கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நாளை  
 

இ.தியாகலிங்கம்

 

நாளை

இ.தியாகலிங்கம்

---------------------------------------------

என்
கண்களை திறந்து
ஒளி பெய்து
ஞானவழியைக்
காட்டிய
ஆசான்
அமரர்
சி.துரைராசா அவர்களுக்கு
என் இந்த
நாவல்
படைப்பு

------------------------------------------------

பதிப்புரை

'நாளை', தமிழ் நாவல் வரலாற்றில் புதிய தடம் பதிக்க விழைகின்றது. தமிழ் மொழியில் மட்டுமல்ல, இந்த நாவல் நொஸ்க் மொழியிலும், ஆங்கிலத்திலும் வெளிவருதல் வேண்டும் என்கிற அக்கறையுடன் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களுடைய இலக்கிய ஊழியம் இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைதல் இன்றியமையாதது. புகலிட மொழிகளிலே, வெளிவரும் தமிழர்களுடைய இலக்கியங்களால் எல்லைகள் விரிவடையும் என மித்ர நம்புகின்றது. அத்துடன், புகலிட இலக்கியங்கள் மூலமொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்டு வருவதினால், தமிழின் இலக்கியச் சுவை அகலிக்கும் எனவும் நம்புகின்றோம். இத்துறைகளிலே நாம் ஊன்றியுள்ள அக்கறைகளை வெளிப்படுத்தியும் நூல்கள் வெளிவந்துள்ளன.

ஆங்கிலத்தை இலக்கியப் பரிவர்த்தனைக்கான மொழியாகப் பயன்படுத்தி ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் தம்பிமுத்து, கதைஞர் அழகு சுப்பிரமணியம், கலைஞர் மக்கின்டையர் போன்றோர் குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சாதித்துள்ளார்கள். பிரஞ்சு போன்ற மொழிகளிலும் தமது இலக்கியப் படைப்புகளை வெளியிடும் பக்குவம் முகிழ்ந்து வருகின்றது. தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் மத்தியிலே புதிய ஆழமான பார்வைகளை இணைக்க இவை பெரிதும் உதவும்.

இத்தகைய புதிய போக்குகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, மித்ர தனது நூல் பிரசுர ஊழியத்தினை வகுத்தமைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை அறிக்கை இடுவது பெருமையாகவும் இருக்கின்றது. இதன் முழுமையான வெற்றிக்கு புலம் பெயர்ந்த நாடுகளிலே வாழும் இலக்கிய உபாசகர்களுடைய ஒத்துழைப்பும், அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் இலக்கிய குழுக்களுடைய உயிர்ப்பான ஆதரவும் தேவை.

இந்த நாவல் கையாளும் கதை தமிழுக்குப் புதிது. இது இலக்கியச் சுவைஞர்களுடன் பங்கிட முனையும் சங்கதிகளும் புதிது. புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும் விடுமுறைகளிலே வரும் நம்மவர்கள் உண்மைகளைப் பேசத் தயங்குகிறார்கள். மேல்குலகில் வளமான வாழ்க்கையைப் பெற்று விட்டதான கனவுகளைக் கலைக்க விரும்பாத நாகரிகத்தினைப் பயிலுகின்றார்கள். புகலிட நாடுகளிலே உருவாகிவரும் புதிய நெருக்கடிகள் பற்றி மனந்திறந்து பேசுவதைத் தவிர்க்கின்றார்கள். பண வசதிகளிலே மிதப்பான போக்குகளைக் காட்டுவதிலே மகிழ்கிறார்கள். இவை மாயைகள்; தோற்றங்கள். அவர்கள் அநுபவிக்கும் இன்னல்களும் இழப்புகளும் ஆழமானவை. அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிக்கலானவை. இவற்றிலே புதிய தலைமுறை ஒன்றின் எதிர்காலமே பின்னப்பட்டிருப்பதினால், முக்கியமானவை.

ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் புறவயமான நெருக்கடிகள் அரசியல் சார்ந்தும் அமைந்துள்ளன. கட்சி அரசியல் ஆரவாரமானது. இங்கு பிரஸ்தாபமாவது அதுவல்ல. நாடுகளிலே கடைப்பிடிக்கப்படும் அரசியல் போக்குகளும், மக்கள் தொகுதிகள் கடைப்பிடிக்கும் சமூகவியல் விழுமியங்களும் மனித நேயத்தின் சீராட்டுதலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. சமூக அக்கறையுள்ள தீவிர இலக்கியவாதி ஒருவன் இவற்றை கட்சி விசுவாசங்களுடன் குழப்பிக் கொள்ளுதல் முறையன்று. நோர்வே-இலங்கை-இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று 'நாளை'விமர்சனச் செய்வதினால், தமிழ் இலக்கியப் போக்கிலே துணிச்சலான பார்வையை முன்வைக்கின்றது. பௌத்தம்-காந்தியம்-கிறிஸ்துவம் ஆகியன போதிக்கும் அன்பும்-அறநெறியும் இன்றைய மனிதர்களாலே நிராகரிக்கப்பட்டு விட்டனவா? இந்த நாவலிலே இவை பற்றிய தேடலும் உண்டு. சோகங்கள் கண்டு அழுகுணியாக மாறாமல் நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் இ.தியாகலிங்கம் நடாத்தும் தேடல் நயமாகவுள்ளது.

மித்ர வெளியீடு, இலக்கியப் புதிதுகளைப் பிரசித்தம் செல்வதற்கும் களம் அமைத்துத் தரும் என்பதை மீள வலியுறுத்த விரும்புகின்றோம். புலம்பெயர்ந்த இலக்கிய வாதிகளுக்கும் தமிழ் நாட்டின் இலக்கியவாதிகளுக்குமிடையில் நல்லுறவுப் பாலம் அமைக்கும் நமது பணிகளுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் என்றும் நாடுகின்றோம்.

டாக்டர் பொன். அநுர

1/23. Munro Street
Eastwood 2122
Australia

---------------------------------------------------------------

முன்னுரை

இது புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் கதை. இன்றளவும் தகவல் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்படும், தமிழ் மக்களின் அறியப்படாத துயரம். பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாப் பண்பாட்டைத் தமிழ் மக்கள் வரித்துக் கொண்ட அவலத்தைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் ஒரு முயற்சி.

இதன் படைப்பாளி திரு. இ.தியாகலிங்கத்தின் முகமறியேன். அருமை நண்பர் எஸ்.பொ. 'நாளை'யின் படியைத் தந்து இதற்பொரு முன்னுரை வேண்டுமென்று கேட்டார். எஸ்.பொ.விடமிருந்து வருவதால், கதையின் தரம் குறித்து ஐயுறாமல் படித்தேன். இ.தியாகலிங்கம் என்னை ஏமாற்றவில்லை.

எனக்கு முகங்காட்டாத தியாகலிங்கம் அகதிகளின் முகத்தைக் காட்டுகிறார். தமிழகத்தில் முகாம்களில் முகங்களைக் கண்டதுண்டு. அவர்கள் அகதிகளாக முகாம்களில் வாழ நேர்ந்தது குறித்துத் துன்புற்றதும் உண்டு. பல சமயங்களில் தமிழகத்தின் சிறைக் கொட்டடிகளைக் காட்டிலும் கூடுதலான சித்திரவதைகள் ஏதிலியர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை அறிந்ததுண்டு. எனினும், நாகரிகமடைந்த மேலைச் சமுதாயத்தில் தமிழீழ அகதிகளுக்குக் குறைநேராது என்று அமைதி கொண்டதும் உண்டு. இந்த நம்பிக்கை எவ்வளவு பலவீனமானது என்பதை இ.தியாகலிங்கம் சொல்லாமல் சொல்கிறார்.

'நாளை' தேவகுருவின் கதையைச் சொல்கிறது. தேவகுரு தம் குடும்பத்தாருடன் புகலிடம் தேடிய இடம் நார்வே.

விளையாட்டுக் களத்திலேகூட மனிதர்கள் உடல் ரீதியான துன்புறுத்தல்களை அநுபவிக்கலாகாது என்கிற நன்னோக்கிலே குத்துச் சண்டை விளையாட்டினையே சட்டவிரோதமாக்கிப் புகழ் பூத்தது இந்த மண், என்று தேவகுரு பாராட்டிச் சொல்லும் மனித நேயமண். இருந்தும் அங்கும் அவர் இனவெறிக் கொடுமைகளைச் சந்திக்கிறார். அங்கும் நவநாஜிகள், வெள்ளைத் தோல் பெருமிதர்கள், தமிழர்களை வெறுக்கிறார்கள். கறுப்புப் பன்றிகள் என்று தூற்றுகிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு, தேவகுருவின் குடும்பமே இலக்காகிறது. காந்தியவாதியான தேவகுரு, அகிம்சையில் உறுதி கொண்டு, அந்த நவநாஜிகளை அன்பினால் திருத்த முயல்கிறார். அவருடைய மனைவியின் மீதான துன்புறுத்தலில் தொடங்கி அவருடைய மகள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவது வரை வன்முறை வளர்கிறது. இறுதி மட்டுக்கும் அகிம்சை நெறியில் நிற்கும் தேவகுரு, அந்த நொஸ்க் (நார்வேமொழி) இன வெறியர்களுக்கு, தன் அகிம்சை நெறியின் உறுதியை விளக்கி, தன் பக்கத்து நியாயத்தை உணர்த்துவதோடு நிறைவுபெறுகிறது.

தேவகுரு யார்? இவரும் தியாகலிங்கத்தைப் போல எனக்கு முகமறியாதவரா? எனில் தேவகுரு உண்மை தானே...? இதில் நிகழும் வாழ்க்கை முறை, ஒரு கதைக்காகப் புனையப்பட்ட கற்பனையா? அல்லது கற்பனையே நாளை உண்மை நிகழ்வாகிவிடுமா? தேவகுருவும், இந்தக் கதையும் கற்பனை என்று ஒதுக்குவது எளிதானது. ஆனால் நியாயமானது அல்ல. ஜெர்மனியில் மூன்று தமிழர்கள் எரிக்கப்பட்டதை இக் கதையின் போக்கில் தியாகலிங்கம் சுட்டுகிறார். இலேசாக நான் அதிர்ந்தேன், மாலதி எரிக்கப்பட்டபோது, நான் கூடுதாலாக அதிர்ந்தேன்.

ஏனெனில் இந்திய அரசியலில் அத்தகையதொரு வெறியாட்டம் அண்மையில்தான் நடந்தேறியது. தொழுநோயாளிகளுக்குத் தொண்டு புரிய வந்த ஆஸ்திரேலிய நாட்டுக் கிறித்துவப் பாதிரியும் அவர்தம் பிள்ளைகள் இருவரும் இந்துத்துவ வெறியர்களால் கொல்லப்பட்ட நேரம், அந்தப் பாதிரியின் மனைவியாருக்கு, கொலை செய்தவர்கள் மீது சினமில்லை; இரக்கமுண்டு, என்று தமது பேரன்பை உலகுக்குப் புலப்படுத்தினார். தம் மகளின் கொலைக்குக் காரணமாக இருந்தவர்களோடு தேவகுரு நிகழ்த்தும் சொல்லாடல் அந்தப் பாதிரியின் மனைவி கூறிய கூற்றைத்தான் எனக்கு உணர்த்துகிறது.

வேலையிலிருந்து திரும்பும் பொழுது என்னை மறித்து அடித்துத் துன்புறுத்தித் தெருவிலே வீசினார்கள். நான் ஏற்றுக்கொண்டேன். போலிஸ’லே சொல்லாது ஏற்றுக்கொண்டேன். உங்கள் கருத்தினை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு நிச்சயமாகப் பூரண உரிமை உண்டு. ஆனாலும் அதனைச் சொல்லக் கையாண்ட முறை தவறானது என நான் எண்ணுகிறேன். என்னால், நான் வாழ்வதினால் எந்த மனிதனும் துன்பம் அடையக்கூடாது. நான் துன்பப் படுவதினால் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அந்தத் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். நான் கிறிஸ்தவனல்லன். ஆனால் யேசுநாதரின் வாழ்க்கையிலிருந்தும் ஊழியத்திலிருந்தும் இந்த மேலான போதனைகளைக் கற்றுக் கொண்டேன். (ப.187)

இனவெறியர்களுக்கும் - மதவெறியர்களுக்கும் தோலில் தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும், சிந்தனை ஒரே கோட்டில்தான் செல்கிறது. அவர்கள் வெறுக்கிறார்கள். உலகின் பல இனமக்களை வெறுக்கிறார்கள். நாளடைவில் இந்த இனவெறுப்பு, ஒட்டுமொத்த மனித வெறுப்பாக மாறும். தங்கள் அகந்தையை நிலைநிறுத்திக் கொள்ளத் தம் இனமக்களையே குற்றவாளிகளாக்கவும் காவு கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். இட்லர், முஸோலினி இப்படிப்பட்டவர்கள்தாம்.

நார்வேயில் வசிக்க நேர்ந்த தேவகுருவுக்கு இப்படி நடந்துவிட்டது என்று அமைதி கொள்ள முடியவில்லை. அந்தத் தமிழன் நியாயமற்ற காரணங்களுக்காகத்தான் தாயகத்தைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டான். அவன் நியாயமற்ற காரணத்துக்காக என் தமிழ் நாட்டு மண்ணில் மறுக்கப்பட்டான். நியாயமற்ற காரணத்துக்காகவே அவன் கண்முன் அவன் மகள் எரிந்து செத்தாள். இதில் நானும் என் தமிழ் மக்களும் பொறுப்பேற்காது ஒதுக்குவது கோழைத்தனம். தமிழகத்தின் நிலைபற்றிச் சரியாகவே மதிப்பீடு செய்கிறார்.

"ஆனால் இந்தியா? தமிழ்நாடு? ஒவ்வொரு ஈழத் தமிழனையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். ஆதாரங்கள் எதுவுமின்றி 'புலி ஆதரவாளன்' என்று சீல் குத்தி வதைக்கிறார்கள். புலி எதிர்ப்பே பத்திரிகா தர்மமாகியுள்ளது. அது அரசாங்க ஊழியர் பலருக்கு நினைத்தவுடன் பால் கறக்கும் காமதேனுவாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு நாற்காலிகளைத் தக்க வைக்கும் அரசியற் சாணக்கியமாகியுள்ளது. 'வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு' என்று வீரவசனம் பேசிய மண், அகதிகளுக்கு நரகலோகம் அமைக்கும் மாயாபஜாராகியுள்ளது. ஒரு காலத்திலே தமிழ்நாட்டு மண்ணின் விருந்தோம்பலைச் சுகித்தவன் நான். ஆனால், இன்று என் சுய கௌரவங்கள் அனைத்தையும் சரணாகதியாக்கி, தன்மான உணர்வுகள் அனைத்தையும் சோரம்போக்கி, பாராமுகம் காட்டும் அந்நிய மண்ணிலே தினம்தினம் அவமதிப்புகளைச் சந்தித்துவாழ நான் தயாராக இல்லை."

