கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வடக்கு வீதி  
 

அ.முத்துலிங்கம்

 

வடக்கு வீதி

அ.முத்துலிங்கம்

------------------------------------------------

சமர்ப்பணம்

இடருற்று அவதிப்படுவது மனிதர்கள் மாத்திரமல்ல; இந்தப் பூலோகத்தில் அழிவின் எல்லையில் பல விலங்கினங்கள், பறவைகள், ஏன் தாவரங்கள் கூட உண்டு.

மற்ற உயிரினங்களுக்கு தீங்கிழைப்பது வேறு யாருமில்ல; ஆறறிவு படைத்த மனிதன்தான். இந்த மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக மன்னிப்பு கேட்டு இந்நூலை இடருற்ற உயிரினங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

-------------------------------------------

என்னுரை

சமீபத்தில் நான் எதியோப்பியா நாட்டுக்கு சென்றிருந்தேன். இது பைபிளில் கூறப்படும் ஒரு பழம்பெருமை வாய்ந்த நாடு. யேசு பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இங்கே நாகரீகம் கொடிகட்டிப் பறந்தது. ஸ“பா என்ற அதிரூபசுந்தரி ராணியாக ஆட்சி புரிந்தது இங்கேதான். இந்த ராணி பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து பூதர்களின் அரசன் சொலமனை தரிசிக்க ஜெரூஸலம் சென்றதும் அவர்களுக்கிடையில் நட்புண்டாகி மெனலிக் எனற ஆண்மகவு பிறந்ததும் சரித்திரம். மெனலிக்கில் தொடங்கிய அந்த அரச பரம்பரை 3000 வருடங்கள் சங்கிலித் தொடர் போல நீண்டு சமீபத்தில் (1974) அரசன் ஹெயிலி செலாஸ’யின் முடியாட்சி பறிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த பாரம்பரியத்தில் எதியோப்பிய பெண்கள் பேரழகு படைத்தவர்கள். இங்கே ஓர் இளம் பெண்ணின் நடனம் பார்த்தேன். நடனம் முழுக்க அந்தப் பெண் தலையை ஒரு பக்கம் சாய்த்து கண்களால் நிலத்தை நோக்கியபடியே ஆடினாள். அவள் கைகளுக்கும் கால்களுக்கும் வேலை குறைவு. மார்புகளும், கழுத்தும், தலையும் மாத்திரம் நளினமாக குலுங்கிக் குலுங்கி அசைந்தன. பெண்ணின் முகத்தை மட்டும் கடைசிவரை பார்க்கவே முடியவில்லை. இது என்ன நடனம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். பரத நாட்டியம், கதக, கதகளி, ஒடிசி, மணிப்புரி போன்ற நடனங்களை பார்த்த கண்களுக்கு அப்படித்தான் தோன்றியது.

ஆனால் பிறகு சிந்தித்துப் பார்த்ததில் அந்த நடனத்திலும் ஓர் அழகு இருந்ததாக எனக்குப் பட்டது. அந்த நடனமே திருப்பி திருப்பி மனதிலே வந்தது. அதில் ஒரு நளினமும் மனதைக் கவரும் சக்தியும் இருந்தது புலப்பட்டது. ஒரு நாட்டு மக்களின் அழகுணர்ச்சியையோ, கலை வெளிப்பாட்டையோ சரியாக எடை போடுவதற்கு எனக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என்ற எண்ணம் வலுத்தது.

மேற்கு ஆப்பிரிக்காவில் நான் இருந்த சமயம். ஒரு நாள் தமிழ் சினிமாப்படம் ஒன்றை வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆப்பிரிக்கர் ஒருத்தர் உள்ளே வந்தார். நன்றாகப் படித்து உயர் பதவியில் இருப்பவர். வீடியோவில் கல்யாணசீன் ஒன்று நடந்துகொண்டிருந்தது. மணப்பெண் வழக்கம்போல ஒரு காலை மடித்து வைத்து மற்றக் காலை குத்துக்காலிட்டு நிலம் பார்த்து உட்கார்ந்திருந்தாள். இந்த மனுசன் கண் வெட்டாமல் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு சொல்கிறான், 'இந்தப் பெண் இருக்கும் முறை எவ்வளவு செக்ஸ’யாக இருக்கிறது' என்று. எனக்கு அதிர்ச்சி, அகராதிப்படி அந்தப் பெண் மிகவும் நாணமாக, ஒடுக்கமாக, பவ்யமாக அல்லவா இருந்தாள்!

இன்னும் எத்தனையோ, நாங்கள் மதித்துப் போற்றும் சில விஷயங்கள் பிற நாட்டவருக்கு விநோதமாகப் படுகின்றன. அவர்கள் செய்யும் காரியங்களோ எங்களை ஆச்சரியப்பட வைக்கின்றன. கன்னிமை என்பது எவ்வளவு பெரிய விஷயம். கன்னியம் காப்பது என்பது எங்கள் கிராமத்துப் பெண்களுக்கு ஒரு தவம் மாதிரி.

அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பதினாறு வயதுக்கு மேல் கன்னித் தன்மையோடு ஒரு பெண் இருந்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு அவமானம். அவள் பொய்யுக்காவது கன்னி கழிந்துவிட்டது என்று சொல்லவேண்டிய நிர்பந்தம்.

இது மாத்திரமா? அமெரிக்கக்காரனுக்கு எழுந்து மரியாதை செய்து 'சேர்' என்று அழைத்தால் பிடிப்பதில்லை. ஆங்கிலேயனுக்கு கால்களை ஒடுக்கிவைத்து மரியாதை முன்னே தலைகுனிந்து நிற்பது அசிங்கமாகப் படுகிறது. ஜெர்மன்காரனுக்கு கைகட்டி பவ்யமாக நின்றால் போதும், வேறு விளையே வேண்டாம். ஆனால் எங்கள் ஊர்களில் இன்றுகூட ஒரு பெரியவரைக் கண்டதும் தோளில் போட்ட சால்வையை எடுத்து கக்கத்தில் வைப்பது நடந்துகொண்டு தான் வருகிறது.

இப்படித்தான் அப்கானிஸ்தானில் ஒரு நாள் நாங்கள் பத்து பதினைந்து பேர் ஆட்டு மயிரில் செய்த கம்பளத்தில் நிரையாக உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம். பத்து அடி நீளமான ரொட்டி ஒன்று எங்கள் மடிகளில் மலைப்பாம்பு போல தவழ்ந்து கொண்டிருந்தது. நான் என் மடியில் கிடந்த ரொட்டிப் பகுதியை இழுத்து, பிய்த்து கடித்துக் கொண்டிருந்தேன்.

அங்கேயெல்லாம் மரக்கறி வசதி,அரிது. கோழி, ஆடு, ஒட்டகம் என்று எல்லாம் இறைச்சி மயம்தான். தேநீரில் தோய்த்து ரொட்டியை சாப்பிட்டபடியே நான் அவர்களுக்கு எங்கள் ஊர் நடப்பு ஒன்றை சொன்னேன். அங்கே எப்படி உடும்பு பிடிப்பார்கள் என்றும், அதை உயிருடன் கட்டி தொங்கவிட்டு, தோலை உரித்து என்னமாதிரி சமைப்பார்கள் என்பதையும் விவரித்தேன். அவர்கள் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். பத்து 'அவ்கானி' காசு கடனுக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல தயங்காதவர்கள், கல்நெஞ்சக்காரர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு உடும்புக்காக இரக்கப்பட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் சிந்தனையில் பிறந்ததுதான் 'உடும்பு' கதை.

அந்தக் காலத்து அரசர்கள் குற்றம் செய்தவர்களை குழுத்தளவு மணலில் புதைத்து வைத்து யானையின் காலால் இடறச் செய்வார்களாம். யானை முதல் முறை ஓடி வரும்போது அநேகமாக மிஸ் பண்ணிவிடும், பாகன் இரண்டாவது தடவையாக திருப்பிக் கொண்டு வருவான். யானை தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்ககும். பிறகும் தவறிவிடும். இப்படியாக நாலைந்து தடவை தவறவிட்டு கடைசியில் யானையின் கால்பட்டு தலை பனங்காய்போல உருண்டோடும். இவ்வளவுக்கும் புதையுண்டவன் மனம் என்ன பாடுபடும். எவ்வளவு கொடுமையான சாவு.

சிலுவையில் அறைவதும், கழுவில் ஏற்றுவதும் கூட இப்படித்தான். பயங்கரமான சாவு. உயிர் உடனே போகாது குற்றவாளி நோவு தாங்காமல் இரவிரவாக அலறிக்கொண்டே இருப்பானாம். இரண்டு மூன்று நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரியும். இப்படி கொடூரமான தண்டனைகள் இப்பவும் சில நாடுகளில் தொடருகிறது. பிரம்படி கொடுப்பதும், தலையை துண்டிப்பதும், கல்லால் அடிப்பதும் இன்றும் சில நாடுகளில் கடைப்பிடிக்கும் தண்டனைகள்தான்.

மேல்நாடுகளில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்லும்போது கூட அவைக்கு நோகாத மாதிரி பார்த்துக் கொள்ளுகிறார்கள். நான் சிறுவனாய் இருந்தபோது ஒரு பாவமும் அறியாத என்னுடைய செல்ல வளர்ப்பு நாயை, ஊரார் விசர் என்று தவறாகக் கணித்து உலக்கையால் அடித்து கொன்றதை கண்ணால் பார்த்தேன். அந்த நினைவில் பிறந்தது தான் 'எலுமிச்சை' கதை.

ஒரு கம்யூட்டர் ஒரு குடும்பத்துக்குள் புகுந்து விடுகிறது. அந்தக்குடும்பத்தினரின் அந்நியோன்யம் சடுதியில் கூடிவிடுகிறது. பேப்பர் விரயம் கம்யூட்டரின் வரவால் எப்படி தடுக்கப்படுகிறது; எவ்வளவு மரங்கள் காப்பாற்றப்படுகின்றன. கம்யூட்டருடன் பிணக்கமும், நட்பும் மாறி மாறி ஏற்படுகிறது. இதுதான் 'கம்யூட்டர்' கதை.

விசா வாங்குவதற்கும் அலைந்து அலைந்து, கால் தேய்ந்து வருடக்கணக்காக வருத்தப்பட்டு, அந்த சோகத்தில் பிறந்தது 'விசா' கதை.

அகதிகளாக புலம் பெயர்ந்தவர்கள் படும் அவதிபற்றி அநேக கதைகள் வெளிவந்துவிட்டன. அந்த அகதிகளின் சிலர் எதிர் நீச்சல் போட்டு உயர்நிலைக்கு வந்தாலும், அவர்கள் தங்கள் கலாசாரத்தில் எவ்வளவுதான் ஊளி ஊளி வளர்ந்தாலும், அந்நிய கலாசாரம் எப்படியும் அவர்கள் வாழ்க்கையில் மெதுவாக புகுந்து விடுகிறது என்பதைக் கூறுவது 'பூமாதேவி' கதை.

இப்படியாக ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிக்கதை உண்டு. எல்லாவற்றையும் நான் கூறுப்போவதில்லை. அநேகமாக கதைகளில் அடிநாதமாக மனிதநேயம், உயிர்நேயம் அல்லது பிரபஞ்சநேயம் இருக்கும். படிக்கும்போது வாசகர்களாகிய நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க்கையின் வடக்குவீதியில் நிற்கும் நான் இந்தத் தொகுதிக்குள் 'வடக்குவீதி' என்று தலைப்பிட்டது பொருத்தமே. இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் கதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியா டுடே, கிழக்கும் மேற்கும் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை; இன்னும் சில இந்தத் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை. இக்கதைகள் பற்றி வாசகர்களின் கருத்தை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

இந்நூலுக்கு ஓர் அழகான முன்னுரை வழங்கிய பெருமதிப்புக்குரிய நண்பர் அசோகர் மித்திரனுக்கும், எப்போதும் எனக்கு தூண்டுதலாகவும், உதவியாகவும் இருக்கும் அன்பு நண்பர் வி.சுந்தரலிங்கம் (பிபிசி) அவர்களுக்கும், இந்த தொகுதியை உரிய நேரத்தில் வெளிக் கொணர்ந்த மணிமேகலைப் பிரசுரத்தாருக்கும், அடங்கா ஆர்வமும் அன்பும் காட்டிய நண்பர் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் தக்க அட்டைப்படமும், உள்படங்களும் வரைந்துதவிய ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கும் என் அன்பு உரித்தாகுக.

அ.முத்துலிங்கம்
26, நவம்பர் 1997

--------------------------------------------------------

ஒரு சுருக்கமான முன்னுரை

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு 'வம்சவிருத்தி' நூலை முன்னிட்டுச் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்குச் செல்ல நேர்ந்தது. ஏராளமானோர் வந்திருந்தனர். அங்கு இலங்கைத் தமிழரின் ஒரு மிக முக்கிய படைப்பாளியான எஸ்.பொன்னுத்துரை இருந்தார். கோவி மணிசேகரனும் இருந்தார். கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் இருந்தார். லேனா தமிழ்வாணனும் இருந்தார். பல ருசிகளையுடைய படைப்பாளிகள் அங்கு முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டக் குழுமியிருந்தனர். அன்று நான் அவர் படைப்புகள் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் 'வம்சவிருத்தி' நூலிலுள்ள பதினொரு கதைகளையும் இந்தத் தொகுப்பில் அடங்கப்போகும் இன்னொரு பனிரெண்டு கதைகளையும் படித்த பிறகு முத்துலிங்கம் அவர்கள் ஏராளமான படைப்பாளிகளையும் வாசகர்களையும் கவர்ந்திருப்பதில் காரணம் தெரிந்தது. அவருடைய புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேற ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங்களையும் வெகு நுட்பமானவகையில் தூண்டிவிடக்கூடியது. தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்துபட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. அதே நேரத்தில் படிப்போரின் அந்தரங்க உணர்வை அடையாளம் சொல்லக்கூடிய குடும்ப மற்றும் சமூகப் பாத்திரம் மூலம் விசையூட்டக் கூடியது. அவருடைய மனிதர்கள் பலதரப்பட்டவர்கள்; ஆனால் தனித்துவம் உடையவர்கள். அனைவரும் நிஜத்தன்மையோடு உருவாகியிருப்பவர்கள். இதனால் அவர்களுக்கு நேரும் சில அசாதாரண நிகழ்ச்சிகள் கூடப் படிப்போருக்கு இயல்பானதாகவே தோன்றுகின்றன.

முத்துலிங்கத்துடைய உலகத்தில் இயற்கைக்கு நிறைய இடமிருக்கிறது. அது மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடமளிக்கிறது. இன்று சுற்றுக் சூழ்நிலைபற்றி யார் அக்களை காட்டுவது, சில தருணங்களில், நகைப்புக்கிடமாகக்கூட உள்ளது. முத்துலிங்கத்தின் கவனத்தில் மரம் செடிகளும் மிருகங்களும் அவற்றுக்குரிய முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு மரம் வீழ்த்தப்படும்போதோ ஒரு வீட்டுப் பிராணி கொல்லப்படும்போதோ முத்துலிங்கத்துக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் இந்நிகழ்ச்சிகளை விவரிக்கையில் அவர் மிகையுணர்ச்சியையும் பச்சாத்-தாபத்தையும் வெகு இயல்பாகத் தவிர்த்து அந்த நிகழ்ச்சிகளின் தவிர்க்க வியலாமையையும் குறிப்பிட்டு விடுகிறார்.

இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், முத்துலிங்கத்தின் நகைச்சுவையுணர்வு. எல்லா மனிதர்களையும் மிகுந்த பரிவோடு பார்க்கும் ஆசிரியர் அவர்களுடைய நடவடிக்கைகளில் உள்ள சில உம்சங்களையும் கவனித்துப் பதிவு செய்கிறார். ஒரு தகவல், நகைச்சுவை நிறைய உள்ள அவருடைய படைப்புகளில்தான் ஆழ்ந்த சோகமும் உள்ளது.

புனைகதையில் இன்று சாத்தியமான நவீனத்துவம் அனைத்தும் உள்ளடங்கிய அதேநேரத்தில் முத்துலிங்கத்தின் கதைகள் வாசகர்களில் பெரும்பான்மையோருக்கு எளிதில் எட்டக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன'. ஒரு நல்ல புனைகதாசிரியர் மனித நேயமும் ஜனநாயக உணர்வும் பெற்றிருப்பது அவருடைய வெளிப்பாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது. முத்துலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்.

சென்னை,
17, டிசம்பர் '97 அசோகமித்திரன்

---------------------------------------------------------------------

பொருளடக்கம்

வடக்கு வீதி ................................ 13

எலுமிச்சை ................................... 28

குந்தியின் தந்திரம்....................... 45

வசியம் ...................................... 56

பூமாதேவி .................................... 76

யதேச்சை ................................. 95

கம்புயூட்டர்.................................. 114

ரி ........................................... 132

உடும்பு ..................................... 149

மனுதர்மம் ................................... 166

விசா......................................... 182

ஒட்டகம் ...................................... 199

-----------------------------------------------------

இந்நூலாசிரியரின் பிற நூல்கள்

1. அக்கா (சிறுகதைத் தொகுப்பு)

2. திகட சக்கரம் (சிறுகதைத் தொகுப்பு)
(வில்லி தேவசிகாமணி விருது பெற்றது)

3. வம்சவிருத்தி (சிறுகதைத் தொகுப்பு)
(தமிழ்நாடு அரசு முதல்பரிசு பெற்றது)

--------------------------------------------------------

வடக்கு வீதி

அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும்.

மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக அது நன்றாக வேரூன்றி நின்றுவிட்டது. அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

சோதிநாதன் மாஸ்ரர் பயந்தங்கொடிபோல நெடுநேரம் வளர்ந்திருந்தாலும் முதுகு கூனாமல் நிமிர்ந்துதான் நடப்பார். நெற்றியிலே பளிச்சென்று திருநீறு. மார்பிலே அங்கங்கே வெள்ளி மயிர்கள் குடியிருக்கும். ஏதாவது தீவிரமாக யோசனை செய்வதென்றால் அவர் மஸாய் வீரன்போல ஒற்றைக்காலில் நின்றுதான் அதைச் செய்து முடிப்பார். நிற்கும் காலில் கச்சை முடிச்சுகள் ஆலம் விழுதுகள்போல கீழும் மேலுமாக ஓடித்திரியும்.

அவருடைய வாடகை அறையில் நாற்பது வருடத்திய பத்திரிகை நறுக்குகள் இடத்தை அடைத்துக்கிடந்தன. அவ்வப்போது வெளியாகிய அவருடைய கட்டுரைகளும் அதில் அடக்கம். இவற்றையெல்லாம் ஒருநாளைக்கு தரம் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும் என்று அவருக்கு ஆசைதான். ஆனால் அந்தச் சிறு அறையில் அது நடக்கிற காரியமா? இவ்வளவு காலமும் சிலந்தியுடனும், கரப்பான் பூச்சியுடனும்,சொடுகுடனும் வாழ்ந்து பழகிவிட்டார். அவற்றைவிட்டுப் பிரிவதும் அவருக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.

அவர் வெக சிரத்தை எடுத்து அந்த அறையை அப்படி அழுக்குப்பட வைத்திருந்தார், என்றாலும்கூட வெளியே போகும்போது நன்றாகக் கஞ்சிபோட்டு சலவை செய்த உடுப்பை அணிந்து கைகளை 15 டிகரி கோணத்தில் விரித்துக் கொண்டுதான் நடப்பார். பார்ப்பவர்களுக்கு உடனே மரியாதை செய்யத்தோன்றும். அப்பழுக்கில்லாத மனிதர் என்றுதான் எல்லோருக்கும் அவரை நினைத்திருந்தார்கள்.

குறையே இல்லாத சோதிநாதன் மாஸ்ரரில் இரண்டே இரண்டு குறைகளை மட்டும் சொல்லலாம். கட்டுரை எழுதத் தொடங்கினால் அவருக்கு நிறுத்தத் தெரியாது. எழுதிக்கொண்டே போவார். பேப்பர் முடியவேண்டும் அல்லது மை முடியவேண்டும். இரண்டாவது, காலையிலே வரும் பேப்பரை யாராவது அபர் படிக்குமுன் கலைத்துவிட்டால் அவருக்கு கெட்ட கோபம் வந்துவிடும். மற்றும்படிக்கு சாந்த சொரூபமானவர்.

இப்படிப்பட்ட சோதிநாதன் மாஸ்ரர் நித்திரை கொள்ள முடியாமல் தவித்தார். காரணம் அவருடைய மனதை ஒரு சிறுபெண் ஆழமாக காலைவிட்டு கலக்கிக் கொண்டிந்தது தான்.

பூமியின முகத்தை மூடி அந்தகாரம் சூழ்ந்திருந்தது. அந்த அதிகாலையிலேயே அவர் எழுந்துவிட்டார். கிணற்றடியில் போய் தண்­ர் பிடித்துவந்து கேத்திலில் சூடாக்கி தேநீர் போட்டு அருந்தினார். நேற்றுவரை மொட்டாக இருந்த நந்தியாவட்டை இன்று பூத்திருந்தது. அதிலே இரண்டு பூவைப் பிடுங்கி வந்து சாமி படத்துக்கு வைத்து அரைமணி நேரம் தியாணம் பண்ணினார். அப்பவும் மனம் அமைதியடையவில்லை.

வெளியே வந்து பார்த்தபோது சிவசம்பு வீட்டுப்பகுதி இன்னும் தூக்கத்திலேயே இருந்தது. வழக்கமாக அவர்களும் இந்நேரம் எழும்பி தங்கள் காரியங்களை தொடங்கியிருப்பார்கள். அலமேலுவின் பள்ளிக்கூட ஆரவாரங்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை.

அவளோ மொட்டவிழும் பிராயத்துப் பெண். ஒருவித பிரயத்தனமும் இன்றி இவர் மனதில் புகுந்து இவரை இம்சைப் படுத்தினாள். இந்த வெட்கக்கேட்டை யாரிடம் போய் சொல்லி அழுவார். ஒரு பக்கத்தில் பிறவிப் பயனை அடைந்துவிட்டதுபோல அவருடைய உள்மனது துள்ளியது. அதே சமயத்தில் பரம்பரை பரம்பரையாக சேர்த்துவைத்த கோழைத்தனமும் வெளியே வந்து அவரை வெருட்டியது. சோதிநாதன் மாஸ்ரர் ஒரு முடிவும் எடுக்க முடியாமல் சிறு பிள்ளைபோல தத்தளித்தார்.

கோயில் வீதிகளில் இரவுக்கிரவாகவே புதுக்கடகள் எல்லாம் முளைத்துவிடும். இந்தக் கடைகளை பிரதானமாக மொய்ப்பது பெண்களும், குழந்தைகளும் தான். பெண்களுக்கு பாத்திரக்கடைகள், வளையல் கடைகள் என்று ஏராளமாக இருக்கும். சிறுவர்களுக்கு விளையாட்டு சாமான்கள் வைத்திருக்கும் கடைகளில் தான் மோகம் அதிகம். ஆனால் அவற்றை வாங்கும் பண வசதி எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் ஐந்து சதம், பத்து சதம் என்று கைகளிலே வைத்துக் கொண்டு இங்கம் அங்குமாக அலைவார்கள். கடலை, பம்பாய் மிட்டாய், ஐஸ் பழம் இதில் எதை வாங்குவது, எதை விடுவது. இதுதான் அவர்களது முக்கிய ஏக்கம். அந்த சிறுவர்கள் குழம்பிப்போய் ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் தவித்துப்போய் நிற்பார்கள்.

அந்த வீடு அதி பயங்கரமான பாதுகாப்புகளுடன் இருந்தது. அதந் சொந்தக்காரர்தான் சிவசம்பு. அவருடைய தாத்தா 'கள்ள யாவாரம்' செய்து கட்டிய வீடு. சுற்றிலும் இருக்கும் மதில் சுவர்களில் விதம்விதமான கண்ணாடித் துண்டுகள் பதித்திருந்தன. உள்ளே இரும்புக் கிராதிகள் காரண காரியமில்லாமல் கண்ட இடத்திலும் போடப்பட்டுக் கிடந்தன. நடுநடுவே வலைக் கம்பிகள் வேறு. முழுக்க முழுக்க கள்ளனை மனத்திலே நிறுத்தி கட்டிய வீடு.

கள்ளனுக்கு அடுத்தபடி சூரியன். என்னதான் உக்கிரமாக வெய்யில் எரித்தாலும் ஒரு சின்ன ஒளிக்கீற்றுகூட உள்ளே போக முடியாதபடிக்கு ஒரு தந்திரத்துடனும், சூட்சுமத்துடனும் அது கட்டப்பட்டிருந்தது. நடுப்பகலில்கூட விளக்கை ஏற்றினால்தான் நடமாடமுடியும். இந்த வீட்டிலேதான் ஒரு அறையில் சோதிநாதன் வாடகைக்கு இருந்தார்.

சிவசம்புவுக்கு மாஸ்ரரைப் பிடிக்காது. ஏன் இந்த உலகத்திலேயே சிவசம்பு ஒரு 'கறுவம்' வைத்திருந்தார். கைகளைப் பின்னுக்க் கட்டியபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டுதான் உடப்பார். சிறுநீர் பாயும் தூரத்துக்குகூட அவரை நம்புவதற்கு அந்த ஊரில் ஆள் கிடையாது. அவர் வேலை முடிந்து வீட்டுக்கு பத்தடி தூரத்தில் வரும்போதே சேட்டைக் கழற்றிவிடுவார். அவர் மனைவி வாசலிலே காத்திருப்பாள். கொஞ்சம் வெற்றிலை போட்டு, கொஞ்சம் பவுடர் பூசி, கொஞ்சம் கர்ப்பமாக பிரசாதம் வாங்குவதுபோல மிகவும் பவ்வியமாக அந்த சேட்டைக் கையிலே வாங்கி அவரை அவசரமாக உள்ளே கூட்டிக்கொண்டு போவாள். பார்ப்பவர்கள் மிகவும் அந்யோன்யமான தம்பதிகள் என்றுகூட நினைக்கலாம்.

ஆனால் உள்ளே போன சிறிது நேரத்திலேயே பல விநோதமான ஓசைகள் கிளம்பும். சிவசம்பு தன் மனைவியின் இடுப்பிலே ஓங்கி உதைக்கும் சத்தம் கேட்கும். பிறகு அவளுடைய கர்ப்பப் பிறப்புகளின் ஓலம். அவளுடைய ஓலம். ஊமையர்களின் வருடாந்தக் கூட்டம்போல வசனமில்லாத ஒலிகள். தினம் தினம் இது தவறாமல் நடக்கும். இருந்தாலும் இந்த மனுசி ஒரு நாளாவது வாசலில் நின்று அவரை வரவேற்கத் தவறியது கிடையாது.

அவர்களுடைய மூத்த பிறப்புதான் அலமேலு. வீட்டுச் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக அடிக்கடி மாஸ்ரரின் அறைக்கு ஓடி வரத்தொடங்கினாள். அப்படித்தான் அவருக்கும் அவள்மேல் ஒரு பரிவு ஏற்பட்டது. அந்தப் பரிவுதான் இன்று வேறு உருவம் எடுத்து அவரை மிரட்டிக்கொண்டு இருந்தது.

சோதிநாதனுக்கு கணக்குத்தான் பாடம். ஆனால் தமிழிலும் நல்ல புலமை பெற்றவர். அவர் ஓய்வுபெற்ற பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் படிப்பதில் மிக்க ஆர்வமாய் இருந்தார்.

முதன்முதலில் அலமேலு அவரிடம் தமிழ்ப்பாடத்தில் சந்தேகம் கேட்டுத்தான் வந்தாள் அவர் பாடம் சொல்லிக் கொடுக்கும் விதம் அவளுக்கு நல்லாகப் பிடித்துக்கொண்டு விட்டது. எந்தப் பாடமாயிருந்தாலும் கதைகளும், உதாரணங்களுமாக உணர்ச்சி வயப்பட்டுவிடுவார். கணக்குப் பாடம் எடுக்கும்போது யாராவது கண்­ர்விட்டு உருகுவார்களா? சோதிநாதன் செய்வார்.

அலமேலுவின் உடம்பு முழுக்க சந்தேகங்கள் பொங்கும். அவளுடைய பல சந்தேகங்களை சோதிநாதன் தீர்த்துவைத்தாலும் பதிலுக்கு அலமேலுவும் அவருடைய ஒரு பெரிய சந்தேகத்தை ஒருநாள் தீர்த்துவைத்தான். ஆனால் அந்த விஷயம் அவளுக்கே தெரியாது.

விளக்கின் ஒளியில் அவள் மேசையில் இருந்து எழுதிக்கொண்டிருந்தாள். அவருடைய கைவிரல்கள் குவிந்து போய் பென்சிலை இறுக்கிப்பிடித்திருந்தது. 'கைவழி நயனம்' என்பதுபோல அவளுடைய வாய் கோணியபடி கைபோன பக்கம் இழுத்துக்கொண்டு போனது வெகு சிரமப்பட்டு தன்னுடைய பென்சில் இலகுவில் தர மறுத்த வார்த்தைகளை அவள் பலவந்தமாக பிடுங்கிக் கொண்டிருப்பதுபோல பட்டது.

தமிழ் பாடல்களில் 'பந்தார் விரலி' என்ற தொடர் அடிக்கடி வரும். அதற்கு அர்த்தம் 'பந்துபொருந்திய விரல்கள்' என்று சொல்வார்கள். சோதிநாதனின் மனக்கண்ணில் சங்க காலத்துப் பெண்கள் நிரையாக வந்து போவார்கள். அவர்கள் கைவிரல்கள் எல்லாம் நகச்சுத்து வந்து எலுமிச்சம்பழம் சொருகியதுபோல உருண்டு திரண்டுபோய் இருக்கும்.

அலமேலு கைகளைக் குவித்து எழுதும்போதுதான் அவருக்கு உண்மையான அர்த்தம் புரிந்தது. ஒரு சிறந்த கண்ணாடிப் பந்துபோல அது இருந்தது. பல்லியின் வயிற்றில் குட்டி தெரிவதுபோல அவள் கைவிரல்களில் ஓடும் ரத்தம் கூட அவருக்கு தெரிந்தது. பந்துபோன்ற அந்த கைவிரல் குவியலை எடுத்து முத்தமிடவேண்டும் போல பட்டது.

ஆனால் அப்போதுகூட அவருக்கு அந்த வித்தியாசமான எண்ணம் தோன்றவில்லை.

அவருடைய மனைவி இறந்தபோது அவருக்கு நாப்பத்தைந்து வயது. அந்த மரணம் இடி விழுந்ததுபோல வந்தது. இரண்டு வருடம் கழித்து அவருடைய மகளுக்கு நல்ல இடத்தில் சடங்கு பேசி வந்தார்கள். அது கடவுள் செயல்தான் என்று அவருக்குப் பட்டது. இப்படியான சம்பந்தத்தை அவர் கனவிலும் நினைத்திருக்க முடியாது. பையன் அவுஸ்திரேலியாவில் வதிவிடம் பெற்று நல்ல வேலையில் இருந்தான். இருந்த ஒரே வீட்டையும் விற்று கலியாணத்தை சிறப்பாகச் செய்து மகளை அனுப்பிவைத்தார்.

அவருடைய மகன் கதை வேறு. ஒரு நாள் விடிய எழும்பிப் பார்த்தால் ஆளைக் காணவில்லை. இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஒரு கடிதம் கூட தனக்கு எழுதிவைக்கவில்லையே என்று அவருக்கு கவலை. ஒரு நாளைக்கு அவனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கை கனகாலம் இருந்தது. பிறகு அதுவும் போய்விட்டது.

அவுஸ்திரேலியா போன கையோடு மகள் அடிக்கடி கடிதம் போட்டபடி இருந்தாள். பிறகு சில காலமாக வருடத்திற்கு ஒரு கடிதம் என்று ஆகிவிட்டது. தனித்து விடப்பட்ட மரமாய் அடிமண்ணுக்குள் போய் புதைந்துகொண்டார்.

சிகாடா பூச்சிபோல. இந்தப் பூச்சி பதினேழு வருடம் மண்ணுக்கு அடியில் புதையுண்டுபோய் கிடக்கமாம். பதினேழு வருட முடிவில் இது வெளியே வந்து இனச்சேர்க்கையில் ஈடுபட்டு பிறகு இறந்துபோகும். குஞ்சுகள் மீண்டும் மண்ணுக்குள் போய் புதைந்து கொள்ளும். இப்படி பதினேழு வருடங்கள் தவம் செய்தபிறகு இந்தக் குஞ்சுகளும் பெரிசாகி வெளியே வருமாம், சாவைத்தேடி.

அவர் மனைவி இறந்து பதினேழு வருடங்களாக இவர் செய்த தவம் ஒருநாள் திடீரென்று முறிவதற்கு இருந்தது. ஒளித்திருந்து எய்த பாணம்போல இவரைத் தாக்குவதற்கு அது தருணம் பார்த்திருந்தது. ஆனால் இது அவருக்கு அப்ப தெரியவில்லை.

வீட்டை விற்ற நாளில் இருந்து அவர் சிவசம்பு வீட்டில் ஓர் அறையில் வாடகைக்கு இருந்தார். பனங்கட்டிக் குட்டான் போல சின்ன வயசாக இருக்கும்போதே அலமேலு அடிக்கடி தத்திதத்தி அவருடைய அறைக்கு வருவாள். கொஞ்சம் வளர்ந்து கண்கள் மேசைக்குமேல் தெரியும் வயசில் ஓசைப்படாமல் வந்து இவர் எழுதுவதையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பாள். இவர் கதிரையிலே ஏற்றிவிடுவார். சிறிது நேரத்தில் சறுக்கி இறங்கிப் போய்விடுவாள். அவள் வளர வளர அவளில் பல மாற்றங்கள் தென்பட்டன. இவர்தான் அவற்றை கவனிக்கத் தவறிவிட்டார்.

இப்பொழுதெல்லாம் அவள் கிட்ட வரும் சமயங்களில் இரண்டு நாள் தண்­ரில் ஊறுவைத்த பயறுபோல ஒரு விதமான பச்சை வாசனை வருகிறது. அவளுடைய குரல் உடைந்து ரஹஸ்யம் பேசுவதுபோல இருக்கிறது. எவ்வளவுதான் உரத்துப் பேசினாலும் கசகசவென்றுதான் கேட்கிறது.

அவர் அறியாமல் இந்த விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன. நேற்றுப் பார்த்தபோது மொட்டாக இருந்த நந்தியாவட்டை இன்று பூத்துப்போய் கிடக்கிறது. இரவுக்கிரவாகவே சதியாக ஒரு மணமும், அழகும் அதற்கு வந்து சேர்ந்துவிட்டது. ஓர் இரவுக்குள் நடந்த இந்த அதிசயம் போலத்தான் இதுவும் இருந்தது.

சங்க காலத்து தமிழில் 'டீன் ஏஸ்' பெண்ணை 'மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் அலமேலுவின் அழகை பூரணமாக கொண்டுவரவில்லை என்று இவருக்குப் பட்டது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் 'முற்றா முகிழ்முலை' என்ற பாடல் வரிகள்தான் அவர் ஞாபகத்துக்கு வரும். ஒரு டீன் ஏஜ் பெண்ணை இந்த சொற்றொடர் முற்றிலும் வர்ணிக்கிறது என்று அவர் நினைத்தார். ஆனால் அப்போது கூட அவருக்கு அந்த எண்ணம் வந்தது கிடையாது.

ஒரு நாள் பைதகரஸ் என்ற கிரேக்க ஞானி 2500 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடித்த சித்தாந்தத்தை அலமேலுவுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. கண்களை கையகலத்துக்கு பெரிதாக்கி அவர் சொல்லுவதையே அலமேலு கவனித்துக் கொண்டிருந்தாள்.

முதலில் அந்த மகா ஞானியின் வாழ்க்கையைப் பற்றி சொன்னார். இந்தப் பிரபஞ்சத்தின் சாகசங்கள் எல்லாம் ஓர் ஒழுங்கோடும் எண்ணங்களின் அடிப்படையிலும் நடப்பதை விளக்கினார். பிறகு அந்த ஞானி எப்படி முக்கோணங்களையும், சதுரங்களையும் உபாசித்தார் என்பதையும், அவற்றில் இருந்து அவர் சிருஷ்டித்த சித்தாந்தத்தின் மகிமையையும் கூறினார்.

ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரண்டு பக்கங்களினதும் தனித்தனி வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமமாகும்.

அலமேலு மேற்படி சித்தாந்தத்தை வரி பிசகாமல் திருப்பித் திருப்பி மனனம் செய்தாள். இந்த பழம்பெரும் சித்தாந்தத்தின் அருமையை சோதிநாதன் உற்சாகத்துடன் விளக்கி அதை மூன்று வெவ்வேறு வழிகளில் நிரூபித்துக் காட்டினார்.

அலமேலு வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களின் ரப்பைகள் துடித்தன. இந்த சித்தாந்தத்தை இவ்வளவு எளிதாக, இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக யாரும் இதற்கு முன்பு அவளுக்கு விளக்கியது கிடையாது. சோதிநாதனின் இமையோரத்தில் சில நீர்த்துளிகள் சேர்ந்திருப்பதை அவள் அப்போதுதான் கவனித்தாள்.

மேளக்கச்சேரி என்றால் இங்கே நாதஸ்வரத்துக்கு இரண்டாவது இடம்தான். சுற்றுவட்டார ஊர்களிலிருந்தெல்லாம் தவில் வித்துவான்கள் வந்திருப்பார்கள். இந்த தவில் சமாவைக் கேட்பதற்கு சனங்கள் பொறுமையோடு இடம்பிடித்து மூன்று நான்கு மணித்தியாலங்கள் கூட சலிக்காமல் காத்திருப்பார்கள்.

தனியாவர்த்தனம் வழக்கமாக மேல் நீதியில்தான் நடக்கும் ஐந்து, ஆறு கூட்டம் என்று தவில் வாத்தியக்காரர்கள் சுற்றிவர நின்றுகொண்டே வாசிக்கும்போது பக்தர்கள் தங்களை மறந்து ரஸ’ப்பார்கள். இந்த ஆவர்த்தனம் முதலில் பெரிசாக தொடங்கி ஒவ்வொறு சுற்றும் வரவர சிறுத்துக்கொண்டே போகும். விறுவிறுப்பும் கூடும். கடைசியில் தீர்மானம் வைக்கும்போது சில பேருக்கு ஆவேசம் வந்துவிடும்; சிலருக்கு கண்­ர் வந்துவிடும்.

இருபத்தைந்து நூற்றாண்டுகள் கடந்து கண்கள் கலங்க, திரும்பவும் எண்கள் மயமான இந்த. உலகத்துக்கு வந்தபோதுதான் சோதிநாதன் மறுபடியும் அலமேலுவைக் கண்டார்.

நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக்கொடுத்து அவரையே பார்த்தபடி இருந்தாள், அலமேலு. சீரில்லாத பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவரைப் பற்றி இழுத்தது. பதினேழு வருடங்கள் தூங்கிய சிக்காடா பூச்சி அப்போது வெளியே வந்துவிட்டது.

அவளுடைய கன்னங்கள் சதுரமாகவும், அந்த மோவாய் முக்கோணமாகவும் இருந்தது. விடியவிடிய சந்திரவதனத்தை பாடிய தமிழ்ப் புலவர்கள் இந்த அழகைப்பாட மறந்துவிட்டார்கள். சதுரங்களும், முக்கோணமாகவும் பைதகரஸ”க்காகவே படைக்கப்பட்ட இந்த முகம் விளக்கின் வெளிச்சத்தில் ஒரு பிரமையாக அவருக்கு தெரிந்தது.

அன்று படுக்கப் போனபோது அவருடைய நித்திரை எதிர்த்திசையில் போய்விட்டது. மறுபடியும் யௌவனமாகி விட்டார். ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பதுபோல குறுகுறுப்பாக மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவரைத்தாக்கின.

அவர் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவர் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்கவேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பதுபோல பட்டது. அவர் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். அலமேலுவை அவரால் மறக்க முடியவில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பதுபோல அவருக்கு பட்டது.

அவள் வாயிலே எச்சில் குமிழ்கள் செய்து ஊதிய காலத்திலே இருந்து அவளை அவருக்கு தெரியும். ஆனால் இதற்குமுன் இப்படி நூதனமான அநுபவம் அவருக்கு ஏற்பட்டதில்லை. அந்தச் சிறு பெண்ணின் மனதில் என்ன இருந்ததென்றும் தெரியவில்லை. இரண்டு பேருக்கும் சேர்த்து அவரிடம் போதிய காதல் இருந்தது. இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திகைத்தார்.

மூன்று நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அழுக்குத் திரைச்சீலையும், தண்ணிப்பானையும், வட்டம் வட்டமாக நீர்பட்ட தலையணையுமாக அவர் உள்ளே அடைந்து கிடந்தார். அப்படியாவது அவர் அடிவயிற்றில் மூண்ட ஆசைத்தீயை அடக்கிவிடலாம் என்று எண்ணினார்.

மூன்றாம் இரவு நடுநிசியில் அவருக்கு ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. கட்டை அறுத்துக்கொண்டு ஓடித்திரியும் காளைமாட்டை அடக்கி இழுத்துக்கொண்டு வருவதுபோல் மனதை திரும்பவும் இழுத்துப் பிடித்து அடக்கிவிட்டார். வயதுக்கு ஒவ்வாத சிந்தனைகளை நினைத்து நாணமாக வந்தது. ஓவென்று ஓடிய நதி சமநிலைக்கு வந்து அவர் அடிமனதில் ஒரு நிம்மதி பிறந்தது.

கிணற்றடியில் போய் முகம் கழுவிக்கொண்டு தேநீர் வைப்பதற்கு ஒரு வாளி தண்­ர் பிடித்துக்கொண்டிருந்தார். துலாக்கொடி சரசரவென்று வழுக்கிக்கொண்டு வந்தது. அவர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாளியை எடுக்கப் போகும்போதுதான் அது நடந்தது.

அலமேலு வந்துகொண்டிருந்தாள். மத்து கடைவதுபோல அசைந்து. அவளுடைய தலைமயிர் கற்றைகள் கலைந்திருந்தன. அவை சூரிய ஓளிபட்டு தங்க நிறத்துடன் ஜொலித்தன. கண்கள் இன்னும் தூக்கம் கலையாமல் அரை மூடியில் இருந்தன. பாவாடையும் சட்டையும் உடுத்தியிருந்தாள். மேற்சட்டை அவசரத்தில் போட்டதுபோல ஒரு பக்கத்துக்கு தூக்கிக்கொண்டு நின்றது. பொங்களுலுக்குப் பிடித்த அடுப்புக்கட்டி போல அவள் புஜங்கள் வழவழவென்றும், இறுக்கமாகவும் இருந்தன. அருகில் வந்ததும் அவளுக்கே உரிய பெண் வாசனை சொட்டு நீலம் தண்­ரில் பரவுவதுபோல மெல்ல பரவியது.

சோதிநாதன் மாஸ்ரர் கவிகள் பாட மறந்த சதுரமான முகத்தையும், முக்கோண வடிவமான தாடைகளையும் பார்த்தார். இன்றுதான் முதல்முதல் பார்ப்பதுபோல அவரால் கண்களை எடுக்க முடியவில்லை. பிறந்த நாளிலிருந்து அவரில் விடுபட்டுபோன ஒரு துண்டு மீண்டும் சேர்ந்து கொண்டது போல ஒர் உணர்வு. இவ்வளவு காலமும் அவர் வாழ்ந்ததின் அர்த்தம் அவர் முன்னே நின்றுகொண்டிருந்தது. அவள் புஜத்தை எட்டி ஒரு கையால் தொட்டு தடவினார்.

அலமேலு பதறிவிட்டாள். ஐயோ! அங்கிள், என்ன செய்யுது? என்று சொல்லியபடி அவரைப்பிடித்து இரண்டு கைகளாலும் அணைத்துக் கொண்டுபோல் துணி துவைக்கும் கல்லிலே உட்கார வைத்தாள். தன்னுடைய இரண்டு கைகளையும் மார்புக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் மூன்றாக மடிந்துபோய் உட்கார்ந்தார். அவருக்கு வசதியாக அவருடைய கால் பெருவிரல்கள் அவருக்கு முன்பாக இருந்தன. அவற்றை முதன்முதல் பார்ப்பதுபோல உற்று பார்த்தபடியே இருந்தார். அந்த நேரத்தில் அப்படி இருப்பதுதான் அவருக்கு சரிபோல பட்டது.

சுவாமி புறப்பாடு ஆரம்பிக்கும்போது இரவு ஒரு மணி ஆகிவிடும். தெற்குவீதி தாண்டி மேல்வீதியில் நீண்ட மேளச்சமா முடித்து வடக்கு வீதிக்கு சுவாமி வரும்போது நாலுமணி ஆகிவிடும். எல்லோருக்கும் நித்திரை கண்ணுக்குள் வந்துவிடும். பக்தர்கள் எல்லாம் மெள்ள மெள்ள கழன்றுவிடுவார்கள். அப்போது எண்ணிப் பதினைந்தே பேர் இருப்பார்கள். அதில் தவில்காரர், நாயனம், பந்தம் பிடிப்பவர், எண்ணெய் ஊற்றுபவர் குருக்கள் என்று எல்லோருமே அடக்கம். இப்படி சுவாமி இருப்பிடத்துக்கு போக முடியாமல் தவியாய் தவிப்பார்.

இதைத் தவிர்க்க ஒரு தந்திரம் செய்வார்கள். கோயில் முன்றலில் சதிராடிய தேவடியாள்கள் இப்ப வந்து வடக்குவீதியில் ஒரு கும்மி அடிப்பார்கள். அவர்கள் தூக்கக் கலக்கத்தில் குனிந்து, குனிந்து உடலை வருத்தி கும்மி அடிப்பார்கள். தலைமயிர் கலைந்திருக்கம்; கண்மை கரைந்திருக்கும். நித்திரையின் மணம் அங்கே நிறைந் திருக்கும். பக்தர்கள் எல்லாம் தங்கள் தங்கள் சயணத்தை தள்ளி வைத்துவிட்டு இந்த நித்திரை கும்மியை ரசிப்பதற்காக நிற்பார்கள். கும்மி முடிந்ததும் கூட்டம் கலையப் பார்க்கும். அதற்குமுன் சுவாமியை தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் இருப்பிடத்தல் சேர்த்துவிடுவார்கள்.

திருவிழா என்றால் வடக்குவீதியைத் தாண்டிவிட்டால் நேராக இருப்பிடம் தான்.

சோதிநாதன் இப்போது வடக்குவீதியில் இருந்தார். நித்திரை கும்மியில் சிறு சபலம் இனிமேல் நேராக இருப்பிடம்தான்.

* * *

எலுமிச்சை

[கதைகளுக்கு முன்னுரை எழுதுவது எனக்குப் பிடிக்காது. அதென்ன கட்டியம் கூறுவதுபோல என்று கிண்டல் செய்வேன். கதையென்றால் சொல்ல வந்த விஷயத்தை கதையிலேயே சொல்லிவிட வேண்டியதுதானே! இது என்ன முன்னுரை? அறிவுரை?

ஆனால் இந்த முன்னுரை எழுதுவதில் ஒரு காரியமிருக்கிறது கு.அழகிரிசாமி எழுதிய 'குமாரபுரம் ஸ்டேஷன்' என்ற கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். அதில் ஒரு பாத்திரம் மூலமாக 'நாங்கள் ஒன்றை மனதில் நினைத்து செய்யும் செயல் எப்படி எங்களை அறியாமல் இன்னொரு காரியத்துக்கு உதவுகிறது' என்று சொல்லியிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நடந்த இந்த உண்மைச் சம்பவமும் அப்படித்தான். இனி, சற்று தள்ளி நில்லுங்கள். கதை வருகிறது]

செடியாக இருந்த அந்த எலுமிச்சை இப்பொழுது மரமாக வளர்ந்துவிட்டது. அம்மா அதைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். சதிருக்கு வந்த தேவடியாள் கையைக் காலை விசுக்கி ஆடுவதுபோல அந்த மரம் கிளையெல்லாம் வீசி வளர்ந்துவிட்டது. ஆனால் பேச்சுக்கு ஒரு பூ இல்லை; ஒரு காய் கிடையாது. ஓவென்ற மலட்டு மரம்.

அம்மாவும் செய்யாத வித்தையில்லை; பார்க்காத வைத்தியமில்லை. மண்ணை வெட்டி, கொத்தி பசளையெல்லாம் போட்டு அலுத்துவிட்டது. அது அசையவில்லை. வடக்கு வீதிக்கு வந்த மஞ்சவனப்பதி தேர்போல தன்பாட்டுக்கு நின்றது.

இப்படித்தான் முன்பு ஒரு கறிவேப்பிலைச் செடி. அம்மாக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ஒரு சாண் உயரத்துக்கு வளர்ந்த பிறகு ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் செத்துவிட்டது. அம்மாவும் 'விடேன், தொடேன்' என்று ஒன்பது தரம் ஒன்றன்பின் ஒன்றாய் செடிகளை நட்டு தன்கையால் தண்ணி ஊற்றி வளர்த்துப் பார்த்தாள், சரிவரவில்லை. கடைசியில் செல்லாச்சிக் கிழவி சொன்ன மந்திரம்தான் பலித்தது.

சூதகமாய் இருக்கிற நேரம் பார்த்து, பலபலவென்று விடியும் முன் ஒட்டுப்போடாத ஒற்றைத்துணி உடுத்தி, கிழக்குப் பார்த்து செடியை நட்டால் அது பிய்த்துக்கொண்டு வளர்ந்துவிடும் என்பதுதான் அது.

அம்மாவும் அப்படியே செய்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்! பார்த்துக் கொண்டிருக்கம்போதே மரம் வளர்ந்துவிட்டது. வளர்த்தியென்றால் அப்படி ஒரு வளர்த்தி. ஊர்ச்சனம் எல்லாம் கறிவேப்பிலை கேட்டு வரத் தொடங்கி விட்டார்கள். கையாலே பறித்துக் கொடுத்தது போய் கொத்தடி வைத்து ஒடித்துக் கொடுக்க வேண்டி வந்துவிட்டது. அவ்வளவு உயரம்.

காலை, பகல் இரவு என்றுகூட ஆட்கள் கறிவேப்பிலை கேட்டு வரத்தொடங்கினார்கள். அம்மாவும் சலிக்காமல் கொடுத்துவந்தாள். 'இது புண்ணியம் ஆச்சே!' என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

அந்த நேரம் பார்த்துத்தான் நாங்கள் நாய் வளர்க்கத் தொடங்கினோம். 'வீட்டுக்காரர், நாயைப் பிடியுங்கோ' என்று படலையில் இருந்து கூக்குரல் கேட்கத் தொடங்கியது.

நாயென்றால் ஏதோ சந்திரகுலம், சூரியகுலத் தோன்றலில்லை. சாதாரண ஊர் நாய்தான். நான் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது வழியிலே பொறுக்கியது. என்னுடையது கையையும் முகத்தையும் நக்கி என்னை அது ஆட்கொண்டுவிட்டது.

வீட்டிலே அம்மா முதலில் அடிபிடியென்று சத்தம் போட்டாள். பிறகு அது பால் குடித்த வேகத்தைப் பார்த்து அவள் மனது மாறிவிட்டது. பலூன் மாதிரி ஊதிப்போன வயிற்றைத் தூக்கிக்கொண்டு அது தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது அம்மாகூடச் சிரித்துவிட்டாள். இப்படித்தான் இந்த நாய்க்குட்டி எங்கள் வீட்டுச் சங்கதியானது.

குட்டியாயிருக்கும்போது அது செய்த வீர சாகஸங்களை வைத்து வீரன் என்று பெயர் வைத்தோம். அதுவும் கறிவேப்பிலை மரம்போல கிடுகிடென்று வளரத்தொடங்கியது. சாப்பாடு என்றால் வீரனுக்கு இதுதான் என்ற வரைமுறை கிடையாது. முருங்கக்காய்ச் சக்கையிலிருந்து சோறு, பருப்பு, பனங்காய் நார் என்று சாதி வித்தியாசம் பாராமல் சாப்பிட்டு பரிபூரண சந்தோசமாக இருந்தது.

என்னுடைய வாய் அசைந்தால் என் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கும் கொடுத்தபடியே சாப்பிட வேண்டும். கடைசியில் வெறும் கையைக்காட்டி, தொடையில் தட்டினால்தான் தன் வழியில் போகும். பள்ளிக்கூடத்து பாணில் இதற்கு ஓர் அளவுகடந்த பாசம். பள்ளி மணி அடித்ததும் காதல் வயப்பட்ட கன்னிப்பெண் போல உள்ளுக்கும், வாசலுக்குமாய் பறந்து திரியும். நான் வந்தேனோ இல்லையோ என் மீது பாய்ந்து பாணையும் சம்பலையும் பறித்துக்கொண்டு போய்விடும்.

வீரனின் முதுகில் நான் சவாரி செய்யும் அளவுக்கு குதிரைபோல வளர்ந்துவீட்டது. நான் அதோடு இருக்கும்போது பெரியவர்கள் கூட பயபத்தியோடு தூரதேசமாய் செல்வார்கள். எனக்கு கர்வம் தலைக்கு மேலேறிவிடும்.

அதற்கு வயசுக்கு வந்தபோது பக்கத்து வீட்டு கண்ணகியைச் சேர்த்துக்கொண்டது. ஒரு நாள் இரவு களவியல் நடத்த கண்ணகி வந்துவிட்டது. கண்ணகி என்றால் கற்பின் திருவுருவம் என்று அவசரப்பட்டு நினைத்துவிடக் கூடாது. எங்கள் ஊரில் அரைவாசி ஆண்நாய்கள் அதற்கு பின்னால்தான். அதனுடைய கருநீலச் சடையையும், மதுரையை எரித்த கண்களையும் வைத்து அப்படிப்பேர் வைத்திருப்பார்கள் போலும். கண்ணகியின் பின்னாலேயே வீரன் ஒடத்தொடங்கியது. குரைத்துக் குரைத்து துரத்தும் ஒலி. பிறகு. பிறகு 'பொதக்' என்று ஒரு சத்தம். அதற்குப்பின் மௌனம் மௌனம் என்றால் ஊயிரம் பேருடைய மௌனம்.

அப்பா அம்மா கூவினாள், 'இஞ்சருங்கோ, நாய் கிணத்துக்கை விழுந்திட்டுது போல கிடக்கு'. நாங்கள் அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு அடித்துபிடித்து கிணற்றடிக்கு ஓடினோம். உண்மைதான். கிணற்றுக்குள்ளே இருந்து 'சதக் புதக்' என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது. அவசரமாக ஒரு கயிற்றிலே அரிக்கன் விளக்கைக் கட்டி கீழே இறக்கிப் பார்த்தோம். ஒரு மண்ணும் தெரியவில்லை.

இந்தக் கலவரத்தில் ஊர் அரைவாசி கிணற்றடியில் கூடிவிட்டது. பக்கத்துவீட்டு சிவப்பிரகாரசம் பத்து பற்றறிபோட்ட ரோர்ச் லைட்டை கொண்டு வந்தார். பெரிய எழுத்து நல்லதங்காளை தினமும் பெரிய குரலில் படித்து தொண்டையை வளமாக வைத்திருப்பவர். ரோர்ச்சை அடித்துப்பார்த்தால் வீரன்தான் கிணற்றைச் சுற்றி சுற்றி ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தது. அவர் ஒருவரிடமே ரோர்ச் லைட் இருந்த படியாலும், உரத்த குரல் வளத்தில் அவருக்கு நிகர் எவரும் இல்லை என்றபடியாலும் நாய் மீட்பு பணிக்கு அவரே அக்கிராசனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாளியும் கயிறுமாக நாய் எடுப்பதற்கு நாங்கள் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. அடுத்ததாக, பனைநாரில் செய்த பட்டை கிணற்றில் இறக்கப்பட்டது. நாய் இந்த விசித்திரமான ஏற்பாட்டை 'இந்தா, என்று வந்து மணந்து பார்த்துவிட்டு திரும்பிவிடும். பட்டையில் ஏறினால் உயிர் தப்பிவிடலாம் என்று ஒருமுறை அதற்குப் பட்டதுபோலும், ஏறிவிட்டது. நாங்கள் எல்லாம் கூக்குரல் இட்டு அதைப் பதனமாக இழுத்தெடுக்கும்போது அது என்ன நினைத்ததோ மனதை மாற்றிக்கொண்டு மறுபடியும் பாய்ந்துவிட்டது.

