கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  திகடசக்கரம்  
 

அ. முத்துலிங்கம்

 

திகடசக்கரம்

அ. முத்துலிங்கம்

-------------------------------------------

பொருளடக்கம்

பார்வதி 1
குங்கிலியக்கலய நாயனார் 12
பெருச்சாளி 29
மாற்றமா? தடுமாற்றமா? 41
வையன்னா கானா 62
குதம்பேயின் தந்தம் 79
செல்லரம்மான் 100
திகடசக்கரம் 117

------------------------------------------------------------------------------

முன்னுரை

முப்பது வருடங்களுக்கு முன்பு என்னுடைய சிறுகதைத் தொகுதியான 'அக்கா' வெளிவந்தது. அதைப் படித்தவர்கள் பலரும் பாராட்டினார்கள். அதன் பிறகு தொடர்ந்து எழுதும வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும், நான் சென்று வேலை பார்த்த இடங்களில் சந்தித்த மனிதர்களையும், நடந்த சம்பவங்களையும் என் 'சிறுகதைக் கண்களால்' அவ்வப்போது படம் பிடித்து மன அறையில் போட்டு வைத்திருந்தேன், சமயம் வரும் போது எடுத்து வெளியே விடலாம் என்று.

இங்கே எழுதிய கதைகள் எல்லாம் இப்படி பல வருடங்களாக மனதில் ஊறப் போட்டு வைத்தவை தான். ஒரு கதையாகிலும் சடுதியான ஒரு உத்வேகத்தில் பிறந்ததல்ல. இந்தக் கதைகள் வெளிவந்த பிற்பாடு நான் பார்க்கும் போது அவை மனதில் இருந்தபோது இன்னும் பிரமாதமாக இருந்தது போலத்தான் எனக்குப் படுகிறது.

சிறுகதைக்கு இலக்கணம் 'இதுதான்' என்று பலரும் வரையறுத்து கூறி இருக்கிறார்கள். சிறுகதை நாவல் அல்ல; சம்பவங்களையும் பாத்திரங்களையும் விஸ்தாரமாக விவரித்துக் கொண்டே போக முடியாது. சொல்ல வந்த விஷயத்தை சுற்றி வளைக்காமல் நேரே சொல்ல வேண்டியது அவசியம். மையக்கருத்து என்று ஒன்று தேவை; அதைத் தழுவியபடி சொல்லும் நடை முக்கியம். அடுத்தபடி பாத்திரங்களின் வார்ப்பு யதார்த்தமாக இருக்க வேண்டும். பரவலாக இது தான் ஏற்கப்பட்ட விதி.

இது தவிர இன்னொன்றையும் நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனின் சராசரி கவனஈர்ப்பு பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது என்கிறது விஞ்ஞானம். சிறுகதையானது இந்தக் கால நிர்ணயத்துக்குள் முடிந்து விடுவது நல்லது. ஒரு சிறுகதையை நாவலைப்போல தவணை முறையில் படித்து முடிக்கிறது என்பது விரும்பத்தக்க ஒன்றல்ல; ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக அது இருப்பதுதான் கவர்ச்சி.

அப்படியென்றால் விஷயத்தை மையக் கருத்தில் இருந்து நழுவாமல் சுவாரஸ்யமாக நகர்த்திக் கொண்டு போக வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டு வரும் போது சில இடங்களில் வர்ணனை தேவையாக இருக்கலாம்; சில இடங்களில் 'தாவ' வேண்டி வரும். எங்கே, எப்படி என்று நிர்ணயிப்பதில் தான் ஆசிரியரின் திறமை வெளிப்படும். வர்ணனையாயிருந்தாலும் அது கதையின் பிரதான அம்சமாக இருக்க வேண்டும்; அதை நீக்கினால் கதை படுத்து விடும் ஆபத்து உண்டு.

கதைகளில் 'தர்ம உபதேசம்' செய்வது பற்றி பல சர்ச்சைகள் இன்னும் நடந்த படியே இருக்கின்றன. ஒரு ஓவியத்தை ரசிப்பது போல, ஒரு சங்கீதத்தை அனுபவிப்பது போல சிறுகதையை என் ரசிக்க முடியாது என்பதுதான் வாதம்; அவைகள் 'ஈசாப்' கதைகளாக மாறக்கூடாது என்று கூறுவர் சிலர்.

ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது தூரம் ஓடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடு தான் தொடங்குகிறது. இது என்னுடைய சித்தாந்தம்.

இங்கே சொல்லிய சிறுகதைகள் அத்தனையும் உண்மையையும், கற்பனையையும் கலந்து கொடுத்தவை. சிலவற்றில் உண்மை கூடியும் கற்பனை குறைந்தும் இருக்கும்; மற்றவற்றில் கற்பனை கூடியும் உண்மை குறைந்தும் நிற்பதைக் காண்பீர்கள்.

இந்தக் கதைகளில் நான் சந்தித்த மனிதர்களையும், பார்த்த இடங்களையும், அவதானித்த பழக்க வழக்கங்களையும் பின்னணியாக வைத்து எழுதியிருக்கிறேன். எல்லாவற்றிலும் மனித மேம்பாட்டுக்கான ஏதோ ஒன்று மறைந்திருக்கும். இது இந்தக் காலத்தில் அவசியமான ஒன்றாக எனக்குப் பட்டது. போதைப் பாருள் அடிமைத்தனம், சுற்று சூழல் அறிவு, விலங்கினங்கள் பராமரிப்பு இப்படியான சிலவற்றை மறை முகமாக கோடி காட்டிச் சென்றிருக்கிறேன்.

என் மனத்திலே வெகு காலமாகப் போராடிக் கொண்டிருந்த இந்தக் கருத்துக்களை உங்களுடன் இக்கதைகள் மூலம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாசகர்களுடைய மதிப்பீட்டை அறிய ஆவலாயிருக்கிறேன்.

இந்தப் புத்தகம் எழுதத் தூண்டுகோலாக இருந்த நண்பர் திரு.ரி.சிவானந்தன் அவர்களுக்கும், மெய்ப்புப்பார்த்து, ஆலோசனைகள் வழங்கிய நண்பர் செ.கணேசலிங்கனுக்கும், அழகாக அச்சிட்ட காந்தளகத்தாருக்கும் என் அன்புகூர்ந்த நன்றி.

House No.32 அ. முத்துலிங்கம்
Street 4 சித்திரை - 1995
F 8/3, Islamabad
PAKISTAN


பார்வதி

இந்தத் தலைப்பில் பல கதைகளை நானே படித்திருக்கிறேன். ஆனால் தலைப்பை மாற்றுவதற்கில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இது உண்மையாகவே என் கண்முன்னே நடந்த கதை. எனது பிராயம் ஐந்தில் இருந்து எட்டு வரைக்கும் இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டன. என் பிஞ்சு மனத்தில் ஆணி அடித்தது போல சம்பவங்களும், சம்பாஷணைகளும் நிலைத்து நிற்கின்றன. இங்கே நடந்தது நடந்த படியே கூறியிருக்கிறேன்.

பார்வதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவளுடைய தோசை தான். தோசை என்றால் 'கம்பாஸ்' வைத்து வட்டம் அடித்தது போல இருக்கும். அந்த மணம் நாலு வீடு தள்ளி மணக்கும்; ஆட்களை சுண்டி இழுக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு தான் பார்வதி வீடு. விடியற்காலை பல பலவென்ற விடியும் போது கொழும்பு ரயில் வந்து சேரும். அதுதான் பார்வதி தோசை சுடும் மும்முரமான நேரம்.

முதலில் தோசை மாவை அகப்பையில் எடுத்து தோசைக் கல்லில் ஊற்றுவாள். அதுவே ஒரு தனி அழகு. அது 'உஸ்' என்று சொல்லி வைத்தபடி அப்படியே வட்டமாக உருவெடுக்கும் கொஞ்சம் பொறுத்து தோசைக் கரண்டியால், அது பாதி காயும் போதே, கீழே கொடுத்து 'தெம்மி' மற்றப் பக்கம் பிரட்டுவாள். அது படக்கென்று விழும். பிறகு அவதானித்து பொன்னிறமாக அது மாறும் போது எடுத்து ஓலைப் பெட்டியில் வைப்பாள்; அல்லது நீட்டிக் கொண்டிருக்கும் சில பேருடைய தட்டிலே போடுவாள்.

தோசை அப்ப ஆவி பறந்த படி இருக்கும். எடுத்து நேராகப் பார்த்தால் ஊசி ஓட்டைகள் ஒரு நூறாவது பார்க்கலாம். எல்லா தோசையும் அதே மாதிரிதான் அச்சில் வார்த்து போல வரும். அதிலே ஒரு 'விள்ளல்' எடுத்து வாயிலே போட்டால் அது மெத்தென்று புளிப்பு கலந்த ஒரு ருசியாக மாறும்; தேவாமிர்தமாக இருக்கும்; பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரைந்து விடும். சாதாரணமான தோசை மாவுக்கு இப்படி ஒரு மெதுமையையும், மணத்தையும், ருசியையும் சேர்ப்பதென்றால் அது ஒரு பரம ரகஸ்யம் தான். என்னுடைய அம்மாவும், மற்ற ஊர் பெண்டுகளும் அந்த ரகஸ்யத்தை அறிய எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் பலிக்கவில்லை.

இந்த தோசையை அப்படியே சாப்பிடலாம். அதுக்குச் சேர்த்துக் கொள்ள ஒன்றுமே தேவையில்லைதான். ஆனால் பார்வதி அதற்கென்று ஒரு 'சம்பல்' செய்வாள். சம்பல் என்றால் சின்ன வெங்காயம், சிவப்பு தெத்தல் மிளகாய், தேங்காய்ப்பூ, கொஞ்சம் உப்பு, ஒரு சொட்டுப் புளி என்று எல்லாம் போட்டு செய்ததுதான். இதற்கு கறிவேப்பிலையும் சேர்த்து பக்குவமாக தாளித்துப் போடுவாள். அப்ப அதில் இருந்து ஒரு திவ்யமான மணம் வரும். சம்பலை கொஞ்சம் தொட்டு தோசையையும் விண்டு வாயில் போட்டால் அதுவே ஒரு தனி மயக்கம் தான்.

சம்பல் இடிக்கும் போது பார்வதி யாருடனும் கதைக்க மாட்டாள். 'நாணமாம்.' முணு முணுவென்று வாய்க்குள்ளே ஏதோ சொல்லுவாள்; மந்திரமோ என்னவோ. நாங்கள் 'குஞ்சு குருமான்' அப்ப அங்கே போய் சத்தம் போட்டு விளையாடுவோம். அவள் ஒன்றுமே பேசமாட்டாள் அந்த நேரத்தில்.

பார்வதிக்க பன்னிரெண்டு வயது நடக்கும் போது கல்யாணம் ஆகி விட்டதாம். சின்னையாபிள்ளைக்குத் தொழில் விவசாயம்தான். அன்னியோன்னியமான அந்த தம்பதிகளுக்கு பிள்ளையே பிறக்கவில்லை. எவ்வளவோ வைத்தியம் பார்த்தார்கள். கோயில்கள் எல்லாத்துக்கம் போய் வந்தார்கள். தவறாமல் விரதம் பிடித்தார்கள். பிள்ளை மாத்திரம் உண்டாகவே இல்ல. பார்வதி உடைந்து போனாள். இப்படியே இருபது வருடம் ஓடியது. நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது.

அப்போது தான் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேடியில் ஒரு சாமியார் "நீ கந்தசஷ்டி விரதம் இரு. உனக்கென்று முருகனே வந்து பிறப்பான்" என்று சொன்னாராம். பார்வதியும் முழு நம்புக்கையுடன் குளித்து, முழுகி ஆறு நாள் விரதம் காத்தாள்; கடுமையான விரதம். அப்படித்தான் அவர்களக்கு பிள்ளை பிறந்தது. எப்படி பேர் வைப்பார்கள்? பார்வதிக்கு பிறந்த பிள்ளையாயிற்றே! 'முருகேசன்' என்று தான் பேர் சூட்டினார்கள். அம்மா சொல்லுவாள், பிள்ளை பிறந்த போது ஊர் முழுக்க அப்படி ஒரே கொண்டாட்டமாக இருந்ததாம்.

ஆனால் விதி வேறு மாதிரி நினைத்திருந்தது. சீன்னையாபிள்ளை காலை நாலு மணிக்கே எழும்பி புறப்பட்டு விடுவார் தோட்டத்துக்கு தண்­ர் இறைக்க. நாலு மணியென்றால் 'கூ, கூ' என்று ஒருவரை ஒருவர் கூவி அழைத்துக் கொண்டுதான் புறப்படுவார்கள். தோட்டம் இரண்டு கல் தொலைவில் இருந்தது.

அன்று சின்னையாபிள்ளைக்கு சரியான அலுப்பு. மனைவியோடு இரவிரவாக சல்லாபம். நித்திரை சரியாகத் தூங்கவில்லை. 'துலா' ஏறி மிதித்துக் கொண்டிருந்தார். நித்திரை அசதியோ, வேறு நினைவோ கால் தவறி விட்டார். 'நெம்பு' என்று நினைத்து வெறும்காற்றில் காலை வைத்துத்தான் வினை. பொத்தென்று கீழே விழுந்து தலையிலே பலமான அடி. உயிர் 'பொசுக்' கென்று போய்விட்டது.

முருகேசனுக்கு அப்போது இரண்டு வயது. ஊருக்குள்ளே முருகேசன் பிறந்த வேளை தான் என்று பேசிக்கொண்டார்கள். பார்வதி தளரவில்லை. தோசைக் கடை போட்டாள். பிள்ளையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள்.

நான் ஐந்து வயதாக இருந்த போது முருகேசன் நெடிதுயர்ந்து வளர்ந்த ஒரு முழு ஆம்பிளைப்பிள்ளை. பார்க்க லட்சணமாக இருப்பான். வெள்ளை வெளேரென்று வேட்டி கட்டி, சட்டையும் போடுவான். செல்லமாக வளர்ந்த பிள்ளையாதலால் ஊரிலே எல்லோருக்கும் அவனிடம் 'பகிடி' பண்ண ஆசை.

புத்தம் புது சைக்கிள் வைத்திருந்தான். அதில் கொம்பு வைத்த ஒரு குதிரை முன் இரண்டு கால்களையும் தூக்கிய படி நின்று கொண்டிருக்கும். சைக்கிள் 'பெல்' மூன்று. இன்னும் வண்ண வண்ணமாக வினோதமான பல அலங்காரப் பொருட்கள் அந்த சைக்கிளில் பூட்டியிருக்கும். நாங்கள் சின்னப் பிள்ளையாக அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தது நினைவிருக்கு.

அப்ப 'பேசாத படம்' ஓடின காலம். முருகேசன் டவுனுக்குப் போய்இந்தப் படங்களைப் பார்த்து விட்டு வருவான். பிறகு அந்தக் கதைகளை விஸ்தாரமாகச் சொல்லுவான். எல்லோரும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்பான்.

இந்த நேரம் தான் அவனுக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் என்றால் சாதாரண காய்ச்சல் இல்லை. நெருப்புக் காய்ச்சல். அப்போதெல்லாம் நெருப்புக் காய்ச்சல் வந்து தப்பினவர்கள் வெகு சிலரே.

பார்வதி தோசைக் கடையை மூடிவிட்டாள். மகன் பக்கத்திலேயே பழியாய்க் கிடந்தாள். நெல்லியபடிப் பரியாரி அடிக்கடி வந்து மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஊர் முழுக்க 'என்ன நடக்கப் போகுதோ' என்று பயந்த படியே இருந்தது. நிலைமை ஒரு நாள் மோசமாய் போய்விட்டது. என்னுடைய அப்பா கொழும்புக்கு பயணமாவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அம்மா சொல்கிறாள். "முருகேசன் பாடு நாளைக்குத் தாங்காது போல இருக்கு, நின்று பார்த்திட்டு போங்கோ"

அன்னு பின்னேரம் அம்மா பார்வதியைப் பார்க்க போனாள். நானும் பின்னாலேயே போனேன். ஆனால் என்னைக் 'கிட்ட வர வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். முருகேசன் அடித்துப் போட்ட வாழைத் தண்டு போலக்கிடந்தான். பார்வதி அழுதபடியே பக்கத்தில். அந்த உருக்கமான காட்சி என் மனதை விட்டு நீங்கவே இல்லை.

அம்மா தான் சொன்னாள். பார்வதி அப்போது ஒரு நேர்த்திக்கடன் செய்தாளாம். "அப்பா, நல்லூர்க் கந்தா இது நீ கொடுத்த பிள்ளை. நீயே திருப்பி எடுக்கலாமா? இந்தத் தத்தில் என் பிள்ளை தப்பினால், நூறு நாளைக்கிடையில் அவன் உன்னுடைய கோயில் வெளிப் பிராகாரத்தை பிறதட்டை (அங்கப்பிரதட்சணம்) பண்ணுவான். அப்பா, என்னை கைவிட்டு விடாதே."

எல்லோரும் அதிசயிக்கும்படி முருகேசன் தப்பிப் பிழைத்து விட்டான். பார்வதிக்கு சந்தோஷம். மறுபடியும் ஒரு குமரிப் பெண்ணாகவே காட்சியளித்தாள். அப்படியான ஒரு குதூகலத்தை ஒரு பெண்ணிடம் மிகவும் ரகஸ்யமான நேரங்களிலேதான் காண முடியும்.

நல்லூர்க் கந்தனுக்க கைத்த 'கெடுவோ' நூறு நாட்கள்தான். அப்ப பங்குனி மாதம். கொளுத்தும் வெய்யில். நல்லூர்க் வெளிப் பிரகாரத்தை பிறதட்டை பண்ணுவெதன்றால் லேசுப்பட்ட காரியமா? ஆனாலும் முருகப்பெருமானோடு விளையா முடியுமா?

முருகேசனுக்கு உடம்பு முற்றிலும் தேறவில்லை. காய்ச்சல் களை இன்னமும் இருந்தது. நெருப்புக் காய்ச்சல் அவனை உலுக்கி எடுத்து விட்டது.

பார்வதி 'அடிஅழித்த' படி முன்னுக்குப் போக, முருகேசன் பின்னால் பிறதட்டை செய்தபடியே வருகிறான். சில பந்து சனங்களும் அவர்கள் பின்னால் போகிறார்கள். சிலர் தண்ணி தெளித்தபடி, சிலர் வேப்பம் கொத்தை வீசியபடி.

உள்வீதி என்றாலும் பரவாயில்லை. இது வெளி வீதி. முருகேசனோ சொகுசாக வளர்த்த பிள்ளை. 'முந்திப் பிந்தி' பிரதட்டை செய்த பழக்கமுமில்லை. மேற்கு வீதியில் வந்த போதே அவனுக்கு 'மேல்மூச்சு, கீழ்மூச்சு' வாங்கியது. இனசனம் எல்லோரும் அவனுக்கு 'அரோஹரா' சொல்லி உற்சாக மூட்டினார்கள்.

வடக்கு வீதியும் வந்த விட்டது. அவனுக்கு இதற்க மேல் தாக்குப் பிடிக்க இயலவில்லை. எழுந்து விட்டான். ஒரு கரித்துண்டை எடுத்து கோயில் சுவரிலே கோடு போட்டு விட்டு சொன்னான்;

"ஆச்சி, இனி எனக்கு தாங்காது; மிச்சத்தை வந்து நாளைக்கு முடிக்கிறேன்" என்று விட்டு போய் விட்டான். பார்வதி திகைத்துப் போனாள் என்றாலும் மீதி தூரத்தை அவளே 'அடி அழித்து' முடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அடுத்த நாள் ஊர் முழுக்க இதே பேச்சுத் தான். சும்மா சும்மா முருகேசனைப் பகிடி பண்ணியவர்களுக்கு இது நல்ல சாட்டாகப் போய் விட்டது. அவனால் தலை நிமிர்த்தவே முடியவில்லை. குழந்தைகள் கூட அவன் முகத்துக்கு நேரே கேலி பண்ணத் தொடங்கி விட்டார்கள்.

நமசிவாயம்பிள்ளை தான் கேட்டார். 'நக்கலாகப்' பேசுவதில் எங்கள் ஊரில் 'டிகரி' வாங்கியவர்.

"என்ன முருகேசன்! கரிக்கோடு போட்டியாமே கோயில் சுவரில்? ராத்திரி பெய்த பனியில் எல்லாம் நனைஞ்சு போச்சாமே! அப்ப நாளைக்கு எங்கையிலிருந்து தொடங்கப் போறாய்?

எல்லோரும் 'கெக்கே, கெக்கே' என்று சிரித்தார்கள். முருகேசனுக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது. விசுக்கென்று போய் விட்டான்.

இப்படியாகத் தான் முருகேசனுக்கும் நமசிவாயம் பிள்ளைக்கும் ஒரு சின்னப் பகைமை வித்து முளைவிட்டது. அது ஒரு நாள் விஸ்வரூபம் எடுத்ததை நான் என் கண்ணாலேயே பார்த்தேன்.

முருகேசனுக்கு நல்ல நீண்ட மூக்கு; அவன் முகத்துக்கு அது நல்ல பொருத்தம். ஆனால் மூக்குத் துவாரங்களோ பெரிசு; அப்படிப் பெரிசு. எல்லோரும் ஒரு சுருட்டுக் கொட்டகைக்குள் இருந்து சுருட்டு சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். முருகேசனுடைய வெள்ளை வெளேர் என்ற வேட்டி கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவன் மாற்று வேட்டி கட்டிக் கொண்டு வேலையிலேயே கண்ணாயிருக்கிறான்.

அப்ப இலுப்பைப் பூ காலம். 'கமகம' வென்று வாசம். ஒரு காற்று சுழன்று வீசியது. தூசோ தும்போ தெரியவில்லை. முருகேசன் 'அச்சூ' என்று தன் பலம் எல்லாத்தையும் பிரயோகித்து ஒரு தும்மல் தும்மினான். அது ஒரு அதிர வைக்கும் பயங்கரமான தும்மல்.

தொங்கலில் இருந்த நமசிவாயம் பிள்ளைதான் கேட்டார் "என்ன முருகேசன், மூக்குக்குள்ளே யானை பூந்திட்டுதோ?"

அவ்வளவு தான். முருகேசன் ருத்திரனாகவே மாறிவிட்டான். படாரென்று எழும்பினான்; ரீல் கட்டையை நமசிவாயம் பிள்ளையை நோக்கி வீசி எறிந்தான். அவனுடைய வெள்ளை வேட்டியைக் கூட எடுக்கவில்லை. ஒரே மூச்சில் சைக்கிளில் பாய்ந்து ஏறிப் போய் விட்டான். அதுக்குப் பிறகு அவனை யாருமே பார்க்கவில்லை.

பார்வதி பதறிவிட்டாள். வீடு வீடாய்ப் போய்த் தேடினாள். போவோர் வருவோர் எல்லோரிடமும் விசாரித்தாள். பொல பொல வென்று கண்­ர் விட்டு அழுதாள். கடைசியாக நமசிவாயம் பிள்ளை வீட்டு வாசலுக்கே சென்று மண்ணைவாரி, வாரிக் கொட்டித் திட்டினாள். கிராமங்களிலே மண்ணை வாரிக் கொட்டித் திட்டுவது எல்லாம் சாதாரணமான காரியமில்லை. கடைசிக் கட்டத்தில் தான், கிளைமாக்ஸ்.

ஆனால் முருகேசன் போனவன், போனவன் தான். தகவலே இல்லை. கொஞ்ச நாள் ஊர்முபக்க மௌனமாக இருந்தது போல் பட்டது. எல்லோருக்கும் உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வு.

கடைசியாக ஒரு நாள் ஒரு தபால் அட்டை வந்தது. பார்வதிக்கு படிக்கத் தெரியாது. அம்மா தான் வாசித்து காட்டினாள். முருகேசன் குருநாகலையில் சுருட்டு கடையில் வேலை செய்கிறானாம்.'எடுபிடி' வேலை. கவலைப்பட வேண்டாம் என்று எழுதியிருந்தான்.

பார்வதிக்கு ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் ஒரே மகன் தன்னை இப்படி விட்டுப் போய் விட்டானே என்ற ஏக்கம். அதற்குப் பிறகு பார்வதி பார்வதியாகவே இல்லை. எப்பவும் அவள் முகத்தில் வேதனை தான் குடி இருக்கும்.

"என் மகன் என்ரை கடைசி காலத்தில் வருவானோ?" என்று கவலைப் படுவாள். ஒவ்வொரு நாளும் அம்மாவிடம் வந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு போவது அவளுக்கு வழக்கமாகி விட்டது.

கடிதத்திற்கு மேல் கடிதம் போட்ட படியே இருந்தாள் பார்வதி. ஒரு பதிலும் இல்லை. பார்வதிக்காக பல பேரும் கடிதம் எழுதினார்கள். ஒரு முறை வாத்தியார் எழுதினார்; இன்னொரு முறை அம்மா எழுதினாள். ஒரு நாள் சங்கக் கடை சுப்பிரமணியம், கடைசியில் நமசிவாயம் பிள்ளை கூட எழுதினார். அவர் தன் பங்காகவும் ஒரு வரி சேர்த்திருந்தார்; அது பார்வதிக்குத் தெரியாது. "நான் ஏதோ ஒரு பகிடிக்காகத் தான் அப்பிடிச் சொல்லி விட்டேன். இதைப் பெரிசு படுத்தாதே, தயவு செய்து வந்துவிடு. உன் அம்மாவைப் பார்க்க பெரிய பாவமாக இருக்கிறது" என்று.

முருகேசன் வரவே இல்லை. மூன்று வருடம் ஓடி விட்டது. அப்ப எனக்கு வயது எட்டு. எல்லோரும் முருகேசனை மறந்து விட்டார்கள் என்று தான் சொல் வேண்டும். பார்வதி, அவள் தாயல்லவா? மறப்பாளா?

ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு கொழும்பு ரயில் கொக்குவில் ஸ்டேசனில் வந்து நிற்கும் சத்தம் எங்கள் வீடு வரைக்கும் கேட்கும். பார்வதி வாசலிலே வந்து பழி கிடப்பாள்.

ரயிலிலே இருந்து இறங்கியவர்கள் எங்கள் ஒழுங்கைக்கு வந்து சேத பத்து நிமிடமாவது பிடிக்கும். இவள் தலையில் கை வைத்து பார்த்த படியே நிற்பாள். யாராவது சூட்கேசுடன் தூரத்தில் வந்தால் ஒரு கணம் திடுக்கிட்டு சிறிது தூரம் ஒடிவந்து பார்ப்பாள். பிறகு ஆள் அடையாளம் தெரிந்தவுடன் விரக்தியுடன் திரும்பிப் போய் விடுவாள்.

ஒரு நாள் பின்னேரம் வழக்கம் போல் பார்வதி அழுதபடியே வந்தாள். அன்றைக்கு அம்மாவிடம் போகவில்லை. அப்பாவிடம் தான் நேரே போனாள். அவள் சொன்னாள்:

"முருகேசன் உங்கடை சொல்லுக்கு கட்டுப்பட்டவன்;நான் எத்தினையோ காயிதம் போட்டு விட்டன்; அவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எனக்கு வயித்தைக் கலக்குது என்ரை பிள்ளையைப் பார்க்காமல் செத்து விடுவேனோ என்று பயமாயிருக்கு"

அதற்கு அப்பா பதிலே கூறவில்லை; மாறாக பெட்டியில் இருந்து ஒரு 'போஸ்ட் கார்டை' எடுத்து எழுதினார். வேறு ஒன்றும் இல்லை; ஒரு பாடலைத் தான் எழுதினார். திகதியோ, எழுதியவர் பெயரோ இல்லை. எல்லோர்க்கும் தெரிந்த ஒரு பாடல் தான் அது:

"வற்றாத பொய்கை வளநாடு தந்து
மலைமேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒரு பேரும் இல்லை
உமையாள் தனக்கு மகனே
முத்தாரமாக மடிமீதிருக்கம்
முருகேசன் எந்த உயிரே
வித்தாரமாக ரயில் மீதிலேறி
வரவேணும் எந்தனருகே"

இதை எழுதிவிட்டு அந்த தபால் அட்டையை அப்பா என்கையில் கொடுத்து "ஓடிப் போய் போட்டு விட்டு வா" என்று சொன்னார்.

நான் சீவரத்தினம் கடையில் இருக்கும் தபால் பெட்டியை நோக்கி ஓடினேன். அந்தப் பாடலில் 'மயில் மீது' என்று வரும் இடத்தில் அப்பா 'ரயில் மீது' என்று மாற்றி எழுதியிருந்தார். மற்றம்படி பாடல் ஒரிஜினல் பாடலாகத்தான் இருந்தது.

(ஐம்பது வருடத்திற்கு முன்பு ஒரு முறை மட்டும் படித்த இந்தப் பாடலை நினைவில் வைத்து இங்கே கூறியிருக்கிறேன். இதில் பிழையிருந்தால் அது என்னுடையது தான்; மன்னிக்கவும்)

இந்தக் 'கார்டு' போட்டு நாலு நாள் ஒடிவிட்டது. ஐந்தாம் நாள் காலை நாங்கள் எங்கள் வீட்டு ஒழுங்கைப் புழுதியில் விளையாடியபடி இருக்கிறோம். கொழும்பு ரயில் வந்து போகும் சத்தம். பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து தூரத்தில் ஒருவர் நடந்து வருகிறார். உயர்ந்த உருவம், கையிலே சூட்கேஸ், வெள்ளை வெளேர் என்று வேட்டி. முருகேசன் தான்.

முதலில் பார்த்தது பூரணி தான். அவளோ குமரிப் பெண். படலைக்கு அந்தப் பக்கம் வர இயலாது. இருந்தும் பார்த்துவிட்டாள். ஆண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெண்களின் கண்களுக்கு வேகம் அதிகம் தான்.

'குஞ்சு குருமான்' எல்லாம் 'முருகேசன் வந்திட்டார், முருகேசன் வந்திட்டார்' என்று கூவிய படியே ஒழுங்கையை நிறைத்து விட்டார்கள்.

இந்தக் காட்சி தான் என் மனசில் ஐம்பது வருடமாக அழியாமல் இருக்கிறது. பார்வதி வெளியே வந்து நிற்கிறாள். கையை இடுப்பில் ஊன்றியபடி உற்றுப் பார்க்கிறாள். நாலடி முன்னுக்கு வந்து இன்னொரு முறை பார்க்கிறாள். கைகால்கள் எல்லாம் இப்ப தள்ளாடுது. கண்ணிலே தாரை தாரையாகக் கண்­ர். ஏதோ சொல்ல வாயெடுக்கிறாள்; ஒன்றும் வரவில்லை. நாக்கு தளதளக்குது. நிற்கக்கூட முடியவில்லை.

முருகேசன் சூட்கேஸை பொத்தென்று போட்டு விட்டு ஓடி வந்து தாயைக் கட்டிப் பிடிக்கிறான். 'என்ரை பிள்ளை, என்ரை பிள்ளை' என்று பார்வதி மகனைக் கட்டிக் கொள்கிறாள். தடவித் தடவிப் பார்க்கிறாள். முத்தமிடுகிறாள்; தலையைக் கோதுகிறாள். பிறகு இன்னொரு முறை தடவி விடுகிறாள். மீண்டு முத்தமிடுகிறாள்.

ஒரு நூறு பேர் சேர்ந்து விட்டார்கள். இந்தக்காட்சி நீண்டு கொண்டே போகிறது. தாயும் மகனும் குடிசைக்குள்ளே போனதும் ஆரோ சூட்கேஸை உள்ளே கொண்டு வந்து வைக்கிறார்கள்.

அடுத்த ஒரு கிழமை பார்வதி நிலத்திலே நடக்கவில்லை; ஆகாயத்தில்தான் உலாவினாள். பிறகு பயம் பிடித்துக் கொண்டது அவளுக்கு. முருகேசன் தன்னை விட்டுத் திரும்பி போய் விடுவானோ என்று. ஆனால் நல்லூர்கந்தன் அதற்கும் ஒரு வழி வகுத்திருந்தார்; எங்களுக்குத் தான் அது அப்ப தெரியவில்லை.

பார்வதி ஒரு நாள் படுத்தபடி நித்திரையிலேயே போய் விட்டாள். எங்கள் ஊர் முழுக்க இதே கதைதான். செத்த வீடு மிக விமரிசையாக நடந்து முடிந்தது.

நாலாம் நாள் காரியங்கள் எல்லாம் நிறை வேறியவுடன் முருகேசன் மீண்டும் 'ரயிலேறி' விட்டான்.



குங்கிலியக்கலய நாயனார்

அந்த வாடி வீட்டு மாடியிலே ஒரு மாலை நேரத்தில் நாங்கள் மூன்று பேரும் கூடியிருக்கிறோம். பதினாலு வருடம் ரஸ்ய துருப்புகளுடன் போராடியும் முற்றிலும் அழிந்து விடாமல் நொண்டிக் கொண்டு நிற்கிறது. அப்ப கானிஸ்தானிலுள்ள 'ஹெராத்' என்ற நகரம். நான் சுற்றிலும் பார்க்கிறேன். அழகிய மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. மெல்லிய குளிர் காற்று உடம்பை வருடுகிறது.

'ஹுமெலின்' கனடாக்காரர், நீண்டதாடி வைத்திருப்பவர், அறிவுஜீவி. கனடாவில் பேராசிரியராக இருந்து இப்போது (U.N) ஐ.நாவின் போதைப் பழக்கம் தடுப்பு பிரிவில் வேலை பார்க்கிறார்.

'லூனன்பெர்க்' ஜெர்மன்காரர். சதுரமான தாடை அதை எப்பவும் நிமிர்த்தி வைத்துக் தான் கதைப்பார். ஐ.நாவின் அகதிகள் மறுகுடியேற்றத்தில் அவருக்கு வேலை.

மாவீரன் அலெக்சாந்தர் அழகி ருக்ஷானாவின் சௌந்தர்யத்தில் மனதைப் பறி கொடுத்தது இங்கே தான். ஆஹா! இந்தப் பெண்கள் தான் என்ன அழகு! அவர்கள் கண்கள் பச்சை நிறத்தில் ஆளை மயக்கும். கூந்தலோ கருமையிலும் கருமை. பெண் குழந்தைகளைத் தான் பார்க்க முடியும்; வளர்ந்து விட்டாலோ 'பர்தாவில்' புகுந்து விடுவார்களோ?

நான் தான் தொடங்கினேன். எனக்கு கனடாக் காரரைச் சீண்டுவதில் ஒரு தனி இன்பம், "அப்ப, ஹுமெலின் இந்த போதைப் பழக்கம் மிகவும் கெட்டது. இதை முற்றிலும் அழித்த பிற்பாடு என்ன கெய்வதாக உத்தேசம்? உமக்கு வேலை போய் விடுமே?" என்று கேட்டேன்.

அப்கானிஸ்தானில் பத்து லட்சம் பேர் இதற்கு அடிமை. இது தவிர, போதைப் பொருள் உற்பத்தி உலகத்திலேயே 35 வீதம் இங்கே தான். இவர் தனியாளாக இதை ஒரித்துக் கட்ட கொடுக்குக் கட்டிக் கொண்டு கனடாவில் இருந்து வந்து குதித்திருக்கிறார். இது நடக்கிற காரியமா? மலையை இடித்து மூக்குப் பொடி போட்டு முடிக்கிற கதைதான்.

இதற்கு கனடாக்காரர் பதில் கூறுமுன் ஜெர்மன்காரர் முந்திக் கொண்டு சொன்னார்:

(இங்கே நடந்த சம்பாஷணைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான். அதை வாசகர்களுக்காக நான் 'என் தமிழில்' தந்திருக்கிறேன்.)

"பழக்கத்தில் 'நல்ல பழக்கம், கெட்ட பழக்கம்' என்று இல்லை; 'விடக்கூடிய பழக்கம்', 'விட முடியாத பழக்கம்' இப்படி இரண்டு தான். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் தேநீர் வேண்டும்; சிலருக்கு சிகரெட் தேவை; இது இல்லாமல் நடுக்காடடில் இவர்களை விட்டால் தலையைப் பிய்த்துக் கொண்டு பைத்தியமாகி விடுவார்கள். எந்தப் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதை மீறினால் தான் கஷ்டம்."

அதற்கு கனடாக்காரர் "எனக்கு ஒரு நண்பர் இருந்தார். புத்தகக் கடையென்றால் அவருக்கு பைத்தியம். எந்த ஒரு கடையைக் கண்டாலும் புகுந்து விடுவார். நேரகாலம் தெரியாமல் உள்ளே இருப்பார். இருக்கிற காசெல்லாவற்றையும் கொடுத்து புத்தகங்களை அள்ளுவார். காசில்லாவிடில் உங்களிடமும் கடன் வாங்குவார். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். அதிலும் அவர் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தான் படிப்பார். இருந்தும், அவர் வரையில் இந்த நல்ல பழக்கமும் ஒரு கெட்ட அடிமைப் பழக்கம் தான். ஏனெனில், அவரால் இதை விட முடியவில்லையே" என்றார்.

