கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நாடகம் நான்கு  
 

சி.மௌனகுரு, நா.சுந்தரலிங்கம், இ.முருகையன், இ.சிவானந்தன்

 

நாடகம் நான்கு

சி.மௌனகுரு, நா.சுந்தரலிங்கம், இ.முருகையன், இ.சிவானந்தன்.


வெளியீட்டுரை

நடிகர் ஒன்றியத்தின் இரண்டாவது வெளியீடாக 'நாடகம் நான்கு' என்னும் நாடகத் தொகைநூல் இப்பொழுது வெளியாகிறது. 1970 ஆம் ஆண்டுக்கு முன்பின்னாக, ஈழத்துத் தமிழ் நாடக உலகிலே முனைப்பான முயற்சிகள் சில மேற்கொள்ளப்பட்டன. அம்முயற்சிகளின், அச்சாதனைகளின் தொடக்கப் புள்ளிகள் என்று கருதத்தக்க நான்கு நாடகங்களைப் புத்தகமாக வெளியிடுவதில் நடிகர் ஒன்றியம் பெருமை கொள்கிறது.

ஈழத்துத் தமிழ் நாடகம்பற்றி எழுதுவோர் பலரும் அடிக்கடி 'சங்காரம்' பற்றியும் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த நாடகங்களையிட்டு நேரடியாக அறிந்துணர்ந்துதான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால், இந்த நாடகங்கள் மிகச்சில தடவையே மேடையேறின. ஆகையால், மேடையேறிய சமயத்தில் இவற்றைப் பாராதவர்கள் வெறும் செவிவழிச் செய்தியாகவே இவைபற்றிக் கேள்விப்பட்டிருப்பர். ஆகையால் நேரடியான தொடர்பு கிட்டியிருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது முதலாவது தடவையாக இந்த நாடகப் பிரதிகளைத் தமிழ்ப்பொதுமக்கள்ன் கைகளிலே சமர்ப்பிக்கும் நறிபேறு எமக்குக் கிட்டியுள்ளது. இனி நாடக இலக்கியம் என்ற வகையில் இவற்றிம் குறைநிறைகளை விமரிசகர்கள் தாராளமாக மதிப்பீடு செய்யலாம்.

அவ்வாறு மதிப்பீடுசெய்ய முயல்வோர் இந்த நான்கு படைப்புகளிலுமுள்ள பொதுமைப் பண்பை இனங்காண்பது மட்டுமன்றி இவற்றிலுள்ள வேறுபாடுகளையும் கண்டுகொள்வர். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளமையை உணர்வர். பல வேறுவடையிற் பரிசீலனை மேற்கொள்ளல் வேண்டும் என்ற வேட்கையே அப் பன்மைப்பாட்டுக்குக் காரணம் எனில் பிழையாகாது. அநுபவ மெய்ம்மைகளுக்கு உருவம் கொக்கும்போது கலைஞர்களின் மனோதர்மத்துக்கு ஏற்ப அவர்களின் கலையாக்க நெறிககளும் வித்தியாசப்படும், வித்தியாசப்படலாம் என்பதற்கு இத்தொகுதியிலுள்ள நான்கு நாடகங்களுமே சாட்சி

'காலம் சிவக்கிறது' என்னும் நாடகத்தை எடுத்துக்கொண்டால் அதில் நடைமுறை மெய்ம்மைகள் ஓரளவு இயற்பண்புடன் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அதேவேளையில் அதில்வரும் பாட்டுகளும் ஆட்டங்களும் மோடிநெறிப்பட்டவையாக (Stylised) உள்ளன. இருவகையான கலையாக்க நெறிகள்ன் சங்க€த்தை இங்கு நாம் காண்கிறோம். இயற்பண்பு வாய்ந்த சித்திரிப்பு ஹென்றிக் இப்ஸனை ஆதரிசமாகக் கொண்ட பேணாட் ஷோவின் வழியாக, பேராசிரியர் கணபதிப்பிள்ளை, இலங்கையர்கோன் போக்றோர் மூலமும், ஐரோப்பிய நாடகங்களின் மொழிபெயர்ப்புகள் மூலமும் எமக்குக் கிட்டியது எனலாம், பாட்டும் ஆட்டமும் எமது பழைய கூத்துமரபின் அடியாக வந்தவையாகும். ஒருகாலத்தில் நாடகங்களிலே பாட்டு இடம்பெறுவது பெரிய பாவமாகக் கருதப்பட்டது. சாமானிய வாழ்வில் எவரும் பாடுவதில்லையே! வாழ்க்கையின் ஒரு துண்டமாகிய நாடகத்தில் மாத்திரம் உரையாடல்கள் செய்யுளாயும் இசைப்பாட்டாயும் வரலாமோ? சாமானிய வாழ்வில் எவரும் தெருவிலே நடக்கும்போது நாட்டியமாடுவதில்லையே! நாடகத்தில் மட்டும் இவர்கள் கூத்தாடலாமோ? சாமானிய வாழ்வில் உணர்ச்சிகரமான கட்டங்களிலும் மேளதாளங்கள் கேட்பதில்லையே1 நாடகத்தில் அவை கேட்கலாமோ? இந்த விதமான எண்ணங்களே நாடக அரங்குகளிலிருந்து ஆடல்களையும் பாடல்களையும் விலக்கிவைத்தது. சாக்குப்படங்குகளாலே சுவர் அடித்து கதவு-நிலை வைத்து, யன்னல் வைத்து, டிஸ்ரெம்பர் பூசி, செற்றி சோஃபாக்கள், புத்தக றாக்சை, பூங்கொத்து, வானொலிப்பெட்டி முதலிய சம்பிரமங்களோடு மேடையலங்காரம் செய்துவிட்டு அங்கு வைத்துள்ள தளபாடங்களிடையே நின்றபடி வசமம் பேசுவதே நாடகம் என்று கருதப்பட்ட காலம் அது. ஆனால் ஒன்று: பேணாட் ஷோ போன்ற உன்னதமான பெருங்கலைஞர் சையில், அவர்கள் அமைத்துத் தந்த உரையாடல்களின் புத்திநயச்சிறப்பாலும் கலைக்கட்டமைவாலும் மேற்குறித்த வகையான நாடகங்களுஞ் சிறப்பின் சிகரங்களை எட்டியுள்ளன. இப்பொழுதும் இவ்வகை நாடகங்கள் ஆங்காங்கே ஆடப்படுவதுண்டு. ஆனால் வெது சீக்கிரத்தில் இவை தமது பிறப்பிடமாகிய ஐரோப்பாவிலும் தமது மவுசை இழந்தன. கலை என்பது ஓர் ஆக்கம். ஆகையால் அது இயற்கையின் குருட்டுப் பிரதியன்று. உயிர்ப்புள்ள மனித உள்ளத்தில் நடைமுறை மெய்ம்மைகளால் எறியப்படும் படிமமே கலை. மனித சிந்தனையில் இயற்கையின் பிரதிபலிப்பு, இயக்கமற்ற, உயிர்ப்பில்லாத, வெறும் அருவமான ஒன்று அன்று" என லெனின் கூறியது கலையுலகிலும் அர்த்த நிறைவுள்ள ஓர் எண்ணமாக மலர்ச்சி பெற்றது. அதாவது கலையாக்கத்தின்போது சில திரிபுகள் நேரும்; ஆனால் அத்திரிபுகள் மேலதிகமான நல்விளக்கத்துக்கும் உணர்வுத் தெளிவுக்கும் இட்டுச் செல்லுமானால் அவை வரவேற்கத் தக்கவையே என்னும் உண்மை, கலைஞர்கள் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வாறு ஏற்றுக்கொண்ட நாடகக்கலைஞர்கள் பலவிதமான பரிசோதனைகளில் ஈடுபட்டனர்' இவர்களின் நாடகப்படைப்புகளில், பாடல்களும் ஆடல்களும் புதிய நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பெற்றன. இங்ஙனம் புதுமை செய்த கலைஞர்களுள் (B) பிறெச்ற் முதன்மையானவர். இவர் மூலமே சிங்கள நாடக உலகு மோடிநெறியின் பெறுமதியை உணர்ந்துகொண்டது. இவ்வாறு சிங்கள நாடக உலகில் மோடி நெறிக்கு மவுசு கூடிய பின்புதான், தமிழ்நாடக உலகிலும் கூத்து வடிவத்தின் பெறுமதி நன்கு உணரப்பட்டது. பேராசிரியர் சு.வித்தியானந்கனின் கூத்துப்பணிகள் வேகமும் வீச்சும் பெற்றன. கூத்தின் கூறுகள் சிலவற்றை இயற்பண்புஉரையாடல்களுடன் இணைத்த போது கிடைத்தபேறே இ. சிவானந்தனின் 'காலம் சிவக்கிறது' என்னும் படைப்பாகும்.

நா. சுந்தரலிங்கத்தின் "அபசுரம்" வேறொரு வகையானது. இந்த நாடகம் மேற்கத்தைய அபத்த (absurd) நாடக வகையின் சாயலைக் கொண்டது" என்று ஆசிரியரே குறித்துள்ளார். அவ்வகையின் சாயலைக் கொண்டதே தவிர, அவ்வகையைச் சேர்ந்தது அன்று. ஏனென்றால், மேற்கு நாடுகளில் அபத்த நாடகங்களை எழுதிய அயனெஸ்கோ போன்றோரின் நோக்கம், வாழ்க்கை அர்த்தமற்றது என்றும் அபத்தமானது என்றும் காட்டுவதுதான். எண்ணப் பரிமாற்றத்துக்கு உதவவேண்டிய மொழியும் உரையாடல்களும் வெறுஞ் சம்பிரதாயங்களாக, உள்ளீடில்லாத கோறைகளாகச் சத்தற்றுப் போய்விட்டமையைக் காட்டுவதும் அவர்களின் நோக்கமாகும். ஆனால், சுந்தரலிங்கமோ வாழ்க்கையை அர்த்தமற்றதாகவோ அபத்தமானதெனவோ காணவுமில்லை, காட்டவுமில்லை. அவர் அபத்த நாடக உத்தியைக் கையாண்டு ஓர் அரசியற் செய்தியைக் குறிப்பாய் உணர்த்துகிறார், பொதுமக்களை ஏமாளிகளாக்கும் சமூக சக்திகளையும், அறியாமையாலும் அறிவு நுட்ப 'மிகுதி' யாலும் கூட மெய்ம்மைகள் 'பொதுவர்களின்' கிரகிப்புக்கு உட்படாது நழுவி விடுவதையும் நா.சுந்தரலிங்கம் இனங் காட்டுகிறார். மிகவும் சுவையான முறையிலே இங்கு கலை வெளிப்பாடு நிகழ்ந்துள்ளது. தத்துவ உலகிலே (ஹெ(gகலின் இயங்கியல் முறையை ஏற்றுக்கொண்டு காள் மாக்ஸ். கலை உலகில், ஒரு சிறிய அளவிலே, அதேபோன்றதொரு, காரியத்தைச் செய்கிறார், சுந்தரலிங்கம். மேற்கு நாட்டாரின் அபத்த உத்தியை ஓரளவு ஏற்றுக்கொண்டு, வேறு வகையான உள்ளடக்கத்தை அவ்வுத்திமூலம் கையாண்டுள்ளார். அவர் கையாண்டுள்ள முறையில், உத்தியும் உள்ளடக்கமும் நன்கு பொருந்தி வருவது அவரது கலையின் வெற்றியாகும்.

'சங்காரமும்', 'கடுழியமும்' செய்யுள் வடிவில் உள்ளன. மௌனகுருவின் செய்யுள் இசைப்பா; முருகையனின் செய்யுள் இயற்பா. மௌனகுருவின் அரக்கர்களும் சமுதாயமும் முழுமையான குறியீடுகள்; ஆனால் முருகையனின் சயந்தனும், பாங்கனும் மேலாளரும், வீரவாகுதேவரும் குறியீடுகளாயுள்ள அதே வேளையில் தமது மனித இயல்புகளையும் ஓரளவு பேணிக் கொள்ளுகின்றன. மௌனகுருவின் பாத்திரங்கள் தம்மை இன்னார் எனத்தாமே அறிமுகஞ் செய்து கொள்ளுகின்றன. அது, கூத்து மரபு. குறியீடுகளாகிய பாத்திரங்களைப் பெயர் கூறி அறிமுகஞ் செய்கையில், அவற்றை இன்னார் என அடையாளங் காண்பது அவையோர்க்குச் சுலபமாகிறது. அரக்கர்கள் கொடியவர்கள் என்பதும் அவர்கள் சஞ்சாரஞ் செய்யப்படல் வேண்டும் என்பதும் மரபுவழி வரும் எண்ணங்கள். இவ்வெண்ணங்களின் பிற்புறத்திலே 'சங்காரம்' என்னும் கூத்து இயற்றப்பட்டுள்ளமையால், இக்கூத்தில் நாட்டார் மரபுக் கூறுகள் நவீன படைப்பொன்றுக்கு உறுதுணையாகவும் உயித்துணையாகவும் பயன்பட்டுள்ளமையை காண்கிறோம்.

கடூழியத்தில், பாத்திரங்களின் செயல்களும், பேச்சுக்களுமே அவர்களை இன்னார் என அறிமுகஞ் செய்கின்றன. சயந்தன், வீரவாகுதேவர், வீர மகேந்திரம் என்னும் பெயர்கள் மாத்திரம் கந்தபுராணத்துச் செய்திகளை நினைவூட்டுக்கூடும். அங்ஙனம் நினைவூட்டப் பெற்றோர் நாடக நயப்பிலே சற்று அதிகமான பெறுபேற்றை அடைதல் கூடும். அப்புராணச் செய்திகளை அறியாதோர், அந்த அறியாமை காரணமாக நாடக நயப்பிலே பேரிழப்பை எய்திவிடுவர் என்று கூறுதலும் பொருந்தாது. அதுபோலவே 'கடூழியத்தின்' இறுதியில் வரும் "கையில் இரத்தக் கறை" பற்றிய குறிப்பு எவருக்கேனும் ஷேக்ஸ்பியரின் மக்பெத்தை நினைவூட்டலாம். மற்றும்படி 'கடூழியத்தின்' உரையாடல்களும் செய்கைகளும் தம்மளவில் நின்று பொருள் பயப்பனவே. 'சங்காரமும்' 'கடூழியமும்' செய்யுள் நாடகங்கள் ஆயினும் அவற்றின் அணுகு முறைகளிடையேயுள்ள வேறுபாடுகளும் மனங்கொள்ளத்தக்கன.

மேற்காட்டியவாறு பல ஒற்றுமைகளையும் சிற்சில வேற்றுமைகளையும் கொண்ட இந்த நான்கு நாடகங்களும், எழுபதுகளில் எழுந்த பிற நாடகங்கள்மீது கணிசமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளன. அது புறம்பாக ஆராயப்பட வேண்டியதொன்று. இவை புத்தகமாக வெளிவருவது அவ்வகை ஆராய்ச்சிக்கும் வழி செய்யும் என நம்புகிறோம்.

முன்னுரை உதவிய பேராசிரிய க.கைலாசபதி அவர்களுக்கும், மேலுறை ஓவியத்தை வரைந்து தந்த ஓவியர் கே.கே.ராஜா அவர்களுக்கும், அச்சிட்டளித்த மட்டுவில் திருக்கணித அச்சகத்தாருக்கும் நடிகர் ஒன்றியத்தின் நன்றி உரியது.

11, கிறெகறி இடம், நடகர் ஒன்றியம்
கொழும்பு. 1980-05-01

---------------------------------------------

ஈழத் தமிழருக்கெனத் தனித்துவம் மிக்க ஒரு தேசிய நாடக மரவு தேவை. இதுகால வரை ஈழத்தில் நடைபெற்ற முனைப்பான-காத்திரமான நாடகங்கள் யாவும் இத்தேசிய மரபை நோக்கிய தேடலாகவே எமக்குப் படுகிறது. எமது நாடக மரபின் ஊற்றுக்கண் எமது பண்டைய கூத்தே.

அந்நிய ஆட்சியும், ஆதிக்கமும், எமது கலாசாரக் கூறுகளைச் சிதைத்தன. எமது கூத்து மரபும் செல்வாக்கிழந்தது. புதிய நாடக வடிவங்கள் அவற்றின் இடத்தைப் பெற்றன.

எமது நாடக மரபை நாம் இடைக்காலத்தில் இழந்திருந்தாலும், கிராமங்களில் அதன் உயிர் ஓயவில்லை. அறுபதுகளின் பின் நாம் நமது மரபைப் புதுப்பித்தோம்.

காலம் மாறிவிட்டது. மீண்டும் அதே கூத்து மரவினை இன்னும் பேணவேண்டியதில்லை. அப்படியே பேணவும் முடியாது. உலக நாடக வளர்ச்சி கூர்ப்படைந்த அதே வேளை, சமாந்தரமாகத் தேசிய வாழ்வின் வளர்ச்சிப் படிகளிலும் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. இவற்றிற்கியைய நமது பழைய கூத்துமரபின் கட்டமைப்பும் புத்துருப் பெறவேண்டும். அவ்வாறு உருப்பெரும்போது உலக நாடக வளர்ச்சிப் பண்புகளும் நமக்கு நிச்சயமாகக் கைகொடுத்து உதவும். அத்தகையதொரு புதிய மரபைத் தோற்றுவிக்கும் வரலாற்றுக் கடமை நமக்குண்டு. அறுபதுகட்குப் பின்னர் இம்முயற்சிகள் நடைபெற்றமையையும், இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டருப்பதையும் உண்மையான நாடக அபிமானிகள் அறிவர்.

நமது நாட்டுக்கெனப் பிரத்தியேகமான பிரச்சினைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உள்ளன. இவற்றை நாம் தேசிய நாடக வடிவத்தினூடாகக் கொண்டவர வேண்டும். நாடகங்களின் கருப்பொருளாக தேசியத் வாழ்வு அமைந்து, நமது பாரம்பரிய மரபுகளில் வேரூன்றி உயிர்த்து எழும்போதுதான் ஒரு தனித்துவமான ஈழத்துத் தேசிய நாடக மரபை நாம் படைத்தவராவோம்.

நாம் நினைத்த அளவு தேசியப்பண்பினைத் தேசிய நாடக வடிவுட் கொண்டு வந்தோமா என்பதை நாடக ஆர்வலரே தீர்மானிக்கவேண்டும். எமது 'எண்ணமோ பெரிது-காரியமோ சிறிது' நேர்மையுடனம்-சத்தியத்துடனும் நாம் மேற்கொள்ளும் அந்த நீண்ட பயணத்தில் எம்மைப் புரிந்துகொண்டு எம்முடன் சேர்ந்துழைக்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மௌ-முருகையன்-சிவா-கந்தா.

---------------------------------------------

முன்னுரை

நாற்பது வருடங்களுக்கு முன்பு கலாநிதி க.கணபதிப்பிள்ளை (1903-1968) அவர்கள் நானாடகம் (1940) என்னும் நூலை வெளியிட்டார். இலங்கைத் தமிழ் நாடக இலக்கிய வரலாற்றில் தனிச் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுள்ள அந்நூல் உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகர வாழ்க்கை ஆகிய நான்கு சமூக நாடகங்களைக் கொண்டது. பல துறைகளில் முதல் முயற்சியாளராகவும் வழிகாட்டியாயும் விளங்கிய கணபதிப்பிள்ளை அவர்கள். 1936 ஆம் வருடம் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக நியமனம் பெற்ற காலத்திலிருந்தே நாடகங்கள் எழுதி வந்தார்.

கல்வித் துறையிலும், பொதுவாழ்க்கையிலும், அரசாட்சியிலும் ஆங்கிலமே அரசோச்சிய காலப்பகுதியில், தமிழ் படித்தோர் 'பனங் கொட்டைகள்' என்று பரிகாசஞ் செய்யப்பட்ட காலப்பகுதியில், பல்கலைக் கழகத்திலே மாணாக்கர் நடிப்பதற்கு உகந்த நாடகங்களைத் தமிழில் எழுதியமையும், "வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவார் பேசல் வேண்டும்" என்று கொள்கைப் பிரகளனஞ் செய்ததோடமையாது அதற்குத் திருட்டாந்தமாக "யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பொதுவாயும் பருத்தித்துறைப் பகுதிக்குச் சிறப்பாயும் உள்ள" பேச்சுமொழியைக் கையாண்டமையும், சமகாலச் சமூகப் பிரச்சினைகளையும் அரசியற் பின்னணியையும் பொருளாகக் கொண்டமையும், கால ஓட்டத்தை உணர்வு பூர்வமாகச் சித்தரிக்க முற்பட்டமையும் பேராசிரியரது நாடகங்களின் சிறப்பியல்வுகள். முதல் தொகுதியைத் தொடர்ந்து 1952 இல் இரு நாடகம் என்ற நூலை வெளியிட்டார் பேராசிரியர். இவற்றுள் இரண்டொன்றிலே துன்பியற் பண்பு படிந்துள்ளதாயினும் பெரும்பாலானவற்றில் நகையோடியைந்த அங்கதப் பண்பே அடிநாதமாயிருக்கக் காணலாம். சமத்காரமும் சாதுரியப் பேச்சும், எவரையும் புண்படுத்தாக இங்கிதமும், சிந்திக்க வைக்கும் ஹாஸ்யமும், விஷயத்தில் அமிழ்ந்து விடாது விலகி நிற்கும் ஒருவகையான "பற்றற்ற" போக்கும் பேராசியரது நாடகங்களின் பிரதான பண்புகள் எனலாம். முப்பதுகளின் முற்பகுதியில் இலண்டனிலே ஆராய்ச்சி மாணவனாக இருந்த வேளையில் பெர்னாட் ஷாவின் நாடகங்களையும் ஐரோப்பிய நாடகாசிரியர் சிலரின் ஆக்கங்களையும் கண்டு களித்த கணபதிப்பிள்ளை அவர்கள் மொழியில் ஈடுபாடுடையவராயும் இருந்தமையால் நாடகவியலில் கொண்டிருந்த அக்கறையையும் மொழியியல் அறிவையும் இணைத்து நாடகங்கள் எழுதினார் எனக் கருதுவது தவறாகாது. பெர்னாட் ஷாவின் `Pygmalion' போன்ற நாடகம் கணபதிப்பிள்ளை அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என ஊகித்தல் தருக்கத்தின்பாற் படுவதாகும்.

நாற்பது வருடங்களுக்குப்பின் வெளியிடப்படும் நாடகம் நான்கு என்னும் இந்நூலைப் படிக்கும்பொழுது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு மாற்றங்களை எண்ணிப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. (சில வருடங்களுக்கு முன்னர் இந் நான்கு நாடகங்களையும் மேடையிற் சுவைத்த அநுபவத்தோடு இப்பொழுது நூல் வடிவிற் படிக்கும் அநுபவமும் சேர்கின்றபொழுது அலாதியான உணர்வு மேலிடுகிறது.) நானாடகம் என்ற தலைப்பே மரபு வழிப்பட்ட உணர்வினைத் தருகிறது. நாடகம் நான்கு என்ற தலைப்பு நவீனத்துவம் தொனிப்பதாயுள்ளது. தொகை நூல்களை எண்களாற் குறிப்பிடும் வழக்கம் சங்க மருவிய காலத்திலிருந்தே நிலவி வந்துள்ளதாயினும், நமது நாடக உலகிலே இவ் வழக்கம் நிலவி வந்துள்ளதாயினும், நமது நாடக உலகிலே இவ் வழக்கம் பேராசிரியர் தொடக்கி வைத்த பாணியைப் பின்பற்றிய வருகிறது. சென்ற வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் வெளியிட்ட ஆறு நாடகங்கள் (1979) இத் தொடர்பில் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியரின் நாடகங்களை இவ்விடத்திற் குறிப்பிடுவதற்கு வேறு காரணமும் உண்டு. நாடகாசிரியர் என்ற வகையில் நாடகப் பொருள், அரங்கியல் உத்தி என்பனவற்றிலே அவர் பாரதூரமான மாற்றங்களைப் புகுத்தினார் என்றோ பரீட்சார்த்தங்களை மேற்கொண்டா என்றோ கூறுவதிற்கில்லை. மரபு வழிப்பட்ட இயற்கை நவிற்சி நாடகங்களையே அவர் பெரும்பாலும் எழுதினார். கற்றோரால் புறக்கணிக்கப்பட்ட பேச்சுமொழியைக் கச்சிதமாகக் கையாண்டமையே அவரது தனித்தன்மை வாய்ந்த சாதனையாகும். அத்துடன் பல்கலைக்கழகச் சூழலிலே, ஆய்வறிவு சார்ந்த சூழமைவிலே அவர் எழுதிய நாடகங்கள் அரங்கேறியமையினால் சில அநுகூலங்கள் கிடைக்கப் பெற்றன. அவற்றி சிலவற்றை இங்கு குறிப்பிடுதல் ஏற்புடைத்தாயிருக்கும். ஆர்வமும், ஆற்றலும் இளமைத் துடிப்பும் நிறைந்த பட்டதாரி மாணாக்கர் தமக்கேயுரிய தன்னம்பிக்கையுடனும் சுவை நயத்துடனும் அந் நாடகங்களில் பங்கு பற்றினர். (நமது சமுதாயத்திலே பொதுவில் பல்கலைக்கழக மாணாக்கர் உயர்ந்தோர் குழாத்தினராய்க் கருதப்படுதல் கவனிக்கத் தக்கதொன்று.) மாணாக்கரின் பெற்றோர், உறவினர் நண்பர்கள் முதலியோர் வருடாவருடம் நடைபெற்ற நாடகங்களை உரிமையுணர்ச்சியுடன் பார்த்துச் சுவைத்து உற்சாகமூட்டினர்; பார்வையாளர் பிரச்சினை இருக்கவில்லை. பல்கலைக் கழக நாடகங்களுக்கென ஒரு 'புரவலர்' - இரசிகர் கூட்டம் இருந்தது. (ஐம்பதுகளில் பேராதனைத் தமிழ்ச் சங்கம் மேடையேற்றிய நாடகங்களில் நடித்தும் வேறு வகைகளிற் பங்கு பற்றியும் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்றபோது இந்த இரசிகர் கூட்டம் பற்றி நான் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.) ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து நடிக்கும் பழக்கம் அந்நாட்களில் பல்கலைக் கழகத்திலேயே நிலவியது. பொதுவாக 'அமெச்சூர்' நாடகங்களில் ஆண்களே பெண் பாத்திரங்களை ஏற்று நடித்தல் பொது வழக்காயிருந்தது. பல்கலைக்கழகத்திற்கு வந்த மாணவிகளிற் சிலர் ஆண்களோடு 'சரிநிகர் சமானமாய்' நடிக்க முன்வந்னர். அசாதாரணமான கற்பனைகளில் இலயித்து ஈடுபடும் உரிமை கவிஞர்களுக்கு உண்டு. அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அது. ஆங்கிலத்தில் அதனை poetic licence என்பர். அதுபோலவே பிரித்தானிய பல்கலைக்கழக மரபுக்களுக்கமைய பட்டதாரி மாணாக்கர் நடை உடை பாவனை, நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் முதலியவற்றில் பொதுவான நியதிகளையும் ஒழுகலாறுகளையும் மீறி நடத்தல் 'பருவத்துக்கம் படிப்பிற்கும் பொருந்தும்' செயலாகக் கொள்ளப்பட்டது. அம் மரபைப் பின்பற்றிய நமது பல்கலைக் கழகத்திலும் பட்டதாரி மாணவர் மேடையேற்றிய நாடகங்களில் ஏதாவது ஆட்சேபத்திற்குரியதாய்த் தோன்றினம் அது "பட்டதாரிக் குறும்பு" எனப் பொருட்படுத்தாமல் விடப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையிலேயே பேராசிரியரின் நாடகங்கள் அரங்கேறின நாடகாசிரியர் சிற்சில விஷயங்களைச் சீர்திருத்த நோக்கத்துடன் கூறியிருக்கக் கூடுமாயினும் அன்றைய பார்வையாளர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு நோக்கிலேயே அந்நாடகங்களை அணுகினர். இன்னுமொன்று, பேராசிரியரின் முற்பட்ட நாடகங்கள் அனைத்தும் கொழும்பிலேயே மேடையேற்றப்பட்டன. தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து சென்று கொழும்பில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் வேராசிரியரின் நாடகங்களில் தமது ஊர்க் கதைகளையும், காட்சிகளையும் மீட்டும் கண்டு களித்ததோடு மானசீகமாக வீட்டு நினைவு உணர்வினில் சிறிது நேரம் மிதக்கவும் செய்தனர். சுருங்கக் கூறின் அந் நாடகங்கள் கற்றோரால் கற்றோரைக் காமுற்றோர்க்குக் களிப்பூட்டும் விதத்தில் தயாரித்து அளிக்கப்ட்டவை. என்பதைல் தவறில்லை இது மனங்ககொள்ள வேண்டிய செய்தியாகும்.

பல்கலைக்கழக நாடக அரங்கின் வழி வழி வரும் இம் மரபு இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றைக் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பாதித்துள்ளது. ஆகையால் இது ஊன்றிக் கவனித்தற்குரியது. கால ஓட்டத்தையொட்டித் தவிர்க்க இயலா மாற்றங்கள் சிலபல நிகழ்ந்துள்ள போதும், ஏறத்தாழ 1960 கள் வரையிலும் இப் பொது மரபு நெறியிலேயே பல்கலைக்கழக நாடகங்கள் உருவாகி வந்தன. அண்மையில் இ.சிவானந்தன் வெளியிட்டுள்ள இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் நாடக அரங்கம் (1979) என்னும் ஆய்வு நூல் இவ்வரலாற்றை நுணுக்கமாக விவர்க்கிறது. (கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற போக்கில் சுயதிருப்தியும் தன்னிறைவு மனப்பான்மையும் கொண்டு தாம் வந்த வழியறியாது தடுமாறும் இன்றைய நாடகக் கலைஞர்கள் சிலர் இந்நூலைப் படித்தால் பயனடைவர்.) நாடகக் பொது வளர்ச்சியிலே பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு விதந்துரைக்கத் தக்கதாய் இருப்பினும், பேராசிரியரின் ஆக்கங்களை அடியொற்றி வந்த நாடகங்கள் அனைத்தும் போற்றத் தக்கனவாய் அமையவில்லை. மொழியியலாளர் ஒருவர் விஞ்ஞான நோக்குடன் வழக்குத் தமிழைக் கையாண்ட செய்முறைத் திறனின் தன்மையையும் தாற்பரியத்தையும் பின்வந்தோர் பலர் சரியாக விளங்கிக்கொள்ளத் தவறியமையால், அதனைப் போட்டுடைத்தனர். பாத்திர வார்ப்புக்கு உதவும் வகையில் இயல்பான பேச்சு வழக்கை அரங்கில் ஏற்றினார் பேராசிரியர். அதன் நுட்பத்தை அறியாதோர் அப்பேச்சுத் தமிழின் இயல்புகளை மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கி விட்டனர். நாடகத் திறனாய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பொருத்தமாயுள்ளது. "பேராசிரியர் கனபதிப்பிள்ளை உருவாக்கிக் கொடுத்த பணியை மேலும் ஒரு படி முன்னெடுத்துச் செல்ல முடியாதோர் கையில் அப் பேச்சுமொழி அகப்பட்டுச் சிரிப்புக்கும், பழிப்பிற்தும், நெளிப்பிற்குமான ஊடகமாக அது பயன்படுத்தப்பட்டு இலங்கைத் தமிழ் நாடக வளாச்சி நொடிந்தது,"

மொழிநடையில் மாத்திரம் இச் சீரழிவு நிகழவில்லை. பாத்திர சிருஷ்டியிலும் அந்த கதிதான்: பேராசிரியர் தனிப்புதுமையுடையனவாய்ப் படைத்த உடையார், மணியகாரன் 'விதானை முதலிய 'பிரபுத்துவ' பாத்திரங்களும், மேலை நாட்டிலே உயர்கல்வி பெற்றுவிட்டுத் தாயகம் திரும்பிய ஆடவரும் நவநாதரீக போகங்கொண்ட நாரியரும் என்றிம்னோரன்ன 'பட்டணத்துப்' பாத்திரங்க்ளும், அசட்டு வேலைக்காரன், கலியாணத்தரகன், சோதிடன், ஊர்சுற்றி முதலிய 'சார்புநிலைப்' பாத்திரங்களும், பின்வந்தோரின் நாடகங்களிலே உள்ளுரமும் உயிர்த்துடிப்பும் இன்றி, ஒரே அச்சில் வார்க்கப்பட்டனவாயும் கேலிக்கூத்துக்குரியனவாயும் தரக்குறைவானவையாயும் கீழ்நிலை அடைந்தன. (1950களில் இலங்கையர்கோன் [1915-1962], இப்பொதுப் போக்கிற்குப் புறனடையாகப் பேச்சுத்தமிழை இயற்பண்பு குன்றாமற் கையாண்டு வானொலி நாடகங்கள் சிலவற்றைப் படைத்தாரெனினும், சிறுகதையில் ஈட்டிய சாதனையை அவர் நாடகத்தில் எய்தினார் என்பதற்கில்லை. யாழ்ப்பாண, மட்டக்களப்பு வட்டார வழக்குகளைக் கொச்சைப்படுத்தி வேடிக்கைக்குரிய தொன்றாக்கிய வகையில் பெரும் பங்கு வானொலியையேசாரும். வர்த்தக ஒலிபரப்பு இக் கைங்கரியத்தை நிறைவுறச் செய்தது என்பதில் கருத்து வேறுபாடு இருக்கவியலாது.)

இந்நலிவுக்கு எதிர்விளைவாகப் பல்கலைக்கழகத்தில் 1950 களின் பிற்பகுதியிலே இரு போக்குகள் முகிழ்த்தன. ஒன்று பேச்சு வழக்கு நடையைக் கட்டுப்படுத்தி ஒருவிதமான தராதரத் தமிழில் உரையாடல்களை அமைத்தும், கனதியான காத்திரமான விஷயங்களைப் பொருளாகக் கொண்டும் எழுதப்பெற்ற புத்தாக்கங்கள். இவற்றை எழுதுவதிலும் தயாரிப்பதிலும் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தோரும் பிறரும் பங்கு கொண்டனர். மற்றொன்று, மொழி பெயர்ப்பு தழுவல் நாடகங்கள். நாடகம் உலகப் பொதுவான ஒரு கலை வடிவமாகையால், "தேச எல்லைகளையும் கால எல்லைகளையும் கடந்து" அதனை அனைவரும் அனுபவித்துச் சுவைத்தல் சாலும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலே இவை மேடையேற்றப்பட்டன. (பேராசிரியர் கணபதிப்பிள்ளை கொழும்பிலிருந்து பேரரதனைப் பல்கலைக்கழகத்திற்குப் பணியாற்றச் சென்ற காலத்தையடுத்தே, கொழும்பில் இயங்கிய பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினர், அதிலும் குறிப்பாக விஞ்ஞான-மருத்துவ-பொறியியற் பீடங்களைச் சேர்ந்த மாணாக்கர், இவ் விருவகை முயற்சிகளிலும், இறங்கினர் என்பதும் சுவையான செய்தியாகும்.) புத்தாக்க முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக அ.முத்துலிங்கத்தின் பிரிவுப்பாதை (1959), குடித்தனம் (1960), சுவர்கள்(1961) என்ற மூன்று நாடகங்களையும் அ.ந.கந்தசாமியின் மதமாற்றம் (1962) சொக்கனின் இரட்டை வேஷம் (1963) என்பனவற்றையும் குறிப்பிடலாம். இந் நாடகங்களை எழுதியோர் ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்: சிறுகதை, நாவல், கட்டுரை திறனாய்வு முதலிய பிரிவுகளில் உழைத்தவர்கள். அ.ந.கந்தசாமிக்குப் பத்திரிக்கைத்துறை அனுபவமுமிருந்தது. அவர்களிடம் குடிகொண்டிருந்த ஆக்கத்திறன் விகசிக்கத்தக்க விதத்தில் அன்றைய சூழ்நிலையுமிருந்தது: 1956 ஆம் வருடத்தையொட்டி இலங்கியில் உத்வேகம் பெற்ற தேசிய, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களினதும் அவ்வியக்கங்களை உட்கொண்டும் அவற்றுக்கு உந்து சக்தியாகவும் அமைந்த கலை இலக்கிய இயக்கத்தினதும் பின்னணியிலே மேற்குறிப்பிட்டவர்கள் நாடகங்களை எழுதினர். கிராம வாழ்க்கை- நகரவாழ்க்கை, எளிமை-படாடோபம், மரபுமாற்றம் முதலிய முரண்பாடுகளை மையமாகக் கொண்டே பேராசிரியர் கணபதிப்பிள்ளை தமது நாடகங்களை நடத்திச் சென்றார், ஆனால் மேற்கூறியவர்கள் சமுதாயப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் மேலும் கூர்மையாக நோக்கி, மாந்தரை இயக்கும் உளவியற் காரணிகளையும் ஆராய முற்பட்டனர். ஐம்பதுகளில் இப்போதுக்கும் நோக்கும் ஏனைய இலக்கியப் பிரிவுகளுக்கும் பொருந்துவதாயிருந்தது.

மொழிப்பெயர்ப்பு, தழுவல் நாடகங்களுக்கு எடுத்துக்காட்டாக ஹரீந்திரநாத சட்டோபாத்தியாவின் சவப்பெட்டி(1953), ஒஸ்கார் வைல்டின் ஸ்ரீமான் ஆனந்தம் (1954) மொலியரின் யார் வைத்தியர்? (1955), சூழ்ச்சியின் பரிசு (1956), இப்ஸனின் வாழும் இனம் (1958), என்பனவற்றையும், அறுபதுகளில் திருக்கந்தையா மேடையேற்றிய நாடகங்களையும் குறிப்பிடலாம். ஜே.எம்.ஸ’ங் அன்ரன் செக்காவ், ஓகஸ்ற் ஸ்ரின்ட்பர்க் ஆகிய ஐரோப்பிய நாடகாசிரியரின் ஆக்கங்களைத் திருக்கந்தையா தயாரித்தளித்தார். மொழிபெயர்ப்பு, தழுவல் முயற்சிகளை அறிவார்த்த கொள்கைத் தெளிவுடனும் அடக்கத்துடனும் மேற்கொண்டவர்களில் திருக்கந்தையாவுக்குத் தனியிடமுண்டு. அவர் நெறிப்படுத்திய நாடக நினைவிதழ் ஒன்றிலே காணப்படும் பின்வரும் குறிப்பு கவனத்திற்குரியது. "எங்களுக்கே சொந்தமான, உண்மையாகவே தேசியப் பண்புடைய மரபினை உருவாக்கிக்கொள்வதற்கு மேலும் ததைமைகளைப் பெறும் பொருட்டே வேலைத்தேச நாடகங்களை மேடையேற்றவேண்டும்." ஆயினும் இத்தகைய விளக்கமோ குறிகோளோ இன்றி, மேலைநாட்டு நாடகங்களையும் தென்னிந்திய 'அழகியல்' நாடகங்களையும் அறிமுகப்படுத்துவதே தமது கலை முயற்சியின் முதலும் முடிவும் என்ற தோரணையில் இன்று செயல்ற்படும் சில கலையின் சமூகப் பணியைப் புறக்கணிக்கின்றனர் என்றே கூறத்தோன்றுகிறது.

அறுபதுகளில் முற்பகுதியிலே பல்கலைக்கழக நாடகங்களிற் பல்வேறு வகைகளிற் பங்குகொண்ட திருவாளர்கள் நா.சுந்தரலிங்கம், இ.சிவானந்தன், சி.மௌனகுரு ஆகிய மூவரும், ஐம்பதுகளில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த வேளையில் நித்திலக் கோபுரம் (1953) என்னும் பா நாடகத்தை வானொலிக்காக எழுதியது முதல் பா நாடகத்தில் தணித்துவமான பரிசோதனைகளை பலவற்றைச் செய்து வந்துள்ள கவிஞர் இ.முருகையனும் அறுபதுகளில் பிற் பகுதியிலே நாடகத்துறையில் புத்தாக்க முயற்சிகளில் முழுமூச்சாக ஈடுபட்டனர். அது கால வரை பல்கலைக்கழக நாடகங்களில் பங்கு பற்றியோர் பட்டம் பெற்று வெளியேறிய பின் அத்துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டுழைப்பது அருமையாகவே இருந்தது. ஐம்பதுகளில் புத்தாக்கம், மொழிபெயர்ப்பு, தழுவல் முதலிய முயற்சிகளில் ஈடுபட்டோர், தரமான-நேர்த்தி நயம் வாய்ந்த - நாடகப் பிரதிகளை எழுதுவிப்பதிலும் தேர்ந்தெடுப்பதிலும் கூடுதலான கவனஞ் செலுத்தினரெனினும், அரங்க நுணுக்கங்கள், மேடை உத்திகள் முதலிய இன்றியமையாக் கலை அம்சங்களிலும் அவையாவற்றுக்கும் மேலாக நாடகங்களின் கர்த்தாக்கள் தற்புதுமையான நாடகத் துறையில் புதியதொரு காலகட்டம் சகாப்தம்-ஆரம்பமாகியதெனலாம். இவர்களினதும் இவரோடொத்த அ.தாசீசியஸ், மாவை நித்தியானந்தர், சி.தில்லைநாதன், தில்லைக்கூத்தன் முதலியோரினதும் ஆக்கத்திறனை எழுபதுகளில் கண்டுணரக் கூடியதாய் இருந்தது. இவர்களின் கூட்டு முயற்சிகளில் களமாகவும் விளைவாகவும் 'எங்கள் குழு', 'கூத்தாடிகள்', 'நாடோடிகள்' 'மட்டக்களப்பு நாடக சபா', 'நடிகர் ஒன்றியம்' முதலிய அமைப்புக்களும், யாழ்ப்பாணத்தில் சிலர் நிறுவிய 'அம்பலத்தாடிகள்' என்ற குழுவும் பிரக்ஞை பூர்வமாகப் பல முதன் முயற்சிகளை மேற்கொண்டன.

இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள நாடகங்களுள் 'அபசுரம்' (1968) காலத்தால் முற்பட்டது. அதே ஆண்டில் இ.சிவானந்தன் எழுதிய 'விடிவை நோக்கி' என்ற நாடகத்தை 'எங்கள் குழு' வினர் மேடையேற்றியிருந்தனர். முருகையனின் 'இருதுயரங்கள்' என்ற நாடகமும், அவ்வாண்டிலேயே மேடையேற்றப்பட்டது. இத்தொகுதியில் முதலாவதாக அமைந்துள்ள 'சங்காரம்' என்ற வடமோடி நாடகம் 1969-ல் அரங்கேறியது. இச்செய்திகளை நோக்குமிடத்து இலங்கையின் தற்காலத் தமிழ் நாடக வரலாற்றில் 1968-ம் வருடம் ஒரு திருப்பு முனையாக விளங்குகிறது எனக்கொள்வது தவறாகாது. பரதநாட்டியம், நாடகம் ஆகிய கலைகளை உன்னிப்பாய்க் கவனித்து அவ்வப்போது தீட்சணியமான கருத்துக்களைக் கூறிவரும் இரசிகரும் விமர்சகருமான "அர்ஜுனா" (எஸ்.சிவநாயகம்) "1968-ல் அரங்கள்" எனும் பொருள்பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்றிலே அந்த வருடம் அரங்கேறிய நாடகங்கள் புதியதொரு மலர்ச்சியைக் குறிப்பாக நம்பிக்கை தெரிவித்திருந்தார், அவரது கணிப்புச் சரியானதே என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐயத்துக்கிடமின்றி நிரூபணமாயிற்று.

1968-ஆம் வருடத்திலும் அதனையடுத்த காலப் பகுதியிலும் இலங்கையில் தமிழ்நாடகத் துறையில், குறிப்பாக அரங்கியற்றுறையில், பின்விளைவுச் செறிவு வாய்ந்த, போற்றத்தக்க மாற்றங்களைச் செய்தோ ஒ சிலரோயாயினும் அவர்கள் காலத்தின் தேவைகளை உணர்ந்து பிரக்ஞையோடு இயங்கினர் என்பது நினைத்துகொள்ள வேண்டிய செய்தியாகும். தேசிய சர்வதேச நிகழ்வுகளும் அவர்களுக்குத் தூண்டுதல் கொடுப்பனவாயமைந்தன. இலங்கையில் பொதுவாக, சமூக முரண்பாடுகள் கூர்மையடையத் துவங்கியிருந்தன. வட பகுதியில் சாதியடக்குமுறைக்கு எதிரான போராட்டம் உக்கிரமடைந்திருந்தது; தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் வெற்றிகரமான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தது. அவ்வியக்கத்தின் முதலாவது மகாநாட்டையொட்டிக் கொழும்பில் நிகழ்ந்த கலைநிகழ்ச்சிகளில் ஒன்றாகவே மௌனகுருவின் சங்காரம் முதன்முதலில் ஹவ்லொக் நகர் லும்பினி அரங்கில் மேடையேறியது. சாதியொழிப்புப் போராட்டத்தின் உந்துதலினால் வரலாற்றையே உருவகமாகச் சித்தரிக்கிறது. இயக்கங்களுக்கும் இலக்கிய வாக்கங்களுக்குமுள்ள உள்ளார்ந்த நுணுக்கமுடைய தொடர்பினை இது எமக்கு உணர்த்துகிறது. (தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆலயப்பிரவேசப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி அதனை வழிநடத்தி வந்த காலகட்டத்திலேயே என்.கே.ரகுநாதனின் கதைக்கருவொன்றினை நெல்லியடி 'அம்பலத்தாடிகள்' குழு கந்தன் கருணை என்னும் நாடகமாக்கி மேடையேற்றியது. காத்தான் கூத்துப்பாணி இசை நாடக உருவலான இந் நாடகம் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கொழும்பிலும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டது. கந்தன் கருணை பின்னர் நூல் வடிவிலும் வெளிவந்தது. "கதையின் கதை" என்ற பகுதியில் ரகுநாதன் பின்வருமாறு எழுதியிருந்தார். தேவையே ஒரு பொருளின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் பிறந்து, அம் மக்களின் போராட்டத்துக்கு ஓர் ஆதர்ஸமாக, ஆயுதமாக மிளிரும் இந்த நாடகத்தின் மூலக்கதையை எழுதியவன் என்ற வகையில் அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது" 1969 ஆம் வருடத்திலேயே முருகையனின் கோபுர வாசல் என்ற மேடைக் கவிதை நாடகமும் வெளிவந்தது. ஆலயப் பிரவேசம் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருந்த காலகட்டத்தில், பழைய நந்தனார் சரித்திரக் கதையைப் பொருத்தமாக மாற்றிச் சமகாலத்துக்குத் தொடர்புடைய நாடகமாக அவர் எழுதினார். முன்னுரையில் முருகையன் கூறியிருப்பது கவனத்திற்குரியது:

"இந் நாடகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி முடிக்கப்பட்டது; பல காரணங்களால் இது உடனடியாக மேடையேறாமல் எழுத்துப்பிரதியாகவே என்வசமிருந்தது. இந் நாடகம் எழுதி முடித்தபின்னர் ஈழத்துச் சமுதாய வாழ்வின் சூழலிலே ஒரு சில மாற்றங்கள் முனைப்பாகத் தோன்ற ஆரம்பித்தன. இந்த மாற்றங்களுடனும் இயக்கங்களுடனும் நாடகத்தை இசைவுபடுத்துவது மிக அவசியம் என நான் கருதுகினேன். ஆகவே முதலில் எழுதப்பட்ட பிரதியிலே சிறு சிறு மாற்றங்கள் செய்து அவசியமாயிற்று.

சமூகப் பிரக்ஞை கொண்ட எழுத்தாளர்கள் இயக்கங்களின் செயற்பாட்டுக்கும் வேத்திற்கும் ஒத்துணர்வு மிக்கவர்களாய் இருக்கின்றனர் என்பதைச் சங்காரம், கந்தன் கருணை, கோபுரவாசல் ஆகியவற்றின் ஆக்கத்திலிருந்து நாம் தெளிந்து கொள்ளலாம். இந் நாடகங்கள் எழுந்த காலத்திற்கு முன் பின்னாகவே காலஞ்சென்ற க.பசுபதி (1925-1965) க.தங்கவடிவேல் (1934-1979) ஆகியோரும் வேறுபல கவிஞர்களும் ஆற்றல் மிக்க கவிதைகளை எழுதிப் புத்துலகினைப் படைப்பதற்கான தமது பங்கைச் செலுத்தினர். இச் செய்திகள் யாவும் நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகின்றன: ஒரு சமுதாயத்திலே காலத்துக்குக் காலம் தோன்றும் இயக்கங்களுடனும், மனுக்குலத்தின் இடையறாத போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக்கொண்டு அவற்றிலே "பிறப்பெடுத்து ஓங்கி நிமிரும் ஆன்ம சொரூப விகசிப்பை" இலக்கிய வடிவமாக்குபவரே கலாபூர்வமான படைப்புகளை அளிக்க வல்லவராயுள்ளனர். அவர்களே தற்புதுமையான ஆக்கங்களை உருவாக்கி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர். மொழிபெயர்ப்பு; தழுவல் முயற்சிகள் இவ்வளர்ச்சிக்குப் புறத்தூண்டுதலாய் ஒரே வழி அமைக்கூடுமாயினும், "தனித்துவமான நாடக மரபொன்றின் முகிழ்ப்புக்குப் பங்களிக்கக் கூடியவையாக" அமைதல் சாத்தியமன்று. இது விஷயத்தில் அபிப்பிராய பேதம் இருக்க இடமேயில்லை).

அனைத்துலகிலும் அக் காலகட்டத்தில் பலவகைப்பட்ட எழுச்சிகளும் மரபுகளுக்கெதிரான போராட்டங்களும் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன. சீனாவிலே கலாசாரப்புரட்சி உச்சிநிலையில் இருந்தது; பிரதன்சு நாட்டிலே மாணவர் கிளர்ச்சி உலகெங்கும் எதிரொலித்தது; புரட்சிப் பாரம்பரியம் மிகுந்த அந்நாட்டில் மற்றுமொரு புரட்சி உருவாகும் போலிருந்தது. இங்கிலாந்திலே பல்கலைக்கழகங்களில் உறைந்து போயிருந்த சம்பிரதாயங்களுக்கும் சத்தற்ற கல்வி முறைகளுக்கும் எதிராக ஆயிரக்கணக்கில் மாணவர் குரலெழுப்பி நடவடிக்கைகளில் இறங்கினர். இவை யாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, அமெரிக்காவில் மிகப்பரந்த அளவில் ஜனநாயக இலட்சியங்களும், யுத்தஎதிர்ப்புக் குரல்களும் தேசந் தழுவிய இயக்கங்களோடு சங்கமித்தன. வியட்நாமில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத்துவங்கிய சமாதானக் கோரிக்கைக் குரல் விரைவிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக உருமாற்றம் பெற்றது. கல்வி நிலையங்களில் பாட நெறிகளை மாற்றியமைப்பது முதல் கட்டாயமாக இளைஞர்களை இராணுவ சேவைக்கு அழைப்பதை எதிர்ப்பது ஈறாக எண்ணற்ற இயக்கங்களில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். நிலையியல் ரீதியான சிந்தனைகளையும் நியதிகளையும் நிராகரித்த இளைஞர்கள், கலைகளில் புதுப்புதுப் பரிசோதனைகளைச் செய்து பார்த்தனர். நாடகத்துறை என்றுமில்லாத கவனத்தைப் பெற்றது. சம்பிரதாயமான இயற்கை நவிற்சி நாடகங்கள் வணிக நோக்கில் நடத்தப்படுவதால் எதிர் மரபைச் சார்ந்து நின்றோர் அரங்க நியதிகளை மாற்றி எங்கும் எப்பொழுதும் ஆடக்கூடிய பல்திறப்பட்ட நாடக வடிவங்களை உருவாக்கமுற்பட்டனர். "தெருவோரத்து நாடகம் " இதில் முக்கியத்துவம் பெற்றது. இன்று பின்னோக்கிப் பார்க்குமிடத்து இப் பரிசோதனைகளிற் பல "சில்வாழ்நாள் " உடையனவாய் இருந்தமை புலனாகிறது. ஆரங்கில் நடிப்பது மாத்திரமன்றி, ஆடுதலும், பாடுதலும், வாய் பேசாது அவிநயித்து உணர்வுகளை வெளிப்படுத்துதலும். அபத்தமாக நடந்து கொள்ளுதலும் இவை போன்ற பிறவும் நாடகக்கலைக்குப் புத்துயிர் அளிக்க வல்லன என்ற கருத்து இப்பொழுது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவது கண்கூடு. இக் காலப்பகுதியில் குறியீட்டு நாடக்ங்களுக்குப் புதிய தேவையும் உண்டாயின.

1968 ஆம் வருடம் மேடையேறிய நாடகங்களும் அவற்றைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட நாடகங்களும், மேலே விபர்த்த உலக நாடகப் பரீட்சார்த்த முயற்சிகளை உள்வாங்கி அவற்றையும், "எமது மரபுவழி நாடக நெறிகளையும் உணர்வு பூர்வமாக இணைத்து, ஊடாட விட்டு, ஈழத் தமிழ் நாடக அரங்கியற்றுறைக்கெனத் தனித்துவமான ஒரு மரபின் " வெளிப்பாடாக அமைந்தவை எனக் கூறுவது எல்லாற்றானும் மிகையாகாது. இதற்குத் தக்கஉதாரணங்களாக அ.தாசீசியஸ் நெறிப்படுத்தி மேடையேற்றிய கந்தன் கருணை, புதியதொரு வீடு, கோடை, காலம் சிவக்கிறது ஆகியனவும், நா. சுந்தரலிங்கத்தின் நெறியாள்கையில் உருவாகிய கடழியம் (1971) விழிப்பு (1975) ஆகியனவும் குறிப்பிடத்தக்கன. மேலைநாட்டு நவீன நாடக உத்திகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் அதே வேளையில் நம் நாட்டுக்குரிய அபிநயச் சிறப்பாட்டங்களை அபூர்வமான கற்பனை நயத்துடன் கலந்து நாடகத்தை உருவாக்கும் பெற்றி தாசீசியஸ’டம் காணப்படுகிறது புதியதொரு வீடு வெற்றியடைந்ததற்து மஹாகவி (1927-1971)யின் கவித்துவம் மாத்திரமன்றி தாசீசியஸ’ன் நெறியாள்கையும் முக்கிய காரணமாகும். இயல் நலமுடைய நேர்த்தியான ஆந்நாடகத்துக்கு மெருகூட்டிந. அதைப் போலவே முருகையனின் பாடல்களைக் கொண்ட சுந்தரலிங்கத்தின் விழிப்பு நாடகத்தில், நெறியாளர் சுந்தரலிங்கம் ஆட்டமுறையில் தொழிலாளர் எழுச்சி€ச் சித்திரிக்கும் நுட்பம் தனிச்சிறப்பு வாய்ந்தது. வடமோடிப்பாணி கைவந்த மௌனகுரு, ஆட்டமுறையில் அமைந்த அசைவுகளை நாடகங்களில் இலாவகமாகக் கையாள்வதும் பயன்தரும் பரிசோதனையாகும். புதிய உத்திகளோடு மரபுவழிக் கதையைக் கலைநயம் குன்றாதவகையில் நாடகமாக்கலாம் என்பதனை அம்பியின் வேதாளம் சொன்ன கதை (1970), நிரூபித்தது. சுஹைர் ஹமீட் நெறிப்படுத்திய அந்நாடகம் முருகையன் கூறுவதுபோல, "மேடையேற்றம் என்ற சோதனைக்கு உட்பட்டுத் தேறித் தேர்ச்சியடைந்துள்ளதுஇ "

இவ்வாறு அறுபதுகளின் பிற்கூறிலும் எழுபதுகளிலும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முக்கியமான பரீட்சார்த்த நாடகங்களை நமது கலைஞர்கள் சிலர் உருவாக்கிக் சொணடிருந்த காலப்பகுதியிலே அவற்றுக்குச் சமாந்தரமாகச் சிங்கள நாடகங்களும் புதிய வேகத்துடன் வெளிவந்து கொண்டிருந்தன. ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார சமூகவியல் காரணிகள் கலைகளைப் பாதிக்கும் என்ற அடிப்படை உண்மைக்கு இரு மொழிகளிலும் இடம் பெற்ற புத்தாக்கங்கள் சான்றாயமைந்தன. சிங்களத்திலும் நவீன நாடக உத்திகளோடு மரபுவழிக் கூறுகளை இணைத்துப் புதிய வடிவங்களைக் காணும் முயற்சி வலுப்பெற்றுள்ளது. மொழிபெயர்ப்பு, தழுவல் ஆக்கங்கள் நீடித்த நிலையான பயனைத்தரா என்பது சிங்கள நாடகக் கலைஞர்கள் அநுபவ ரீதியாகக்கண்டறிந்த உண்மையாகும். ஆர்.ஆர்.சமரக்கோன், ஸைமன் நவகத்தேகம, தர்மசிறி பண்டாரநாயக்கா, தர்மசேன பத்திராஜா, பராக்கிரம நிரியெல்ல, தம்ம ஜாகொட முதலியோர் சுய ஆக்கங்களினாலேயே புகழ் ஈட்டியுள்ளனர். கவனிக்க வேண்டிய படிப்பினை இது.