கடைசியில் தொட்டில் யோசனையைச் சொன்னது பாவாடை சண்முகம்தான். இவர் படு அப்பாவி. ஒருமுறை கிணற்றடியில் மனைவியின் உள்பாவாடையை தோய்க்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டார். அன்றிலிருந்து அவர் பிரக்கியாதி இப்படி பரவிவிட்டது. இந்த ஒரு குற்றத்தைத் தவிர அவர் அவ்வப்போது அருமையான யோசனைகளை தரவல்லவர்.

எங்கள் ஊரில் எதற்கு குறைவிருந்தாலும் தொட்டிலுக்கு குறைவில்லை. மழையோ, வெய்யிலோ குழந்தை விளைச்சல் அமோகமாக இருக்கும். 'நீ, நான்' என்று தொட்டில்கள் வந்துவிட்டன. நாலு மூலையிலும் கயிறு கட்டி வெகு கவனமாக தொட்டிலை இறக்கினோம். தொட்டில் தண்­ரில் அமுங்கியபடியே இருந்தது. சிவப்பிரகாசம் ரோர்ச் லைட்டை கண்வெட்டாமல் அடித்துக் கொண்டிருந்தார். நாய் தொட்டில் பக்கம் நீந்திவந்தபோது சொல்லி வைச்சதுபோல நாலுபேரும் கயிற்றை இழுத்துவிட்டார்கள். நாய் தொட்டிலில் வசமாய் மாட்டிவிட்டது.

வெளியே வந்ததுதான் தாமதம் நான் அதை ஆசை தீரக் கட்டிப்பிடித்தேன். அது ஒரு சிலுப்புச் சிலுப்பி தண்ணியைச் சிதறடித்தது. பிறகு ஒரே பாய்ச்சல்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வீரன் கண்ணகியை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. எதிர் வீட்டு வண்டார்குழலியிடம் அதற்கு மையல் ஏற்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். (எங்கள் ஊரில் தமிழ்ப்பற்று கரைபுரண்டு ஓடிய காலகட்டம் இது. பற்பன்கூட தன் அணில் குஞ்சுகளுக்கு பரிமேலழகர், லோபாமுத்திரை என்று பெயர் வைத்திருந்ததாக ஞாபகம்)

எங்களுக்கு கணக்குப் பாடம் எடுப்பது கந்தையா வாத்தியார்தான். இவர் ஒரு தீவிரவாதி. இவர் பாடம் நடத்தும் போது நாங்கள் எல்லாம் கைவிரல்களை ஒன்றுகூடத் தவறாமல் மேசைமேலே வைத்திருக்க வேண்டும். மனக்கணிதம் என்றால் மனதால் சொல்லவேண்டும். கையால் சொல்லக்கூடாது என்பது இவருடைய அற்புதமான சித்தாந்தம்.

பதின்நான்கிலிருந்து ஒன்பது போனால் மிச்சம் எவ்வளவு. இதுதான் கேள்வி. நாங்கள் உயிரைக் கொடுத்து இதற்கு விடை தேடிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் வீரன் வந்து என் காலை நக்கியது. அதுமாத்திரமல்ல, விரகதாபக் கதாநாயகியைப் போல கொஞ்சம் முக்கல், முனகலையும் சேர்த்துக்கொண்டது.

கந்தையா வாத்தியார் எவ்வளவுதான் சுத்த வீரர் என்றாலும் அவருக்கும் நாய்க்கும் ஒரு சொந்தம் இருந்தது. அவர் வேட்டியைத் தூக்கினால் கணுக்காலில் இருந்து முழங்கால்வரை எல்லாம் நாய்க்கடி தழும்புகள்தான். இது புன்னாலைக்கட்டுவன் நாய், இது பெரிய கடை நாய், இது சித்தங்கேனி என்று வகைவகையான தழும்புகளை பொறாமைப்படும்படி காட்டுவார்.

நாயைக் கண்டதும் அவர் அஞ்சம் கெட்டு அறிவும் கெட்டு, 'ஆர், ஆர் அந்த நாயைப் பிடி; கொண்டுபோ, கொண்டுபோ, என்று கத்தத் தொடங்கிவிட்டார். ஒரு கால் நிலத்திலும், மறுகால் கதிரையிலுமாக எந்தத் திசையிலும் பாய்வதற்கு ஏதுவாக யுத்த சன்னத்தனாக நின்றார். நானும் இதுதான் சாட்டு என்று நாயை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வாத்தியாரைப் பயங்காட்ட என்னிடம் ஓர் அஸ்திரம் இருக்கிறது என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமுங்கி பள்ளிக்கூடத்திற்கு திரும்பிப்போக வசதியாக மறந்துவிட்டேன்.

அதற்கு பிறகுதான் அம்மா வீரனை பள்ளிநாட்களில் நான் திரும்பி வரும்வரை கட்டி வைக்கத் தொடங்கினாள். ஆனால் இரவு நேரங்களில் வீட்டைக் காக்கும் DUTY இருப்பதால் அது சுதந்திரமாக உலாவந்து காவல் வேலைகளைக் கவனித்தது.

அன்று சனிக்கிழமை, தலை முழுக வார்க்கும் நாள். வீடு முழுக்க தடபுடல் பட்டது. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து என்னைத் தயார்நிலையில் வைத்திருந்தார்கள். அடுத்த கட்டம் அரைத்து களியாக்கிய சீயக்காயைப் பிரட்டுவதுதான்.

அம்மா அலுமிச்சை மரத்தை பார்த்தபடியே நின்றாள். அம்மாவின் முகத்துக்கு கவலை தோதுப்படாது. அவளுடைய கண்களில் என்றுமில்லாத சோகம் கப்பியிருந்தது. ஐந்து சதத்திற்கு பத்து எலுமிச்சம்பழம் சந்தையிலே விற்ற காலமது. ஆனாலும் அம்மாவுக்கு அந்த மரத்தில் அப்படி ஒரு மோகம். அதை எப்படியும் காய்க்க வைத்துவிட வேண்டும் என்ற பிடிவாதம்.

அதற்கு முதல் நாள்தான் செம்பட்டையன் வந்து மண்ணைப் பிரட்டிக் கொத்தி, தண்ணியும் பாய்ச்சி விட்டிருந்தான். மலட்டு மரங்களுக்கே உரித்தான ஒருவித அலட்டலோடு அது நின்றுகொண்டிருந்தது. அம்மாவுக்கு சலிப்பாக வந்தது. இடுப்பிலே கையை வைத்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் நிறமே எலுமிச்சம்பழ நிறந்தான். அவள் அப்படி அண்ணாந்து பார்க்கும்போது நெற்றியில் இட்ட குங்குமத்தின் ஒரு துளி மூக்கிலே ஒட்டிக்கொண்டு இருந்தது. அது ஒரு சிவப்புக்கல் மூக்குத்திபோல அழகாகத் தெரிந்தது. அம்மா அந்தக் கணம் என்ன நினைத்தானோ, கனத்த பெருமூச்சொன்று வெளியே வந்தது.

அம்மா அப்படி கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை அந்த மரத்தின் விதியை மாற்றப் போகும் ஒரு சம்பவம் சீக்கிரமே அங்கே நடப்பதற்கு இருந்தது. அப்போது அது அம்மாவுக்கும் தெரியவில்லை; எனக்கும் தெரியவில்லை; மரத்துக்கம் தெரியவில்லை.

எனக்கு கண்ணில் எண்ணெய் வழிந்து எரிந்துகொண்டிருந்தது. நான் அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தபடியே இருந்தேன். அம்மா இருந்த இடத்ரைவிட்டு அரைசயவில்லை; அந்த மரத்தைப் பார்த்தபடியே இருந்தாள்.

அப்போதுதான் அது நடந்தது. எங்கள் வேலைக்காரப் பெட்டை இளைக்க இளைக்க ஓடி வந்தாள். 'அம்மா, வாருங்கோ, வாருங்கோ; சுறுக்கா வாருங்கோ. விதானை யாரை நாய் கடிச்சிட்டுது' என்று கூக்குரலிட்டாள்.

எங்கள் ஊரில் நாய் கடிப்பது என்பது சர்வ சாதாரணம். நுளம்புக்கடி, மூட்டைக்கடி போலத்தான் இதுவும். எனக்கு எட்டு வயது முடிவதற்கிடையில் நான் மூன்றாம்தரம் நாயிடம் கடி வாங்கியிருக்கிறேன். ஆனால் இதை எங்கள் வகுப்பில் சொல்லுவதற்கு வெட்கம். என்னோடு படிக்கும் கூட்டாளிகள் பற்பனும், கிட்ணனும் இரணை வாழைப்பழம்போல ஒட்டிக்கொண்டு திரிவார்கள். பற்பன் கறுத்து மெலிந்துபோய் இருப்பான்; கிட்ணனோ இரண்டு ஆட்டில் ஊட்டிய குட்டிபோல தளதளவென்று இருப்பான். இந்த கிட்ணனுக்கு எட்டு தடவையும், பற்பனுக்கு பதினாலு தடவையும் நாய் கடிச்சிருக்கு. நாங்கள் எங்கள் விழுப்புண்களை ஆளுக்கு ஆள் காட்டி மகிழ்ந்திருக்கிறோம்.

நாய்க்கடிக்கு வைத்தியமும் அப்படித்தான். நவசியரிடம் தான் போவோம். அவர் மந்திரித்துக்கொண்டே பச்சிலைச் சாறை தலையிலே தேய்த்து நடு உச்சி மயிரையும் மூன்றுதரம் இழுத்துவிட்டு, பச்சிலையையும் கடிவாயில் கட்டிவிடுவார், அவ்வளவுதான்.

என்னைப்போல ஒரு மகாசாது உலகத்தைப் பிரட்டிப் போட்டாலும் கிடைக்காது. மற்றவர் சோலிக்கு போனதில்லை. அப்படிப்பட்ட என்னை மடக்க கண்ணகி ஒரு தந்திரம் செய்தது.

** இதன் தொடர்ச்சி VADAKKU2.MTF ல் வருகிறது.
பால் வாங்கிவர கிளம்பினேன். அழகம்மாக்கா வீட்டுக்குத்தான் முதலில் போனேன். அங்கே பால் தீர்ந்துவிட்டது. உடனே வடிவக்கா வீட்டுக்குத் திரும்பினேன். அது வற்றாத ஊற்று. இருபத்து மணி நேரமும் பால் பொங்கிய படி இருக்கும். என் தலையை தூரத்தில்

** VADAKKU1.MTF ன் தொடர்ச்சி **

வழக்கம்போல மருந்துச் சிரட்டையை எடுத்துக்கொண்டு முலைப்பால் வாங்கிவர கிளம்பினேன். அழகம்மாக்கா வீட்டுக்குத்தான் முதலில் போனேன். அங்கே பால் தீர்ந்துவிட்டது. உடனே வடிவக்கா வீட்டுக்குத் திரும்பினேன். அது வற்றாத ஊற்று. இருபத்து மணி நேரமும் பால் பொங்கிய படி இருக்கும். என் தலையை தூரத்தில் கண்டவுடனேயே ரவிக்கையை தளர்த்தி வாசலுக்கு வந்துவிட்டா, வடிவக்கா.

சிரட்டை நிறைய சுடு பால் தளும்ப ஏந்திக்கொண்டு மெள்ளத் திரும்பும்போது கண்ணகி கண்டுவிட்டது. ஒருவித புளகாங்கிதத்தோடு என்னைத் துரத்தத் தொடங்கியது.

கண்ணகிக்கு சிறுவர்களின் பிருட்டச் சதையில் அப்படி ஓர் ஈடுபாடு. அதுவும் எனக்காக இவ்வளவு நாளும் விரதம் காத்திருந்தது. நான் சிரட்டையை கடாசிவிட்டு ஓடிப்போய் வேலியில் பாய்ந்து ஏறுமுன் எட்டிக் கடித்துவிட்டது. நான் அழுதுகொண்டே அம்மாவிடம் ஓடிப்போனேன். அம்மா களிசானை இழுத்துப் பார்த்துவிட்டு 'ஐயோ! மூன்று பல்லு பதிஞ்சிருக்கு' என்று ஓலமிட்டாள். நான் பட்ட அவஸ்தையெல்லாம் அந்தக்கணம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது. மூன்று பல் என்றதும் பற்பனைப் பார்த்து புளுகுவதற்கு என்னிடம் ஒரு அபூர்வ விஷயம் கிடைத்ததென்பதில் என்மனம் குதிபோட்டது.

வீரன் கிராமத்து நாய்க்குரிய சகல லட்சணங்களையும் கொண்டிருந்தது. கிடைத்ததைச் சாப்பிட்டு, தானுண்டு தன் வாசலுண்டு என்று கிடக்கும். தூங்குகிற நேரத்தில் தூங்கி விழிக்கிற நேரத்தில் விழித்து காவல் கடமைகளைச் சரிவரச் செய்யும் தன் குல ஆசாரம் தவறாமல் அவ்வப்போது தெருச் சண்டைகளில் கலந்துகொள்ளும் மற்றும்படி, ஆட்களைக் கடித்ததென்பது அதன் பயோடேட்டாவில் கிடையாது.

இப்படிப்பட்ட வீரன் விதானையாரைப் போய் கடித்துவிட்டது. இப்ப இரண்டு நாளாய் அது சுரத்தில்லாமல்தான் இருந்தது. சம்மாட்டுத் துணிபோல சுருண்டு சுருண்டுபோய் கிடந்தது. மயிலை நிறக் கண்கள் மஞ்சளாகிவிட்டன. பெரிய சிரமத்தோடு தன் பாரிய உடம்பை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டுதான் அது நடந்தது.

பள்ளிக்கூடத்தில் என் யோசனை முழுக்க வீரனைப் பற்றியே இருந்தது. ரத்தினேஸ்வரி அக்காவுக்கு அது தெரியாது. ஒரு சதக்காக போல வட்டமான முகம். அவ என்றால் இடைத்தொடர் குற்றியலுகரம் பற்றி இடைவிடாது உருவேற்றிக் கொண்டிருந்தார். 'என் சொல்லை ஒருபோதும் தட்டாதே! என் வாசக்கட்டி! எதற்காக விதானையாரைப் போய் கடித்தது. அதற்கு ஏதாவது நடந்துவிடுமோ?' என்று ஒரே பயமாக இருந்தது. அப்பொழுதே ஓடிப்போய் வீரனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும்போல பட்டது.

நான் பயப்பட்டது சரிதான். நான் திரும்பி வந்தபோது எங்கள் வீட்டுப் படலையில் ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது எனக்கு துணுக்கென்றது. எங்களுடைய ஐயா, நவசியர், சிவப்பிரகாசம், வல்லியர், சிவக்கொழுந்து என்று முக்கியமானவர்கள் எல்லாம் சேர்ந்துவிட்டார்கள். அம்மா காத்திருந்து என்னுடைய கையைப் பிடித்து திண்ணைக் குந்தில் தூக்கிவிட்டாள்.

நாய்க்கு விசர் பிடித்துவிட்டதாம். அது கடித்தால் ஆட்கள் சாவது நிச்சயமாம். என்னைக் கிட்டப் போக வேண்டாம் என்று அச்சுறுத்தி வைத்தார்கள்.

அப்போதுதான் நான் வீரனைப் பார்த்தேன். அது வேலியோரத்தில் நின்றுகொண்டிருந்தது. தலை தோறுக்குக் கீழே தொங்கியது. இரைத்து, இரைத்து குலைத்தது. வால் கால்களுக்கிடையில் சுருண்டுவிட்டது. நாக்கைத் தொங்கப் போட்டபடி நிலை குத்தாமல் பார்த்தது. வீரன் போலவே இல்லை. நாலு நாளில் குருக்கடித்த வாழைபோல உருத்தெரியாமல் மாறிவிட்டது.

ஊர் முழுக்க இந்தப் புதினம் பரவிவிட்டது. அப்பொழுது பறவைக்காவடி எடுத்ததுபோல பறந்துவந்தார் பற்பனின் அப்பா. இவர் பாட்டு வாத்தியார். சங்கீத ஞானம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் வீட்டுக்கு வீடு 'வரவீணாவை' பிரபலப்படுத்தி வரலாறு படைத்தவர். ஆரபி ராகத்தில் அளவில்லாத பக்தி. எப்பவும் அதை வெளியே விடாமல் வாய்க்குள் வைத்து முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். ஏகப்பட்ட குஷ’ பிறந்துவிட்டால் மட்டும் வாயால் பாடுவார். சொல்லாமல் கொள்ளாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் அங்கேயே நின்று அவஸ்தைப் படுவார். கீழே இறங்கமாட்டார்.

இவ்வளவு கீர்த்தி இருந்தாலும் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர். 'நாய்க்கு விசரில்லை; பாவம், ஏதோ வருத்தம்' என்று முதன்முதலாக துணிந்து நாயின் கட்சியைப் பேசியவர் இவர்தான்.

இப்ப கூட்டம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்தன. நாயைக் கொன்றுவிட வேண்டுமென்பது ஒரு கட்சி. இன்னும் கொஞ்சநாள் வைத்துப் பார்க்க வேண்டுமென்பது அடுத்த கட்சி. ஒருவரும் விட்டுக் கொடுப்பதாயில்லை. அந்தக்காலத்தில் நாங்கள் மூன்றாவது அம்பயருக்கு எங்கே போவது?

அப்பொழுதுதான் எடுப்பான குரலில் நவசியர் பேசத் தொடங்கினார். இப்படியான சங்கதிகளில் எங்கள் ஊருக்கு அவர்தான் 'வேதநூலறிந்த மேதகு முனிவர்'. திருப்பித் திருப்பி ஒத்திகை பார்த்த பட்டாளத்து வீரர் நடைபோல அவருடைய சொற்கள் ஒரு நிதானத்துடன் தாளம் தவறாமல் வந்து விழுந்து கொண்டிருந்தன.

'இஞ்ச கேளுங்கோ! நான் சொல்லுறதை வடிவாய்க் கேளுங்கோ! நாய் தண்ணியைக் காட்டினால் குலைத்தபடியே இருக்கு; குடிக்குதில்லை. நாக்கு தொங்கிப்போயிருக்கு; தண்ணி கொட்டினபடியே கிடக்கு. நாய்க்கு விசர்தான்; ஐமிச்சமே இல்லை!' என்று அடித்துக் கூறிவிட்டார். விசாரணைக் கூட்டம் முடிவு பெற்றது. மன்னர் பேச்சுக்கு மறு பேச்சுண்டோ?

இப்படியாக எங்கள் வீட்டு நாயின் எதிர்காலத்தை நாயை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தீர்மானித்தது எனக்கு தர்மமாகப் படவில்லை.

வேலைக்காரப் பெட்டை தோன்றினாள். அவள் அப்படித்தான் சாமி வரம் தர வருவதுபோல திடுதிப்பென்று தோன்றுவாள். தன் கன்னத்தில் விரலை வைத்து தலையை சிறு அசைப்பு அசைத்து என்னைப் பார்த்தாள். 'நாயை அடிக்க செல்லத்தம்பி வரப்போறான்' என்று மொய் அறிவிப்பு செய்வது போலச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள் பாதகத்தி.

கிராமங்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பேர் வந்துவிடுகிறது. இது எப்படி என்ற பூர்விகம் யாருக்கு தெரியாது. மாட்டுக்குச் சரி, குதிரைக்குச் சரி லாடம் அடிப்பதென்றால் சின்னையன்தான்; தென்னை மரத்திலேறி பருவம் தாண்டாத ஆட்டுச்செவிப் பதம் இளநீர் வெட்டுவதென்றால் அதற்கு மாணிக்கன்தான். அந்தக் கலையில் அவனை மிஞ்ச ஆள் இல்லை. விசர் நாயை அடிப்பது என்றால் அது செல்லத்தம்பிதான். அவனுக்கு அப்படி ஒரு கீர்த்தி.

இவர்கள் எல்லாம் எந்தப் பயிற்சி மையத்தில் கற்றுத் தேர்ந்தார்கள். நான் அடிப்பதில் ஒருவன் கியாதி பெறுவதென்றால் எத்தனை நாயைக் கொண்றிருக்கவேண்டும்?

செல்லத்தம்பி பின்னுக்கு கைகளைக் கட்டியபடி நிலம் அதிராமல் நடந்துவந்தான். அவன் புஜத்தின் தசைகள் திரண்டு திரண்டு கிடந்தன. தோளிலே போட்ட துண்டு முதுகிலே இருந்த வாள் வெட்டுக் காயத்தை முற்றிலும் மறைக்க முடியாமல் கிடந்தது.

வீரனை இப்ப பிடித்துக் கட்டிவிட்டார்கள். கழுத்திலே இரண்டு சுருக்கு கயிறு; ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. மற்றது ஒரு வேலிக் கதியாலில். வீரன் கால்களைப் பரப்பிக்கொண்டு நடுவிலே அசையமுடியாமல் நின்றது. ஏதோ அனர்த்தம் நடக்கப் போகிறது என்று அதன் உள்ளுணர்வுக்கு தெரிந்திருக்கவேண்டும். ஒரு சத்தம் இல்லை; முனகல் இல்லை. சுற்றியிருந்த அந்த முகங்களில் ஒரு சிநேகமான முகத்தை அது தேடியிருக்கவேண்டும். மஞ்சள் பழுத்த அந்தக் கண்கள் பரிதாபகரமாக என்னை ஒரு கணம் பார்த்து மீண்டன.

சுயம்வரத்துக்கு ஆள்விட்டு அழைத்ததுபோல கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் இளந்தாரிகள் எல்லாம் நெருக்கி அடித்தார்கள். நாய் அடி என்பது ஒவ்வொரு நாளும் பார்க்கக் கிடைக்கிற சங்கதியா? செல்லத்தம்பி மேல் துண்டை ஒரு மரக்கிளையில் மாட்டிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டினான். இரும்புப் பூண்போட்ட உலக்கையை யாரோ அவன் கையில் கொடுத்தார்கள். அதை ஒற்றைக் கையால் பின்னால் பிடித்தபடி வியூகத்தை உடைத்துக்கொண்டு நாய் இருந்த திக்கில் பராக்குப் பார்த்தபடி மெள்ள அடிவைத்து நடந்தான்.

எனக்கு அந்த நேரம் பச்சாத்தாப உணர்விலும் பார்க்க இந்த நாய் அடி எப்படி இருக்கும் என்ற ஆவல் ஒரு கணம் தோன்றியதை நினைத்து வெட்கமாக இருந்தது.

கிட்டவந்த செல்லத்தம்பி காலை அகட்டி வைத்து வாகாக நின்றுகொண்டு கண் இமைக்கும் நேரத்தில் உலக்கையைச் சுழற்றி நாயின் மண்டையில் ஒரு போடு போட்டான். 'ங்கா' என்ற ஈனமான கதறல் ஊ‘ முழுவதும் கேட்டது. நாய் சுருண்டுபோய் விழுந்தது.

நான் கொஞ்சம் கிட்டவந்து பார்த்தபோது அதன் தலையிலே ஒரு சொட்டு ரத்தம் சிந்தியிருந்தது. கபாலம் வெடித்து வெள்ளைக் களிபோல மூளை ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் அகலமாகத் திறந்துபோய் கிடந்தன. நாயின் பற்கள் ஆவென்று என்னைப்பார்த்து சிரித்தன. என்னுடைய இருதயம் மெதுவாகக் கிளம்பி தொண்டைக் குழியை வந்து அடைத்துக் கொண்டது.

செல்லத்தம்பி நாய் அடித்த கதை அட்ட திக்குகளிலும் பரவிவிட்டது. அந்தப் பரிதாபத்தையே எல்லோரும் கதைத்தார்கள். அவன் உலக்கையை எடுத்த விதத்தையும், விசுக்கியதையும், ஒரேயடியில் நாயை வீழ்த்தியதையும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்கள்.

ஆட்கள் எல்லாம் போன பிறகு அம்மாவைப் பார்த்து ஐயா 'என்ன செய்வம்? என்று கேட்டார். அம்மா கண்ணைத் துடைத்தபடி,'அந்த எலுமிச்சை மரத்தடியில் தாட்டு விடுங்கோ' என்றாள்.

நாயை அடித்துக் கொன்றுவிட்டாலும் ஊரில் விதானை யாருக்க என்ன நடக்குமோ என்ற பயம் இருந்துகொண்டுதானிருந்தது. ஊர்ச்சனங்கள் எல்லாம் அடிக்கடி போய் 'இன்னும் இருக்கிறாரா' என்று நோட்டம் பார்த்து வந்தார்கள். விசர் பிடிக்க பதினாலு நாள் ஆகும் என்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். விதானையர் என்னவென்றால் பச்சிலையைக் கட்டிக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டார். வண்டி கட்டி பெரியாஸ்பத்திரிக்கு போகும்படி சிலர் வற்புறுத்தியும் அவர் தலையைப் பலமாக ஆட்டிவிட்டார்.

சனியோட சனியெட்டு, ஞாயிறு ஒன்பது என்று பதினாலு நாள் கழிந்துவிட்டது. ஒன்றுமே நடக்கவில்லை. விதானையார் என்றால் மழைக்கு வெடித்த மரவள்ளிபோல விளைந்துபோய் இருந்தார். காயம் ஆறின இடம்கூடத் தெரியவில்லை. முன்புபோல அவர்தன் காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

இப்படித்தான் நான் எனது பால்ய காலத்து அத்தியந்த நண்பனை மூடசனங்களின் அறியாமையால் இழக்கவேண்டி நேர்ந்தது. அதனுடைய ஓவென்ற அவலக்குரல் எனக்கு பல இரவுகள் தொடர்ந்து கேட்டன. அதை இழுத்துக்கொண்டு போனபோது மஞ்சள் கண்களால் அது என்னை இரந்து பார்த்தது திருப்பித் திருப்பி ஞாபகத்துக்கு வரும். இனி என்ன? அது திரும்பவா போகிறது?

இந்த அநியாயக் கதையில் சொல்லுவதற்கு இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது.

அந்த வருடம் அம்மாவின் எலுமிச்சை மரம் இலை தெரியாமல் பூத்துக் குலுங்கியது. கொத்துக் கொத்தாய்க் காய்த்தது. காலை நேரங்களில் நிலம் முழுவதும் வெளிர் மஞ்சள் பந்துகளாக எலுமிச்சம் பழங்கள் பரவிக் கிடந்தன. பேய்க் காய்ச்சல் என்று சொல்வார்களே, அப்படி. அம்மா விழுந்து விழுந்து பொறுக்கினாள். அள்ள அள்ள வந்து கொண்டே இருந்தது. ஆசைதீர ஒரு பெரியசாடி நிறைய ஊறுகாய் போட்டாள், அம்மா.

எல்லோரும் வட்டமாக இருந்து சாப்பிடும்போது அம்மா ஊறுகாயைப் பரிமாறினாள். கையில் எடுக்கும்போதே மணம் தூக்கியது. நடு நாக்கில் புளித்து உள்ளே செல்லும்போது காரமாக தொண்டையில் உரசியது. ஐயாவுக்கு, அம்மாவை லேசிலே பாராட்ட மனம் வராது. அன்னு என்னவோ ஐயா, 'ஊறுகாய் அருமையாய் விழுந்திருக்கு' என்றார். எல்லோரும் சப்புக்கொட்டி அதை ரசித்து சாப்பிட்டார்கள்.

ஒருவருக்காவது வீரனுடைய ஞாபகம் வரவில்லை.

* * *


குந்தியின் தந்திரம்


வானத்திலே இருந்து மின்னல் ஒன்று ஓசையில்லாமல் இறங்கியதுபோல குந்திதேவியின் சிந்தனையிலே இந்த யோசனை பளிச்சென்று பூத்தது. இது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த அபூர்வமான யோசனை ஏன் அவளுக்கு முன்பே உதிக்கவில்லை. இத்தனை காலமும் அவளை ஆட்டிவைத்த சிக்கலுக்க இவ்வளவு இலகுவான தீர்வா என்று அதிசயமாக இருந்தது.

சாலிவாகன தடாகத்தின் அருகில் குந்தி தன் குமாரர்களோடு ஒரு வருடம்வரை தங்கியிருந்தாள். இங்கே தான் பீமன் இடும்பனைக் கொன்றான். அவனுடைய தங்கை இடும்பியோ பீமனுடைய யௌவன உடல்வாகைக் கண்டு மயங்கி காதல் கொண்டுவிட்டாள். குந்தியிடமே வந்து தன் காதலை பிரகடனம்செய்து பீமனை யாசித்தாள். பீமன் என்றால் தரையைப்பார்த்து காலால் கற்களை உருட்டியவாறிருந்தான். புதிஷ்டிரனக்க விஷயம் புரிந்துவிட்டது. தடை சொல்லாமல் அவர்களுடைய விவாகத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டான். அப்போதுகூட குந்திதேவிக்கு இந்த உபாயம் தோன்ற வில்லையே!

இந்த ஏகசக்கிரபுரத்து வாழ்க்கையும் அவர்களுக்கு அலுத்துவிட்டது. அதிலும் மறைவாக வாசம் செய்யும்போது ஒரே இடத்தில் இருப்பது புத்திசாலித்தனமாகாது. ராஜ குமாரர்களாகப் பிறந்துவிட்டு பிராமண வேஷம் தரித்து, பி€க்ஷ பாத்திரம் ஏந்தி எவ்வளவு காலத்துக்குத்தான் அவர்கள் நரகத்தை சுற்றி வலம் வருவார்கள். குந்தியின் குமாரர்கள் எல்லாம் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.

அதிலும் பீமனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பகாகரன் இருக்குமட்டும் பீமன் அவனை வதம் செய்வதிலேயே குறியாய் இருந்தான். இப்போது பகாசுரனும் இறந்துவிட்டான்; பி€க்ஷயும் குறைந்துகொண்டே வந்தது உணவு பற்றாமல் பீமன் மெலிந்து வருவதைப் பார்க்க குந்திக்கு வருத்தமாக இருந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த சமயத்தில் பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் தன்மகள் திரௌபதிக்கு சுயம்வரம் நிச்சயித்துவிட்டதால் பிராமணர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அங்கே போய்க் கொண்டிருந்தார்கள். ஐந்து தூண்களைப்போல இருந்த குந்தியின் குமாரர்கள் இந்த சுயம்பரத்தில் கலந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால் இதை எப்படி குந்தியிடம் சொல்வார்கள்?

லௌகீகம் அறிந்த குந்திதேவி தன் நுண்ணிய மதியினால் இதை உணர்ந்து கொண்டாள். காம்பிலிய நகரத்துக்கு செல்லுவதற்கு அனுமதி தந்துவிட்டாள். பாண்டு குமாரர்களுக்கு உற்சாகம் கரைகொள்ளவில்லை. எல்லோருமாக பலநாள் பயணித்து சுயம்வர நகரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு குயவனுடைய யாகையில் இடம் செய்துகொண்டு தங்கினார்கள்.

சுயம்வரம் நாளன்று பாஞ்சால தேசம் கோலாகலமான அலங்காரங்களுடன் காட்சியளித்தது. ஆடவரும், பெண்டிரும் பட்டாடைகள் புனைந்து தங்கள் தங்கள் வீட்டு பண்டிகைபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். குந்தியினுடைய ஐந்து குமாரர்களம் பிராமண வேடம் பூண்டு சுயம்வர மண்டபத்துக்கு சென்றுவிட்டார்கள். குயவனும், மனைவியும் கூட போய்விட்டார்கள். குந்திமாத்திரம் வீட்டிலே தனியாக இருந்தாள்.

அவள் மனம் சஞ்சலத்தில் மீண்டும் உழன்றது. வெகுகாலமாக மனதிலே கனன்று கொண்டிருந்த தீ இப்பொழுது சுவாலைவிட்டு எழும்பியது. அவளுடைய தீராத விசனத்துக்கு விரைவிலேயே விமோசனம் கிடைக்கக்கூடும்! தன் குமாரர்களின் பௌருஷத்தில் வைத்த நம்பிக்கை வீண்போகாமல் அவர்கள் வெற்றி வீரர்களாகத் திரும்புவார்களென்று காத்திருந்தாள்.

என்னதான் பிராமண வேடம் போட்டாலும் க்ஷத்திரிய சின்னங்களை முற்றாக மறைக்க முடியுமா! சிங்கம் போன்ற நடையும், நிமிர்ந்த செஞ்சும், தரை பார்க்காத தலையும் அவர்கள் ராஜவம்சத்தை சேர்ந்தவர்கள் என்று கட்டியம் கூறிவிடுமே! தோள்களில் நாண் உறைந்த காய்ப்புகளையும், பெரு விரல்களின் தடிப்புகளையும் எங்கே கொண்டுபோய் மறைப்பது? குந்தி மறுபடியும் விசாரத்தில் ஆழ்ந்தாள்.

அர்ஜூனன் தனுசை அநாயாசமாக வளைத்து, நாண் ஏற்றி, ஐந்து சரங்களையும் செலுத்தி மத்சயத்தை வெட்டி விடுவான் என்பதில் அவளுக்கு ஐயமேயில்லை. சுயம்வரத்திற்கு காத்திருக்கும் திரௌபதி நெருப்பிலே பிறந்தவள். துருபதராஜன் செய்த பெரும் தவத்தினால் அர்ஜூனனை மணப்பதற்கென்றே அவதரித்தவள். தேவர்களடைய அந்த வாக்கு பொய்யாகிப் போய்விடுமா? அங்கே வந்து கூடியிருக்கும் அரசர்கள் ஒரு பிராமணன் திரௌபதியை அபகரிப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பார்களா? பீமன் தன் தோள் வலிமையைக் காட்டாமல் வரமாட்டானே!

இப்பொழுதெல்லாம் பீமனை நேரிலே பார்க்க அவள் கண்கள் கூசுகின்றன. நாணம் வந்து விடுகிறது. ஏதோ பெரும் குற்றம் புரிந்தது போல அவள் மனம் படபடக்கிறது.

அரக்கு மாளிகையில் இருந்து அவர்கள் தப்பி சுரங்க வழியாக வெளியேறி விட்டார்கள். பீமன் குந்தியை முதுகிலும், நகுல சகாதேவர்களை இடையிலும், யுதிஷ்டிரனையும், அர்ஜூனனையும் தோளிலும் வைத்துக்கொண்டு புயல்போல வேகமாக நடக்கிறான். எங்கே துரியோதனனுடைய ஒற்றர்கள் பார்த்து விடுவார்களோ என்ற கவலை வேறு. விதுரன் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்திருந்த படகுக்காரன் மூலம் கங்கையைக் கடந்து தென்திசையாக செல்கிறான். எண்பது யோசனை தூரம் கடந்தாகிவிட்டது. பயங்கரமான காடு, களைப்பே அறியாத பீமனுக்கு அப்போது களைப்பு மேலிட்டுவிடுகிறது. சிறிது இளைப்பாறலாம் என்று பார்க்கிறான். பீமனுடைய வலிமையில் நம்பிக்கை வைத்து அவனடைய தாயும், சகோதரர்களம் நிச்சிந்தனையாக உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

பீமன் தன் பிதாவை மனத்தினால் தியானித்தான். வாயுதேவன் அப்போது மென்தென்றலாக உருவெடுத்து வந்து பீமனை ஒரு குழந்தையை அணைப்பதுபோல வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டாள். பீமனுடைய தேகம் பரவசமானது. ஒருவித புத்துணர்ச்சி வந்து புதுப்பலத்துடன் பிரகாசித்தான்.

வாயுதேவன் தான் வந்தகாரியம் முடிந்து திரும்பும்போது குந்திதேவியைப் பார்த்தான். அவள் அழகுற ஒரு மரத்தடியில் தன்னை மறந்து சயனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குறையாத சௌந்தர்யத்தில் தடுமாறிய வாயு அடக்கம் இழந்து அவளை இறுக்கத் தழுவிட்டான். எல்லாம் ஒரு கணம்தான். குந்திக்கம் பழைய ஞாபகம் வந்து ஒரு நொடிப்பொழுது அந்த ஸ்பரிச இன்பத்தில் தன்னை இழந்துவிட்டாள். வாயுதேவன் மறைந்துவிட்டான்.

கண்களைத் திறந்தபோது அவள் முன்னால் பீமன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் என்றுமில்லத ஓர் அருவருப்பு. குந்திதேவிக்கு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட கூச்சமாக இருந்தது. தலையைக் குனிந்து ரகஸ்யமாக தன்னைக் கடிந்துகொண்டாள்.

சொந்த மகனையே நேருக்கு நேர் பார்க்க முடியாத படிக்கு அவமானமாக இருந்தது. மனத்திலே பெரும் சுமையொன்று ஏறி உட்கார்ந்து கொண்டது. துரியோதனாதியரும், சிசுபாலனும் மற்ற அரசர்களும் அவளைத் தூற்றுவதை அவள் அறியமாட்டாளா? முறையற்ற முறையிலே கர்ப்பம் சுமந்தவள் என்று அவளை தூஷ’க்கிறார்களே! முறைகேடாக பிறந்த குமாரர்களுக்கு எப்படி ராஜ்யம் சித்திக்கும் என்று குதர்க்கம் பேசுகிறார்களே! திருதராட்டினன் பிறந்த முறையை மறந்துவிட்டார்களா?

இந்த அற்புதமான யோசனையை பரீட்சித்துப் பார்க்கும் நேரம் நெருங்கிவிட்டது. சிறு பெண்ணாயிருந்த போது துர்வாச முனிவர் உபதேசித்த மந்திரத்தை பரீட்சித்து சூரியனிடம் ஒரு மகவைப் பெற்றவள். நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு கவச குண்டலத்தோடு ஜொலித்த அந்தக் குழந்தையை ஒரு பேழையிலே வைத்து ஆற்றிலே அனுப்பியவள். அந்த ரகஸ்யம் அவள் மனத்தின் அடியிலே மிகவும் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டுக் கிடந்தது. அப்படித்தான் இந்த சோதனையும் அவள் மனத்தின் ஆழத்தில் புதைந்துபோய்விடும்.

பாண்டுவுடன் குந்தியும், மாத்ரியும் வனத்திலே வாழ்ந்த காலம். ஒரு ரிஷ’யும் அவர் பத்தினியும் காட்டிலே மான் உருவம் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதை அறியாத பாண்டு அம்பை எய்து ரிஷ’யைக் கொன்றுவிட்டார். அந்த ரிஷ’ இறக்குமுன் பாண்டு தன் மனைவியுடன் சேர்ந்தால் தட்சணமே அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று சபித்துவிட்டார்.

பாண்டு மனம் உடைந்துபோனார். திரும்பவும் நகரத்துக்கு போகாமல் வனத்திலேயே மீதி நாட்களையும் தவத்திலே கழிப்பது என்று தீர்மானிக்கிறார். இப்படியே காலம் போகிறது மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன.

திடீரென்று பாண்டுவுக்கு தான் புத்திரபாக்கியம் இல்லாமல் இறந்துவிடுவோமென்று வருத்தம் ஏற்படுகிறது. சந்ததியைச் சிருஷ்டிக்காமல் இறப்பவன் நரகத்துக்கு போவான் என்ற வாக்கு பாண்டுவை இரவும் பகலுமாக வதைக்கிறது. இந்த வேதனையில் பாண்டு பலநாட்களாக வருந்துகிறான். இறுதியில் ஒரு நாள் குந்தியிடன் தன் யோசனையை வைக்கிறான். ஒரு ரிஷ’ மூலம் தனக்கு ஒரு மகவைப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறான். குந்தி நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுகிறாள். பாண்டு திரும்பத் திரும்ப யாசிக்கிறான். அப்படியும் குந்தியின் மனத்தை அவனால் தளர்த்த முடியவில்லை.

ஒருநாள் பாண்டு படும் வேதனையை குந்தி பார்த்தாள். அவனுடைய துயரத்தை அவளால் தாங்க முடியவில்லை. இறுகியிருந்த அவளுடைய மனது இளகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்பு துர்வாசர் தனக்கு உபதேசித்த மந்திரத்தைப் பற்றி பாண்டுவிடம் கூறினாள். பாண்டுவின் மனம் மீண்டும் துளிர்த்தது.

பாண்டுவின் ஆலோசனைப்படி தர்மதேவனை வேண்டி குந்தி ஒரு மகவைப் பெற்றாள். தர்மம் மறு உருவம் எடுத்து வந்ததுபோல வந்து விறந்தவன்தான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகிழ்ச்சியை சொல்ல முடியாது.

ஒரு வருடம் கழிந்தது; பாண்டுவுக்கு மீண்டும் ஆசை. குந்தியினால் மறுக்க முடியவில்லை. இம்முறை வாயு பகவானை வேண்டினாள். வலிமைக்கு ஓர் எல்லையல்லவா வாயு? அப்படிப் பிறந்தவன்தான் பீமன். தர்மதேவனிடம் குந்தி பக்தியுடன் நடந்து கொண்டாள் என்றால் வாயுவின் பலம் காரணமாக அவனை பயத்துடன்தான் சேர்ந்து கொண்டாள்.

ஆனால் பாண்டுவுக்கு இன்னும் ஆசை அடங்கவில்லை. இந்தமுறை குந்தி இந்திரனை நினைத்துக்கொண்டாள். அகலிகை மேல் காதல் கொண்டவன் இந்திரன்! தேவர்களக்கெல்லாம் அரசன். குந்திக்கு பெருமையாக இருந்தது. அவனிடம் அளவில்லாத காதலுடன் நெருங்கினாள். அப்படிப் பிறந்தவன்தான் அர்ஜூனன். கண்ணைப் பறிக்கும் வனப்புடன் ஜொலித்தான் அவன்.

கண்டவர்கள் எல்லாம் காதல் கொள்ளும் லட்சணம் கொண்டவன் அர்ஜூனன். அதற்கு சமமான வீரமும் பராக்கிரமும் படைத்தவன் யுதிஷ்டிரனுக்கு வலது கரம் பீமன் என்றால் அவனுடைய இடது கரம் அர்ஜூனன். வஞ்சகமாக இழந்த ராஜ்யத்தை மீட்பதற்கு யுதிஷ்டிரன் இவர்களுடைய பராக்கிரமத்தைதான் நம்பியிருந்தான்.

அர்ஜூனன் பிறந்த பிறகுகூட பாண்டுவி ஆசை தணியவில்லை. மீண்டும் குந்தியை வற்புறுத்தினான். ஆனால் குந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டாள். தேவேந்திரனுடன் கூடிய பிறகு அவளுக்கு வேறு தேவர்களை வரிப்பதில் நாட்டமில்லை. அவளே வலிந்து சென்று துர்வாசருடைய மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். அந்த மந்திரத்தின் மகிமையில் மாத்ரிக்கும், அஸ்வினி குமாரர்களுக்கும் பிறந்தவர்கள்தான் இந்த நகுலனும், சகாதேவனும்.

அழகு என்று பார்த்தால் சகாதேவனுடைய அழகு யாருக்கு வரும்? எல்லோருக்கும் இளையவன். அவன் நிறமும் தாமரை போன்ற கண்களும் எவரையும் மயக்கிவிடும். அதிலும் மகாபுத்திசாலி, வாக்குவல்லவன். உண்மையைச் சொல்வதற்கு அஞ்சமாட்டான்.

இந்த சகாதேவன் சிறுவனாக இருந்தபோது என்ன கேள்வி கேட்டுவிட்டான்?

சதஸ்சிருங்க வனத்தில் குந்தியும் மாத்ரியும் ஐந்து புதல்வர்களுடன் கழித்த அந்த மகிழ்ச்சியான காலம். சிறுவர்கள் ரிஷ’களிடம் பாடம் கற்று வந்தார்கள். அப்பொழுது ஒரு நாள் சகாதேவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். குந்தி அவனை அள்ளி மடியில் இருத்தி 'குழந்தாய்! என்ன நடந்தது?" என்று கேட்கிறாள்.

அதற்கு சிறுவன் சகாதேவன் சொல்கிறான்: 'தாயே! என்னால் இந்த ரிஷ’ குமாரர்களின் பரிகாசத்தை இனிமேலும் தாங்க முடியாது. என் தந்தை யார்? என் உடன் பிறந்தவரிகளின் தந்தையார் யார்? யுதிஷ்டிரனடைய பிதா தர்மதேவன் என்று சொல்கிறார்கள். பீமனுக்கு வாயுதேவனாம். அர்ஜூனனுக்கு இந்திரனாம். எங்கள் பிதாவோ அஸ்வினி குமாரர்கள். ரிஷ’ குமாரர்களுக்கோ ஒரேயொரு தந்தைதான். எங்களுக்கோ பல தந்தைகள்! என்னால் இந்த அவமானத்தை எப்படி தாங்கமுடியும்? எப்பொழுது பார்த்தாலும் அவர்கள் என்னை இம்சித்தபடியே இருக்கிறார்கள்.

குந்தியினால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் முகம் தரை பார்த்தது. கண்களில் நீர் கோத்துவிட்டது. அன்று தொடங்கிய இழுக்கு இன்றுவரை இழுத்துக்கொண்டே போகிறது ரிஷ’ குமாரர்கள் மாத்திரமா? எல்லோரும்தான் அவளைத் தூற்றுகிறார்கள்.

அவளுடைய துயரம் எல்லாம் இந்த சுயம்வரத்தில் நிச்சயமாக தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு குந்தியை யாரும் நூதனப் பிறவி போலப் பார்க்க மாட்டார்கள். இழித்துக் கூறார்கள், பாண்டு இருக்கும்போதே பிற புருஷர்களை வரித்தவள் என்று வசைபாட மாட்டார்கள்.

தூரத்திலே கேட்ட அந்த சத்தம் ஓங்கி வளர்ந்து வாசல் வரைக்கும் வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து பெரிய ஆரவாரமும், சனங்களின் சிரிப்பொலியும் கேட்டது. குந்தி தான் செய்ய வேண்டியதை இன்னொருமுறை மனதிலே நன்கு தீர்மானித்துக்கொண்டாள். சோதனைக்கான சமயம் வந்துவிட்டது. வாசல் பக்கம் போகாமல் குந்தி நன்றாக உள்ளேபோய் உட்கார்ந்துகொண்டாள்.

வாசலில் இப்போது காலடிச்சத்தம் வெகு துல்லியமாகக் கேட்டது. காதுகளைக் கூர்மையாக்கி கவனித்தபோது வளையல் குலுங்கும் ஓசையும் கேட்டதுபோல இருந்தது.

யுதிஷ்டிரன்தான் பேசினான். வாசலில் இருந்து கொண்டே மகிழ்ச்சி பொங்க உரத்த குரலில் கூறினான்.

'தாயே! பி€க்ஷ கொண்டு வந்திருக்கிறோம்'

குந்திதேவி உடனேயே பதில் கூறவில்லை. இந்தத் தருணத்திற்காக அவள் எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாள்!

சிறு பெண்ணாக இருந்த போது குந்தி சூரியனை வேண்டி கர்ப்பம் திறந்து கர்ணனை பெற்றாள். உலகறிய சுயம்வர மண்டபத்தில் பாண்டுவுக்கு மாலையிட்டாள். சதஸ்சிருங்க வனத்தில் பாண்டுவின் ஆணைப்படி மூன்று தேவர்களை வரித்து பிள்ளைகளைப் பெற்றாள்; எல்லாமா அவளுக்கு ஐந்து புருஷர்கள்.

மனதைத் திடப்படுத்திக்கொண்டு குந்தி யுதிஷ்டிரனுக்கு பதில் கூறினாள்.

'என் குமாரர்களே! பி€க்ஷ கொண்டு வந்திருக்கிறீர்களா? வழக்கம்போல ஐவரும் பங்கு போட்டுக்கொள்ளுங்கள்.'

தாயாருடைய வாக்கை தேவவாக்காக எடுத்துக் கொள்ளும் பாண்டவர் ஐவரும் திரௌபதியை தங்கள் மனைவியாக ஏற்றுக்கொண்டனர்.

குந்தி தன் மனத்திற்குள்ளே மெல்ல நகைத்துக் கொண்டாள். இனிமேல் யாரும் அவளை ஓர் அவச்சொல் சொல்லப்போவதில்லை. நிம்மதியான பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியே வந்தது.

பி.கு: நான் காலையில் எழுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பே என் மனமானது எழுந்துவிடும். எழுந்து எனக்காகக் காத்திருக்கும் இந்த மனம் கேட்கும் ஆயிரம் கேள்விகளக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இது அன்றாடம் நடக்கும் சங்கதி.

இப்படியான ஒரு காலை வேளையில் என் மனம் கேட்ட கேள்விகளில் எனது கற்பனை விரிந்தது. அதில் பிறந்ததுதான் இந்தக் கதை. பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப்பார்களாக.

* * *

வசியம்

சிவசம்புவை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கொழும்பு வீட்டுக்க அப்பாவைப் பார்க்க அடிக்கடி வருவார். மெலிந்த உயரமான உருவம்; முன்னத்தம் பல்லிலே கதியால் போட மறந்ததுபோல ஒரு பெரிய ஓட்டை கரைபோட்ட வேட்டிதான் எப்பவும் கட்டிக்கொண்டிருப்பார். தலைமுடி கோரைப்புல் போல நட்டுக் கொண்டு நிற்கும். முகம் என்றால் பார்க்க வெகு சாதாரணம் தான்.

ஆனால் அவர் கதைக்கத் தொடங்கினால் அந்த முகத்திலே ஏற்படும் மாறுதல் அதிசயிக்க வைக்கும். ஒரு ரோஜா மலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பூப்பதுபோல அவருடைய முகம் விகசித்துக்கொண்டே வரும். அபூர்வமான ஒரு புது மனிதராக அவர் மாறிவிடுவார். அவர் குரல் வளமும், சொற்களை உச்சரிக்கும் விதமும் எவரையும் வசீகரித்துவிடும். இப்படியாக ஒரு பரிணாம அழகை நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை.

எங்கள் வீட்டின் முன் வளவில் வீதியை ஒட்டியபடி ஒரு வேப்பமரம் இருந்தது. நான் எப்பவும் அந்த மரத்தின் கீழ் இருந்து விளையாடிக் கொண்டிருப்பேன். ஐந்து தலைமுறையாக அந்த மரம் அங்கே இருப்பதாக அம்மா சொல்லுவாள். அவ்வளவு பிரம்மாண்டமான மரம். அதன் கொப்புகளெல்லாம் வளைந்து நாலாபக்கமும் கிளை பரப்பி அடர்ந்து ஆகாயத்தை நிறைத்துக் கொண்டிருக்கும். நான் அண்ணாந்து பார்க்கும் சமயங்களில் சூரியகிரணங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த இலைகளைத் துளைத்து பொட்டுப் பொட்டாக கீழே விழுந்து கண்களைக் கூசச்செய்யும்.

சிவசம்பு என்னைப் பார்க்காமல் ஒருபோதும் திரும்ப மாட்டார். 'சண்டைக்கு வாறியா? திறப்பு தாறியா? என்று சொல்லிக்கொண்டே வந்து என் விளையாட்டிலேயே கலந்து கொள்வார். என்னுடைய மந்திரசக்தியின் மகிமையில் அவர் ஒருவருக்கே பூரண நம்பிக்கை இருந்தது. நான் வேப்பமரப் பொந்திலே ஒளித்து வைத்திருக்கும் என்னுடைய மந்திரக் கோலினால் உயிர் கொடுத்த கிளிகளும், குயில்களும், காக்கைகளும், கருக்குரிவிகளும், நாகணவாய்களும் அந்த மரத்தை நிறைத்திருந்தன. இதை நான் அவரிடம் கூறும்போதெல்லாம் அவர் என்னிடம் மிகுந்த பயபக்தியுடன் நடந்துகொள்வார்.

அவகாசமான சமயங்களில் எனக்கு அவர் கதைகள் சொல்லுவதுமுண்டு. எல்லாம் மந்திர தந்திரக் கதைகள்தான். ஏழு கடல் தாண்டி ராஜகுமாரியை ஒளித்து வைத்திருக்கும் ராட்சசனைப்பற்றியும், ஆயிரம் தலைநாகத்தைப் பற்றியும், ஒரு கதைகள் வைத்திருக்கிறார். அமாவாசை இருட்டிலே தனியாகப் போகும்போது பேய்கள் செய்யும் சேஷ்டைகளை தான் எப்படித் தந்திரோபாயங்கள் செய்து முறியடிப்பார் என்றெல்லாம் சொல்லுவார்.

அநேக மந்திரவாதிகளையும், பேயோட்டிகளையும் அவர் நேருக்கு நேர் பாத்திருக்கிறாராம் மந்திரவாதிகள் இவரை மதிப்பதற்கு காரணம் இவர் ஒரு சக்தி வாய்ந்த பேயை வாலாயம் செய்து வைத்திருப்பதுதான் என்றும் சொல்லுவார். கடும் வெய்யிலில் சைக்கிளில் செல்லும்போது அவர் குடையே பிடிப்பதில்லை. அவர் வாலாயம் செய்த பேய்கள் இவர் சால்வையை தலைக்குமேல் செவ்வடிவமாகப் பிடித்தபடியே வருமாம். இவற்றையெல்லாம் அவர் சொல்லும்போது நான் அடக்கமுடியாத ஆவலுடனும், திகைப்புடனும் வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்.

கருதியை விட்டு விலகிச் செல்லும் பாடகர் திரும்பத் திரும்ப வந்து சுருதியில் சேர்ந்து கொள்வதுபோல சிவசம்புவும் அடிக்கடி வந்து அப்பாவை சந்தித்தார். கடைசியில் ஒருநாள் அப்பாவிடம் நிரந்தரமாக வேலைக்கு சேர்ந்துவிட்டார். தன்னுடைய வாக்கு சாதுர்யத்தினால் அவர் அம்மாவையும் சீக்கிரமே வளைத்துப் போட்டுக்கொண்டார். சமையல் கட்டு வரைக்கும் தங்கு தடையின்றி போய்வருவார். அப்பா வழக்கறிஞர் என்றபடியால் அவருடைய கட்சிக்காரர்களின் கேஸ் விஷயங்களை இவர் கவனித்துக் கொண்டார். அவர் செய்த வேலை என்னவென்று திட்டவட்டமாக எனக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் ஓர் எழுத்தருக்கும், வேலைக்காரனுக்கும் இடைப்பட்ட இடத்தை அவர் நிரப்பினார் என்றே நினைக்கிறேன். அப்பாவின் கட்சிக்காரர்கள் செருப்புடன் உள்ளே நுழைவார்கள். ஆனால் இவருடைய செருப்பு எப்பவும் வெளியேதான் காட்சியளிக்கும்.

நாலுமணிப்பூ இரண்டு மணிக்கே பூத்ததுபோல் ஒருநாள் அதிகாலை எங்கள் வீடு ஓர் அவசரத்துடன் விடிந்தது. ஏதோ கல்யாண வீட்டு ஆரவாரம்போல அது திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. என் நாலு வயதுத் தங்கை கண்கள் பொங்க புன்சிரிப்போடு இருந்தாள். அவள்தான் நாயகி; சந்தோஷம் தாங்க முடியாமல் நெளிந்தாள்.

அவள் கழுத்திலே போட்டிருந்த தங்கச் சங்கிலியைக் காணவில்லை. இரவோடு இரவாக யாரோ திருடன் வந்து களவாடிவிட்டான் என்று அம்மா சத்தமாகக் கூவிக் கொண்டிருந்தாள். சன்னல்களும், கதவுகளும், கூரை முகடுகளும் அப்படி அப்படியேதான் இருந்தன. கள்ளன் எப்படி வந்து போயிருப்பான் என்ற விடை தெரியாமல் எல்லோரும் தவியாய்த் தவித்தார்கள்.

