் அதைச் சென்னையில் உள்ள கிறீஸ்தவ சபையில் காட்டி அங்கீகாரம் பெறுவதற்காகப் பேர்சிவல் அதைச் சென்னைக்கு எடுத்துப் போனார். தம்முடன் நாவலரையும் அழைத்துச் சென்றார். என்னதான் நாவலரின் தமிழ் - ஆங்கில அறிவில் பேரிசிவலுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தபோதிலும், சென்னை அறிஞர்களின் மொழிபெயர்ப்புக்கு மேலாகத் தம்முடைய நூலைச் சபையார் எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சகம் அவர் மனத்தின் ஒரு பக்கத்தை அரித்துக் கொண்டிருந்தது.

சென்னையில் இருந்த அறிஞர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்பே சரியானதென்றும், நாவலருடைய மொழிபெயர்ப்பில் தவறுகள் இருப்பதாகவும் வாதிடத் தொடங்கினார்கள். உனவே கிறீஸ்தவ சபையார் இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளில் எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்கும்படி அக்காலத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய மகாலிங்கையர் என்பவரை நியமித்தார்கள்.

இரண்டு மொழிபெயர்ப்புக்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்த மகாலிங்கையர், நாவலரின் மொழிபெயர்ப்பே மிகச் சிறந்ததெனத் தீர்ப்புச் சொன்னது மட்டுமன்றி 'யாழ்ப்பாணத்தில் இவ்வளவு சிறந்த தமிழ் உண்டோ?' என்று ஆச்சரியப்பட்டு வயந்துங் கூறினார். பேரிசிவல் கொண்டு போன நாவலரின் மொழிபெயர்ப்பையே சபையார் ஏற்று அச்சிடுவித்தனர். இதனால் பேர்சிவலின் உள்ளத்தில் நாவலரைப் பற்றிய மதிப்பு மேலும் ஒருபடி உயர்ந்தது.

7

பேரிசிவல் பாதிரியாரிடம் தமிழ்ப் பண்டிதராக இருந்துகொண்டே நாவலர் தமது உள்ளத்தில் வளர்ந்து வந்த திட்டங்களைச் செய்ற்படுத்தத் தொடங்கிவிட்டார்.

காலையிலும், மாலையிலும் ஆர்வமுள்ள இளைஞர்களைச் சேர்த்து, நாவலர் அவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார்.அவருடைய முக்கிய நோக்கம், தமிழையும் சைவத்தையும் நாடெங்கும் வளர்ப்பதற்கு ஆங்காங்கு பாடசாலைகளை நிறுவுவதும் அவைகளில் கற்பிப்பதற்கும் ஊர்தோறும் சைவப் பிரசாரம் செய்வதற்கும் தகுதியான ஆசிரியர்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது.

நாவலர் முதன் முதலாக யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் 'சைவப் பரகாச வித்தியாசாலை' ஒன்றை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து கந்தர்மடம், கோப்பாய், இணுவில், மாதகல், பருத்தித்துறை ஆகிய இடங்களிலும் சைவ வித்தியாசாலைகள் தோன்றின. பின்னால் தென்னிந்தியாவில் அதிக தொடர்பேற்பட்ட போது சிதம்பரத்திலும் ஒரு பாடசாலையை நாவலர் நிறுவினார். அநதப் பாடசாலை இன்றும் நடைபெற்று வருகின்றது.

பாடசாலைகள் மூலம் சிறுவயதிலேயே பிள்ளைகளின் அறிவையும் சுயாபிமானத்தையும் வளர்ப்பதற்குத் திட்டமிட்ட நாவலர், வயது வந்தவர்களின் அறியாமையைப் போக்குவதற்காகச் சொற்பொழிவுகள் மூலம் பிரசாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருந்தார்.

அந்தக் காலத்திலே, கற்றுத் தோநத அறிஞர்கள் கோயில்களிலே புராண படனம் நடத்துவதன்றி, சொற்பொழிவுகள் மூலம் மக்களுக்குப் பிரச்சாரம் செயயும் வழக்கம் இருந்ததில்லை. நாவலரே அதைத் தொடங்கி வைத்தார்.

வண்ணார்பண்ணைச் சிவன்கோவினிலே 1849 -ம் ஆண்டில் முதன்முதலாக நாவலர் சொற்பொழிவு ஒன்றை நடத்தினார். அன்றைய தினம் அவருடைய சொற்பெரிவைக் கேட்டவர்கள் எல்லோரும் பரவசமடைந்தனர். அறிஞர்கள் வியந்த பாராட்டினர். அன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நாவலருடைய சைவப் பிரசங்கங்கள் அந்தக் கோயிலிலே நடைபெற்று வந்தன.