இத்தொகுதி வெளிவருவதில் சிறப்பொன்றுண்டு. எத்தனையோ நாடகங்கள் மேடையில் பார்க்கும்பொழுது ஓரளவு சுவாரஸ்யமாயிருப்பினும், அவற்றை இலக்கியமாகப் போற்றத்தக்க சிறப்பற்று மறைந்துவிடுகின்றன. நடிப்பதற்கன்றி இலக்கிய நூலாக எண்ணி இயற்றப்படும் நாடகங்களும் உண்டு. அவற்றைப்பற்றி இங்கு நாம் பேசவேண்டியதில்லை. ஆனால் நடிப்பதற்கென்றே திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு நாடகம், மேடையில் வெற்றிபெற்று அதன் சுருத்தாழத்தினாலும், நடைச் சிறப்பினாலும், உணர்வு நலத்தினாலும் நூலாகப் படிப்பதற்கும் மீண்டும் மீண்டும் நடித்தற்கும் உதந்ததாகக் கருதப்படுமாயின் அதுவே ஆற்றல் மிக்க நாடக இலக்கியமாகும். பா நாடகங்களுக்கு இப்பண்பு சாலப் பொருந்தும். காத்திரமான சமூக உள்ளடக்கத்தைக் கொண்டனவாயும். உயர் கவிதையின் சொற்செறிவு, தரிசன வீச்சு, தெளிவு, ஓசைச் சிறப்பு முதலிய அம்சங்கள் பொருந்தப் பெற்றனவானவாயும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் தாண்டி உலகப் பொதுவான உணர்வுகளை எழுப்புவனவாயும் இருப்பதனாலேயே இந் நான்கு நாடகங்களும் அச்சுருவிலும் வெள்வரக்கூடியனவாய் விளங்குகின்றன, காட்சி நயம் மட்டும் நாடகத்துக்கு உயிரூட்ட முடியாது. கருத்து மேம்பாடு மாத்திரம் நாடகத்தை இயங்கவைத்து விடாது. இரண்டும் இயைபுற்று இயங்குவதே நாடகத்தின் உயிர் நிலையாகும். இத்தொகுதியிலுள்ள நாடகங்கள் இவ்வரைவிலக்கணத்துக்கு அமைவன. முருகையனைப்போல மேடைக்கசாக மஹாகவி எழுதிய நாடகங்களும் (கோடை, புதியதொரு வீடு) நூலுருவம் பெற்றுள்ளமை கருதத்தக்கது. இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள நாடகாசிரியர்கள் கவிஞராயும் இருப்பது அவர்தம் படைப்புக்கள் இலக்கியச் செவ்விடன் விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது. நாடக உணர்வு நன்கு வாய்க்கப்பெற்ற முருகையன் எழுதியுள்ள கவிதைகள் பலவற்றிலும் நாடகப் பண்புகள் அவற்றின் உள்ளியல்பாய் இருக்கக் காணலாம். ஆணல்டு வெஸ்கர் எழுதிய கதையொன்றைப் படித்த அருட்டுணர்வில் அவர் புதுவதாகப் புனைந்த ஆதிபகவன் (1978) என்ற நெடுங் கவிதைகூடச் சிற்சில மாற்றங்களுடன் மேடையேற்றப்படக்கூடியதே. சமுதாய மாற்றங்களின் தேவையையும் நியதிகளையும் அறிவு பூர்வமாக இக்கலைஞர்கள் தெரிந்துகொண்டிருப்பதாலேயே சர்வ வியாபகமான நிகழ்வுகளையும் இயக்கங்களையும் தமது ஆக்கங்களுக்குப் பொருளாகக் கொள்கின்றனர். மௌனகுருவின் சங்காரம் (மௌனகுரு பரீட்சார்ந்த முயற்சியாகத் தயாரித்தளித்த) எம்.ஏ. நுஃமானின் அதி மானிடன் என்ற நெடுங் கவிதை முருகையனின் கடூழியம் முதலியன மனுக்குலத்தின் வரலாற்றைக் குறுகிய வடிவிற் கூறுவன. மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971), இப்பிரிவைச் சார்ந்ததே- ஆதிபகவன் நூலிலே முருகையன் பின்வருமாறு கூறியிருக்கிறார். "ஆதி பகவனின் கதை உலகின் கதை; உலக மனிதனின் கதை; ஆதி பகவனின் குடும்பம்; மனித சமுதாயம். எனவேதான் 'ஆதிபகவன்' தனிமனித குடும்பச் சித்திரம் போன்று தொடங்கினாலும், சமுதாயத்தின் வரலாறாக விரிந்து பரந்து சென்று கொண்டிருக்கிறது" அட்த்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு என்பது பழமொழி. மேற்கூறிய நாடகங்களும் நெடுங்கவிதைகளும் பேரளவினதாகிய உலக புராணத்தை மனித காவியத்தை- சுருங்கிய வாமன வடிவிற் காட்டுவன; அதே வேளையில் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிப்னவாயும் திகழ்வன. உலக இலக்கியப் பரப்பில் இத்தகைய ஆக்கங்கள் பல புகழ்பெற்றுள்ளன. மேற்கத்திய மொழிகளிலே ஆதாம் ஏவாள் பற்றிய கதையை மையமாகக்கொண்டும் உருவகப்படுத்தியும் பல காப்பிய நாடக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தையடுத்து இத்தகைய உலகளாவிய கற்பனைகள் ஆற்றல் மிக்க கவிஞர்கள் பலரைக் கவர்ந்துள்ளன: மில்டன், பைரன் முதலிய ஆங்கிலக் கவிஞரும், விக்டர் ஹ’யூகோ, டூ பார்டாஸ் ஆகிய பிரெஞ்சு எழுத்தாளரும், ஜேர்மானிய மகாகவி கைதேயும் மனிதனது இடைவிடாத போராட்டத்தின் மகோன்னதத்தையும் அதில் இழையோடும் துன்பியலையும் காலப்பூர்வமான கற்பனைப் படைப்புக்களாகத் தந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு (1978) இம்ரே மடாக், Imre Madach (1823-1864) என்ற ஹங்கேரிய கவிஞரின் Tragedy of Man என்ற பா நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது. 1848 இல் ஐரோப்பாவிலே நடந்தேறிய புரட்சிகளும் எதிர்புரட்சிகளும் இப் பாநாடகத்திற்குப் பிற்புலமாக அமைந்தன என்பதை நோக்கும்பொழுது, ஆற்றலும் அழகும் அமைந்த படைப்புக்கள் யதார்த்தமான சமுதாய நிகழ்வுகளைப் பற்றுக்கோடாய்க் கொண்டே முகிழ்க்கின்றமை தெளிவாகும்.

இத்தொகுதியிலுள்ள நாடகங்களுக்கும் இவ்வடிப்படை உண்மை பொருந்தும். கடூழியம், காலம் சிவக்கிறது என்பனவும் சுந்தரலிங்கத்தின் விழிப்பு, அவசுரம் முதலியனவும் நம் நாட்டின் அரசியல் வரலாற்றின் சில காலகட்டங்களையும் மையமாகக்கொண்டு விரிந்த கற்பனைகளேயாம். நாடகப் பெயர்களே குறியீட்டுப் பொருள்மையில் அமைந்து, "ஒரே சமயத்தில் பல வேறு தளங்களிலும் சென்று பொருள் பயக்கும் பண்பு" உடையனவாயிருத்தலும் கவனிக்கத் தக்கதே. பாராளுமன்ற அரசியலின் போலித்தன்மை கட்சி முறைகளின் வறுமை, வர்க்க முரண்பாடுகளின் உண்மை, போராட்டங்களின் இன்றியமையாமை என்பன இந்நாடகங்கள் உணர்த்தும் மெய்ப்பொருள்கள், பருப்பொருளான பௌதிக சம்பவங்களே கருத்துரவான நாடகங்களுக்கு அடித்தளமாயுள்ளன. உறுதிபயக்கும் பொருள் தனக்குகத்த உருவத்தைப் பெறும்பொழுதே அழகியல் உடன் பிறக்கிறது. இவ்வடிப்படை நியதியை உணராமல், "அழகியல்" நாடகங்களைத்தேடி உளவியல் விகாரங்களையும், அந்நியமயப்பட்ட அதீத தனிமனிதவாத அவலச்சித்திரங்களையும், பேதலித்த மாந்தரின் பித்தலாட்டங்களையும் நவீனத்துவத்தின் பெயரில் மேடையேற்றி அவற்றை நாடகக்கொடுமுடிகளாகப் பிரசாரஞ்செய்வோர், உண்மையில் கனியிருக்கக் காய்கவர்வோராவர். அதுமட்டுமன்று. கலையழகும் கருத்துயர்வும் நிறைந்த பிறமொழி நாடகங்களை மேடையேற்றுவதையே பிரதான கலை முயற்சியாகக் கடைப்பிடிப்போர், நாளடைவில் தம்மையறியாமலே (சில வேளைகளிலே பிரக்ஞைபூர்வமாகவே) 'அதி நவீன' நாடகங்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்குகின்றனர். மேலைநாட்டு அலைகளினால் அள்ளுப்பட்டு அல்லது அதற்குச் சமமாகக் கருதப்படும் இந்தியப் போலிகளால் ஈர்க்கப்பட்டு, இறுதியில் அவர்கள் கருதியோ கருதாமலோ 'தூய' கலைவாதத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மூன்றாவது உலக நாடுகளில் இத்தகைய நிகழ்வுகளைக் காண்கிறோம். உயர்கலையின் பெயரால் முதலிலே பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் காலக்கிரமத்தில் இவை ஐயத்துக்கிடமின்றி வணிகநோக்கில் சென்று முடிவடைவதையும் காணலாம். அல்லது 'கலை கலைக்காகவே' என்ற எதிர்ப்புரட்சி நிலைக்குத் தள்ளப் படுவதையும் காணலாம். "இரவல் மனப்பான்மையும் மேற்குமய மோகமும்" என்ற கட்டுரையில் முருகையன் இவ்விஷயத்தை விரிவாக ஆராய்ந்திருக்கிறார், ஒருகூற்று இவ்விடத்தில் பொருத்தமாயிருக்கும். மேற்கு மய மோகத்துடன் கலை இலக்கியப் படைப்புக்களை ஆக்குபவர்களின் தன்மைகளை விபரித்துவிட்டுப் பின்வருமாறுகூறுகிறார். "இவ்வாறு செய்வதனால், உண்மையான வாழ்க்கையின் உருப்படியான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்காது விலகம் ஒரு போக்கினை இவர்கள் வளர்க்கிறார்கள். வேறொரு வகையிற் சொன்னால், வர்க்க உணர்வை இவர்கள் மழுக்குகிறார்கள்." முக்கியமான பொருளை எளிமையாகக் கூறிவிடும் இக்கூற்றுக்கு மேலும் விளக்கம் தேவையில்லை.

பல்கலைக்கழகத்திலே இலக்கியக் கல்வியைப் புகட்டுவன் என்ற வகையில் இந்நூல் வெளிவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இலங்கைத் தமிழிலக்கியம் கடந்தசில வருடங்களாக நமது பல்கலைக்கழகங்களிலே பாடநெறியின் பகுதியாக உள்ளது. கவிதை, சிறுகதை, கட்டுரை முதலிய இலக்கியப் பிரிவுகளுக்கு உதாரணவிளக்கங்களாகச் சிலபல நூல்களை வெளிவந்திருப்பினும் நாடக இலக்கிய நூல்கள் அருந்தலாகவே இருந்து வந்திருக்கின்றன. கணபதிப்பிள்ளை அவர்களின் நூல்களும் தற்சமயம் கிடைப்பது அரிது. இந்நிலையில் மஹாகவியின் நாடகங்களும், ஆறு நாடகங்கள் என்னும் தொகுதியும் இத்தொகுதியும், வேறு சிலவும் மாணாக்கருக்கும் போதனாசிரியருக்கும் வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன. ஆறுநாடகங்கள், நாடகம் நான்கு என்னும் இருவருட தொகுதிகளிலும் வகைமாதிரிக்குப் பொருத்தமான நாடகங்கள் இடம்பெற்றிருப்பதும் சிறப்பான அம்சமாகும். கடந்தபதினைந்து நாடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகங்கள் மேற்கூறிய இரு தொகுதிகளிலும் உள்ளன என்று துணிந்து கூறிவிடலாம். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொதுவாகவும், நாடக வரலாற்றைச் சிறப்பாகவும் ஆராய விரும்புவோர்க்கு இந்நாடக நூல்கள் இன்றியமையா மூலாதாரங்கள் என்பதும் கூறாமலே பெறப்படும்.

இறுதியாக இந்நாடகங்களை இயற்றிய ஆசிரியர்களைப்பற்றி சில வார்த்தைகள் கூறுதல் அவசியம். ஏலவே நான் கூறியது போல இவர்கள் அனைவருமே நாடறிந்த எழுத்தாளர்கள். சொல்லைப் பிசைந்து கவியாக்கி அமுதம் படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். அத்துடன் நாடகத்தை ஏட்டிலுள்ள இலக்கியமாக மாத்திரம் நோக்கது, அதனை அரங்கப் படைப்பாகவும் அறிந்தவர்கள்; நடிப்பாற்றல், பாவனை வளம், ஒப்பனை, ஒளி-ஒலி அமைப்பு, மேடை அமைப்பு, நெறியாள்கை முதலிய துறைகளிலெல்லாம் அநுபவமுள்ளவர்கள்; அவற்றைப் பிறமொழி நாடகங்கள் மூலம் இரவல் பெற்றவர்கள் அல்லர். சுய ஆக்கங்களோடு மல்லாடித் தனித்துவமான நெறிமுறைகளையும் உத்திகளையும் வகுத்துக்கொண்டவர்கள். இவர்களைப்போலவே யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் நாடக அரங்கக் கல்லூரியினரும் இலங்கைத் தமிழ்நாடக மரபு விருத்திக்கு அரும்பாடுபட்டு வருகின்றனர். அறுபதுகளின் பிற்கூற்றில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரும்பி, எழுபதுகளில் முகைதிறந்த நாடகப் புத்தாக மலர் இப்பொழுது மலர்ச்சியடைந்துள்ளது எனலாம். குகராஜா, சண்முகலிங்கம், தாசீசியஸ் போன்றோர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கிற்குப் புதிய பரிமாணங்களை அளித்துள்ளனர். இக்காலகட்டத் ல் நெல்லியடி, பண்டத்தரிப்பு, இளவாலை முதலிய கிராமங்களில் இளங்கலைஞர்கள் தயாரித்த நாடகங்களும் நமது கவனத்திற்கு உரியன. குறிப்பாகக் காலைக்கவிஞனின் காகிதப்புலிகள் (1975) காத்திரமான சமூக உள்ளடக்கத்துடனும், தத்துவார்த்தத் தெளிவுடனும் எழுதப்பட்ட நாடகமாகும். இறுதியாய்வில், இத்தொகுதியின் சிறப்பியல்பு என்னவெனில், சமுதாயமாற்றத்துக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய கலையுணர்வு நிரம்பிய படைப்புகளைச் சுவைஞர்களுக்கு அளிப்பதாகும். 'உலகிதை மாற்றி ஒர் உன்னதமாகிய கற்பனையின் பொலிவினை' நாடகத்திற் பொறித்த பெருமை இந்நாடக ஆசிரியர்களுக்குண்டு, இவர்களைத் தக்கமுறையில் பாராட்டுவதோடு இவர்களுக்கு வேண்டிய ஊக்கத்தை அளித்தல் நமது கடமையாகும். முருகையனிடம் கையெழுத்துப் பிரதியாகவுள்ள 'அப்பரும் சுப்பரும்' என்ற நாடகம் மேடையேற்றப்பட வேண்டும், நூலுருவிலும் வெளிவரல் வேண்டும். அதைப்போலவே மௌனகுரு, சிவானந்தன், சுந்தரலிங்கம் முதலியோரின் ஏனைய ஆக்கங்களும் நூலுருப்பெறுதல் அவசியம். "இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்களின் தேசியத் தனித்துவத்தை நாடகம் என்னும் கலை வடிவம் மூலம் உணர்த்துவதில் கடந்த சில ஆண்டுகளாக முழுமூச்சாக ஈடுபட்டு வந்திருக்கும் இக்கலைஞர்கள் உற்சாகம் குன்றாது தொடர்ந்தியங்குவதற்கு நாடகாபிமானிகள் ஆவன செய்தல் வேண்டும். இந்நூல் அதற்குரிய ஆதரவையும் பாராட்டையும் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

க.கைலாசபதி
1980-05-01
இராச வீதி
திருநெல்வேலி கிழக்கு
யாழ்ப்பாணம்

-------------------------------------------------------------------------------------

மௌனகுருவின்
சங்காரம்
வடமோடி நாடகம்



முதல் மேடையேற்றம்

காலம் - 1969-04-01
இடம் - கொழும்பு, ஹவ்லொக் நகர் லும்பின் அரங்கு
தயாரிப்பு - மட்டக்களப்பு நாடக சபா
நெறியாட்சி - சி. மௌனகுரு


நடிகர்: சமுதாயம் வி.வத்சலாதேவி
வர்க்க அரக்கன் எஸ்.பற்குணம்
சாதி அரக்கன் எஸ்.புத்திரசிகாமணி
இனபேத அரக்கன் க.இன்பம்
நிறபேத அரக்கன் சி.வடிவேல்
தொழிலாளர் தலைவன் சி.மௌனகுரு
தொழிலாளி என்.யே. அமிர்தநாயகம்
உழவன் செ.வசந்தராசன்
மூட்டை சுமப்பவன் சி.இராஜேந்திரன்
பணக்காரன் க.சிவராசா

எடுத்துரைஞர் எம்.மயில்வாகனம்
க.தர்மகுலசிங்கம்



சங்காரம்

குறிப்புகள் சில

இந்நாடகத்தில் வரும் எடுத்துரைஞர்கள், பிரதானமானவர்கள், நாடகத்தை இவர்களே அறிமுகஞ்செய்கிறார்கள்; நடத்துகிறார்கள்; முடித்து வைக்கிறார்கள். நமது மரபுவழி நாடகத்தில் வரும் கட்டியக்காரன் பாகத்தை இவர்கள் இங்கு பெரிய அளவில் மேற்கொள்கிறார்கள். நாடகம் தொடங்கி முடியுமட்டும் இவர்கள் மேடையிலேயே நிற்பர். எனவே மேடையில் வலது பக்க மூலை இவர்களுக்கெனத் தனியாக ஒதுக்கப்படவேண்டும்.

சமுதாயம் இரண்டு இறக்கைகளுடனும் வெள்ளையுடையுடனும் காட்சிதரவேண்டும்.

அரக்கர்கள் மரபு ரீதியாக அரக்கத் தோற்றத்துடன் (கொம்புகள், கடைவாய்ப்பற்கள், பரட்டைத்தலை) தோற்றவேண்டும். ஒரு வகையில் பட்டாக்கத்தியும், மறுகையில் முட்சவுக்கும் இவர்களின் ஆயுதங்களாகும். நான்கு அரக்கர்களையும் வித்தியாசமாகக் காட்டும் வகையில் ஒப்பனை அமையவேண்டும்.

தொழிலாளர்களின் இருவர் தம்மிடம் நீண்ட பெரிய சுத்தியல்கள் வைத்திருக்க வேண்டும். உழவன் அரிவாள் வைத்திருக்கலாம், மூட்டை சுமப்பவன் அபிநயித்தல் போதுமானது.

பணக்காரன் சரிகை வேட்டி, பட்டுச்சட்டை, சரிகைச் சால்வை போட்டு, காதிற் கடுக்கன் மின்ன, பண்ணையார் தோற்றத்தில் காட்சிதரவேண்டும்.

காட்சி - 1

மண்டபத்தில் விளக்குகள் அணையுமுன்னர் மேடையின் வலது பக்கப் படிக்கட்டினால் ஏறிவந்து எடுத்துரைஞர்தலைவர் திரைக்கு முன்னால் மேடையின் மத்தியில் நின்று சபையோருக்கு வணக்கம் சொல்கிறார்.

எடுத்துரைஞர் தலைவன் வசனம்

அமைதியாயிருங்கள். அனைவருக்கும் வணக்கம், நாங்கள் உங்களுக்கு ஒரு நாடகத்தை நடித்துக்காட்ட வந்திருக்கிறோம்: மனித வரலாறுதான் நாடகத்தின் கருப்பொருள். குறியீடுகளின் துணைகொண்டு மனித வளர்ச்சியினையும் முரண்பாடுகளையும் சித்தரிக்க எண்ணியுள்ளோம். ஆயத்தமாகுங்கள். இதோ! திரை விலகப்போகிறது. சூரியன் வருவன் ; துண்டுகள் சிதறும். பூமிதோன்றும். புத்துயிர் அரும்பும் மனிதன் வருவான். வாழ்க்கைக்காகப் போராடுவான். தடைகளைச் சங்காரம் செய்வாம். ஆம் நாடகத்தின் பெயரும் அதுதான் சங்காரம். அந்த மானிடனைச் சந்திப்போமா?

(எடுத்துரைஞர் தலைவன் வசனம் பேசத் தொடங்கும்போது மெல்ல மெல்ல மண்டப விளக்குகள் அணைகின்றன. இறுதி வசனம் பேசும்போது எடுத்துரைஞர் தலைவன் ஒளிப் பொட்டினுள் நிற்கிறான். மண்டபம் எங்கணும் இருள்.)

எடுத்துரைஞர் தலைவன்

(கவிதை நடையில் கூறுகிறான்)

மானிடம் வளர்ந்த வாற்றை
மக்களுக் குரைக்க வந்தோம்
மானிடன் வரலா றிங்கே
மாபெரும் வரலாறாகும்.

(திரை மெல்ல மெல்லத் திறக்கின்றது)

மேடையின் வலது பக்க மூலையில் மெல்லிய ஒளிப்பொட்டு பாய்ச்சப்படுகிறது. அங்கு மூன்று எடுத்துரைஞன் நிற்கிறார்கள். மேடையின் நடுவில் ஏழுபேர் ஆதிகால மனிதர் போல் உடுப்பணிந்து, வெற்று மேலுடன் ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி வலது முழங்கால் மீது முழங்கையை வைத்து இடது கையைத் தரையில் ஊன்றியவாறு நிலத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் வட்டவடிவமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நடுவில் அவர்களைப்போன்று தோற்றமுஐடய ஒருவன் சுற்றியிருப்பவர்களைப்போல அமர்ந்திருக்கிறான். இவர்கள் மேடையில் இருப்பது ஆரம்பத்தில் தெரியாத விதத்தில் மேடை இருளாக இருக்கிறது.

பின்வரும் பாடலின் முதலடியைப் பாடிய வண்ணம் எடுத்துரைஞர் மேடையின் வலது பக்க மூலையில் நின்ற எடுத்துரைஞர்களுடன் கலந்து கொள்கிறான். மீதிப் பாடல்களை மந்திர உச்சாடனம் போல நான்கு எடுத்துரைஞர்களும் கூறுகின்றனர்.

மானிடம் வளர்ந்த வாற்றை
மக்களுக் குரைக்க வந்தோம்
மானிடன் வரலா றிங்கே
மாபெரும் வரலாறாகும்.

அண்டத்தின் வெளிப்பரப்பில்
அலைந்த பல் அணுக் கூட்டங்கள்
ஒன்றாகத் திரண்டு ருண்டு
ஒனியுடை ஞாயிறாய்ச்சு
அண்டத்தின் வெளிப்பரப்பில்
ஆகாய வெளியில் நின்று
வெந்தழல் பரிதி தானும்
வேகமாய்ச் சுழலானான்

[பின் திரையில் சூரியன் அல்லது சிவந்த ஒளிப் பொட்டு விழுகிறது. அது சுழல்வது போன்று தோன்றுகிறது.]

ஞாயிறு ஒளியோன் வெய்யோன்
பகலவன் பரிதி பாஸ்கர்
சூரியன் ரவி அருணன்
சுடரவன், சோதீ என்ற
பல்வேறு பெயர்கள் பெற்ற
பகலவன் சுழலலானான்

அண்டத்தின் வெளிப் பரப்பில்
ஆகாய வெளியில் நின்று
பிண்டமாய் ஒளிப்பிழம்பாய்
சூரியன் சுழலலானான்.

(சூரியன் சுழலானான் என்ற வரிகள் மூன்று முறை பாடப்பட்டு மெல்லிதாகி மங்கிச் செல்ல எடுத்துரைஞர் தலைவன் குரல் அமைதியைக் கிழித்த வண்ணம் எழுகிறது)

எடுத்துரைஞர் தலைவன்

சுழன்று வந்த சூரியனின்
துண்டு பறந்ததுவே

(பின் திரையில் சூரியனிலிருந்து இன்னொரு சிவப்பு ஒளிப்பொட்டு பிரிந்து இன்னொரு இடத்துக்குச் செல்கின்றது)

துண்டு சுழற்சியிலே
தொடர்ந்து குளிர்ந்ததுவே
குளிர்ந்து குளிர்ந்து அது
குவலயமாய் ஆனதுவே

('குவலயமாய் ஆனதுவே' அழுத்தமாக மும்முறை கூறப்பட்டு மெல்லிதாகக் குரல்கள் மங்கிச் செல்ல அடுத்த வரிகள் வேகமாக எழல் வேண்டும். குவலயமாய் ஆனதுமே என்ற வரிக்கு சிவப்பு ஒளிப்பொட்டு மெல்லியதாக மாறி மஞ்சள் நிறமடைகிறது.)

பூமிகுளிர அதில்
புல்பூண்டெழும்பினவே

(பின் திரையில் சூரியனையும் பூமியையும் குறித்த ஒளிப்பொட்டு மறைய, பின் திரைமுழுவதும் பச்சைநிறம் மெல்லியதாகப் பரவும். அதே வேளையில்- இதுவரையும் அசையாது மேடைமீதிருந்தவர்கள்மீது ஒளிப்பொட்டுப் பிரகாசமாக விழுகிறது. அவர்கள் அனைவரும் இருந்தபடியே தம் கைகளை மேலேயுயர்த்தி விரல்களை நெளித்து நெளித்து புல்பூண்டு வளர்வது போல அபிநயிக்கின்றார்கள்)

புல்பூண்டெழும்பியபின்
புத்துயிர்கள் தோன்றினவே

(மனிதர்கூட்டம் இருந்தபடியே மூச்சைப் பலமாக விட்டு விட்டு விட்டு இழுத்து அதன் மூலம் உடம்பை மேலும் கீழுமாக அசைத்து உயிர் அசைவைப் புலப்படுத்துகின்றனர்.)

உயிரினத்தின் இறுதியிலே
உம்முன்னோன் தோன்றினான்.

(பலத்த ஓசையுடன் மனிதக்கூட்டத்தின் மத்தியில் இருந்தவன் ஆதிமனிதனைப் போல, கூனிய முதுகுடன் மெல்ல மெல்ல எழுகிறான். எடுத்துரைஞர்கள் பாடும் அடுத்த பாடல்களுக்குத்தக எழுந்திருந்த மனிதன் முதலில் மெல்ல மெல்ல அசைவுகளைச் செய்யத் தொடங்க மனிதக்கூட்டமும் மெல்ல மெல்ல எழுந்து கூனிய முகத்துடன் ஆடத்தொடங்குகின்றனர். ஆட்டத்திற்குரிய தாளம் தகிட தகிட திம்: தகிட தகிட திம்.

ஆட்டத்தின நடுவே மெல்ல மெல்லக் கூனலை நிமிர்த்தி மனிதர் போல ஆடுகின்றனர். பாடல் முடிந்த பின்னரும் ஒளிப்பொட்டு அணையும்வரை ஆடல் தொடர்கிறது.)

பாடல்

அந்த நாளிலே இந்த மனிதர்கள்
அனைவரும் சமமுடன் வாழ்ந்தனரே
அப்பொருள் எனது இப்பொருள் உனது
சண்டைகள் ஏதும் தோன்றவில்லை
பெரியவன் சிறியவன் வறியவன் உள்ளவன்
உரியவன் இல்லான் பேதம் இல்லை
இது புராதன காலம்-
ஆதியில் மனிதன் பொதுமையாய் வாழ்ந்த
புராதன காலம்- ஆம்
புராதன காலம்

(மனிதக் கூட்டத்தைச் சுட்டி நின்ற ஒளிப்பொட்டு அகலுகின்றது. இப்போது மேடைமீது எடுத்துரைஞர்கள் மாத்திரம் வெளிச்சத்துள் நிற்கிறார்கள். எடுத்துரைஞருள் ஒருவன் தொடர்ந்து பாடுகின்றான். மனிதக்கூட்டம் நின்ற இடத்தில் இப்போது ஒர் உருவம் நிற்கிறது. தூய வெண்மையுடன், இரண்டு இறக்கைகளுடனும் பார்த்தவுடன் மனதில் மதிப்பினைத் தோற்றுவிக்கும் தோற்றத்துடனும் நிற்கும் அவ்வுருவமே ஆதிமனித சமுதாயம்)

எடுத்துரைஞன்

இப்பொருள் என்னது அப்பொருள் உன்னது
என்றவோர் பேதம் அற்று
பொது இந்த உலகம் உலகத்துப் பொருள் யாவும்
யாவர்க்கும் உரிமை என்றே
வர்க்க பேதங்கள் அதிலே முளைத்திட்ட
வர்ண, இன மத பேதங்கள்
இவை யாவும் இல்லாது எம்முடைய முன்னோர்கள்
இருந்த ஓர் காலம் உண்டு.

(எல்லா எடுத்துரைஞர்களும் ஓரடி முன்னால் வந்து சபையைப் பார்த்து, தலைவாய்த்து ஒரே குரலில் கூறுகிறார்கள்)

அக்காலம் வாழ்ந்திட்ட சமுதாயம் வருகிறது
அமைதியாய் இருந்து பாரீர்!

(கடைசி இரண்டடிகளையும் இரண்டு தடவைகள் எல்லோரும் சேர்ந்து கூறிய பின்னர் எடுத்துரைஞர் தலைவன் அந்த அடிகளைப் பாடியவண்ணம் சமுதாயத்தினருகே சென்று அதை வரவேற்று அழைத்துவந்து மேடையின் நடுவிலே விடுகின்றான்.
எடுத்துரைஞர்கள் அனைவரும் இப்போது தமது பழைய இடத்துக்குச் சென்றுவிடுகின்றனர். சமுதாயத்தின் மீது மட்டுமே ஒளி விழுகின்றது)

சமுதாயப் பாடல்

மனித சமுதாயம் நானேதான்-சபைக்கு வந்தேன்
மனித சமுதாயம் நானேதான்
மனித சமுதாயம் நானே மக்கள் எல்லாம் இங்கு சமமே
புனிதன் நான் எந்தனிடையே போட்டி பூசல் ஏதும் இல்லை

விருத்தம்

என்னுளே வாழும் மாந்தர்கள் யாரும்
இரத்த உறவினர் ஆவர்
இவர்களுக்குள்ளே ஏற்றமோ- இறக்கமோ
எள்ளளவேனும் இங்கில்லை.

பாடல்

சாதிபோதம் இங்கு கிடையாதே - தாழ்ந்தோர் உயர்ந்தோர்
சண்டைகூட என்னிடம் கிடையாதே
நீதியுண்டு தேர்மையுண்டு நேசமாயிங்க மக்களுண்டு
ஆதிச்சமுதாயம் நானே ஆஹா ஹா! இன்பவாழ்வு.


விருத்தம்

எல்லோரும் சேர்ந்தே உழைக்கிறார் உழைப்பினில்
ஏற்படும் ஊதியம் முழுதும்
எல்லோரும் சேர்ந்தே எடுக்கிறார் இங்கே
எவருக்கும் தனி உடைமை இல்லை.

பாடல்

வர்க்க பேதம் இங்கு கிடையாதே- மனிதரையே வாட்டும்
வர்ண பேதம் கூடக் கிடையாதே
சொர்க்கமான வாழ்க்கை ஈதே சோம்பலற்ற வாழ்வு மீதே
இப்படியாய் வாழும் நானே இவ்வுலகின் ஜ“வஜோதி.

விருத்தம்

உயர்ந்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்லை
உழைக்கின்றார் அனைவரும் சமமாய்
உன்னதமான இச்சமுதாயம்
உலவிற்கோர் புதுமையே புதுமை!

பாடல்

வானத்தில் ஏறிவலம் வருவேன்-சுதந்திரமாய் இவ்
வையகம் எல்லாம் சுற்றிப் பறந்திடுவேன்.
நானே தனியாள் எனக்கிங் காரும் எஜமானகளில்லை
வானே என்வீடு இந்த வையகம் என் முற்றம், இன்பம்.

மனித சமுதாயம் நானே தான்
(சமுதாயம் ஆடிக்கொண்டே செல்கிறது)


காட்சி - 2

(எடுத்துரைஞர்கள் மேடையின் மூலையில் ஒளிப்பொட்டில் நிற்கிறார்கள். பின்திரையின் பின்னணியில் நீல வெளிச்சம் சமுதாயம் நிழலுருவமாக மேடையின் நடுவே நிற்கிறது. சமுதாயத்தின் பின்னால் அரக்கர்கள் 4 பேரும் பணக்காரன் ஒருவனும், மக்கள் 4 பேரும் சபையில் இருப்பவர்களுக்குத் தெரியாத விதத்தில் மறைந்தபடி நிற்கிறார்கள். கவிஞனின் பாடலுக்குத்தக சமுதாயத்திலிருந்து அரக்கர்களும் பணக்காரனும் ஒருபக்கமாகவும், மக்கள் ஒருபக்கமாகவும் பிரிந்து மெல்லிய அசைவுகளுடன் ஆடுகின்றனர். இடையே ஒளிப்பொட்டுச் சுழன்று சுழன்று வந்து இடையிடையே உருவங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாக பிரகாசித்துச் செல்கிறது.)

எடுத்துரைஞன்

வேட்டையாடி வேட்டையாடிச் சமூகம் வாழ்ந்தது - அன்று
வேறு எண்ணம் ஏதும் இன்றிச் சமூகம் வாழ்ந்தது
கொண்டுவந்த பொருள்கள் யாவும் பொதுமையானது-
அவற்றைக் கூடியிருந்து உண்டு வாழ்ந்து சமூகம் வாழ்ந்தது
கருவியாவும் பொதுமையாக அன்றிருந்தது- எனவே
கவலையற்று பயங்களற்றுச் சமூகம் வாழ்ந்தது
வர்க்க பேதம் ஏதும் அற்றுச் சமூகம் வாழ்ந்தது - மற்றும்
வருணபேதம் ஏதும் இன்றிச் சமூகம் வாழ்ந்தது.

குரல் மாறுகின்றது

எடுத்துரைஞர் அனைவரும்

ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்கள் பல சென்றன
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் உண்டாயின.

எடுத்துரைஞன்

எடுத்துரைஞன்

உற்பத்தி செய்கின்ற கருவிகள் தொகையாக
உருவாக லான தாங்கே
உழைக்கின்ற சக்தியால் பொருள்களும் மீந்துமே
உபரியாய் ஆனதங்கே
மற்றவர் கூட்டத்தை இக் கூட்டம் தாக்கியதால்
மனிதர் பலர் அடிமையானார்
அடிமைகள் உழைப்பிலே பொருள் பண்டபம் பெருகின
ஆள்பவர்கள் அதிகரித்தார்.

எடுத்துரைஞர் அனைவரும்

ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்கள் பல சென்றன
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் உண்டாயின.

எடுத்துரைஞன்

(முன்னுக்கு வந்து ஆவேசத்துடன் கூறுகிறான்)

ஒன்றாக வாழ்ந்திட்ட உரிமைப் பிணைப்பாங்கே
ஓ கொடுமை சிதறுகிறதே
வர்க்கப் பிரிவினைகள் வரலாற்றில் முதலாக சமூகத்தில்
தோன்றலாச்சே
உழைக்கின்ற பலபேர்கள் உறிஞ்சுகிற சில பேர்கள்
என வர்க்கப் பிரிவுமாச்சு
உறிஞ்சுகிற சில பேர்கள் பல பேதம் உண்டாக்கி
தொடர்ந்துமே உறிஞ்சலானார்.

எடுத்துரைஞர் எல்லோரும்

ஞாலம் சுழன்றது ஞானம் சுழன்றது
நாட்கள் பல சென்றன
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் உண்டாயின.

(ஆட்டம் தொடர்கிறது. சிறிது நேரத்தால் சமுதாயத்திலிருந்து பிரிந்தவர்களின் உழைக்கும் வர்க்கத்தினர் தமது ஆட்டத்தை மெதுவாகக் குறைத்து அசையாத நிலைப் பாவனையில் நிற்க, பணக்காரனும், அரக்கர்களும் தமக்குள் ஏதோ ஒரு விடயத்தைக் கதைக்கும் பாவனையுடன் தொடர்ந்து மெல்லிய அசைவுடன் ஆடுகின்றனர்.

பணக்காரன் சமுதாயத்தைச் சுட்டிக்காட்டிக் கட்டளையிடுகிறான். அரக்கர்கள் நால்வரும் சமுதாயத்தை உற்றுப் பார்த்த வண்ணம் அதைப் பிடிக்கப் போகும் பாவனையில் அசையா நிலையில் நிற்கின்றனர். அனைவரும் அசையாநிலையில் நிற்க வெளிச்சம் அணைகிறது.)

காட்சி - 3

(மேடையின் வலதுபுற மூலையில் நின்றபடி எடுத்துரைஞர்கள் பாடுகிறார்கள்)

ஆதியிற் சமுதாயம் வர்க்கபேதம் என்ற
அநியாயத்துட்படாது
நீதியாய் அனைவரும் சமமென்ற நோக்கிலே
நேர்மையாய் வாழும்போது
ஆதியாம் சமுதாய எண்ணங்கள் தம்மையே
அகிலத்தை விட்டு ஓட்டி
பாதியிற் சமுதாயம் தன்னையே தேடியே
பறக்கப் பிடித்திழுத்து

(அடுத்து வரும் ஒவ்வொரு 2 வரிகளையும் ஒவ்வொரு அரக்கரும் சொல்லிய வண்ணம் மேடை நடுவே வருகிறார்கள்)

வர்க்க அரக்கன்

வர்க்க நிற சாதி, இன பேதமேனும் விலங்கினை
வசையாக மாட்டவென்று

சாதி அரக்கன்

ஒதவே எம்முடைய பணம் படைத் தெஜமானார்
உத்தரவு தலைமேற்கொண்டு

இன அரக்கன்

சுதந்திரமும் பெற்றதாய்ச் சொல்லித் திரிகின்ற
சமுதாயம் தன்னைத்தேடி

நிற அரக்கன்;

வர்க்கமொரு சாதி நிறபேத அரக்கர்தாம்
வருகின்றார் வருகின்றாரே

(எடுத்துரைஞன் முன்னால் வந்து ஒவ்வொரு அரக்கரையும் தனித்தனியாகச் சபையிலுள்ளோருக்குச் சுட்டிக்காட்டிப் பாடுகிறான்)

எடுத்துரைஞன்:

வர்க்கமொடு சாதி, இன, நிற பேத அரக்கர் தாம் வருகின்றார் வருகின்றாரே.
(எடுத்துரைஞர்கள் தாளம் கூற அதற்குத்தக அரக்கர்களின் ஆட்டம்)

எடுத்துரைஞர்கள் தாளம்

தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
திந்தத் திகிர்தத் திகிர்தத் தெய்வக
தந்தத் தகிர்தக் தகிர்தத்தாம்
திந்தத் திகிர்தத் திகிர்தத்தெய்

வர்க்க அரக்கன் பாட்டு

ஆதிமனித சமுதாயம் கையில்
அடிமை விலங்கு பூட்டவே
வர்க்க பேத அரக்கர் நாங்கள்
வருகின்றோமே உலகுக்கு

சாதி அரக்கன்

பேதம் இல்லை எமக்குள் என்று
பிதற்றித் திரியும் சமுகத்தை
நாசம் ஆக்க விலங்கு கொண்டு
நாடி ஓடி வருகின்றோம்.

இனபேத அரக்கன்

எம்மை ஆட்டும் எஜமானர்களின்
இதயம் குளிர வைக்கும்
நம்மை கொடுக்கும் சமுதாயத்தினை
நாசம் செய்ய வருகின்றோம்.

நிறபேத அரக்கன்

தேடிப்பிடித்து அதனின் காலில்
சிறந்த விலங்கு பூட்டுவோம்
ஓடிவாரும் நண்பர்கள் இவ்
உலகம் இனிமேல் நம்கையில்

(நான்கு அரக்கர்களும் சமுதாயத்தைத் தேடும் பாவனையில் மேடையை ஒரு தடவை சுற்றி வருகிறார்கள். நாற்புறமும் தேடிப் பார்க்கிறார்கள் என்பதற்கு அறிகுறியாகத் தலையாட்டுகிறார்கள்)

வர்க்க அரக்கன் பாட்டு

தேடி வருவோம் வாருங்கள் - சமுதாயத்தைத்
தேடி வருவோம் வாருங்கள்
தேடித் தேடியதனைத் தேடிப்பிடித்திழுத்து
நாடி விலங்குபூட்டி நம்பக்கம் சேர்போமே

சாதி அரக்கன்

வர்க்க அரக்கனே கேள்-சமுதாயம்
வளமாக வாழுதப்பா
மோதியதையுடைத்து முழுச்சாதி பேதமூட்டி
பேதித் துயர்ந்தோர் தாழ்ந்தோர் பேத முண்டாக்கிடுவோம்.

இன அரக்கன்

அடிமை விலங்குபூட்டுவோம் சமுதாயத்தில்
ஆண்டான் அடிமை நாட்டுவோம்
இனபேதச் சமம் இன்மை எங்குமே தூவுவோம்
என்னவரும் நண்பர்கள் எங்கே சமுதாயம்?

நிறபேத அரக்கன்

வெள்ளை கறுப்பன் என்ற விலங்கினைச்
சமுதாயம் கையிலிடுவோம்
கொள்ளையடிப்போம், குழப்பம் விளைப்போம்
பிள்ளைச் சமூகத்தைப் பிடித்தே அடிமைகொள்வோம்.

(ஆடிக்கொண்டே தேடிய பாவனையுடன் அரக்கர்கள் மேடையை விட்டுச் செல்கின்றார்கள்)


காட்சி -5

(மேடையின் நடுவில் சமுதாயம் பாடிக்கொண்டு சுதந்திரமாய் ஆடுகின்றது.)

சமுதாயப் பாட்டு

வானத்தில் ஏறி வல வருவேன், சுதுந்திரமாய்
வையகம் எல்லாம் சுற்றிப் பறந்திடுவேன்.
நானே தனியாள் எனக்கு யாரும் எஜமானர்களில்லை
வானே என் வீடு வையகம் என் முற்றம் இன்பம்.

மனித சமுதாயம் நானேதான்

(மேடையில் வலது மூலையில் ஒளிப்பொட்டியில் எடுத்துரைஞர்கள் நிற்கிறார்கள். தூரத்திலிருந்து வருவது போல நான்கு அரக்கர்களும் வருகிறார்கள். ஆடிப்பாடி மகிழும் சமுதாயத்தினை அரக்கர்கள் காண்கிறார்கள். அதனருகில் வந்து அதனைச் சுற்றி வளைத்து நடந்து மேலும் கீழும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். சமுதாயத்தை இனம் கண்டு கொண்ட தெளிவு அவர்கள் முகத்திற் பிறக்கிறது. சாதி அரக்கன் ஏனையோரைப் பார்த்துப் கூறுகிறான்)

சாதி அரக்கன்

என்னரும் வர்க்க பேதம் எனப்பெயர் கொண்டு வாழும்
நண்பனே சாற்றக் கேளாய் நாம் இதோ தேடி வந்த
பண்ணரும் சமுதாயம்தான் பார் அதோ ஓடி ஆடி
மண்ணிலே வாழுதேடா வா அதைப் பிடித்துச் செல்வோம்
(வர்க்க அரக்கன் முன்னான் வந்து இறுமாப்புடன் சமுதாயத்தை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்க்கிறான். சமுதாயம் பயந்தபடி அரக்கர்களை நோக்குகின்றது.)

வர்க்க அரக்கன்

வர்க்க பேதங்கள் மற்றும் வர்ண பேதங்கள் அற்றுச்
சொர்க்கமாய் மக்கள் வாழ்ந்து சுகம் காண வைத்திருக்கும்
ஆதிச் சமுதாயம் என்ற அவ்வுரு நீதானா சொல்
தேடி நாம் இங்க வந்தோம் நாடியே விலங்குமாட்ட

சமுதாயப் பாட்டு

என்ன குற்றம் நான் செய்தேன்
எனக்கு விலங்கு மாட்ட - ஐயா.
வண்ண உலகில் இங்க பேதமின்றி
வாழ்வதும் தீதோ....

வர்க்க அரக்கன்.

வர்க்கப் பிரிவினைகள் இன்னும்
வளரவே இலையே - அடா
வர்க்கம் தனை வளர்த்து-
வர்க்கம் தனை வளர்த்து இரு
வர்க்கமாகப் பிரித்திட
வந்தோம்--நாங்கள்
வந்தோம்

சமுதாயப் பாட்டு

வர்க்கப் பிரிவினைகள் வளர்ந்தாலே
தீமைகள் சேரும் - இந்தச்
சொர்க்கத்தைக் கெடுக்காதீர்
வர்க்கத்தை ஆக்காதீர் ஐயா

சாதி அரக்கன்

சாதிச் சண்டை உன்னிடத்தில்
சற்றேனும் இல்லையே போபோ!-அடா
மோதியுனையுடைத்துச்
சாதிச்சண்டை பரப்ப
வந்தோம் - நாங்கள்
வந்தோம்.

சமுதாயப் பாட்டு

இனபேதம் சிறிதேனும்
இல்லாமல் வாழ்வதிங்க - தீதோ
ஏனழித்திட வந்தீர் இது பிழை
ஏகுவீர்கள் ஐயா

நிறபேத அரக்கன்

நிறபேதம் இல்லாமல்
நீயிங்கிருப்பது பிழையே-அடா
நிறபேதம் உண்டாக்கி
நிறபேதம் உண்டாக்கி
உன் அடிமை நான்
கொள்வாம் - விலங்கிடுவோம்.

வர்க்க பேத அரக்கன்

என்னரும் நண்பர்மார்களே இனி
என்ன பேச்சடா இதனுடன்
இன்னமும் கதை தேவையோ நமக்கு
இட்ட கட்டளை உண்டல்லோ
நம்மை ஆக்கியே விட்டவர் மனம்
நாளும் மகிழ்ந்திட விலங்கினை
நண்பணே எடு! நான் பிடித்ததை
நாழிகை தனிற் தருகிறேன்.

(எடுத்துரைஞர்கள் தாளக் கட்டுக் கூற அதற்குத் தகசமுதாயம் அங்குமிங்கும்ம் பாய்ந்து ஓடுகின்றது. அரக்கர்கள் அதனைத் துரத்துகிறார்கள். வெளிச்சம் மங்கிப் பிரகாசிக்கிறது).

எடுத்துரைஞர்கள்

தாகிட தரிகிட தத்திமி தரிகிட
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
தாகிட தரிகிட தத்திமி தரிகிட

எடுத்துரைஞன்

அடிமையாக்கிடச் சமுதாயத்தினை
அரக்கர்கள் துரத்தினர் துரத்தினரே
ஐயோ என்று அலறியபடியே
அருமைச் சமுதாயம் ஓடியதே
விட்டோமா பார் சமுதாயத்திலே
விதைப்போம் பிடித்தே பிரிவுகளை
கட்டுவோம் என்று கையில் விலங்குடன்
கனவேகமாகத் துரத்தினரே.

எடுத்துரைஞர்கள்

ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்களும் ஓடிச் சென்றனவே
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றம் பல உண்டாயினவே
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
தாகிட தரிகிட தத்திமி தரிகிட

எடுத்துரைஞன்

சமூக வளர்ச்சியில் சமுதாயத்தின்
தனித்துவம் பேண முடியவில்லை
ஓடிய சமூகம் இளைத்தது; நின்றது
உறுதி குலைந்து வீழ்ந்ததுவே
அரக்கர் பிடித்தனர் சமுதாயத்தினை
அடடா விலங்கினை மாட்டினரே
அடடா விலங்கினை மாட்டினரே

(வீழ்ந்து கிடந்த சமுதாயத்திற்கு விலங்கிட்டு இழுத்தபடி மேசையின் முன்பக்கமாக அரக்கர் நால்வரும் சமுதாயத்தினைக் கொண்டு வருகின்றனர்.)

சமுதாயம் பாட்டு (புலம்பல்)

என்ன செய்வேன் ஏது செய்வேன்
என் தலை விதி இதுவோ?
சாதி பேத வர்க்க அரக்கர்
தந்திரமாய் எனைப் பிடித்து
மோதி வீழ்த்தி அடிமையாக்கி
மூழ்கடித்து விட்டனரே.

பேதம் ஏதும் இன்றி வாழ்ந்தேன்
பேதம் இன்று பிளைத்ததையோ
உழைத்து வாழும் மக்காள் உங்கள்
உருக்குப் போன்ற கரந்தான் எங்கே?
அடிமைச் சின்னம் விலங்கறுக்க
அருமை மக்காள் எழுவீர் இன்றே.

(சமுதாயத்தை இழுத்துக்கொண்டு அரக்கர்கள் செல்கிறார்கள் மேடை இரண்டாக இருக்கிறது.)

எடுத்துரைஞர்கள்
சோகக்குரலுடன்-
வர்க்க அரக்கர்கள் சமுதாயத்தின்
காலில் விலங்கினை மாட்டினரே!
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள்
சரமாரியாகப் பெருகியதே
அடிமையானதே சமுதாயம்
ஐயோ! கொடுமை நிகழ்ந்ததுவே
என்று மாறுமோ? இந்த நிலை
என்று விடுதலை ஈதாகுமோ.

ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்களும் ஓடிச் சென்றனவே
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் பல உண்டாயினவே.

(பாடியபடியே ஒருவர் பின் ஒருவராக மேடைக்குப் பின் புறம் சென்று மறைகிறார்கள் திரை மூடப்படுதல்)

இடைவேளை


காட்சி - 6

(திரை திறக்கப்படும்போது மேடை இரண்டாக இருக்கிறது சிவப்பு வெளி மேடையில் இருக்கிறது. வலது பக்க மூலையில் உள்ள ஒளிப்பொட்டில் எடுத்துரைஞர்கள் நிற்கிறார்கள். மேடை மீது மூலைக்கு ஒருவராக நான்கு தொழிலாளர்கள் நிற்கிறார்கள். சுத்தியல் எடுத்து இரும்பை ஓங்கி அடிக்கும் பாவனையில் இரண்டு தொழிலாளர்களும் ஏரைக் கொண்டு நிலத்தை உழும் பாவனையில் ஏர் பிடிக்கும் ஒரு தொழிலாளியும், மூட்டை சுமந்து வேதனைப்படும் பாவனையில் மூட்டை சுமக்கும் ஒரு தொழிலாளியும் அசையா நிலையில் தத்தம் பாவனைகளில் நிற்கின்றனர். பார்வையாளர்களுக்குத் தொழிலாளர்கள் நிழல் உருவங்களாகவே தென்படுகின்றனர். திரை மெல்ல மெல்லத் திறக்க எடுத்துரைஞர் பாடுகின்றனர்)

எடுத்துரைஞர்கள் அனைவரும்

ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்களும் ஓடிச் சென்றனவே
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் பல உண்டாயினவே

(எடுத்துரைஞர் தலைவன் முன் வந்து பாடுகிறான்)

எடுத்துரைஞன் தலைவன்

காலம் காலம் சென்றது சமூகம்
கண்­ர் வடித்து நிற்னதுவே
அடிமைப்பட்டது சமுதாயம், அதன்
விலங்கினை அறுப்பவர் ஆருமிலை

எடுத்துரைஞன் அனைவரும்

ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்களும் ஓடிச சென்றனவே
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் பல உண்டாயினவே.

எடுத்துரைஞன் தலைவன்

உழைப்பினை உறிஞ்சிக்கொளுத்தவர் பலவே
உண்மையை மறைத்தனர் மக்களிடம்
உழைக்கும் மக்கள் உலகம் புரியாது
உழைத்து உழைத்து மாய்ந்தனரே.

எடுத்துரைஞன் அனைவரும்

உழைப்போர் அனைவரும் ஒன்றாய் நிற்கும்
ஒருகாலம் உருவானதுவே
ஒருவரை ஒருவன் கண்டே கொண்ட
ஒருகாலம் உருவானதே
அது இக்காலம்-ஆம்
அது இக்காலம்.

(எடுத்துரைஞர்களின் குரல் உச்ச ஸ்தாயிக்குச் சென்று படாரென்று நின்றுவிட, எடுத்துரைஞர் தலைவன் மிகச்சோகத்துடன் காலம் காலம் சென்றது சமூகம் கண்­ர் வடித்து நின்றதுவே என்று வசனமாக அழுத்தி உச்சரித்து முடிய சமுதாயத்தின் குரல் பின்னணியில் மெதுவாக ஒலிக்கின்றது.)

சமுதாயம்

பேதம் ஏதும் இன்றி வாழ்ந்தேன்
பேதம் இன்று பிளைத்ததையோ
உழைத்து வாழும் மக்காள் உங்கள்
உருக்குப் போன்ற கரம்தான் எங்கே
அடிமைச் சின்னம் விலங்கொடிக்க
அருமை மக்காள் எழுவீர் இன்றே.

(சமுதாயத்தின் குரல் தொடங்கியதும் அசையா நிலைப் பாவனையில் நின்ற தொழிலாளர்கள் தாளத்திற்கேற்ப நின்ற இடத்திலேயே அசைவோடு தத்தம் வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். அவர்களுள் சுத்தியல் பிடித்து வேலை செய்த ஒருவன் மாத்திரம் மற்றவர்களை விடக் கூடுதலாகச் சமுதாயத்தின் குரலினால் தாக்கப்படுகிறான். ஏனையவர் தம்பாட்டில் வேலை செய்ய இவன் பாவனையில் மாத்திரம் சமுதாயத்தின் குரலைக் கவனிக்கும் ஆர்வமும் பரபரப்பும் காணப்படுகின்றது. தலைவனின் பரபரப்புடன் தொழிலாளர்கள் மீது மெலிலியதாகப் பாய்ச்சப்படுகிறது.

"உழைத்து வாழும் மக்காள் உங்கள்
உருக்குப்போன்ற கரம்தான் எங்கே"

என்ற குரலுக்கு ஒரு தரம் திருப்பி நோக்கிவிட்டு தம்கைகளையும் பார்த்துவிட்டு விரக்தியுடனும், அக்கறை இன்றியும் தலைவனைத் தவிர ஏனைய தொழிலாளிகள் வேலையைத் தொடர்ந்து செய்கின்றனர்.

சமுதாயத்தின் குரல் தொடர்ந்து ஒலிக்கின்றது. அதன் குரலைக் கவனித்த தொழிலாளி-இடையில் சமுதாயத்தின் குரலைக் கிழித்துக்கொண்டு தொழிலாளர்களை நோக்கிப் பாடுகிறான்.

தலைவன் விருத்தம்

சாதியுடன் வர்க்க மத நிறபேத அரக்கர்தாம்
தாவியே ஓடிவந்து
சமுதாயம் கைகாலில் விலங்குதனை மாட்டியே
தான் கொண்டு செல்கின்றாரே
ஆவியே துடித்ததோ சமுதாயம் கூறுகிற
அவலமாம் குரல் நும் காதில்

மோதவோ இல்லையா? மக்களே விழியுங்கள்
முறிப்போமே அடிமை விலங்கை

(அவன் குரலைக் கவனியாதோர் போல் அவர்கள் வேலை செய்கின்றனர். மேடையைச் சுற்றித் தாளத்திற்கு எற்ப ஆடிவந்து ஒவ்வொரு தொழிலாளியின் அருகிலும் சென்று அவனைத் தொட்டுப் பாடுகிறான் தலைவன்)

தலைவன்

உழவனைப் பார்த்து

ஏரைக் கொண்டு நிலத்தை உழுதிடும்
என்னரும் தோழனே கேள்
எம்முடை சமூக ஏக்கக் குரல்தான்
இன்னமும் விழவில்லையா?

கொல்லனைப் பார்த்து

இரும்பை உருக்கிக் காய்ச்சிப் புதுப்பொருள்
ஏற்றிடும் தொழிலாளி
ஏனோ உந்தன் கரங்கள் இன்னும்
இப்படி இருக்கிறதே

மூட்டை சுமப்பவனைப் பார்த்து

மூட்டை சுமந்து முதுகை உடைத்திடும்
முதுபெரும் தோழனே கேள்
வாட்டம் தீர்க்க வல்லமை கொள்வாய்
வாடா நீ வெளியே

(தலைவன் பேச்சைக் கவனியாத பாவனையில் அனைவரும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். தலைவன் பல பக்கங்களிலும் திரும்பிப் பார்த்துவிட்டு ஆவேசத்துடன் வேகமாக ஆடி அனைவருக்கும் முன்னால் வந்து குரலில் பாடுகிறான்)

அனைவரையும் பார்த்து

மக்கள் உலகம் மாழுதடா பார்
வர்க்க அரக்கரினால்
மாய்ப்போல் வர்க்கப் பேயை மக்கான்
எழுவீர் இன்றெழுவீர்

(தொழிலாளர் உற்சாகத்துடன் திரும்புகிறார்கள். அனைவர் முகத்திலும் புதிய ஆவேசமும், ஒளியும் தென்படுகின்றன. தலைவன் பின்னால் ஒன்று திரள்கிறார்கள். எடுத்துரைஞர் பாடுகின்றனர்)

எடுத்துரைஞர்கள்

தத்தித்தாம் தெய்யத் தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம் தெய்யத் தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம் தெய்யத் தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம் தெய்யத் தித்தித் தெய்யா தெய்ய

தலைவன் பாடல்

பேத அரக்கரைச் சாய்த்திடவே இங்கு
வீரர் பலர் எழுந்தோமே இன்று
சாதி நிற வர்க்க அரக்கரைச் சாய்த்திட
நீதி வழியில் ஒன்றாயினோம் நாமுமே
மோதி அவரை விரட்டித் துருத்தி
விலங்கொடித்துச் சமுதாயம் காப்பாற்றிட

தொழிலாளி ஒருவன் விருத்தம்

இது நாளும் அறியாத சமுதாய எண்ணத்தை
எங்களுக் கூட்டி விட்ட
மதிப்பான எங்களது தலைவரே ஒரு வார்த்தை
மன்னிக்க வேண்டுமையா

எங்களின் எஜமானன் எங்களுக்குதவுவான்
இது உண்மை உமக்குச் சொன்னேன்
அங்கு அவர் வீட்டுக்குச் சென்று நாம் தெரிவித்தால்
அவர் உதவி கிடைக்குமையா..........

தலைவன் பாடல்

எஜமானன் நமக்குத்தான் எப்படி உதவுவான்
இதனை நீ அறியாயா எனது தோழா
எம்மை நசுக்கியே எழிலாக வாழ்பவர்
எம்குறை தீர்ப்பாரோ

ஒரு தொழிலாளி பாடல்

என்றாலும் ஒருதரம் எஜமானனிடம் சென்று
எம்குறை சொல்வோமே வருவீர்கள்
நன்றாகச் சொல்கிறேன் நம்பக்கம் நின்றுமே
நல்லது செய்வாரப்பா.

தலைவன் பாடல்

உழைப்பவர்க் கெதிரிகள் உறிஞ்சுபவரே என்ற
உண்மையை உணர்ந்து கொள் நீ எனது தோழா
உறிஞ்சும் கூட்டத்தோடு உடன்பாடு காணுதல்
ஒரு நாளும் நடக்காது.

மறு தொழிலாளி பாடல்

சேர்ந்து வாழ்வதுதான் சிறந்த மனிதப் பண்பிச்
சிறப்பினை அறியாயா எனது தோழா!
சேர்ந்துதான் பார்ப்போமே சேராவிட்டால் உந்தன்
சிந்தனைப்படி நாம் சொல்லுவோம்.

தலைவன் விருத்தம்

என்னரும் தோழர்களே! இனி எங்கள் விழிப்புக்கு
இடையூறாய் எவர் இங்கு வரினும்
அன்னவர் தோல்வி அடைவது நிஜமே
ஆட்சேபம் எனக்கில்லை செல்வோம்.
(போகிறார்கள்)

காட்சி-7

(மேடையின் வலது மூலையில் ஒளிப்பொட்டின் உள்ளே எடுத்துரைஞர்கள் நின்று பாடுகிறார்கள். பாட்டுக்குத்தக்க ராஜ நடையுடன், மதுப்பட்டியுடனும் தள்ளாடியபடி எஜமான் சபைக்கு வருகிறான்)

எடுத்துரைஞர்

அன்று தொட்டின்று வரை சமுதாயம் கை காலில்
விலங்குதனை மாட்டி வைத்து
தங்களுடைய பொருள் பண்டம் தம்மையே பெருக்கி வாழ்
தனியுடைமைக் கூட்டத்தாரின்
தொன்று தொட்டே வந்த சுகமான வாரிசிவர்
தோற்றத்தைச் சிறிது பாரீர்
நன்று ! இவர் பெருமைதனை நாவால் உரைத்திடுவர்
நாங்கள் இதை இருந்து பார்ப்போம்

(எஜமான் தள்ளாடியபடி ஒரு தடவை சபையை அலட்சியமாகப் பார்த்தபடி கையிலிருக்கும் சாராயப் போத்தலைக் கவிழ்த்து மட மட என்று வாய்க்குள் வார்த்த பின்னர் பாடுகிறார்.)

எஜமான் விருத்தம்

சிறந்த நற் சாராயந்தான்
தினம் தினம் போட்டுக்கொண்டு
நிறைந்ததோர் பணத்தையெல்லாம்
நிதம் நிதம் தேடி வைத்துப்
புவியினில் பேர் தானோங்கப்
புகழோடு வாழுகின்ற
நனிமிகச் சிறந்த எஜமான்
நான் இதோ சபைக்கு வந்தேன்.

எடுத்துரைஞர் தாளக்கட்டு

தா, தெய்ய தெய் தெய்ய
தா தெய்யத் தோம் தகதிக
தா தெய்யா தெய் தெய்ய
தா செய்யத்தோம் தகதிக

எஜமான் பாட்டு

வந்தான் பாரீர் எஜமானன் வாறான் பாரீர்
வந்தான் எஜமானன் வண்டி தடவிக்கொண்டு
சிந்தை மகிழ்ந்திட மண்டை இறங்கிட

பணம் மிகப் படைத்தோன் உலகில் இணையாவார் எவரோ?
நானே கடவுளடா, நாய்கள் அடிமைகள்தான்
தானே தனிமுதல்வன் சபையிலிதோ வந்தோம்.
(மேடையில் எஜமான் போதையுடன் நிற்கிறான். மக்கள் பாடிக் கொண்டு வருகிறார்கள்)

உழவன் பாட்டு

ஐயா நமஸ்காரம் எங்களுடைய
ஆண்டவா நமஸ்காரம்
மெய்யனே உம்முதவி எங்களுக்கு
வேண்டுமய்யா வேண்டும்.