என் தங்கை போட்டிருந்தது சின்ன விரல் சைஸ’ல் மொத்தமான சங்கிலி. அதில் ஒரு குண்டுப் பதக்கம் வேறு, மாட்டுக்குச் சங்கிலி போட்டு மணி கட்டியதுபோல இவள் இந்தப் பெரிய சங்கிலியின் பாரம் தாங்காமல் குனிந்து கொண்டுதான் நடப்பாள். சங்கிலி இல்லாமல் அவள் கழுத்து லேசாகவும் வடிவாகவும் இருந்தது. அவளுடைய கடைக்கண் புன்சிரிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தான் ஒரு பிரபல வழக்கறிஞரின் மனைவி என்பது ஞாபகம் வந்தவுடன் அம்மா என் தங்கையை முறையாக குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தாள். என் தங்கையோ குமுக்காக இருந்தாள். அம்மா அவளை உலுக்கியதும் இது விளையாட்டில்லை என்ற விஷயம் முதன் முறையாக உறைத்தது. ஒற்றைக் கையால் கண்ணைக் கசக்கிக்கொண்டே என்னைப் பார்த்து புதில் சொல்ல ஆரம்பித்தாள். அவளுடைய புன்சிரிப்பு இப்போது போய்விட்டது. பதில்கள் ஒன்றுக்கொன்று முரணாக வந்தன.

அந்த நேரம் பார்த்து அப்பா அவள் சகாயத்திற்கு வந்தார். அம்மாவின் குறுக்கு விசாரணை குறுக்காலே தறிக்கப்பட்டது. என் தங்கையோ ஓவென்று அழுதுகொண்டு அப்பாவிடம் ஓடினாள். அம்மா அவளைப் படுக்கையில் போட்டபோது கழுத்திலே சங்கிலி இருந்ததைத் தன் கண்ணாலே பார்த்ததாகக் கூறினாள். சிறிது நேரம் கழித்து அம்மாவுக்கும் தான் சொல்வதில் கொஞ்சம் ஐமிச்சம் வந்துவிட்டது.

அம்மாவின் சந்தேகம் இப்பொழுது வேலைக்காரர்களின் மேல் திரும்பியது. அப்பாவோ வீட்டையும் தோட்டத்தையும் மூலை முடுக்கு விடாமல் தேடும்படி உத்தரவு போட்டிருந்தார். வேலைக்காரர்கள் தங்கள் பேர்களைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டைத் தலைகீழாகக் குலுக்கித் தேடினார்கள். ஓர் இளவும் கிடைக்கவில்லை; நான் எப்பவோ தொலைத்த பொன்வண்டு நெருப்புப் பெட்டிதான் கிடைத்தது.

அப்பொழுதுதான் சிவசம்பு மந்திரவாதியைக் கூப்பிட வேண்டும் என்ற சிலாக்கியமான யோசனையை முன்வைத்தார். அப்பாவுக்கு இப்படியான விஷயங்களில் நம்பிக்கை இல்லை. தீர்க்கமாக மறுத்துவிட்டார். பொங்கல் பானையை சுண்டிப் பார்த்தும், முட்டைய தூக்கிப் பார்த்தும் வாங்கும் அம்மாவோ சிவசம்புவின் மகுடியில் மயங்கி இருந்தார். இந்த மந்திரவாதி இதற்குமுன் செய்த மகத்தான காரியங்கள் எல்லாவற்றையும் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல சிவசம்பு விஸ்தரித்தார். மந்திரவாதியின் updated biodata - வை சமர்பித்தும் அப்பாவிடம் பருப்பு வேகவில்லை.

விரதம் இருந்து பூஜை முடித்து குத்து விளக்கின் ஒளியில் வெற்றிலையில் மைதடவி பார்க்கும்போது இஷ்ட தெய்வம் வந்து களவெடுத்த ஆளைக் காட்டிக் கொடுத்து விடும் என்ற சங்கதியை சிவசம்பு எனக்கு ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் மந்திரவாதியை வீட்டுக்குத் தருவிக்கும் இப்படியான ஓர் அருமையான சந்தர்ப்பம் அப்பாவுடைய முரட்டுப் பிடிவாதத்தால் முடங்கிப் போனது.

அடுத்த நாள் எங்கள் வீட்டில்தான் அவசரத்துக்கு வெற்றிலை கிடைக்காதே! நான் வேப்பமரத்தின் கீழ் இருந்து பூவரசம் இலையில் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டுவந்த தங்கச்சியின் பொட்டுச்சிரட்டை மையைப் பூசி, சங்கிலியை மீட்பதற்கு தகுந்த மந்திரங்களை ஓதியபடி இருந்தேன். அந்த நேரம் பார்த்து சங்கிலி சலவைக் கூடையில் தங்கச்சியின் உடுப்போடு சங்கிலி மாட்டியிருந்த விவகாரத்தை பறையடித்து சொல்லிவிட்டார். சிவசம்புக்கு நான் வாலாயம் செய்து வைத்த தேவதையின் சக்தியைக் காட்டவேண்டிய அருமையான சந்தர்ப்பம் இப்படித்தான் ஓர் இழையில் தவறிப்போனது.

அப்பா ஒரு பேர்போன வழக்கறிஞர். இந்த இந்த வழக்குகளைத்தான் எடுப்பதென்ற கொள்கையில்லை. எல்லாவிதமான வழக்குகளையும் எடுத்து திறமையாக வாதாடி வென்றுவிடுவார். கூர்மையான அறிவும், சாதுர்யமான குறுக்கு விசாரணையும்தான் காரணமென்று அம்மா சொல்லுவாள்.

ஒரு ஓடிப்போன (elopement) கேஸ். அந்தப்பெண் வழக்காட வந்தபோது கேர்ட்டே ஸ்தம்பித்துவிட்டதாம். அவ்வளவு அழகு. அவள் நடந்து வந்தபோது வழக்கு மண்டபமே ஒளிவிட்டு பிரகாசித்ததாம். அவளுடைய சிரிப்பி இதயத்திலே இருந்து முளைத்து வெளியே வந்து விரியும் பூப்போல இருக்கும் என்று அப்பா வர்ணித்தார். நீதிபதி அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் வழக்கை கவனிக்கவில்லையாம். அந்த வழக்கிலும் அப்பாவுக்கே வெற்றி. அம்மா எரிச்சலுடன் இந்தக் கதையைக் 'சரி, சரி காணும்' என்று அரைவாசியில் நிறுத்தியதாக ஞாபகம்.

அப்பாவுடைய உண்மையான திறமைக்கு சவாலாக ஒரு வழக்கு விரைவிலேயே வந்தது. சிவசம்பு மூலமாகவே வரும் என்பதைமட்டும் யாரும் அப்போது கனவிலே கூட நினைத்திருக்கவில்லை.

என் அப்பா எப்பவும் சிரித்தபடியே இருப்பார். அது அவர் சுபாவம். சோகமாக அவர் இருந்த நேரங்கள் மிகவும் குறைவு. அவரைச் சுற்றிவர ஆட்கள் இருக்க வேண்டும். சவடலாகப் பேசி முசுப்பாத்தி கதைகள் சொல்லி ஆனந்தமாகப் பொழுது போக்குவது அவருக்கு நிறையப் பிடித்த கலை.

அம்மா அப்படியல்ல. சூட்சுமமான புத்தி கொண்டள். ஒருவர் பேசும்போதே அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதை ஊகித்துவிடுவாள். அங்கசாஸ்திரம் (body language) என்பது என்னவென்று தெரியாமலே அதைப்பற்றிய எல்லா விபரங்களும் அறிந்து வைத்திருந்தாள். சிவசம்புவுடைய வாக்கு சாதுர்யத்தில் மயங்கியிருந்தாலும் தொடக்கத்திலிருந்து அம்மாவுக்கு அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவர் கால்களை ஒடுக்கிக்கொண்டு நிற்கும் விதம், நிலம் படாமல் எவ்வி நடக்கும் தோரணை, முழங்கால்களை முட்டிக்கொண்டு உட்காருவது எல்லாம் அம்மா அவர் மேல் கொண்டிருந்த எண்ணத்தை வலுவாக்கின.

வேப்பம்பூ உதிர்ந்து நிலம் எல்லாம் மெத்தைபோல ஆகியிருந்தது. நாங்கள் நடக்கும்போது அந்தச் சின்னச் சின்னப் பூக்களெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்ளும். அம்மா நாலு இடங்களில் பாய் விரித்து வேப்பம் பூக்களைச் சேகரித்துக்கொண்டு இருந்தாள் வடகம் செய்வதற்கு. பூ மணம் காற்றிலே பரவி இனிய போதை தந்து கொண்டிருந்தது.

என் தங்கைக்கு மந்திரவித்தை காட்டிக்கொண்டு இருந்தேன். பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது எப்பவும் என் பெட்டியில் சிறு உணவு மிச்சம் வைத்து கொண்டு வருவேன். என் குருவிகளுக்கும் அணில்களுக்கும் போ அணில்களுக்கு சாப்பாடு கொடுத்தபோது அவை என் கைகளுக்கு அருகிலேயே வந்து சாப்பிட்டன; சில சமயம் என் கைகளிலே எறிக்கூட விளையாடும்.

பால் காவடியில் கட்டிய மனிதன் கிணுங்குவதுபோல பறவைகளின் சப்த ஜாலங்கள் மரத்தை நிறைத்திருந்தன. சிட்டுக்களும், குயில்களும், குக்குறுப்பான்களும், மைனாக்களும் கலகலவென்று தங்கள் தங்களுக்கு விதித்த ஸ்வரங்களை எழுப்பின. இந்தப் பறவைகள் தங்களுக்குள்ளே மட்டும் கதைக்கின்றனவா அல்லது மற்றப் பறவைகளுடனும் பேசிக்கொள்கின்றனவா? இவைகளுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட சாபம் போல் மொழிப் பிரச்சனை உண்டா? இந்த மைனாக்களக்குத்தான் எத்தனை வார்த்தைகள்! சற்று உன்னிப்பாகக் கேட்டால் அவை கதைப்பது புரிவது போலவே இருக்கும்.

அப்பாவின் அலுவலக அறையின் முன்பு வழக்கமாக காணப்படும் சிவசம்புவின் செருப்பு அன்றைக்கு இருக்கவில்லை. நான் அதைப்பற்றி யோசித்த அந்தக்கணமே வாசல் கதவைத் திறந்து கொண்டு அவர் விறுக்கென்று வெளிப்பட்டார். அவருக்குப் பின்னால் ஒரு வயதான சிங்கள மனுசியும். இளம் பெண்ணும் வந்தார்கள். அந்தப் பெண்ணுடைய சடை மேகத்தைப்போல கறுத்து விரிந்துபோய் அவள் தோள்களைத் தொட்டபடி இருந்தது. செக்கச்சிவப்பாக இருந்தாள். மாமிச பட்சணியா, தாவர பட்சணியா என்று தீர்மானிக்க முடியாதபடி கழுத்தில் கிடந்த சங்கிலியை மென்றபடி காணப்பட்டாள். சிவசம்பு என்னை சட்டை செய்யாமல் அவர்களுக்கு முன்னாலே அடியழித்துக்கொண்டு போனார். இவர் வாசலிலே செருப்பைக் கழற்றி விட்டபோது அவர்களும் கழற்றினார்கள்.

அன்றிரவு அப்பா அந்த வழக்கு விஷயமாக அம்மாவிடம் சொன்னார். அந்த மனுசியின் கணவன் இறந்து விட்டானாம். அவர்களுடைய சொத்தில் பங்கு கேட்டு எல்லோரும் சண்டை போடுகிறார்களாம். அதை மீட்பதற்குத்தான் அவள் தான் மகளுடன் வந்திருந்தாள். சொத்தை எப்படியும் மீட்காவிட்டால் அவர்கள் நடுத்தெருவில்தானாம்.

இப்படி அவர்கள் அடுத்தடுத்து கேஸ் விஷயமாக வந்தார்கள். சிவசம்புவும் நிலபாவாடை விரித்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தார்; போனார் அம்மாவுக்கு இந்த விஷயம் நெருடியது. இவர் ஏன் இந்த வழக்கில் இவ்வளவு கரிசனை எடுக்கிறார். அவை சொந்த பந்தமும் இல்லை; இவர் தமிழ்; அவர்கள் சுத்தமான சிங்களம். சமயலறை வரைக்கும் படையெடுத்து அம்மாவிடம் தேநீர் வாங்கிவந்து அவர்களுக்கு தன் கையால் கொடுக்கிறாரே!

வெகு சீக்கிரத்திலேயே இந்த மர்மத்துக்கு விடை கிடைத்தது. ஒருநாள் சிவசம்புவின் மனைவி அம்மாவைத் தேடி வந்தார். கறுப்பு உருவம். மூக்கிற்குப் பொருத்தமில்லாமல் பெரிய மூக்குத்தி. அந்த மூக்குத்தியிலும், அதைச் சுற்றியிருந்த தோல் பிரதேசத்திலும் அழுக்கு கணிசமான அளவுக்கு சேர்ந்திருந்தது. புழுதி படிந்த செருப்பை போட்டுக்கொண்டு எனக்கு முன்னாலே அவர் உயரமாக நின்று கொண்டிருந்தார்.

நான் என்னுடைய மந்திர வித்தையை அரைகுறையாக நிறுத்தி மந்திரக்கோலை அவர் அறியாதவாறு மரப்பொந்தில் ஒளித்துவிட்டு அவரைப் பின்பக்கமாக அம்மாவிடம் அழைத்துப் போனேன். மந்திரக்கோலை ஒரு நாளைக்கு ஒருமுறைதான் பாவிக்கலாம். மரப்பொந்தில் திருப்பி வைத்துவிட்டால் அதனுடைய சக்தி போய்விடும் இனி அடுத்த நாள்வரை நான் காத்திருக்க வேண்டும்.

அந்த மூக்குத்தி மாமி அழுதழுது கதைகள் சொல்லிக் கொண்டிருந்தபோது அம்மாவும் அது தனக்கு ஏற்கனவே தெரியும் என்ற தோரணையில் கேட்டுக்கொண்டிருந்தாள். மாமிக்கு கண் எல்லாம் சிவந்து முகம் வீங்கியிருந்தது. அம்மா மாமியைத் தேற்றி அப்பாவிடம் கதைப்பதாக உறுதிமொழி கூறி அனுப்பி வைத்தாள். நான் திரும்பவும் கேட் வரைக்கும் கூட்டிக்கொண்டுபோய் விட்டேன் மாமி என் தலையைத் தடவிவிட்டு வீச்சாக நடந்து போனார். அப்படிப் போகும்போது அந்த உடம்பில் இருந்து புறப்பட்ட ஒரு மண்ணென்ணெய் வாசனையும் கூடவே போனது.

அப்பா வந்ததும் வராததுமாக அம்மா இந்த விஷயத்தை சாங்கோபாங்கமாக விவரித்தாள். இந்த உரையாடல்களில் மூக்குத்தி மாமி சொல்லாத பல விஷயங்களும் அம்மாவின் ஞானக்கண்ணால் விரிவுபடுத்தி அலசப்பட்டன. அப்பா அதிர்ந்து விட்டார். இருந்தாலும் அவருடைய முகம் அதைக்காட்டவில்லை.

அம்மா சொன்னதில் சாராம்சம் இதுதான். சிவசம்பு இப்போது வீட்டுக்கே போவதில்லை; காசும் கொடுப்பதில்லையாம். அந்த சிங்கள மனுசியின் வீட்டிலேயே பழியாய் கிடக்கிறாராம். அந்த மனுசியின் மகளோடு சிநேகமாம். அந்தப் பெண்ணுக்கோ இவருடைய வயதில் அரைவாசிதான் இருக்கும் ஆனால் இந்த மன்மதனிடத்தில் மனதைப் பறிகொடுத்து விட்டாளாம்.

அம்மா இந்த விஷயத்தில் பல ஆராய்ச்சிகளை ஏற்கனவே செய்து முடித்திருந்தாள். இந்தப் பெட்டைக்கும் அந்த மனுசனுக்கும் எப்படி இவ்வளவு தீவிரமான காதல் முளைத்தது இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அவர் சமயலறையில் வந்து அவர்களக்காக தேநீர் எடுத்து போகும்போது வசியமருந்து போட்டிருப்பார் என்பது அம்மாவுடைய அசைக்க முடியாத ஊகம். மந்திரம், மாந்தரீகத்தில் சிவசம்புவுக்கு உள்ள ஈடுபாடு பற்றி அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் அப்பா வழக்கம்போல ஒரு சிரிப்புடன் அந்த விஷயத்தை dismiss பண்ணிவிட்டார்.

அம்மாவின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகு சிவசம்புவுடன் இந்த விஷயத்தையெல்லாம் கதைப்பதற்கு அப்பா ஒப்புக்கொண்டார். இன்னொருவருடைய சொந்த விவகாரத்தில் தலையிட அப்பாவுக்கு ஒரு தயக்கம் இருந்தது. அம்மாவுக்காக வேண்டா வெறுப்பாக சம்மதித்தார் என்றே நினைக்கிறேன். அப்பா இப்படிப் பயப்பட்டிருக்கத் தேவை இல்€டில. அவர் கதைக்க வேண்டிய அவசியம் வரவேயில்லை!

வேப்பம்பழக் காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். விதம் விதமான பறவைகளும், அணில்களும், குருவிகளும் மரத்தை வந்து மொய்த்துவிடும். இருப்புப் பறவைகள் தவிர வரத்துப் பறவைகளும் உரிமை கொண்டாடி எங்கிருந்தோ எல்லாம் வந்துவிடும். அவற்றில்தான் எத்தனை ஜாதிகள், எத்தனை வண்ணங்கள், எத்தனை உருவங்கள், எத்தனை ஒலிகள். கலவன் பாடசாலைக் குழந்தைகள் போல அந்தப் பறவைகளின் கலகலவென்ற ஆரவாரத்தில் அந்த மரம் ஒரு தொனிக்கூடமாக மாறிவிடும்.

இந்தக்காலங்களில் வரும் விடுமுறை நாட்களை நிறைய அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையில் நான் அதிகாலையிலேயே எழும்பிவிடுவேன். கட்டிப் பிடிக்கலாம் போன்று ஆர்வத்தைத் தூண்டும் மோகனமான வைகறையில் பறவைகளுக்கு தப்பிய வேப்பம்பழங்கள் கீழே விழுந்தபடியே இருக்கும். அந்தக் கீச்சல்களுக்கிடையிலும் நான் ஒருநாள் என்னுடைய மந்திரக்கோல் தியானத்தில் இருந்தபோது தோட்டக்காரன் வந்ததையோ, அவனுடைய முகம் பேயைக்கண்டதுபோல வெளுத்துப்போய் இருந்ததையோ கவனிக்கவில்லை.

தோட்டக்காரன் சொன்ன சேதியைக் கேட்டதும் அப்பா அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒன்றுமே பேசவில்லை. அவர் கையிலே இருந்த பத்திரிகை கீழே பொத்தென்று விழுந்தது. முழுசாக ஒருநிமிடம் கழிந்த பிறகுதான் தோட்டக்காரனை இன்னொருமுறை நடந்ததைக் கூறும்படி சொன்னார். அம்மா வார்த்தைகள் இல்லாத ஒரு ஒலியில் ஓவென்று சத்தமிட்டு கண்­ர் விட்டபடி இருந்தாள்.

சிவசம்பு முதல்நாள் இரவு தன்னுடைய மனைவி அம்மாவிடம் வந்து புலம்பியதை அறிந்துவிட்டார். அதிலேயிருந்து சண்டைதொடங்கி கடுமையாகி விட்டது. உச்சக்கட்டத்தில் ஆத்திரத்தில் கண்தெரியாமல் கைக்கெட்டிய பாண்வெட்டும் கத்தியை எடுத்து மனைவியைக் குத்திவிட்டார். படாத இடத்தில் பட்டு மனைவி இறந்துவிட்டார். சிவசம்பு இப்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறாராம்.

இந்த வழக்கை அப்ப எடுக்கக் கூடாதென்று அம்மா பிடிவாதமாக இருந்தாள். சிவசம்பு தன்னுடைய மனைவிக்கு செய்த துரோகம் அம்மாவினால் பொறுக்க முடியாததாக இருந்தது. அப்பாவின் கணிப்பு வேறுமாதிரி ஆத்திரத்தில் அறிவிழந்து செய்துவிட்டார்; வேண்டுமென்று செய்யவில்லை. தூக்கு நிச்சயம், தன்னிடம் விசுவாசமாக வேலை செய்தவரை இப்படிச் சடாரென்று கைவிடுவது மகா பாபம் என்று எண்ணியிருக்கக்கூடும்.

ஆனால் நான் இதுவெல்லாம் அவசியமில்லை என்றே நினைத்தேன். சிவசம்பு வாலாயம் செய்து வைத்திருக்கும் பேய்களின் வல்லமை பற்றி என்னைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்தப் பேய்கள் பெரும் சக்தி வாய்ந்தவை. விரைவிலேயே சிறைக் கதவுகளைத் தகர்த்து அவரை வெளியே கொண்டு வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன்.

இந்த வழக்கு யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பை சனங்களிடையே ஏற்படுத்தியது. இனக்கலவரம் முதலாம் ஆட்டம் முடிந்து கொஞ்சம் ஓய்ந்திருந்த நேரம். ஒரு நடுத்தர வயது ஆம்பிள்ளை இருபது வயது சிங்களப் பெண்ணை காதலிப்பதும், அவளுக்காக சொந்த மனைவியையே கொல்வதும் நாளாந்தம் நடக்கிற காரியமா? பத்திரிகைகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கொட்டை எழுத்துக்களில் தலைப்புகள் எழுதின.

அப்பா இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு புதிசாக புகழ் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பேப்பர்கள் இப்படி எழுதியதும் வேறு வழி இல்லை என்று ஆகிவிட்டது. எப்படியும் வழக்கை வென்று தன் புகழைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். அரசாங்க தரப்பிற்கு இது ஒரு open and shut case. ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்ந்தால் ஒழிய அப்பா இந்த வழக்கில் வெற்றிபெறும் சாத்தியமே இல்லை.

இந்த அவலங்கள் போதாதென்று தோட்டக்காரன் இன்னொரு கெட்டசேதி கொண்டுவந்தான். இவன் தோட்ட வேலை செய்வதிலும் பார்க்க கெட்ட சேதிகள் சேகரிப்பதிலேயே காலத்தை செலவு செய்தான். நான் சமயம் வரும்போது அம்மாவை கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று நான் படுத்தபோது இந்தக் கவலையே என்னைப் பிடித்து ஆட்டியது நித்திரை வராமல் நெடுநேரம் உழன்றேன். எப்போது உறங்கினேனோ தெரியாது. ஆழ்கடலின் நிசப்தம் போல் கனவுகள் இல்லாத அற்புதமான துயில். திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. நடுச்சாமம் இருக்கும். அப்பா இன்னும் கண்விழித்து வழக்கு சம்பந்தமாக படித்துக் கொண்டிருந்தார். அம்மா, பாவம்! விழித்திருந்தாள், அப்பாவையே பார்த்தபடி.

'அம்மா! எங்கடை ரோட்டை அகலாக்க வேப்பமரத்தை வெட்டப்போகினமாம், உண்மையா? என்றேன்.

என்னுடைய குரல் கம்மிப்போய் இருந்தது. அம்மா கொஞ்ச நேரம் பதிலே பேசவில்லை. என் முதுகைத் தடவியபடியே இருந்தாள். பிறகு அம்மா சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது.

'தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான். மரம் வைத்தவன் மரத்தையும் வெட்டுவான்' என்றாள் பதில் எனக்கு சொன்னதுபோலப் படவில்லை சிவசம்பு மாமாவுக்கு கூறியதுபோலவே நான் உணர்ந்தேன்.

சிவசம்புவின் பேய்களுக்கு சிறைக்கம்பியை உடைக்கும் வல்லமை இல்லையென்ற உண்மை எனக்கு மெதுவாக உறைக்கத் தொடங்கியது. வேப்பம் பொந்துக்குள் மறைத்து வைத்த என் மந்திரக் கோலின் மகிமைகளை இப்போதெல்லாம் என் தங்கச்சிகூட நம்புவதாகத் தெரியவில்லை. சிவசம்பு வெளியே வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொண்டேன்.

வழக்கு முடிவு நெருங்கிக்கொண்டு வந்தது. எங்கள் வீடு என்றுமில்லாத ஒருவித இறுக்கத்தில் இருந்தது. அப்பா அடிக்கடி இந்த வழக்கை எடுத்த முட்டாள்தனத்தை நினைத்து நொந்து கொண்டார். இதை எடுத்த நாளிலிருந்து மற்ற வழக்குகளெல்லாம் தள்ளி வைக்கப்பட்டன. வருமானம் சரிந்துவிட்டது. இதில் தோற்றால் அவர் இனி தலை நிமிர்த்தவே முடியாது. அப்பாவுடைய எதிரிகள் இந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.

இந்த நாட்களில் அம்மாவைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அப்பா படும் கஷ்டத்தை அம்மாவால் தாங்க முடியவில்லை. அதே சமயம் அழுக்கு மூக்குத்தியுடன் ஆடை குலைந்த அவசரத்தில் வந்த சிவசம்புவின் மனைவியையும் அம்மா அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அப்போதெல்லாம் அம்மா தன் உள்மனத்தில் என்ன பிரார்த்தித்துக் கொண்டாளோ! யார் அறிவார்?

ஆனால் கோர்ட்டில் நடந்தது எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. இதை அப்பாவோ, அம்மாவோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அப்பா அதை அம்மாவிடம் விவரித்தபோது எனக்கு சிவசம்புவில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை மீண்டும் வலுத்தது.

அன்று தீர்ப்புக் கூறும் நாள். சிவசம்பு என்றுமில்லாத விதமாக தன்னை விசேஷமாக அலங்கரித்து வந்திருந்தார். மாப்பிள்ளைக் கோலம்; பட்டு வேட்டி, உத்தரீயம். நெற்றியிலே திருநீறு, குங்குமப்பொட்டு என்று கலாதியாக இருந்தார். பார்த்தால் பத்து வயது குறைந்தே காணப்பட்டார். கண்களில் நம்பிக்கையும், முகத்திலே மாறாத புன்னகையுமாக தோற்றமளித்தார்.

அப்பாவுக்கு அவரைப் பார்த்ததும் கதி கலங்கிவிட்டது. இவ்வளவு நம்பிக்கையுடன் இந்த மனுசர் வந்திருக்கிறாரே! ஆயிரம் ஓட்டைகள் உள்ள கேஸ் கச்சேரி பார்க்கப் போவது போல வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார்.

அரசாங்கத் தரப்பு வக்கீல் தன் வாதங்களை ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டு வந்தார். கடற்கரையில் தேடிப் பொறுக்கி ஒவ்வொரு சங்காகக் கோத்து இறுக்கிக் கட்டிய மாலையாக அது இருந்தது. அவ்வளவு நெருக்கமாகவும், இடைவெளியே இல்லாமலும் நேர்த்தியாக வாய்த்திருந்தது.

அப்பா வாதாடும்போது ஒவ்வொரு சாட்சியாக உடைத்துக்கொண்டே வந்தார். எல்லா வாதமும் கடைசியில் வந்து கொலை செய்ய பயன்பட்ட கத்தியிலேயே தொங்கி நின்றது. அங்கேதான் அப்பாவின் வாதம் எதிர்பாராத வகையில் திசை திரும்பியது எதிர்க் கட்சிக்காரர்கள் திகைத்துப் போய்விட்டார்கள்.

கத்தியிலேயே சிவசம்புவின் மனைவியின் ரத்த வகை இருந்தது; சிவசம்புவின் ரத்த வகையும் இருந்தது. இது தவிர ஒரு மூன்றாவது குரூப் ரத்தமும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சி தெரிந்திருந்தும் சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. அப்பா இந்த ஓட்டையை குரங்குப் பிடியாகப் பிடித்து விஸ்தரித்துவிட்டார். இந்த வாதம் எதிர் தரப்பு சோடனையில் ஓர் ஆழமான சமுசயத்தை உண்டு பண்ணிவிட்டது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றம் போதிய அளவுக்கு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சிவசம்புவை விடுதலை செய்தார். அப்பொழுதுதான் ஒருவரும் எதிர்பாராத அந்த ஆச்சரியம் நடந்தது.

சிரித்துக்கொண்டே வெளியே வந்த சிவசம்பு தன் நண்பர்களையும் உறவினர்களையும் போய்க் கட்டிக் கொண்டார். அவர் முகத்திலே இருந்த புன்னகை மாறவேயில்லை. 'எப்படி, நான் சொன்னது போலத்தான் நடந்தது! பார்த்தீங்களா?' என்பது போல் இருந்தது. அவர் பார்வை. அப்பா இவையெல்லாவற்றையும் பார்த்து பொருமிக்கொண்டு ஒரு பக்கமாக நின்றார்.

ஆரவாரமெல்லாம் முடிந்த பிறகு சிவசம்பு சாவகாசமாக அப்பாவிடம் வந்தர். 'பார்த்தீங்களா ஐயா! நான் சொன்னன்! என்னை ஒருவரும் அசைக்க முடியாது!' என்றார்.

இந்த வழக்குக்காக அப்பா இரவிரவாகக் கண்விழத்து தயார் செய்திருந்தார். ஒரு சாட்சி கூட சாதகமாக இல்லை; ஒரு தடயமாவது வழி கொடுக்கவில்லை. தன்னுடைய மற்றக்கேஸ்கள் எல்லாவற்றையும் தூக்கி மேலே போட்டுவிட்டு இதற்காக பாடுபட்டு வேலை செய்திருந்தார். சல்லிக் காசுகூட வாங்கியதில்லை. கடைசி நிமிடம் வரை சிவசம்பு தூக்கிலே தொங்குவது நிச்சயமாக இருந்தது. இவர் என்ன சொல்கிறார்?

அப்பா ஸ்தம்பித்து நின்றார். அவர் வசம் இருந்த திகைப்பு எல்லாம் தீர்ந்துவிட்டது.

ஐயா, பார்த்தீங்களா! இதைப் பாருங்கோ! என்று தன் நெற்றிப் பொட்டைக் காட்டினார்.

சிதம்பரத்தம்பூவை அரைச்சு வைத்தது போல கருஞ்சிவப்பில் ஒரு பொட்டு.

இது வசியப் பொட்டு ஐயா! என்னை அசைக்க முடியாது! நீதவான் இதைப்பார்த்து மயங்கித்தான் தீர்ப்பு சொன்னவர்; எனக்கு இது முந்தியே தெரியும், ஐயா!" என்றார்.

cont-vadakku3

cont.. from Vaddaku2.mtf

அப்பா இதைக்கேட்டுவிட்டு ஆழமான சோகத்தோடு காணப்பட்டார். `இனி விடுங்கோ! வழக்கை வென்று விட்டீங்கள்தானே! என்றாள், அம்மா

பள்ளிக்கூட பஸ் சந்தியிலே என்னை இறக்கிவிட்டது. நான் கட்டாடி பொதி சுமப்பதுபோல் என் புத்தகங்களைக் காவியபடி வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தேன். எனக்கு முன்னால் நாலைந்து பள்ளிக்கூட மாணவிகள் சீருடையில் போய்க் கொண்டீருந்தனர். எல்லோரும் சடை நுனியில் ஒழுங்கா நீல ரிப்பன் கட்டியிருந்தார்கள். குழந்தைகளும் இல்லை; பெண்களும் இல்லை. கிலுகிலுவென்று எதற்கெடுத்தாலும் சிரிக்கும் இடைப்பட்ட வயது.

பாம்புக் குட்டிகள் போல ஒருவரோடு ஒருவர் பின்னிக் கொண்டு நடந்தனர். ஒருத்தி ஏதோ சொல்ல மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒருத்தி தோளை இன்னொருத்தி இடித்தாள். மறுபடியும் சிரிப்பு. நாளையே பிறக்காது போல அந்தச் சந்தோஷம் இருந்தது.

என்னுடைய மனது அவர்களுடைய குதூகலத்தில் கலந்து கொள்ளவில்லை. புத்தகம் என்றுமில்லாமல் கனத்தது! மனசும் அப்படித்தான்!

விளக்குத் திரியை தூண்டியதுபோல திடீரென்று என் கண்கள் பிரகாசமடைந்தன. மேகங்கள் இடம் மாறியிருந்தன. சூரியன் ஆடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு வெட்கமில்லாமல் வெளிச்சத்தை வீசிக்கொண்டிருந்தான்.

அப்போதுதான் கவனித்தேன். ஏதோ வெறிச்சென்றிருந்தது. என்னுடைய வேப்பமரத்தைக் காணவில்லை. அது இருந்த இடம் வெட்டவெளியாய் கிடந்தது.

ராமனுடைய வாலியைத் துளைத்தபோது அவன் ஆச்சாரம் போல விழுந்து கிடந்தான் என்று கவி வர்ணிக்கிறார். ஆச்சாரமே விழுந்து கிடந்தால் அதை எப்படி வர்ணிப்பது?

எப்பேர்ப்பட்ட மரம் அது! ஐந்து தலைமுறையாக நின்று நிழல் தந்த மரம் இப்படி கேட்பாரற்று நீட்டிலும் விழுந்திருந்தது. விண்ணையும் மண்ணையும் தொட்டுக் கடவுளுடைய அற்புதத்துக்கு சாட்சியாக இருந்த மரம் இப்படி அநாதையாகக் கிடந்தது.

மரத்தை வெட்டிய இடத்தில் இருந்து பால் கசிந்த வண்ணம் இருந்தது. அதை நேற்றுவரை நம்பியிருந்த காக்கைகளும், கிளிகளும், மைனாக்களும், அணில்களும் போகும் திசை தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. கருஞ்சிட்டு ஒன்று இறக்கையை அடித்து அடித்துப் பறந்து எதோ சேதி சொல்லப் பார்த்தது. என்ன நியாயம் இது? இவர்கள் இந்த மரத்தை வைத்தார்களா, வெட்டுவதற்கு. அம்மா சொன்னாளே, மரம் வைத்தவன் வெட்டுவான் என்று.

நான் புத்தகப்பையை கீழே வைத்துவிட்டு மெல்லப்போய் என்னுடைய மரத்தைத் தொட்டேன். என்ன மணம்! என்ன சுகமான ஸ்பரிசம். அது கொடுத்த நிழலும், அதனுடைய ரகஸ்யமான பொந்தும் மறைந்துவிட்டன. அந்தப் பறவைகளின் ஒலிகள் எனக்கு கேட்கப்போவதில்லை. என்னுடைய அணில்களை நான் பார்க்கப் போவதில்லை. என் மீதுள்ள மதிய உணவு அவைக்கு கிடைக்கப் போவதில்லை. என் நெஞ்சை ஏதோ அடைத்து மூச்சு முட்டியது.

அப்போதுதான் கவனித்தேன். அப்பா வெளி விறாந்தையில் தனியாளாக இருந்தார். அவர் அப்படி இருந்து நான் கண்டதில்லை. அப்படியான ஒரு சோகத்தையும் அவர் முகத்திலே நான் இதுக்கு முன்பு பார்த்ததில்லை.

'சின்னவனே!' என்று அப்பா என்னை கையைத் தூக்கி கூப்பிட்டார். கதிரையில் சாய்ந்துபோய் ஆயாசமாக இருந்தார். கழுத்திலே கட்டியிருந்த இரட்டைவால் தளர்த்தியிருந்தது.

நான் காலைத் தேய்த்து தேய்த்து மெதுவாகப் போனேன். கீழே பார்த்தபடியே வெகு நேரம் நின்றேன். கண்களில் தேம்பிய நீர் வழிந்து விடாமல் இருக்க இமைகளை மூடாமலே வைத்துக் கொண்டேன். அப்பா என்னை இரண்டு கைகளாலும் தூக்கி மடிமேல் இருத்தினார். என் தலையைத் தடவி 'படிக்கிறாயா? என்று கேட்டார். நான் தலையை ஆட்டினேன்.

வழக்கம்போல் அவர் என்னைக் கீழே இறக்கி விடவில்லை. எனக்கும் ஓடுவதற்கு ஓர் இடமும் இல்லை. அவருடைய கதகதப்பான மடியிலேயே இருந்தேன். நாங்கள் இருவரும் எங்கள் எங்கள் துக்கங்களில் மெய்மறந்துபோய் இருந்தோம்.

* * *

பூமாதேவி

இங்கே என்னடா என்றால் சமயலறைக் கேத்தில் கூட என்னை விசில் அடித்துக் கூப்பிடுகிறது! அவ்வளவு மரியாதை!

என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். நான் சிறுவனாய் இருந்தபோது அவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் மெள்ள மெள்ள அடிவைத்துத்தான் நடக்க வேண்டும். உரத்துப் பேசக் கூடாது; குஷ’யான சமயங்களில் பாடுவதற்கும் ஏலாது. ஏன் விசிலடிக்கக்கூட முடியாது. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான். ஆனால் இங்கே...!

நான் அமெரிக்காவுக்கு வந்து மிக வேகமாக முன்னேறியது இந்தத் தேநீர் போடும் துறையில்தான். இந்த அதிகாலையில் என் மகளுக்காக தேநீர் போட்டுக் கொண்டிருந்தேன். நேற்று எனக்கும் மகளுக்கும் கொஞ்சம் சண்டை. அதைச் சமாளிப்பதும் ஒரு நோக்கம். என் மகள் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். நான் மற்றப் பக்கம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றேன். கைகளைக் குவித்து என் முதுகிலே ஒரு பொய் அடி வைத்தாள். பெருத்த சத்தத்தோடு சண்டை முற்றுப்பெற்றது என்று இதற்கு அர்த்தம். திரும்பிப் பார்த்தபோது நெளிந்து கொண்டே ஓடினாள்.

சண்டைக்கு பெரிதாய் ஒரு காரணமும் இல்லை. அவவுடைய 'போய் பிரண்டின்' பிறந்த நாளை நான் மறந்து விட்டேனாம். எப்படி இருக்கிறது சங்கதி? தன் மகளுடைய நண்பர்களின் பிறந்த தினங்களை எல்லாம் மனனம் செய்வதுதான் ஒரு தகப்பனாருடைய தலையா கடமையா? வேலை நிமித்தமாக மகள் நியூஜேர்ஸ’யில் தங்கி இருக்கிறாள். நான் நியூயோர்க்கிலிருந்து அவளைப் பார்ப்பதற்காக விழுந்தடித்து நேற்றுத்தான் வந்திருந்தேன். இன்று என்னவென்றால் தன் நண்பனைப் பார்ப்பதற்கு அவ ஓகஸ்டாவுக்கு போகிறாளாம். இதற்கிடையில் நான் இந்த சரித்திரப் பிரசித்தமான தேதியை மறந்துவிட்டேன் என்ற குற்றச்சாட்டு வேறு மருட்டு விழிகளை இன்னும் கொஞ்சம் அகலத் திறந்து, ஒரே சமயத்தில் கெஞ்சலாகவும், றாங்கியாகவும் இந்தத் தூரப் பயணத்திற்கு என்னையும் தனக்குத் துணையாக வரும்படி அழைக்கிறாள். பிறந்தநாளுக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறாளாம். ஒப்பந்தங்களை காப்பாற்ற வேண்டுமென்று சிறுவதிலேயே நான் அவளுக்கு கற்றுக் கொடுத்த பாடம் தானே!

அமெரிக்காவில் காரில் ஏறியவுடன் சீட் பெல்ட்டைக் கட்டுவது ஒரு முக்கிய சடங்கு. இத்தனை வருடங்களாகியும் நான் இந்தக் கலையில் பரிபூரண தேர்ச்சி பெறவில்லை. இதற்கு சாமர்த்தியமும், தந்திரமும் சரிசமமான அளவில் தேவைப்படும். அதிலும் இந்த விவகாரம் காருக்கு கார் மாறுபடும். சீட் பெல்ட் இப்படித்தான் இருக்கும் என்கிற உத்திரவாதமும் இல்லை. ஆனபடியால் எங்கள் செயல் முறைகளை நாங்கள் காருக்குத் தகுந்தபடி மாற்றியமைக்க வேண்டும்.

நண்பர் ஒருவருடைய கார் கொஞ்சம் அவசரபுத்தி கொண்டது. சீட்டில் ஏறி உட்கார்ந்த உடனேயே அது தன்பாட்டுக்கு வந்து உங்களை ஆரத்தழுவிக் கட்டவிடும். ஒருமுறை தெரியாமல் தலையைக் கொடுத்து அது என்னை கொஞ்ச நேரம் மூச்சுத் திணற வைத்துவிட்டது. இன்னொரு சாதி சீட்பெல்ட், அதைக் கட்டும் வரைக்கும் 'கீ, கீ' என்று இரைந்து கத்திக்கொண்டே இருக்கும். கட்டி முடிக்கும் வரைக்கும் காரை நகர்த்த முடியாது.

என்னுடைய மகளின் காரில் சாதாரண சீட் பெல்ட்தான். வில்லங்கம் என்னவென்றால் குளிருக்கு எதிர்ப்பைக் காட்ட அணிந்திருந்த ஸ்வெட்டர், மப்ளர், ஓவர்கோட் என்று கூட்டத்துடன் ஒரே சமயத்தில் ஏறி காரிலே அமர்வது ஒரு பிரம்மப் பிரயத்தனமான காரியம். அப்பொழுதே கார் நிறைந்துவிடும். சிரமம் என்னவென்றால் வலது பக்கம் திரும்பி சீட்பெல்ட்டின் நுனியைக் கண்டுபிடித்து இழுத்தால் அதை மாட்டும் ஓட்டை மறைந்துபோகும். இவ்வளவு நேரமும் இங்கேதான் இருந்தது, சனியன்! இப்போது காணவில்லை! மறுபடியும் ஓட்டையைக் கண்டுபிடித்து சீட்பெல்ட்டைத் தேடினால் மாட்டுக் கன்று அறுத்துக்கொண்டு ஓடுவதுபோல நுனி இழுத்துக் கொண்டு போய்விடும். பழையபடி zero pointல் இருந்து தொடங்க வேண்டும். கடைசியில் ஒரு வழியாக பெல்ட்டைக் கட்டிமுடித்து காலை நீட்டிச் சாயும்போது பாதி தூரத்தைக் கடந்து விட்டிருப்போம்.

ஆனால் என் மகளைப் பார்க்க வேண்டும். அர்ஜுனன் பாணம் எடுப்பதும், விடுப்பதும் தெரியாது; எதிரிகளின் தலைகள் உருளுவதுதான் தெரியுமாம். அதுபோலத்தான். அவள் சீட் பெல்ட்டை இழுப்பதுவோ, அணிவதுவோ கண்ணுக்குத் தெரியாது. 'க்ளிக்' என்று ஒரு சத்தம் கேட்கும், அவ்வளவுதான். இந்த அதிசயத்தை நான் பொறாமையுடன் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

இவள் கார் ஓட்டும் அழகு தனியானது. நாலு வயதில் என் கைவிரல்களை இறுக்கிப் பிடித்தபடி மிரள மிரள வந்தவளா? நம்ப முடியவில்லை! நெற்றியில் விழுந்ததிருக்கும் இரண்டொரு கேசங்களைத் தவிர அவள் உடம்பில் வேறு ஆபரணம் ஒன்றுமில்லை. இந்த வயதிலேயே தனியார் கம்பனி ஒன்றில் உயர் பதவி வகிக்கிறாள். மிகப்பெரிய அதிகாரிகளையெல்லாம் முதற்பெயர் சொல்லி அழைக்கிறாள். நூற்றுக்கணக்கான தொலைபேசி எண்கள் அவள் ஞாபகத்தில் இருக்கின்றன. கடுகதியாக காரில் செல்லும்போதே செல்லுலரில் விளிக்கிறாள். ஸ்டிக்கர் பொட்டை ஓட்டுவதுபோல ஒற்றைக் கையால் நம்பர்களை ஒத்திக் கொள்கிறாள். காரின் நாலு மூலைகளிலுமிருந்தும் ஒலிக்கும் மேற்கத்திய இசைக்கு மனதைப் பறிகொடுக்கிறாள். என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை இந்த அமெரிக்காவில் இப்படியா இருந்தது?

அந்தக் கம்பனியில் நான் சேர்ந்தபோது எனக்காக ஒதுக்கப்பட்ட இடம் 'பேஸ்மென்டில்' ஒரு நகல் எடுக்கும் மெசினுக்கும், கோப்பி percolator-க்கு இடையில் இருந்தது. மேலே அலுவலக அறை, வரவேற்பறை எல்லாம். கீழே நிலவறையில்தான் ஏற்றுமதி சம்பந்தமான வேலைகளும், கணக்கு வழக்குகளும் ஒப்பேறின. கோப்பிக் கடையை மொய்க்கும் கூட்டம், நகல் மெசின் கிரக முறைப்படி எழுப்பும் சத்தங்கள், சிப்பம் கட்டுவோரின் ஆரவாரம், கம்புயூட்டரின் விசை ஒலிகள் எல்லாம் ஒரே கோலாகலம்தான். இது தவிர, நகல் எடுக்கும் மெசின் அவ்வப்போது ஒருவித வாசனையை என்பக்கமாக வீசிக்கொண்டே இருக்கும்.

கடைந்தெடுத்த முட்டாள்கள் அமெரிக்காவிலும் சரிசமமான அளவில் உற்பத்தியாகும் விஷயம் எனக்கு கனகாலமாகத் தெரியாது. நான் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் அறிவுஜுவிகள் என்றுதான் எண்ணியிருந்தேன். உண்மை என்னவென்றால் எங்கள் ஊர் 'ஆனாப் படிச்ச சுவானாதர்கள்' இங்கேயும் இருந்தார்கள்.

எனக்குப் பக்கத்தில் கம்புயூட்டரில் ஒட்டிக்கொண்டிருந்தவள் அமெரிக்காவின் பள்ளிக்கூட எல்லையைத் தாண்டமுடியாமல் highschool drop out என்று சொல்கிற பெருமையைப் பெற்றவள். சிற்றின்பத்துக்காகவே கடவுளால் படைக்கப்பட்ட உடம்பு; கலிபோர்னியா திராட்சை போன்ற கண்கள். ஒன்றில் நடனமாடியபடியே வருவாள், அல்லது முகத்தை உம்மென்று தூக்கிவைத்துக் கொண்டிருப்பாள். பெண்டுலம் போன்று அவள் மூட் இந்த எல்லைக்கும் அந்த எல்லைக்குமாக ஊசலாடிக்கொண்டே இருக்கும்.

அவளுடைய வாழ்க்கையின் இரண்டு பிரதான அம்சங்கள் காதலும், விரக தாபமும்தான். இவளுக்காகவே டெலிபோன்கள் அடித்து அடித்து ஓய்ந்து போகும். அவளுக்கு ஒரே சமயத்தில் நாலு காதலர்கள் இருப்பார்கள். ஒருநாளைக்கு ஒருவர் என்று மிகச்சில சமயங்களில் ஒருவரும் அகப்படாவிட்டால் உலகம் கவிழ்ந்ததுபோல சோக காவியமாக மாறிவிடுவாள்; மற்ற நேரங்களில் காற்றில் மிதந்தபடி தன் கையால் கோப்பி ஊற்றி எல்லோரும் தருவாள்.

கம்பனி அதிபருக்கு இந்தக் கோப்பியில் ஒர் அளவுகடந்த மோகம். 'தாம் தாம்' என்று நிலம் அதிர கீழ் தளத்திற்கு ஒரு நாளைக்கு நூறு தடவை வருவான், கோப்பி குடிப்பதற்கு. அவன் அகராதியில் மூன்று வார்த்தைகள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவை. அவன் என்ன வசனம் பேசினாலும் இந்த வார்த்தைகளில் ஒன்றாவது அங்கே வந்து சேர்ந்து கொள்ளும். அந்த மூன்றும் இடுப்புக்கு கீழே சம்பந்தப்பட்டவை வார்த்தைகள் அவற்றை நீக்கிவிட்டு அவனை யாராவது பேசச்சொன்னால் பாவம் தத்தளித்து விடுவான். ஒரு கோப்பி வேண்டுமென்றாலும் அந்த வார்த்தையிலேதான் கேட்பான். ஒரு கோப்பு தொலைந்து போனாலும் அந்த வார்த்தையிலேயே திட்டுவான். இவன் எல்லாம் வீட்டிலே எப்படி மனைவி, பிள்ளைகளோடு சம்பாஷ’ப்பான்?

மூடர்களின் மூடன், அதிமூடன் என இரண்டு வகைகள் உண்டு அல்லவா? இவன் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். எங்கள் இதிகாசங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்ததில் மூடர்களுக்கெல்லாம் மூடன் கம்சன்தான் என்பது என் கணிப்பு. அல்லாவிடில் தன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் தனக்கு யமனாவான் என்று தெரிந்திருந்தும் தேவகியையும், வாசுதேவரையும் ஒரே சிறை அறையில் பூட்டி வைத்திருப்பானா? எங்கள் கம்பனி அதிபர் இந்தக் கம்சனிலும் பார்க்க ஒரு ஸ்தாயி மேலே என்றுதான் சொல்ல வேண்டும்.

தங்கத் தாம்பாளத்தை தட்டுவதுபோல் தன் நெஞ்சிலே விரல்களால் விளையாடியபடியே பேசுவான். ஒரு விஷயத்தை சொல்லவந்தால் படு விஸ்தாரமாக பிரட்டிப் பிரட்டி சொல்லுவான். சிலருக்கு வயிற்றுப்போக்கு இருப்பதுபோல் இவனுக்கு வாய்ப்போக்கு. விளக்கி முடிந்த பிறகு பார்த்தால் எருமை கலக்கிய குட்டை போல விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

எங்கள் நாட்டில் urgent, ordinary, rush என்று எழுதிவைத்திருக்கும் கோப்புகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் குப்பைக் கூடைகளில் இரண்டு விதமான கூடைகளை இவன் வைத்திருப்பதை இங்கேதான் கண்டேன். ஒரு கூடையில் ordinary என்று எழுதியிருந்தது. இன்னொன்றில் urgent என்று எழுதியிருந்தது. குப்பையில் கூட urgent என்று தரம் பிரித்து வைத்திருப்பவனை என்ன செய்ய முடியும்?

'நான் செய்த ஊழ்வினை காரணமாக இப்படி வந்து மாட்டிக் கொண்டேனே' என்று வருந்தாத நாட்களில்லை.

ஆனால் இந்த அலுவலக அவலங்களும், இடிபாடுகளும் எதிர்வரும் சகிக்கிழமைகளில் மாயமாக மறைந்துபோகும். ஒவ்வொரு சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நானும் என் நாலு வயது மகளும் கைகோத்தபடி கதைத்துக் கொண்டே சலவைத் துணிகளைப் பையில்போட்டு சுமந்தபடி சலவைக் கூடத்துக்கு போய் வருவோம். இந்தச் சனிக்கிழமை நேரங்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். என் மகளும் அப்படியேதான். அந்தப் பத்து நிமிட நடைக்கிடையில் ஆயிரம் கேள்விகள் கேட்பாள். நானும் அவளுக்கு புரிகிறதோ, இல்லையோ எனக்குத் தெரிந்தவரைக்கும் சரியான பதில்களைச் சொல்லிச் சமாளிப்பேன்.

அந்தச் சலவைக்கூடத்தில் ஏறக்குறைய முப்பது மெசின்கள் இருந்தன. நாங்கள் எங்கள் குலதெய்வமான Maytag 22 என்ற மெசினில்தான் எங்களுடைய உடுப்புக்களைக் கழுவுவோம். நாலு காசுக் குற்றிகளைத் துளையில் போட்டு தள்ளியவுடன் அந்த ராட்சச மெசின்கள் 'உஸ், உஸ் என்று மெதுவாகத் தொடங்கி பின் வேகமாகச் சுழலுவது பார்க்க வடிவாக இருக்கும். நாற்பது நிமிடம் இப்படி அலசோ அலசென்று அலசிவிட்டு ஓய்ந்துபோகும். நாங்கள் காத்திருந்து துணிகளை எடுத்து உலரியில் போட்டு மேலும் இருபது நிமிடங்கள் ஓடவிடுவோம். துணிகள் பளபளவென்ற மினுக்கத்துடனும், ஒரு மிருதுத்தன்மையுடனும் சுகந்தமான வாசனையைப் பரப்பியபடி வந்துவிழும். இந்த மறக்கமுடியாத காத்திருப்பு நேரங்களில் மகளிடம் என் அன்னியோன்னியம் மிக நெருக்கமாக இருக்கும்.

அங்கேயிருக்கும் தானியங்கி யந்திரத்தில் காசு போட்டு விதவிதமான இனிப்பு வகைகளை எடுக்கப் பழகிக் கொண்டாள். ஒவ்வொரு முறையம் அது வந்து விழும்போது சப்பாத்து நுனியில் நின்று தன் சின்னக் கைகளைத்தட்டி மகிழ்ச்சியைக் காட்டுவாள். எவ்வளவு தரம்தான் இப்படிச் செய்தாலும் அவளுக்கு அலுப்பதில்லை. அதுவும் ஒரு வழக்கமான சடங்காகிவிட்டது.

என்னுடைய மகளின் குணவிசேஷங்களில் ஒன்று கண்­ர் எப்பவும் தழம்பி கரையை உடைக்க ரெடியாக இருப்பதுதான். என்ன சின்ன விஷயமாக இருந்தாலும் அவள் வாய் திறந்து சொல்லுமுன் கண்­ர் அணையை உடைத்து பிரவாகமாகப் பொங்கும். ஒரு நாள் நாங்கள் அந்தக் கூடத்துக்கு வந்தபோது Maytag 22-ல் ஒரு கிழவி சலவைக்கு போட்டுவிட்டு ஏதோ பின்னல் வேலையில் இருந்தாள். அடிக்கடி பின்னலை நிற்பாட்டி விட்டு இந்த மெசினை அவள் பார்ப்பதும், அது பயபக்தியுடன் வேலை செய்வதுமாயிருந்தது. இந்தக் காட்சியை என் மகளால் தாங்க முடியவில்லை.

'அப்பா! அப்பா! ஆரோ எங்கட மெசினை பிடிச்சிட்டினம்' என்று அழுதாள். அந்தக் கிழவியை ஒரு குரோதத்துடன் பார்த்தாள்.

என்பாடு பெரிய பாடாகப் போய்விட்டது. அந்த மெசினை நாங்கள் ஏதோ குத்தகைக்கு வாங்கிவிட்டதாக அவள் அவ்வளவு நாளும் நினைத்திருந்தாள். நான் விளக்கிய பிறகுதான் அதை ஒரு மாதிரி ஒப்புக் கொண்டாள் என்றாலும் அந்தக் கிழவியை அவளுக்கு துண்டாய் பிடிக்கவில்லை.

ஆனால் என் வாழ்நாளிலேயே என் மகளை மிகவும் குதூகலத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று விரைவிலேயே நடந்தது. அப்படியான சந்தோஷத்தை நான் அவள் முகத்தில் அதற்கு முன்பும் கண்டதில்லை; பின்பும் கண்டதில்லை.

வழக்கம்போல ஒரு சனிக்கிழமை காலை நாங்கள் சலவையை முடித்துவிட்டு வந்து மனைவியிடம் துணிகளை கணக்குக் கொடுத்துவிட்டு கைகட்டி நின்றோம். என் மனைவிக்கு கண்பார்வை இருபத்து இருபது. முதல் வேலையாக என் மனைவி 'எங்கை, இந்த சோடியில் ஒன்றைக் காணேல்லையே?' என்றாள். மனைவிகளை இதற்காகத்தானே கடவுள் படைத்திருக்கிறார்! அவ்வளவுதான். என் மகளுக்கு சுவிட்ச் போட்டதுபோல கண்­ர் கொட்டத் தொடங்கியது. நிற்கவேயில்லை. மெசினிலிருந்து எடுக்கும்போது எங்கேயோ தவறிவிட்டது. கால் காசு பெறாத சமாச்சாரம் அது. உயிரைக் கொடுத்ததுபோல என் மகள் விக்கினாள். நான் எவ்வளவு தேற்றியும் நிற்கவில்லை.