வடதுருவத்தை ஒட்டி வாழ நேர்ந்த ஒரு தமிழனின் உள்ளப்பொருமல் இது. நொஸ்க்குகளின் அவமதிப்புகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளான போதும், சொந்த இனம் காட்டிய புறக்கணிப்பால் நொந்துபோன மனத்தின் குமுறல்கள் இவை. 'ஏழு ஆண்டுகளுக்கு மேலும் ஒரு மரணத்தைக் கொண்டாடும்' ஆதிக்க அரசியல்வாதிகளால், ஓர் இனத்துக்கு இழைக்கப்படும் கொடுமையை அம்பலப்படுத்துகிறார். மகாத்மா காந்தியின் படுகொலையில்கூட மறுதரப்பு. 'நியாயங்கள்' பேசப்படுகின்றன. ராஜ“வ் காந்தி படுகொலைக்குப்பின் உள்ள மறுபக்கத்தின் சரியான நியாயங்கள், ஆதிக்க அரசியலின் வன்முறையால் புதைகுழிக்கு அனுப்பப்படுகின்றன. தமிழ் மனச்சாட்சி ஒரு பொய்மையான கொலை உறுத்தலால் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. இது விழித்து விடக்கூடாது என்பதில் இங்குள்ள எல்லாத் தகவல் தொடர்புச் சாதனங்களும் 'துக்ளக்'தனம் புரிகின்றன. இக்கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிமன்றம், தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு விசாரணை நடத்தியது. தீர்ப்பு நியாயத்தை முன் வைக்கவில்லை. தேசிய இனங்களின் உரிமை கோருவோர்மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாதமாகத் தன்னைக் காட்டிக் கொண்டது. இந்த அரசு பயங்கரவாதமும் நீதி மன்றப் பயங்கரவாதமும் சேர்ந்து நடத்திய தாக்குதலைப் 'பார்ப்பனியம்'மனம் மொழி மெய்களால் வரவேற்றுக்கூத்தாடியது. இதற்குப் பின்னரும் தமிழ் உணர்வு பேசும் கட்சிகள் மௌனம் காக்கின்றன.

ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலையைப் பேசும் இப்புதினம், கடந்த காலத்தில் இத்தமிழர்களின் ஒரு பிரிவினரான வெள்ளாளச் சாதிகள் நடத்திய சாதி வெறியையும் கண்டிக்கத் தவறவில்லை. ஈழப் போராளிக் குழுக்கள் இந்திய அரசின் செல்லப் பிள்ளைகளாகிச் சிரழிந்ததையும் அம்பலப்படுத்துகின்றது. அனைத்துக்கும் மேலாக, ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் ஒருவர், அகிம்சையில் நம்பிக்கை கொண்ட காந்தியவாதியாகவும் இருக்கிறார். தேவகுருவின் பாத்திரப்படைப்பால் நேர்ந்து விட்ட முரண்பாடு என்று இதைக் கொள்ளவியலாது.

அகிம்சையின் அனைத்து முறையீடுகளும் தீர்ந்து போனபின் ஆயுதம் தரிக்க நேர்ந்த அவலத்தை தேவகுரு உணர்ந்திருக்கிறார். எனினும், தாயகத்தில் தோற்றுவிட்ட அகிம்சை, புகலிடத்திலாவது வெல்லும் என்ற நம்பிக்கையில், தனக்கு நேர்ந்த அவமதிப்புகளை எல்லாம் சகித்துக் கொண்டு தமது உறுதியில் நிற்கிறார். அந்த வன்முறை நொஸ்குகள், தேவகுருவின் மனித நியாயத்தை உணர்வார்களா? லேனா என்ற பெண் மனத்தில் விழுந்த நியாயத்தின் சிறுபொறி, இனவெறியில் இருண்ட அந்த நெஞ்சுக் கூட்டுக்குள் ஒளியேற்றுமா? தெரியவில்லை.

அந்த நம்பிக்கை வெற்றி பெறுமானால், அது சிங்களப் பேரினவாதிகளின் வெறித்தனத்திலும் மனித நேயம் சார்ந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆசிரியரின் நம்பிக்கைகள் முடிவறியாப் பெருவெளியை அளவிட முயல்வது போல் தோன்றலாம். எனினும், இந்தப் புதினம், தமிழகத் தமிழர்களின் புறக்கணிப்பு மனப்பான்மையைக் கேள்விக்குட்படுத்தும் என்று நம்புகிறேன்.

இதில் வரும் சொற்பொழிவுகளில் ஒருவகையான கட்டுரைத்தன்மை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். விவரங்களைத் தொகுத்துச் சொல்லும்பொழுது இக்கட்டுரைத் தன்மை, இக்கதைக்குத் தவிர்க்க இயலாதது. அத்துடன், இக்கதை, ஒர் இன ஆவணத்தின் கலைப்பிரதிபலிப்பு. உலகிலேயே மிகமிக அதிகமாகப் பாதிக்கப்பட்டும், இந்தியக் குறுக்கீடு காரணமாக, உலக நாடுகளின் புறக்கணிப்புக்கும் ஆளான இனத்தின் கதை. இதில் விவரங்களும், விவாதங்களும் ஒதுக்க ஒண்ணாதவை.

இந்தப் புதினம், தகவல் தொடர்புச் சாதனங்களின் இரும்புத் திரையை ஊடறுத்துத் தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டும். தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், ஈழவிடுதலைப் போருக்குச் செய்யவேண்டிய பங்களிப்பை உணர்தல் வேண்டும். இதுபோன்ற புதினங்களின் தொடர்ச்சி, நிலவும் தேக்கத்தை உடைத்துப் புதுவெள்ளத்தைப் பாய்ச்சும் என்று நம்புகிறேன்.

இன்குலாப்

54, ஜானிஜான்கான்சாலை
சென்னை-600 014
தமிழ்நாடு

--------------------------------------------------------------------

என்னுரை

தமிழர்கள் வன்முறையார்கள், தமிழர்கள் பயங்கர வாதிகள். தமிழர்கள் கொலைவெறியர்கள். சிங்கள அரசின் ஊதுகுழல்கள். இவ்வாறு தினமும் அலறுகின்றன. பௌத்த சிங்கள அரசின் செய்தி ஊடகங்கள் சொல்வனவெல்லாம் உண்மையாக இருக்குமோ என்கிற அல்லாடல் உலகில். வல்லான் சொல்லும் பொய்களுக்கு வலுவுண்டு என்பதை எண்பித்த கோயபல்ஸ் பரம்பரையினரால் அவனி ஏமாற்றப்படுகின்றது. இவற்றை-இந்தப் பொய்ப் பிரசாரங்களை - முறியடிக்க முடியாத வலுவிழந்த மனிதர்களாக ஒரு கூட்டம். இது மட்டுமா ஈழத் தமிழன் முன்னுள்ள பிரச்சினை?

புகலிடம் தேடிவந்த நாடுகளிலாவது பாதுகாப்பும் நிம்மதியும் உண்டா? அவர்களுடைய நெஞ்சங்களிலே குமைந்தெழும் கூச்சங்களை ஏனைய மக்கள்-ஏன் ஏனைய தமிழர்களே-அறிவார்களா? இவற்றை இனங்கண்டு, வெளியிட ஏன் இதுவரை துணிச்சல் வரவில்லை?

ஈழத் தமிழர்கள் ஒருபோதும் வன்முறைமீது வாஞ்சை பாராட்டியவர்களல்லர். அகிம்ஸா மூர்த்தி கௌதம புத்தருடைய அருமை வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் மொழி அதுவாக மட்டுமே இருக்கின்றது. அகிம்ஸை பற்றியும் அதனை ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் பேசிய தமிழ் அரசியல்வாதிகள், அதன் உள்ளார்ந்த சொரூபத்தில் மனங்கொள்ளாது, வீரவசனங் களையும் இழைத்துப் பேசி, வாக்குப் பெட்டிகளை நிரப்பிக் கொண்டதினால், அது ஒரு கோஷமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டமையும் அவப்பேறாகும்.

தளங்களும் காலங்களும் போராட்டங்களையும் அவற்றின் வழிமுறைகளையும் மாற்றுகின்றன. சுருக்கமாகச் சொன்னால்: ஈழத்தில் நடந்ததும் அதுவே! அஹ’ம்சை மொழியை மறந்தபொழுது, அதன் மொழியைப் புரிந்து கொள்ள மறுத்தபொழுது, வன்முறை போராட்டத்தின் ஓர் அம்சமாக மாறுதல் தவிர்க்க இயலாததாகியது. அதற்காக ஈழத் தமிழர்கள் காலம் காலமாக ஆதரித்து வந்த அகிம்ஸை முறையைத் துறந்துவிட்டார்கள் என்றும் அர்த்தமாகாது. சமாதானத்தைப் பேசுவதற்கும் பாதுகாப்பதற்கும் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை சதாமுடன் பேசும் மொழி என்ன? ஏன்? 50 ஆண்டுகள் பொறுமை காத்த NATO ஏன் Yogoslaviya-வில் Milosevic இடம் அமைதி இழந்தது.

காந்தி பிறந்த மண்ணிலே இன்று அகிம்சை இல்லை. யேசு பிறந்த மண்ணிலே இன்று அகிம்சை இல்லை. இந்த நிதர்சனங்கள் என்னை வாட்டியபோதிலும், அகிம்சை என்கிற தத்துவத்துக்கு மனித வாழ்க்கையிலே ஓர் உயர்ந்த இடம் உண்டு என்று மனசார நம்புபவன் நான். புலம் பெயர்ந்த நாடுகளிலே ஈழத்தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வன்முறை பயன்படமாட்டாது. அதற்கு ஈடாக அகிம்சையே உதவிக்கு வரவேண்டும் என்று நம்புகின்றேன். பழைமைப் போக்காக இருக்கலாம். ஆனால், உண்மையில் பழையது, புதிசு என்கிற பேதம் கிடையாது என நம்புகின்றேன்.

சகோதர சண்டைகளினால்-இயக்கங்களுக்கிடையிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் நடைபெற்ற சண்டைகளினால்--ஆழமான வடுக்கள் தமிழருள் ஒரு சாராருக்கு ஏற்பட்டுள்ளன. இந்த வடுக்கள் பற்றிய நேரடி அநுபவம் எனக்கு உண்டு. இவற்றைச் சொறிந்து கொண்டிருந்தால், சீழ்வடியும். சொந்த மனக்காயங்களுக்காக ஓர் இனத்தின் எதிர்காலத்தினைக் காவு கொடுக்கும் அற்பத்தனத்தை 'நாளை' மன்னிக்க மாட்டாது. காலமும் கடமையும் முக்கியம். கடந்த கசப்புகளைப் பாராட்டுதலும், பழங் கணக்குகள் பார்ப்பதும் நாளையின் ஒளிமயமான விடியலுக்கு உபகாரமாய் அமையாது எனவும் நம்புகிறேன்.

எப்படியாவது ஐரோப்பா அடைந்துவிட்டால் காரும், வீடும் சொகுசு வாழ்க்கையும் கிடைக்கும் என்பது ஈழத்தமிழரின் கனவாகி விட்டது. கறுப்பன் என்கிற இழிநிலையும், பிச்சைக்கார நாட்டான் என்கிற அவமதிப்பும் நிழலாய் எம்மோடு தொடர்வதை எவரும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. வீட்டிலும் உறவிலும் சொல்லி வைத்திருக்கும் கனவுக்கோட்டைகள் சிதறிவிடும் என்கிற பயம் பலருக்கு! ஐரோப்பாவில் தோன்றியுள்ள நவநாஜிகளும், அவர்கள் வளர்த்தெடுக்கும் நிறவெறியும் ஐரோப்பிய நாகரிகத்தையும் மனிதாபிமான உணர்வுகளையும் மீண்டும் ஒரு தடவை புதைகுழிக்குள் போட்டு மூடிவிடுமோ என்கிற நியாயமான அச்சம் வளர்ந்து வருகின்றது.

இந்த நாடுகளிலே ஜனநாயக முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்கூட வாக்குகள் பெறுவதற்காக நிற பேதம் பேசுகின்றன. இத்தகைய கட்சிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலே இருபது சதவீத வாக்குகள் கிடைத்துள்ளமை ஆபத்தின் அடையாளமாகும். அடுத்த நூற்றாண்டின் மனித குல ஆரோக்கிய முன்னேற்றத்துக்கும் இவை நற்சூசகங்களல்ல.

புதிய நாடுகளிலே பாலும் தேனும் ஓடவில்லை. பயமும், நிச்சயமற்ற வாழ்க்கையும் மிரட்டுகின்றன. இளைய தலைமுறையினரின் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது. இந்த யதார்த்த நிலைமைகளை எடுத்துச் சொல்லவும், அவை குறித்து யதார்த்தமான முடிவுகளை எடுக்க ஈழத் தமிழர் முன்வருதல் வேண்டும் என்பதை அழுத்தவும், சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தாளனாக இதனை எழுதியுள்ளேன் என நம்புகிறேன்.

நான் பிறந்த என் மணணையும், இனத்தையும், மொழியையும் நேசிக்கிறேன். விரோதங்களைப் பாராட்டுவதல்ல, இந்த நேசங்களை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க ஆசைப்படுகின்றேன்.

-இ.தியாகலிங்கம்

அந்த இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தது. கழுவும் இயந்திரத்தின் இத்தகைய ஒலங்களைச் சகித்தல் அவள் வேலையின் ஒரு அம்சமே. இன்றைக்கு நித்தியாயினிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. ஒரே தலைவலி. மற்றவர்கள் காதில்லாதவர்கள் போன்ற பாவனையில் வேலையில் ஈடுபட்டிருந்தது அவளுக்கு எரிச்சல் ஓட்டியது.

'என்ன மனிதர்கள்? பணத்திற்காக எதுவுமா? வேலை ஸ்தல உரிமைகள் மீறப்படுகின்றன. ஏதாவது முணு முணுப்பு? இலங்கையில் அடங்கிக் கிடந்தார்கள். இங்கு? புதிய பூமியும் புதின வானமும் நாடி வந்த இடத்தில்? சுதந்திரம் என்பது எங்களுக்கு எட்டாத கனவுகளா?'--இவ்வாறெல்லாம் அவளுடைய மனசு தறிகெட்டோடியது.

'செவி உடல் உறுப்பு. உடலா நோகடிக்கப்படுகிறது? இல்லை. காதிலும் ஆழமானது. மனசு நோகடிக்கப்படுகின்றது. மனசு சம்பந்தப்பட்ட உணர்வுகள் காயமடைகின்றன. நோகடிப்பதும் காயப்படுத்துவதும் வன்முறை சார்ந்தது என்று இவர் தர்க்கிப்பார். இவர் கற்பனை செய்யும் உலகம் வேறு. யதார்த்த உலகம் வேறு அநுபவங்களைக் கொண்டிருக்கிறது. பணத்தின் விஸ்வ ரூபம்! பணத்தின் முன்னால் மண்டியிடும் மனிதன் இயந்திரமாகி விட்டான். ஆன்மாவின் விலையா பணம்?' இவருடைய சிந்தனைச் செல்வாக்குகள் தன்னைப் பீடிப்பதை உணருகின்றாள். அவற்றில் இருந்து அந்நியப்படவும் அவளால் முடியவில்லை.