வண்ணைச் சவன்கோயிலில் தொடங்கிய பிரசங்கம், பின்னர் பல இடங்களிலும் பல சந்தர்ப்பங்களிலும் நடைபெறலாயிற்று. பிரசங்கங்களைக் கேட்டவர்கள் மூலம் நாவலருடைய பேரறிவும் பேச்சுவன்மையும் மூலைமுடுக்கெல்லாம் பரவலாயிற்று. தென்னிந்தியாவிலும் பல இடஙகளில் இந்தக் காளமேகம் பொழிந்த சொன்மாதிரியால் அங்குள்ளவர்களும் நன்றாக நனைந்து குளிர்ந்து போனார்கள்.

நாவலர் கடைசியாகச் செய்த சொற்பெழிவு அவரது யாழ்ப்பாணம் சைவப்பிகாச வித்தியாசாலையிலேயே நடைபெற்றது. "உங்களிடம் கைம்மாறு பெறுவதனைச் சிறிதும் எதிர்பாராமல் முப்பத்திரண்டு வருடகாலம் சைவசமயத்தின் உண்மைகளை எடுத்துச் சொல்p வந்தேன்....... நான் உயிருடன் இருக்குபோதே உங்களுக்காக ஒரு நல்ல பிரசாரகரைத் தேடித் கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம்" என்ற கருத்துப்பட அன்றைய பிரசங்கத்தின் இறுதியில் நாவலர் கூறினார். இது நடந்தது 1879 ஆடி மாதம்.

1879 கார்த்திகை மாதத்தில் நாவலர் தாம் சேவித்து வநற்த இறைவன் திருவடிகளைச் சென்றடைந்தார். அவர் "கடைசிப் பிரசங்கம்" என்று சொன்னது உண்மையிலேயே கடைசிப் பிரசங்கமாகிவிட்டது.

8

அந்தக் காலத்தில் படிப்பன யாவும் பாடல்களாகவே இருந்தன. 'இலக்கியம்' என்றால் அது கவிதையாக மட்டும்தான் இருக்கவேண்டுமென்ற கருத்துச் சமீபகாலங்களில் கூடப் படித்த பணடிதர்களிடையே இருந்து வந்தது. அந்தக் காலத்தில் இலக்கியம் மட்டுமல்ல: இலக்கணம், நீதி நூல்கள் மற்றும் சோதிடம், வைத்தியம் முதலிய சாத்திரங்கள் கூடக் கவிதைகளாகவே இருந்தன.

கவிதை உலகில் இருந்த தமிழன்னையை வசன உலகிற்குக் கொண்டு வந்ததில் நாவலருக்கு மிகவும் பெரிய பங்குண்டு. நாவலர் ஆத்திசூடிமுதலிய நூல்களுககு உரை எழுதினார். சிறுவர்களுக்காக முதலாம், இரண்டாம், நான்காம் பாலபாட நூல்களை எழுதினார். பெரியவர்களுக்காகத் திரு வளையாடற் புராண வசனம், பெரியபுராண வசனம் ஆகிய நூலகளை எழுதினார். தமிழ் இலக்கணம் கற்போருக்காக இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம், நன்னூற் காண்டிகையுரை, நன்னூல் விருத்தியுரை, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி. தொல்காப்பியப் பாயிர முதற் சூததிர விருததி, பிரயோக விவேகம், சேனா வரையம், தருக்க சங்கிரகம் முதலிய பல நூல்களைத் தந்தார்.

சைவசமயிகளுக்காக, முதலாம் சைவ வினாவிடை, இரண்டாம் சைவ வினாவிடை, நித்திய கருமவிதி, புட்பவிதி, சிதம்பர மான்மியம், சைவசமய நெறியுரை, கோயிற்புராணவுரை, திருமுருகாற்றுப்படை உரை, சிவஞானபோதச் சிற்றுரை, பதினோராந் திருமுறை, திருவாசகம், அகத்தியர் தேவாரத் திரட்டு மற்றும் பாரதம, சேது புராணம், கந்த புராணம், பெரிய புராணம், திருக்குறள் பரிமேலழகருரை முதலிய நூல்களை வெளியிட்டார். இவற்றுள் சில நாவலர் எழுதியவை. மற்றவை அவரால் பரிசோதிக்கபட்டுத் திருத்தமுற அச்சிடப் பெற்றவை.