அடுத்த சனிக்கிழமை எங்களுக்கு அந்தச் சலவைக் கூடத்தில் ஒர் அதிசயம் காத்திருந்தது. அங்கேயிருந்த விளம்பரப் பலகையில் என் மகளுடைய ஒரு கால் சொக்ஸ் தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குக் கீழே 'என்னுடைய சோடியை யாராவது கண்டீர்களா!' என்று எழுதியிருந்தது. அதைக் கண்டதும் என் மகள் குதி குதி என்று குதித்தாள். அந்தச் சின்ன விஷயம் அவள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது! என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இப்படியான ஒரு சனிக்கிழமை சேத்திராடனத்தின் போதுதான் Maytag 22-க்கு நாங்கள் 'பூமாதேவி' என்றபேரைச் சூட்டினோம். அந்த முறை கொண்டுவந்த உடுப்புகள் அளவு கூடிவிட்டது. மெசினை நிறைத்தபிறகு இன்னும் கொஞ்சம் மீதி இருந்தது. அதை நான் திருப்பி எடுத்துப்போய் அடுத்த முறை கொண்டு வருவது என்று தீர்மானித்தேன். என்னுடைய மகளோ 'இன்னுமொருமுறை போடுவோம்' என்று அடம்பிடித்தாள். அப்போது எங்களிடையே பெரிய வாக்குவாதம் நடந்தது.

'நாங்கள் சலவையில் பாவிக்கும் கழிவுநீர் எங்கோ பூமியில் போய்ச் சேருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு அவலம் ஏற்படுகிறது. ஒரு முழு மெசினை ஓட்டினால் அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அரை மெசினை ஓட்டி சுற்றுச்சூழலைக் கெடுப்பது தவிர்க்கக் கூடியது. மிகப் பெரிய சுயநலம்.

'பூமாதேவி மிகவும் நல்லவள். நாங்கள் அவளுக்கு இழைக்கும் ஆக்கினைகள் எல்லாவற்றையும் மறந்து எங்களுக்கு அள்ளி அள்ளித் தருகிறாள். அவளுடைய குணங்களில் மிகச் சிறந்தது இந்த மறதிதான். நாங்கள் திருப்பித் திருப்பி செய்யும் கொடுமைகளை மறந்து ஒரு தாயின் அரவனைப்போடு எங்களுக்கு நன்மையே செய்கிறாள். இப்படிப்பட்ட தாய்க்கு தேவைக்கு மேல் கேடு விளைவிக்கக் கூடாது. இல்லையா?' என்றேன்.

புரிந்ததோ, இல்லையோ நான் சொன்னதற்கு தலையைப் பெரிதாக ஆட்டிக் சம்மதம் தெரிவித்தாள். பூமியைப் போல எங்கள் வசதிக்காக மாசுபடும் அந்த மெசினுக்கும் 'பூமாதேவி' என்று பேர் சூட்டினோம். அதற்கு பிறகு எங்கள் வீட்டில் கொஞ்ச காலமாக யார் எதை மறந்தாலும் 'பூமாதேவி, பூமாதேவி, என்று சொல்லி பகடி பண்ணுவது வழக்கமாகிவிட்டது.

இப்படியான ஒரு நாளில்தான் நான் என்னுடைய நாலு வயது சின்ன மகளுக்கு 'ஒப்பந்தம்' பற்றியும் அதை மீறாமல் இருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் போதிக்கவேண்டி வந்தது. பூமாதேவியின் முன்பு சலவையை முடிப்பதற்காக நாங்கள் காத்திருந்த அந்த நாற்பது நிமிடங்களில்தான் இது நடந்தது.

என் சின்ன மகளுக்கோ அன்று பெறும் கவலை; முகம் நீண்டுபோயிருந்தது. அதுவும் ஒரு வடிவுதான். விஷயம் இதுதான். கீழ்வீட்டு பையனுக்கு அன்று பேர்த் டே விழா. என்னுடைய மகள் விழாவுக்கு வருவதாக வாக்களித்திருந்தாள். ஆனால் அதிலே எதிர்பாராத ஒரு கஷ்டம் சேர்ந்து கொண்டது.

எனது நண்பர் ஒருவர் அன்று பின்னேரம் நாய்க்குட்டி ஒன்று தருவதாகச் சொல்லியிருந்தார். இதைக் கேள்விப்பட்டதும் மகள் பிறந்தநாள் விழாவுக்கு போகாமல் எங்களுடன் நாய்குட்டியை எடுக்க தானும் வரவேண்டும் என்று அடம்பிடித்தாள். விம்மி விம்மி அழுகை கரை முட்டிக்கொண்டு நின்றது. அப்பொழுதுதான், கடகடவென்று சத்தம்போடும் சலவை யந்திரங்களும், உலர்த்திகளுக்கும் நடுவே இருந்துகொண்டு என்மகளுக்கு உன்னதமாக சலவைக்காரர் ஒருவருடைய கதையைச் சொன்னேன்.

திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். சிவபக்தர்களுடைய துணிகளைச் சலவை செய்வதே அவர் தொண்டு. கிழ வேதியர் ஒருவருடைய ஆடையை சலவை செய்வதற்கு ஒப்புக்கொண்டார். அந்தக் கிழவனார் 'எனக்கு ஒரேயொரு கந்தைதான் உள்ளது. இதை நீ தோய்த்து, உலர்த்தி அந்திபடுமுன் தரவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். நாயனாரும் இதற்கு உடன்பட்டு கந்தையைப் பெற்றுத் தோய்த்து காயப்போட்டார். அப்பொழுது பார்த்து 'திசையடங்கி வெளியடைத்து' மழை பிடித்துக் கொண்டது, நிற்கவேயில்லை. இரவாகிவிட்டது. கிழவர் தன்னுடைய ஆடையைக் கேட்டு குளிரில் வெவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தார். ஒப்பந்தம் என்னவென்றால் தோய்த்து, உலர்த்தி தரவேண்டுமென்பதுதான். தோய்பபது இவர் கடமை, ஆனால் உலர்த்துவது சூரியனுடைய வேலை அல்லவோ? என்றாலும் வாக்குக் கொடுத்துவிட்டாரே!

அந்தக்காலத்தில் இப்போதுபோல் சலவை யந்திரங்களும் இல்லை; உலர்த்திகளும் கிடையாது. என்ன செய்வார்? பாவம். தன் தலையை தூணிலே முட்டி சிவபிரானிடம் இரந்தார். அப்போது சிவபெருமான் வந்து சங்கடத்தைத் தீர்த்து வைத்தார் என்பதுதான் கதை.

மகளுக்குகதை நன்றாகப் பிடித்துக்கொண்டது. மறுபேச்சு பேசாமல் பிறந்தநாள் விழாவுக்கு போனாள். அந்தச் சிறுவயதில் சொல்லிய கதையில் அடங்கிய கருத்தை இன்றுவரை அவள் மறக்கவில்லை. கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றிவிடுவாள்.

நான் வேலை பார்த்து வந்த கட்டிடத்தில் கணப்பு வசதிகள் மிகக் குறைவு. அதிலும் அது பூமிக்குக் கீழே உள்ள அறை; குளிரின் ஆதிக்கம் தாங்கமுடியாது. அடுத்த கெடுவுக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் என்முன் வந்து குவிந்தவண்ணமே இருக்கும். நான் கிரிசாம்பாள் பரம்பரை. ஆகவே எதிர்த்துக் கதைக்கும் திராணி இல்லை. விரகதேவதையின் மிச்ச சொச்சங்களும் என் மேசையிலே வந்து விழும். நான் வேலைகளை முடிக்க சில சமயங்களில் இரவு பதினொரு மணியாகிவிடும். அகதியாக வந்து சேர்ந்த அந்த ஆரம்ப நாட்களில் குளிரைத் தாங்கும் உடைகளை அணியும் வசதியும் இருக்கவில்லை; அதற்கேற்ற அறிவும் இல்லை.

'கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையான்' ஆக வேதனைப் படுவேன். என் வரவையே கண் விழித்துக் காத்திருக்கும் மனைவியை நினைப்பேன். இப்படி நாடுவிட்டு நாடு வந்து படும் இன்னல்களையும், சிறுமைகளையும் எண்ணி கண்­ர் வரும் நேரங்களிலெல்லாம் என்னுடைய சின்ன வயது மகளை நினைத்துக் கொள்வேன். இந்த சமயங்களில் பல்லைக் கடித்துக்கொண்டும், மூக்கைப் பிடித்துக்கொண்டும், விரபதேவதை தாபம் மேலிட்ட நாட்களில் கண்களை மூடிக்கொண்டும், என் காலத்தைக் கழித்துவந்தேன்.

அப்போதுதான் ஒருநாள் கடவுள் கண்விழித்தார்.

என் தகுதிக்கு ஏற்ற வேலை ஒன்று முற்றிலும் எதிர்பாராமல் எனக்கு கிடைத்துவிட்டது. அதுமாத்திரமல்ல ஊரும், வீடும்கூட மாற்றலாகியது. எங்கள் வாழ்க்கையில் திசையும் திரும்பியது.

ஆனால் பெரிய சோகம் என்னவென்றால் புதிய வீட்டில் சலவை மெசின் இருந்தது. அத்துடன் அந்த அற்புதமான சனிக்கிழமை காலை வேளைகள் மறைந்து போயின. என் மகளுடன் தனித்திருந்து சம்பாஷ’க்கும் அந்த மகத்தான தருணங்களும் அருகிவிட்டன. அமெரிக்க வாழ்க்கையில் அந்த முதல் ஒன்பது மாதங்கள் இப்படியாக என் மனதில் மறக்க முடியாததாக பதிந்துவிட்டது. என் மகளும் மெல்ல மெல்ல விலகி தன் உலகத்தில் வாழத் தலைப்பட்டாள்.

'எக்ஸ’ட் 241, எக்ஸ’ட் 241'என்று பாராயம் செய்தவாறே வந்தேன். இந்த எக்ஸ’ட்டில் திரும்பினால் நல்ல கோப்பியும், அருமையான 'டோநாட்டும்' கிடைக்கும். அமெரிக்காவில், காரிலே ஒரு பயணிக்கு மேல் இருந்தால் அவர்கள் போவதற்கென்று பிரத்தியேகமாக பாதை இருக்கும். அதிலே போனால் விசையாகப் போய்ச் சேர்ந்து விடலாம். நளனுடைய தேர் போல எங்கள் கார் இந்தப் பாதையில் வாயுவேகம் மனோவேகமாகச் சென்றுகொண்டிருந்தது. 'எக்ஸ’ட் 241' என்று நான் கத்துவதற்கிடையில் கார் அந்த இடத்தைக் கடந்து விட்டது. 'மேலாடை வீழ்ந்த தெடுவென்றான், அவ்வளவில் நாலாறு காதம் நடந்ததே' என்பது போல காரும் கடந்து போய்விட்டது.

எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. ஒரு திருப்பத்தை விட்டால் மீண்டும் திரும்ப வருவது இடியப்பக் கூந்தலின் ஒரு நுனியைப் பிடித்து மற்ற நுனிக்கு வருவதுபோல. அவ்வளவு கஷ்டம். இந்த டோநட் என்ற சமாச்சாரம் எங்கள் ஊர் வடையைப் போன்றது. அதிலும் 'கிளேஸ்ட் டோநட்' என்பது பளபளவென்று மினுங்கும். வாயில் போட்டால் உடனுக்குடன் கரைந்து இதயத்தில் போய் விழும் இதைச் சாப்பிட ஐம்பது மைல் தூரத்தில் இருந்துகூட ஆட்கள் வருவார்களாம்! அவ்வளவு பிரக்கியாதி பெற்றது.

மகள் என் பக்கம் திரும்பி 'sorry அப்பா' என்றாள். இனி என்ன செய்வது? அடுத்த வந்த திருப்பத்தில் மறக்காமல் காரைத் திருப்பினாள். சீஸ் பேகரும், காப்பியும் ஓடர் பண்ணினோம். எனக்கோ பசி. மகள் 'அப்பா! அப்பா!' என்று கத்துவதற்கு முன்பாக நான் உறிஞ்சியால் சுடு கோப்பியை உள்ளே இழுத்துவிட்டேன். வாய் வெந்துபோனது. இப்படி எத்தனை முறை எனக்கு நடந்துவிட்டது? அப்படியும் புத்தி வரவில்லையே! திருப்பித் திருப்பி மறந்துவிடுகிறேனே! வேகமான அந்த உணவகத்தில் இப்படியாக நாக்கை வேகவைத்துக்கொண்டு வெளியேறினேன். என் மகள் பிளாஸ்டிக் குவளைகளை சிவப்பு குப்பைத் தொட்டியிலும், மற்றவற்றை வெள்ளைத் தொட்டியிலும் போட்டுவிட்டு வந்தாள். என் அவஸ்தையைப் பார்த்து செல்லமாக என்னை இடித்துவிட்டு இதழ் விரிக்காமல் சிரித்தாள்.

பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம் என்று வரும் அல்லவா? அதுபோல இந்த அமெரிக்காவிலும் பல வருவங்கள் வந்து வந்து போகும். அவளுடைய முதல் பருவம் 'பாபி டோல்' பருவம்தான். ஒரு காலத்தில் இந்தப் பாவைகள் வீட்டிலே 'நீக்கமற நிறைந்து' கிடந்தன. இந்த பேதைப் பருவம் மிகவும் சந்தோஷமானது. ஒரு தனி உலகம். மணிக்கணக்காக இந்த 'பாபிகளை' வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள்.

பதினொரு வயது என்று நினைக்கிறேன். அப்பொழுது தான் முதன்முதலாக நாலுநாள் 'காம்பிங்' போனாள். எங்களை விட்டு இதற்குமுன் ஒருநாள்கூட பிரிந்து இருந்ததில்லை. ஆவலோடு எதிர்பார்த்து இருந்தவள் அந்த நாள் வந்ததும் தயக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டாள். நாங்கள் தேற்றி அனுப்பி வைத்தோம். நாலாம் நாள் இரவு திரும்பி வந்ததும் எங்களைக் கட்டிக் கொண்டாள். அந்த நாலு நாள் கதைகளையும் இரண்டு நாட்களாக சொன்னபடியே இருந்தாள். அந்தக் குழந்தை அனுபவித்த பிரிவுத் துயரும், பிறகு திரும்பியவுடன் அடைந்த குதூகலமும் மறக்க முடியாததாக இருந்தது.

சங்கீதப் பித்து தலைக்கேறியது இதற்குப் பிறகுதான். 'டீன் ஏஸ்' என்ற மடந்தைப் பருவம். 'பொப் மார்லி' என்ற பாடகன் அப்ப பிரபலம். அவனுடைய ஒலிப்பேழைகளை எல்லாம் வாங்கிச் சேர்த்தாள். வீட்டிலே அவனுடைய பாடல்கள் ஐந்தரைக்கட்டை சுருதியில் அதிர்ந்து கொண்டிருக்கும். 'விரிந்த சடையும் வெறும் மேனியுமாக' அவனுடைய பிம்மாண்டமான படங்கள் அவளுடைய அறையை முழுக்க முழுக்க அலங்கரித்தன. டெலிபோன் வாயைப் பொத்திக்கொண்டு, நாங்கள் அந்த இடத்தைவிட்டு அகலும் வரை காத்திருக்கும் வழக்கம் இந்த வதில்தான் அவளிடம் ஆரம்பமாகியது.

நான் சாடையாகக் கண்ணயர்ந்து விட்டேன். கார் ஒரு பெற்றோல் கூடத்தில் நின்று கொண்டிருந்தது. அது தானியங்கி பெற்றோல் கூடம். காரில் பெற்றோல் நிறைந்ததும் தானாகவே நின்றுவிடும். மறக்காமல் 'லெட்' இல்லாத பெற்றோலையே போட்டாள். கடன் அட்டையைக் கொடுத்து கணக்கை சரிசெய்தாள். முன்பின் தெரியாத அந்த இளம் ஊழியர் ஏதோ சொன்னான். இவள் விழுந்து விழுந்து கண் பொங்கச் சிரித்தாள். 'நல்ல நாளாகட்டும்' என்று சொல்லி அவன் அட்டையைத் திருப்பினான். இவள் 'உமக்கும் அப்படியே' என்று கூறி வாங்கிக் கொண்டாள். அந்தக் கணத்தில் இவள் முற்றிலும் ஓர் அமெரிக்கப் பெண்ணாக மாறிவிட்டதுபோல் எனக்கு காட்சியளித்தாள்.

ஒருமுறை சற்று வளர்ந்து, அமெரிக்கக் கலாச்சாரம் கொஞ்சம் உரஞ்சுப்பட பிறகு, பகவான் கிருஷ்ணருடைய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். பலராமனுடைய பிறப்பைப் பற்றி வர்ணிக்கும்போது கொஞ்சம் தடங்கல் வந்துவிட்டது பலராமன் வாசுகியினுடைய வயிற்றிலே உண்டாகி, மாயையினால் ரோகிணியின் கருப்பைக்கு மாறிய வரலாற்றில்தான் சிக்கல். நான் 'வாசுகிதான் பலராமனுடைய உயிரியல் அன்னை; ரோகிணி வெறும் கர்பையில் காவிய தாய்தான்' என்று கூறினேன். அவளுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது யோசித்துவிட்டு ஏதோ புரிந்து கொண்டவள் போல் 'ஓ, surrogate mothe' என்றாள். எங்கள் புராணங்களைக்கூட அமெரிக்கன் நடைமுறையில் விளக்கினால்தான் புரியும் என்ற நிலை வந்தபோது நான் என் மகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வருவதுபோல எனக்குப்பட்டது.

ஒப்பந்தத்தை காப்பாற்றுவதற்காக 400 மைல் தூரம் போக ஒப்புக் கொண்டிருக்கிறாள். கார் இப்போது பொஸ்டன் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இங்கேதான் நான் என்னுடைய அமெரிக்க வாழ்க்கையின் முதல் ஒன்பது மாதங்களைக் கழித்தேன். இங்கேதான் நிலவறையின் குளிரில் நடுங்கிக்கொண்டே அமெரிக்காவின் தொழில்முறை அரிவரிகளை கற்றுக்கொண்டேன். இங்கேதான் என்னுடைய மறக்கமுடியாத இன்பமான சனிக்கிழமை காலைகள் வந்து வந்து போயின; மகளுடைய பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி சலவைக்கூட யாத்திரை போனேன். அகலத் திறந்த அவள் விழிகளைப் பார்த்தபடி பூமித்தாய் பற்றியும், நாயன்மார் பற்றியும், நாங்கள் விட்டு ஓடிவந்த எங்கள் அருமை யாழ்ப்பாணத்தின் பாரம்பரியம் பற்றியும் கதைகள் பேசினோம்.

அப்போது தீடீரென்று நாங்கள் போய்வந்த, எங்கள் இருதயத்துக்கு மிகவும் நெருங்கிய, சலவைக்கூடம் தென்பட்டது. நான் ஒரு சிறு பையனின் ஆர்வத்தோடு `அங்கை பார்! பூமாதேவி' என்று கத்தினேன்.

என் மகளுக்கு நான் கத்தியது அர்த்தமாகவில்லை. தலையை அவள் திருப்பக்கூட இல்லை. `என்னப்பா பூமாதேவி? what do you mean?" என்றாள்.

சலவைக்கூடம் அப்படியேதான் இருந்தது. விளம்பரப் பலகை கொஞ்சம் மங்கலாகி விட்டதுபோலப் பட்டது. அங்கே இப்போது முப்பது சலவை மெசின்களும், முப்பது உலர்த்திகளும் வேகமாகச் சுழன்று இந்த மனிதப்பிறவிகளின் உய்வுக்காக பூமாதேவியை மேலும் கொஞ்சம் மாசுபடுத்திக் கொண்டிருக்கும்.

கார் விரைந்துகொண்டிருந்தது.

'என்னப்பா, suddenly you are quiet? என்றாள் என் மகள்.

மனித மனத்தின் விசித்திரத்தை பற்றி யார் என்ன சொல்வது? நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்.

எங்கள் ஊரில் ஒரு கிழவி, செல்லாச்சி என்று பேர். கணக்கெடுக்க முடியாத வயது. தொண்டுக்கிழம் என்று சொல்வார்களே, அந்தப் பருவம்.

சிலவேளைகளில் என்ன நினைத்துக் கொள்வானோ 'முக்கித்தக்கி' எழும்பி அலமாரியைத் திறப்பாள். பிறகு அதற்குள்ளே இருக்கும் தைலாப்பெட்டியை எடுத்து பூட்டை நீக்கி மூடியைத் திறப்பாள். பிறகு அவளுக்கு எதற்காக பெட்டியைத் திறந்தோம் என்பது மறந்துவிடும். அப்படியே கொஞ்சநேரம் இருந்து யோசித்துவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பாள்.

ஆனால் நாற்பது வருடங்களுக்கு முந்தி வேலாயுதபிள்ளை இருபது ரூபா அவளிடம் கடன் வாங்கி ஏமாற்றியதை இன்னும் மறக்கவில்லை. சொல்லிச்சொல்லி திட்டியபடியே இருப்பாள்.

மகள் மறுபடியும் 'என்னப்பா?' என்றாள்.

'ஒன்றுமில்லை' என்றேன்.

அந்தக்கார், ஒருவருக்கு மேற்பட்ட பயணிகள் போவதற்காக ஏற்படுத்தப்பட்ட அந்தப் பிரத்தியேகமான, வளைவேயில்லாத நெடுஞ்சாலையில், நளனுடைய தேர்போன்று வாயுவேகம் மனோவேகமாக, அமெரிக்காவின் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பு ஸ்பீட் வேகத்தையும் தாண்டி, கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள், மனிதர்கள், பழைய ஞாபகங்கள் எல்லாவற்றையும் பின்னே தள்ளிவிட்டு, ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

* * *

யதேசசை

மகா சமுத்திரத்தில் மிதக்கும் இரண்டு சிறு மரத்துண்டுகள் தற்செயலாக ஒரு கணம் தொட்டு மீண்டும் பிரிவது போல யதேச்சையாக சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இவை சமயங்களில் பாரதூரமான விளைவுகளக்கும் காரணமாகி விடுகின்றன. இவற்றின் பெறுபேறுகளை முன்கூட்டியே சொல்லும் வல்லமை யாருக்கு இருக்கிறது?

தொண்டுக்கிழவி கையை முண்டு கொடுத்து எழுப்புவதுபோல மெதுவாகத்தான் அன்று விடிந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை. பங்குனி மாதத்தின் முற்பகதி. ஆப்கானிஸ்தானின் தெற்கு மலைச்சிகரங்கள் வெள்ளி முடிதரித்து கண்ணைப்பறித்துக் கொண்டிருந்தன. அனாதிகாலமான 'அறக்கூஸ’யா' என்று அழைக்கப்பட்டு அலெக்ஸாந்தரால் கண்டஹார் என்று நாமம் சூட்டப்பெற்ற அந்த நகரம் சலசலத்துக்கொண்டிருந்தது. ஷார்வாலி மைதானத்தை நோக்கி சனங்கள் எல்லாம் ஒருவித பதட்டத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். தாலிபான் படையினர் அங்கங்கே முச்சந்திகளிலும், நாற்சந்திகளிலும் நின்றவாறு வாகனங்களையும், பயணிகளையும், பாதசாரிகளையும் பரிசோதித்து மைதானத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சனக்கூட்டம் சேரச்சேர அந்த இரைச்சல் ஓவென்று எழுந்துகொண்டிருந்தது. இந்த ஆரவாரங்களுக்கெல்லாம் பரபரப்பான ஒரு காரணம் இல்லாமலில்லை.

ரஸ்ய துருப்புகள் படு தோல்வியடைந்த பிறகும் நாஜிபுல்லாவின் ஆட்சி சிறிது காலம் நீடித்தது? ஒரு நாள் அவரும் கீழிறக்கப்பட்டு குரங்கு அப்பம் பிரித்த கதையாக ஆப்கானிஸ்தான் துண்டு துண்டாகப் பங்கு போடப்பட்டது. அப்போது நடந்த மாணவர் புரட்சியில் சில இடங்கள் தாலிபான் வீரர்கள் வசம் சிக்கின. அப்படிச்சிக்கிய நகரங்களில் ஒன்றுதான் கண்டஹார்.

தாலிபான் வீரர்களுக்கு ஓர் அதிசயமான கட்டளை. அதை நிறைவேற்றுவதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். குறைந்தபட்சம் நாலு விரற்கடை நீளம் தாடி உள்ளவர்களே அந்த மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். நீளமான தாடி வாய்ந்தவர்கள் கைகளை வீசிக்கொண்டே உல்லாசமாக உள்ளே போனார்கள். கொஞ்சம் குறைந்த தாடிக்காரர்கள் தாலிபான் வீரர்களால் மேலும் கீழும் துப்புரவாக ஆராயப்பட்டனர். இன்னும் சிலரோ தங்கள் குறும்தாடிகளின் வீரப்பிரதாபங்களை எவ்வளவோ எடுத்துரைத்தும் நிர்த்தாட்சண்யமாக விரட்டி அடிக்கப்பட்டனர்.

அனுமதி மறுக்கப்பட்டவர்கள் திரும்ப மனமில்லாமல் துடக்கு வீட்டுக்கு வந்தவர்கள்போல எட்டத்தில் நின்று எட்டியெட்டிப் பார்த்தார்கள். மாடு மேய்க்கும் சிறுவர்கள் தங்கள் காரியத்தை மறந்துவிட்டு இந்த விசேஷத்தில் மனதைப்பறிகொடுத்து அங்கேயே நின்றார்கள். இன்னும் சில சவலைப்பிள்ளைகள் 'வெக்கத்தைக் காட்டிக்கொண்டு' அங்கங்கே அரைப் புள்ளிகளாகவும், கால் புள்ளிகளாகவும் சிதறிக்கிடந்தனர்.

இந்தச் சந்தடிகளில் அகப்படாது வெகுதூரத்தில் இருந்த ஒரு வீட்டின் தாழ்வாரத்திலே நின்று அந்தக் கிழவர் வெளியே செல்வதற்கு சாவதானமாக தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இன்று நடக்கப்போகும் விழாவில் அவர்தான் நாயகன்; சிலர் அவரை எதிர் நாயகன் என்றும் சொல்லக்கூடும். கிழவனாருக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது என்றாலும் என்ன கம்பீரமான உருவம்!

நாற்சார் வீடு ரஸ்யக் குண்டுவீச்சின் அனுக்கிரகத்தால் ஒருசார் வீடாக மாறியிருந்தது. பழைய காலத்து மன்னர்கள் கட்டியது போல சற்சதுர ஓட்டைகள் அங்கங்கே துப்பாக்கியால் சுடுவதற்கு வாகாக விடப்பட்டிருந்தன. முற்றத்தை ஓட்டியபடி இருக்கும் குடிசைதான் பெண்களின் ராச்சியம். கிழவரின் ஆட்சி தாழ்வாரத்தோடு முடிந்துபோகும்.

இப்படியான வீடுகளில் இன்ன பிராயத்தினருக்கு இன்ன வேலை என்று ஒரு வரைமுறையிருக்கும் இருபதுபேர்கொண்ட கூட்டுக்குடும்பம் அது. கிழவி வாசலிலே குந்தியிருந்து தயிர்க்கட்டிகளை உருட்டி உருட்டி வெய்யிலில் காயவைத்துக் கொண்டிருந்தாள். நல்ல கற்களாய் பொறுக்கி வைத்து 'உறக்ஷா' கிழவிக்கு ஒரு கண் குருடு. அண்டங்காக்கா ஒன்று தலையைச் சாய்த்துக்கொண்டு அடிக்கடி வந்து கிழவியை ஏய்க்கப்பார்த்தது. கிழவி விடுவதாக இல்லை; ஒற்றைக் கண்ணும் கருத்துமான இருந்தாள். இது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

இந்த நேரத்திலே வழக்கமாக வீட்டிலே உள்ள ஆண்கள் வயல்வெளிக்கும், சிறுபிள்ளைகள் சுள்ளி பொறுக்கவும் போய்விடுவார்கள். அந்த வீட்டுப் பெண்களுக்கோ தாங்கள் பெற்றுப்போட்ட பிள்ளைகளைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். யௌவன வயதிலே விதவையான பெண்களுக்கென்று விதிக்கப்பட்ட தொன்றுதொட்ட வேலைகள் ரஸ“மாவுக்காக காத்திருக்கம் நாள்தோறும் சூரியன் முதுகிலே அடிக்கும் வரை துணிகளை கைவலிக்க அடித்து அடித்து துவைத்துக்கொண்டிருப்பாள். அது முடிந்ததும் தலை நிமிர்த்த முடியாத சமையல் வேலைகளில் மூழ்கிவிடுவாள்.

ஆனால் இன்று அவளுக்கு இன்னுமொரு முக்கிய வேலை இருந்தது. சாக்குப்பையில் கட்டி கூரையில் தொங்கவிட்டிருக்கும் 'லாண்டி' இறைச்சியில் கிழவருக்கு மனம் லயித்துவிட்டது. குளிர்காலம் முடிகிறது காரணமாயிருக்கலாம்; அல்லது விசேஷமான இந்த நாளைக் கொண்டாடுவதற்காகவும் இருக்கலாம்.

உப்புப்போட்டு வெய்யிலில் காயவைத்து முறுகிப்போன இறைச்சிக் கீலங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு கனமான தடியினால் அடித்து மெதுவாக்கிக்கொண்டிருந்தாள். பெரிய சட்டியில் 'ஷோர்வா' என்று சொல்லப்படும் சூப் காய்ச்சும்போது இந்த இறைச்சித் துண்டுகளும் போடப்படும். சூப் கொதித்த பிறகு இறைச்சியைத் தனிய எடுத்து வைத்துக்கொண்டு சட்டியிலே சோளரொட்டியை போட்டு நனைய வைத்து ஆண்கள் எல்லாரும் சுற்றிவர இருந்து சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு இறைச்சித் துண்டுகளை பங்குபோட்டுக் கொண்டு சுவைப்பார்கள்.

பெண்கள் சாப்பாடு பிறகுதான். அல்லாவின் கடாட்சம் இருந்தால் இன்று ரஸ“மாவுக்கு ஒரு கீலம் இறைச்சி கிடைக்கக்கூடும்.

கிழவி எறிந்த கல்லிலே காகம் ஒன்று எவ்விப்பறந்தது. கிழவி கல்லாலே எறியும் போதெல்லாம் ரஸ“மாவின் நெஞ்சிலேபட்டதுபோல இருந்தது. ஆணையும் பெண்ணையும் நிறுத்திவைத்து கல்லாலே எறிந்து கொல்வார்களாம். தாலிபான் ஆட்சியில் அப்படித்தான் என்று பேசிக்கொள்கிறார்கள். அதோடு ஒப்பிடும்போது இன்று நடக்கும் நாடகம் எவ்வளவோ மேல் என்று அவளுக்கு தோன்றியது.

ஒரு நிக்காஹ் வீட்டிற்கு போவதுபோல அவ்வளவு நிதானமாக கிழவர் தன்னை அலங்கரித்துக்கொண்டார். நீண்ட வெண்தாடியை நீவிவிட்டு, வெள்ளைச் சல்வாரைப் போட்டு இடைக்கயிற்றை இறுக்கி முடிச்சுப்போட்டார். ஸ்வத்துவில் இருந்து அவர் வரவழைத்த பச்சைக்கரை போர்வையை எடுத்து வலது தோளில் போட்டு இடது கக்கத்தில் இடுக்கிக்கொண்டார். ஷாம்ளா துணியை நாலு சுற்றுச்சுற்றி தலைப்பாகை கட்டி குஞ்சம்போல மீதித்துணியை இடது தோள்மேல் தொங்கவிட்டார். விசிறி மடிப்பு உயரமாகவும் கலாதியாகவும் இருக்கவேணும் என்பதில் கிழவருக்கு மிகுந்த கவனம். 'கலையாத கம்பீரத்துக்கு குலையாத விசிறி மடிப்பு' என்ற புஷ்து பழமொழியை நன்றாக அறிந்தவர் அவர்.

ரஸ“மா இவருடைய எடுப்புச்சாய்ப்புகளை தலையை மூடியிருந்த சாதர் துணியின் இடுக்கு வழியாக ஓர் அருவருப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மனத்திலே அடித்த பிரளயத்தை அவள் கண்கள் காட்டவில்லை. அவளுடைய மாமனாரின் இந்த அட்டகாசமான அலங்காரம் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

வீட்டில் உள்ள மற்றப்பெண்களும், பிள்ளைகளும் ஓர் அதிசயமான எதிர்பார்ப்புடன் இவரை வழியனுப்பிவைக்க வந்தார்கள். சுவரிலே மாட்டியிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டார். பல்லுத்தீட்ட கரியிருக்கும் வீடுகளிலெல்லாம் துப்பாக்கியும் இருக்கும். பரம தரித்திரத்தின் என்றாலும் அன்றாட பாவிப்புக்கு ஒரு துப்பாக்கி அவனிடம் இல்லமலிருக்காது. இந்தத் துப்பாக்கியே ஒரு பால் மாட்டை விற்று அவர் வாங்கியதுதான். கிழவனார் அதைத் தூக்கிக்கொண்டு வெளியே போகக்காலடி வைத்தார். ரஸ“மாவின் மனம் வேதனையில் வெடித்துவிடும் போல் பொங்கியது. கையிலே இருந்த கனமான தடியினால் 'லான்டி' இறைச்சியை பலம்கொண்ட மட்டும் அடிக்கத்தொடங்கினாள்.

அந்தத் திடல் இப்படியான நெரிசல் கூட்டத்தை இதற்குமுன் கண்டதில்லை. இதுமாதிரி விவகாரமும் அங்கே நடந்ததில்லை. சனங்களின் பதட்டத்துக்கும், ஆவலுக்கும் ஈடுகொடுக்கக்கூடியதாக அந்த மைதானம் அமைந்திருக்கவில்லை. ரஸ்ய விமானங்கள் விளைவித்த அழிவுகளை, தாலிபான் தேசப்பிதாக்கள் மேலும் விருத்தியாக்கியிருந்தனர். கட்டிடங்களும், சுவர்களம் சுற்றிவர அரை இடிபாடுகளுடன் நின்றன. நடுவிலே பஷகனா மரம் ஒன்று மெலிந்துபோய் நின்றுகொண்டிருந்தது. ஒலிபெருக்கிக்காரர்கள் ஒலி பெருக்கியின் வாய்களை மரங்களிலும், சுவர்களிலும், பஸ்களின் கூரைகளிலும் கட்டிவைத்து சரிபார்த்தார்கள்.

சனங்கள் மத்தியில் கலகம் மூளாதவாறு காருண்யத்தோடு பார்த்துக்கொண்டார்கள் படைவீரர்கள். இந்தக்காரியத்தை அவர்கள் திமிசுக்கட்டை பூட்ஸ் ஒலியாலும், கனமான துப்பாக்கியின் அடிப்பாகத்தாலும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். எந்தத்திசையிலிருந்து மரணத்தைதியைக் கொண்டுவருவார்கள், எங்கே நிறுத்துவார்கள் என்ற விபரம் ஒருவருக்கும் தெரியாததால் சனக்கூட்டம் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தது.

அப்போது புழுதி அப்பிய லாரியொன்று வந்து சடக்கென்று நின்றது. நீண்ட தாடிகளோடு மூன்று தாலிபான் நீதிபதிகள் இறங்கினார்கள். ஒருவருக்கு வெண்தாடி, அடுத்தவருக்கு வெள்ளையும் கறுப்பும் கலந்த தாடி, அதற்கடுத்தவருக்கோ முற்றிலும் கறுப்பு நிறத்தாடி. இப்படியாக ஒரு ascending order ல் இந்த தாடிச்சங்கதி இருந்தது. அவரவர்களுக்கு நியமித்த இடங்களில் போய் இருந்து கொண்டார்கள். மூத்தவராய் தெரிந்தவர் எழுந்து ஒலி பெருக்கியில் பேச்த்தொடங்கினார்.

'பிஸ்மில்லா அ ரஹ“மான். படுபாதகமான ஒரு கொலையைச் செய்த காசிம் அலேமி என்பவருக்கு தண்டனை கொடுப்பதற்காக நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். தாலிபான் நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது.'

அவர் கையை உயரத்தூக்கிக்காட்டியதும் இரண்டு தாலிபான் வீரர்கள் பலியாட்டை கொண்டு வருவதுபோல் மரணக்கைதியை இழுத்து வந்தனர்.

காசிம் அலேமி ஓர் அழகன். நிமிர்ந்த முதுகு, சிவந்த தேகம், நேரான தாடி, நீலநிறக்கண்கள். இன்று அவனை இழுத்து வந்தபோது அவன் உடம்பு கூனிக்குறுகி உருக்குலைந்துபோய் இருந்தது. இளைத்து எலும்புகள் தெரிந்தன. கைகள் பின்னுக்கு கட்டப்பட்ட நிலையில் பரிதாபமாக இருந்தான்.

கைகளைத்தான் கட்டமுடியுமேயன்றி அவன் மனதைக்கட்ட முடியவில்லை. விட்டகுறை தொட்டகுறை போலத்தான் அவர்களுடைய சிநேகம் இருந்தது. அந்தச்சிறு வயதிலேயே ரஸ“மாவுக்கு அவனிடத்தில் ஒரு தீராத பிரேமை. சுள்ளி பொறுக்கும் சாட்டில் அவனுடனேயே சுற்றிக்கொண்டிருந்தாள். விவரம் தெரியாத அந்தப்பிராயத்தில் அவர்களக்குள் பேசி எத்தனையோ முடிவுகள் எடுத்துக்கொண்டார்கள். விளையாடுவதை விட்டுவிட்டு காசிம் சில சமயம் ரஸ“மாவை உற்றுப்பார்த்தபடியே இருப்பான். அப்போதே அவளுக்கு ஒரு சிறு அசைப்பில் கன காரியம் சொல்கிற கண்கள்.

அவள் மொட்டவிழித்ததும், காரியங்கள் கிறுகிறுவென்று ஒப்பேறின. காசிம் சிறுவன்தானே. அவனை யாரும் கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. அஹமத் அப்பொழுதே ஒரு முழு ஆம்பிளை. அஹமத்துக்கு ரஹ“மாவை மணமுடித்து வைக்கும் போது அவளுக்கு வயது பதின்மூன்றுதான் அஹமத்துக்கு ஒரு தம்பி இருந்தான், நியாஸ’ என்று பேர். நியாஸ’க்கு அப்போது மூன்று வயது. ரஸ“மாவுக்கும் நியாஸ’க்கும் இடையில் பத்து வயசு வித்தியாசம். மணமுடித்த புதிதில் ரஸ“மாவுடைய பொழுது நியாஸ’யை தூக்கிவைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பதிலேயே கழிந்தது.

இரண்டு வருடம் போனபிறகு அவள் தலையிலே ஒரு பெரிய இடி வந்து விழுந்தது. அவள் கணவன் அஹமத் கண்ணிவெடி ஒன்றிலே சிக்கி இறந்துவிட்டான். போர்க் காலத்தில் ரஸ்ய விமானங்கள் போட்ட கண்ணிவெடிகள் முழுவதையும் அகற்ற அறுபது வருடம்வரை எடுக்கும் என்று கணக்கு சொல்லிக்கொண்டார்கள். மாதத்திற்கு ஒருவராவது கண்ணிவெடிக்கு பலியாவது வழக்கம். இந்தமுறை கொசுவத்திச் சுருள்போல கிடந்த வெடி ஒன்றில் அஹமத் மாட்டிவிட்டான்.

அவர்கள் வழக்கப்படி இனி அவள் நியாஸ’க்குத்தான் வாழ்க்கைப்படவேண்டும். விதவையான ரஸ“மா, ஐந்து வயதான நியாஸ’யை இடுப்பிலே தூக்கி வைத்துக்கொண்டு திரிந்தாள். ஊர்ப்பெண்கள் எல்லாம் 'என்னடி, உன்ர புருஷன் இடுப்பையே விட்டு இறங்கமாட்டாரோ? என்று கேலி செய்வார்கள். 'வடலி வளர்த்து கள்ளுக்குடிப்பதுபோ' நியாஸ’யை வளர்த்து சீக்கிரத்திலே அவள் தனக்கு ஒரு மணவாளனைத் தயார் செய்து கொண்டுவிடவேண்டும்.

சொட்டு சொட்டாக பால் கறந்து பாத்திரம் நிறைவது போல நியாஸ’க்கு பதினெட்டு வயது முட்டிக்கொண்டு வந்து நின்றது. அடுத்த அறுவடையோடு அவளுக்கும் நியாஸ’க்கும் நிக்காஹ் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்பொழுது அவள் பெண்மையின் உச்சக்கொப்பில் இருந்தாள்.

இரவானதும் வேலைக்களைப்பில் இமைகள் கனத்துவிடும். நீண்டு கழுத்து தண்­ர் பானைக்கும், 'தண்டூர்' அடுப்புக்கும் இடையில் ஊர்ந்து வந்து படுத்தால் அவளுக்கு நித்திரை வராது. ஆசுஆசென்று வெப்பமான மூச்சுக்காற்று வந்தபடி இருக்கும். போர்வையை உதறிவிட்டு 'வெளிக்கு' போகும் சாக்கில் அரவமில்லாமல் வெளியிலே வருவாள். அண்ணாந்து ஆகாயத்தை பார்த்தபடியே நிற்பாள். சந்திரன் எவ்வளவுதான் உக்கிரமாகக் காய்ந்தாலும் ஏன் சுடுவதில்லை என்று குழம்புவாள். மனம் அமைதியிழந்து ரணம் வடியும். அவளுடைய திரேகம் எதையோ தேடித்தவிக்கிறது என்று புரிந்துகொள்வாள். அந்த நேரங்களில் காசிம் அவள் மனதிலே வந்து தொந்தரவு கொடுக்கத்தொடங்கினான்.

அப்போதுதான் ஒருநாள அது நடந்தது.

காதல் வேகமாக வளருவது நகரங்களில்தான் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அது சுத்தப்பொய் உண்மையில் குடிசைகளிலும், குக்கிராமங்களிலும், காடுகளிலும் வனாந்தரங்களிலும்தான் காதல் கண்கடை தெரியாத வேகத்தில் வளர்கிறது.

நகரங்களிலே என்றால் கண்ணால் பார்த்து கைகளால் பேசி ஆற அமர பழகுவதற்கு அவகாசம் கிடைக்கும். ஆனால் அந்த வரப்பிரசாதம் ஏழைக் கிராமவாசிகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் அதேமாதிரி ஒரு சமயத்துக்கு இன்னொரு இருபது வருடங்கள் வரை காத்திருக்க வேண்டி நேரலாம்.

சமுத்திரத்திலே மிதக்கும் இரண்டு சிறு மரத்துண்டுகள் எதேச்சையாக ஒருகணம் முட்டி மறுபடியும் பிரிவதுபோல மிகவும் தற்செயலாகத்தான் அது நடந்தது.

வாசல் படியில் காலை வைத்துக்கொண்டு நின்றது பனிக்காலம். அவசர அவசரமாக பனிக்காலத்துக்கு வேண்டிணு உணவு வகைகளைச் சேகரிப்பதிலேயே அந்தக்கிராமம் மும்முரமாக இருந்தது. பெண்களை வெளியே வேலைக்கு அனுப்பும் வழக்கம் அவர்களிடம் கிடையாது. ஆனால் இந்த அவசர நாட்களிலே மாத்திரம் வயல்வெளிக்கு பெண்கள் போய்வருவார்கள். சோளக்காட்டில் இன்னும் கொஞ்ச வேலை இருந்தது.

அந்தச் சிறுமி மட்டும் ரஸ“மாவுக்கு துணையாக வந்துகொண்டிருந்தான். தாலிபான் சட்டம் ஒன்பது வயதுப்பிராயம் தாண்டிய பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு போகக்கூடாது என்று சொன்னது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய முதல் சிறுமி அவள்தான். வேலை முடிந்து மற்றவர்களெல்லாம் முன்னே போய்விட்டார்கள். பத்துமணி நேரம் உழைத்ததற்கு கூலியாக ஒரு கடகம் சோளக்கட்டு அந்தச்சிறுமியின் தலைமேல் இருந்தது. சிறுமிகளுக்கே இயல்பாக இருக்கும் சுறுசுறுப்புடன் அவள் முன்னாலேயே வீட்டுக்கு ஓடிவிட்டான்.

ரஸ“மாவின் மனம் என்றுமில்லாத குதூகலத்தில் இருந்தது. காரணம் தெரியவில்லை. இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு முகத்தை மறைத்திருந்த சாதர் துணியை எடுத்துவிட்டாள். இளைத்துப்போன காற்று அவள் முகத்தை வந்து மெத்துமெத்தென்று தட்டியது.

காற்றும் சூரியனும் அவளுக்கு அன்னியமானவை. ஆண்டவன் கொடுத்த அந்த செல்வத்தை அவன் அனுபவித்ததில்லை. முகத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி மடிந்துபோகும் சூரியனுடைய செல்லக்கதிர்கள் அவளை மெல்ல ஸ்பரிசிக்க, சில்லென்ற காற்று முகத்தை வருட, தன்னிலையில் இல்லாமல் ஓர் ரகஸ்ய உலகில் அவள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

நான் முழுக்க குகைக்கிணற்றில் வேலை செய்துவிட்டு களைப்போடு மேலே வந்த காசிம் அலேமி இந்த அதிசயக் காட்சியைக் கண்டான். குக்குறுப்பான் குருவியைப்போல மிதந்துகொண்டிருந்த ரஸ“மா அவனைக்காணவில்லை.

அவன் அவளுடைய பால்யதோழன். பதினொரு வயதில் முக்காடு போட்டபோது அவள் பார்வையிலிருந்து மறைந்தவன். வாலிபனானதும் முஜாஹ’தீன் இயக்கத்தில் சேர்ந்து ரஸ்யப்படைகளை விரட்டியடித்து போர் முடிவில் திரும்பியவன். காசிம் அவள் முன்னே திடுதிப்பென்று தோன்றினான். பொங்கி வரும் பாலில் தண்­ர் தெளித்தவுடன் கப்பென்று பால் அடங்குவதுபோல ஓர் அமைதி. பாதாளக்கிணற்றுக்கு பக்கத்தில் இருந்த மறைவுக்கு அவள் கையை மெள்ளப்பற்றி அழைத்துவந்தான். மறுக்காமல் பின்னே வந்தாள் அவள்.

ஆகாயத்தில் பறவைகள் சோபன சமிக்ஞைகள் எழுப்பின. பனிக்காலத்தில் சமைந்துபோய் இருந்த சிற்றாறு சூரியனைக்கண்டு வெட்கத்தைவிட்டு கிளர்த்தெழுந்தது போல அவள் திரேகம் சிலிர்த்தது. ஆயிரம் மடைகளை ஒரே நேரத்தில் திறந்துவிட்டது போல வெள்ளம் பொங்கியது.

அழகை எப்படியும் அமுக்கிவிடவேண்டும் என்ற தீவிர கொள்கையில் பாரம்பரியமாக சிருஷ்டிக்கப்பட்டவை அந்த முரட்டு உடைகள். மலைப்பாம்புபோல அவள் உடலை ஈவிரக்கமில்லாமல் சுற்றிக்கிடந்தது. பனங்குருத்து ஓலைபோல மடித்து மடித்து ஒன்றன்மேல் ஒன்றாக செய்த சால்வார் கமிஸ் அது. சிறிய உடலை மூட இவ்வளவு துணிக்குவியலா? அவனுக்கே பிரமிப்பாக இருந்தது.

வானம் வழிவிட்டது. காற்று கைகட்டி ஒதுங்கியது. அந்த மோகனமான நிசப்தத்தைக்கலைக்க ஒரு வார்த்தைதானும் அங்கே பேசப்படவில்லை. மேகக்கூட்டத்தைப் பார்த்தபடி கிடந்தாள் அவள். அவன் தழுவிய அந்தக்கணத்தில் முகில் குடம் ஒன்று உடைந்தது. அந்த மழையில் இருவரும் நனைந்தார்கள்.

இருட்டு முழங்கால் அளவுக்கு வந்துவிட்டது. வீட்டுக்கு எப்படி வந்தாளென்பது அவளுக்கு ஞாபகமில்லை. எல்லோரும் சோளத்தை சுட்டு எடுப்பதில் மும்முரமாய் இருந்தனர். முகத்திரையை நன்றாக முன்னுக்கு இழுத்துவிட்டாள். உள்ளத்தின் பிரகாசம் கண் வழியாகத்தெரியாமல் இருக்க கண்களை மூடிக்கொண்டாள். ஆயிரம் தீப்பந்தங்களைத் கொளுத்தி வைத்து ஒரேடியாக ஊதி அணைத்துவிட்டது போல அது இருந்தது.

ரஸ“மாவின் மாமனார் வெள்ளைத்தாடி பிரகாசிக்க இப்போது களத்தில் பிரவேசித்தார். அவர் கையிலே ஒரு AK47 துப்பாக்கி இருந்தது. கிழவனாருடைய கண்கள் ஒரு கணம் காசிமின் கண்களை எரித்துவிடுவது போலப்பார்த்தன. பதினெட்டே வயதான அவருடைய மகன் நியாஸ’யைக் கொன்றவனை, ஒரு குரோதத்தோடு பார்த்து மனதிலே பதிந்துகொண்டார்.

காசிமின் கண்களைக் கறுப்புத்துணியினால் இறுக்கிக் கட்டினார்கள். தாலிபான் வீரன் ஒருவன் அவனை மரத்தினருகே கொண்டுபோய் நிறுத்தினான். பின்கைகள் கட்டப்பட்ட நிலையில், கண்களும் மறைக்கப்பட்டு செய்வதறியாது சிறிது நேரம் நின்றான்; பிறகு கர்ப்பநிலைக்கு வந்து குந்திய வாக்கில் இருந்துகொண்டான்.

கிழவனார் துப்பாக்கியின் விசையைத் தானியங்கி நிலையிலிருந்து ஒவ்வொரு தோட்டாவாகச் சுடும் நிலைக்கு மாற்றினார். தாலிபான் நீதிபதிகள் அவருடைய துப்பாக்கியை வாங்கி மேலும் கீழுமாக சோதித்தார்கள். மூன்று துப்பாக்கி ரவைகளை கிழவர் போட்டார். காசிமின் உயிரை மூன்று தோட்டாக்களில் எடுப்பதற்கு அவருக்கு அனுமதியிருந்தது.

இப்போது சனத்திரள் கட்டுக்கடங்காமல் போகத்தொடங்கியது. இந்த ஆலாபனைகளை எல்லாம் சகிக்கும் பொறுமையில் அவர்கள் இல்லை. 'சுடு, சுடு, சுடு, கொலைகாரனைச் சுடு' என்ற ஓசை மெதுவாக எழும்பியது. வர வர இந்த ஒலி கடல் அலைபோல வளர்ந்து பெரும் இரைச்சலாக மாறியது.

கடவுளுக்கும் காற்றுக்கும் மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகஸ்யம் இன்னும் ஒருவனுக்கும் தெரிந்திருந்தது. அவள் தூக்கி வளர்த்த நியாஸ’, பதினெட்டு வயது நிரம்பியவன், அவனுக்கு எப்படியோ இது தெரிந்து போய்விட்டது.

மறுநாள் நியாஸ’க்கும், காசிமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அது கூட தற்செயலாகத்தான் நடந்தது. இரண்டு தரப்பும் முன்கூட்டியே ஆயத்தம் செய்து இந்தச்சண்டையில் இறங்கவில்லை. வழக்கம் போலக் கூடிய ஷ”ரா கூட்டத்தில் வாய்க்கால் தகராறில்தான் இது ஆரம்பமாகியது.

ஊர் முன்னிலையில் நடந்த இந்த விவகாரத்தில் ரஸ“மாவின் பேரே பிரஸ்தாவிக்கப்படவில்லை. சண்டைக்கான உண்மைக்காரணம் இப்படி மறைக்கப்பட்டுவிட்டது. வார்த்தைகள் முற்றி வசவுகள் வெடித்தன. நியாஸ’தான் வேண்டுமென்றே சண்டையைத் தொடக்கினதாக பலரும் அபிப்பிராயப்பட்டார்கள். சண்டையின் உச்சக்கட்டத்தில் நியாஸ’யைத் துப்பாக்கியால் கட்டுக்கொன்றுவிட்டான், காசிம்.

தாலிபான் நீதிபதிகள் நடத்திய விசாரணையில் குற்றத்தை முற்றாக ஒப்புக்கொண்டான் காசிம். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரஸ“மாவின் விவகாரம் வெளியே தெரிய வந்திருந்தால் தாலிபான் சட்டப்படி இருவரும் கல்லால் எறிந்து கொல்லப்பட்டிருப்பார்கள். உயிர்போனாலும் அவன் ரஸ“மாவை காட்டிக்கொடுக்கமாட்டான். ஒரு முஜாஹ’தீன் போராளி செய்யக்கூடிய காரியமா அது.

'அல்லாவின் கருணை அளப்பாரியது. குற்றம் செய்வது மனித இயல்பு. மன்னிப்பது அல்லாவின் செயல். கொலையாளியை மன்னிப்பது இப்போது உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் அவரை மன்னீப்பீர்களா? என்றார் நீதிபதி.

அப்பொழுது கிழவனார் தாடியைத் தடவிவிட்டுக் கொண்டு நடுமைதானத்துக்கு வந்தார். வலது கையைத்தூக்கி நெஞ்சிலே வைத்துக்கொண்டு, ஒலிபெருக்கியில் இப்படி அறிவித்தார்: 'ஈவிரக்கமில்லமல் கொலை செய்யப்பட்ட நியாஸ’யின் தந்தை நான். இந்தப்பாபியை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். மன்னிக்கமாட்டேன், மன்னிக்கமாட்டேன்.'

ஆயிரக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் 'பட்பட்' என்று அடிக்கும் சத்தத்தை தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. ஒரு பத்தடி தூரத்தில் கிழவனார் துப்பாக்கியைத் தூக்கிவைத்து குறி பார்த்தார். அந்த நிசப்தம் பயங்கரமாக இருந்தது.

கண்கட்டிய நிலையில் திசை அறியாத காசிம் சனங்கள் இருந்த பக்கம் தலையைத் திருப்பி தீனமான குரலில் கத்தினான். 'ஓ! ஹாஜி சாஹ’ப்! ஹாஜி சாஹ’ப்! என்னை மன்னித்துவிடுங்கள்!' கிழவரின் மனம் கல்லாக இருந்தது.

அவர் துப்பாக்கியை நிதானமாக நிமிர்த்தி துளையின் மூலம் பார்த்தார். ஙப்போல அவன் வளைந்திருந்தான். வலது கண்ணுக்கும், காதுக்கும் இடையிலான பிரதேசத்தில் குறிவைத்தார். துப்பாக்கியை ஆடாமல் பிடித்துக்கொண்டு விசையின்மேல் விரலை வைத்தார்.

சனங்களின் ஓய்ச்சல் அறவே நின்றுவிட்டது. மூச்சை உள்ளே எடுத்தவர்கள் வெளியே விடவில்லை; வெளியே விட்டவர்கள் உள்ளே இழுக்கவில்€லை. கிழவனார் விசையை இழுத்தார். 'பஸ்க்' என்று ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. தோட்டா பறந்ததோ, தாக்கியதோ யார் கண்ணுக்கும் புலப்படவில்லை. என்ன நடந்ததென்று விளங்காமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அந்தத்தோட்டா பொய்த்தோட்டா போலப்பட்டது. சத்தம் கேட்டதே ஒழிய ஒரு சேதமும் விளைவிக்கவில்லை. கிழவனாரும், சனங்களும், நீதிபதிகளும் இதை உணரச்சிறிது நேரம் பிடித்தது.