பெட்டிக்குள் கிடந்த மீன்கள் முடிந்துவிட்டன. பெட்டியை நகரும் 'பெல்'டில் தள்ளிவிட்டு, மேஜையைக் கழுவத் துவங்கினாள். இவளுடன் சேர்ந்து வேலை செய்த ஜ“விதாவும் பெட்டியை பட்டியிலே நகர்த்தி, இதில் உதவி செய்ய வந்தாள். பணி துரிதமாக முடிந்தது.

'அப்பாடா!'

நரக இரைச்சலிலிருந்து விடுதலை பெற்றது போன்ற உணர்வு. வெளியே வந்ததும் ஒருவகை நிம்மதி. சுதந்திரக் காற்றினைச் சுவாசிப்பது போன்ற உணர்வு.

மேலே வந்ததும் வெள்ளைச் சட்டையையும் பாத அணிகளையும் கழற்றினாள். அவசர அவசரமாக அவற்றை அலமாரிக்குள் திணித்தாள். தன்னுடைய காலணிகளை மாட்டிக் கொண்டு, 'ஜக்கேற்'றினை அணிந்தவாறே திரும்பிப் பார்த்தாள். ஜ“விதா போட்டியில் ஈடுபட்டு ஜெயித்தவளைப் போல தயார் நிலையில் நின்றாள்.

ஏனையோரைச் சட்டை செய்யாது இருவரும் வெளியேறினார்கள்.

நித்தியாயினிக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. படிப்புக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வேலை ஒன்று கிடைப்பதாக இல்லை. அப்படி எதிர்பார்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால், இந்த மீன் வெட்டும் வேலையை ஏற்றுக் கொண்டாள், 'பிச்சைக்காரனுக்கு மாற்று மார்க்கம் இல்லை' என்பது போல! ஆனால்...ஆணும்-பெண்ணும் உழைத்தே குடும்ப வசதிகளை அமைத்துக் கொள்ளுதல் சாலும் என்கின்ற இன்றைய ஐரோப்பிய கலாசாரத்திலிருந்து அந்நியப்பட்டு வாழவும் முடியாது. மூளையோ, மனசோ தேவை இல்லை. இரண்டு கைகளை மட்டுமே வாடகைக்குக் கொடுத்தது போலவும். தொழிற்சாலையின் அமைப்பு விதிகளை அவள் வேலை செய்யும் தொழிற் சாலை மீறவும் செய்தது. இதனை ஆட்சேபித்துப் போராட அவள் யார்? இந்த நினைவுகள் அவளுக்குத் தொழிற்சாலை மீது வெறுப்பினை ஏற்படுத்தியது.

நித்தியாயினியும் ஜ“விதாவும் வெளியே வந்தனர். நேரம் இரவு பதின்னொன்றரை என்றாலும், வெயில் பரவியிருந்தது. இது கோடைகாலம். கோடைகளில் இரவும் பகல்களாகவும் குளிர் காலத்தில் பகலும் இரவுகளாகவும் விந்தை புரியும் வடதுருவ இயல்பு அவர்களுக்கு வந்த புதிதிலேதான் வியப்பாக இருந்தது. இப்பொழுது பழக்கப்பட்ட ஒன்றே!

ஜ“விதா கலகலப்பானவள். 'கடி'க் கதைகளிலே கெட்டிக்காரி.

'நித்தியா அக்கா?

'ம்ம்...'

'அதுகள் ஒண்டையும் இன்னும் காணம்?'

'ம்ம்...'

'அவையவைக்கு எது சரியோ, அதைச் செய்யினம்...'

'அப்ப நீங்களும் சிரி எண்டுறியளே? overtime எண்டு போய்க் கேக்குதுகள். அது அவனாப் பாத்துக் கொடுக்கிறது. 'இன்ரேவ'லிலும் நிண்டு வெட்டுகினம். பத்தே முக்காலுக்கு கழுவலாம் எண்டு இருந்தாலும், பதினொரு மணிக்கும் கழுவாமல் நிண்டு வேலை செய்யினமாம்...இதுகளை வைச்சுத்தானே அவங்கள் எங்களை மட்டமாக நினைக்கிறாங்கள். காசெண்டால் வாயைப் பிளப்பம் எண்டு நினைச்சுத்தானே, இந்தத் தொழிற் சாலையின் அடிப்படை வசதிகளைக்கூட கவனிக்காமல் எங்களை வாட்டுறாங்கள்...இது விளங்காதே அக்கா?'

'காசிருந்தா எல்லாத்தையும் வாங்கலாம் எண்டு அதுகள் நினைக்குதுகள். நாங்கள் இப்பிடிச் சொன்னால் பொறாமையில கதைக்கிறம் எண்டுதான் அவை விளங்கிக் கொள்ளுவினம்.'

'அவமானமா இல்லை?'

'எதுதான் அவமானம் இல்லை? நாட்டை விட்டு வந்ததே முதலில் அவமானம். இவர் சொல்லுறவர். தாங்கள் வந்த புதிதில பெரும்பாலும் இந்தத் தொழிற்சாலைகளில நொஸ்குகள்தான் வேலை செய்தவர்கள். அப்ப, வெப்பநிலை பதினேழுபாகைக்கு குறைஞ்சாலே, தொழில் செய்யறவங்கள் இன்ரேவல் றூமுக்கதான் இருப்பினமாம். இப்ப என்ன கதை? இதை ஆரிட்டப் போய்ச் சொல்லி அழறது?

'எங்கடையள் எல்லாத்தையும் தலைகீழா மாத்திப் போட்டுதுகள்...?

'எங்களப் பற்றி ஐரோப்பியர் ஒரு சாராருக்கு மட்டமான தப்பபிராயம் இருக்குது. எங்கட சனம் இப்பிடி எல்லாம் நடந்தால், எங்களைக் காட்டுச் சனம் எண்டுதான் அவங்களும் நினைப்பாங்கள். இதுகும் ஒண்டு சொல்ல வேணும். எங்களை மனிசனா மதிக்கிற சனங்களும் நிறைய இருக்கினம், என்று இவர் சொல்லுறவர். நாங்கள் முதலில எங்கடை பிழைகளைத் திருத்தி மனிசராக வாழப் பழக வேணும்... எங்கடை சனம் திருந்தும் எண்டு நினைக்கிறியே?' நித்தியாவிற்கு குரல் கம்மிற்று.

'அக்கா, நீங்கள் உணர்ச்சிவசப்படுறியள்...'

'உணர்ச்சியோ? யோசிச்சா விசர்தான் வருகுது.'

ஜ“விதா பேச்சை மாற்ற விரும்பினாள்.

'அக்கா நீங்கள் கவிதைகள் எழுதுவியள் என்று கேள்விப் பட்டனான்...'

'மீன் வெடுக்கிலை கவிதை எல்லாம் 'காத' (குட்பை) சொல்லிப்போட்டுது என்று இவரிட்டை நான் சொல்லுறனான்.'

'கவிதை என்பது ஒரு வரப்பிரஸாதமாம்...குளத்தோட கோவிச்சுக் கொண்டு, அடிக் கழுவாமல் விடுறதே?'

'இந்த நாட்டுக்கு எங்கட ஊர்ப் பழமொழிகள் சில சரிப்பட்டு வரவும் மாட்டாது' என்று சொல்லி, நித்தியா இலேசாகச் சிரித்தாள்.

'கேள்விப்பட்டனீங்களே அக்கா, விநாயகத்தார் வீட்டை ஓஸ்லோவிலிருந்து நகைகள் வந்திருக்காம்...'

'இங்க நகைகளைப் பூட்டிக் கொண்டு ஆருக்காம் வடிவு காட்டுறது? ஏன்தான் நகைகள் எண்டு அலைய வேணும்?'

'என்னக்கா, என்னையும் ஏசுறியளே'

'இல்லை, ஜ“விதா, ஒரு கதைக்குச் சொன்னனான். நீ என்ர நல்ல சிநேகிதி. அதனாலதான் எதையும் மனம் விட்டுப் பேசுறன். மற்றவயோட கதைச்சால், அந்தரத்தில பிசத்திறன், எரிச்சல் கேஸ்...எண்டெல்லாம் கதைப்பினம்...'

அவர்கள் வாழ்ந்தது ஒரு தீவு. அந்தத் தீவு, வெளிப்பார்வைக்கு ஒரு பாலத்தினால் இணைக்கப்பட்ட இரண்டு தீவுகள் போன்றே தோன்றும். தொழிற்சாலை இருந்த பகுதியிலிருந்து, இந்தப் பாலத்தினைத் தாண்டித்தான் அவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கு வரலாம். பாலத்தினைக் கடந்து குடியிருப்புக்குச் செல்லும் பாதையிலே திரும்பிய பொழுதுதான் இருவரும் அவர்களைக் கண்டார்கள். அவர்களைப் பார்த்ததும் ஜ“விதாவுக்கு உதறல் எடுத்தது. ஜ“விதாவின் பதற்றத்தைப் பார்த்ததும், நித்தியா தன் மனசினைக் கவ்வும் பயத்தினைத் துரத்தி, சகஜமாகத் தோன்ற முயன்றாள்.

அவர்கள் நால்வர். இளைஞர். நொஸ்குகள். ஏதோ தொழிற்சாலைகளிலே வேலை செய்பவர்கள் போன்ற தோற்றம். அவர்கள் பியர் அருந்திக் கொண்டிருந்தார்கள். வீதியின் கரையிலே எழுந்துள்ள அரைச் சுவரிலே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அலுப்பிற்காக குடிப்பவர்கள் போன்று தோன்றவில்லை. மதுவை ரஸ’த்துக் குடிப்பவர்கள் போல, போத்தலிலே இருந்து பியரை உறிஞ்சினார்கள்.

இவர்களுக்கு ஏற்பட்ட பயத்தினை அவதானித்த ஒருவன் கட்டில் இருந்து குதித்து, வீதிக்கு வந்தான். இதனை ஒரு சமிக்ஞையாகக் கருதிச் செயற்படுபவர்களைப் போல, மற்றைய மூவரும் குதித்து அவனுடன் சேர்ந்து கொண்டனர்.

அவர்கள் நால்வரும் கால்களை அகட்டி கைகோர்த்து, வீதியின் குறுக்கே நின்றால், கடந்து செல்வது பிரச்சினையாகி விடும் என்பதை நித்யா உணர்ந்தாள். அதற்குப் பயந்து திரும்பி விடுவதா? திரும்பி எங்கே ஓடுவது? மீண்டும் தெழிற்சாலைக்கா? பயந்ததாக காட்டிக் கொள்வதே, அவர்கள் மூர்க்கங் கொள்ளுவதற்கு ஊக்கியாக அமையலாம்.

இவர்கள் எதிர்பார்க்காத கடுதியில் அவர்கள் நால்வரும், இர்வகளுடைய வழியை மறிப்பது போலச் சூழ்ந்து கொண்டார்கள்.

நித்தியாவுக்கு பயம் கோபம் என்கின்ற பரிணாமம் பெற்றது. உதடுகள் துடிக்க அவர்களை முறைத்துப் பார்த்தாள். இதனை அவதானித்த ஒருவன் குரூரமாகச் சிரித்தான். அவன் தன் கையில் இருந்த பியர் போத்தலை அவள் வாயருகே நீட்டி, 'குடிக்கப் போறியா? கொஞ்சம் குடியன்' என்று கிண்டல் செய்தான்.

நித்தியாவுக்கு சட்டென்று கண்ணகியின் கதை நினைவில் மிதந்தது. தன் கணவன் கோவலன் கள்வனல்லன் என்பதை நிரூபிக்கத் தன் சிலம்பை உடைத்து, தன் மனசில் எழுந்த கோபத் தீயினால் மதுரை நகரையே எரியுண்ணச் செய்தாளாம். அந்தப் பத்தினித் தெய்வத்திற்கு முள்ளியவளைக்கு அயலில் உள்ள வற்றாப்பளையிலே கோயிலும் உண்டு. சின்ன வயசிலே ஒரு தடவை தாத்தாவுடன் அங்கு சென்றிருக்கிறாள். இந்தக் கதை இவர்களிடமிருந்து தப்ப உதவுமா-ஏதாவது செய்து தப்ப வேண்டும்.

'ஜ“விதா, நாங்கள் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அந்த நோஞ்சானைத் தள்ளிக் கொண்டு வெளியே போவம். இல்லாட்டில் இவங்கள் விடமாட்டாங்கள்.'

'பயமா இருக்கக்கா...'

'பயத்தால் வேற வழி? குடிவெறியில நிக்கிறாங்கள். சமாளித்துத் தப்ப வேணும்...'

'சரி அக்கா...'

நித்தியா நோஞ்சானைத் தள்ளத் துவங்கினாள். ஜ“விதாவும் திடீர்ப் பலம் கொடுத்துத் தள்ளத் துவங்கினாள்.

அந்த நால்வரும் இவர்களைச் சுற்றி எழுப்பி இருந்த மனிதச் சங்கிலி திடீரென அறுந்தது. இது அவர்களை நிலை குலையச் செய்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, அவர்களைத் தாண்டி, நித்தியாவும் ஜ“விதாவும் விரைவாக நடக்கத் துவங்கினார்கள். ஜ“விதா கிட்டத்தட்ட ஓடுவது போலவே நடந்தாள். நித்தியாவும் பயந்து போனாள். ஜ“விதாவுக்கு போட்டி போடுவது போல அவளும் துரிதமாக நடந்தாள்.

இவர்கள் எப்படி விரைவாக நடந்தாலும், அவர்கள் விடுவதாக இல்லை. தங்களுடைய வியூகத்தினை அறுத்து விட்டதான கோபம். போதை அவர்கள் கோபத்துக்குத் தீனியிட்டது. மீண்டும் அவர்களைத் தடுத்து நிறுத்த முனைந்தார்கள். குஞ்சினைப் பருந்திடம் இருந்து காக்கும் பேட்டின் ராங்கி தலைக்கேறவும், ஒருத்தனைத் தள்ளி விட்டு நித்தியா மீண்டும் வேகமாக நடந்தாள். இச்செயலை அவர்கள் தங்களை அவமதிப்பதாக விளங்கிக் கொண்டார்கள்.

இந்தத் தடவை தப்ப முடியவில்லை. இருவரையும் அவர்கள் தமது வட்டத்தினுள் வளைத்துக் கொண்டனர். ஆத்திரம் தீரும் வரையிலும் மீதமிருந்த பியர் முழுவதையும் அந்த இரண்டு பெண்களின் தலைகளிலும் அபிஷேகங்கள் செய்வதுபோலக் குளிப்பாட்டினார்கள். நுரைதள்ளிய அந்த பியரின் நெடி இவர்களுக்குக் குமட்டல் உணர்வினை ஊட்டியது. அவமானத்தால் உடல் கூனிக் குறுகியது. அந்த இளைஞர்களுடைய அட்டகாசமான வெறியூட்டல் சிரிப்பு, இவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. ஜ“விதா குரல் எழுப்பி அழுதாள். அவள் புழுப்போன்று துடித்துக் குமுறியது பார்க்க முடியாததாக இருந்தது. அவளுக்குத் தென்பூட்டுவதற்கென்றாலும், தான் இருக்க வேண்டும் என்று நித்தியா நிச்சயித்தாள். இந்த ஆக்கினைகளின் மத்தியிலே, உடலை நனைத்த பியர் குளிர் காற்றிலே, உறை நிலை அடைவது போன்று அவஸ்தைப் படுத்தியது. உடல் நடுங்கியது.