இவற்றைவிடக் கிறீஸ்தவ பாதிரிமார்களின் அவதூறுகளைக் கண்டித்துச் சைவ தூஷண பரிகாசம், சுப்பிரபோதம், மித்தியாவாதநிரசனம் முதலிய கண்டன நூல்களையும், அவ்வப்போது ஏற்பட்ட பல் பிரச்சனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் நாவலர் எழுதி வெளியிட்டார்.

நாவலர் சிறந்த ஒரு பேச்சாளராக மட்டுமன்றி, மிகச் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். தமிழ் எழுத்துக்களை மிகுந்த திறமையோடு அவர் கையாண்டார். தமிழ் மொழிக்கு இவ்வளவு சக்தி - அதன் வசன உருவத்தில் இருக்கிறதா? என்று கற்றோர் வியக்கத்தக்க விதத்தில் தமிழ் எழுத்துக்களை ஆள்பவராக அவர் விளங்கினார்.

9

புத்தகங்கள் எழுதத் தொடங்கியதும் அவற்றை அச்சிட்டு வெளியிடுவதற்காக நாவலருக்கு ஒரு அச்சகம் தேவைப்பட்டது. அந்தக் காலத்தில் யாழப்பாணத்தில் கிறீஸ்தவ பாதிரிமார்களிடம் மட்டுமே அச்சகம் இருந்தது. அவர் நாவலருடைய நூல்களை அச்சிடுவார்களா? எனவே தாமே ஒரு அச்சகத்தை நிறுவவேண்டுமென நாவலர் துணிந்தார். 1849ம் ஆண்டில் தமது இருபததேழாவது வயசில் அச்சகம் ஒன்று வாங்குவற்காக நாவலர் சென்னைக்குச் சென்றார்.

அக்காலத்தில் தென்னிந்தியாவில் திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திற்கும் தமிழு;கும் ஒரு நிலைக்களமாக உயர்ந்து நின்றது. நாவலர் சென்னை போகும் வழியில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் சென்றார். ஏற்கனவே நாவலரின் கீர்த்தி ஆதீனம் வரை ஓரளவு எட்டியிருந்தது. அதன் தலைவர் பெரிய கல்விமான். கற்றாரைக் கற்றார் காமுறுவர். ஆதீனத் தலைவர் நாவலரை வரவேற்று, இலக்கிய இலக்கண விஷயங்களிலும், சைவசித்தாந்த விஷயங்களிலும், அவரோடு அளவளாவினார். அந்த அளவிலேயே நாவலருடைய பெருமை ஆதீனத் லைவருக்கு நன்கு விளங்கி விட்டது. சில நாட்கள் நாவலரைத் தம்முடனேயே வைத்திருந்து மகிழ்ந்தார் அவர்.

ஒருநாள் அறிஞர்களுடைய சபை ஒன்றை ஆதீனத் தலைவர் கூட்டி அந்தச் சபையிலே சைவப் பிரசங்கம் ஒன்று செய்யும்படி நாவலரைக் கேட்டுக் கொண்டார்.

அன்று அந்தச் சபையிலே நாவலர் செய்த சொற்பொழிவு அந்த அறிஞர்களுக்கு மிகப் புதுமையாக இருந்தது. எடுத்துக் கொண்ட விஷயத்தைச் சுருங்கச் சொல்லி விளக்கிய திறனும், செந்தமிழ் நடையும், இலக்கணப் பிசகற்ற கவர்ச்சிகரமான சொற்பிரயோகமும், கற்றவர் மட்டும்றி மற்றெல்லோருமே விரும்பிக் கேடடகக்கூடிய தன்மையும் சபையோர் அனைவரையும் புல்லரிக்கச் செய்தது. 'ஆகா, ஆகா' என்று அவர்கள் தமது பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆதீனத் தலைவரும் மிக்க மனக்கிளர்ச்சி பெற்றவராய் அந்த அறிஞர்க் சபையிலே 'நாவலர்' என்ற பட்டத்தைச் சூட்டி அவரை 'ஆறுமுக நாவலர்' ஆக்கி வைத்தார்.