நான் சொன்னேன்: " நான் செருப்பு போடும் போது எப்பவும் இடதுகாலைப் போட்டு பிறகு தான் வலகு காலைப் போடுவேன். 'ஷேவ்' எடுக்கும் போது வலகு பக்கம் செய்து பிறகு இடது பக்கம். இதுவும் பழக்கம் தானே?"

ஜெர்மன்காரர் சொன்னார், மிக அவசரப்பட்டு "என் மனைவி எப்போதும் கொண்டையூசி குத்தும் போது இடது பக்கம் குத்தி தான் வலது பக்கம் குத்துவான். நான் அவதானித்துப் பார்த்திருக்கிறேன்."

"வேறு என்னவெல்லாம் உமது மனைவி செய்வதை நீர் அவதானித்து பார்த்திருக்கீர்" என்றார் கனடாக்காரர், கண்களைச் சிமிட்டியபடி.

அதற்கு பிறகு சம்பாஷணை கீழிறங்கி விட்டது. இது அப்படியே கொஞ்ச நேரம் நீடித்தது.

நான் "தயவு செய்து உங்கள் சம்பாஷணையை இடுப்புக்கு மேலே கொண்டு வருகிறீர்களா?" என்று விட்டுத் தொடர்ந்தேன்:

"ஒரு பழக்கமானது எப்போது அடிமைப் பழக்கமாக மாறுகிறது என்பதை கண்டு பிடிக்க முடியுமா?"

ஜெர்மன்காரர் அந்தச் சமயம் பார்த்து தன் பையில் இருந்து ஒரு வளைந்த போத்தலை எடுத்தார். அவர் எப்பவும் அதில் குடிவகை வைத்திருப்பார். எந்தக் காடு, மேடு, மலை, சமுத்திரம் என்றாலும் அதைக் 'கவசகுண்டலம்' போல காவிக் கொண்டு திரிவார். அவர் ஒரு மிடறுகுடித்து விட்டு சொன்னார்.

"அது மிகவும் சிம்பிள். ஒரு மனிதனைப் பத்து நாள் பட்டினி போட வேண்டும். அதற்கு பிறகு ஐந்து ரூபாயை அவன் கையில் கொடுத்துப் பார்க்க வேண்டும். அவன் நேராக சிகரெட் வாங்க ஓடினால் அவன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை."

"எனக்கு சவ்வரிசிப் பாயசம் என்றால் உயிர். திரும்பத் திரும்ப சாப்பிடுவேன்; களவெடுத்தும் கூட சாப்பிடுவேன். இதுவும் அடிமைப் பழக்கமா? என்று கேட்டேன்.

அதற்கு கனடாக்காரர் "ச்சீ, அது எப்படி அடிமைப் பழக்கம் ஆக முடியும்? நீ வயிறு நிறைய பாயசம் குடித்து ஓய்ந்த பின் யாராவது உன் முன்னே ஒரு கப் பாயசத்தை நீட்டினால் உனக்கு குமட்டிக் கொண்டு வருகிறதே. அது அடிமைப் பழக்கம் அல்ல. அடிமைப் பழக்கம் என்றால் அதற்கு முடிவே கிடையாது. 'போதும்' என்று நீ சொல்லவே மாட்டாய். அறிவு நிலையில் இருக்கும் வரை எடுத்துக் கொண்டே இருப்பாய்; முடிவு என் வசமே இல்லை" என்றார்.

ஜெர்மன்காரர் சொன்னார்: "இது சொல்லித் தெரிவதில்லை. இந்த போதைக் கொடுமையில் விழுந்தவர்களைக் கண்ணால் பார்க்க வேணும். நான் 'பெஷாவாரில்' மூன்று வருடம் வேலை செய்தேன். நாளொன்றுக்கு நாலு, ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்துக் கொண்டிருந்த காலம் அது. என் வீட்டுக்கு காவல் ஒரு பட்டாணி காவல்காரன். மடியிலே ரிவால்வரும், தோளிலே AK47 ஆக வீட்டைச் சுற்றியபடியே இருப்பான்.

"அன்று கிறிஸ்மஸ் இரவு. நானும், மனைவியும் வெளியே போய் விட்டு ஒரு மணி மட்டில் வந்து படுத்து கண்ணயர்ந்திருப்போம். வீட்டின் கீழே கண்ணாடிகள் உடைத்து சலு சலு வென்ற சத்தம். கீழே ஓடி வந்து விளக்கைப் போட்டால் எங்கும் கண்ணாடிச் சில்லுகள்."

" 'காக்கா இஸ்மயில், காக்கா இஸ்மயில்' என்று கத்தினோம். இஸ்மயில் கதிரையில் இருந்த படியே AK47 ஐ மடியில் குழந்தை போல அணைத்தவாறு தூக்கத்தில் இருந்தான்."

"பொலீஸ் வந்து எல்லா விபரங்களையும் பதிவு செய்து கொண்டு போனார்கள். கனவு போனது விலையுயர்ந்த கலைப் பொருள்கள். அதற்கு பிறகு பொலீஸ’டம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நானும் மறந்து விட்டேன்."

"ஒரு நாள் என் கந்தோருக்கு பொலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது, என்னை நிலையத்துக்கு உடனே வரும்படி. நானும் மன€வியைக் கூட்டிக் கொண்டு விரைந்து சென்றேன்."

"அங்கே நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. ஒரு பையன், 24 வயது இருக்கும். குந்தி முழங்காலைக் கட்டிய படி ஒரு மூலையில் இருக்கிறான். குளிருக்கு நடுங்குவது போல அவன் தேகம் நடுங்குகிறது. நெற்றி, தாடையெங்கும் காயங்கள்; சில காயங்களில் இரத்தம் வழிந்த வண்ணம் இருக்கிறது."

"அன்று காலை அவன் பொலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான். அவன் திருடிய சாமான்களை அங்கே அடுக்கி வைத்திருந்தார்கள். என் வீட்டில் களவுபோன பொருட்கள் அங்கே இல்லை. அவை எல்லாம் வேறு வேறு திருடியவை. அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறான். அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறான், ஆனால் விட்டு விட்டானாம்.

"என் மனைவி அவன் முன்னே முழந்தாளில் உட்கார்ந்தாள். 'உன்னை நான் எப்படியும் வெளியே கொண்டு வந்து விடுவேன். தயவு செய்து என் முகத்தைப் பார். எங்கள் வீட்டில் நீ எடுத்த பொருள்கள் ஆயிரம் டொலர் பெறும். யாரிடம் அவற்றை விற்றாய், சொல்' என்று மன்றாடினாள்."

"அவன் கண்களில் கண்­ர் தான் வந்தது. வாய் குழறியது. அவனால் ஒன்றுமே கதைக்க முடியவில்லை."

"அவன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாம். தாய்க்கு ஒரே பையன். தகப்பன் இல்லை. தங்கை மட்டும் தான். வீட்டிலோ வறுமையிலும் வறுமை. இவன் படிப்பில் எப்பவும் முதல் தான். திறமையாகப் படித்து மருத்துவக் கல்லூரிக்கு செய்யப் பட்டு விட்டான்."

"முதல் வருடம் நன்றாகவே படித்தான். ஆனால் இரண்டாவது வருடம் பிடித்தது சனியன். நண்பர்களுடன் ஒரு நாள் மாலை ஒரு 'சிமிட்டா' பொடி போல் உறிஞ்சிக் கொண்டான். ஒரே ஒரு முறை தான். அடுத்த நாளும் எடுத்தான்; அதற்கு அடுத்த நாளும், இப்படியே போயிற்று. ஒவ்வொரு முறை எடுக்கம் போதும் 'இது தான் கடைசித்தரம்' என்று நினைத்துக் கொள்வான்.

"கல்லூரிக்குப் போவது இப்போது தடைபட்டது. இவன் சிந்தனை எல்லாம் அடுத்த வேலை 'சிமிட்டாவுக்கு' காசு எப்படிச் சம்பாதிப்பது என்பது தான். முதலில் புத்தகங்களை விற்கத் தொடங்கினான். பிறகு வீட்டில் பொருட்கள் திடீர் திடீரென்று காணாமல் போகத் தொடங்கின. கடைசியில் ஒரு நாள் தங்கையின் தோட்டிலேயே கை வைத்தான். அதை விற்கக் கொண்டு போன இடத்தில் பிடிபட்டு விட்டான்."

"அப்ப தான் முதன் முதலாக தாய்க்கும் தங்கைக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்றால பொலீஸ’ல் இருந்து அவனை காப்பாற்றி விட்டார்கள். ஆனால் வீட்டுப்பயம் இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டிலே சண்டை. இப்படி தொடங்கி அடிதடி வரையில் போய்விட்டது. ஒரு நாள் தாயாரை அடித்தே விட்டான்."

"அதற்குப் பிறகு அவன் வீட்டிற்கு வருவதே இல்லை. சுருண்டு சுருண்டு போய் ரோட்டு ஓரங்களில் படுத்திருப்பான். போதையின் உத்வேகம் வரும் போது எங்கேயாவது புகுந்து களவெடுத்து விடுவான்."

"நானும் மனைவியும் பெஷாவரை விடும் போது அவனை ஜெயிலில் போய்ப் பார்த்தோம். மனைவி அவனுக்கு ஒரு கம்பளிப் போர்வை கொடுத்தாள். இப்ப கூட அவனுடைய நீளமான கண்கள் என் நினைவில் அடிக்கடி வரும். அவன் இன்னும் இருக்கிறானா இறந்து விட்டானா, தெரியவில்லை."

"இந்தப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா?"

ஹுமெலின் சொன்னார். "சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில் தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்கிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட் இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொடங்கி விடும்."

"நான் தீக்குச்சியினால் தான் சிகரெட் பற்ற வைப்பேன். முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும் போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில் தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை."

"ஒருகோடை விடுமுறையாக பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம், ரொரென்டோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை."

"என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன் பின் நான் அதை தொடவே இல்லை. நான் பாக்கியசாலி."

"அதற்குப் பிறகு சிகரெட் குடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா?"

"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன். சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று . இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே இன்னோரு முறை திரும்பவும் தொற்றி விடுமோ? என்று பயந்த படியே இருக்கிறேன்" என்றார்.

நான் சிறு வயதில் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

"எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி' என்று தான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம். வீட்டிலே சோறு தீத்தும் போது கூட 'குடிகாரச் சின்னத்தம்பி'என்று சொல்லித் தான் தீத்துவார்கள்.

"ஒழுங்கையின் எத்தத்தில் அவன் வரும் போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்து விட்டு ஆடிக்கொண்டே வருவான். வேட்டி அவிழ்ந்து விடும். வேட்டியை ஒரு கையால் இழுத்த படியே வருவான் சின்னத்தம்பி."

"சும்மா வரமாட்டான். உரத்த குரலில் திட்டிக்கொண்டு தான் வருவான். அவனுடைய 'மூடைப்' பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப் பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி, உலாஞ்சி' தான் வருவான்; இன்னொரு நாளைக்கு நடராசாவை திட்டியபடி வருவான்; ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி; மற்றொரு நாளைக்கு அவன்தாயார், இப்படி.

"எங்கள் ஊர் பெண்டுகள் எல்லாம் அவன் இன்றைக்கு ஆரை வைகிறான் என்று வேலி வழியலாலும் பொட்டு வழியாலும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டி ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்."

"எங்கள் வீடு அவன் வீட்டுக்குப் பக்கத்தில் தான். ஆனால் அவன் வீட்டுப் படிலை அடுத்து ஒழுங்கை வழியாகத் தான் இருக்கும். அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்று தான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால் அவர்கள் வீட்டுக் கூரை தெரியும்."

"எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர் அக்காவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்த படியே அக்கா அவர் சொல்லிக் கொடுப்பதைத் திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்ப பதினாறு, பதினேழு வயதிருக்கும்."

"அக்கா பாடும் போது நான் அவள் முகத்தையே பார்த்த படி இருப்பேன். அக்காவுக்கு வட்டமான பெரிய கண்கள். அக்காவின் கைவிரல்கள் வெள்ளைக் கட்டையிலும், கறுப்புக் கட்டையிலும் மாறி மாறி தவழ்ந்து விளையாடும், அவள் குரலும் பாட்டு வாத்தியார் குரலும் சேர்ந்து ஒலிக்கும்."

"கனக சபா....பதி....தரி...சனம்
ஒருநாள்
கண்டால்...கலி...தீ...ரும்
ஆ....."

"அக்கா இந்தப் பாட்டை பாடுகிறாள். என் தகப்பனார் மரக் கட்டிலில் சப்பணம் கட்டிக் கொண்டு இருந்து ரசிக்கிறார்."

"மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி' கனகசபாபதி' என்று ஒரு இளம் பொடியன். சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டியபடி அடிக்கடி அந்தப் பக்கம் ஓடிக் கொண்டிருப்பது தான் அவன் வேலை."

"ஒரு நாள் இந்தக் குடிகாரன் வழக்கம் போல வேட்டியை இழுத்தபடி போறான். சத்தம் போட்டுக் கத்தியபடியே. எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை விட்டு விட்டு காது கொடுத்துக்கேட்ட படியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறை போலும், குடிகாரன் சொல்கிறான்:

" 'அது ஆரடி கனகசபாபதி? இது என்ன கூத்து, இதைக் கேப்பாரில்லையா?'"

"அதற்குப் பிறகு அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதை நிறுத்தி விட்டாள். என் தகப்பனார் அப்படி உத்தரவு போட்டு விட்டார். கொஞ்ச நாள் பிறக பாட்டுக்காரரையும் வேண்டாமென்று விட்டார்."

"இப்படித் தான் ஒரு நாள் நான் ஒரு சின்னச் சருவச் சட்டியோடு எங்கள் படலையடியில் நிற்கிறேன். வழக்கமாக அந்த வழியால் மாணிக்கம் கள் எடுத்துக் கொண்டு போவான். அம்மா சொன்னபடி அப்பத்திற்கு போட ஒரு சொட்டு கள்ளு வாங்க காத்துக் கொண்டிருக்கிறேன்."

"தூரத்திலே குடிகாரச் சின்னத்தம்பி. முதலில் அவன் குரல். பிறகு தான் உருவம் தெரிகிறது. வழக்கம் போலச் சத்தம் போட்டு பேசிய படியே வாறான். நான் சருவச் சட்டியைப் போட்டு விட்டு உள்ளுக்கு ஓடி விட்டேன்."

"அவன் வீட்டுக்கு போனவுடன் சண்டை தொடங்குகிறது. இவன் நாலரை அடி உயரம். ராசக்கா ஆறு அடி. முதலில் வார்த்தையிலே தான் சண்டை. அம்மா குந்தில் ஏறி நின்று பார்க்கிறாள். நாங்கள் அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம்."

"ராசக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். பூரணம்,அவளுக்கு பதின்மூன்று வயது; பெரிய பிள்ளை ஆனவுடன் படிப்பை நிறுத்தி விட்டாள். மற்றது பற்பன் (பத்மநாபன்) என்னோடு தான் படிக்கிறான். அவன் பள்ளிக்கு வர்றதே 'பாணும், சம்பலும்' வாங்கத்தான். அவன் அரைவாசி சாப்பிட்டு விட்டு மீதியை அக்காவுக்கும், அம்மாவுக்கும் கொண்டு போய் கொடுப்பான்."

" 'என்ன இழவுக்கு இஞ்ச குடிச்சப் போட்டுவாறாய்?' "

" 'ஏண்டி, உன்ரை கொப்பற்ற சீதனத்தில் குடிக்கிறானே?' இது அவன்."

" 'மூன்று நாள் பிள்ளைகளுக்கு சாப்பாடில்லை; நாள் மாறி நாள் இப்பிடி வாறியே? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?'"

"எந்தப் பெண்ணும் கேட்க வேண்டிய கேள்விதான்?"

"இப்ப அடி விழும் சத்தம். பிறகு ராசக்கா விளக்குமாத்தைப் பிடுங்கி 'ரப்பிலே' செருகி விட்டாள். இவருக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்க்கிறார்."

" 'எடுத்துக் குடடி, எடுத்துக் குடடி' "

"காலால் அவளை உதைக்கிறார்"

"மனிதனடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப் படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்சம் நேரம் அமைதி. ஊர் முழுக்க மூச்சு விடாமல் காதைக் கூர்மையாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது."

"அம்மா தான் முதலில் பார்த்தாள். வீட்டுக் கூரை 'டங்' கென்று ஒரு கணம் ஆடியதை. 'ஐயோ இஞ்சருங்கோ, என்னெண்டு போய் பாருங்கோ' என்று கத்தினாள் அம்மா."

"எல்லோரும் வேலியைப் பாய்ந்தும் கிணத்தை தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு பூட்டியிருக்கிறது. சின்னராசு தான் உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்கு போறான், பிறகு அம்மா."

"நாக்கு வெளியே நீண்டு விட்டது. ராசக்கா முகட்டில் இருந்து ஒரு சேலையில் தொங்கி கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்து கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒரு கணம் பிந்தியிருந்தால் மரணம் தான்."

"சின்னத்தம்பிக்கு வெறி முறிந்து விட்டது. தலையில் கைவைத்த படி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துக்கத்தென்று கத்துகிறார்கள்.

"கொக்குவில் சனம் எல்லாம் வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்."

" 'ஐயா ஐயா! என்னைக் கொல்லுங்கோ! இந்த சனியனை இனி நான் தொட மாட்டேன். இது சத்தியம்' என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

"முதல் நாள், வேட்டியைக் கட்டிய படியே கீழே பார்த்த படி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத்தம்பி; இரண்டாம் நாளும் அப்படித்தான்; மூன்றாம் நாளும் அதே தான்."

"அம்மா சொன்னாள் 'சின்னத்தம்பி திருத்தி விட்டான்' என்று."

"நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக்கொண்டே வாறான்."

" 'விதானையார் என்ன எனக்குச் சொல்லுறது? அவள் என்ரை பெண்சாதி. இவர் ஆர் என்னைக் கேட்க?'"

கொஞ்ச நேரம் நாங்கள் எல்லாம் மௌனம். பிறகு கனடாக்காரர் சொன்னார்.

"இந்தப் பழக்கம் உள்ளே வெகு நைஸாகப் புகுந்துவிடும். அது புகுந்ததே தெரியாது. ஆனால் அதை வெளியேற்றுவது தான் மிகவும் சிரமம்.

"அதிலும் 'நோய் விலகும் அறிகுறிகள்' (Withdrawal symptoms) - அதன் பாதிப்போ அவஸ்தையானது. நரக வேதனை தான். இதிலே மீள்வது மிகவும் அரிது என்றார் ஜெர்மன்காரர்.

"அவர்களுக்கான 'புனர்வாழ்வு மையங்கள்' (rehabilitation centres) மேல் நாடுகளில் இருக்கின்றன. ஆனால் பத்திலே ஒருவர் தான் மீண்டு வருவார்கள்."

"எனக்கு அப்படி ஒருவரைத் தெரியும். ஆபிரிக்காவில் நான் வேலை செய்த போது அந்தப் பரிச்சயமேற்பட்டது." என்று நான் கூறினேன்.

"அது மரங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பனி. ஆபிரிக்காவில் சிவப்பு மரங்களுக்கு உலகமெங்கம் நல்ல வரவேற்பு. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்தார்கள். கம்புயூட்டர் பிரிவில் தான் நான். எனக்கு கீழே நாற்பது பேர்.

"அவனுடைய பேர் 'லுங்கே ஒபுக்கு'. நல்ல தேகக் கட்டுடன் இருப்பான். எப்பவும் சிரித்த முகம். வயது இருபத்தியாறு. ஒரு மனைவியும் மகளும் தான்."

"கம்புயூட்டரை அவன் கண்டதேயில்லை. ஆனால் அதைக் கண்ட நாளிலிருந்து அவனுக்கு ஒரு மோகம். அதில் மீன்குஞ்சு நீந்துவது போல இவனும் புகுந்து விளையாடுவான். இயற்கையாகவே அவனுக்கும் கம்புயூட்டருக்கும் ஒரு தொந்தம் இருந்தது. நான் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் தானாகவே பத்து விஷயங்களைக் கற்றுக் கொண்டு விடுவான்."

"நாங்கள் மாதா மாதம் அமெரிக்காவிலுள்ள தலைமையகத்துக்கு நாற்பது பக்கங்கள் கொண்ட செயலாட்சி அறிக்கையை அனுப்ப வேண்டும், ஆறு மாதத்திலேயே இவனை நான் இது தயாரிப்பதில் ஒரு விற்பன்னனாகத் தயார் செய்து விட்டேன்."

"இரவு பகலாக கம்புயூட்டரே கதி என்று கிடப்பான். என் வேலையானது சுகமாகவும் அவசரமின்றியும் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஒபுக்குவுக்கு இன்னொரு மோகம் பிடித்தது."

*cont...chakram2.mtf** தயை நிற்பாட்டினேன். ஜெர்மன்கார


** chakram1.mtf ன் தொடர்ச்சி **

இந்த இடத்தில் நான் கொஞ்சம் கதையை நிற்பாட்டினேன். ஜெர்மன்காரர் போத்தல் மூடியைத் திறந்து ஒரு மிடறு வாயில் ஊற்றிக் கொண்டார். நான் தொடர்ந்தேன்.

"அங்கே அமெரிக்காவில் இருந்து வந்த 'பீஸ்கோ' ஊழியர்கள் (Volunteers) அநேகம். அதிலும் பெண்களே அதிகம். எல்லாருமே கட்டிளம் கன்னியர். கன்னியர் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அதிலே ஒரு நீலக்கண் அழகி; பெயர் 'கரலைன்'. அவளுக்கு இவன் மேல் மையல்."

"பீஸ்கோவில் இருந்து வரும் பெண்கள் ஒரு ஆணைவலையில் வீழ்த்தி இழுத்துக் கொண்டு போவது அங்கே வழக்கம் தான். பீஸ்கோ பெண்கள் அங்கு வருவதே அதற்காகத் தான் என்று என்னுடைய மேலதிகாரி எனக்கு அடிக்கடி சொல்லுவார்."

"மேற்கு ஆபிரிக்காவில் ஒரு வித குடிவகையை சிறு சிறு 'பொலிதீன்' பைகளில் போட்டு விற்பார்கள். அதில் ஊசியால் ஒரு சிறு ஓட்டை போட்டு வாய்க்குள் அடக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மது வகையோ மிகவும் சக்தி வாய்ந்தது. அது கசிந்த கசிந்து ஒரு மணியளவுக்கு தாக்குப்பிடிக்கும். அது முடிந்தவுடன் இன்னும் கேட்கம். கொடுத்துக் கொண்டே இருக்க வேணும்."

"கரலைன் காதலிக்கு 'பொலிதீன்' மோகம். இவன் சாது. இவனும் பழகிக் கொண்டான். அது பிடரியில் ஏறி இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது. இவனுக்கு அதை இறக்கி விட வழியில்லை. அதன் சொற்படி எல்லாம் ஆடத் தொடங்கினான்.

"ஆபிரிக்காவில் ஒரு பழமொழி இருக்கிறது. 'ஆற்றிலே ஆழம் பார்க்க ஒரு காலை மட்டு விடு, இரண்டு காலையும் விடாதே, முட்டாளே' என்று. இவன் இரண்டு காலையும் விட்டு விட்டான்."

"ஒரு நாள் அவன் என்முன்னே நிற்கும் போது கவனித்தேன். நிற்க முடியாமல் திண்டாடினான்; கைகளெல்லாம் நடுக்கம். அடிக்கடி வேலைக்கு வரத் தவறினான். அறிக்கைகள் தயாராக நாட்கள் எடுத்தன. எனக்கு அவனிலே சம்சயம் ஏற்பட்டது."

"ஒரு திங்கள் காலை நான் அலுவலகம் வருகிறேன். என் மேசையில் ஒரு சிறு குறிப்பு இருக்கிறது. அந்த மாதத்தின் 'ப்ரோகிராம் விபரங்கள்; இந்த கம்புயூட்டர் பைல் இந்த 'டைரக்டரியில்' இருக்கிறது; ரகசிய 'கோட்' இது என்று இப்படியான சில குறிப்புகள் தான். எனக்கு அது முழுவதுமாய் விளங்கவில்லை. ஒரு மூலையிலே போட்டு விட்டேன்.

"இரண்டு நாளாக ஒபுக்கு வரவில்லை. மூன்றாம் நாளும் இல்லை. எனக்கு கிலி பிடித்து விட்டது. தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பும் நாள் நெருக்கிக் கொண்டே வந்தது. விசாரித்ததில் அமெரிக்கச் சிட்டுடன் இவன் ஓடி விட்டான் என்றார்கள். 'கரலைன்' இவனைக் கடத்தி விட்டாள். கந்தோரில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது; ஆனால் நான் தான் கடைசி."

"அப்பதான் அந்தக் குறிப்பு நினைவுக்கு வந்தது. அதைப் பார்த்து இரவு பகல் வேலை செய்து தலைமையகத்துக்கு அறிக்கையை கெடு முடிவதற்கிடையில் அனுப்பிவைத்தேன். எனக்கு அவன் மீது அன்பு தான் சுரந்தது. கோபம்வரவில்லை. அவன் எவ்வளவு ஒரு இக்கட்டில் மாட்டி தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் துறந்து ஓடினாலும் என்னை நட்டாற்றில் விட்டுப் போக விரும்பவில்லை. அவனுடைய குறிப்புகள் என் வேலையைக் காப்பாற்றின."

"நான் ஒப்புக்குவை மறந்தே விட்டேன். ஆனால் ஒரு வருடம் கழித்து எனக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது."

ஐயா.

உங்களை நான் மறப்பேனா? உங்களிடம் படித்த கம்புயூட்டர் தான் இன்று சோறு போடுகிறது.

நான் போதைக்கு ஆளாகிப் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் அல்ல. புனர்வாழ்வு மையத்தில் ஆறு மாதம் கிடந்தேன். அதனிலும் பார்க்க நரகம் வேறு ஒன்றும் இல்லை. இந்நோயின் 'விலகும் அறிகுறிகள்' என்னைச் சித்திரவதை செய்து விட்டன. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இறுதியில் தப்பிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கரலைனும் தன் அன்பைத் தெரிவிக்கிறான்.

ஒபுக்கு.

இதை நான் சொல்லி முடிக்கவும் சமையல்காரன் 'டிங்டிங்' என்று மணியடித்து 'டின்னர்ரெடி' என்று சொல்லவும் சரியாகவிருந்தது.

ஜெர்மன்காரர் போத்தலை உருவினார். மூடியைத் திறந்து கொஞ்சம் வாயிலே ஊற்றி விட்டு மறுபடியும் போத்தலை பையிலே வைத்தார்.

"இது என்ன? நாங்கள் இவ்வளவு கதைத்த பிறகும் இப்படி செய்கிறீரே? இதை இன்றே தலையைச் சுத்தி வீசிவிடும்" என்றேன்.

ஜெர்மன்காரர் "ஆமாம், இன்று இதுதான் கடைசித்தடவை - நாளை விடியும் வரை" என்றார்.

* * *

மேற்படி கதையைப் படித்துவிட்டு நண்பனொருவன் "என்ன கதை எழுதிறாய் நீ? தலையுமில்லை. வாலுமில்லை! குங்கிலியக்கலய நாயனார் என்று தலைப்பு வேறு கொடுத்திருக்கிறாயே" என்று கேட்டான்.

"உனக்கு குங்கிலியக்கலய நாயனார் கதை தெரியுமா?" என்று கேட்டேன்.

"என்ன தெரிய வேணும். அறுபத்தி மூன்று நாயன்மாகளில் அவரும் ஒருவர்" என்றான்.

"திருக்கடவூரிலே சுவாமிக்கு தினமும் குங்கிலியம் தூபம் இடுவதே இவர் தொழில். எப்பேர்ப்பட்ட வறுமையில் வாடினாலும் தினமும் இதைச் செய்யத் தவற மாட்டார். கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்து குங்கிலியம் வாங்கி சுவாமிக்குத் தூபம் போட்ட படியே இருப்பார். இப்படியே வீட்டிலே இருக்கும் பொருள்களையெல்லாம் விற்று விற்று குங்கிலியம் வாங்குவார்.

"ஒரு நாள் வீட்டிலே மனைவியும் பிள்ளைகளும் பட்டினி. விற்பதற்கு இனி ஒன்றுமே இல்லை. அப்பொழுது அந்த மனைவி தன் தாலியை கழற்றிக் கொடுத்து அதை எப்படியாவது விற்று நெல் வாங்கி வரச் சொல்கிறாள், பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்கு. இவரும் 'அப்படியே' என்று போனார். ஆனால் வழியில் ஒருவன் ஒரு பொதி குங்கிலியம் கொண்டு வரக் கண்டு அதிலே மனதைப் பறி கொடுத்தார்.

"தன் வயமிழந்து மதிமயங்கி, தாரை தாரையாக கண்­ர் சொரிய அவன் காலி விழுந்து தாலியைக் கொடுத்து குங்கிலியப் பொதியை பெற்றுக் கொண்டார். அதை நேரே கொண்டு போய் கோயிலிலே வைத்து தூபம் போடலானார். பசிறை மறந்தார்; மனைவியை மறந்தார், பிள்ளைகளையும் மறந்தார்."

"இது என்னத்தைக் காட்டுகிறது?" என்றேன்.

"அவருடைய பக்தியைத் தான்" என்றான் நண்பன்.

"இல்லை, இதுவும் ஒரு வித அடிக்ஷன் (addiction) தான்" என்றேன் நான்.

....................

பெருச்சாளி

அதற்குப் பேர் 'கட்டிங்கிராஸ்' மேற்று ஆபிரிக்காவில் பெருகிக்கிடக்கம் ஒரு வகை பெருச்சாளி இனம். ஒரு பெரிய முயல் குட்டி அளவுக்கு வளரும். இதில் விசேஷம் என்னவென்றால் இது ஒரு தோட்டத்தில் வாய் வைத்துவிட்டால் என்றால் தோட்டக்காரன் கதி அதோ கதிதான். மண்ணைப் பிராண்டி உள்ளே போய் கிழங்கு வகை எல்லவற்றையும் நாசமாக்கி விடும்.

மேலுக்குப் பார்த்தால் பயிர்கள் 'ஓகோ' வென்று இருக்கும். ஆனால் உள்ளுக்குள்ளே கிழங்கையும் வேர்களையும் ஒட்டச் சாப்பிட்டிருக்கும். பார்ப்பவர்களக்கு விஷயமே தெரியாது. கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கும் பயிர் செத்துப் போகும்.

சில வைரஸ் இருக்குதான். அது ஆட்களை முற்றிலும் கொல்லாது. ஆள் செத்தால் அதுவும் செத்து விடுமல்லவா, ஆகையால், மெள்ள, மெள்ள ஆளைச் சாப்பிட்டுக் கொண்டே வருமாம், தன் உயிரை நீடிப்பதற்கு.

கட்டிங்கிராஸ•ம் அந்த வகை தான். வள்ளிக் கிழங்கு என்றால் அதற்கு உயிர். நாலு கிழங்க இருந்தால் மூன்றைச் சாப்பிட்டு விட்டு ஒன்றை விட்டுவிடும். உங்களில் கரிசனப் பட்டு அல்ல. பயிர் மடிந்தால் அதுவும் மடிந்துவிடுமே.

கட்டிங்கிராஸ் இப்படியாக மனிதனுக்கு ஏற்பட்ட உணவைச் சாப்பிட, மேற்கு ஆபிரிக்க மனிதனோ கட்டிங்கிராஸையே சாப்பிடலானான். மிகப் பிரியமாகச் சுவைத்து சாப்பிடுவான். சுட்டுச் சாப்பிடுவான்; பொரிச்சு சாப்பிடுவான்; கறி வைச்சும் சாப்பிடுவான்.

கட்டிங்கிராஸ் மனித இனத்தை ஒழிக்க பாடுபட மனிதனோ கட்டிங்கிராஸை வேரோடு கறுவறுக்க வழிகள் தேடிக் கொண்டிருந்தான். எழுத்தில் இல்லாத ஒப்பந்தம் இது. ஒரு உயிர் வாழ் இனச்சூழல் சமனம் (Ecological balance) இங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. யாருக்கும் தெரியாது.

* * *

நான் அப்போது உலக வங்கிக்காக மேற்க ஆபிரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கே தான் எனக்கு முதன் முதல் கட்டிங்கிராஸ”டன் பரிச்சயமேற்பட்டது. 'ம்மயம்பா' என்ற ஊருக்குக் காரில் பயணம். பென்ஸ் கார். அங்கே இதெல்லாம் சர்வசாதாரணம். நடுத்தர வர்க்கம் இல்லாத நாடு; மிதமிஞ்சிய பணக்காரனாக இருப்பான் ஒருவன், அல்லது பரம ஏழை. இடையில் ஒன்றும் இல்லை. வாகனமும் அது மாதிரிதான். பென்ஸ்கார் தான் வீதியெல்லாம். கொஞ்சம் முட்டுப்பட்ட பணக்காரன் என்றால் peugeot அல்லது Toyata வைத்திருப்பான் அல்லது நடைதான். வண்டி, குதிரை, ரிக்ஷா, ஓட்டோ என்றெல்லாம் இல்லை. தள்ளு வண்டி, சைக்கில் கூடக்கிடையாது. மோட்டார் சைக்கிளை மட்டும் அதிசயமாகக் காணலாம். சனங்கள் பொடா பொடாவில் (பஸ்ஸ’ல்) போய்க் கொள்வார்கள். அதன் சத்தத்தை வைத்து அப்படிப் பேர் வந்ததும்.

காரைச் சாரதி நூறு மைல் வேகத்தல் ஓட்டிக் கொண்டிருந்தான். இதுவும் சர்வசாதாரணம் தான். அவன் பேர் 'க்காணு'. அவனுடைய வாய் எப்பவும் கோலா நட்டை (பாக்குப் போன்ற துவர்ப்பாய் இருக்கம் ஒரு காய்) மென்று கொண்டே இருக்கும். வாய் சிவப்பாகும். பசியே எடுக்காது 'ஹ’ ஹ’' என்று அடிக்கடி சிரிப்பான். சிவப்பு முரசு பளிச்சென்னும். சிரிக்காத வேளையில் நன்றாக கார் ஓட்டுவான்.

நான் சாடையாகக் கண்ணயர்ந்திருக்க வேணும். திடீரென்று கார் 150 மைல் வேகத்தில் துள்ளிப் பாய்ந்து திசை மாறி ஓடியது. 'டபார்' என்று ஒரு சத்தம். திடுக்கிட்டு "என்ன? என்ன?" என்றேன். அவன் காரை திடுமென்று நிற்பாட்டி இறங்கி காட்டுக்குள் ஓடினான்.. நான் கத்துவதைக் கூடப் பொருட்படுத்தவில்லை. செடிகளின் சலசலப்பு. ஆனால் இவனைக் காணவில்லை. ஒரு நிமிடம் கழித்து மெள்ள எட்டிப் பார்த்தான். பல் எல்லாம் தெரிய 'ஹ’ ஹ’' என்று சிரித்து "மாஸ்ட, மாஸ்ட கட்ங்கிராஸ்" என்றான்.

என்ன இளவு இவனுடன் என்று இறங்கிப் பார்த்தேன். குற்றுயிரும் கொலையுயிருமாக அதுகிடந்தது. அசல் பெருச்சாளி தான்.

"மாஸ்ட! மாஸ்ட! கட்டிங்கிராஸ் சொப் பைன் பொக்கு ஸ்வீட்டோ" என்றான். ஐயா! இது அருமையான சாப்பாடு எடுத்து வரவா?" என்று கேட்டான். கண்டிப்பாக "முடியாது" என்று விட்டேன். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே வந்தான்.

அதற்குப் பிறகு தான் எனக்குத் தெரியும் அந்தப் பெருச்சாளியை யார் ரோட்டிலே பார்த்தாலும் காரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள் என்பது. பிறகு விரும்பிய மாதிரி அதைச் சுட்டோ, கறி வைத்தோ சாப்பிடுவார்களாம்.

க்காணு மூன்று நாளாக முகம் நிமித்த வில்லை. அருமையான 'சொப்' மூதேவியால அநியாயமாய் போய் விட்டது என்ற ஆதங்கம் அவனுக்கு. "மாஸ்ட, சொப்பைன், சொன் பைன்" என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அவனால் அந்தத் துக்கத்தை தாள முடியவில்லை. போறவர், வாறவர் எல்லாரிடமும் அதைப் பற்றி பிரலாபித்தான். நான் அந்த ஊரை விடும் வரை அவன் என்னை மன்னித்ததாகவே தெரியவில்லை.