இப்போது கிழவனார் இரண்டாவது தடவையாக குறிபார்க்கத்தொடங்கினார். காசிம் தலையை மேலும் கீழும் அசைத்தபடி பைத்தியக்காரன் போல கத்திக்கொண்டிருந்தான். அவ்வளவிற்கும் திடமாக இருந்த கிழவனார் முகத்தில் லேசாக பயப்பிராந்தி அரும்பியது. சனங்களின் எதிர்பார்ப்பு வேறு. அந்த நிசப்தம் அவரைத் தடுமாற வைத்தது. கிழவனார் பார்த்தார். முதுகுத்தண்டு பெரிய பரப்பாகத்தெரிந்தது. அதிலே குறிவைத்து வீழ்த்திவிட்டால் பிறகு நிதானமாக மூன்றாவது குண்டை தலையிலே சுட்டு காரியத்தை முடித்துவிடலாம்.

முதுகைக் குறிபார்த்து சுட்ட அந்தவேளை காசிம் தலையைப்பலமாக சாய்த்தபடி ஒரு துள்ளுத்துள்ளினான். குண்டு அவனுடைய தோள்பட்டையைச் சிராய்த்துக்கொண்டு போனது. மெல்லிய ரத்தக்கசிவு ஏற்பட்டது.

'செத்துக்கொண்டிருக்கிறோம்' என்ற நினைப்பில் காசிம் குந்தியிருந்த வாக்கிலேயே துள்ளித் துள்ளிப் பாய்ந்தான். தலையறுத்த கோழிபோல இவன் நாலாபக்கமும் குதித்தான். எல்லோரும் கொஞ்சநேரம் இதை ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவன் இப்படியே நகர்ந்து நகர்ந்து சனத்திளுக்கு பக்கத்திலே வந்து விழுந்தான். சனங்கள் அப்போது அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.

கிழவர் பாடு திண்டாட்டமாகிவிட்டது. 'சுடாதே! சுடாதே! அல்லா மன்னித்துவிட்டார், சுடாதே! என்று கத்தத்தொடங்கினான் ஓருத்தன். அதைத்தொடர்ந்து மற்றவர்களும் கூச்சல்போட்டார்கள். கிழவர் கொஞ்சநேரம் செய்வதறியாது நின்றார். மூன்றாவது தோட்டாவை நிலத்தை நோக்கிச்சுட்டார். சுட்டுவிட்டு துப்பாக்கியைத் தூக்கிப்பிடித்தபடியே நடக்கத்தொடங்கினார். அவர் மனதிலே இருந்த பெரிய பாரம் தோட்ட கிளப்பிய புழுதிபோல பறந்துபோனது.

சனங்கள் கலையத்தொடங்கினார்கள். அல்லாவின் அற்புதத்தை வியந்து கதைத்தபடியே அவர்கள் ஷ”ஹர் தொழுகைக்கு புறப்பட்டார்கள். மூன்று தோட்டக்களக்கு தப்பிய காசிம் அல்லாவினால் மன்னிக்கப்பட்டுவிட்டான். மாட்டுக்கார சிறுவர்கள் உதிர்ந்த தோட்டக்களை புழுதியில் விழுந்து விழுந்து தேடினர். சனங்கள் கலைந்தபிறகும் துப்பாக்கியின் புகை மணம் நெடுநேரமாக அந்த இடத்திலேயே படிந்து நின்றது.

ரஸ“மாவின் வீடு வெறிச்சென்று இருந்தது. ஆண்கள் எல்லோரும் மைதானத்துக்கு போய்விட்டார்கள். பெண்கள் எல்லாம் வேலையில் மும்முரமாக இருப்பதுபோல் ஒருவருக்கொருவர் போக்குக்காட்டியபடி இருந்தார்கள்.

ரஸ“மா தலைத்துணியை இழுத்து விட்டுக்கொண்டு தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் கைகள் 'குரூத்' பலகையை ஓர் ஆவேசத்துடன் தேத்துக்கொண்டிருந்தாலும் அவள் காதுகள் மட்டும் கூர்மையாக இருந்தன.

** இதன் தொடர்ச்சி vadakku4.mtf வருகிறது**
அவள் ஒருத்திக்கே


** vadakku3.mtf ன் தொடர்ச்சி **

மைதானத்தின் நடுவே கண்கட்டப்பட்டு அவன் நிற்கும் ரகஸ்யம் அவள் ஒருத்திக்கே தெரியும். ஒரு நாள் சிலகணங்களை அவளோடு பாதாளக் கிணற்றின் மறைவில கழித்தவன்; இன்னும் சில வினாடிகளில் இறந்துவிடுவான்.

அவ்வப்போது ஒலிபெருக்கி அவளுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. தாலிபானுடைய பேச்சுரை கேட்டது. பிறகு மாமனாருடைய கம்பீரமான குரல். அதைத்தொடர்ந்து தீனமான குரலில் காசிம் உயிருக்கு மன்றாடுவது காற்றில் வந்தது. அவளுக்கு தொண்டையை அடைத்துக்கொண்டது. கிழவர் அவனை மன்னித்துவிட மாட்டாரா என்று மனம் பதறியது.

வேட்டுச் சத்தங்களை ரஸ“மா எண்ணியபடியே வந்தாள். முதலாவது வேட்டு மிகச்சன்னமாக ஒலித்தது; அதைத் தொடர்ந்து இரண்டாவது சத்தம் பலமாகக்கேட்டது. பிறகு சனங்களின் ஆரவாரம் ஓவென்று காற்றிலே வந்தது. கடைசியில் மூன்றாவது வேட்டு.

ரஸ“மா துப்பட்டாவை வாய்க்குள் அடைத்துக்கொண்டு விம்மத்தொடங்கினாள். அவள் உடம்பு முழுக்கக் குலுங்கியது. அடக்க அடக்க துக்கம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. எல்லாமே முடிந்துவிட்டது.

லான்டி இறைச்சி இப்போது கொதி நிலையை அடைந்திருந்தது. அவளுடைய மனக்கொந்தளிப்பை அறிந்திருந்ததுபோல ஒரு வேக்த்தோடு அது பொங்கிப்பொங்கி கொதித்தது. நிற்கவில்லை.

ரஸ“மாவின் விக்கலும் நிற்கவில்லை. கொலைபட்டு இறந்துபோன கொழுந்தனை நினைத்து அழுகிறாள் என்று சிலர் நினைத்துக்கொண்டார்கள். கணவன் ஞாபகம் வந்துவிட்டது போலும் என்று இன்னும் சிலர் நினைத்தார்கள்.

காசிம் மரணதண்டனையில் இருந்து தப்பிய விஷயம் அவளுக்குத்தெரியாது. அந்தரங்கமான இடத்தில் அவன் பதித்த நகக்குறி காயுமுன்பு இறந்துவிட்டான் என்ற எண்ணத்தை அவளால் தாங்கமுடியவில்லை. அடக்கி அடக்கி விம்மிக்கொண்டிருந்தாள்.

அந்த ஒலி வெகுநேரமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

சமுத்திரத்திலே மிதக்கும் இரண்டு மரத்துண்டுகள் ஒன்றையொன்று ஒரு கணம் தொட்டு மீண்டும் பிரிவதுபோல அவளுடைய வாழ்விலே அவனை சந்திக்கும் சந்தர்ப்பம் இனிமேலும் ஒருமுறை வரக்கூடும். இன்னொரு பதினைந்து ஆண்டுகள் அதற்காக அவள் காத்திருக்கவேண்டி நேரிடலாம்.





அது ஒரு பெரிய காரியமாக இருக்காது.

* * *


கம்புயூட்டர்

அதனுடைய பார்வை எனக்கு துண்டாய் பிடிக்கவில்லை. அது இருந்த விதமும், தோற்றமும் வெறுப்பைக் கூட்டியது. மேசைமேல் சவடாலாகப் பரப்பிக்கொண்டு கல்லுளிமங்கன்போல சப்பளிந்துபோய் இருந்தது.

'ஆணா? பொண்ணா? என்றுகூட சரியாகத் தெரியவில்லை. கம்புயூட்டர்களில் ஆண், பெண் பேதம் இருப்பது எனக்கு கன நாளாகத்தெரியாது. அதைக்கண்டு பிடிப்பதற்கு என்ன குறுக்குவழி என்பதையும் அப்போது யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை.

சில நிபுணர்கள் பார்த்த வாக்கிலேயே சொல்லிவிடுவார்களாம். பெண்ணென்றால் வழிக்குக்கொண்டுவர கனநாள் ஆகும். பிகு செய்துகொண்டே இருக்குமாம். ஆனால் அணைந்துவிட்டால் உயிர் உள்ளவரை விசுவாசமாக செயல்படும். ஆண் அப்படியில்லையாம். ஆரம்பத்தில் அளவுக்கதிகமாக ஒத்துழைக்கும்; நாள் போகப்போக காலை வாரி விட்டுவிடுமாம்.

முன்பின் தெரியாத விவகாரத்தில் இப்படிவந்து மாட்டிக்கொண்டோமே என்று நொந்துகொண்டேன். ஒரு திடீர் உந்துதலால்தான் கம்புயூட்டர் ஒன்று வாங்குவதாக முதல்நாள் இரவு எங்கள் வீட்டில் முடிவாகியது. என் ஒன்பது வயது மகன் அரவிந்தன் தன்னடைய சிநேகிதர்கள் எல்லாரிடமும் கம்புயூட்டர் இருப்பதாக அளந்தான். என் ஆசை மனைவியோ ஆர்மோனியப்பெட்டிபோல இதையும் வளைத்துவிடலாம் என்று ஆர்வமான கனவுகளுடன் காத்திருந்தாள்.

இது என்ன வெண்டைக்காயா, நுனியை முறித்துப்பார்த்து வாங்க? கம்புயூட்டர் முந்திப்பிந்தி வாங்கியும் அனுபவமில்லை. கடைக்காரனடைய முகலாவண்யம் கதைப்பதற்கு ஆசையூட்டுவதாகவும் இல்லை. வீர்யம் நிறைந்தவன்போல காணப்பட்டான். அவன் தலையில் இருக்கவேண்டிய முடியெல்லாம் மூக்கு வழியாகவும் காது வழியாகவும் வந்து கொண்டிருந்தது. எனக்கு அவன் சொன்ன விளக்கங்களும், கேட்ட கேள்விகளும் தலைகால் புரியவில்லை. நான் நியூயோர்க்கில் பட்டபாடு இங்கேயும் படவேண்டி வந்துவிட்டதே என்று யோசித்தேன்.

அமெரிக்காவுக்கு நான் முதன்முதலாகப் போனபோது வாய்விட்டு கேளாத நண்பர் ஒருத்தர் தூண்டில் ஒன்று வாங்கி வரும்படி கூறியிருந்தார். தூண்டிலில் மீனைப்பிடிப்பது தலையிலா, வாலிலா என்பது போன்ற அடிப்படை விஷயம்கூட எனக்குத்தெரியாது. நண்பருக்க 'சரி' என்று வாக்குக் கொடுத்துவிட்டேன். அமெரிக்காவில் தூண்டில் வாங்குவதற்காக ஒரு கடைக்குப் போனபோதுதான் எனக்கு பிரச்சனையின் பிரம்மாண்டம் வெளிச்சமானது.

கடையென்றால் அது சாதாரண கடையல்ல. ஒரு கிரிக்கட் மைதானம் அளவில் மிகப்பெரிய சமாச்சாரம். இதிலே விசேஷம் என்னவென்றால் இந்தக்கடையிலே தூண்டில் மட்டும்தான் விற்பனை செய்தார்கள். மீன்பிடி சாதனங்களுக்கென்றே ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேகமான நிலையம். எத்தனையோ விதமான உபகரணங்க; முன்பின் பார்த்திராத வினோதமான தூண்டில்கள் சிறிதும் பெரிதுமாக கடையை நிறைத்துக்கிடந்தன. நான் அங்குமிங்கும் அண்ணாந்து பார்த்துக்கொண்டு அநாதையாகத் திரிந்தபோது, ஏங்க வைக்கும் வனப்புள்ள பணிப்பென் ஒருத்தி தென்பட்டாள். குதி உணர் காலணியில் நறுக்கென்று அவள் கத்தரிக்கோல் வெட்டுவதுபோல நடந்து வந்து 'உங்களுக்கு ஏதும் உதவி தேவையா?' என்று மழலையில் கேட்டாள். நான் வந்த விஷயத்தை விளக்கினேன்.

அவளுடைய முதல் கேள்வி 'உங்களுக்கு எப்படி வேண்டும்? வலது கை தூண்டிலா? அல்லது இடது கையா? என்றாள். 'ஆஹா! அப்படியா சங்கதி?' என்று நான் 'வலது கை' என்று பதில் சொன்னதும், இரண்டாவது கேள்வி எழுந்தது. 'ஆற்றிலேயா? கடலிலேயா?' என்றாள். 'இது என்னடா வில்லங்கம்?' என்று நான் யோசிப்பதற்கிடையில் அடுத்த கேள்வி வந்து விழுந்தது. 'ஆழ்கடலா? கரை ஓரத்திலா?' என்றாள். 'தூண்டிலிலே இத்தனை விசயங்கள் இருக்கா?' என்று நான் தியானத்தில் இருந்தபோது மிகவும் முக்கியமான ஒரு கேள்விக்கணையை வீசினாள். 'சிறுவனா? இளைஞனா? அல்லது முழு மனிதனா?' என்றாள். நான் என்னுடைய நண்பருடைய உடல்வாகை மனத்தினால் அளவெடுக்க முயற்சிசெய்து கொண்டிருந்தேன்.

இப்படியாக அவள் கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டாள். 'நின்று கொண்டு பிடிப்பதற்கா? இருந்து பிடிப்பதற்கா? படகில் போய் பிடிப்பதற்கா? படுத்திருந்து பிடிப்பதற்கா?' என்றாள் (மரியாதை கருதி 'சிறுநீர் பெய்து கொண்டு பிடிப்பதற்கா?' என்பதைக்கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.) 'சிறிய மீனா? பெரிய மீனா? என்ன எடை தாங்கும் தூண்டில் தேவை?' இதுமாதிரியாக 'இம்மென்னும் முன்னே எழுநாறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம்' கேள்விகள் வந்து விழுந்தன. தலை சுற்றிவிட்டது. 'டிக்கட் வேண்டாம் கையை விடு' என்று ஆகிவிட்டது. (யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் கவுண்டர் ஒட்டைக்குள் கையை நீட்டினால் டிக்கட் கொடுப்பவர் கையைக்கெட்டியாகப் பிடித்துக் கொள்வார். பின்னுக்கு சனம் நெருக்கியபடியே இருக்கும். டிக்கட் கேட்டவருடைய கையோ முறிந்துபோகும் நிலை. அப்போது இவர் 'டிக்கட் வேண்டாம் கையைவிடு' என்று கத்துவது வழக்கம்). கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்திருக்கவேண்டும் என்று பட்டது எனக்கு. அடுத்த முறை வரும்போது இவளுடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலை ஒரு புத்தகமாக அடித்துக்கொண்டு வருவது என்று மனத்திற்குள் தீர்மானித்துக்கொண்டேன்.

இப்படியாக சந்தி பிரிக்காத பாடல்போல தலை சுற்றியது விவகாரம். மறுபடியும் நான் அந்தக்கடைக்கு கம்புயூட்டரை கொத்துக்கொத்தாக ஆராய்ச்சி செய்து வித்துவான் பட்டம்பெற்ற ஒரு நண்பரோடு படையெடுத்தேன். நண்பர் கம்புயூட்டருக்கு தலபுராணம் எழுதியவர். விடுவாரா? இப்போது வட்டியும் முதலுமாக அவர்களைப்போட்டு குடை குடையென்ற குடைந்தார். அவர்களுடைய சம்பாஷணை முற்றிலும் ஒரு புதிய பாஷையில் நடைபெற்றது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இரண்டு பேருடைய வாயையும் மாறி மாறிப்பார்த்தேன். 'ஹார்ட் ட்ரைவ், ப்ளொப்பி, மெகா பைட், சொப்ட்வேர், இண்டர்பேஸ், யூபிஎஸ் என்ற வார்த்தைகள் எல்லாம் எனக்கு சிதம்பர சக்கரமாக இருந்தது.

ஒருமுறை கவி காளமேகம் பெயர் தெரியாத ஓர் ஊரில், பாஷை தெரியாத திம்மி என்கிற தாசியுடன் இரவைக் கழிக்கவேண்டி வந்ததாம். இரவு முழுக்க தாசி 'ஏமிரோ வோரி', 'எந்துண்டி வஸ்தி' என்றெல்லாம் இவரிடம் சரசம் செய்தாள். அவள் சொன்னது இவருக்கு புரியவில்லை. 'எமன் கையில் பட்டபாடு பட்டேன்' என்கிறார் காளமேகம்.

'எமிரோ வோரி' என்பாள் எந்துண்டி வஸ்தி' என்பாள்
தாம் இராச் சொன்ன வெல்லாம் தலைகடை தெரிந்ததில்லை
போம் இராச் சூழும் சோலைப் பொருகொண்டைத் திம்மி கையில்
நாம் இராப் பட்ட பாடு நமன் கையில் பாடுதானே.

அந்தக் கஷ்டம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர்களுடைய கதையில் அடிக்கம் 'ராம், ராம்' என்ற வார்த்தை அடிப்பட்டது. நான் மேலே இருப்பது 'ராம்' என்றும் கீழே இருப்பது 'லட்சுமணன்' என்றும் எனக்கே உரிய சாதுர்யத்துடன் ஊகித்துக்கொண்டேன்.

இவர்கள் இந்தச் சந்தடியில் இருக்கும்போதே நான் எனக்காகத் தோதாக ஒருவரைக் கண்டுபிடித்தேன். அவருடைய கெமிஸ்ரி எனக்கு சரிவரும்போல் தோன்றியது. விஷயம் தெரிந்தவர்போலக் காணப்பட்டார். அவரிடம் போய் மெல்ப்பேச்சுக் கொடுத்தேன்.

'கம்புயூட்டர் வாங்கும்போது நாங்கள் என்ன பாவிப்புக்கு அதை வாங்குகிறோம் என்பதை நிச்சயிக்கவேண்டும்' என்றார். 'ஒரு நெல்லு மூட்டை மாத்திரம் கொண்டு போவதற்கு ஒரு திருக்கல் வண்டி போதும்; நூறு மூட்டை என்றால் ஒரு லொறி தேவைப்படும். குடும்பத்தோடு சுகமாகப் பயணம் செய்ய கார் வசதியாக இருக்கும். இல்லை, விசையாகப் போவதுதான் நோக்கம் என்றால் ரேஸ’ங்கார்தான் வாங்கவேண்டும்' என்றார். இது என்னை யோசிக்க வைத்ததோடு குட்டையை மேலும் குழப்பிவிட்டது.

இதுதவிர ராட்சச கம்புயூட்டர்களும், தனித்தியங்கும் கம்புயூட்டர்களும் இருந்தன. மேசையில் வைப்பது மடியில் வைப்பது (இது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்), கக்கத்தில் வைப்பது இப்படியாகப்பல. தலையில் வைப்பது இன்னமும் வரவில்லை என்றே நினைக்கிறேன். அது வந்துவிட்டால், பெண்கள் தலையில் மல்லிகைப்பூ வைப்பதற்கு பதிலாக இதை வைத்துக்கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடைசியில் நண்பருடைய ஆக்ஞைப்படி '486' கம்புயூட்டர் வாங்குவதென்று தீர்மானமாகியது. கம்புயூட்டர் என்றால் அதை மாத்திரம் தூக்கிக்கொண்டு வர முடியுமா? அதற்கென்று சில உபகரணங்கள் இருக்கின்றன. நான் கணக்குப்போடும்போது அதை மனதில் எடுக்கவில்லை. மௌஸ், மௌஸ் பாட், டிஸ்குகள், பேப்பர், ரிப்பன் என்று ஊரிப்பட்ட சாமான்கள். பில் போடும்போது கணக்கு எக்கச்சக்கமாகிவிட்டது. பொங்கல் பானை வாங்கும்போது அதற்கென்று திருகணி, இஞ்சி இலை, கரும்பு என்று வாங்குவதில்லையா? அப்படித்தான் இதுவும் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.

நாங்கள் எல்லாவற்றையும் காரிலே ஏற்றி திரும்பி வரும்போது நண்பர் '486 கம்புயூட்டர், 486 கம்புயூட்டர்' என்று உச்சாடனம் செய்தவாறே அதன் வீரப்பிரதாபங்களைப் பற்றி ஒரு பரணி பாடினார். எங்கள் ஊர் சிவக்கொழுந்து 1008 வேட்டி வாங்க வண்டில் கட்டி பெரியகடைக்கு போனதைப்போல் நானும் 'எனக்கு 486 கம்புயூட்டர்கள் கிடைக்கப்போகிறது' என்று மடைத்தனமாக ஒரு கணம் கணக்குப்போட்டதை எண்ணி வெட்கினேன்.

ஆலத்தி எடுக்க நிற்பதுபோல ஆவலோடு வாசலில் காத்திருந்தாள் என் மனைவி, மேகலா. அவளுக்கு பக்கத்தில் என் மகன். நிறை பொங்கல் பானையை இறக்குவதுபோல மெத்த மெதுவாக கம்புயூட்டரை இறக்கி உள்ளே கொண்டுபோய் ராகுகாலம் தவிர்த்த நல்ல வேளையில் ஒரு மேசையில் இருத்தினோம். முதல் வேலையாக சாமிக்கு தீபம் காட்டிவிட்டு வந்து கணிப்பொறியின் நெற்றியில் ஒரு குங்குமப்பொட்டு வைத்தாள் என் மனைவி. கைவியளத்துக்கு அரவிந்தன் அதில் 'ஓம் ஸ்ரீராம்' எழுதினான். இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு பரபரப்புடன் கம்புயூட்டரை இயக்கிப் பார்த்தோம்; தட்டிப்பார்த்தோம்; தடவிப்பார்த்தோம். அதன் புது மணத்தை நுகர்ந்தோம். அது 'கிர்ர், கிர்ர்' என்று உயிர் பெறும் அதிசயத்தை வாய் திறந்து பார்த்து ரசித்தோம். அன்றுமுதல் அந்த கம்புயூட்டர் எங்கள் குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது.

முதல் நாளே நான் ஒரு பெரிய உண்மையைக் கண்டுபிடித்தேன். கணிப்பொறி என்பது ஒரு ராட்சச வேலைக்காரன். சொல்லும் வேலைகளை எல்லாம் கச்சிதமாகச்செய்யும், ஆனால் தவறான கட்டளைகள் பிறப்பித்து விட்டாலோ தானே எஜமானன் ஆகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமைதான். இன்னொன்று. பயந்து பயந்து இதை அணுகினால் அது எட்ட எட்டப்போய்விடும். எனது ஒன்பது வயது மகன் மீன் குஞ்சு நீந்துவதுபோல உற்சாகமாக அதனோடு ஒட்டிப்பழகிவிட்டான். கணிப்பொறியை அவனுக்கு நிரம்பவும் பிடித்துக்கொண்டது. அதுவும் தன்னுடைய ரகஸ்யக்கதவுகளை அவனுக்கு தங்கு தடையின்றி திறந்துவிடத் தயாராகிவிட்டது.

எல்லோருக்கும் அவசரமாகச் செய்வதற்கு அதில் கனவேலை இருந்தது. என் மனைவிக்கு வீட்டுக் கணக்குகளும், சீட்டுக்கணக்குகளும் காத்திருந்தன. அரவிந்தனுக்கு பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் பயிற்சி ஏற்கனவே இருந்தது. பட்டங்கள் கீறவும், கேம்ஸ் விளையாடுவதற்கும் அவன் பறந்தான்.

அரவிந்தனுடைய நண்பர்கள் இப்பவெல்லாம் அடிக்கடி வந்து போகத்தொடங்கினார்கள். கம்புயூட்டருடன் அவர்கள் பொழுது முக்காலும் கழிந்தது. புது கேம்ஸ்களை பண்டமாற்று செய்து பாவித்தார்கள். கைதேர்ந்த நிபுணர்கள்போல் புதிய தலைமுறை கணிப்பொறி பற்றி நீண்ட விவாதங்களும், பட்டிமன்றமும் நடத்தினார்கள்.

என் மனைவியின் பொழுதுபோக்கு திசை மாறிவிட்டது. சீட்டுக்கணக்கு விவரங்களை எல்லாம் கணிப்பொறியில் நுணுக்கமாக பதித்துவந்தாள். அடிக்கடி அவளுக்கு தொலைபேசி வரும். ஒருமுறை சிநேகிதி ஒருத்தி என்னவோ கேட்க 'கொஞ்சம் இரு; எனக்கு ஞாபகத்தில் இல்லை. கம்புயூட்டரைப் பார்த்து சொல்லுறன்' என்று இவள் பெருமையாகச் சொன்னாள்.

புதிசாய் பிறந்த குழந்தை வீட்டை அடியோடு மாற்றுவதுபோல இந்தக் கணிப்பொறி எங்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை கொண்டுவந்தது. நாங்கள் ஒருவருடன் ஒருவர் கம்புயூட்டர் பாரிபாஷையிலேயே பேசப் பழகிக்கொண்டோம். பள்ளிக்கு எடுத்துப்போக மகனுக்குச் சாப்பாடு தரும்போது அவன் 'அம்மா give me a Mega Byte' என்று கத்துவான்.

மனைவியிடம் இது வேறுவிதமாக வெளிப்படும் 'மேகலா' என்ற பெயரை அவள் இப்போதெல்லாம் `Megaலா' என்றே எழுதுகிறாள். காரணம் தெரியாமல் இதயத்தில் சந்தோசம் பொங்கும் அந்த நேரங்களில் என் விரல்கள் சில்லென்று குளிர்ந்திருக்கும் அவள் இடையைப் போய் தொட்டுவிடும். நளிப்பு காட்டிக்கொண்டே மெல்ல விலகிவிடுவாள். எட்டத்தில் நின்று 'Press any key to Enter' என்று சொல்விட்டு ஓடுவதற்கு தயாராக நிற்பாள். நான் எட்டிப்பிடித்து `If you want to Escape. Press here' என்று என் உதட்டைத் தொட்டுக்காட்டுவேன். இந்த நேரங்களில் எல்லாம் ஒரு புதிய அன்னியோன்னியம் எங்கள் குடும்பத்துள் வந்து பரவியதுபோல எனக்குப்பட்டது.

சமயங்களில் 'அரவிந்தா! அரவிந்தா! இஞ்ச வா!' என்று யானை ஆதிமூலத்தை கூப்பிட்டது போல ஓலமிடுவாள் என் மனைவி. 'கம்புயூட்டர் இந்தக் கூட்டலை தப்பு தப்பாய் போட்டிருக்கு. இதை ஒருக்கா பார்' என்பாள். என்னுடைய மகனும் 'என்னம்மா, நீங்கள் சும்மா, சும்மா கூப்பிட்டு ட்ரபிள் கொடுக்கிறீங்கள்' என்று நடப்பு விட்டுக்கொண்டே போய் அந்தச் சில்லரை தகராறை சரிசெய்துவிட்டு வருவான். இப்படியாக அந்தக்கணிப்பொறியின் வருகைக்குப் பிறகு எங்கள் வீடு ஒரு விஞ்ஞானத் துள்ளல் துள்ளி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தது.

கன நாளாக ஒரு சிறுகதை என் மனதிலே ஊறப்போட்டுக்கிடந்தது. இப்போது முட்டியில் கள்ளுப்பொங்குவது போல அது பொங்கிக்கொண்டு வந்தது. இனியும் எழுதாமல் தாவரிக்க ஏலாது என்ற நிலமை.

இரண்டு காதலர்களைப் பற்றியது அந்தக்கதை. காதலிக்கு மாற்றல் கிடைத்து இன்னொரு ஊருக்கு போய் விடுகிறாள். தொலை தூரத்துக்கு போனாலும் அவளுடைய காதல் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் சூடு குறையாமல் வளருகிறது. புது ஊரில் காதலிக்கு இன்னொருவனிடத்தில் மையல் ஏற்படுகிறது. பழைய காதலன் அவளை நம்பி, தபால் நிலையத்துக்கம், தொலைபேசி அலுவலகத்துக்குமாக காசை விரயம்செய்து கொண்டு இருக்கிறான். அவர்களுடைய தொலைதூரக்காதல் தொலைந்துவீடும் அபாயத்தில் இருந்தது. கதைக்கும் நான் 'தொலை' என்றே தலைப்பு கொடுத்திருந்தேன்.

சிறுகதையாகத் தொடங்கி நெடுங்கதையாக அது வளர்ந்துவிட்டது. ஆறாயிரம் வார்த்தைகளுக்கிடையில் அதை மடக்கி வைத்திருந்தேன். நான் நினைத்ததிலும் பார்க்க கதை நல்லாக வந்திருந்தது. காதல் வர்ணனை ஒரு புதுப்புயலை கிளப்பிவிடும் என்று எதிர்பார்த்தேன்.

இதிலே ஒரு வசதி என்னவென்றால் கணிப்பொறியில் காகிதம் மிச்சப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும் எவ்வளவோ நன்மை. கையினால் எழுதுவதுபோல அடித்து அடித்து எழுதி, திருத்தங்கள் செய்து காகிதத்தை விரயமாக்கத்தேவையில்லை. எல்லா திருத்தங்களையும் கம்புயூட்டரில் ஒரேயடியாகச் செய்துவிடலாம். எத்தனை மரங்கள் நிம்மதிப்பெருமூச்சுவிடும்!

ஒருநாள் ஒரே மூச்சில் எட்டு பக்கங்களை அடித்து முடித்திருந்தேன். வேண்டிய திருத்தங்களை கணிப்பொறியிலேயே செய்துகொண்டேன். எழுதி, எழுதி, அடித்து அடித்து கை முறியும் அவசியம் இப்போதெல்லாம் இல்லை. வேலையை முடித்து கைகளைத்தூக்கி, நாரியை நிமிர்த்தியபோது மின்சாரம் நின்றுவிட்டது. அடித்த அவ்வளவும் பாழாகி என்னுடைய ஆர்வம் கசங்கிப்போனது. முதலில் இருந்து திரும்பவும் இன்னொரு முறை அடிக்கவேண்டும்.

அடுத்த நாள் நண்பர் வந்தபோது இதைச்சொல்லி அழுதேன். எனக்கு சாதகத்தில் நம்பிக்கை இல்லை. கும்பராசிக்காரர் எல்லாம் அப்படித்தான். இருந்தும் என்னுடைய சாதகத்தில் 'கம்புயூட்டர் தத்து' இருப்பதாக சுதுமலை சாத்திரியார் சொன்னது என்னைக்கொஞ்சம் கவலைப்பட வைத்தது. அப்போது நண்பர் எனக்கு இரண்டு புத்திமதிகள் சொன்னார்.

ஒன்று, தலைபோகிற காரியம் என்றாலும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் டைப்செய்ததை சேமித்து வைக்கவேண்டும். இரண்டு, எங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு டைரக்டரி உண்டாக்கி அதிலே எங்கள் வேலைகளை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். இதை எப்படிச்செய்ய வேண்டுமென்பதையும் விபரமாக விளக்கினார்.

அன்றிலிருந்து பொயிலைக் கன்றுக்கு பாத்திகட்டுவதுபோல கணிப்பொறி தளத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் நானும், இன்னொரு பகுதியில் மனைவியும், மீதியில் அரவிந்தனுமாகப் பயிர் செய்தோம். எங்கள் படைப்புகளை இந்த வரப்புக்குள் வைத்துக்கொண்டோம். இதற்குப் பிறகு ஒரு ஒழுங்கு முறை வந்தது. ஆரம்பத்தில் எனக்கு கம்புயூட்டருடன் ஏற்பட்ட பிணக்கு நீங்கி ஓர் இணக்கம் ஏற்பட்டது.

அது தன்னிடமுள்ள சூட்சுமத்தை எல்லாம் மெள்ள மெள்ள அவிழ்த்து விடத்தொடங்கியது. என்னுடைய வேலையை வெகுசுலபமாக்கியது. அந்த மாயா விநோதங்களில் நான் என்னுடைய மனதைப்பறிகொடுத்தேன்.

உருக்கி எடுத்த இருப்பினால் செய்த 'ரெமிங்டன்' தட்டெழுத்து பொறியில் நான் ஆரம்பகாலத் தீட்சை பெற்றவன். அதைத் தூக்க இரண்டுபேரும், வைக்க நாலு பேரும் வேணும். நகல் எடுக்கும் மெசின்கள் வருவதற்கு முன்னரான ஒரு காலம் அது. ஏழு கார்பன் தாள் வைத்து, கைகளை தலை உயரத்துக்கு தூக்கி, மூச்சைப்பிடித்து 'தேடி குத்தி' டைப் செய்வதில் நான் ஒரு விண்ணன் என்று பேர் வாங்கியவன். இப்படி ஓர் ஆழ்ந்த பரவசத்தோடு நான் தட்டெழுத்து லீலைகள் செய்யும்போது அம்மி பொளிவதுபோல ஒரு விதமான சத்தம் வரும் என்று சொல்வார்கள்.

என்னுடைய மகன் அப்படியல்ல. அவனுடைய விரல்கள் பட்டுத்துணியில் படுவதுபோல மெல்லப்பட்டு நகரும். விசைக்கட்டைகளில் அவன் விரல்கள் வண்ணத்துப்பூச்சி பறப்பதுபோல தொட்டு தொட்டு பறந்தபடியே இருக்கும். எழுத்துக்கள் திரையிலே மின்னி மின்னி கை கோத்துக் கொண்டு வரும்போது பார்க்க கொள்ளை அழகாக இருக்கும்.

இதில் பல ரகஸ்ய பாதைகளை என் மகனே கண்டுபிடித்துக்கொடுத்தான். நான் முன்பே அவற்றை அறிந்திருந்ததுபோல ஓர் அலட்சியத்துடன் ஏற்றுக்கொண்டேன். எப்படி நகல் எடுப்பது, சுத்தரித்து ஒட்டுவது, தேடுவது, அழிப்பது, எழுத்துக்களை பெரிதாக்குவது, சிறிதாக்குவது போன்ற நுணுக்கங்களை எல்லாம் தெரிந்துகொண்டேன்.

சொற்பிழைகளைக் கண்டுபிடிக்கவும், ழ, ள மயக்கங்களை நீக்கவும் சீக்கிரத்தில் பழகிக்கொண்டேன். ஆனால் என்னை ஆச்சரியத்தில் அடித்தது ஒரு வார்த்தையைத் தேடிக்கொண்டு பிடிப்பதும், பிறகு அதை மாற்றுவதும்தான். கதாநாயகனுடைய பெர் 'சந்திரன்' என்று இருந்தது. அதை 'ரமே' என்று மாற்ற முடிவு செய்தேன். கணிப்பொறியில் அந்தக்கட்டளையை கொடுத்ததும் அது முப்பத்தாறு பக்கங்களையும் தேடித்துருவி 'சந்திரன்' என்றுபேர் வரும் இடங்களில் எல்லாம் 'ரமே' என்று ஒரு கணத்தில் மாற்றிவிட்டது.

இதிலும் பார்க்க இன்னொரு அதிசயம் காத்துக்கிடந்தது. கதை ஆறாயிரம் வார்த்தைகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது. கணிப்பொறியில் கட்டளை கொடுத்ததும் அது நொடியில் வார்த்தைகளை எண்ணிக்கூறிவிடும். அது மாத்திரமல்ல, எத்தனை பக்கம், எத்தனை வரிகள், எத்தனை பாராக்கள் என்று குச்சிதமாகச் சொல்லிவிடும். இது எனக்கு நல்ல வசதியாக இருந்தது.

இருதுபர்ணன் என்ற அரசன் தமயந்தியுடைய இரண்டாம் சுயம்வரத்தில் கலந்துகொள்ளதேரில் விரைகிறான். தேரை நளன் ஓட்டியபடியால் அது மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. தேர் ஒரு தரையைக் கடக்கும்போது அங்கே தான்றிக்காய்கள் கூடைக்கூடையாகக் காய்த்திருப்பதைக் கண்டார்கள். அப்போது இருதுபர்ணன் தலையைக் திருப்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு 'பத்தாயிரம் கோடி காய்கள்' என்று சரிகணக்காகச் சொன்னானாம். அவன் ஒரு பார்வையில் எண்ணும் 'அட்ச இருதயம்' என்ற கலையைப் படித்து இருந்தான். இந்தக் கம்புயூட்டரும் அப்படித்தான் அட்ச இருதயக் கலையில் கைதேர்ந்ததாக இருந்தது.

ஆனால் இதையெல்லாத்தையும் சாப்பிடக்கூடிய ஓர் அதிசயத்தை அது எனக்காக அந்தரங்கமாக வைத்திருந்தது. அப்போது நான் அதனுடைய வஞ்சகத்தையும், சூழ்ச்சியையும் கண்டு கொள்ளவில்லை.

நான் அந்த நெடுங்கதையை எழுதி முடிக்கும்போது இரவு இரண்டு மணி இருக்கும். திருத்தங்களுக்கு மேலாக திருத்தங்கள் செய்து கதை ஓர் அபூர்வ அழகுடன் வந்திருந்தது. இப்படியான கதைகள் ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறையே பிறக்கும் என்று சொல்வார்கள். மனைவியைப் பார்த்தேன். அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். மகன், பால் வடியும் முகத்தைக்காட்டியபடி ஏதோ கனவில் மிதந்து கொண்டிருந்தான். இப்பொழுது அச்சடித்தால், பிரின்டர், 'கர்க்' கர்க்' என்று ஊரையே கூட்டிவிடும். நாளை காலை அதைச் செய்யலாம் என்று நினைத்து கணிப்பொறியை மூடிவிட்டு படுத்துக்கொண்டேன். ஆஹா! என்ன மடத்தனமான முடிவு அது?

அடுத்தநாள் அதிகாலையில் எழும்பி கணிப்பொறிக்கும், பிரின்டருக்கும் இணைப்பு கொடுத்தேன். கம்புயூட்டரை எழுப்பினேன். நல்ல பாம்பை உசுப்பி விடுவதுபோல 'ஸ், ஸ்' என்று அது உயிர்த்தது. அந்தச்சத்தத்தை கேட்டுக்கொண்டு இருப்பதே ஒரு தனி ஆனந்தம். கதை சேமித்துவைத்த பைலைக் கூப்பிட்டேன். அது பேசாமல் கம்மென்று இருந்தது. இன்னொரு முறை விளித்தேன். அதற்கு கோபம் வந்துவிட்டது. 'அப்படி ஒரு கோப்பே இல்லை!' என்று ஒரே போடாகப் போட்டது. இந்த கம்புயூட்டரில் ஒரு சனியன் என்னவென்றால் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருக்கும்.

ஒருவரும் இல்லாத நேரமாகப் பார்த்து ஒரு நண்பர் வந்து நூறு ரூபா உங்களிடம் கடனாக வாங்குகிறார். அடுத்த நாள் உங்களைப் பார்த்ததேயில்லை என்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் எனக்கும் இருந்தது.

முப்பத்தாறு பக்கத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிபோல என்னைப்பார்த்தது. எனக்கு சாட்சிக்குகூட ஒருவருமில்லை. துருவித் துரவி தேடினேன். என்னுடைய யுக்தி ஒன்றும் பலிக்கவில்லை. அந்த கோப்பு இருந்த சிலமன்கூட இல்லை. எனக்கு அழுகை வந்துவிடும்போல் இருந்தது. 'தொலை' என்ற தலைப்பில் நான் கணிப்பொறியில் எழுதிய முதல் கதை உண்மையிலேயே தொலைந்து போய்விட்டது.

ஓர் ஏழைப்புலவர், அவருடைய பரம்பரைச் சொத்து ஒரு பாக்குவெட்டி உயிருக்கு அடுத்தபடி அவருக்கு அதுதான் எல்லாம். விறகு வெட்ட, கறி நறுக்க, பாக்குச்சீவ என்று எல்லாத்துக்கும் அதைத்தான் நம்ம்பியிருந்தார். ஒருநாள் அதைக் காணவில்லை. புலவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. தேடு தேடு என்ற தேடினார்.

விறகு தறிக்க, கறி நறுக்க, வெண் சோற்றுப்புக்கு அடகு வைக்க,
பிறகு பிளவு கிடைத்ததென்றால் நாலாறாகப் பிளக்க,
பறகு பறகென்றே சொறியப் பதமாயிருந்த பாக்கு வெட்டி
இறகு முளைத்துப் பறந்ததுவோ? எடுத்தீராயிற் கொடுப்பீரே!

இந்த கதிதான் எனக்கும். பக்குவமாக பணியாரம் செய்து பனை நார்ப்பெட்டியில் மூடி மாடாவில் மறைத்து வைத்ததுபோல இவ்வளவு கவனமாக இந்தக்கதையை கோப்பிலே செருகீ வைத்தேனே! எங்கே போனது. இறக்கை முளைத்து பறந்துவிட்டதா?

பனி மூடிய அந்த அதிகாலையிலும் நான் நண்பரைத் தேடிக்கொண்டு ஓடினேன். ஆத்திரத்தோடு நண்பர் அவுக்கென எழுப்பி 'இரண்டில் ஒன்று பார்ப்பது' என்று பாய்ந்து வந்தார். அவர் கொடுத்த அந்தரங்க மந்திர வித்தையெல்லாம் செய்துபார்த்தார். அது அசையவில்லை. குழையடிப்பது ஒன்றுதான் பாக்கி. எல்லாத்தையும் விழுங்கிவிட்டு ஒரு கெப்பரோடு இருந்தது. இறுதியில் பெண் கம்புயூட்டர் என்றும் பார்க்காமல் நண்பர் 'குலுக்கல் முறையில்' தன் சாமர்த்தியத்தைக்காட்டினார். அது அப்போது ஓர் அசிங்கமான பார்வையை அவர் பக்கம் வீசியது.

நான் அந்தச்சம்பவத்திற்கு பிறகு கணிப்பொறியை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. அதைப்பார்த்தால் கொன்றுவிட வேண்டும் என்ற கடமை உணர்வு எனக்கு வந்துவிடும். முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு போய்விடுவேன். அது செய்த நம்பிக்கைத் துரோகத்தை என்னால் மன்னிகவே முடியாது. பவித்திரமான எங்கள் குடும்ப சந்தோஷத்திலும், அன்னியோன்னியத்திலும் இப்படியாக ஒரு கீறல் விழுந்துவிட்டதே என்று எனக்கு வேதனையாக இருந்தது.

தொன்றுதொட்டு வந்த பாரம்பரியப்படி கதையை திரும்பவும் கையினால் எழுதுவதென்று தீர்மானித்தேன். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் கதை 'வர மாட்டேன்' என்றது. கம்புயூட்டரைப் படைப்பதற்கு முன்பாகவே கடவுள் கைகளைப் படைத்திருக்கிறார் என்பது என் நம்பிக்கை. இருந்தும் எனக்கு கையினால் எழுத முடியவில்லை. கம்புயூட்டர்தான் தேவைப்பட்டது. அது இப்படிக் காலை வாரியுர் எனக்கு புத்திவரவில்லை.

முந்திய கதை முற்றிலும் மறந்துவிட்டது. எழுத எழுத கரு மாறிக்கொண்டே போனது. என்ன எழுதுகிறோம் என்று எனக்கே புரியவில்லை. இப்படியாக என்னுடைய எழுத்து ஊழியம், கடவுளின் காருண்யத்தாலும், வாசகர்கள் முற்பிறவியில் செய்த நற்பயனாலும், அவசரத்தில் இழுத்த 'ஸ’ப்' போல தடைப்பட்டு அந்தரத்தில் நின்றுபோனது.

இந்தக் கஷ்டகாலத்திலும் என் மகன் அதனுடன் மிகவும் வாஞ்சையாகப் பழகினான். மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருப்பான. நீல நிற பானையும், சிவப்பு நிறக்குதிரையும் வரைவான். பள்ளியில் கொடுக்கும் வீட்டு வேலைகளை கணிப்பொறியில் செய்வான். கதை சொல்லும்போது 'ம்' சொல்லுவதுபோ, கம்புயூட்டரும் 'ங்ம், ங்ம்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும். அவன் ஏதாவது தப்பாச் செய்யும்போதுதான் அப்படி எச்சரிக்கும். என் மகன் அந்த நேரங்களில் 'கோவிக்காதே, கோவிக்காதே' என்று சொல்லி அதைச்சமாளிப்பான்.

ஒரு நாள் நான் வழக்கம்போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். மகன் கணிப்பொறியுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தான். விளையாடுவதும், அடிக்கடி சிரிப்பதுமாக சமவயது நண்பர்கள் இருவர் பழகுவதுபோல இருந்தது இந்தக்காட்சி.

தொலைக்காட்சி கதாநாயகியின் தொப்புள் பிரதேசத்தில் மெய்மறந்து இருந்த நான் திரும்பி மகனுடைய கம்புயூட்டர் திரையைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நீத்துப் பூசணிக்காய் போல கொழுத்து திரை முழுக்க அடைத்துக்கொண்டு கிடந்தது என்னுடைய கதை. குண்டு குண்டான ஏழுத்து; தடித்த தலைப்பு அதேதான் என்னுடைய கதைதான்.

நான் இரண்டு தரம் வாயைத்திறந்து திறந்து மூடினேன். காற்றுத்தான் வந்தது. 'விட்டிர்ராதே! விட்டிர்ராதே! பிடி' என்று கத்தினேன். ஏதோ கன்றுக்குட்டி ஒன்று அறுத்துக்கொண்டு ஓடுகிறது போலவும் 'தும்பைப் பிடி, பிடி' என்று நான் கத்துகிறது போலவும் அது இருந்தது.

என்னடைய மகன் குவளை மலர்போன்றகரு நீலக்கண்களை இன்னும் அகல விரித்து என்னைப்பார்த்தான். அவனுடைய கை 'மௌஸை' அழுத்திப்பிடித்தபடியே இருந்தது. நான் பாய்ந்து கிட்டப்போய்விட்டேன்.

'இந்த பைல் இஞ்ச எப்பிடி வந்தது?' என்றேன்.

'எனக்கு ஒண்டும் தெரியாது. நான் என்ரை டைரக்டரியில் தேடிக்கொண்டே வந்தேன். இது வந்திருக்கு. இது உங்கடையா? என்றான்.

எனக்கு அப்படியே அவனை எடுத்து கொஞ்சவேண்டும் போல இருந்தது. நான் இன்னொரு தரம் பார்த்தேன். இவ்வளவு நாளும் என் கதையை தன் வயிற்றிலே வைத்திருந்து இரைமீட்டு தந்திருந்தது இந்தக் கம்புயூட்டர்.

பெற்றோரை ஏமாற்றி களவாக ஓடிவந்த காதலியைக் கண்டதுபோல ஆசை தீரப்பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆனந்தத்தில் என் கண்ணில் நீர் துளும்பி நின்றது. 'வந்து விட்டாயா! வந்துவிட்டாயா! என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டேன்.

நான் கம்புயூட்டரைப் பார்த்தேன். அதுவும் பார்த்தது. அதன் பார்வையில் இப்போது கொஞ்சம் நம்பு தெரிந்தது.

* * *

ரி

வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும், வயிறெரிபவர்களும் செய்த வேலை அது. அந்த வதந்தி அவ்வளவும் உண்மையே.

பத்து வயதுப் பையனும் இதுவெல்லாம் தேவையா என்று சிலர் புத்திமதிகள் சொன்னார்கள். இதை பற்பனுக்கும், சிவராசனுக்கும் அல்லவா சொல்லியிருக்கவேண்டும்!

ஒரு பெண் கொஞ்சம் சிவப்பாக இருந்துவிட்டால், கொஞ்சம் கண்களுக்கு கை பூசியிருந்தால், கொஞ்சம் ஒற்றைப் பின்னலை இறுக்கி வாரி மஞ்சள் ரிப்பன் கட்டியிருந்தால் உடனே இப்படியான கழிசடை எண்ணங்கள் தோன்றவேண்டுமா? அவளை வளைக்க என்ன பாடெல்லாம் பட்டிருப்பார்கள்!

இவர்களுக்கெல்லாம் நான் செய்த தியாகத்தைப்பற்றி என்ன தெரியும்? வார்ச்சட்டை போடுவதையே நிறுத்திவிட்டேன். என் அப்பா என்றால் மகா தீர்க்கதரிசி. நாலு வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை முன்னதாகவே கணித்துக்கூறிவிடுவார். நான் வளர வளரப்போடுவதற்கென்று இரண்டு அங்குலம் இடம் விட்டு தொள தொளவென்று வைத்த வார்ச்சட்டையை நான் போட மறுத்துவிட்டேன். ஓரேயடியாக முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் சொன்னால் சொன்னதுதான்.

இதுமட்டுமா? பத்து வருடங்களாக செய்யாத ஒரு காரியத்தையும் நான் வத்ஸலாவுக்காக துணிந்து செய்தேன். காலை வேளைகளில் அம்மா என் கன்னத்தை நசுக்கிப்பிடித்து கன்ன உச்சி வாரிவிடுவாள் அல்லவா? அதைக்கூட தடை செய்துவிட்டேன். என் சொந்தக்கையால் தலையை மேவி இழுத்துவிடத் தொடங்கியிருந்தேன்.

இதுவெல்லாம் பற்பனுக்கும், சிவராமனுக்கும் எங்கே தெரிந்திருக்கப்போகிறது! அது மாத்திரமா? வத்ஸலா எங்கள் வளவுக்குள்தான் ஒரு குடிசையில் வசித்து வந்தாள். தேசவழை என்று ஒன்று இருப்பது இவர்களுக்கு தெரியாதா? எனக்கில்லாத உரித்தா?

வத்ஸலா குடும்பம் வந்தேறு குடிகள். பஞ்சத்தில் அடிபட்டு வந்தவர்கள். எங்கள் வளவின் ஒரு மூலையிலேயே குடிசைபோட்டுக்கொண்டு இருந்தார்கள். வத்ஸலாவுடைய அப்பா முன்னொரு காலத்தில் வண்டியோட்டி பிழைத்தாராம். ஓர் உடைந்த வண்டியும், தட்டுமுட்டுச் சாமான்களுமாக வந்து சேர்ந்தவர்கள்.

இலந்தப்பழம் பொறுக்கும்போதுதான் அவள் எனக்கு பரிச்சயமானாள். அவளுடைய பாவாடை நிறைய பழங்கள் சேர்ந்ததும் ஒரு சருவச்சட்டியில் தண்­ர் ஊற்றி அவற்றை போடுவோம். ஆர்க்கிமெடிஸ் கண்டுபிடிக்கத் தவறிய ஒரு சித்தாந்தத்தை நான் வெகு கவனத்துடன் அவளுக்கு விளக்குவேன். புழு அரித்த பழங்கள் எல்லாம் மிதக்கும்; நல்ல பழங்களே கீழே போய்விடும் என்பதுதான் அது. அவள் கண்கள் அகலமாக விரியும். இதற்குமுன் இப்படியான அந்தரங்கங்களை யாரும் அவளுடன் பகிர்ந்து கொண்டது கிடையாது.

அந்த வயதிலும் நான் தயாள குணம் படைத்தவன். பார்த்துப் பார்க்க மாட்டேன். மிதக்கும் பழங்கள் எல்லாவற்றையும் வத்ஸலாவிடம் கொடுத்துவிடுவேன். அவளுக்கு உற்சாகம் தாங்காது. அப்படியான ஒரு சமயத்தில்தான் அவள் எனக்கு ஒரு ரகஸ்யம் சொன்னாள்.

அவளுடைய மாடு வரப்போகிறதாம். வண்டி இழுத்து ஓய்வுபெற்ற மாடு அது. பராமரிப்பது கஷ்டம் என்றபடியால் இப்ப நாலுமாதமாக அதை 'எருக்கட்ட' விட்டிருநதார்களாம் அநத் மாடு திரும்பி வரப்போகிறதென்பதில்தான் அவளுக்கு எவ்வளவு சந்தோஷம். அதிகாலையில் விரிந்த நந்தியா வட்டைப்பூ போல அவளுடைய முகம் மலர்ந்திருந்தது.

'எருக்கட்ட' விடுவதென்றால் இப்படி ஒன்றுக்கும் உதவாத மாட்டை கொண்டுபோய் வயலில் விட்டுவிவார்கள். அதுவும் அங்கேயிருக்கும் புல்பூண்டை சாப்பிட்டு உயிரைப் பிடித்து வைத்திருக்கும். பிரதியுபகாரமாக தன்னுடைய சாணியைத் தாளராமாகத் தந்து வயலுக்கு எரு சேர்க்கம். வயலில் நடவு முடிந்ததும் மாட்டை வீட்டுக்கு திருப்பி விடுவார்கள். இந்த ஏற்பாடு retired மாடுகளுக்கு மிகவும் வசதியாக இருந்தத.

ஒரு மாட்டுடன் அந்நியோன்யமாகப் பழகம் சந்தர்ப்பம் எனக்க இதற்குமுன்பு கிடைத்ததில்லை. அதுவும் வில்லங்கக்ள் ஏற்படலாம் என்பது என் சிற்றறிவுக்கு அப்போது எட்டவில்லை.

சிவக்கொழுந்து மாமா எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்தார். பரம்பரை பாட்டு வாத்தியார். வெளிக்குந்தில் இருந்து பாடிக்கொண்டே இருப்பார். அவர் பாடும் நேரங்களில் நாங்கள் தவறாமல் அங்கே இருப்போம். ஏதோ ஒன்று எங்களை அங்கே இழுத்துவிடும்.

பத்து வயதுகூட நிரம்பாத எங்களுக்கு சங்கீதத்தைப் பற்றி என்ன தெரியும்? ஆனால் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று கேட்டுக்கொண்டே இருப்போம். அந்த இசையில் ஏதோ ஒரு மாய சக்தி இருந்தது. பிரம்மாண்டமான கடல் பறவை ஒன்று செட்டைகளை விரித்து வட்டமடித்து சிறுகச்சிறுக கீழே இறங்குவதுபோல அந்த ராகம் கேட்பதற்கு வெகு சுகமாக இருக்கும்.

அது மெதுவாகத்தான் ஆரம்பமாகும். ஒரு கையகலத்து அருவிபோல கொஞ்சமாக ஊற்றெடுக்கும். பிறகு விரிந்து விரிந்து கிளைவிட்டு பெருகும்; எதிர்பாராத விதமாக வளையும், குதிக்கும், பிரவகிக்கும். ராகம் வடிந்து சமநிலைக்கு வரும்போது மூச்செடுக்க வெளியே வரும் திமிங்கலம்போல நாங்களும் எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வோம்.

இசை முடிந்ததென்றாலும் கோவில் மணியின் கார்வைபோல அந்த நாதம் மனதிலே கொஞ்ச நேரத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கும்.

மாமா கண்ணைத் திறப்பார்.

"ஏன் மாமா, அப்படியே மனதில் சந்தோஷம் பொங்குதே? இது என்ன ராகம், மாமா?"

"இது மார்க ஹ’ந்தோளம்; அடி முடியைக் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு ஒர் அபூர்வமான ராகம். ஆயுள் முழுக்க சாதகம் செய்தாலும் இந்த ராகத்தில் மறைந்து கிடக்கம் சூட்சுமங்களை ஆழம்காண முடியாது எனக்குப்பிடித்த ராகம்."

வத்ஸலாவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே போவேன். லேசாக இருக்கும். அவள் நடந்து வந்ததாகவே தெரியாது; மிதந்ததுபோல படும். மனத எதற்காகவோ ஆனந்தத்தில் துள்ளும்.

எங்கள் கிராமத்தில் ஒரு விசேஷம் இரண்டு நாளைக்கு மழை தொடர்ந்து பெய்தாலும் ஒரு சொட்டுத் தண்ணியும் நிலத்தில் தேங்கி நிற்காது. மண் உறிஞ்சி எடுத்துவிடும். கால் பதித்து நடக்கும்போது மெத்தென்று குளிர்ந்திருக்கும். வெள்ளம் ஓடி மண்ணெல்லாம் வார் வாராகி வரிக்குதிரைக் கோடுபோல ரம்மியமாக இருக்கும். சின்னச்சின்னக் காளான்களெல்லாம் சூரியனைப் பார்ப்பதற்கு குதித்துக்கொண்டு வெளியே வந்து குடை பிடித்து நிற்கும். ரத்தச்சிவப்பான தம்பலப் பூச்சிகளும் 'பார், பார்' என்று வந்துவிடும்.