10

தமிழறிஞரும், சைவப்பிரசாரகருமாகச் சென்னைக்குச் சென்ற ஆறுமுகம் 'ஆறுமுகநாவலர்' ஆக மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார். வரும்போது ஒரு சிறிய அச்சகத்தையும் வாஙகிவந்து, யாழ்ப்பாணத்தில் தமது சைவப்பிரகாச வித்தியாசாலைக்குப் பக்கத்தில் அதை நிறுவினார். அந்த அச்சகத்திற்கு 'வித்தியானுபாலன யந்திரசாலை' என்று பெயர். 1849ல் நாவலருடைய அச்சகத்தின் அச்சு வேலைகள் ஆரம்பமாகின. மூச்சுவிட நேரமில்லாமல் நாவலருக்கு வேலைகள் நிறைந்திருந்தன. பேரிசிவல் பாதிரியாரிடம் தமிழ்ப் பண்டிதராக இருந்த வேலையையும் விட்டு நீங்கிவிட்டார். பேரிச்வலுக்கு மிகுந்த கவலை. எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அதிக சம்பளம் தரலாமென்றார். பேரிசிவல் பாதிhயாரிடம் நாவலருக்கு மிகுந்த நல்லபிப்பிராயம் இருந்தபோதிலும் அவருடைய வேண்டுகோளை ஏற்கமுடியவில்லை. நாவலரின் மனம் நிறைந்த இலட்சியக் கடைமைகள் அவரை 'வா, வா' என்று நெருக்கி, பேர்சிவலிமிருந்து பிரித்துவிட்டன.

பாடசாலை நிருவாகம், அச்சகத்தின் நீருவாகம், புதிய நூல்கள் எழுதுதல், பழைய ஏட்டுப் பிரதிகளைப் பரிசோதித்தல், சைவ தூஷணம் செய்வோருக்கு கண்டனம் எழுதி வெளியிடுதல், மாணவர்களுக்குக் கற்பித்தல், சைவப்பிரசாரச் சொற்பொழிவுகள் செய்தல், ஓ,ஓ, நாவலர் மூச்சுவிட முடியாதபடி வேலைகள் நிறைந்து கிடந்தன.

சுமார் பத்து ஆண்டுகள் இவ்விதம் கழிந்தன. யாழ்ப்பாணத்திலிருந்த சிறிய அச்சகம் தமது தேவைகளை நிறைவேற்றப் போதாமலிருந்ததை உணர்ந்தார். எனவே அந்த அச்சகத்தை விற்றுவிட்டு, சென்னையில் பெரிய அச்சகம் ஒன்றை நிறுவும் நோக்குடன் 1858ல் நாவலர் சென்னைக்குப் புறப்பட்டார்.

சென்னை போகும் வழியில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கும், தருமபுர ஆதீனத்திற்கும் மற்றும் வேதாரணியம், சீர்காழி, சிதம்பரம் முதலிய பல ஊர்களுக்கும் விஜயம் செய்து, சென்ற இடமெல்லாம் மிகுந்த மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டார்.

பல இடங்களிலும் சைவப் பிரசங்கங்கள் செய்தார். அறிஞாகள், பெரியார்களிடத்தில் நாவலருடைய மதிப்பு மேலும் மேலும் உயரலாயிற்று.

1859ம் ஆண்டு, வித்தியானுபாலன யந்திரசாலை என்ற பெயரிலே சென்னையில் ஒரு பெரிய அச்சகத்தை நிறுவிய நாவலர், அங்கே பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். அக்காலத்தில் இராமநாதபுர சமஸ்தானம் பொன்னுசாமிதேவரின் வேண்டுகோளுக்கிணங்க நாவலரால் அச்சிடுவிக்கப் பெற்ற புத்தகங்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பி;ள்ளையின் பாயிரத்தோடு வெளிவந்தன. அந்நூல்களுக்குப் பாயிரம் எழுதிய காரணத்தால் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மதிப்பு உயர்ந்தது. திருவாவடுதுறை ஆதீனம் அக்கணமே மீனாட்சி சுந்தரம்பிள்ளையை வித்துவானாக்கிக் கொண்டது. பிள்ளையின் வெகுகால முயற்சி பயன் செய்தது.

சென்னையில் நாவலர் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட காலத்தில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்தவர் மகாவித்துவான் மீனாடசி சுந்தரம்பிள்ளை. அவரும் தியாகராசச் செட்டியார் என்பவரும் நாவலருடைய பணிகளையும் திறமையையும் மிக மகப் பாராட்டிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

11

யாழ்ப்பாணத்தில் நாவலர் பிறந்த ஊர் நல்லூர். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நாவலருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. அந்தக் கோவிலின் சீர்திருத்தங்களுக்காக நாவலர் அநேக துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டார். சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

முதலில் நாவலரை எதிர்த்து அவருடைய செயல்களைப் பரிகசித்தார் கோயிலதிகாரி. அந்த அதிகாரிக்குப் பின்னால் வந்தவர், நாவலருடைய நேர்மையையும், பெருமையையும் உணர்ந்து, அவர் சொன்னபடி கோயிற் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு ஒப்புக் கொண்டார்.