* * *

உலக வங்கி இன்னொரு பத்து மில்லியன் டொலர் கடன் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இன்னேரம் பார்த்து புகார் கடிதங்கள் அறம்பிறமாகப் பறந்தன. ஊழல், லஞ்சம், பணவிரயம் என்று பல விதமான குற்றச் சாட்டுகள். வங்கி கடன் தர மறுத்து விடக்கூடுமோ என்ற ஒரு அவலமாக நிலைமை.

மந்திரி ஒரு விசாரணைக் குழு அமைத்தார். அவர்தான் தலைவர். குழுவில் அவர் தவிர நானும் இன்னும் மூன்று பேரும். விசாரணைக் குழு தீர விசாரணை செய்து ஒரு அறிக்கை சமர்ப்பிப்பதாக ஏற்பாடு.

ஒரு நல்ல நாள் பார்த்து மக்கெனி என்ற ஊருக்கு வெளிக்கிட்டோம். நல்ல நாள் என்றால் அட்டமி, நவமி, மரணயோகம் பார்த்து அல்ல. மக்கெனி 200 மைல் தள்ளி இருக்கும் சிறு ஊர். சனி, ஞாயிறு என்றால் அங்கு பீர் தீர்ந்து விடும். திங்கள் தான் பீர் வரும் நாள். ஆகையால் கணக்குப்பார்த்து செவ்வாயே வெளிக்கிட்டோம்.

மந்திரி ஆள் படையோடு மூன்று வாகனங்களில் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார். நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நல்ல ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு பின்னே ஒரு கார் விடாமல் தொடர்ந்து வந்து கொண்டே, "பாம், பாம்" என்று சத்தம் போட்டபடியே. அங்கே எல்லாம் பின்னால் வரும் வாகனத்துக்கு வழிவிட மாட்டார்கள். 'இவனுக்கென்ன நான் வழி விடுவது' என்ற மனப்பாங்குதான். மானப்பிரச்சினை. வழி கேட்டு வழி விடாமல் பெரிய சண்டைகள் எல்லாம் நான் பின்னாலே பார்த்திருக்கிறேன்.

க்காணு தன் பாட்டுக்கு ஓட்டிக் கொண்டே இருக்கிறான். வழிவிடக் காணோம். பின்னால் வாறவனோ "பாம், பாம்" என்று சத்தம் கொடுத்தபடியே வாறான்.

"க்காணு, கிவ்ரோட்பா".

"வழிவிடப்பா அவனுக்கு" என்றேன். க்காணு என்னைக் கண்ணாடியிலே பார்க்கிறான். ஆனால் வழி விடவே இல்லை.

"வழி விடு, வழி விடு" என்னு நான் சத்தம் போட்டதும் க்காணுவின் முகம் சுருங்கி விட்டது. வேண்டா வெறுப்பாக ஒதுங்கினான். அப்ப பின்கார் விரைந்து முன்னாலே போய்விட்டது.

வழி நெடுக சிவப்பான மண்மலைகள், திடீரென்று தோன்றும் கல் பாறைகள். 'கொலபஸ்' என்று சொல்லப்படும் ஒரு சாதிக் குரங்கு காட்டும்விளையாட்டுகள், இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வருகிறேன். நல்ல இளம் வெய்யில், எண்ணெய்க் கறுப்பான பெண்கள் விதம் விதமான கலர் லப்பாத் துணிகள் அணிந்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சில தாய்மார்கள் முதுகிலே கட்டியபடி குழந்தைகள். அவர்கள் அங்கு மிங்கும் அசையும் போது குழந்தைகளும் ஒவ்வொரு பக்கமாகச் சாய்ந்து அதை ஒரு விளையாட்டுப் போல அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

சடுதியில் க்காணு "மாஸ்ட, மாஸ்ட லுக்" என்றான். அப்படிப் சொல்லி விட்டு வாயைத் திறந்து சிரிக்கத் தொடங்னி‘ன். எங்களை இருபது நிமிடம் முந்தி ஓவர்டேக் பண்ணி போன கார் ஒரு வளைவில் ஒரு லொறியுடன் மோதி நொறுங்கிப் போய் இருந்தது. அதில் போன சாரதியும், பயணியும் இறந்து போக லொறி குப்புறக் கிடந்தது. பொலீஸ் வானும், ஒரு சிறு கூட்டமும் சுற்றி வர. காரைக் கொஞ்சம் ஸ்லோ பண்ணி முழு விபரத்தையும் கண்களால் சேகரித்துக் கொண்டு மறுபடியும் காரை முடுக்கி விட்டான். "மாஸ்ட, மாஸ்ட டொண், டொண்". "அவர்களுக்கு எல்லாம் முடிந்து விட்டது" என்று சொல்லி விட்டு மறுபடியும் பலமாக 'ஹ’ ஹ’' என்று திரும்பி பார்த்த படியே சிரித்தான்.

எனக்கு மனதை என்னவோ செய்தது, அவர்களுடைய சாவு என் தலையில் விடிந்தது போல. என் நாக்கிலே ஏதோ சனியிருந்திருக்க வேண்டும். நான் க்காணுவை 'வழி விடு' என்று சொல்லாமலே இருந்திருக்கலாம். அல்லது அரை செகண்ட் முந்தி சொல்லியிருப்பார்கள். அப்படியென்றாலும் அவர்கள் தப்பியிருப்பார்கள். அரை செகண்ட் பிந்தி சொல்லியிருக்கலாம். அப்படியும் தப்பியிருப்பார்கள். என்னத்திற்கு சரி கரெக்டாக அந்த நேரம் பார்த்துச் சொன்னேன். அவர்களுடைய சாவு என்னுடைய எந்த ஒரு சொல்லினால்தான் ஏற்பட்டது என்று எனக்கு நிச்சயமாகப்பட்டது.

நாங்கள் மக்கெனி போய் இறங்கியதும் இது பற்றி யாரிடமாவது கதைக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் என்னுடன் வந்தவர்களோ, மற்றவர்களோ இதைச் சட்டை செய்யவே இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று விபத்துக்கள் நடப்பதும் செத்த உடல்கள் சிதறிக் கவனிப்பாரற்றுக் கிடப்பதும் போகப் போக பின்னால் எனக்கு பழகி விட்டது. ஆனால் அப்ப தெரியவில்லை.

மந்திரி இறங்கியவுடன் முதல் கேட்ட கேள்வி "பீர் இருக்கிறதா" என்று தான். "இல்லை ஐயா, ஆனால் கெதியில் வந்து விடும்" என்றான் எங்களை வரவேற்ற ஊர் அதிகாரி. மந்திரி நாங்கள் வந்த வேலையை ஒரு கூட்டம் கூட்டி விளக்கி விட்டு விசாரனைணைத் தொடங்கினார்.

அந்த விசாரணையை விஸ்தரித்தால் மூன்று புத்தகங்கள் எழுதி விடலாம். எங்கள் ஊரில் சொல்வார்கள். "அம்பட்டன் வீட்டுக் குப்பையைக் கிளற மயிர்" என்று. அது போலத்தான். விசாரிக்க விசாரிக்க குப்பைதான் வந்தது. அந்தக் குப்பையை வைத்து ஒரு குப்பையும் கொட்ட ஏலாது. "சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லை" என்பது போல விசாரணை திசை தெரியாமல் போய்க் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட விசாரணையில் ஒரு சங்கடம். வழக்கமாக பொய்களும், உண்மைகளும் கலந்து கலந்து வரும். பொய்களைக் களைந்து விட்டால் உண்மை வெளிப்படும். அப்படி சிம்பிள். ஆனால் மேற்கு ஆபிரிக்காவில் விஷயமே வேறு. அங்கே பொய்க்கு மேல் பொய் வரும். சின்னப் பொய், பெரிய பொய், புளுகுணிப் பொய், அண்டப் பொய், ஆகாயப் பொய் என்று பல விதம். இதில் 'புருடா' வேறு. அதில்போய் உண்மையைக் கண்டு பிடிக்கிற தென்பது லேசுப்பட்ட காரியமா?

அங்க பொய் பேசுவதை ஒரு கலையாகவே போற்றி வளர்க்கிறார்கள். அதற்கு ஒரு கெட்டித்தனம் வேண்டும். பல நாள் பயிற்சியும் விடாமுயற்சியும் தேவை. பொய் என்றால் முகத்தில் அடித்தது போல முட்டாளாக்கும் பொய்தான்.

"என்னப்பா எட்டு மணிக்கு வரதென்றிட்டு பத்து மணிக்கு வாறியே?"

"இல்லையே, மாஸ்ட!நான் எட்டு மணிக்கே வந்திட்டேனே?"

"அப்ப ஏன் உள்ளே வரவில்லை?"

"உங்களைக் குளப்ப வேண்டாம் என்று அப்படியே அந்த மரத்தடியில் இருந்திட்டேன்."

"இருபது தரம் உன்னை வந்து வெளியிலே தேடினேனே?"

"நான் பார்த்தேன், நான் பார்த்தேன்".

"அப்ப ஏன் உள்ளே வரவில்லை."

"ஐயோ எனக்கு நீங்கள் என்னைத் தான் தேடுகிறீர்கள் என்று தெரியவில்லையே?"

இப்படியே போய்க் கொண்டிருக்கும். எண்ணெய் பூசிய பாம்பு போல வழுக்கிக் கொண்டே போவார்கள். பிடிபடவே மாட்டார்கள்.

* * *

காலி பீர் போத்தல்களெல்லாம் ஒரு பக்கம் குவிந்து கிடந்தன. பைல் கட்டுகள் ஒன்றன் மேல் ஒன்றாக மக்கெனி மலையைப் பிடிப்பது போல வளர்ந்தவண்ணம் இருந்தது. பேப்பர்கள், நகல்கள், புத்தகங்கள், லெட்ஜர்கள் என்று வந்த படியே இருக்கு. கையிலே பசையைப் பூசி விட்டு தொட்ட தெல்லாத்தையும் குருவி போல சேர்த்தோம்; கழுகு போல காவாந்து பண்ணினோம்.

'ஏண்டா, இப்படி வந்து மாட்டினோம்' என்று இருந்தது எனக்கு. பெருச்சாளியைக் காரால் அடித்து தின்கிறது சரி. கார் விபத்திலே இறந்தவனைப் பார்த்து சிரிக்கிறார்களே! இது பத்தாதென்று பொய்பேசுவதில் தங்கள் வித்வத்தன்மையை நிரூபிக்க என்ன பாடுபடுகிறார்கள். இவ்வளவும் இருக்க நான் என்ன வெட்டி விழுத்ப் போறேன். எனக்கு முன் இருந்த அதிகாரி ஆறு மாதத்திலேயே வேலையை உதறி விட்டு ஓடியது காரணமில்லாமலா?

எங்கள் கண்களும், காதுகளும் 'எங்கே ஒரு சின்ன ஓட்டை விழும்' என்று ஏங்கிய படியே இருந்தன. ஒரு சின்ன ஓட்டையைக் கண்டால் அதை பெரிதாக்க ஒன்பது வழிகள் தெரியும் எங்களுக்கு; அதுதானே எங்களை பிழைப்பு.

அன்று இரவு எட்டு மணி போல மந்திரி தனது பதினாறாவது பீர் போத்திலைக் காலி செய்தார். முதலாம் நாள் போர் முடிவின் போது தர்மராஜனும் பரிவாரங்களும் விசனத்துடன் குனிந்த படி கூடாரங்களுக்கு போனது போல மந்திரியும் நாங்கள் பின்தொடர தங்குமிடத்துக்குப் புறப்பட்டார்.

* * *

இப்படியாகத் தானே விசாணை தொடர்ந்தது. சாட்சிகளுடைய வாக்கு மூலங்கள் பக்கம், பக்கமாக குவிந்தன. என் மனமானது 'பக் பக்' என்று அடித்துக் கொண்டேயிருந்தது. விசாரணை குறுக்கு விசாரணை என்று நேரம் ஓடியது. என்னோடு வந்த குழுவினர்கள் எல்லாரும் நல்ல வாய்ச்சொல்லில் வீரர்கள். ஆனால் பேனை பிடித்து எழுதுவதென்றால் என் தலையில் தான் விடியும். என்மனம் கணக்குப் போட்ட படியே இருந்தது. இது வரை வந்தது இருநூறு பக்கமாவது தேறும். இன்னும் இழுத்துக் கொண்டே போனால் எங்கே போய் முடியுமோ?

இரண்டாவது நாளும் பலன் இல்லை. இப்ப விசாரணை அறை பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது. காலி பீர் போத்தல் எந்தப் பக்கம் திரும்பினாலும் குவிந்து கிடந்தது. நிற்கவும், நடக்கவும் இடம் இல்லை. பிள்ளைகள் 'ரைட்டோ' விளையாடுவது போல் பாய்ந்து, பாய்ந்து தான் போக வேண்டும். சூரியனும் எங்கள் பரிதாபத்தைக் காணச் சகிக்காமல் மக்கெனி மலைகளில் அஸ்தமனமானான்.

அன்று இரவு மக்கெனி மக்கள் மந்திரி குழுவினருக்கு ஒரு விமரிசையான விருந்து ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். விருந்து என்றால் குடிவகை, சாப்பாடு, நடனங்கள் என்று குசாலான விஷயம் தான்.

முகமூடி ஆட்டத்தைத் தொடர்ந்து இளம் பெண்கள் மந்திரியாரைச் சுற்றி ஆடியபடியே வந்தார்கள். வாத்தியங்களில் ட்ரம்முக்குத் தான் முக்கிய இடம். அதன் ஒவ்வொரு அடியும் 'த்தும் த்தும்' என்று விழ துள்ளித் துள்ளி ஆடாமல் எப்படி இருக்க முடியும்.

பெண்கள் என்றால் எல்லோருமே பொறுக்கி எடுத்த இளம் குமரிகள்தான். கன்னங்கரேல் என்ற நிறம். இரும்பு உடம்பு. கால்களை முன்வைத்து உதைத்து பின்னுக்கு போய் 'ரிதம்' தவறாத ஆட்டம். அவர்களுடைய பெரிய பின் பகுதிகள் இடம் வளமாக அசைந்து நல்ல மனசையும் சங்கடப்படுத்தும். எங்கள் பக்கத்து பெண்களைப் போல தலை குனிந்து பார்க்காது. கண்களும், மார்புகளும் நிமிர்ந்து தான் நிற்கும். ஒவ்வொரு ரவுண்டும் முடிந்தவுடன் எங்களைச் சுற்றிக் கைதட்டிக் கொண்டே வருவார்கள். பக்கெட்டுக்குள் கையை விட்டு காசையெடுத்து எறிய வேணும். மந்திரி பெண்களைக் கட்டிப் பிடித்து தடவியபடி வெகு நேரம் ஆடினார்.

அடுத்த நாள் விசாரணை வழமை போல் தொடங்க வில்லை. மந்திரி லேட், அதனால் விசாரணை இரண்டு மணி நேரம் தள்ளி ஆரம்பித்தது. ஆமை வேகத்தில் தான் விசாரணை. பதினொரு மணியிருக்கும். ஊசிக் கண் போல ஒரு சின்ன ஒட்டை. அவ்வளவு தான் இரண்டு மணி நேரத்துக்குள் விறுவிறுறென்று நாங்கள் ஒரு ஆள் போகும் அளவுக்கு அந்த ஓட்டையை விஸ்தரித்து விட்டோம்.

மந்திரியார் முகத்தில் பெருமிதம். எங்களுக்கோ மகிழ்ச்சி. இனி என்ன? எல்லா தடயங்களையும், சாட்சியங்களையும், வாக்கு மூலங்களையும் வரிசைப் படுத்தி எங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்குத் தான் நான் ஒரு மடையன் இருக்கிறேனே!

ஆறு மணியளவில் நாங்கள் களைத்துப் போய் கடையை மூடத் தொடங்கினோம். அப்பத்தான் 'மஸக்கோய், மஸக்கோய்' என்று ஒரு கிழவன்; வயது 65, 70 இருக்கும்; ஊருக்குள் பெரியவர்; எல்லாருடைய நல் மதிப்பையும் பெற்றவர்; எங்களைப் பார்க்க விரும்புகிறாராம்.

'இது என்னடா புது வம்பு' இந்த நேரத்தில். மந்திரி எங்களைப் பார்க்க நாங்கள் வேறு திசையில் பார்க்கிறோம். எல்லாருக்கும் அவசரத்தில் பறந்தார்கள். அநியாயத்துக்கும் மேலே அநியாயம், பீர் எல்லாம் முடிந்து விட்டது. மந்திரி சொன்னார், "அஞ்சு நிமிடம் மட்டும்" என்று.

மஸக்கோய் ஒரு தடியை ஊன்றிய படி மெள்ள, மெள்ள நடந்து வந்தார். அவருக்கு ஒரு அவசமுமில்லை. பீர் முடிந்த கதை அவருக்கு எங்கே தெரியப் போகுது?.

கறுத்த நெடிய உருவம். சுருள் சுருளாகத் தலைமுடி, சாடையாக நரை கரையோரத்தில். நிமிர்ந்த நடை. எங்களை ஊடுருவிப் பார்த்தார். கையிலே வைத்திருந்த தடியால் மெலிதாக ஊன்றிய படியே நின்றார். கைகளில் மட்டும் சிறிய நடுக்கம்.

நாகரீகமான நடையிலே சரளமாகப் பேசத் தொடங்கினார்.

"மதிப்பிற்குரிய மந்திரியாரே, விசாரணைக் குழுவினரே."

"உங்கள் நேரத்தை நான் வீணடிக்க வரவில்லை. ஒரு சிறுகதை மட்டும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்."

"ஒரு ஊரில் ஒரு விவசாயி. அவன் கஷ்டப்பட்டு ஒரு கிழங்குத் தோட்டம் போட்டிருந்தான். அவனுக்குச் சனியாக வந்த ஒரு பெருச்சாளி அவன் கிழங்குகளை எல்லாம் நாசமாக்கி கொண்டு வந்து. அவனோ பரம ஏழை. 'அவனா, பெருச்சாளியா" என்ற அவல் நிலை. பாவம், அவன் என் செய்வான்?"

"ஒரு பெருச்சாளிப் பொறி வாங்கி தோட்டத்திலே இடம் பார்த்து மறைவாக வைத்தான். ஆனால், பெருச்சாளி பெரிய கை தேர்ந்த பெருச்சாளி. தப்பிக்கொண்டே வந்தது."

"ஒரு நாள் அதிகாலையில் பொறி வைத்த இடத்தில் இருந்து பெரிய சத்தம். விவசாயியின் எட்டு வயது மகன் ஓடோடிச் சென்றான். முற்றிலும் சாகாத நிலையில் அப்படியும், இப்படியும் ஆக்ரோஷத்துடன் தலையை அடித்துக் கொண்டிருந்தது. பொறிக்குத் தெரியுமா அது பெருச்சாளியைப் பிடிக்க வைத்த பொறி என்று. கிட்ட வந்து பாம்பை தவறுதலாகப் பிடித்து விட்டது. தள்ளி நின்று புதினம் பார்த்தான் பையன். பிரண்டு,பிரண்டு அடித்த பாம்பு அவனை எட்டிக் கொத்தி விட்டது."

"விவசாயியும், மனைவியும் 'குய்யோ, முறையோ' என்று தங்கள் தலையில் அடித்து அடித்துக் கதறினார்கள். பாம்பையும் ஒரே அடியில் கொண்டு போட்டாகி விட்டது. ஊர் முழுக்க அழுதது. பையனுடைய இறக்க சடலத்தை கொண்டு போய் புதைத்தார்கள்.

"பன்னிரெண்டு நாள் துக்கம் அனுட்டிக்க வேணும். பன்னிரெண்டாம் நாள் ஊர் வழக்கப் படி வந்து சனம் எல்லோரையும் கூப்பிட்டு விருந்தும் கொடுக்க ஏற்பாடு. ஏழை விவசாயியிடம என்ன இருக்கு? கனகாலமாக வளர்த்த ஒரு ஆடு. அதை வெட்டி எல்லோருக்கும் விருந்து வைத்தான்."

இந்த இடத்தில் மஸக்கோப் கொஞ்சம் கதையை நிற்பாட்டி விட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்தார். நாங்கள் "இனி என்ன வரப் போகுதோ?' என்று மூச்சு விடாமல் காத்திருந்தோம். தொண்டையைச் சரி செய்து கொண்டு மஸக்கோய் மேலே தொடர்ந்தார்.

"பெருச்சாளியைக் கொல்லத் தான் பொறி வைத்தான் கமக்காரன். ஆனால் அவனுடைய பிள்ளை இறந்தது. பிறகு பாம்பு செத்தது. பெருச்சாளி மட்டும் இன்னும் ஒடிக் கொண்டே இருக்கிறது."

இவ்வளவு தான். மஸக்கோய் இதைச் சொல்லி விட்டு விடு விடென்று போய் விட்டார்.

எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதைத் தவிரிப்பது கூட கஷ்டமாகி விட்டது. கடகட வென்று குனிந்த தலைநிமிராமல் மூட்டையைக் கட்டத் தொடங்கினோம்.

* * *


மாற்றமா ? தடுமாற்றமா?

பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். "நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்" என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். 'என்ன தான் என்று பார்ப்போமோ?' என்று வந்திருந்தேன்.

குடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பாஸ்போட்டை என் முன் 'பொத்' என்று போட்டு விட்டு 'நெக்ஸ்ட்' என்றார். 'ஆஹா! சிலோன் வந்த விட்டது' என்று எனக்குப் பட்டது.

சுங்க அதிகாரிக்கு முன் போய் பவ்யமாக நின்றேன். "ஐயா! இந்தப் பெட்டியில் மதுவகையோ, சிகரெட்டோ இல்லை; எலக்டிரிக் சாமான் மருந்துக்கும் கிடையாது; எல்லாம் என் பழைய உடுப்புகள் தான்; பத்துச் சதமும் பெறாது" என்றேன்.

"சரி, சரி எல்லாரும் பாடுற பாட்டுத் தான்; திறவும்" என்றார்.

அந்த நேரம் பார்த்து சாவி துவாரத்தில் நுழைய மறுத்தது. பொறுமைக்குப் பேர் பெற்றவர் அல்லவா சுங்க அதிகாரி; ஆடாமல் அசையாமல் நின்றார்.

பெட்டியைத் திறந்தவுடன் கிளறிக் கிளறிப் பார்த்தார். பிறகு உளுத்தம் களி கிண்டுவதுபோல கிண்டிக் கிண்டிப் பார்த்தார். இது 'ரைம் வேஸ்ட் என்று பட்டது. 'சரி, சரி போம்' என்று விட்டார், ஏமாற்றத்துடன். மூட்டையைக் கட்டியதும் கட்டாததுமாக ஒட்டமாக வெளியிலே வந்தேன்.

சிவபாலன் எனக்காக காத்துக் கொண்டிருந்தான். அப்படியே என்னைக் கட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டான். பள்ளித் தோழனல்லவா? என்னிலும் பார்க்க அவனுக்கு வயது கூட என்றாலும் நாங்கள் பால்ய நண்பர்கள்.

காரில் போகும் போதே நான் அவளுடைய சுகத்தை விசாரித்து கொண்டேன். அரசாங்கத்தில் மிகவும் மதிப்பான உத்தியோகம் பார்த்து வயதுக்கு முன்பாகவே ஒய்வு எடுத்துக் கொண்டவன். மனைவி இல்லை. நாலு பிள்ளைகள் நாலு பேரும் ஜெர்மனி, ஓஸ்ரேலியா, அமெரிக்கா என்று போய் விட்டார்கள். வீட்டில் அவனும் ஒரு வேலையாளும் மாத்திரம் தான். 'நான் வருகிறேன்' என்று அறிவித்ததும் அவனுக்கு அளவில்லாத சந்தோஷம்.

* * *

அடுத்த நாள் காலை சில சாமான்கள் வாங்குவதற்காக நாங்கள் இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனோம். சூப்பர் மார்க்கெட் என்றால் வெளி நாடுகளில் பார்ப்பது போல பிரம்மாண்டமானது தான்.

நண்பர் பெரிய தள்ளு வண்டி ஒன்றைத் தள்ளியபடியே வந்தார். நாகரீகமான பெண்களும், ஆண்களும், வெளியூர்க்காரர்களும் சாமான்களைக் குவித்த படியே போய்க் கொண்டிருக்கிறார்கள். 'மூட்டை வேணும்' என்றான் நண்பன். பிளாஸ்டிக்கில் செய்த பெட்டி. ஆறு முட்டைகள் வடிவாக அடுக்கியிருக்கும். அப்படி இரண்டு பெட்டிகள் வாங்கினோம்.

நான் சிறுபையனாக வெள்ளவத்தையில் அப்ப இருந்தேன். முட்டை வாங்க கடைக்குப் போனால் "என்ன தம்ப, எத்தினை முட்டை" என்று கேட்பார் கடைக்காரர். "பத்து முட்டை" என்று சொல்வேன்.

முதலில் ஒவ்வொரு முட்டையாக எடுத்து கவனமாக பேப்பர் துண்டில் சுத்துவார், பிறகு அது எல்லாத்தையும் ஒரு மாட்டுத் தாள் பையில் போட்டு மடித்து சணல் கயிற்றினால் கட்டித் தருவார். அந்த மாட்டுத் தாள்பையை நாங்கள் திருப்பித் திருப்பி பாவிப்போம். சணல் கயிற்றை நேராக்கி வைத்துக் கொள்வோம், வேறு தேவைக்கு உபயோகப்படுத்துவதற்கு!

இந்த பிளாஸ்டிக் அரக்கன் வந்ததிலிருந்து இப்படிதான், யுகத்துக்கும் ஒவ்வொரு அரக்கன். இந்த யுகத்துக்கு பிளாஸ்டிக் தான். கற்காலம், இரும்புக் காலம் போன்று பிளாஸ்டிக் காலம்.

சூரனைக் கொல்லக் கொல்ல அவன் ஒவ்வொரு உருவத்தில் முளைப்பானாம். பெட்டிகள், பைகள், அட்டைகள், பாத்திரங்கள் என்று இப்படி எத்தனை பிளாஸ்டிக் உருவங்கள். இந்தப் பிளாஸ்டிக அரக்கன் பூமாதேவியின் கழுத்தைப் பிடித்து நெருக்கி அவள் உயிரை எடுத்து விட்டுத் தான் போவான்; இது நிச்சயம்.

உலகமெங்கணும் இந்தப் பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கப் பாடுபட நாங்கள் மாத்திரம் இங்கே அவனுக்கு கற்பூர ஆராதனை செய்து கொண்டிருக்கிறோமே?

நண்பன் முன்னே போகும்படி சைகை காட்டினான். நாங்களும், அப்படி, இப்படி' என்று தள்ளு வண்டியை ஒரு இஞ்சு உயரத்துக்கு நிறைத்திருந்தோம்.

வினோதமாக தலையை அலங்கரித்துக் கொண்டு அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள். நண்பன் ஒவ்வொரு சாமானாக எடுத்து வைக்க அவள மெஷ’னில் தட்டிக் கொண்டே வந்தாள். ஒரு பையன் பிளாஸ்டிக் பைகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தான், சாமான்கள் போட. நான் 'வேண்டாம், வேண்டாம்' என்று சொல்லி விட்டு பாய்ந்து போய் தயாராகக் கொண்டு போன சாக்குப் பையை நீட்டினேன். பையன் திகைத்துப் போனான்; பெண் நெளிந்தாள்; நண்பர் பராக்குப் பார்த்தான்.

பில்தொகை ரூ.982. நான் ரூ 1000 நோட்டைக் கொடுத்தேன். படக்கென்று மெசினைத் தட்டினாள். அது மீதி ரூ 18 என்று காட்டியாது.

அப்பதான் அந்த முசுப்பாத்தி நடந்தது. Do you have two rupees? "இரண்டு ரூபாய் இருக்கமா?" என்றாள். நண்பன் பதைபதைத்து பையைத் துழாவினான். நான் அவனுக்கு சாடை காட்டி விட்டு சொன்னேன்: "இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் நடத்துகிறீர்களே, உங்களிடம் இரண்டு ரூபாய் மாற்று இல்லையா?"

அவளுடைய முகம் அதிசயத்திலிருந்து அருவருப்புக்கு பாய்ந்தது. "சோமபால, மே எண்ட்" என்று கூப்பிட்டு ஏதோ சொன்னாள். பிறகு வேண்டா வெறுப்பாக 19 ரூபாயை தூக்கி என் முன்னே போட்டு விட்டு மற்றப் பக்கம் பார்த்தாள்.

"என்ன இப்பிடிச் செய்து விட்டாயே?" என்றான் நண்பன், வெளியே வரும் போது. அவனுக்கு வெட்கம்.

"இன்னும் சிலோன் புத்தி போகவில்லையே" என்றேன் நான்.

* * *

நண்பனிடம் சொன்னபடி அடுத்த நாள் பாங்குக்குப் புறப்பட்டோம். எனக்கு அந்த பாங்கில் ரூ.40,000க்கு மேல் இருந்தது. முன்பு எப்போதா போட்டு வைத்தது. இப்ப தேவைக்கு உதவட்டும் என்று எடுக்க வந்திருந்தேன்.

கவுண்டரில் ஒரு சின்னப் பெண் "என்ன வேண்டும் உங்களுக்கு?" என்றாள்.

"காசு வேணும்" என்றேன். மிகவும் சிக்கனமாக.

"செக்கைக் கொடுங்கள்" என்றாள்.

"அங்கே தான் கஷ்டம். செக் புத்தகமே இல்லை, ஒரு செக்தாள் தேவை" என்றேன்.

"ID இருக்கிறதா?"

"இல்லை"

"பாஸ்போர்ட் இருக்கிறதா?"

"இல்லை".

சின்னப் பெண் கலங்கி விட்டாள். பாங்கில் வாடிக்கைக் காரர்களோடு மிக்க கவனமாகவும், மரியாதையாகவும் நடக்க வேண்டு என்று படித்துப் படித்துச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும்.

"சேர், உங்களுக்கு இந்த பாங்கில் யாரையாவது தெரியுமா?" என்று கேட்டாள்.

"எனக்கு ஏன் தெரிய வேண்டும்? நீங்கள் தான் சிட்டுகள் போல மாறி மாறி இதிலே உட்காருகிறீர்களே, நான் எப்படி நினைவு வைக்க முடியும்? உங்களுக்குத் தான் வடி‘ககைக்காரனை தெரிய வேணும்."

"சேர், நீங்கள் எப்பவிருந்து இங்கே கணக்கு வைத்திருக்கிறீர்கள்?"

"பிள்ளை, நீ பிறகுகு முன்னேயே எனக்கு இங்கே கணக்கு இருக்கு. தயவு செய்து எனக்கு ஒரு செக் தாள் குடுக்க முடியுமா?"

என்னோடு வந்த நண்பன் காலில் எறும்பு கடிப்பது போல மாறி, மாறிக் காலை வைத்தபடி நின்றான்.

சின்னப் பெண் உயர நாற்காலியிலிருந்து கீழே குதித்து உள்ளே ஓடினாள். அவளுக்கு தெரிந்து விட்டது இது கொஞ்சம் முரண்டு பிடித்த கேஸ் என்று.

மனேஜர் வந்தார். ஏப்பத்தை அடக்கியது போன்ற ஒரு தோற்றம். அவருடைய தாராளமான வண்டியிலே சமய சந்தர்ப்பம் தெரியாமல் சுகமாகப் படுத்து தூங்கியது அவருடைய 'டை'. அவருக்குப் பின்னால் சின்னப் பெண் பதுங்கிய படி வந்தாள்.

நான் அவரை முந்தி "Can I help you?" என்று கேட்டேன், அவர் திடுக்கிட்டு விட்டார். சின்னப் பெண் சிரிப்பை மென்றபடி நின்று கொண்டிருந்தாள்.

"செக் தாள் தேவையா? என்ன அக்கவுண்ட் நம்பர்" என்றார், விறைப்பாக.

"இது என்ன ஜன்ம நட்சத்திரமா, நினைவு வைக்க? எனக்கு என் பேர் தான் ஞாபகம் இருக்கு; அக்கவுண்ட் நம்பர் மறந்து போச்சு" என்றேன். பெண் 'கிக்' என்று சிரித்து விட்டாள்.

"சேர், உங்களைப் போன்ற வாடிக்கைக்காரர்களின் பாதுகாப்புக்காக சில விதி முறைகளைப் கடைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்ததட்ட எவ்வளவு உங்கள் கணக்கில் இருக்கும் என்றாவது சொல்ல முடியுமா?"

நான் சொன்னேன். உடனே உங்களுக்கு ஓடிப் போய் ஏதோ 'செக்' பண்ணினார். பிறகு ஒரு நீட்டுத் தாளை தலைக்கு மேல் குடைபோல பிடித்த படி ஒயிலாக நடந்து வந்தார். அந்த நாளை நிரப்பித் தர வேண்டுமாம்.

ஒரு பதினைந்து நிமிடம் கழித்து அந்தப் பெண் என்னைக் கூப்பிட்டு ஒரு வெற்று செக்கை கொடுத்தாள். நான் அதை நிரப்பி என் கையொப்பத்தையும் போட்டுக் கொடுத்தேன்.

சிறிது நேரத்தில் என் காசை என்னிடம் எண்ணிக் கொடுத்தாள். நான் அதை வாங்கும் போது "என்னுடைய பணத்தை இவ்வளவு காலமும் பழுது படாமல் வைத்து பாதுகாத்திருக்கிறீர்கள். எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள். திருப்பித் தந்ததற்கு மிக்க நன்றி" என்று சொல்லி வாங்கிக் கொண்டேன். அவள் சிரித்துக் கொண்டே விடை கொடுத்தாள்.

வெளியே வரும் போது நண்பன் "உன்னாலே பெரிய வெட்கமாய்ப் போச்சுது. இனிமேல் நான் உன்னோடு எங்கேயும் வர மாட்டேன்" என்றான். நேராக காரை நண்பன் ஆஸ்பத்திரிக்கு விட்டான். ஒரு நண்பனை பார்க்க வேணுமாம். "நீ வெளியிலேயே நில், நான் உள்ளுக்குப் போய் பார்த்து விட்டு கெதியில் வந்து விடுகிறேன்" என்று ஓடிப் போனான்.

எனக்கு இது பிடித்த விஷயமாய்ப் போய்விட்டது. சும்மா இருந்து மற்றவர்களைப் பார்த்து என்பது ஒரு ஆனந்தமான விஷயம்; அவர்களுக்கு தெரியாமல் பார்க்க வேணும். அதில் தான் திருப்தி.

அவசரமாகப் போவோரையும், வருவோரையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் என்னைக் கடந்து போனான். சாரமும், பணியனும் தான்; நல்ல தேக்கட்டாக இருந்தான். ஆனால் வலகு கை மாத்திரம் வாதம் வந்து சூம்பிப் போய் இருந்தது.

மனதைத் தொட்டது அந்தக் காட்சி. எனக்கு எங்கள் நாட்டைத் தான் நினைக்கத்தோன்றியது. எங்கள் நாட்டிலும் இப்படித் தானே. ஒரு பகுதி சூம்பிப்போய் போஷனை இல்லாமல் இருக்கிறது. மற்றப் பகுதி எல்லாம் நல்ல செழிப்பாக இருக்கும் போது எங்களுக்கு மாத்திரம் இந்த மாதிரி ஆகி விட்டதே.

அப்போது நண்பன் வந்து விட்டான். நான் அவனுக்கு சொன்னேன் "எங்கள் நாடு ஏன் இப்படிப் போய் விட்டது" என்று.

"சிலதுக்கு நாங்கன் கொடுத்து வைக்க வேணும். நல்ல பெற்றோர், நல்ல வைத்தியர், நல்ல மனைவி, நல்ல வாத்தியார் அது போல நல்ல அரசும் தேவை. இதுக்கெல்லாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேணும்" என்றான்.

நாங்கள் காரிலே திரும்பி வரும்போது கேட்டேன். "சிவ பாலன், உலகத்திலேயே மிகவும் கொடியது என்ன?"

"அது தான் ஓளவையார் அப்பவே சொல்லி விட்டாரே" என்றான்.

"கொடிது கொடிது வறுமை கொடிது,
அதனிலும் கொடிது இளமையில் வறுமை,
அதனினும் கொடிது ஆற்றொணாக்கொடு நோய்"

இப்படியே சொல்லிக் கொண்டு போனான்.