இதற்குமேல் அவர்களை இம்சைப்படுத்த அவர்கள் விரும்பவில்லையா? அட்டகாசமாகச் சிரித்தபடியே, மீண்டும் பாலத்தை நோக்கி அந்த வெறிக்கூட்டம் நகர்ந்து சென்றது...

தப்பித்த உணர்வுடன் நித்தியாவும், ஜ“விதாவும் நடந்தார்கள். ஜ“விதா தன் வீட்டுக்குச் சென்றாள். அவள் வீட்டைத் தாண்டித்தான் நித்தியா தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

'ஊரிலே இப்படி ஒரு வெறிகாரனாலே செய்ய முடியுமா? செய்துவிட்டு மறுநாள் வீதியில் உலவ முடியுமா? அந்த ஊரின், அமைதியையும் சாந்தத்தினையும் பேணி, பெண்களுடைய மானத்துக்கு உத்தரவாதம் தந்த அந்தப் பிறந்த மண்...அதனை விட்டு ஏன் இங்கு வந்து இப்படி ஆக்கினைப் படுகின்றோம்! ஏன்?...'

நினைவுகள் அந்தரத்திலே தொங்கின.

வீடு வந்துவிட்டது.

தன் கோபத்தினையும் இயலாமையையும் கதவிலே காட்டிப் பலமாக அடித்துக் கொண்டிருந்தாள்.

அடக்கி வைத்திருந்த அனைத்து உணர்சிகளும் அவரைக் கண்டதும் உடைப்பெடுத்தன. வெந்நீர் போத்தலை நிலத்திலே வைத்ததும் தேம்பித் தேம்பி அழத் துவங்கினாள். ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கின்றது என்பதைத் தேவகுரு புரிந்து கொண்டார். அவளை அணைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறியவாறே, அவளை ஜக்கெற்றைக் கழற்றி வெளியே எறிந்தார். அப்படி இருந்தும் மதுவாசனை வீட்டின் ஹோலில் மண்டியது. அவள் பியரிலே குளித்து வந்தவள் போன்று தோன்றினாள். மது வாசனை அந்த வீட்டிற்குப் பொருந்தாத ஒன்று.

பிள்ளைகள் இரண்டும் தூங்கப் போய்விட்டார்கள். அது மட்டுமே அவருக்குச் சிறிது நிம்மதியைத் தந்தது. ஒரு துவாயை எடுத்து வந்து அவளுடைய தலையைத் துடைக்கத் துவங்கினார். ஆனால், அவள் துவாயைப் பறித்துத் தானே துடைத்தாள். தேம்பல் தொடர்ந்தது. தேவகுருவால் தாங்க முடியவில்லை. அவளை சோபாவில் அமரச் செய்தார்.

'என்ன நடந்தது நித்தியா? இந்த பியர் எல்லாம் என்ன?'

அவருடைய கேள்விகள் நித்தியாவி சோகத்தை மேலும் கிளறச் செய்தன. அவளுடைய அழுகையின் சுருதி அதிகரித்தது.

'அழாத நித்தியா. நீ இப்பிடி அழுதால், பிள்ளையள் எழும்பி விடுவாங்கள். இந்தக் கிலிசகேடுகளை அதுகளும் பார்க்க நேர்ந்தால்...முதலில் என்ன நடந்தது என்று விஷயத்தை எனக்குச் சொல்லும். துக்கத்தை இன்னொருத்தருக்குச் சொல்லுறதால மனப்பாரம் குறையுமல்லோ...' தேவகுரு கெஞ்சும் பாவனையில் சொன்னார்.

விக்கல்களுக்கிடையில் நித்தியா நடந்ததைத் சொல்லி முடித்தாள். அவளுடைய முகத்தில், வேதனையும் சோகமும் பரவி இருந்தன. அவர் பதில் ஏதும் பேசாது, சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடைய மௌனம் அவளுக்கு எரிச்சல் ஊட்டியது.

'நீங்கள் இப்பிடி இருந்தால் என்ன அர்த்தம்? போலிஸ“க்கு உடன் போன் செய்யுங்கோ!'

'இல்லை, நித்தியா...யோசிப்பம்...'

'என்ன இல்லை? என்ன யோசிக்கிறது? என் மேல பியர் ஊத்தியிருக்கிறாங்கள். வழிமறிச்சு வம்பு செய்திருக்கிறாங்கள். கையைப் பிடிச்சு மானபங்கப்படுத்தாத குறை...எளிய நாய்கள். என்ரை வேதனைய அறியாமல், இங்கை இருந்து இல்லை நித்தியா என்று இழுக்கிறியள்' என வெடித்தாள் நித்தியா.

அவளுடைய ஆத்திரங்களும் சோகங்களும் சூடான சொற்களாக வெளிவந்து கரையட்டும் என்று நினைத்தவரைப் போல அமைதி காத்தார்.

'நீங்க பேசாம இருந்தா என்ன அர்த்தம்?

'நித்தியா, முதலிலை பதட்டப் படாதையும். 'ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டம்' எண்டு தெரியாமலே சொல்லி வைச்சிருக்கிறாங்கள்...அவங்கள் உசாரிலை முஸ்பாத்தியாகவும் செய்திருக்கலாம் அல்லோ? அவங்கட சையிட்டில இருந்தும் யோசிக்க வேணும்... '

'முஸ்பாத்தியா? நான் அவங்களுக்கு ஆர்? உங்கடை மனுஷ’யை நடு றோட்டிலை வைச்சு மானப்பங்கப் படுத்தி இருக்கிறாங்கள். நீங்களும் ஆம்பிளைதானே?

'இஞ்சேர் அப்பா. ஆண் எண்டால், சண்டைச் சேவலைப்போல துள்ள வேணுமே? இல்லை கேக்கிறன். நான் கோவப்பட்டுச் சூரசங்காரம் ஆடினால், ஆருக்கு நன்மை? இப்படிப்பட்ட நேரங்களிலதான் மனிதன் நிதானத்தை இழக்காமல் யோசிக்க வேணும். போலிஸ”க்குப் போனால், பிரச்சினை தீர்ந்திடுமோ? பகையை நிரந்தரமாக்கிக் கொள்ளத்தான் வழிபிறக்கும். நட்புக்கும் இணக்கத்திற்கும் சமாதனத்துக்குமான வழிகளை எல்லாம் அடைச்சுப் போடுவம்...அவங்க இளைஞர்கள் எண்டு சொல்லுறாய்...குடிவெறியிலை நிண்டவங்கள் எண்டும் சொல்லுறாய். குடிவெறி முறிஞ்சு தங்கள் செயலுக்காக அவங்கள் வெட்கப் பட்டாலும், படுவாங்கள். மனுஷ வாழ்க்கையில் எல்லாச் சாத்தியங்களும் உண்டு என்பதை நாங்கள் நினைச்சுப் பார்க்க வேணும்...?'

சிந்தனை அறுந்து மௌனமானார். அவள் பக்கத்தில் அமர்ந்து, தன் அண்பையும் பாதுகாப்பும் அவளுக்கு என்றும் உண்டு என்பதை உறுதிப்படுத்தும் வகையிலே அவளை ஆதரவுடன் அணைத்தார்.

அதனைத் திமிறிக் கொண்டு, 'இப்ப நீங்கள் என்ன செய்யப் போறியள்?' என்று கேட்டாள். கோபத்தில் அவள் குரல் மேலும் கிளறியது.

'என்ன சொல்லுறியள்? ஒண்டும் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்?'

'நான் ஏதாவது சொன்னால் உனக்குக் கோபம் வரப்பாக்குது. கொஞ்சம் நாளுக்கு முந்தி நான் ஒரு புத்தகம் வாசிச்சனான். எதிரியை வெல்வதைவிட அவனைப் புரிந்துகொள்வதே மேல்! எதிரியைத் தோற்கத் தோற்கச் செய்தால், அவன் மீண்டும் எழுந்து தொல்லை கொடுக்கக் கூடும். ஆனால், சமாதானம் அவனுடைய பகையை வெட்டிச் சாய்க்க உதவும்...யோசித்துப் பார். இண்டைக்கு நீ போலிஸ”க்குப் போகலாம். நாளைக்கு அவர்களைப் பிடிச்சு விசாரிக்கலாம். அவங்கள் என்ன கொலைக் குற்றமா செய்து போட்டாங்கள்? பிறகு என்ன செய்வாங்கள்? உன்னைக் காணுற நேரமெல்லாம் உன்னை ஏதாவது வழியிலை துன்புறுத்தத்தானே பார்ப்பாங்கள்? இது-இந்த நிரந்தரப் பகை எங்களுக்குத் தேவையா?'

'உங்களுடைய தத்துவம் எங்கடை நடைமுறைக்குச் சரிப்பட்டு வராது. நீங்கள் இப்ப போலிஸ”க்கு வாறியளோ, இல்லையோ?'

'கோபத்தில மனுஷன் நியாங்களை மறந்து செயற்படுவான். கொஞ்சம் ஆர அமர்ந்து யோசிப்பம். எங்களுக்கு இரண்டு பிள்ளையள் இருக்கு. அதுகளைத் தூங்க விட்டிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு நாங்கள் இரண்டு பேரும் போலிஸ”க்கு ஓடுறதே? இடையிலை அதுகள் எழும்பி எங்களைத் தேடினால் என்ன பாடுபடுங்கள்? இரவு முழுவதும் யோசிக்கலாம். அதுக்குப் பிறகும் நீ போலிஸ”க்குப் போறதுதான் சரியென்று தீர்மானித்தால், நாளைக்கு நான் லீவு எடுக்கிறேன்.'

'நல்லா இருக்கு உங்கள் சமாதானம்...'

'ஓக்கே, நித்தியா...நீ எழும்பு...பாத்ரூமுக்குப் போய் இந்த நாத்தங்கள் போக நல்லா முழுகு. பிறகு சாப்பிடுவம். நான் சாப்பிடாமல் உனக்காகக் காத்திருக்கிறேன்...'

'இப்ப போலிஸ”க்குப் போறேல்லையே...?'

'எத்தினை தரம் சொல்லுறது?...வடிவா யோசித்து நாளைக்குப் பார்ப்பம்...?ஏ

'நல்ல மனுஷன்...சாமியாராய் போகவேண்டியவரை எனக்கு கட்டி வைச்சிருக்கினம்...' என்று புறுபுறுத்துக் கொண்டே நித்தியா எழுந்து தன் படுக்கை அறைக்குள் சென்றாள். அப்படியே படுத்துவிடுவாளோ எனவும் தேவகுரு நினைத்தார். ஆனால், சில விநாடிகளில், அவள் புயல் வேகத்திலே குளியல் அறைக்குள் புகுந்தாள். இதைப் பார்த்ததும் தேவகுருவுக்குச் சற்றே நிம்மதியாக இருந்தது.

ஹோலிலே இன்னமும் மதுவாடை வீசிக் கொண்டிருந்ததாக தேவகுருவுக்குத் தோன்றியது. அவர் வாழ்க்கைப் பாதையிலே பல மேடுபள்ளங்களைக் கடந்து வந்தவர். வன்முறையே விடுதலைக்கான ஒரே மார்க்கம் என அவர் நம்பிய காலமும் உண்டு. மதுவிலே மனக் கவலைகளைக் கரைக்கலாம் என அவர் வாழ்ந்த காலமும் உண்டு. ஆனால், அவை அனைத்தும், அவர் வாழ்க்கையில் மின்னலைப் போன்று சடுதியாக தோன்றி மறைந்தன. இப்பொழுது திடசித்தத்துடன் சரியான மார்க்கத்தினைக் கண்டுபிடித்து ஒழுகுவதாக நம்பினார். அன்பும், அஹ’ம்ஸை நெறியும் மானிட நேயத்தை வாழ்க்கையிலே பயிலுவதற்கு சரியான மார்க்கம் என அவர் நம்பினார். அதனை நடைமுறைப்படுத்துவதிலுள்ள இந்த சிக்கல்களை அவர் தினமும அநுபவித்து வருகின்றார். இந்த சிக்கல்களே அவற்றின் மீதான ஈடுபாட்டினை தீவிரப்படுத்துவதாகவும் அவர் உணரலானார்.

தேவகுரு எழுந்து, யன்னலைத் திறந்து, பின் அதை மேல தள்ளிவிட்டு, காற்று உள்ளே தாராளமாகப் புகுவதற்கு வசதி செய்தார். காற்றின் சுகமான பரப்பல். அது அவர் மனசுக்கு இதம் அளித்தது. சோபாவில் அமர்ந்து, இலேசாக கண்களை மூடிக்கொண்டார்.

'நித்தியா அவமானப்பட்டுவிட்டாள். அவள் மனசிலே ஆழமான காயம். அதற்குப் பரிகாரம்? போலிஸ் நடவடிக்கையினால், அவளுடைய மனக்காயங்களுக்கு ஒளடதம் அளித்துவிட முடியுமா? போலிஸ் நடவடிக்கையினால், நித்தியாவின் மனக்காயம் அளவுக்கு கேடு விளைவித்தவர்களுக்கு, மனக்காயங்கள் ஏற்படுத்த முடியுமா?' 'கண்ணுக்குக் கண்' என்கின்ற பகைவெறியினால் மானிட குலத்திற்கு நன்மையுண்டா? அன்பு வழியின் அற்புதங்களை ஏற்றுக் கொள்ள ஏன் மனிதகுலம் தயக்கங் காட்டுகிறது? காந்தியம் இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தாத மார்க்கமா?'

'காந்திக்கு நீங்கள்தான் மறுவாழ்வு அளிக்கப் போகிறீர்களா?...வாருங்கோ, சாப்பிடுவம்..'

தேவகுரு திடுக்குற்று விழித்தார். நித்தியாவின் முகத்திலே கோபம் சற்றே வடிந்திருந்தது, அவருக்கு நிம்மதியைத் தந்தது.

சாப்பிட்டு முடித்ததும் இருவரும் படுக்கை அறைக்குச் சென்று படுத்துக்கொண்டனர். மீண்டும் அவளுடன் பேச்சுக் கொடுத்து, அவளுடைய மனக்காயங்களை ஆழப்படுத்த விரும்பவில்லை. தூக்கம் கடவுள் படைத்த அற்புத மருந்து. எத்தனையோ மனிதர்களுடைய மனக் காயங்களை அதுவே சுகப்படுத்துகிறது. இப்படியே நினைத்துக் கொண்டு, தேவகுரு சீக்கிரமே தூக்கத்தில் ஐக்கியமானார்.