தாம் தொடங்கி வைத்த சீர்திருத்த வேலைகள் பெரிதும் நிறைவேற்றப்பட்டு மிகச் சிறந்த முறையில் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் பிரகாசித்து வருவதை, இன்று சிலாரூபமாக கோவிலின் பக்கத்தே அமர்ந்து நாவலர் பெருமான் பார்த்துக் கொண்டிருப்பது யாழ்ப்பாண மக்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும்.

யாழப்பாணம் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலைப் போலவே, தென்னிந்தியாவில் சிதம்பர கோயிலிலும் நாவலருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. சிதம்பரம் நடராசப் பெருமானுக்குப் பூசை செய்பவர்கள் 'தீட்சிதர்' எனப்படுபவர்கள். அவர்களுடைய ஒழுங்கீனங்களைக் கண்டும் நாவலர் கொதித்து எழுந்து கண்டனங்களைத தொடுத்தார். 'வள்ளலார்' என்று புகழ்பெற்ற இராமலிங்க சுவாமிகளும் தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஒருசமத்தில் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். நாவலருக்கு மகா கோபம். நெற்றிக் கண்காட்டினாலும் குற்றம் குற்றமே. இராமலிங்கசுவாமிகளும் நாவலருடைய கண்டனங்களுக்குள் அகப்பட்டுத் திக்குமுக்காடினார்.

ஒருமுறை இராமலிங்கசுவாமி தீட்சிதர்களுடன் சேர்ந்து சிதம்பரம் கோயிலிலே ஒரு கூட்டம் கூட்டி, அக்கூட்டத்தில் நாவலரைக் கண்டபடி திட்டிவிட்டார்.

சிதம்பரம் நீதித்தலத்தில் வழக்குத் தொடுத்தார் நாவலர். சைவப் பிரசாரகரை அவமதித்ததாக வழக்கு. இராமலிங்கசுவாமி தனது தவறுகளை மனதிற்குள் உணர்ந்து கொண்டதாலே என்னவோ, தாம் அவ்விதம் நாவலரைத் தூஷிக்கவில்லை என்று நீதித்தலத்தில் சொல்லித்த தப்பிக் கொண்டார்.

இராமலிங்கசுவாமி 'வள்ளலார்' என்று புகழப்படுபவர். பக்திமான். சிறந்த பாவலர். ஆனால் நேர்மையும் நெஞ்சத் துணிவும் இல்லாதவரென்பதை நாவலருடைய வழக்கு எடுத்துக் காட்டி விட்டது.

நாவலரும் ஒருமுறை தவறாக நடந்த ஒருவரை கடுமையாக ஏசிவிட்டார். ஏச்சுவாங்கியவரும் நாவலர்மீது வழக்குப் போடடார். "ஓம் அவர் தவறு செய்தார். நான் ஏசினேன்!" என்று மிகுந்த நெஞ்சுறுதியுடன் நீதித்தலத்தில் சொல்லி ஏழு ரூபா குற்றமும் கட்டினார் நாவலர். - நேர்மையும் நெஞ்சுறுதியும் அங்கே பிரகாசித்தன.

நாவலர் சிதம்பரத்திலே ஒரு பெரிய சைவ ஸ்தாபனத்தை நிறுவவேண்டுமென்று கனவு கண்டார். அதற்குப் பெருந்தொகை பொருள் வேண்டும். 'எப்படியாவது' யாசிப்பது நாவலருக்கு வழக்கமில்லாததால் அவ்வளவு பொருளைச் சேகரிக்க நாவலரால் முடியவில்லை. கடைசியில் யாழ்ப்பாணத்தில் நிறுவியதுபோன்ற ஒரு பாடசாலையையே சிதம்பரத்திலும் நிறுவி நடாத்தினார்.

12

நாவலர் தமிழுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்து வந்துள்ளார். அவைகளை அவர் தமக்காக மட்டுமே வளர்ததுக் கொண்டாரா? தமது சொநத ஆன்ம ஈடேற்றம் ஒன்றையே கருதி வாழ்ந்த ஞானிகளும் இருந்தனர். ஆனால் நாவலர் தமிழையும் சைவத்தையும் தமது மக்;களுக்காகவே தமது வாழ்நாளைத் தியாகஞ் செய்தார் என்ற பெரிய உண்மையை நாம் மறந்து விடலாகாது.