அப்போது நான் கிட்டியில் பாகிஸ்தானில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறினேன்:

"ஈராக்கில் இருந்து நடந்து வந்த ஒரு ஏழை அகதி. 'கேர்ட்' இனத்தைச் சேர்ந்தவன். கொடுமை பொறுக்காமல் பிறந்த நாட்டை விடு ஓடி வந்தவன். மனைவியும், இரண்டு பிள்ளைகளும். போக இடம் இல்லை. எல்லாத்தையும் இழந்து வந்து பாகிஸ்தானில் புகலிடம் கேட்டான். ஆனால் கொடுக்க மறுத்து விட்டர்கள். எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான்; முடியவில்லை".

"கடைசியில் 'இறக்கும் வரை உண்ணா விரதம்' என்று தொடங்கி விட்டான். எத்தனையோ பேர் எவ்வளவு தான் கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. ஐம்பத்திரண்டு நாள் பட்டினி கிடந்து அப்படியோ இறந்து போனாள். அவன் சாகும் முன்பு சொன்ன வாசகம் என்ன தெரியுமா?"

"'€யா, துணியில்லாமல் இருக்கலாம்; சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாம்; படுக்கப்பாயும், இருக்க வீடும் இல்லாமம் கூட இருக்கலாம்; ஆனால் நாடில்லாமல் இருப்பது போன்ற கொடுமை உலகத்திலேயே கிடையாது. அது மிகக் கொடியது" என்றான்."

நண்பனும் "உண்மைதான்" என்றான்.

* * *

அன்று மத்தியானம் சிவபாலன் கண்ணிலே மகிழ்ச்சி மின்ன "இன்றைக்கு இரவு உனக்கும் எனக்கும் சாப்பாடு, பக்கத்து வீட்டிலே" என்றான். அவனுடைய பெரிய 'தலையிடி' நான்தான்.

அவன் என்னைப் பார்த்து சீரியஸாக நீ அங்கு போனவுடன் "இது என்ன மணம்! என்று கேட்டு வைக்காதே" என்றான் "ஏன்?" என்று கேட்டேன்.

"இப்ப 'சித்தலெப்ப' என்று ஒரு அருமையான 'பாம்' சிலோனிலே வந்து இருக்கு. அந்த அம்மா அதைப் பூசாத நாளே இல்லை. அவவுக்கு எப்பவும் ஒரு தலையிடி. நீ தான் சும்ம இருக்க மாட்டியே, ஏதாவது சொல்லிக் கொண்டு" என்றான். பிறகு என்னுடைய பிள்ளைகள் அந்த அம்மாவுக்கு 'பாமினி' என்று பேர் வைத்ததையும் சொல்லிச் சிரித்தான்.

அன்று இரவு சொன்னபடி பக்கத்து வீட்டில் சாப்பிடப் போனோம். அவன் சொன்னது உண்மைதான். மற்ற வீடுகளில் சந்தனத் திரி அல்லது சாம்பிராணி மணப்பது போல அங்கே 'சித்தலெப்ப' மணந்து கொண்டிருந்தது. நான் வாய்திறக்கிற போதெல்லாம் நண்பன் என் வாயையே பார்த்தபடி முள்ளுக்குமேல் இருந்தான். 'பாமினி' அம்மா எங்களை நல்ல 'மணத்துடன்' உபசரித்தார்கள்.

அப்போது ஒரு பதினேழு வயதுப் பெண் புத்தகக் கட்டுடன் வெளியிலே இருந்து வந்தாள். வழக்கமான சிலோன் உடுப்புதான். அரைப் பாவாடையும் அதற்கு மேல் அணியும் பிளவுசும்; நீளமான கரு கருவென்ற பின்னல். தலையைக் குனிந்தபடியே விடு விடென்று உள்ளே போய் விட்டாள். ஒரு புன்சிரிப்பு, 'ஹலோ' ஒன்றுமே இல்லை. எனக்கு முன்பொரு நாள் என்னுடைய மகள் கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வந்தது.

ஆபிரிக்காவில் ஒரு கிராமத்தில் இருந்த நாங்கள் வீடியோவில் ஒரு தமிழ் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். என்னுடைய மகள் பிறந்ததிலிருந்தே வெளிநாடுகளில் வளர்ந்தவள். அவளும் பொறுமையாக எங்களுடனிருந்து படம் பார்க்கிறாள். ஒரு இடத்தில் இடைமறித்து என்னை ஒரு கேள்வி கேட்கிறாள், என் மகள்.

அப்போது அவளுக்கு ஒன்பது வயது. முகம் எல்லாம் கண்கள். அதை இன்னும் அகல விரித்து கேட்கிறாள்:

"அப்பா,இந்த கேர்ல்ஸ் (girls) எல்லாம் ஏன் குனிஞ்சபடி போகினம்?"

என்னுடைய திகைப்பு அடங்க கொஞ்ச நேரம் சென்றது. பிறகு நான் சொல்கிறேன் "என் குட்டி மகளே, 'சிலோன், சிலோன்' என்று ஒரு நாடு இருக்கு. அங்கே நவரத்தினங்கள் எல்லாம் குவிந்து இருக்கும். மரகதம், வைரம், வைடூரியம், கோமேதகம், மாணிக்கம், பவளம், நீலம் என்று பலப் பல நிறங்களில் இரத்தினக் கற்கள்."

என் மனைவி குறுக்கிட்டு "புஷ்பராகம், புஷ்பராகம், அதை விட்டு விட்டீர்களே" என்று சொள்ளாள்.

"ஓ! புஷ்பராகம், அதையும் சேர்த்துக் கொள்; அவ்வளவு செல்வம் கொழிக்கும் நாடு. வீடு கட்டும் போது கூட அடிக்கல்லுக்கு கீழே நவரத்தினங்களையெல்லாம் ஒரு பிடி அள்ளிப் போட்டுத் தான் கட்டுவார்கள்."

"இப்படிப் பட்ட சிலோனிலே பெண்கள் நடக்கும்போது குனிந்து பார்த்த படியே நடப்பார்கள். வண்ணில் தட்டுப் படுகிற நவரத்தினங்கள் எல்லாவற்றையும் பொறுக்கி பொறுக்கி எடுத்து நகை செய்து வைத்துக் கொள்வார்கள். உங்களுடைய அம்மாவைப் பாருங்கோ, எத்தினை நகை செய்து வைத்திருக்கிறா!"

என்னுடைய மகள் என்ன லேசில் மசிகிறவளா?

"அப்ப ஏன் போய்ஸ் (Boys) எல்லாம் நேர பார்த்தபடி போகினம்".

என் மனைவி என்னைப் பார்த்தாள், "மாட்டிக் கொண்டீர்கள்" என்பது போல. நியாயமான கேள்வி.

** இதன் தொடர்ச்சி chakram3.mtfல் வருகிறது.**




த்தினக் கள்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போவ



** chakram2.mtf ன் தொடர்ச்சி**

"என் குஞ்சுப் பெண்ணே, அது என்னவென்றால் முன்னாலே போற கேர்ல்ஸ் ரத்தினக் கள்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போவதால் பின்னால போற போய்ஸ”க்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. அது தான் அவர்கள் கண்களை வேஸ்ட் பண்ணுவதில்லை" என்று சொன்னேன்.

"ச்சீ, சும்மா போங்கோ" என்று சொலலி விட்டு துள்ளிக் குதித்து ஓடி விட்டாள்.

அந்த சம்பவம் ஞாபகம் வந்தது. ஏன் எங்கள் பெண்கள் எல்லாம் தலை குனிந்த படியே நடக்கிறார்கள். அதுவும் அவர்கள் தலை விதியா?

ஒரு புலவர் கூட்டத்தில் பேசுகிறார்; "சீதை மாடத்திலே நின்று கொண்டிருக்கிறாள். ராமன் கீழே. அண்ணலும் நோக்கினான்"என் குஞ்சுப் பெண்ணே, அது என்னவென்றால் முன்னாலே போற கேர்ல்ஸ் ரத்தினக் கள்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு அவளும் நோக்கினாள். சீதை கீழே பார்க்கிறாள், ராமல் மேலே பார்க்கிறான். கீழ் நோக்கி பார்ப்பது பெண்ணுக்கு அழகு; நிமிர்ந்து பார்ப்பது ஆணுக்கு அழகு."

பேதமையை பெண்ணின் லட்சணம் என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஒன்றும் தெரியாமை' (Ignorance) இது லட்சணமா? அது கூட பரவாயில்லை. மடமை (Stupiality) கூட பெண்ணின் லட்சணமாமே; அது அப்படித் தான் என்றால் எங்கள் பெண்களில் அந்த லட்சணம் நிரம்பி வழிகிறதுதான்.

என் சிந்தனை இப்படி 'இடக்கு முடக்காக' ஓடிக் கொண்டிருந்தது.

"இப்ப போனவ தான் என்னுடைய மகள், பிரவீனா. ஏ லெவல் படிக்கிறா, பிரைவேட் ட்யூசன் எடுத்து போட்டு வாறா" என்றார்.

பிறகு தொடர்ந்து பாமினியம்மா "சாப்பாடு ரெடி, வாங்கோ" என்றார்.

எல்லாம் எனக்கு பிடித்தமான கறிவகைகள் தான். சுடச்சுட இடியப்பம், வாழைக்காய் பச்சடி. பூண்டுக் குழம்பு, மாங்காய் சம்பல், இத்துடன் சொதி, நல்லாக அனுபவித்து சாப்பிட்டோம்.

"சாப்பாடு என்றால் இது தான்" என்றேன் நான்.

அது அம்மாள் "இப்ப, இஞ்ச இடியப்பம் ஒன்றும் வீட்டிலே செய்வதில்லை. எல்லாம் வெளியில் தான் வாங்குறம். வீதி, வீதியாகக் கடை இருக்கு. பூப் போல இடியப்பம், விலையும் சீப் தான்" என்றார்.

அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தேன். பதினொரு வயது; தமிழ் இலக்கியப்படி சொன்னால் பெதும்பை. ஊத்தைப் பாவாடை ஒன்றைக் கட்டியபடி ஓடியோடி வேலை செய்கிறாள். அந்த அம்மாள் பெருமையாகச் சொன்னார்; "இஞ்ச சிந்தாமணி தான் எல்லா வேலையும். இந்தக் கறி எல்லாம் அவள் வைச்சது தான்".

எனக்கு அன்று இரவு அந்தக் குழந்தையின் முகம் தான் திரும்பத் திரும்ப வருகிறது. என்ன மாதிரிக் கண்கள். கரு வண்டுக் கண்கள் என்றாலும் அச்சப்படும் கண்கள். மகாத்மா காந்தி சிறு பையனாக இருந்தபோது களவாக ஆட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு நித்திரை வராமல் தவித்தது போல நானும் பிரண்டு, பிரண்டு படுக்கிறேன்.

"அந்தப் பிஞ்சுக் குழந்தை செய்ததையா அப்படிச் சாப்பிட்டேன். வெட்கமில்லாமல்". மனதை என்னவோ பிசைந்தது. நித்திரை வரவே மறுத்தது.

* * *

அடுத்த நாள் நான் காப்புறுதி (Insurance) கூட்டுத் தாபனத்துக்கு போக வேண்டி இருந்தது. நண்பன் வர முடியாது' என்று சொல்லி விட்டான். எனக்குப் பேச்சுத் துணைக்கு கூட ஆருமில்லை.

விஷயம் இதுதான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஆயுள் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தேன். சமீபத்தில்தான் அது (Mature) முதிர்வடைந்திருந்தது. நான் எனக்குச் சேர வேண்டிய தொகையைக் கேட்டு எழுதியிருந்தேன். அவர்கள் ஒரு 'பாரத்தை' அனுப்பி அதைப்பூர்த்தி செய்து அத்துடன் பொலிசியையும் அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். அப்படியே நான் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தேன்.

என் கெடுகாலம், பொலிசி தபாலில் தொலைந்துவிட்டது. கிடைக்க வேண்டிய தொகையை ஏன் வீணாக விட வேண்டும் என்று அவர்களைப் போய்ப்பார்க்க முடிவு செய்தேன்.

முதலில் எந்தக் கிளை என்று என்று தெரியாமல் கொஞ்சம் அல்லாடி, கடைசியில் சரியான இடத்திற்க போய்ச் சேர்ந்தேன். நான் எங்கு போனாலும் எனக்கு முன்னால் சனியன் அங்கு போய் உட்கார்ந்து விடும். அன்றைக்கு என்று பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரி வரவில்லை. 'வந்து விடுவார், வந்துவிடுவார்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மத்தியானத்துடன் நல்ல பசி. திரும்பி வந்துவிட்டேன்.

அடுத்த நாளும் படையெடுத்தேன். அதிகாரி பத்து மணியளவில் வந்தார். நான் ஒரு துண்டில் என் பெயரைக் குறித்து என்ன விஷயம் என்று எழுதி அனுப்பினேன். அரை மணி நேரம் கழித்து என்னை வரச் சொன்னார்கள். நான் விஷயத்தைக் கூறி கோப்பு (File) நம்பரையும் கொடுத்தேன்.

அவர் ரெண்டு மூன்று தரம் 'பெல்' அடித்தும் ஒருவரும் வராததால் "குணதிலக, குணதிலக" என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார். அப்போது ஒருவர் வந்து நின்றார். நெடிதுயர்ந்த உருவம். சாடையான முன் வழுக்கை. கொஞ்சம் கூனிய படியே "என்ன?" என்றார்.

அவருடைய ஒரு கை பாதி குடித்த ஒரு சிகரெட்டை முதுகுக்கு பின்னால் பிடித்தபடி இருந்தது. அவர் இன்னும் கொஞ்சம் நிமிர்ந்தால் எங்கே மின் விசிறி அவருடைய தலையில் இடித்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன்.

"இந்த 'கோப்பை' எடுத்துக் கொண்டு இதற்குரிய கிளார்க்கை வரச் சொல்லும்" என்றார். அவனும் 'சரி' என்று போய்விட்டான்.

நான் அதிகாரியின் முன்பு பொறுமையாக காத்து இருந்தேன். அவருடைய தொலைபேசி மணி அடித்த வண்ணமே இருந்தது. வேகமாக பேசி முடித்து விட்டு வேலையிலேயே கண்ணாக இருந்தார். இடையிடையே மணி அடித்து வேலையாளுக்கு வேலைகளும் கொடுத்தார். அடிக்கடி என்னைப் பார்த்து "வந்து விடும், வந்து விடும்" என்றார்.

ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. இவர் மறுபடியும் மணியடித்து குணதிலகாவைக் கூப்பிட்டு என் காரியத்தை நினைவூட்டினார். அதற்கு அவன் நெளிந்து அந்த கிளார்க் தேநீர் குடிக்கப் போனதாகவும் அதற்குப் பின் ஆளையே காணவில்லையென்றும் மெல்லிய குரலில் கூறினான்.

அதிகாரி கோபத்தை என்முன் காட்டாமல் "சரி, சரி சுமணபாலாவை வரச்சொல், அந்தக் கோப்புடன்" என்றார். சிறிது நேரம் கழித்து சுமணபாலா என் கோப்பைக் கொண்டு வந்து மேசைமேல் வைத்தார். அந்த அதிகாரி அதைதிறந்து ஒவ்வொரு ஓலையாக விபரங்களைப் படிக்க, நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து தொலைபேசி மணி அடித்தது. அவர் கைபிடியைத் தூக்கி கதைத்து விட்டு "கொஞ்சம் இருங்கள், பெரிய அதிகாரி கூப்பிடுகிறார். வந்து விடுகிறேன்" என்று போய் விட்டார்.

நான் பொறுத்திருந்து பார்க்கிறேன். நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. எனக்கு பீதி பிடித்து விட்டது. 'லஞ்ச்' நேரம் நெருங்கிக் கொண்டே வருகிறது. அது வந்தால் எல்லாரும் குருவிகள் பறப்பது போல பறந்து விடுவார்களே!

நல்ல காலம். அதிகாரி திரும்பி வந்துவிட்டார். வேகமாக இரண்டு தாளைப் படித்து விட்டு "இது கொஞ்சம் சிக்கலான கேஸ். மூன்று நாளைக்குப் பிறகு வந்து பாருங்கள்" என்றார். மனிதரைப் பார்த்தால் வேலை தெரிந்தவர் போல இருந்தார். அதனால் நம்பிக்கையுடன் வெளியே வந்தேன்.

மூன்று நாள். பிறகு சநி, ஞாயிறு. அதற்குள் ஒரு 'போயா' விடுமுறை. இது எல்லாம் முடிந்து ஒரு நாள் சாவகாசமாக தேடிப் போனேன். 'கோபப்படாதே' என்று அடிக்கடி எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.

இந்த முறை விஷயம் சுலபமாக முடிந்து விட்டது. அந்த அதிகாரி "நாங்கள் இங்கே எல்லாம் அலசிப் பார்த்து விட்டோம். உங்களை பொலிசி வந்ததற்கான தடயமே இல்லை. பொலிசி இல்லாமல் ஒன்றுமே செய்ய ஏலாது. நீங்கள் பதிவுத் தபாலில் அனுப்பிய படியால் எதற்கும் தபால் கந்தோருக்குப்போய் விசாரித்து பாருங்கள்" என்று கூறிவிட்டு வேறு பேச்சு வார்த்தைக்கு இடம் தராமல் இன்னொரு பைல் கட்டில் தீக்கோழி தலையைப் புதைப்பது போல புதைத்து கொண்டார்.

எனக்கு என்ன? ஒரு வேலையுமில்லை தானே! அடுத்த நாள் 'சும்மா' தபால் கந்தோருக்கு போய் பதிவுத் தபால் ரசீதைக் காட்டி விசாரித்தேன். அவர்கள் நான் எதிர்பார்த்த பதிலைத்தான் கூறினார்கள். "இது வெளியூரில் போட்ட தபால். நீங்கள் இதைப் பதிவு செய்த கந்தோரில் புகார் கொடுக்க வேணும். அவர்கள் அந்த கோப்பு நம்பரைக் காட்டி எங்களுக்க எழுதுவார்கள். அதன்படி நாங்கள் விசாதணை செய்ய முடியும். இப்ப ஒன்றும் செய்ய ஏலாது" என்று கையை விரித்தார்கள்.

நண்பனிடம் விஷயத்தைச் சொன்னேன். "ஏன் நீ முதலே சொல்லவில்லை?" என்று என்னைக் கடிந்து விட்டு தனக்குத் தெரிந்த அதிகாரி ஒருவருடன் டெலிபோனில் தொடர்பு கொண்டான். என் சங்கடத்தை சுருக்கமாகச் சொல்லி விளக்கினான். இரண்டு நாள் தள்ளி பதினொரு மணிக்கு என்னை வரச் சொன்னார், சிவபாலனின் அந்த நண்பர்.

சிவபாலன் என்கு "நீ உன் புத்தியைக் காட்டாதே. அவர் பெரிய அதிகாரி. கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்" என்றான்.

சரியாக பதினொரு மணிக்கு என்னை உள்ளே கூப்பிட்டார்கள். பெரிய அறை. வெள்ளை வெளேரென்று தூண்மையாகவும் சிக்கனமாகவும் இருந்தது. நீண்ட திரைச் சீலைகள் கம்பீரமாக காற்றுக்கு இடைக்கிடை அசைந்த படி தொங்கின.

நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ஒரு பெண்மணி அந்தக் கதிரையில் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார் இன்னொரு ஆண் அதிகாரி. அவர் கையில் என்னுடைய கோப்பு.

"விஷயத்தைக் கூறுங்கள்" என்றார் அந்த தலைமைப் பெண் அதிகாரி.

மெத்தப் பெரிய அதிகாரிகளுடைன் கதைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய விதி, கதையை நீட்டி வளர்க்கக் கூடாது. அத்துடன் அதி சிக்கனமும் ஆபத்து. ஒரு அழகிய பெண்ணின் உள் ஆடை போன்று அதிகம் நீட்டாமல் அத்துடன் Subjectஐ 'கவர்' பண்ணவும் வேணும்.

நான் விஷயத்தை மிகவும் கவனத்துடன் சொல்லி முடித்தேன். அந்த பெண் அதிகாரி டாம்பீகமாக நிமிர்ந்து கண்ணாடியைச் சரி செய்து விட்டு சொன்னார்: "பொலிசியை எங்களுக்கு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. அது வழியில் தொலைந்ததற்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். அத்துடன், பிறப்பு சாட்சிப் பத்திரமும் தேவை. உங்கள் காசு தர வேண்டிய தயார் நிலையில் இருக்கிறது. தவறான வழியில் நாங்கள் பணத்தை கொடுத்தோமென்றால் கணக்காய்வில் (Audit) எங்களுக்கு சங்கடம் வரும்."

அவர் 'சங்கடம்' என்றதும் பொறுமையின் பிறப்பிடமாக இருந்த எனக்கு பத்திக் கொண்டு வந்து விட்டது.

"அம்மா! தாயே 'சங்கடம்' என்றா சொன்னீர்கள்! யாருக்கு சங்கடம்? ரூ 25,000 பிச்சைக் காசு. அதை எனக்கு என்ன சும்மாவா கொடுத்தீர்கள்? அல்லது லோன் கொடுக்கிறீர்களா? இதற்கும் மேல் பிறப்புச் சாட்சிப் பத்திரம் வேறு கேட்கிறீர்களே? ஏன்?"

"நான் பிறந்தது என்னவோ உண்மை. அதுதான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இறக்கவும் இல்லை. அப்படி இறந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. இருபத்தைந்து வருடங்கள், கணக்காக முன்னூறு மாதங்கள் நான் 'பிரிமியம்' செலுத்தி வந்திருக்கிறேன். உங்கள் முன்னால் கோப்புடன் நிற்கிறாரே, இவரிடம் கேளுங்கள். இந்த முன்னூறு மாதங்களில் ஒரு மாதத்தில் கூட ஒரு நாளாவது பிரிமியம் தவறியிருக்கிறதா? இல்லை. லேட்டாகக் கட்டியிருக்கிறேன? கிடையாது."

"நான் காசு கட்டியது என்னவோ உண்மை. இப்ப உயிரோடு இருப்பதுவும் உண்மை. அதனால் எனக்குத் தரவேண்டிய பணத்தை தர வேண்டியது தானே! இதிலே என்ன பெரிய ரூல்ஸ் எல்லாம்!"

"மாதா மாதம் ரூ.103 கட்டி வந்திருக்கிறேன். 300 மாதத்தில் நான் கட்டிய தொகை ரூ.30,900. குறைந்தது 8% வட்டியில் இதே காசு இ€றைக்கு எவ்வளவு ஆகியிருக்கும்? ரூ.47,080. நான் கேட்பது என்ன? பிச்சைக் காசு ரூ,25,000. இதை வைத்து வீடு கட்டப் போறேனா? வெத்திலை வாங்கக் கூட காணாது!"

மேல் அதிகாரி ஏதோ பேச வாயெடுத்தார். நான் தடுத்து விட்டுத் தொடர்ந்தேன்.

"என் தொடக்கச் சம்பளம் மாதம் ரூ.1060. அதில் பத்து சத வீதம் பிரிமியம் ஆக கட்டியிருக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன். அந்த நூறு ரூபாயின் அன்றைய வாங்கும் சக்தி இன்று இந்த ரூ.25,000 க்கு இல்லை. சங்கடம், என்ன எங்கடம்?"

பேசியது நான் தான், ஆனால் மேலதிகாரிக்கு 'மேல் மூச்சு, கீழ் மூச்சு' வாங்கியது. "மிஸ்டர் குணரத்தின, அவரைக் கூட்டிக் கொண்டு போய் ஆவன செய்து அந்தக் காசைக் குடுக்கிற வழியைப் பாருங்கோ" என்றார்.

நான் வெளியே வந்து அவர்கள் கேட்டுக் கொண்டபடி இன்னும் சில 'பாரங்களை' நிரப்பி கையெழுத்தும் வைத்து கொடுத்தேன். இவ்வளவும் ஆன பிறகும் கடைசியில் "ரூ.2 ஸ்டாம்பை மடியில் கட்டிக் கொண்டா அலைகிறேன். வேறு ஒருவரை வெளியே அனுப்பி ரூ.2 ஸ்டாம்ப் வாங்கிக் கொண்டு வந்து அதை ஒட்டி என் கையொப்பத்தை எடுத்துக் கொண்டார்கள்.

"செக்கை உங்கள் கையில் கொடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. உங்கள் பாங்குக்க நேரடியாக இன்றைக்கே அனுப்பி வைப்போம். யோசிக்க வேண்டாம்" என்று கூறினார்கள்.

* * *

நான் இந்த விபரங்கள் எல்லாவற்றையும் நடந்தது நடந்த மாதிரியே சிவபாலனிடம் சொல்லி முடித்தேன். எனக்கு 'மூக்கு முட்ட' கோபம் வந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டேன்.

"முற்றிலும் இது உண்மை. நாங்கள் பல நேரங்களில் எங்கள் பொது அறிவைப் பாவிப்பதில்லை. ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான்" என்றான் அவன்.

"இல்லை, சிவபாலன். இன்சூரன்ஸ் எடுப்பது எதற்காக? ஒரு பாதுகாப்பிற்காகத்தானே? வாழ்நாள் முழுக்க ஒருவன் கட்டிய காசை அவனுக்கு திருப்பிக் கொடுக்கும் போது இப்படிச் செய்யலாமா? இது ஆயுள் இன்சூரன்ஸ் விஷயமல்லவோ? இந்தக் கதி ஒரு படிப்பறி வில்லாத ஏழை விதவைக்கு ஏற்பட்டால் அவள் என்ன செய்வாள்? புருஷன் செத்த பிறகு அவள் அந்த இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க எத்தனை தரம் அலைய வேண்டியிருக்கும்? படித்த எனக்கே இப்படி என்றால் அவளுக்கு எப்படி இருக்கும்? இது என்ன அக்கிரமம்?" என்றேன்.

சிவபாலன் கொஞ்சம் யோசித்து விட்டு "நீ உலக வங்கிக்கே கணக்கு எழுதிறவன். ஒரு கணக்கு பிழை விட்டு விட்டாயே" என்றான்.

நான் "என்ன?" என்று கேட்டேன்.

"நீ அஞ்சு நாள் அலைந்திருக்கிறாய். உன்னுடைய சம்பளம் ஒரு நாளைக்கு 300 டொலர். அப்ப அஞ்சு நாளைக்கு ரூ.75,000 விரயமாகியிருக்கிறது. நீ கட்டிய வட்டியுடன் ரூ.47,080. கிடைக்கப் போவதோ ரூ.25,000; ஆக நட்டம் ரூ.97,080. இதை உன்னுடைய நட்டக் கணக்கில் எழுத வேண்டியது தான்" என்றான்.

நான் "என்ன ஸ்டாம்ப் வாங்கிய வகையில் ரூ.2 தவறிவிட்டது. அதையும் சேர்த்துக் கொள்" என்று கூறினேன்.

இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அப்படி அடிவயிற்றில் இருந்து எழும்பி வாய் விட்டு உரக்கச் சிரித்து எவ்வளவோ? காலம் ஆகிவிட்டது.

* * *

நண்பனைப் பிரியப் போகிறோம். அவன் கண்கள் என்னை நேரே பார்க்க முடியாமல் தவித்தது. 'இனிமேல் நான் பார்ப்பேனோ' என்று எனக்கு பட்டது. அவனுக்கும் அப்படித் தான் இருக்க வேண்டும். "ச்சீ, இது என்ன?" என்றேன். அவன் கண்கள் கலங்கி இருந்தன.

பால்ய சினேகிதம் அல்லவா? அதனிலும் பார்க்க உன்னதமான சிநேகிதம் உலகத்திலேயே கிடையாது. எங்களுக்குள்ளே ஒழிவு மறைவே இல்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஏற்படும் சினேகமானது எப்படியும் செக்ஸ’ல் கொண்டு போய் விட்டு விடும். பிறகு பல சிக்கல்கள். ஆணுக்கும் அஸக்கு மிடையே ஏற்படும் சினேகம் அப்படியல்ல; பவித்திரமானது.

* * *

பிளேனில் அன்று நிறைய சணம். மேல் தட்டில் சாமானை வைத்து விட்டு உட்கார்ந்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். இந்த நேரம் தான் மிக ரம்மியமான நேரம்.

குருடர்கள் யானை பார்த்து கதை ஒன்றிருக்கிறது. தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்து விட்டு 'யானை புடலங்காய் போல இருக்கிறது' என்றானாம் ஒருவன். குருடர்களை விட்டு விடுவோம். யார் தான் ஒரு யானையை முழுமையாகப் பார்க்க முடியும். முன்னுக்கு நிற்பவன் அதைத் தான் காணுவான். பனை மரத்திலிருப்பவன் யானையின் மேல்பாகத்தை பார்ப்பான். உலகத்திலேயே யானையை முழுமையாகப் பார்த்தவர் யாராவது இருக்கிறார்களா? எல்லா பார்வையுமே ஒவ்வொரு கோணத்தில் இருந்துதான்.

கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பாடல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உருக்கமான குரலில் காதலன் பாடும் பாட்டுத் தான். "என் காதலியே, உனக்கு என்ன நடந்தது? சடுதியில் என் காதலை தூக்கி எறிந்து விட்டாயே! நீ மாறி விட்டாயா? அல்லது தடம் மாறி விட்டாயா? ஏந் இந்த உதாசீனம்?"

பிளேன் மெதுவாக ஊரத் தொடங்கியது. நிலத்திலே ஊர்ந்து பின் விரைந்து மேலெழும் அந்தக் கணநேர இன்பம் கொள்ளையானது. விர்ரென்று விசை கூடுகிறது. ஏணையில் தூங்கும் குழந்தையை பட்டுப் போல் மேலே தூக்குவது போல பிளேன் நிமிர்ந்து எழும்புகிறது. அந்த இன்பத்தை பங்கு போட விருப்பமின்றி கண்மூடி லயிக்கிறேன்.

..........


வையன்னா கானா

நிக்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது நடந்ததென்று ஒரு கதை சொல்வார்கள்.

பிரான்ஸ் தேசத்திலிருந்து மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமையல் கலைஞரை வெள்ளை மாளிகைக்கு நியமித்தார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பல தலைவர்களும் வருவார்கள். விதம் விதமான விருந்துகள் எல்லாம் அங்கே தயார் பண்ண வேண்டும். ஒரு உலகம் புகழும் சமையல் கலைஞர் அவர்களுக்குத் தேவை தானே!

இவர் வெறும் சம்பளத்திற்காக வேலை செய்பவர் அல்ல. சமையல் கலை அவருடைய மூச்சு. தினமும் அதைப் பற்றியே சிந்திப்பார்; ஆராய்ச்சிகள் செய்வார்.

உன்னதமான ரஸனை அவரிடம் இருந்தது. அவருடைய நாவின் சுவையுணர்வோ வெகு நுட்பமானது. அல்லாவிட்டால் உலகம் புகழும் சமையல் கலைஞராக இருக்க முடியுமா?

ஒரு முறை ஜனாதிபதி ஒரு விஷேச விருந்து கொடுத்தார். அன்று இவர் பிரான்ஸ் தேசத்திலிருந்து பிரத்தியேகமாக தருவிக்கப்பட்ட ஒரு அபூர்வமான மீன் வகையில் Filet de sole Normande என்ற ஒரு உணவுப் பதார்த்தம் தயார் செய்தார். அது அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக நன்றாகவே அமைந்திருந்தது.

ஜனாதிபதி அதைச் சாப்பிடும்போது 'டொமாடோ கெச்சப்'பை எடுத்து அதன் தலையில் ஊற்றி விட்டாராம். சமையல்காரர் நிலை குலைந்து போனர்; அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

சுவையறியாத ஒரு எஜமானருக்கு பணி செய்யும் ஒரு உன்னதமான சமையல்காரரின் வருத்தம் அவரைத் தவிர வேறு யாருக்கு புரியப் போகிறது. பதறிவிட்டார். அவரால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்றிரவே அவர் தன் வேலையைத் துறந்து விட்டாராம்.

சமையல்காரரென்ன? ஒரு மனைவிக்கு கிடைக்க கூடிய மிகப் பெரிய தண்டனை, நாக்கு ருசி இல்லாத ஒருத்தன் அவளுக்கு கணவனான வாய்ப்பது தான். அவள் என்ன ஆர்வமாகச் சமைத்திருப்பாள். இவன் கவளம் கவளமாக வாய்க்குள்ளே திணித்துக் கொண்டிருக்கிறான். "ஆஹா" என்று ஒரு வார்த்தை சொல்ல அவனுக்குத் தெரியவில்லை. அதை விட நரகம் வேறு என்ன வேண்டும் அவளுக்கு.

சங்கடப்பாடல்களில் ஒன்று. இளம் மனைவி காந்தள் போன்ற மெல்லிய விரல்களால் தயில் பிசைகிறாள். அவளுடைய பட்டு இடையில் இருந்து நழுவுகிறது; புகை கண்களை எரிக்கிறது; கண்­ரில் கண்மையெல்லாம் கரைகிறது. புளிப்பாகு செய்கிறாள் அவள். கணவன் அதை உண்ணும் போது "ஆஹா, இனிது" என்று கூறுகிறான். அவள் உள்ளமெல்லாம் புளகாங்கிதம் அடைகிறது. சமைக்கும் போது அவள் பட்ட இன்னல்கள் எல்லாம் ஒரு கணத்தில் காற்றிலே கரைந்து விடுகிறது.

* * *

நான் ஆபிரிக்காவில் வேலை பார்த்த போது அங்கே எங்கள் ஊர்க்காரர் ஒருத்தர் பழக்கமானார். அவர் தனிமையில் இருந்ததால் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து உணவு கொள்வார்.

ஒரு நாள் என் மனைவிக்கு ஒரு பலாக்காய் கிடைத்தது. அந்த ஊரில் பலாமரமே கிடையாது. எங்கேயோ தப்பித் தவறி ஒரு பலாமரம் இவள் கண்ணில் பட்டு விட்டது. அதிலே பிஞ்சுக்காய் ஒன்றை இவள் கண் வைத்து அது சரியான பருவம் அடைந்ததும் அதைப் பிடுங்கி, நறுக்கி ஒரு கறி வைத்தாள். எவ்வவும் பலாக்காய் கறி என்றால் அதனுடன் ஒத்துப் போக ஒரு ரசமும் இருக்கும்; துவரம் பருப்பு ரசம்.

என் மனைவி மிகவும் பக்குவமாக இதைச் செய்தாள். நண்பரும் வந்தார். நாங்கள் இரண்டு பேரும் சாப்பிட்டோம். தேனாமிர்தமாக இருந்தது. ஆனால் நண்பர் முகத்திலே ஒருவித மாற்றமும் இல்லை. என்ன சாப்பிட்டோமென்று கூட அவருக்கு பிரக்ஞை இல்லை. மனைவியின் முகம் கூம்பிவிட்டது.

பிறகு என் மனைவி சொன்னாள்; "இந்த மனுசனுக்கு சாப்பாடும் ஒண்டுதான், புல்லும் ஒண்டு தான்." அவளுடைய மனம் அப்படி வெறுத்துப் போயிற்று.

* * *

இந்த ரசனை என்பது உணவுவகையில் மாத்திரம் தான் என்றில்லை; எல்லா விஷயத்திலுமே பொருந்தும். எங்கள் தலைமுறையில் நாங்கள் கண்ட மிகப் பெரிய ரஸ’கர் டி.கே.சி. தான். நான் அவரைப் பற்றி அறிந்தது மற்றவர்கள் சொன்னதும், புத்தகங்களில் படித்ததும் தான். அவர் உணவு வகைகளையும், வாழ்க்கையையும், கவிதைகளையும் அப்படி ரசித்தார். ரஸ’கத் தன்மையின் சிகரமென்று அவரைச் சொல்லலாம்.

"ராமனைக் கெடுத்தாள் கைகேயி.
கம்பனைக் கெடுத்தார் டி.கேசி."

என்று புலவர் கூட்டம் அவரை வைது கொண்டு திரிந்த காலம் ஒன்று இருந்தது. ஆயிரம் ஆயிரமான கம்பன் பாட்டுகளிலே 'இடைச் செருகல்' எல்லாவற்றையும் உருவி உருவி 'இது கம்பன் பாட்டு அல்ல', என்று ஆணித்தரமாகச் சொல்லி நிராகரித்து விட்டாரே! இது எப்படி கம்பனின் கவித்துவ முத்திரையைச் சொல்வதா அன்றி டி.கே.சி.யின் நுண்ணிணு ரஸ’கத்தன்மையைச் சொல்வதா?

எழுத்தாளர்களில் சிலருடைய முத்திரையும் மிக ஆழமாக விழுந்திருக்கும்.

"என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா, பொன்னகரம்! "என்று முடிகிறது கதை.

இதை எங்கே கொண்டு போய் ஒளித்து வைத்தாலும் தெரிகிறதே இது 'புதுமைப்பித்தனுடைய வரிகள்' என்று. அது எப்படி? அவருடைய முத்திரை அப்படிப்பட்டது.