எஜமான் பாட்டு

என்ன உதவியடா வேண்டும் உமக்கு
எடுத்துச் சொல்வீர் எம்முன்னே
தின்னச் சோறா சிலையா அடிமைகளே
செப்பிடுவீர் கெதியில்

கொல்லன் பாட்டு

எமது சமுதாயத்தைப் பேத அரக்கர்
இழுத்துக் கொண்டோடுகிறார்
விடுதலை தரவேண்டும் சமுதாயத்தின்
விலங்கொடித்திட வேண்டும்

எஜமானன் பாட்டு

சமுதாயம் போனாலென்ன சாதி சனங்கள்
தானாய்ப் பிரிந்தாலென்ன
அமைவாக வேலை செய்வீர் அடிமைகளே
அதைப்பற்றி ஏன் கவலை?

எஜமானன் விருத்தம்

சாதி நிற இன வர்க்க அரக்கர் தாம் சமூகத்தை
தான் கொண்டு சென்றாலென்ன
நீதான் போய் என்ன நீசர்காள் அடிமைகாள்
நீங்கள் ஏன் பதறுகின்றீர்
ஓடுவீர் உம்வேலை செய்யுங்கள் சமூகத்தில்
உங்களுக்கேன் அக்கறை
மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் செல்லுங்கள்
வேலையைப் பார்க்கப் போங்கள்.

(தலைவன் அர்த்தபுஷ்டியோடு தன் தோழர்களைப் பார்கிறான். அனைவரும் மெதுவாகத் தலை அசைக்கின்றனர்)

தலைவன் விருத்தம்

சாதி நிற வர்க்க இன அரக்கரின் விலங்குதனைத்
தான் ஓடித்தெறிந்து இங்கே
நீதியை நிலைநாட்ட எஜமான் வரமாட்டான்
நீங்கள் இதை அறிந்து கொள்வீர்
உழைக்கின்ற கரம் உண்டு உரம் பெற்ற நெஞ்சுண்டு
உருக்கான கொள்கையுண்டு
அழைக்கின்றேன் மக்களே வருவீர்கள் நாமேதான்
அறுப்போமே அடிமை விலங்கை

(விருத்தம் முடிய அனைவரும் கை முஷ்டிகளை மடக்கியபடி அசையா நிலையில் நிற்கிறார்கள். எடுத்துரைஞர்கள் மந்திர உச்சாடனம் செய்வது போல உச்சரிக்கின்றனர். முணுமுணுப்புடன் மந்திர உச்சரிப்பினைத் தெளிவாக ஆரம்பித்து மெதுமெதுவாக வேகம் ஏறிக் கடைசிவரிகள் உச்சஸ்தாயியில் ஒலிக்கின்றன.)

எடுத்துரைஞர்கள் மந்திர உச்சரிப்பு

1. உழைக்கின்ற மக்களே உலகில் இனிமேல்
எவரையும் நம்பவேண்டாம்

2. இழப்பதற் கிங்குமக் கெதுவுமே இல்லை
பெறுவதற் குலகமுண்டு

3. உலகத்தில் வாழும் உழைக்கின்ற மக்களே
ஒற்றுமையாகுவீர்கள்

4. இதுநாள் வரையும் இவ்வுலகில் நீர்பட்ட
துயரத்தின் மீது ஆணை

5. ஏழைகள் உங்கள் பெருமூச்சு மீதாணை
இல்லாமை மீது ஆணை

6. உழைக்கின்ற சுரமுண்டு உரம்பெற்ற நெஞ்சுண்டு
உருக்கான கொள்கையுண்டு.

7. எழுவீர்கள் எழுவீர்கள் தொழிலாளி வர்க்கமே!
எழுவீர்கள் வேகமாக.

(இரண்டு தடவைகள் கடைசி அடிகளை விட்டுவிட்டுச் சொல்லி எழுவீர்கள் வேகமாக என்ற கடைசி வரி இரண்டு தடவை உச்சஸ்தாயியில் அழுத்தமாக உச்சரிக்கப்படுகின்றது. அசையா நிலையில் நின்ற மக்கள் யாவரும் வேகமாகத் திரும்புகின்றனர்.
'ஹோ' என்ற ஓங்கார சப்தத்துடன் மேடை முழுகக் மாறி மாறி ஓடித் தலைவனின் பின்னால், ஒன்று திரண்டு அணி வகுத்து நிற்கின்றனர். எல்லோர் முகத்திலும் ஆவேசமும் கோபமும் தெரிகிறது. தலைவன் பாடுகிறான்)

தலைவன் பாட்டு

சாதி நிற இன அரக்கரைச் சாய்த்திடுவோம்
சங்காரம் செய்வோம்
சாதி நிற இன அரக்கரைச் சாய்த்திடுவோம்
மோதி அவருடன் அடிமை விலங்கறுப்போம்
வாரீர் வாரீர் வாரீர் எம் தோழர்காள்.

சமுதாயம் தன்னைக் காத்திடவே
சகலரும் எழுவோம்
சமுதாயம் தன்னைக் காத்திடவே
எம் சமுதாயத்தின் விலங்கினை ஒடித்திட
எழுவீர்! எழுவீர்! எழுவீர் எம் தோழர்காள்...

பழையதோர் சிந்தனை செயல்களையே
பாரை விட்டோட்டிடப்
பழையதோர் சிந்தனை செயல்களையே
புதியதோர் உலகினை புவியினில் நாட்டப்
புறப்படு! புறப்படு! புறப்படு தோழனே...
(வேகமாக ஆடிக்கெண்டே செல்கிறார்கள்)

காட்சி 8

(காட்சி ஆரம்பமாகும்போது மேடையின் இடது பக்கமூலையில் உள்ள ஒளிப்பொட்டுள் வழக்கம்போல கவிஞர்கள் நிற்கிறார்கள். மேடையின் நடுவே சமுதாயம் நிற்த நான்கு அரக்கர்களும் வளைத்து நின்று அதனைச் சவுக்காலடிக்கிறார்கள்.
இக்காட்சி நிழலுருவமாகத் தெரிகிறது. எடுத்துரைஞர் அறிமுகம் முடிந்ததும் பிரகாசமான ஒளி அரக்கர் மீது பாய்ச்சப்படுகின்றது.)

எடுத்துரைஞர் விருத்தம்

சாதியொடு வர்க்க நிற இனமென்ற பேதமுடை
அரக்கர்கள் சமுதாயத்தை
வீதியில் நிறுத்தியே சவுக்கெடுத்ததன் மீது
வீசினர் வீசும்போது
ஆவியே உருகியே சமுதாயம் ஐயையோ
அலறியே துடிதுடித்து
மேனியே எனைக்காரும் மக்களே என்றுமே
மேதினியைப் பார்த்தழுதாள்.

(நாலா பக்கமும் அரக்கர்கள் நின்று இடையிடையே அடித்தபடி ஆடுகிறார்கள்)

சமுதாயப்பாட்டு

என்ன செய்வேன் எந்தன் மக்காள்
என் தலைவிதியிதுவோ
முன்னே என்னைப் பிடித்தோர் தாமும்
முட் சவுக்கால் அடிக்கின்றாரே
என்னுடலில் இரத்தம் தன்னை
இவர் உறிஞ்சிக் குடிக்கின்றாரே
என்னைக் காக்கும் கரமே இந்த
இகத்தில் தானும் இலையோ ஐயோ

(அடித்துக்கொண்டிருந்தவர்களுள் வர்க்க அரக்கன் தனியாகப் பிரிந்து நின்று பின் பெரியதொரு கத்தியைக்கையில் ஏந்தி சமுதாயத்தின் முன் வருகிறான். மூன்று அரக்கர்களும் சமுதாயத்தை முழங்காலில் நிறுத்தி தலையைக் கவிர்த்துப் பிடிக்கின்றனர். வர்க்க அரக்கன் அதன் தலையை வெட்டக் கத்தியை ஓங்குகிறான்)

எடுத்துலைஞர் விருத்தம்

சமுதாயம், வர்க்க, நிற இன சாதிபேதச்
சளக்கர்கள் கையிற் பட்டு
தலைகொய்யப்படப் போகும் போதிலே மக்கள் தம்
தனிநிகர் தலைவன் பாய்ந்தான்

(தலைவன் மேடையின்மீது பாய்கிறான் சமுதாயத்தின் கழுத்தை வெட்ட ஓங்கிய வர்க்க அரக்கனின் கத்தியை தொழிலாளர் தலைவனின் நீண்ட பெரிய சுத்தியல் தடுக்கிறது)

உருக்கான கரம் பெற்ற தொழிலாள மக்கள் நாம்
ஒருகோடிப் பேர் எழுந்தார்
தடுக்கவே சமுதாயம் காக்கவே கைகோர்த்துத்
தானெழுந்தோடி வந்தார்

(ஏனைய மக்களும் பின்னால் பாய்ந்து வந்து தலைவனுக்குப் பின்னால் அணிவகுத்து அரக்கதைக் கோபத்துடன் பார்த்தவாறு நிற்கின்றனர்)

தலைவன் விருத்தம்

நிறுத்தடா நிறுத்தடா வர்க்கமெனும் அரக்கனே
நீசனே எம்மை நீபார்
அறுக்கவே அடிமை எனும் விலங்கினை இங்கு நாம்
ஆயிரவர் கூடிவிட்டோம்
பொறுத்திட்டோம் இது நாளும் இனிமேலும் முடியாது
பொங்கி நாம் இங்கு வந்தோம்
நொறுக்குவோம் எலும்பெல்லாம் நம்முடைய கூட்டத்தை.

தொழிலாளர் அனைவரும் பாட்டு

அழித்திடவே வந்தோம் பாரடா
அடடா அரக்கா
ஓழித்திட நாம் திரண்டோம் கேளடா
வர்க்க அரக்கனைவதை செய்ய வந்திட்டோம்
வதைபடுமுனமே கதை கூறாதோடுவீர்.

வர்க்க அரக்கன் விருத்தம்

பொதுமக்கள் நீங்களா போங்கடா கேளுங்கள்
புத்திநான் ஒன்று சொல்லுவேன்
இது என்ன புதினம் நீர் எம்மையே அழித்திட
இயலுமாஓடிப் போங்கள்
உழைக்கின்ற மக்கள்தாம் ஒன்றாகக் கூடியே
உலகத்தின் விவங்கொடித்த
சரித்திரம் எங்காலும் கேட்டதுண்டோ
போ! போ!

அரக்கர் அனைவரும் பாராட்டு

தர்மத்தை நாங்கள் அழிப்போம்
தலைவனே கேள்
கர்மத்தை நாங்கள் முடிப்போம்
எங்களை வென்றிட வந்த எலும்புகளே
உங்களுக்கிறுதி உண்டின்று அறிகுவீர்

சாதி பேத அரக்கர் பாட்டு

சாதி பேதம் என்பவன் நானடா-இங்கு
சரிநிகர் சமம் எனக்காரடா
சாதி பேதம் சமுதாயத்தில் சரியடா
ஓதுகிறேன் இதை ஓடுவீர்! ஓடுவீர்

கொல்வத் தொழிலாளி

சாதியே! உனை இங்கு மாய்த்திட நாங்கள்
சாதி பேதம் இன்றித் திரண்டிட்டோம்
நீதி நிறை உலகை உருவாக்கிட
சாதியே! உன் சிரம் சங்காரம் செய்கிறோம்
(சாதிபேத அரக்கனை மக்கள் கலைக்கின்றனர்)

இனபேத அரக்கன்

இனபேதம் எண்டவன் நானடா-அடா
இங்கெனக் கெதிரியும் யாரடா.
அனைவரும் சமம் இல்லை ஆகவும் முடியாது
அனைவரும் ஓடுங்கள் அடித்து நான் கொல்லுவேன்

உழவன்

இனபேத அரக்கனை மாய்த்திட-இங்கு
எழுந்தோமே உழைக்கின்ற மக்கள் நாம்
இனபேத அரக்கனே இதோ உந்தன் உயிரது
ஏகுது ஏகுது ஏகுது அறிகுவாய்
(இனபேத அரக்கனை மக்கள் கலைக்கின்றனர்)

நிறபேத அரக்கன்

நிறபேதம் என்பவன் நானடா-இங்கு
நிகரெனக் குள்ளவர் யாரடா
நிறவெறி என்றுதான் நிலத்திலே நல்லது
நீசர்கள் அறிந்துமே நிற்காது ஓடுவீர்

மூட்டை து‘க்குவோன் பாட்டு

நிறபேத அரக்கனை மாய்த்திட இங்து
நேரிலே பொதுமக்கள் வந்தோமே
அறுத்திட விலங்கினை அறுப்போம் உனது சிரம்
அறுத்திட்டோம் உன் ஆவி போகுது அறிகுவாய்
(நிறபேத அரக்கனை மக்கள் கலைக்கிறார்கள்)
(வர்க்க அரக்கன் அனைவரையும் பார்த்து உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு "ஹோ... ஹோ" என்று பயங்கரமாகச் சிரிப்புச் சிரித்தபடி கூறுகிறான்)

வர்க்க அரக்கன் விருத்தம்

எவரை நீர் வென்றாலும் எனை வெல்ல முடியாது
இதை நீவில் அறியமாட்டீர்
உமையெல்லாம் பொடியாக்கி ஊதுவன் ஜாக்கிரதை
உயிர் தப்பிப் பிழைத்துப் போங்கள்
இதுவரையும் எனைக்கொல்ல இவ்வுலகில் எத்தனை பேர்
எதிர்த்தார்கள் தெரியுமோடா?
எதிர்த்தவர்கள் அழிந்தார்கள் அழியாத சக்தி நான்
இன்றும்மை நான் அழிப்பேன்.

தலைவன் பாட்டு

வர்க்க விலங்கினை ஒடிக்க நாம் வந்தோம்
அரக்கனே நீ
வாவடா! வெளியே அழிய
இனிமேல் இங்கு
சமுதாய விலங்கினைத் தானொடித் திடுவது
எமது கடமையடா இதனை நீ அறிகுவாய்
பொல்ல வர்க்க இன பேதங்கள் போக்கியே
பூமியை விடுதலை செய்யப் புறப்பட்டோம்
அடிமை விலங்கறுத்து அதை நாம் காப்போம்
துடிக்கும் கரமே துணை நீ அறிவாய்

வர்க்க அரக்கன் பாட்டு

என்ன வார்த்தைகள் இங்கு பேச வந்தீர்
பொது மக்களே
ஏகுவீர் உமை ஏங்க வைத்திடுவேன்
சமுதாயந்தான்
எமது கையிலின்று என்னடா செய்குவீர்
உம்மால் முடியுமோ ஒடிக்கவும் விலங்கினை
வெகு ஜனங்களே நீர் வீரர்போல் வருகிறீர்
அருமை அருமையடா அழிப்பேன் உங்களை
திறமைகள் அறியீரே இன்னும்
சிரமது அறுமுனம் சீக்கிரம் செல்வீர்

(கடுமையான சண்டை நடக்கிறது. பின்னணி வாத்தியங்கள் உச்சஸ்தாயியில் ஒலிக்கின்றன. வர்க்க அரக்கனை எல்லா மக்களும் சூழ்ந்து நின்று தாக்குகின்றார்கள். இறுதியில் வர்க்க அரக்கன் கீழே விழுகிறான். மக்கள் சந்தோஷ ஆரவாரம் செய்கிறார்கள்)

எடுத்துரைஞன் விருத்தம்

வர்க்கமென வரலாற்றில் தகாததோர் பேர்பெற்ற
வலிமை மிக உடையரக்கன்
அக்கணம் மக்களினம் தாக்கவே துடிதுடித்துயிர்போக
வீழ்ந்து மாண்டான்
ஓடியே அடிமை எனும் விலங்கறுத்திட வந்த
உழைப்பாளர் கூட்டமெல்லாம்
நாடியே சமுதாயம் கைகால் விலங்கினை
நறுக்கென்று அறுத்து நிற்பார்.

(தொழிலாளர் சமுதாயத்தைச் சூழ்ந்து நின்று தம் கை ஆயுதங்களினால் அதன் கையிலுள்ள விலங்கினைத் தகர்க்கிறார்கள். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. அனைவரையும் சுற்றி வந்து தலைவன் பாடுகிறான்)

தலைவன் பாட்டு

அடிமை விலங்கறுப்போம் - சமுதாயத்தின்
அடிமை விலங்கறுப்போம்
சாதி மதபேதச் சமமின்மை தகர்ப்போமே
ஓதுவோம் இது மக்கள் உலகென்று நாமுமே

புதிய உலகமடா- எமது கையில்
புதிய உலகமடா

கொன் கொழித்திடச் செய்வோம் புதுவாழ்வு காணுவோம்
எம் சமுதாயம் இனி இங்கு பாரடா

சமுதாயமே வருக- எங்களின் பின்னே
சரியாய் வழி நடத்துவோம்
எழிலாக வாழுவாய் இது உண்மை அறிகுவாய்
இனி உலகெம் கையில் எஜமானர் நாங்களே

(சமுதாயத்தைத் தம்பின்னால் அழைத்துக்கொண்டு உழைக்கும்மக்கள் தலைமை ஊர்வலமாகச் செல்கிறார்கள். மேடை மீது வெளிச்சம் குறைந்து நிழலுருவங்களாக அவர்கள் துரத்திச் செல்வது தெரிகிறது. அவர்கள் செல்லும்போது எடுத்துரைஞன் பாடுகிறான்)

எடுத்துரைஞன்

உழைப்பவர்கள் வெற்றி பெற்றார்
உலகம் அவர் பக்கம் இன்று
ஒன்றானார் ஒன்றானார் உலகத்தை வென்றார்
இழப்பதற்கு ஏதுமற்ற ஏழைகளின் கூட்டம் இன்று
பெற்றதடா பெற்றதடா பேதமற்ற நல்லுலகம்
உழைப்பவன் தலைமை தாங்க
ஓடுதே சமூகம் பின்னால்
அதர்மம் அழிந்தது அநீதி ஒழிந்தது
தர்மம் தழைத்தது. சமாதானம் வென்றது
சமாதானம் வென்றது.

முற்றும்

--------

சுந்தரலிங்கத்தின்

அபசுரம்

ஓரங்க நாடகம்

முல் மேடையேற்றம்

காலம் - 1968.12.11
இடம் - கொழும்பு, யவ்லொக் நகர் லும்பீனி அரங்கு
தயாரிப்பு- கூத்தாடிகள்
நெறியாட்சி - நா. சுந்தரலிங்கம்

நடிகர் - அருளர் இ.சிவானந்தன்
தியாகர் ச.சிவகுருநாதன்
பொதுவர் அ.தாசீசியஸ்
புறொபசர் க.யோகநாதன்
சிவாயர் நா.சுந்தரலிங்கம்
பிரச்சினை செ.பேரின்பநாயகம்


அபசுரம்

நடிகர்களுக்குச் சில குறிப்புகள்

1. இந்த நாடகம் மேற்கத்தைய அபத்த (absurd) நாடக வகையின் சாயலைக் கொண்டது.

2. இது சிரிப்புக்காக எழுதப்பட்ட நாடகம் அல்ல. ஆகையால் சபையோரிடம் சிரிப்பை வரவழைக்கும் முயற்சியில் நடிகர் ஈடுபடக்கூடாது.

3. அவரவர் கொள்ளும் பாத்திரத்தை, பாத்திரத்þ‘டு ஒன்றிக் காத்திரமாக நடிக்க வேண்டும்.

4. அங்கச் சேட்டைகள், மற்றக் கதாபத்திரங்களை அமுக்கும் நோக்கத்தோடு நடித்தல் 'நக்கல்' வருவது போன்ற பேச்சுத் தொனி ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

5. பேசும் வசனங்கள் யாவும் பேசப்படுவதில் நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை உள்ளனவர் போன்ற தன்மையோடேயே பேசப்படவேண்டும்.

6. இத்தகைய கதாபாத்திரங்கள் பார்வையாளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் (அதுவே ஒரு நோக்காதலால்) சாதாரண கதாபாத்திரங்களை விட ஒரு படி மேலே நின்றே தொழிற்பட வேண்டும். இதற்குச் சிறிதளவு செயற்கைத் தன்மையைப் பேச்சில், அங்க அசைவுகளில் கூட்டவேண்டும்.

7. இத்தகைய செயற்கைத் தன்மை எந்நேரத்திலாவது அளவிற்கு அதிகமாகக் கூடக் கூடாது, அவ்வாறு நடப்பின் கதா பாத்திரங்கள் 'ஹாஷ“ய' கதாபாத்திரமாக மாறிவிடும். இந்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும்.

8. பேசப்படும் வசனங்கள் ஒவ்வொன்றும் பாவம், பாவனை ஆகியவற்றோடு சேர்த்தே பேசப்படவேண்டும்.

9. 'பிரச்சினை' சிறிது நேரந்தான் மேடையில் தோன்றுகிறார் என்றாலும், மிக முக்கியமான கதாபாத்திரம் இவர்தான். எல்லோருக்கும் கேட்கும்படியாகவும் தெளிவாகவும் ஆறுதலாகவும் இரகசியம் சொல்லு ம பாவனையில் இவரது வசனம் பேசப்படவேண்டும்.

10. இவர் கூறுவதைக் கொண்டே பார்வையாளரின் கற்பனை உருவாக்கம் சரியான திசையில் திரும்புவதால் இப்பாத்திரத்தை நடிப்பவர் தன்பொறுப்பை உணர்வது மிக அவசியம்.

11. முதல் வாசிப்பின் போது வசனங்களுக்குவசனம் பொருத்தமில்லாதது போன்றுதான் தோன்றும். ஆனால் அவற்றிடையே ஒரு பொதுத் தொடர்பு இழையோடியிருப்பதை எல்லா நடிகரும் உணர்தல் அவசியம்.

12. எக் காரணத்தைக் கொண்டும் நாடகம் முழுவதும் 'பிரச்சினை' தவிர்ந்த ஏனைய நடிகர் பின் விசிறியைப் பார்க்கவோ அல்லது அது இருக்கும் உணர்வை வெளிக்காட்டவோ கூடாது. அவ்வாறு செய்யின் மேற்கொண்டு நாடகத்தை நடிப்பது அர்த்தமற்றதாகிவிடும்.

அபசுரம்
(ஓரங்க நாடகம்)

எதுவித முன்னறிவித்தலுமின்றி மண்டபத்து ஒளி விளக்குகள் மங்க ஆரம்பிக்கின்றன. மெல்ல மெல்ல மங்கி இருட்டு மண்டபம் முழுவதையும் கவ்விக் கொள்கிறது. இந்த இருட்டு பத்து வினாடிகள் வரை நீடிக்க அந்த இருளில் திரை நீங்கிக்கொள்கிறது. திடீரென்று ஒளி விளக்குகள் அங்கொன்று இங்கொன்றாக ஒளியை மேடைமீது பாய்ச்சி மறைக்கிறது. இவ்வாறு செய்யும்போது மேடைமீது வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை இரசிகர் அடையாளம் கண்டுகொள்ளாது இருப்பது முக்கியம், இது நடக்கும்போது பின்னணியில் குழம்பிய சத்தங்கள் தொலைவில் இருந்து கேட்பது போன்று தெளிவற்றுக் கேட்கின்றன. மீண்டும் மேடையை இருள் இரண்டு மூன்று வினாடிகளுக்குக் கௌவிக்கொண்டபின் ஒர் ஒளிப்பொட்டு மட்டும் கீழ்மேடை வலப்புறத்தில் தன் ஒளியைப் பரப்பி மெல்ல மெல்லப் பிரகாசமடைகிறது. இந்த ஒளிப்பொட்டின் நடுவே ஒரு மின்விசிறி கம்பீரமாக நிற்கிறது. அந்த மின்விசிறியின் நிறுத்தியில் "பிரச்சினை" என்று கட்டித் தொங்க விடப்பட்ட மட்டை இரசிகரின் கவனத்தை ஈர்க்கிறது. விசிறிக்கு முன்னால் ஒரு சிறிய ஸ்ரூலும் அதில் காகிதக்கட்டொன்றும் வைக்கப்பட்டுள்ளன. சில வினாடிகள் மௌனமாகக் கழிய எங்கிருந்தோ ஒரு கடிகாரம் தான் விரும்பியமட்டும் அடித்து ஓய்கிறது. கடிகாரம் ஓய்ந்ததும் திடீரென்று மின்விசிறி இயங்க ஆரம்பிக்கிறது. சிறிய ஸ்ரூல்மீதிருந்த காகிதங்கள் பறக்க ஆரம்பிக்கின்றன. இப்போது கீழ் மேடை இடப் புறத்தில் மற்றுமொரு ஒளிப்பொட்டு தன் ஒளியைப் பாய்ச்சிப் பிரகாசமடைகிறது. இந்த ஒளிப் பொட்டின் நடுவே ஒருவர் நிற்கிறார், இவர்தான் பொதுவர். அவர் பார்வை ஸ்ரூலிலும் பறந்த காகிதங்களிலும் மாறி மாறிப் பாடிய, கலவரமடைந்த பாவம் முகத்திற் படிகிறது. ஐந்தாறு வினாடிகள் இவ்வாறு கழிய ஸ்ரூலை நோக்கி அவர் மெல்ல அசைகிறார். அவர் இவ்வாறு அசைய ஆரம்பித்ததும் மற்றைய மின் விளக்குகளும் மேடைமீது தம் ஒளிகளைப் பாய்ச்சி மேடை முழுவதையும் பிரகாசமடையச் செய்கின்றன. இந்த ஒளியின் நடுவே இரண்டொரு ஸ்ரூல் அல்லது பிரம்புக் கதிரைகளும் அவற்றிற்கு எதிராக ஒரு நீளமான சிறு மேசையும் மேசைமீது ஒரு கண்ணாடிச் சாடி நிறைய நீரும் அதன் பக்கத்தே ஒரு கிளாசும் இருப்பது சபையோருக்கு நன்கு தெரிகிறது. கதிரைகளுக்குப் பின்னால் ஒரு நெடிய ஸ்ரூல்மீது தொலைபேசி இருக்கிறது. இவற்றிற்குப் பின்னால் கறுப்புத்திரை தொங்குகிறது.

மின்விசிறிக்கு முன்னால் இருக்கும் சிறிய ஸ்ரூலை நோக்கி நடந்த பொதுவர் அதை அணுகியதும் கலவரமடைந்த முகத்தோடு அதை உற்று நோக்குகிறார். பின்னர் பறந்து மேடைமீது சிதறிக்கிடக்கும் காகிதங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கிறார். துரிதமற்ற தளர்ந்த நடையோடு காகிதங்களைப் பொறுக்கி அடுக்கி மீண்டும் அவற்றை ஸ்ரூல்மீது வைக்கிறார். அவை மீண்டும் பறக்கின்றன. கலவரமும் துக்கச் சாயலும் அவர் முகத்தில் கூடுகிறது. தளர்நடை சற்று அதிகரிக்க அவர் ஸ்ரூலை அடிக்கடி திரும்பிப் பார்த்தபடியே காகிதங்களைப் பொறுக்குகிறார். பொறுக்கிய பின்னர் மெல்ல ஸ்ரூலை நோக்கி நடந்து வந்து காகிதங்களை இருகைகளாலும் பிடித்தபடியே ஸ்ரூலை உற்று நோக்குகிறார். பின்னர் கைகளிலே பிடித்திருக்கும் காகிதங்களை உன்னித்துக் கவனிக்கிறார். பின் ஸ்ரூலை ஐயத்தோடு நோக்கியபடி தயங்கித் தயங்கி காகிதங்களை அதன்மீது வைக்கிறார். அவை மீண்டும் பறக்கின்றன. இரு கைகளையும் மார்புக்குக் கிட்டக் கோர்த்துப் பிடித்தபடி வேதனையோடு மேல்நோக்கியவாறு அங்கலாய்க்கிறார். வேதனைக்குறிகள் அவர் முகத்திலே உக்கிரமாகப் படிய "இது நடந்திருக்கக்கூடாது" என்ற பாவனையில் அவர் தலை அங்குமிங்குமாகச் சில தரம் அசைகின்றது. இது ஓய அவர் கண்கள் மீண்டும் சிதறிப் பறந்த காகிதங்களில் படிய ஆரம்பிக்கின்றன. கண்கள் அவற்றைப் பார்த்தபடியே இருக்க ஒரு நீண்ட பெருமூச்சு அவரிடமிருந்து வெளிக் கிளம்பிக் காற்றோடு கலக்கிறது. மெல்லத் திரும்பி பெரும் அதிர்வுக்குள்ளானவர் போல் பிரம்பு நாற்காலியொன்றில் அமர்ந்து இரு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொள்கிறார். சோககீதம் மெல்ல இசைக்கிறது. தலையை நிமிர்த்துகிறார். கண்ணாடிச் சாடியிலே இருக்கும் நீரும் கிளாசும் அவர் கண்ணில் படுகிறது. இருந்தபடியே அசைந்து நீரைக் கிளாசில் ஊற்றிக் குடிக்கிறார். இந்த நிலையில் இருந்தபடியே திரும்பிக் காகிதங்களைப் பார்க்கிறார். எழுந்து உடையை இழுத்துச் சரிசெய்கிறார். செயற்கையான ஒரு கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல ஆனால் மிடுக்காக நடந்து காகிதங்களைப் பொறுக்கி அடுக்குகிறார். ஒரு கை காகிதத்தைப் பிடித்தபடி நீண்டு தூங்க மற்றக்கை மேற்கோட்டின் பையில் தஞ்சமடைய முன்னர் கொண்ட செயற்கையான கம்பீரத்துடனே ஸ்ரூலை நோக்கி நடக்கிறார். ஸ்ரூலுக்கருகே வந்து நின்று அதிலே ஒரு அலட்சியப் பார்வையைப் படியவிட்டு அந்தப் பார்வையின் தொடர்ச்சியை சபையோரிடம் படிய விடுகிறார். திரும்பவும் ஸ்ரூலைப் பார்த்தபடியே பக்கவாட்டாகச் சரிந்து காகிதத்தை ஸ்ரூல்மீது வைக்கிறார்.

அவை பறக்கின்றன.

அவரின் கம்பீரம், இறுமாப்பு சட்டெனக் கலைய, குனிந்து எஞ்சிய காகிதங்களை இரு கைகளாலும் அழுத்திப் பிடிக்கிறார். அவர் கைகளாலே காகிதங்களை அழுத்திப் பிடித்த போதிலும் அவை வெளிக்கிளம்பும் தன்மை சபையோருக்குத் தெரிகிறது. இப்போது சூறாபெளியொன்று கிளம்புவது போன்ற ஒரு ஒலி பின்னணியில் மெல்லக் கிளம்பி வலுவடைகிறது. இந்த ஒலி கூட்டக்கூட பொதுவர் காகிதங்களை அழுத்துவது போன்ற பாவனையும் அவர் முகத்தில் காட்டும் வேதனைக் குறிகளும் கூடிக்கூடி கடைசியாக சூறாவளியின் பின்னணிச் சத்தம் உச்சநிலையில் இருக்கும்போது அதால் தள்ளப்பட்டவர் போன்று பின்னடைந்து செயலற்று நிற்கிறார். காகிதங்கள் பறந்து மேடையில் விழுகின்றன. பின்னணி ஒலியும் இவையோடு இசையக் குறைந்து மறைகிறது.

தளர்ச்சியும் முதுமையும் அவர் மேற்கவிய பார்வையை மேலே செலுத்தி, சிந்தனை லயத்தோடு திரும்பி, பின்னாலே தொங்கும் கறுப்புத் திரையை அணுகிறார், அதனூடாக எதையோ வெறித்துப் பார்த்தபடி நிற்கிறார். நிலை அவ்வாறே இருக்கத் தலை மட்டும் திரும்பி மேடையிலே சிதறிக் கிடக்கும் காகிதங்களில் படிகிறது. மீண்டும் அவர் காகிதங்களைப் பொறுக்கத் தொடங்கும்போது கதவு மணி அலறுகிறது. பொதுவர் நின்று, கதவைத் திறக்கப் போகும்போது கடிகாரம் மூன்று முறை அடித்து ஒய்கிறது.

பொதுவர் கதவைத் திறக்கிறார். ஒருவரும் உள்ளே வராததால் வெளியே எட்டிப் பார்க்கிறார். பின்னர் கதவை மூடுகிறார். கதவடியில் நின்றபடியே ஸ்ரூலைப் பார்கிறார். திரும்பப் போகும்போது கதவு மணி மீண்டும் அலறுகிறது. கதவைத் தயக்கத்தோடு திறக்கிறார்.

அருளரும், தியாகரும் எதிரே நிற்கிறார்கள். அருளர் வேட்டி நாஷனல் சாயலை ஒத்த உடுப்பும் கழுத்தைச் சுற்றிச் சால்வையும் போட்டிருக்கிறார். தியாகர் நிற லோங்சும் கோட்டும் 'ரை' கட்டாது திறந்த கழுத்தோடுள்ள சேட்டும் அணிந்திருக்கிறார். இருவரையும் கண்ட மகிழ்ச்சி முகத்தில் தோற்ற ஆனால் நடந்த நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து விடுபடாமல் அவர்களை உற்றுப் பார்க்கிறார் பொதுவர். இந் நேரத்தில்



அருளர்: (இராகத்தோடு) ஏமாத்திப் போட்டம்..... ஏமாத்திப் போட்டம்..... ஏமாத்திப் போட்டம் தானே.....

தியாகர்: பொதுவர் பாவம்..... நல்லாய் ஏமாந்து போனுர்,

அருளர்: அவருக்கு உதெல்லாம் நல்ல பழக்கம். என்ன பொதுவர். (சிரித்தபடியே இராகத்தோடு இருவரும்)

இருவரும்: ஏமாத்திப் போட்டம்..... ஏமாத்திப் போட்டம்...... ஏமாத்திப் போட்டம் தானே.......

பொதுவர்: (இவர்களுடைய சம்பாஷணையைப் பொருட்படுத்தாமல் முன்னைய சோகம் முகத்திற் கவிய) என்ன கெடுகாலமோ எனக்குத் தெரியாது முந்தி எப்பவும் நடக்காத ஒரு பெரிய காரியம் எனக்கிப்ப நடந்து போச்சு. (பெருமூச்சு விடல்) (அருளர் கலவரத்தோடு தியாகரைப் பார்க்க இருவரும் பொதுவரைப் பற்றியபடி)

அருளர்: ஓ... பொதுவர்..... நீங்கள் இதுக்கெல்லாம்..... ஓ... ஓ..... அழக்கூடாது..... பாவம். வாருங்கோ...... (அழைத்தபடியே) மெல்ல..... மெல்ல..... இதிலை இருங்கோ..... ஆறுதல்..... ஆறுதல்..... உடம்பை அலட்டாதையுங்கோ..... நாங்கள் சும்மா பகிடிக்கு... (தியாகர் கண்ணாடிச் சாடியில் இருந்த நீரைக் கிளாசில் ஊற்றி பொதுவரிடம் நீட்டியபடியே)

தியாகர்: தெரியாதே... எங்கடை வழக்கமான விளையாட்டுத் தான் பொதுவர். பொதுவர்... இதைக் குடியுங்கோ... ஒண்டுமில்லை. வெறுந் தண்ணிதான். குடியுங்கோ.....களைப்புக்கு நல்லதாக சாந்தி. இந்த நேரத்திலை உங்களுக்குத் தரக்கூடியது இது ஒண்டுதான். (அருளர் கிளாசை தியாகரிடமிருந்து வாங்கித் தானே பொதுவருக்குப் பருக்குகிறார். அவர் பருக்கி முடிந்ததும் தியாகர் அருளரின் சால்வையால் அவர் வாயைத்துடைத்து விடுகிறார்)

அருளர்: (இரக்கக் குரலோடு) பொதுவர், பெரிய பெரிய காரியங்களைக் கண்ட உடனை மனம் தளரக் கூடாது. நாங்கள் தமிழரல்லே.

பொதுவர்: (வேதனையோடு) நான்..... நான்..... என்ன செய்ய. எத்தனையோ பிரச்சினைகளை நான் சமாளிச்சிருக்கிறன். ஆனால் இது..... ஓ..... இதுவரைக்கும் நடக்காதது இப்ப ஏன் நடந்தது?

அருளர்: பிரச்சினையா? (தியாகரும் அருளரும் உசார் அடைகின்றனர்.) பொதுவர் இதுக்கு நீர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பிரச்சினைகள் ஏற்படுகிறது இயற்கை. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையே இல்லை.

தியாகர்: சுருங்கச் சொன்னால் பொதுவர்..... வாழ்க்கை பிரச்சினைகளோடேயே பிறக்குது.

அருளர்: (தியாகரிடம்) ஆனால் இவற்றை பிரச்சினை வேறை. எங்கிடை வாழ்க்கை வேறை.

தியாகர்: ஓம். எங்களுக்கு வாழ்வெண்டால் இவருக்கு கட்டாயம் இறப்புத்தான். (அதிர்ச்சியோடு பொதுவர் எழுகிறார்)

அருளர்: ஓ... நீங்கள் எழும்பக் கூடாது. அது இருதயத்துக்குக் கூடாது, (இருக்க வைக்கத் தெண்டிக்காமல்) உங்களுக்கு இருக்க விருப்பமில்லாட்டில் நீங்கள் நிக்கலாம். நிக்கிறதும் உடம்புக்கு நல்லது.

தியாகர்: அது மாத்திரமில்லை, உங்கிட விருப்பத்துக்கு எதிராய் உங்களை இருக்கச் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. சுருங்கச் சொன்னால் எம் கடன் பணி செய்துகிடப்பது மாத்திரம் தான்.

பொதுவர்: (தன்னுடைய கவலையின் மேலீட்டால்) இதுவரைக்கும் பிரச்சினைகளுக்கு நான் மனந் தளரேல்லை. ஆனால் இண்டைக்கு..... ஓ..... பெரிய சூறாவளிமாதிரி.....

அருளர்: ஓ..... பொதுவர்..... பொதுவர்..... கவலைப்படக் கூடாது.... அது உடம்புக்குக் கூடாது.....

தியாகர்: ஓம். ஓம். பொதுவர். நீங்கள் கவலைப்படக் கூடாது உங்களுக்கு ஏதாவது நடந்தால் பிறகு இதைப்பற்றிக் கவலைப்பட வேறை ஆரிருக்கினம்.

அருளர்: பொதுவர்..... பிரச்சினைகள் உங்களோடை... அதைப் பற்றிய கவலை எங்களோடை. பிரச்சினைக்கு தீர்வை நீங்கள் காணக்கூடாது. அது எங்களின்ரை வேலை.

தியாகர்: ஓம் பொதுவர். தீர்வை நீங்கள் கண்டால்..... பிறகு எங்களுக்கென்ன வேலை.....

அருளர்: கவலை மனிசனுக்கு மகா தரித்திரம். கவலைப்படுகிறதே இப்ப எல்லாருக்கும் தொழிலாய்ப் போச்சுது. அதை மறவுங்கோ. இல்லை. இல்லை. அதை முதலிலை சொல்லுங்கோ.

தியாகர்: பொதுவர், உணவைப் பகிர்ந்தால் வயித்துக்கு நட்டம். கவலையைப் பகிர்ந்தால் மனதுக்கு லாபம்.

அருளர்: (தியாகரிடம்) ஆனால் லாப நட்டம் அதிகமாய் வியாபாரத்திலைதான் பாக்கிறது.

தியாகர்: ஓம். ம் (தலையாட்டி) அது வரவையும் செலவையும் பொறுத்திருக்கு.

பொதுவர்: (தனது கவலை மேலீட்டினால்) ஆனால் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வந்தது?

அருளர்: அதென்னண்டு சொல்லுங்கோ அது போகிடும். எங்களை நம்புங்கோ. நீங்கள் நடந்ததைச் சொல்லுங்கோ.

தியாகர்: நடக்காட்டிலும் பறுவாயில்லை.

பொதுவர்: (காகிதங்களைக் கவலையோடு பார்த்து) இந்தக் காகிதங்களெல்லாம் அந்த ஸ்ரூலிலை தான் முதலிலை இருந்தது. ஆனால் பிறகு..... ஓ... அதைச் சொல்லவே எனக்குக் கவலையாய் இருக்குது. அது..... அதெல்லாம் பறந்து இப்பிடி ஆச்சுது. (இனி வரும் வசனங்களைப் பேசி நடித்துக் காட்டுகிறார். காகிதங்களை உண்மையிலே பொறுக்கி எடுக்காமல் பாவனை செய்கிறார்) நான் பிறகும் பொறுக்கி... அதே இடத்திலைதான் வைச்சன். ஆனால்... (ஆச்சரியமும், வேதனையோடும்) அது பிறகும் பறந்து போச்சது. எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. நான்... நான்... ஓ... பிறகும்... பிறகும் பொறுக்கி எடுத்து வைச்சன். அது பேந்தும் பேந்தும் பறக்குது. ஒருக்காலில்லை. இரண்டு தரமில்லை. மூண்டு... மூண்டு தரம் வைச்சன். ஆனால் மூண்டு தரமும் அது பறந்து போச்சுது. எனக்கு... எனக்கு என்ன செய்யிறதெண்டே.....

அருளர்: (திடீர் சிந்தனை லயத்தோடு) மூண்டு தரம்..... ம்.... மூண்டு.... மூண்டு.... (தியாகர் பக்கம் திரும்பி) விஷ்ணுவுக்கு மூண்டு தலை.

தியாகர்: நான்முகனுக்கு...... நாலு (கையில் காட்டுகிறார்)

அருளர்: அறுமுசனுக்கு ஆறு......

தியாகர்: ம்... இராவணனுக்கு... பத்து......

அருளர்: ஆனால் முறிவு தறிவுகளுக்கும் பத்துப் போடுறவை.

தியாகர்: எட்டுச் செலவு எண்டு சொல்லுறம். அப்பிடியெண்டால் இந்த எட்டு என்ன?

அருளர்: எட்டாம் நாத்து நடக்கிறது எட்டு. மூண்டாம் நாள் நடந்தாலும் எட்டுத்தான்.

பொதுவர்: ஆனால் மூண்டு தரம் தான் வைச்சனான்.

அருளர்: ஒருக்கால் பறந்தால் பிறகு எத்தினை தரம் வைச்சாலும் அது பறக்கும்.

தியாகர்: அது உண்மைதான். எண்டாலும் ஒருக்கால் அது இருந்தால்..... நெடுக இருக்காது.

அருளர்: இருக்கிறதும் பறக்கிறதும் அது அதுவின்ரை இயல்பைப் பொறுத்திருக்குது. எண்டாலும் பெரும்படியாய் நாங்கள் அதுக்குத் தீர்வு காணக்கூடாது. பிறகு ஆபத்திலை முடியும். எதுக்கும் நீங்கள் சொல்லுறதை ஒருக்கால் மெய்யோ எண்டு பாப்பம். அது மெய்யெண்டால் தீர்வுக்கு வழியைப் பிறகு யோசிப்பம்.

தியாகர்: அது நல்ல யோசினை. ஏனெண்டால் முந்தி இருந்த நிலைமை இப்ப இல்லாமல் இருந்துதெண்டால் அதுகள் பறவாதெல்லே. அப்ப தீர்வும் சுகமாய்ப் போகும்?

அருளர்: தீர்வு சுகமாய்ப் போகுமெண்டில்லை. அதுக்குப் பிறது ஒரு புதுப் பிரச்சினை கிளம்பும். இதெல்லாம் ஏன் இப்ப பறக்கேலை எண்டு.

தியாகர்: அப்ப புதுப் பிரச்சினைக்கு தீர்வு காணுறதெண்டால் இதெல்லாம் பறக்க வேணும்.

அருளர்: இப்போதைக்கு ஓ மெண்டுதான் சொல்ல வேணும். எதுக்கும் நாங்கள் ஒருக்கால் பறக்குதோ எண்டு பாப்பம். பிறகு யோசிப்பம். சரி இதெல்லாத்தையும் ஒருக்கால் பொறுக்குங்கோ. (மூவரும் பொறுக்கி அருளரிடம் கொடுக்கின்றனர். அருளர் அதைப் பொதுவரிடம் நீட்டி) நீங்கள்தான் வையுங்கோ. நான் வைச்சால் சிலவேளை அதுகள் பறவாது.

தியாகர்: பறவாட்டில் பிறகு எங்களுக்கு வேலை இல்லை. சும்மா பயப்பிடாதையுங்கோ.... வையுங்கோ. (பொதுவர் சுற்றும் முற்றும் கவலையோடு பார்க்கிறார், பின்னர் மெதுவாகத் தயங்கித் தயங்கி ஸ்ரூலில் வைக்கிறார். அவை மீண்டும் பறக்கின்றன. மூவரும் திகைத்தபடியே ஓரிரு வினாடிகள் நிற்கின்றனர். மௌனத்தை அருளர் கலைக்கிறார்)

அருளர்: எனக்குத் தெரியும் உதெல்லாம் பறக்குமெண்டு.

பொதுவர்: (சோர்வோடு) இதோடை நாலாவது தரம். (கதிரையில் பொத்தெண்டு விழுகிறார். கவலையோடு தலையை அங்குமிங்கும் ஆட்டி) இந்த நிலைமை எனக்கு ஏன் வரவேணும். நான் ஒருத்தருக்கும் ஒரு கெடுதியும் செய்யேல்லையே.

தியாகர்: பொதுவர்...நிலத்தைக் கிண்டினால் தண்ணி வருகுது. காத்தை ஊதினால் பலூன் வெடிக்குது. ஸ்ரூலிலை வைச்சால் அது பறக்குந்தானே.

பொதுவர்: நேற்றைக்கு இதுகளெல்லாம் அதே இடத்திலைதான் இருந்ததுகள். ஏன்? பறக்கிறதுக்குக் கொஞ்சம் முந்தியும் அதிலைதான் இருந்ததுகள். ஆனால் பிறகு...பிறகேன் இதுகள் பறப்பான்? அருளர்... தயவு செய்து இந்தப் பிரச்சினைக்கு நீர் வழி சொல்லத்தான் வேணும்.

அருளர்: அதுகளைப்பற்றி நீர் கனக்க யோசியாதையும், யோசினை மனிசருக்கு கூடாது. பிறகு பிறஷராக்கிப்போடும் அது நாளைக்குப் பறவாது.

பொதுவர்: (அந்தரத்தோடு) இண்டைக்குப் பறக்கிறது எப்பிடி நாளைக்குப் பறவாமல் போகும்.

தியாகர்: இண்டைக்கிருப்போர் நாளைக்கிருப்பர் என்பதோர் திடமுமில்லையே.

அருளர்: (பெரும் பீடிகையோடு) உதுகளெல்லாம் பெரும் பிரச்சினைகளில்லை. உதிற் பெரும் பிரச்சினைகளெல்லாம் இருக்கு. அதுகளையும் ஒருக்கால் கவனிக்கவேணும் நாங்கள் நினைச்சமெண்டால்...

தியாகர்: நினைக்காமல் இருக்கிறது கூட எங்கடை பிழையில்லை. (சிறிது நேர மௌனத்திற்குப் பின்னர் திடீரென சிந்தையிற் தட்டுப்பட்ட பாவத்தோடு) ஏன் ஒரு ஊர்வலம் வைச்சால் பிரச்சினை தீரும்தானே?

அருளர்: அதைப்பற்றித்தான் நானும் யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்... ஆனால் ஊர்வலத்தை எங்கை தொடங்கி எங்கை வரைக்கும் முடிகிறது எண்டது தான் பிரச்சினை.

தியாகர்: (ஆமோதிக்கும் பாவனையில்) ஓமோம்.... அது பெரிய பிரச்சினை. அப்பிடியெண்டால் இந்த விஷயத்தைப் பற்றி ஆராய ஒரு கொமிஷன் நியமிச்சால் என்ன?

அருளர்: (தியாகரைச் சற்றுப் பொறுமையாக இருக்கும்படி சைகை காட்டி கழுத்தைச் சுற்றப் போட்டிருந்த சால்வையை எடுத்து அரையில் கட்டி, அதை இரு கைகளாலும் பிடித்தபடி நெஞ்சை நிமிர்த்தி மேடைப் பிரசங்கம் நிகழ்த்தும் பாவனையில்) கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்த பிரச்சினைகளை உழைத்து உழைத்து ஒடாய் உருக்குலைந்துவிட்ட மனிதனை எதுவிதக் கனிவுமின்றி நசி நசியென நசித்து நட்டாற்றில் கைவிட்ட பிரச்சினைகளை மனைவி வீட்டிலே ஏங்க... பிள்ளைகள் அப்பா வருவார் எனக் கண் தூங்காது காத்திருக்க... உற்றாரும் மற்றோரும் அவனையே எதிர்பாத்திருக்க... அவர்களையெல்லாம் காணாது ஏமாற்றி ஓங்கச்செய்து வாழ்க்கையின் அந்தலைக்கே ஓடவைக்கச்செய்த அந்தப் பிரச்சினைகளை... அக்குவேறு ஆணி வேறாகப் பிளந்து.... நாறி நாற்றமெடுக்கும் நெறி கெட்ட துர்க் கிருமிகளை அதிலிருந்து அகற்றி விட்டால்.... கவலை ஒழியும்... துன்பம் நீங்கும்... பொங்கும் இன்பர் எங்கும் பெருகும். (இந்தப் பேச்சை அணுவணுவாக இரசித்த தியாகர் பெரும் திருப்தியோடு)

தியாகர்: இனிமேல் காகிதமெல்லாம் மறவாது. அது நிச்சயம் (அருளரைக் கனிவோடு அணைக்கிறார், திரும்பி) பொதுவர்... (அருளர் தன் பேச்சின் பிற்பகதிக்கு வரும்போது சிந்தனையில் லயித்த வண்ணம் நடந்து பின் ஒரு முடிவுக்கு வந்தவர் போல், மேல் மேடை நடுப் பகுதியை அண்டியுள்ள தொலைபேசிக்கு அருகே சென்று அதை எடுத்து எண்களைச் சுழட்டுகிறார். பின்னர் பேசுகிறார்.)

பொதுவர்: புறொபசர் பிளீஸ்... ஆ புறொபசர் இங்கை நான் பொதுவர்... ஓ பொதுவர்... (உரத்து) பொதுவர் ஒம் நான் இங்கை ஒரு பெரிய பிரச்சினையிலை மாட்டுப்பட்டுப்போய் நிக்கிறன், அது உங்களாலைதான் விடுபடும் போல இருக்கு... என்னண்டு... கேக்கல்லை... இல்லை... இல்லை... அது போனிலை சொன்னால் விளங்காது... நீங்கள் ஒருக்கால் நேலிலை வந்தியள் எண்டால் எல்லாத்தையும் ஒருக்கால் பார்க்கலாம்... என்னண்டு... கேக்கேல்லை... றிசேச்சா... ஓ... இதுவும் றிசேச்சுக்குரிய விஷயம்தான் பிளீஸ், நீங்கள்தான் இதிலை எனக்கு உதவி செய்ய முடியும் பிளீஸ்.. தங்கியூ... தங்கியூ... (றிசீவரை வையாமலே அருளர் தியாகரிடம் திரும்பி புறபெசர் ஏதோ றிசேச் செய்து கொண்டிருக்கிறாராம். அவர் எனக்கு உதவி செய்ய ஒருக்காலும் பின்னிக்கமாட்டார். இப்ப வாறனெண்டவர். (இந்த நேரத்தில் கதவு மணி அலறுகின்றது. அருளர் போய்க் கதவைத் திறக்கிறார். புறொபசர் மெய்யர் கையிலே பெரிய புத்தகம் பைல் காகிதத்தோடு அவசர அவசரமாய் உள்ளே நுழைகிறார். பொதுவர் இவரைக் கண்ட ஆச்சரியத்தில்)

பொதுவர்: ஹலோ புறொபசர் நீங்களா? நம்ப ஏலாமல் இருக்கே. உங்களுக்கு போன் பண்ணி றிசீவரைக்கூட இன்னும் வைக்கேல்லை. அதுக்கிடையில் இவ்வளவு கெதியாய்... (றிசீவரை வைக்கிறார்)

புறொபசர்: பொதுவர்.. இது விஞ்ஞான உலகம். எல்லாம் றொக்கெட் வேகம். நாங்கள் மட்டும் பின்தங்கலாமா? நான் விஞ்ஞானி. எனக்குத் தெரியும் உலகம் சுத்திற திசைக்கு ஒத்த திசையில வந்தன்... இதோ நான் (திடீர் அந்தரத்தோடு) ஆ... எனக்கு நேரமில்லை... நான் போகவேணும்... ஒரு றிசேச் செய்து பாதியிலை விட்டுட்டு வந்திட்டன். அதை இண்டைக்கு எப்பிடியும் முடிக்கவேணும். அப்பத்தான் நான் எதிர்பார்க்கிற றிசல்ற்வரும். இல்லாட்டில்... நாளைக்கு அதை வேறை ஆரும் செய்து வேறை றிசல்ற்றைப் பப்பிளிஷ் பண்ணிப்போடு வாங்கள். (மற்ற இருவரையும் பார்த்து) மன்னிக்க வேணும்.

பொதுவர்: (புறொபசரின் கைகளைப் பிடித்தபடி) ஓ... புறொபெசர் நீங்கள் வந்ததே எனக்குப் பெரிய ஆறுதல். வாருங்கோ (புறொபசரின் கையிலுள்ள புத்தகங்களையும் பைலையும் வாங்கத் தெண்டிக்கிறார். புறொபசர் மறுத்துவிடுகிறார்) ஓ... புறொபெசர் இவையை உங்களுக்குத் தெரியும் எண்டு நினைக்கிறன். அருட்சோதி அம்பலவாணற்றை ஞாபகார்த்தக் கூட்டத்தில அறிமுகப்படுத்தி வைச்சனான்.

புறொபெசர்: ஓ.... (ஆமோதிக்கும் விதத்தில் தலையை ஆட்டி) அறிமுகப்படுத்தினால் கட்டாயம் தெரியும் (தியாகர் பக்கம் திரும்பி) ஹலோ (அவரை அணைக்கிறார், அணைத்தபிடி விடாமலே பொதுவரிடம்) இவற்றை பெயர் என்ன?

பொதுவர்: தியாகர்... தியாகி தியாகர்...

புறொபெசர்: ஓ... ஓதியாகர்.... தியாகர்... (இரண்டு தரம் அவரை மார்போடு அணைத்துக் கொள்கிறார். முகத்தில் சிரிப்பை வரவழைத்தபடியே) உங்கடை சாகித்தியங்கள் எல்லாம் இப்ப எப்பிடிப் போகுது.

தியாகர்: (சற்று வெட்கப்பட்டவராக) நான் இன்னும் சம்சாரி ஆகேல்லை.

புறொபசர்: ஓ.... அதுதானே, கேட்டன் Hi Parade டிலை உங்கிடை இரண்டு மூண்டு பாட்டுக் கேட்ட ஞாபகம். (அருளர் பக்கம் திரும்பி) ஹலோ....

அருளர்: (அறிமுக பாவனையில்) அருளர்... வணக்கம் (கை கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்).

புறொபசர்: பொதுவர்... இந்த றிசேச்சிலை ஈடுபட்டால் பிறகு மற்றப் பிரச்சினைகளிலை தலையிட எனக்கு நேரமில்லாமல் இருக்கு. என்ன செய்யிறது?

அருளர்: நீங்கள் அதுகளைப்பற்றியெல்லாம் கவலைப்படாதயுங்கோ. அதுகளையெல்லாம் நாங்கள் கவனிப்பம்.

தியாகர்: நாட்டின்ரை முன்னேற்றத்திற்கு நீங்கள் றிசேச் செய்யிறதுதான் நல்லது. மற்ற விஷயங்களிலை ஈடுபட்டீங்கள் எண்டால் நேரம் பிரயோசனமாய்க் கழிஞ்சுபோம்.

புறொபசர்: ஓ...அப்ப... நீங்களும் றிசேச் வேக்கேசா (Research Workers) குட்... குட்... (Good Good) (பொதுவரிடம் திரும்பி) பொதுவரிடம் திரும்பி) பொதுவர்... சுத்தி வளைச்சுப் பேசிறது விஞ்ஞானியின்ரை பழக்கமில்லை. பிரச்சினையை நேரடியாகக் காணுறது, அதை நேரடியாகத் தாக்கிறது இதுதான் எங்கிடை மெதட். (Method)

அருளர்: (சற்று குழப்பத்தோடு தியாகர் பக்கம் திரும்பி) ஆனால் சுத்தி வளைக்காமல் ஆக்களைப் பிடிக்கிறதெண்டது சரியான கஷ்டமே.

தியாகர்: ஒமோம்...அது கத்தி வாற பக்கத்தைப் பொறுத்திருக்கு.

புறொபசர்: தற்ஸ் றைற் (That is Right) எங்கிடை பாஷையிலை நாங்கள் அதை போலறைசேஷன் (Polarisation) முனைவாக்கம் எண்டு சொல்லுவம்.

அருளர்: நாங்களும் அந்த மெதட்டைத்தான் பாவிக்கிறனாங்கள்.

புறொபசர்: ஓ.... அப்பிடியெண்டால் நீங்கள் உண்மையானறிசேச் வேக்கேஸ்தான். ஹவ்... குட்... ஹவ் குட் (How Good How Good) (சொல்லியபடியே அருளரை அங்காலும் இங்காலுமாக மார்போடு இருமுறை அணைக்கிறார். பொதுவரிடம் திரும்பி) பொதுவர் இவர்களைப் போன்ற பிறக்ரிக்கல் றிசேச் லேக்கேஸ் (Practical Research Workers) உமக்கு நண்பர்களாய் இருக்க நீர் குடுத்து வைச்சிருக்க வேணும். (இந் நேரத்தில் கடிகாரம் பதினெட்டுத் தரம் அடித்து ஓய்கிறது இதைப் புறொபெசர் உன்னிப்பாகக் கவனித்த பின்னர் ஓ நேரம் கனக்கச் சிலவழிஞ்சு போச்சிது. பொதுவர் நான் போக வேணும். பிரச்சினையைச் சொல்லும்.

பொதுவர்: (பழைய வேதனை முகத்திற் கவிய ஓ.. புறொபசர் உங்களுக்குச் சொல்லாமல் நான் வேறை ஆருக்குச் சொல்லுவன். எனக்குக் கஸ்டமெண்டால் உங்களைத் தவிர வேறை ஆர் எனக்கு உதவிசெய்ய வருவினம்?

அருளர்: (கலவரம் அடைந்து) எங்களையும் வைச்சுக்கொண்டு நீங்கள் இப்பிடிக் கதைக்கிறது என்னவோ ஒரு மாதிரியிருக்குது. (முகத்தைச் சுழிக்கிறார்)

தியாகர்: ஓம் பொதுவர்இ நாங்கள் போனாப் பிறகு நீர் உண்மையைச் சொல்லியிருக்கலாம்.

புறொபசர்: உண்மையைப் பற்றிப் பேசுகிறதுதான் விஞ்ஞானம். பொதுவர் நீங்கள் சொல்லுங்கோ... உண்மையிலை... நீங்கள் சொன்னதைப் பற்றி அவை குறை விளங்க மாட்டினம்.

பொதுவர்: புறொபசர்... (கவலையோடு, சிதறிக் கிடக்கும் தாள்களைக் காட்டி) இதெல்லாம் இந்த ஸ்ரூலிலை தான் முதல் இருந்தது. நேற்று இண்டைக்கு மட்டுமில்லை. நெடுக இதிலை தான் இருக்கிறது. ஆனால்... ஏனோ எனக்குத் தெரியாது. கொஞ்சம் முந்தித் திடீரெண்டு பறக்கத் தொடங்கியிட்டுதுகள். மூண்டு தரம் திரும்பத் திரும்ப வைச்சும் இதிலை இராமல் பறந்து போகுதுகள்... எனக்கு ஏன் எண்டே விளங்கேல்லை. எப்பிடி எல்லாத்தையும் திருப்பி வைக்கிறதெண்டும் தெரியாமல் நிக்கிறன். (தியாகரையும் அருளரையும் காட்டி) இவை....