அப்படியான ஒரு சுகமான நாளில்தான் மாடு வந்து சேர்ந்தது. நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒருவருக்கும் தெரியாமல் வத்ஸலா என் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக 'ஸ்க், 'ஸ்க்' என்று கூப்பிட்டாள். நானும் மாட்டைப்பார்க்க ஆவலுடன் ஓடினேன்.

மாடு என்றால் ஏதோ காராம்பகவின் அண்ணனாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் கண்ட காட்சி என்னைத்தூக்கி அடித்தது.

எலும்பும் தோலுமாக ஒரு மாடு. தலையை நிமிர்த்தி வைக்கக்கூட திராணி இல்லாமல் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு நின்றது. கழுத்திலே உள்ள தொங்கு சதை நிலத்தில் முட்டியது. முதுகு நிறையப் புண்கள். அதில் மொய்க்கும் ஈக்களைக்கூட விரட்டக்கூட அதன் வாலில் தென்பு இல்லை. பொட்டுப்பொட்டாக மயிர் எல்லாம் உதிர்ந்துவிட்டது. வயோதிகத்துக்கும் மாட்டுக்கும் நடந்த சண்டையில் வயோதிகம் வென்றுவிட்டது.

பொத்துப் பொத்தென்று சாணம்போட்டு ஒரு கலன் மூத்திரம் பெய்ததேயொழிய வேறு ஒன்றும் பெரிதாகச் சாதிக்காமல் நின்றுகொண்டிருந்தது.

பேயறைந்தது போலக்கிடந்த என் முகத்தை வத்ஸலா கண்டிருக்கவேண்டும்.

"என்னடா, உனக்குப் பிடிக்கேல்லியா?"

"இல்லை, இல்லை, மாடு நல்லாகத்தான் இருக்கு. என்னடி பேர்?"

"ராமா என்று பேர். ராமு!....ராமு!"

இப்படிச் சொல்லிக்கொண்டே அதன் தொங்கு சதையைத் தடவிவிட்டாள், வத்ஸலா. அப்போது மாடு தலையை உயர்த்தி அவள் முகத்தோடு வந்து செல்லமாக உரசிக்கொண்டது.

அந்த ஒரு கணத்திலேயே வத்ஸலாவின் இதயத்திற்குள் புகுவதற்கு இலகுவான வழி மாட்டின் வாலைக்கெட்டியாகப் பிடிப்பதுதான் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.

"வத்ஸ”, இங்கை பார். ராமுவின் கண்கள் என்ன வடிவாக இருக்கு!"

ராமு தலையைப் படபடவென்று ஆட்டியது. கழுத்து சலங்கை டங் டங்கென்று சத்தம்போட்டது. மாடு சோனியாயிருக்கலாம், ஆனால் புத்தி இன்னும் முற்றிலும் மழுங்கவில்லை என்பதை நான் கண்டுகொண்டேன்.

"அம்மா!"

"அம்மா!"

"என்னடா? நீ இன்னும் தூங்கவில்லையா?

"அம்மா, அம்பாளுக்கு என்ன வாகனம்?"

"சிங்கம்"

"முருகனக்கு?"

"அது உனக்கு தெரியும்தானே! மயில்"

"சிவபெருமானுக்க என்ன வாகனம்?"

"ரிஷபம், காளைமாடு"

"அம்மா!"

"என்னடா! இனி காணும். நித்திரை கொள்."

"இல்லை, அம்மா! முருகனுக்கு மயில். அது சரிதான், அவர் உலகத்தை சுற்றிப்பார்க்க அம்பாளுக்கு சிங்கம். அதுவும் சரி. யமனுக்கு எருமைக்கடா. அதுவும் பொருத்தம்தான், சிவபெருமானுக்கு காளைமாடு, இது சரியாயில்லையே!"

"அதுவந்து, மாட்டுக்கம் மனிதனுக்கும் பெரிய தொந்தம் இருக்கு. பசுமாடு பால் தரும்; சாணத்தால் வீடு மெழுகலாம்; வறட்டி தட்டலாம், காளை மாடு என்றால் ஏரிலே பூட்டலாம். வண்டியில் கட்டி இழுக்கலாம். அதனுடைய தோலைக்வட செருப்பாக உபயோகப்படுத்தலாம். மாடு அவ்வளவு உதவி மனிதனுக்கு. அதுதான் சிவபெருமான் அதற்கு நன்றி சொல்லும் முகமாக இப்படி தனக்கு வாகனமாகும் பதவியைக் கொடுத்திருக்கிறார். எத்தனை பெரிய பேறு!"

"அம்மா!"

"இடிக்காதை, சும்மா படடா"

அம்மா சொன்ன கதை எனக்கு சரியாகப்படவில்லை. ஒரு பக்கக்கொம்புக்கு சிவப்பு சாயமும், மறுபக்கத்துக்கு நீலமும் அடித்திருந்தார்கள். சிவபெருமானுடைய மாட்டுக்கும் அப்படி இருக்குமா? அடுத்த நாள் வத்ஸலாவிடம் இதைப்பற்றி கேட்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

தொங்கு சதையும், பாளமாகப்பிளந்த முதுகுப் புண்ணுடனும் அந்த மாறு என் கனவில் வந்தது. தலையைத் தலையை ஆட்டியது. என்னைப் பரிதாபமாகப் பார்த்து முடிறயிட்டது. நான் விழித்துப் பார்த்தபோது பாய் எல்லாம் நனைந்து இருந்தது. மெள்ள நகர்ந்து அம்மாவை அணைத்துக் கொண்டேன்.

ராமு ஒரு சாதுவான மாடு. அதுவும் ஒரு காலத்தில் நல்ல கம்பீரமாகத்தான் இருந்ததாம். ஆனால் centre of gravity பற்றி அதற்கு ஒரு இளவும் தெரியாது. ஒரு நாள் வண்டி நிறைய செங்கல் அடுக்கி இழுத்து வந்தபோது வண்டி குடை சாய்ந்துவிட்டதாம். ஒரு காலில் நல்ல அடி. அன்று படுத்ததுதான். அதற்குப்பிறகு ராமு வண்டி இழுக்கவேயில்லையாம்.

அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலை இல்லாமல் ராமு தள்ளாடியபடியே நிற்கும். அதற்கு தீனி தேடுவது எங்களுக்க வேலையாகிவிட்டது. இதற்கு வத்ஸலாவின் பெற்றோர் அவ்வளவு கவலைப்பட்டதாகத் தெரியவில்€லை. மாடு காற்றைக்குடித்து சீவிக்கும் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

நாங்கள் கிரமமாக ராமுவுக்கு புல்லும், பலாவிலையும், களவாக ஒடித்த குழையையும் போட்டு வளர்த்தோம். இதைத் தவிர supplementary சத்துணவாக கழுநீர்த்தண்ணியும் கொடுத்துவந்தோம். தவிடு, பிண்ணாக்கு என்பதெல்லாம் உயர்ந்த ரக மாடுகளுக்கென்று ஏற்பட்டது. ராமு போன்ற ஏழை மாடுகளுக்கு அது கிடைக்க வழியே இல்லை.

எங்கள் வாழ்நாளில் கணிசமான ஒரு பகுதி இப்படி ராமுவுடன் கழிந்தது. முதலில் எனக்குப் பயமாகத்தான் இருந்தது. 'தொட்டுப்பார், தொட்டுப்பார்' என்று வத்ஸலாதான் உற்சாகப்படுத்தினாள். நான் தொட்ட இடத்தில் அதன் உடம்பு சுழி வந்தது என் விரலும் கூசியது.

ஆசு ஆசென்று அது சுழுநீர் குடித்து முடிக்குவரை காத்திருந்து பார்ப்போம். ரயில் எஞ்சின்போல் மூச்சு விட்டுக்கொண்டே குடிக்கும். அவரசத்தில் சில நேரங்களில் மூக்கை உள்ளே நுழைத்ததும் தண்­ரில் குமிழ்கள் மேலே வந்துவிடும். தலையைப் பலமாக ஆட்டும்போது திவலைகள் எல்லாம் எங்கள்மேல் தெறிக்கும்.

ஆனால் ராமு மிகவும் சிரமப்பட்டது படுப்பதற்கும். எழுந்திருப்பதற்கும்தான். படுப்பது தீர்மானித்துவிட்டால் மெல்லமெல்ல முன்னங்கால்களை மடித்து தன் உடம்பையே கீழே கீழே இறக்கும். தரையில் இருந்து இரண்டு சாண் உயரம் இருக்கம்போதே அதன் பெலன் எல்லாம் தீர்ந்துபோய்விடும். அப்படியே பொத்தென்று உடம்பைக் கீழே போட்டு சரிந்து விழுந்துவிடும்.

எழுந்து நிற்பதென்றால் இன்னும்கூட உபத்திரவம். சரி கணக்காக ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

ராமு வேகமாக மெலிந்துகொண்டே வந்தது. முதுகுப் புண்களும் ஆறுவதாகத் தெரியவில்லை. அதை அவிழ்த்து விட்டு எங்கள் வளவிலேயே கதியால் ஓரங்களில் கிடைக்கும் புல்லைச் சாப்பிடவிட்டோம். அதன் பின்னாலேயே மின்க்கெட்டோம். எங்கள் முயற்சியை எப்படியும் முறியடித்து விடவேண்டும் என்று ராமு பாடுபடுவதாக எங்களுக்குத் தோன்றியது.

"வத்ஹு, உனக்குத்தெரியுமாடி? சிவபெருமானுடைய வாகம் ரிஷபம், காளைமாடு என்று."

"தெரியும்டா, கடவுளடைய வாகனம் கடவுளுக்கு சமானம்டா. என்ன செய்யிறது. எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் ராமு இப்படி மெலிந்துகொண்டே போகுது. என்னடா செய்வம்?"

அப்போது ஒரு யோசனை தோன்றியது. அபூர்வமான கெட்ட யோசனைகள் எனக்கு படபடவென்று வரும். இரவு நேரத்தில் மாட்டை ரகசியமாக அவிழ்த்துவிட்டு ஊரை மேயவிடுவதென்று சதியாக முடிவுசெய்தோம்.

இரண்டு நாள்வரை இந்த சதியை யாருமே கண்டு கொள்ளவில்லை. மூன்றாவது நாள் மாடு திரும்பிவந்துவிட்டது. பனைமட்டையால் யாரோ மாட்டைப்போட்டு வெளுத்திருந்தார்கள். காகங்கள் இளைப்பாறுவதற்காகப் படைக்கப்பட்டதில் தோல் எல்லாம் உரிந்து சதை வெளியே தொங்கியது. என்ன கோலம்! பழைய புண்களுடன் இப்பொழுது புதுப்புண்களும் சேர்ந்துகொண்டன.

இன்னும் பல யோசனைகள் என் கைவசம் இருந்தன. ஆனால் அம்மாவின் திடீர் தலையீடு எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

நான் மாட்டு வேலை செய்வதையும் வத்ஸலாவுக்காக சொந்தக்கையால் சாணம் அள்ளிப்போடுவதையும் அம்மா ஒரு நாள் கண்டுவிட்டாள். அம்மாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்கவேண்டும். அன்று வீட்டிலே எனக்கு நல்ல சாத்துப்படி கிடைத்தது.

"பெரிய கடையில் இருந்து வந்து பார்த்துவிட்டு போயிருக்கிறாங்கள். கசாப்புக்கு போற மாட்டுக்கு சாணம் அள்ளுறியா?"

அம்மா பிடரியில் அடித்துவிட்டாள். அடி பரவாயில்லை. தாங்கக்கூடியதுதான். ஆனால் வத்ஸலா? கசாப்புக்கடை விஷயம் தெரியவந்தால் அவள் மனம் என்ன பாடுபடும்!

"மாமா, என் அப்பா கேட்கும்போது காம்போதி, தோடி, மோகனம் என்றெல்லாம் பாடுவீர்களே! ஆனால் உங்களுக்காக பாடும்போது இதே ராகத்தை நீங்கள் திருப்பித் திருப்பி பாடுறீங்கள்? வேறு ராகம் பாடமாட்டீங்களா?"

மாமா என்னைக் கொஞ்சநேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்.

"காம்போதி, தோடி போல இது பணக்கார ராகம் இல்லை. இது என் போன்றவர்களுக்காக ஏற்பட்டது. மார்க ஹ’ந்தோளம். லேசில் இதை வசப்படுத்த முடியாது. மிக்க பிரயாசைப்படவேண்டும். இது கைவசமாகிவிட்டால் சங்கீத தேவதையே அடிமை என்றுதான் அர்த்தம்."

மாமா பாடினார் அந்த ராகத்தின் எடுப்பும், விரிவும், விஸ்தாரங்களும் புதியவைகளாக இருந்தன. மலர்ச்சரங்கள் ஒன்றன்மேல் ஒன்று விழுவதுபோல அந்த ராகத்தின் சோபை பெருக்கிகொண்டே போனது.

"மாமா, இந்த ராகத்தில் அப்படி என்ன விசேஷம்?"

"அப்பிடிக்கேள், இதன் ஆரோகணத்தில் ஏழு ஸ்வரங்கள். பார் இப்படிப்போகும்.

ஸ ரி க ம ப த நி ஸ்

"அவரோகணத்தில் ஸ்வரங்கள் இப்படி திரும்பும்."

ஸ் நி த ப ம க ஸ

"கவனித்தாயா? திரும்பி வரும்போது ரி கிடையாது. அதுதான் விசேஷம்."

"அது சரி, மாமா நேற்று இதே ராகம் வேறு மாதிரி இருந்ததே! இண்டைக்கு இப்பிடி இருக்குதே! இது ஏன் மாமா?"

'அதுதான் trademark. மோனலிசா சித்திரத்தை யார் எங்கிருந்து பார்த்தாலும் அது அவர்களையே பார்ப்பதுபோல இருக்கும். மனோரஞ்சிதப்பூ நினைத்த வாசத்தைக்கொடுக்கும். அதுபோலத்தான் இந்த ராகமும். குதூகலமான நேரங்களில் இந்த ராகத்தைப் பாடும்போடு சந்தோஷமாக இருக்கும். வேறு சமயங்களில் மனதுக்கு வெகு சாந்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் சோமாக இருக்கும். அதுதான் இதன் தன்திதன்மை."

அன்று மாமாவுடன் வெகு நேரம் இருந்தோம் ராக ஆலாபனை முடிந்ததும் அந்தத் தெலுங்குக் கீர்த்தனையை வரிவரியாகப்பாடி விளக்கம் கூறினார். நாங்கள் இருவரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம்.

'வாடி, வத்ஸ”' என்று அவளை இழுத்துக்கொண்டு திரும்பினேன். அன்று அவளுக்கு எப்படியும் ராமுவைப்பற்றி சொல்லிவிடவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வத்ஸலாவுடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்ததும் இருந்த தைரியம் எல்லாம் ஓடிவிட்டது. அதுவும் அன்று எங்கள் மனம் ஒரு நாளும் அநுபவித்திராத ஒரு வித பூரணமான அமைதியில் அல்லவா கிடந்தது!

எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண்கள் தொகை வெகு குறைவு. எங்கள் வகுப்பிலேயே மூன்று கந்தசாமிகளும், இரண்டு பெண்களும் இருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிலே ஒருத்தி வத்ஸலா, மற்றது பத்மாவதி. ஒல்லியாய், உயரமாய தலைக்கு வழியவழிய எண்ணெய் வைத்துக்கொண்டு வருவாள்.

வத்ஸலா அப்படியில்லை, வீட்டில் தரித்திரம் பிடுங்கினாலம் பள்ளிக்கு வரும்போது பளிச்சென்று இருப்பாள். கிழிசல் இல்லாத பாவாடை உடுத்திக்கொண்டு கலகலவென்று சுபாவமாகப் பேசுவாள். அவள் என்னோடு கதைத்தால் பற்பனம் சிவராசனும் வயிறெரிந்து சாவார்கள்.

வத்ஸலாவிடம் ஒரு தையல்பெட்டி இருந்தது. அதற்குள் தையல் சாமான்கள் வைத்திருந்தாளா என்பது பரம ரகஸ்யம். ஆனால் அது ஒரு அட்சய பாத்திரம். அதைத்திறந்து வத்ஸலா ஒரு புளியங்காயை எடுத்து என் கைக்குள் அமுக்கம்போது சொன்னாள், "ராமு படுத்தபடியே இருக்கு, இரண்டு நாளாய்ச் சாப்பிடவில்லை. ஒருக்கால்வந்து பாரடா." அதற்கிடையில் அவள் கண்களில் நீர் கோத்துவிட்டது.

அன் பின்னேரமே போனேன். நான் என்ன மாட்டு வைத்தியரா? மாட்டை மேலேயும் கீழேயும் பார்த்தேன். மாட்டின் அந்திமம் நெருங்கிவிட்டது என்பது என் சிற்றறிவுக்குக் கூட தெரிந்துவிட்டது. பாம்புபோல சிமிக்கிடாமல் வந்து என் முதுகைத் தொட்டாள். திரும்பிப்பார்த்தேன். உடம்பு குலுங்க மேலுதட்டைக் கடித்தபடி வத்ஸலா நின்றுகொண்டிருந்தாள்.

ஆனால் எங்களுக்குத் தெரியாமல் வத்ஸலாவின் தகப்பனால் ஒரு காரியம் பண்ணினார். தரித்திரத்தில் இருப்பவர்களுக்க கடவுள் தந்திர புத்தியையும் கொடுத்திருப்பார் போலும். மாடு இறந்துவிட்டால் தோல் விலைக்குத்தான் போகும். உயிரோடு இருக்கும்போது விற்றுவிட்டால் ராத்தலுக்கு இவ்வளவு என்று கொடுத்துவிடுவார்கள் என்பது அவருக்குத்தெரியும்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே மாடு போய்விட்டது. வத்ஸலாவைப் பார்க்கமுடியவில்லை. அவளுடைய உற்சாகம் மறைந்துவிட்டது. மாட்டை எருக்கட்ட கொண்டு போய்விட்டார்கள். எப்படியும் திரும்ப வந்துவிடும் என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். எனக்குத்தெரிந்த உண்மையை நான் கூறவில்லை.

"ஏண்டா, ராமுவுக்கு தினம்தினம் தவிடு, பிண்ணாக்கு எல்லாம் வைப்பார்களா?"

"வைப்பார்கள், வைக்காமல்?"

"இல்லையடா, ராமு கிழடாகிவிட்டது. எழுந்து நிற்பதற்குக்கூட அது சிரமப்படும் நல்லாய்ப் பார்ப்பாங்களா?"

"பார்ப்பாங்கள்"

"ஏண்டா, முதுகிலே எல்லாம் இருக்குமே; இப்ப காய்ந்திருக்குமா? பாவமடா!"

வத்ஸலா ராங்கியான பெண் என்னதான் வறுமையில் வாடினாலும் அவள் தன் ஏழ்மையை வெளியே காட்டியதே இல்லை. சிரிக்கும்போது முத்துப்பல்வரிசை பளிச்சிடும். இரண்டு கைகளையும் இடுப்பிலே வைத்துக்கொண்டு அவள் நின்றால் எதோ நடனத்துக்கு தயாராக நிற்பது போலத் தோன்றும்.

அந்த வத்ஸலா கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வந்தாள். மாடு 'வரும், வரும்' என்று வாசரைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். எத்தனையோ தடவை சொல்லிவிடலாமா என்று பார்த்தேன். அவ்வளவு தைரியம் எனக்கு வரவில்லை.

மழை சோவென்று அடித்து கால் வைக்கும் இடமெல்லாம் மெத்தென்று இருந்தது. வாரடித்து நிலமெல்லாம் சிவப்பு நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் கோடுபோட்டுக் கிடந்தது. தம்பலப்பூச்சிகளெல்லாம் வந்துவிட்டன. காளான்கள் குடை விரித்துவிட்டன. வத்ஸலா தினம்தினம் கழுநீர்த் தண்ணியை வைத்துக்கொண்டு வாசலிலே காத்திருந்தாள். மாடு இன்னமும் திரும்பவில்லை.

மழைக்காலங்களில் இசையை அநுபவிப்பது வித்தியாசமா இருக்கும். வெள்ளைப்படுதாவில் சைத்திரிகன் லாவகமாக தூரிகையை இழுத்ததுபோல அந்த நாதமானது வெகு தூரம் வரை கேட்கும் மாமாவின் கண்டத்தில் இருந்து புறப்பட்ட இசை நாலு திசைகளையும் சென்று நிரப்பி ஒருவித பிறயத்தனமுமில்லாமல் உயிர்நிலையைத் தொட்டு தொட்டு பரவசப்படுத்தியது.

மார்க ஹ’ந்தோளம்தான். ஒரு சிறு புள்ளியிலிருந்து கோலம் போடுவதுபோல அந்த ராகம் விரிந்து விரிந்து கொண்டுபோனது. அப்படி நுட்பமான சங்கதிகளை நான் ஆயுளில் கேட்டதே கிடையாது. மனதை உருக்கம் சோகம் கவ்வியது. ராகம் மேல் ஸ்தாயிக்குப்போய் தொட்டபோது வயிற்றை என்னவோ செய்தது.

வத்ஸலாவின் கண்கள் பளபளத்தன. இன்னும் கொஞ்சம் போனால் அழுதுவிடுவாள் போல இருந்தது.

ராக ஆலாபனையை முடித்துவிட்டு சிவக்கொழுந்து மாமா பாடத்தொடங்கினார்.

"சலமேலரா சாஹேத ராமா

சலமேலரா"

இசை தரும் மயக்கத்தை அநுபவிப்பது ஒன்று; அர்த்தத்தை அறிந்து ரசிப்பது வேறு. இசையின் சூட்சுமத்தை உணர்ந்து அநுபவிப்பது இன்னொரு வகை. இந்த மூன்றும் கலந்த நிலையில் ஏற்படும் பரவசம் ஒரு தனி அல்லவா?

மாமாவின் உடல் மெல்ல மெல்ல அசைந்தது. ஒரு பச்சைக் குழந்தையை அணைப்பதுபோல ராகத்தோடு சேர்ந்த அவருடைய திரேகம் ஆடிக்கொண்டிருந்தது.

"சலமேலரா சாஹேத ராமா

சலமேலரா"

"ஹே! ராமா, அயாத்தி மன்னா! ஏன் இந்த உதாசீனம்? என்னால் இனியும் உன் பிரிவை தாங்கமுடியாது..."

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் இந்தத் தியாகராஜர் எங்களுக்காகவே பாடி வைத்துவிட்டுப்போனது போல இருந்தது.

சில நிமிடங்களில் மாமாவின் உடம்பு வெடவெடன்று நடுங்கியது. கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டியது.

பாட்டை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டே வந்தேன்.

ஆரோகணத்தின்போது ஏழு ஸ்வரங்களும் இருந்தன.

அவரோகனத்தில் போதும் அதே ஸ்வரங்கள்தான் திரும்பி கீழே வந்தன

ரிஷபம் மட்டும் திரும்பவில்லை.

* * *

உடும்பு

எனக்கு ஒரு ஒன்றுவிட்ட அக்கா இருந்தாள். வெகு காலத்திற்கு முன்பு சொற்ப நாட்களே அவளுடன் நான் பழகநேர்ந்தாலும் என்னால் அவளை மறக்கமுடியாது. கொஞ்சக் காலம் சென்ற பிறகு அவர்கள் எங்கோ நாங்கள் எங்கோ என்று பிரிந்து விட்டோம். பிறகு அவள் என்ன ஆனாள் என்று எனக்கு தெரிய வழியே கிடைக்கவில்லை.

சமீபத்தில் ஒருநாள் புறநானூறு படிக்கும்போது, 'உடும்புரித்தன்ன வென்பெழு மருங்கிற் கடும்பின் கடும்பசி' என்ற வரிகள் வந்ததும் அவள் ஞாபகம் எனக்கு பழையபடி வந்தது.

மோந்ததும் வாடிவிடுமாம் அனிச்சம்பூ. அப்படித்தான் சரசக்காவுடைய மனமும் மெல்லியது. இரக்க சுபாவம் கொண்டவள். சிறு துன்பத்தைக்கூட அவளால் சகிக்கமுடியாது. பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ கண்ணில் பட்டால் எடுத்து வைத்துக் கொஞ்சுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கைநிறைய அள்ளிப்போட்டு தாயிடம் பேச்சு வாங்குவாள்.

எவ்வளவுக்கு இரக்க சுபாவம் இருந்ததோ அவ்வளவுக்கு பிடிவாத குணமும் கொண்டவள். உடும்புப்பிடி என்று சொல்வார்களே, அப்படி ஒருவராலும் அவளை அசைக்க இயலாது.

அப்படிப்பட்டவள் காதல் வயப்பட்டதும் என்ன மாதிரி மாறிவிட்டாள்!

அவர்கள் வீட்டில் எல்லோரும் மாமிச பட்சணிகள்தான். சரசக்கா மாத்திரம் மரக்கறி உணவுதான் சாப்பிடுவாள். எப்படித்தான் மரக்கறி உணவுக்கு மாறினாள் என்ற பூர்வீகம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவளை மாமிசபட்சணியாக்க அவளுடைய தாயார் செய்த மிரட்டலுக்கெல்லாம் அவள் மசிந்து கொடுக்கவில்லை. அரக்கியர் நடுவே தவம் கிடந்த அசோகவனத்து சீதைபோல பிடிவாதமாக இருந்துவிட்டாள்.

சரசக்காவுடைய முகம்கூட இப்ப மறந்துவிட்டது. நினைவில் இருப்பதெல்லாம் அவளுடைய மூக்குத்தான். செதுக்கி வைத்ததுபோல அழகாக இருக்கும். எறும்புகூட போகமுடியாதபடி சிறிய துவாரங்கள். சிரித்த கண்கள், அவளை எப்பவும் ஈரமாகிக் கனிந்துபோய் இருக்கும்.

ஒருநாள் நாங்கள் 'கொக்கான்' விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த விளையாட்டில் அவளை விழுத்த முடியாது. கொக்கானுக்கென்றே பிறந்தவள்போல ஒருவித ஆவேசத்துடன்தான் விளையாடுவாள்.

கொக்கான் விளையாடுவதற்கென்று அக்கா நல்ல வழவழப்பான கற்களை பொறுக்கி வைத்திருப்பாள். கோவிலுக்க நேர்ந்துவிட்ட சேவல் 'வதக், வதக்' என்று கொத்துவதுபோல அக்கா விளையாடும்போது கற்களை கொத்திக் கொத்தி எடுத்துவிடுவாள். கற்களை பரவிக்கிடந்தால் முழங்கால் நுனியில் இருந்து கைகளை ஒரு வீசுக்க வீசி அவற்றை அள்ளிவிடுவாள். சவுக்கை சொடுக்குவதுபோல அவள் விரல்கள் வேகமாகப் பாயும்.

அப்போது என்னுடைய முறை. 'புட்டுத்தள்ளும்' முறை. வழவழப்பான கல் ஒன்றை எடுத்து கூரை முகடு வரைக்கம் மேலே எறிந்துவிட்டு கைவிரல்களைக் குவித்துப்பிடித்து ஏந்தினேன். அப்பாடா, ஒரு தத்து கழிந்தது! ஏந்திவிட்டு சரசக்காவைப் பார்த்தால் அவளைக் காணவில்லை. மாயமாக மறைந்துவிட்டாள்.

இந்தப்பெண்களுக்கே சத்தம் செய்யாமல் ஓடுவதற்கு வராது. நாங்கள் 'கண்ணாரே கரையாரே' ஒளிந்துப்பிடித்து விளையாடும்போது அவளுடைய வளையலும், கால் கொலுசும் 'சிலுங் சிலுங்' என்று காட்டிக்கொடுத்துவிடும். எப்பொழுது விளையாடினாலும் அதில் வெற்றி எனக்குத்தான். எப்படி இவன் திடீரென்று மாயமாய் போனாள்? சிமிக்கிடாமல் மறைந்து விட்டாளே!

நான் திரும்பிப் பார்த்தேன். இந்த அக்கா இப்படி மாயமாக மறைந்தற்கான காரணம் அங்கே சைக்கிளில் வந்துகொண்டிருந்தது. சிங்கப்பூர் மச்சான்தான். அவளுடைய சொந்த மச்சான். பளபளவென்று மினுங்கிய சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். நாலு கண்ணாடிகள் பூட்டிய கைப்பிடி வண்ண வளையங்கள் போட்ட சில்லுகள். குதிரை மீது ஆரோகணித்து வரும் ராஜகுமாரன் போல வந்து கொண்டிருந்தான்.

சிங்கப்பூர் மச்சான் என்று பெரிசாகப்பேரே ஒழிய அவனக்கு சிங்கப்பூர் எந்தப்பக்கம் என்றுகூடத் தெரியாது. தகப்பன் சிங்கப்பூரில் வேலை செய்து பென்சன் எடுத்தவர். ஊரிலே வந்து நாலு காணி வாங்கி, வட்டிக்கு பணம் கொடுத்து வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த வட்டிக்காசில் குளுகுளுவென்று வளர்ந்து வாலிபம் குன்றாமல் இருந்தான், இந்த மச்சான். சைக்கிளை கை முறியுமட்டும் துடைத்து பளபளவென்று வைத்திருப்பதுதான் இவனுடைய முக்கிய தொழில். சரசக்கா பருவமடைந்தபின் இந்தச் சைக்கிள் அடிக்கடி இந்தப் பக்கம் வரத்தொடங்கியது.

மாயமாக மறைந்த அக்கா ஜன்னல் வழியாகவும், கதவிடுக்கு வழியாகவும் தன் தரிசனத்தை தந்துகொண்டிருந்தாள். பாவாடை சுருக்குகளை நேராக்கினாள். சங்கிலியை மென்று, சரிசெய்தாள். சிங்கப்பூர் மச்சான் என்றால் சின்னம்மாவுடன் மிகவும் அவசரமானதும், பாரதூரமானதுமான பல விஷயங்களை அலசிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் மட்டும் டென்னிஸ் போட்டி பார்ப்பவருடைய கண்கள்போல அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தன.

சின்னம்மாவுக்கு எப்படியும் சிங்கப்பூர் மச்சானை மடக்கிவிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. அது பால்குடி மறவாத எனக்குக்கூட அப்பட்டமாகத் தெரிந்தது. இது ஊரிலே குமரிகளைக் கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் மற்ற அம்மாக்களுக்கு தெரியாமலிருக்குமா? அவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்போல சிங்கப்பூரின் வரவுக்காக வீதிகளிலே காத்துக்கிடந்தனர்.

சின்னம்மாவிடம் ஒர் அழகான சொற்பிரயோகம் இருந்தது. 'மானம் கெட்ட தேவடியா' மானம் கெட்ட தேவடியா' என்று அடிக்கடி வைவாள். என் யுகத்தில் மானம் கெடாத தேவடியா சிலரும் அந்தத்தெருவில் உலா வந்தார்கள் என்றுதான் பட்டது. சண்டையென்று வந்தால் சின்னம்மா சிலிர்த்துப் போவாள். அர்த்தம் தெரியாத அழகான வசவுகளை எல்லாம் நான் இவளிடம்தான் கற்றுக்கொண்டேன்.

மச்சான் மற்ற அம்மாக்களுக்கு தப்பி அங்கு வரும் போதெல்லாம் சின்னம்மா விழுநது விழுந்து உபசாரம் செய்தாள். அவள் சொன்ன ஜோக்குகளுக்கெல்லாம் சிரித்தாள்; சொல்லாமல் விட்ட ஜோக்குகளுக்கு ஏங்குவது போல் இருந்தாள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும்.

கிராமங்களில் காதலுக்கு அன்றன்று தூபம் போடத்தேவையில்லை. ஒரு பொறி கிடைத்தால் காணும். தன்பாட்டுக்கு காதலர்களின் கற்பனையில் விரிந்து சுவாலையாகப் பற்றிக்கொள்ளும்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே அக்காவின் முகத்தில் மெருகு ஏறிக்கொண்டு வந்தது. என்னுடன் மும்முரமாக கொக்கான் விளையாடிக் கொண்டிருக்கும் சமயங்களில் அவளுடைய யோசனை பத்து யோசனை தூரம் சென்றுவிடும். கண்கள் எதையோ தேடத் தொடங்கியிருந்தன. குரலிலே புது உற்சாகம் வந்து சேர்ந்து கொண்டது. மாமரத்தின் கீழ் இருந்து அக்கா அடிக்கடி 'நேற்றந்தி நேரத்திலே, நீராடும் துறைதனிலே' என்று இனிமையான குரலில் பாடத்தொடங்கியிருந்தாள். அவள் குரலில் இருந்த குதூகலம் வீடுமுழுவதையும் வந்து நிறைக்கும்.

இந்தக்காதல் இப்படி அவர்கள் குல ஆசாரம் பிசகாமல் வளர்ந்து கொண்டிருததே தவிர இதுவரை அவர்கள் ஒரு வார்த்தைதாணும் பேசவில்லை.

அதற்கும் ஒருநாள் ஒரு சந்தர்ப்பம் வந்தது.

கல்கியின் 'சிவகாமியின் சபதம்' தொடர் முடிந்து புத்தகமாக வந்துவிட்டது. சரசக்கா அதைப்படிக்கவேண்டும் என்ற அடங்காத ஆசையோடு தவித்தாள். மச்சானிடம் கேட்கும்படி என்னைத் தூண்டிவிட்டாள். நான், நீ போய்க்கேள், நான் என்னத்துக்கு?" என்று அக்காவை அவன் முன்னால் ஒரு நாள் தள்ளிவிட்டேன். இவளும் அடிப்பானை சோற்றை சுரண்டி எடுப்பதுபோல துணிச்சலை வரவழைத்துக்கொண்டு 'சிவகாமியின் சபதம்' என்று புத்தகத்தில் பெயரை முணுமுணுத்துவிட்டாள்.

சிங்கப்பூரில் சைக்கிளில் ஏறி பாரிஜாத மலருக்காக அலைவதுபோல எங்கெல்லாமோ அலைந்தது. கடைசியில் இணுவில் வாசகசாலையில் ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்து கொண்டுவந்து கொடுத்தது. அதற்குப் பிறகும் எத்தனையோ புத்தகங்கள். இந்தச் சாக்கில் இருவரும் கொஞ்சம் கொஞ்சம் மூச்சுக் காற்றை வேகமாக விட்டபடி பேசிக்கொண்டார்கள்.

இவர்கள் கைகளையும் தங்கள் தங்களுக்கே வைத்துக்கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. வயது அப்படி அவர்கள் விரல்கள் அடிக்கடி அவர்களையும் மீறி அளைந்தன. நந்தியாவட்டை மரம் சிலிர்த்துப்போய் மற்றப் பக்கம் திரும்பிக்கொள்ளும்.

சரசக்காவின் பக்தி தீடிரென்று பத்து டிகரி கூடியது. அடிக்கடி தலையிலே பூ வைத்துக்கொண்டு கோவிலுக்கு போனாள். இந்த மாமிச பட்சணிகள் நடுவில் விரதம் காத்தாள். சின்னம்மா கைபடாமல் தானாகவே பொங்கிய பால் சோற்றை என்னுடன் பகிர்ந்துகொண்டு உண்டாள். அவளே சிருஷ்டித்த ஓர் உலகில் ஒரு தேவதைபோல பவித்திரமாக இருந்தாள். ஏதோ ஒரு சம்பவம் நடப்பதற்கு நாங்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தது போல எனக்குப்பட்டது.

இந்தச் சமயத்தில்தான் இந்தக்காதலை இன்னும் ஓர் அங்குலம் முன்னால் நகர்த்தும் முகமாக சின்னம்மா ஓர் அருமையான யோசனையை முன் வைத்தாள்.

சிங்கப்பூரில் இருந்து வந்தவர்களுடைய சாப்பாட்டு முறைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் சாப்பாட்டு பிரியர்கள். உடும்புக்கறி என்றால் உயிரையும் கொடுப்பார்கள். மச்சானுக்கு உடும்புக்கறி வைத்துக்கொடுப்பதென்று முடிவாகியது. உரும்பிராய் தண்­ர் குடித்தவர்களும், உடும்புக்கறி சாப்பிட்டவர்களும் திரும்பவும் அதை ருசிக்க வருவார்கள் என்பது எங்கள் ஊரில் தொன்றுதொட்டுவந்த ஐதீகம்.

இதிலே சில சங்கடங்கள் இருந்தன. எங்கள் ஊரிலே உடும்புகளுக்கு குறைவில்லை. எங்கள் வளவிலேயே அவை நிறைந்து கிடந்தன. ஆனால் அவற்றைப் பிடிப்பதற்கு ஸ்பெஷல் பயிற்சிவேண்டும். சில நாளில் அகப்படும்; சில நாளில் அகப்படாது. சனிக்கிழமை விருந்துக்கு வெள்ளிக்கிழமை இரவே அவை அகப்பட்டு ஒத்துழைக்கும் என்பது நிச்சயம்?

இந்த இடத்திலேயாவது சரசக்காவின் அப்பா, அதாவது என்னுடைய சித்தப்பா, பற்றி ஒரு அறிமுகம் செய்யாவிட்டால் அது பரம துரோகம் ஆகும். அவர் அந்த வீட்டில் இருப்பதும் தெரியாது, போவதும் தெரியாது. வாட்டசாட்டமான உடம்பு மகா சாது. அப்படியான சாதுக்களை கடவுள் படைப்பதை இப்போதெல்லாம் நிறுத்திவிட்டார். வீட்டின் நிர்வாகம் முழுக்க சின்னம்மாவின் கைகளில்தான். அதைப்பற்றி சித்தப்பா கவலைப்படவில்லை. அவர் வாயில் பொயிலை குதப்புவரை தடை செய்யாதவரையில் மிகவும் சந்தோஷமாகவே காணப்படுவார். யாராவது அவரிடம் கேள்வி கேட்டால், கேட்டவரை உற்சாகப்படுத்தும் முகமாக அவர் காலடியிலேயே பளிச்சென்று துப்பிவிட்டு பேசத்தொடங்குவார்.

சித்தப்பா நாற்பத்திரண்டு வயதை செலவழித்துவிட்டு மீதியை வைத்துக்கொண்டு காத்திருந்தார். அப்படியும் நடக்கும்போது கமக்கட்டில் கொப்புளம் போட்டதுபோல கைகளை அகலித்து, காற்றிலே வழிசெய்து கொண்டுதான் நடப்பார். நாளுக்கு மூன்று தரமாவது அவருக்கு குளிக்க வேணும். எப்பவும் கிணற்றடியில் துலாக்கொடியை பிடித்தபடி மயான காண்டத்து அரிச்சந்திரன்போல காணப்படுவார். அவருடைய வாகான உடம்புக்கு அதுதான் காரணமென்று சிலர் சொல்வார்கள். கிணற்றடியில் இருந்த கமுகு மரத்தில் முதுகைத் தேய்த்து தேய்த்து கமுகு மரம் வழவழப்பாகவும், செழிப்பாகவும் இருந்தது.

ஒரு காலத்தில் இவர் உடும்பு பிடிப்பதில் மன்னராக இருந்தவராம். இவரிடம் இந்தக்கலையைக் கற்றவர்கள் பலர் இப்ப கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால் ஒருமுறை இவருக்கு ஏற்பட்ட அநுபவத்திற்கு பிறகு இவர் உடும்புகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டார்.

இப்படித்தான் இவர் ஒரு நாள் தன் வேலையாகப் போகும்போது ஓம் உடும்பும் இவரைக்கடந்து தன் சோலியாய் போனது. இப்படியாக காலடியில் வந்த சந்தர்ப்பத்தை யாராவது தவறவிடுவார்களா? உடனேயே ஒரு கூப்பாடு போட்டு அங்கே உள்ள குஞ்சுகுருமான்கள் எல்லோரையும் சேகரித்துவிட்டார். ஊர் எல்லாம் சுற்றி வளைத்து உடும்பை துரத்தியது. பாவம் உடும்பு, என்ன செய்யும்? வகையறியாமல், தனக்கு மரம் ஏறலாம் என்பதையும் மறந்து, அங்கே வசமாக வளர்ந்திருந்த ஒரு கறையான் புற்றுக்குள் போய் ஒளிந்து கொண்டது. இனி என்ன? உடும்பு கைக்கு கிடைப்பது நிச்சயம். தமிழ் சினிமா கதாநாயகனின் கற்பழிக்கப்படுவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம்.

சித்தப்பாவிடம் எடுத்த காரியத்தை நிறுத்தும் பழக்கம் கிடையாது. அத்தோடு, உடும்புக்கறி திண்ணும் ஆவேசமும் இப்போது சேர்ந்துகொண்டது. விடுவாரா?

அந்தப்புற்றைச் சுற்றியுள்ள ஓட்டைகள் எல்லாவற்றையும் அடைத்தார்கள். இரண்டைத்தவிர. சித்தப்பா, எப்பவும் வசதியாக வைத்திருக்கும் தனது மேல் வேட்டியை உருவி ஒரு பொந்தின்மேல் மூடினார். மற்ற ஒட்டையின் வாயில் ஒரு வாளி நிறைய அவசரமாகக் கரைந்த வெங்காய நீரை ஊற்றினார்கள். ஊற்றிவிட்டு எல்லோரும் பொந்தின் வாயையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு அதிசயம் நடந்தது.

ஓட்டை வாயில் மூடியிருந்த துணி மெல்ல அசைந்தது. சித்தப்பா பாய்ந்து வேட்டியை அப்படிய கமுக்கென்று பிடித்து இழுக்கத்தொடங்கினார். இழுத்தால் அது இழுக்க இழுக்க வந்துகொண்டே இருந்தது. மாவிட்டபுரம் தேர்வடம் போல. இவ்வளவு நீட்டுக்கு உடும்பு இருக்குமா? அப்பொழுது சமயோசித புத்தியுள்ள யாரோ கத்தினார்கள். 'ஐயோ, பாம்பு! பாம்பு!" சித்தப்பா கீழ்வேட்டியும் போனது தெரியாமல் எடுத்தார் ஓட்டம், கோவணத்துடன். இந்த சித்தப்பா அதற்குள் பிறக இரண்டு நாள் படுக்கையில் கிடந்தாராம்.

இப்படியான பாரதூரமான காரியத்தை சித்தப்பாவிடம் நம்பிக்கொடுக்க முடியாததால் இந்த வேலையை கிட்ணனிடம் கொடுத்தார்கள். சனிக்கிழமை விருந்துக்கு எப்படியும் ஓர் உடும்பு பிடித்துத் தந்துவிடவேண்டும் என்பது ஒப்பந்தம். இந்தக் கிட்ணன் வல்லாளகண்டன். ஒரு கூடையையும், இரண்டு முழம் கயிறையும், ஒரு தடியையும் வைத்து காரியத்தை சாதித்து விடுவான். ஆனால் பேசியபடியே ஐம்பது சதக்காசு கொடுத்து விடவேண்டும்.

அடுத்த நாள் காலை அவன் சொல்லி வைத்தபடி ஒரு நல்ல சைசான உடும்போடு வந்துவிட்டான். இனிமேல்தான் பிரச்சனையே ஆரம்பமாகப்போகிறது. உடும்பு பிடிப்பது லேசு. ஆனால அதை ஆக்குவதில் சில வில்லங்கங்கள் இருந்தன.

முதலாவதாக உடும்பை உயிரோடு உரிக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த இறைச்சியில் நஞ்சு கலந்துவிடுமாம். இரண்டாவது, இறைச்சியில் ஒரு சிறு எலும்புத்துண்டு கூட சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எலும்பு தொடையில் குத்தினால் பெரும் கலகம் ஏற்பட்டுவிடும். மூன்றாவது இறைச்சியை வெட்டிய உடனேயே கணங்காமல் சட்டியில் போட்டுவிட வேண்டும். இந்தச் சங்கடங்களையெல்லாம் உணர்ந்து நாங்கள் முன்னெச்சரிக்கையாக முதலிலேயே பேசிப்பறைந்து ஒரு தயார் நிலையில் நின்றோம்.

கிட்ணன் மாமரத்தில் ஓர் ஆறடி உயரத்துக்கு ஓர் ஆணி அடித்தான். உடும்பின் கழுத்தில் சணல் கயிறால் ஒரு சுருக்குப்போட்டு அதைக் கலண்டர் மாட்டுவதுபோல அந்த ஆணியிலே உயிருடன் மாட்டி தொங்கவிட்டான். பிறகு ஒரு மெல்லிய கத்தியை இடுப்பில் இருந்து உருவி அது பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அதன் தோலை வாழைப்பூ சீவுவதுபோல சீவத்தொடங்கினான். உடும்பும் இதை எதிர்பார்த்ததுபோல பூரணமான ஒத்துழைப்பைக் கொடுத்தது.

சின்னம்மா சமையலறையில் சட்டியை அடுப்பில் வைத்து ஆயத்தங்கள் செய்தாள். அக்கா வாசலில் நின்றாள். நான் கிட்ணனுக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன்.

கிட்ணன் இறைச்சி துண்டுகளை வெட்டி ஒரு பூவரசம் இலையில் வைத்து தருவான். நான் அதை தூக்கிக்கொண்டு ஓடிப்போய் அக்காவிடம் தருவாள். அவள் அதை சட்டியில் போடுவாள். இப்படியாக ஒரு assembly line முறையில் இறைச்சி தடங்கல் இன்றி சட்டியில் போய் சேர்ந்துகொண்டிருந்தது.

கிட்ணன் இறைச்சியை வெட்டும்போது உடும்பின் கண்கள் மாத்திரம் இரண்டு பக்கமும் அசைந்து கொண்டிருந்தன. நான் நாலாவது முறை ஓடிப்போய் திரும்பியபோது அந்த அசைவும் நின்றுவிட்டது. உடும்பு செத்துவிட்டது. மிகவும் செத்துவிட்டது.

சமையலறையில் தேங்காய் கூட்டு, மிளகாய் கூட்டு, மசாலா கூட்டு எல்லாம் தயாராக இருந்தன. குழம்பு கறியா, பிரட்டல் கறியா என்ற சர்ச்சை கொஞ்சநேரம் நடந்தது. இறுதியில் பிரட்டல் என்றே முடிவானது.

கறி முதல் கொதி கொதித்ததும் ஒரு மணம் பரவியது. வயிற்றை குமட்டும் மணம். சரசக்கா 'ஓங்' என்று வயிற்றைப் பிடித்தபடி வாசற்படிக்கு ஓடிவிட்டாள். சின்னம்மா மாத்திரம் முந்தானையால் மூக்கைப் போர்த்தியபடி சமையல் காரியங்களில் மும்முரமாக இருந்தாள்.

கிட்ணன் உடும்புத்தோலைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டபோது பேசியபடி ஐம்பது சதம் கொடுத்து அனுப்பினார்கள். அந்தச்சமயம் பார்த்து மச்சான் வந்த இறங்கினார். மத்தியான வெய்யிலில் பளிச்சென்று மின்னும் சில்க் சட்டை போட்டுக்கொண்டு வந்திருந்தார். வாஸ்லைன் வைத்து இழுத்த தலைமுடி அழகாக படிந்துபோய் இருந்தது. வாசலடிக்க வந்த அக்கா இந்தக்காட்சியைக் கண்டு வாயூறி நின்றாள்.

சிங்கப்பூர் மச்சான் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர்களோ சாதியில் மிகவும் தாழ்ந்த சாதி, ஏழை சாதி. தங்கள் வசதிக்க ஏற்ப மச்சானுக்கு பாய் விரித்து பணிவிடை செய்தார்கள். மனை ஓலை விசிறியால் விசிறினார்கள். துர்வாச முனிவருக்க குந்திதேவி செய்ததுபோல குற்றமற்ற சேவை. சுடு சோறும் உடும்புப் பிரட்டலும்தான். சின்னம்மாதான் பரிமாறினாள். அக்கா கதவிடுக்கில் பார்த்தபடியே நின்றாள். நான் அவளுக்குப் பக்கத்தில் துணையாக நின்றேன். நான் அவ்வளவு கிட்டத்தில் நின்றதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் ஓடியோடிக் கொண்டுபோய் கொடுத்த இறைச்சியில் ஒரு சின்ன எலும்புத்துண்டு மாட்டுப்பட்டுப்போய் இருந்தது. இந்த எலும்புத்துண்டு செய்யப்போகும் உற்பாதத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தேன்.

சிங்கப்பூர் மச்சானுக்கு உடும்பு இறைச்சி சாப்பிடுவதற்கு சொல்லியும் கொடுக்க வேண்டுமா? நாலுதரம் போட்டு சாப்பிட்டார். பிறகு ரசத்தை ஊற்றி பிசைந்தும், உறிஞ்சியும் நக்கியும் சாப்பாட்டை முடித்துக்கொண்டார். அவருடைய சில்க் சட்டையில் தெறித்த கறித்துளிகளை வீரப்பதக்கம்போல அணிந்துகொண்டு எழுந்தார். இறுதியில், 'ஆஹா! ஆஹா!' என்று திருவாய் மலர்ந்தார். சிறு சாரலில் நனைந்ததுபோல அக்காவின் முகம் குளிரிந்தது. அப்படியே மெய்மறந்துபோய் நின்றாள்.

இந்த சந்தோஷம் எல்லாம் அன்று பின்னேரம் வரைக்கும்தான்.

எப்படித்தான் ரகஸ்யமாக வைத்திருந்தாலும் சிங்கப்பூர் மச்சானுக்கு உடும்பு இறைச்சி விருந்து வைத்த கதை சின்னாச்சிக் கிழவிக்கு எட்டிவிட்டது. அவள் வந்து 'எடி' பாதகத்தி' உடும்பு இறைச்சி உறவைக் கெடுக்கும் என்று உனக்குத்தெரியாதா? எல்லாத்தையும் கெடுத்துவிட்டியே' என்று ஒப்பாரி வைத்தாள். இரண்டு தலைமுறையாக உடும்பு இறைச்சி விருந்து செய்த அனர்த்தங்களை மயிர்க்கூச்செறிய விவரித்தாள். இந்த அதிர்ச்சியில் தாயும் மகளும் இருந்தபோது நாலு வெற்றிலையை உருவி மடியிலே செருகிக்கொண்டு போய்விட்டாள்.

சின்னம்மாவுக்கும், சரசக்காவுக்கும் திக்கென்றது. சின்னாச்சிகிழவியின் தீர்க்க தரிசனத்தை முற்றிலும் தள்ளிவைக்க அவர்களால் முடியவில்லை. சிங்கப்பூர் குடும்பத்துக்கும் இவர்களுக்கம் ஏணி வைத்தாலும் எட்டாது. நல்ல இடத்தில் மகளைக் கரை சேர்க்கவேண்டும் என்ற அளவில் சின்னம்மா யோசிக்காமல் இப்படிச் செய்துவிட்டாள். இதை முதலில் அல்லவோ யோசித்து இருக்கவேண்டும்?

செலுலர் வராத காலமது. இருந்தாலும் சிங்கப்பூரின் தகப்பனார் சிவப்பிரகாசத்திற்கு இந்தச் செய்தி ஐம்பது மைல் வேகத்தில் போய் சேர்ந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரரிடம். கந்தர்மடத்துக் கள்ளின் குணாதிசயங்கள் பற்றி ஒரு கதுத்துரை ஆற்றிக்கொண்டிருந்தார். அவருக்கும் கோபம் ரௌத்திரகாரமாகப் பற்றிக்கொண்டு வந்தது. பல் நீக்கல் வழியாகக் காற்று வேகமாக வீச பத்து வீடு கேட்க சத்தம் போட்டார். கால்களில் இடுக்கிலே கையை நீளத்துக்க விட்டு சொறிந்துகொண்டார். அப்படியம் ஆத்திரம் தீராமல் ஆகாயத்தை முறைத்துக்கொண்டு காத்திருந்தார்.

சின்னமுத்து கொட்டியதுபோல அவர் வீடு நிறையக் குழந்தைகள். பெரியமுத்து போட்டதுபோல அவருக்க ஒரு பெண்சாதி. சிங்கப்பூர்தான். மூத்த மகன் இப்படி கிலுசைகெட்டு திரியிறானே இந்தப்பாலி என்று அவர் ரத்தம் ஒவர்டைம் செய்து கொதித்தது.

சிங்கப்பூர் வீடு வந்ததும் முதல் முப்பத்துமூன்று செகண்டுகள் ஒருவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகக் கழிந்தது. அடுத்த கணம் பிரளயம் வெடித்தது. சிவப்பிரகாசம் ஓவென்று கத்தினார். எண்ணெயில் போட்ட பனங்காய் பணியாரம்போல மேலும் கீழும் துள்ளினார். காலால் உதைத்தார்; கையால் அடித்தார். கிடுகு வேலியில் பாய்ந்தார். வெயிலுக்கு ஒதுங்கிய ஓணான்கள் எல்லாம் பறித்துக்கொண்டு ஓடின. கிளுவந்தடியை முறித்துக்கொண்டு வந்தபோது மற்றவர்கள் அவரைப் பிடித்துவிட்டார்கள். இவ்வளவுக்கும் சிங்கப்பூர் மந்தநாவுள்ளவன் போல வாயைத் திறக்கவேயில்லை.

ஊர் முழுக்கக்கூடி இந்தக்காட்சியை மூச்சு விடுவதை ஒத்திப்போட்டு பார்த்துக் கொண்டிருந்தது. இப்படித்தான் முதலாம் பாகம், இரண்டாம் அத்தியாயம் முடிவடைந்தது.

காலம் தாழ்த்தாமல் சிங்கப்பூர் மச்சானுக்கு பல இடங்களிலும் பேச்சுக்கால் நடந்தது. சிவப்பிரகாசம் ஒரு வெறியோடு இந்தக்காரியத்தில் இறங்கினார். சம்பளம் குடுத்து வைத்ததுபோல் அங்கு நடக்கும் விசேஷங்களை நாளாந்தம் நாலைந்து வந்து சின்னம்மாவிடம் ஒப்பித்து போனார்கள்.

சின்னம்மா, அக்காவை ஒரு விரோதத்தோடு பார்க்கத் தொடங்கினாள், அக்கா இன்னும் கடுமையான விரதங்களை அநுட்டிக்கத்தொடங்கினாள். வீட்டிலே தினமும் மீனும் இறைச்சியும் காய்ச்சினாலும் இவள் தவறாமல் கோவிலுக்க போய்வந்தாள். சமையல் பாத்திரங்கள், அடுப்புகூட வேறாகிவிட்டது. நோன்பு இருந்தாள். நெய் மணக்க பால்சோறு பொங்கிப்படைத்தாள். 'பாற்சோறு மூட நெற்பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து' நாங்கள் சாப்பிட்டோம். ஒன்றுமே நடக்காத மாதிரி கொஞ்ச காலம் எங்களை இப்படி ஏமாற்றிக்கொண்டோம்.

வாரங்கள் பல ஓடிவிட்டன. சரசக்காவை பார்க்க முடியவில்லை. வாசலையே பார்த்தபடி தன் வாழ்நாளைக் கழித்தாள். வெய்யிலில் எறிந்த கீரைத்தண்டுபோல அவள் முகம் வதங்கிவிட்டது. அனிச்சம்பூ மனம்கொண்ட அக்கா உடும்பு மாமிசம் சாப்பிடும் இந்த கோழையிடம் மனதைப் பறிகொடுத்து இப்படி உருகிக்கொண்டு போனாள். என்னதான் நான் அக்காவிடம் ஒட்டிப் பழகினாலும் அவளுடைய உள்மனதில் என்ன இருந்ததென்று எனக்கு தெரியவில்லை. இறுக்க ஒட்டிய கடித உறைபோல எந்தப் பக்கத்தில் இருந்தும் அவள் மனதை திறக்க முடியாமல் இருந்தது.

இந்த சமயத்தில் நாங்கள் எதிர்பார்த்தது நடந்தது. ஒரு நாள் மச்சானுக்கு 'எழுத்து' முடிந்துவிட்டது. துள்ளித் திரிந்து என்னுடன் எப்பவும் சண்டை போடும் அக்கா மறைந்து போனாள். அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விட்டபடியே இருந்தாள். கொக்கான் விளையாட்டிலும், தாயம் விளையாட்டிலும்கூட என்னிடம் தோற்றாள்.