சைவமும் தமிழும் அப்போது மிகுந்த ஆபத்தில் சிக்கியிருந்த காலம். அவைகளுக்குக் கொடுக்க வேண்டியது அவருக்கு முழுநேர வேலையாக இருந்தது. அப்படியிருக்கவும், இந்தக் காரியங்களுக்கு வெளியேயும் அவ்வப்போது சில பொதுத் தொண்டுகளில் நாவலர் ஈடுபட்டிருக்கிறார்.

1877-ம் ஆண்டில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மiழில்லாமல் நெல் விளைச்சல் அருகிப் போயிற்று. அதனால் கடும்பஞ்சம் உண்டானது. அநேக ஏழைமக்கள் சாப்பாடு கிடைக்காமல் துன்புற்றார்கள் அச்சமயத்தில் நாவலர் முன்வந்து பல தனவந்தர்களின் உதவிகளைச் சேகரித்து "கஞ்சித் தொட்டி" ஏற்படுத்திப் பசித்த ஏழைகளுக்குப் கஞ்சி வார்க்க ஒழுங்கு செய்தார்.

1878-ம் ஆண்டில் யாழப்பாணத்தில் இருந்த துவைனம் துரை என்பவர் நீதி நியாயந் தவறி நடக்கத் தொடங்கினார். தலைப்போன வழிதானே வாலும் போகும்? அவருக்குக் கீழிருந்த உத்தியோகத்தர்களும் கிராமத் தலைமைக்காரர்களும் கூட நீதி தவறத் தொடங்கினார்கள்.

நீதி எங்கே தவறினாலும் நாலருடைய நெற்றிக்கண் அங்கே பாயும். நாவலர் சீறி எழுந்து கண்டனங்களை எழுப்பினார். அவருடைய கண்டனங்கள் வெற்று வேட்டுக்களல்ல. உண்மையான சூடுகள். அந்தச் சூடுகள் துவைனம் துரையைத தாக்கி, வேலையிழந்து தண்டனைபெறும் நிலைக்கு அவரை வீழ்த்தின.

அந்தக் காலத்தில், இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சியின்; கீழ் இருந்தது. பாராளுமன்றம் இல்லை. கவர்ணரே சர்வாதிகாரி. ஆனாலும் நீதி செய்வதாகப் பாவனையேனும் செய்த ஆங்கிலேயர் சட்ட நிருபணசபை என்ற ஒரு சபையை ஏற்படுத்தி, அச்சபைக்குத் சுதேசப் பெருமக்கள் சிலரைத் தெரிவு செய்து அவர்கள் மூலமும் ஆலோசனைகளைப் பெற்றுவந்தார்கள்.

அந்தச் சட்ட நிரூபண சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு இன்று போலச் சர்வசன வாக்குரிமை கிடையாது. தகுதி வாய்ந்த பெருமக்கள் மாத்திரமே கூடி உறுப்பினரைத் தெரிவு செய்வர்.

1878-ம் ஆண்டு ஒரு தேர்தல் போட்டி வந்தது. சட்ட நிரூபண சபைக்குப் போவதற்கு இரண்டு பேர் போட்டியிட்டார்கள்.

ஒருவர் இப்போது எல்லோருக்கும் தெரிந்தவரும், மிகுந்த செல்வாக்குள்ளவருமான அப்புக்காத்து பிறிற்றோ என்பவர்.

மற்றவர் இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சேர்.பொன்.இராமநாமன்.

இராமநாதனுக்கு அப்போது அவ்வளவு செல்வாக்கு இல்லை.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையிலே பெரிய பெரிய மனிதர்களெல்லாம் கூடியிருந்தார்கள். அவர்களிலே பிறிற்றோவை ஆதரிப்பவர்களே அநேகர்.

இராமநாதனுக்கு ஆதரவாக நாவலர் இருந்தார்.

பிறிற்றோவுக்காகப் பல சட்ட அறிஞர்களும் தமிழறிஞர்களும் பேசினார்கள். இராமநாதனுடைய பக்கம் நாடி விழுந்துபோன நேரம்.

நாவலர் எழுந்தார்.

தமிழ் மொழியின் கம்பீரம் பிரகாசித்தது! நீதி தலை நிமிர்ந்தது!

இராமநாதன் நட்ட நிரூபண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

13

தமிழர்கள், சைவர்கள் - முக்கியமாக யாழ்ப்பாணத்தவர்கள் நாவலர் பெருமானை மறக்க முடியாது . - மறக்கக் கூடாது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் வாழ்ந்த மக்களுக்கு அத்தியாவசியமாக என்ன செய்யவேண்டியிருந்ததோ அதை நாவலர் செய்தார்.