அருளர்: (பொதுவரை இடைமறித்து) புறொபசர் இந்த இத்திலை ஒரு விளக்கம் உங்களுக்கு இருக்கிற சந்தேகத்தைப் போக்கும் எண்டு நினைக்கிறேன். ஒருவேளை நீங்கள் நினைப்பியள் நாங்கள் தான் இதையெல்லாம் எறிஞ்சமோ எண்டு. ஆனால் அது பொய். உண்மை என்னெண்டால், நாங்கள் வரேக்கையே அது சிதறிப்போய்த் தான் கிடந்தது. சிதறிப் பறக்கிறதை நாங்கள் கண்டிருந்தால் அதைக் கட்டாயம் அப்பிடிச் செய்ய விட்டிருக்க மாட்டம்.

தியாகர்: புறொபசர், அருளர் சொல்லுவது முற்றிலும் உண்மை, அதுக்கு நான் சாட்சி, ஒருவேளை இதுகள் தான் எங்களைச் சிதற அடிச்சிருக்குமே தவிர, எங்களாலை இதுகளைச் சிதற அடிக்க ஏலாது.

பொதுவர்: புறொபசர்... இதெல்லாம் ஏன் கிளம்பிப் பறக்குது? என்னாலை ஏன் இதுகளை இருந்த இடத்திலை வைக்க ஏலாமல் இருக்குது? அதுதான் புறொபெசர் எனக்கு விளங்கேல்லை.

அருளர்: (புறொபெசரிடம்) இந்த இடத்திலையும் ஒரு சின்ன விளக்கம். ஒருவேளை நீங்கள் நினைப்பியல் எங்களுக்கும் இது விளங்கேல்லை எண்டு. ஆனால் அது பொய்.

தியாகர்: உண்மை என்னெண்டால், எங்களுக்கு இதுகளைப் பற்றி விளங்கிக் கொள்ளுறதுக்கு விருப்பமில்லை.

பொதுவர்: ஆனால் புறொபசர் இது ஏன் இப்பிடி நடப்பான்?

புறொபசர்: (தலையைத் தடவியபடி, தாள்களைப் பார்த்து) கர்த்தர் இல்லாமல் காரியம் நடைபெறாது. இதுக்கெல்லாம் ஏதோ ஒண்டு வெளியாலை நிண்டு தொழில் புரியுது. (பார்வையை ஸ்ரூல்மீது திருப்பியபடியே) அது என்ன எண்டு மாத்திரம் கண்டு பிடிச்சுட்டம் எண்டால்.... பிறகு இதெல்லாத்தையும் இருந்த இடத்திலேயே திரும்பவும் வைக்கலாம்.

அருளர்: புறொபசர்... ஒருவேளை நீங்கள் யோசிப்பியள் இதுகளுக்கெல்லாம் காரணம் ஆர் எண்டு எங்களுக்கு முந்தியே தெரியாது எண்டு. ஆனால் கர்த்தா தான் எண்டு எங்களுக்கு முந்தியே தெரியும்.

தியாகர்: கர்த்தா எண்டது தமிழ். 'கற்றா' (Catarrh) எண்டது இங்கிலிஷ் (English) கற்றா எண்டது ஒருவகை வியாதி. சுருங்கச் சொல்லப்போனால், வியாதியே துன்பத்திற்குக் காரணம். இது முந்தியே எங்களுக்குத் தெரியும். (அருளரையும் தியாகரையும் மாறி மாறிப் புறொபசர் பார்த்த போதிலும் தன் சிந்தனை லயத்தைக் கைவிடாமல் உன்னிப்பாக பொதுவர் பக்கம் திரும்பி)

புறொபசர்: விஞ்ஞான முறையை மூண்டு பிரிவாய்ப் பிரிக்கிறம். பரிசோதனை, நோக்கல், உய்த்தறிவு, இந்த வழியைப் பின்பற்றினால் நிச்சயம் காரியகர்த்தா தெரிவார். இந்த வழியைத்தான் நாங்களும் பின்பற்றுவம். பொதுவர் கவலைப்படாதையும். உம்மிட பிரச்சினைக்கு இன்னும் கொஞ்ச நேரத்திலை விடிவு பிறக்கும்.

பொதுவர்: ஓ புறொபசர் தாங்க் யூ.

புறொபசர்: (மகிழ்ச்சியுடன்) சரி எல்லாத் தாள்களையும் பொறுக்குங்கோ. (மூவரும் அவசர அவசரமாய்த் தாள்களைப் பொறுக்கி எடுத்து, தியாகர் தான் பொறுக்கிய தாள்களை அருளரிடம் நீட்ட அதை அருளர் வாங்கி தான் பொறுக்கியவற்றோடு சேர்த்து புறொபசரிடம் கொடுக்கிறார். பொதுவரு ம தான் பொறுக்கியவற்றை புறொபசரிடம் கொடுக்கிறார். இவற்றை அடுக்கி பொதுவரிடம் நீட்டியபடியே)

புறொபசர்: பொதுவர் நீங்கள் முதல் மூண்டு தடவையும் எப்பிடி வைச்சியளோ... அதே மாதிரி இந்த முறையும் வையுங்கோ. ஒரு கொஞ்சப் பிழை வந்தாலும் பிறகு கல்குலேஷனிலை (calculation) அது தாக்கும். கவனம் (புறொபெசரின் எச்சரிக்கையால் நடுக்கமுற்ற பொதுவர், தயங்கியபடியே)

பொதுவர்: (தாள்களை வைக்காமல்) ஓ... புறொபெசர் நீங்கள் வையுங்கோ.. என்னாலை ஏலாது...பிளீஸ்...

அருளர்: (ஆதரவாக) பொதுவர் பொதுவர் பயப்பிடாதையுங்கோ.... நாங்கள் இருக்கிறம்தானே.... (பொதுவர் யோசிக்கிறார்)

தியாகர்: ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ... அது பறந்தால் நாங்கள் பொறுக்கித்தாறம்.

புறொபெசர்: இதிலை பயப்படுறத்துக்கு ஒண்டும் இல்லைப் பொதுவர். பிரச்சினை தீரவேணும் எண்டால் நான் சொல்லுறது மாதிரிச் செய்யுங்கோ. (பைலையும், காகிதம் பேனை ஆகியபற்றையும் எடுத்து புறொபெசர் குறிப்பெடுப்பதற்கு ஆயத்தமாகி) சரி...இனி வையுங்கோ...

அருளர்: ம்....ம்.... பயப்பிடாமம்.

தியாகர்: நான் வைப்பன்தான் எண்டாலும் அவர் வைக்குமாப்போலை வராது. (பொதுவர் மெல்ல மெல்ல காகிதக்கட்டை வைக்கிறார். இடையில் புறொபெசர்)

புறொபெசர்: கையை விட்டிடாதையும் (அவசர அவசரமாகக் கோட்டுப் பையிலிருந்து 'ரேப்' ஒன்றை வெளியே எடுக்கிறார். அதன் அளவுப் படிவகுப்பைப் பார்த்தபடியே ஸ்ரூலிலிருந்து கையின் தூரத்தையும் பொதுவரின் தூரத்தையும் அளவெடுத்துக் குறித்துக்கொள்கிறார். வேறு சில அளவுகளையும் குறித்துக் கொள்கிறார். இந்நேரத்தில் முன்னர் கேட்டது மாதிரி ஒரு சூறாவளியின் ஆரம்பச் சத்தம் மெல்லக் கேட்கிறது. அது மெல்ல மெல்லக் கூடி வலுக்கும்போது)

புறொபெசர்: (சத்தத்தைக் கவனியாமல்) சரி கையை விடுங்கோ. (ஆனால் பொதுவர் கையை விடாமல் அழுத்திப் பிடிக்கத் தாள்கள் பறக்க எத்தனிக்கும் தன்மை தெரிகிறது. இரு கைகளாலும் காகிதத்தை அழுத்திப் பிடித்தபடியே வேதனைக்குறியை முகத்திற் கூட்டிக் கூட்டி வேதனைக் குரலோடு)

பொதுவர்: புறொபெசர்.

புறொபெசர்: கையை விடுங்கோ..

பொதுவர்: புறொபெசர்.... புறொபெசர்...

புறொபெசர்: (அந்தரத்துடன்) கை விடுங்கோ... கையை விடுங்கோ (சூறாவெளி உச்ச நிலையை அடைய பொதுவர் முன்னர் போல எத்தித் தள்ளப்படுகிறார். தாள்கள் எல்லாம் பறக்கின்றன. வியர்க்க விறுவிறுத்து மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க, தொப்பென்று கதிரையில் விழுகிறார் பொதுவர். அருளரும் தியாகரும் ஓடிச் சென்று அவரைத் தேற்றியபடியே)

அருளர்: பேய் மனிசன்.... செய்த வேலையைப் பார். அறப்படிச்சவன் கூழ்ப்பானைக்குள்ளை எண்டது சரியாய்ப் போய்ச்சுது.

தியாகர்: நல்ல வேளை கூழ்ப்பானை அறப்படிக்கேல்லை. (இவற்றைப் பொருட்படுத்தாது, புறொபெசர் பொதுவர் தள்ளப்பட்ட, தூரம் ஸ்ரூலுக்குக் கிட்டக் கிடக்கும் தாள், அதிதொலைவி கிடக்கும் தாள், ஆகியவற்றினுடைய தூரங்களைக் குறித்துக் கொண்டிருக்கிறார்)

அருளர்: (முன் வசனத்தின் தொடர்ச்சியாக வெடுவெடுப்புடன்) ஓ... படிச்சிருந்தால் அதுவுமிப்ப புறொபெசர் தான் (தியாகர் கிளாசில் தண்­ரை ஊற்றிக் கொண்டிருக்கும் போது)

புறொபெசர்: (தனது அளவைகளிலும் பைலிலும் கவனத்தைச் செலுத்தியபடியே) பொதுவர் நீர் ஒண்டுக்கும் பயப்பிடாதையும். பரிசோதனையும் முடிஞ்சுது. நோக்கலும் முடிஞ்சுது. உய்த்தறிதல்தான் மிச்சம். இன்னும் ஐஞ்சு நிமிஷத்திலை எல்லாஞ் சரி. உமக்கும் உம்முஐடய பிரச்சினைக்கும் விடிவு. (ஒரு கதிரையை இழுத்து நீண்ட மேசைக்கு கிட்டப் போட்டு மிகவும் காத்திரமாக நோக்கல்களுக்குத் தீர்வுகாண முற்படுகிறார். அப்போது)

அருளர்: விடிவென்ன வேண்டியிருக்கு புறொபெசர் விடிவு, ஆளே முடியப் பாத்திது (இந்தக் குறிப்புக்குச் செவி சாய்க்காமல் புறொபெசர் தன் கருமத்தில் கண்ணாய் இருக்கிறார். கீழ் வரும் வசனங்களின்போது புறொபெசர் கிளாசில் தண்­ரை ஊற்றி ஊற்றிக் குடிக்கிறார். தண்­ர் சாடியில் முடீந்தாலும் குடிக்கும் பாவனை தொடர்ந்து நடக்கிறது. மௌனமாக மூன்று நான்கு வினாடிகள் கழிய) இருந்தாலும் இந்த அலட்சியம் கூடாது. அறிவு நல்லது தான். ஆனாலும் அது அலட்சியமாயும் ஆணவமாயும் மாறக்கூடாது.

தியாகர்: ஓமோம்... ஆணவம் அலட்சியமாக மாறலாமே தவிர அலட்சியம் ஆணவமாக மாறக்கூடாது.

அருளர்: (வெறுப்பாகக் குரலை உயர்த்தி) அதுதானே சொல்லுறது இரக்கப் போனாலும் சிறக்கப்போ எண்டு.

தியாகர்: (வெறுப்பாக குரலை உயர்த்தி) ஓமோம்... சிறப்பு இறப்புக்குப் பிறகுதான்.

அருளர்: (புறொபெசரைப் பார்த்தபடி ஆத்திரம் தொனிக்கும் குரலில்) அவிஞ்சு புண்ணாகிறதைவிட, செத்துச் சாம்பலாகிறது நல்லது.

தியாகர்: (அருளரைப் போலவே ஆத்திரக்குரலில் புறொபசரைப் பார்த்து) செத்துச் சாம்பலாகினாலும் அஸ்தியை ஆத்திலை தான் கரைக்க வேணும்.

இருவரும் : (உச்சக்குரலில்) செய் அல்லது செத்துமடி. (இருவரும் புறொபெசரைப் பார்த்தபடியே கண்களில் கனல் கக்க வெடுக்கென்று ஆசனத்தில் அமர்கின்றனர். நான்கைந்து வினாடி மௌனத்துக்குப் பின்பு புறொபெசர் எழுந்து தனது பைலைத் தூக்கிப் பிடித்தபடியே மகிழ்ச்சி மேலீட்டினால்)

புறொபெசர்: கண்டுபிடித்து விட்டேன்... கண்டுபிடித்து விட்டேன்... பொதுவர்.... பொதுவர்....கவலையை விடும். இதோ விடிந்து விட்டது. (எல்லோரும் சடக்கென்று எழுகிறார்கள். பொதுவர் மகிழ்ச்சியோடு புறொபெசரைக் கட்டித் தழுவி, பைலைப் பார்க்கிறார். முன்பிருந்த கோபக் குறிகள் அருளர் தியாகர் ஆகியோரது முகத்தில் இப்போது இல்லை)

அருளர்: (ஏளனத்தோடு) எட..... எங்களுக்கு இது முந்தியே தெரியும்.

தியாகர்: ஓம்... பொழுது பட்டால் விடியுந்தானே.

புறொபெசர்: பொதுவர் (பெருமிதக் குரலோடு) கர்த்தாவை இப்போது நான் சொல்லமாட்டேன். அதுக்கு முந்தி என்ரை உய்த்தறிவிலை வந்திருக்கிற சிறப்பான ஒரு கண்டுபிடிப்பைத்தான் முதலை உங்களுக்குக் காட்டப்போறேன்.

அருளர்: நாங்கள் முன்னமே கண்டு பிடிச்சிட்டம். ஆனதாலை உது எங்களுக்கு அதிசயமாய் இராது. (கீழே சிதறிக் கிடக்கிற காகிதங்களைப் பொறுக்கியெடுத்து, பொதுவரை ஸ்ரூலுக்குக் கிட்ட அழைத்துச் செல்கிறார். முதலில் அசையாது நின்ற அருளரும் தியாகரும் ஆர்வம் மேலீட்டினால் தயங்கித் தயங்கி இரண்டடி முன்னால் எடுத்து வைத்து ஆர்வத்தோடு புறொபெசரைப் பார்க்கின்றனர்)

புறொபெசர்: (அருளரையும் தியாகரையும் மாறி மாறிப் பார்த்து சரி.... இந்தக் காகிதங்களை இதிலை வைக்கிறன் எண்டு வச்சுக் கொள்ளுவம். அப்பிடியெண்டால், இது எந்தப் பக்கத்துக்குப் பறக்கும்? அங்காலையோ இங்காலையோ? (மேடை உள்ளும் சபையோர் பக்கமும் சைகையால் காட்டுகிறார்.)

அருளர்: (இதில் ஏதோ சூது இருக்க வேண்டும் என ஐயப்பட்டவராக) அது... சொல்லுறதெண்டால்.... ம்.... சொல்லுறது... சொல்ல ஏலாது.... அது பறக்கிற பொருளைப் பொறுத்திருக்கு. உது...வந்து...

பொதுவர்: (இடைமறித்து) நாலு தரமும் வைக்கேக்கை இஞ்சாலைதான் பறந்தது. (திசையைக் காட்டுகிறார்)

புறொபெசர்: (தலையை மேலே தூக்கிச் சிரித்தவாறு) ஹஹ்....ஹா...அப்பிடித்தான் எல்லாரும் நினைக்கிறது. நானும் அப்பிடித்தான் முதலிலை நினைச்சன். ஆனால் அது பிழை. இஞ்சை பாரும். (பைலைக் காட்டுகிறார்) இதிலை வருகுது மறைக்குறி (பொதுவர் புறொபெசரைப் பார்க்கிறார்) மறைக்குறி எண்டால் மைனஸ் சய்ன் (Minus Sign) ஆகையாலை காகிதம் எல்லாம் இந்தப் பக்கம் பறக்க ஏலாது. பறந்தால் அது விஞ்ஞானத்துக்குப் பிழை. என்ரை கல்குலேஷன்படி (Coculation) இந்த மைனஸ் சய்ன் இக்கிறதாலை இதெல்லாம் இந்தப் பக்கம்தான் பறக்கும் (சபையோர் இருக்கும் பக்கத்தைக் காட்டுகிறார்)

பொதுவர்: நம்ப ஏலாமல் இருக்குதே புறொபெசர்.

புறொபெசர்: நம்பமுடியாத எத்தினை விஷயங்களை விஞ்ஞானம் சாதிச்சுப்போட்டுது. விஞ்ஞானம் எண்டாலே விசித்திரம்தான்.

தியாகர்: ஆனால் புறொபெசர் எல்லா விசித்திரங்களும் விஞ்ஞானம் ஆகாது.

அருளர்: அதெல்லாம் விசித்திரமாய்க் கொள்ளுற ஆக்களைப் பொறுத்திருக்கு.

பொதுவர்: அருளர்.... நீங்கள் இதை நம்பிறியளா?

அருளர்: உது எங்களுக்கு முந்தியே தெரியும்.

புறொபெசர்: இதைமட்டும் நான் வெளியிட்டால் காணும். இந்த முறை நோபல் பிறைஸ்ஸே (Nobel prize) எனக்குத் தான். (அருளரும் தியாகரும் ஒருதலை ஒருதர் அர்த்தபுஷ்டியோடு பார்க்கின்றனர்)

அருளர்: அதுக்கெல்லாம் இப்ப என்ன அவசரம் புறொபெசர். பாவம் பொதுவர், அவற்றை விஷயத்தை முதலொருக்கால் பாருங்கோ.

தியாகர்: ஓமோம்... நீங்கள் இதைப் பாருங்கோ.... பிறைஸ் கரைச்சலை எங்களோடை விடுங்கோ.

புறொபெசர்: (மிகவும் மிடுக்காக) சரி. இனி எல்லாருக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டின் அதியங்கண்டு பிடிப்பைக் காட்டப்போகிறன் )காட்டுவதற்கு ஆயத்தப்படுத்துகிறார்)

அருளர்: (ஆட்சேபனைக்குரலில்) உது முந்தியே நாங்கள் காட்டிப் போட்டம்.

புறொபெசர்: (ஒவ்வொருவராய்க் கம்பீரமாகப் பார்த்து) இதை முதல் நான் வைப்பேன். எல்லாம் இங்காலே பறக்கும் பிறகு நான் கர்த்தாவைவ் சொல்லுவேன். பிறகு பொதுவரின் பிரச்சினையைத் தீர்ப்பேன். பிறகு பொதுவரின் கவலை தீரும். (அருளர் ஏதோ கதைக்க முற்படும்போது வாயிலே விரலை வைத்து அவரை அடக்குகிறார். புறொபெசர் மௌனம் இரண்டு மூன்று வினாடிகள் மண்டபத்தைக் கௌவிக்கொள்ள மூவரையும் பார்த்தபடியே ஸ்ரூலில் தாள்களை வைக்கிறார். அவை சிதறி முன்னர் பறந்த திசையிலேயே பறக்கின்றன. நால்வரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். தாள்களை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறார் புறொபெசர். மற்ற மூவருடைய கண்களும் தாள்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகின்றன. சில வினாடி மௌனத்துக்குப் பின் அருளர் தன் நிலை அடைகிறார், அலட்சியப் பார்வை ஒன்றை புறொபெசரில் ஓட விட்டபடியே அருளர் சொல்கிறார்)

அருளர்: உது எங்களுக்கு முந்தியே தெரியும்.

தியாகர்: (சிந்தனை லயத்தோடு) உதெல்லாத்துக்கும் மருந்து ஊர்வலம்தான். (கலவரமடைந்த புறொபெசர் தலையைத் தடவியபடியே தனது பைலைப் பார்க்கிறார். பின்னர் அதைப் பார்த்தபடியே அங்குமிங்குமாக நடக்க ஆரம்பிக்கிறார். பின்னர் நின்று பைலைப் பார்த்தபடியே)

புறொபசர்: எங்கேயோ ஓரிடத்திலை பிழை விட்டிட்டன். எங்கை எங்கை...ம்....விஞ்ஞானம் ஒருக்காலும் பிழைக்காதே... எங்கை...எங்கை.... (பைலோடு இருந்து செய்கையைச் சரிபார்க்கத் தொடங்குகிறார்).பொதுவரும் குனிந்து அவரோடு பார்க்கிறார். பின்னர் அருளர் நடந்து வந்து இருவரோடு தானும் சேருகிறார். சில வினாடிகளுக்குப் பின் தியாகரும் சேர்கிறார். அருளர், தியாகர், பொதுவர் மூவரும் பைலைப் பார்த்தபடியே நிற்க, அவசர அவசரமாக இருந்தபடியே வெட்டி வெட்டி எழுதுகிறார் புறொபெசர். இது நடக்கும்போது ஒருவரையொருவர் பார்க்காது மற்றவர் பக்கத்தே நிற்கிறார் என்ற உணர்வுகூட இல்லாமல் உன்னிப்பாய் மூவரும் பார்த்தபடியே இருக்க புறொபெசர் வெட்டி வெட்டி எழுதுகிறார். பின்னர் நால்வரும் சிலையாகிறார்கள். இவ்வாறு ஓரிரு வினாடிகள் கழிய, விசித்திரமான உடைகளோடு ஒருவர் அடிமேல் அடி வைத்து மேல் மேடை வலப்புறத்திலிருந்து கீழ் மேடைக்கு வருகிறார். இவர் ஆர், என்ன வர்க்கத்தினர், என்பது வெளிப்படையாக நாடகப் பார்வையாளருக்குத் தெரியக் கூடாது. அடிமேல் அடிவைத்து வந்தவர்கீழ் மேடைக்கு வந்ததும் நின்று, சபையோரைச் சத்தம் செய்யாமல் இரு ககும்படி சைகை செய்கிறார். பின்னர் நால்வரையும் அச்சத்தோடு பார்த் ஓர் ஏழனச் சிரிப்பை உதட்டில் உதிர விட்டபடி பேசத் தொடங்குகிறார்.

பிரச்சினை: சூ.... சத்தம் செய்யக் கூடாது. அந்த நாலுபேரும் மும்முரமாய் ஏதோ வேலையில் ஈடுபட்டு இருக்கினம். அவையைக் குழப்பக் கூடாது. நான் இப்ப இங்கை வந்தது உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போகத்தான். நான் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமே. உங்களுக்குத் தெரியிறகாலை ஒரு பிழையுமில்லை, ஆனால் அவைக்குத் தெரிஞ்சால் பெரிய பிழை. பிறகு என்னை இருக்க விடமாட்டினம். (இரண்டடி கரைக்கு எடுத்து வைத்து) இவையெல்லாம் தலையை உடைக்கிறதுக்குக் காரணமாய் இருக்கிறதே நான் தான். என்ரை பேர்தான் 'பிரச்சினை' நான் இல்லாட்டில் உலகத்திலை கவலை இராது. அதாலைதான் நான் இப்படியே பேசாமல் இருக்கிறன். அறிவு பொய்க்காது அதாலை எல்லாத்தையும் சரிக்கட்டலாம் எண்ணுறார் புறொபெசர். தங்களுக்கு எல்லாத்தையும் தீர்க்கிறதுக்கு வழி தெரியும் எண்டு சொல்லிக்கொண்டு ஒண்டும் தெரியாமல் ஏமாத்தித் திரியினம் அருளரும், தியாகரும். புறொபெசர் சொல்வது ஓரளவுக்குச் சரி. ஆனால் அறிவு மட்டும் இருந்தால் போதுமே. அதைச் சரியான வழியிலை பிரயோகிக்கவும் தெரிய வேணுமெல்லே. பொதுவரை விட்டு நான் நீங்கின பாடில்லை. பொதுவர் பாவம், இவரிட்டையும் அவரிட்டையும் போகாமல் தன்னிலை நம்பிக்கை வச்சு, தன்னைச் சுறண்டி வாழுறவையை முதலிலை நீக்கி, தன்ரை அதிகாரத்தை பொதுவர் தானே நிலைநாட்டி இருந்தால் எனக்கு இஞ்சை வேலையே இருந்திருக்காது. பொதுவருக்கு அந்த யோசனை வரேல்லை. இவை செய்யிற பிழை என்ன தெரியுமே. (பிறகும் இரகசியமாக) ஒவ்வொருதரும் தங்கிடை தங்கிடை இருக்கயிலை இருந்து கொண்டு என்னைக் கண்டு பிடிக்கிறதாய்ப் பாவனை செய்யினம். நான் என்ன மடையனே. இவையிட்டைப் போய் இஞ்சை பாருங்கோ, நான்தான் இதுகளுக்கெல்லாம் காரணம் எண்டு சொல்லுறதுக்கு? என்னைக் கண்டு பிடிக்க முயலுகிறவை எல்லாரும் கொஞ்சம் கீழை இறங்கிவந்து நான் இருக்கிற தளத்திலை நிண்டு பார்த்தால் நான் என்ன மறைஞ்சு போவனே? இப்ப நடந்ததைப் பாருங்கோ. என்னைக் கண்டு பிடிக்க வெளிக்கிட்டவை, என்னை மறந்துபோய், வேறை எதையோ பற்றி முழிச்சுக் கொண்டு நிக்கினம். பாவம் பொதுவர். இன்னும் கொஞ்சம் வளைஞ்சு குடுத்தார் எண்டால் உவை மாத்திரமில்லை இன்னும் எத்தனையோ பேர் அவரிலை ஏறியிருந்து குதிரை விடுவினம். இனியும் நான் இஞ்சை நிக்கிறது ஆபத்து. நான் வாறன். நான் வந்திட்டுப் போறன் எண்டு மட்டும் சொல்லிப் போடாதையுங்கோ. சரி அப்ப நான் போட்டுப் பிறகு வாறன். (திரும்பி அடிமேல் அடி வைத்துப் போய் மறைகிறார் (கடிகாரம் தான் விரும்பிய மட்டும் அடித்து ஓய்கிறது புறொபசர் மெல்ல நிமிர்கிறார். எல்லோரும் சற்று விலகுகிறார்கள். மூவரையும் திரும்பிப் பார்க்கிறார் பின்பு வைலைப் பார்க்கிறார். எழுந்தபடியே)

புறொபெசர்: சரி... இப்ப எல்லாம் சரி. ஆனால் இந்தக் கொன்ஸ் ரன்ஸ் (constant) தெரிஞ்சுதெண்டால் பிரச்சினை தீர்ந்து போகும். (யோசனையோடு) ம்.... இந்தக் கொன்ஸ்ரன்ற் என்னவாயிருக்கும்? ம்....

பொதுவர்: (பயத்தோடு) அதென்ன புறொபெசர்....இந்தக் கொன்ஸ்ரன்ற்

புறொபெசர்: பயப்பிடாதையும் பொதுவர். அது ஒரு லேசான விஷயம். பரிசோதனை நடக்கிற நிலைமைகளுக்குள்ளை மாறாமல் இருக்கிற ஒண்டைத்தான் கொன்ஸ்ரன்ற் எண்டுசொல்லுறம் மாறிலி எண்டு தமிழிலை சொல்லுறது.

பொதுவர்: அப்பிடியெண்டால் புறொபெசர்....இந்த....கொன்ஸ்ரென்ற்ரை கண்டுபிடிக்க வேறை வழியில்லையே.

புறொபெசர்: அது தான்... என் திறயத்தை அப்பிளை Theorem Apply பண்ணலாம் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.

அருளர்: இந்த இடத்திலை ஒரு சின்ன விளக்கம் புறொபெசர். நீங்கள் நினைப்பியள் தியறம் அப்பிளை பண்ணுறது பற்றி எங்களுக்கொண்டும் தெரியாது எண்டு..... அப்பிடி நினைச்சால் அது பிழை. (இந்த நேரத்தில் கதவு மணி அலறுகிறது. பொதுவர் கதவைத் திறப்பதற்காகப் போக மற்ற மூவரும் பார்த்தபடியே நிற்கிறார்கள். பொதுவர் கதவைத் திறந்ததும் சிவாயர் உள்ளே வருகிறார். இவர் மெலிந்த தோற்றமுடையவர். நெற்றியிலே சந்தனப் பொட்டு பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. இவரைச் 'சாமியார்' என்ற வடிவிலே இரசிகர் இனம் கண்டு கொள்ளக் கூடாது. பக்தி மார்க்கத்திலே ஈடுபட்ட பெரிய மனிதர். அவர் உள்ளே வரும்போதே)

பொதுவர்: (ஆச்சரியத்தோடு) சிவாயர்.... கனகாலத்துக்குப் பிறகு....

சிவாயர்: ஓம்... எனக்கு இஞ்சை வர விருப்பமில்லை எண்டு நீங்கள் கருதக்கூடாது. குளத்தங்கரைத் தாளங்காய்க்கு ஆறென்ன கிணறென்ன. பற்றற்றதுதானே வாழ்க்கை. நாங்கள் அறுத்தால் அறுமே. படைச்சவன் இருக்கிறார். படி அறுப்பான்தானே... பாரும் என்னுடைய குருநாதர் எனக்குச் சொன்னார் 'டேய் தம்பி பிறந்திட்டன் எண்டு ஒருநாளும் நீ கவலைப்படாதை.... கட்டாயம் ஒரு நாளைக்குச் சாவாய் எண்டார். உண்மையைத்தான் சொல்லுறன் அந்த மகானின்ரை வார்த்தை ஒரு நாளும் பொய்யாது.

பொதுவர்: (பெருமூசோடு) ம்.... அந்த நாள் வராமல் இருக்குதே எண்டுதான் எனக்கு கவலை.

சிவாயர்: ஓ...ஓ....ஓ (சிரிக்கிறார்) என்னுடைய குருநாதர் சொன்னது மாதிரி இருக்குது. 'சா வருகுதில்லை எண்டு கவலைப்படுறதிலையே நீ செத்துப்போவாய் எண்டு அவர் சொல்லுவார். இதிலை ஒரு பெரிய உண்மை இருக்கு. அதென்னெண்டால் கவலைப்பட்டாட்டில் மனிசன் சாகமாட்டான். 'கவலைப்படு கடவுளைக்காண்' எண்டுதானே பழமொழியும் இருக்குது.

அருளர்: இந்த இடத்திலை ஒரு சின்ன விளக்கம். நாங்களும் கவலைப்படுகிறதில்லை எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. அப்பிடி நீங்கள் நினைச்சால் அது உங்களின்ரை பிழை.

தியாகர்: ஏனெண்டால்.... நாங்கள் ஒவ்வொரு நாளும் கோவிலுக்குப் போறனாங்கள்.

சிவாயர்: என்னுடைய குருநாதர் கோயிலுக்கே போறேதில்லை. அதாலை அவருக்குக் கவலையுமில்லை நாட்டமுமில்லை அவர் அடிக்கடி எனக்குச் சொல்லுவார் 'கோயிலே காயமாக' எண்டு. அதிலை எவ்வளவு உண்மையிருக்குப் பாருங்கோ. (இந்த நேரம் புறொபெசர் பைலைப் பார்த்தபடி வாயல் பென்சிலைக் கடித்தபடி அவர்களுக்கண்மையில் வந்து)

புறொபெசர்: (தன்பாட்டில்) ஓ இந்தக் கொன்ஸ்ரன்ற் மட்டும் என்னெண்டு தெரிஞ்சுதெண்டால்...

சிவாயர்: (அப்பொழுதுதான் புறொபெசரைக் கண்ட அதிர்ச்சியில்' ஓ...புறொபெசர்... புறொபெசர்... நீங்கள் இங்கை இருந்ததை நான் கவனிக்கவேயில்லை. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.... 'பென்சிலைப் பார்த்து' தலைவீக்கம் எண்டு நீங்கள் கணிக்கக் கூடாது.

புறொபெசர்: (தன்னிலையிலிருந்து மீண்டு) ஓ....(பொதுவரைப் பார்த்து) இவர்....

பொதுவர்: சிவாயர்.... சி..வா...யர்

அருளர்: இந்த இடத்திலை ஒரு சிறு விளக்கம். சிவாயர் என்டது சீ...வாயரே தவிர சிவா...யார் இல்லை...

தியாகர்: ஏனெண்டால் புறொபெசர்... இந்த இடத்திலை நாங்கள் பிழை விட்டம் எண்டால் பிறகு இவர் ஆர் எண்டு கண்டுபிடிக்கிறதிலை கஸ்டம் வரும்.

சிவாயர்: புறொபெசர். ஆயிரம் தான் உங்கிடை விஞ்ஞானம் வளர்ந்தாலும் கடைசியிலை அது கடவுளுக்கு அடிமைதானே?

புறொபெசர்: அடங்கிக்கிடக்கிற சக்தியைக் கட்டவிழ்த்து விட்டால் அது அம்பலவாணனையே தகர்த்துப் போடும்.

சிவாயர்: சும்மா வெருட்டாதையுங்கோ புறொபெசர். என்னுடைய குருநாதர் சொல்லுவார் 'தம்பி டேய் அமெரிக்கனிட்டையும் றஸ்யாக்காரனிட்டையும் தான் அணுக்குண்டிருக்குதெண்டு நினையாதை. இதை விட பெரிய குண்டு (மேலே காட்டி) அவனிட்டை இருக்கு' எண்டார். அதுக்குப் பிறகுதான் எனக்கு விளங்கிச்சு அது உண்மையெண்டு.

அருளர்: (அலட்சியமாக) ஆ.... உதெல்லாம் எங்களுக்கு முந்தியே தெரியும்..

புறொபெசர்: (தன் பைலிலே கவனமாய்) ம்.... இந்த கொன்ஸ்ரன்ற் மட்டும் கிடைச்சுதெண்டால்.

சிவாயர்: (கலவரத்தோடு புறொபெசரைப் பார்த்து) ஓ புறொபெசர் இவ்வளவு படிச்சும் இதுக்கு இவ்வளவு யோசிக்கிறியளே. என்னுடைய குருநாதர் அடிக்கடி சொல்லுவர் அழுதால் பெறலாமே' எண்டு.

அருளர்: இதுவும் எங்களுக்குத் தெரியாது எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது.

தியாகர்: ஏனெண்டால் உண்மையிலை பெறேக்கைதான் தாய்மார் அழுகினம்.

சிவாயர்: அழுகிறது எண்டால் சும்மா லேசான காரியமெண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. என்னுடைய குருநாதர் சொல்லுவர்....(கீழே கிடக்கும் தாள்களைக் கண்டு பொதுவரிடம் திரும்பி) 'சுத்தம் சுகம் தரும், எண்டு, இதேன் கடுதாசி எல்லாம் கீழை கிடக்குது.

பொதுவர்: (திடீரென்று கவலைக்குள்ளாகி) ஓ.... அதுதான் எனக்குத் தெரியேல்லை. இதுக்கு முந்தி இப்படி நடக்கவேயில்லை. இண்டைக்குத்தான்.....ஓ......சிவாயர்.....நான்.....நான்... என்ன செய்ய? எனக்கு...எனக்கு....

சிவாயர்: (ஆதரவாக) பொதுவர்....பொதுவர்......இதுகளுக்கெல்லாம் நீர் இப்பிடிக் கவலைப்படக்கூடாது எல்லாம் அவன் செயல். என்னுடைய குருநாதர் சொல்லுவார் 'டேய் தம்பி, ஆட்டுறதும் அவன், ஆடுறதும் அவன்; பாயிறதும் அவன் பறக்கிறதும் அவன்' எண்டு.

அருளர்: (பொறாமையாக) உதெல்லாம் நாங்கள் முந்தியே சொல்லிப் போட்டம்.

தியாகர்: ஓமோம்.... ஆனால் நீங்கள் ஒண்டை விட்டிட்டியள் (குரலைத் தாழ்த்தி, மிகுந்த பக்திலயத்தோடு) வீசுகிறதும் அவன், விழுகிறதும் அவன்....

சிவாயர்: (தியாகரைப் பார்த்தபடி சிறிது யோசித்துவிட்டு தலையை ஆட்டியபடியே பொதுவர் பக்கம் திரும்பி) பொதுவர்.... 'கவலைக்கு மருந்து கடன் கொடுத்தல்' பயப்படாதையும் உம்மிடை கவலையை எனக்கு தாரும். என்னுடைய குருநாதரின் பெயராலை எல்லாத்தையும் தீர்த்து வைக்கிறன்.

பொதுவர்: (கவலை தோய்ந்த முகத்தோடு கீழே கிடக்கும் தாள்களைக் காட்டி) இதெல்லாத்தையும் நாலுதரம் அதிலை திருப்பித் திருப்பி வைச்சன். ஆனால் நாறு தரமும் அது பறந்திட்டுது. ஏன் பறக்கிது? அதுதான் எனக்குத் தெரியேல்லை. புறொபெசரும் இவையுங்கூடத் தெண்டிச்சுப் பார்த்தும் ம்ஃம்....முடியேல்லை.

அருளர்: இந்த இடத்திலை ஒரு சின்ன விளக்கம். எங்களாலை இது முடியாத அலுவல் நீங்கள் நினைக்கக் கூடாது. அப்பிடி நினைச்சால் அது உங்கிடை பிழை.

தியாகர்: ஊர்வலம்....கஸ்ட நிவாரணி....

புறொபெசர்: (அவர்களுக்குச் சமீபமாக வந்து தன்பாட்டிலேயே) இந்தக் கொன்ஸ்ரன்ற் மட்டும் கிடைச்சால் பிரச்சினை தீர்ந்து போகும்.

சிவாயர்: அஃ...அஃ...ஹா.... (சிரித்தபடி) என்னுடைய குருநாதர் சொல்லுவார் "டேய் தம்பி எல்லாரும் அழுதால் நீ சிரியடா லெண்டு" உங்களாலை ஏலாட்டில் கட்டாயமாக என்னாலை ஏலும்.

அருளர்: (அவரை இடைமறித்து) புறொபெசரும் உதைத்தான் சொன்னவர், செய்ய முதல்.

தியாகர்: ஓமோம்.... செய்தாப்பிறகு, "கொன்ஸ்ரன்ற்" எண்டுதான் சொல்லுகிறார்.

சிவாயர்: (ஏளனமாக அவர்களைப் பார்த்துவிட்டு தாள்களைப் பொறுக்கி அடுக்கியபடியே) என்னுடைய குருநாதர் சொல்லுவார். "டேய் தம்பி, எண்ணித் துணி கருமம் துணிந்த பின் மறந்து போ, எண்டு. (ஸ்ரூலை அணுகி அவரை அறியாமலே விசிறிக்கும் ஸ்ரூலுக்கும் இடையில் நின்றபடி அனைவரையும் பார்க்கிறார். அருளர், தியாகர், பொதுவர் அவரைப் பார்த்தபடி நிற்க புறொபெசர் தன் வேலையில் கவனமாய் இருக்கிறார். கையிலே இருக்கும் தாள்களை ஸ்ரூலில் மெல்ல வைத்த கையை எடுக்கிறார். அவை பறக்காது இருக்கின்றன. இந்நேரத்தில் பொதுவர் ஆச்சரியம் தாங்காது புறொபெசரை அணுகி)

பொதுவர்: புறொபெசர், புறொபெசர்... (ஸ்ரூலைக் காட்டுகிறார். புறொபெசர் உன்னிப்பாகப் பார்க்கிறார். பார்த்துக் கொண்டே ஸ்ரூலை அண்மித்து வரும்போது அவற்றை 'லபக்' எனச் சிவாயர் எடுத்து விடுகிறார்)

புறொபெசர்: (ஸ்ரூலை நோக்கி நடந்தபடியே) முந்தி இருந்த நிலமை மாறி இருக்க வேணும். இல்லாட்டில் இது நடந்திருக்கவே முடியாது. புறவிசை எப்பிடியோ இல்லாமல் போச்சுது.

அருளர்: தோல்வியை ஒப்புக்கொள்ளுறதுதான் வீரருக்கு அழகு. வெற்றி எங்களுக்குத்தான். எங்களுக்கு முதலிலே தெரியும் வைக்கலாமெண்டு.

தியாகர்: ஏனெண்டால் இருந்த பொருள் பறந்தால் பறந்த பொருள் இருக்கத்தானே வேணும் (குழம்பியபடி நிற்கிறார் புறொபெசர். தன்னுடைய பைலை மீண்டும் பார்த்தபடி நிற்கிறார். சிவாயர் எல்லாரையும் பெருமிதத்தோடு பார்த்து)

சிவாயர்: இது என்னெண்டு என்னாலை செய்ய முடிஞ்சுதெண்டு நீங்கள் அதிசயீப்பிர்கள். என்னுடைய குருநாதர் சொல்லியிருக்கிறார். 'எதையும் செய்ய முதல் என்னை யோசியடா எண்டு' இதையெல்லாம் வைக்க முதல் அவரை யோசிச்சுக் கொண்டு வைச்சன். என்னுடைய குரு.... ஓ அந்த மஹான்... இது மாத்திரம். தான் அந்த மகான்ரை அற்புதம் எண்டு நினைக்கக் கூடாது. அண்டைக்கொரு நாள் அவசரமாய் ஒரு இடத்துக்குப் போகவேண்டி இருந்திது. இந்த நேரத்திலை பஸ் கிடைக்குமோ எண்டு கவலைப்பட்டு அந்த மகான்ரை பேரை நினைச்சன். சொன்னால் நம்ப மாட்டியள் ஒரு பஸ் பழுதாகி என்ரை வீட்டுக்கு முன்னாலை நிண்டு போச்சுது.

தியாகர்: சத்தியம் பண்ணிச் சொல்லுங்கோ இது உண்மையெண்டு.

அருளர்: (வெறுப்போடு குழந்தைப் பிள்ளைத்தனமாக) உது எங்களுக்கு முந்தியே தெரியும்.

பொதுவர்: (ஆர்வ மேலீட்டினால்) அப்பிடியெண்டால் என்னை ஒருக்கால் அவரிட்டை கூட்டிக்கொண்டு போறியளோ?

சிவாயர்: அவரைக் காணுறது எண்டால் என்ன சில்லறை வேலையெண்டா நினைக்கிறியள். இமயமலையிலை பத்து மைல் உயரத்துக்கு ஏறி இருந்திட்டார். குளிர் எண்டால் கடுங் குளிர். நிண்டால் ஆள் ஐஸ் கட்டியாப் போம். என்னெண்டுதான் அந்த மகான் அங்கை இருந்தாரோ. கீழை கூட்டியாறதே பெரிய கஸ்டமாய்ப் போச்சு. ஒருக்கால் அவரிட்டைக் கேட்டன் 'குருவே இமயமலையி இருட்டு இஞ்சை இருக்கிறது எப்பிடி இருக்குது' எண்டு. உடனை அந்த மஹான் சொன்னார்' எயர் கெண்டிஷன் (Air Condition) தியேட்டருக்குள்ளை இருந்திட்டு வெளியிலை வந்தது மாதிரி இருக்குதடா' எண்டு.

தியாகர்: அப்ப சுவாமி நினைக்கிற காரியம் சொல்லுவாரோ?

சிவாயர்: நினைச்ச காரியம் என்ன? நினையாத காரியமே சொல்லுளார். ஒருதரும் அவருக்கு முன்னாலை பொய் சொல்ல ஏலாது. இருந்தாப்போலை எனக்கொரு நாள் சொன்னார் 'டேய் தம்பி, நீ எதையோ பற்றி யோசிக்கிறார், எண்டு. நான் 'இல்லை' எண்டன். வந்துதே அவருக்கு சிரிப்பு. அட்டகாசமாய் அஃ.....ஹஃ.... ஹா.... எண்டு வாய் விட்டுச் சிரிச்சுப்போட்டு, 'பொய் சொல்லாதை' எண்டார். நான் உடனை உண்மையை ஒப்புக் கொண்டிட்டன்.

அருளர்: ஆனால் நான் உங்கிடை குருநாதரைப் பற்றிக் கேள்விப்படயில்லையே...

சிவாயர்: அவருக்குப் பேர் புகழிலை அவ்வளவு விருப்பமில்லை. ஒருக்கா நானே அவரிட்டைக் கேட்டன். 'ஏன் குரு உங்களுக்குப் பேரில்லை? எண்டு. அவர் உடனை சொன்னார் 'டேய் பேர் ஊர் இல்லாதவன்தான்ரா கடவுள்' எண்டு. பாருங்கோ தத்துவத்தை. நான் வாயைப் பொத்திக்கொண்டு பேசாமல் இருந்திட்டன்.

பொதுவர்: அப்ப அவற்றை தத்துவங்களை எல்லாம் புத்தகமாய் அடிச்சு விட்டிருக்கினமோ? சிவாயர் உங்களிட்டை இருக்கே?

சிவாயர்: பிறெஸ் ஒண்டும் சொந்தமாய் இல்லாததாலை இன்னுமொண்டும் அடிச்சு விடயில்லை. வாங்கின உடனை அடிச்சு விடத்தான் யோசிக்கிறார். இந்தச் சனங்கள் குடுக்கிற காசு சிலவுக்குப் போதாதெண்டு அடிக்கடி சொல்லுவார். ஆனால் அவற்றை தத்துவங்கள் இருக்குதல்லே....ச்சா.... அதுகளெல்லோ தத்துவங்கள்.

பொதுவர்: உண்மையாய்ச் சிவாயர்....ஒரு தத்துவமாவது நீங்கள் எங்களுக்குச் சொல்லத்தான் வேணும். உண்மையிலை அந்த மஹானைப் பற்றிக் கேட்க எனக்கு ஆசையாய் இருக்குது.

அருளர்: எங்களுக்கும் இப்பதான் உங்களிலை நம்பிக்கை பிறக்குது. நீங்கள் கட்டாயம் சொல்லத்தான் வேணும்.

சிவாயர்: சரி எல்லாரும் கேக்கிறதாலை ஒண்டு மட்டும் சொல்லுறன். ஒருநாள் நானும் அந்த மஹானும் றோட்டிலை நடந்து கொண்டிருந்தம். இருந்தாப்போலை ஒரு கல்லைக் காட்டி 'அது என்ன எண்டார்.' நான் அதை வடிவாய்ப் பாத்தன். கல்லுத்தான். இருந்தாலும் குரு கேட்கிறார் எண்டு போட்டுப் பார்த்தன் .... ம்.... கல்லுத்தான். பிறகு குருவைப் பாத்தன். என்னை ஒரு குறும்புப் பார்வை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். மெல்லமாய்ச் சொன்னன் 'கல்லு' எண்டு ஓஃ.......ஹொஃ.........ஹோ.....ஓ... எண்டு சிரிக்க விழுந்தார். பிறகு என்னைப் பார்த்துச் சொன்னால் 'டேய் தம்பி.. அது தான்ரா கடவுள்' எண்டார். நான் திகைச்சுப் போனன். பிறகுதான் உண்மை விளங்கிச்சுது.

பொதுவர்: ஓ....என்ன அற்புதம்...

அருளர், தியாகர்: இன்னுமொண்டு, இன்னுமொண்டு.

சிவாயர்: அந்த மகானைப் பற்றிச் சொல்ல நான் ஆர். ஆனாலும் கேட்டதுக்காக இன்னுமொண்டு மட்டும். நானும் குருவும் ஒருநாள் ஒரு காட்டுப் பாதையாலை நடந்துவாறம். றோட்டிலை இரண்டு பக்கத்திலையும் நெருஞ்சி முள்ளுப்பதை. திடீரெண்டு நெருஞ்சிப் பத்தையைக் காட்டி ஒரு கேட்டார். 'டேய் தம்பி நீ இதுக்குள்ளை நடப்பியா' எண்டு. நான் உடனையும் சொன்னன் மாட்டனெண்டு. அவர் சிரிச்சுக் கொண்டு சொன்னார் 'நீ புத்திசாலி தான்ரா' எண்டு.

பொதுவர்: எனக்கொண்டும் விளங்கேல்லையே.

சிவாயர்: சிவாயர் உம்மிடை வித்தையை நம்ப ஏலாது. நான் எல்லாம் கணக்குப் பண்ணிப் பாத்திட்டன். உதெல்லாம் பறந்தே ஆக வேணும்.

சிவாயர்: (கடுமையாக) புறொபெசர் நீங்கள் என்னை அவமரியாதை செய்தால் அதைப்பற்றி நான் அதிகம் கவலைப்பட மாட்டன், ஆனால் என்னுடைய குருவை அவமதித்து என்னை அவமதிக்கிறதாகும். அதை என்னாலை பொறுக்க முடியாது. என்னுடைய குருவினுடைய அற்புறதத்தை நீங்கள் எல்லாரும் பாத்தியள் பாத்ததை மறுக்க ஏலாது.

அருளர்: (கடுமையாக) சிவாயர் உது உங்களாலை மட்டும்தான் சாதிக்க ஏலும் எண்டு நினைக்கக் கூடாது.

புறொபெசர்: (உரத்த தொனியில்) அசையும் ஒரு பொருள்... அசைக்கும் விசை இல்லாமல் போகும் வரை.....அசைந்து கொண்டே இருக்கும்.

சிவாயர்: (ஆவேசத்தோடு) ஆடுகிறவன் அம்பலவாணன், ஆட்டுவிக்கிறவனம் அவன்தான்.

புறொபெசர்: சரி பாப்பம்...வையும் அதை.

சிவாயர்: (உரத்த குரலில்) ஆ.....குருவோடு போட்டியா? கெடுதி கதவைத் தட்டுது. (ஆவேசத்தோடு ஸ்ரூலை அணுகி மேல்நோக்கி) குருவே....(வைக்கிறார் இது நடக்கும்போது முன்னர்போல் விசிறியின் காற்றை மறையாது ஸ்ரூலுக்குப் பின்னால் நின்று வைக்கிறார். தாள்கள் யாவும் பறக்கின்றன. அதிர்ச்சியோடு தாள்கள் பறப்பதை வெறித்துப் பார்த்தபடி நிற்க, பொதுவரைத் தவிர மற்றைய மூவரும் புன்னகை பூக்கிறார்கள்)

அருளர்: உதுகள் பறக்குமெண்டு எங்களுக்கு முந்தியே தெரியும்.

தியாகர் ஓமோம். ஒருக்கால் பறந்தால் பிறகும் பறக்கும்..... இல்லாட்டில் பறக்கப் பாக்கும்....இல்லாட்டில் பேசாமல் இருக்கும். (இனி வரும் வசனங்கள் தொனியிலே மெதுவாக ஆரம்பித்து, படிப்படியாக ஆத்திரத்தில் பேசப்படுவது, போன்று உயர வேண்டும். இவை பேசப்படும்போது மீண்டும் 'பிரச்சினை' அடிமேல் அடிவைத்து வந்து தாள்களைப் பொறுக்கி விசிறியின் ஓட்டத்தை நிற்பாட்டி விட்டு தாள்களை ஸ்ரூலில் வைத்துவிட்டு, பேசாமல் இருக்கும்படி சபையோருக்குச் சைகை காட்டிவிட்டு மீண்டும் அடிமேல் அடி வைத்து மறைகிறார். இவர் வந்ததையும் செய்த கருமங்களையும் தாள்கள் ஸ்ரூலில் இருப்பதையும் பின்னர் குறிப்பிடும்வரை மற்றைய ஐவரும் காணக்கூடாது.

பொதுவர்: அப்பிடியெண்டால் புறொபெசர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா?

புறொபெசர்: இந்தக் கொன்ஸ்ரன்ற் மட்டும் கிடைச்சுதெண்டால் பிறகு எல்லாம் சுகம்.

அருளர்: நாங்கள் உதைத் தீர்ப்பம். ஆனால் உவை நிக்கேக்கை செய்யமாட்டம்.

சிவாயர்: கடவுளைத்தவிர வேறை ஆராலையும் உது செய்யேலாது.

புறொபெசர்: அறிவை நம்பினால் ஆபத்தில்லை.

சிவாயர்: எங்களை கைவிட்டால் உன்பாடு ஆபத்து.

பொதுவர்: எனக்கேன் இந்த நிலை.

அருளர்: இருக்கிறதைக் கொண்டு வாழுறது தான் சிறப்பு.

தியாகர்: இல்லாட்டில் கேக்கலாம். கேக்காமலும் சாகலாம்.

சிவாயர்: நல்லவர் போனால் நரகம் சொர்க்கமாகும்.

புறொபெசர்: சத்தியை உண்டாக்கவுமேலாது. அழிக்கமேலாது. வேணுமெண்டால் மாத்தலாம்.

பொதுவர்: எப்பிடியெண்டாலும்... என்ரை நிலை மாறதோ?

சிவாயர்: ஆண்டவன் நினைச்சால் அகிலமே தலைகீழ்.

அருளர்: நாங்கள் நினைச்சால் நீங்களே தலைகீழ்.

புறொபெசர்: சக்தி கட்டவிழ்த்தால் எல்லாமே தலைகீழ்.

தியாகர்: தலைகீழ்...தலைகீழ்......தலைகீழ்.....தலைகீழ்....

எல்லோரும்: தலைகீஷ்.... தலைகீழ்....தலைகீழ்.... (சத்தம் திடீரென்று நிற்கிறது. ஓரிரு வினாடிகளுக்குப் பின்னர்)

பொதுவர்: புறொபெசர்....சிவாயர்.... (தாள்களைக் காட்டி) காகிதங்கள். (எல்லோரும் மெல்ல இரண்டடி முன்னுக்கு எடுத்து வைத்து ஆச்சரியத்தோடு ஸ்ரூலிலுள்ள காகிதக் கட்டைப் பார்க்கின்றனர். ஆச்சரியக்குறிகள் மெல்ல மெல்ல நீங்கிய பின்னர், அருளர் மௌனத்தைக் கலைக்கிறார்)

அருளர்: நான் தான் அதெல்லாத்தையும் ஸ்ரூலிலை வச்சது.

தியாகர்: நானும் தான்.

சிவாயர்: இருக்க முடியாது. இது என்னுடைய குருநாதரின் அற்புதம்.

புறொபெசர்: இல்லை. இது ஒரு புறவிசையின் தொழிற்பாடு.

பொதுவர்: கடையிசியிலை அது பறக்காமல் இருக்குது.

அருளர்: இனிமேல் அது பறவாது. அதுக்கு நான் உத்தரவாதம்.

தியாகர்: நானும் தான்.

சிவாயர்: என்னுடைய குருவின்ரை ஆசி. இனிமேல் பயமில்லை.

புறொபெசர்: இதெல்லாம் பிறகும் பறக்குமோ. அப்பிடியெண் எனக்கு இனி நிம்மதியே கிடையாதோ?

சிவாயர்: பறந்தால் என்னடைய குருவாலை தான் பறக்கும்.

அருளர்: அதைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். நாங்கள் இருக்கிறம்.

தியாகர்: ஓமோம்.... நீங்கள் ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ.

புறொபெசர்: நாலு மடையரை கும்பிடுகிற நேரம் நான் ஒரு புத்திசாலியின்ரை காலிலைவிழத்தயார். (இந்த வசனம் பேசப்பட்டதும் மற்ற நால்வர்கள் முகத்திலும் வெறுப்பும் அருவருப்பு உணர்ச்சியும். இனிப் பேசப்படும் வசனங்கள் வெறுப்புணர்ச்சியோடு தொடங்கி தொனியில் மெல்ல மெல்லக் கூடி கடைசியாகவுள்ள சில வசனங்கள் ஆத்திரத்தாலும் வெறுப்பாலும் கதைப்பது போல் உச்சத் தொனியிலே கத்தப்பட வேண்டும்.)

சிவாயர்: காலிலை விழுந்தாலும் காட்டுமிராண்டிகனைக் கடவுள் ஏற்கார்.

அருளர்: காலம் போனால் காட்டுமிராண்டியும் கடவுள் ஆகலாம்.

தியாகர்: கடவுள் தூணிலுமிருப்பார், துரும்பிலும் இருப்பார்.

சிவாயர்: என்னுடைய குரு இமயமலையிலை.

பொதுவர்: பிரச்சினை இமயமலை அளவெண்டால் எல்லாரும் சாமிகள் தான்.

அருளர்: நான் பொதுவருக்கு உலகத்தையே கொடுப்பன். ஆனால் உங்களாலை அவருக்குச் சூரியனைக் கொடுக்க முடியாது.

புறொபெசர்: இருட்டிலை இருந்து கொண்டு சூரியனைப் பார்த்தால்... கண் கூசும்.

பொதுவர்: உண்மையைப் பார்க்க மறுக்கிறவனே உண்மையான குருடன்.

சிவாயர்: உண்மை. என்னுடைய குருவே உண்மை.

அருளர்: இடி இடிச்சாலும் வானம் இடியாது.

தியாகர்: வானம் இடிஞ்சாலும் எங்களுக்குச் சாவில்லை.

புறொபெசர்: எண்டைக்கோ ஒருநாளைக்குச் சாவை அறிவு வெல்லும்.

பொதுவர்: காலந்தான் தீர்வோ.... காலந்தான் தீர்வோ.....

தியாகர்: அற்பருக்குப் பணம் கிடைச்சால் சிவராத்திரியிலை சினிமாவுக்குப் போவார்.

சிவாயர்: ஆத்திலை மிதக்கிற தாளங்காய்க்கும் கிணத்திலை விழுகிற கல்லுக்கும் வித்தியாசம் இல்லை.

புறொபெசர்: பூமியின்ரை இழுவையாலை பொருள் கீழை விழுகுது

அருளர்: ஒருக்கால் விழுந்தால் பிறகு எழும்பலாம்.

தியாகர்: உதாரணம் வேணுமெண்டால் எங்களைப் பார்.

சிவாயர்: நல்லவர் போனால் சொக்கமும் நரகமாகும்.

அருளர்: நாமார்க்கும் குடியல்லோம்.

தியாகர்: நமனை அஞ்சோம்.

பொதுவர்: நகரத்திலை நான்...நகரத்திலை நான்....

சிவாயர்: காத்திலை பறக்கிற காத்தாடியை விட, கடலிலை மிதக்கிற கப்பல் மேல்.

புறொபெசர்: கப்பலும் ஒரு நாள் கரைக்கு வரும்.

அருளர்: கடலிலை நிண்டாலென்ன கரைக்கு வந்தலென்ன கட்டாயம் நாங்கள் அதிலை ஏறுவம்.

தியாகர்: ஏறினால் இறங்க மாட்டம்.... இறங்கினால் ஏறுவோம்.

புறொபெசர்: அறிவு, அதை விட்டால் அழிவு.

சிவாயர்: என்னுடைய குரு. அவர் தான் ஒளி.

அருளர்: நான் காட்டுகிறேன் வழி.

தியாகர்: ஊர்வலம் உலகத்துக்கு ஒளி

பொதுவர்: எவடம்....எவடம்...புளியடி....புளியடி.

புறொபெசர்: ஐசாக் நியூட்டன்....ஐசாக் நியூட்டன்....

அருளர்: முடியாட்சி குடியாட்சி.... முடியாட்சி.... குடியாட்சி

தியாகர்: முடி....குடி......தடி.....அடி......படி

சிவாயர்: பாபா....பாபா......பா....பா.....வா...வா....வா

பொதுவர்: எவடம்......எவடம்...

அருளர்: தியாகர்: புளியடி.....புளியடி.....

பொதுவர்: எவடம்...எவடம்....

அருளர்: தியாகர், சிவாயர்: புறொபெசர்: புளியடி.....புளியடி...மீண்டும் எல்லோரும்: எவடம்.....எவடம்.....புளியடி.....புளியடி.

பொதுவர்: பிரச்சினை.....பிரச்சினை.....பிரச்சினை......பிரச்சினை.....

அருளர்: நாங்கள் தீர்ப்பம்....

தியாகர்: நாங்கள் தீர்ப்பம்..

சிவாயர்: குருவை நம்பு.....தீர்வைக் காண்பாய்....

புறொபெசர்: கொன்ஸ்ரன்ற் கிடைச்சால்.....தீர்வு கிடைக்கும்....

சிவாயர்: சர்வஸ்சிய யோச்சனம் சாஸ்த்திரம்...தார்மீக ஷேத்திரம் கேத்திரம் (திடீரென்று மேடை விளக்குகள் அணைக்கின்னற இருட்டின் நடுவே குரல்கள் கேட்கின்றன)

பொதுவர்: வழிஎங்கை....வழி எங்கை...