ஆனால், நித்தியாவுக்குத் தூக்கம் வரவில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களிலே தேவகுரு காந்தியக் கொள்கைகளை அவளுக்கு விளக்கியிருக்கிறார். அந்தக் கொள்கையின்பால் அவளுக்கு இன்னும் ஈர்ப்பு ஏற்பட வில்லை. அது நடைமுறைக்கு உதவாத பத்தாம் பசலிப் போக்கு என்றே அவள் கருதினாள். இருந்தாலும், யாழ்ப்பாண கலாசாரத்திலே வளர்ந்த அவள், கணவனுடைய கொள்கைகளை எதிர்த்து முனைப்பாக விவாதித்ததில்லை. எதிர்வாதங்களினால், குடும்ப அமைதியில் உடைவுகள் ஏற்படுமோ எனவும் அவள் பயந்தாள். ஆனால் இன்றைய அவமதிப்பினை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. தன்னை அவமதித்த அந்த நான்கு நொஸ்குகளும் ஏதோ வழியிலே தண்டனை அநுபவித்தே தீரவேண்டும் என்பதில் அவள் தீவிரமாக இருந்தாள். அவர்கள் தண்டனை அடையாது போனால், மேலும் பல தொந்தரவுகளும் அவமதிப்புகளும் அடுக்கடுக்காக வந்து சேரும் என அவள் பயந்தாள். போலிஸ”க்குப் போய் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும் என்கின்ற தீர்மானத்துக்கு அவள் வந்தாள்.

'நாளைக்கு லீவு எடுக்கிறியளே?'

பதில் வரவில்லை. திரும்பிப் பார்த்தாள். அவர் தூங்குவது போலத் தெரிந்தது. சற்று யோசித்த பின்னர் 'நாளைக்கு லீவு எடுக்கிறியளே?' என குரலை உயர்த்திக் கேட்டாள்.

'ஏன்?' என்று தூக்கம் கலையாது கேட்டார்.

'போலிஸ”க்குப் போகத்தான்...'

'போலிஸ”க்கோ? அது தேவையில்லை...'

'இப்பிடி விட்டா நாளைக்கு கையைப் பிடிச்சு இழுத்து, காரிலை போட்டுக் கொண்டு போவாங்கள். அப்ப இருந்து தத்துவம் பேசுங்கோ...'

'நல்லதுதான் நடக்கும் என்று நினைச்சு நமது மனங்களைப் பழக்கி எடுக்க வேண்டும்...அப்பதான் நல்லது நடக்கும்.'

'உங்களுக்கு ஏலாட்டி விடுங்கோ...நான் வேறையாரையாவது கூட்டிக்கொண்டு போறன்...'

'கிணத்துக்குள்ள விழுவன் எண்டு அடம்பிடிச்சா நான் என்ன செய்யிறது? நான் எவ்வளவோ சொல்லிப் போட்டன். இனி உன்ரை இஷ்டம். காலைமை வேலைக்கு போகவேணும். கொஞ்சம் நித்திரை கொள்ளுவம்...' உரையாடலைத் தொடர விரும்பாதவர் போல, மறுபக்கம் திரும்பிப்படுத்தார். மறுகணமே அவர் நித்திரையாகி விட்டார். அவள் எதோ தீர்மானத்துக்கு வந்தவளாக, 'அலாம்' மணிக்கூட்டை சரி செய்து வைத்துக் கண்களை மூடினாள்.

காலையில் 'அலாம்' மணி கிணுகிணுத்தது. இருவரும் விழித்தார்கள்.

தேவகுரு காலைக்கடனை முடித்து வருவதற்கிடையில் நித்தியா தேநீர் தயாரித்துக் காத்திருந்தாள். சுடு தேநீர் இதமாக இருந்தது. அவள் முகத்தில் அமை நிலவுவதாக எண்ணினார். வேலைக்குப் புறப்பட்டார். அவள் எதுவும் பேசவில்லை.

வேலைக்குச் செல்லும்போது நித்தியாயினி பற்றி அக்கறையுடன் நினைத்துக் கொண்டார். 'அவள் சராசரி மனுஷ’. பல ஆசைக் கனவுகளைச் சுமந்து இந்த நாட்டுக்கு வந்தவள். அந்தக் கனவுகளிலே புகலிட நாட்டிலே எதிர் நோக்க வேண்டிய பிரச்சனைகளுக்கு இடமில்லை. பாவம். மெது மெதுவாத்தானே புதிய நிலவரங்களைப் படிக்க வேணும். காரிலே வேலைக்குப் போனால் பிரச்சினை குறையும். இனியும் ஒத்திப் போடேலாது. கெதியிலை ஒரு காரை வாங்குவம். வீண் ஆடம்பரம் ஏன் எண்டுதான் நினைச்சன். இப்ப அதுக்குத் தேவை வந்திருக்கு...'இவ்வாறான எண்ண அலைகளிலே எற்றுண்டு அவர் நடக்கலானார்.

மாலதி ungdomskole (ஆரம்பப் பாடசாலை)க்குச் சென்று வருகிறாள். அவளுக்கு இன்று பாடசாலை உண்டு. நித்தியா அவளையும் கோகிலாப் பாப்பாவையும் எழுப்பிக் குளிப்பாட்டி வெளிக்கிடுத்தினாள்.

அவளும் புறப்படத் தயாரானாள்.

வெங்கடேஸ”க்கப் போன் பண்ணி விடயத்தை சொன்னாள். அவன் பல கேள்விகளைக் கேடடனாயினும் வருவதற்குச் சம்மதித்தான்.

வெங்கடேஸ் சுணங்காது காரிலே வந்து சேர்ந்தான். மாலதியிடம் தங்கச்சிப் பாப்பாவைப் பார்க்குமாறு ஏற்பாடு செய்தவின், அவள் காரிலே ஏறிப் புறப்பட்டாள்.

போலிஸ’ல் ஒன்றரை மணிநேரம் செலவாகியிருக்கும். அங்கே உருட்டிப் பிரட்டி ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டன. குற்றப் பத்திரிகையை முறையாக எழுதி முடித்த போது, அவளுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அவர் சொல்வதுதான் சரியாக இருக்குமோ என்கின்ற எண்ணமும் தலைதூக்கியது. ஆனாலும், தான் செய்ததுதான் சரியென்கிற நியாயங்கள் அவளை வசீகரப்படுத்தவும் தவறவில்லை. நித்தியா வீட்டுக்குத் திரும்பினாள். பாப்பா தூங்கினாள். மாலதி அயலில் இருந்து வி€ளாயடினாள். வீட்டில் பிரச்சினை இல்லை என்பது அவளுக்கு நிம்மதியைத் தந்தது.

தாயைக் கண்டதும் மாலதி துள்ளினாள்.

'அம்மா, மாமாவோட எங்க போயிட்டு வாறீங்க?'

'போலிஸ”க்கு...' என்று கூறி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

'ஏன் போலிஸ”க்குப் போன?'

'அதடா, என்னைத் தெருவில கரைச்சல் பண்ணுகினம்.'

'கரைச்சல் பண்ணுறவய போலிஸ் பிடிப்பினமே?'

'ம்...பிடிப்பினம்..'

'அம்மா, பசிக்குது School-க்குப் போகபாக நேரம் போயிட்டுது.'

'இன்றைக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டாம். பரவாயில்லை...இஞ்சை இருந்து படிக்கவேணும்...சரியே?'

பிள்ளையின் கதை மாறியது. சாப்பாடு கொடுக்காது போன குற்றம் மனசை வாட்ட, விறுவிறுவென்று உணவு பரிமாறினாள்.

தேவகுரு வேலையாள் வந்து குளித்துவிட்டு, ஹோலுக்குள் வந்தபோது, மாலதி ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.

'என்ன ஆள் மும்முரமாகச் செய்யுது?' என்கின்ற ஆவலுடன் தேவகுரு எட்டிப் பார்த்தார். இரண்டு ஆள்களைப் போல மாலதி கீறிக்கொண்டிருந்தாள். தந்தை தான் கீறியதைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்த மாலதி, அவரைப் பார்த்து சிரித்தாள்.

'என்னம்மா, இந்தப் படம்?'

'போலிஸாரைக் கீறிப் பார்க்கிறன்.'

'ஏன்? போலிஸ் எண்டா உனக்கு விருப்பமோ?'

'அம்மா போலிஸ”க்குப் போனவதானே?' தேவகுருவின் மனசிலே சம்மட்டி அடிவிழுந்ததுபோல! மாலதி கவனிக்காதவாறு சமாளித்துக்கொண்டார்.

'யாரோட போனவ?'

'மாமாவோட...'

'எந்த மாமா?'

'வெங்கட் மாமா!'

தேவகுரு பிள்ளைக்குப் பக்கத்தில் அமர்ந்தார்.

'அப்பா, பசிக்கேல்ல அம்மா?'

'ஏன் காத்தா சொக்கினில சாப்பிட்டியளா?

அவர் பதில் எதுவும் சொல்லாமல், சிரித்து மழுப்பினார்.

இரவு வேலையால் வந்து, சாப்பாட்டைத் திறந்து பார்த்த நித்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'சப்பிடேல்லையா?' என்ற அவளுடைய கேள்விக்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

செவி கேளாதவரைப்போல, அவர் மௌனம் சாதித்தார். பல முறைகள் கேட்டும் பதில் வரவில்லை. அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவள் ஏதாவது செய்தால், மௌனம் சாதிப்பது அவர் வழக்கம்.

குற்ற உணர்வு அவளை உறுத்தியது.

'என்னை மன்னிச்சிடுங்கோ...உங்களுடைய கோபத்தைச் சாப்பாட்டிலை காட்டாதேயுங்கோ...'

'நித்தியா, நான் உன்னை மன்னிக்கிறதுக்குக் கடவுளோ? நானும் மனுஷன்தான். போலிஸ”க்குப் போறதுக்கு உனக்கு உரிமை இருக்கு. நான் அதைத் தப்பு எண்டு சொல்ல வரேல்லை...நான் நினைக்கிறது போல காரியங்கள் நடக்கவில்லை... நான்தான் குற்றவாளி. என்னை நானே தண்டித்துக் கொள்ளுறதுக்கு எனக்கு உரிமை இருக்கு. நன் தண்டனையை அநுபவித்தே தீரவேண்டும். இன்றிலிருந்து நான் மூன்று நாள்களுக்கு உண்ணா நோன்பு...'

'ஏன் இந்தக் கொடுமை?'

'இது கொடுமை அல்ல. நான் என் மனசைச் சத்தப் படுத்தவேண்டும். அவ்வளவுதான்...'

இதற்குமேல், அவருடைய தீர்மானத்தினை உடைப்பதற்கு எந்த சாகஸமும் செல்லாது என்பதை அவள் அறிவாள்.

நித்தியாயினி நினைத்தது நடக்கவில்லை. அவள் எதிர்ப்பார்த்தது போல போலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பியர் குடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், வெறியிலோ 'ஈவ் டீஸ’ங்கில்' ஈடுபட்டிருக்கிறார்கள். அதனைப் புரிந்துகொள்ள முடியாது இந்தப் பெண் அதனைப் பெரிதுபடுத்துகிறாள். அவர்கள் அவளைத் தொடக்கூடவில்லை. அத்துடன் அவளுடன் வந்ததாகச் சொல்லப்படும் ஜ“விதா எந்த முறைப்பாடும் செய்யவில்லை. நித்தியா அதீத உணர்ச்சி வயப்பட்டு, தீவிர எதிர்வினையாகவே போலிஸை நாடியிருக்கிறாள். இந்தச் சின்ன விடயத்தினை பெரிதுபடுத்த தேவையில்லை என்கின்ற முடிவுக்குப் போலீஸார் வந்தார்கள்.

'ஆதாரம் இல்லாததால் முறைப்பாட்டை நீக்குகிறோம்' என போலீஸ’லிருந்து கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தினைத் தேவகுருவுக்குக் காட்ட வெட்கப்பட்டுக் குமைந்தாள்.

தேவகுரு பிறந்த மண்ணின் வாழ்க்கைக் கோலங்கள்-

இலங்கைத்தீவின் மங்கலத் தலைப்பாகை போல யாழ்குடாநாடு. அதற்கு அணி சேர்க்கக் கடல் அலைகளில் நீந்தி ஒட்டிக் கொள்ளத் தவிக்கும் மாணிக்கங்களைப்போல சப்த தீவுகள். அவற்றுள் ஒன்று, தீவு என்கின்ற சொல்லை உதறித்தள்ளி, நகர் என்கின்ற நாகரிகம் புனைந்தது. அதுதான் கரைநகர்!

போகத்தோடு வறண்டுவிடும் வயல்கள். மண்ணைக் கிண்டி வளந்தேடும் உழைப்புப் பலிக்காது. மண்ணின் மைந்தர் தென்னிலங்கை சென்று, வணிய முயற்சிகளிலே தமது உடலையும் ஊக்கத்தையும் பிழிந்து, வளந்தெடுவதில் வெற்றி நாட்டினர். 'பதுளை முருகேசு', 'பண்டாரவளைச் செல்லப்பா' என மண்ணின் மைந்தர்கள் பலரும் கியாதி பெற்றனர். பொருளீட்டலின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் விதத்தில் வீடுகள் எழுந்து காரைநகருக்கு அழகு சேர்த்தன.

இயற்கை அழகிற்கும் குறைச்சல் இல்லை. கடல் நீரிலே நன்கு குளித்து புது ஜ“விதம் பெற்ற சொகுசுடன் எந்தத் திக்கில் இருந்தும் சீதளக்காற்று வீசிக்கொண்டே இருக்கும். தீவு அல்ல, நகரேதான் என்பதை நிரூபிப்பது போல கடல் நீரிலே நடுவகிடு எடுத்த வாக்கில் பொன்னாலைப் பாலம் காரை நகரை யாழ்குடா நாட்டுக்கு இணைந்து அழகு சேர்க்கின்றது.

CASUARINA BEACH என்று வெளிநாட்டினரும் நத்தி உல்லாசம் சுகிக்கவரும் சவுக்குமரக் கடற்கரை, தீவின் வடபால் அமைந்துள்ளது. அங்கு வெண்மணல் கொள்ளையாகப் பரந்து கிடக்கின்றது. கடற்காற்று சவுக்கு மரங்களிலும் தாழைகளிலும் புதிய இசைகள் மீட்டிப் பரவும். இந்த இசையையும் காற்றையும் உடல்களிலே பரவவிட்டுப் பரவசங்கொள்ளும் ஏக்கத்துடன் உல்லாசப் பயணிகள் கூடுவர். பனை கொடியேறிவிட்ட காலங்களில், பனங் கள் - ஓடியர் கூழ் ஆகிய சம்பிரதாயங்களுடன் மண்ணின் மைந்தர்களும் இந்த உல்லாசங்களை மாந்திக் களிப்பர்.

இந்தக் கடற்கர€யை அடுத்து வடகாடு. காரைநகர் மக்களின் இந்துமத ஆராதனைகளின் வெளிப்பாடாக இங்கு ஈழத்துச் சிதம்பரம் அமைந்துள்ளது. திருவெண்பா காலமே அதன் திருவிழாக் காலமாகும். திருவிழாக்களின் உச்சமாக இடம்பெறும் தேர்த்திருவிழாவுக்கு யாழ்க்குடா நாட்டு மக்களே அள்ளுப்பட்டு வந்தது போல இருக்கும். மூளாய், சுழிபுரம், வட்டுக்கோட்டை, மானிப்பாய் ஆகிய இடங்களில் வாழும் இந்துக்களும் நேர்ச்சைகள் வைத்துத் திரளுவர். ஈழத்துச் சிதம்பரம் கோயில் வீதிகள் பெரிய பஜார் போன்று தோன்றும், கோயில் வீதியில் வலம் வரும் காவடிகள்தான் எத்தனை வகை! பாற்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி, தமது உடல்களை வருத்திப் பக்தியை வெளிப்படுத்துவதில் இத்தனை வகைகளா?