நுண்ணிய ரஸ’கத் தன்மையென்பது இலக்கியத்துக்கும், கவிதைகளுக்கும் சமையல் கலைக்கும் மட்டும்தான் என்றில்லை. அந்த சுவையுணர்வு நுட்பமானதாக இருப்பின் அது எங்கேயிருந்தாலும் வணக்கத்துக்கு உரியது தான். ஆபிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் இதற்குச் சாட்சி.

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள 'மமியோகோ' என்னும் ஹோட்டல் ஒன்றில் நாங்கள் நாலு பேரும் தங்கியிருக்கிறோம். அதிலே ஒருத்தர் ஆபிரிக்கர்; அரசாங்கத்திலே மிக உயர்ந்த பதவி வகிப்பர்; பணம் அவருக்கு தண்­ர் பட்டபாடு.

எங்கள் எல்லோருக்கும் 'என்ன, என்ன பானம் வேண்டும்' என்று கேட்டு ஹோட்டல் சிப்பந்தியிடம் 'ஓடர்' கொடுக்கிறார். தனக்கு அவர் வழக்கமாகக் குடிக்கும் 'ராயல் சல்யூட்' என்ற மிக உயர்ந்த ரக விஸ்கியை ஓடர் பண்ணுகிறார். சிப்பந்தியும் சிறிது நேரத்தில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போகிறான்.

நாங்கள் எல்லோரும் எங்கள் பானங்களை அருந்துகிறோம். ஆனால் நண்பரோ தன்னுடைய கிளாஸை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அருந்தவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து ஏதோ முடிவுக்கு வந்தவர் போல அந்தப் பானத்தைக் கையிலெடுத்து சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்; மூக்கருகே கொண்டு போய் முகர்ந்து விட்டு கைதட்டி அந்தச் சிப்பந்தியை அழைத்தார்.

தன் பையிலிருந்து ஒரு 50 'பவுண்' தாளை எடுத்து அவன் கையிலே கொடுத்துச் சொன்னார்: "எனக்கு இது ரொம்பவும் பிடித்து விட்டது. இதை ஊற்றிய போத்தலில் இருக்கும் மீதியெல்லாத்தையும் நான் அப்படியே வாங்குகிறேன்; கொண்டா?" நாங்கள் எல்லாம் பேச்சை நிறுத்திவிட்டு இந்த அதிசயத்தை கவனித்து கொண்டு இருந்தோம்.

ஆபிரிக்காவில் எல்லாம் காலில் விழும் பழக்கம் கிடையாது. கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கும் நாடு என்ற படியால் முழங்காலில் இருந்து பழக்கம் புழக்கத்தில் இருந்தது.

சிறிது நேரம் கழித்து அந்தச் சிப்பந்தி ஓடோடி வந்து இவர் முன்னால் முழங்காலில் மண்டியிட்டு உட்கார்ந்தான். "மாஸ்ட, மாஸ்ட, மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்" என்று மன்றாடியபடியே இருந்தான். இந்தக் கூத்தை நாங்கள் எல்லோரும் பார்த்த படி இருந்தோம். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின்பு நண்பர் நடந்த விபரங்களை கூறிய போது தான் புரிந்தது.

அந்த ஹோட்டலில் 'ராயல் சல்யூட்' விஸ்கி கிடையாது. சிப்பந்தி சாதாரண விஸ்கியைத்தான் அவருக்கு கொண்டு வந்து தந்திருக்கிறான். நண்பருக்கு ஐயம், ஆனாலும் தெளிவு படுத்தும் விதம் தான் தெரியவில்லை. இவர் சமயோசிதமாக 'முழுப் போத்தலையும் கொண்டுவா, இந்த 'காசு' என்றதும் அவன் வெருண்டு விட்டான். காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.

இதிலே விசேஷம் என்னவென்றால் அந்த விஸ்கியின் நிறத்தைப் பார்த்தே நண்பருக்கு ஓரளவு ஐயம் இருந்தது. அதை நிட்சயிக்க மணந்தும் பார்த்தார்; அவ்வளவு தான். அதைச் சுவைத்து தன் வாயை அவர் அசுத்தப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை; தேவையுமில்லை.

விஸ்கி குடித்தவர்களுக்கு இந்த சுவை நுட்பம் இலகுவாக புலப்படும். ஒரு விஸ்கிக்கும் இன்னொரு உயர் சாதி விஸ்கிக்கும் உள்ள வித்தியாசம் ஒரு நூலிழைதான். இவரோ அதைச் சுவைக்காமலே பார்த்த மாத்திரத்தில் சொல்லிவிட்டாரே. அந்த ரஸ’கத் தன்மையை என்னவென்று சொல்வது.

அடுத்த சம்பவம் நடந்தது சுடானில். இதுவும் குடி சம்பந்தமானது தான். அங்கேயெல்லாம் குடிவகைகளுக்கு தடையுத்தரவு; ஆனால் தூதரகங்களுக்கும், ஐ.நாவில் வேலை செய்பவர்களுக்கும் விதி விலக்கு.

ஒரு வீட்டில் பெரிய விருந்து ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த விருந்துக்கு ஐ.நாவில் வேலை செய்யும் ஒரு கமரூன் (Cameroon)காரர், அவரும் வந்திருந்தார். இந்த மனிதர் 'கார்ல்ஸ் பெர்க்' என்று சொல்லப்படும் ஒரு வித விலையுயர்ந்த பீரை மட்டுமே அருந்துவார்; மற்றவற்றைச் சீந்தக் கூட மாட்டார்.

இந்தக் கமரூன்காரர் வருகிற விருந்தென்றால் விருந்து கொடுப்பவர் முதலில் 'கார்ல்ஸ் பெர்க்' பீரைச் சேர்க்கத் தொடங்குவார். கணிசமாகச் சேர்த்த பின்தான் விருந்துக்கு அடுக்குகள் செய்வார். 'கார்ல்ஸ் பெர்க்' கிடைப்பது அவ்வளவு அரிது.

இந்த விருந்திலே பல நண்பர்களும் கலந்து கொள்ளவே விருந்து அல்லோ கல்லோலப் பட்டது. கமரூன்காரருக்கு மாத்திரம் அந்த விசேஷ பீர். அவர் அதைச் சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது உலக உதை பந்தாட்டப் போட்டி நடந்து கொண்டிருந்தது. எங்கேயோ இருந்த கமரூன் படபடவென்று மேலுக்கு வந்து விட்டது. முதல் நாள் நடந்த போட்டியில்தான் அப்பேர்ப்பட்ட இங்கிலாந்தையே முடியடித்து விட்டது.

கமரூன்காரருக்கு சந்தோஷம் தலைக்கு மேலே போய்விட்டது. முதல் நாள் நடந்த உதைபந்தாட்டத்தைப் பற்றி விஸ்தரிக்கிறார். எல்லோரும் வாயைப் பிளந்து சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. ஓடிப் போய் பேசினார்.

அந்த நேரம் பார்த்து ஒரு 'வம்பு' கமரூன்காரரின் பீரை எடுத்து இன்னொரு கிளாஸ’ல் ஊற்றிவிட்டு இவருடைய கிளாஸ’ல் ஒரு சாராண பீரை அதே அளவுக்கு ஊற்றி அதே இடத்தில் வைத்து விட்டார்.

கமரூன்காரர் வந்து கதையை விட்ட இடத்திலிருந்து தொடருகிறார். எல்லோரும் கண்வெட்டாமல் அவர் கையிலுள்ள பீரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வசதியான இடம் வந்ததும் கமரூன்காரர் கதையை நிறுத்தி விட்டு கையில் வைத்திருந்த பீரை ஒரு வாய் உறிஞ்சினார்.

அவ்வளவு தான் "துபுக்" என்று அவ்வளவுத்தையும் துப்பிவிட்டார். 'என் துப்பினோம்' என்று அவருக்கே புரியவில்லை. சுற்றியிருந்த நண்பர்கள் எல்லோரும் எழும்பி நின்று கைதட்டி ஆரவாரித்தார்கள். பிறகு தான் அவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்தது.

அதுவரைக்கும் நான் இந்தக் 'கமரூன்காரர்' ஒரு டம்பத்துக்காகத் தான் இப்படிச் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அன்றிலிருந்து எனக்க அவரிடம் பத்து மடங்கு மதிப்பு அதிகமாகி விட்டது.

* * *

ஒருவருடைய ரஸனையுணர்வு உச்சத்திலிருந்தால் அது போற்றத்தக்கதொன்று. அது பீர் குடிப்பதிலிருக்கலாம், கவிதையிலிருக்கலாம் அல்லது உணவை சுவைப்பதிலிருக்கலாம். இப்படி மேம்பட்ட ரஸனை உணர்வு உள்ளவர்களால் ஒரு சிறு பிழையைக் கூடத் தாங்கமுடியாது; முறிந்துவிடுவார்கள்.

ஒலி நாடாவிலே ஒரு ஸ்வரக்கோர்வையை மாத்திரம் வயலினில் ஒருவர் வாசிக்கக் கேட்டு விட்டு 'இது ஆர் வித்துவான்' என்று நிட்சயமாகச் சொல்கிறார்களே! அது எப்படி?

ஒரு முறை சௌடய்யா வயலின் வாசிக்கிறார், அவருடைய குரு கிருஷ்ணப்பாவுக்கு, ஒரு ராகத்தை கிருஷ்ணப்பா தன்னை மறந்த நிலையில் ஆலாபனை செய்ய சௌடய்யாவும் வயலினில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். முக்கியமான ஒரு இடத்தில் சௌடய்யாவின் வயலின், அவர் இழுத்தபடியெல்லாம் பேசும் வயலின், அவரையும் மீறி 'கிரீச்' என்று விட்டது. கிருஷ்ணப்பா ஓங்கி அடித்து விட்டார். ஆயிரம் பேர் கொண்ட சபை அது. அந்த அபஸ்வரம் அவர் காதில் நாராசமாகப் பாய்ந்தது. நுட்பமான அவர் செவிகளுக்கு அதைத் தாங்கும் சக்திஇல்லை. தன்னை மறந்த நிலையில் அப்படிச் செய்துவிட்டார். பிறகு அவர் சௌடய்யாவைக் கட்டிக் கொண்டு விம்மி அபதார் என்பது வேறு விஷயம்.

அப்கானிஸ்தானிலுள்ள பல்வேறு அகதி முகாம்களை பல முறையும் நான் பார்த்திருக்கிறேன். இளம் நங்கைகள் 13,14,15 வயதுதானிரு ககும், கம்பளம் நெய்து கொண்டிருப்பார்கள். ஒரு வயதுக்கு மேல் கை விரல்கள் வளைந்து கொடுக்காது. ஆகவே சிறுவர்களும் சிறுமிகளும்தான் இந்தக் கம்பளங்களைச் செய்ய வேண்டும். அந்தக் கைவிரல்கள் கீரைத் தண்டைப் போன்று நீண்டு இருக்கும். விரல்கள் தக்காளிச் சிவப்பு நிறம். விரல்களும் நகமும் ஒரே கலரில் இருந்ததை அங்கே தான் முதன் முதலில் கண்டேன்.

'எங்கோ அரண்மனையில் இருக்க வேண்டிய இந்த அழகு இங்கே இப்படி கேட்பாரற்று கிடக்குதே?' என்று என்மனதை வாட்டும். இந்த அழகை இப்படிப் பூட்டி வைப்பது எவ்வளவு பாவம் என்றுகூட எனக்கு சில சமயங்களில் படும்; மனசுக்கு மிகவும் கிலேசமாக இருக்கும்.

* * *

("இது தான் கதையா?"

"இல்லை, இல்லை! இது முன்னுரை. இதுவே இப்படி இழுத்துக் கொண்டு போய் விட்டது")

* * *

நேற்று இரவு பல்லி சொன்ன போதே சுப்பையா நினைத்தார், இப்படி ஒரு அனர்த்தம் சம்பவிக்கும் என்று. பல்லி சாத்திரப் புத்தகத்தை உடனே எடுத்து விளக்கத்தைத் தூண்டி படித்துப் பார்த்தார். அதில் 'தூரத்து மரணம்' என்றிருந்தது. 'தூரத்து' என்றால் தூர இடத்தில் இருக்கும் ஆளா, அல்லது 'தூரமான உறவா' என்பதுதான் நிட்சயமாகத் தெரியவில்லை.

அன்று காலை நாலு மணிக்கே படலையில் வந்து 'வீட்டுக்காரர், வீட்டுக்காரர்' என்று கூப்பாடு போட்டார்கள். என்ன?' என்று விசாரித்தால் இவருடைய மனைவி தங்கச்சியம்மாவின் சித்தப்பா (இவள் அவரை 'சின்னய்யா' என்று தான் கூப்பிடுவாள்) நேற்று ராத்திரியே மானிப்பாயில் இறந்து போனாராம்.

தங்கச்சியம்மா பதறிப் போய் எழுந்து 'ஐயோ, ஐயோ' என்று தலையிலடித்துக் கதறத் தொடங்கினாள். பிள்ளைகளும் எழும்பி இருந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு மிலாந்தி மிலாந்திப் பார்த்தன.

இறந்தவருக்கு வயசு எண்பதுக்கு மேலே; போக வேண்டிய வயசுதான். நாலுமாதமாகப் படுக்கையில் தான் கிடை. தங்கச்சியம்மா சின்னனாயிருந்த போது அவர் தோளின் மேல் ஏறியிருந்து மருதடித் தேரெல்லாம் பார்த்திருக்கிறாள். அந்த நினைவு வந்து அப்படி அழுது விட்டாள்.

தின்னவேலியில் இருந்து மானிப்பாய்க்கு போக மூன்று மணி நேரமாவது பிடிக்கும். வண்டில் மாடுதான். கார் வசதிகளெல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது; அபூர்வம்.

அதிலே எல்லாமாக எட்டுக் குடும்பங்கள்; சின்னத் தங்கச்சியின் நாலு சகோதரிகளும், இரண்டு அண்ணன்மாரும், பெரியப்பா குடும்பமும். இவ்வளவு பேரும் ஒன்றாய் வெளிக்கிட்டு மானிப்பாய் போய்ச் சேர வேணும். கைக்குழந்தைகளைக் கொண்டு போகலாம். மற்றப் பிள்ளைகள் படிக்கப் போகுதுகள். வண்டில் மாடுகள் பிடிக்க வேணும். ஆறு இரட்டை மாட்டு வண்டில்கள் அவ்வளவு லேசில் பிடிக்க ஏலாது.

எல்லாச் சகோதரிகளும், அண்ணன்மாரும் சேர்ந்து பம்பரமாகத் தான் வேலை செய்தார்கள். ஆனால் முடிகிறகாரியமா? சுற்றத்தையெல்லாம் சேர்த்து, பல அடுக்குகளும் செய்து, அவையவைக்க சமைத்து வைச்சு வதவதவென்று உடுத்திக் கொண்டு வண்டிக்குள் ஏறும் போதே மணி பத்தாகி விட்டது. சங்கிலித் தொடர் போல மாடுகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக வெளிக்கிட்டன.

தங்கச்சியம்மா இந்தச் சகோதரிகளின் மூத்தவளல்ல. ஆனால் அவள்தான் காரியக்கட்டி. எல்லாம் அவள் பொறுப்பில் தான். அவர்களுக்குள் அவள்தான் கொஞ்சம் எடுப்பும்.

பின்கொய்யகம் வைத்துத் தான் எப்பவும் சேலை உடுப்பாள். நாலு பிள்ளைகள் பெத்தாலும் அவள் உடுத்திக் கொண்டு போனால் ஆக்கள் திரும்பிப் பார்க்கத்தான் செய்வார்கள்.

இவர்கள் மானிப்பாயில் போய் இறங்கிய போது சவம் எடுத்துவிட்டார்கள். முதல் நாள் சடலத்தை அடுத்த நாள் இரண்டு மணிக்கு மேல் வைத்திருப்பார்களா? எல்லோரும் வண்டிக்குள் இருந்து இறங்கி 'கொடி விட்டு' உள்ளே போகிறார்கள்.

வழக்கமாக இப்படிச் செத்த வீட்டுக்கு ஆட்கள் வரும்போது படலையில் இருந்தே பறைமேளம் 'டம், டம்' என்று அடித்து உள்ளே 'பெண்டுகள் வருகிறார்கள்' என்று சங்கேதமாக உணர்த்தி விடும். இங்கே பறை இல்லை. எல்லோருக்கும்தான் சுடுகாட்டுக்கு போய் விட்டார்களே!

தங்கச்சியம்மா கைகள் இரண்டையும் முன்னே நீட்டிய படி "ஐயோ, என்ரை சின்னையா!" என்று கத்தியபடியே உள்ளுக்கு ஓடுகிறாள். மற்றவர்களும் பின்னே தொடருகிறார்கள். ஆண்பிள்ளைகள் ஒவ்வொரு மூலையிலே போய் குந்துகிறார்கள்.

உள்ளே பெண்டுகள் எல்லாம் மாரடிக்க ஓஞ்சு சிதறிப்போய் ஒவ்வொரு மூலையாய் இருக்கிறார்கள். தங்கச்சியம் மாவைக் கண்டதும் பெண்டுகள் படியே 'அரைந்து, அரைந்து' வந்து அவளைக் கட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு துக்கம் மீண்டும் பீறிக் கொண்டு வருகுது. அப்படியே கூட்டம் கூட்டமாக சுற்றி இருந்து கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.

ஒரு 'பாட்டம்' அழுது முடிந்த பிறகு பெண்கள் கைகளை கழற்றிக் கொண்டு இருந்து ஊர்க் கதைகள் கதைக்கிறார்கள். 'தின்னவேலி ஆக்கள் வந்தாச்சுது' என்றவுடன் இன்னமும் வேற ஊர் பெண்டுகளும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

இரண்டாவது 'ஆவர்த்தியின்' போதுதான் மானிப்பாய் செல்லம்மா ஆரம்பித்து வைத்தாள். ஒப்பாரி வைப்பதில் அவளைத் தாண்ட வேறு ஆளில்லை, அந்தக் காலத்தில். உடனுக்குடன் ஒப்பாரி இட்டுக் கட்டிவிடுவாள். அவளுக்கு ஆதங்கம் இப்பிடி இவை 'சவம்' எடுத்த பிறகு 'ஆடி அசைந்து வருகினம்' என்று. அவள் இப்படி ஒப்பாரி வைக்கிறாள்.

"சீவிச் சிங்காரித்து சித்திரமாய் வாறியளோ?
ஆற்றிலே தண்ணி வந்த ஆடி ஆடி வாறியளோ?
பாக்குமரம விழுந்ததெண்டு பாத்துபோக வந்தியளோ?
தேக்குமரம் விழுந்ததெண்டு தெரியாமல் வந்தியளோ?"

இப்படியாக அவளுடைய ஒப்பாரி நீண்டு கொண்டே போகிறது.

தங்கச்சியம்மாவுக்கு சரியான வருத்தம். "நாங்கள் என்ன பாடுபட்டு வாறம்; இவள் இப்படிக் கேட்டு விட்டாளே? இதுக்கு ஒரு ஞாயம் இல்லையா? முடிறயில்லையா?" என்று மனமுடைந்து போனாள்.

உடனேயே ஒரு எதிர் ஒப்பாரி போட்டாள்:
"சுற்றமெல்லாம் உள்ள நாங்கள் சேத்து வர வேண்டாமோ,
மந்துசனம் உள்ள நாங்கள் பாத்துவர வேண்டாமோ,
ஆனசனம் உள்ள நாங்கள் ஆக்கி வரவேண்டாமோ,
கோடிசனம் உள்ள நாங்கள் கூட்டி வரவேண்டாமோ."

இப்படியாக ஒரு எதிர் அடி; கவியரங்கம் என்றால் கைதட்டலாம். இது செத்த வீடல்லவா?

அன்று மானிப்பாய் முழுக்க இந்தக் கதைதான். புருஷர்களிடமும் இந்தக் கதை போய் பரவி விட்டது. அவர்கள் "ஆஹா, ஆஹா" என்று மிக நன்றாகவே இந்த ஒப்பாரி கவித்துவத்தை அனுபவித்து ரசித்தார்கள்.

("என்ன கதை முடிந்து விட்டதா?"

"இல்லை, ஐயா! இனிமேல் தான் கதையே தொடங்குகிறது")

நாலாம் நான் 'காடாத்து' என்று ஒன்று நடக்கும். இறந்தவருடைய சாம்பலை சுடலையில் போய் எடுத்து வருவார்கள். பெண்கள் எல்லாம் அழுது தீர்க்க வேண்டிய முக்கியமான நாள். இதிலே தான் வந்த பந்து சனங்கள் எல்லோருக்கும் நன்றி கூறும் சாக்கில் சாப்பாடு போட்டு அனுப்புவார்கள். இது மாத்திரமல்ல, செத்த வீட்டுக்கு உழைத்த அம்பட்டன், வண்ணான், பறையடித்த பறையன், சுடலைக் காவல்காரன் எல்லோருக்கும் கணக்குத் தீர்க்கும் நாள்கூட.

அன்று சாப்பிடு முன் ஒரு வைபவம் இருக்கும். பெண்டுகள் இறந்தவருக்கு பிடித்தமான சோறு, கறிவகைகள், எல்லாம் காய்ச்சி ஒரு பெரிய சட்டியிலே போட்டுக் குழைப்பார்கள். அப்படிக் குழைத்ததை கைபிடி கொள்ளக்கூடிய உருண்டைகளாகத் திரட்டித் திரட்டி வைத்துக் கொண்டு வெளியே வர, செத்த வீட்டுக்கு பறையடித்த சின்னான் அங்கே இருப்பான். இந்தப் பெண்டுகள் அந்த உருண்டைகளை எடுத்து சின்னான் முதுகின் மேல் எறிந்து அவனை விரட்டி, விரட்டி அடிப்பார்கள். அவனும் அந்த உருண்டைகள் முதுகிலே விழ, அதை வழித்துச் சாப்பிட்டபடியே ஓடிக் கொண்டிருப்பான். இப்ப சிறுவர்களும் சேர்ந்து விடுவார்கள். கீழே விழுந்ததையெல்லாம் எடுத்து திருப்பித் திருப்பி அடிப்பார்கள். இதற்கிடையில் படலை வந்து விடும். பெண்டுகள் சட்டியையும், சோற்றையும் சின்னானிடம் கொடுத்து விட்டு வந்து விடுவார்கள்.

ஆண்கள் பந்தி முடிந்த பிறகு தான் பெண்களுக்கு. எல்லோரும் நீளமாக இருந்து வாழையிலை போட்டு சாப்பிடுவார்கள். இது முடிந்த கையோடு ஆண்கள் எல்லாம் வெளியே கூடுவார்கள். மிக நெருங்கிய உறவினரும் அயலும், சொந்த பந்தமுமாகத்தான் அது இருக்கும். அவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டும், சுருட்டுப் பிடித்துக் கொண்டும் சவடாலாகக் கதைகள் பேசிக் கொண்டு நேரத்தைக் கழிப்பார்கள்.

இப்படியான கூட்டங்களிலே நமசிவாயம்பிள்ளை தான் நடுநாயகமாக இருப்பார். அனேகமாகக் கதைகள் இறந்தவரைப் பற்றியே இருக்கும். அல்லது இது மாதிரி படுத்தோ, வியாதி வந்தோ செத்த இன்னொருவரைப் பற்றியதாக இருக்கும்; சில வேளைகளில் பொதுவான ஊர்க் கதைகளும் பேசுவார்கள்.

அடுத்து முக்கியமானவர் சண்முகநாதபிள்ளை; ஆனால் எல்லோரும் 'சண்ணாபிள்ளை' என்று தான் இவரைக் கூப்பிடுவார்கள். ஆசாரமான மனிதர். பச்சைக்கரை போட்ட வேட்டியும், பச்சைக்கரை போட்ட சால்வையும் தான் உடுப்பார்; மேல் சட்டையும் போடுவார். அப்பவெல்லாம் மேல் சட்டை போடுபவர்கள் வெகு சிலரே.

ஊர் குடிபடைகளுக்கு மாத்திரம் அல்ல ஊருக்குள்ளேயும் இவர் பெரிய மனிதர். தரகு பிடிப்பதுதான் வேலை. மாட்டுத்ரகு, பொயிலைத்தரகு இப்படி. ஊரிலே கொஞ்சம் 'முட்டுப்பட்டால்' இவரிடம்தான் வந்து கடன் கேட்க வேணும்.

இப்படி எல்லோரும் சுற்றி இருந்து பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று இவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இப்படியும், அப்படியுமாக அசைந்தார். ஏதோ தொலைந்தது போல் இங்கும் அங்கும் தேடினார். தவியாய்த் தவித்தார். 'கொஞ்சம் இருங்க' என்று சொல்லிவிட்டு விசுக்கென்று எழும்பி வெளியே போய் விட்டார். எல்லோரும் இவருக்கு அவசரமாக 'வெளிக்கு' வந்திட்டுது என்றுதான் நினைத்துக் கொண்டார்கள்.

வெளியே வந்த சண்ணாபிள்ளை ஒரு லெக்கில் குறிவைத்து நேரே போனார். அங்கே அந்த மரத்தின் கீழே பறையடித்த சின்னான் கண்ணை மூடிக்கொண்டு ஒரு சுருட்டைப் பிடித்தபடி இருந்தான்.

இவர் "சின்னான்!" என்றார்.

"ஓஞ்சாமி!" என்று அவன் பதைத்துக்கொண்டு எழுந்து விட்டான்.

"என்ன வையன்னா கானாவா?" என்றார்.

"ஓஞ்சாமி!"

"உன்னட்டை வேற சுருட்டு இருக்கா"

"ஓஞ்சாமி" என்று சொல்லி விட்டு சின்னான் மடியைப் பிரித்து ஒரு சுருட்டை எடுத்துக் கொடுக்கிறான். சண்ணாபிள்ளை மிக்க பணிவோடு ரெண்டு கைகளையும் நீட்டி அதை வாங்கிக் கொள்கிறார்.

பிறகு அந்தச் சுருட்டின் அழகை உருட்டி உருட்டி பார்க்கிறார். மூக்கருகே கொண்டு போய் மணந்து அனுபவிக்கிறார். காதுக்கு கிட்டக் கொண்டே வைத்து விரல்களால் நெருடி அது முனகும் ஒலியைக் கேட்கிறார். நாக்கினால் தொட்டு ருசிபார்க்கிறார்.

அவர் கண்களில் நீர் பனிக்கிறது. அப்படியே அதைத் தடவுவதும், மணப்பதுமாக நீண்ட நேரம் வைத்து, மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்.

"சாமி, பத்த வைக்கட்டா?" என்று சின்னான் கேட்டான். இவருக்கு கேட்கவில்லை. இவர் இந்த லோகத்திலேயே இருந்தால் தானே?

சின்னான் நெருப்புக் குச்சியைக் கிழித்துப் பத்த வைக்க இவர் 'ப்ப, ப்ப' என்று இழுக்கிறார். அது நூந்து விடுகிறது. நாட்டுச் சுருட்டு அல்லவா? பக்கென்று கற்பூரம் போல எரியுமா? அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப் படுத்தி வழிக்குக் கொண்டு வரவேண்டும். வையன்னா கானாவா, சும்மாவா?

மூன்றாவது நெருப்புக் குச்சியிலேயே பற்றி விட்டது. அந்த முதல் இழுப்பு அவரை அப்படியே கந்தர்வலோகத்துக்கு இழுத்துச் சென்றது.

மாவீரன் நெப்போலியன் தன் காதலி 'ஜோசபினுக்கு' முதல் முத்தத்தை கொடுத்துவிட்டு தன் அதரங்களை மூடிக்கொண்டு ஓடினானாம். அவனுக்கு அதற்குமேல் தாங்க முடியவில்லை. அப்படியே 'செத்துவிட வேண்டும், செத்துவிட வேண்டும்' என்று பட்டதாம். உச்சியை ஒருவன் எட்டிவிட்டால் அதற்குப்பிறகு உசிர்தான் என்னத்திற்கு?

சண்ணாபிள்ளையின் கண்கள் கிறங்கிப் போய் மேலே போனது. ஐம்புலன்களையும் ஒடுக்கி அந்த இன்பத்திலேயே மனது ஒன்றி விட்டது. இந்த ஒரு சின்னச் சுருட்டிலே இவ்வளவு இன்பத்தை எப்படி கடவுள் கொண்டுவந்து வைத்தார்? அட அடா!

சண்ணாபிள்ளையின் விசாரம் எல்லாம், அம்சுமன்யாகக் குதிரையைத் தேடியது போல உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவர் தேடியும் அவருக்க வையன்னா கானா கிடைக்கவில்லையே? சின்னானுக்கு எப்படிக் கிடைத்தது? காரைநகரிலிருந்து கண்டி வரைக்கும் அலைகழிந்தாரே!

* * *

வைத்திலிங்கம் கந்தப்புவின் கொட்டிலிலிருந்து தான் அந்த ஸ்பெஷல் சுருட்டு வந்து கொண்டிருந்தது. இருபது வருடங்களாக அதற்கு அப்படி ஒரு மவுசு. அதைக் குடித்தவர்கள் மற்ற சுருட்டுக்களைத் தொட மாட்டார்கள். சுருட்டுகளுக்கெல்லாம் மன்னன் போல இருந்தது அந்த சுருட்டு.

இதற்கென்று பிரத்தியேகமாக வருவிக்கப்பட்ட தம்பங்கடவைப் பொயிலையும், அதை கந்தப்பு ரகசியமாக 'உலர்த்தும்' முறையும், பொயிலைத்தூள் கலவையும் தான் அவருடைய வெற்றியின் சூட்சுமம்; இந்த சூட்சுமத்தை கடைசி வரைக்கம் வேறு ஒருவராலும் அறியமுடியவில்லை.

ஆனால், அடிக்கடி ஏற்பட்ட கூலிக்குழப்பம் இவருக்கு எமனாக வந்தது. அதுவும் தவிர, இவருடைய சுருட்டு ஜனுரஞ்சகமானதல்ல. இது ஒரு உயர்ந்த ரஸ’கத் தன்மை உள்ளவர்களையே தன்னிடம் ஈர்த்து வைத்துக் கொண்டது. இவருடைய பாகஸ்தர் 'மீரிகம'வில் இருந்து யாவாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். நிலுவை கணிசமாக இருக்கும் போது கந்தப்புவின் காலை வாரிவிட்டு அவரும் மறைந்து கொண்டார். வேறு என்ன? சுருட்டுத் தொழிற்சாலையை இழுத்து மூடி வேண்டியதாகி விட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன்புதான் இது நடந்தது. கந்தப்பு நன்றாகக் 'கோடா' போட்டு பாடம் செய்த ஒரு நூறு சுருட்டுக் கட்டுகளை தொழிற்சாலையை மூடும்போது சின்னானுக்கு இலவசமாகக் கொடுத்திருந்தார்.

சின்னான் தொடக்கத்திலிருந்தே அங்கே வந்து கூலி வேலை செய்தவன். இந்த ஐந்து வருடங்களாக சின்னான் அந்தச் சுருட்டுக்களை மிக்க கவனமாகப் பேணி அவசியமான நேரங்களில் மாத்திரம்தான் குடித்து வந்தான். ஏழையென்றாலும் அவனும் ஒரு பரம ரசிகன்தான்.

* * *

வெளியே போன சண்ணாபிள்ளையின் சிலமன் இல்லை என்று தேடிக் கொண்டு நமசிவாயம் பிள்ளையும் மற்றவர்களும் வந்தார்கள். அந்த மரத்தடிக்கு கீழ் வந்தவுடன் ஆணி அடித்தது போல அவ்வளவு பேரும் நின்று விட்டார்கள்.

மரத்தின் கீழ் ஒரு பக்கம் இருந்து கண்ணை மூடி சுருட்டை அனுபவித்து இழுத்தபடி இருக்கிறார் சண்ணாபிள்ளை. அவருக்குப் பக்கத்திலேயே, அவருடைய கால் மேல் கால் போடாத குறையாக, சின்னான் அதே மாதிரி ஒரு சுருட்டை புகைத்தபடி கண் மூடி லயித்திருக்கிறான்.

ஒரே ரசனை ஒரு சமத்துவத்தையும் கொடுத்து விடுகிறது போலும்.

* * *

எனக்கென்னவோ, சண்ணாபிள்ளையின் ரசனைக்கும் ரஸ’கமணியின் ரசனைக்கும் ஒரு வித வித்தியாசமும் தெரியவில்லை.

..............

** இதன் தொடர்ச்சி chakram4.mtf ல் வருகிறது** இறங்கினோம். நான், மனைவி
** chakram3.mtf தொடர்ச்சி **

குதம்பேயின் தந்தம்


நாங்கள் நாலு பேரும் வந்து இறங்கினோம். நான், மனைவி, என் ஆறுவயது மகன், என் இரண்டு வயது மகள். மேற்கு ஆபிரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு சேதமின்றி வந்து சேர்ந்து விட்டோம். அங்கே நூற்றுக்கணக்கான குடியிருப்புக்கள்; எல்லாம் கம்பனி வீடுகள் தான்.

காடுகள் வெட்டும் பகுதிக்கு நான் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தேன்; ஒரு வருட ஒப்பந்தம். என் மகன் அடிக்கடி வந்து என்னைக் கேட்பான் "அப்பா, உங்களுக்கு என்ன வேலை?" என்று. நான் 'வெட்டி விழுத்திற வேலை' என்று சொல்வேன். அவனும் விளங்கியது போல சிரித்துக் கொண்டே ஓடி விடுவான்.

என் மனைவி, எவ்வளவு சொல்லியும் கேளாமல், பிடிவாதமாக தொடர்ந்து வந்து விட்டாள்; ராமனுடன் போன சீதை மாதிரி.

இது தான் எனக்கு ஆபிரிக்காவில் முதல் அனுபவம். அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது; புத்தகங்களில் படித்தது தான்.

மாமியார் மாத்திரம் என் மனைவிக்கு, ஓர் அரிய அறிவுரை கூறி அனுப்பியிருந்தார். "அங்கேயெல்லாம் ஆட்களை முழுசாக விழுங்கி விடுவார்; நீ கவனமாயிரு. பிள்ளைகளை மாத்திரம் தனிய விட்டு விடாதே?" என்று என் மனைவியும் அந்த புத்திமதியை சிரமேற்கொண்டு மகளை இடுப்பில் காவிய படியும், மகனைக் கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டும் வந்து சேர்ந்து விட்டாள்.

என்னுடைய மேலதிகாரியின் பேர் 'லமபோ லெவாலி' பெயரைப் போலவே அவரும் ஆடம்பரமாகவே இருந்தார். சிறுவயது முதல் இங்கிலாந்திலேயே படித்தவர். ஆறடிக்கும் மேலான உயரம்; ஆஜானுபாகுவான தோற்றம். இங்கிலீஸ் கதைத்தால் ஆங்கிலேயர் தோற்றார். பழக்க வழக்கங்களம் அப்படித் தான். அவர் நடக்கும் விதமும், இருக்கும் கம்பீரமும், பேசும் தோரணையும் அப்படி ஒரு பதவிசாக இருக்கும்.

என்னை எழும்பி நின்று வரவேற்று, வசதிகள் சரியாக இருக்கின்றனவா என்று விசாரித்து விட்டு, வேலை விஷயமாக சுருக்கமாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். அன்றிரவு அவர் எங்களுக்காக ஏற்பாடு செய்த விருந்திற்கு கட்டாயம் வரும்படி நினைவூட்டினார்.

* * *

நான் வெளியே வரும் போது "ஆஹா! இப்படியான மேலதிகாரியுடன் அல்லவா வேலை செய்ய வேண்டும்!" என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று பின்னேரம் மனைவி துள்ளிக் குதித்துக் கொண்டு வெளிக்கிட்டாள். அவளுக்கு விருந்துகள், கேளிக்கைகள் என்றால் அப்படி ஒரு குதூகலம்.

லெவாலியின் வீடு இங்கிலாந்தில் பார்க்கும் ஒரு வீடு போலவே இருந்தது. காட்டுக்குள்ளே இப்படி வசதிகளுடன் வீடு கட்ட முடியுமா? வாசலிலே ஆள் உயரமான இரண்டு யானைத் தந்தங்கள் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றன. வெண்மையாகவும், வழவழவென்றும் பார்க்க அழகாக இருந்தது.

குடிவகைகள் எல்லாம் அடுக்கியபடி ஒரு 'பார்'. அதிலே ஒருத்தன் நின்று வேண்டியவற்றை ஊத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான். முப்பது விருந்தினர்கள் மட்டில் வந்திருந்தார்கள்; முக்கியமான அரசாங்க அதிகாரிகள், குடிகள் தலைவர் (Paramount Chief) கந்தோரில் வேலை செய்பவர்கள், இப்படி.