அருளர்: இஞ்சை இருக்கு.....இந்தப்பக்கம் வாரும்....இஞ்சை இருக்கு.

சிவாயர்: இஞ்சை இருக்குது பாதை.....இதாலை வாருங்கோ......ஓ வெளிச்சம் தெரியுது....வந்து பாருங்கே.....இதாலை வாருங்கோ.

புறொபெசர்: பொய்க்குப் பின்னாலை போகாதையுங்கோ. அறிவை விட்டால் அழிவு....இஞ்சை இருக்கு அறிவுப்பாதை இதாலை வாருங்கோ...இதாலை வாருங்கோ....

அருளர்: பொய்....உதெல்லாம் பொய்.... இதாலை வாருங்கோ...

இப்போது திடீரென ஒரு ஒளிப்பொட்டு நடு மேடையில் ஒளியைப் பாய்ச்சிப் பிரகாசிக்கின்றது. இந்த ஒளிப்பொட்டின் மத்தியிலே பொதுவர் முடங்கியபடி குந்தி இருக்க, அவரைச் சுற்றித் தியாகர், அருளர், சிவாயர் ஆகியோர் நின்று "இதாலை வாருங்கோ.... இதாலை வாருங்கோ" எனக் கூறியபடி பொதுவரைத் தம்பால் இழுப்பதுபோன்று பாவனை செய்கின்றனர். இப்பாவனை சிறிது நேரம் தொடர அங்குமிங்கும் இழுபடும் பாவனையோடு பொதுவர் மெல்ல எழுகிறார். இவர் எழும்போது தியாகர், அருளர், சிவாயர் ஆகியோர் தமது கைகளைக் கோர்ப்பதுப் பிடித்த படி ஆவேசமாக உடலை உள்ளும் புறமும் ஆட்டியபடி தமது கரலைப் படிப்படியாகக் கூட்டி உச்சத் தொனியில் "இதாலை வாருங்கோ....இதாலை வாருங்கோ..... இது நல்ல பாதை" என மாறி மாறிக் கூவுகின்றனர். பொதுவரும் இழுபடுவது போன்ற தனது பாவனையை சிறிது நேரம் உக்கிரமாக்கிப் பின்னர் அவர்களை வெறுப்போடும் கோபத்தோடும் தள்ளும் பாவனையோடு அவர்களின் பிடியைத் தகர்த்து வெளியே வருகிறர். தள்ளுவது போன்று பொதுவர் பாவனை செய்யும்போது மற்ற மூவரும் தாக்குண்டவர் போல மேடையிலே சாய்கின்றனர். பொதுவர், தியாகர், அருளர், சிவாயர் ஆகியோரது இந்தப் பாவனைகள் ஒரு தாளத்தோடு செய்யப்படுவது நல்லது.

மேலே கூறியது போன்று மூவரது பிடியிலிருந்தும் பொதுவர் விடுபடும்போது, மற்ற ஒளிப்பொட்டுகளும் மேடை முழுவதும் தம் ஒளியைப் பரப்புகின்றன. இந்நேரத்தில், மற்ற மூவரோடும் சேராது ஒரு புறத்தே விலகி நின்ற புறொபெசரைப் பொதுவர் மிக உறுதியாக அணுகி, தனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பாவனையோடு அவரை மின் விசிறிக்கு முன்னால் அழைத்து வருகிறார். வந்ததும், மற்றைய ஒளிவிளக்குகள் மங்கி மறைய கீழ்மேடை வலப்புறத்தே மின் விசிறிக்கு ஒளியூட்டிய ஒளிப்பொட்டு மாத்திரம் தன் ஒளியைப் பரப்பிப் பிரகாசிக்கின்றது. இந்த ஒளிப்பொட்டினுள்ளே நின்றபடி பொதுவர் மிகக் காத்திரமாகப் பாவனை மூலம் தனது பிரச்சினைகளைப் புறொபெசருக்கு விளக்க முற்படுகிறார். பாவனை நடக்கும்போது இந்த ஒளிப்பொட்டும் மங்கி மறைகிறது. இருட்டில் திரை மூடிக் கொள்கிறது.

முற்றும்.

-------------------------------------------

முருகையனின்

கடூழியம்

கவிதை நாடகம்


முதல் மேடையேற்றம்

காலம்: 1971-03-03

இடம்: கொழும்பு, ஹக்லொக் நகர் லும்பினி அரங்கு

தயாரிப்பு: கூத்தாடிகள்

நெறியாட்சி: நா. சுந்தரலிங்கம்


நடிகர்:
பாங்கன் : இ.சிவானந்தன்
சயந்தன் : நா.சுந்தரலிங்கம்
கணக்கர்: நா. சிவபாலன்
மேலாளர்: இர.சிறினிவாசன்
வீரவாகு தேவர்: த.சிதம்பரநாதன்
இராசாக்கள்: வே.சங்கரசிகாமணி
ந.துரைசிங்கம்
பணியாட்கள்: இ.சத்தியநாதன்
அ.சத்தியகீர்த்தி
இராணுவ வீரர்: தை.திருவாதவூரர்
பூ.வேலுப்பிள்ளை
இணுவை ஸ்ரீரங்கன்.


கடூழியம்

I

மரஞ்செடி கொடிகளோ கட்டிடங்களோ இல்லாத பரந்தவெளி. பல அளவுகளில் நாலைந்து பாறைகள் மட்டும் பின் மேடையில் உள்ளன. இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவே பின் நடு மேடைக்குச் சற்று வலப்புறமாக ஒரு நடைபாதை செல்கிறது. சயந்தன், பாங்கன் என்னும் இருவர் இந்தப் பாதை வழியாற் பின்புறம் சென்று. தாம் கொண்டு செல்லும் கூடைகளில் எத்தனையோ இட்டு நிரப்பிச் சுமந்துகொண்டு வந்து, வலப்பக்க முன்மேடையில் உள்ள லொறியில் ஏற்றுகிறார்கள். மேடையில் லொறியை அமைத்துக் காட்டுவது அவசியமில்லை. வேண்டுமானால் அதில் ஒரு பகுதி சபையோருக்குத் தெரிவதாகக் காட்டலாம். சயந்தன், பாங்கன் என்போரின் உடைகள் எந்த நாட்டுக்கு உரியவை, எந்தக் காலத்துக்கு உரியவை என்று குறித்துச் சொல்ல இயலாத வகையில் இருத்தல் வேண்டும். அவர்களின் உடை பின்வருமாறு: தோல் போல ஆடை; தொடையில் ஒரு வார்ப்பூட்டு, கால் மேசு, நெஞ்சுவரைக்கும் இறங்கிப் பளீர் விரிக்கும் பொற்பதக்கம் கோத்துப் புனைந்த மணிச்சங்கிலி. இந்தச் சங்கிலி முக்கியமானது. இதன் பின்புறத்தில், சயந்தனுக்கும் பாங்கனுக்கும் தெரியாமல் ஒரு தொக்டுப்பு இருக்கிறது, அதிலிருந்து தொடங்கித் தொடர்ந்து செல்லும் சங்கிலி இவர்களைக் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. தாங்கள் கட்டப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது.

மேடையின் வலப்பக்க முன் மூலையில் ஒரு மேடு உண்டு. அதிலே கணக்கர் என்பவர்- மிக உதாசீனமாக உடையணிந்த ஒரு தூங்கற் பேர்வழி- அமர்ந்திருக்கிறார். பக்கத்திலே ஒரு கூடையில் வெந்நீர்ப்போத்தில், சிகரட்டுகள், வேறும் சில பொருள்கள் உள்ளன, சில போத்தில்கள் கிளாசுகளும் அவர் வைத்திருக்கிறார். அவர் கழுத்தில் பைனோக்குலார் கருவியொன்று வார்த்தடத்தினால் மாட்டப்பட்டிருக்கிறது. நாடகத்தின் பெரும்பகுதியில் கணக்கர் தூங்கிக்கொண்டே இருக்கிறார்.

திரை உயர்ந்ததும் சில நிமிடங்களுக்குச் சயந்தனும் பாங்கனும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறிருக்கும் ஒரு நிலையில் அவர்களை 'உறைவித்து', பின்னணியில் ஒரு பாட்டு ஒலிக்கிறது.

பாட்டு-

தொழிலாளன் தேவாதி தேவன் - அவன்
துணையாலே புவிமீது பொருள் யாவும் மேவும்
அழகான மணியாடை தருவான்- உண்ண
அமுதான உணவோடு குளிர்பானம் பொழிவான்
எழுமாடி நிலைவீடு புரிவான்- இவன்
இழிவான துயர்போக உலையாது பொருவான்
தொழிலாளன் தேவாதி தேவன்....

அவர்கள் நன்றாகக் களைத்துவிட்டார்கள். உடைகள் கசங்கியும் தலை குழம்பியும் உள்ள அவர்களின் சோர்வு, அவர்களுடைய அங்க அசைவுகளினாலே மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. முதல் ஒரு தடவை கூடையைத் தோளிலே வைத்தபடி விரைவாகக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பின்னர் ஆறுதலாக ஒருதடவை (சோர்வுடன்) அதையே செய்கிறார்கள்.

பாங்கன்: தண்­ர் விடாய்க்குதா?

சயந்தன் : சாய்....சாய்...

பாங்கன் ஓமோம், தேவையானால், தராமலா விடுவார்?

சயந்தன்: சங்கிலி மிகவும் தரத்திற் சிறந்தது. ஐயம் எனக்கதில் இம்மியும் இல்லை.

பாங்கன்: பளபள பள எனப் பகட்டிடும் சங்கிலி!
பூணக் கிடைத்தது புண்ணியப் பேறு.
பொன்னில் நான் புரள்கிறோம்; பொன்னில் நான் புரள்கிறோம்.
அடடா ஒவ்வொரு குண்டிலும் எத்தனை
சுடரொளிப் பளிச்சு! தூண்டாச் சுடர் அது.
சுடர் ஒளி, சுடர் ஒளி! தூண்டாச் சுடர் ஒளி.

அவன் இளைத்துப் போய்விட்டான். பேசியதால் அவனுக்கு மூச்சு வாங்குகிறது.

சயந்தன்: உனக்கு வேண்டுமா தண்­ர்?

பாங்கன்: வேண்டாம். தேவையானால், தராமலும் விடுவாரோ?

சயந்தன்: ஏ! பார் அங்கே.

பாங்கன்: என்ன?

சயந்தன்: மழை முகில்.

சயந்தன் முகிழைச் சுட்டிக் காட்டுகிறான். பாங்கனும் ஆவலுடன் வைத்த கண் வாங்காமற் பார்க்கிறான்.

பாங்கன்: ஒரு துளி விழுந்தால் உள்ளம் மகிழ்வேன்.

சயந்தன்: தொண்டை வரட்சியும் சுகப்படும் அல்லவா?

முகில்மேல் வைத்த கண்களை அகற்றி இருவரும் ஏமாற்றத்துடன் குளிகின்றனர்.

பாங்கன்: என்ன நேரம்?

சயந்தன்: எட்டாய் இருக்குமோ?

பாங்கன்: இருக்காது என்றுதான் எனக்குப் படுகுது.

சயந்தன்: எட்டாய் இருந்தால் எங்கள் தண்­ர்
தரப்பட்டிருக்கும்.
தராதபடியால்,
இன்னும் பொழுது வந்திலது என்றே
நம்புகிறேன் நான்.
நாக்கு.....

சயந்தனின் நாக்கு வெளியே துவண்டு தொங்குகிறது.

பாங்கன்: பொறு, பொறு.
ஏ, ஏ...என்ன?
ஏன் அது வெளியே
துவண்டு தொங்குது?

சயந்தன் சும்மா - பொய்; பொய்!

டக்...டக்...என்ற சப்பாத்தொலி கேட்கிறது.

பாங்கன்: உஸ்ஸ்...உஸ்ஸ்...

சயந்தன்: ஓ, ஓ!

பாங்கன்: உழைப்பு மேலாளர்.

மேலாளரும் ஏவலாள்களும் வருகிறார்கள். சயந்தனும் பாங்கனும் பரபரவென்று வேலை செய்கிறார்கள். மேலாளர் அவர்களை மறித்து, அவர்களுடைய உடம்பைப் பரிசீலனை பண்ணுகிறார்.

மேலாளர்: ஏதடா இன்னம் வேர்வையே காணோம்?
இத்தனை நேரம் ஆகியும், வியர்த்துளை
சற்றுமே இல்லையே!

பாங்கன்: தண்­ர்.....

மேலாளர்: ஏ, ஏ!

தேவையே ஆனால், தராமலும் விடுவமோ?
தரப்படவில்லை என்பதால், இன்னும்
உரிய நேரம் வரவில்லை.
இதை நீர் உணர்ந்து கொள்ளாமல் உளறுநீர் ஆயின்.
கடமையை மறந்த காதகர் ஆகிறீர்.
ஐம்பது கூடை ஆயினும் இன்னும் சுமந்த பிறகுதான் துளியளவாயினும் தண்­ர் தரப்படும். (சயந்தனைப் பார்த்து) உமக்கும்தான்...

சயந்தன்: ஐயனே!

மேலாளர்: அடிக்கடி நீர் உம் மார்பையே பார்க்கிறீர்.

சயந்தன்: சங்கிலி........

மேலாளர்: அது சரி.

பாங்கன்: எங்களின் பாக்கியம்.
போக போக்கியப் புண்ணிய வாழ்க்கையின்
சின்னமாய்- எமது சித்தியாய் உள்ளது.
சுதந்திரம் பரிசாய்த் துலங்கி மிளிர்வது.
சங்கிலி பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
அதனாலேதான்....

மேலாளர்: அதை நாம் உணர்கிறோம்,
உங்கள் பெருமிதம் நியாயமானதுதான்.
ஆயினும், கடமையை அலட்சியம் செய்வது
சுதந்திரத்துக்கே துரோகமாய் முடியும்.

பாங்கன்: இனிமேல் இப்படிச் செய்யவே மாட்டோம்.

மேலாளர்: சரி, சரி, போங்கள். மீன் சுமவுங்கள். ஐம்பது கூடை ஆயினும், லொறியில் ஏற்றிய பிறகுதான் இனிமேல் ஆறுதல்.

ஓடி ஆடி முழு மூச்சாய் வேலை செய்கிறார்கள். இடையிடையே டக் டக் டக் என்று மேலாளரின் சப்பாத்தொலி கேட்கிறது. மேலாளர் போய் லொறியிலே சாமான் ஏற்றப்படுவதைப் பார்க்கிறார். சற்று நேரத்தில் அவர் வெளியேறுகிறார். அவர் வெளியேறியதும் வேலை வேகம் சோர்வடைகிறது. சயந்தனும் பாங்கனும் கூடைகளைக் கீழே போட்டுவிட்டு இருக்கிறார்கள்.

பாங்கன்: அண்ணே!

சயந்தன்: என்னடா?

பாங்கன்: மூச்சு வாங்குது.

சயந்தன்: சோர்வு கூடாது, சுதந்திரப்பணியிலே.

பாங்கன்: காப்பை ஒருதரம் மீண்டும் பாடுவோம்.

சயந்தன்: வேலை தொடங்கும் சமயமும் முடிவிலும் மாத்திரம் தானாம் காப்புப் பாடுவார் முன்னைப் பழையோர்.

பாங்கன்: மூடர், பாவம்!

சயந்தன்: காப்புப் பாடவும் காலமா பார்ப்பார்?
மூச்சு விடவும் முகூர்த்தமா பார்ப்பார்?
நெஞ்சுக்கு நீதியும் நிமிர்ச்சியும் எழுச்சியும்
நிறைவும் தருவது காப்புப் பாடலே.
ஆகையால் அதனை எந்த நேரமும்
எந்த வேளையும் பாடலாம், பாடலாம்.
பாடுதல் வேண்டும், பாடுதல் வேண்டும்.
மீண்டும் மீண்டும் பாடுதல் வேண்டும்.
வேண்டும் வேண்டும் மீண்டும் மீண்டும்
வேண்டும் மீண்டும் மீண்டும் வேண்டும்.

பாங்கன்: (செருமி, கைகூப்பி)
திருப்-‘ற்சங்கிலி...
பொன்னினால் மணியாற் பண்ணிப்
புனைந்த சங்கிலியே போற்றி.
முன்னைநாள் வினைகள் யாவும்
முடிவுற அருள்வாய் போற்றி.
என்னை ஆளுடையார் தொண்டில்
இடையறா ஊக்கம் நல்கி
மின்னுவாய் போற்றி; வாழ்வின்
மெய்ப்பொருட் டுணையே போற்றி.
- திருப்பொற்சங்கிலி.

முகங்களில் மலர்ச்சி தோன்றுகிறது. சயந்தன் பாங்கனின் முதுகிலே தட்டுகிறான். அவர்கள் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுகிறார்கள். இரண்டாம் தடவை சுபை கொண்டு போகும்போது அவர்களின் வேகம் குறைகிறது.

பாங்கன்: அண்ணே, அதோபார்.

சயந்தன்: ஆரவன்.

பாங்கன்: அவர்தான்-
வீரவாகு தேவர் வருகிறார்
வீரவாகு நம் நண்பரா, விரோதியா?

சயந்தன்: நண்பனா? அவனா? நான் அதை ஒப்பேன்.
நம்பத் தகாதவன். நஞ்சுப் பயல் அவன்.

பாங்கன்: ஆயினும், இனிமையாய் அடிக்கடி பேசுவார்.
பாட்டும் பாடுவார், பண்ணிசை நிபுணர்.

சயந்தன்: பண்ணிசை நிபுணனே ஆயினும் பதகன்.
புன்னெறிச் செல்லும் போக்கினை ஊக்குவான்,
அடிக்கடி அவன் நம் முயற்சிக்கிடையிலே
வந்து நுழைவது வருந்தத்தக்கது.

பாங்கன்: உழைப்பு மேலாளரும் அறிந்தால் அதட்டுவார்.

சயந்தன்: இன்றைக்காயினும் உண்மையைச் சொல்லுவோம்.

பாங்கன்: முகத்தை முறிக்கவும் விருப்பம் இல்லை.
பழகும் முறையிலும் பதமை ஆனவர்
வீரவாகு தேவர்.
ஆகையால்.....

சயந்தன்: என்ன செய்வது கொஞ்சம் பொறுப்போம்.

பாங்கன்: முதுகிலே மூட்டை.

சயந்தன்: என்னவாய் இருக்குமோ?

பாங்கன்: இங்கே தான் வருகிறார்?
வந்ததும்
கேட்டுப்பார்ப்போம்


சயந்தன்: கேற்றைத் திறக்கிறான்.

வீரவாகு தேவர் என்பவர் வருகிறார். படலையைத் திறப்பதும் மூடுவதும் பேசாப்பாவனையில் நடக்கின்றன. நெடிய வெள்ளைச் சட்டை, கையிலே சில பைகள் உள்ளவர் அவர்.

பாங்கன்: வீரவாகுவா? வாரும், வாரும்,
நீருமா களைத்து நிலைகுலைந் திருக்கிறீர்?

வீரவாகு: அப்படி ஒன்றும் ஆபத்தில்லை
பழங்கள் ஒருசில பையிலே உண்டு
மலையிலே ஏறிய சிரமமே தவிர
வேறு யாதும் விக்கினம் இல்லை.

வீரவாகு தேவர் பழங்களைக் கொடுக்க, சயந்தனும் பாங்கனும் அவைகளைத் தின்கிறார்கள்.

சயந்தன்: இதோ....(பழத்தோலைப் பையினுள் மறைத்துவிடுகிறார்)
எனக்கெல்லாம் தெரியும் ஐசே!
விளங்கப்படுத்த வேண்டியதில்லை
ஆனால், இப்படி அஞ்சி, அஞ்சி நீர்
அடங்கிப் போவதும் நல்லாயில்லை.

சயந்தன்: தொடங்கிவிட்டீரா;தொணதொணப்பதற்கு?

வீரவாகு: இல்லை. நீங்கள் இளைஞர்-சிறுவர்
முந்திய சரித்திரம் முழுவதும்- சகலதும்
மறந்தே இருக்கும்...மறந்தே இருக்கும்.

சயந்தன்: (ஒரு மூலைக்கப் போய்)
இந்த மனிதன் இனிமேல் எங்கள்
பழங்கதை என்று பல பல கூறுவான்.
கேட்க வேண்டிய தலைவிதி நமக்கும்.
என்ன செய்யலாம்?

பாங்கன்: இரு, இரு கேட்போம்.

வீரவாகு: பழங்கதை என்று நீர் பகிடி பண்ணுவீர்.
உண்மையை நினைக்க உள்ளமோ வேகும்.
அன்றைய வாழ்க்கையின் அருமையும் பெருமையும்
மறந்து நீர் இன்று மண்ணிலே புரள்கிறீர்.
கற்பகப்பைஞ் சோலைக் கடிகமழும் சூழலிலே
அற்புதச் சங்கீதம் அமர்ந்து நுகர்ந்தபடி
பொற்புடைய ரம்பை, திலோத்தமைகள் ஆடியதன்
விற்பனத்தைக் கண்டு விளையாடும் வேளையிலே.
கைப்புறத்தில் மின்னும் கணையாழி வில் எறிக்கத்
தட்டிய செங்கைகள் இவை- சாளையிட்ட செங்கை இவை.

சயந்தன்: ஐயோ, இவரோ அழவும் தொடங்கிவிட்டார்.
குய்யோ முறையோ குரங்கோ என இரங்கி
ஒப்பாரி வைப்பார். உது மிகவும் ஆபத்து.

பாங்கன்: மேலாளர் கண்டால், விலா ஒடியும் எங்களுக்கு

சயந்தன்: தோல்போல ஆடை; தொடையில் ஒரு வார்ப்பூட்டு
கால் மேசு- வேர்வை களைந்துவிட மேலாளர்
நெஞ்சு வரைக்கும் இறங்கிப் பளீர் விரிக்கும்
பொற்பதக்கம் கோத்துப் புனைந்த மணிச் சங்கிலி
நாம்
செய்யும் வினைக்குத் தகுந்த பயனாகக்
கையில் வழங்கிக் கழிக்கப்படும் கூலி
இத்தனையும் உள்ளோம்.
எதற்கும் நாம் சோர்வடைந்து
குந்தியிருக்கோம்; குறைவறியோம்.
ஆகையினால்
உங்கள் முணுமுணுப்பை உள்ளபடி முற்றாய்
வெறுக்கிறோம் ஐயா.
வேண்டாம். போம்.
மேலாளர்
இங்கு வருதற்குரிய சமயம் இதே.
ஆகையினாற் போங்கள்-அதே, அதுதான் பாதையும்.
கும்பிட்டு வேண்டுகிறோம்-கோபம் அடையாதீர்.
இம்மட்டும் இங்கே இருந்ததற்கு நன்றி.
உங்கள்

மாம்பழத்துக்காக மனமார வாழ்த்துகிறோம்.
தேம்பி அழுதிருக்கத் தேவையில்லை நீர்.
ஆனால்.
எங்கள் பொருட்டாய் இதனைப் புரிந்துள்ளீர்.
அன்பீர்! அதனால் அதற்கெம் மனமார்ந்த
நன்றி ஒரு கூடை நவின்றும்மை வேண்டுகிறோம்-
போங்களையா, போங்கள் இனி; போய்ப் பிறகு
வாருங்கள்.

வீரவாகு: நீங்கள் எனை ஏன் வெறுத்து விலக்குகிறீர்?
உங்கள் உழைப்பை உறிஞ்சும் அசுரர்களின்
வெங்கொடுமை சற்றும் உணராது வீணாக
ஏமாந்து போனீரா.
இவர்கள் சதி தொலைத்தால்
செய்யும் வினைக்குத் தகுந்த பலன் கிடைக்கும்.
நொய்வு தொலையும்.
அந்த நுட்பத்தைப் பின் ஒரு நாள்
நீரே உணர்வீர்.

சயந்தன்: நிறுத்துமா. போய் வாரும்.

வீரவாகுதேவர் அவர்களின் நாடியைப் பிடித்து அன்பைத் தெரிவித்துக் கை குலுக்குகிறார். தமது போருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்கிறார். பாங்கன் அவருக்கு உதவி செய்கிறான். சயந்தன் அவர்களைப் பார்த்தபடியே நிற்கிறான். வீரவாகுதேவர் வெளியேறுகிறார். மூலையில் இருந்த கணக்கர் பைனோக்குலரைக் கழுத்திலே மாட்டியபடி முன் மேடைக்கு வந்து, சயந்தனையும், பாங்கனையும் உற்றுப் பார்க்கிறார். அவர்கள் இவரைக் கண்டும் பொருட்படுத்தவில்லை. தம்பாட்டிலே தமது மீன்சுமப்பு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். கணக்கர் மறுபடியும் போய் மேட்டில் அமர்கிறார். பைனோக்குலரைக் கண்ணிலே வைத்து, வேலையாளரை அவதானித்துத் தம் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொள்கிறார். திருப்தியோடு தலை ஆட்டுகிறார். டாண், டாண் என்று மணி அடிக்கிறது. சயந்தனும் பாங்கனும் வேலையை நிறுத்துகின்றனர். இருவரும் பயபக்தியுடன் கைகூப்பி நிற்கின்றனர். சயந்தன் பாடுகிறான்.

சயந்தன்: திருப்பொற்சங்கிலி-
பொன்னினால் மணியாற் பண்ணிப்
புனைந்த சங்கிலியே போற்றி
முன்னைநாள் வினைகள் யாவும்
முடிவுற அருள்வாய் போற்றி.
என்னை ஆளுடையார் தொண்டில்
இடையறா ஊக்கம் நல்கி
மின்னவாய் போற்றி; வாழ்வின்
மெய்ப்பொருட் டுணிவே போற்றி.
--திருப்பொற்சங்கிலி.

சயந்தனும், பாங்கனும் மூன்று தடவை விரைவாக வேலை செய்கிறார்கள். நாலாவது தடவை சோர்வுடன் ஆறுதலாக அசைகின்றனர். இடப்புறமிருந்து மேலாளர் வருகிறார். திடீரென்று நின்று ஊதுகுழல் ஒன்றை எடுத்து ஊதுகிறார், கணக்கர் திடுக்குற்றுக் கண் விழித்துத் திகைப்படைந்து. 'சல்யூற்' கொடுக்கும் நிலையில் நிற்கிறார். பின்னர் இடப்புறமிருந்து ஏவலாளனும் இரண்டு இராசாக்களும் வருகிறார்கள். ஆடம்பரமாக உடை உடுத்த இவர்களின் நடையிலே செயற்கையான கம்பீரமும் தலைநிமிர்வும் காணப்படும். ஏவலனின் கையில் ஒரு தட்டமும், அதிர் மதுச்சாடியும் கிண்ணங்களும் காணப்படும். சயந்தனும் பாங்கனும் வெறுங் கூடையுடன் வந்து குனிந்தபடி நிற்க, மேலாளர் ஒரு துணியினால் அவர்களின் மேனியிலுள்ள வேர்வையை ஒற்றி எடுத்து, துணியை முறுக்கிப் பிழிந்து மதுச்சாடியை நிரப்புகிறார். ஏவலன் சாடியிலுள்ள மதுவைக் கிண்ணத்தில் ஊற்றி இரண்டு இராசாக்களுக்கும் கொடுக்கிறான். அவர்கள் குடித்துவிட்டு ஆடுகிறார்கள். ஆடியவாறே அவர்கள் வலப்புறமாக வெளியேற சயந்தனும் பாங்கனும் மறுபடி வேலையைத் தொடங்குகிறார்கள். இவ்வளவும் பேசாப்பாவனையாக நடக்கிறது. தொடங்குகிறார்கள். இவ்வளவும் பேசாப்பாவனையாக நடக்கிறது. கணக்கர் தூக்கத்தில் ஆழ்கிறார்- தமது வழக்கம்போல. இப்பொழுது மின்மணி ஒலி கேட்கிறது. முன்மேடையின் மேலிருக்கும் சுப்பியிலிருந்து இரண்டு பெட்டிகள் இறங்குகின்றன. சயந்தனும் பாங்கனும் மகிழ்ச்சிக்குறி முகத்திலே புலப்பட, ஆசையோடு பெட்டிகளைப் பார்க்கிறார்கள். பெட்டிகள் எட்டும் உயரத்துக்கு வந்ததும், தொடையிலுள்ள வார்ப்பூட்டுகனுள்ளிருந்து ஒவ்வொரு சாவியை எடுக்கிறார்கள். எடுத்துப் பெட்டிகளைத் திறக்கிறார்கள். இரண்டு போத்தில்கள் இருக்கின்றன. போத்தில்களை எடுத்துப் பார்க்கிறார்கள். அடியிலே சிறிது தண்­ர் மட்டுமே காணப்படுகிறது.

சயந்தன்: என்ன தம்பி, ரொம்ப கம்மி?

பாங்கன்: தண்ணி ரொம்ப கம்பி-
ஆனதால்,
முதலிலே உணவை முடித்துக் கொள்ளுவோம்.
பின்னர் பார்க்கலாம் தண்­ர்ப் பிரச்சினை.

ஒரு சாப்பாட்டுச் சிமிழை எடுத்து, சிறு சாவி ஒன்றைப் போட்டுப் பூட்டைத் திறக்கிறார்கள். உள்ளே இருந்த ஒரு பாண்துண்டடை எடுத்துப் பார்க்கிறார்கள். பின்னர் மற்றுமோர் அரைத்துண்டை எடுத்துப் பார்க்கிறார்கள். பிறகு முழுத்துண்டைச் சிமிழுக்குள் வைத்துவிட்டு, குறைத்துண்டை அங்கலாய்போடு கடித்துக்கொண்டு பேசுகிறார்கள்.

சயந்தன்: இருக்குமே வழக்கமாய்ப் போதிய தண்­ர்!
இன்று மட்டுமே ஏன் கம்மி?

பாங்கன்: (திரும்பி உற்றுப்பார்த்து...தரிப்பு...பாணைப்பழையடி
கடித்துக்கொண்டு)
ஓ, தண்ணியா?
போதாது என்றா நினைக்கிறாய்?

சயந்தன்: (பதைத்து) போதும்
தேவை ஆனால் தராமலும் விடுவரோ?
காற்போத்தில் தான் இன்றைய பங்கு.
"பங்கீட்டளவுப் படியே கிடைப்பது
போதும்" என்பதே
சர்வ சுதந்திர தயாள உரிமை சால்
நல்ல நம் ஆட்சி நடுக்கற நிலைத்திட
இந்தப் பொது விதி ஏற்றிருக்கின்றோம்.
திருப்பொற் சங்கிலிச் செல்வம் எம் உரிமையாய்
அமைந்திட அருளிய ஆட்சியைப் போற்றுவோம்.
ஆட்சியின் பெருமையோ அளவிடற்கரியதாம்.
ஆயினும் தலையீடு அணுவும் இல்லையே!
சர்வ சுதந்திர தயாள உரிமை சார்
நல்ல நம் ஆட்சி நடுக்கற நிலைத்திட
"பங்கீட் டளவுப்படியே கிடைப்பது
போதும்" என்ற பொது விதி போற்றுவோம்.
வேலையைச் செய்கிறோம், கூலியை நமது
கண்ணிலே காட்டி எம் கடனையும் கழிக்கிறார்.
பங்கீட்டுணவையும் பரிவுடன் தருகிறார்.
ஆயினும் தலையீடு அணுவும் இல்லையே!
"பங்கீட்டளவுப்படியே கிடைப்பது
போதும்" என்ற பொது விதி போற்றுவோம்.

சயந்தனுக்கு விலக்கல் எடுக்கிறது, போத்திலில் உள்ள தண்­ரில் ஒருதுளியைச் சயந்தனின் மிடற்றினுள்ளே பாங்கன் விடுகிறான்.

சயந்தன்: போற்...பொதுவிதி போற்றுவோம்
முழுதையும் விடாதே, பிறகும் தேவைதான்.

பாங்கன்: திருப்பொற்சங்கிலிச் சுதந்திரப் பெருமையை
அடிக்கடி சொல்லி நீ அதனைப் புகழ்வதை
நிச்சயமாக நான் மெச்சுகிறேன் அடா!
அத்துடன் அன்பனே, அன்பனே நமது
கைத்தலச் சாவியின் மெய்த்திறன் பாடடா.

சயந்தன்: (தோத்திரம் செல்லும் தொனியில்)
உணவுப் பெட்டியின் சாவியே, உன்னை நாம்
பத்திரமாக நாம் பாதுகாத்திடுமே,
எங்கள் உணவெலாம் எங்களின் உடைமையாம்.
எங்கள் தண்­ர் எங்களுக்குரியதே.
நீரும் பாணும் நிறைக்கப்படுமிவ்
வுணவுப் பெட்டியைத் திறக்கவும் பூட்டவும்
உரிமை உடையோம்; உடையவர் நாம் எலாம்.
உடையார் என்பதன் அடையாளம்போல்
விளங்குவாய் சாவியே, மேன்மை சால் திறப்பே.
திறவுகோல் எனவும் செப்பப்படும் உன்
திறமையும் முறைமையும் இறைமையும் பெரியதே.
உணவுப் பெட்டியின் சாவியே!
பத்திரமாய் உனைப் பாதுத்திடுவமே.

சாவியை மேலே உயர்த்திப் பிடித்து, பின்னர் மூன்று தடவை முத்தமிட்டுவிட்டு, தண்­ரையும் குடித்த பிறகு பெட்டியைப் பூட்டுகிறார்கள். இதற்குள் மின்மணி ஒலி கேட்கிறது. அவர்கள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, சாவியைப் பழையபடி தொடையில் இருக்கும் வார்ப்பூட்டுக்குள் வைக்கிறார்கள். தூரத்திலே டக், டக் என்ற சப்பாத்தொலி கேட்கிறது. அவர்கள் வேலைக்குத் தயாராகிறார்கள். பாங்கன் கண்மூடிக் கைகூப்பி நிற்க சயந்தன் காப்புச் சொல்கிறான்.

சயந்தன்: திருப்பொற்சங்கிலி
பொன்னினால் மணியாற் பண்ணிப்
புனைந்த சங்கிலியே போற்றி.
முன்னை நாள் வினைகள் யாவும்
முடிவுற அருள்வாய்.....

சட்டென்று மேலாளர் தோன்றுகிறார். ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டவன் போல; சயந்தன் திக்குமுக்காடித் தளம்புகிறான். மேலாளர் பரவாயில்லை என்பது போலச் சைகை காட்டுகிறார். சயந்தன் காப்பைப் பாடி முடிகிறான்.

சயந்தன்: பொன்னினால் மணியாற் பண்ணிப்
புனைந்த சங்கிலியே போற்றி.
முன்னைநாள் வினைகள் யாவும்
முடிவுற அருள்வாய் போற்றி.
என்னை ஆளுடையார் தொண்டில்
இடையறா ஊக்கம் நல்கி
மின்னுவாய் போற்றி; வாழ்வின்
மெய்ப்பொருட் டுணையே போற்றி.
-திருப்பொற்சங்கிலி

காப்பு முடிந்ததும் இருவரும் தம் தியானத்திலிருந்து மீண்டு மேலாளரைப் பார்க்கிறார்கள். அவர் மிடுக்கோடு பேசுகிறார்.

மேலாளர்: கடமையில் மிகவும் கண்ணாய் இருக்கிறீர்
இதனால் நாம் மிக இதயம் மகிழ்கிறோம்
பரந்த பொதுநல விருத்தியின் பொருட்டாய்
உங்கள் நலன்களை ஒறுத்து வருகிறீர்.
மிகவும் உயர்ந்த விழுமிய செயல் இது
ஆயினும் ஒன்றை நாம் ஞாபகப்படுத்துவோம்.
இவ்வாறுழைப்பது தூய உம் கடமையே!
திருப்பொற்சங்கிலிச் சேவையின் பெயரால்
புனிதக் கடமையாய்ப் போற்றிட தக்கது.
பூர்வ புண்ணியப் பேறாய்க் கிடைத்தது.
அந்தக் கடமையிற் சோர்வது பாதகம்.

இசைக்குழு: (பாட்டாக)
"இவ்வாறுழைப்பது....சோர்வது பாதகம்"

சயந்தன்: இல்லை, நாம் சோரவே இல்லை.

மேலாளர்: இடையிடை
காப்பினை இசைப்பதால், கடமையின் ஊக்கம்
மிகுதிப்படுதல் வெளிப்படை ஆதலாம்
காப்புப் பாடுதல் கடமையின் பகுதியே.
தயக்கமே வெட்கமோ சற்றும் வேண்டாம்.

பாங்கன்: வாழ்க சங்கிலி!

மேலாளர்: வளர்க நும் தொண்டு.

பாங்கள்: சாவி உரிமைத் தனித்துவம் வாழிய

சயந்தன்: (மிதப்பாக)
சாவி உரிமைத் தனித்துவம் வாழிய

மேலாளர் சயந்தனும் பாங்கனும் வேலை செய்வதை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டு நிற்கிறார். பின்ன போகிறார். சயந்தனும் பாங்கனும் வேலையைத் தொடர்கிறார்கள். கணக்கர் பைனோக்குலரால் நோக்கித் தமது புத்தகத்திலே பதிந்துகொள்கிறார். ஏவலன் ஒருவன் இரண்டு பத்திரங்களைக் கொண்டுவந்து சயந்தனிடமும் பாங்கனிடமும் கொடுக்க அவர்கள் அவற்றில் ஏதோ எழுதிவிட்டுத் திருப்பிக் கொடுக்கிறார்கள்.

இசைக்குழு: (பாட்டு) இவ்வாறுழைப்பது....சோர்வது பாதகம். சிறிது நேரம் செல்ல வேலையை நிறுத்திவிட்டுப் பாங்கன் தலையைச் சொறிகிறான்.

பாங்கன்: அண்ணே!

சயந்தன்: என்ன சங்கதி, பாங்கன்?

பாங்கன்: (தயங்கி) இல்லை....எனக்குச் சின்னதோர் ஐயம்.

சயந்தன்: திடீரென ஏது?

பாங்கன்: திடீரென இல்லை.
சிலநாளாய் இதே சிந்தனை எனக்கு.
உன் பெயர் சயந்தன்-உண்மை தானே?

சயந்தன்: நிச்சயமாக.

பாங்கன்: ஆனால்; உனது
தந்தையார் இந்திரன் என்றுதான் சொன்னார்.
வீரவாகுதேவர் முந்தநாள்.
ஒருகால் அதுவும் உண்மையாய் இருக்குமோ?

சயந்தன்: நேற்றைய நிகழ்ச்சியை நினைவில் வைப்பதே
எனக்கு மிகவும் சிரமம்.
முந்தநாள்
நடந்ததா எனக்கு ஞாபகம் இருக்கும்?

பாங்கன்: ஒன்று செய்வமா?

சயந்தன்: என்னது?

பாங்கன்: நாங்கள்
மேலாளரிடம் கேட்டுப் பார்ப்போம்.
வரவு இடாப்பிலே முழுப்பெயர் இருக்கும்.
அதிலே பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.
இந்திரன் தானா இல்லையா என்பதை

சயந்தன்: இந்திரன், சந்திரன்-இதில் ஒரு பெருமையா?
எனக்கிதில் எல்லாம் அக்றை இல்லை
மேலும் இதெல்லாம் வீண் செயல், வீண் தொழில்.
இன்றைய எனது தேவையோ உழைப்பு.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
கட்டுப்பாட்டைக் குலைக்க முயல்வதே
முட்டாள் வீரவாகுவின் முயற்சி.
அடிக்கடி வந்து கலைக்கிறான் மனத்தை.
கலகம் விரும்புவோன்; கபடம் நிறைந்தவன்.

பாங்கன்: நீயோ அவரை முழுமையாய் வெறுக்கிறாய்.
எனக்கோ அவரிலோர் கவர்ச்சி உண்டாகுது.

சயந்தன்: வெள்ளைச் சட்டையை விரும்பினாய் போலும்.

பாங்கன்: வெள்ளைச் சட்டை மட்டுமா?

சயந்தன்: ஆளிடம்
புத்தியும் கொஞ்சம்......

பாங்கன்: பொறு, பொறு சற்றே
உண்மையைத் திறந்து சொல்லப்போனால்
அவரைப்போல் ஓர் அறிஞரை இதுவரை
கண்டதே இல்லை நான்! கண்டதே இல்லை!

சயந்தன்: என்னடா தம்பி சொல்கிறாய்?

பாங்கன்: வீரவாகு தேவர் ஓர் மேதை.

சயந்தன்: இத்தனை தூரமா இவரை நீ மதிக்கிறாய்?

பாங்கன்: ஆமாம் அண்ணே! அதில் தவறு ஏதும்
இருக்குமேயானால் என்னை மன்னிப்பாய்,

சயந்தன்: இல்லை, இல்லை, உன் இச்சைப்படியே
எண்ணிக்கொள்ளலாம்.

இதுதான் தம்பி.
எண்ணச் சுதந்திரம் எனப்படும் சலாக்கியம்.

பாங்கன்: அதுசரி அண்ணே. உன் கருத்து என்ன?

சயந்தன்: எதனைப்பற்றி?

பாங்கன்: இந்த மனிதரின்
போக்குகள் பற்றி

சயந்தன்: போக்குகள் என்றால்....

அண்ணாந்து தூரப் பார்த்து யோசிக்க முயல்கிறான். தலையைச் சுரண்டிக்கொண்டு பிறகு எதுவும் ஓடாத பாவனையில் மிகவும் சிரமப்பட்டு ஏதோ சொல்வதற்காக, சொற்களை மனத்துள்ளே கூட்டி உதடுகளால் முணுமுணுக்கப் பார்க்கிறான். இயலவில்லை. ஆற்றாமையோடு, அபிப்பிராயம் சொல்லும் முயற்சியைக் கைவிடுகிறான்.

சயந்தன்: மிகவும் களைத்து நான் போனேன்
சிந்தனை செய்வதே சிரமமாய் உள்ளது.
வயோதிப காலம் வந்தது போலும்.

பாங்கன்: வயோதிப கலாமா? உனக்கா?
சீ சீ,
வாய்கொளாப் பேச்சு! வாய் கொளாப் பேச்சு!
இந்திரன் மகன் சயந்தனா இப்படி
துர்ச்சகுனம் போற் சொற்களைச் சொல்வது?
விடுதலை கிடைக்கும் நமக்கும் ஒருநாள்
வீரவாகுத் தூதுவர் கூட
அந்த நன்னம்பிக்கையை அழுத்திக் கூறினார்.

சயந்தன்: விடுதலை என அவர் எதனைக் கருதினார்?

பாங்கன்: முழுவதும் எனது மூளையில், தெளிவாய்
ஏறவும் இல்லை- எனினும், இன்றைய
நிலைமையைக் காட்டிலும் சீரிய நிலைமை
உதயமாகும்,
உண்மையோ, பொய்யோ?
சைக்கிள்மணி அடிக்கிறது. தபாற்காரன் வருகிறான்.

சயந்தன்: ஏது தபால்கள்?

சயந்தன் இரு தபால்களை வாங்குகிறான். ஒன்றைப் பாங்கனிடம் கொடுக்கிறான். இதற்கிடையில், பாங்கன் சயந்தனுக்கு வந்த தபாலின் உறையிலுள்ள விலாசத்தை எட்டி வாசிக்கிறான்.

பாங்கன்: இந்திரன் சயந்தன்.
ஏ, ஏ! தூதுவர் எமக்குச் சொன்னதும்
உண்மைபோல் தானே தெரியுது, சயந்தா?

சயந்தன்: என்ன குதிக்கிறாய்!

பாங்கன்: இந்திரன் மைந்தன் நீ.
பென்னம்பெரிய மரபிலே பிறந்தவன்.
போக போக்கியப் பூரண வாழ்க்கையை
ஆளும் உரிமை அமைந்தவன் நீ தான்.

சயந்தன்: என்வலப் பிதிலே எழுதிய பெயரைக்
கண்டா, இத்தனை கரணம் அடிக்கிறாய்?

பாங்கன்: ஐயா சயந்தரே! (இருகைகளாலும் சயந்தனின் தோள்களைப் பற்றி அன்பையும் மதிப்பையும் தெரிவித்து ஆயிரம் வணக்கம்.
இலேசுப்பட்டவர் இல்லையே தாங்கள்?
இந்திரன் மைந்தர் நீர்- இனிப்பயம் இல்லை.
போக போக்கியப் பூரண வாழ்க்கையை
ஆளும் உரிமை அமைந்தவர் தாங்கள்.

சயந்தன்: ஆளும் உரிமையா? அதை ஏன் எமக்கு?
வலிமை என்பது மனிதரைக் கெடுக்கும்.


பாங்கன்: பெரிய துறவிபோல் பேசுகிறாயே!

சயந்தன்: நாங்கள் செய்யும் பணிக்கு பரிசாய்க்
சம்பளம் தருகிறார். தண்­ர், பாண்வகை
சகல வசதியும் தகுதி உணர்ந்தே
திருப்திகரமாய்ச் செய்து தருகிறார்
சங்கிலிகூடத் தந்துள்ளார்கள்.
உணவுப் பெட்டியின் உரிமைச் சாவியும்
எங்களிடமே இருக்க விட்டுள்ளார்
இத்தனை சலாக்கியம் எமக்குண்டல்லவா?
இதற்குமேல் உரிமையேன்? எமக்கிதுபோதும்.
ஆளும் உரிமையா? அதை ஏன் எமக்கு?

பாங்கன்: தன் கடிதத்தை உடைத்துப் பார்க்கிறான்.

பாங்கன்: (கத்துகிறான்)
வங்கிக் கணக்கா வந்திருக்கிறது?
மாதக்கணக்கில் மர்மமாய்க் கிடந்தது
விடாப்பிடியாக நாம் வேண்டியபடியால்
இந்தக் கிழமை வந்திருக்கிறது.
(கணக்கை உற்றுப் பார்க்கிறான். முகம் சுருங்கி விடுகிறது.)
சிவப்பிலக்கங்கள் ஏன் கணக்கிலே வருவான்?

சயந்தனும் இதைக் கேட்டுத் துணுக்குறுகிறான். முந்திய அசமந்தப்போக்குச் சற்றுக்குறைய, கோபக்குறி சிறிதே தோற்றுகிறது.

சயந்தன்: இந்த என் கணக்கிலும் சிவப்பிலக்கங்கன்
சிவப்பிலக்கங்கள் ஏன் கணக்கிலே வருவான்?
இதற்கு நாம் விளக்கம் பெறவே வேண்டும்.
சில மணி நேரச் சிறிய ஒய்வுகள்.
தவிர்த்த மற்றைய சகல வேளையும்
உழைக்கிறோம், அழைக்கிறோம், உடம்பால்
உழைக்கிறோம்.

பாங்கன்: இப்படி உழைத்தும் ஏன் நயம் இல்லை.
இதில் ஒரு கொடிய சூழ்ச்சி இருக்குமோ?

சயந்தன்: (சற்று முன் வந்த ஆவேசம் தணிந்து விடுகிறது. குளிர்ந்து விடுகிறான்.)
இல்லைப் பாங்கா! இரு நீ பொறுமையாய்
தக்க காரணம் இருக்கவே செய்யும்.
சங்கிலி உடமையும், சாவி உரிமையும்
தந்த நம் செவ்விய தயாள மூர்த்திகள்
சூழ்ச்சிகள் அறியார்; தூயவர் அவர்கள்.

பாங்கன்: அப்பாடியானால் வங்கிக் கணக்கிலே
போமதி அதிகமேன்? வருமதி குறைவேன்?

சயந்தன்: பழைய கடன்களின் பாரமாய் இருக்கும்.

பாங்கன்: பழைய கடன் எனில் - பாவிகள் எங்கன்
கூலியை எங்கே கொண்டுபோச் சேர்க்கிறார்?
இத்தனை கடுமையாய் உழைத்தும்கூட,
கடன் சிறிதேனும் குறைவதாய்க் காணோம்,
வரவரப் பெருகி வளர்வதே அன்றி,
எமக்கொரு நன்மை இம்மியும் இல்லையே!

சயந்தன்: தம்பி பாங்கன்! தயவு செய்து நாம்
ஆத்திரப்படாமல் ஆறுதலாக
எதையும் தீர எடுத்து நோக்குவோம்.
வங்கிக்கணக்கு வந்தது தொடக்கம்
என் மன அமைதியும் இழுபறிப்படுவது
மெய்தான்-
ஆயினும்,
விசால பரநலக்
கோட்பாடுடைய குலநலம் வாய்ந்தவர்
ஆட்சிப் பொறுப்பினர்; ஆதலால் பிழைகள்-
பாரிய, கொடிய பழுதுகள்-இடம் பெற
அனுமதியார்கள். ஐயமே வேண்டாம்.

பாங்கன்: முப்பது முக்கோடி ரூபாய்
(திகைத்துச் சிலையாகிறான்.)

சயந்தன்: முழி பிதுங்கி
இப்படி ஏன் தம்பி, இனியும் நீ சோருகிறாய்?

பாங்கன்: அப்பப்பா, அந்த அளவா பழைய கடன்?
எப்படித்தான் இந்த அளவு கடன் பெருகி
மிக்கு வளர்ந்திருக்கும்?

சயந்தன்: முழுத்தொகைக்கும்
என்ன விபரம் என நாம் விசாரிப்போம்.
எங்கே என் பேனை

பாங்கன்: எழுது.

சயந்தன் சேமக்கலமொன்றை எடுத்து ஒரு தாளத்துக்கு அடிக்கிறான். ஏவலன் ஒருவன் வர, கடதாசி கொண்டு வருமாறு அவனக்குச் சைகை காட்டுகிறான். கடதாசி வருகிறது, வாங்கி பாங்கனைக் குனியும்படி செய்து அவன் முதுகிலே கடதாசியை வைத்து வதவத என்று கடிதம் எழுதுகிறான். "அப்பப்பா அந்த அளவா பழைய கடன்...." என்ற பாட்டை இசைக்குழு ஒலிக்கிறது. ஒளி மங்குகிறது, பிறகு திரை விழுகிறது.

II

பாங்கன்: (கை காட்டி மகிழ்ச்சி கொண்டு)
வீரவாகு தேவர் வருகிறார்.
வீரவாகு தேவர் வருகிறார்.

சயந்தன்: வீரவாகுவா? வரட்டும் வரட்டும்.

பாங்கன்: முன்பு நீ அவரை நம்பவே இல்லை

சயந்தன்: பின்புதான் எல்லா உண்மையும் வெளித்தது.

பாங்கன்: அன்பிலா மாக்கள் அவர்கள்-நேற்றுத்
தின்பதன் பொருட்டு, திறந்த பெட்டியுள்
கதைப்பான் நொருக்கலும் காணவில்லையே!


சயந்தன்: இப்படிப் போனால் - இந்த றேற்றிலே
ஒட்டறை பிடிக்கும் தண்­ர்ப் போத்தலில்!
மின்மினி ஒலிக்கிறது. உணவுப்பெட்டி இறங்குகிறது.

பாங்கன்: (பழக்கத்தின் பீடிப்பால் வழக்கம் போலக் காப்புச் சொல்லத் தொடங்குகிறான்)
திருப்பொற் சங்கிலி.
பொன்னால் மணியாற் பண்ணிப்
புனைந்த சங்கிலியே போற்றி
முன்னைநாள் வினைகள் யாவும்
முடிவுற அருள்வாய் போற்றி
என்னை ஆளுடையார் தொண்டில்....

சயந்தன் வழக்கம் போலக் கைகளை இப்போது கூப்பவில்லை. பாங்கனை வெறுப்புடன் பார்க்கிறான். காப்புப் பாட்டு முடிபை நெருங்க நெருங்க அவன் ஆத்திரம் கட்டு மீறுகிறது. இப்பொழுது வீரவாகுத்தேவர் ஒரு சூற்கேஸ் ஒரு தூக்குச் செம்பு என்பனவற்றுடன் வருகிறார். பாங்கனின் காப்புப்பாடலை இடைமறித்து அவன் கூப்பியகரங்களை இழுத்துக் குழப்பி நிற்பாட்டிவிடுகிறான் சயந்தன்.

சயந்தன்: இனியும் ஒர்காப்பேன் தம்பி?

பாங்கன்: (பயமும் திருப்தியும் கலக்க)
சின்னவர் பிழைகள் செய்தால்

சயந்தன்: சிவசிவா, இரங்கவேண்டாம்

வீரவாகு: சாப்பாட்டு வேளை சமயம் சரியில்லை
போய்ப்பிறகு பின்னால் வரவா?

சயந்தன்: பொறுங்கள் ஐயா,
எங்கள் உணவு வசதி சவுகரியம்
இங்குள்ள சூழல்- இவை நீங்கள் காண்பதுவும்
மிக்க அவசியம்தான்.

பாங்கன்: வேடிக்கை என்னவென்றால்...

தங்கள் உணவுப் பெட்டிகளைத் திறந்து, சிமிழ்களை எடுத்துக் கவிழ்க்கிறார்கள். பழைய கரைப்பான் நொருக்கல்கள் சில கொட்டப்படுகின்றன. சாப்பாட்டுச் சிமிழைக் கவிழ்த்தபடி தடவி அங்கு ஒன்றும் இல்லாமையை வீரவாகுத் தேவருக்கும் காட்டுகிறார்கள். பின்னர் தண்­ர்ப் போத்தல்களை எடுக்கிறார்கள். அவற்றுள்ளே தண்­ர் இல்லை. போத்தலின் வெளிப்பக்கத்திற் படிந்த தூசியைத் தன் லேஞ்சியாலே துடைத்து, கூறுகிறான் சயந்தன். தூசிப்படலம் ஒன்று கிழம்பிப் பறக்கிறது.

சயந்தன்: நாலு நாளாகவே நாங்கள் முழுப் பசிதான்

வீரவாகு: பட்டினியா என்ன?

பாங்கன்: பதகர்.

சயந்தன்: குடிப்பதற்குத்
தண்­ர் தரவும் தயங்கி மறுக்கின்றார்.

வீரவாகு: தாகத்தைத் தீர்க்கத் தடையா?

சயந்தன்: தருக்கு மிக்கார்.

பாங்கன்: நோகத் துயர்கள் பல நூறு எமக்கு மூட்டுகிறார்.

மின்மினி ஒலிக்கிறது. பெட்டிகள் ஏறத்தொடங்குகின்றன.

பாங்கன்: சீ, கெடுவாய்!
(பெட்டிகள் இரண்டையும் கூட்டிப் பிடித்து மேலே போகவிடாமல் இழுக்கிறான். அவற்றை அறுத்து எறிய முயலுகிறான்.)
பெட்டி வெறும்பெட்€
பெரீஇய திரவியம்போல்,
கட்டி இழுத்தே உயர்த்தி இறக்குகிறாய்
முட்டாட் பயல் நீ.

ஆனாலும் பெட்டியில் மாட்டிய கயிறு இலேசில் அறவில்லை. அது பாங்கனையும் இழுத்துக்கொண்டு மேலே போக முயல்கிறது. பாங்கன் சிறிது நேரம் போராடிவிட்டுத் தொபபென்று விழுகிறான். பெட்யை நிறுத்துவதற்குச் சயந்தனும் முயல்கிறான். இயலவில்லை. இருவரும் பின்வாங்குகின்றனர், வீரவாகு தேவர் இவற்றைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். பின்னர் உணவு பெட்டியுள் வைக்கப்படாது கீழே கிடக்கும் சாப்பாட்டுச் சிமிழையும் தண்­ர்ப் போத்தலையும் எடுத்துச் சின்னத்துடன் வீசி நொறுக்கி நாசஞ் செய்கிறார்கள். மேலாளர் வருகிறார், வீரவாகுதேவர் பாறைக்குப் பின்னால் மறைகிறார்.

மேலாளர்: முரட்டுத்தனம் என்ன?
ஏது குழப்பம்?
எகிறிக் கிழம்பி இங்கு
மோதி உடைத்து முறுக்கி அடித்தது யார்?
தீது புகட்டித் திரிபு இதயத்தை

பாங்கன்: பாண் துண்டு கூட......

மேலாளர்: பழைய முறைமைகளைத்
தாண்டி விடுவதுதான் தக்கதென உங்களை யார் தூண்டிவிட்டார்?

பாங்கன்: தண்­ர் துளியும் கிடையாமல்.....

மேலாளர்: ஆண்டவனின் பேரால் அமைந்த குடியாட்சி-
மண்டியிட்டுப் போற்றி மதித்து நடக்காமற்
கோளாறு செய்து குழப்பம் விளைவித்தால்,
தாளாது சர்க்கார்; சடுதி நடவடிக்கை
மேற்கொள்ளும்; உண்மை;
மிகவும் வெளிப்படையாய்
நாட்டுடமை போட்டுடைக்க நாணாது முற்பட்டுச்
சேட்டை புரிவோர் சிதைக்கப்படுவார்கள்.
காப்பை இனிச் சொல்லுங்கள்.

பாங்கன்: (சயந்தனைப் பார்த்து) காப்பம்.

சயந்தன்: கடும் பசியால்
செய்யத்தகாத செயல்புரிய முற்பட்டோம்
மன்னிக்கவேண்டும்.

மேலாளர்: மறுபடியும் முன்போல
மீன் சுமப்பில் ஈடுபட்டு மேன்மை பல ஈட்டுங்கள்,
தீன் சுவைப்பில் மட்டும் செலுத்தாதீர் நும் புலனை
ஐம்புலனை வென்றோர் அறவோர் எனப்படுவார்.
துன்ப வெயில் தாக்காத தூயோர் எனப்படுவார்.
அந்த வழியில் அறவோரோய் வாழுங்கள்.
ஐம்புலனின் போக்கில் அவற்றுடனே ஒன்றாகி
அள்ளுப் படுவோர் அறவோர் எனப்பட்டார்.
தள்ளப் படுவார் தகாதோர் எனப்படுவார்,
ஆதலினால் நீங்கள் அறவழியில் வாழுகிற
நீதியராய் அந்நெறியில் நிற்கக் கடவீர்கள்.
போங்கள் இனி மீன் சுமக்க.....
பொறங்கள்.
(கையிலே தட்டிக் கணக்கரை கூப்பிட்டு)
ஒய்.
இங்கு நடந்த கலக விபரங்கள்
யாவும் பதிவு புரிந்து கணக்கெடுப்பீர்
கண்ணாடிச் சுக்கல் கயிற்றுச் சிலும்பல்கள்
பண்ணிய நற்பாத்திரத்தின் பக்கச் செவித்துணுக்கு
யாவும் கணிப்பீடு செய்தே எழுதி வையும்.
(சயந்தனையும் பாங்களையும் பார்த்து)
மீன் சுமக்கப் போங்கள்; வியர்வை ஒரு துளியும்
காணோம் உமதுகடலில்!
காலை தொடக்கம் இங்கே
வீணே பொழுதை விழலிற் செலவிட்டீர்.
மேலுமிது நீடித்தல் வேண்டாம்.

சயந்தன்: சரி, துரையே!


சயந்தன் பாங்கனைப் பார்க்கிறான். அவன் மனமில்லாதவனாக வேண்டாவெறுப்போடு காப்பைச் சொல்லத் தொடங்க மேலாளர் போய்விடுகிறார், மேலாளர் மறைந்ததும் காப்பை முடிக்காமல் நக்கலாக அதே இராகத்தில் முணுமுணுத்துவிட்டு மீன்சுமப்பைத் தொடங்குகிறான். சயந்தனும் வேலையில் ஈடுபடுகிறான். கணக்கர் கைவில்லை ஒன்றை எடுத்துப் பிடித்து அதனூடே பார்த்துப் பார்த்து நிலத்திலே சிதறிக்கிடக்கும் உடைசல்களை எண்ணிக் கணக்கிட்டுப் பதிவு செய்கிறார். வேலை செய்யும் சயந்தனையும் பாங்கினையும் இடையிடையே னைனோக்குலராற் பார்த்து தம்தாள்களிலே எதையோ குறித்துக்கொள்கிறார். ஏவலர் இருவர் சில பத்திரங்களைக் கொண்டுவந்து சயந்தனிடமும் பாங்கனிடமும் கொடுத்து நிரப்புவித்துக் கையொப்பம் வாங்கிச் செல்கிறார்கள். இரண்டு இராசாக்களும் ஏவலன் ஒருவனும் மேலாளரும் வருகிறார்கள். அங்கே உடைந்து சிதறிக்கிடக்கும் துண்டங்களைப் பார்த்து பிரிந்து மதுச்சாடிக்குள் விடுகிறார். சாடி நிரம்பவில்லை இராசாக்கள் கிண்ணங்களை எடுத்துக் குடிக்க முயலும்போது அவற்றுட் போதிய மது இல்லை. அங்கு 'அற்றென்ஷன்' நிலையில் நிற்கும் மேலாளரைக் கூப்பிட்டு விளக்கம் கேட்கிறார்கள். மேலாளர் சயந்தனையும் பாங்கனையும் சுட்டிக்காட்டிச் சாட்டிவிடுகிறார். அவர்கள் இவ்விருவரையும் விசாரணை செய்கிறார்கள். இவ்வளவும் பேசாப் பாவனையில் நடக்கிறது. இராசாக்கள் வெளியேறுகிறார்கள். மேலாளர் வேலை செய்யும்படி சயந்தனுக்கும் பாங்கனுக்கும் சைகை காட்டிவிட்டு வெளியேடுகிறார். கணக்கர் தமது மூலையிலே பழையபடி தூக்கத்தில் ஆழ்கிறார். வீரவாகு தேவர் பாறை மறைவிலிருந்து வெளிப்படுகிறார்.