மாமரத்திலே ஆணி அடித்து அதிலே கட்டிய சணல்கயிறு இன்னமும் தொங்கிக்கொண்டு இருந்தது. நானும் அக்காவும் எங்கள் எங்கள் கல்லிலே உட்கார்ந்து பலப்பல கதைகள் பேசினோம். கிணற்றிலே வளர்க்கும் பால் ஆமை ஆணா பெண்ணோ என்பதைப்பற்றி விவாதித்தோம். அணில்பிளளையில் சத்தம் கேட்கும் போதெல்லாம் தகரத்தை அடித்து மாங்காய்களைக் காப்பாற்றினோம். அசோகமாலா கதை அக்காவுக்கு நிறைய பிடிக்கும். அதை எனக்க திருப்பி திருப்பி கூறுவாள். அந்த நேரங்களில் எல்லாம் சரசக்காவிடம் மச்சானைப்பற்றி கேட்கவேண்டும் என்று வாயை பலமுறை உன்னுவேன். ஆனால் முடியவில்லை அவள் மெல்லிய குரலில் பாடத்தொடங்கினாள்.

நேற்றந்தி நேரத்திலே
நீராடும் துறைதனிலே
நெருங்கி எனை ஜாடைகாட்டி
அழைத்தவர் யாரோ?

இந்த வரிகளை மறுபடியும் மறுபடியும் பாடினாள். கண்கள் பளபளத்தன. கடைசி வரியில் அவள் குரல் உடைந்துவிட்டது.

பாதி கிழிந்துபோன கவிதை எவ்வளவு அழகானது. மீதியிலே என்ன சொல்லியிருக்கும் என்பது தெரியாது. அதை எப்படி வேண்டுமானாலும் கற்பனையில் பூர்த்தி செய்து கொள்ளலாம் அல்லவா! இது ஏன் அக்காவுக்கு தெரியவில்லை? தண்­ரைக் குவித்து வைக்க அல்லவா முயற்சிசெய்து கொண்டிருந்தாள்! பெரும் யாகம் செய்து கிட்டிய அபிப்பாகத்தை யாரும் கழுதைக்கு வீசுவார்களா? என் அக்காவின் வாசனையைக் கெடுத்து பழந்துணிபோல வீசிவிட்டார்களே என்று எனக்கு துக்கமாக வந்தது.

அன்று அம்மன் கோவில் திருவிழா. எல்லோரும் திருவிழாவுக்கு போய்விட்டார்கள். நான்தான் அக்காவுக்கு காவல். மாமரக்கிளையில் சந்திர ஒளிபட்டு சிதறி விழுந்தது. விளக்கை மாடத்தில் வைத்துவிட்டு நாங்கள் திண்ணையில் விளக்கை மாடத்தை வைத்துவிட்டு நாங்கள் திண்ணையில் இருந்து வாண வேடிக்கையையும், மத்தாப்புவெடிகளையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தோம். மத்தாப்பு உயரத்தில்போய் வெடித்து விரியும் போதெல்லாம் அக்காவின் முகம் ஒருகணம் பிரகாசமாகி மறையும். அன்னியோன்யமாக நாங்கள் இதற்கு முன்பு இருந்ததில்லை. மோகனமான அந்த இரவில் அவள் முகம் பார்க்க சோகமாகவும், பாவமாகவும் இருந்தது.

சரசரவென்று ஓர் உடும்பு எங்களைத்தாண்டி ஓடியது இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காது. கனகாலமாகக் கேட்க நினைத்ததை துணிந்து அக்காவிடம் கேட்கத் தீர்மானித்தேன்.

'அக்கா, இந்த மச்சான் இப்பிடி செய்திருக்கக்கூடாது.'

விநாடி முள்போல நெஞ்சு படக்படக்கென்று அடித்து கொண்டது. முதல்தரமாக இப்போதுதான் நான் என் மனதில் கிடந்ததை வெளியில் சொன்னேன்.

'போடா, பரவாயில்லை. உடும்புகளுக்கெல்லாம் நல்ல காலம்' என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்தாள். சத்தமில்லாத சிரிப்பு. அவள் முகத்தில் கொஞ்சமும் கவலை தென்படவில்லை. உண்மையில் பார்த்தால் ஒரு நிம்மதிதான் தெரிந்தது.

* * *

** இதன் தொடர்ச்சி vadakku4.mtfல் வருகிறது**


** vadakku4.mtf ன் தொடர்ச்சி**

மனுதர்மம்

இலங்கை அரசனின் பட்டத்து ராணி அந்த நந்தவனத்தில் உலாவிக்கொண்டு இருந்தாள். மயக்கம் தரும் இந்த மாலை நேரங்களில் வழக்கமா அவள் அங்கேதான் இருப்பாள். அரசன் அவளுக்கா கட்டிய தாடகத்தில் மிதக்கும் வாத்துக்களைப் பார்த்துக் கொண்டிருப்தில் அப்படி ஒரு சந்தோஷம். கார்த்திகை நட்சத்திரங்களோல கூட்டமாக தாய் வாத்தும், குஞ்சுகளும் மிதந்து கொண்டிருந்தன. அவை நீர்ப்பூக்களில் மறைவதும் வெளிவருவதுமாக விளையாடிக் கொண்டிருந்த காட்சியை பார்த்து கொண்டேயிருக்கலாம்.

கடந்த இருபது வருடங்களாக அந்தி நேரங்களை ராணி அவளுடைய அந்தப்புர நந்தவனத்தில் இதுமாதிரித்தான் கழித்து வந்திருக்கிறாள். ராணியின் சௌந்தர்யம் அன்று பார்த்ததுபோல் இன்றும் கண்ணைப்பறிக்கும் மெருகுடன்தான் இருந்தது. ஆனால் அந்த அழகுடன் சேர்ந்து இப்பொழுது ஓர் அசாதாரண ஒளியும் அவள் முகத்திலே படந்திருந்தது. அரசன் அவளுக்காக இன்னொரு படை திரட்டினாலும் அசியப்பட முடியாது. இப்படியான வனப்பும், முகக்காந்தியும், சோபையும் விரதம் காக்கும் உயர்குடிப் பெண்களிடத்தேதான் காணப்படும்.

சாலையில் புத்த தேரிணிகள் கைகளில் பிட்சை பார்த்திரங்களுடன் விஹாரையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய அமைதியான உடையையும், முகத்தில் தெரியும் சாந்தியையும் பார்க்கும்போது ராணியின் மனத்தை என்னவோ செய்யும். சங்கமித்திரை கொண்டுவந்து நட்ட அரசமரத்துக் கிளை இப்போது பெரும் மரமாக வியாபித்து வளர்ந்திருந்தது. அதுபோல அவள் ஸ்தாபித்த சங்கமும் கிளைவிட்டு பரவி மக்களிடையே தர்மத்தை வளர்த்துக் கொண்டிருந்தது ராணிக்கு தேரிணியாகிவிட வேண்டும் என்ற ஆசை மறுபடியும் ஒரு கணம் தலை தூக்கியது.

அரசன் அவளிடத்தே கொண்டிருக்கும் காதலின் பிரவாகம் இன்றுவரை எவ்வளவேனும் குறையவில்லை. மாறாக அவனுடைய பிரமேமையானது நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்தது. ஆயிரம் மகளிர் அந்தப்புரத்தில் இருந்தாலும் அவன் தனது பட்டத்து ராணியிடம் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது. ஆனால் அரசனுடைய கவனம் எல்லாம் சமீக காலங்களில் நீதி சாஸ்திரங்களிலேயே லயித்து இருந்தது. அசோகன் ஸ்தாபித்த நீதி பரிபாலன முறைகளையும், எல்லாளன் அனுசரித்த தர்ம நெறிகளையும் சாஸ்திரம் அறிந்த விற்பன்னர்களோடு தர்க்கித்தான்; தரும நூல்கள் பதினெட்டில் ஒன்றான மனு நீதியை பண்டிதர்களிடம் நுணுக்கமாக கற்றுத் தேர்ந்தான்.

ஓர் அரசனுக்கு இருக்கவேண்டிய காருண்யத்துக்கு ஆதர்சமாகச் சிபிச் சக்கரவர்த்தி அவனுக்கு விளக்கினார். பருத்தினிடம் உயிர் தப்புவதற்காக அந்தப் புறா பறந்துவந்து சக்கரவர்த்தியின் கால்களில் விழுந்து அடைக்கலம் கேட்டதாம். அப்பொழுது பருந்து அரசனை நோக்கி 'அரசே, மாமிசம் புசிப்பது என் இயல்பு; புறாவை விடும், நான் பசியாற வேண்டும்' என்று சொன்னது. அடைக்கலம் கொடுத்த புறாவை அரசன் எப்படி நிர்க்கதியாக விடமுடியும்? 'உனக்கு மாமிசம்தானே வேண்டும், இதோ!' என்று தன் உடலின் தசையை எடைக்கு எடை அரிந்து கொடுத்தானாம் சிபிச்சக்கரவர்த்தி.

தருமத்திற்கெல்லாம் தருமமாக விளங்கிய சிபிச்சக்கரவர்த்தியின் காருண்யத்தையும், எல்லாளனுடைய நீதி பரிபாலனத்தையும் ஆதர்சமாக ஏற்றுக்கொண்ட அரசன், தொன்றுதொட்டு வழங்கிய நீதி வழுவா நெறிமுறைகளை திரும்பவும் ஸ்தாபிக்க அமர்த்தியர்களைக் கலந்து ஆலோசித்தான். பொத்ததேவி தாரையைப் போன்ற அறிவாளி; தர்ம நூல்களை அறிந்தவள். அவளிடத்திலும் அரசன் அவ்வப்போது ஆலோசனைகள் கேட்டான்.

ஆராய்ச்சி மணியை அரண்மனை வாசலிலே தொங்கவிட்டு எல்லோருக்கும் நீதி பாரபட்சமின்றிக் கிடைக்க வழிவகத்தவன் எல்லாளன். ஒருமுறை அவனுடைய தேர் வேகமாகச் சென்றபோது தற்செயலாக புத்தவியாரையின் ஸ்தூபம் ஒன்றை இடித்து பதினைந்து செங்கல்கள் உதிர்ந்துவிட்டன. எல்லாளன் பதறிப்போய் அந்தப் பாவத்தின் பாரம் தாங்கமுடியாமல் தன்னையே பலி கொடுக்கத் தயாராகிவிட்டான். புத்ததேரர்கள் அவனைத் தேற்றியபின் பதினையாயிரம் செங்கல்கள் பதித்து புதிய நிர்மாணவேலைகள் செய்து பிராயச்சித்தம் செய்துகொண்டானாம்.

இன்னொரு முறை ஒரு கிழவி வெய்யிலிலே அரிசியைக் காய வைத்திருக்கிறாள். அப்போது நேரமில்லாத நேரத்தில் மழை பெய்து கிழவியுடைய அரிசி எல்லாம் நனைந்துவிட்டது. கிழவி அழுதுகொண்டே வந்து ஆராய்ச்சி மணியைப் பிடித்து இழுத்தாள், 'நல்ல அரசனுடைய ஆட்சியில் காலம் தவறி மழை பெய்யுமா? என்னுடைய அரிசி எல்லாம் நனைந்துவிட்டதே! எனக்கு உண்பதற்கு எதுவும் இல்லையே' என்று வருந்தி முறையிட்டாள்.

எல்லாளன் 'மழையின் குற்றம் மன்னன் குற்றமன்று' என்று கூறி கிழவியை திருப்பி அனுப்பியிருக்கலாம். அல்லாவிடின், கிழவிக்கு வேண்டிய தானியவகை கொடுத்து அவள் துயரைத் தீர்த்தும் இருக்கலாம். ஆனால் எல்லாளன் கிழவியின் துயரத்தின் ஆழத்தை அறிய 'பசி என்றால் அது எப்படி இருக்கும்?' என்று தானாக உணருவதற்காக நாட்கணக்கில் உண்ணாவிரதம் இருந்து தன்னை வருத்திக் கொண்டானாம்.

எல்லாளன் வகுத்த இந்த நீதி முறையில் பிறழாது அரசன் பரிபாலனம் செய்து வந்தான். ராணியிடம் இந்த நீதி முறைகளைப்பற்றியும், அவை போதிசத்துவருடைய தர்மோபதேசங்களுக்கு உடன்பட்டதாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துக் கூறுவான். அரசனுடைய கணிப்பில் நீதி சாஸ்திரத்தில் இரண்டு அங்கங்கள் இருந்தன. ஒன்று, ஒருவன் குற்றம் இழைத்தானா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது. அடுத்தது, அந்தக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை நிர்ணயிப்பது. அரசனுடைய கருத்தின்படி ஒருவன் குற்றவாளியா அல்லவா என்பதைத் தீர்மானிப்பது வெகு இலகுவானது. ஆனால் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்குவதில்தான் அரசனுடைய தர்மம் நிலைக்கிறது என்று அவன் நம்பினான்.

கொலை செய்தவனைக் கழுவேற்றிக் கொல்வதுவும், ராஜத் துரோகியை யானையின் காலில் இடறுவிப்பதும், அரச கட்டளையை மீறியவனை சுண்ணாம்புக் காளவாயில் போடுவதும் அரசனுக்கு சரியாகப் படவில்லை. கருணையின் வடிவான போதிசத்துவருக்க இந்தத் தண்டனைகள் உகந்ததாக இருக்காது என்றே அரசனுக்கு தோன்றியது. எல்லாளன் காட்டிய நெறிப்படி, போதிசத்துவருக்கு ஏற்புடையதான நீதி சாஸ்திரங்களை கடைப்பிடிப்பதில் அரசன் வெகு தீவிரமாக இருந்தான். அரசனுடைய இந்தப் போக்கு மந்திரி பிரதானிகளுக்கு அதிசயமாக இருந்தது.

'தசரதன் ஆணைப்படி ராமன் வனாந்தரம் ஏகிவிட்டான்' என்று கைகேயி கூறியதும் பரதன் அதிசயப்பட்டு 'ராமன் என்ன குற்றம் செய்தான்? பிறர் பொருளை அபரித்தானா? நிரபராதிகளைத் தண்டித்தானா? அன்றி பிறர் மனைவியை காமத்துடன் பார்த்தானா? என்று கேட்கிறான். இப்படி கடுமையான குற்றங்களுக்குத்தான் வனாந்தர சிட்சை என்று தொன்றுதொட்டு இருந்தது. மனுதர்மத்தை அணைத்து நின்ற இந்தத் தண்டனைகள் எப்பொழுது இப்படி கடூரமாக மாறின என்ற தர்ம விசாரத்தில் அரசன் அடிக்கடி மூழ்கிவிடுவான்.

ராணி பொத்தாதேவி தன் தங்க ஆசனத்தில் சாவதானமாக அமர்ந்துகொண்டு சேடிப்பெண்ணை கண் நிமிர்ந்து பார்த்தாள். அந்தச் சைகை அர்த்தமாகியதுபோல ராணியின் தாதி தன் கையிலிருந்த இரண்டு வெற்றிலைப் பெட்டிகளையும் அரசியின் முன்னே வைத்தாள். ஒன்று முற்றிலும் வெள்ளியினால் செய்தது; நிறைந்த வேலைப்பாடுகளைக் கொண்டது. அதுதான் பொத்தா தேவியுடையது. மற்றது தங்கத்தால் இழைத்து மின்னிக்கொண்டிருந்தது. அரசனுக்கு மாத்திரம் பிரத்தியேகமானது.

அரசனுடைய வெற்றிலையை பொத்ததேவியே மடித்துக் கொடுப்பாள். தன்னுடையதையும் தானே செய்துகொள்வாள். எது காரணம் கொண்டும் இதைமாத்திரம் சேடிப்பெண்கள் செய்வதை அவள் அனுமதிக்கமாட்டாள். அது மாத்திரமல்ல, எதற்காக ராணி இரண்டு வெற்றிலைப் பெட்டிகள் வைத்திருக்கிறாள் என்ற விஷயமும் ஒருவரும் அறியாத பரம ரகஸ்யமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.

பொத்தாதேவி, பதினாறு வயது நிரம்பு முன்பேயே அந்த நாட்டு சேனாதிபதியை மணந்து கொண்டவள். அப்போது அரசனாயிருந்தவன் சுப்பராஜன் என்பவன். அவன் அதற்க முன்பு சாதாரண வேலைக்காரனாக இருந்தவன். அவனும் அப்போது அரரையாண்ட மன்னனும் ஒரே முகச்சாயல் கொண்டவர்கள். ஒருநாள் அரசன் விளையாட்டுக்காக வேலைக்காரனுக்கு ராஜவேஷம் போட்டு தன் வேலைக்காரனுடைய உடையை அணிந்து வேடிக்கை பார்த்தான். மந்திரி பிரதானிகள் வேலைக்காரனை வணங்குவதைப் பார்த்து எள்ளி நகையாடினான், உண்மையான மன்னன். இதுதான் தருணமென்று நயவஞ்சகமா அரசனைச் சிரச்சேதம் செய்துவிட்டு ராஜ்யத்தை அபகரித்துக் கொண்டான், வேலைக்காரனான சுப்பராஜன்.

அரசனாகிவிட்டாலும் அன்றிலிருந்து சுப்பராஜனுக்கு தன்னைக் கொல்ல சதி நடக்கிறதென்று ஒரு பயம் இருந்துகொண்டே வந்தது. ஒரு முறை குறிசொல்பவனிடம் தன் எதிர்காலம் பற்றிக் கேட்டான். அதற்கு அவன் 'அரசே!தங்களுக்கு ஓர் எதிரி ஏற்கனவே பிறந்திருக்கிறான்; வசபன் என்று பெயர். அவன் தங்களைக் கொன்று இந்த ராஜ்யத்தை உங்களிடமிருந்து அபகரிப்பான்' என்று கூறிவிட்டான்.

அன்றிலிருந்து சுப்பராஜனுக்கு நித்திரை கெட்டது. சேனாதிபதியைக் கூப்பிட்டு வசபன் என்னம் பேர் உள்ள எல்லோரையும் சிறைப்பிடித்து சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான். சேனாதிபதியும் அப்படியே சேவகர்களை நாட்டின் நாலு திசைகளிலும் அனுப்பி வசபன் என்ற பேர் உள்ளவர்களை எல்லாம் பிடித்து சிரத்சேதம் செய்தான்.

இந்த நேரம் பார்த்து வடக்கே கிராமத்தில் இருந்து சேனாதிபதியின் சொன்த மருமகன், வசபன் என்று பெயர் கொண்டவன், வந்து சேர்ந்தான். அவனுக்கு அரசனுடைய விநோதமான கட்டளை பற்றிய விஷயம் ஒன்றுமே தெரியாது. பதினெட்டு வயது நிரம்பிய அழகிய யுவன் அவன். சேனாதிபதியின் தயவில் அரசனுடைய படையில் சேர்வதற்காக வந்திருந்தான்.

சேனாதிபதிக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. மனைவியுடன் கூடி ஆலோசித்தான். அடுத்த நாள் அதிகாலையில் மருமகனைக் கூட்டிக்கொண்டுபோய் அரசனிடம் ஒப்படைத்து சிரச்சேதம் செய்துவிடுவது என்று முடிவாகியது.

பேசிவைத்தபடி அடுத்தநாள் அதிகாலையில் சேனாதிபதியும் வசபனும் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார்கள். பொத்தாதேவிக்கு இந்தக் காட்சி வயிற்றை பிசைந்தது. எனினும் வழக்கம்போல மடித்த வெற்றிலைச் சுருளை கணவனிடம் கொடுத்து இருவரையும் வழியனுப்பி வைத்தாள்.

சேனாதிபதி வெற்றிலைப் பிரியர். அன்றாட காரியங்களை தாம்பூலம் தரிக்காமல் அவர் தொடங்குவதேயில்லை. அரண்மனை வாசலில் வெற்றிலைச் சுருளை விரித்தார். அதிலே எல்லாம் இருந்தது. ஆனால் சுண்ணாம்பு இல்லை. ஒருநாளும் மறக்காத பொத்தாதேவி அன்று சுண்ணாம்பை மறந்துவிட்டாள். சுண்ணாம்பு இல்லாத வெற்றிலையில் சுகமில்லை. அந்தக்கணம் அவருக்கு வெற்றிலை போட்டே ஆகவேண்டுமென்று இருந்தது. அவர் வசபனை வீட்டுக்கு அனுப்பி சுண்ணாம்பு எடுத்துவரச் சொன்னார்.

அங்கே பொத்தாதேவி வசபனை எதிர்பார்த்து நின்றாள். அவளுக்கு மனது பொறுக்கவில்லை. தன்னுடைய கணவனின் துரோக எண்ணத்தை வசபனிடம் கூறிவிட்டாள். தான் வேண்டுமென்றே சுண்ணாம்பை வைக்கவில்லையென்றும், அவனை உடனேயே தப்பி ஓடிவிடும்படியும் கூறினாள். அது மாத்திரமல்ல, ஒரு துணியிலே அவனுக்கு ஆயிரம் பொற் கழஞ்சுகளையும் முடிந்து கொடுத்தாள்.

முன்பின் பார்த்திராத தன்னிடம் இவ்வளவு கருணை காட்டிய பொத்தாதேவியை வசபன் முதன் முறையாகத் தலை நிமிர்ந்து பார்த்தான். தேவலோகத்து அப்சரஸ்போல அவள் இருந்தாள். அவனால் நம்ப முடியவில்லை. கண்களிலே அவனுக்கு நீர் துளிர்த்தது. பொத்தாதேவி, அவளும் இளம்பெண்தானே! அவள் கண்களிலும் நீர். அப்படியே அள்ளிப் பிடித்து அவள் உதட்டிலே முத்தமிட்டு விட்டான். பிறகு திரும்பிக்கூடப் பாராமல் ஓடிப்போனான்.

பொத்தாதேவி அந்தச் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு வெற்றிலையை எடுத்து வாயினுள் போட்டு சுவைக்கத் தொடங்கினாள். சேடிப் பெண்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகச் சென்று தீபங்களை ஏற்றினார்கள். அந்த மங்கிய வெளிச்சத்தில் சாயைகள் போவதும் வருவதுமாக இருந்தது. அவள் மன ஓட்டத்துடன் ஓத்துப்போனது.

தெருவிலேயும் சந்தடி குறைந்துவிட்டது. வண்டியில் மாடுகள் மந்தகதியில் அசைந்தாடிக்கொண்டு சென்றன. ரத ஓட்டம் முற்றிலும் நின்று விட்டது. மனித அரவம் இன்னும் அடங்கவில்லை.

இன்னும் மன்னரைக் காணவில்லை. இவ்வளவு நேரங்கழித்து அவர் அந்தப்புரத்திற்கு வந்ததேயில்லை. இன்று அரண்மனையில் அப்படி என்ன முக்கியமான காரியமாயிருக்கும்? ஏதாவது விசேஷமான வழக்கா இருக்கலாம்? மன்னர் இப்பொழுதெல்லாம் இப்படியான வழக்குகளுக்குத் தான் தன் நேரத்தை எல்லாம் செலவிடுகிறார்.

இரண்டு பௌர்ணமிகளுக்கு முன்பும் இப்படித்தான் ஒரு வழக்கு. அரசன் வழங்கிய தீர்ப்பைப் பற்றி பண்டிதரும் பாமரரும் ஒன்றாகச் சிலாகித்து பேசினார்கள். நெடுஞ்சாலை ஒரத்திலே தன்னிச்சையாக ஒங்கி வளர்ந்து நின்ற விருட்சத்தை ஒரு துஷ்டன் வெட்டிச் சாய்த்துவிட்டான். அரசன் அனுமதியின்றி மரங்களை வெட்டுவது மகா பாபமான செயல். அதுவும் சாலையோரங்களில், மனிதனுடைய வசதிக்காக வைத்த மரங்களை வெட்டுவது மிகவும் பாரதூரமான குற்றமாகும்.

மரங்களைப் பேணுவது காலத்திலிருந்து கடைபிடிக்கப் பட்டு வந்த வழக்கம். அவனுடைய பிரதானமான கல்வெட்டுகள் எல்லாம் 'மனிதர்களுடைய வசதிக்கும், பிராணிகளுடைய நலத்துக்குமாக அரசன் ஆணையால் நெடுஞ்சாலை ஓரங்களில் கிணறுகள் வெட்டப்பட்டன, மரங்கள் வைக்கப்பட்டன' என்று கூறும். அப்படியிருக்க இந்த மூடன் கருணையே இல்லாமல் இப்படி மரத்தை வெட்டிவிட்டானே!

வழக்கமா இந்தக் குற்றத்திற்கு தண்டனை ஐம்பது கசையடி. ஆனால் மன்னருடைய தீர்ப்பு எல்லோரையும் ஆச்சிரியத்தில் அடித்தது. அதே சாலையில் நூறு மரங்களை நடும்படி குற்றவாளிக்கு ஆணை பிறப்பித்தார் அரசர். அந்த தீர்ப்பிலே உள்ள மதி நுட்பத்தையும், அதனால் ஏற்படும் நன்மையையும் பற்றி எல்லோரும் பேசிப்பேசி மகிழ்ந்தார்கள்.

'நாட்டிலே உள்ள வழக்குகளுக்கெல்லாம் தீர்ப்பு வழங்கும் மன்னர் என்னுடைய குற்றத்திற்கு என்ன தண்டனை கொடுக்கக் கூடும்' என்று பொத்தாதேவி தன்னையே அடிக்கடி கேட்டுக் கொள்வாள். மனு நீதி சாஸ்திரத்தில் அவளுக்கு மன்னிப்பு இருக்கிறதா?

இரண்டு வருடங்களாக வசபன் காடுகளிலே ஒளிந்து திரிந்து படை திரட்டினான். இந்தக்காலங்களில் எல்லாம் பொத்தாதேவி அவனை ஒருகணம் தானும் மறந்தாளில்லை. அவனைப்பற்றியே செய்திகள் அடிக்கடி வந்த வண்ணமாகவே இருந்தன. விதியின் உந்துதலால் அப்பொழுது பொத்தாதேவி தனது இரண்டாவது குற்றத்தை செய்யும்படி நேரிட்டது.

ஒரு சேதாந்திரி வடக்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார். பொத்தாதேவி அவர் கையில் ஒரு வெற்றிலைச் சுருளைக் கொடுத்து வசபனைக் கண்டால் அவன் கையில் அதைத் தரும்படி வேண்டிக் கொண்டாள். அவருக்கு ஆச்சரியம்! வெற்றிலைச் சுருள் அவ்வளவு நாளைக்குத் தாங்குமா! ஆனால் அந்த தேசாந்திரி ஒன்றுமே கேட்கவில்லை. 'அப்படியே' என்று கூறி சுருளை வாங்கிப் போய்விட்டார்.

பொத்தாதேவி எதிர்பார்த்தபடி ஒருநாள் வசபன் திடுதிடுப்பென்று திரும்பி வந்துவிட்டான். சுண்ணாம்பு இல்லாமல் அவள் அனுப்பிய வெற்றிலையின் சூசகமான செய்தியை அவன் உணர்ந்து கொண்டான். கடம்ப மரங்களின் மறைவில் அவளைச் சந்தித்தான் வசபன். ஆசை தூண்ட அடக்கம் இழந்து அவளைத் தழுவினான்; பொத்தாதேவி அவன் வசம் ஆனாள்.

வெகு சீக்கிரத்திலேயே வசபம் பெரும்படையுடன் வந்து சுப்பராஜனின் படைகளை முறியடித்து ராஜ்யத்தைக் கைப்பற்றிக்கொண்டான். வசபனுக்கு எதிராக அவளுடைய கணவன் போர்க்களத்தில் சேனாதிபதியாக மிகவும் சௌகரியத்துடன் போர் புரிந்தான். இருந்தும் சமரிலே படுகாயம் பட்டு உயிர் நீத்தான்.

வசபன் அரசனானவுடன் முதற் காரியமாக பொத்தாதேவியை மணந்து ராணியாக்கிக் கொண்டான். அவனுடைய ராஜ்யத்தில் மக்கள் எல்லாம் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள். அளவற்ற கருணையுடன் அவன் செய்த ராஜ்ய பரிபாலனத்தில் மனிதர்களும், மரங்களும், மிருகங்களும், பட்சிகளும்கூட சந்தோஷமாக இருந்ததாகப் பேசிக்கொண்டார்கள்.

ஏதோ ஒரு பெரிய குற்றத்திற்க பிராயச்சித்தம் செய்வது போல வசபன் ஸ்தூபங்களைக் காட்டினான். கோட்டைச் சுவர்களை உயர்த்தி நாலு வாசல்களிலும் புத்த விஹாரங்களை ஸ்தாபித்தான். பன்னிரெண்டு மிகப்பெரும் வாவிகளைக் கட்டி வாய்க்கால்கள் வெட்டினான். விஷேச தினங்களிலும், விழாக்களின் போதும் முப்பத்திரண்டு இடங்களில் பால் சோறும், தேனும் கொடுக்க ஆக்ஞை பிறப்பித்தான். மக்கள் இவனுடைய நீதி வழுவாத ஆட்சி நீடிக்கவேண்டும் என்று புத்த பகவானை வேண்டிக்கொண்டார்கள்.

சேடி ஒருத்தி ஓடிவந்து அன்று நடந்த அதிசயமாக வழக்கைப் பற்றி ராணியிடம் கூறினாள். ராணி 'அது என்ன வழக்கு? பிபரமாகச் சொல்?' என்றாள். 'இது ஒருகுடியானவத்தம்பதிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு. மனைவி கணவன் மீது வழக்குத் தொடுத்திருக்கிறாள்!' என்றாள். அப்படி அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மன்னர் வந்துவிட்டார். சேடிகள் மறைந்து கொண்டார்கள்.

அரசனை எழுந்து வரவேற்றாள் ராணி. அரசனின் முகத்தில் என்றும் இல்லாத ஒரு பரவசம் நிறைந்திருந்தது. மிகவும் கஷ்டமான காரியத்தை சாதித்தபின் மனதில் பரிபூரணமான சாந்தியுடன் கூடிய ஒரு ஒளி ஏற்படுமே,அதுதான்.

'ஸ்வாமி! இன்றைய வழக்கைப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. என்ன நடந்தது? கூறுங்கள்' என்றாள்.

'இன்று நடந்தது ஒரு சிறிய விவகாரம்தான். ஆனால் இதன் தீர்ப்பு மிகவும் பாரதூரமானது. ஒரு முரட்டுக் குடியானவனிடம் ஒரு மாடு இருந்தது. இந்த மாட்டை நம்பித்தான் அவர்கள் ஜ“வனம் நடந்தது. மனைவி பால், தயிர், மோர் என்று விற்று வந்தாள்.'

'இந்த மாடு கொஞ்சம் முரண்டு பிடித்தது. இந்த மூர்க்கன் அதை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துவான். மனைவி எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை. இன்று காலை அந்த வாயில்லாப் பிராணியைப் போட்டு அடித்திருக்கிறான். இவளுக்கு பொறுக்க முடியவில்லை. ஓடிப்போய் தடுத்தபோது அந்த மூடன் இவளையும் சேர்த்து அடித்திருக்கிறான். அப்பொழுதுதான் இவள் நேராக வந்து ஆராய்ச்சி மணியை இழுத்திருக்கிறாள்'.

'அதிசயமாக இருக்கிறதே! என்ன தீர்ப்பு வழங்கினீர்கள்?'

'அதிலேதான் பிரச்சனை. பசுவதை என்பது மிகவும் கொடூரமானது. வழக்கமான இப்படியான குற்றத்திற்கு தண்டனை ஒரு நாழிகை நேரம் சுண்ணாம்பு காளவாயில் அவனைப் போடுவதுதான்.'

'அதுதான் தீர்ப்பா?'

'இல்லை; அப்படிச் செய்தால் யாருக்கு என்ன பிரயோசனம்?'

'எங்கள் நீதி சாஸ்திரங்கள் குற்றத்துக்கு தண்டனை கொடுப்பதை விட குற்றம் இழைத்தவன் பச்சாதாபப்பட்டு திருத்துவதையே வலியுறுத்துகின்றன. போதிசத்துவர் போதித்ததும், எல்லாளன் கடைப்பிடித்ததுவும் அதுதான்!'

'இந்தத் துன்மார்க்கன் வாட்டசாட்டமாக இருப்பான். வெகு போஜனப் பிரியன் இவனுக்கு நான் இவனுடைய மனைவி கையாலேயே தண்டனை வழங்கிவிட்டேன்.'

'ஐயையோ! புதுவிதமாக இருக்கிறதே! என்ன தண்டனை?

'ஒரு மண்டல காலத்துக்கு இவர் பால், தயிர், மோர், நெய் ஒன்றும் உணவுடன் சேர்த்துக்கொள்ள முடியாது. அதுதான் தண்டனை. அதை நிறைவேற்றும் பொறுப்பையும் அவனுடைய மனைவியிடமே விட்டுவிட்டேன்.

'அது எப்படி முடியும்? இந்த மூர்க்கன் அவளைப்போட்டு வற்புறுத்தி களவாகவோ, பலாத்காரமாகவோ உண்டுவிடுவானே?'

'அதுதான் இல்லை, தேவி. நீ அந்தப் பெண்ணினுடைய முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். பதிவிரதை அவள். அப்படியான ஒரு சாந்தி அவள் முகத்தில் வீசியது உயிர் போனாலும் அவள் இதை மீறமாட்டாள். நிறைவேற்றியே தீருவாள்'.

'கணவன் இதை எப்படி ஏற்றுக்கொண்டான்?'

'அதுவா, அவன் முகம் பேயறைந்தது போல ஆகிவிட்டது. சுண்ணாம்பு காளவாயில் போடுவார்கள் என்று நினைத்து வந்தவன் தீர்ப்பைக் கேட்டதும் நடுநடுங்கிவிட்டான். ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட அவனால் தயிர், நெய், மோர் இன்றி இருக்க முடியாது. ஒரு மண்டலம் தாங்குவானா?

'ஸ்வாமி, இதனால் இம்சைப்பட்ட பசுவின் துக்கம் எப்படித் தீர்ந்துபோகும்?'

'அங்கேதான் இருக்கிறது, கணவனுடைய சாப்பாட்டில் மீதமாகும் பணத்தில் மாட்டுக்கு நல்ல தீவனம் வாங்கிக் கொடுத்து அதன் கஷ்டத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. அது மாத்திரமல்ல, இந்தத் தடியன் இந்த தண்டனையில் ஒரு சுற்று இளைத்துவிடுவான். அடுத்தமுறை இவன் அடிக்கும்போது அடி பலமாக விழாது' என்று சொல்லிவிட்டு மன்னன் நகைத்தான். எட்டத்தில் நின்ற சேடிப்பெண்களும் சிரித்தார்கள்.

ராணியினுடைய முகம் இப்போது மாறிவிட்டது. பௌர்ணமி போன்ற இருந்த முகம் இப்படித் திடீரென்று கறுத்து சிந்தனையில் ஆழ்ந்தது.

'என் இதய ராணியே! என்ன சிந்தனை? என்றான் அரசன்.

'அரசே! மிகப் பிரியமான ஒன்றைத் தவிர்ப்பதுகூட கடுமையான தண்டனைதான் என்று கூறுகிறீர்கள் நியாயம்தான்! அது பிராயச்சித்தம் ஆக முடியுமா?'

'ராணி, குற்றம் செய்த ஒருவனை யானையின் காலில் இடறுவிப்பதும், கழுவில் ஏற்றுவதும், ஆற்று நீரில் போடுவதும் மாத்திரம் என்ன நியாயம் ஆகும்? போதிசத்துவரின் போதனைகளுக்கு எதிரானதல்லவோ? குற்றம் இழைக்கப்பட்டவனுக்கு அதனால் என்ன பரிகாரம்?'

ராணி சிறிது நேரம் பேசாமலிருந்தாள்.

'ஸ்வாமி, உங்களுடைய நீதி பரிபாலனத்தை இந்த உலகமே போற்றுகிறது. கணவனுக்கு துரோகம் இழைத்த பெண்ணுக்கு என்ன தண்டனை?' என்றாள். அவள் குரல் நடுங்கியது. தரை பார்த்த கண்களில் நீர் கோத்து நின்றது.

அப்பொழுது அரசன் அவளுடைய கைகளை எடுத்துக்கொண்டாள். 'பிரியமானவளே! என்னுடைய மனம் இன்று மிகவும் குதூகலத்தில் இருக்கிறது. காரணம் தெரியாமல் சந்தோஷம் பொங்குகிறது. இந்த நேரத்தில் கவலை தரும் எந்த விஷயத்தையும் நான் ஏற்கமாட்டேன். நீ இழைத்தது துரோகம் அல்ல; மிகவும் காருண்மையான செயல். அநியாயமாக சம்பவிக்க இருந்த ஓர் உயிர்ப்பலியை நீ தடுத்திருக்கிறாய் இது எப்படிக் குற்றம் ஆகும்? இதைத் தடுக்காவிட்டால் அல்லவோ நீ கொலைகாரியாக மாறியிருப்பாய்! ஆத்மாவின் குரலைக் கேட்கும் எந்தப் பெண்ணும் செய்யக் கூடிய காரியம்தான் இது. அதற்குதண்டனை என் இதயத்துள் சிறைவாசம்தான்' என்று சொல்லிக்கொண்டு அவளை இறுக அணைத்தான்.

சேடிப் பெண்கள் மெதுவாக அந்த இடத்தைவிட்டு அகன்று போனார்கள்.

'ராணி இருபது வருடங்களாக நீ எனக்கு வெற்றிலை மடித்து தருகிறாய். எங்கள் வாழ்க்கையில் இந்த வெற்றிலையை நான் என்றுமே மறக்கமுடியாது. இன்று நான் உனக்கு தாம்பூலம் மடித்துத் தருவேன்' என்று சொல்லிக் கொண்டே தங்கத்தினால் இழைத்த அந்த வெற்றிலைப் பெட்டியை தன் பக்கம் இழுத்தான்.

ஏதோ பாம்பைக் கண்டு அரண்டது போல 'வேண்டாம்! வேண்டாம்!' என்று தடுத்தாள் ராணி.

'இது என்ன ராணி? இரண்டு வெற்றிலைப் பெட்டி ஒன்று வெள்ளி உனக்கு; மற்றது தங்கம் எனக்கு. ஏன் இந்தப் பாகுபாடு? இப்படிச் சொல்லிக்கொண்டே அரசியினுடைய வெள்ளிப் பெட்டியை மெல்லத் திறந்தான். திறந்தவன் அப்படியே ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டான்.

'ஸ்வாமி, நான் சுண்ணாம்பு போடுவதே இல்லை'.

'என்ன? எத்தனை காலமாக?'

'இருபது வருடங்கள்' என்றாள் ராணி, கீழே பார்த்தபடி.

ஒரு தபஸ்வினியின் ஒளி அவள் கண்களில் வீசியது. கண்களில் நீர் கோத்தபோது அது இன்னும் பிரகாசமாக ஜொலித்தது.

நீதி வழுவாது பரிபாலனம் செய்யும் அரசனுக்கு அந்தக் கணம் எல்லாம் புரிந்தது.

* * *

விசா

இரண்டாவது முறையும் அவருக்கு விசா மறுத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இந்தத் தடவை அவர் எவ்வளவோ கவனமாகத்தான் விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்தார். சுயசரிதை எழுதுவதுபோல நீண்ட பதில்களைக் கொடுத்திருந்தார். இருந்தும் இப்படி நடந்துவிட்டதே!

முதன்முறை அவர் விண்ணப்பம் அனுப்பியபோது மிகவும் யோக்கியமாகத்தான் நடந்துகொண்டார். அப்போதெல்லாம் இப்படியான கெடுபிடிகள் இல்லை. விண்ணப்பத்தை நீட்டியவுடன் அமெரிக்க விசாவை தட்டிலே வைத்து தந்து விடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார்.

ஆனால் நடந்தது வேறு. எதற்காகப் பயணம் என்ற கேள்விக்கு 'வண்ணப்பூச்சிகளைப் பார்க்க' என்று யாராவது எழுதுவார்களா? அங்கேதான் வந்தது வினை. இவருடைய பதிலைப் படித்த அதிகாரிகள் முதலில் திடுக்கிட்டார்கள். பிறகு ஆசை தீர சிரித்துவிட்டு அனுமதி மறுத்துவிட்டார்கள்.

பத்து வருடம் கழித்து இரண்டாவது முறை விண்ணப்பித்தபோது கோணேஸ்வரன் மிகவும் கவனமாக இருந்தார். வண்ணத்துப்பூச்சியின் வாடைகூட வீசாமல் பார்த்துக்கொண்டார். தன்னுடைய மருமகனைப் பார்க்கப் போவதாகவும், உல்லாசப் பயணம் என்றும் கதை விட்டார். கண்ணாடிக் கதவுக்கு இந்தப் பக்கம் இருந்து பயபக்தியுடன் விசா அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார். நெளிய வேண்டிய இடத்தில் நெளிந்து குழைய வேண்டிய இடத்தில் குழைந்தார். கடன் வாங்கி நிரப்பி வங்கிக் கணக்கையும், வீட்டுப் பத்திரத்தையும் காட்டினார். இருந்தும் கல் நெஞ்சுக்காரர்கள், விசா மறுத்துவிட்டார்கள்.

இவருடன் 'பி' வகுப்பில் படிப்பிக்கும் சித்திரசேனனுடைய வேலையாயிருக்கும் என்று சிலர் அபிப்பிராயப் பட்டார்கள். கள்ளப் பெட்டிசன் எழுதுவதில் இவர் சூரர். முகஸ்துதியில் முனைவர் பட்டம் பெற்றவர். குதியங்காலில் நடந்துகொண்டே பல குடிகளைக் கெடுத்தவர். என்ன காரணத்தினாலோ கோணேஸ்வரனைத் தன் பிரதம எதிரியாக நியமனம் செய்து கொண்டிருந்தார். 'அவர் செய்த வேலைதான் இது; மறுபரிசீலனைக்கு எழுதிப்போடுங்கள்' என்று சிலர் வற்புறுத்தினார்கள்.

கோணேஸ்வரன் மறுத்துவிட்டார். அவரோடு பிறந்து, அவரோடு வளர்ந்து, அவரோடு பரீட்சை எழுதிய கோழைத்தனம் அப்போது அவருக்கு கைகொடுத்தது. அதிகாரிகள் இன்னும் என்ன குடைவார்களோ என்ற பயம். பொறுமையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தார்.

கோணேஸ்வரனுக்கு கம்புயூட்டர் என்றொரு சனியன் இருப்பது அப்போது மறந்துவிட்டது. அமெரிக்க தூதரகத்தில் அவருடைய முதல் விசா விண்ணப்பம் கம்புயூட்டரில் சகல வசதிகளுடனும் குடியிருந்தது. அந்த விண்ணப்பத்துடன் அவருடைய இரண்டாவது விண்ணப்பத்தை, சாதக பொருத்தம் பார்ப்பதுபோல் இந்தக் கம்புயூட்டர் ஆராய்ந்தது. பச்சைக் குழந்தைக்கு கூட சமுசயம் ஏற்படும்படி விவகாரத்தை புட்டுபுட்டு வைத்தது. பிறகு என்ன? விசா நிராகரித்துவிட்டார்கள்.

புராணகாலத்து முனிவர் சாபம் கொடுத்ததும் தலை சுக்குநூறாக வெடிக்குமாம். அப்படித்தான் கோணேஸ்வரனுடைய தலை வெடித்தது. இன்னும் எத்தனை வருடங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டுமோ?

ஒரு துணிச்சலுடன் மூன்றாவது தடவையாக முயற்சி செய்தார். இந்த முறை அவர் உண்மையான காரணத்தை மறைக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு அபூர்வமான வண்ணத்துப்பூச்சியை பார்க்க விரும்புவதாகக் கூறினார். தான் வண்ணத்துப்பூச்சிகள் பற்றி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், அமெரிக்க பேராசிரியர் எழுதிய கடிதங்களையும் சமர்ப்பித்தார். அதிகாரிகள் மனம் இளகி விட்டது. இருபது வருட காலமாக ஒருவர் விசா எடுக்க திருப்பித்திருப்பி முயற்சி செய்வதாயிருந்தால் அதில் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்க வேண்டும்? இறுதியில் விசா தருவதாகச் சொல்லி விட்டார்கள்.

கோணேஸ்வரனுக்கு விசா எடுப்பது தொழில் அல்ல. உயர் கணிதம் பாடம் சொல்லித் தருவதுதான் வேலை. பள்ளிக்கூடப் பிள்ளைகள் இவரை 'கொஸ்தீற்றா' கோணேஸ்வரன் என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அந்த வகுப்பில் முப்பது மாணவர்கள் இவரிடம் படித்தார்கள். அத்தனை மாணவரும் கடைந்தெடுத்த மேதாவிகள். இவர் தொண்டை தண்ணி வத்த கத்திக்காண்டிருக்கும் போது அவர்கள் ஒருவித சலனமுமின்றி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் புரிந்ததா, இல்லையா என்பது பரம ரகஸ்யமாகவே காக்கப்பட்டு வந்தது.

அதற்கு முதல் நாள் தான் 'சைன்தீற்றா' என்றால் என்னவென்று ஒரு பாட்டம் பிரசங்க மழை பெய்திருந்தார். மறுநாள் வந்து விளக்கம் கேட்டால் எல்லோருமே ஒரு புது வார்த்தையை கேட்பதுபோல திருதிருவென்று முழிக்கிறார்கள். பிறகு இன்னொரு முறை 'சைன்தீற்றா' பற்றி அழுதுவிட்டு கொஸ்தீற்றாவின் சூட்சுமங்களை விளக்க ஆரம்பித்தார். பாடம் அரைவாசி ஒப்பேறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அதிசயம் அங்கே நிகழ்ந்தது.

திரௌபதி பாரிஜாதமலரை கண்டு மயங்கினாள் அல்லவா? பொன்மயமான மாயமானிடம் சீதை மனதைப் பறிகொடுக்கவில்லையா? அதுபோல ஒரு வண்ணத்துப்பூச்சி அபூர்வமான நிறம். இதற்கு முன்பு கண்டிராத வண்ணம். தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு ஓடும் குழந்தையைப்போல நேராக இவருடைய வகுப்பறைக்கு வந்தது. ஓர் அற்புத நர்த்தனம் செய்துவிட்டு திரும்பவும் ஜன்னல் வழியாகப் பறந்துவிட்டது.

கோணேஸ்வரன் நித்திரையில் நடப்பவரைப்போல மிதந்து கொண்டு ஒரு கையில் சோக்கட்டியும், மற்றக் கையில் துடைப்பனுமாக அப்படியே வெளியே போய்விட்டார். போனவர் அன்று வகுப்புக்கு திரும்பி வரவேயில்லை. மாணவர்களுடைய 'கொஸ்தீற்றா' தீட்சை இப்படித்தான் அரைவாசியில் அஸ்தமனம் ஆனது.

அடுத்த நாள் இந்தச் செய்தி பள்ளிக்கூடம் முற்றிலும் பரவிவிட்டது. தலைமை ஆசிரியர் விளக்கம் கேட்டார். அவரோ கொடுங்கோல் மன்னர். என்ன நடக்குமோ என்று எல்லோரும் பயந்துபோய் இருந்தார்கள். ஆனால் கோணேஸ்வரனோ அந்த வண்ணத்துப்பூச்சியின் அழகை வர்ணித்ததுமல்லாமல் அதைப் பிடிப்பதற்கு இரண்டு நாள் லீயும் கேட்டாராம். அன்றிலிருந்து தலைமை ஆசிரியர் கோணே ணுவரனுடைய முட்டாள்தனத்தை குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திவிட்டார். இப்படித்தான் சாதாரண கோணேஸ்வரன், 'கொஸ்தீற்றா' கோணேஸ்வரன் ஆனது.

கோணேஸ்வரன் இயற்கை உபாசகர். எங்கேயாவது வாழை குலை தள்ளியிருப்பதைக் கண்டால் அப்படியே லயித்துப்போய் நின்றுவிடுவார். இந்தச் சாதுவான வாழை இப்படிப் பெரிய குலையை எப்படித் தந்தது என்று வியப்பார். வானம் மப்பும் மந்தாரமுமாகி ஒரு துளி தெறித்து விழும்போது பரவசமாகிப் போவார். அதிகாலை நேரங்களில் பெயர் தெரியாத மஞ்சள் குருவி தலையை ஒரு பக்கம் சாய்த்து ஒலி எழும்பும்போது அதில் தன்னை இழந்து விடுவார்.

குழந்தையாய் இருந்தபோது அவருடைய அம்மா வண்ணத்துப்பூச்சியை காட்டித்தான் சோறு ஊட்டினாராம். வண்ணத்துப்பூச்சியில் அப்படி ஒரு மோகம். மூன்று வயதான போதே அவற்றுடன் ஓடியாடி விளையாடத் தொடங்கினார். எட்டு வயதிலே வலைகட்டி அவற்றைப் பிடிக்கவும், தோராக்ஸ் பகுதியில் பத்து செகண்ட் அழுத்தி பாடம் செய்யவும் கற்றுக்கொண்டார். இருபது வயது ஆனபோது விஞ்ஞான முறைப்படி ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகளை சேகரித்துவிட்டார்.

கோணேஸ்வரனுக்கு ஊரிலே நல்ல பேர் இருந்தது. பார்ப்பதற்கு கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், வண்ணத்துப்பூச்சிகளின் பின்னால் அலைவதைத் தவிர வேறு ஒரு பாவமும் அறியாதவர். அவரை எப்படியும் மாப்பிள்ளையாக்கி விடவேண்டும் என்று அந்த ஊரில் இரண்டொருவர் மிகவும் பிரயாசைப்பட்டனர்.

யாமினியின் தகப்பனார் கொஞ்சம் வசதி படைத்தவர் தமிழ் பக்தர். அதை நிலைநாட்ட இரவிலே பிறந்த தன் பெண் குழந்தைக்கு யாமினி என்று பெயர் வைத்திருந்தார். படிப்பதைத் தவிர, சமையல், ஆர்மோனியம், தையல் என்று சகல கலைகளிலும் தன் மகளைத் தேற்றியிருந்தார். பெண்ணும் ஒழுங்காக வாரப் பத்திரிகைகளையும், மாத நாவல்களையும் கரைத்துக் குடித்து தன் அறிவை விருத்திசெய்து கல்யாணத்துக்காக கப்புக்காலைப் பிடித்தபடி காத்திருந்தாள்.

கோணேஸ்வரன் உயர் கணிதத்தில் உயர் மதிப்பெண் பெற்றிருந்தாலும், வண்ணத்துப்பூச்சிகளை வகைப்படுத்துவதில் நிபுணராக இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் அரிவரியைக்கூட தாண்டவில்லை என்பதற்கு அவருக்கு நடந்த விவாகச் சடங்கை உதாரணம் சொல்வார்கள்.

இந்தச் சடங்கில் மோதிரம் எடுப்பது என்று ஒன்று தண்­ர்க் குடத்தில் ஐயர் மோதிரத்தைப் போடுவார். இது மணமக்கள் கையைத் தடவிப் பார்ப்பதற்காக பண்டுதொட்டு பெரியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சதியான வழக்கம். அது மூன்று வயதுப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். வண்ணத்துப்பூச்சிகளில் மனதைப் பறிகொடுத்திருந்த கோணேஸ்வரனுக்கு இது தெரியாமல் போய்விட்டது. மணப்பெண் இந்தச்சாக்கில் குடத்துக்குள் அவர் கையைத் தடவுவதுபோல் தடவ இவரோ அவசரப்பட்டு மோதிரத்தை எடுத்து வெளியே நீட்டினாராம். யாமினிக்கு அப்பவே நாடி விழுந்து விட்டது.

கல்யாணமான புதிதில் யாமினிக்கு ஒரே ஆச்சிரியம். இப்படிக்கூட வண்ணத்துப்பூச்சியில் மோகம்கொண்ட ஆண்மகன் இருப்பாரா? வீடு முழுக்க வண்ணத்துப்பூச்சி அட்டைப்பெட்டிகளும், புத்தகங்களும்தான். ஆனாலும் அவள் புத்திசாலிப் பெண். வெகு சீக்கிரத்திலேயே கணவனுடைய அன்பை அடைவது எப்படி என்று ஊகித்துக்கொண்டாள்.

யாமினிக்கு வேகம் அதிகம்; இரவு வேளையில் பிறந்தவள் அல்லவா? அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கோணேஸ்வரன் திகைத்தார். பெற்றோர்களால் ராசிப்பொருத்தம் மாத்திரம் பார்த்து முடிவு செய்யப்பட்ட பல விவாகங்கள் படும்பாடு இங்கேயும் பட்டது.

அன்று முழுக்க கோணேஸ்வரன் ஒரு முடிச்சை அவிழ்க்க பெரும் பாடு பட்டுக்கொண்டிருந்தார். ஒரு அபூர்வமான வண்ணத்துப்பூச்சியை அவர் பிடித்திருந்தார். இதற்கு முன்பு அவர் கண்டிராதது. பல புத்தகங்களைப் புரட்டியும் அதன் பூர்வீகத்தை அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய சிக்கலுக்கு விடை அவர் மனைவியிடமே இருப்பது தெரியாமல் இப்படியாக இரண்டு நாட்கள் அநியாயமாக வீணாக்கிவிட்டார்.

இரவு மணி பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. இவருடைய ஆராய்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை. யாமினியும் தூங்கவில்லை. இவரை எதிர்பார்த்து காத்திருந்தாள். கோணேஸ்வரன் இறுதியில் புத்தகங்களை மூடிவிட்டு படுக்கை அறைக்க திரும்பினார். அங்கே இவருக்காக ஒர் அதிரவைக்கும் காட்சி காத்திருந்தது.

தானாகக் கனிந்த கறுத்தக் கொழும்பான் மாம்பழம்போல யாமினி அன்று ஒரு வித வாசனையுடனும், விரும்பத்தக்காகவும் இருந்தாள். மஞ்சள் வண்ணச்சேலை, நெற்றியிலே அகலமான சிவப்பு பொட்டு வைத்து, மேகம் போல கறுத்த அளக பாரத்தை விரித்துப் போட்டிருந்தாள். இவரைக் கண்டதும் கதகளி ஆடுபவரைப்போல இரு கைகளையும் அகல விரித்தபடி இவரிடம் வந்தாள்.

அந்தக் கணம் இவர் மூளையில் ஒரு சிறு பொறி தட்டியது. மஞ்சள், கரும்சிவப்பு, கறுப்பு வண்ணத்தில் தாய்லாந்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி பற்றி படித்தது ஞாபகத்துக்கு வந்தது. போட்டது போட்டபடி விட்டுவிட்டு புத்தக அலமாரியை நோக்கி பறந்தார்.

அன்று அவர் படுக்கைக்குத் திரும்பியபோது இரவு மூன்று மணி. சிக்கலான ஒரு விடுகதைக்கு விடை கண்டுபிடித்த குழந்தையின் சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது. மஞ்சள் சேலை விரிந்துபோய் அவள் அயர்ந்திருந்தாள். ஆனால் கோணேஸ்வரனுக்கு அன்றுதான் செய்த கொடுமையின் உக்கிரம் கடைசிவரை தெரியவே இல்லை.

கோணேஸ்வரனுக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருந்தாலும் விசா கிடைத்தபோது ஒரு சிறு பிள்ளைபோலத்துள்ளித் குதித்தார். யாமினிக்கு எதற்காகவோ நெஞ்சம் துணுக்குற்றது. வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சிக்காக இந்தியா, ஆப்பிரிக்கா என்றெல்லாம் காசை அநியாயமாக செலவழித்துக் கொண்டு போயிருக்கிறார். ஆனால் இது அமெரிக்கா! கொஞ்ச நஞ்ச தூரமா? அவளுக்கு சம்மதமே இல்லை. ஆனாலும் கணவருடைய மகிழ்ச்சியில் தண்­ரை ஊற்ற மனது வரவில்லை. இத்தனை வருடங்கள் அரும்பாடுபட்டு கிடைத்த விசா அல்லவா?