தீவின் தெற்கில் ஊர்காவற்துறைக்குச் செல்ல உதவும் கிட்டங்கித்துறை உண்டு. துறையின் வசதிகளைப் பயன்படுத்தும் முகமாகவும், அதன் அயலில் பொருளாதார முன்னேற்றம் காணும் முயற்சியின் குறியீடாகவும் சீநோர் அமைக்கப்பட்டது. சிலோன் - நோர்வே நாடுகளின் கூட்டு முயற்சி என்பதற்காகப் புனையப்பட்டது அப்பெயர். சீநோர் மீன்பிடிக்க உதவும் வள்ளங்களைக் கட்டும் தொழிற் சாலையை நிறுவியது. கடலிலே அறுவடை நடத்தும் மீனவர்களுக்கு வள்ளங்கள் கடன் அடிப்படையிலே கொடுக்கும் பணியையும் அது செய்தது. உள்நோக்கங்களைப் பிரசித்தஞ் செய்யாது, சீநோருக்கு அயலில் இருந்த பலகாடு என்னும் இடத்தில் இலங்கை கடற்படையின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. கடத்தல் வணிகத்தை கட்டுப்படுத்த வந்ததாக விளக்கம் தரப்பட்டது. பின்னர், தமிழர் பிரதேசத்தின் மீது சிங்களர் தொடுத்த பேரினவாத மேலாதிக்கப் போரில் கடற்படை நடவடிக்கைகளின் கேந்திரமாக அது மாற்றப்பட்டு, கடற்பகுதியின் பெரும் பகுதியைக் கபளீகரஞ் செய்து ஏமாப்புப் பேசுகின்றது.

தீவின் எல்லாப் பகுதிகளிலும் நன்னீர் கிணறுகள் இல்லை. பெரும்பாலும் சவர் நீரே கிடைக்கும். ஆனால், சின்னத்தாய் - பெரியதாய் - ஆலங்கன்றடி என்ற பெயர் கொண்ட கிணறுகள் குடிநீருக்கு வரப்பிரசாதம் இருந்தாலும் இக்கிணறுகளிலே வேளாளர் மட்டுமே நீர் அள்ளமுடியும். 'சிங்களவர்கள் எங்களை நசுக்கிறாங்கள். இந்தக் கொடுமைக்கு ஒரு விடிவே இல்லையா?' என்று மேடை தோறம் அலறுபவர்கள்கூட, பிறந்த மண்ணிலே தமிழர்களுள் ஒரு பகுதியினரை 'இழிசனர்' என ஒதுக்கி வைத்து, அடிமைகளாக நடத்துவதிலே என்ன நியாயம் இருக்கிறது என்று கேட்பதில்லை. யாழ்ப்பாண மண் வேளாளருக்கு மட்டுமே சொந்தம், அதன் நன்னீர் கிணறுகளும் அவர்களுக்கே சொந்தம் எனக் கொட்டம் அடிப்பது நியாயமென்றால், இலங்கை முழுவதும் சிங்கள - பௌத்த 'கோயிகம' சாதியருக்கே சொந்தம் எனத் தென்னிலங்கையில் பேசப்படும் புதிய வேதம் எவ்வாறு நிராகரிக்கப்படலாம்? வயல் வெளிகளுக்கு அப்பால் உள்ள பகுதியே சிறுபான்மைத் தமிழர்களுக்கான குடியிருப்புப் பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இன ஒதுக்கல் கொள்கை தென்னாப்பிரிக்காவில் தோல்வி அடைந்துவிட்டது! ஆனால் காரைநகரில் உள்ள ஜாதி ஒதுக்கல் கொள்கை?

அரும்பு மீசையுடன், கதாநாயகனாகக் கருதப்பட வேண்டும் என்கின்ற ஆசைகளை நெஞ்சிலே சுமந்து, காரைநகர் மண்ணிலே வளரிளம் பருவத்தனாய் தேவகுரு பவனி வந்த காலம்...

அப்பொழுது காதல் எண்ணங்களே கனவிலும் நினைவிலும் வலம்வந்தன. அவருடைய ஏசியா சைக்கிளை மன்மத ரதமாக அவர் கற்பனை செய்து கொண்டார். அழகான கன்னிப் பெண்கள் வாழும் வீட்டுப் படலைகளிலே நாலு ரவுண்ட் அடிப்பது வீரசாதனை. அவர்கள் வீதியிலே வந்தால் கைகளை காற்றிலே எறிந்து அபிநய பாஷைகள் பேசச் சுதந்திரம் அளித்து, சைக்கிளை ஓட்டுதல் தம்மை கதாநாயகனாக அவர்கள் மனசிலே பதிவு செய்யும் எனவும் நம்பினார். 'சண்டித்தனம்' ஆண்மை என்றும், அத்தகைய ஆண்மையையே பெண்கள் காதலிப்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டார். வேறு வகுப்புக்களிலே புகுந்து, ஒருவனை அடித்து நடுங்க வைக்கும் சாகஸங்கள் புரிந்தும், தமது கதாநாயக 'இமேஜை' வளர்க்கலானார். சகமாணவர்கள் அவர் சண்டித்தனங்களை மெச்சிய பொழுது பெருமை அடைந்தார். தன் வன்செயல் நடவடிக்கைகளைப் பாடசாலை நிர்வாகமும், வீட்டாரும் தட்டிக்கேட்டால் ஆபத்தாகிவிடும் என்கின்ற பயம் உள்ளூர இருந்தது. தமது வீர சாகஸங்களைப் பெருமளவில் நிரூபிக்கும் பெரிய களம் ஒன்று வாய்க்காதா என அவர் மனசு இரகசியமாக விரும்பிற்கு. காதல் - வீரம் என்று அவர் மனசு சிறுவன் குரங்காக அவரை அலைக்கழித்த போதிலும், எதிர்வரும் பரீட்சையிலுள்ள ஊக்கத்தை அவர் துறக்கவும் இல்லை.

அன்று தேவகுரு பாடசாலைக்கு வழமை போலத்தான் சென்றிருந்தார். பாடசாலை செல்வதில் சுகம் இருந்தது. பரபரப்பு இருந்தது. பெண்களைப் பார்ப்பதில் இதம் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து பாடசாலை விறாந்தைகளில் சுற்றிவந்ததில் சல்லாபம் இருந்தது. கதாநாயகர்களாக ஊர்கோலம் வருவது சந்தோஷ சல்லாப சுவாசத்தை அருளுவதான திருப்தியும் இருந்தது.

மதிய இடைவேளை முடிந்து சமய பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் சைவப்புலவர். சமய வகுப்பிலே அவர் இளம் மனசுகளைச் சுண்டியிழுக்கும் கதைகளையும் இணைத்துப் பாடம் நடத்துவார். அவற்றை 'பலான' விஷயங்கள் என விளங்கிக் கொள்ளக் கூடாது. 'சமயம் பேரின்பத்திற்கு வழிகாட்டுவது; இதில் வேடிக்கை என்னவென்றால் பேரின்ப சுகம் சிற்றின்பம் என்கின்ற அளவு கோலினாலேதான் அளந்தறியப்படுவது. ஒன்றின்றி மற்றதும் இல்லை. ஆண்டவனின் அற்புத லீலா விநோதங்களைச் சாமானியர் அறியமாட்டார்கள். சிருஷ்டி இறைவனின் தொழில்களும் ஒன்று. அதனை கலவி யினாலும் மனித உறவுகளினாலும், சாதிக்கிறான். அது முதற்படி சிருஷ்டி கர்த்தாவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுகளை உய்த்துணர்தல், அடுத்தபடி...' என்று பல விளக்கங்கள் அடுக்கி, ஆட்சேபனைகளைக் குதறி எறிய வல்லவர். அவருடைய வகுப்பிலே ஒன்றியிருந்தபொழுது அது நடந்தது...

நாலு துறுதுறுத்த இளைஞர்கள் பரபரப்பாகப் பாட சாலைக்குள் நுழைந்தார்கள். ஒவ்வொரு வகுப்பாகப் புகுந்து துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்றார்கள். அவர்கள் வந்தது. எறிந்து சென்றது, திடீரென எழுந்த சுழல் காற்று, மறுகணமே சுவடு தெரியாது மறைந்தது போன்ற மாயம். அந்தத் துரிதமும்-துடிப்பும் புதியன. அன்று, துண்டுப்பிரசுர விநியோகஸ்ரே கதாநாயகர்களாக உயர்ந்தார்கள். அவர்கள் வந்து சென்றது பற்றியே எத்திசையிலும் பேச்சு. அவர்கள் விசிறிச் சென்ற துண்டுப் பிரசுரங்களுள் ஒன்றினைத் தேவகுரு வாசித்தார். அரச அடக்கு முறைக்கும் வன்செயலுக்கும் எதிராகக் குமுறி எழும் இளைஞரின் நவ குரலாய் அது ஒலித்தது. காரை நகரிலே குடிகொண்டிருக்கும் கடற்படை, இரவின் பாதுகாப்பிலே,பொதுமக்கள்மீது கட்டவிழ்த்து விடும் வன் முறைகளை அது பட்டியல் இட்டுக் கூறியது. வதந்திகள் எனச் சொல்லப்பட்ட பல நிகழ்ச்சிகளை அப்பிரசுரம் ஆதார பூர்வமாக நிரூபித்தது. கடற்படை வீரர்களின் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் எதிர்கொள்ளாது போனால், காரைநகர் முழுவதுமே இலங்கைக் கடற்படையின் மகா முகமாக மாறிவிடும் என எச்சரித்திருந்தது. துடிப்புள்ள இளைஞர்களின் வீரமே மண்ணின் மானத்தையும் கௌவரத்தையும் நிலைநாட்ட வல்லது எனவும் துண்டுப் பிரசுரம் விவாதித்தது. இந்தப் புதிய மெய்ம்மைகளை உணர்ந்ததும், அவனுள் உறங்கிக் கிடந்த இன்னொருவன் விஸ்வருபம் பெற்றான்.

'வந்தேன்; பார்த்தேன்; வென்றேன்!' என்று யூலியஸ் சீஸர் வெற்றி மமதையிலே ஆர்ப்பரித்தானாம். இலங்கைக் கடற்படை வீரர்களும் பொன்னாலைப் பாலத்தில் நின்று இவ்வாறு கொக்கரிப்பார்களா? வளரிளம் பருவத்துக் காதல் நினைவுகள் கொச்சையானவை. அதிலே சிரத்தை ஊன்றி, மண்ணையும், இனத்தையும் நேசிப்பதைத் துறந்து விட்டோமோ என்கின்ற குற்ற உணர்பு தேவகுருவைப் பிறாண்டலாயிற்று. வாழ்க்கைக்குப் புதியதோர் அர்த்தம் ஊண்டாகின்ற தவிப்பும் தாகமும் அவர் மனசைப் பற்றிக் கொண்டன.

புதிய அர்த்தம் பற்றிய அக்கறைகள் வளர்ந்து வந்ததற்கிடையில் பத்தாம் வகுப்பிலே சித்தி எய்தினார். இந்தச் சித்தி குடும்பத்தினரை மகிழ்வித்தது. அடுத்த வகுப்பு பல்கலைக் கழகத்திற்குப் போவதற்கான நுழைவாயிலாகும். அவர் படித்த யாழ்ரன் கல்லூரியிலே அவருக்குத் தோதான கற்கைநெறிகள் இருக்கவில்லை. எனவே, அவர் வீட்டிலிருந்து சில மையில் தொலைவில், பொன்னாலைப் பாலத்திற்கு அண்மையில் அமைந்துள்ள காரைநகர் இந்துக் கல்லூரியிலே சேர்ந்தார்.

அங்கு புதிய நட்புகள் கிடைத்தன. அவரைப் பார்க்கிலும் அரசியலும் நாட்டு நடப்புகளும் நன்கறிந்த மாணவர்கள் இருந்தனர். பாடசாலை விட்டதும், அவர்களிலே சிலர்கூடி நாட்டிலே அதிகரித்து வரும் வன்முறையைப் பற்றி விவாதித்தார்கள். தமிழ் அரசியல்வாதிகளிலே அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகக் காணப்பட்டார்கள். தென்னிலங்கையிலே மூர்க்கம் பெற்று வரும் சிங்களப் பேரின வாதத்திற்கு எதிராக, இவர்கள் உருபு வாய்ந்த நடவடிக்கைகள் எடுக்கச் சத்தியற்றவர்களாகக் காணப்பட்டார்கள். சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இன வாதத்தினை வளர்ப்பதில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்கள். இந்த தமிழ் இனமான உணர்ச்சியினை வாக்கு வங்கியாக மாற்றிக் கொண்டனர். நாடாளுமன்றத்திலே பிரதிநிதிகளாய் வலம் வந்து, சில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும், வர்த்தகப் பெருமக்களுக்கான ஆதாயச் சலுகைகளையும் பெற்றுத் தருவதிலே காலம் போக்கினார்கள். நாடாளுமன்றத்திலே சண்டப் பிரசண்டமாகப் பேசி, அவற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளிலே முதற்பக்கச் செய்திகளாக வரச்செய்து தங்கள் வீரத்தை நாட்டினார்கள். பொதுக் கூட்டங்களிலே தமிழனுடைய பண்டைய வீர வரலாற்றினைக் கூறிக் குதூகலித்தார்கள். ஆனால், சிங்களர் தங்கள் திட்டங்களை நேர்த்தியாகச் செயற்படுத்தி வெற்றிமேல் வெற்றி சாதித்தனர். தமிழருள் பேர்பாதிப் பேருக்குத் 'தோட்டக் காட்டான்' என்று பெயர் சூட்டி வாக்குரிமைகளைப் பறித்தார்கள்.

* * * Nalai 1-ன் தொடர்ச்சி * * *

'சிங்களம் மட்டுமே நாட்டின் ஏகமொழி' என்று திணித்தார்கள். தமிழருடைய கல்வி முன்னேற்றத்திற்கு தடை விதிக்க, தரப்படுதல் புகுத்தப்பட்டது. வடகீழ் மாநிலங்களிலே பாரம்பரிய தமிழர் மண் சுவீகரிக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் குடியேற்றங்கள் கொலுவிருக்கச் செய்தனர். கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலம் 'மண் கொள்ளை' செய்யப்பட்டு, இரண்டு சிங்களத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. வடக்கினையும் கிழக்கினையும் ஒரே நிலப்பரப்பாக ஒன்றிணைக்கும் மணல் ஆறு பிரதேசம், வெலிஓயாவாக மறு நாமகரணமிடப்பட்டு, தென்வவுனியாவினை இணைத்து அடங்கா தமிழரின் மண்ணிலே ஒரு தொகுதி உருவாக்கத் திட்டடப்படுகின்றது. இவற்றை எல்லாம் கண்ணுற்றும், தமிழருடைய அரசியல் தலைவர்கள் 'துப்பாக்கிக் குண்டு விளையாட்டுக் குண்டு' 'தூக்குமேடை பஞ்சுமெத்தை' என்று வீரவசனங்கள் பேசுவதிலே காலவிரையம் செய்தார்கள். அவர்கள் சிங்களத் தலைவர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள், அவற்றின் மை உலர்வதற்கு முன்னமே குப்பைத் தொட்டிகளிலே கடாசப்பட்டன! தமிழருடைய மண்ணைக் காக்கவும், தமிழ் இனத்தின் மானத்தைக் காக்கவும் இளைஞர்கள் ஆயுத பாணிகளாகக் களம் குதித்தல் வேண்டும். அஹ’ம்ஸையின் அர்த்தத்தினை மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...ஆனால், சிங்களர்...