வீரவாகு: அந்தோ குழந்தைகளே! ஆசைச் சிறுவர்களே இந்த நிலைக்கா இறங்கிவீட்டீர்?

சயந்தன்: மேலவரே,
இன்னல்மிகுந்த இந்த நிலைமையிலும் ஓர் ஆறுதலே உள்ளதையா எங்களுக்கு.

வீரவாகு: வேர்வை களைந்து விடுகின்ற செய்கைமுறை
இன்னும் இருப்பதையா சொல்லுகிறீர்?

சயந்தன்: ஏனையா,
அந்த ஒன்றுமட்டும் அரசின் தயாளகுணம்
காட்டும் ஒரு சுட்டி - கருணை நிதி காட்டி.
இல்லையா?

வீரவாகு: ஏ, ஏ! இதையும் புரிந்துகொள்ளும்
சக்திகெட்டுப் போனீரோ, தம்பியரே, தம்பியரே?
இங்கிவர்கள் வந்து வியர்வை திரட்டுவதும்
உங்கள் நலம் கருதி என்றா நினைத்திருந்தீர்?
இல்லை, இல்லைத் தம்பி - இவர்கள் வெளியேறிக்
கூத்தாடும் நோக்கமே கொண்டவர்கள் - அல்லாமல்,
காத்தாளும் நோக்கம் கடுகளவும் இல்லாதார்,

சயந்தன்: சீசீ, எதிலுமே தீதும் உண்டு; நன்றும் உண்டு,
ஏசி எதிலும் இழிவுகளே காணுகிற
வஞ்சநெஞ்சம் கொண்டதொரு வன்கண் மனிசரையா
உண்பதற்குத் தக்க உணவும் குடிநீரும்
இல்லாது உழன்று வருந்துகிறோம்- உண்மைதான்.
அந்நிய நாணயம் அற்றதனால் வந்துள்ள
சந்தை நெருக்கடியாற் சார்ந்த நிலைமை இது.
பஞ்சம் இன்று வந்தபடியால், அதற்காக
ஆட்சி நலத்தை அவமதித்துப் பேசுவதா?
பஞ்சம்பரும்; போகும்.
பண்டைப் பழஞ்செல்வம்
மிஞ்சு வளம்கூட மீண்டும் திரும்பி வரும்.
அல்லும் பகலும்-
அதிலே வியப்பில்லை
கோடை முடிந்த பிறகு, நல்ல மாரி வரும்.
ஆனபடியால்....

வீரவாகு: அடங்கி ஒடுங்கிப்போய்க்
கொத்தடிமை வேலை செய்துகொண்டு சுழல்வதற்கே
மெத்த விருப்பம் படைத்திரோ, தம்பியரே?
(கண் கலங்குகிறார்)
இந்திரனின் மைந்தன் இவனா?
கடூழியத்தால்
நைந்த துயர நலிவால், மதி கலங்கிப்
போனானா இந்தப் பொடியன்?
கடவுளே!
சொந்த நலமும் சுறட்டிற் பெருவிருப்பும்
எந்த அறமும் இலாத மறத்தருக்கும்
பேராசை கப்பிப் பிடித்த சதிச் சூழ்வும்
மிக்கோரின் ஆட்சி விருதாக் கொடுமையினால்
இந்திரனின் மைந்தன் - இளைய உயிர்க்கொழுந்து
வாடித் துவண்டு வரளல் விதியாமோ?

பாங்கன்: ஐயா, பெரியவரே! ஆத்திரத்தில் ஏதேதோ....

சயந்தன்: ஆத்திரமே அல்ல. அறியாமை- மன்னிப்பீர்.

வீரவாகு: வேண்டாமே சோர்வு- தம்பீ!

சயந்தன்: குழைந்துகொண்டு வருகிறான்.

வீரவாகு: வீரியம்தான் மூலதனம் (வீரவாகுதேவர் ஒரு சிறு குப்பியைத் தம் கூடையிலிருந்து எடுக்கிறார். குப்பியிலிருந்து சில குளிகைகளை எடுத்துப் பாங்கனுக்குக் கொடுக்கிறார்.
சத்துணவுச் சாரம். (சயந்தனுக்கும் குழிகை கொடுத்த பிறகு குப்பியை மூடிக் கூடையுள் வைக்கிறார்)
தைரியத்தை மேன்மேலும்
ஊட்டுவதே நன்மை உதவும்- மறவாதீர்.
நீதி குலைக்கின்ற நீசர்களைப் போர்முனையில்
மோதி விழுந்த முறையான சாதனங்கள்
வேண்டும், துணிவும் மிகவும் அவசியமே;
எத்தர் சதியை எடுத்துப் புறம் களைந்து
மத்துத் தயிராய் மமதை தனைக் கடைந்து
வெல்வோம் சமரில் விழுத்திடுவோம் வெம்பகையை

இசைக்குழு:(வசனமாக) நீதி குலைகின்ற....வெம்பகையை
உங்களது போக்கே உகந்ததென எண்ணுகிறேன்.
என்றாலும், இன்னும் எனக்குள் சமுசயங்கள்
தோன்றி மறைந்து தொடர்வனவே, என் செய்வேன்?

வீரவாகு: நாள் போகப் போக எல்லாம் நல்லாய் விளங்கிவிடும்
அம்பலவி மாம்பழங்கள் ஆறேழை உங்களுக்க்காய்க்
கொண்டுவந்துள்ளேன், குழந்தைகளே சாப்பிடுங்கள்
(பழங்களையும் பாலையும் கொடுக்கிறார். ஓரு சிறு நூலை எடுத்துச் சயந்தனிடம் கொடுக்கிறார்.)
சுட்ட பசுப்பால் - தொழிற்கொள்கை பற்றி ஒரு
கட்டுரை நூல் -சின்னன்-கடின நடை இல்லை.

சயந்தன்: மேலாளர் இல்லாத வேளை இடையிடை நாம்
நூலைப் படிப்போம்.

வீரவாகு: துணுக்கக் கருத்துகளில்
ஏதும் ஐயம் உண்டென்றால் என்னிடத்திற் கேளுங்கள்
தீது-நன்மை பாகுபடுத்துகிற நோக்குகளின்
வேதம் என்று சொல்ல மிகவும் தகுதி உள்ள
ஆராய்ச்சி அந்த அரிய சிறு புத்தகம்.

மேலாளர் வருவது சப்பாத்தொலிமூலம் தெரிகிறது. வீரவாகு தேவர் தம் பொருள்களை அவரசமாக அள்ளிக்கொண்டு வெளியேறுகிறார். சயந்தன் தனக்குக் கொடுக்கப்பட்ட நூலைப்பயந்து பதுங்கிப் பதுங்கி ஒரு பாறை மறைவிலே பத்திரப்படுத்துகிறான். சயந்தனும் பாங்கனும் கூடைகளை எடுத்துக்கொண்டு மேடைப் பின்புறமாகச் சென்று இரண்டு சுமை மீனுடன் வருகிறார்கள். இதற்குள் மேலாளர் வந்துவிடுகிறார்.

மேலாளர்: ஏய்!
வேலைச் சுறுசுறுப்பு மேலும் அதிகரித்தல்
சாலும்.
அதற்குத் தடையாக ஏதேனும்
உண்டென்றாற் சொல்வீர்.
உமக்குச் சகலவித
சௌகரியம் செய்து தருமாறு
மேலிடத்தார்
உத்தரவு போட்டுள்ளார்.
ஒன்றும் ஒளிக்காமற்
சொல்லலாம் நீங்கள்.
தொழிற்சிறப்பால் உம்முடைய
அல்லல் போம்.
வாழ்வில் அனைத்தும் நலமாகும்.

மேலாளர் கணக்கரிடம் சென்று அவர்வசம் இருக்கும் பத்திரங்களிற் சிலவற்றைப் பார்வையிடுகிறார். இதற்கிடையில், சயந்தனம் பாங்கனும் பேசிக்கொள்கிறார்கள்.

பாங்கன்: உண்மையினை இன்றே உடைத்து விடுவோமா?

சயந்தன்: வேண்டாம் அவதி; மிகவும் அவதானம்

மேலாளர்: திரும்பி வருகிறார்-- முன்மேடைக்கு

சயந்தன்: ஐயா உணவுச் சிமிழில்....

மேலாளர்: அதை அறிவோம்.
போதிய பாண் இல்லை; புறுபுறுக்க வேண்டாம்.
உலகத்துச் சந்தை நிலை படு மோசம்.
ஆகையினால் இந்த அவலம்.
சில நாளில்
இந்த நெருக்கடியும் எப்படியோ தீர்ந்துவிடும்.
உங்கள் உழைப்பின் உதவி
எமக்கு மிக
வேண்டும் இந்த வேளை
விரும்பித் தொழில் புரிந்து
வீர மகேந்திரன் மேன்மையினைக் காத்திடுங்கள்.
பொற் சங்கிலியைப் புனையும் உரிமை தந்து
வைத்திருக்கும் இந்த மகத்தான ஆட்சியினைப்
பேணி உடமை உரிமைத் தனித்துவத்தால்
யாவர் மனமும் நிறைவு பெறுமாறே
ஆளும் சிறந்த அரசை மதித்துழைக்கும்
உங்கள் ஒழுக்கம்
உணர்ச்சி
விழுப்பம் எல்லாம்
பாராட்டத் தக்கவையே, பாராட்டத் தக்கவையே....

பாங்கன்: போத்திலிலே தண்­ரும்....

மேலாளர்: போதாதா?

பாங்கன்: காலையிலே
பார்த்தபொழுது துளி நீரும் இல்லை ஐயா.

மேலாளர்: என்ன கொடுமை!
இனிமேல் ; இதுபோலச்
சம்பவிக்க மாட்டாது
தக்க நடவடிக்கை
மேற்கொள்வோம் நாங்கள்.

பாங்கன்: மிகவும் இடைஞ்சல் ஐயா!

மேலாளர்: (உறுக்குகிறார்) என்னையா! பாங்கன்?
இதோ, வாரும் முன்னாலே!

பாங்கன் மேலாளரின் முன்னிலையில் வந்து நிற்கிறான், முதலிலே கைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றவன், பிறகு மேலாளரின் முறைப்பைத் தாங்கமாட்டாதவனாக, மெல்லமெல்லக் கைகளைத் தூங்குகிறான். இறுதியில், பணிவு தோன்ற முறைப்படி கைகட்டி நிற்கிறான்.

மேலாளர்: கொஞ்ச இடத் தந்தால், குதித்துக் கிளம்புகிறீர்.
பஞ்சம் எங்கே?
நீரோ பதக்கம் அணிந்துள்ளீர்.
தட்டுப்பாடுண்டிங்கு சற்றே....
அது தவிரப்
பட்டினியாய்த் தானா இருக்கிறீர்?
இல்லையே!
சாப்பாடில்லாது தவித்தல் நிசம் என்றால்,
இன்னும் உயிரோடிருக்கிறீர்- எவ்வாறு?
சின்னக்குறையைப் பெரிதுபடுத்துகிறீர்.
நன்மை பனைபோல் இருக்க, அதை மறந்து
தீமை தினைபோலத் தேடி அதைப் பாராட்டி
மாண்பில் உயர்ந்த மகேந்திரத்தைத் தூற்றுகிறீர்.
(சயந்தனைப் பார்த்து)
ஐயா; சயந்தன்! அறியாத் தனத்தாலே
தாறுமாறாகத் தகாத வழி செல்ல
எண்ணும் இவரைத் திருத்தி நடத்துங்கள்.

சம்மதம் என்பது போல அரை மனத்துடன் இருவரும் தலையசைக்கிறார்கள்.

மேலாளர்: ஏதும் ஐயம் உண்டா?
இருந்தால்...பதில் தருவோம்.

சயந்தன்: வங்கிக் கணக்கு விபரம் விசாரித்துக்
காகிதங்கள் போட்டிருந்தோம்
காணவில்லை ஓர் பதிலும்.
ஏழு கிழமை இருக்கும், தபால் எழுதி.

மேலாளர்: வங்கிக்கணக்கு விபரம் ஏன் உமக்கு?

சயந்தன்: மோசரடி ஏதேனும் இருந்தால்....

மேலாளர்: இருக்காதே,

சயந்தன்: ஆண்டாண்டு தோறும் உழைத்துழைத்து மாய்ந்தாலும்
சேர்ந்த பழைய கடன் ஒழிய மார்க்கம் இல்லை
மேலும், புதிய கடனும் வளருகிறது.
எவ்வாறோ என்றால் எமக்கு விளங்கவில்லை.

மேலாளர்: கூடைக் கணக்காற் கொடுக்கப்படவுள்ள
வாடகைக் காசும்
வளர்ந்திருக்கும் வட்டிகளும்
சம்பளத்தைத் தின்று குறைத்து விடுகிறது.

பாங்கன்: கூடைக்கு வாடகையா?

மேலாளர்: வாடகை, ஆம்-- கூடைக்கு.
மீன் சுமக்கும் கூடை....

பாங்கன்: அதற்கும் ஒரு வாடகையா?

மேலாளர்: ஏன் திகைக்க வேண்டும்?

சயந்தன்: இது பெரிய வேடிக்கை.

மேலாளர்: வேடிக்கை என்ன இதில்?

பாங்கன்: மீனைச் சுமப்பதற்கு கூடை அவசியம் தான்.

மேலாளர்: கூடை உங்கள் சொத்தில்லை
ஆதலினாற் கூலி அறவிட்டுக் கொள்ளுகிறோம்.

சயந்தன்: எங்கள் பணியால் இராசாங்கம் நன்மை பெற்றால்
அந்த நன்மைக்காக அவர்கள் இலவசமாய்க்
கூடை தந்தால் என்ன?

மேலாளர்: சீ, கூடாத பேச்சிதெல்லாம்.
சும்மா கிடைக்கும் பொருளால், கெடுதி அல்லால்
இம்மியளவும் நலமே கிடையாது.
எந்த நலமும் இலவசமாய் எய்தும் எனில்
வந்த பலனின் மதிப்பும் உணþ‘ம் நாம்.
சோம்பல் பெருகும்; சுகவீனம் மிஞ்சிவிடும்.
தேம்பல் வளரும்; திரேகம் சதை பிடிக்கும்.

சயந்தன்: ஐயா.

மேலாளர்: சயந்தன்!

சயந்தன்: அடுக்கித் தொடருகிறீர்.
கூடைக்கு வாடகையா?

பாங்கன்: கொள்ளை இலாபம் இது.

மேலாளர்: கொள்ளை என்ன கொள்ளை?

பாங்கன்: கொடுமை

மேலாளர்: மடைமை, உங்கள்
உன் மத்தப் போக்கும் உதவாக்கரை நோக்கும்,
மூலதனம் போட்ட முதலோர் அதன் பேறாய்
ஏலும் வகையில் இலாபம் எடுப்பதுதான்
காலங்கள் கண்டு கடந்த பழைய நெறி.
வட்டிக்கடையின் வரும்படியும்
மேல்மாடி
கட்டிவிட்ட பேர்க்குக் கிடைக்கின்ற வாடையும்
கம்பெனிகள் தோறும் எங்கும் காசு பெருகுவதும்
சாதாரணமான சம்பவங்கள்.

இசைக்குழு: (வசனமாக) வட்டிக்கடையின்...சம்பவங்கள்

சயந்தன்: மீன் கூடை....

பாங்கன்: யாருக்குச் சொந்தம்?

மேலாளர்: அதை உமக்கேன்?
ஆர் சொத்தே ஆனாலும் அன்னாரைப் யோயடையும்
வாடகைக் காசு வருடம் தவறாமல்.

சயந்தன்: கூடைக் கணக்காற் கொடுக்கப்படவுள்ள
வாடகைக் காசு, நிலுவை,
கடு வட்டி.......

பாங்கன்: முன்னைப் பழைய கடன்கள்....

சயந்தன்: அதன் வட்டி....

பாங்கன்: உன் தந்தை பட்ட ஒழியாப் பழைய கடன்
பாண்காசு
தண்­ர்......

மேலாளர்: பகிர்வு
பராமரிப்பு
கப்பி எண்ணெய்க் சாசு
கயிற்றுக்குக் கட்டணங்கள்
வேலை அறிக்கை விகிதம் சமர்ப்பிக்கும்
ஆகுறுதிப் பத்திரங்கள் அச்சடிக்கும் கட்டணங்கள்...
வேர்வை ஒற்றிப் போக்கும் வினைக்குரிய வேதனங்கள்
தீர்வை வரிகள், திரள் சுங்கச் சேர்மதிகள், அந்நிய
மாற்றின் அளிப்புரிமைச் சான்றிதழ்கள்,
இவ்வாறாய் எல்லாம் எடுக்கப்படுகின்ற
வாழ்வுச் செலவினங்கள் போ......

பாங்கன்: மனிதர்களைச்
சக்கை பிழிந்தெடுத்த சம்பளத்தில் மிஞ்சியது
முப்பத்து முக்கோடி ரூபா கடன் நிலுவை,

மேலாளர்: அப்பத்தை நாளும் அடைகின்றீர் வாய்க்குள்ளே.

பாங்கன்: அப்பம் என்ன, அப்பம்?
அருகுக் கருகல்- தூள்.
தூசி தும்பு சேர்ந்த துணுக்குப் பழம்பாண்கள்.

மேலாளர்: ஏசி இவ்‘வறெல்லாம் எடுத்தெரிற்து பேசினால்,
தூசி தும்புகூடத் தொடவும் கிடையாது.

சயந்தன்: ஏது, மிரட்டவுமா எண்ணுகிறாய்?

இப்படி சொல்லிக்கொண்டே சயந்தன் மேலாளரை நெருங்கி அவரது கொலரைப் பிடித்து இழுக்கிறான். மேலாளர் அவனது பிடியை விலங்கி அப்பாலே தள்ளுகிறார். சயந்தன் தளர்ந்து பின்வாங்க, மேலாளர் இரண்டடி பின்சென்று துப்பாக்கியைச் சுடும் நிலையிற் பிடித்தவாறு, ஊதுகுழலை எடுத்து ஊதுகிறார். பாங்கன் திகைப்படைகிறான். போர்வீரர்கள் துவக்குகளுடன் வந்து சண்டையை அடக்குகிறார்கள். எல்லாரும் சிலையாகிறார்கள். வெடிப்பிரயோக ஒலிகள் தொடர்ந்து கேட்கின்றன. ஒலிகள் தணிந்து மறைய, சயந்தனும் பாங்கனும் வேலைக்குத் திரும்புகிறார்கள். இரண்டு தடவை மெது‘க விருப்பமின்றி மீன் சுமந்து செல்கின்றனர். வெளியொலி முற்றாக மறைந்ததும், தம்மைக் கட்டியுள்ள சங்கிலியைக் காணுகிறார்கள். தாம் கட்டிவைக்கப்பட்டுள்ளமையை இப்பொழுது தான் முதன்முதலாக அவர்கள் உணருகிறார்கள்.

மேலாளர்: என்ன சயந்தரே, பாங்கரே! ஓகோ!!
தாக்கவா நினைத்தீர்?

சயந்தன்: சங்கிலி....

மேலாளர்: உங்களை
அலங்கரிப்பதற்காய் அமைக்கப்பட்டது.

சயந்தன்: என்றுதான் இதுவரை எண்ணியிருந்தோம்.

பாங்கன்: பொன், பொருள் செல்வ போக்கியம் எனவும்
போற்றி மதித்துப் புகழ்ந்து பாடினோம்
ஆனால் உண்மை அப்படி இல்லையே!

மேலாளர்: ஆமாம், நண்பரே! அது நகை அல்ல.

சயந்தன்: சொத்துச் சுதந்திரம் சுய மதிப்புடையோம்
என்பதை நம்பி நாம் ஏமாத்திடும்படி
பொன்முலாம் பூசிய மாயப் பொறி அது.

இசைக்குழு: (வசனமாக) சொத்துச் சுதந்திரம்....மாயப்பொறி அது

மேலாளர் சயந்தனின் கழுத்திலிருக்கும் பொற்சங்கலியின் பின்புறத்தே மறைவாக உள்ள ஒரு பூட்டையும், அதிலிருந்து தொடர்ந்து செல்லும் ஓர் இரும்புச் சங்கிலியையும் எடுத்து அவர்களுக்குக் காட்டுகிறார்.

மேலாளர்: ஆமாம், உண்மை அதுதான் நண்பரே!
பொன்முலாம் பூசிய இரும்பு விலங்கது

பாங்கன்: இரும்பு விலங்கால் எங்களைக் கட்டினீர்!

மேலாளர்: (சிரித்து) ஓடாதிருக்க உதவும் அல்லவா?

சயந்தன்: ஓடாதிருக்க?

மேலாளர்: உழைத்த சலிப்பிலே
வெறுப்பு மேலிட்டு வெளிக்கிட நினைத்தால்,
தடுத்து நிறுத்தவே சங்கிலி இட்டோம்.

சயந்தன்: மகேந்திரம் என்றீர், மகோன்னதம் என்றீர்
சமரசம் என்றீர், சமதர்மம் என்றீர்
சுதந்திரம் என்றீர், சுகநலம் என்றீர்
மக்கள் ஆட்சியின் மகத்துவம் என்றீர்
உடைமைகள் என்றீர், உரிமைகள் என்றீர்
கடமைகள் என்றீர், கண்ணியம் என்றீர்
சங்கிலி என்றீர், சம்பத்தென்றீர்
சாவி உரிமைத் தனித்துவம் என்றீர்.
இன்னவை எல்லாம் எங்களைப் பிடித்துக்
கட்டி வைத்துக் கடூழிய வேலை
வாங்குதற் பொருட்டாய் வகுத்த திட்டமா?
அடிமைப்படுத்தவா அழகிய சங்கிலி?

பாங்கன்: பொன்முலாம் பூசிய இரும்புச் சங்கிலி?

மேலாளர்: தப்பி ஓடாது தடுப்பதற்காகவே.
(ஆணவச் சிரிப்பு)

சயந்தன்: இனியும் நாங்கள் இவைகளைச் சகியோம்.
(சங்கிலியை உதறுகிறான்)
மனிதரை மனிதராய் மதித்திட அறியா-
உலுத்தரை உதைத்தே ஒழிப்போம். விரைவிலே
வருத்தி உழைக்கும் எம் திருந்திடா வாழ்க்கையை
உறிஞ்சிக் குடித்திடும் உணர்விலா மாக்களின்
கெடுபிடி பொடிபடக் கிளர்ந்து பொங்குவோம்.
ஏன் சுமக்கின்றோம் என்பதை நலன்களும்
நயங்களும் இலாபமும் நாங்கள் அறியோம்.
வேலையின் பலாபலன்-விளைவுகள்-கணக்குகள்
எவை என அறிந்திலோம், யாவுமே மருமம்,
ஒழிப்பு மறைப்புகள் ஒன்றா இரண்டா?
சுழிப்புகள் நெளிப்புகள் வளைப்புகள் அனந்தம்

பாங்கன்: சாவி உரிமை, சங்கிலி, தனித்துவம்...

சயந்தன்: இப்படிச் சிலசில சொற்களைப் பேசியே
கண்ணிலே இதுவரை மண்ணையே தூவினார்.
இனியும் நாங்கள் இவைகளைச் சகியோம்.

மேலாளர்: என்னதாம் செய்வீரோ?

சயந்தன்: எதிர்ப்பகை தொலைப்போம்.

மேலாளர்: பார்ப்போம், பார்ப்போம்.

சயந்தன்: பகிடியா செய்கிறாய்?
அடக்கு முறைகளை உடைத்து நாம் வீசுவோம்
ஒடுக்கும் விதிகளை ஒடித்து நாம் ஊதுவோம்
கெடுக்க நினைப்பவர் கொடுக்குகள் நறுக்....

மேலாளர்: தன் கைக்கோலை விசுக்கிச் சயந்தனை அடக்குகிறார்.

மேலாளர்: வெடுக்கென நாலு வெறுமொழி பேசினாய்.

பெரியதொரு மணி ஆறு தடவை அடிக்கிறது. மேடை இருள்கிறது, மேலாளர் ஊதுகுழலை ஊதுகிறார், போர்வீரர்கள் வருகிறார்கள், சயந்தனும் பாங்கனும் பாறை மறைவில் இருக்கும் ஓர் அரிக்கன் லாம்பை எடுக்கிறார்கள்.

மேலாளர்: நிலைமை கொஞ்சம் கடுமை.
அவர்கள்
உண்மை முழுவதும் உணர்ந்துவிட்டனர்
ஆனபடியால் இரவு முழுவதும்
காவல் அவசியம்
கவனம்.
தெரிந்ததா?

'சரி' என்ற பாவனையில் போர்வீரர்கள் தலையாட்டுகிறார்கள் மேலாளர் போய்விடுகிறார். சயந்தனும் பாங்கனும் லாம்பைக் கொளுத்தி ஒரு பாறையில் வைத்துவிட்டு, வீரவாகு கொடுத்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். போர்வீரர்கள் தமக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். இடையிடையே சயந்தனையும் பாங்கனையும் பார்க்கிறார்கள்; பின்னர், போர்வீரரில் ஒருவன் சயந்தனுக்கும் பாங்கனுக்கும் வீரவாகு தேவர் கொடுத்தது போன்ற ஒரு புத்தகத்தை எடுக்கிறார்கள். அவர்கள் அப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகிறார்கள்.

சயந்தன்: வீரவாகு தேவர் ஓர் மேதை.

பாங்கன் தன் சங்கிலியிலுள்ள பதக்கத்தைப் பிடுங்கி எறிகிறான். சங்கிலியையும் அறுக்க முயல்கிறான். அது அறுபட மறுக்கிறது.

பாங்கன்: அண்ணே! ஏதோ சொன்னியா என்ன?

சயந்தன்: வீரவாகு ஓர் மேதைதான் என்றேன்,

பாங்கன்: ஒவ்வொன்றாக உண்மை வெளிப்படப்
பொய்மைகள் எல்லாம் பொடிப்பொடி ஆகும்.

சயந்தன்: புகையினை விலக்கிப் புறத்தே ஒதுக்கினால்
சுடர்விடும் நெருப்பின் துலக்கமே நிலைக்கும்.
சுடர்விடும் துலக்கம் தூயமெய் காட்டும்.
தூயமெய்க்காட்சி தொழிற்பட வைக்கும்.

இசைக்குழு: (பாட்டாக) "புகையினை....தொழிற்படவைக்கும்"

பாங்கன்: புத்தகம் படிக்கத் தொடங்கிவிட்டாயா-
வீரவாகு தேவர் தந்தது?

சயந்தன்: இல்லை, இல்லை. இனித்தான் படிப்போம்
கூடிப் படிப்போம்
கொள்கை விளக்கமாய்த்
தெள்ளத் தெளிந்த சிறிய நூல் என்றார்.
ஆகையால், அதனை நாம் அணு அணுவாக
விளங்கிப் படிப்பது மிக மிக அவசியம்.

பாங்கன்: சங்கிலிச் சதியைச் சாடுவது எப்படி?

சயந்தன்: வீரவாகு தேவரைக் கேட்போம்
ஏதும் உபாயம் எடுத்துக் கூறுவார்.

பாங்கன்: உண்மையில், அவர் மகா உத்தமர்-சத்தியர்.

சயந்தன்: நான்தான் முதலிலே பிழைபட விளங்கினேன்.

பாங்கன்: பொறாமையே இல்லாப் புண்ணிய சீலர்.

சயந்தன்: பொதுநலம் விரும்பும் பூரணர்-காரியர்

பாங்கன்: அவரது புத்தகம் அருமையாய் இருக்கும்.

சயந்தன்: ஆமாம் படிப்போம்.

பாங்கன்: அவர்களும்...?

சயந்தனும் பாங்கனும் புத்தகம் படிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது போர்வீரர்களும் பேசாப் பாவனையிலே புத்தகம் படிக்கிறார்கள். சயந்தனும் பாங்கனும் திகைப்புடன் பார்த்துச் சிலையாகிறார்கள். "புகையினை விலக்கி.... தொழிற்பட வைக்கும்" என்ற பாட்டு ஒலிக்க, திரை விழுகிறது.

III

சயந்தனும் பாங்கனும் கூடைகளை கவிழ்த்துவிட்டு அவற்றின்மேல் உட்கார்ந்து முழங்கால்களைக் கைகளாற் கட்டியபடி இருக்கிறார்கள். காவலாட்கள் அங்குமிங்கும் அலைந்து காவல் காக்கிறார்கள். எந்த நேரம் குலைந்து குழம்புமோ எனத்தக்க உறுதிப்பாடற்ற அமைதி நிலவுகிறது. இடையிடையே துவக்கு வெடிச் சத்தங்கள் தூரத்திலே கேட்கின்றன. பெருஞ் சனத்திரளின் ஆரவார இரைச்சலும் முழக்கங்களும் இடையிடையே கேட்கின்றன

மேலாளர்: (ஒரு பெரிய காகிதச் சுருளை விரித்து வாசிக்கிறார்)
ஆபத்துக்கால நிலைமை பிரகடனம்-
சட்டத்தை அவமதித்துச் சிலபேர் நாட்டிற்
சதி புரிந்த காரணத்தை ஒட்டி, இன்று
நட்டநசி வேளையிலே மகேந்திரத்தார்
நடவடிக்கை அவசியத்தை உணர்ந்துகொண்டார்.
திட்டமிட்டுக் கலகங்கள் விளைத்தல், கூட்டம்,
தீயிடுதல், உழையாமை, சூழ்ச்சி, சூது
மட்டுமின்றி சங்கிலியின் மான்மியத்தை
மறுத்துரைத்தல்- இவை அனைத்தும் குற்றம் ஆகும்.
சாவி நலம் அவமதிப்போர்
மகேந்திரத்தின்
தனித்துவத்தை அவமதிப்போர் ஆவார்.
மேலும்........

பாங்கன்: (ஏளனமாக) போவிசரா.

சயந்தன்: மேலாளர் இவராம்-
இங்கே
புதிதாக விதி உரைக்க வந்துவீட்டார்

மேலாளர்: காவலர்கள் வாருங்கள்.
உடனே, இந்தக்
கயவர்களைக் கைது செய்வீர்.
கைது செய்வீர்.

சயந்தன்: மேதை இவர்- மகா மேதை!
மகேந்திரத்தின் மேலாளர்

பாங்கன்: கத்தரிக்காய்ச் சாம்பார்ச் சட்டி,

சயந்தன்: தூதுவளங்காய்க் குழம்பு முட்டி என்றும்
சொல்லிவிடலாம் அவருடைய மண்டை ஓட்டை
ஆதி தொட்டே சங்கிலியாற் பிணிக்கப்பட்டோம்.
அதன் பிணைப்பில் உழலுகிறோம்.
அதற்கு மேலும்
ஓதுகிறார், கைது செய்யும்படியாய்,
என்ன
உயர்வான புத்தி ஐயா?
நியூற்றன் தோற்றான்.
பொன் பூசிச் சங்கிலியாற் கட்டிவைத்துப்
புறத்திருந்த இரகசிய விலங்குப் பூட்டை
எங்கேயோ மறைவிடத்தில் ஒளித்து வைத்த
இவர்களினால் என்றென்றும் சிறைப்பட்டோம் நாம்.
பின்பேதோ புதிதாகக் கைது செய்யப்
பெரிதாய் ஓர் கட்டளையை விடுக்கின்றாரே!
அன்பேதும் இல்லார்க்குப்
புத்திகூட
அறுபட்டுப் போம்போலும் காலப் போக்கில்!
சங்கலியை அறுப்பதுதான் இனி நமக்குச்
சரியான ஒரு மார்க்கம்.

பாங்கன்: இரும்பு- பாரம்.
எங்களினால் இயலுமா?

சயந்தன்: இயலாதென்றால்
இப்படியே இருப்பதா?
நல்லது கூத்து!

பாங்கன்: பின், கழன்று தானாக விழுமா, என்ன?

சயந்தன்: பேசி என்ன பயன் கண்டோம்?
செயல்தான் வேண்டும்.

கழுத்தின் பின்புறமாகச் செல்லும் இரும்புச் சங்கிலியைப் பிடித்து இழுக்கிறான், அந்தச் சங்கிலியை வலித்து வலித்து இழுக்க, அது நீண்டு செல்கிறது. முடிவே இல்லாத ஒன்றுபோல விரைவாகவும் ஆறுதலாகவும் மாறி மாறிச் சங்கிலியை இழுக்கிறார்கள். இது பேசாப்பாவனையாக ('மயிம்' ஆக) நடக்கிறது.

பாங்கன்: தங்கமுலாம் பூசியதன் இணைப்பாய், இந்தச்
சனி இரும்புச் சங்கிலி - சீ!

சயந்தன்: இதனைப்பற்றி
முன்பறிந்தோம் அல்லம், அடா!

பாங்கன்: நீண்டு நீண்டு
முடிவின்றித் தொடர்கிறதே!

சயந்தன்: முனையில் ஏதும்
பூட்டிருக்கும்,
அதைத் திறந்து போட்டோம் என்றால்.....
புனைசுருட்டின் முடிவு எமக்குக் கிடைக்கும் தம்பி

வெளியே போயிருந்த காவலாளர்கள் இருவர் திரும்பி வருகிறார்கள். சயந்தனும் பாங்கனும் சங்கிலியை அப்பால் போட்டுவிட்டு வேறு ஏதோ செய்வதுபோலப் பாவனை பண்ணுகிறார்கள். இரண்டுபுறமிருந்தும் வந்த காவலர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்புறமாகப் போய் மறைகிறார்கள்.

சயந்தன்: கேட்டிருக்குமோ எங்கள் பேச்சு?

பாங்கன்: சீச்சீ.

சயந்தன்: கேட்டாலும் அவர் என்ன செய்யக்கூடும்?

பாங்கன்: தோட்டாக்கள் உள்ளவர்கள்; துவக்குக்காரர்.

சயந்தன்: துணிந்துவிட்டோம்
இனி என்ன?
ஆனால் நாங்கள்
தக்க படைக்கலம் இல்லாத் தனித்த பேர்கள்.
தணிந்து சென்று தந்திரத்தால் வெல்லவேணும்.
சிக்கல் இது பெரியதுதான்.
இதை அவிழ்க்கச்
சிறந்த துணை நம் தோழர்.
நாலு நாளாய்
இப்புறமே வர மறந்து போனார்.
இங்கே
இருக்கின்ற நிலைமைகளைப் பார்க்கும்போதில்.....

பாங்கன்: வராமல் அவர் இருக்கிறதும் நன்மைதானே!
வழிமறித்து விடுவார்கள் காவற்காரர்.
பராமுகமாய்ப் போய்விட்டார் என்று சொல்லல்
பாவம், அவர் தகுதிக்கே இழிவு.

சயந்தன்: தம்பி
தராதரங்கள் அறியாது நாக்கின் போக்கிற்
சடாரென்று பழி நினைத்துப் பேசிவிட்டேன்,

சங்கிலியை மீண்டும் வலித்துப் பார்க்கிறான். சயந்தன் நுனி தென்படவில்லை.

சயந்தன்: மறுநுனியைக் கண்டுவிட்டால், மகேந்திரத்தின்
மருமத்தக் கண்டிடலாம். எம்மை ஆட்டும்
தறுதலைகள் யார்? அவர்கள் தகுதி என்ன;
சரிதம் என்ன, நடத்தை என்ன, தன்மை என்ன?
முறை திறம்பிச் செயல் புரியும் நோக்கம் என்ன?
முழுவதையும் அறிந்திடலாம்.
(சங்கிலி வலிப்பதைத் திடீர் என்று நிறுத்துகிறான்.)
ஏ,ஏ, தம்பி!

பாங்கன்: பொறு, பொறு-
ஏன்?
என்ன அண்ணே, புதுக்குழப்பம்?

பாங்கன்: போய் முடியும் இடத்தைப் பார்-

பாங்கன்: சுருங்கை வாசல்.

சயந்தன்: ஆனாலும் சங்கிலியின் இறுதி அந்தம்
அச்சுருங்கை வாசலிலும் அமையவில்லை.
போனாலும் போகும் இது நெடிய தூரம்.
போய் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பும் இல்லை.

பாங்கன்: சீ, இவர்கள் நிற்பதனால் வந்த கேடு.
சிணிச்சனங்கள்-

சயந்தன்: சுருங்கை வழி இருள்சூழ் பாதை
ஆபத்து நிறைந்திருக்கும்
அதற்குட் போனால்.....
அகப்படவும் நேருமடா.
அவதி வேண்டாம்.
நீளம் இந்தச் சங்கிலி.
ஓ!
வளையம் ஏதும்
நெளிந்திருந்தால்.....
உடைந்து பலம் இழிந்திருந்தால்.....

பாங்கன்: எங்களது பாக்கியந்தான்.

சங்கிலி முழு நீளத்தையும் சயந்தனும், பாங்கனும் மறுபடியும் பரிசீலனை செய்து பார்க்கிறார்கள். (இது பேசாப் பாவனையாக நடக்கிறது.) இதுவரை தமது மூலையிலே தூங்கிக்கிடந்த கணக்கர் துணுக்குற்று விழிக்கிறார். பைனோக்குலர் ஊடே சயந்தன் பாங்கன் ஆகியோரின் நடவடிக்கைகளை உற்றுப் பார்க்கிறார். பின்னர் தலையைச் சொறிந்துகொண்டு கடுமையாக ஏதோ யோசிக்கிறார். தம்முடைய பைக்குள் இருக்கும் ஒரு தட்டுச் சாவியை எடுத்து, கடகட என்று தந்தி அடிக்கிறார். தந்திச் செய்தி ஒருசில நிமிடங்களுக்குத் தொடர்கிறது. இப்பொழுது நான் கணக்கரைப் பொருட்படுத்திக் கவனிக்கிறார்கள். சயந்தனும், பாங்கனும்.

சயந்தன்: என்ன, என்ன?
ஏதிவன் ஏதோ புதிதாய்ச் செய்கிறான்?

பாங்கன்: கடதாசியிலே கணக்குகள் எழுதுவோன்.

சயந்தன்: மீன் சுமைக் கணக்குகள்-

பாங்கன்: வெகு சோம்பேறி
- தூங்குமூஞ்சி

சயந்தன்: தூக்குக் கூடையுள்
பலவித பொருட்களைப் பதுக்கி வைப்பவன்.
ஆபத்தில்லா அசட்டுப்பயல் என
இதுவரை எண்ணி இருந்தோம்.
இவனோ
கட கட என்று ஏன் தந்தி அடிக்கிறான்?
பட பட என்று பரபரப்பு அடைகிறான்.
புதியதே அல்லவோ இதுவித போக்கு?

பாங்கன்: சதியில் ஒர் அம்சமாய் இருக்குமோ, இதுவும்?

சயந்தன்: (சிறிது யோசித்துவிட்டு)
விடுதலை கிடைத்த பிறகுதான் நிம்மதி.

மேலாளர் வருகிறார். ஊதுகுழலை ஊதுகிறார். சயந்தனும், பாங்கனும் குழப்பம் அடையவில்லை. பாங்கனை அணுகி அவனைக் குனியுமாறு பலவந்தம் செய்கிறார், மேலாளர். சயந்தன் மேலாளரைத் தாக்குவதற்குச் செல்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்க்கிறார்கள். இராசாக்கள் இருவரும் ஏவலருடன் வருகிறார்கள். நடப்பதைக் கண்ட அவர்கள் சிறிது தயங்குகிறார்கள். மேலாளர் வேர்வை ஒற்றும் துண்டையும் கொண்டு பாங்கனிடம் போகிறார். அவன் உடம்பில் வேர்வை இல்லாமையைக் கண்டு கோபங்கொண்டு அவன் தலையிலே குண்டாந்தடியால் அடிக்கிறார். பாங்கன் விழுகிறான். விழும்போது மேலாளரின் காலைப் பிடித்து இழுக்கிறான். அவர் விழுகிறார். (சிலையாகிறார்கள்) மேலாளர் மேடையிற் கிடக்கிறார். பாங்கன் அவரைத் தாக்கம் நிலையில் உள்ளான். சயந்தன் முதலாவது இராசாவை அணுகி அவரைத் தாக்குவது போன்ற பாவனை- முதலாம் இராசா பின்வாங்கும் பாவனை- (அவர்கள் சிலையாகிறார்கள்.) இரண்டாம் இராசா காவலாளர்களைக் கூப்பிடுகிறார். (சிலையாகிறார்கள்) ஒரு போர்வீரன் முன்னோக்கிச் சென்று சயந்தனைத் துவக்குச் சனியனாலே தாக்கம் பாவனை- போர்வீரன் பாங்கனைத் தாக்கச் செல்லல்-சிலையாகிறார்கள்)

இதற்கிடையில் ஏவலன் செய்ய வேண்டியவை-
சயந்தன் முதலாம் இராசாவைத் தாக்க செல்லும்போது கையிலுள்ள தட்டம் முதலியவற்றைப் போட்டுவிட்டு பயத்துடன் பின்வாங்குதல்- பின்னர் துப்பாக்கிக்குண்டு பட்டவனைப் போல பதைத்து விழுந்து மேடையிற் கிடத்தல்.

போர்க்கள ஒலிகள் சில விநாடிகளுக்குக் கேட்கின்றன. முதலாம் இராசா சிலைநிலையைக் குலைத்து. நொண்டி நொண்டி இடப்புறஞ் சென்று வெளியேறுகிறார் இரண்டாம் இராசா அவரைத் தொடர்கிறார். மேலாளர் எழுந்து நொண்டி நொண்டி இடப்புறஞ்சென்று வெளியேறுகிறார். முதலாம் போர்வீரனும் இரண்டாம் போர்வீரனும் சிலைநிலையைக் குலைத்து இப்பொழுதும் சுடுவதுபோன்ற பாவனையுடன் ஏவலனை அணுகிறார்கள். அவனைத் தூக்கி 'ஸ்ட்ரெச்சரில்' வைத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். இப்பொழுது ஒலிகள் மங்கி மறைகின்றன. சயந்தனும் பாங்கனும் சிலைநிலையைக் குறித்து உடல்நோ புலப்படுமாறு அசைகிறார்கள்.

பாங்கன்: அண்ணே, அதோ பார்.

சயந்தன்: ஆமடா, புதுமை!

மெய்க்காப்பாளர் வெள்ளைக்கொடி ஏந்தி வர, மேலாளர் ஒரு பத்திரமடலைப் பக்குவமாக ஏந்தியபடி வருகிறார்.

சயந்தன்: வெள்ளைக் கொடி!
- இது விந்தையாய் உள்ளது.

மேலாளர் நேரே சென்று சயந்தனுடனும் பாங்கனுடனும் கைகுலுக்குகிறார். பிறகு, பத்திரத்தை அவர்களிடம் கொடுக்கிறார்.

மேலாளர்: நெருக்கடி தீர ஓர் நியாயமான
சமரச முடிவு
சச்சரவெல்லாம்
சாந்தமாகத் தீர்க்கத்தக்க ஓர்
புதிய ஏற்பாடு.

சயந்தன்: புதிய ஏற்பாடு?

மேலாளர்: மகேந்திரபுரியின் சார்பிலே
ஆறுவோர்
நெகிழ்ந்து கொடுக்கும் நேசக்கரம் இது.
பழையவை எல்லாம் மறக்கலாம் இநி நாம்.
தொழிலவர் உரிமையின் தூய்மையை இனிமேல்
வீர மகேந்திரம் மிகவும் மதிக்கும்.

பாங்கன்: அடக்கு முறை.....

மேலாளர்: இனி அணுகவும் விடோம் நாம்.

பாங்கன்: கண்­ர்ப்புகை....

மேலாளர்: இனி எண்ணியும் பாரோம்.
முன்னைய தவறுகள் முழுவதும் பொறுத்தே
மன்னிக்கும்படி மகேந்திரம் விடுத்த
வேண்டுகோள்-
இதோ. நம் விநய சமர்ப்பணம்.

பாங்கன்: சீ, சி... உங்கள் சிறு சிறு சலுகைகள்.....
சயந்தன் கண்ணைக் காட்டுகிறான். பாங்கன் அதைவிளக்கிக் கொண்டு பேச்சை நிறுத்துகிறான்.

சயந்தன்: (பாத்திரத்தை மேலாளரிடம் திருப்பிக் கொடுத்து) எங்கே, இதனை வாசுயும் பார்க்கலாம்.

மேலாளர்: சமாதான உடன்படிக்கை-
முதலாம் பாகம்-
சமரசமே
பிரச்சினைகள் தீர்ந்து
மேலாம்
அமைதியினை நிலைநாட்டத்தக்க
நல்ல
அரிய முறை என்பதனை ஒப்புகின்றோம்.
சமயத்துக்கிசைந்தபடி கூடிப்பேடி
சகலதையும் நாம் தீர்ப்போம்.
-இரண்டாம் பாகம்-
சுமை சுமக்கும் தொழிலவர்க்கு
மூன்று நேரம்
சுவையான உணவளிக்க ஒப்புகின்றோம்.
பகற்பொழுதில் நாலு தரம் பானம் தந்து
பண்பாட்டின் வழி நடப்போம்.
-மூன்றாம் பாகம்-
துப்பாக்கி, சுத்தியல்கள், வெட்டிரும்பு
தோட்டாக்கள், அம்பு வில்லு, பொறித்துவக்கு,
சப்பாத்துக் கால் துவக்குச் சனியன், குண்டு.
தடிக்கம்பு முதலான ஆயுதங்கள்
இப்பாரில் உள்ளவைகள் எவையும்
ஆள்வோர்.
இனித் தொடவே மாட்டார்கள்
உறுதி செய்தோம்.
அப்படியே தொழிலவரும் அமைந்து
தீய
ஆயுதத்தை முற்றாக விலக்கல் வேண்டும்.

சயந்தனும், பாங்கனும் கண்களாற் பேசி ஏதோ ஒரு முடிவிற்கு வருகிறார்கள். கைச்சாத்திடுவற்காக மேலாளரை நோக்கி முன்னேறுகிறார்கள்.

மேலாளர்: இனியும உண்டே ஒரு பாகம்
- நாலாம் பாகம்-
இவைகளுக்குக் கைமாறாய்
சுமப்போர் எல்லாம்.
பனி வெயில் நாள் புறநீங்கலாக
நூறு
பறி நிரம்பும் மீனேனும்
நாளொன்றுக்கு
வினை புரிந்து லொறியேற்றி விடுதல் வேண்டும்.
மேலும், இனி இலாபத்தில் மூன்றுவீதம்
தனியாக ஒதுக்கி, அதைத் தொழிலாளர்க்குத்
தருவதற்கும் சம்மதித்தோம்.
- ஆட்சியாளர்

சயந்தன்: ஓரளவு திருப்திகரமாக
இந்த
உடன்படிக்கை உள்ளமையால்
வேண்டும்போதில்
மீள இதை ஆய்வதற்கும் இடமுண்டெனறால்
விரும்பி இதிற் கைச்சாத்தை இடுவோம் நாங்கள்.

மேலாளர்: ஆளுபவர் சார்பில் இதை விளம்புகின்றேன்.
அந்த உங்கள் உரிமையையும் தருவோம்.

சயந்தன்: பேனை எங்கே? கொடும் ஐயா!

மேலாளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பேனையைக் கையளிக்கிறார். பத்திரத்தையும் கொடுக்கிறார்.

சயந்தன்: நன்றி.

பாங்கன: நன்றி.

கைச்சாத்திட்ட பத்திரத்தை மேலாளரிடம் திருப்பிக் கொடுக்கிறார்கள்.

மேலாளர்: பெரிய உபகாரம் ஐயா!

மேலாளர் கைலேஞ்சியை எடுத்து முகம் துடைக்கிறார். சயந்தன், பாங்கன் ஆகியோருடன் கைகுலுக்குகிறார்.

மேலாளர்: நன்றி, நன்றி.

பாங்கன்: ஆபத்துக் கால நிலைமைப் பிரகடனம்?

பாங்கன்: இப்போதே ரத்துச் செய்கிறேன் இத்தாலே.
காவல் இனிமேல் அவசியமே இல்லை இங்கே.
மாமூல் நிலைமை வழக்கம்போல் வந்ததன்றோ?

காவலாளர்களுக்கு மேலாளர் சைகை காட்டுகிறார், அவர்கள் வெளியேறுகிறார்கள்.

சயந்தன்: (கணக்கரைக் காட்டி)
அங்கே இருப்பவர் ஆர்?

மேலாளர்: அவர் கணக்கர்
எப்போதும்போல் இருக்கிறார்

சயந்தன்: இல்லை
கட கட என்று தந்தி ஏன் அடிக்கிறார்?
அவரை உடனே அகற்றுதல் வேண்டும்.

மேலாளர்: தீங்கில்லாதவர்-தூங்கற் பேர்வழி
மீன்சுமைக் கணக்கை விடாமற் பதிபவர்.
கடமையைச் செய்கிறார்
அவரை ஏன் வெறுக்கிறீர்?

சயந்தன்: அவர் செயல் மருமம் நிறைந்ததாய் உள்ளது.
நாம் அவர் நேர்மையை நம்பவே இல்லை.

பாங்கன்: அவரை உடனே அகற்றுதல் வேண்டும்.

மேலாளர்: அமைதியின் பொருட்டாய் அதை நாம் செய்கிறோம்.
உண்மையைச் சொன்னால்
உங்கள் வேண்டுகோள்
அநீதியானதே ஆயினும்
ஆட்சியின்
அமைதியின் பொருட்டாய் அதை நாம் செய்கிறோம்
கணக்கரை அப்புறப்படுத்துவோம்
கணக்கர்!

கணக்கரை வெளியேறும்படி மேலாளர் சைகை காட்ட அவர் தம் உபகரணங்களுடன் வெளியேறுகிறார். சயந்தனும், பாங்கனும் சோம்பல் முறிக்கிறார்கள். மேலாளர் ஒருசில கணங்கள் இருவரையும் உற்றுப் பார்க்கிறார். அவர்கள் எதையோ யோசித்தபடி நிற்கிறார்கள். மேலாளர் கைகளை விரித்து, தம் தோள்களைக் குலுக்கி, 'என்ன நடக்குமோ' என்ற பாவனையில் சைகை காட்டிவிட்டுப் போகிறார். வெளியிலிருந்து பெருஞ் சன இரைச்சலின் அலை ஒன்று கேட்டு மங்குகிறது.

பாங்கன்: உடன்படிக்கையில் ஏன் அண்ணே,
ஒப்பத்தைப் போடச் சொன்னாய்?
கடும்பிடி பிடித்திருந்தால்......

சயந்தன்: கயவர்கள், முரடர்-தங்கள்
திடம்படு திமிரால் எம்மைத்
திக்குமுக்காடச் செய்வார்
ஒடுங்கி நாம் இறங்கிப் போனோம்;
ஒரு சிறு விரகு-
ஆம், உத்தி,
பகைவரின் பலத்தை ஒட்டி,
படைகளின் அடலை ஒட்டி
தகும் ஒரு வேளை மட்டு ம
தரிப்பதே புத்தி ஆகும்
குகைவழிச் சுருங்கைப் பாதைக்
குன்றுடைக் கோட்டை மர்மம்
மிக மிக நுட்பமான வினைத்திறன்.

பாங்கன்: ஆமாம், அண்ணே!

சயந்தன்: ஆதலால், எதிரி சூழ்ச்சி
அறிவதும்,
அசுரர் வீம்பை
மோதியே தகர்த்து வீழ்த்தி
முடிப்பதும்-
இவற்றிற்கெல்லாம்
தோதுள்ள-தக்கதான-
தொழிற்பட உரியதான
போதொன்றும் உள்ளதன்றோ?
புரிந்ததா?

பாங்கன்: உண்மை, உண்மை
பொருத்தமாம் அந்த நல்ல
பொழுதினைக் காத்து நாங்கள்
இருப்பதே புத்தி ஆகும்
இதனாலா கைச்சாத்திட்டோம்?

சயந்தன்: பருப்பதப் பாறைக் குன்றின்
படுகுழி வழியே செல்லு ம
துருப்பட்ட விலங்குப்பூட்டுத்
தொடரினை ஆய்தல் வேண்டும்.

பாங்கன்: அதன் மறுநுனி வரைக்கும்
ஆர் செல்ல வல்லார், அண்ணே?
சுருங்கையின் தூர நீளம்
சொற்பமாய் இருக்காதன்றோ?

சயந்தன்: வதங்கி நீ சோர வேண்டாம்.
வலியதோர் கருவி வேண்டும்.
புதன் கிழமைக்கு முன்னால்
தோழரும் அதைத்தான் சொன்னார்.
இரும்பையும் வெட்டத்தக்க
ஏதும் ஓர் கருவி வேண்டும்.

பாங்கன்: விரும்பிடத் தக்க அந்த
விற்பனக் கருவி நம்பால்
வரும்படி செய்ய வேண்டும்.

சயந்தன்: வாய்ப்புடன் உபாயம் வேண்டும்,
துரும்படா இரும்பும்
நல்ல
துடிப்புள்ள இளையோருக்கு
சங்கிலி அறுக்க வேண்டும்
சஞ்சலம் தவிர்க்க வேண்டும்
எங்களின் பிணிப்பை எல்லாம்
எதிர்த்து நாம் துணிக்க வேண்டும்
மங்கலம் பிறக்கும்
பின்னர்
வையகம் சிறக்கும்
நம்மை
எங்கணும் தலை நிமிர்த்தும்
இன்பமே புவி நிறைக்கும்
வஞ்சனை இல்லாராக
மக்கள் தம் தொழிலால் வாழ்வர்
கொஞ்சமும் கொள்ளை லாபக்
குறுமதி இல்லாதாகும்
பஞ்சமும் பிணியும் போகும்
பசியுடன் கபடம் சாகும்.
எஞ்சிய சுபிட்ச யாவும்
எமையே அணையும், தம்பி
வறுமையால் எவரும் சாகார்.
மாடியின் அருகே எல்லாம்
சிறுசிறு குடிகள்
உக்கிச்
சிதம்பிடும் நிலைமை மாறும்.
அறிவொளி பரவும்
எங்கும்
அமைதியும் அறமும் தங்கும்.
குறுகிய மதியோர் செய்யும்
குழப்பங்கள் ஒழிந்து போகும்.

மின்மணி அடிக்கத் தொடங்கித் திடீரென்றி நின்று விடுகிறது பின்னும் இரண்டு செக்கன்களுக்கு அடித்துவிட்டுச் சடுதியாக நிற்கிறது. இது வழக்கத்துக்கு மாறான நடைமுறை. இரண்டு உணவுப் பெட்டிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு பெட்டிமட்டும் இறங்குகிறது. இதுவும் வழக்கத்துக்கு மாறான நடைமுறை தான்.

சயந்தன்: என்னடா, தம்பி?

பாங்கன்: (வியந்து) பெட்டி!
இது மிகப்புதுமை

சயந்தன்: ஆமாம்,
வேளையோ ஆகவில்லை
உணவொன்று வருவதேனோ?

பெட்டியை இறங்கி உணவுச் சிமிழை எடுத்து பார்க்கிறான். அதற்குள்ளே பாண் இல்லை. ஒரு வெட்டிரும்பும் சுத்தியலும் உள்ளதாம். அதை எடுத்துப் பாங்கனுக்குக் காட்டுகிறான்,இருவருக்கும் தலைகால் புரியாத ஆனந்தம் உண்டாகிறது.

சயந்தன்: வெட்டிரும்பும், சுத்தியலும்!

பாங்கன்: வெற்றியடா, வெற்றி!
திட்டம் வகுத்துச் செயலை நிறைவேற்றியுள்ளார்
தோழர்
அவருடைய தூய மதித்திறத்தால்
வாழ்வு பெற்றுவிட்டோம்-வலிமை பெற்றுவிட்டோம் நாம்.

இப்பொழுது பெட்டி விரைவாக மேல் ஏறுகிறது. இருவரும் அதைப் பார்க்கிறார்கள்.

சயந்தன்: ஆழ உழுது பயிரை விளைப்பது போல்
ஆர்வம் விளைத்தெம்மை ஆளாக்கி விட்ட அவர்
தீரர்.

அவருடைய சிந்தனைகள் உண்மையிலே
கூரியவை.
அன்றொருநாட் கொண்டு வந்து தந்த அந்த
நூலில் இருந்த நுணுக்கக் கருத்துகளால்
அல்லவோ எங்கள் அறிவு விழிப்படைந்து
மெல்ல மெல்ல இன்றிந்த வெற்றி விளிம்புவரை
முன்னேறி வந்துளது!
(வெட்டிரும்பையும், சுத்தியலையும் கண்களோடு ஒற்றி ஆசையுடன் வருடி மகிழ்கிறான்)
என் மூடத்தனத்தைப் பார்!
பொன் தம்பி நேரம்.
(சங்கலியில் வெட்டிரும்பை வைத்துச் சுத்தியலை ஓங்குகிறான்)

பாங்கன்: பொடிப்பொடியாய்ப் போகட்டு ம.

கத்தியால் இரண்டு அடி அடித்துவிட்டான். மூன்றாவது அடியை அடிக்க ஓங்கும்போது போர்வீரன் ஒருவன் ஓடி வருகிறான். அபாயச் சங்குகளும், ஊதுகுழல் ஓலங்களும் ஒலிக்கின்றன. ஓடிவந்த போர்வீரன் சயந்தனுக்குப் பின்புறமாக வந்து சுத்தியலை ஓங்கி வைத்திருக்கும் கையைப் பிடிக்கிறான். கணக்கரும் ஓடோடி நின்று நடப்பவற்றை அவதானிக்கிறார்.

சயந்தன்: விட்டு விடு

பாங்கன்: போ

பாங்கன் போர்வீரனைச் சுத்தியலால் அடிக்க அவன் அலறி விழுந்து அரக்கி அரக்கி வெளியேறுகிறான். நாலு பேரும் சண்டை பிடிக்கிறார்கள். இடையிடையே சயந்தனும் பாங்கனும் சங்கிலியை வெட்டும் வேலையைத் தொடர்கிறார்கள். இறுதியிலே சயந்தனுடைய சங்கிலி அறுகிறது. அறும்போது, பெருங்கட்டிடங்கள் தகர்ந்து விழுவது போன்ற பேரொலி எழுகிறது. சனஇரைச்சல் கேட்கிறது. மேடையில் உள்ளவர்கள் எல்லாரும் சிலையாக நிற்கிறார்கள். சில விநாடிகளுக்கு சயந்தன் அறுந்த சங்கிலியை எடுத்துக் கையிலே வைத்துக்கொண்டு அதைப் பார்த்தவாறு நிற்கிறான். கண்டாமணி ஒன்று ஆறுதலாக- மங்களகரமாக ஒலிக்கிறது.