மகாத்மாகாந்தி ஒரு அவதார புருஷர். அவருடைய காலத்தில் இந்திய மக்களுக்கு எது தேவைப்பட்டதோ அதை அவர் செய்தார்.

நாவலரும் ஒரு அவதார புருஷர். மகாத்மாகாந்தியைப் போலவே தாம் எடுத்துக் கொண்ட பிரசார வேலைகளுக்கும் மேலாக நீதிக்கு இடம் கொடுத்த மகான் அவர் சைவசமயத்தை நீதியின் உருவமென்று கண்டவர் நாவலர். "நமது சமயம் 'வைதீக சமயம்.' வைதீகமாவது வேதநெறி. அதாவது அறிவுநெறி. கருவி கரணங்களை நெறிப்படுத்தி அறிவுத்தூய்மை செய்யும் நெறி. சைவ சமயத்தவன் செய்யத்தக்கது எது, தகாதது எது என்று தர்மவிசாரமுடையவனாய், தனனிலையை உணர்ந்து, நீதி வழுவா நெறிமுறையில் தன் வாழ்க்கையை இட்டு வைத்து பாதுகாத்தற் பாலன்" என்று நாவலருடைய மனக்கருத்தைக் கூறியிருக்கிறஙார், அவருடைய 'வாரிசு' ஆக, எம்மிடையே விளங்கும் பண்டிதமணி, கலாநிதி கணபதிப்பிள்ளை அவர்கள்.

இம்மட்டோ!

மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகளால் நெரிந்து, புழுங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே,

"சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம்'' என்று எக்காலத்திற்கும் ஏற்ற சீர்திருத்தக் கருத்தைக் கூறி நீதி செய்தவர் நாவலர்.

நாவலரைப் போல் நமக்கு ஆளில்லை. - அவருக்கு முன்புமில்லை. பின்பும் இல்லை.

நாவலரை நாங்கள் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

14

சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக்களஞ்சியத் தொகுதிகளில் முதலாம்; தொகுதியில் பண்டிதமணி, கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் நாவலரைப்பற்றி இரத்தினச் சுருக்கமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இச்சிறிய நூலைச் சிறப்புச் செய்வதற்குக் அந்தக் கட்டுரையையும் தருகின்றேன்.


கலைக்களஞ்சியத்தில் நாவலர்

யாழ்ப்பாணத்து நல்லூரிலே செல்வாக்குள்ள சைவ வேளாளக் குடும்பம் ஒன்றில் 1822 ஆம் ஆண்டு மார்கழி மாதம் பிறந்தவர். தந்தை கந்தப்பிள்ளை: தாய் சிவகாமியம்மை. இவர் திண்ணைப்பள்ளியில் படித்த பிறகு 12ம் வயசில் பார்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் ஆங்கிலமும், சேனாதிராய முதலியார் சரவணமுத்துப் புலவர் முதலிய வத்துவான்களிடம் தமிழும் படித்தார். தமது பாடசாலையில் தமிழ், ஆங்கில உபாத்தயாயராகவும் தமக்குத் தமிழ் பண்டிதராகவும் அமர்த்திக் கொண்டு, பைபிளைத் தூய தமிழில் மொழியெர்க்கச் செய்தார். நாவலர் பைபிளை மொழிபெயர்த்து வருகிற காலத்திலே தமது சமயத்தை உணரவேண்டுமென்ற உணர்ச்சி தோன்றச் சைவசித்தாந்த சாஸ்தரங்களையும், திருமுறைகளையும், சமஸ்கிருதத்தையும் கற்றுச் சைவ ஆகமங்களிலே வேண்டி பகுதிகளையும் தாமே கற்றுக் கொண்டார். இளமை தொட்டே கோயில்களிற் புராணங்களுக்குப் பதப்பொருள் கூறி விருத்தியுரை சொல்லுதல், தருக்கித்தல் முதலிய பழக்கங்களும் இவரிடம் இருந்து வந்தன. சைவாநுஷ்டானங்களில் என்றுமே இவர் தவறியதில்லை.