வாசலிலே நின்ற லெவாலி, "வாருங்கள், ரி.சீ.வாருங்கள்" என்றார். என் மனைவியிடமும் கை கொடுத்து வரவேற்றார்.

பேயாட்டம் (devil dancing) என்று ஓரு ஆட்டம். முடிவே இல்லாமல் இது நடந்து கொண்டிருந்தது. விருந்தினர்கள் எல்லாம் பங்கெடுத்துக் கொண்டார்கள். பார்க்க பயங்கரமாக, ஆனால் உற்சாகமாக இருக்கும்.

லெவாலியின் இரண்டாவது மனைவி, கட்டிளம் பெண், என் மனைவியிடம் வந்து பேசிக் கொண்டிருந்தாள். (இந்த இரண்டாவது மனைவி விஷயத்தில் மாத்திரம் லெவாலி ஆங்கிலேயரைப் பின்பற்றவில்லை; ஆபிரிக்கப் பழக்கத்தையே கைக் கொண்டார்).

அவள் என் மனைவியின் நெற்றியிலே இருந்த பச்சை நிறப் பொட்டைப் பார்த்துவிட்டு 'இது எந்த இனத்தைக் குறிக்கிறது' என்று கேட்டாள். என் மனைவிக்கு இது சட்டென்று புரியவில்லை. பின்னால் போகப் போகத்தான் நாங்கள் இதைப் புரிந்து கொண்டோம்.

அங்கே குழந்தைகள் பிறந்தவுடனேயே அந்த அந்த இனம் (Tribe) தங்கள் சின்னத்தை குழந்தையின் முகத்திலேயும், மார்பிலேயும் பொறித்து விடுவார்கள்.

ஒரு கூரிய கண்ணாடித்துண்டினால் இப்படிக் கீறிக்கொள்வார்கள். இந்த வடு இறக்கும் வரை அழியாது. இதன்படி ஒரு இனத்தவர் தங்கள் இனத்தாரை உடனே அடையாளம் கண்டு கொள்வார்கள்.

என் மனைவி "இது இனத்தைக் குறிப்பதல்ல; அழகுக்காகத் தான் வைக்கிறோம்" என்று சொல்லியும் அவள் நம்பியதாகத் தெரியவில்லை.

இன்னும் ஒரு நங்கை, அவளுக்கு வயது பதினாறு இருக்கும், வந்து மனைவியுடன் ஒட்டிக் கொண்டாள். அவள் ஒரு 'லெபனிஸ்' கன்னி. உயர்ந்த குதிகால் ஆணி; தொடை தெரியும் ஸ்கர்ட், நீண்ட கழுத்து வைத்த இறுக்கமான மேல் சட்டையுடன் வெள்ளை வெளேர் என்று இருந்தாள். எல்லோருடைய கண்களும் அவள் மேல் தாவிய படியே இருந்தன.

அவள் என் மனைவியின் சேலையைத் தொட்டு தொட்டுப் பார்த்தாள்; பிறகு தடவிப் பார்த்தாள். அவளுக்கு அதில் அப்படி ஒரு மோகம் தனக்க வெக காலமாகவே சேலை உடுக்க ஆசையென்று சொன்னாள். அதற்கு மனைவி, "அதற்கென்ன நான் கட்டி விடுகிறேனே! இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே?" என்று சொன்னாள்.

ஆனால் அந்த இளம் பெண் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கூறினாள்; "இது எங்கள் வீட்டில் நடக்காத காரியம். எனக்கு எவ்வளவோ விருப்பம் தான்; ஆனால் 'அசிங்கம்' என்று வீட்டிலே தடை போட்டு விடுவார்கள்.

என் மனைவி ஆடிவிட்டாள். "என்ன, அசிங்கமா? சேலையா?" என்று கேட்டாள். அதற்கு அந்த நங்கை கண்களை அகலவிரித்து, முக்கால் வாசி மார்புகளைக் காட்டிய படியே, சொல்கிறாள்;

"ஆமாம்; இடையைக் காட்டி சேலை உடுப்பதை எங்கள் வீட்டில் செக்ஸ’யாகக் கருதுகிறார்கள். இது நடக்காத காரியம்."

என் மனைவி திகைத்து விட்டாள். இந்தக் கதையை பின்னர் அவள் என்னிடம் விபரித்த போது நானும் தான் அதிர்ந்து விட்டேன்.

* * *

நான் லெவாலியையே அவதானித்துக் கொண்டிருந்தேன். அவர் ஒவ்வொருவராகப் போய் சந்தித்து, கை கொடுத்து, உரையாடிக் கொண்டே வருகிறார். அவர் குடிப்பது என்றால் பிராந்தி தான் குடிப்பார். அதுவும் சாதாரண பிராந்தி அல்ல; 'ரெமி மார்டின்'. அந்தக் காலத்திலேயே அதன் விலை 80 டொலர்.

அவர் குடிப்பதை அன்று பார்த்தேன்; பிறகும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு பொருளின் மதிப்பு அறிந்து ஒருவர் அனுபவிக்கும் போது அது ஒரு கலையாகவே உயர்ந்து விடுகிறது.

எங்கள் ஊரில் ஆட்கள் பத்து சதம் கொடுத்து விட்டு 'பிளாவிலே' பனங்களை 'மடக் மடக்' கென்று குடிப்பது போன்ற விஷயம் அல்ல அது. லெவாலி ஆற அமரத்தான் அந்த சுவையை அனுபவிப்பார்.

முதலில் பிராந்தி கிளாஸை எடுப்பார். அது மேற்பக்கம் சுருங்கி, கீழ்பக்கம் அகன்று ஒரு நீண்ட காம்பின் மேல் நிற்கும். அதை இடது கையில் நடு விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்குமிடையிலே வைப்பார். பிறகு போத்தலை 'டங்' என்ற சத்தத்துடன் திறந்து பிராந்தியை கால்பாகம் ஊற்றுவார். அது விழும் சத்தம் 'கிளிங், கிளிங், கிளிங்' என்று கேட்க இதமாக இருக்கும்.

திராட்சை ரசத்தில் சூரிய ஒளியைக் கலந்தது போல ஒரு மின்னும் அழகு. அதையே கண்களால் சிறிது நேரம் பருகிக் கொண்டு இருக்கலாம். இப்போது உள்ளங்கையால் கிளாஸ’ன் அடிப்பாகத்தை தழுவ கையின் சூடு பிராந்தியை கொஞ்சம் வெது வெதுப்படைய வைக்கும். அப்போது பிராந்தி கிளாஸை மூக்கின் கீழ் கொண்டு வந்து அங்கும், இங்கும் அசைத்து அதை முகர்ந்து அதிலேயே கொஞ்ச நேரம் கிறங்கி நின்று பிறக மெள்ளச் சரித்து சிறிது பிராந்தியை வாயின் உள்ளிழுத்து, சுவைத்துப் பருக வேண்டும்.

எது காரணம் கொண்டும் பிராந்தியை 'மடக் மடக்' என்று குடிக்கக் கூடாது. அது பிராந்தி தேவதைக்கு செய்யும் மகா அவமரியாதை. இதனிலும் மிக முக்கிய விதி; பிராந்திக்க ஐஸ் காட்டவே கூடாது. அது பிராந்தியின் பவித்திரத்தை கெடுத்து விடுமாம்.

"ஐம்புலன்களையும் ஒருங்கே ஆக்கிரமிக்கிறது இந்த பிராந்தி ஒன்றுதான்" என்று லெவாலி அடிக்கடி கூறுவார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவருடைய உற்சாகமும் வாழ்க்கையை அனுபவிக்கின்ற ருசியும் எங்களிடமும் ஓடி வந்து விடும்.

இப்படியாகத்தான் எங்களுடைய ஆபிரிக்க வாழ்க்கையின் முதல் நாள் குதூகலத்துடனும், ஆச்சரியம் தரும் வகையிலும் தொடங்கியது.

* * *

நாங்கள் வெளியே வரும் போது என் மனைவி "நீங்கள் என்ன? அவர் உங்களை 'ரி.சீ, ரி.சீ' என்று கூப்பிடுகிறாரே? இது என்ன புதுப்பேரா? 'ரவாலர்ஸ் செக்' என்று சொல்வது போலிருக்கிறதே" என்றாள்.

"என்னுடைய முழுப் பெயரையும் - 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்வதற்கிடையில் அவருடைய பல் எல்லாம் உடைந்து விடுகிறதாம். நான் தான் மனமிரங்கி 'ரி.சீ' என்று கூப்பிடலாம் என்று சொல்லி விட்டேன்" என்றேன்.

"அவருடைய பேரைப் பாடமாக்க எங்களுக்கு மூன்று நாள் எடுத்ததே? 'லம்போ லெவாலி' என்று சொல்ல எவ்வளவு கஷ்டமாயிருக்கு; மூச்சு எடுக்குது. 'உங்கள் பேரை சக்கிரீவன் என்று மாத்துவோமா?' என்று கேட்டோமே? இல்லையே? ஒருத்தரில் உண்மையான மதிப்பு இருக்குமெண்டால் நாங்கள் கொஞ்ச நேரம் செலவழித்து அவருடைய பேரைச் சரியாக உச்சரிக்கப் பழக வேணும். இது அவருக்குக் காட்டும் மரியாதை" என்றாள் என் மனைவி.

நான் "நீ சொல்வது உண்மை; முற்றிலும் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அவர் எனக்கு சம்பளம் கொடுக்கிறாரே! நீ கொடுக்கிறாயா? இல்லை. அவர் நாளைக்கு களைத்துப் போய் இனிமேல் 'ரீ' என்று கூப்பிடுவதென்றாலும் 'ஆஹா'! என்பேன்; இல்லை 'கோப்பி' என்றாலும் 'சரி' என்பேன்", என்றேன்.

என் மனைவி "உங்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டிய இடத்தில் கடவுள் ஈக்கு குச்சியை வைத்து விட்டார்" என்றாள்.

நான் "அது உனக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு! தயவு செய்து மற்றவைக்கு சொல்லி விடாதே!" என்றேன்.

* * *

இரண்டு நாள் போனது. மூன்றாம் நாள்தான் இந்த பேச்சு வந்தது.

"அந்த யானைத் தந்தம் என்ன மாதிரி இருக்கு! எவ்வளவு உசரம்! என்ன வடிவு! எங்களுக்கும் அது மாதிரி இஞ்ச வாங்க ஏலாதோ? என்றாள் என் மனைவி.

"எங்கடை பக்கத்து நாட்டுக்கு பேர் 'ஐவரிகோஸ்ட்' அதாவது 'தந்தங்கள் ஏற்றுமதி செய்யும் நாடு'. ஒரு காலத்திலை அங்கையிருந்து ஆயிரக் கணக்கான தந்தங்களை உலகம் எங்கும் ஏற்றுமதி செய்தார்களாம். இந்த ஊர்தான் யானைகளுக்கு பேர் போனதாச்சே!" என்றேன்.

"லெவாலி வீட்டிலை நாங்கள் பார்த்த தந்தம் என்ன உயரமிருக்கும்? இதைக் தூக்குறதெண்டால் அந்த யானை இன்னும் எவ்வளவு பெரிசாயிருக்க வேணும்?"

"இந்த யானைகள் பன்னிரெண்டு அடி உயரம் வரைக்கும் வளரும்; எடை ஒரு ஏழு டன் ஆவது இருக்கும். ஒன்பது அடி நீளத் தந்தங்கள் கூட இருக்கு, ஒவ்வொரு தந்தமும் 100 கிலோ எடை தேறும். ஆனால் இஞ்ச ஆபிரிக்காவிலை யானைகள் இந்திய யானைகளைப் போல இல்லை. வேற மாதிரி" என்றேன்.

"என்ன மாதிரி?"

"இந்தியாவில் ஆண் யானைக்கு மாத்திரம் தான் தந்தம் இருக்கும். இஞ்சயோ ஆண், பெண் இரண்டுக்குமே தந்தம்; சம உரிமை" என்றேன்.

"வேற"

"மற்றம்படிக்கு ஆபிரிக்க யானை சரியான பெரிசு; பெரிய காதுகள், பெரிய தந்தங்கள் இப்படியாய் இருக்கும்."

"இந்த தந்தங்கள் யானை இளமையாயும், பலமாயும் இருக்கும் வரை யானைக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கும். ஆனால் வயது போய் உடல் தள்ளாடத் தொடங்கினாலும் தந்தம் மாத்திரம் மெலியாமல் அப்படியே இருக்கும். யானை இந்த தந்தத்தை தூக்கிக் கொண்டு அலைஞ்சு சரியாய் அல்லல்படும், பாவம்" என்றேன்.

"அப்ப நாளைக்கு ஒருக்கா விசாரிச்சுப் பாருங்கோ. இதை எங்கடை ஊருக்கு கொண்டு போனால் என்ன மதிப்பாயிருக்கும்" என்றாள்.

* * *

அடுத்த நாள் வேலையிலிருந்து வந்தவுடன் "என்ன, என்ன?" என்றாள் மனைவி; நான் முற்றிலும் மறந்து விட்டேன். "என்ன விஷயம்?" என்று திருப்பிக் கேட்டேன்.

"இல்லை, யானைத் தந்தம் பற்றி கேட்கிறேன் எண்டு சொன்னீங்கள்" என்றாள்.

"இது என்ன அறுகம்புல்லா, போய் படக்கென்று பிடுங்கிக் கொண்டு வர? மயிலிறகு பிடுங்கிறதுக்குக் கூட மயிலைத் தேடிப் போக வேணும். இது யானைத்தந்தம். யானையீட்டை போய்ப் பிடுங்க ஏலுமா, எங்கடை அவசரத்துக்கு?"

"ஒன்றில் யானை சாகும் வரை காத்திருக்க வேணும்; இல்லை ஒரு யானையைக் கொல்ல வேணும். எது வசதி?" என்று சொல்லித் தப்பிக் கொண்டேன்.

* * *

எங்கள் ஊரில் 'தொட்டாட்டு வேலை' என்று ஒன்றிருக்கு. ஆங்கிலத்தில் handy man என்று சொல்வார்கள். குதம்பே எனக்காக ஏற்படுத்தப்பட்ட தொட்டாட்டு வேலையாள். எனது பலவித சௌகரியங்களையும் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவன்.

அவனைப் போன்ற மகா முட்டாளை நான் பார்த்ததே இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுத் தான் அவனை எனக்காகத் தேடிப் பிடித்திருப்பார்கள் போலும். ஆனாலும், ஒரு சௌகரியம். உள்ள தாபங்களையெல்லாம் அவன் மேல் கொட்டலாம்.

குதம்பேயிடம் தான் இந்த யானைத் தந்தம் வாங்கும் பொறுப்பைக் கொடுத்தேன். அவன் இதுவரை இருநூறு தந்தங்கள் வாங்கிப் பழகியவன் போல மிகச் சாதாரணமாக அந்த வேலையை ஒப்புக் கொண்டான்.

'இந்தா வருது', 'இந்தா வருது' என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை விட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

இதற்கிடையில் குதம்பே கம்பனயில் ஒரு 'லோன்' கேட்டிருந்தான். நானும் அதை 'சாங்ஷன்' பண்ணிக் கொடுத்தேன். அதோடு நிற்கவில்லை. ஒரு நாள் தன் கடைக்குட்டி மகனை பள்ளியில் சேர்க்க வேணும் 'இடமில்லையாம்' என்று அழுது கொண்டு வந்தான். அந்தப் பள்ளிக்கூட, தலைமையாசிரியர் எனக்குத் தெரிந்தவர் தான்; ஒரு கடிதத்துடன் விஷயம் முடிந்த விட்டது.

ஆனால் என்னுடைய தந்தம் மாத்திரம் தரித்திரம் போல இழுத்துக்கொண்டே போனது. வீட்டிலேயும் இந்த விசர் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. என் மனைவி இரவும் பகலும் இது பற்றியே சிந்திக்கத் தொடங்கினாள். கனவு கூடக் கண்டிருப்பாள் போலும். என்னை ஞாபகப்படுத்தாக நாளே இல்லை. இந்த ஞாபகமூட்டல் பிறகு கரைச்சலாக மாறி அதற்கும் பின் எரிச்சலூட்டத் தொடங்கியது. இதிலிருந்து தப்ப முடியாது போல எனக்குப்பட்டது.

* * *

குதம்பே வழக்கம் போல வாராந்திர அறிக்கையை கொண்டு வந்து என் முன் வைத்தான். நான் முதல் இரண்டு வரியை மட்டுமே படித்தேன். 'இதென்ன அறிக்கை இது? குப்பை! இதை ஆர் வாசிக்க போறான்; நீரே கொண்டு போம்' என்று முகத்திலடிச்சது போலச் சொல்லிவிட்டு திரும்பவும் என் வேலையில் மூழ்கினேன்.

குதம்பே முனகிக் கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு அறிக்கையை எடுத்துக்கொண்டு போய் விட்டான்.

குதம்பே ஒரு பஞ்சுப் பொதி. திட்டு வாங்குவதற்கென்றே பிறந்தவன். எவ்வளவு தான் திட்டினாலும் அவ்வளவையும் உள்ளுக்கு வாங்கி வைத்துக் கொள்வான். கொஞ்சமாவது முகம் சுருங்க வேண்டுமே? கிடையாது. திட்டுபவர் தான் களைத்துப் போய் ஓய்வெடுக்க வேணும்.

கந்தோர் எனக்கு நரகமாகி விட்டது. வீட்டிலேயோ இன்னும் மோசம். போதாக் குறைக்கு, இப்ப இரண்டு நாளாக என் மனைவி கதைப்பது கூட இல்லை.

* * *

ஒருநாள் சனிக்கிழமை மத்தியானம் போல குதம்பே வீடு தேடி வந்தான். அவன் வீட்டுக்கு வருவது இது தான் முதல் தடவை. வெய்யிலில் வேர்க்க விறு விறுக்க நடந்து வந்திருந்தான். எனக்கு பார்க்க என்னவோ போலிருந்தது. வெளி விறாந்தையையில் உட்காரச் சொல்லி "என்ன விஷயம்" என்றேன்.

"நைஜ“ரியாவிலே இருந்து ஒருத்தன் நாலு ஜோடி தந்தம் கொண்டு வந்திருக்கிறான். உங்களுக்கு சௌகரியமென்றால் நாளைக்கே அவன் கந்தோருக்கு வருவான். நீங்களே விலை பேசி வாங்கலாம்" என்றான்.

எனக்கு மட்டில்லாத சந்தோஷம். தந்த வேட்டைக்கு ஒரு முடிவு கிடைத்து விட்டது போலத்தான் பட்டது. குதம்பேக்கு குடிக்க 'என்ன வேண்டும்' என்று கேட்டேன். அந்த வெயிலில் வேறு என்ன கேட்பான். பீர் தான் கேட்டான்.

என்னுடைய ஆறு வயது மகன் ஒரு போத்தல் பீரையும் ஒரு கிளாசையும் கொண்டு வந்து வைத்துவிட்டு ஓடி விட்டான். கும்பே மடமடவென்று அதை இளநீர் குடிப்பது போல குடித்து முடித்தான். மேற்கு ஆபிரிக்காவில் பீரும் ஒன்று தான் மோரும் ஒன்று தான்.

என் மகன் வெளியிலே விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து விட்டு குதம்பே சொன்னான்: "இந்த ஊர்களிலே 'துப்பும் பாம்பு' (Spittling Cobra) என்று ஒன்று இருக்கிறது. சிறு பிராணிகளை பார்த்து எட்டத்தில் இருந்தே ஒரு வித நஞ்சைத் துப்பி விடும். அதன் கண்களைப் பார்த்துத் தான் துப்பும். அந்தப் பிராணி ஓட முடியாது தவிக்கும் போது இந்தப் பாம்பு போய் பிடித்து விழுங்கி விடும்."

இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி பாய்ந்து போய் வெளியிலே விளையாடிக் கொண்டிருந்த எங்கள் மகனை 'பிராந்து' தூக்குவது போல் தூக்கிக் கொண்டு உள்ளே வந்து விட்டாள்.

இது என் மனைவி என்னுடன் 'டூ' விட்ட நாள். பேசா மடந்தையாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக வேலை இருப்பது போல் நடந்தபடியே இருந்தாள். அவளுக்கு 'குதம்பே என்ன சொல்லுறான்? தந்தம் கிடைக்குமா? என்று அறிய ஆவல்.

கடைசியில் அவளுடைய ஆசை கட்டுக் கடங்காமல் போகவே சமையல் அறையில் இருந்து மெள்ள வெளியே வந்து ஓரமாக நின்று கொண்டு 'இஞ்சருங்கோ' என்று கூப்பிட்டாள்.

நான் வெளியே வந்து 'என்ன?' என்று கேட்டேன். "முருங்கைக்காய்க்கு என்ன புளி போடிறது? பழப்புளியா? தேசிக்காய் புளியா?" என்றாள்.

எனக்கு மனத்தை வருத்தியது. படிப்பை பாதியிலேயே எனக்காக நிறுத்தியவள். பெற்றோரையும், சுற்றத்தாரையும் துறந்து என்னையே கதியென்று வந்தவள். பெரிய வீடும் நாலு சமையல்காரருமாகச் செல்லமாக வளர்ந்தவள். முதன் முதலாக சமையல் அறையைப் பார்த்ததே இங்கே தான்; நான் இப்படிக் கருணையில்லாமல் இருக்கலாமா?

அவள் என்ன, சீதையைப் போல 'மாயமானைப் பிடித்துத் தா?' என்று கேட்டாளா? இல்லை, யானையைத் தான் கேட்டாளா? யானைத் தந்தம் தானே வேண்டுமென்றாள். கேவலம், இதைக்கூட என்னால் செய்ய முடியாதா?

அன்று முருங்கைக்காயுடன் நல்ல சாப்பாடு. ஆபிரிக்காவில் முருங்கைக்காய் என்ன சும்மா கிடைத்து விடுமா? நாலு மைல் தூரம் காட்டிலே போய் அல்லது தேடி ஆய வேண்டும். இதை 'பேய்க்காய்' (Devil stick) என்று தான் அங்கே சொல்லுவார்கள்; தொடவே மாட்டார்கள். இப்படி அருமையாகக் கிடைக்கும் காய்க்கு ருசியே தனி. அது மாத்திரமல்ல, என் மனமும் அன்று வெகு சந்தோஷமாக இருந்தது.

* * *

அடுத்த நாள் கந்தோரில் தந்தம் வந்து விடும் என்று எதிர்பார்த்தேன். வரவே இல்லை. குதம்பேயைக் கூப்பிட்டு விசாரித்தேன். அவன் கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

நான் வீடு திரும்பிய போது என் மனைவி மந்தகாசமாக ஒரு புன்னகையோடு என்னை வரவேற்றாள். இந்த புன்னகையை விசேஷமான ஒரு சில நாட்களுக்கு மாத்திரமே அவள் ஒதுக்கி வைத்திருந்தாள்.

எனக்கு அந்த முகத்தைப் பார்க்கவே குற்ற உணர்வாக இருந்தது. நான் நடந்ததைச் சொன்னேன். அவள் முகம் வாடி விட்டது. கண நேரத்தில், தாமரைப் பூப் போல விகஸ’த்து இருந்த முகம் இப்படி வாழைப் பூ போல கூம்பி விட்டதே! இது எப்படி நடந்தது?

மறுநாள் குதம்பே நடந்ததைச் சொன்னான். அந்த நைஜ“ரிய வியாபாரி நல்ல விலை கிடைத்ததால் அந்த தந்தங்களை ஒரு லெபனிஸ் கடைக்காரருக்கு விற்று விட்டானாம். மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக் கணக்கான லெபனிஸ்காரர்கள் மடியிலே பணத்தைக் கட்டிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் அவர்களோடு போட்டி போட முடியுமா?

இன்னும் இரண்டு மாதங்கள் இப்படியே ஓடி விட்டன. என்னுடைய ஒரு வருட ஒப்பந்தத்தில் நாலே நாலு மாதங்கள் தான் மீதி இருந்தன. தந்தம் கிடைப்பது கனவாகி விடும் போலிருந்தது.

ஒரு நாள் மாலை. நான் கந்தோரில் நேரம் போவது தெரியாமல் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது குதம்பே அவசரமாக வந்தான். 'என்ன விஷயம்?' என்பது போலப் பார்த்தேன். அங்கே காட்டில் மரம் வெட்டும் குழுவோடு இவன் ரேடியோவில் தொடர்பு கொண்டானாம். வேலை இரண்டு நாள் அங்கே தடைப்பட்டு விட்டதாம். ஒரு யானைக் கூட்டம் வேலை செய்ய விடாமல் அந்த இடத்தில் உலாவுகிறதாம். பிறகு மெல்லக் கீழே குனிந்து "அதிலே ஒரு யானைக்கு தந்தம் இருக்கு" என்றான்.

"அதுக்கு நான் என்னய்யா செய்ய வேணும்" என்றேன்.

"இந்த மாதத்து மரங்கள் வருமதி வெகு சொற்பம். எங்களுடைய இலக்கில் (target) நாங்கள் அரைவாசி கூடத் தாண்டவில்லை. இது இப்படியே போனால் இந்த மாதம் முற்றிலும் பெரிய நஷ்டம் காட்ட வேண்டிவரும். யானைகளின் தொல்லை பொறுக்க முடியாதென்றால் அவற்றைச் சுட அதிகாரமிருக்கிறது. சென்ற வருடம் இப்படி இரண்டு முறை செய்திருக்கிறோம். நீங்கள் தான் உத்தரவு போட வேண்டும்" என்றான்.

"பாப்பம், பாப்பம்" என்று இருந்து விட்டேன்.

* * *

அடுத்த நாள் காலை முடிவு கேட்டு என்னை ரேடியோவில் கூப்பிட்டார்கள்.

"பிரவோ சார்லி, பிரவோ சார்லி"

"யானைகள் தொந்தரவு தாங்க முடியவில்லை. வேலைக்கு இடைஞ்சல்; என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.

"ஒரேயொரு யானையை வெடி வையுங்கள்; கூட்டத்தைக் கலைத்து விட்டு வேலையை கெதிப் படுத்தப் பாருங்கள்" என்று உத்தரவு கொடுத்தேன்.

ரேடியோ புத்தகத்தில் கையெழுத்தையும் இட்டு, தேதியையும் போட்டேன்.

அன்றிரவு என் மகன் கேட்டான்:

"அப்பா, யானை எவ்வளவு காலம் சீவிக்கும்?"

"நூறு, இருநூறு என்று எங்கள் ஊர்களில் சொல்வதெல்லாம் பொய், யானை 60, 70 வருடம் வரை தான் உயிர் வாழும்" என்றேன்.

"இந்த யானைத் தந்தம் எப்பிடிக் கிடைக்கும்?" என்றான் மனைவி.

"நிட்சயமாக 'பாக்டரியில்' கிடைக்காது. யானையிடமிருந்து தான் கிடைக்கம். ஒன்றில் யானை சாக வேணும்; அல்லது அதைக் கொல்ல வேணும்"

"வேறு வழியே இல்லையா?"

"இல்லையே. அதிலும் 99 வீதம் தந்தங்கள் யானையைக் கொலை செய்தே கிடைக்கிறது."

"அப்பா, எங்கடை வாத்தியார் சொல்லுறார் யானைகளின் எண்ணிக்கை சரியாய்க் குறைஞ்சு போச்சுதாமே? உண்மையா?"

"டோடா, டோடா' என்று ஒரு சாதிப் பறவை. உருண்டையான உடம்பும் சின்னக் கால்களுமாய் அந்தப் பறவை லட்சக்கணக்காய் ஒரு காலத்தில் இருந்தது. பறக்கக்கூடத் தெரியாது அந்த அப்பாவிப் பறவைக்கு. அதை மனுசன் விளையாட்டுக்காகச் சுட்டு சுட்டே கொண்று விட்டான். அந்த பறவை இனமே இப்ப உலகத்திலை இருந்து மறைஞ்சுப் போச்சுது. ஒரு பறவை கூட இல்லை. படங்களில் பார்த்தால் தான் உண்டு. இந்த யானைக்கும் அந்தக் கதி வந்து விடுமோ என்று சிலர் பயப்படுகினம்" என்றேன்.

"அது உண்மையாகி விடுமா? என்றாள் மனைவி.

"யானைகள் எப்பவும் கூட்டமாகத் தான் திரியும். ஏழு, எட்டு யானைகள் கொண்ட கூட்டம். ஒண்டுக்கொண்டு நல்ல ஒற்றுமையாயும், விசுவாசமாயும் நடந்து கொள்ளும். இந்தக் கூட்டத்துக்கு தலைவி பெண் யானை தான்."

"நான் சொல்லுறது உண்மையாய் நடந்த ஒரு கதை. ஒரு சமயம் வேட்டைக்காரன் ஒருத்தன் தந்தத்துக்காக ஒரு யானையைச் சுட்டு விட்டான். அது சுருண்டு விழுந்தது, ஆனால் முழுவதும் சாகவில்லை. கூட்டத்திலிருந்த மற்ற யானைகள் அவனை துரத்திக் கொண்டு வர அவன் ஓடித்தப்பி விட்டான்."

"ஒரு மாசம் கழிச்சு அவன் திரும்ப அதே இடத்துக்குப் போனான். யானை செத்துக் போயிருக்கும் அந்தத் தந்தத்தை எடுக்க. ஆனால் அந்த யானை விழுந்த இடத்திலே அப்பிடியே உயிரோடு கிடந்ததாம். மற்ற யானைகள் அதை விட்டுப் போகவே இல்லை. சாப்பாடும் தண்ணியும் கொண்டு வந்து கொடுத்து எப்படியோ ஒரு மாசம் வரை அதைச் சாக விடவில்லையாம்."

"மனிதனுக்கு எவ்வளவு அழிவுபுத்தி இருக்குதோ அவ்வளவுக்கு யானைகளுக்கு சினேக புத்தியும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுற உணர்வும் இருக்குது. இந்த விஷயத்தில் யானையின் சாதகம் பலமாக இருக்குமெண்டுதான் நான் நிணைக்கிறேன்."

* * *

அன்று பின்னேரம் நான் வீடு திரும்பும் போது எங்கள் கம்பனி வாசலிலிருந்து ஒரு கால் மைல் தூரத்தில் மரங்கள் கொண்டு வரும் பெரிய 'லொறி' ஒன்று நின்று கொண்டிருந்தது. அதைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆரவாரம் செய்து கொண்டும் சத்தம் போட்டு சிரித்துப் பேசிக் கொண்டும் நின்றார்கள். கார் அந்த லொறியின் சமீபத்தில் போன பின்தான் எனக்கு விஷயம் புரிந்தது.

அந்த லொறியின் மீது மல்லாக்காக மலைபோல ஒரு யானை செத்துப்போய் கிடந்தது. அதில் இருந்து பாய்ந்தரத்தம் திட்டுத்திட்டாக ஒரு இஞ்சு உயரத்துக்கு காய்ந்திருந்தது. யானையின் வாயும், துதிக்கைப் பாகமும் சிதிலமடைந்து ரத்தகளரியாக இருந்தது. யானையின் கால்கள் 'ஓ' வென்று மேலே ஆகாயத்தைப் பார்த்தபடி தூக்கி நின்றன. ஏசுநாதா கைகள் இரண்டையும் மேலே தூக்கி ஆகாயத்தை பார்த்து கதறியது போல இருந்தது எனக்கு.

காரை ஓட்டிய சாரதி சொன்னான்: "மாஸ்ட, இன்றைக்கு இரவு முழுக்க நல்ல விருந்தும் கும்மாளமுமாக இருக்கும் இந்த யானையைத் தின்று தீர்ப்பதற்கு மூன்று நாள் பிடிக்கும். இது தவிர, இன்றைக்கு எங்கள் குடிகள் தலைவர் மூன்றாவது மனைவியையும் எடுத்திருக்கிறார்; பதினெட்டு வயதுப் பெண். அவளுடைய நடனத்தைப் பார்க்க ஊர் முழுக்க அங்கே கூடிவிடும். ஆனால் மிகவும் முக்கியமானது, இப்போதெல்லாம் யானை இறைச்சி கிடைப்பது வெகு அபூர்வம்."

வீட்டிற்கு நான் வந்திறங்கியதும் சாரதி காரைப் பூட்டி விட்டு எடுத்தான் ஓட்டம். மனைவி என்னிடம் "ஏன் 'ம்பாயா' இப்பிடித் தலை தெறிக்க ஓடுறான்" என்று கேட்டாள்.

நான் வழியில் கண்ட காட்சியை விவரித்தேன். மலைக்குவியல் போல அந்த யானை பெரிய லொறியில் செத்துப் போய் கிடந்ததையும் பானை விருந்து நடக்கப் போவதையும் சொன்னேன். ஆனால் அதன் காரணகர்த்தா யாரென்பதை சொல்ல மெள்ளத் தவிர்த்து விட்டேன்.

"ஊர் முழுக்க இந்த யானை இறைச்சியை மூன்று நாள் வரை தின்னுமாம். மிக்க ருசியாய் இருக்குமாம். அவர்களுக்கு பாட்டும் கொண்டாட்டமும் தான்" என்றேன்.

"யானை இறைச்சியைச் சாப்பிடுவினமா?" என்று என் மனைவி அதிர்ந்து போய் கேட்டாள்.

"இறைச்சி எண்டு வந்த பிறகு யானை இறைச்சி என்ன, குதிரை இறைச்சி என்ன; எல்லாம் ஒண்டு தான்" என்றேன் நான்.

"அப்ப நாங்கள் மாவிலையும், பலாவிலையும் சாப்பிடுறோமா?"

"ஏன் இல்லை? ருசியாக இருந்தால் விட்டு வைப்போமா? அதையும் தான் சாப்பிடுவோம்" என்றேன் நான்.

* * *

அடுத்த நாள் கார்சாரதி லேட்டாகத் தான் வந்தான். எதிர் பார்த்தது போல குதம்பே வரவே இல்லை. இன்னும் பல பேரும் கந்தோருக்கு மட்டம். யானை விருந்து அப்படி ஆட்களை மயக்கி விட்டது.

மறு நாள், சனிக்கிழமை, நான் வழக்கம் போல வெளி விறாந்தையில் இருக்கிறேன். என் குட்டி மகள் காலடியில் இருந்து படம் போட்டுக் கொண்டிருக்கிறாள். என் மனைவி உள்ளுக்கு மும்முரமாகச் சமையல் செய்கிறாள்.

வெளியே விளையாடிக் கொண்டிருந்த என் மகன் தான முதலில் கண்டான். 'குதம்பே, குதம்பே' என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான்.

குதம்பேயின் பேர் இப்போது எங்கள் வீட்டிலே அப்படிப் பிரபலம். மனைவி கைவேலையைச் சடாரென்று போட்டு விட்டு வெளியே ஓடிவந்து விட்டாள். என் குட்டி மகள் மாத்திரம் கண்களை மலர்த்தி நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் படம் போடத் தொடங்கினாள்.

குதம்பே வழக்கம் போல வேர்க்க விறு விறுக்க ஒட்டமும் நடையுமாக வந்தான். நான் 'வாரும், வாரும்' என்று சொல்லி அவனை உள்ளே கூப்பிட்டு இருத்தினேன். என் மகன் சொல்லாமல், கொள்ளாமல் குதம்பேக்கு பிடித்தமான பீரை கொண்டு வந்து அவன் முன் வைக்கிறான். அவனும் 'மடக்மடக்' கென்று குடிக்கிறான்.

ராத்திரி நடந்த விருந்தைப் பற்றி வருணிக்கிறான், குதம்பே. விடிகாலை ஐந்து மணி வரைக்கும் கூத்தும் கும்மாளமும் தொடர்ந்ததாம்.

இதிலே விசேஷம் என்னவென்றால் குடிகள் தலைவருக்க இப்ப வயது 65 ஆகிறது. இது மூன்றாவது மனைவி; கொஞ்சம் குமரி அவள். 40 ஆடுகளும், 8 மாடுகளும் கொடுத்து அவளை வாங்கினாராம். இப்படியான மயக்கும் அழகி அவருக்கு மிகவும் மலிவாகவே கிடைத்துவிட்டதாக குதம்பே அபிப்பிராயப்பட்டான்.

என் மனைவியோ தவித்தபடி நின்றாள். 'பின்னால் யாராவது தலையில் ஏதாவது தூக்கி வைத்த படி வருகிறார்களா?' என்று கண்களால் தேடினாள். 'ஒரு வேளைலொறியில் வருமோ? என்று அந்த வழியால் போகும் லொறிகளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.

அப்போது பார்த்து குதம்பே எழுந்தான். கமக்கட்டில் வைத்திருந்த பேப்பர் சுருளை உருவினான். அதற்குள் இருந்து இரண்டு தந்தங்களை எடுத்து என் மனைவியின் கையில் மிக்க பணிவோடு வைத்தான். பிறகு என்னவெல்லாமோ சொன்னான். 'பெண் யானை' என்றது மாத்திரம் என் காதில் விழுந்தது. அவன் போய் விட்டான்.