வீரவாகு: (வந்துகொண்டே)
வெட்டிவிட்டாயா விலங்கை?
அட, தம்பி!
தொட்டுவிட்டாயா, சுதந்திரச் செந்தாரகையை?
முற்று முழுதாய் - முறையாக வென்றுவிட்டீர்.
இத்தனை காலம் இருந்தீர் - தகும் சமயம்
பார்த்துப் பொறுத்தீர்.
பழைய நிலைமைகளை
மாற்ற உரிய வளமான வேளை வந்து
தோற்றும் வரைக்கும் தொடர்ந்து பொறுத்திருந்தீர்.
காலம் கனிந்து வந்த காரணத்தால்,
எங்கெங்கும்
மேலும் எழுச்சி விருத்தி அடைந்து வந்து
மூலை முடுக்கெல்லாம் முற்போக்கு வேட்கை என்ற
தீ பற்றிவிட்ட சிறப்பான சூழ்நிலையில்,
சங்கிலியை நீங்கள் தகர்த்துப் பொடி செய்தீர்,
பங்கம் அடைந்த பழைய அதிகாரம்
மண்ணோடு மண்ணாக மட்கி
தம்பீ, சயந்தன்!

சயந்தன்: (தலை வணங்கி) உங்களுக்கெம்
நன்றி நவின்றோம்.

சயந்தன் பாங்கனைப் பார்க்கிறான். அவன் இன்னும் கட்டுப்பட்ட நிலையில் இருப்பது சயந்தனுடைய கவனத்தில் உறைக்கிறது. பாங்கனின் கையிலுள்ள சுத்தியலை வாங்குகிறான். பாங்கன் வெட்டிரும்பைச் சங்கிலியில் வைக்க, சயந்தன் சுத்தியலால் ஓங்கி அடிக்கிறான். வீரவாகுதேவர் பார்த்துக்கொண்டு நிற்கிறார், பாங்கன் சங்கிலியை அறுப்பதற்காக இழுக்கும்பொழுது மேலாளர் ஓடிவந்து துப்பாக்கியை நீட்டுகிறார்.

மேலாளர்: நகராதீர்!

மேலாளர் ஊது குழலை ஊதுகிறார். இரண்டு போர்வீரர்கள் துப்பாக்கியைச் சயந்தன் பாங்கம் பக்கம் நீட்டியபடி வருகிறார்கள். இவர்களைக் கைது செய்யும்படி மேலாளர் கட்டளை இடுகிறார்- சைகை மூலம். ஆனால் அவர்கள் மேலாளரைப் பிடித்துக்கொண்டு இடப்புறமாக வெளியேறுகிறார்கள். பின்னர் பாங்கள் சங்கிலியைக் கழற்றி விடுவித்துக்கொள்கிறான். வீரவாகுதேவர் சயந்தனின் முதுகிலே தட்டிக்கொள்கிறான். முதலாம் இராசாவும் இரண்டாம் இராசாவும் மேலாளரும் இரண்டு போர்வீரர்களின் மேற்பார்வையின்கீழ் இடப்புறத்திலிருந்து பிரவேசிக்கிறார்கள். சயந்தனும், பாங்கனும், வீரவாகு தேவரும் அவர்களைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.

வீரவாகு: ஓ, நீரா? (ஏளனச் சிரிப்பு)

இராசாக்களும் மேலாளரும் காவல் வீரர்களும் வலப்புறஞ் சென்று வெளியேறுகிறார்கள்.

வீரவாகு: உங்கள் பகைவர் ஒழிந்தார்.

சயந்தன்: விடுபட்டோம்.
எம்மை ஒடுக்கி இதுநாள்வரை நமது
பொன்போல் உழைப்பைப் புகுந்து திருடிப்போய்
உல்லாச வாழ்வில் உறங்கிக் கிடந்தவர்கள்....

வீரவாகு: வீழ்ந்தார்கள்.

சயந்தன் தன் கைகளை விரித்துப் பார்க்கிறான். அவை இரத்தத்தால் நனைந்திருக்கின்றன.

பாங்கன்: ஐயோ இரத்தம்!

வீரவாகு: அவர் அசுரர்.

பாங்கன்: மெய்தான்! இருந்தாலும்... மேலவரே, யாருக்கும்
இன்னா புரிதல் இழுக்கென்று கூறிடுவார்
முன்னைப் பழைய முனிவர் வழிவந்தோர்
அன்பு வழியே அதிகம் சிறந்த வழி;
வன்பு வழியோ வருத்தம் தரும் வழியாம்
ஆகையினால், குத்தல், அடித்தல், வெடி வைத்தல்
நோக்கும்படியாக நுள்ளல், உடர் அரிதல்
போல உள்ள எல்லாமே பொல்லாங்காம்.
சயந்தனை நோக்கி) உன் கையிற்
செங்குருதி தோய்ந்து சிவந்து கிடக்கிறதே
வெங்கொடுமை, வெங்கொடுமை!

வீரவாகு: வேண்டாத வேளையிலே
இன்கருணை நோக்கேன்?

பாங்கன்: எழுச்சித் துடிப்பெமது
கண்ணை மறைத்துவிடக் கையின் மிருக பலம்
பாவித்து விட்டோம்- பரிவை மறந்துவிட்டோம்.
புண்ணிய பாவப் பொறுப்பை மறந்துவிட்டோம்.

சயந்தன்: கையில் இரத்தக்கறை - ஆனால்.....

வீரவாகு: தண்­ரால்,
சோப்பிட்டலம்பித் துவாயால் துடைத்துவிடு.

கைக்குட்டைக்குள்ளிருந்து சோப்பும் துவாயும் தூக்கிச் செம்பிலே தண்­ரும் எடுத்துப் பாங்கனிடம் கொடுக்கிறார். பாங்கன் தயங்கி நிற்கிறான். வீரவாகுதேவரின் கண்சாடையை விளங்கிக்கொண்டு செம்பு நீரை ஊற்ற, சயந்தன் சோப்பைப் போட்டுக் கழுவுகிறான். பின்னர் துவாயினாலே கைகளைத் துடைக்கிறான்.

பாங்கன்: செம்பொன்று கொண்ட சிறிதளவு தண்­ரால்
அந்த இரத்தக்கறை அகன்று போயிற்றா?
உண்மையிலே எல்லா உலகப் பெருங்கடலின்
தண்­ரும் சேர்ந்தாலும், சண்டாள பாதகத்தைப்
போக்கிவிடுவதற்குப் போதா என நினைத்தேன்
- நம்பினேன் அவ்வாறு.

வீரவாகு: நல்ல கருமங்கள்
பற்றிப் படித்துள்ளாய் பாலர் வகுப்புகளில்!
அத்தருமம் எல்லாம் அனுபவத்தில் எவ்வறாய்
வைத்திவ் வுலகில் வழங்கப்படும் என்ற
சத்தியத்தை மட்டும் சரியாய் உணரவில்லை.
செய்யும் செயல்களது தீமை நன்மைப் பண்பெல்லாம்
உள்நின்றியங்கும் உணர்வுகளின் தன்மைகளால்
நிர்ணயிக்க வேண்டியவை.
நீதி அநீதிகளின்
வண்ணம் உணர்ந்தால், வரையறைகள் கண்கூடாய்-
தெள்ளத் தெளிவாய்த் தெரியும்.
அநியாயம்
வேரோடொழிக்க விழையும் சமயத்தில்
ஆரோ சில பேர் அழிக்கப்படுவார்கள்.
கூராயுதத்தாலே கொல்லப்படுவார்கள்
வேலாயுதம் என்றால் வெட்டித் துளைத்துத்தான்
நீதியினை நாட்டும்.
நிலைத்த அருள் வழங்கும்.
போரே இதுதான்- புதுமை இதில் ஒன்றில்லை.
ஆராய்ந்து பார்த்தால், அசுரர் அழிவுக்காய்
நெஞ்சம் இரங்குவது நீதி விரோதமடா.

பாங்கன்: கொஞ்சம் இளகிக் குலைந்துவிட்டேன்

வீரவாகு: சீ, அதுவோ
போலி இரக்கம்.

சயந்தன் சோப்பையும் துவாயையும் தண்­ர்ச் செம்பையும் வீரவாக தேவரிடம் கொடுக்கிறார்ன். இரண்டு போர்வீரர்கள் வந்து சயந்தன் பாங்கன் ஆகியோரின் முதுகிலே தட்டுகிறார்கள். கணக்கரும் வந்து தயங்கித் தயங்கி நின்றபிறகு கடைசியாகக் கையை நீட்டுகிறார். சயந்தனும், கணக்கரும், பாங்கனும் கை குலுக்கிக்கொள்கிறார்கள்.

சயந்தன்: புரட்டர் தொலைந்துவிட்டார்.
நாங்கள் உலகை நடத்துவோம்
எல்லார்க்கும்
வேண்டும் பொருளை விளைவித்துப் பங்கிடுவோம்
யாண்டும் திருடி நலத்தைச் சுருட்டும் நிலை
சற்றும் இனிமேல் தலைகாட்டச் சம்மதியோம்.
வெற்றிக்கினிமேல் விழா எடுப்போம் வாருங்கள்.
வாருங்கள் எல்லோரும் - தாருங்கள் நும் பணியை
எங்கள் உலகம்- இதில் நாமே மேலாளர்
எங்கள் உலகம் - இனி நாமே மேலாளர்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதிய கூடை கொடுபடுகிறது. அவர்கள் சுயாதீனமாக - ஆட்டமும் பாட்டும் வேடிக்கையும். விளையாட்டும் வேலையும் உண்டாட்டும் களியாட்டுமாகக் காலத்தை கழிக்கிறார்கள். இவைகளைப் புலப்படுத்தும் நடன அசைவுகள் நடந்துகொண்டிருக்க, பின்வரும் இறுதிப் பாடலை இசைக்குழு பாடுகிறது.

இசைக்குழு: (பாட்டு)
உலகொன்று குலமொன்று தம்பி
பலனுண்டு பலனுண்டு தம்பி
நம்மைப்
பலிகொண்ட சதி இன்று பல துண்டு தம்பி.
கலைகொண்டு களியுங்கள் தம்பி
சூதர்
கபடங்கள் தொலையுங்கள் சுகியுங்கள் தம்பி
உலகொன்று குலமொன்று தம்பி
இனி
உழையுங்கள் களையுங்கள் பழகுங்கள் நம்பி
உலகொன்று குலமொன்று தம்பி.........

- திரை -

முற்றும்



சிவானந்தனின்

காலம் சிவக்கிறது

முதல் மேடையேற்றம்

காலம்: 1975-03-22

இடம் : கொழும்பு ஹவ்லொக் நகர் லும்பினி அரங்கு தயாரிப்பு.

நடிகர்:

எடுத்துரைஞர் : க.உதயகுமாரன்
இராஜ் அனந்த்
கு.செவ்வேள்
நா. நத்தகுமார்
இராசம்மா: இரா.மோகன்
வீரவாகு: தி.முரளீதரன்
முத்தர்: கோ.கிருஷ்ணகுமார்
சுவாமிநாத முதலி: ராஜ்குமார்
புஞ்சிபண்டா: ந.சச்சிதானந்தம்
சோமாவதி : சு.முரளீதரன்
ஜெயபாலன்: ச.ராஜேந்திரன்
அரியரத்தின முதலி: ப.சிவகுமாரன்
விவசாயிகள்: வே.ஸ்ரீராஜ்மோகன்
பெ. பத்மநாதன்
இ.சிவச்சந்திரன்
சி.ராம் சுப்பிரமணியம்
மு.புவனேந்திரன்

காலம் சிவக்கிறது.

I

[இறவல் உக்கற் கூரையுடன் கிழடு தட்டிய ஒரு சிறிய கொட்டில்தான் வீரவாகுவின் வீடு. பணம் மட்டை வரிச்சலைச் சுவராகக் கொண்ட குடிலே அவர்களது அடுப்படி. வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலே பாசி பிடித்துக் காய்ந்து பொருக்கு வெடித்துக் காணப்படும் பிள்ளையார் கோவிலுக்கான ஒற்றையடிப் பாதை, அடர்ந்து வளர்ந்த மராமரங்களுக்கூடாகக் கோயிலடிக்குச் செல்கிறது. வீட்டைச் சுற்றியுள்ள சிறிதளவு நிலப் பரப்பிலே காய்கறித் தோட்டம் மதாளித்து வளர்ந்துள்ளது. ஒட்டி உலர்ந்த மேனியுடன் நரை திரை கண்ட முத்தர்க் கிழவன் கோவணத்துண்டு சகிதம், ஒரு கைப்பட்டையாலே கிடங்கில் வந்து தேங்கும் இறைப்பு நீரை அள்ளி அள்ளி மிளகாய்க் கன்றுகளுக்கு ஊற்றுகிறார். இடையிடையே மண்வெட்டி வேலையும் நடக்கிறது. உள்வளையல் முத்தரின் பூஞ்சல் நரைமயிர் ஒரு சிறு உத்தை உருண்டைத் தோற்றத்தோடு கடுக்கனும் ஆடுகின்றன. முதலியார் சுவாமிநாதரின் பற்றைக் காணியைக் காய்கறித் தோட்டமாக்கிப் பயனை முதலியாரிடம் சேர்ப்பிப்பதிலேயே வாழ்க்கை முழுவதையும் செலவு செய்கிறார் அவர். முதல்நாளே வீட்டுக்கு மருமகளாய் வந்த இராசம்மா அள்ளிச் சொருகிய பெரிய குடுமியும் தாழம்பூச் சேலையும் வெள்ளிக் காப்புமாகக் குடிசை ஓரத்திலே சூட்டடுப்பு மூட்டி அப்பம் சுட்டுக்கொண்டிருக்கிறாள். தென்னோலையை இடுங்கி இடுங்கி அடுப்புக்குள்ளே ஓட்டுவதும் ஊதுவதும், அப்ப மாவைத் துளாவித் துளாவி அகப்பையால் அள்ளி ஊற்றிச் சட்டியை இரு கைகளாலும் பிடித்துச் சுழற்றிச் சிலாவி அடுப்பேற்றுவதும், வெந்ததும் எடுத்துப் பெட்டியில் அடுக்குவதும், இடையிடையே எண்ணிக் கணக்குப் பார்ப்பதுமாய் இருக்கிறாள். அடிக்கொருதரம் காகம் கலைப்பதும், பறட்டை நாயைத் துரத்துவதும் அவளுக்கு எரிச்சலை மூட்டுகிறது. இளமையிற் கிழண்டிய கோலத்தோடு முப்பது வயதுடைய முத்தரின் ஒரே மகன் வீரவாகு வெகு தொலைவிலே உள்ள கிணற்றடியிலிருந்து தண்­ர் இறைத்துக்கொண்டிருப்பதும் தெரிகிறது. குடிசைக்குக் கிட்ட உள்ள ஒரு கடப்பிடியில் வெளியே ஆடு மேற்கிறது. வெறும் மார்பிலே பொக்குள்வரை அச்சரக் கூட்டுடன் தொங்கும் தங்கச் சங்கிலியை எடுத்து அநாயாசமாய் இடது தோளிற் போட்டபடி, எண்ணெய்த் தலையை வழித்து இழுத்து. கால்முட்ட வேட்டி சாத்திய, வீரவாகுவை விட இரண்டு வயது மூப்பான, சுவாமிநாத முதலி ஒரு கையிலே தூக்குச் செம்பும், மற்றக் கையிலே ஐந்து பற்றறி ரோச்லைற்றுமாய் வருகிறார். வந்து கடப்படியில் நிற்கவும், கோவில் மணி டாண் டாண் என்று நாதம் எழுப்பவும் எல்லாரும் அசையாநிலை எய்த, சுவாமி நாத முதலி மட்டும் ரோச்சை உயர்த்தி இலக்குப் பார்த்து இராசம்மாவின் முகத்துக்கு ஒளி பாய்ச்சுகிறார். இராசம்மா கண்கூசிச் சினங்கொண்டு நோக்கவும் முதலி குரல் கொடுக்கிறார். இதுவரையிலான செயற்பாடுகளுக்கு எடுத்துரைஞர் ஒலி கூட்டுகின்றனர்.]

எடுத்துரைஞர்:ஓட்டி உலர்ந்த உடல்
உருக்குலைந்த மேனியினர்
கொட்டில் குலைந்த நிலை
கோயில் மணி கேட்கிறது

மட்டை வரிச்சலுடன்
வயசான கடிவடியில்
புத்தம்புது மணப்பெண்
பூத்த நெருப்பு அரவணைத்தாள்.
வெக்கை குளித்து உடலால்
வேர்வை வழிந்தோடி வர,
சுட்டே அடுக்குகிறான்
சுவையான பாலப்பம்.

முற்றும் துறந்த ஒரு
முனிவன் அல்ல, நேற்றே தான்
தொண்டு அவளைத் தாலி கட்டித்
துணையாகக் கொண்டு வந்தான்.
செத்தும் பிழைக்கின்ற
சீவன், உடல் தரித்திருக்க
நித்தம் முழுநேரம்
நீரிறைத்துக் களைக்கின்றான்.

பட்டை கிழிந்ததனால்
பாழாகி நீர் சிந்த,
முத்தர்க் கிழவன் அவர்
மும்முரமாய் உழைக்கின்றார்.

பற்றைக் காணியிலே
பாடுபட்டுப் பயிர் வளர்த்தார்;
விற்றுப் பணம் சுகிக்க
வேறொருவர் வந்திடுவார்.

(கொம்பு வாத்தியம், சங்கொலியைத் தொடர்ந்து சுவாமிநாத முதலி கம்பீரமாக மேடையிற் பிரவேசம்)

பொக்குள் வரை சங்கிலியன்,
பூரித்த இளவழகன்
கட்டி நிலம் ஆளுபவன்
கடப்படியில் வருகின்றான்.

ஒட்டி உலர்ந்த உடல்
உருக்குலைந்த மேனியினர்
கொட்டில் குலைந்த நிலை,
கோயில் மணி கேட்கிறது.

(இதுவரையும் பேசாப் பாவனையில் நிகழ்ந்த செயற்பாடுகளைத் தொடர்ந்து மேடையில் நாடக கதாபாத்திரங்கள் பேசத் தொடங்குகின்றன.)

சுவாமிநாதர்: (ஆசையோடு கீழ்த் தொனியில்) இராசகிளி முதலியாவளவுப் பொந்திலை வந்திட்டுது. நல்லது இனி மேல் நான்......

இராசம்மா: (இடைமறித்து, உச்சத் தொனியில்) வேட்டை நாய் (எல்லாரும் இராசம்மாவைப் பார்த்தல்)

சுவாமிநாதர்: ம்... டே! வீரவாகு (எல்லாரும் முதலியயை நோக்கல்)

முத்தர்: சின்னையா, வேட்டை நாயள் தோட்டத்துக்கை வரப்பாத்தது தான். நான் விடயில்லை. பேசிக் கலைச்சுப் போட்டன். கெற்றப்போல் கல்லு, கொட்டனோடை வெளிக்கிட்டிட்டாங்கள் வெள்ளி சனியும் பாராமல் மூதேசியள்.

சுவாமிநாதர்: (திட்டவட்டமாக) நான் பாலுக்கு வந்தனான்.

வீரவாகு: இரண்டு லோட்டா பால் வெள்ளணவே கறந்து குடுத்தன், தங்கைச்சி கொண்டரயில்லையே?

சுவாமிநாதர்: இண்டைக்கு நவனாபிஷேகம். ஏன் ஆக இரண்டு லோட்டா, விளையாடுறியா?

முத்தர்: முதுகண்டாய்ப் போச்சு, நாங்கள் என்ன செய்யிறது?

சுவாமிநாதர்: எனக்குத் தெரியும் நீங்கள் குடிக்க ஒரு சிந்தலும் எடுக்க மாட்டியள் எண்டு. அது போல (இராசம்மா விடம் திரும்பி இண்டைக்குப் பூந்தண்டிகை. இணுவில் செற் சின்னமேளம், மணி ஐயற்றை பிரசங்கம். அச்சுவேலியாற்றை வாணவேடிக்கை எல்லாம் இருக்கு வீரவாகு. புதுசாய்க் கலியாணம் கட்டின நீ இராசம் மாவோடை வெள்ளண வந்து பார்.

வீரவாகு: இண்டைக்கு இறைப்பு முறை. கொயிலடியிலை லைற்றுமிசின் போடுவினமாக்கும். நாங்கள் நிலவிலை இங்கை இறைக்கவேணும்.

சுவாமிநாதர்: புதுப் பொம்பிளை மாப்பிளையள், இண்டைக்காதல் பக்கத்துக் கோயிலுக்கு வாருங்கோ (போதல்)

வீரவாகு: எங்களைப் போலை அண்டாடம் காய்ச்சியளுக்கு, கோயில் திருவிழாவும் ஆடம்பரம்தான். வர நேரமுமில்லை.

சுவாமிநாதர்: (போனவர் திரும்பி வந்து) இண்டைக்கு மத்தியானம் அன்னதானம். அவியலுக்குத் தேவையான காய்பிஞ்சு இன்னும் வந்து சேரவில்லை. கெதியாய் வரட்டும் கோயிலடிக்கு (மீண்டும் போகிறார்)

முத்தர்: கொஞ்சம் பொறுங்கோ சின்னையா.

(முதலிநிற்றல், அடிக்கடி இராசம்மாவைப் பார்த்தல் வீரவாகு துண்டை உதறித் தலையிற் கட்டிக்கொண்டு கொட்டிலுக்குட் போய்ப் பூசினிக்காய், வாழைக்குலை, காய் பிஞ்சுக் கடகம் ஒன்று ஆகியவற்றைத் தூக்கமாட்டாது தூக்கிக்கொண்டு வந்து முதலியின்முன் வைத்தல். ஒருதரம் கால் இடறி முழங்கால் மடிய, தலையிலிருந்த கடகம் ஒருச்சரிந்து கவிழ்ந்து கொண்டுபோக அதை மீண்டும் பொறுக்கிக் கடகத்துட் போட்டு நிரப்பி அவதானத்தோடு பத்திரமாக் கொண்டு போதல்)

எடுத்துரைஞர்:
தூக்கவே முடியாக் காய்கள் துக்கி நீ போகின்றாயே
சாப்பிடாது உவகையோடு சலிப்பிலாது உழைக்கின்றாயே
ஆக்கி நீ அரவணைத்தாய் அன்புடன் உரமும் இட்டாய்
ஊற்றி நீர் உவகையோடு உருப்பட வளர்த்தாய் இப்போ
போக்கவோ உரிமை நட்பை? புகலிடம் இவனோ வேண்டாம்.
போக்கிடம் விருப்பமின்றிப் புழுதியிற் புரண்டு வீழ்ந்தீர்
சாற்றிடும் துயரகாதை சனங்களும் அறிய வேண்டிக்
கூக்குரல் இடுக. காயே! கூறிடு உன் வாய் திறந்து.

(காய்பிஞ்சுக் கடகத்துடன் சேர்ந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த இன்னொரு எடுத்துரைஞன் மெதுவாக எழுந்து அண்ணாந்து கையை உயர்த்திய வண்ணம் முத்தருக்குத் தேறுதல் கூறும் பாங்கிலே காய்ப்பிஞ்சகளின் கூற்றாற)

சோறுடன் கறிகள் சேரும் சுவை அதால் உயர்தல் கூடும்.
ஆத்திரம் கட்டி நீரைப் பாய்ச்சிடும்போது கூடக்
கேட்டிலோம் கேடுகெட்ட கயவனின் பெயரை நாங்கள்
சாப்பிட வழியே இன்றித் தவித்திடும் உன்னைவிட்டு
வேற்றிடம் போகமாட்டோம், விழுந்து இதில் உயிரை மாய்ப்போம்
காற்பணம் காசும் இன்றிக் கடத்திடும் கயவனோடு
ஆக்கிடோம் எமது நட்பு, ஐயனே! எம்மை மீளும்.

சுவாமிநாதர்: சீக், ஒரெப்பனும் அவதானம் இல்லை? (காய் பிஞ்சுகளைப் பரிசோதித்துப் பார்த்து முகம் சுழிக்கிறார்) அது சரி முத்தர், இதென்ன தோட்டம் ஒடுங்கி வந்திட்டுதோ?

முத்தர்: இல்லை, வளவை....

சுவாமிநாதர்: வளவை இம்முறையோடை விடவேண்டி வரலாம் எண்டு நான் சொன்னாப்போலை அசட்டையோ? குத்தகை வாரத்திலை குறைவிடக் கூடாது.

முத்தர்: இதென்ன இது. உழைக்கிறது முழுதும் உங்கடைதானே, உங்களுக்குத்தானே.

சுவாமிநாதர்: அப்பிடி, எண்டெண்டும் விசுவாசமாய் இருக்கிறது தான் மிச்சம் நல்லது.

முத்தர்: இந்த வரியத்தோடை வளவை விட்டிட்டு உடனை எங்கையேன் எழும்பிப் போகவேண்டி வருமோ ஐயா?

சுவாமிநாதர்: அது, தேவை வந்தால் நான் சொல்லுவன்தானை.

முத்தர்: மோன் கலியாணம் கட்டியிட்டான். கொட்டிலிலை இடமில்லை அதுதான் ஒரு பத்தி இறக்க....

சுவாமிநாதர்: (இடை மறித்து அதட்டி) பத்தியோ? வேறை ஒரு பூமானும் இறக்க மாட்டியளே? உந்த விசர் யோசனையளை விட்டிட்டு, வளவை நல்லாய் வைச்சிருக்கப்பார்.

முத்தர்: ஓமோம், ஓமோம்.

சுவாமிநாதர்: "ஓமோம்" எண்டு தலையாட்டிறதிலை மட்டும் ஒரு குறைச்சலுமில்லை. ஆனால் மாட்டிலை பாலுமில்லை. தோட்டத்திலை காய் பிஞ்சும் கம்மி. முதலியா வளவுக்கை என்னத்தை வெட்டிப் புடுங்கிறியன் இராப்போலாய்?

முத்தர்: மழை தண்ணி இல்லை ஐயா.

சுவாமிநாதர்: என்ன கிணத்திலையும் இல்லையே தண்ணி? விதானையிட்டைப் 'பேமிற்' எடுத்துக் கேப்புமெல்ல வாங்கித் தந்தான், போன வரியம், உங்களுக்கு இறைக்கப் பஞ்சி.

வீரவாகு: (இடையிலே தயங்கித் தயங்கி) சின்ன ஐயா,

சுவாமிநாதர்: உங்களைக் காட்டிலும் மாய்ஞ்சு பாடுபட்டுக் கூட உழைச்சுத் தரவறிய சனம் ஊரிலை ஏராளம் இருக்கு. ஏதோ முள்ளுப் பத்தையை வெட்டித் துவக்கினது நீங்கள் எண்டிட்டு விட்டுப் பிடிச்சால்.....நீங்கள்...

வீரவாகு: நீங்கள் ஒரு.....(இழுவல்)

சுவாமிநாதர்: கெதியிலை திருந்த வேணும். இல்லாட்டி எங்கடை தென்னங்கடடி வளவுச் சுப்புறுமணியனுக்கு நடந்த கெதிதான் உங்களுக்கும்.

வீரவாகு: (தயங்கித் தயங்கி) தண்ணி இறைக்கிற மிசின் ஒண்டு....

சுவாமிநாதன்: என்ன தண்ணிப் பம்மோ? (வியப்போடு முழிசிப் பார்க்கிறார்)

வீரவாகு: ஓம் ஐயா, வாங்கித்தர வேணும்.

சுவாமிநாதர்: என்ன கலியாணத்தோடை ஆசையளும் புதுவிதமாயிருக்கு. உருப்படுற யோசனை இல்லை. பம் ஒண்டும் கிடையாது. வேணுமெண்டால் இன்னும் இரண்டு வெடி வைச்சுக் கிணத்தைத் தோண்டி இறைச்சு அள்ளி வாருங்கோ.

முத்தர்: வீடும் மேய வேணும், கூரை உக்கி விழுகுது.

சுவாமிநாதர்: அதெல்லாம் மாரி வரட்டும், ஆறுதலாய்ப் பார்க்கலாம்.

இராசம்மா: பள்ளத்து ஆறுமுகத்தானும் நாவலடி வளவாலை காய் பிஞ்சு கொண்டந்திருப்பான் கோயிலடிக்கு நேற்று வந்தப்ப சொன்னவர்.

சுவாமிநாதர்: அந்தத் துளவாரங்கள் உங்களுக்குத் தேவையில்லையே. எனக்குக் கண்டுவிலுக்காலும் கூழன் பள்ளத்துக்காலையும் கூடக் கொண்டு வாருங்கள். நீங்கள் உங்கடை பங்கைத் தந்தாற் சரி, நான் வாறன் (போய் வழியிலே திரும்பி) பின்னேரம் கிடாரம் கழுவவேணும், கொயிலடிக்கு வந்திடுங்கோ. (சுவாமிநாதர் போக, வீரவாகுவும் முத்தரும் அவர் போகும் வழியையே பார்த்தபடி இருக்க, அப்பம் சுட்டுக்கொண்டிருக்க இராசம்மா, விடுவிடென்று அவர்களை அண்மி வருகிறாள்).

இராசம்மா: முதலியார் ஏன் உவ்வளவு டீங்காய்த் திருவிழாச் செய்கிறார்?

வீரவாகு: தங்கடை பாவச் சொத்திலையும் ஒரு புண்ணியமாம். கடவுளை ஏமாத்துகினம், லஞ்சம் குடுத்து. ஆரைப் பேய்க்காட்டுகினம்?

முத்தர்: டே தம்பி! வீண் கதை பேசப்படாது. இப்ப நீ கூலி வேலை செய்யிறாய். ஆனால் பதினைஞ்சு வரியத்துக்கு முந்தி, குடியிருக்க ஒரு துண்டுக் காணி இல்லாமல் நடுத்தெருவிலை நாயாய் அலைஞ்சப்ப உந்த முதலியாவளவைத் தந்திராட்டில்....

இராசம்மா: தரயிக்கை வளவு எப்பிடி?

முத்தர்: நெருஞ்சி முள்ளும் கிஞ்ஞாக் காடும், பாம்புப் புத்தும் ஈச்சம் பத்தையுமாய்..

வீரவாகு: முதலியா வளவிற் கறள் ஆணி குத்தித்தானை அண்ணை செத்தவர்.

முத்தர்: முதலியாவளவிலை பாம்பு கடிச்சுத்தான் என்ரை மனிசியும் செத்தது.

இராசம்மா: உவைக்கு எங்காலை உவ்வளவு காணியள்? (வீரவாகு கொட்டிலுக்குட் போகிறான்.)

முத்தர்: முந்தி, ஆரோ சிதம்பரிக் கட்டாடிக்கு ஆசுபத்திரிச் சிலவுக்குக் காசு குடுத்திட்டுக் காணியை எழுதுவிச்சவர், பிறகு அவற்றை சொந்தமாய்ப் போச்சாம். அதெல்லாம் பெரிய இடத்துக் கதை.

இராசம்மா: முதலியார் கலியாணம் முடிச்சும் பத்து வரியமெல்லே?

முத்தர்: கனகாலமாய்ச் சந்தானபாக்கியம் இல்லை, அவரும் செய்யாத தான தறுமம் இல்லை. கடைசியாய்ப் பிள்ளையோ கோயிலை சந்தான கோபாலருக்குப் புறம்பாய் ஒரு கோயில் கட்டி, விக்கிரகம் பிரதிட்டை செய்து வரியாவரியம் தண்டிகைக் திருவிழாவும் நடத்துகிறார். இப்பதானாம் கெர்ப்பனி. (வீரவாகு ஒரு கைப்பையுடன் வந்து அப்பம் சுட்ட இடத்திலே குந்தி இருந்து சாப்பிடுகிறான்.)

இராசம்மா: அப்ப முதலியாற்றை சொத்தெல்லாம் உப்பிடித்தான்...?

வீரவாகு: அப்பம் சுட்டுப் போக்காட்டிறதுக்கு உபகாரமாய் முதலியாவளவை உனக்கே எழுதித் தருவார் நம்பிக்கொண்டிரு.

(திடீரென்று கணவன் சாப்பிடுவதைக் கண்டு அண்டையில் ஓடிப்போகிறாள். முத்தர்க்கிழவர் குடிசையுட்போய் மறைகிறார். இராசம்மாவின் வாய்க்குள் அப்பத்தைத் திணிக்கிறான் அவன். அவள் மறுத்துத் தலையாட்டிவிட்டுப் பிறகொரு தரம் கடித்து விழுங்குகிறாள் அவன் மீண்டும் ஓரப்பத்தைக் கடிக்கிறான், வாயாலே பால் ஒழுகுகிறது. நாக்கால் நக்கி நக்கி உறிஞ்சுகிறான். இராசம்மா சுட்ட பாலப்பம்....

எடுத்துரைஞர்:
மாவைப் புளிக்க வைத்து
மனது வைச்சு விடியெழும்பி
பாலைப் பிழிந்தெடுத்துப்
பக்குவமாய்ச் சுவை சேர்த்து

ஆசைக்கு இனியவளே
அடுப்பெரித்து சுட்டதிந்தப்
பால் சிந்தி வாய் வழியும்
பாலப்பம் வந்து எழுப்பம்

சொண்டால் வழிகின்ற
சுவையான பால நக்கித்
திண்டால் இரண்டப்பம்
திகட்டாது திவ்வியமே

பால் சிந்தி வாய் வழியும்
பாலப்பம் வலு எழுப்பம்.

வீரவாகு: வலு எழுப்பம்.

இராசம்மா: இன்னும் ஒண்டு. (தடுக்கத் தடுக்கக் கொடுக்கிறாள்)

வீரவாகு: நான் உழைச்சுவந்து தாறன் கூலியை. நீ சமைச்சுப் போடு. நான் மூக்கு முட்டப் புல் லோட்டாய்ப் பிடிக்கிறன். நீ இப்ப அப்பத்தை எண்ணி அடுக்கு. கடைக்குக் கொண்டு போகச் செண்டெல்லே போச்சு. (தண்­ர்ச் செம்பை வாங்கி வாயை கொப்புளித்துவிட்டு, துண்டை எடுத்துக்கை துடைத்து உதறித் தோளிற் போட்டபின், அப்பக் கடகத்தை வாங்கித் தலையில்வைத்தபடியே வெளியேறுகிறான். போகும்போது திரும்பிப் பார்த்த வாக்கிலே நடையைத் தளர்த்துகிறான். அவளும் நின்ற நிலையிலேயே கண்களாற் கலக்கிறாள். பின்னர் திரும்பிப் போய் அப்பஞ்சுட்ட இடத்துச் சூட்டடுப்பு, தட்டுமுட்டுச் சாமான்களை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குட் போகிறாள். முத்தர் ஒரு ரின்பாற் பேணியிலே காசு கலகலக்க மேடையின் முன் வந்து ஆசறுதியாகச் சிலை முடிச்சை அவிழித்துத் தாட்காசை எண்ணிப் பொத்திப் பிடித்தபடி பக்கத்தில் வைக்கவும் இராசம்மா அங்கே வருகிறாள்.)

இராசம்மா: ஆ, காசுத்தாளுகள் பறக்குது. (ஓடிவந்து பொறுக்கி அடுக்குகிறாள்.) இதென்ன காசு?

முத்தர்: இரண்டு கிழமையாய்த் தோட்ட வரும்படி வித்த காசு சந்தைக் காசு, சுவாமிநாத முதலியாருக்குக் குடுக்கயில்லை, அதுதான் எண்ணிறன். நீயும் ஒருக்கால் வடிவாய் எண்ணு பிள்ளை. (அவள் தாளை எண்ண அவர் சில்லறையை எண்ணுகிறார்)

எடுத்துரைஞர்:
காய்பிஞ்சு விற்றார், கணக்கின்றிக் காசு வந்
சேர்கின்ற போது சிந்தை மிக மகிழ்ந்தார்
கூலி இல்லாச் சேவகமே கொண்ட இவர் முழுவாழ்வு
தாள் எண்ணி முதலிக்குத் தருவதற்கோ அத்தனையும்?

இராசம்மா: (எண்ணிய காசை வியந்து, மீண்டும் ஆறுதலாய் இருந்து எச்சில் தொட்டுக் கவனமாக எண்ணியபின் வியப்போடு) ஆ! இருநூற்றுத் தொண்ணூற்றி மூன்று ரூபா.

முத்தர்: இரண்டு சந்தைக் காசு

இராசம்மா: உவ்வளவுமோ?

முத்தர்: மடியிலும் இருக்கு, நாலு நூறு ரூபாத் தாள்.
சில்லறையும் இருக்கு.

இராசம்மா: இதிலை உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அம்மான்?

முத்தர்: ஒரு வெள்ளைச்சல்லி தொடமாட்டன். கொண்டை அப்பிடியே முதலியார் வீட்டிலை குடுத்திடுவன். அவற்றை தானே தோட்டம்.

இராசம்மா: அப்ப நீங்கள் செத்து மாயிறது?

முத்தர்: நான் மட்டுமே, என்னைப்போலை குழைக்காட்டிற் குரு சாமி கூழன்பள்ளத்து ஆறுமுகத்தான். கண்டுவிலிற் சுப்பையன் எண்டு எத்தினை பேர் வந்து வரிசையிலை நிண்டு காசு குடுப்பினம் முதலியாருக்கு.

இராசம்மா: அப்ப, உந்தக் காசு முழுதிலும் கொண்டைக் குடுக்கிறதா? (சைக்கிள் மணி கேட்கவும் இராசம்மா வெளியிற் சென்று ஒரு தபாலுடன் வருகிறாள்.)

முத்தர்: ஆர் விட்டது. தபால்? உடைச்சு வாசி. (பரபரப்போடு கிழித்து வாசிக்கிறாள்.)

இராசம்மா: "உங்கடை முருகேசு, இங்கை சுவாமிநாத முதலியாற்றை காணியிலை காடு வெட்டிக்கொண்டு நிண்டப்ப பாம்பு கடிச்சது. கடுவலாய் இருந்ததாலை உடனை கார் பிடிச்சு கிள்நொச்சியிலை இருந்து யாழ்ப்பாணம் வந்தது. இப்ப கொட்டடியிலை வைத்தியர் வீட்டிலை நிற்கிறம். கார்க்காசு கொண்ணூறு ரூபா உடனை குடுக்க வேணும். எப்பிடியேன் கொண்டாருங்கோ. நாளைக்கு கடிச்ச நேரம் பாத்துத்தான் சுகம் தெரியுமாம். அறிவு நினைவு இல்லாமல் கதிரையிலை இருத்தி விட்டிருக்கு. நித்திரை கொள்ளக் கூடாதாம் கொள்ள வேண்டாமாம். சாப்பாடு தண்ணி வெந்நீரும் இல்லை. இது கண்டதும் உடனை வாருங்கே!"

முத்தர்: செல்லையனே தபால் விட்டது? இப்ப என்ன செய்யிறது? நான் எங்கை போவன் காசுக்கு? என்ரை மனிசியும பாம்பு கடிச்சுத்தான் மோனை செத்தவ....

இராசம்மா: வேலைக்குப் போன இவர், இனிப் பொழுது படத்தான் வருவர். நான் இப்ப என்ன செய்ய? (திடீரென) உந்தக் காசிலை ஒரு நூறு ரூபா எடுத்துக் கொண்டு போட்டு வருவமே பரியாரி வீட்டை?

முத்தர்: இது நான் எப்பவோ சுவாமிநாத முதலியாருக்குக் குடுக்க வேண்டிய காசாயிருக்கே (ஆற்றாமையோடு) நான் என்ன செய்ய?

இராசம்மா: அப்ப, அவரையே கேட்டு ப பாத்தால்....?
(செருமலுடன் சுவாமிநாத முதலியார் உட்பிரவேசிக்கிறார். முத்தர் காசை அள்ளிப் பேணியுட் போடுகிறார்.)

சுவாமிநாதர்: என்ன முத்தர், காசுச் சத்தம்?

முத்தர்: வாருங்கோ சின்ன ஐயா வாருங்கோ (உள்ளுக்குத் திரும்பி) மோனை ! பாய்த்தடுக்கைக் கொண்டா.

சுவாமிநாதர்: வேண்டாம், வேண்டாம். (அங்கிருக்கும் குற்றி ஒன்றிலே குந்துகிறார்.)

இராசம்மா: (முத்தரின் காதுக்குள்ளே இரகசியமாய்) அம்மான் கேளுங்கோவன்.

முத்தர்: (கொஞ்சம் பொறுக்குமாறு அவளுக்குச் சைகை காட்டிவிட்டு) தோட்டத்துக் காய்பிஞ்சு வித்த இரண்டு சந்தைக்காசு, இன்னும் நாங்கள் கொண்டந்து தரயில்லை....

சுவாமிநாதர்: ஓம், ஏன் கொண்டரேல்லை? ஆறுமுகம் செட்டி வெள்ளண வீட்டை வந்தது. சீட்டுக்குத் தாறதெண்ட காசு கொஞ்சம் சோட் அடிச்சதாலை, இஞ்சை வரவேண்டி வந்திட்டுது.

முத்தர்: இல்லை, அது தான் நான்....

இராசம்மா: ஸ்...ஸ்...(கிட்டப் போய் முத்தரிடமிருந்த பணத்தைத் திடுகூறாய் வாங்கிக்கொண்டு துரிதமாய் உள்ளே போகிறாள்.)

முத்தர்: இராசம்மா. (பலமாகத் தொடங்கி மெதுவாக நசிக்கிறார்.)

சுவாமிநாதர்: அதென்ன காசோடை இழுபறி?

இராசம்மா: (பதட்டமும் உறுதியும் ஒருசேர வர) அது ஆடு வித்த காசு, எங்கடை காசு.

முத்தர்: இராசம்மா (பொய் சொல்ல வேண்டாம் என்பதை உணர்த்தும் பாங்கிலே உரத்து) இராசம்மா!

சுவாமிநாதர்: எட, உங்களுக்கெண்டு ஒரு காசிருங்கோ? ஆடு எப்ப வளத்தது? ஏங்கை மேயக் கட்டினது? புருடா விட்டால் தெரியுமே என்ரை குணம்?

முத்தர்: இல்லை, அவள் சொன்னது பொய். அந்தக் காசு உங்கடை தான். தோட்ட வரும்படி வித்த சந்தைக்காசு ஆனால்....

சுவாமிநாதர்: ஓஹோ! இராசகிளி.....
(இராசம்மா நைக்காட்டிவிட்டுக் காசைக் கொண்டு வந்து முத்தரின் கைக்குள்ளே திணித்து விட்டு உள்ளுக்கு ஓடுதல்.)

முத்தர்: சின்ன ஐயா, நான் ஏன் உங்களுக்குப் பொய் சொல்லுறன், காணி இல்லாத எனக்கு இருக்க இந்த முதலியாவளவைத் தந்தவர் பெரியையா அம்பலவாண முதலியார். அதுக்காய் நான் மாடாய் உழைக்கிறன்.

சுவாமிநாதன்: சுத்தி வளைக்க வேண்டாம். உனக்கு என்ன காசு தேவையோ?

முத்தர்: இல்லை, உங்கடை கிளிநொச்சிச் காடு வெட்டுற இடத்திலை, எங்கடை முருகேசிக்குப் பாம்பு கடிச்சது, யாழ்ப்பாணம் ஏத்தி வந்ததாம். தவால் விட்டிருக்குதுகள். கார்க்காசு குடுக்கவேணும், அதுதான்....

சுவாமிநாதர்: என்ன என்னடை கிளிநொச்சிக்காடு எண்டு குறிப்பாய்ச் சொல்லுறாய். பாம்பும் நான்தான் விட்டுக்கடிப்பிச்சதெண்டும் சொல்லுவாய் போலை.

முத்தர்: இல்லை, நாங்கள் உடனை போவேணும்.

சுவாமிநாதர்: முத்தர்! அது முருகேசுவுக்கு ஏதோ ஒரு கெட்ட காலம். நீ அவன்ரை சாதகத்தை ஒருக்கால் வெட்டு வடலிச் சாத்திரி சின்னையரைக் கொண்டு வடிவாய்ப் பாப்பி, இப்ப பார், பாம்பு உனக்குக் கடிக்கேல்லை. எனக்குக் கடிக்கேல்லை அவனுக்கு மட்டும் ஏன் கடிப்பான்? ஆய் விளங்குது தானே? சரி குடிக்கி தண்ணி கொஞ்சம் தாருங்கோ.

முத்தர்: மோனை இராசம்மா (இராசம்மா வேண்டா வெறுப்போடு தண்ணிச் செம்பை மினுக்கிக் கழுவித் தண்­ர் வார்த்துக்கொண்டு வருகிறாள். செம்பைக் கொடுக்க, சுவாமிநாத முதலி அவளது கையை எட்டிப் பிடிக்க எத்தனிக்க, அதைத் தவிர்த்துக் கிட்ட நிலத்திலே டொக் என வைத்துவிட்டு அருவருப்போடு முழிசிக்கொண்டு உள்ளே ஓடுகிறாள்.)

எடுத்துரைஞன்: கை எடு - கை விடு
கை விடு - கை எடு

கழிசறை காவாலி கிலிசை கெட்ட கீழ்சாதி
குடிகெடுக்கும் சோமாரி கெடுமதிக்கு யாவாரி)

கை எடு கை விடு-

கொடுமை செய்யும் கோமாளி கௌரவம் ஒரு கேடு
கழிசறை, காமுகன், காவாலி, கீழ்சாதி,

கை எடு - கை விடு
கை விடு - கை எடு.

(இவ்வேளை வெற்றிலைப் பெட்டியோடு காசையும் கொண்டுவந்து நீட்டுகிறார்)

முத்தர்: இது காசு, வெத்திலை போடங்கே.

சுவாமிநாதர்: வாடல் வெத்திலை, எண்டாலும் முத்தர் அன்போடை தரயிக்கை மறுக்கக் கூடாது.
(எழுந்து வெற்றியிற் சுண்ணாம்பைத் தடவியபடியே) ஆ, மற்றது முத்தர், முக்கியமான விஷயம், கிளி நொச்சியிலை நான் தெட்டம் தெட்டமாய்த் தேடின காணி அறுபத்தைஞ்சு ஏக்கரையும் ஒரே காணி ஆக்கிறதுக்காய் இரண்டொரு இடத்திலை கொஞ்சம் கம்பி அடிச்சு விட்டிருக்கிறன். என்னோடை மாஹோவிலை கடை வைச்சிருக்கிற அப்புஹாமி முதலாளியும் கூட்டு, அதை எப்பிடியும் கிளியர் பண்ணி இம்முறைக் காலபோகத்துக்கு விதைச்சாத்தான் சோந்தை கொண்டாடலாம். அதுக்காய்க் கொஞ்சப்பேர் காடு வெட்டக் கிளிநொச்சிக்குப் போகவேணும். என்ரை பரந்தனிற் கடை லொறி வந்தது. யாழ்ப்பாணத்துக்குச் சாமான் ஏத்தப் போயிருக்கு இப்பவரும். அதிலை ஒரு எட்டுப்பத்துப் பேர் எண்டாலும் உடனை அனுப்ப வேணும். இது விஷமாய்த் தான் இப்ப இரண்டு நாளாய் அலையிறன்.

முத்தர்: முன்பின் அறியாத இடத்திலை நாங்கள எப்பிடி?

சுவாமிநாதர்: உதுதானே எங்கடை ஆக்கள் விடுகிற பெரும் பிழை. உந்த இலட்சணத்திலை ஊருக்கை ஒதுங்கி ஒதுங்கி இருந்துகொண்டு மற்றவன் எங்கடை நாட்டிலை குடியேறுறான் எண்டு கூப்பாடு போட்டால் எப்பிடி?

முத்தர்: நீங்கள் என்ன சொல்லுறியன்?

சுவாமிநாதர்:முத்தர்! இந்த முள்ளுப் பத்தையைத் தனி ஒரு ஆளாய் முதலியா வளவு ஆக்கின உமக்கு இதெல்லாம் ஒரு தும்மல். ஆளும் பேரும் சேர்ந்து காடு வெட்டுறது. கமம் செய்யிறது வலுசுகம். எனக்கும் கூட வலுவிருப்பம். என்ன செய்யிறது பல சோலியள். ஊலிலை, கிளிநொச்சியிலை, மாஹோவிலை, பரந்தனிலை கொழும்பிலை எங்கும் ஓடி அலையவேண்டி இருக்கு. இல்லாட்டில்....

முத்தர்: அங்கையும் எங்கடை ஆக்கள் தானோ அல்லது.....?

சுவாமிநாதர்: தனியாய் நாங்கள் போய்க் காடு வெட்டினால் பிழையாய் விளங்குவாங்கள் எண்டுதான் அப்புஹாமி முதலாளியிட்டைச் சொல்லி, அவரையும் இதிலை சேர்த்திருக்கிறன். அவற்றை ஆக்களும் சேர்ந்தால் ஒருத்தரும் ஐமிசப்படாயினம். நாங்களும் உசாராய் வேலையைக் கொண்டுபோகலாம்.
(இப்பொழுது லொறி ஹோர்ணைத் தொடர்ந்து புஞ்சி பண்டா கடப்படியில் வந்து கூப்பிடுகிறான்.)

பண்டா: மொதலாலி

சுவாமிநாதர்: ஆரது புஞ்சிபண்டாவா? வா, வாடா உள்ளை, எப்பிடி யாழ்ப்பாணம். பிடிச்சதா?

பண்டா: ஒவ்...யாப்பனயங்....ங் (பல்லைக்காட்டிக் குழைகிறான்.)

(இப்போது வெளியிலிருந்து உள்ளே வரும் வீரவாகு பண்டாவை அதிசயத்தோடு அணுகி, சுற்றும் முற்றும் ஆராய்ந்து விட்டு ஆதரவோடு தோளிற் கை போட்டு அணைத்து ஒற்றுமையாய்ச் சிரித்து நட்புரிமை பூணல்)

எடுத்துரைஞர்:
அறிமுகம் புதிது
அனுதினம் பழகு.

தொழில்முறை உறவு தொடர்கையில் உணர்வு
உரிமையின் பிணைவு உயர்கையில் திறவு
புதியதோர் உறவு புலர்வதோ விடிவு.

அறிமுகம் புதிது
புலர்வதோ விடிவு.

முத்தர்: நல்ல சீவன். வஞ்சகம் இல்லாததுகள்.

சுவாமிநாதர்: பாத்தியளா உவை தரவளி ஏழு பேருங் கூட நிப்பாங்கள். நீங்கள் மூண்டுபேரும் அவங்களுக்கு முகாந்திரமாய் நிண்டு வேலை காட்ட வேணும். பொறுத்த நேரத்திலை நான் உவையளைக் கழட்டி அப்புஹாமி முதலாளிக்கும் சூக்காட்டிப் போடுவன். இங்கை கடுமைக்கு வேலை செய்த உங்களுக்கு அங்கத்தையில் வேலை வலு சிம்பிள். குடியிருக்க நல்ல வீடும் நீங்கள் கட்டிக்கொள்ளலாம், அசல் காட்டுத் தடியள் ஏராளம்.

(வீரவாகு பண்டாவை உள்ளே வரும்படி அழைக்க, அவன் முதலிலே பின்வாங்கி, பிறகு கூடப் போகவும் வீடுவாசலைக் காட்டியவாறே உள்ளே போதல். பின் தோட்டம், துலா, பட்டைகள் என அவர்களின் கவனம் படர்ந்து செல்கிறது. இவ்வேளை முதலியார் முகத்திலே அகுசையைத் தேக்கி) நல்ல புதுக் கட்டு. என்ன சாதியோ?

முத்தர்: நீங்களும் நானும் சாதி பாக்கிறம். வீரவாகு....? அது சரி, அவனும் ஒரு கமக்காறன் தானே,

சுவாமிநாதர்: ஆ, கமக்காறன் சரி, ஆனால் எங்கடை ஆள் இல்லை, அதை மறக்கக் கூடாது. அம்பத்தெட்டிலை நடந்தது தெரியுந் தானை. அதுக்கிடையிலை மறந்தாச்சே?

முத்தர்: சாய்ச் சாய் (ஆட்டைப் பார்த்துவிட்டு) ஆடு மாடுகளை.

சுவாமிநாதர்: அதெல்லாம் லொறியிலை ஏத்தலாம்.

முத்தர்: பாத்த தோட்டத்தை விட்டிட்டு எப்பிடி.......?

சுவாமிநாதர்: உப்பிடியான ஆசை வரும் எண்டு எனக்குத் தெரியும். ஏனெண்டால் இவ்வளவு நாளும் ஆண்டு அனுபவிச்சனி பார்.

முத்தர்: சின்ன ஐயா சொன்னால் சரி, இதென்ன என்ரையே காணி....ம் (பெருமூச்சு)
(இதற்கிடையில் வீரவாகுவும் பண்டாவும் சேர்ந்து பயணத்துக்குப் பொதிகட்டி ஆயத்தமாகிறார்கள்)

சுவாமிநாதர்: முத்தர்! நான் ஏதும் நயம் பயமாய்த் தருவன். இனி இஞ்சையும் கணநாள் இருந்திட்டீர்.

முத்தர்: ஏதோ வயித்துப் பாட்டுக்கு ஒரு வழி.....

சுவாமிநாதர்: முத்தர்! அப்பிடித்தான் இருக்க வேணும். செல்வம் என்பது சிந்தையின் நிறைவே எண்டு இண்டைக்கும் பிரசங்கத்திலை சொன்னவர் மணி ஐயர்.... அப்ப என்ன 'ஓம்' தானே?

முத்தர்: வகுத்தான் வகுத்தபடி

சுவாமிநாதர்: முத்தர், கூழன் பள்ளத்து ஆறுமுகத்தான் வடலி வெளியில் வைரவி, கண்டுவிலிற் சுப்பையன் எல்லாரும் வருவினம். மூட்டடிக்கு கெதியாய்ப் போவேணும். (ஹோர்ண் சத்தத்தின் தாளக்கட்டுக்கு இசைய சாமான் மூட்டை முடிச்சுகளைக் கொட்டிலிலிருந்து முற்றத்திற் கொண்டு வந்து வைக்கிறார்கள். சில பொட்டளிகளை வெளியே கொண்டுபோய் வைத்து விட்டு மீண்டும் வருகிறார்கள். இவ்வாறே பின்னும் பின்னும் தொடர்கிறது. முத்தர் ஆற்றாமையால் தொய்ந்து நொடிகிறார், எடுத்துரைஞர் முத்தரை அணுகி அவரைத் தொட்டுத் தடவி ஆறுதல் கூறுமாப்போலப் பாடுகின்றனர்.)

எடுத்துரைஞர்:
மேழி பிடிக்கும் கை
முகம் சோர்ந்து நிற்கிறதே
கலப்பை பிடிக்கும் கை
கை சோர்ந்து நிற்கிறதே.

வேலித்தழை பறித்து
விரல் எல்லாம் கொப்புளþ
காட்டுத்தழை பறித்து
கை எல்லாம் கொப்புளமே.

சுவாமிநாதர்: ஏன் முத்தர்?

முத்தர்: நீங்கள் போங்கோ, நான் இராசம்மா வர, ஒருதரம் யாழ்ப்பாணத்துக்கு - கொட்டடிக்குப் போய் முருகேசுவைப் பாத்திட்டு நாளை நாளையிண்டைக்கு......

சுவாமிநாதர்: "நன்றே செய்க, அதுவும் இன்றே செய்க",
"நாளை என்பதும் இல்லை என்பதும் ஒன்றே"
எண்டு பெரியவை சொல்லுவினம்.

வீரவாகு: (திடுக்குற்று) ஏன் முருகேசு மைச்சானுக்கு என்ன?

சுவாமிநாதர்: (பதட்டத்தைச் சாந்தி செய்து கையமர்த்தி) முத்தர்! முதலியாவளவிலை ஆணையாய்ச் சொல்லுறன், என்னை நம்பும். தம்பி வீரவாகு! பாம்பு கடிச்சது. முத்தர் (தைரியப்படுத்தி) நீர் இப்ப தந்த இதே காசை நான் அப்படியே கொண்டை எல்லாம் சரிப்பண்ணுறன், நாளையிண்டைக்கு அவனையும் கிற்நொச்சிக் கமத்துக்கே உங்களிட்டை அனுப்பி வைக்கிறன். நீங்கள் நிம்மதியாய்ப் போங்கோ (லாம்பை எடுத்து வழிகாட்டி பிடித்தபடி அடியெடுத்து வைக்கிறார். முத்தரிடம் திரும்பி) ஆட்டை அவிழுமன், (முத்தர் ஆட்டை அவிழ்த்துக்கொண்டு பின்செல்ல, எல்லாரும் வெளியேறும்போது அனைவரும் அவரவர் நிலையிற் பேசாப் பாவனையில் உறை நிலையடையப் பாடல் ஒலிக்கிறது.

எடுத்துரைஞர்:
எங்கே போகிறீர்? எங்கே போகிறீர்?
போகும் இடமறிந்து போக வழியுமின்றி
எங்கே போகீறீர்? எங்கே போ....


காலிற் பலமுமின்றி, கைகள் துவண்டு விழ
ஆடி உடல் நடுங்க மூசி வியர்வை விழ
எங்கே போகிறீர்? எங்கே போ.....

கூட இருந்தவர்கள், சூழல் வெதும்பி அழ
சோக இதயமுடன் சோர வழி அலைந்து
எங்கே போகிறீர்? எங்கே போ.....

மீண்டும் உழன்று அழிந்து மீளும் வகை அறியா
நீண்ட பயணமதன் நீள வழி நடுவே
எங்கே போகிறீர்? எங்கே போ....

(முதலாம் காட்சி முடிவு)

II

(விவசாயிகளின் பதினைந்து வருடக் கிளிநொச்சிச் சீவியத்தை வெளிக்காட்டும் கூட்டுக்கூத்து. தடித்த எழுத்திலுள்ளவற்றை விவசாயிகள் கூட்டாகப் பாடுகின்றனர்)

எடுத்துரைஞர்:
மூ ஐந்து வருஷங்கள் முன்சென்று ஓடியன.
முத்தருடன் சேர்ந்து சிலபேர்
முன்னாளில் முதலிக்குக் கிளிநொச்சி மண் வந்து
முதலிலே காடழித்தார்.
கூலிக்கு வேலை எனக் கொண்டு வந்தோர் எல்லாம்
கும்பங்களோடு வந்தார்.
கேடுற்ற முதலிக்குச் சேவகஞ் செய்தேழைக் மூ ஐந்து....
கூலி விவசாயி ஆனார்.

நாளைக்கு நாளைக்கு நன்மை வரும் என நம்பி
நாள்தோறும் உழைத்து அழிந்தார்.
நாளுக்கு நாளாக் நானூறு ஏக்கரிலும்
நெற்பயிர்கள் ஓங்கி வளர,
வேளைக்கு வேளைக்கு விவசாயி வீட்டவர்கள்
வெறுவயிறு நொந்து வாட
பீடுற்ற பெருவாழ்வும் போகமும் முதலியார்
பெற்ற விதம் அறிய வருவீர்.

எடுத்துரைஞர்:
காடுகள் பற்றைகள் வெட்டினோம்-பெரும்
கட்டைகள் தீக்கிரை ஆக்கினோம்.

விவசாயிகள்: வேருகள் கிண்டியே போக்கினோம்- தினம்
வெட்டை வெளி உருவாக்கினோம்.
கோடாலி மண்வெட்டி பிக்கானும்-நல்ல
கூரான கத்திகள் பாரைகள்
ஏராளம் எங்களின் கைவழி - தினம்
போராடி விளைநிலம் ஆக்கினோம். காடுகள்.....

பென்னம் பெரிய கற்பாறைகள் - வரின்
பாரிய ஆமாரால் நொறுக்கினோம்
பின்னும் டயினமைற்றினால் -கல்லுப்
பிளந்து சீராக்கினோம் தறையினை
இன்ன வகையில் இடையின்றி -தறை
இரண்டு மூண்டு தரம் கொத்தினோம்.
பின்னும் ஒரு தரம் சாறினோம்- பெரும்
காடு வயல்வெளி ஆனது. காடுகள்.....

எடுத்துரைஞர்:
நானூறு ஏக்கரில் உங்களுக்கெத்தனை
நாலு பரப்பேனும் தந்தவரோ?
வீணில் உழைப்பினை விற்று வறுமையில்
வாழ்வை இழந்தவர் நீரல்லவோ?

விவசாயிகள்: பெரிய மழை வந்து பெய்தது- தறை
முழுதும் விதை நெல் விதைத்தனம்
மிருகம் அதை நாசம் செய்யாமல் - தினம்
இரவு பகல் எல்லாம் காத்தனம்.