அக்காலத்திலே பாதிரிமார் மதமாற்றத்துக்குக் கையாண்ட முறைகளால் நாவலருக்கு வருத்தம் உண்டாயிற்று அவருடைய வாழ்க்கையே மாறியது. அவர் இல்வாழ்க்கையிற் புகாமல் சமய வளர்ச்சிக்கே உழைக்க வேண்டும் என உறுதி செய்து கொண்டார். 24ம் வயசின் தொடக்கத்தில் மாணவர் சிலரைச் சேர்த்துக் சம்பளம் பெறாமல் இராக்காலங்களில் சமய நூல்களையும் கருவி நூல்களையும் படிப்பிக்கத தொடங்கினார். 25ம் வயசில் வெள்ளிக்கிழமை தோறும் பெருந்திரளானவர்களுக்குச் சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். பின்னர் தமது உத்தியோகத்தை விடுத்து 26ம் வயதில் யாழ்ப்பாண நகரத்தில் சைவப்பிரகாச வித்தியாலயத்தை ஸ்தாபித்தார். இவருடைய மாணவாகளே ஆசிரியர்கள் ஆனார்கள். மருமகரும் மாணவருமான வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை பாடஞ் சொல்வதிலேயே காலங் கழித்தார். சபாபதி சநாவலரும் இவருடைய மாணவர்களிற் சிறநதவர். தமிழ்நாடு முழுவதிலும், சிதமபரம் முதலிய முக்கியத் தலங்கள் தோறும் சைவ வித்தியாசாலைகள் அமைக்க வேண்டும் என்கிற ஊக்கம் நாவலருக்கு வரவரக் கிளர்ந்தது. நாவலர் என்ற பட்டம் 27ம் வயசில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்து. இராமநாதபுர சமஸ்தானம் நாவலர் முயற்சிகளுக்கு வலிந்து உதவ முன்வந்தது.

சிறுவர்களுக்கும் வயது வந்தவர்களுக்கும் உபயோகமான கருவி நூல் சமய நூல்களின் இன்றியமையாமையை உணர்ந்து புதியவனவாக நூல்களை எழுதவும் ஏட்டில் இருந்தவைகளை ஆய்ந்து அச்சிடவும் இவருக்குப் பணிப்பு ஏற்பட்டது. இலங்கைப் பூமி சாஸ்திரம் கூட இவர் எழுதினார். நாவலருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் பதிப்புக்களும் சூழ்நலையின் படிப்படியான வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவை. அக்காரணத்தால் இவர் முயற்சிகளெல்லாம் சிறந்த அடிநிலையிலிருந்து தொடங்கி நடந்தவைகள் எனலாம்.

1. இவர் எழுதிய 1ம் 2ம் 4ம் பாலபாடங்கள், திருவிளையாடற் புராண வசனம், பெரியபுராண வசனம், சூசனம் என்பவை ஒரு வகையில் அமைந்திருக்கின்றன.

2. இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம், நன்னூற் காண்டிகை எழுதியதும், நன்னூல் விருத்தி, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பியப் பாயிர முதற் சூத்திர விருத்தி, பிரயோக விவேகம், சேனாவரையம், தருக்க சங்கிரகம், நிகண்டு பதிப்பித்ததும் மற்றொருவகை.

3. 1ம் 2ம் சைவ வினாவிடை, நித்திய கருமவிதி, சிவால தரிசனவிதி, புட்பவிதி, சிதம்பர மான்மியம், சைவசமய நெறியுரை, கோயிற்புராண உரை, திருமுருகாற்றுப்படை உரை எழுதியதும் சிவஞானபோதச் சிற்றுரை, பதினோராம் திருமுறை, திருவாசகம், அகத்தியர் தேவாரத் திரட்டு பதிப்பித்ததும் வேறொருவகை.

4 பாரதம், சேதுபுராணம், கந்தபுராணம், பெரியபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்கோவையார் உரை ஆகிய பதிப்புக்கள் வேறொரு வரிசை.

5. சைவதூஷண பாகாரம், சுப்பிரபோதம், மித்தியவாத நிரசனம் முதலிய கண்டன நூல்கள் எழுதியது ஒருவகை. மேலும் சமூக அரசியற பிரச்சனைகளில் ஈடுபட்டுக் காலந்தோறும் வெளியிட்ட கட்டுரைகள் , கண்டனங்கள் மிகப் பல. அவற்றுட் சில 'நாவலர் பிரபந்தம் ' என்ற பெரில் வெளி வந்திருக்கின்றன.இவர் இயற்றி கீர்த்தனங்களும் பாடல்களும் சில உண்டு. எணிணறந்த பிரசங்கங்களும் புராண வியாக்கியானங்களும் இவர் செய்தவை எழுதப்படவே இல்லை.

தமிழ் உரைநடை ஆறுமுகநாவலரால் ஒரு வகைத் திருத்தமும் அழகும் பெற்றது.

சி.க.

------------------------------------