எங்கள் ஊரில் சொல்வார்கள் 'நாடி விழுந்து விட்டது' என்று. நான் அப்படியே கொஞ்ச நேரம் நிலைத்து நின்று விட்டேன். தந்தத்தைப் பார்த்த மாத்திரத்தில் என் மனைவியின் கண்கள் பெரிதாக விரிந்தன. வாய் திறந்தது. பிறக பொத்திக் கொண்டாள். 'மேல் மூச்சு' வாங்க மெதுவாக அங்கே இருந்த கதிரையில் இருந்து விட்டாள்.

என் மகன், அவள் கையில் இருந்த தந்தங்களைப் பிடுங்கி தன் கால் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு ஓடி விட்டான், விளையாட.

உலகம் கவிழ்ந்தது தெரியாமல் என் மகள் காலடியில் இருந்து படம் போட்டுக் கொண்டிருந்தாள்.

* * *

அன்றிரவு 'டம், டம்' என்று மேளச் சப்தம் வெகு நேரம் வரை கேட்டுக் கொண்டேயிருந்தது. கூவும் குரலில் பெண்கள் பாடுவதும், ஆடுவதும் கடல் அலைபோல வந்து வந்து அடித்தது.

என் மனைவி நித்திரை கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு முறை எழும்பிப் போய் ஜன்னல் பக்கம் கொஞ்ச நேரம் நின்றாள். பிறகு திரைச்சீலையை இழுத்து விட்டு வந்து படுத்துக் கொண்டாள். திடீரென்று நடுவே எழும்பி கொஞ்சம் தண்­ர் குடித்தாள்; திரும்பித், திரும்பிப் படுத்தாள். அடிக்கடி பெருமூச்சு விட்ட படியே இருந்தாள்.

நானும் தூங்கவில்லை. ஆனால் கனவுகள் மட்டும் வந்தன. அந்த கனவிலே யானை காலை உயர்த்திக் கொண்டு மல்லாக்காகக் கிடக்கிறது; பிறகு ஏசுநாதர் வருகிறார்; ரத்தம் ஆறாக ஓடுகிறது. எனக்கு தேகம் குளிருகிறது.

திடுக்கிட்டு விழித்து விட்டேன். பலபலவென்று விடிந்திருந்தது. பிள்ளைகள் இரண்டு பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

காலைச் சாப்பாட்டை கடமைக்காகச் சாப்பிடுகிறேன். மனைவி பரிமாறுகிறாள். என் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு கூசியது போலும். கடைசியில் பொறுக்க முடியாமல் கேட்டாள்; "அந்தப் பெரிய யானையை, அதுவும் பெண்யானையை, இந்த தந்தத்துக்காகவா கொன்றார்கள்? பாவிகள்?"

அவள் கண்களிலே முத்தாக ஒரு சொட்டுக் கண்­ர்.

* * *

இரண்டு நாளாக அந்தத் தந்தம் மேசை மேலேயே கிடந்தது. பிறகு அதைக் காணவில்லை. நானும் கேட்கவில்லை.

என்னுடைய பன்னிரண்டு மாத ஒப்பந்தம் ஒரு நாள் முடிந்தது. கம்பனி லொறி வந்து எங்கள் சாமான்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போனது.

விமான நிலையத்துக்கு நாங்கள் புறப்பட்டோம். மனைவியும் நானும் லெவாலியிடம் சொல்லிக் கொள்ள அவர் வீட்டுக்குப் போனோம்.

லெவாலி சாய்ந்த கதிரையில் நீண்ட சுருட்டைப் புதைத்தவாறு உட்கார்ந்து இருக்கிறார். பின்னணியில் மெல்லிய இசை. நானும், மனைவியும் போய் அவரிடம் விடை பெறுகிறோம். பெருந்தன்மையாக எங்களுக்கு நன்றி கூறி அடிக்கடி தொடர்பு கொள்ளச் சொல்கிறார். நாங்களும் எங்கள் அன்பைத் தெரிவிக்கிறோம். லெவாலி எங்களை வீட்டு வாசல் வரை வந்து மரியாதையாக அனுப்புகிறார்.

வாசலிலே இரண்டு யானைத் தந்தமும் இரண்டு பக்கமுமாக, கல்யாண வீடுகளில் வாழை மரம் கட்டுவது போல, உயர்ந்து நிற்கிறது.

நான் வெளியே வரும்போது மனைவியிடம் "யானைத் தந்தத்தை பார்த்தீரா?" என்று கேட்டேன்.

"ச்சீ, அது பார்க்கவே அருவருப்பாயிருக்கு" என்றாள்.

............

செல்லரம்மான்

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது அவரை 'செல்லரம்மான்' என்று தான் கூப்பிடுவோம். அவருடைய இயற்பெயர் செல்லத்தம்பி. அப்போதெல்லாம் 'சாண்டோ செல்லர்' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்; அவ்வளவு பிரபலமாக இருந்தார்.

அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். வந்ததும் நாங்கள் அவரைப் போய் மொய்த்துக் கொள்வோம். என்ன அவசரமாயிருந்தாலும் எங்களுக்கெல்லாம் கதைகள் சொல்லாமல் போகவே மாட்டார்.

அவருக்கு 'கோடா' காய்ச்சுவதுதான் தொழில். காய்ச்சி அதைப் பல சுருட்டுக் கொட்டில்களுக்கும் வினியோகம் செய்வார். அந்தத் தொழிலில் அவருக்கு வெறுப்பு. ஆனால் என்ன செய்வது? வேறு வழியின்றித்தான் அதைச் செய்து வந்தார்.

அவர் இளவயதாக இருந்தபோது மல்யுத்தம், தடியடி, சிலம்பம் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று இருந்தாராம். எத்தனையோ போட்டிகளில் பங்கெடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். பின்னால் தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் கூட நடித்து வந்தார்; ஆனால் அவருக்கு நிரந்தரமான வருவாய் என்று மட்டும் இருந்ததில்லை.

அவருடைய தேகம் அந்த வயதிலும் கல்லுப்போல இருக்கும். நாங்கள் தொட்டுத் தொட்டுப் பார்ப்போம். அவர் இருபது வயதாயிருந்த போது அவர் 'கையாலேயே' தென்னை மரத்தை அடித்து தேங்காய் வீழ்த்தியதாகச் சொல்லுவார்கள்; அவ்வளவு பலசாலியாம்.

அந்தக் காலத்தில், தான் நடித்த நாடகங்களை சில நேரங்களில் எங்களக்கு நடித்துக் காட்டுவார். பாடுவதென்றால் நல்ல பிரியம். எப்பவும் ஒரு ராகத்தை முணுமுணுத்த படியேதான் இருப்பார்.

கதை சொல்லும் போது மிகவும் விஸ்தாரமாகவும் சுவை படவும் கூறுவார். அங்கங்கே ஹாஸ்யம் மிளிரும். அவருடைய கதைகளை சிறு பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஆர்வமுடன் கேட்பார்கள். அந்தக் கதைகள் அநேகமாக அவரைப் பற்றியதாகவே இருக்கும். நாங்கள் சில கதைகளை அவரிடம் சொல்லும் படி திருப்பித்திருப்பிக் கேட்போம். அவரும் சளைக்காமல் சொல்லுவார். அவருடைய அந்த 'இளநீர்க்' கதைகள் மிகவும் பிரசித்தமானவை.

* * *

அம்மன் கோவில் திருவிழா முடிந்து இந்த நாலுபேரும் வீட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் பலபலவென்று விடிந்து விடும். இவர்கள் 'உடையார்' வீட்டு வளவைக் கடந்துதான் போக வேண்டும். திருவிழா முடிந்து வீட்டுக்குப் போகும் போது இளநீர் குடிக்காமல் போனால் அதில் ஒரு திருப்தியே கிடைக்காது.

அதிலும் உடையார் வீட்டு தென்னை இளநீர் பிரசித்தமானது. எந்த மரத்தில் எந்த இளநீர் சுவையானது என்ற புள்ளி விவரங்கள் சோதிநாதனுக்கு மனப்பாடம். அவன் "அந்த நெட்டை மரம் கன நாளாக ஏமாத்திக் கொண்டு வருகுது. அந்த இளநீர் ருசியே தனி. இந்த ஜன்பத்திலேயே கிடைக்காது" என்பான் அடிக்கடி.

எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் உடையார் வீட்டுப் பயம். உடையார் என்றால் யார்? அந்த ஊரிலேயே மூன்று சால்வை போடுபவர் அவர் ஒருவர்தான்; இடுப்பில் ஒன்று, தோளிலே ஒன்று, தலையிலே ஒன்று தலைப்பாகையாக. ஊரே அவரைப் பார்த்தால் ஒரு மரியாதை.

"எங்களிலே செல்லத்தம்பியைப் போல மரம் ஏற ஆர் இருக்கினம்?" என்று 'சட்டி' போட்டான் கனகு. உடனே செல்லத்தம்பி வற வறவென்று மரத்தில் ஏறத் தொடங்கினான்.

செல்லத்தம்பி உடம்பை வளர்த்த அளவுக்கு மூளையை வளர்க்கவில்லை. அரை நிமிடம் கூட யோசிக்காமல் உச்சிக்கு போய் விட்டான். இரவிலே களவாக இளநீர் பிடுங்குவதில் ஒரு கஷ்டம் இருக்கிறது. தேங்காய் 'பொத்' தென்று தரையில் விழுந்தால் வீட்டுக்காரர் எழும்பி விடுவார். ஆகையினால் நைஸாகத் தான் இளநீரைக் கீழே இறக்க வேண்டும்.

அதனால் 'வட்டுக்குள்ளே' செல்லத்தம்பி, ஒரு கொஞ்சம் கீழே சோதினாதன், பிறகு சண்முகம், நிலத்திலே கனகு என்று 'அசெம்பளி லைன்' போல அணி வகுத்துக கொண்டார்கள். செல்லத்தம்பி ஒவ்வொரு தேங்காயாக பறித்து கீழே கொடுக்க, மற்றவன் அதைக் கீழே கொடுக்க தேங்காய் அலுங்காமல் நலுங்காமல்' கீழே வந்து சேர்கிறது.

பத்துத் தேங்காயுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் ஆசை ஆரை விட்டது? அடுத்த தேங்காய் கைதவறி விட்டது; 'தொம்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.

ஆரடா?' என்று உள்ளே இருந்து ஒரு சத்தம். சோதினாதனும், மற்றவர்களும் 'பொத், பொத்' என்று குதித்து வேலி பாய்ந்து கண நேரத்தில் மறைந்து விட்டார்கள். செல்லத்தம்பி பாவம் வட்டுக்குள்ளே; குதிக்க முடியுமா அவ்வளவு உயரத்தில் இருந்து? வருவது வரட்டும்' என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறான்.

கொக்குவிலில் முதன் முதலில் 'டார்ச் லைட்' வைத்திருந்ததே உடையார் தான். உடையார் வெளியே வந்தார். லைட்டை அப்படியும் இப்படியும் அடித்து விட்டு மேலே உயர்த்திப் பார்த்தார். அங்கே செல்லத்தம்பி சிலந்தி போல வட்டைக் கட்டிப் பிடித்தபடி இருந்தான். "ஆரடா அது, இறங்கு" என்றார் உடையார், உரத்த குரலில்.

பல பல என்று விடிந்து விட்டது. ஆட்களம் சேர்ந்து விட்டார்கள். இளம் பெண்டுகள் எல்லாம் மறைவாக நின்று எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். செல்லத்தம்பிக்கு உயிர் போனால் கூட பரவாயில்லை என்று பட்டது.

இளநீரையெல்லாம் ஒரு கடகத்தில் போட்டு இவன் தலையில் ஏற்றி வைத்தார், உடையார். ஒரு குடையை எடுத்துக் கொண்டார். தலைக்கு மேல் அதை விரித்தபடி 'சரி, நட விதானையார் வீட்டுக்கு' என்றார்.

செல்லத்தம்பி "முருகா, இந்த இக்காட்டில் இருந்து என்னைக் காப்பாற்றினால் உனக்கு இளநீர் அபிஷேகம் செய்கிறேன்" என்று வேண்டிக் கொண்டான். பிறகு "இளநீர் என்றால் என சொந்தக் காசில் வாங்கிய இளநீர், களவெடுத்ததல்ல" என்பதையும் சேர்த்துக் கொண்டான்.

"இளநீர் குடிச்சவன் குடிச்சிட்டு போக கோம்பை திண்டவனுக்கு அடி" என்றது என் விஷயத்தில் பலித்துவிட்டதே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.

இப்ப சாடையாக மழை தூறத் தொடங்கி விட்டது. உடையார் பின்னால் குடை பிடித்த பிடி. அப்ப பார்த்து உடையாருக்கு ஒண்ணுக்கு நெருங்குகிறது. 'கொஞ்சம் நில்' என்று விட்டு குடையையும் படி வேலி ஓரத்தில் குந்தினார்.

செல்லத்தம்பி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கிறான். ஆரெண்டாலும் பெண்டுகள் பார்க்கினமோ என்ற பயம்.

"என்னடா பார்க்கிறாய்? ஓடப் போறியோ?"

செல்லத்தம்பிக்கு அந்த எண்ணமே வரவில்லை. ஆனால் இப்ப முழித்து முழித்து விட்டான். கடகத்தில் இருந்த தேங்காயெல்லாவற்றையும் உடையார் தலை மேல் கொட்டி விட்டு எடுத்தான் ஓட்டம். நேரே தண்டவாளத்தில் எறி அதன் வழியாக ஓரேடியாக ஓடி தப்பி விட்டான்.

உடையார் என்ன செய்வார்? ஒண்ணுக்கு போறதை பாதியிலே நிற்பாட்டுகிற வித்தையை இன்னும் அவர் கற்கவில்லை; ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தார்.

* * *

இது நடந்து கொஞ்ச நாள் ஊர் முழுக்க இதே பேச்சுத்தான். ஆனால் இதையும் தோற்கடிக்கும் ஒரு சம்பவம் வெகு சீக்கிரத்திலேயே அங்கே நடந்தது. அது சோதினாதன் 'அட்டாளை முருகேசரிடம்' தனிமையில் போய் இளநீர் திருடி மாட்டிக் கொண்டது தான்.

அட்டாளை முருகேசர் விதானையாரிடம் போய் மினக்கெடும் ஆளில்லை. சோதினாதனைக் கையும் களவுமாகப் பிடித்தவுடன் அப்படியே மரத்தோடு கட்டிக் வைத்து சவுக்கினால் விளாசி விட்டார். நண்பர்கள் எல்லோருக்கம் சரியான துக்கம்; இப்படிப் போய் அநியாயமாக மாட்டிக் கொண்டானே என்று.

'அட்டாளை' என்றால் கனபேருக்கு என்னவென்று தெரியாது. இது கால் உயரமான காட்டில்; கால்கள் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கும். இதைச் சுற்றி தட்டி கட்டிமேலே கூரை வேய்ந்திருக்கும். இந்த அட்டாளையைத் தூகக நாலு பேர் வேண்டும். தூக்கிக் கொண்டு போய் எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம்.

இரவிலே இப்படியே அட்டாளைக்குள் படுத்திருந்து தோட்டத்தை காவல் காப்பார்கள். மழையோ, பனியோ அட்டாளைக்குள் சுகமாக இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் ஒரு நடமாடும் குடிசை (portable Cottage).

முருகேசர் எப்பவும் இந்த அட்டாளையில் தான் படுப்பார். அவர் வீட்டுத் தோட்டத்தில் களவு போனதென்பதே கிடையாது. அவ்வளவு கெடுபிடியான ஆள்.

அவருடைய தோட்டத்து இளநீர் அவ்வளவு ருசியானதல்ல. இருந்தும் அங்கே களவெடுத்ததென்று சொன்னால் இளவட்டங்களுக்கிடயில் ஒரு மவுசு வந்து விடும். முருகேசர் வீட்டுத் தோட்டத்தில் திருடுவதற்கு எப்படி ஒரு தைரியம் வேண்டும். மனிதர் தான் கண் கொத்திப் பாம்பாக இருப்பாரே?


** இ.தொ.CHAKRAM5.MTFல்**

**CHAKRAM.4.MTFன் தொடர்ச்சி **

இப்படிப்பட்ட அட்டாளை முருகேசனுடைய தோட்டத்தில் தான் சோதினாதன் திருடப் போய் வகையாக மாட்டிக் கொண்டான்; அடியும் வாங்கினான்.

நண்பர்கள் நாலு பேரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். எப்படியும் முருகேசரைப் பழி வாங்கி விடவேண்டும் என்பது தான் அது. அதற்கு வேண்டிய சமயம் பார்த்திருந்தார்கள்.

கச்சான் காற்று வீசும் காலத்தில் ஒரு அமாவாசை இருட்டு நாளைத் தேர்ந்து எடுத்தார்கள். விடிகாலை மூன்று மணிக்கு நண்பர்கள் நாலு பேரும் தோட்டத்துக்குள் களவாக நுழைந்தார்கள். பதுங்கி பதுங்கி அட்டாளைக்கு கிட்ட போனால் முருகேசர் அயர்ந்து குறட்டை விடும் சத்தம் கேட்கிறது.

முதல் வேலையாக அட்டாளையின் கீழ் தொங்கும் அரிக்கன் லாம்பை அணைக்கிறார்கள். பிறகு அவர்கள் முன்பே பேசி வைத்த படி, நாலு பேருமாக அட்டாளையின் நாலு கால் பக்கமும் போய் நின்று கொண்டார்கள். ஒருவன் கைகை கொடுக்க, அலுங்காமல், அசையாமல் அட்டாளையைத் தூக்கிக் கொண்டு அப்படியே நடந்து போய் பத்தடிதள்ளி இருக்கும் கிணற்றுப் பக்கம் மெதுவாக வைக்கிறார்கள். இப்போது அட்டாளையின் வாசல் கிணற்றுப் பக்கமாக இருக்கிறது.

நாலு பேரும் தங்களை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். பின் மெதுவாக வேலிப்பக்கம் போய் நின்று பலமாகச் சத்தம் போடத் தொடங்கினார்கள்:

"போடு, போடு"

"எடு, எடு"

"ஓடு, ஓடு"

அயர்ந்து போய் தூங்கிக் கொண்டிருந்த முருகேசர் பக்கென்று விழித்துக் கொண்டார். "ஆரது, ஆரது?" என்று தூக்கக் கலக்கத்தில் கத்திக் கொண்டே கீழே குதித்தார். நேரே கிணற்றுத் தண்­ருக்குள் தான் போய் விழுந்தார். உடனே நண்பர்கள் நாலு பேரும் வேலி பாய்ந்து ஓடத் தொடங்கினார்கள்.

கிணற்றிலோ தண்­ர் சரியாண ஆழம். முருகேசருக்கோ நீந்தத் தெரியாது. கத்தோ கத்தென்று கத்தினார். ஊர் சனங்கள் விழித்துக் கொண்டார்கள். எப்படியோ அவரைக் கிணற்றில் இருந்து காப்பாற்றி கரை சேர்த்து விட்டார்கள்.

(பின்னொரு காலத்தில் முருகேசர் பழி வாங்கியதை விவரித்தால் இந்தக் கதை இன்னும் விரிந்து விடும்; அது இன்னொரிடத்தில் வரும்)

* * *

ஒரு நாள் செல்லரம்மாள் என்னை அவர் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இது பெரிய கௌரவமான விஷயம். ஏனென்றால், அவர் 'என்னைமட்டும்' தான் வரச் சொல்லியிருந்தார்.

எனக்குத் தேனீரும் பனங்கட்டியும் கொடுத்தார். அவருடைய மூன்று வயது மகள் மழலைக் குரலில் இவர் சொல்லிக் கொடுத்த தேவாரம் ஒன்றைப் பாடினாள்.

இது தவிர, எனக்கு ஞாபகம் வருவது அவர் குடிசையைச் சுற்றி இருந்த தென்னை மரங்கள் தான். அந்த மரங்கள் எல்லாவற்றிலும் 'தாரினால்' பாம்புப் படம் கீறியிருக்கிறது; பாம்பின் தலை மேலும், வால் கீழுமாக. நான் 'ஏன் அப்படி?' என்று கேட்கிறேன். அதற்கு அவர் "இந்த மரங்களில் எல்லாம் நல்ல தேங்காய்; அணில் அரிச்சுப் போடும். இந்த பாம்பு படம் கீறினால் அணில் பயந்து மரம் ஏறாது. தேங்காய் தப்பிவிடும்." என்றார்.

செல்லரம்மான் ஏறாத தென்னை மரம் இல்லை. ஆனால் தன் வீட்டு மரத்தில் அணில் கூட ஏறுவதைப் பொறுக்காதது எனக்குப் புதுமையாக இருந்தது. இந்த அணில் சாத்திரம் விஞ்ஞான ரீதியாக உண்மையா என்று பின் காலத்தில் நான் பல முறை யோசித்ததுண்டு.

ஒரேயொரு முறை அவர் தன் மனைவியை எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிறார். எனக்கு ஞாபகமிருப்பதெல்லாம் அவர் மனைவி நல்ல சிவப்பாய் இருந்தது தான்.

அவருக்கு பத்தொன்பது வயது நடக்கும் போதே கல்யாணம் நடந்து விட்டதாம். அது 'பேசி வைத்த' கல்யாணமென்றாலும் இவர் காதல் வயப்பட்டு பல வீரப்பிரதாபங்களைச் செய்திருக்கிறார். இதை அவரே பலதரம் சுவைப்படக் கூறியிருக்கிறார்.

முதலில் இவருடைய தாயாரும் தமக்கையாரும் தான் போய் பெண் பார்த்தார்கள். பெண் வீடு அச்சுவேலியில். இவருக்கோ பெண்ணைப் பற்றிய விபரங்களை அறிய ஒரு துடிப்பு. ஆனால் அவர்களோ ஒன்றும் சொல்வதாகத் தெரியவில்லை. கடைசியில் தமக்கையாரை மடக்கி கேட்டுவிட்டார். அதற்கு அவருடைய அக்கா அந்த பெண்ணின் தலைமயிரைத் தான் வர்ணித்தாள். ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்க்கும் போது முதலில் பார்ப்பது தலைமயிரைத் தான் போலும்.

எங்கள் தந்தையார் ஒரு கணக்கு வைத்திருந்தார். ஒரு பெண்ணின் தலைமயிர் ஆரோக்கியமாக இருந்தால் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பாளாம்.

இவருடைய தமக்கையார் அந்தத் தலைமயிரின் நீளத்தை வர்ணித்தாள், பிறகு அதன் அடர்த்தியைப் பற்றி சொன்னாள்; பிறக அதன் கருமையைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். தலைமயிரை அவிழ்த்து விட்டால் அது பிருஷ்டத்தின் கீழ் வந்து நிற்குமாம்; ஆஹா! ஆஹா!

தலைமயிரை வைத்து அவர் என்ன செய்வார். அவருக்க பெண் என்ன நிறம், அவள் கண்கள், அவள் வதனம், அவள் இடை, நடை எல்லாவற்றையும் பற்றி அறிய ஆசை. அக்காவைத் துளைத்தும் பயனில்லை. அவளுக்கு தலைமயிரைத் தவிர வேறு ஒன்றும் ஞாபகமில்லை.

செல்லத்தம்பிக்கு தவிப்பாக இருந்தது. எப்படியும் அந்தப் பெண்ணைப் பார்த்து விட வேண்டும் என்று துடித்தார். அந்தக் காலத்தில் அவ்வளவு தூரம் துணிந்து போய், ஒரு பெண்ணை அவள் அறியாமல், பார்ப்பது என்பது என்ன லேசான காரியமா?

அவருடைய அக்காதான் ஒரு யோசனை சொன்னாள். நந்தாவில் அம்மன் கோவில் திருவிழாவுக்கு அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த சவுந்தரவலில்யின் சதிர் கச்சேரி ஏற்பாடாகியிருக்கிறது. சவுந்தரவல்லியென்றால் அது இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பேர் போன சதி 'செட்'. அவள் ஆட்டம் இல்லாத திருவிழா ஒரு திருவிழாவா?

"இந்த திருவிழாவைப் பார்க்க எப்படியும் பெண் வீட்டார் வருவார்கள். அப்ப நீ பார்த்துக் கொள்ளலாம்." என்றாள் அக்கா.

திருவிழாவும் வந்தது. பெண் வீட்டார் அச்சுவேலியில் இருந்து ஒற்றை மாட்டு வண்டி கட்டி வந்திறங்கனார்கள்.

பெரிய பந்தல் போட்டு, சிகரம் எல்லாம் வைத்து கோயிலை அலங்கரித்திருந்தார்கள். பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று விளக்குகள் எங்கும் ஜகஜோதியாக எரிந்து கொண்டிருந்தது. பெண்கள் எல்லாம் ஒரு பக்கம்; ஆண்கள் மறுபக்கம்.

மேளச்சமா முடிந்ததும் சதிர் ஆட்டத்திற்கு பெண்கள் வந்து குவிவது வழக்கம். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது பெண்கள் பகுதியும் நிரம்பி விட்டது. செல்லத் தம்பி முன்பே இடம் பிடித்து வசதியான ஒரு எல்லையில் நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் இருந்து பெண்கள் பகுதியை எல்லாக் கோணத்திலும் பார்க்க முடியும்.

சவுந்தரவல்லியின் ஆட்டம் தொடங்கியது. இவர் கண்கள் பெண்கள் பக்கம் துழாவிய படியே இருந்தது. தலைமயிரை மட்டுமே வைத்து பெண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி? ஒவ்வொரு பெண்ணிடமும் போய் 'உன்னுடைய மயிரை அவிழ்த்து விடு, பிருஷ்டத்தை தொடுகிறதா பார்ப்போம்' என்று கேட்க முடியுமா? இவர் பயமெல்லாம் தவறான பெண்ணின்மேல் காதல் வயப்பட்டு விடக்கூடாதே என்பது தான்.

செல்லத்தம்பியின் அக்கா தன் மூன்று வயதுப் பெண் குழந்தையிடம் ஒரு பூவைக் கொடுத்து அதைக் கொண்டு போய் அந்தப் பெண்ணிடம் கொடுக்கும்படி அனுப்பினாள். இது முன் கூட்டியே செல்லத்தம்பியிடம் பேசி வைத்த ஒரு சமிக்ஞை. அந்தப் பெண் குழந்தையும் வெகு உஷாராக வெளிக்கிட்டது. ஆனால் பாதி வழியிலேயே மறந்து போய் நின்று 'திரு திர' வென்று விழித்தது. பிறகு திரும்பி வந்து தாய் மடியில் பொத்தென்று குந்தி விட்டது. செல்லத்தம்பியின் ஆசையில் மண் விழுந்தது.

அப்போதுதான் அவன் தமக்கையார் அவன் மேல் மனம் இரங்கி, ஒவ்வொரு அடியாக வைத்துப் போய் அந்தப் பெண்ணிடம் ஏதோ பேசி விட்டுத் திரும்பவும் வந்து உட்கார்ந்தாள்.

செல்லத்தம்பியின் பார்வையை ஒரு தூண் மறைத்தது. தலைநிறைய பூ, சிவப்பு பாவாடை, சருகை வைத்த பச்சை சட்டை. செல்லத்தம்பியின் நெஞ்சு படு வேகத்தில் அடிக்கத் தொடங்கியது. தனக்காகப் பிறந்த அந்தப் பெண்ணை முழுமையாகப் பார்க்க முடியாமல் அவஸ்தைப் பட்டார். இந்தப் பக்கம் பார்த்தால் தலையும், பூவும், மறுபக்கம் பார்த்தால் தோளும், பாவாடையும். தவணை முறையில் அவளைப் பார்த்து மனதைத் திருப்திப் படுத்திக் கொண்டார்.

ஒரு முறை அவள் தலை திரும்பிய போது அவள் கண்களையும், பல்வரிசைகளையும் பார்த்தார். ஆஹா! அப்படியே மோகித்து விட்டார்.

சவுந்தரவல்லியின் சதிர் ஆட்டம் முடிந்து பெண்கள் கூட்டம் கலையத் தொடங்கியது. அந்தப் பெண்ணும் பெற்றோருடன் வண்டியில் ஏறிக் கொண்டாள். செல்லத்தம்பி ஒரு நண்பனின் காலில் விழுந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வண்டியைத் தொடர்ந்தார்.

சாக்கு படுதா போட்டு மூடியபடி வண்டி முன்னே போகிறது. அரிக்கன் லாந்தர் கீழே கட்டியிருக்கிறது. செல்லத்தம்பி பின்னாலே சைக்கிளில் போகிறார். வெகு கிட்டப் போனால் கண்டு கொள்வார்கள்; தூரத்தில் தொடர்ந்தாலோ ஒரு பிரணோசனமும் இல்லை.

ஒரு வண்டி மாட்டை சைக்கிளில் பின் தொடருவதென்பது மிகவும் கஷ்டமான காரியம். செல்லத்தம்பி மிக்க கவனமாக கண் பார்க்கும் தொலைவில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர் சைக்கிளை மிதித்தாலும் உண்மையிலே ஆகாயத்தில் தான்போய்க் கொண்டிருந்தார்.

அந்த மயக்கமான வேளையில், வளையல் அணிந்த சிவந்த கரம் ஒன்று படுதாவை சிறிது நீக்கியது போன்ற பிரமை. இவர் நேரே சைக்கிளை விட்டார். அந்த நேரம் பார்த்து ரோட்டு ஓரத்தில் 'கல்லு கும்பி' ஒன்று இருந்தது. இவர் அதைப் பார்க்கவில்லை. கல்லுக் கும்பியும் இவரைக் கவனிக்கவில்லை. சைக்கிள் மோதி இவர் கீழே விழுந்தார்; சைக்கிளும் விழுந்தது; செல்லத்தம்பியுடைய காதல் சாம்ராஜ்யமும் சரிந்தது.

இதன் விளைவு? செல்லத்தம்பி 'ஒட்டகப்பிலத்தில்' கையுக்கு பத்துப் போட்டு கொண்டது தான். அநியாயமாக இவருடைய கல்யாணம் இரண்டு மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டது.

செல்லரம்மான் விஸ்தாரமாக இந்தக் கதையைச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணியம் பிள்ளை தான் கேட்டார்: "அது சரி, நேரமோ இருட்டு; பெண்ணோ படுதாவுக்குள் இருக்கிறாள். நீ என்ன நினைவோடு சைக்கிளில் தொடர்ந்து போனாய்? என்னதான் சாதிப்பதற்கு கிளம்பினாய்?"

செல்லரம்மான் சொன்னார்; "காதல் பிரதாபத்தில் மயங்கி நிற்கும் ஒருவன் தர்க்க சாஸ்திரத்தையா பார்ப்பான்? அவள் சுவாசிக்கும் காற்றைத் தான் நானும் சுவாசிக்க வேணும் என்று பட்டது. அவளிடமிருந்து பத்தடிக்கு மேல் தள்ளி நிற்க என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அந்த நேரம்."

* * *

சங்கீதத்தில் அவருக்கு இருந்த காதலும் அப்படிப்பட்டதுதான். ஒரு குருவிடம் முறைப்படி கற்கவில்லையென்றாலும் அவருடைய சங்கீத ஞானமானது அசரவைக்கும். ஒரு ராகத்தைப் பாடி "இது என்ன ராகம்?" என்று கேட்பார். நான் ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு பாட்டு முடிச்சுப் போட்டு வைத்திருப்பேன்; படக்கென்று சொல்லி விடுவேன். பத்துக்கு ஒன்பது சரிவரும்.

அப்போதுதான் காபி ராகத்தில் பி.எஸ்.ராஜா ஐயங்காருடைய 'ஜகதோ தாரண' இசைத் தட்டு வந்திருந்தது. அதை யார் வீட்டிலோ அடிக்கடி கேட்பார் போலும். அதைப் பற்றியே பேசுவார். அது தவிர, மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையின் வயலினிலும் அவருக்கு ஒரு பக்தி.

ஒரு நாள் 'யெவரிக அவதாரமு' என்ற தியாகராயர் கிருதியை அவர் தேவமனோஹரி ராகத்தில் பாடியது ஞாபகமிருக்கிறது. அன்று அவருக்கு என்ன சங்கடமோ? அவர் கண்களில் கண்­ர் பொல பொல வென்று கொட்டியது. அவர் கூறினார்;

"ஒரு ராக தேவதை தன்னுடைய முழு சௌந்தர்யத்தையும் இலகுவில் காட்டி விட மாட்டாள். மெள்ள மெள்ளத்தான் உன் சாமர்த்தியத்தை பிரயோகித்து அவள் பூரண அழகையும் வெளியே கொண்டுவர வேண்டும்."

எப்படியான வார்த்தை?

சங்கீதம் என்றால் அந்தக் காலத்து விவகாரமே வேறு. இந்தக் காலத்தில் என்றால் சங்கீத வித்வானும் பக்கவாத்தியக் காரர்களுமாகச் சேர்ந்து ரஸ’கர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு ஒரு உயர்ந்த சங்கீதத்தை அளிப்பார்கள்.

செல்லரம்மான் காலத்தில் சங்கீத வித்வான், பக்கவாத்தியக்காரன் அசந்திருக்கும் சமயத்தில் அவனைக் குழிதோண்டிப் புதைக்ப் பார்ப்பான். பக்க வாத்தியக்காரன் என்ன சாமான்யப்பட்டவனா? அவனும், தன்னுடைய வித்தை எல்லாத்தையும் காட்டி வித்துவானை மட்டந்தட்ட சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பான்.

சபையோரும் இரண்டு பக்கமாகப் பிரிந்து தங்கள் தங்கள் வித்வான்களை ஆதரிப்பார்கள்; சில வேளைகளில் இது பெரிய அடிதடியில் கொண்டு போய் விடும்.

அப்போது யாழ்ப்பாணத்தில் 'சின்னமேனை, சின்ன மேனை' என்று ஒரு பெரிய வித்துவான் இருந்தார். பல்லவி பாடுவதில் இவரை விழுத்த இனி மேல் தான் ஒருவர் பிறக்க வேணும். அப்படி ஒரு பேர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு. செல்லரம்மான் அதில் முதன்மையானவர்.

அப்போதுதான் இந்தியாவில் இருந்து ஒரு பிரபல வயலின் வித்துவான் வந்திருந்தார். சின்னமேனைக்க அவரை எப்படியும் மட்டந்தட்ட வேண்டும் என்று ஒரு உத்வேகம். அந்தக் காலத்தில் அப்படிச் செய்தால்தான் ஒருவன் தன் புகழை நிலை நாட்ட முடியும். சின்னமேனையின் ரசிகர்களுக்கு உற்சாகம் தலைக்கு மேல் போய்விட்டது. செல்லரம்மாள் அவருடைய பிரதம ரசிகர்.

சின்னமேனைக்கு அந்த இந்திய வித்வான் வயலின் வாசிக்கும் படியாக ஒரு கச்சேரி ஒழுங்கு பண்ணினார்கள். சின்னமேனை முன்பின் கேள்விப்படாத ஒரு தாளத்தில் ஒரு புதுப் பல்லவியை உருவாக்கினார். அதை இரவு பகலென்று பாராமல் ரகஸ்யமாக ஆயிரம் தடவை சாதகம் செய்து வைத்துக் கொண்டார்.

கச்சேரி வழக்கம் போலத் தொடங்கி களைகட்டிக் கொண்டே வந்தது. வயலின்காரரும் ஈடு கொடுத்து வாசித்துக் கொண்டே வந்தார். கடைசியில் பல்லவி பாடும் நேரம். சபையில் மூச்சுவிடக் கூட ஒருதரும் துணியவில்லை.

சின்னமேனை, அங்கவஸ்திரத்தை இழுத்து தாளம் போடும் கையை மறைத்தவாறு, ஆரம்பிக்கிறார். சபையிலே அப்படி ஒரு நிசப்தம்.

"மா....மரமும்....நிழலும்....குயிலும் மருவி அணையத் தருணமிதுவே.

இது தான் பல்லவி; இதைத் திருப்பித் திருப்பித் தன் வித்தை எல்லாத்தையும் காட்டி பாடுகிறார்; வயலின் காரரும் சளைக்காமல் பக்கத்து பக்கத்தில் நெருக்கிக் கொண்டே வருகிறார். இவர் பாட, அவர் வாசிக்க, சபையோர் ஆனந்த பரவசத்தில் மூழ்கி இருக்கிறார்கள். என்ன நடக்குமோ என்ன நடக்குமோ, என்ற ஆவல்?

இப்போது பாடகர் சமயம் பார்த்து
"குயிலும்.....
நிழலும், குயிலும்"

என்று பாடுகிறார் துரித காலத்தில், வயலின் காரரும் தாளத்துடன் ஒத்துப்போக படக்கென்று கையை இழுக்கிறார். ஆனால், ஈடு கொடுக்க முடியாமல் வயலின் கம்பி அறுந்து விடுகிறது.