வெயில் பனி மழை குளிர் வென்று நாம் - இந்த
வயல்வெளி உயிரென வாழ்கிறோம்.
பயிர் செழித்தோங்கி வளர்ந்திட - நெல்லுக்
கதிர் தலை சாய்த்துக் குனிந்தன.

நெற்கதிர் முற்றி விளைந்தது- நாங்கள்
நற்கூர் அரிவாள் கைப்பற்றினோம்.
வெட்டிச் சரித்த நல் உப்பட்டி - பிடி
கட்டி அடுக்கிப் போர் வைத்தனம் காடுகள்.....

எடுத்துரைஞர்: வயலே உயிரென வாழ்ந்தீரே - என்றேனும்
வயிறு நிறை சோறு திண்டதுண்டோ?
வீணில் உழைப்பினை விற்று வறுமையில்
வாழ்வை இழந்தவர் நீரல்லவோ?

விவசாயிகள்:சூடு மிரித்திடச் சொன்னதும் - கதிர்ப்
பாய்கள் விரித்ததிற் பரவினோம்.
மாடு களக்கட்டை கட்டியே- நாங்கள்
வரிகையிற் சுற்றி வளைத்தனம்.

பொலியோ பொலி என்று கூவினோம்-நெல்லு
மலையோ மல என வந்தது.
சுளகுகள் கொண்டதைத் தூற்றினோம்-பதர்
நீக்கியே மூட்டைகள் ஆக்கினோம்.
லொறிகள் வரிசையில் வந்தன-மூடை
தெருவரை கொண்டுபோய் ஏற்றினோம்.
பெரிய விளைச்சலை ஆக்கினோம்- இதைப்
பின்னும் பின்னும் தொடர்ந்தாற்றினோம். காடு.....

எடுத்துரைஞர்: காடுகள் வெட்டியே களனிகளை ஆக்கியவர்
கருமமே கண்ணயினார்.
மூலதனம் இட்டவனோ முறையாய் உழைப்பதனை
முழுதாய் உறிஞ்சலானான்.
பாடுபடும் விவசாயி பாதாள வறுமையில்
பராரியாய்ப் பஞ்சை ஆனான்.
(முதலிகளைச் சுட்டிக்காட்டி)
இலாபமதில் ஒரு பகுதி மூலதனமாக மென்
மேலும் முடக்கலானான்.

மாடமாளிகையோடு காணிபொருள் கார் பண்டம்
முதலியார் சோந்தையாக
சாண் ஏற முழம் கீழே சறுக்கியிட விவசாயி
சலியாதுழைத்து வந்தன்.
இலாபமதை உடனுடனே இரட்டிப்பாய் ஆக்குவதே
இலக்காக முதலி கொண்டான்.
வாணாளை முதலிக்கு வாரியே வழங்கியவர்
வாழ்க்கை வரலாறு கா­ர்.

விவசாயிகள்: உழவு மிசின்களாம் வந்தன- அவை
உருவிற் பெரியன உறுமின.
நிரை நிரை மண்தறை நீளப் புரட்டின
வடிவாய் இருந்தது வாயைப் பிளந்திட்டம்.
உழவு மிசினுடன் பெட்டிகள்-நல்ல
உருக்கால் இணக்கிய கலப்பைகள்
பின்பும் ஒரு மிசின், பிறகும் ஒரு மிசின்
வந்து திரிந்தன வயல்வெளி எங்கணும்
உறுமியே வந்த மிசின்களை - நல்ல
உறுப்பாய் இயக்கினர் இரண்டு பேர்.
அறுபது பேர் கூடி ஆறுநாட் கொத்திய
அவளவு தறையையும் ஒரேநாள் உழுதனர்.

எடுத்துரைஞர்: மக்கள் உழைப்பினை மறைவில் உறிஞ்சிடும்
மார்க்கம் இல்லா நிலையில்,
மக்கள் உய்வுக்கொரு யந்திரம் வந்திடின்
மாற்றம் சிறந்தது தான்
உற்பத்திச் செலவினை உடனே குறைத்திடும்
யந்திரம் கொண்டு வந்தே
உழைக்கிற மக்களின் உழைப்பை மறுத்திடும்
உலகை வெறுத்திடுவோம்.

விவசாயிகள்: முதலியார் எங்களைக் கூப்பிட்டார் - உடன்
முன்வந்து பதமையாய்க் கூறினார்.

முதலி 1: வயல்வெளி ஆக்கினீர், வருவாய் மிகுந்தது
வரராவாராம் பத்து ரூபாவும் தந்தனான்.

முதலி 2: உழவு மிசின் சில வாங்கினேன், - ஆக
உங்களுக்கு இனி இல்லை வேலைகள்.

முதலி 1: ஐந்தாறு பேர் போதும் இனிமேற் கமத்தினில்
இந்த மிசின்களே இங்கே மிச்சம் மிச்சம்.

முதலி 2: புதிதாய்ச் சில காடு வெட்டுங்கோ-வெட்டி
வயல்வெளி மென்மேலும் ஆக்குங்கோ,

முதலி 1: சிலநாள் இருந்திங்கு சீவித்தபின் நீங்கள்
சிலகாலம் ஊர் சென்று சுகமாக வாழுங்கோ

எடுத்துரைஞர்: உங்கள் குடும்பத்துக்கு உதவி செய்ய என்றோ
உங்களை முதலியார் கூப்பிட்டவர்?
தங்கள் குடும்பத்துத் தனியுடைமை, பணம்
தரமாய் உயர்த்தவே கூட்டி வந்தார்.

முதலி 1: நாற்று நடும்போது வாருங்கோ-பிறகு
சூட்டுமிரியோடும் வாருங்கோ.

முதலி 2: புல்லுப் பிடுங்கிடும் தொல்லை இல்லாமலே
நல்ல மருந்துகள் நாளை வரும் இங்கு.

விவசாயிகள்: என்றெங்கள் முதலியார் சொன்னதால்-தேய்ந்து
இன்றிங்கு நாம் சிலர் ஆகினோம்,
உழைக்க வழியின்றி ஊருக்குப் போனவர்
கிடைக்கிற சில்லறைக் கூலி வேலை செய்தார்
வேலை இல்லாததால் வாடுறோம்-இன்று
கூலி இல்லாததாற் சாகிறோம்.
கொண்டுவந்த பலம், பண்டம் அழிந்தது
கும்பி கொதித்திடக் கூப்பன் அடைவு ஐயோ!

எடுத்துரைஞர்: உங்கள் குடும்பத்துக்கு உதவி செய்ய என்றோ
உங்களை முதலியார் கூப்பிட்டவர்?
தங்கள் குடும்பத்துத் தனியுடைமை, பணம்
தரமாய் உயர்த்தவே கூட்டி வந்தார்.
பொன்போல் உழைப்பினைப் போற்றி வளர்க்கவோ
பொல்ல முதலியார் கூப்பிட்டவர்?
உங்கள் உழைப்பினை உறிஞ்சிக் கொழுக்கவே
உசாருடனே உம்மைக் கூட்டி வந்தார்.

எடுத்துரைஞர்:1 பண்படுத்தாத பூமி பலநூறு ஏக்கர் உண்டு.
கண்களுக்கு எட்டாத் தூரம் களனி நெல்வயல்கள் உண்டு
பெண்களும் புதிய காரும் பெருந்தனம் மேலும் உண்டு
உங்களைப் பலிக்கடாவாய் உரித்திடும் முதலி பாரீர்
(முதலி இருவரையும் கயிற்றாற் கட்டி இழுத்துவந்து முன் நடு மேடையில் நிறுத்துகின்றனர்.)

எடுத்துரைஞர்: 2 உழைப்பினை விற்கும் ஏழை உழவரச் சுரண்டி நாளும்
உழைப்பவர் உதிரந் தன்னை உறிஞ்சுமோர் அட்டைச் சாதி
மிகைப்பட இலாபஞ் சேர்த்து மிடுக்குடன் வாழும் சாதி
பணத்திமிர், பதவி ஆசை - பரம்பரை முதலி பாரீர்.

(சுவாமிநாத முதலி, அவரது மகன் அரியரத்தின முதலி இருவரையும் மேடைக்கு நடுவே இழுத்து வந்து அவர்களை நோக்கி எடுத்துரைஞர்கள் கேள்விக் கணை பொழிகிறார்கள். இனிமேல் வரும் தடித்த எழுத்துக்களிலான வசனங்களை அரியரத்தின முதலியும் ஏனையவற்றைச் சுவாமிநாத முதலியும் பேசுகின்றனர்.)

எடுத்துரைஞர்கள்: யார் இவர்கள்? யார் இவர்கள்?

முதலி : ஏழை விவசாயி என்னுடைய குடிமக்கள். கூலிகொடுக்கிறேன் குடும்பமாய் வாழுகிறார்.

எடுத்துரைஞர்: எவ்வளவு கர்வமடா, ஏன் அவர்கள் ஏழைகளோ?

முதலி: பிறப்பாலே ஏழை அவர், கூலி கொடுத்தவரை வாழவைப்போன் நான் நானே.

எடுத்துரைஞர்: ஓ ! உழைக்கின்ற சாதிக்கு உழைக்கா நீ வாழ்வளிப்பா?

முதலி: பாவம் அவர் பிழைக்கட்டும், பாடுபட்டார் என் நிலத்தில்.

எடுத்துரைஞர்: (மாறிமாறி) உன் நிலமோ? உன் நிலமோ?

முதலி: என் நிலமே, என்னுடைய மூலதனம், என்னுடைய உழவு மிசின், என்னுடைய முதலீடு.

எடுத்துரைஞர்: உழைப்புக்குப் பதிலாக ஊதியமும் கொடுப்பாயோ?

முதலி: இலாபத்தை எடுத்த பின்னர் இவர்களுக்குக் கூலி உண்டு.

எடுத்துரைஞர்: (மாறிமாறி) எவ்வளவு? எவ்வளவு?

முதலி: (சினந்து) இப்படி ஏன் கேட்கின்றாய்?

எடுத்துரைஞர்: ஓஹோ! உழைக்காமல் இருந்தபடி உழைப்பவனை உறிஞ்சுகிறாய்! ஊததான்ரா சுயநலமும், உதையே தான் சுரண்டல் என்போம்.

விவசாயிகள்: (ஒருவரை ஒருவர் மாறிமாறிப் பார்த்துத் திட சித்தத்தோடு தெளிவாக மாறிமாறி)
சுரண்டல் சுரண்டல் சுரண்டல் சுரண்டல்
(தொனி கூடிக்கூடி உச்சநிலை அடைகிறது)

எடுத்துரைஞர்: கண்ணுக்கெட்டாத் தூரம் காணி உனக்கெங்காலே?

முதலி: என் சொத்து, என் சொத்து.

எடுத்துரைஞர்: (மாறிமாறி) தந்தது ஆர்? தந்தது ஆர்?

முதலி: கடவுள் தந்தவர்.

எடுத்துரைஞர்: (மாறிமாறி) நேரிலை வந்தோ? நேரிலை வந்தோ?

முதலி: என்ன நீ அதட்டுகிறாய்? பாட்டன் சொத்து, கடவுள் கிருபை.

எடுத்துரைஞன்: உழைப்பவர்க்கு இல்லாக் கடவுள் கிருபை, உழைக்காத உனக்கு எப்படிக் கிடைத்தது?

முதலி: அவரவர் வினைப்பயன், அவரவர் தலைவிதி.

எடுத்துரைஞர்: (மாறிமாறி) பகிடியா விடுகிறாய்? பகிடியா விடுகிறாய்?

முதலி: உறுதிகள் உண்டு, உசுப்பேலாது.

எடுத்துரைஞர்: உறுதி? யாரடா எழுதின, அதுவும் கடவுளோ?

முதலி: பிறகும் பிறகும் அதட்டுறாய் உரிமையை, சட்டம் இருக்குது கொட்டம் அடக்குவோம்.

எடுத்துரைஞர்: (நையாண்டியாக நெளித்து) ஓஹோ! சட்டம்.

விவசாயிகள்: (ஆவேசத்தோடு ஒருவரை ஒருவர் மாறிமாறிப் பார்த்து) சட்டம் சட்டம் சட்டம் சட்டம்.
(கூடி ஆடுகிறார்கள். முதலிகள் பதுங்கி இருந்து நழுவி வெளியேறுகிறார்கள்)
கண்டுவிட்டோம் உண்மை கண்டு விட்டோம்-நாங்க
கொண்டு விட்டோம் திடம், கொள்கை பிறந்தது.
வெற்றி காணும்வரை விடாது போராடுவோம்
வென்றிடுவோம் இனி வீணில் உழைத்திடோம்.
கண்டு விட்டோம் உண்மை கண்டு விட்டோம் - நாங்கள்.
கொண்டு விட்டோம் திடம், கொள்கை பிறந்தது.

இரண்டாம் காட்சி முடிவு

III

[கிளிநொச்சியில் ஒரு கல்வீடு. வாசற் படிக்கட்டுகள், நடுவிலே ஒரு கதவு, சுவர் மணிக்கூடு, றேடியோ, என்பன தெரிகின்றன. கூடத்தில் ஒரு ரீப்போவும் இரண்டு கதிரைகளும் மட்டும் உள்ளன. தலையிலே துண்டு கட்டிய இருவர் (சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக் புஞ்சி பண்டாவும், வீரவாகுவும் என்பது பின்னர் தெரியவருகிறது) சீனி மூட்டைகளைத் தூக்க முடியாது தூக்கி வருகின்றனர். கொண்டுபோய் வீட்டுக்குள்ளே அடுக்குவதும் திரும்பி வெளியே போதுமாக வியர்வை ஒழுக ஒழுக வேலை செய்கிறார்கள்]

எடுத்துரைஞர்:
உழைப்பவன் உதிரந் தன்னை உறுஞ்சுவான் சுரண்டல் மன்னன்
இனிமேல்,
புலப்படும் புதிய பாதை, வெளிப்படும் மக்கள் சக்தி
மீனைக்கெடும் தொழிலை மாற்றிப் புறப்படு விடிவை நோக்கி
இதுவரை,
பலப்பல தொண்டு செய்து பராரியாய்ச் சோரம் போனீர்,
இவர்க்கு நீர் பாவமூட்டை சுமப்பதோ? இனியும் வேண்டாம்.

பண்டா: சீனி முதுகில ஒட்றான்.

வீரவாகு: இவ்வளவு சீனி மூட்டையையும் கொண்டைப் பொதுக்கினால் எவ்வளவு இலாபம் வரும்? நாளையிலை இருந்து சீனி விலை ஏழரை ரூபா, றாத்தல்.

பண்டா: முதலாளிலே பரந்தன் கடேய் காஷ’யர்ப் பொடியன் கதிரேசி... அவனுக்கு லீவு கொடுத்து வீட்டுக்குப் போயி பில் போடுறாங், இந்தச் சீனிக்கு. இண்டைக்கு டேற் இல்லை. நேத்திக்கு திகதி போட்றது.

வீரவாகு: கிளிநொச்சிக்கு வந்தும் பதினைஞ்சு வருஷமாச்சு, உலகமும் எவ்வளவோ மாறி விட்டுது. புஞ்சி பண்டா! என்னைப்போலை, உன்னைப்போலை கமக்காறருக்குத்தான் உய்வைக் காணன்.

பண்டா: முதலி பரம்பர பரம்பரயா அதிகாரஞ் செஞ்சி சொத்துச் சேர்க்க, நாம முத்தர் பொறகு ஒங்கட ஜெயபாலன் தம்பி, நான் என்னோட மகள் சோமாவதி எண்டு பரம்பர பரம்பரயா அடிமைபோல மாடு மாதிரி வேலை செஞ்சி உழைச்சுக் குடுக்கிறான் இல்லே?

வீரவாகு: ஆனால் காலம் மாறுது. வெகு கெதியிலை உந்தப் போக்கிலை பெரிய மாற்றம் ஒண்டு வரும்.

பண்டா: ஸ்வாமிநாதம் மொதலாலி ஊரில நிண்டிட்டாரு. இப்ப அவரோட மகன் அரியரத்ன மொதலி எங்களை ஆட்றான். கடேசி மூட்டை சீனி இது. கொஞ்சம் சீனி அள்ளுவமா?

வீரவாகு: சீனி மூட்டை அவ்வளவும், இரவைக்கு மழை பெய்ஞ்சு ஒழுக்கிலை கரைய வேணும்.

பண்டா: அது தான் சரி. ஓடு இரண்டு கழட்டவா? அல்லது ஒண்டு செய்வமா?

வீரவாகு: உஸ்......முதலாளி வாறார்.

பண்டா: வந்தா வரட்டுமேன், நாம இனிப் பயம் இல்லே.
(அங்கு வந்த அரியரத்தின முதலிதலை வளர்த்த கோலத்தில் கையிலே ஒரு யேம்ஸ் பொண்ட் பேக்குடன் சிகரெட்டை இழுத்து இழுத்து ஊதியபடி அவர்களை மேற்பார்வை செய்தபடி, உட்சென்று பின் வெளிவந்து, ரீப்போவிலே பேக்கை வைத்துவிட்டு சிகரெட்டை ஊதுகிறார். பண்டாவும் வீரவாகுவும் வியர்வை கசியும் தமது மேல ஊத்தைத் துவாயால் துடைத்தபடி அவரிடம் வருகிறார்கள்.)

அரியரத்தினம்: என்ன எல்லாம் சரியா?

வீரவாகு: சொன்ன இடத்திலை எல்லாம் அடுக்கியிருக்கு. லொறியிலை கொண்டுண்டதை என்ன செய்யிறது?

அரியரத்தினம்: (இடை மறித்து) டே! கொட்டுண்ட சீனி முன்னையைப் போலை கூட்டி அள்ளி, வீட்டை கொண்டு போறதில்லை. இப்ப சீனி விலை ஆனை விலை. அவ்வளவையும் கொண்டுபோய்க் குஞ்சுப்பரந்தனிற் கடையிலை, காக்கா இறத்தற் பைக்கெற்றாக் கட்டி, அருமை பெருமையாய் வேண்டியவைக்கு மட்டும், மேல்விலைக்கு விக்கச் சொல்லிக் கதிரேசியிட்டைக் குடுத்திட வேணும் விளங்குதா?

பண்டா: அதெல்லாம் விளங்கும். இண்டைக்குக் கூலி?

வீரவாகு: மழைக் குளிருக்கை கனநேரம் மூட்டை தூக்கினனாங்கள், பாத்துத் தாருங்கோ.

அரியரத்தினம்: இன்னும் தீவாளி மூட்டம் வேண்டின காசு கழிச்சு முடியேல்லை. இந்த இலட்சணத்திலை ஒவ்வொரு நாளும் கூலி வேணுமோ?

பண்டா: மொதலாலி நாட்டு நிலமை தெரியாமே விசர் பேசிறது. ரவுணிலை விவசாயிகள் கூட்டம், றஸ்வீமக் போடுறது பார்க்கக்கூடப் போகாமே இங்கே வேல செஞ்சிறம். அப்பக்கூடக் கூலி தாறன் இல்லே.

அரியரத்தினம்: சீ சீ, நீங்கள் இப்ப வரவர மோசம். நில்லுங்கோ காசு எடுத்து வாறன்.
(முதலி காசு எடுத்துவர உள்ளே போக, தூரத்தில் ஒலிபரப்பியல் கூட்டத்திற் போசும் பேச்சுக் கேட்கிறது. சத்தம் படிப்படி கூடிக் கேட்கிறது. பண்டாவும் வீரவாகுவும் வெகு உன்னிப்பாய்க் காது கொடுத்துக் கேட்டபடியே தமக்குள் சைகை பண்ணுவதும், குதூகலிப்பதுமாக நிற்கிறார்கள்)

பேச்சு: (எடுத்துரைஞர் ஒருவர் முன்மேடையின் இடது ஓரத்துக்கு வந்து மைக்கிலே பேசும் பாவனையில்)
"விவசாயியின் பிரச்சினையைத் தீர்ப்பதே எமது குறிக்கோள். முதலாளிகளின் நிலத்தைச் சுவீகரித்து ஏழை விவசாயிகளுக்குக் கொடுப்போம். மலைநாட்டில் இரு பதாயிரம் ஏக்கர் நிலத்தையும் யாழ்ப்பாணப் பகுதியில் நாலாயிரம் ஏக்கர் விவசாயிகளுக்குப் பங்கிடுவோம். விவசாயிகளில் தெற்கு வடக்கு தமிழர் சிங்களவர் என்று பேதம் காட்ட மாட்டோம்."

அரியரத்தினம்: (காசும் கையுமாக வந்து) என்ன ஸ்பீக்கர் போட்டுக்கத்திக் கேட்குது? உவை தொலுக்காரிக்கிறது தான். அதிலை வேலை இல்லை. இந்தாருங்கோ கூலி. நெடூகக்கேட்டு ஆய்க்கினைப் பண்ணக் கூடாது.

வீரவாகு: ஏதோ ஒருத்தரை ஒருத்தர் பேய்க்காட்டுகினம் இப்ப, ஆனால் போற போக்கிலை நாங்கள் நெடூகச் சும்மா இருக்க மாட்டோம்.

அரியரத்தினம்: ஓ!ஓ! ஆக்களைப் பாக்கத் தெரியுது.

பண்டா: இதென்ன மொதலாலி ரெண்டு ரூபா? எங்களோட பவுடியா?

அரியரத்தினம்: அது வலு திறுத்தி. நாண் கணக்கத் தந்திட்டன் வரவர விலை வைக்கிறியள்.

வீரவாகு: அப்புவர் உங்களுக்கு ஒரு அடிமை போலை. குடுக்கிறதை வாங்கிக்கொண்டு பணிஞ்சு நடந்தார். இண்டைக்கு ஒரு நாள்ச் சீவியத்துக்கு எவ்வளவு காசு தேவை? அரிசி விலை என்ன? மண்ணெண்ணை விலை என்ன? தேங்காய் விலை என்ன?

அரியரத்தினம்: உந்த விலையள் எல்லாம் எனக்குத் தெரியும். போங்கோடா

பண்டா: செய்த வேலைக்குக் கூலி. இது வாண்டாம், புடியுங்கோ மொதலாலி. இதென்ன பிச்சை? நீங்களே வைச்சிருங்க, (வீரவாகுவின் காசையும் சேர்த்துவாங்கி முதலியின் கைக்குள்ளே திணிப்பதும், அவர் தவிர்த்துத் தடுத்துப் போவதுமாக இறுதியிலே காசு கீழே விழுந்து சத்தம் எழுப்பவும் மேலே பறந்து சிதறி ஓடவும் அவர்கள் விட்டு விட்டு வெளியேறுகிறார்கள். அப்போது இராசம்மா சோமாவதி ஆகியோருடன் இன்னும் சிலர் தலையிலே தூக்கமுடியாத பாரங்களுடன் வீட்டுச் சாமான்களைக் கொண்டு பிரவேசிக்கின்றனர். பண்டாவும் வீரவாகுவும் கைலாகு கொடுத்துக் கீழே இறக்கி வைக்கிறார்கள். பின்னும் பின்னும் எல்லாருமாகச் சாமான்களைக் கொண்டு வருகிறார்கள். அரியரத்தின முதலி அருவருப்போடு முகஞ் சுழித்தபடி இருக்கிறார். அங்கும் இங்கும் நடந்து அமைதியிழந்து ஆத்திரத்தோடு அந்தரப்படுகிறார், இராசம்மாவும் சோமாவதியும் மூச்செறிந்து ஆசுவாசப்பட்டு நனைந்த சேலையைப் பிளிவதும், தலைமயிரைத் துவட்டி ஒதுக்குவதுமாகத் தம்மைத் தாமே ஆறுதற்படுத்துகிறார்கள்.)

எடுத்துரைஞர்:

தட்டுமுட்டுச் சாமான்கள் தளவாடம் பெட்டி குட்டான்
பானை சட்டி முட்டிகளாம் பக்கீசுப் பெட்டிகளாம்
சொட்டுகின்ற மழைநீரில் சுவறி எழும் கிடுநடுக்கம்
கிட்டியிடும் பற்களுடன் கிளர்ந்தெழுந்தே வருகின்றார்.

பகலிரவு பாராமல் உடலுழைப்பை ஈந்தவர்கள்
குலைகுலையாய்த் தானியங்கள் கொண்டுவந்து குவித்தவர்கள்
தலையினில் தம் ஒரே சொத்தாம் பக்கீசுப் பெட்டியுடன்
வெலவெலத்துக் குடங்குகிறார் வெறுவயிறு-குளிர் இருட்டு.

(இராசம்மா முதலிலே வானத்தைப் பார்த்துக் கையை நீட்டி மழை வருமா என ஊகிக்கிறாள். அதையே சோமாவும் செய்த பின்பு, இராசம்மா குளிரிலே கூசிக் கொங்க சோமாவதி பேசுகிறாள்.)

சோமாவதி: லேசாத் தூறுது. ராவுக்கு மழை கொட்டுறது.

அரியரத்தினம்: (கண்ணிலே கனல் பறக்க) இதென்ன மடமா, உங்கடை ஊத்தைச் சாமானுகளை எல்லாம் இங்கை காவி வந்து போட்டிட்டு? என்ன நோக்கம்?

இராசம்மா: முதலாளி, குடியிருந்த கொட்டில் எல்லாம் பாறி விழுந்து போச்சு, வயற்கரை ஒரே வெள்ளக் காடு, குளிர், கூதல். நிலத்திலை கால் வைக்க முடியாமல் தண்ணி பாயுது. எண்டும் இல்லாத மாதிரி சேறு, கரி, சகதி.

பண்டா: குடியிருக்க, மேட்டுத்தறை ஏதும் தந்தியளா?

அரியரத்தினம்: சீமெந்து போட்டுக் கப்பைப் பெலப்படுத்தக் காசு ஏன் சேர்த்துத் தரயில்லை?

வீரவாகு: இந்த அரிசி விலையிலை, எங்களுக்குத் தின்ன நெல்லுத்தலேல்லை.

அரியரத்தினம்: இவ்வளவு காலமும் தந்தன். இனிமேலும் கேட்கிறியளா? இப்ப பெற்றோல் விலை என்ன?

பண்டா: கமஞ் செஞ்ச கூட்டி வந்து பதினைஞ்சு வருஷமாச்சு. அரைப்பரப்புக் காணி தரேல்லை.

இராசம்மா: அப்பு நெல்லு லோட்டுக்கு மேலை லொறியிலை இருந்து விழுந்து செத்தப்ப அவற்றை உயிர்நட்டத்துக்குக்காசு தரேல்லை.

வீரவாகு: நயம் பயமாய்த் தருவன் எண்டு ஆசை காட்டிக் கூட்டி வந்து ஆனவாயிலை கூலி தரேல்லை.

சோமாவதி: வட்டிக்கு மட்டும் ரொம்ப சல்லி தந்தார் மொதலாளி.

அரியரத்தினம்: உதுகள் எல்லாம் நீங்கள் கமத்துக்கும் ஓம் எண்டு சொல்லி வரமுந்தி யோசிச்சு இருக்க வேணும்....இப்ப உங்களுக்கு என்ன வேணும்?

பண்டா: எங்களைப் பாத்தாத் தேவை விளங்கேல்லியா?

இராசம்மா: சாமான் சட்டியளோடை இஞ்சை ஏன் வந்ததெண்டு தெரியேல்லியா?

வீரவாகு: நீ மனிசர் மக்களைச் சேர்ந்தனியா?

சோமாவதி: மொதலாளிக்கு மனது இல்லை? கண் பொட்டையா?
(ஒரு ட்றாக்ராச் சத்தம் வலுத்து வருகிறது. அனைவரும் தெருவை நோக்கி, அச்சத்தோடு திரும்பி மெல்ல மெல்லத் தம் நிலை அடைகின்றனர். பெட்டி இல்லாத உழவு மிசின் ஒன்றிலிருந்து ஜெயபாலன் இறங்கித் தனியாக வருகின்றான். அனைவரின் பார்வையும் அவனது பாதையைப் பின்தொடர அதற்கியைய அனைவரின் உடம்புகளம் திரும்புகின்றன. ஜெயபாலன் அரியரத்தினத்தை அணுகியதும் அவன் நடுவிலே நிற்க அனைவரும் ஒரே நேரத்தில் பொத்திய கைகளை உயர்த்தி என்ன எனக் கேட்கிறார்கள். முதலி மட்டும் கண் இமையும் வெட்டாது முறாய்த்துப் பார்த்தபடி நிற்கிறார்.)

எடுத்துரைஞர்:
பெட்டி எங்கே? பெட்டி எங்கே?
பெட்டி எங்கே? பெட்டி எங்கே?
களவாக வைக்கலுக்குள் கட்டி வைத்த நெல்லு எங்கே?
பெட்டி இல்லா உழவு மிசின்? பெட்டி லோட் நெல்லு எங்கே?
பெட்டி எங்கே? பெட்டி எங்கே?
பெட்டி இல்லா உழவு மிசின், பீதியுடன் ஜெயபாலன்
கிட்டவர முதலாளி கிலி பிடித்துச் சிலையானான்.
பெட்டி எங்கே? பெட்டி எங்கே?
பெட்டி எங்கே? பெட்டி எங்கே?

ஜெயபாலன்:ட்றைவரைப் பிடிச்சு வைச்சிருக்கு, லொக் அப்பிலை போடமுதல் இப்பவே போங்கோ பிணை எடுக்க,

அரியரத்தினம்: காசு ஐநூறு குடுத்தனே. என்ன நடந்தது? என்னடா ஜெயபாலன்? என்ன?

ஜெயபாலன்:ஏன் விளங்கேல்லையா? நெல்லு லோட் பெட்டியோடை ஆனையிறவிலை. ஐஞ்சாவது முறை பிடிச்சிட்டாங்கள். போய்ப் பாருங்கோ.

அரியரத்தினம்: (கிலி பிடித்து) ம்......சாவி?

ஜெயபாலன்: ம்.....சாவியைத் தாருங்கோ முதலாளி.

அரியரத்தினம்: என்ன சாவி? நான் உன்னைக் கேட்கிறன்.

ஜெயபாலன்: வீட்டுக் கதவுச் சாவி, கெதியிலை.

அரியரத்தினம்: நீ என்ரை ட்றாக்ரர்ச் சாவியைத் தா? வீட்டுத் திறப்பு நான் தரமாட்டன்.

ஜெயபாலன்: ட்ராக்ரர்ச் சாவியை இப்ப தரமுடியாது. நீங்கள் வாருங்கோ சாமானகளைத் தூக்கிக்கொண்டு. (அனைவரும் திகிலுடன் அடிமேல் அடி எடுத்து வைத்து முன்னேறுகிறார்கள்)

அரியரத்தினம்: ஜெயபாலன், உன்னாலை முடியாது. திறப்பு இஞ்சை இருக்கு. வீட்டுக்குக் காவலாய் வெளியிலை நில்லுங்கோ நான் வாறன் பிறகு பிணை எடுத்தாப்போலை.
(எல்லாரும் வெளியேறும் முதலாளியை ஒரே சமயத்திற் திரும்பிப் பார்த்தவர்கள். மீண்டும் பின்திரும்பி ஒரே சமயத்தில் ஜெயபாலனை நோக்குகிறார்கள். முதலி போய் மறைகிறார். ஜெயபாலனைத் தொடர்ந்து யாவரும் முன்னேறுகிறார்கள். ஜெயபாலன் கதவுக்குக் காலால் ஓர் உதை விடுகிறான்.)

எடுத்துரைஞர்:
கதவே திற என்று கதறி அழவில்லை
உடனோர் தேவாரம் உருகி வரவில்லை
உறுதியுடன் காலால் உதைகள் விடுகின்றார்
விலகி ஒரு கதவு வீசி எறிபடவே.

உறுதியுடன் காலால் உதைகள் விடுகின்றார்
உதைகள் விடுகின்றார், உதைகள் விடுகின்றார்.

(கதவு டாண் என்று திறக்கிறது. அனைவரும் குனிந்து பெட்டி பொட்டளிகளைத் தூக்க முற்படுகிறார்கள். ஜெயபாலன் அவர்களது கவனத்தைத் தன்பால் ஈர்த்து நிதானமாகக் கூறுகிறான்.)

ஜெயபாலன்: பொறுங்கோ, நீங்கள் போராடி எல்லாம் வென்றெடுத்திட்டம் எண்டு அதிகம் சந்தோஷப்படத் தேவையில்லை. முதலியன் போற போக்கிலை, அவைக்கு இண்டைக்கு இருக்கிற செல்வாக்கிலை, நாடு இண்டைக்கு இருக்கிற நிலைமையிலை பொலிஸ், விதானை எல்லாம் கட்டாணம் இப்ப இங்கை வரும் வேணுமெண்டால் குடியிருக்க எங்களுக்கு மேட்டு நிலத்திலை வீடு கட்டித் தரச் சொல்லிக் கேட்கலாம். வெள்ளம் வடியும் வரை இதிலை இருக்கலாம். அவ்வளவு தான்.

பண்டா: ஆனா ஒண்டு. நாங்கள் ஐக்கியப்பட்டம்.

ஜெயபாலன்: ஆ, அது தான் எங்கடை முதல் வெற்றி. இனி மிச்சம் கெதியிலை நாங்கள் இலங்கை அடையலாம். எங்களை நாங்கள் இனங் கண்டிட்டம். இனி, ஒண்டாய் முன்னுக்குப் போவம்.

(தம்நிலை உணர்ந்து நிதானமாக எல்லாரும் எல்லாப் பொதிகளையும் உள்ளே கொண்டுபோய் வைக்கிறார்கள். சோமாவதி நனைந்த சீலை ஒன்றைப் பிளிந்து தூக்குகிறாள். எல்லாரும் மகிழ்ச்சியுடன் முன் விறாந்தைக்குப் போகிறார்கள். ஜெயபாலன் அரியரத்தின முதலியின் றேடியோவைக் கண்டு அதற்குக் கிட்டப் போகிறான்.)

வீரவாகு: இப்ப நேரம்? (சுவர் மணிக்கூட்டைப் பார்த்து) ஒன்பது அஞ்சு. செய்தி நடக்கும், போடு தம்பி கேட்பம்) (வானொலிச் செய்தி அறிக்கையை அனைவரும் கூர்ந்து கேட்கிறார்கள்)


செய்தி: (எடுத்துரைஞர் ஒருவர் மேடை இடப்புறமாக வந்து வாசிக்கிறார்)

"நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கை கிளிநொச்சியில் பெருந்தொகையான விவசாயிகள் மத்தியிலே பேசிய விவசாய அமைச்சர், முதலாளிகளின் நிலத்தைச் சுவீகரித்து ஏழை விவசாயிகளுக்குக் கொடுப்பதே அரசின் நோக்கமாவும் எனக் கூறினார். நாட்டை உணவிற் தன்னிறைவு எய்தவைக்க விவசாயிகளுக்கு அரசு சகல உதவுகளையும் அளிக்கும் என்றும் கூறினார். இஸ்லாமிய நாடுகளின் உச்சி மகாநாடு...."
(ஜெயபாலன் றேடியோவை நிற்பாட்டுகிறான். இராசம்மாவும் சோமாவதியும் ஆவி பறியும் தேநீர் பரிமாறுகின்றனர். ஊதி ஊதி வாய் வைத்து எல்லாரும் உறிஞ்சிச் சுவைத்துக் குடிக்கிறார்கள்.)

ஜெயபாலன்: சோக்கான ரீ, சீனி எங்காலை?

வீரவாகு: சீனிக்கு என்ன குறை? சொண்டோடை சொண்டு ஓட்ட இனிப்புக் கரைக்கலாம், உள்ளுக்கு இருக்கு வேண்டியளவு.

இராசம்மா: எல்லாம் சரி, இனி முதலாளி வந்து வெளியிலை போகச் சொல்லி கலைச்சால்.....?

சோமாவதி: வயற்கரையில இப்ப கொட்டில் போடேலாதானே.

வீரவாகு: பிரச்சினையள் முத்தி வெடிக்கப் போகுது.

இராசம்மா: ஏன், என்ன? என்ன?
(எல்லோரும் பதட்டத்தோடு ஆவலாய் நோக்கவும்)

வீரவாகு: போற போக்கிலை முதலிலை பண்டாவுக்குச் சீட்டுக் கிழியும்.

இராசம்மா: பிறகு எங்களிலை கைவைப்பார்.

வீரவாகு: அதுதான் பிளான். ஊராலை புதுசாய்க் கூலிக்காறரைப் பிடிச்சுக்கொண்டு வருவார். சுவாமிநாத முதலியார் எங்கள் எல்லாரையும் கமத்தாலை விலத்துவார்.

சோமாவதி: இது அப்பிடி விடேலா தானே.

பண்டா: நாங்க போகவேண்டாம்.

இராசம்மா: நாங்கள் இஞ்சையே செத்தாலும் போகமாட்டம்.

வீரவாகு: எங்கடை இரத்தம், வேர்வை, உழைப்பு, வாழ்க்கை, இன்பம், துன்பம் எல்லாம் இந்தக் கமத்திலான் இருக்கு. நாங்கள் ஏன் விட்டிட்டுப் போகவேணும்?

ஜெயபாலன்: என்னட்டைச் சரியான திட்டம் இருக்கு.

எல்லாரும்: (ஏககாலத்தில் ஆவலோடு) என்ன? (கேள்வி எழுப்புகின்றனர்)

வீரவாகு: காணி உச்சவரம்பா?.....

ஜெயபாலன்: இல்லை, இது வேறை....

(கார் ஹோர்ண் கேட்கிறது. அனைவரும் வாசலை நோக்குகிறார்கள். அரியரத்தின முதலி காரால் இறங்கி நடந்துவருகிறார். இதைக் கண்டு அனைவரும் என்ன செய்வதென்ற தீர்மானம் இன்றி ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். இதற்கிடையில் புஞ்சிபண்டா "ச் ச்' என்று அனைவரது கவனத்தையும் தன்பால் ஈர்த்து, சத்தமில்லாமல் அனைவரையும் உள்ளே போகும்படி சைகை செய்ய, எல்லோரும் அடிமேல் அடி எடுத்து வைத்து உள்ளே போய்க் கதவை அடித்துச் சாத்திக் கொள்கிறார்கள். வீரவாகு மட்டும் வெளியே காணப்படுகிறான். வீட்டுக்குள் வந்த அரியரத்தின முதலி சுற்றும் முற்றும் பார்த்து, மூட்டை முடிச்சுக்களோ ஆட்களோ இல்லாதது கண்டு மகிழ்ச்சி மீதூர வீரவாகுவைத் தோளிற் கைபோட்டுக் கூட்டிக்கொண்டு போகிறார். அவரது கையிலே சாராயப் போத்தல் இருக்கிறது. அரை மப்பு நிலை.)

அரியரத்தினம்: இஞ்சை வா, இதென்ன நீ கூச்சப்படுகிறாய்? இவ்வளவு நேரமும் மூட்டை தூக்கி நல்லாய்க் களைச்சிருப்பாய். கொஞ்சம்....ம் (போத்திலைத் திறந்து கிளாசில் ஊற்றப்போகிறார்.)

வீரவாகு: இதென்ன? இதெல்லாம் ஏன்? வேண்டாம் முதலாளி.

அரியரத்தினம்: எட நீ என்ன? (மீண்டும் ஊற்ற எத்தனிக்கிறார்.)

சுவாமிநாதர்: (திடீரென வந்துகொண்டே) என்னது போத்தல் சத்தம்?

அரியரத்தினம்: (அசடு வழியத் திடுகூறாய் ஒழித்துவிட்டு) ஓ! அது தேங்காய் எண்ணை, முறுகண்டிப் பிள்ளையாருக்கு, வீரவாகுவிட்டைக் குடுத்தனுப்ப... (வீரவாகு எழுந்து சுவாமிநாதமுதலிக்கு இடம் கொடுக்கிறான்.)

சுவாமிநாதர்: (இருந்து ஆசுவாசப்பட்டு) முரசுமோட்டைக் கமத்தாலை முத்தையனைக் கலைச்சாச்சா? தம்பி வீரவாகு! வா கிட்ட. என்ன புடுங்குப்பாடு உன்னோடை?

அரியரத்தினம்: வீரவாகுவோடை ஒரு கரைச்சலும் இல்லை. இவன் புஞ்சி பண்டா தான் ஒரு மாதிரியான போக்கு. அது தான் கூட வேலை செய்யிறது வீரவாகு, கொஞ்சம் எச்சரிச்சு வைச்சால் அவதானமாய்ப் புழங்குவான்.

சுவாமிநாதர்: (வீரவாகுவைக் கிட்ட அணைத்து) நீ எங்கடை ஆள். உனக்கென்ன அவங்களோடை கூட்டு? அவங்கள் திட்டமிட்டு இவடத்தாலை எங்களைக் கலைக்கெண்டும் பிளான் போடுவான்கள். அவங்கள் தங்கடை நாட்டை விஸ்தரிக்க நீயும் உடந்தையாய் இருந்து உதவு செய்யிறதா? உனக்கும் மானம் மரியாதை உரிமை எண்டு ஒண்டு இல்லையே? என்னெண்டாலும் நாங்கள் விட்டுக் குடுக்கக்கூடாது. நீ ஊரைவிட்டுப் பெயர்ந்து இஞ்சை வரயிக்கையே நான் நல்ல வடிவாய் வழிக்குவழி சொல்லி விட்டனான். எங்கடை சாதி, எங்கடை இனம். அதை மறக்கப் படாது.

வீரவாகு: வீண் கதை வேண்டாம். ஏன் சுத்தி வளைப்பான்? விஷயம் என்னெண்டு. நேரை சொல்லுங்கோ.

அரியரத்தினம்: வீரவாகு விஷயம் இது தான். புஞ்சி பண்டா இப்ப கொஞ்சம் ஓவர். சொல்வழி கேட்கிறதில்லை. அதட்டி எதிர்த்துக் கதைக்கிறான், சிலவேளையிலை... தொழிற் சங்கமோ ஏதோ எண்டு எல்லாம் வேண்டாத விஷயங்களிலை மினைக்கெடுறான். அவனை நான் கமத்தாலை விலக்கப்போறன். இதென்ன கொம்பனியே வேலை நிறுத்தம் அது இதெண்டு வெருட்ட? ஆனபடியால் புஞ்சிபண்டாவோடை நீ 'கற் அன்ட் றைற்' றாய் நடந்து கொள்ள வேணும். மற்றது உன்ரை மோன் ஜெயபாலன்.

சுவாமிநாதர்: அவனைப் பற்றித் தானை நான் கனக்கக் கேள்விப்பட்டன், அவர் தானாமே புஞ்சி பண்டாவுக்கு வழிகாட்டி?

அரியரத்தினம்: ஓ, தெரியாதே இளமைத் துடிப்பு.

வீரவாகு: ஏன் அவனிலை என்ன பிழை?

அரியரத்தினம்: அவன் என்ன செய்யிறவன் எண்டது உனக்கு வடிவாய்த் தெரியும், கட்டுப்படுத்தி வை, பிரச்சினையன் முத்தினாப் பிறகு வீணாய்க் கவலைப்பட வேண்டாம்.

வீரவாகு: நீங்கள் ஏனப்பா வில்லங்கப் படுறியள்? நான் சொல்லுறனே- நீங்கள் தமிழர் சிங்களவர் எண்டு பேதம் காட்டி எங்களைப் பிரிக்கேலாது. நாங்கள் கூலிக்குக் கமவேலை செய்யிற ஆக்கள் எண்ட முறையிலை ஒருமுகமாய் ஒண்டு பட்டிட்டம்.

சுவாமிநாதர்: அது சரி, ஆனால் இனம் இனத்தைச் சார வேணும். சாதி சாதியைச் சார வேணும்.

வீரவாகு: நாங்கள் உழைக்கிற இனம். அதுதான் ஒண்டு சேர்ந்திருக்கிறம்.

சுவாமிநாதர்: இவன் என்ன கதைக்கிறான்? தேப்பன் முத்தற்றை அடக்கம் என்ன, பழக்க வழக்கம் என்ன? பண்பாடென்ன? மரியாதை என்ன? இவனொரு....(பொருமுகிறார்.) இவனை என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.

வீரவாகு: ஒண்டு மட்டும்சொல்லுறன் உங்களுக்கு. என்னை இந்த மட்டிலை வைச்சுக் கதைக்கிறியள். எங்கடை அடுத்த சந்ததி உங்களை என்ன செய்யுமோ நான் அறியன்.

சுவாமிநாதர்: பாத்தியே வாய் நீளுது. இவர் சரியாய்ப் பழுதாய்ப் போனான். நான் எதிர்பார்க்கயில்லை.

அரியரத்தினம்: நீங்கள் ஊரிலை குசாலாய் இருக்கிறியள், இப்ப இஞ்சையும் காவம் மாறுது. திடீர் மாற்றங்கள்.

சுவாமிநாதர்: இதென்ன பேய்க்கதை, விதானை பொலிசும் இல்லையே?

வீரவாகு: நீங்கள் உங்கடை கதையளைப் பறையுங்கோ. எனக்கு உதுகள் தேவையில்லை. நான் வாறன்.

சுவாமிநாதர்: கெடுகுடி சொற்கேளாது. அழிவுக்கு அடுக்குப் பண்ணுறாய். (வீரவாகு வீட்டுக்கதவை நெருங்ககிறான்.)

அரியரத்தினம்: பொறு, பொறு; உங்கை எங்கை வீட்டுக்கை? வெளியாலை. போடா றாஸ்கல்.

சுவாமிநாதர்: இனிமேல் நீ இந்தப் பக்கம் வரக்கூடாது.

வீரவாகு: இது, இனி எங்களுக்கு வந்து போற மடம் இல்லை. இது தான் சொந்த வீடு.

முதலிகள்: என்ன என்ன?

அரியரத்தினம்: டே!போடா வெளியாலை. (திமிறத் திமிறச் சுவாமிநாதர் வீரவாகுவைப் பிடித்து வெளியே தள்ளவும், அறைக்குள்ளே நின்றவர்கள் கதவைத் திறந்து ஒவ்வொருவராகக் கோஷம் எழுப்பியபடி வெளியே வந்து, சுவாமிநாதர் அரியரத்தினம் ஆகிய இருவரையும் சுற்றி வட்டமிடுகிறார்கள். வீரவாகுவும் வந்து வட்டத்திலே சேர்ந்து கொள்ளுகிறான். ஜெயபாலன் மட்டும் வெளியே வரவில்லை.)

இராசம்மா: எங்கடை உழைப்பாலன் இந்தக் கல்வீடு எழும்பினது.

பண்டா: அத்திவாரம் போட்டது நாங்கள்.

சோமாவதி: இனிமேல் ஆண்டு பயன் எடுக்கப் போறதும் நாங்கள்.
(ஒவ்வொருவராக எச்சரித்து விட்டு, சுற்றிச் சுற்றி வெளிப்புறமாக வட்டத்தை அகலிக்கிறார்கள். அரிய ரத்தின முதலி நடுவிலே பயங்கரச் சிலையாக, சுவாமிநாதர் தலையிற் கைவைத்தபடி நாக்கைக் கடித்துப் பேசாது யோசனையில் ஆழ்கிறார். அரியரத்தின முதலியின் கண்களில் கோபக் கனல் சுவாலை தகிக்கிறது. மீண்டும் கோஷங்கள் வலுக்கின்றன.)

சுவாமிநாதர்: உது சட்ட விரோதம், போங்கடா வெளியாலை.

வீரவாகு: அந்தக் காலம் மலை ஏறியிட்டுது.

சோமாவதி: இது 1975

வீரவாகு: சட்டம் செய்யாததைச் சனம் செய்யும்.

அரசரத்தினம்: திறப்பு எங்காலை உங்களுக்கு?

இராசம்மா: சொந்தக்காரருக்கு கதவு தானே திறக்கும்.

பண்டா: நாங்கள் வயல விளைவிப்பம்.

இராசம்மா: நாங்களே இந்த வீட்டிலை இருப்பம்,
(இப்பொழுது எடுத்துரைஞரில் ஒருவன் விரித்த பெரியதொரு கடதாசி சகிதம் அவர்கள் நடுவே வருகிறான். நேராக அரியரத்தினம் முதலியடம் சென்று அதனைக் கொடுத்து விட்டு, முன்சென்று நிற்க, அனைவரும் ஒரு பிறை வடிவிலே சென்று நின்றபடி ஒவ்வொருவரும் முறையாக உச்சத் தொனியில் கைகளைப் பொத்தி முஷ்டிகளை உயர்த்திப் பிடித்துப் பிரகடனம் செய்கின்றனர்.

வீரவாகு: இந்தக் கமம் எங்களுக்குச் சொந்தம்: நாங்கள் கமக்காறர்.

சோமாவதி: மொதலாளிக்கு நானூறு ஏக்கர் நெற்கானி தேவையில்லை.

இராசம்மா: காடுவெட்டிக் கமம் செய்யிற எங்களுக்குத் தான் காணி சொந்தம்.

பண்டா: நாங்கள் உலகம் நடத்த ஏலும்.

(திடீரென்று தமது அசையாநிலையைக் கலைத்து, முதலிகள் இருவரும் வெடுக்கென்று ஆக்கிரோஷத்தோடு முறாய்த்துப் பார்த்து விட்டு வெளியேறுகிறார்கள். முன்மேடையில் விவசாயிகள் உணர்ச்சி பூர்வமான உறுதிப்பாடு தாளலயத்தோடு கூடி வலுக்கிறது. விவசாயிகளின் கைகள் ஒன்றிணைந்து உறுதியுடன் உயர்கின்றன. சிவப்பொளி செறிந்து சிவந்து விசாலித்துப் பெருகுகின்றது. தீட்சண்யமாகப் பாடல் ஒலி எழுந்து வானைப் பிளந்து, நெஞ்சை நிறைகிறது.

சிவந்து வருகின்ற காலம் செம்மை
திரண்டு தருகின்ற கோலம் செவ்வை.

விளைந்து வளர்கின்ற செல்வம் தந்து
இழந்து நொடிகின்ற மக்கள் தம்மை
மிகுந்து திரள்கின்ற பண்டம் கொண்டு
சுரண்டி மகிழ்கின்ற வர்க்கம் ஒன்று
உடைந்து விழுகின்ற காலம் இன்று
பிறந்து வருகின்ற கோலம் கண்டோம்.

சிவந்து வருகின்ற காலம் செம்மை
திரண்டு தருகின்ற கோலம் செவ்வை.


முற்றும்

நாடகம் நான்கு முற்றும்

------------------------------------------------------------------------------

நாடகாசிரியர்கள் பற்றி.......

சி. மௌனகுரு (1943-)

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மட்டக்களப்பு மரபுவழிக் கூத்தில் தேர்ந்த பயிற்சியுடைய இவர் இலாவகமான ஆடற்கலைஞர், சிறந்த நடிகர், கவிஞர், பேராசிரியர் சு.வித்தியானந்தன் அறுபதுகளிலே பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மரபுவழி நாடகங்களை நவீனப்படுத்தியபோது அவருக்கு உற்றதுணையாக இருந்ததுடன் அவர் தயாரித்த கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசம் ஆகிய நவீனப்படுத்திய மரபுவழி நாடகங்களிற் பிரதான பாத்திரங்களைத் தாங்கியவர். மரபுவழிநாடக மறுமலர்ச்சிப் பாதையிலே; மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கறிற் சங்காரம் மூலம் புதிய உள்ளடக்கத்தைப் புகுத்திய முன்னோடியாகக் கருதப்படுபவர். சமகாலப் பிரச்சினைகளை நாட்டுக்கூத்து முறைகளினூடாகத் திறம்பட வெளிப்படுத்தலாம் என்பதில் அசையா நம்பிக்கை உடையவர். சங்காரம், அபசுரம் புதியதொருவீடு, அதிமானுடன், கந்தன் கருணை, போர்க்களம், தலைவர், ஆகிய நாடகங்களிலே நடித்த இவர், சங்காரம், அதிமானுடன், போர்க்களம், தலைவர் ஆகிய நாடகங்களின் நெறியாளருமாவர். நாடகம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ள இவர் இருபதாம் நுற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் எனும் நூலின் ஆசிரியர்களுள் ஒருவர். வானொலியில் சங்கநாதம், கிராம சஞ்சிகை ஆகிய நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராக இருந்தபோது கிராமியக் கலைகளைப் பிரபலிய படுத்துவதில் ஈடுபட்டவர். ஈழத்துத் தமிழ்த் திரைப்படமான பொன்மணியில் நடித்தவர். எழுபதுகளில் இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ்நாடக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். கல்வியில் டிப்புளொமாப் பட்டம் பெற்ற எம்.ஏ. பட்டதாரியான இவர் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற் கலாநிதிப் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.


நா. சுந்தரலிங்கம் (1939 - )

நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் கல்வியில் டிப்புளோமா, நாடகம் கற்பித்தலில் டிப்புளோமா ஆகிய பட்டங்களையும் பெற்றவர். நாடகம்பற்றிப் பல கட்டுரைகள் எழுதியும், கருத்தரங்குகளிலே காத்திரமான கருத்துக்களை முன்வைக்கும் வரும் இவர் சிலகாலம் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஈழத்து நாடக உலகிலே நன்கு அறிமுகமான இவர் ஒரு சிறந்த நெறியாளரும், நடிகரும் ஆவர். சுவர்கள், மதமாற்றம், விடிவைநோக்கி, அபசுரம், இருதுயரங்கள், கடுழியம், புதியதொரு விடு, விழிப்பு முதலிய நாடகங்களிலே இவர் நடித்துள்ளார். அபசுரம், இரு துயரங்கள், பம்மாத்து, விழிப்பு, கடூழீயம் ஆகிய மேடை நாடகங்களை இவர் நெறிப்படுத்தினார். கூத்தாடிகள் (1964) நாடகக் குழுவினதும், தமிழ்க்கலை அரங்கத்தினதும் செயலாளராகப் பணிபுரிந்துள்ள இவர் இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் நாடக ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். 1975இலே இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ்நாடக ஆலோசனைக் குழு நடாத்திய தேசியத் தமிழ்நாடக விழாவிலே இவரது தயாரிப்பிலே உருவான விழிப்பு நாடகம், சிறந்த தயாரிப்பு, சிறந்த நடிகர், சிறந்த எழுத்துப்பிரதி ஆகிய மூன்று விருதுகளையும் பெற்றது. ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கட்கான ஒன்றிணைந்த பாடத்திட்டத்திலே அழகியற் தொழிற்பாடுகள்பற்றி செயல்முறை கலந்த விரிவுகளை ஆற்றியுள்ள இவர் ஒரு நல்ல நாடக விமர்சகருமாவார். ஆறு நாடகங்கள் எனும் நூலிலே ஏற்கனவே இவரது 'விழிப்பு' நாடகம் வெளிவந்துள்ளது. அபசுரம், வழிகாட்டிகள் என்பன இவரெழுதிய ஏனைய இரு மேடை நாடகங்களாகும்.


இ. முருகையன் (1935-)

பிறப்பிடம் : கல்வயல், சாவகச்சேரி,
தந்தையார்: இராமுப்பிள்ளை, தாயார்: செல்லம்மா

விஞ்ஞானம், கலை ஆகிய இரண்டிலும் பட்டதாரியான இவருக்கு, கணிதம், பௌதிகம், ஆங்கிலம், தமிழ் என்னும் துறைகளில் விசேட ஈடுபாடும் பயிற்சியும் உண்டு. இலங்கைக் கல்விச் சேவையின் மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தரான இவர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற் பிரதம பதிப்பாசிரியராகவும் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராயும் இருந்தவர். இப்பொழுது, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் M.Phil. பட்டப்படிப்பின் பொருட்டு, கல்வியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிறு வயது தொட்டே கவிதை புனைந்தும் வெளியிட்டும் வருகிறார். ஒரு வரம், நெரும்பகல், ஆதிபகவன் என்பன இவர் தம் கவிதை நூல்கள், கவிதை நயம் (பேராசிரியர் க.கைலாசபதியுடன் இணைந்து எழுதியது). ஒருசில விதி செய்வோம் என்பன இலக்கிய விமரிசன நூல்கள். வந்து சேர்ந்தன. தரிசணம், கோபுரவாசல் என்பன நூலுருவில் வெளிவந்த நாடகப் படைப்புகள்.

முக்கூடல், என்னும் கவிதை நூலும் அப்பரும் சுப்பரும், என்னும் நாடக நூலும் இன்றைய உலகில் இலக்கியம் என்னும் விமரிசன நூலும் விரைவில் வெளிவரவுள்ளன.

கால்நூற்றாண்டு காலமாக இவருடைய பல பாநாடகங்களை இலங்கை வானொலி ஒலிபரப்பி வந்துள்ளது. நித்திலக்கோபுரம் (1953), அந்தகனேயானாலும், வைகைப் பெருக்கு, தரிசனம், பீல்கணியம், கலைக்கடல், துளிர், கூடல், மாமூல், செழியன் செங்கோல், கொண்டுவா தீயை கொழுத்து விறகையெல்லாம், என்பன அவற்றுட் சில. குற்றமே (1962), இரு துயரங்கள் (1968), கடூழியம் (1971) அப்பரும் சுப்பரும் (1979) என்பன இவரெழுதிய மேடை நாடகங்களாகும்.


இ. சிவானந்தன் (1941)

சாவகச்சேரியைச் சேர்ந்த கல்வயலிற் பிறந்த இவர் ஓர் அறிவியற் பட்டதாரி ஆவர். தற்போது செட்டிகுளத்திலே வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணிபுரியும் இவர் கல்வியில் டிப்புளமோ, நாடகம் கற்பித்தலில் டிப்புளமோ ஆகிய பட்டங்களையும் பெற்றவர். பாசத்தின் எல்லையிலே (1959) மூலம் மேடையிற் பிரவேசித்த இவர் இலங்கைப் பல்கலைக் கழகத்திலே (கொழும்பிலே) அ. முத்துலிங்கத்தின் சுவர்கள் (1961) அ.ந. கந்தசாமியின் மதமாற்றம் (1962) சொக்கனின் இரட்டை வேஷம் (1963) ஆகிய மூன்று நாடகங்களில் நடித்ததுள்ளார். பம்மாத்து (1963) விடிவை நோக்கி (1968) அபசுரம் (1968) கடூழியம் (1971) கந்தன்கருணை (1975) புதியதொரு வீடு (1971) என்பன இவர் நடித்த ஏனைய மேடை நாடகங்களாகும். நா. சுந்தரலிங்கத்துடன் சேர்ந்து பம்மாத்து நாடகத்தை முதன்முதலில் எழுதிய இவர் பின்னர் விடிவை நோக்கி (1968) காலம் சிவக்கிறது. (1975) ஆகிய நாடகங்களையும் நடிகர் ஒன்றியத் தயாரிப்பான கந்தன் கருணை (1975) நாடகத்திற்குச் சில பாடல்களையும் இயற்றியுளார். எங்கள் குழுவினருக்காகத் தனது விடிவை நோக்கி நாடகத்தையும், இலங்கைப் பல்கலைக்கழகக் கொழும்பு வளாகத் தமிழ்ச் சங்கத்தினருக்காக எம்.ஏ.நுஃமானின் புதையல் தேடி நாடகத்தையும் நெறிப்படுத்தியுள்ளார். அறுபதுகளிலே அறிவொளியின் ஆசிரியர் குழுவிலும் எழுபதுகளில் இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ்நாடக ஆலோசனைக் குழுவிலும் பணிபுரிந்துள்ளார். இவர் கூத்தாடிகள் நாடக குழுவினதும் தமிழ்க் கலை அரங்கத்தினதும் ஸ்தாபக அங்கத்தினருள் ஒருவராகவும் இருந்தார். கா.சிவத்தம்பியின் சிறாப்பர் குடும்பம் (1963) மூலம் வானொலி நாடகங்களையும், இசை இடையிட்ட உரைச்சித்திரங்களையும் எழுதியதோடு நாளைய சந்ததி, வினோத மஞ்சரி ஆகிய வானொலிச் சஞ்சிகை நகிழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் விளங்கினார். கண்டறியாதது (1969) இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் நாடக அரங்கம் (1979) என்பன இதுவரை அச்சேறிய இவரது இரு நூல்களாகும். ஈழம் வளர்ந்த கதை எனும் இவருடைய வில்லுப்பாட்டுத் தொகுப்பு நூல் விரைவில் வெளிவரவுள்ளது.

------------------------------------------------