தேவகுருவுடன் கல்வி கற்றுக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் திடீர் என்று கல்லூரி வருவதை நிறுத்திக் கொண்டார்கள். விசாரித்தபொழுது, அவர்கள் இயக்கங்களிலே சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.

இவை அனைத்துமே தேவகுருவின் மனசிலே பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த காலத்திலே தான் அது நிகழ்ந்தது. சிவகாமி அம்மன் கோயிலடியில் டிவியில் தொடர்ந்து மூன்று படங்கள் காட்டுவதாக விளம்பரப்படுத்தி யிருந்தார்கள். தீ, தீர்ப்பு, தங்கப் பதக்கம் ஆகியன அப்படங்கள். தேவகுருவுக்கு அக்காலத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரால் 'தங்கப் பதக்கம்' படத்தைத் தியேட்டரிலே திரையிட்டபொழுது, பார்க்க முடியவில்லை. தங்கப் பதக்கம் பார்க்கும் ஆசையிலேதான், அன்று டிவி ஷோவுக்குப் போனார். ஏழ மணிக்கு துவங்கிற்று...ஷோ முடிய மூன்று மணியாகிவிட்டது.

'வீட்டிலே சரியான பாட்டுத்தான் கிடைக்கும்' என்ற பதட்டத்துடன், வீடு நோக்கிச் சைக்கிளை விரைவாக மிதித்தார். தெரு விளக்குகள் சில மின்னி மின்னி எரிந்தன. அவை தமது கம்பங்களுக்கே வெளிச்சம் பாய்ச்சுகின்றனவோ என்கின்ற சந்தேகம். 'ஜெமினி'கடையடிக்கு வந்துவிட்டார். அப்பொழுது திடீரென ஒளி வெள்ளம் ஒன்று அவரைச் சடுதியாகக் குளிப்பாட்டியது; கண்களை கூசச் செய்த ஒளியிலே அவரால் பார்க்கவும் முடியவில்லை. மறுகணம் வழியை மறித்து 'நேவி'க்காறர் ஆயுதபாணிகளாக நிற்பதைக் கண்டார்.

'சைக்கிளை விட்டு இறங்கடா!' என்று கர்ஜனை கேட்டது. சைக்கிளைத் தரிப்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கிடையிலேயே, ஒருவன் திடீரென்று பாய்ந்து சைக்கிளை எட்டி உதைத்தான். சைக்கிள் ஓரிடமும், இவர் பிறிதோர் இடமுமாக ரோட்டிலே விழுந்தார்.

ஒருவன் ஓடிவந்து, சட்டைக் காலரிலே பிடித்துத் தூக்கி நிறுத்தி, 'எங்கயடா போயிட்டு வாறது? எடு ஒண்ட Identity Card என்று கேட்டான். ஷோவுக்கு வரும் அவசரத்தில் தன் அடையாள அட்டையை எடுத்துவர மறந்ததை அப்பொழுதுதான் அவர் உணர்ந்தார். வேறு வழியில்லாது, பதிலும் சொல்லாமல், அவர் விழிக்கத் துவங்கினார். அவர் விழிப்பதைப் பார்த்து, துவக்குப் பிடியாலே அவர் வயிற்றிலே ஓங்கிக் குத்தினான். அந்தக் குத்து அவர் வயிற்றிலே ஏற்படுத்திய உக்கிரமான வலியைத் தாங்காது, 'அம்மா!' என்று அலறியபடி நிலத்திலே குந்தினார்.

கடற்படை வீரர்கள் இருவர் அவருடைய சட்டைக் காலரைக் கொத்தாக பிடித்து 'கொற கொற' வென ஜெமினி கடையோரம் இழுத்து வந்தனர். கடையருகே இருந்த சுவரிலே ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதனைக் காட்டி, 'இது யார்டா ஒட்டினது?' என்று இருவரும் ஏக காலத்தில் கேட்டனர்.

'தெரியாது!' -- அதுதான் உண்மையும்.

'பற தெமிழ!' என்று கத்திய வண்ணம் ஒருவன், துவக்குப் பிடியால் மீண்டும் அவருடைய வயிற்றில் உக்கிரமான ஒரு குத்துவிட்டான். அந்தக் குத்து வயிற்றைத் துளைத்து முதுகுவழியே பீறிட்டது போன்ற வலியை எற்படுத்தியது. தாங்க முடியாத வலியுடன் றோட்டிலே புரண்டு துடித்தார்.

அப்பொழுது, அந்தக் குழுவுக்கு மேலதிகாரியாகச் செயற்பட்ட ஒருவன் அவருக்குச் சமீபமாக வந்தான். சமிக்ஞையாலே அடிப்பதை நிறுத்துச் செய்தான்.

'இனி Identity card இல்லாமல் வந்தா, சுட்டுக் கடலிலே தான் வீசுவாங். பளயாங்...டோய் பளயாங்...' எனக் கூறி விரட்டினான்.

தாங்க முடியாத வேதனையுடனும் அவமானத்துடனும் சைக்கிளை உருட்டிக் கொண்டே வீடு நோக்கி நடக்கலானார்.

அந்தக் கணமே, இயக்கத்திலே சேர்ந்து, ஆயுதபாணியாக காரைநகர் மண்ணிலே ஆதிக்கம் செலுத்தும். சிங்கள அரசு வன்முறையைச் சங்காரம் செய்தல் வேண்டும் என்கின்ற தீர்மானத்திற்கு வந்தார்.

3

நித்தியாயினி வேலைக்குப் போய்விட்டாள். மாலதி சிறிது நேரம் கணக்குச் செய்தாள். அதில் அவள் கெட்டிக்காரி என்பது தேவகுருவின் அபிப்பிராயம். வீட்டிலே ஓய்வு நேரங்களிலே, அவள் தமிழ் கற்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அவரும் நித்தியாவுமே அவளுக்குத் தமிழ் கற்பித்தார்கள். தமிழ் அடையாளங்களுடன் அவள் வளர்வதற்குத் தமிழ் அறிவு இன்றியமையாதது என்று அவர் வற்புறுத்தி வந்தார். தமிழர் கூட்டமைப்பும் வீட்டிலே பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியே வந்தது. சில நாடுகளிலே தமிழர் கூட்டமைப்புகள் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் கற்பித்தலைத் தமது பணிகளிலே தலையாயதாகக் கொண்டு செயற்படுவதை அறிந்து மகிழ்ந்தார். இங்கும் பாடசாலைகளிலே விரைவாக தமிழ்படிப்பிக்கத் துவங்கப் போகிறார்களாம். இது நல்ல ஆரம்பம்.

வீட்டு மொழியாகத் தமிழ்க் குடும்பங்கள் தமிழையே பயின்றன. தமிழ்ச் சொற்களை முறையாக உச்சரிப்பதிலே சிறுவர் இடர்பட்டனர். அவர்களுடைய ஆரம்பக் கலவி நொஸ்க் மொழியில் அமைந்திருந்ததினால், தமிழ்ச் சொற்களைத் திருத்தமாக உச்சரிப்பதிலே அவர்கள் சிரமப்பட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் தமிழ்க் குடும்பங்களிலே நொஸ்க் மொழிச் சொற்கள் சில கலந்து விடுதல் இயல்பு. இதனால், நொஸ்க் சொற்களுக்கும் தமிழ்ச் சொற்களுக்குமிடையில் உள்ள துல்லிய வேறுபாடுகளை இனம் காணுவதிலும் சில பிள்ளைகள் இடர்பட்டனர்.

தேவகுருவின் இடையறாத முயற்சியால், மாலதி தமிழ் எழுத்துக்களை இனம் காணவும், அவற்றைக் கூட்டிச் சொற்களாக உச்சரிக்கவும், ஓரளவு பயின்றிருந்தாள். ஆனாலும், தமிழ் வசனங்களை வாசிப்பதற்கு அவள் இன்னமும் எவ்வளவோ பயிற்சிபெற வேண்டியிருந்தது. அவளுக்குத் தமிழ் மொழி அறிவினை ஊட்டுவதற்காகப் புத்தகங்களை இந்தியாவிலிருந்தும், இலங்கையில் இருந்தும் வரவழைப்பதிலே தேவகுரு என்றுமே சலிப்படைந்ததில்லை. மாலதி தமிழ் கற்பதற்கு உதவக் கூடிய நூல்களை வாங்கி வரும்படி, இந்தியா செல்லும் நண்பர்களிடம் கேட்டுக் கொள்வது அவர் வழக்கம். இதனை அவர் செவிகளிலே விழாத வகையிலே கேலி செய்பவர்களும் உண்டு.

மாலதி சிறிது நேரத்தில் அவர் மடியிலே தூங்கிவிட்டாள். 'இவளுக்கு இப்பொழுது எந்தக் கவலையும் இல்லை. நானும் அவள் தாயும் பிறந்த மண்ணை அறியாள். அவர்களுடைய நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் அறியாள். ஆனால், அறிய வேண்டும். அறிவது மட்டுமல்ல, அவற்றை நேசிக்கவும் மதிக்கவும் தக்க பக்குவம் வளரவேண்டும். அவற்றைச் சரியான முறையிலே ஊட்டத் தவறினால், நாம் நமது கடமைகளைச் செய்யத் தவறியவர்கள் ஆவோம். மீண்டும் பிறந்த மண்ணுக்குச் சென்று, அதனை நேசித்து வாழும் தமிழர்களாக இவர்களை வளர்த்தெடுப்பதுதான் புலம் பெயர்ந்த தமிழர் ஒவ்வொருவருடைய இலட்சியமாகவும் இருக்க வேண்டும். இந்த எண்ணங்கள் அவரை வளைத்துக் கொள்ள, அவள் தலையை பாசமுடன் கோதினார். அவளுடைய தூக்கத்தினைக் கலைத்து விடாத பக்குவத்தில், அவளைக் கட்டிலிலே வளர்த்தினார். மீண்டும் ஹோலுக்குள் வந்தார். டிவியை இயக்கி, சத்தத்தினைக் குறைத்து வைத்தார். நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் செய்தி பார்க்க அவர் தவறுவதில்லை. உலகச் செய்திகளை அக்கறையுடன் அறிந்து வைத்தல் ஒருவனை முழுமனிதனாக்குகிறது என்பது அவர் அபிப்பிராயம். செய்திகளை டிவியில் பார்ப்பது வசதியானது. சம்பவங்களை நேரிலே கண்டிறிவது போன்ற அநுபவம் வாய்க்கும்.

'NRK' வில் (நோர்வே அரச ஒலி--ஒளிபரப்பு கூட்டுத் தாபனம்) செய்திகள் ஒழுங்கற்ற முறையிலே ஒளிபரப்பாகும். உள்நாட்டு செய்தி ஒன்றினைச் சொல்லி, திடீரென்று வெளிநாட்டு செய்தி ஒன்றுக்கும் பாய்வார்கள். வெளிநாட்டுச் செய்தியை கைவிட்டு உள்நாட்டு செய்திக்கு மீண்டும் வருவார்கள். இத்தகைய ஒரு குழம்பிய வரிசையை ஏன் கடைப் பிடிக்கிறார்கள் என்பது தேவகுருவுக்கு விளங்கவில்லை.

வெளிநாட்டுச் செய்தி ஒன்றிலிருந்து, மீண்டும் உள்நாட்டுச் செய்தி ஒன்றிற்குத் தாவிற்று. 'ஒஸ்லோவில் நவநாஜிகள்' என செய்தி தொடங்க, தேவகுரு நிமிர்ந்து உட்கார்ந்தார். நவநாஜிகள் வாழும் இடத்தைக் கண்டறிந்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. 'நாஜிகளுக்கு எதிரான இளைஞர்கள் அணி' (Antirasister) தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது. கட்டடத்தின் உள்ளே வசித்த நவநாஜிகள், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைக் கற்களையும் மற்றும் உடற்சேதம் ஏற்படுத்தக்கூடிய பொருள்களையும் வீசித் தாக்கி இருக்கிறார்கள். இந்தக் காட்சி ஆரம்பத்திலே காட்டப்பட்டது. பின்னர், போலிஸார் வந்து, கட்டடத்தின் உள்ளே இருக்கும் நவநாஜிகள் வெளியே வருமாறு கட்டளை இட்டார்கள். உள்ளே இருந்தவர்கள் கட்டளைக்குப் பணியாது, போலிஸாரையும் கற்களும் கூரிய பொருள்களும் வீசித் தாக்கிக் கொண்டிருந்தார்கள். போலிஸார் கண்­ர்ப் புகைக் குண்டுகளை வீசி, உள்ளே இருந்தவர்களை அடக்கி கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட இளைஞர் பட்டாளத்திலே ஒரு பதின் மூன்று வயதுச் சிறுமியும் இருந்தாளாம்.

உள்ளே இருந்து துப்பாக்கி, கத்தி, கோடரி மற்றும் பல கூரிய ஆயுதங்கள், கணிப்பொறி ஒன்று, கோப்புகள் எனப் பல பொருள்களைப் போலிஸார் அள்ளிக் கொண்டு வந்தனர்.

நவநாஜியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிறுமியைப் பற்றி அறிந்ததும், தேவகுருவுக்குத் தொடர்ந்து செய்தி பார்க்கும் சுவாரஸ்யம் இற்றுப் போனது.