அமெரிக்கா விசா எடுப்திலும் பார்க்க சிரமமான காரியம் ஒன்றிருந்தது. அது அந்தப் பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்வதுதான். அது குளிர்காலம். குளிர் காலம் முடிவதற்கிடையில் போனால்தான் monarch என்று சொல்லப்படும் அரச வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க முடியும். அந்த வண்ணத்துப்பூச்சிக்காக அல்லவோ இவ்வளவு காலமும் பிரயாசைப்பட்டவர்!

கையுறை, காலுறை என்று எல்லாம் சேகரித்துவிட்டார். ஆனால் மேலங்கிக்கு எங்கே போவது? நண்பர் ஒருவர் சொன்ன யோசனைப்படி ஒரு பழங்காலத்து கனவான் வீட்டுக்கு மேலங்கி யாசிக்க கிளம்பினார். அங்கே அவர் பார்த்த ஓவர்கோட்டை இதற்குமுன் ஆறடி உயரமான ஒரு குஸ்திப் பயில்வான் அணிந்திருக்க வேண்டும். கோணேஸ்வரன் அதை அணிந்து அளவு பார்த்தபோது பூச்சி வாசனை அடித்தது. தொளதொளவென்று இருந்தது; தரையைத் தடவியது. பரவாயில்லை, 'அம்மணத்துக்கு கோமணம் மேல்' என்று துணிந்து அதை ஏற்றுக்கொண்டார்.

கோணேஸ்வரன் எங்கே புறப்பட்டாலும் அவருக்கு முன்சீட்டில் சனியன் வந்து உட்கார்ந்து விடுவது வழக்கம். இங்கே அவர் பறக்கும் பிளேனில் அது பக்கத்து சீட்டில் இருந்தது. அந்த அம்மாள் ஜன்னல் ஓரமாயிருந்த இருக்கையில் தாராளமான உடம்போடு, மிகத்தாராளமாக உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பாரதூரமான மார்புகள் ஜன்னல் காட்சிகளையெல்லாம் முற்றிலும் மறைத்துவிட்டன. தலையிலே வண்ணநிறத் துணியினால் தலைப்பா கட்டியிருந்தாள். அவளுடைய வீட்டுத் தளபாடச் சாமான்கள் எல்லாம் மேலுக்கும், கீழுக்குமாக பரவிக் கிடந்தன. நிரந்தரமாகக் குடி பெயர்ந்து விட்டவள் போல கால்களை நீட்டி, கைகளை அகலித்து கோலோச்சிக் கொண்டிருந்தாள். கோணேஸ்வரன் பக்கத்து இருக்கையில் சுருண்டுபோய் குடங்கிக்கொண்டார்.

பொன்நிறக் கூந்தல் விமானப் பணிப்பெண்கள் மேலுக்கும் கீழுக்குமாக மிதந்துகொண்டிருந்தனர். கோணேஸ்வரனுடைய மனமும் மிதந்து கொண்டிருந்தது. அவர் வாய் இன்னும் சில மணி நேரங்கள் என்று முணுமுணுத்தது.

அவர் வாழ்நாளின் ஆதர்ஸம் வெகுவிரைவில் கைகூடிவிடும். நந்தனார் சிதம்பர தரிசனத்துக்கு தவித்ததுபோல இவரும் எவ்வளவு பாடுபட்டிருப்பார்! தில்லை நடராஜரைத் தரிசிக்கவேண்டும் என்ற பேரவாவில் 'நாளைப்போவேன்', 'நாளைப்போவேன்' என்று சொல்லித்திரிந்து எத்தனை பழிப்புக்கும், ஏளனத்துக்கும் ஆளானார். சிதம்பரம் போக வேண்டும் என்ற உத்வேகம் அல்லவோ அவரை உயிருடன் வைத்திருந்தது!

குடிவரவில் மூன்றாம் வாய்ப்பாட்டை ஒப்படைப்பதுபோல அவர் பிசகில்லாமல் ஒத்திகை பார்த்தபடியே சொல்லிவிட்டார் என்றாலும் வண்ணத்துப்பூச்சியை பார்க்கவந்த இந்தப் பெரியவரை அந்த அதிகாரி கொஞ்சம் அதிசயத்துடன்தான் பார்த்தார். கடைசியில் குடிவரவு அட்டையை அவருடைய கடவுச்சீட்டின் கடைசி ஒற்றையிலே இணைத்து இவரிடமே திருப்பி தந்துவிட்டார்.

இன்னும் ஒரு தத்து இருந்தது. அதுதான் சுங்க அதிகாரி. இந்த சுங்க அதிகாரிகள் உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள் போலும் அந்த அதிகாரியினுடைய முகம் சிரித்து பலவருடங்கள் ஆனதுபோல் தென்பட்டது. இவரிடம் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார்; சூட்கேஸை குடைந்தார். கடைசியில் இவர் Lectureக்காக கொண்டுபோயிருந்த ஒரு சாம்பிள் வண்ணத்துப்பூச்சி அவர் கையில் சிக்கிவிட்டது. இந்த சுங்க அதிகாரி செய்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழுவது? நியூகினியில் இருந்து கிடைத்த ஓர் அரிதான வண்ணத்துப்பூச்சி, 'சொர்க்கம்' என்று பெயர். அபூர்வத்திலும் அபூர்வமானது. முழங்காலில் நின்று மன்றாடிப் பார்த்துவிட்டார். 'நான் ஒரு Lepidoperist. ஒரு demonstrationக்காக கொண்டுவந்தேன்' என்று கெஞ்சினார். அந்த அதிகாரி இடது கையினால் அதை நாக்கிளிப்பூச்சியைத் தூக்குவதுபோல தூக்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டார்! இது என்ன நியாம்? அவருடைய நெஞ்சு பதைபதைத்தது.

இங்கே கணேசனுக்கும் நெஞ்சு பதைபதைத்தது. சான்பிரான்ஸ’ஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்பு முனையில் அவன் காத்திருந்தான். யாமினி இருபது பக்கக் கடிதத்தில் கோணேஸ்வரனுடைய அங்க லாவண்யங்களை விவரித்து எழுதியிருந்தாள். ஆனால் அவர் இப்படி மாறுவேடத்தில் வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மேலங்கியும், தொப்பியும், மப்ளருமாக அவரைக்கண்டு கணேசன் பயந்துவிட்டான். அந்த ஓவர்கோட்டை போட்டுக்கொண்டு நடப்பதற்கு ஒரு தந்திரம் செய்யவேண்டும். அது நாலு சைஸ் மிகை. அதற்குள் ஐந்தாறு அடி வைத்தபின்தான் அதன் எல்லையைக் கடக்கலாம். இப்படி இவர் இந்த ஓவர்கோட்டை அணிந்து அதை ஏமாற்றியவாறு நடந்தும், ஓடியும் வரும் அதிசயத்தை வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன்.

கணேசன் இவரை அடையாளம் கண்டதும் அவருடைய கஷ்டங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. இவருடைய தூரத்து சொந்தம். இவர் 'தம்பி' என்று அழைத்தாலும் கணேசன் இவரை 'அங்கிள்' என்றே கூப்பிட்டான். இருபது மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்து வந்தாலும் கோணேஸ்வரன் அன்றலர்ந்த செம்பருத்திப்பூ போல உற்சாகமாகத்தான் காணப்பட்டார். தன் மனோரதம் விரைவில் ஈடேறப்போகிறதென்ற மகிழ்ச்சியில் அரச வண்ணத்துப் பூச்சிகளின் நினைவாகவே இருந்தார். கணேசனோ விமான நிலையத்தில் காரை நிறுத்திய இடம் மறந்துபோய் அரை மணி நேரமாக அதைத் தேடிக்கொண்டிருந்தான்.

'தம்பி, இந்த அரச வண்ணத்துப்பூச்சிகள் 3000 கி.மீட்டர் அலாஸ்காவில் இருந்து பறந்து கலிபோர்னியாவுக்கு குளிர்கால ஆரம்பத்தில் வந்துவிடும். மில்க்வீட் மரங்களின் இலையை சாப்பிட்டு, சுகித்து குளிர்காலத்தை கழித்துவிட்டு வசந்த ஆரம்பத்தில் திரும்பவும் 3000 கி.மீட்டர் பறந்து அலாஸ்கா போய்விடும். அங்கே முட்டையிட்டு, பொரித்து மறுபடியும் இலையுதில் காலத்தின் முடிவில் தன் குடும்பத்துடன் கலிபோர்னியாவுக்கு திரும்ப வந்துவிடும். என்ன அதிசயம்! அதே வனத்தில், அதே மரத்தில்,அதே கிளைக்கு வந்துவிடும். நம்ப முடிகிறதா? இங்கே நாங்கள் சற்றுமுன் காரை எங்கே பார்க் பண்ணினோம் என்பதையே மறந்துவிட்டு தேடுகிறோம்!'

கணேசன் இந்த அதிசய மனிதரைப் பார்த்தான். பத்தாயிரம் மைல் கடந்து ஒரு வண்ணத்துப்பூச்சியைக் காணவந்தவரல்லவா? இவரை கிறுக்கு என்பதா, மேதை என்பதா!

அடுத்த நாள் அவர்கள் புறப்பட்டார்கள். சான்பிரான்சிஸ்கோவிலிருந்து அறுபது மைல் தூரம் தெற்கே போகவேண்டும். 'இயற்கைப் பாலம்' என்று அழைக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகள் வனம் அது. வரையும் கையுமாக அவர் திரிந்து சேகரித்த அத்தனை வண்ணத்துப்பூச்சிகளும் இந்த ஒரு வண்ணத்துப்பூச்சியின் முன்பு தங்கள் மவுசை இழந்துவிடும். இதுவரை ஆறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளை அவர் சேகரித்திருப்பார். இவையெல்லாவற்றுக்கும் அரசனல்லவோ இந்த monarch வண்ணத்துப்பூச்சி.

அண்ணாந்து பார்த்தபோது முதலில் அவருக்க ஒன்றும் தெரியவில்லை. பிறகுதான் கவனித்தார். அந்த மரங்கள் முழுவதும் வண்ணத்துப்பூச்சிகள் வியாபித்துக் கிடந்தன. மரத்தின் இலைகளே தெரியவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல அந்த வனத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்களிலும் அவை படர்ந்திருந்தன. சிவப்பும், கருமையும் கலந்த பெரிய வடிவமான அரச வண்ணத்துப்பூச்சிகள். ஒரு லட்சம் அல்ல; ஒரு கோடியாகக்கூட இருக்கலாம். ஒரே இடத்தில் ஒரு கோடி வண்ணத்துப்பூச்சிகளைக் காண்பதென்பது நினைத்துக்கூடப் பார்க்கக்கூடிய காரியமா? இதுவல்லவோ அவைகளின் புண்ணிய þக்ஷத்திரம்!

கோணேஸ்வரனுக்கு உடல் சிலிர்த்தது. எவ்வளவுதான் தயாராக வந்திருந்தாலும் அவரால் இவ்வளவு இன்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்படியே ஒரு பரவசநிலை வந்துவிட்டது. கண்களில் நீர் அரும்பத் தொடங்கியது. சற்றும் சலிக்காமல், கழுத்தை வளைத்து அண்ணாந்து அவற்றின் அழகை அள்ளிப் பருகியபடியே இருந்தார்.

'தம்பி, தம்பி' என்று கொண்டே கணேசனின் கைகளைப் பிடித்துக்கொண்டார். கணேசன் மெதுவாக அவரை அழைத்துப்போய் அங்கேயிருந்த மரத்திலான இருக்கை ஒன்றில் அமர்த்தினான். இப்பொழுது இரண்டொரு வெள்ளைக்காரர்கள் இவர்களை அதிசயத்தோடு கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். கணேசனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

கோணேஸ்வரனுக்கு இப்போது மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. 'தம்பி! இது ஒரு புண்ணிய பூமி. இதில் காலணியுடன் நிற்கக்கூட எனக்கு கூசுகிறது. பத்தாயிரம் மைல் தூரம் நான் பறந்து வந்தது இந்த வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க அல்லவோஸ என்ன அழகு! இதற்காக எத்தனை கஷ்டப்பட்டேன்; எவ்வளவு அவமானம்; எவ்வளவு சிறுமைகள். இந்த கண்கொள்ளாத காட்சியைப் பார்ப்பதற்கு நான் இன்னொரு பிறவி எடுப்பதற்கும் தயார்' என்றபடி மெதுவாக விம்மத் தொடங்கினார்.

'அங்கிள், கொஞ்சம் இருங்கோ. நான் ஒரு கோக் வாங்கி வாறன்' என்றுவிட்டு கணேசன் புறப்பட்டான். அவன் உண்மையில் போன காரணம் அவர் பக்கத்தில் நிற்க அவனுக்கு என்னவோ மாதிரி இருந்ததுது‘ன்.

'இந்த விசாவுக்கு என்ன பாடு படுத்திவிட்டார்கள். எவ்வளவு கேள்விகள்? எத்தனை அலைச்சல்கள்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வைத்தார்கள்? இந்த வண்ணத்துப் பூச்சிகள் அலாஸ்காவில் இருந்து புறப்பட்டு மெக்ஸ’கோ வரை பறக்கின்றனவே! இவைக்கெல்லாம் விசா யார் கேட்கிறார்கள்? இவைக்குள்ள சுதந்திரம் கூட இந்த மனிதனுக்கு கிடையாதா? வாஸ்கொட காமாவுக்கும், கொலம்பஸ”க்கும் யார் விசா கொடுத்தார்கள்? அவர் உலகை விரித்தது இப்படி நாட்டுக்கு நாடு இரும்பு வலை போடுவதற்கா? இயற்சை அளித்த இந்த மகா அற்புதத்தைப் பார்ப்பதற்கு விசா கேட்பது எவ்வளவு அநியாயம்? இமயமலையும், சகாரா பாலைவனமும், நயகாரா வீழ்ச்சியும், அமேசன் காடுகளும் உலகத்து சொத்தல்லவா? இந்தப் புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்க விசா கேட்பது எவ்வளவு கொடுமை?

இவர் அண்ணாந்து அந்த வண்ணத்துப்பூச்சிகளின் வண்ண மாயங்களில் ஆழ்ந்துபோய் இருந்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

உச்சியில் இருந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று இவரை நோக்கி செங்குத்தாக கீழே இறங்கியது. படபடவென்று தன் சிறிய 'இறகுகளை அடித்து வந்து அவருடைய இடது கண் நுதலில் மெள்ளத் தொட்டுவிட்டு மீண்டும் பறந்துபோய் மறைந்தது.

கோணேஸ்வரனுடைய உடம்பு புல்லரித்தது. 'ஆஹா! என்ன ஒரு ஸ்பரிசம் என்னைத்தேடி வந்து முத்தம் கொடுத்து விட்டுப் போகிறதே! ஐயோ! யாருக்கும் தலை வணங்காத அரச வண்ணத்துப்பூச்சியல்லவா! என்னைத்தேடி வந்ததா? என்று நினைந்து நினைந்து உருகினார்.

இந்தப் பரவசத்தில், அந்தக் குளிரிலும், அவர் உள்ளாடைகள் எல்லாம் ஈரமாகி உடம்போடு ஒட்டிக்கொண்டன. இப்படி அவர் மகிழ்ச்சியிலும், வேர்வையிலும் நனைந்து போய் இருக்கும்போது கணேசன் தூரத்தில் குளிர்பானத்துடன் வந்து கொண்டிருந்தான்

இவர் ஒரு மிடறு பானம் அருந்திவிட்டு சொன்னார். 'தம்பி, 180 நாடுகளுக்கும் போக விசா வேண்டும். ஆனால் ஒரு இடத்துக்கு மட்டும் விசா தேவையில்லை. அது என்ன தெரியுமா?

கணேசன் பதில் கூறாமல் அவரையே பார்த்தான். அவர் கைகளை மேலே தூக்கிக் காட்டினார். பின்பு சொன்னார். அங்கே போவதற்கு மட்டும் விசா தேவையில்லை; அதுவரையில் பெரிய ஆறுதல்.'

கையெழுத்து மறையும் நேரமாகிவிட்டது. ஆனால் நேரம் நாலு மணிதான். இந்தக் குளிர் காலங்களில் சூரியன்கூட அவசரப்படுவான். கோணேஸ்வரன் யோகத்தில் இருந்து சிறிது கலைந்தார்.

'அங்கிள், போவமா? இவ்வளவு தூரம் இதைப் பார்க்க வந்திருக்கிறீங்கள். ஆனால் உங்கள் collection க்கு ஒரு butterfly ம் பிடிக்காமல் போறீங்களே!'

கோணேஸ்வரன் சிறிது ஆழ்ந்த யோசனையில் இருந்தார். 'தம்பி, உலகத்திலேயுள்ள விதவிதமான வண்ணத்துப்பூச்சிகளை எல்லாம் நான் சேகரித்து விட்டேன். அவையெல்லாவற்றுக்கும் இதுதான் அரசன். எப்படி நான் இதைப் பிடிப்பேன். கோயிலிலே வந்து இந்தக் காரியத்தை செய்ய முடியுமா? இது பெரிய அபசாரமல்லவோ! என்னுடைய சேகரிப்பு இதைப் பிடிக்காமல் விடுவதனால்தான் பூர்த்தியடையும்' என்றவாறு தள்ளாடியபடியே எழுந்தார்.

அவருக்கு அந்த இடத்தைவிட்டு நகர விருப்பமேயில்லை. கணேசன் அவர் கைகளைப் பிடித்து வந்து மெல்ல காரிலே ஏற்றினான். காரில் ஏறும்போது அவருக்கு பழையபடி நந்தனாரின் சரித்திரம் கண்முன்னே தோன்றியது. அவ்வளவு கஷ்டங்களுக்கிடையிலும் பிடிவாதமாக நடந்துவந்து தில்லை நடராஜரைத் தரிசித்த நந்தனாரின் உணர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். அந்தக் கணத்தில் அவர் தேகம் இன்னொரு முறை கட்டுமீறி நடுங்கியது.

நடுப்பகலில் மின்னலடிப்பதுபோல அவர் நினைவில் அவருடைய தமிழ் பண்டிதர் வந்தார். ஒளியால் இறப்பது விட்டில். ஓசையால் இறப்பது அசுணப் பறவை. சுவையால் இறப்பது மீன்; நாற்றத்தால் வண்டு. ஸ்பரிசத்தால் இறப்பது? ஸ்பரிசம், ஸ்பரிசம்? எவ்வளவோ ஞாபகப்படுத்திப் பார்த்தார், அவருக்கு மறந்துபோய்விட்டது.

கார் இப்போது வேகமாக அந்த நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தது. வயிறு முட்ட பால் குடித்த கண் திறக்காத நாய்க்குட்டி போல பரிபூரண நிம்மதியோடு இவர் அயர்ந்துபோய் கிடந்தார். தொளதொளவென்ற ஓவர்கோட்டைச் சுற்றி காருடைய சீட் பெல்ட் அவரை இறுக்கிக் கட்டிப் போட்டிருந்தது. மானம்பூ திருவிழாவில் வெட்டப்பட்ட வாழைமரம் போல கைகால்களை விசிறி அலங்கோலமாகக் கிடந்தார்.

கணேசனுக்கு என்னவோ போல இருந்தது. அந்தக் காருக்குள்ளே பெரிய மௌனம் ஒன்று அவன் நெஞ்சிலே ஏறி உட்கார்ந்து அமுக்கியது. அந்த மௌனத்தை கீறிக்கொண்டு அவன் பேசியபோது வார்த்தைகள் அரைவாசி காற்றிலே கரைந்துவிட்டன.

'அங்கிள், நாளைக்கு lecture இருக்கு, slides எல்லாம தயாராக வைத்திருக்கிறீங்களா?' அவரிடம் பதில் இல்லை.

'அங்கிள்! அங்கிள்!'

மௌனம்.

விசா இல்லாத ஓர் உலகத்துக்கு அவர் போய்விட்டது தெரியாமல் கணேசன் திருப்பித் திருப்பி அவரை அழைத்துக் கொண்டிருந்தான்.

* * *

ஒட்டகம்

சோமாலியாப் பெண்கள் அப்படித்தான். உலகத்தை பிரட்டிப் போட்டாலும் மாறமாட்டார்கள். அவசரமில்லாத நடை. ஒரு காலை ஊன்றி, மறு காலை நிதானமாக வைத்து நடப்பார்கள்.

மைமுனும் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தாள். கபில நிறம். நீள்வட்ட முகம். உயர்ந்த கழுத்து. ஓட்டகம்போல நடை உரசி உரசி வந்துகொண்டிருந்தாள்.

அவள் மொட்டாக்கு இட்டிருந்தாள். அந்தத் துணி தலையை முற்றிலும் மறைத்து மார்பு வழியாக வந்து முதுகிலே சென்று மறைந்தது. அவள் தலை மயிரைப் பற்றி அறியும் ஆவலையும் அது தூண்டிவிட்டது.

அவள் முதுகிலே வெறுமையான தண்­ர் குடம் ஒன்று தொங்கியது. காட்டுப் புல்லினாலும் நாரினாலும் இறுக்கிப் பின்னிச் செய்தது. பள்ளிப் பிள்ளைகளைப் போல அவள் அதை முதுகிலே கட்டிக்கொண்டிருந்தாள். அது முதுகோடு ஒட்டிக்கொண்டு அவளுக்கு வழித்துணையாக வந்து கொண்டிருந்தது.

அவள் எட்டு மைல் தூரம் போய் தண்­ர் பிடித்து வரவேண்டும். போக வர பதினாறு மைல்கள். ஏதோ மேய்ச்சலுக்குப் போவதுபோல நித்திய நியமமாக அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள். இன்று அவள் வேண்டுமென்றே கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாள். அவள் சிநேகிதிகள் முன்போ போய்விட்டார்கள்.

வழிநெடுக அகாஸ’யா முள் மரங்கள். ஆள் உயர கத்தாளைகள்; உயரமற்ற புதர் மரங்கள். பயந்த சுபாவம் கொண்ட பற்றைகள். மைமுன் தன் பாதையை அந்த வழியில்லாத காட்டில் இலகுவாகக் கண்டுபிடித்து நடந்து கொண்டிருந்தாள்.

வழக்கம்போல் அதிகாலையில் ஹைனாவின் கூவல் அவளை எழுப்பிவிட்டது.

களிமண்ணினாலும், மெல்லிய மரத்தடிகளினாலும் கட்டிய வீடு அது. புல்லினால் வேய்ந்த கூரை. குளிரைத்தடுக்கும் வல்லமை இல்லாதது. அந்த காலைக் குளிரில் ஒட்டகத்தின் ரோமத்தில் செய்த சௌகரியக் குறைவான பாயில் கண்களை விழிக்காமல் சுருண்டு படுப்பதற்கு அவளுக்கு மிகுந்த ஆசையாக இருக்கும்.

ஆனால் ஹைனா முதலாவது எதிரி என்றால் அவளுடைய தாயார் இரண்டாபது எதிரி. மைமுன் எழும்பும்வரை அவள் தாயார் காயம் பட்ட விலங்குபோல கத்தியபடியே இருப்பாள். இந்த காலை நேரத்து சுகத்தை தினமும் இப்படி கெடுப்பது மைமுனுக்கு மகா கொடூரமாகப் பட்டது. தண்­ருக்காக இந்த அலைச்சல் படவேண்டி இருந்தது. அவள் தாயாருக்குகூட அவள் படும் இம்சை புரியவில்லை. இதில் மைமுனுக்கு நிறைய வருத்தம்.

அவள் தகப்பனர் நூர் அந்த ஊர் குடித்தலைவர், நபதூன். அவரிடம் ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள் என்று எல்லாம் இருந்தன. பொதி சுமப்பதற்கு கழுதைகள் கூட நிறைய இருந்தன. பலபலவென்று விடியுமுன்பாகவே அவையெல்லாம் மேய்ச்சலுக்குப் போய்விடும். ஒரு கழுதையை அனுப்பி தண்­ர் பானைகளை நிரப்பி வந்தால் அவளுக்கு வேலை மிச்சம். அப்படித்தான் சால்மா வீட்டில் செய்கிறார்கள். கழுதைகளை அனுப்பி வைக்கும்படி அவள் தாயார் அடிக்கடி கேட்டுக் கொள்வாள். ஆனால் மைமுனின் தகப்பனார் மிகக் கவனமாக அதை மறந்து விடுவார்.

அவருக்கு இரண்டு மனைவிகள் அவருடைய மேச்சல் வட்டம் ஐம்பது மைல் தூரம் இருக்கும். அந்த எல்லைக்கு மந்தை மேய்ச்சலுக்கு போகும்போது அவர் அங்கேயே இரண்டாவது மன€வியோடு தங்கிவிடுவார். இப்படி வருடத்துக்கு இரண்டு மாதங்களாவது காணாமல் போய்விடுவார்.

மதியம் இரண்டும் மணி ஆகிவிட்டதென்றால் நூர் அகாஸ’யா மரத்தை தேடி வந்துவிடுவார். அங்கே அவருடைய கூட்டாளிகள் காத்திருப்பார்கள். ச்சாட் என்று சொல்லப்படும் போதை இலையை கொடுப்பிலே எல்லோரும் இடுக்கிக் கொள்வார்கள். அந்தச் சாறு தொண்டையிலே இறங்க இறங்க அவர்கள் மேலே மேலே போய் மிதப்பார்கள்.

இந்த நேரத்தில் சோமாலியாவில் எல்ல ஆண்களும் அப்படித்தான் இருப்பார்கள். பின் மதியத்தில் தொடங்கி இரவு படுக்கப்போகும் வரைக்கும் இது தொடரும். உள் சுவாசம், வெளி சுவாசம் என்று விட்டபடி கைகால்களைப் பரப்பி அவர்கள் இந்த போதை சாம்ராஜ்யத்தில் தங்களை மறந்து சஞ்சரிப்பார்கள்.

ஐ.நா.சிறகம் இப்படித்தான் ஒரு சாயங்கால வேளையில் அவர்களிடம் வந்தது. நூரும் ஊர் மூப்பர்களும் அப்போது ச்சாட் போதையில் இருந்தார்கள். ஐ.நா. ஊழியர்கள் ஒவ்வொரு கிராமமாக வந்து அவர்கள் தேவைகளை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ஆழ்கிணறு தோண்டித் தரும்படி வேண்டினர். சிலர் வாய்க்கால் கேட்டனர். சிலர் பம்புசெட் என்றார்கள். இவர்களுடைய முறை வந்தது. பெண்கள் ஆழ்கிணறு வேண்டுமென்று கெஞ்சினர். ஆனால் ஊர்ப்பெரியவர்கள் கூடி மசூதி ஒன்று கட்டித் தரும்படி கேட்டார்கள். அவ்வளவு பணவசதி இந்தக் கிராமத்து கக ஒதுக்கப்படவில்லை. 'நீ மசூதியை கட்டித்தா, மீதியை அல்லா பார்த்துக்கொள்வார்' என்று ஊர் மக்கள் சார்பாக நூர் அடித்துச் சொல்லிவிட்டார். வாழ்க்கையில் அவர் செய்த மிகச் சிறந்த பிழை இதுதான்.

அந்த ஊழியர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இவர்கள் சொல்வதை ஏற்பார்கள் என்று நினைத்தார். அவர்கள் என்றால் பக்கத்து கிராமத்துக்கு போய்விட்டார்கள். அங்கே தூர்ந்து கிடந்த கிணற்றை பழுதுபார்த்து இன்னும் ஆழமாக்கினார்கள். வருடம் முழுவதும் நீர் சுரக்கிறது. தினம் தினம் எட்டு மைல் தூரம் அவள் தண்­ருக்காக அங்கேதான் போகிறாள்.

சூரியன் மேலே மேலே வந்துகொண்டிருந்தான். மைமுன் தனக்குத் தெரிந்த ஒரு குறுக்குப் பாதையில் இறங்கினார்கள். அங்கே பார்த்த இடமெல்லாம் ச்சாட் பயிரிட்டிருந்தார்கள். வேப்பம் செடிகள் போல அவை கூர்மையாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருந்தன. ஆடுகள் மேயாமலிருக்க முள்வேலி போட்டிருந்தார்கள். ஆடுகள் மேய்ந்தால் அவைவேறு போதையில் துள்ளித் திரிந்து கலகம் விளைவிக்கும்.

வழியிலே ஒட்டகம் ஒன்று முன்னம் கால்கள் இரண்டையும் மடித்து, தொழுகையில் இருப்பதுபோல படுத்திருந்தது உணவும், உடையும், உறைவிடமும் தருவது. அதனுடைய கழுத்து ஆடாமல் அசையாமல் மிதந்துகொண்டு நின்றது. அண்ணாந்து பார்த்தாள். நதி நகர்வதுபோல கண்ணுக்குத் தெரியாமல் ஒரு உருண்டை அதனுடைய கழுத்தில் மேலே ஏறிக்கொண்டிருந்தது. பெண் ஒட்டகம். இடது செவியின் நுனி வெட்டப்பட்டு இருந்தது. அதற்கு முன் நின்று மரியாதை செய்ய வேண்டும் போல தோன்றியது. அப்படியே நின்று செய்தாள்.

அந்த மரத்தை கடக்கும்போது அவளுடைய இதயம் கொஞ்சம் வேகமாக அடித்துக்கொள்ளும். அது ஒரு குர்ராமரம். பெரிய நிழல் தரும் மரம். ஒட்டகத்தின் தடித்த உதடுகளக்கு எட்டாத உயரத்தில் அது படர்ந்திருந்தது. கனகாலமாக இந்த இடத்தில் ஒரு தாயின் எலும்புக் கூடும், ஒரு குழந்தையின் எலும்புக்கூடும் கிடந்தன. தாயின் எலும்புக்கூட்டை இப்பொழுதெல்லாம் காணவில்லை. பிள்ளையின் எலும்புக்கூடு மாத்திரம் எஞ்சிக் கிடந்தது.

இந்த எலும்புக் கூடுகளின் கதை ஊரில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. நாலு வருடத்திற்கு முன்பு மழை இல்லை; பயங்கரமான வறட்சி. தண்­ர் நிலைகள் எல்லாம் வற்றிவிட்டன. இந்தத் தாயும் கைக்குழந்தையும் குடிக்கத் தண்­ர் தேடி அலைந்தார்கள். பத்து மைலுக்கப்பால் ஒரு ஆழ் கிணறு இருந்தது. அதிலே தண்­ர் கிடைக்கலாம் என்று அவ்வளவு தூரம் நடந்து வந்தார்கள். அங்கே வந்து பார்த்தால் அதிலேயும் தண்­ர் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வந்த வழியே திரும்பினார்கள். மேலிட்டு இந்த குர்ரா மரத்தின் நிழலில் தங்கினார்கள்.

யார் முதலில் இறந்தது என்று தெரியவில்லை. முதலில் குழந்தை போயிருக்கலாம். அழுது அழுது தாய் பிறகு உயிரைவிட்டிருப்பாள். ஒருவேளை தாய் முதலில் இறந்து பிறகு பிள்ளை செத்திருக்கலாம். அந்தக் குழந்தை தாயைப் பிடித்து இழுத்து, இழுத்து அழுது களைத்துப்போய் இறந்திருக்கலாம்.

மைமுன் கிட்டவந்து அந்தக் குழந்தையின் எலும்புக் கூட்டைப் பார்த்தாள். பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என்று தெரியவில்லை. உள்ளங்கையில் அடங்கும் அந்தச் சிறிய மண்டை ஓட்டில் ஒரு சிறிய துணி ஒட்டிக்கொண்டு இருந்தது. அது பூப்போட்ட துணிபோல தெரிந்தது. அது பெண்குழந்தையாக இருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டாள்.

இப்ப சில நாட்களாக அவளுக்கு தனிமை தேவைப்பட்டது. அதுதான் அமீனாவை முன்னாலே போகவிட்டு இவள் பின்னாலே வந்துகொண்டிருந்தாள். தனிமையில் சிந்திப்பதற்கு அவளிடம் நிறைய சங்கதிகள் இருந்தன. இந்த யோசனையில் பெரும் இடத்தை அலிசாலா பிடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகம் அவளுக்கு அடிக்கடி தோன்றியது. பதினைந்து வயதுப் பிராயத்தவளுக்கு இது புதுமையாக இருந்தது.

மைமுன் என்றால் வசப்படுத்தியவள் என்று அர்த்தம். இப்படி அவள் தன் எதிர்காலத்தை வசப்படுத்தும் எண்ணத்தில் தனிமையில் நடந்து கொண்டிருந்தாள். அதேநேரத்தில் மைமுனின் தகப்பனார் அவளுடைய த€லைவிதியை நிர்ணயிக்கும் ஒரு காரியத்தில் இறங்கியிருநதார். அது அவளுக்கு தெரியாது.

பளபளவென்று மின்னும் நாள் அது. தூரத்திலே ஒரு ஒட்டகக் கூட்டம். அவன் வந்து கொண்டிருந்தான். வெள்ளையாக ஈமாத் துணியில் ஒரு தலைப்பா. கையிலே ஒட்டகக்குச்சி. ஒட்டகக் கயிற்றை முன் எடுத்து தோள்பட்டையில் மாட்டிக் கொண்டிருந்தான். ஒட்டகத்துக்கு முன்பு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். ஒட்டகத்தின் நீண்ட கழுத்தும் அந்தத் தலையும் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சி மிகவும் அழகாக இருந்தது.

சோமாலியாவில் மனிதர்களைப் பார்க்கிலும் ஒட்டக எண்ணிக்கை அதிகம். பொதி சுமப்பதற்குதான் ஒட்டகம். அதன் பின்னே செல்வார்கள்; அல்லது முன்னே போவார்கள். பயணம் செய்வது என்பது கிடையாது. அலிசாலாவும் அப்படித்தான் அதன் முன்னே மிக்க மரியாதையுடன் நடந்து வந்துகொண்டிருந்தான்.

அவனுடைய முகம் தெரிந்தது. தயக்கமான கண்கள்; இன்னும் தயக்கமான தாடியும், மீசையும் முளைப்பதா, வேண்டாமா என்ற தயக்கம். எதையோ சொல்ல விரும்புவது போன்ற முகம். ஒல்லியாக இருந்தாள். அவன் அருகில் வந்ததும் இவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இருதயம் ஓர் அலகு வேகம் கூடியது.

அது விவகாரமான ஒட்டகம். அவர்கள் சம்பாஷனையில் குறுக்கிடாமல் நின்றது. ஒரு நூறு வருடங்கள் அப்படியே நிற்கப்போவது போன்ற ஆயத்தங்களுடன் கால்களை அகட்டி வைத்து கழுத்தை உயர்த்தி நின்றது.

'அஸ்ஸலாம் அலைக்கும்.'

'அலைக்கும் ஸலாம்.'

'சமாதானம் உண்டாகட்டும்'

'சமாதானம் உண்டாகட்டும்.'

'நான் உன்னைப் பார்க்கிறேன்'

'நான் உன்னைப் பார்க்கிறேன்'

'புதினங்கள் உண்டா?'

'புதினங்கள் அநேகம்'

'இன்று தாமதமாக வந்துவிட்டாயே!'

'அதற்கு நான் என்ன செய்ய; சூரியன் தாமதமாக அல்லவோ இன்று எழுந்திருந்தான், கவனிக்கவில்லையா?'

'உண்மைதான், சூரியனும் சோம்பலாகிக்கொண்டு வருகிறான் உன்னைப்போல'

நான் ஒன்றும் சோம்பலில்லை பார், எவ்வளவு தூரம் போய் வருகிறேன். ஒரு ஹான் தண்­ர் சுமக்கிறேன். உன்னைப்போல ஒட்டகத்துக்கு முன்னே கைவீசிக்கொண்டு நடக்கிறேனா?'

முகம் பார்த்து பதில் சொன்னாள். வலது கையை இடது இடுப்பில் வைத்து ஒரு காலில் சரிந்து நின்றாள். மற்றக்கை மொட்டாக்கு துணியை நளினமாக பிடித்தபடி இருந்தது.

அப்பொழுது அவள் மந்தையில் எதையோ பார்த்து அருண்டாள். அவள் கண்களில் ஒரு புதுவிதமான இரக்கம் தெரிந்தது.

'மறுபடியும் அந்த ஒட்டகக் குட்டியை கட்டிப்போட்டு விட்டாயே!'

அந்த மந்தையிலே ஒரு சின்ன ஒட்டகம். அடிக்கடி மந்தையை விட்டு ஓடிவிடும். அதன் முன்னங்கால்களை இணைத்து இடைவெளி விட்டு ஒரு கட்டு. அந்தக்குட்டி கால்களை தடக் தடக் என்று சிரமத்துடன் எடுத்து வைத்து மந்தையுடன் சேர்ந்து கொண்டிருந்தது.

'நான் என்ன செய்ய. அது பொல்லாத குட்டி எப்பவும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு எனக்கு நேரம் போதாது. இன்னொரு ஆள் தேவை நீ வந்துவிடு.'

'அதைப் பிறகு பார்க்கலாம். இப்ப அவிழ்த்து விடு.'

அவள் குரல் சிணுங்கலாகவும் இருந்தது; அதிகாரமாகவும் இருந்தது. அலிசாலாவின் மனது இளகிவிட்டது. உனக்காக செய்கிறேன் என்று சைகையால் காட்டியபடி அதன் கால்களை அவிழ்த்து விட்டான். அந்தக் குட்டி கால்களை உதறி துள்ளி தன் சந்தோஷத்தைக் காட்டிக்கொண்டது.

அவள் அறியாச் சிறுமியாய் இருந்த காலத்தில் ஒட்டகக் கூட்டத்தோடு திரிவாள். பொதி ஏற்றும்போது அவர்கள் பாடுவார்கள். ஒவ்வொரு பொதிக்கும் ஒவ்வொரு பாட்டு. ஒட்டகத்தை ஏமாற்றும் பாட்டு சிறுமிகளின் பாட்டு.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
இந்த விறகுகட்டை மாத்திரம் சுமந்து வருவாயா
உனக்கு நிறைய புல்லுக்கட்டு தருவேன்.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
என் படுக்கைகளை மாத்திரம் சுமந்து வருவாயா
உனக்கு முதுக தேய்த்து விடுவேன்.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
என் ராசகுமாரனை மாத்திரம் சுமந்த வருவாயா
உனக்கு கட்டி முத்தம் கொடுப்பேன்.

இந்தக் காட்சி வரிகள் அவளாகவே சேர்த்துக் கொண்டது. அடிக்கடி அவள் இந்தப் பாடலை பாடுவாள். தனிமையில் இருக்கம்போது கடைசி வரிகளை உரத்து சொல்லுவாள். அது அவள் காதுகளுக்கு கேட்க இனிமையாக இருக்கும்.

அலிசாலா வேறு பிரிவைச் சேர்ந்தவன். அவன் வந்து பெண் கேட்டால் அவள் தகப்பனார் நிச்சயமாக சம்மதிப்பார். வேறு பிரிவில் பெண் எடுப்பது அவர்கள் வழக்கம். அந்த இனம் பகமையை விடுத்து சிநேகமாகிவிடும் என்ற நம்பிக்கை. இவனுடைய பெயர் வீட்டிலே அடிக்கடி பேசப்படுகிறது. இவர்கள் 'பறவை தின்னிகள்' என்ற ஒரு குறை மாத்திரம் இருந்தது. இருபது ஒட்டகங்கள் சீர்கொண்டு அலிசாலா வருவதில் சிரமம் இருக்காது என்று எதிர்பார்த்தார்கள்.

கிணற்றடியில் ஒரே பெண்கள் கூட்டம். பச்சைப் பசேல் என்று மரங்கள். பார்ப்பதற்கு கவனப் பூங்கா போன்று குளுமையாக இருந்தது. கிணற்று கட்டிலே அமீனா சாய்ந்தபடி காணப்பட்டாள். தொடையிலே ஒரு கை தொட்டுக்கொண்டு இருந்தது. மற்றக்காலை ஒய்யாரமாக விசிறியபடி இருந்தாள்.

மைமுன் முக்காட்டை எடுத்து விட்டாள். அவளுடைய சிகை வசீகரத் தண்மையுடன் இருந்தது. கைகளை விட்டு அவற்றைக் கலைத்து காற்றை வெளியே விட்டாள். தண்­ரை முகத்தில் அடித்து ஆசை தீர பருகிக்கொண்டாள். அவள் கண்கள் பிரகாசமாகின.

இரு சிநேகிதிகளும் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். ஒன்றுமே பேசவில்லை. தண்­ர் குடத்தை எடுத்து முதுகிலே மாட்டுவதற்கு மட்டும் அமீனா உதவி செய்தாள். இருவரும் புறப்பட்டார்கள். குடத்திலிருந்து தண்­ர் கொஞ்சமும் கசிவது போல மைமுனுக்கு பட்டது. அடுத்த நாள் மறக்காமல் பானைக்கு அலஸ” மரத்து பிசின் தடவவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

வறுமையில் வாடிய இரண்டு தங்க நரிகள் நிலத்தை மணந்தபடி அவர்களைத் தாண்டி ஓடின. ஒரு மஞ்சள் குருவி 'உய்க், உய்க்' என்று சத்தம் செய்தது. மைமுனுக்கு திடீரென்று சிறுநீர் கழிப்பதற்கு பேரவா பிறந்தது. நெளிந்தபடி அமீனாவை ஒரு அரைக்கண் பார்வை பார்த்தாள். அவளும் மைமுனின் உடல் மொழியை புரிந்துகொண்டு தலையை அசைத்தாள்.

தண்­ர் பானையை மெதுவாக இறக்கி வைத்தார்கள். இரண்டு கற்களை எடுத்து உரசி சத்தம் செய்தபடியே பற்றை மறைவில் ஒதுங்கினார்கள். மைமுன் காலை அகட்டி குந்திய சிறிது நேரத்திலே ஒருவித உற்சாகத்துடன் நீர் பிரிந்தது. பாம்பு சீறுவது போன்ற சத்தத்துடன் அது நிலத்தை அடைந்தது. மைமுனுக்கு பெரும் சுமை ஒன்று இறங்கிய சுகம். அந்த நேரத்தில் அலிசாலாவின் நிச்சயமற்ற கண்கள் நினைவுக்கு வந்தன அவனைத் தீவிரமாக காதலிக்கலாமா என்ற எண்ணம் அவளுக்கு மறுபடியும் தோன்றி மறைந்தது.

'உன்னுடைய ஆள் அங்கே சுற்றிக்கொண்டு இருந்தானே', இப்படிச் சொல்லி அமீனா அவர்களுக்கிடையே இறுகிப் போன காற்றை மெல்ல உடைத்தாள். பிறகு சிநேகிதிகள் இருவரும் கலகலவென்று பேசத்தொடங்கினார்கள். அவர்கள் அந்நியோன்யம் தானாகவே பற்றிக்கொண்டது. அமீனா அவளுடைய வழக்கமான புலம்பலைத் தொடங்கினாள்.

'இவனை நம்பி இராதே. இவன் உனக்கு மஹர் கொண்டு வரப்போவதில்லை. வேறு ஆளைப் பார். இவன் பெண்கேட்டு வரும்போது உனக்கு நாற்பது வயது தாண்டி விடும். அதற்குப் பிறகு உனக்கு எப்படி பிள்ளை பிறக்கப் போகிறது.'

'பிள்ளை கிடக்கட்டும். ஒரு நாளைப்போல் ஒட்டகம் செய்யாத வேலையெல்லாம் செய்கிறேன். என்னைப்போய் சோம்பல் என்று சொல்கிறானே.

மைமுனுடைய தாயார் இருபது வருடங்களில் பதினொரு பிள்ளைகளை பெற்றவள். ஒட்டகங்களில் கூட பத்து பத்து குட்டிகள் ஈன்றதும் அவற்றின் இடது காது நுனியை அடையாளமாக வெட்டி விடுவார்கள். அந்த ஒட்டகம் அதற்குப் பிறகு இளைப்பாற அனுமதிக்கப்படும். அந்தச் சலுகை கூட பெண்களுக்கு இல்லை. அவர்கள் சாகுமட்டும் பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.

மைமுன் உதடுகளை விரிக்காமல் கறுப்பு புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

** இதன் தொடர்ச்சி vadakku6.mtfல் வருகிறது.





உனக்கத் தெரியுமா? என்னை அவ்வளவு சுலபத்தில் அடிமைப்படுத்த முடியாது', இப்படிச் செ






** vadakku5.mtfன் தொடர்ச்சி**

'அமீனா, என் இனிய சிநேகிதியே! நான் என்ன செய்யப்போகிறேன் என்று உனக்கத் தெரியுமா? என்னை அவ்வளவு சுலபத்தில் அடிமைப்படுத்த முடியாது', இப்படிச் சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்து அமீனாவின் காதுகளில் ஏதோ ரகஸ்யம் சொன்னாள். இருவரும் ஒரு சதியாலோசனையை முடித்த திருப்தியோடு விழுந்து விழுந்து சிரித்தார்கள். கண்ணில் நீர் பொங்க சிரித்தார்கள். தண்­ர் குடம் குலுங்கச் சிரித்தார்கள். வீடு வரும்வரை இப்படிச் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.

வீட்டிலே இன்னும் நிறைய வேலைகள். தண்­ர் குடத்தை இறக்கி வைத்தாள். அவளுடைய தாயார் வழக்கம் போல சந்தைக்கு போய்விட்டாள். காட்டிலே போய் விறகு பொறுக்கி இரவுச் சமையல் செய்யவேண்டும். பிறகு மீதமிருக்கும் ஒட்டகப் பாலை சந்தைக்கு எடுத்துப்போகவேண்டும்.

இரவுச் சமையலை விரைவாக முடித்தாள். பாலிலே உதிர்ந்த சோளத்தைப் போட்டு காய்ச்சினாள். நம்பிக்கை ஊட்டும் நறுமணத்துடன் அது பொங்கியது.

சுரைக்குடுவையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். ஒட்டகம் அவளுக்காக பொறுமையுடன் நின்று கொண்டிருந்தது. இடது காலில் நின்று வலது காலை மடித்து முழங்காலில் ஊன்றிக்கொண்டாள். உறுதியான வடிவம் கொண்ட வலது தொடைக்கும் மெலிந்த வயிற்றுக்கும் இடையில் குடுவையை வைத்தாள். அது அங்கே கச்சிதமாகப் பொருந்தி நின்றது. பாலைக் கறக்கத் தொடங்கினாள். சரி கணக்காக அது குடுவையை போய் ஒரு வித கதகதப்புடன் நிறைத்தது. முழங்கையை நக்கியபடி குடுவையை எடுத்துக் கொண்டு சந்தைக்கு விரைந்தாள்.

ஊரடங்கி நிசப்தமானபோது அவள் படுக்கச் சென்றாள். அடுத்தநாள் அதிகாலையை நினைக்கும்போது அவளுக்கு பயமாக இருந்தது. இந்த ஹைனாவும் அவளுடைய அம்மாவும் அவளுக்கு விரோதம் செய்கிறார்கள். விடியுமுன்பாகவே அவளை எழுப்பிவிடுவார்கள். ஆசை தீர நித்திரை கொள்ளும் சுகம் எப்படி இருக்கும் என்று அவளுக்கு தெரியாது. அந்த அதிகாலை நித்திரைக்காக அவள் எதுவும் செய்யத் தயாராயிருந்தாள். இந்த சிந்தனைகளுக்கிடையில் அவள் இமைகள் ஒன்றையொன்று தீண்டின.

அடுத்த நாள் அவளுடைய விடியற்கால அவலங்கள் ஒரு முடிவுக்கு வந்தன.

ஹைனாவின் தொந்திரவு இல்லை. அம்மாவும் மௌனமாகி விட்டாள். தூரத்தில் மேய்ப்பர்களின் மேய்ச்சல் ஓசைகள் மாத்திரம் கேட்டன. இவ்வளவு அழகான விடியலை அவள் கண்டதில்லை.

பக்கத்து ஊரில் இருந்து பெருங்கூட்டம் ஒன்று வந்திருந்தது. பலபலவென்று விடியும்போதே வந்துவிட்டது. நூரும் ஊர்ப் பெரியவர்களும் கிராமத்து எல்லையிலே நின்று அவர்களை வரவேற்றார்கள். அவர்கள் வழக்கப்படி வேரோடு பிடுங்கிய சோளப் பயிர்களை கைகளிலே தூக்கி அசைத்து அசைத்து அவர்களை அழைத்துக்கொண்டு வந்தார்கள். ஒரு சைன்யம் திரண்டு வருவதுபோல அது இருந்தது.

மைமுனைப் பெண்கேட்டு வந்திருந்தது. அந்தக் கூட்டம் ஒருநாள் பயணத் தொலைவில் இருந்து வந்திருந்தார்கள். அந்த ஊர் நபதூன் அவர். ஐம்பது வயதுக்காரர். மூன்றாம் தாரமான மைமுனை மணக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார். ஐம்பது ஒட்டகங்களை சீர் கொடுப்பதாக பேசிக் கொண்டார்கள். ஊர் முழுக்க இந்த அதிசயத்தை பார்க்க திரண்டு வந்திருந்தது.

மைமுனின் தாயார் தட்டையாக மறுத்துவிட்டாள். இவ்வளவு தூரத்தில் மகளைக் கட்டிக்கொடுத்தால் பின்பு அவளைப் பார்ப்பது என்பது நடக்காத காரியம். அலிசாலா பெண்கேட்டு வருவான் என்று எதிர்பார்த்தாள். மைமுன் அவனிலே எத்தனை ஆசை வைத்திருந்தாள் என்பது அவளுக்கு தெரியும்.

நூர் அப்போது ச்சாட் போதையில் இல்லை. இறையச்சம் உடையவர். ஆதலால் மறு வாசிப்பில் ஐம்பது ஒட்டகங்களுக்காக மகளை விற்பதா என்று தயங்கினார். தாயும் தகப்பனுமாக மகளிடம் வந்தார்கள். சிக்கல் இல்லாத சொற்களை தெரிவு செய்து அவளிடம் யோசனை கேட்டார்கள். எப்பவும் மைமுனிடம் அதிசயிக்க வைக்கும் சில நிமிடங்கள் கைவசம் இருக்கும். அவள் தயங்காமல் சம்மதம் தெரிவித்துவிட்டாள். பிடிவாதமாகக் கூட இருந்தாள். அவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

நிக்காஸ் முடிந்த கையோடு மைமுன் தன் கணவன் வீட்டுக்க புறப்பாட்டாள். அவர்கள் கொண்டு வந்திருந்த ஒட்டகங்களும், கழுதைகளும் பயணத்திற்கு தயாராக இருந்தன.

அந்தச் சமயம் பார்த்து அவளுடைய பிராண சிநேகிதி அமீனா வந்து சேர்ந்தாள். அவள் காதுகளில் மைமுன் ரகஸ்யம் பேசிவிட்டு வீடு வந்து சேரும் வரை சிரித்தது ஞாபகத்துக்கு வந்தது. 'இவள் உண்மையாக அல்லவோ சொல்லியிருக்கிறாள்., பாவி' என்று அமீனா நினைத்துக் கொண்டாள்.

'நான் ஒரு ஐம்பது வயதுக் கிழவனை மணக்கப் போகிறேன். அவனுக்கு மூன்றாவது மனைவியாக அவன் ச்சாட் சாப்பிடுபவனாக இருக்கவேண்டும். அந்த மயக்கத்தில் அவன் என்னை அதிகம் அணுகமாட்டான். மிஞ்சிப் போனால் இரண்டு குழந்தைகளுடன் தப்பி விடுவேன்.' இப்படிச் சொல்லிவிட்டு அவள் ஓவென்று சிரித்தாள். பரிகாசம் என்றுதான் முதலில் அமீனா நினைத்திருந்தாள். அப்படியில்லை. இவள் உண்மையாகத்தான் கூறியிருக்கிறாள்.

அமீனாவுக்கு சொல்லாத இன்னொரு காரணமும் இருந்தது. அதுவும் சீக்கிரத்திலேயே அவளுக்கு தெரியவரும்.

புறப்படும் சமயம். திடீரென்று மைமுன் அழத் தொடங்கினாள். காரணம் தெரியவில்லை. 'ஹுயா, 'ஹுயா' என்று அழைத்து தாயாரைக் கட்டிக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்.

'அடி, பாவிப்பெண்ணே! எதற்காக இப்படி அழுகிறாய். சொல்லித் தொலை. உன் விருப்பப்படித்தானே ஒது முழு நாள் பிரயாண தூரத்தில் இருக்கும் இந்தச் சின்ன ஊரில் உன்னக் கட்டிக்கொடுக்கச் சம்மதித்தோம். நீ இங்கே ராசாத்தி மாதிரி இருந்திருக்கலாமே! பாதகத்தி, இப்ப போய் அழுகிறாயே!'

மைமுனால் அப்பவும் அழுகையை அடக்க முடியவில்லை. மாலை மாலையாகக் கண்­ர் வழிந்தது. விம்மியபடியே சொன்னாள்.

'உண்மையான காரணத்தைச் சொல்லட்டுமா, ஹூயா'.

'கூறுகெட்டவளே, சொல்லடி, இப்பிடி குயை கெடுத்துவிட்டாயே!'

'ஹுயா, அந்த ஊரில் தண்­ர் கொட்டி கொட்டி வருமாம். வருடம் முழுக்க வற்றாதாம். தினம் தினம் பதினாறு மைல் தூரம் நடக்கத் தேவையில்லை.'

இதைச் சொல்லிவிட்டு மைமுன் தன் தாயின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். பார்த்துவிட்டு இன்னொருமுறை அழத்தொடங்கினாள்.

(இந்தக் காட்சி இங்கே முடிந்துவிட்டது)

* * *

மைமுனின் தகப்பனாருக்கு முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் தேற்றிக்கொண்டார். ஒரு நாள் பயணம்தானே, மகளை அடிக்கடி பார்க்கலம் என்று நினைத்தார். ஆனால் அப்போது அவருக்கு தெரியவில்லை. அதுதான் அவளைப் பார்ப்பது கடைசித் தடவை என்று.

விரைவில் அவரது மனைவி இறந்துபோவாள். ச்சாட் போதையில் உடல்நிலை கெட்டு மனம் குலைந்து எஞ்சியிருக்கம் நாட்களை அவர் மற்றவர்கள் தயவில் கழிக்க நேரிடும். அந்த நேரங்களில் எல்லாம் அவர் மைமுனின் சிந்தனையாகவே இருப்பார்.

ஒருவரும் பார்க்கவில்லை என்ற அந்தரங்கமான சமயத்தில் அவள் அகாஸ’யா மரத்தின் கீழ் கல்லிலே குந்தியிருந்தது ஞாபகத்துக்கு வரும். ஓர் உடைந்துபோன கண்ணாடித் துண்டில் முகத்தைப் பார்த்து தலையை வாரியதையும், அவளாகவே இட்டுக்கட்டிய குழந்தைகள் பாட்டை அவள் குரல் மெல்லியதாக முணுமுணுத்ததும் நினைவுக்கு வரும்.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
என் ராசகுமாரனை மாத்திரம் சுமந்து வருவாயா
உனககு கட்டி முத்தம் கொடுப்பேன்.

அலிசாலாவில் அவள் எவ்வளவு காதல் வைத்திருந்திருப்பாள். அவ்வளவையும் ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விட்டாளே. அதிகாலையில் தண்­ருக்கு போய் வருவதை அவள் எவ்வளவு தூரம் வெறுத்திருக்க வேண்டும்.

ஒருவேளை ஐ.நா. சிறகம் கேட்டபோது கிணறு வேண்டும் என்று கூறியிருந்தால் மைமுன் அலிசாலாவை மணமுடித்து அவருடைய ஊரிலேயே தங்கி இருந்திருக்கக் கூடும் வெகுகாலத்திற்கு பிறகு அவர் மனதில் இந்தச் சிந்தனைகள் எல்லாம் திருப்பி திருப்பி ஓடும்.

ஆனால் அப்போது அவருக்கு அது தெரியவில்லை.

- முற்றும் -