அவ்வளவு தான். சபையோரின் கரகோஷம் வானைப் பிளக்கிறது. அன்றிலிருந்து வித்துவானுக்கு ஒரு புதுப்பெயர், 'வயலின் அறுத்த சின்னமேனை'. சின்னமேனை இறக்கும் வரை சங்கீதத்தில் ஒரு முடிசூடா மன்னனாகவே இருந்தார்.

* * *

ஒரு நாள் நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் செல்லரம்மான் திடீரென்று வந்து விட்டார். அப்போதுதான் அழுது கொண்டிருந்தேன். எனக்கு பதினொரு வயது. பரீட்சைக்கு மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படித்தேன். பெரிய பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று அப்படி ஒரு ஆசை. ஆனால் பூபாலன் ஒரு 'மார்க்' வித்தியாசத்தில் என்னை முந்திவிட்டான். எனக்கு அந்த சான்ஸ் போய் விட்டது.

அன்றுதான் எனக்கு அபிமன்யு கதையைச் சொன்னார். அது நான் மறக்க முடியாத நாள்; அதுதான் நான் மறக்க முடியாத கதையும் கூட

"பதின்மூன்றாம் நாள் போர். துரோணர் பத்மவியூகம் வகுத்து சேனைகளை எல்லாம் அணி வகுத்து நிற்கிறார். அர்ஜுனனோ தெற்குத் திசையில் மும்முரமாக யுத்தம் செய்கிறான். பாண்டவ சேனையில் பெரிய சேதம்; ஆயிரக் கணக்கில் மடிகிறார்கள்."

"பதினாறு வயதுப் பாலகன் அபிமன்யுவுக்கு பத்ம வியூகத்தை உடைக்கத் தெரியும்; ஆனால் திரும்பி வரும் வித்தையை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. தருமர் சொற்படி பத்மவியூகத்தை உடைத்து உள்ளே போய் விடுகிறான். கொடுத்த வாக்குப் பிரகாரம் தருமரும், வீமனும் மற்ற பாண்டவ சேனையும் தொடர்ந்து போக முயற்சிக்கிறார்கள்; ஆனால் ஜயந்திரதன் தடுத்து விட்டான்; எப்படி முயன்றும் அவர்களால் அபிமன்யுவைத் தொடர்ந்து உள்ளே போக முடியவில்லை."

"பாவம், அபிமன்யு! சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டு யுத்தம் புரிகிறான். கௌரவ சைனியங்களையெல்லாம் துவம்சம் செய்கிறான். அவனுக்குத் துணை அவனுடைய வீரம் மட்டும்தான்."

"அப்போது, கௌரவ சேனையின் ஆறு மகாரதர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு, கர்ணன் உட்பட, சதிசெய்து அபிமன்யுவைக் கொன்று விடுகிறார்கள்."

இதைக் கேட்டு நான் கண் கலங்குகிறேன், அப்ப செல்லரம்மான் சொல்கிறார்:

"சில நேரங்களில், பெரிய வெற்றியைத் தேடிப் போகும் போது சில சிறிய தோல்விகளை நாங்கள் சந்திக்கத் தான் வேணும். உள் பெரிய வெற்றியிலே இது ஒரு சிறு தோல்வி"

இந்த அறிவுரை எனக்கு அன்று மாத்திரமல்ல பிறகும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என் நினைவுக்கு வந்திருக்கிறது.

* * *

இவ்வளவு கூறிய நான் செல்லரம்மானுடைய இறுதிக் காலத்தைப் பற்றியும் சொல்லத்தானே வேண்டும்.

சில சாவுகள் தவிர்க்க முடியாதவை. வருத்தம் வந்து சாகிறான்; படுக்கையில் படுத்து சாகிறான்; நித்திரையில் சாகிறான்; மரம் வெட்டும் போது மரம் விழுந்து சாகிறான். ஆனால் செல்லரம்மானுடைய சாவு அநியாயச் சாவு; தவிர்க்கக் கூடிய சாவு.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் இருந்த காலம் அது. ஒரு நாள் மாலை நேரம். இவர் வேலையை முடித்து விட்டு ஒட்டமும் நடையுமாக வீட்டுக்கப் போகிறார்.

பட்டாளத்துக்காரன் இவரைப் பார்த்து 'நில்' என்று சொல்கிறான். இவருக்கு கேட்கவில்லை. அந்த நேரத்தில் இவருடைய வாய் காவி ராகத்தில் ஒரு பாட்டை முணுமுணுத்திருக்குமோ, என்னவோ? அவன் இன்னொரு முறை சத்தம் போடுகிறான். இவருக்கு அதுவும் கேட்கவில்லை. மூன்று தரம் சுடுகிறான். மூன்று குண்டுகளும் தவறாமல் இவர் முதுகைத் துளைத்தபடி போகிறது.

கேட்பாரற்று, அநியாயமாகக் கீழே விழுந்தார் செல்லரம்மான். அவருடைய கடைசி சுவாசம் என்ன கதையைச் சொல்லிக் கொண்டு வெளியே போனதுவோ!

* * *

முப்பது வருடங்களுக்கு பிறகு நான் செல்லரம்மானைத் தேடிப் போன போது அவரைத் தெரிந்தவர்கள் இந்த விபரங்களைச் சொன்னார்கள். அவருடைய மனைவியும், மகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மகள் வளர்ந்து, பெரியவளாகி அவளுக்கும் பிள்ளைகள் இருந்திருக்க வேண்டுமே?

என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ இக்கட்டான சந்தர்ப்பங்களில் அவரை நினைவு கூர்ந்திருக்கிறேன். சந்தோஷமான நேரங்களிலும் அவரை நான் மறக்கவில்லை. அப்படியான அவருடைய ஒரு தாக்கம் என் வாழ்க்கையில் இருந்தாலும் அவர் இறப்பதற்கு முன்னர் ஒரு முறை கூட என்னால் அவரைச் சந்திப்பதற்கு முடிய வில்லையே!

சிறு வயதில் ஒரே ஒரு முறை போன ஞாபகத்தை வைத்துக் கொண்டு அவர் வீடு தேடிப் போகிறேன். அங்கே உள்ள குடிசைகள் எல்லாம் சிதைந்து போய் கேட்பாரற்று கிடந்தன. ஒருவரையும் காணவில்லை. எல்லாம் பட்டாளத்துக்காரர்களினால் ஏற்பட்ட அழிவு தான். எது அவர் வீடாக இருக்கும் என்று ஞாபகப் படுத்தி தேடித் தேடிப் பார்க்கிறேன்.

அப்போது பாம்பு கீறிய தென்னை மரமொன்று என் கண்ணிலே படுகிறது. கிட்டப்போய் அந்தப் பாம்பையே பார்த்தபடி நிற்கிறேன்.

..........

திகடசக்கரம்

எரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் 'எரிக்ஸன்'. முந்திய பிறவியில் நான் செய் வினைப்பயனால் அவனுடன் எனக்கு ஒரு தொந்தம் ஏற்பட்டுவிட்டது. நான் எங்கே போனாலும் அவனும் அங்கே என் பின்னால் வந்து சேர்ந்து விடுவான்.

ஸ்வீடன் தேசத்து அரசாங்கத்துக்காக இவன் வேலை செய்து வந்தான். ஆள் உயரமாகவும், வசீகரமாகவும் இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருக்கும். 'ஸ்வீடிஷ்' மொழியிலே சிந்தித்து பின் அதை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து பேசுவான். ஆகையினாலே, அவனுடைய ஆங்கிலம் நெளிந்து, நெளிந்து வரும். சுருக்கமாக ஒரு விஷயத்தைப் பேசினோம் என்பது அவன் ஜாதகத்திலேயே கிடையாது. நீண்டு வளைத்துத்தான் கதைக்கு வருவான்.

அவன் வடதுருவம் என்றால், நான் தென்துருவம். அவன் நெருப்பு என்றால் நான் ஐஸ். அவன் நீட்டி நீட்டிப் பேசினால் நான் சுருக்கமாகத் தான் பேசுவேன். எப்பவும் அவசரப்பட்டு ஓடிய படியே இருப்பான். நான் அப்படி இல்லை, குழாயில் வரும் நீர் போல மளமளவென்று சிந்தனைகளை வரவரக் கொட்டிக் கொண்டே இருப்பான். நானோ ஆற அமர யோசித்து ஒரே ஒரு வசனம் பேசினாலே அது பெரிய காரியம். இப்படியாக நாங்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். எங்கள் இரண்டு பேருக்கும் கடவுள் எப்படியோ ஒரு முடிச்சைப் போட்டு விட்டார்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் எரிக்ஸனுடன் தொடர்ச்சியாக பேசமுடியாது. எப்படியும் எரிச்சல் மூட்டி விடுவான். அப்படி அசாத்தியமான சாமர்த்தியம் அவனிடமிருந்தது.

* * *

எங்கள் இருவருக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணி; எங்கள் பணியின் நிமித்தம் நாங்கள் இப்படி அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். ஆபிரிக்காவின் கடற்கரையோரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருக்கிறோம். ஒரு விசேஷ கூட்டத்திற்காக நாங்கள் வரவழைக்கப் பட்டிருந்தோம்.

விஷயம் இதுதான். ஸ்வீடன் நாடு பன்னிரெண்டு மில்லியன் டொலர் ஒரு அணைக்கட்டு விஷயமாகக் கொடுப்பதாக இருந்தது. இந்த அணைக்கட்டினால் மின்சக்தியும், விவசாயமும் பெருகி நாடு பெரு ம சுபிட்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சில குழுக்கள் இந்த அணைக்கட்டு சம்பந்தமாக ஆராய்ந்ததில் பல அனர்த்தங்கள் விளையும் என்பதைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் வேண்டுகோளின்படி நாங்கள் ஆராய்ச்சி செய்து 96 பக்கம் கொண்ட ஒரு அறிக்கையைத் தயார் செய்திருந்தோம்.

மறுநாள் ஒன்பது பேர் கொண்ட குழுவின் முன் எங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்து அணைக்கட்டினால் ஏற்படக்கூடிய பாதகங்களைக் கூறி அணைக்கட்டு பிளானை முற்றிலும் முறியடிக்க வேண்டும்.

எரிக்ஸன் நெருப்புக்கு மேலே நின்றான். எங்களுடைய அறிக்கையை எப்படியும் வெற்றிகரமாக ஒப்பேற்றி விட வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. ஆனால் ஆர்வம் இருந்தால் காணுமா? எங்களுக்கு சில வில்லங்கங்களும் இருந்தன.

குழுவுக்கு தலைமை வகிப்பவர் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி. அனாவசியப் பேச்சு அவருக்குப் பிடிக்காது. ஆனால் 'சரி' என்று பட்டதை நேரே பயமின்றி சொல்லக் கூடியவர். மற்றது ஒரு பாதிரியார். அவராலும் எங்களுக்கு இடைஞ்சல் இல்லை.

'சாயத்' தான் எங்கள் முதல் எதிரி. மிகப்பெரிய பணக்காரன். முக்கால் வாசி மந்திரிமாரைக் கைக்குள்ளேயும், மீதியுள்ளோரை பைக்குள்ளேயும் வைத்துக்கொண்டு திரிபவன். பணத்தின் பலத்தினால் ஆடம்பரமாகப் பேசப்பழகிக் கொண்டவன். குழுவிலே இருந்த மற்ற ஆறுபேரையும் அவன் 'வாங்கி விட்டான்' என்று தான் கதை. இந்த அணைக்கட்டு திட்டம் அங்கீகாரம் பெற்றால் அதனால் வரும் ஒப்பந்தங்கள் எல்லாம் இவனிடம் தான் போய்ச் சேரும்; நிராகரிக்கப்பட்டாலோ அவனுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம்.

எரிக்ஸன், நாங்கள் தயாரித்த அறிக்கையை கர்மசிரத்தையாக படித்துக் கொண்டிருந்தான். சிவப்புக்கோடு, மஞ்சள்கோடு, நீலக்கோடு என்று எங்கும் மூவர்ணக்கொடி போல் கீறி வைத்திருந்தான்.

அறை முழுக்க சிகரட் புகையும், பீர் போத்தலும்,'பைல்' கட்டுகளும் தான். என்மேல் அவனுக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். காரணம் நான் அன்றைய தினசரியை சாவதானமாகப் புரட்டிக் கொண்டிருந்ததுதான்.

எரிக்ஸனுக்கு 'குட்நைட்' சொல்லி விட்டுப் படுப்பதற்கு விரைந்தேன். அவன் "YD, என்ன? எட்டு மணிக்கே படுக்கப்போறாயா? நாளைக்கு ஒன்பது மணிக்கல்லவா கூட்டம்? இன்னும் எவ்வளவோ குறிப்புகள் தயார் பண்ண வேண்டியிருக்கிறதே?" என்றான். ('வைத்தியநாதன்' என்று என் பெற்றோர் சூட்டிய அழகிய பேரை இவனுக்காகச் சருக்கி 'வைத்தி' என்று மாற்றினேன்; இவன் அதையும் குறுக்கத்தறித்து "Y.D" என்று என்னைச் செல்லமாகக் கூப்பிடத் தொடங்கி விட்டான், கொலை பாதகன்).

நான் "எரிக்ஸன், நாளை காலை எட்டு மணிக்க இங்கே சந்திப்போம். எங்கள் அணுகுமுறையை இன்னொரு தரம் ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றேன்.

எரிக்ஸனுக்கு ஆத்திரமான ஆத்திரம். "சாயத்தோடு சேர்ந்து ஏழு பேர் ஒரு பக்கம். பாதிரியார் ஒருவரைத் தான் நாங்கள் நம்பலாம். இது எங்களுக்கு முழுத் தோல்வி. சந்தேகமே இல்லை. நீ போய் ஆனந்தமாக சயனி" என்றான் கோபத்துடன்.

இப்படி எத்தனை எரிமலைகளைக் கண்டவன் நான். விர்ரென்று என் படுக்கையறைக்கு போனேன்; படுத்ததும் தூங்கியும் விட்டேன்.

* * *

அடுத்த நாள் விடிகாலை ஆறு மணிக்கே கதவைப் படப வென்று தட்டினான், எரிக்ஸன். நான் அந்த நேரம் வழக்கம் போல ஸ்நானம் செய்து ஸ்தோத்திரங்களை முடித்துவிட்டு இடது கை விரலால் எண்ணிக் கொண்டே காயத்ரி ஜபம் செய்து கொண்டிருந்தேன். அவனும் விடாமல் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தான்.

இறுதியில் நான் ஜபங்களை முற்றாக முடித்த பின் கதவைத் திறந்தேன்.

எரிக்ஸன் முற்றிலும் உடுத்தித் தயாராகிக் கொண்டு வந்திருந்தான். நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு ஒரு மூலையில் இருந்து எங்கள் அணுகுமறையைச் சரிபார்த்துக் கொண்டோம்.

நான் சொன்னேன்:

"எரிக்ஸன், இன்று நடக்கும் கூட்டமோ மூன்று மணித்தியாலத்திற்கு மேல் நீடிக்க முடியாது. தலைவர் முடிவை இன்றே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். எங்களுடைய அறிக்கையிலே இன்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிலும் அறிக்கையின் முதல் பக்கத்திலேயே மூன்று தாக்கமான கேள்விகள் வரும். நீ அயர்ந்து விடாதே. உன் வித்தை எல்லாத்தையும் காட்டி பதிலை அவசரமின்றி எடுத்துக் கூறு. எவ்வளவு நேரம் கடத்த முடியுமோ அவ்வளவு நேரத்தையும் கடத்து. உன் பதில் முடியும் தறுவாயில் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்வேன்"

" என்ன Y.D? அவ்வளவுதானா?" என்றான்.

"அவ்வளவுதான்."

தலையிலே இரு கைகளையிம் வைத்து மேலே ஆண்டவனைப் பார்த்தான், எரிக்ஸன்.

* * *

ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருக்கிறது. எரிக்ஸன் இரண்டு கைகளிலும் மலை போல குவித்து, கட்டுக்கட்டாகப் புத்தகங்களும், அறிக்கைகளும், 'கோப்பு'களுமாகக் (files) கொண்டு போய் மேசை மேல் கண்காட்சிக்கு அடுக்கி வைப்பது போல் அடுக்கி வைக்கிறான். நான் நாலு தாள்களை மாத்திரம் ஒரு வெறும் 'கோப்பில்' மறைத்து வைத்துக் கொண்டு வருகிறேன்.

சாயத் ஆடம்பரமாக உரத்துப் பேசிக் கொண்டு நுழைகிறார். அவருக்கு பின்னால் நாலு பேர் ஓடாத குறையாக வருகிறார்கள். சபைத்தலைவர் கூட எழுந்து அவருக்கு மரியாதை செய்கிறார். நாங்களும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம்.

தலைவருடைய சிறு உரைக்குப் பிறகு எரிக்ஸன் தன் கட்சி வாதத்தை ஆரம்பித்து வைக்கிறான்.

எடுத்த வீச்சிலேயே எரிக்ஸன் அறிக்கையில் கண்டுள்ளபடி இந்த அணைக்கட்டினால் 47,000 ஏக்கர்? காடுகள் தண்­ரில் மூழ்கி விடும் என்கிறான்.

சாயத் உடனேயே எதிர்ப்புக் குரல் தெரிவிக்கிறார்.

"இது என்ன குப்பை? எங்கே இதற்கான ஆதாரம்?" என்று கேட்கிறார்.

எரிக்ஸன் தனக்கே உரிய பாணியில் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து ஆரம்பிக்கிறான். சுருள் வாளைப் போல் அவனுடைய வாதங்கள் எல்லாம் திருப்பித் திருப்பி தொடங்கிய இடத்திலேயே வந்து விழுகின்றன. அவனோ களைப்படையாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். இதற்கிடையில் சபையிலுள்ள மற்றைய உறுப்பினர்களும் தங்கள் தங்களுக்க தெரிந்ததைக் கூற வாதம் சூடு பிடித்தது. இப்படியாக முதல் கேள்வியிலேயே முக்கால் மணி நேரம் செலவழிந்து விட்டது.

அப்போது நான் எரிக்ஸனுக்கு சாடை காட்டி விட்டு சொன்னேன்:

"பதினைந்து வருடங்களுக்கு முன்பு அரசு அமைத்த ஒரு விசாரணைக் குழுவில் தலைவர் அவர்களே ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். அந்த அறிக்கையில் 47,000 ஏக்கர் என்று பிரஸ்தாபித்து ஞாபகமிருக்கிறது" என்று கூறி விட்டு எரிக்ஸன் கொண்டு வந்த பைல் கட்டுக்களையும், புத்தகத்தையும் சிதற அடித்து தேடுவது போலத் தேடி சறிது நேரம் கடத்தி விட்டு "ஆஹா, இதோ அதற்கான படிவம்" என்று நான் தயாராக கொண்டு போன ஏட்டில் இருந்து தாளை உருவிக் கொடுத்தேன். தலைவர் அதை வாங்கிப் படித்து விட்டு தலையை ஆட்டினார்.

சாயத் தாளைப் பிடுங்கி உற்று உற்றுப் பார்த்தார். பார்த்து விட்டு மேசை மேலே போட்டார். மற்றவர்களம் எடுத்து காயிதத்தை ஆட்டி ஆட்டிப் பார்த்தார்கள்.

எரிக்ஸன் மீண்டும் பேசத் தொடங்கினான். ஆனால் மூன்றாவது நிமிடமே இன்னுமொரு இடைஞ்சல் வந்தது. சாயத் சொன்னார்.

"116,000 பேர் குடிபெயர்வதாகச் சொல்கிறீரே? அரசாங்கம் அவ்வளவு பேருக்கும் புது வீடுகள் கட்டித் தருவதாகக் கூறியிருக்கிறதே! இதில் என்ன நஷ்டம்?" என்றார்.

எரிக்ஸன் இதற்கும் பதில் அளிக்கத் தொடங்கினான். சொல்லி வைத்தபடி பதிலும் நீண்டு கொண்டே போனது தலைவர் தண்­ர் குடித்தார். பாதிரியார் கொட்டாவி விட்டார். சாயத் தலையை இரண்டு பக்கமும் ஆட்டிக் கொண்டே இருந்தார்.

அப்போது, சமயம் பார்த்து நான் குறுக்கிட்டு "தலைவரே, மதிப்பிற்குரிய எமது முதல் மந்திரியாரும், திரு சாயத் அவர்களம் இன்னும் சிலரும் கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி ஸ்வீடன் போன போது மேற்படி விஷயம் மிகவும் விஸ்தாரமாகப் பேசப்பட்டது. குடி பெயர்வால் ஏற்படும் சமுதாய இன்னல்கள் புது வீடுகள் கட்டுவதனால் மட்டுமே தீரக்கூடிய காரியமல்ல. இதை ஸ்வீடன் அரசாங்கமே ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறது" என்று கூறிஅவர்கள் எழுதிய கடிதத்தின் நகலை சபையின் முன் வைத்தேன். எல்லோரும் பாய்ந்து எடுத்து அந்தக் கடிதத்தைப் படித்தார்கள்.

தலைவருடைய நம்பிக்கை இப்போது பரிபூரணமாக எரிக்ஸனுடைய பக்கம் திரும்பி விட்டது. இதற்கிடையில் இரண்டு மணி நேரம் ஓடி விட மீதி நேரத்தில் எரிக்ஸன் சொல்ல வேண்டியதெல்லாவற்றையும் நேர்த்தியாகச் சொல்லி முடித்தான். இம்முறை அவனுக்கு தடங்கலே இல்லை.

அவன் பேசி ஓய்ந்ததும் தலைவர் இன்னும் யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறார்களா என்று கேட்டார்.

என் மடியில் இன்னுமொரு ஆணி இருந்தது. கடைசி ஆனி. நான் சொன்னேன்:

"தலைவரே, எல்லோரும் களைப்பாகி இருக்கும் இந்தச் சமயத்தில் நேரத்தை வீணாக்காமல் விஷயத்துக்கு வருகிறேன். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதில் நல்ல விளைவுகளும் கெட்ட விளைவுகளும் கலந்தே இருக்கும். நல்ல விளைவுகள் கூட இருப்பின் நாங்கள் அந்தக் காரியத்தைச் செய்கிறோம்; இல்லாவிடில் அதைத் தவிர்த்து விடுகிறோம்."

"இந்த அணைக்கட்டினால் எங்களுக்கு அதிகப்படியான மின்சக்தியும், நீர்பாசன வசதிகளும், கிராமங்களுக்கு குடி தண்­ரும் கிடைக்கிறது. அத்துடன், அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்குகளையும் இது தடுக்கிறது. இது எல்லாம் நல்ல விளைவுகள் தான்"

"ஆனால் இதனால் எற்படும் பாதகங்களையும் நாங்கள் கணக்கு பார்க்க வேணும். சுற்றுச் சூழல் முற்றிலும் அழிந்து விடுகிறது; 116,000 பேர் குடிபெயர்வதினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், காடுகளின் அழிவு; மீன் முதலிய உரியரினங்களின் புலம்பெயர்வு (migration) தடை; ஆற்றிலே வண்டல் தன்மை குறைந்து விடுவதால் நசிந்து விடும் விவசாயம்; இவையெல்லாம் பாதகமான விளைவுகள்"

"இந்த அறிக்கையின் 46ம் பக்கத்திலே கொடுத்திருக்கம் விபரங்களின் படி, நன்மைகளக்கு 370 புள்ளிகள் என்றால் தீமைகளக்கு 520 புள்ளிகள் விழுகின்றன."

"ஆனால் இந்தக் கணக்கிலே நாங்கள் ஒரு மிகப் பெரிய தப்பு செய்து விட்டோம்"

"இந்த இடத்திலே வாழும் 16 வகையான உயிரினங்கள் இந்தப் பிராந்தியத்திலேயே பிரத்தியேகமாக வாழும் தன்மைபெற்றவை. இந்த உலகின் வேறெந்த மூலை முடுக்கிலும் இந்த உயிரினங்களைக் காண ஏலாது. இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்த உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விடும்; பூண்டோடு போய் விடும்"

"இந்த உயிரினங்களின் அழிவுக்கு மதிப்புப் புள்ளிகள் போட முடியுமா? கோடி புள்ளிகள் போட்டாலும் அவை ஈடாகுமா?"

"கடவுள் இந்த உயிரினங்களைச் சிருஷ்டித்தார். இவை எத்தனையோ கோடி ஆண்டுகள் இதே இடத்தில் உயிர் வாழ்ந்தன. ஆனால், இனிமேலும் அவைகள் உயிர் வாழும் பொறுப்பு கடவுள் கையில் இல்லை; உங்கள் ஒன்பது பேருடைய கைகளில்தான் இருக்கிறது" என்றேன்.

கூட்டத்தில் சிறிது நேரம் சலனமில்லை. சாயத்தின் முகம் பேயறைந்தது போலிருந்தது. பாதிரியாரின் முகத்தில் புன்சிரிப்பு.

தலைவர் ஐந்து நிமிடங்களில் தன் முடிவுரையைக் கூறினார். அதன் கடைசி வாசகம்:

"தகுந்த ஆதாரங்களினாலும், ஆணித்தரமான வாதங்களாலும் இந்த அணைக்கட்டு மனித மேம்பாட்டுக்கு உகந்ததல்ல என்பது தீர்மானமாகி விட்டது. ஆகவே இதைக் கைவிடும் ஆலோசனையை இன்றே அரசாங்கத்து ககு அறிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

* * *

வெளியே வந்ததும் எரிக்ஸன் என்னைக் கட்டிப் பிடித்து மேலே தூக்கினான்.

"எப்படி செய்தாய்?, எப்படிச் செய்தாய்?" என்று துளைத்து எடுத்தான். நான் "கச்சியப்பருக்கு நன்றி" (Thanks to Kachiyapar) என்று கூறினேன். "யாரிந்தக் கச்சியப்பர்?" என்று நச்சரித்தான். நான் "பிறகு சொல்கிறேன்" என்று கூறி அவனிடமிருந்து மெள்ளக் கழன்று கொண்டேன்.

அன்று பின்னேரம் எரிக்ஸன் மறுபடியும் என் அறைக்கதவை விடாமல் தட்டியபடியே இருந்தான். நான் சாயங்கால பூசையை முடித்துக் கொண்டு கதவைத் திறந்ததும் என் கையைப் பிடித்து இழுக்காத குறையாகத் தன் ரூமு கக அழைத்துப் போனான்.

அங்கே இருந்த வசதியான கதிரையில் அவன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னையும் இருக்கச் சொன்னான்.

பணிப்பெண்ணிடம் பீர் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அவள் அசைந்து அசைந்து பீரைக் கொண்டு வந்து வைத்தாள்; கண்களைச் சுழட்டி ஒரு வீசு வீசிவிட்டு போய்விட்டாள். எரிக்ஸனுடைய கண்கள் அவளைத் தடவி கொண்டே கொஞ்ச தூரம் பின்சென்று மீண்டும் திரும்பியது.

பீரை ஊற்றி சுவைத்துக் குடித்தான். பிறகு என்னைப் பார்த்து "யார், அந்தக் 'கசியபா', சொல்" என்றான். அவனுடைய ஆவலும் பீருடைய நுரை போல பொங்கிக் கொண்டு நின்றது.

நான் சொன்னேன்:

"எரிக்ஸன், 'கசியபா' இல்லை; 'கச்சியப்பர்' உனக்கு இது விளங்காது. எங்கள் பழக்க வழக்கங்கள், சமயக் கோட்பாடுகள் இவற்றை அறிந்த ஒருவரால்தான் நான் சொல்லப் போவதை உண்மையில் புரிய முடியும்; இது வீண் நேரம்."

அதற்கு எரிக்ஸன் "எந்த ஒரு விஷயமும் அதைச் சொல்லும் விதத்தில் இருக்கிறது. சொல்கிறவர் கெட்டிக்காரர் என்றால், புரிகிறவர் புரிந்து கொள்வார். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு, நான் புரியும் வரை புரிந்து கொள்கிறேன்" என்றான்.

காலைத் தூக்கி மேலே போட்டுக் கொண்டு, பீர் குடித்தபடி கந்தபுராணம் கேட்கம் முதல் மனிதன் இவனாகத்தானிருக்கம் என்று நான் என் மனதிற்குள் நினைத்துக் கொண்ட சொன்னேன்:

"கச்சியப்பர் என்பவர் கந்தப்புராணம் என்ற பெருங்காப்பியத்தை தமிழிலே பாடினார். அதை அரங்கேற்றும் போது, ஒரு இலட்சம் கிரந்தங்கள் கொண்ட அந்த நூலில் முதல் செய்யுளில், முதல் வரியில், முதல் வார்த்தையிலேயே ஒரு சிக்கல் வந்து விட்டது. சிக்கலோ பெரிய சிக்கல். ஆனால் கச்சியப்பர் ஆணித்தரமான ஆதாரத்தோடு அந்த சிக்கலை அவிழ்க்கிறார். சபையோருக்கு அவருடைய ஆழ்ந்த புலமையிலே அளவற்ற மதிப்பும், நம்பிக்கையும் பிறக்கிறது (the credibility is established)."

"அதற்கு பிறக கச்சியப்பர் மீதி செய்யுள்களையெல்லாம் தங்கு தடையின்றி படித்து, பொருள் கூறி வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தார்."

"என்னுடைய அபிப்பிராயம், அந்த முடிச்சை கச்சியப்பர் வேண்டுமென்றே வைத்தார் என்பது தான். அல்லாவிட்டால், ஒரு லட்சம் பாடல்களில் முதல் செய்யுளில், முதல் வரியில் ஒரு எக்கச்சக்கமான வார்த்தையை முதல் வார்த்தையாக முதல் வார்த்தையாக யாராவது வைத்திருப்பார்களா?"

"Y.D. இது நல்லாயிருக்கு; விபரமாய்ச் சொல்" என்றான் எரிக்ஸன்.

* * *

தொண்டை மண்டலத்திலே சிறந்து விளங்கும் காஞ்சி புரத்தில் காளத்தியப்பசிவாசாரியாருக்கு புத்திரராக பிறந்தார் கச்சியப்பர். அவர் தன் ஐந்தாவது வயதிலேயே வித்தியாரம்பம் செய்யப்பெற்று தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத் தேர்ந்து வல்லுனரானார்.

ஒரு நாள் குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் இவர் கனவிலே தோன்றி "அன்பனே, நீ நமது சரித்திரத்தை கந்தப்புராணம் எனப்பெயரிட்டு தமிழிலே பெருங்காப்பியமாகச் செய். அதற்கு முதல் அடியாக 'திகடசக்கரச் செம்முக மைந்துளான்' என்று தொடங்குவாயாக" என்று கூறி மறைந்தார்.

இவரும் அப்படியே கந்தப்புராணத்தைப் பாட ஆரம்பித்து நாளொன்றுக்கு நூறு பாடல்கள் பாடி அந்தக் காப்பியத்தை குறைவற முடித்தார்.

இந்த நூலை அரங்கேற்றும் பொருட்டு தமிழ் புலவர்களுக்கும், வேதவேதாங்க பண்டிதர்களுக்கும், சிவாகம விற்பன்னர்களுக்கும் தேவார திருவாசக வல்லுனர்களக்கும் ஓலை விடுத்து சபையைக் கூட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சுபதினத்தில் கந்தப்புராணத் திருமுறையை குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் முன்வைத்து துதித்து பின்னர் முதற் செய்யுளை உரைக்கலானார்:

'திகரசக்கரச் செம்முகமைந்துளான்' என்று வாசித்து, அதாவது 'திகழ்+தசம்+கரம்', விளங்குகின்ற பத்து திருக்கைகளும் செவ்விய ஐந்து முகங்களுமாகவுள்ள சிவவெருமான்' என்று பொருள் கூறித் தொடங்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்த புலவர்களிலே மூத்த புலவர் ஒருத்தர் எழுந்து "நில்லும், நில்லும்; திகழ் தசம் கரம் 'திகடசக்கரம்' என்று புணர்வதற்கு விதி தொல்காப்பியம் முதல் இலக்கண நூல்களில் இல்லையே? இது எப்படிப் பொருந்தும்" என்று கூறினார்.

அதற்குக் கச்சியப்பர் திகைத்து நின்று "இது முருகனே எடுத்துக் கொடுத்த அடியல்லவா? இதற்குக் கூட இலக்கண விதிகள் உண்டா?" என்று கேட்டார்.

அப்போது அந்தப் புலவரானவர் புன்முறுவல் பூத்து "உமக்கு அடியெடுத்துக் கொடுத்த முருகன் இவ்விடம் வந்து சாட்சி சொல்வாரானால் நாங்கள் அக்கணமே இதனை அங்கீகரிப்போம்; அன்றேல் இதற்கு யாதேனும் ஒரு பிற இலக்கண நூலில் விதி காட்டினும் அங்கீகரிப்போம்; அல்லாவிடில் அரங்கேற்ற ஒப்புக் கொள்ள மாட்டோம்" என்றார்.

இத்தருணத்தில் ஏனைய புலவர்களும் இரு கூறாகப் பிரிந்து தந்தமக்குத் தோன்றிய படி விவாதம் செய்ய அன்றைய போதில் முக்காப் போதும் கழிந்தது; கச்சியப்பரும் 'இதற்கு முடிவு நாளை தெரியும்' என்று கூறி சபையைக் கலைத்தார்.

கச்சியப்பர் முருகனின் நேரே போய் "அப்பனே, உன்னாலன்றோ நான் கந்தப்புராணம் பாட முற்பட்டது. அதற்கு நீ எடுத்துக் கொடுத்த அடியிலேயே இழுக்கு வந்துவிட்டதே? இது தகுமா?" என்று குறையிரந்தார்.

அன்றிரவு முருகன் அவன் கனவிலே தோன்றி "கச்சியப்பரே, பயப்பட வேண்டாம். சோழ தேசத்திலிருந்து ஒரு புலவர் நாளை வருவார். அவரால் சபையோருடைய ஐயம் தெளிவுறும்" என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் சபை கூடியது. அப்போது சோழ தேசத்திலிருந்து வந்த புலவர் ஒருத்த வீரசோழியம் என்ற இலக்கணநூலை சபையினரின் முன் சமர்ப்பித்து, சந்திப்படலத்தில் பதினெட்டாவது செய்யுளில் திகழ் தசம் என்பது திகடசம் என்று புணர்வதற்க விதியிருக்கிறதைக் காட்டினார். முன்னாளில் ஆட்சேபித்த புலவரும் அதனை வாங்கிப் படித்து 'திகடசக்கரம்' என்னும் புணர்ச்சிக்கு விதி சரியாயிருக்கக் கண்டு விம்மிதமும், மகிழ்ச்சியுமுற்றார்; மற்றைய புலவர்களம் ஒருவர் பின் ஒருவராக நூலை வாங்கிப் படித்து தங்கள் சந்தேகம் தெளிவுபெற்றனர்.

தடை பெற்ற அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. சபையோருக்க கச்சியப்பரிடத்தில் நம்பிக்கையும் மரியாதையும் பக்தியும் பெருகியது.

அதன் பிறகு தங்குதடை எதுவுமின்றி கச்சியப்பசிவாசாரியார் கந்தப்புராணத்தை வாசித்து பொருளும் கூறி அரங்கேற்றி முடித்தார்.

* * *

எரிக்ஸன் கதையை நன்றாக அனுபவித்துக் கேட்டான். விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு "உன்னுடைய கச்சியப்பர் பெரிய ஆள்தான்" என்றான்.

"இதை இனிமேல் 'கச்சியப்பரின் யுக்தி' (The Kachiyappar's strategy) என்று நாங்கள் எங்களுக்குள்ளே கூறிக் கொள்வோம்" என்றான்.

சிரித்துக் கொண்டே "சரி" என்றேன் நான்.

"ஏ! Y.D. அவுஸ்திரேலியாவில் நடக்கப் போகும் சம்மேளனத்துக்கு நீயும் வருகிறாயல்லவா? அங்கேயும் இதே யுக்தியை கையாளுவோம். அசந்து விடுவார்கள்" என்றான்.

நான் "ஒரு யுக்தியை ஒரு முறை கையாளலாம். இரண்டாவது முறையும் சமயோசிதமாகக் கையாண்டு தப்பிவிடலாம். ஆனால் மூன்றாவது முறை எதிராளி உசாராகிவிடுவான். அடுத்த முறைக்கு புதிதாக ஏதாவது யுக்தி தயார் பண்ண வேண்டியது தான். கந்தப்புராணம் போனால் என்ன? சிவ புராணம் இருக்கிறதே! ஏதாவது தோன்றாமலா போய்விடும்! என்றேன்.

"அதுவும் சரிதான்" என்றான் எரிக்ஸன்.

......

திகடசககரம் முற்றும்