'பதின்மூன்று வயசுச் சிறுமி. அவளுக்கு என்ன விபரம் தெரியும்? வரலாற்று உண்மைகள் அத்தனையையும் சீர்தூக்கி, பகுப்பாய்வு செய்தா நவநாஜி இயக்கத்திலே சேர்ந்தாள்? ஹ’ட்லரும் முசோலினியும் சாதித்தவை என்ன? முசோலினி நாயைப் போல இத்தாலியர்களினாலேயே கொல்லப்பட்டான். அவனுடைய பிணத்தினை தலைகீழாக தொங்க விட்டு மகிழ்ந்தார்கள்! ஹ’ட்லர் உலகையே ஆரிய ஜெர்மனிய இனம் வெற்றி கொண்டு அடக்கி ஆளும் எனக் கொக்கரித்தான். யூத இனத்தினைப் பூண்டோடு அழிப்பேனெனச் சபதம் செய்தான். பூதர்களை மிருகங்களாக நடத்தினான். நக்சு வாயுக் கிடங்குகளில் ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்து பிணமலைகளை உண்டாக்கினான். ஈற்றிலே...வரலாற்றிலே மிகத் துக்ககரமான கறைகளை ஏற்படுத்திய இந்தப் பகுதியை நாகரிக உலகம் மறக்க முயலுகின்றது...இடையிலே இந்த நவநாஜிகளின் தோற்றம்...இவர்கள் மீதுள்ள யூதர்களை அழிக்கப் போகிறார்களா? அவர்களுக்கென்று இன்று ஒரு நாடே இருக்கும்பொழுது இது சாத்தியமா?...இல்லை...புதிதாகச் சுதந்திரம்பெற்ற, அந்தச் சுதந்திரம் மண்ணின் மைந்தர் அனைவருக்கும் கிடைப்பதை தடுக்கும் அரசியல்வாதிகளுடைய நரவேட்டைகளுக்குத் தப்பி, ஐரோப்பிய நாடுகளிலே குடியேறியுள்ள ஆசிய - ஆப்பிரிக்க மக்களை கொன்று குவிக்கப் போகிறார்களா?...விஞ்ஞானம் வளர வளர மனித குலத்தை அழிக்கும் ஆயுதங்களின் ஆற்றலும் வகைகளும் பெருகப் பெருக, மனிதனுடைய உள்ளங்கள் சிறுத்துச் சிறுத்துக் கடுகாகிக் கொண்டு வருகின்றனவா? ஆயுத உற்பத்தி செய்யும் குபேர நாடுகள் உள்நாட்டு யுத்தங்களை நெய்யூற்றி வளர்க்கின்றன. அந்த சக்திகளே இந்த நவநாஜிகள் போன்ற அழிவுச் சக்திகளையும் வளர்த்து வருகின்றவா? ஜனநாயகம் என்கின்ற பெயரிலே பண நாயகமே வளர்த்தெடுக்கப்படுகின்றது.

'விஞ்ஞான வளர்ச்சியின் துணையினால் வசதிகள் பெருகும்பொழுது, இளைய சமுதாயத்தினை வளர்த்தெடுக்கும் கடமையை மனிதகுலம் மறந்துவிடுகின்றதா? கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது என்ன?...மீண்டும் இலை குழைகளை அணிந்து குகை வாழ்க்கையை மேற்கொள்வதா? உரிமையும் சுதந்திரமும் தமது உறவுகளைத் துண்டித்துக் கொண்டனவா?...நன்னீர் ஆற்றுடன் கலக்கும் சிற்றோடைகளும் புனித தீர்த்தமாக பிரவசித்து ஓடும். ஆனால் அந்தச் சிற்றோடைகள் சாக்கடைகளுடன் கலந்தால்?...

'கடந்த இரண்டு உலக மகா யுத்தங்களினாலும் மனித குலம் எதாவது படிப்பினைகளைப் பெற்றிருக்கின்றதா?...பேரழிவுகளையும் அநர்த்தங்களையும் விளைவிக்கும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு பல்லாயிரம் கோடி பணத்தை ஏன் மனித குலம் ஆண்டு தோறும் செலவழிக்கின்றது? குபேர நாடுகள் மட்டுமா? கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாடி வதங்கிக் கொண்டிருக்கும்பொழுது, இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் தேவையா?...

தேவகுருவின் சிந்தனைகள் அறுந்தன. மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலே, ஜலவாயு குண்டுகளின் உற்பத்தி பற்றிய எக்காளம் அவர் நெஞ்சினை நோகடித்தது. நெஞ்சு வலித்தது. டிவியை நிறுத்தினார். பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் சென்றார். தூங்கும் அவர்களைப் பார்த்தார். அந்தப் பிஞ்சுகளின் முகங்களிலே தெய்வீகக் களை வீசுவதாக அவருக்குத் தோன்றியது.

'ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உலகம்' என்று சொல்லப்படுகின்றது. மனிதனின் தனித்துவம் உலகம் போன்று அகண்டது. இந்தத் தனித்துவங்கள் எத்தனை கோடி? இந்தத் தனித்துவங்களின் கூட்டுத் தொகைதானே மனித குலம்? தனித்துவத்தின் எல்லைக்கோடு எங்கே மங்கி மறைந்து, சமுதாய வாழ்க்கை எங்கே ஆரம்பிக்கின்றது....'

கோகிலாவை வாஞ்சையுடன் அணைத்தார்.

இத்தீவிலே, கடலை நோக்கித் தவம் செய்யும் கோலத்திலே, கடற்கரையில் ஒரு வீடு உண்டு. மற்றைய வீடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பது போல. தனிமை சுகிக்க வசதியானது. நீல நிறத்திலே குளிப்பாட்டி எடுத்தது போன்றது அதன் கோலம்.

அந்த வீட்டிற்குள் நால்வர் இருந்தார்கள். அவர்களுக்குத் தலைவனைப் போல செல் காணப்பட்டான். திருப்பதியான் மொட்டை போன்ற தலை. வெளிச்சத்திலே மின்னும் அந்த மொட்டைத் தலை அவனுக்கு ஒருவித பயங்கரத்தை அப்புவது போலவே அமைந்தது. அவன் முகத்திலே கொடூரம். அகங்காரத்தினாலும் விரோத வெறியாலும் அந்த குரூரம் அவன் வசமாகி இருக்கலாம்.

காறால்ட் தலைமயிர் இயல்பில் வெள்ளைநிறம். ஆனாலும் அந்த மயிருக்குப் பச்சை 'டை' போட்டிருந்தான். மனிதத் தலைமுடியின் இயற்கை நிறம் எதிலும் சேராத ஒரு தனித்துவ நிறத்திலே தன் தலைமயிர் தோன்றுதல் வேண்டும் என விரும்பினான். அவன் நெஞ்சிலே மனித விரோத ஜுவாலை கொழுந்து விட்டெரிந்தது. நால்வருள்ளும் இவனே குள்ளமானவனாகத் தோன்றினான்.

தலைமயிர் மூலம் அல்பிரேட் எந்தவிதமான தனித்துவ அடையாளத்தினையும் புனைந்து கொள்ளவில்லை. சாதாரண நொஸ்குகளின் தலையலங்காரத்தினை அவன் ஏற்றிருந்தான். இருப்பினும், அது பின் பக்கம் நீட்டாக வளர்ந்து, கழுத்திலே தொங்கிற்று. கிழிந்த ஆடைகளை அணிந்திருந்தான். பாவனையால் கிழிந்தன அல்ல. அந்த ஆடைகளின் தனித்துவ அடையாளங்களே அந்தக் கிழிசல்கள்தான்.

ஜோன் மட்டும் வெகு சாதாரணமானவனாகத் தோன்றினான். நொஸ்க்குகள் கூடியுள்ள கூட்டம் ஒன்றிலே, அடையாளம் காட்ட முடியாத அளவுக்குக் கரைந்து விடக்கூடிய மிக இயல்பான தோற்றம் அவனுடையது. இந்தச் சாதாரணம் என்கின்ற புனைவு அவன் வற்புறுத்தி ஏற்றுக் கொண்டது. நால்வரிலும் அவனே மிகப் பயங்கரமான இனவாதி. உலகில் வெள்ளைத்தோல் மனிதர்களுக்கு மட்டுமே சகல வளங்களையும் அநுபவித்து வாழும் உரிமை உண்டு என்கின்ற கடுமையான இனவாதி!

ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகமா? அப்படியானால், அந்த வீட்டிற்குள் நான்கு உலகங்கள் ஒன்று கூடி இருந்தன. ஆனாலும், அந்த நால்வரும் ஒரு கொள்கையிலே ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததினால் ஒரு குழுவாக இயங்க விரும்பினார்கள்.

நோர்வே மக்களையும் கோப்பியையும் பிரிக்க முடியாது. அந்த அளவில் அவர்கள் கோப்பிப் பிரியர்கள். அவர்கள் கோப்பிப் பிரியர்களாக மாறுவதற்கு கர்ண பரம்பரையான கதை ஒன்று உண்டு. அவர்களுடைய வீடுகளிலே கோப்பியின் இனிமையான ஒரு மணம் தொங்கிக் கொண்டு நிற்கும்! ஆனால், இந்த நீல வீட்டிற்குள் மது நெடியே சர்வ வியாபகமாகப் பரவியிருந்தது. அவர்கள் நால்வரும் அதிகமாகவே மது அருந்தியிருக்க வேண்டும். காலியான மதுப்போத்தல்கள் ஒரு மூலையோரமாகக் குவிந்து கிடந்தன.

அங்கு நிலவிய அமைதியை விரும்பாதவனைப் போல, 'அன்றைக்கு அந்த இரண்டு பேருக்கும் நல்ல பாடம் படிப்பிச்சிருக்கிறம்...' என்று செல் திடீரென்று சொன்னான்.

'அவங்கள் சரியாப் பயந்து போனாங்கள். இனி, தனிய நடந்துவரச் சரியா யோசிப்பினம்' என்று ஜோன் ஆமோதித்தான்.

'ஒரு பக்கம் பார்க்கப் பாவமாகவும் இருந்தது.'

'இந்த விஷயங்களில பாவ புண்ணியம் பார்க்க ஏலாது.'

'இல்லை ஒரு கதைக்குச் சொல்லுறன்.'

'இவங்களைச் சரியான இடத்திலை வைச்சிருக்க வேணும். இல்லாவிட்டால் பிறகு வில்லங்கம்.'

'இப்ப அவை காரில திரியிற மாதிரி இருக்கு.'

'இவங்கள் கொலைப் பயத்தில ஒவ்வொரு நாளும் நடுங்கிச் சாகோணும். அப்பதான் வழிக்கு வருவினம்.'

மீண்டும் ஒரு ரவுண்ட் மது அருந்தி முடித்தார்கள். கதை மாறியது.

'நேற்று டிவியில் வந்த செய்தி தெரியுமா?'

'எதைச் சொல்லுறாய்?'

'ஜெர்மனியில் மூன்று தமிழரைக் கொளுத்திப் போட்டாங்களாம். இந்த நாய்களைக் கொளுத்தினால் தான் ஊருக்கு ஓடுங்கள். இல்லாவிட்டால் சரிவராது...'

'எங்க திரும்பினாலும் கறுத்த நாய்களாகத்தான் கிடக்குது. அதுகளைக் கண்டவுடன் அடித்துக் கொல்லவேணும் என்பது போலத்தான் எனக்கு ஆத்திரம் வருகுது.'

'இதுகளால பிரச்சனைகள் ஒன்றோ இரண்டோ? அவங்கட்ள படிக்கிற பள்ளிக்கூடத்தில ஒரே உள்ளி மணமாம்.'

'இந்தப் பவிசுகளில அவங்களுக்கு டிஸ்கோ வேறை தேவைப் படுகுதாம்.'

'சும்மா வந்தாங்கள். இப்ப அவங்களிட்ட கார் இருக்குது. வீடு இருக்குது. வங்கியில நிறைய காசு இருக்குது. நாங்கள் வேலை இல்லாமல் அலையிறம்.'

'நாலுபேர் முதலில வந்தாங்கள். இப்ப இருநூறு முன்னூறு இருக்கும். போற போக்கில வார்டோவையே பிடிச்சிடுவாங்கள் போல இருக்குது.'

'வேறை என்ன? ஒருவன் எத்தனையைப் பெத்து வைச்சிருக்கிறான் தெரியுமே? எங்கடை சனங்கள் ஒன்று; மிஞ்சினால் ரெண்டு. அவங்கள் ஐஞ்சாறெண்டு பெத்து பெருகிறாங்கள்...'

'எல்லாம் எங்கடையளின்ர வரிப்பணத்தில வளருதுகள்.'

'பிச்சைக்கார நாட்டிலே, இவை இருந்த இருப்புத் தெரியாதோ? இஞ்சை அசையின்ர கார்கள் என்ன? அவை ஓடுற ஓட்டம் என்ன?'

'இவங்களை அடிக்க வேணும். இவங்களை அடிச்சுத்தான் எங்கட நாட்ட விட்டு ஓட்டவேணும்.' நோர்வே நோர்வேக்காரனுக்குத்தான்; கண்ட நாய்களுக்கும் இல்லை. இந்தப் பன்றிக் கூட்டம் காட்டுக்கு ஓடவேண்டும்' என்று இந்த உரையாடல் மத்தியில் ஜோன் குரல் எழுப்பிக் கத்தினான்.

'ஜோன், கொல்லுறதிலும் பார்க்க, அவங்களை வீடடோட கொளுத்தி அழிச்சாலும் நல்லது என்று எனக்குப் படுகின்றது?' எனச் செல் உற்சாகமாக கூறினான்.

'இல்லை; அப்படி ஒன்றும் செய்யேலாது. இது சின்ன இடம். கரைச்சலில் மாட்டலாம். ஒவ்வொருத்தனாக பார்த்துப் பார்த்து இருட்டடி போட வேணும். பிரச்சனைகளிலே மாட்டிக் கொள்ளாது, தொடர்ந்து தொந்தரவு கொடுக்க வேணும்.' என்று காறால்ட் திருத்தம் பிரேரித்தான்.

'நாங்கள் எதாவது நோட்டீஸ் அடித்து விட்டால் என்ன? என்று அல்பிரேட் கேட்டான்.

'ஓம் அடிக்கலாம் யாருக்கு எப்படி அடிக்கிறது?'

'தமிழருக்குத்தான்!'

'நோட்டீஸ் வாசகம் என்ன?'

'பன்றிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டு, வெளியேறாவிட்டால் கொளுத்திப் பொசுக்குவோம் என்று எச்சரிக்கை விடுவோம்.'

'இங்க செல்லிடம் கொம்யூட்டரும் ரைட்டரும் இருக்கிறது வசதியாய் போச்சுது.'

'இது நல்ல யோசினை. என்ன எழுதுறது என்று தீர்மானித்தால், இப்பவே வேலையைத் துவங்கலாம்.'

'நல்லா யோசிச்சு எழுத வேணும்.'

'யாரும் காணாமல், இரவு ஒரு மணிக்குப் பிறகு கொண்டுபோய்ப் போட வேணும்...'

'ஓ...போலிஸ் வில்லங்களுக்குள் மாட்டக் கூடாது.'

'நல்ல முறையில கவனமாச் செய்யவேணும்.'

'ஓகே. கதைச்சது போதும். இப்ப என்ன எழுதவேண்டும் என்று சொல்லுங்கோ....'

'முதலில பேப்பரில எழுதுவம்.'

'ம்...'

எல்லோரும் சிறிது மௌனமாயினர். செல் பேப்பரும் பேனாவும் எடுத்து வந்தான். 'இவங்களுக்கு மரியாதை தேவையில்லை. காசுக்காக எதுவும் செய்யக் கூடிய பன்றிகள்...' என்று ஜோன் மௌனத்தை உடைத்தான்.

'அப்ப நீ சொல்லு...நான் எழுதுகிறேன்.'

இடையில் சில திருத்தங்களைச் செய்து நோட்டீஸ’ல் போடுவதற்கான வசனங்களை எழுதி முடித்தார்கள்:

பன்றிகளே வெளியேறுங்கள்!

இது எங்கள் நாடு. எங்கள் நாடு எங்களுக்கே. இங்கு உங்களுக்கு இடமில்லை. இது உங்களுக்கு முதல் எச்சரிக்கை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், என்ன நடக்கும் தெரியுமா?

ஜேர்மனியில் நடப்பது போல உங்கள் வீடுகள் எரியும். அதற்குள் நீங்கள் பன்றிகளைப் போல வாட்டி எடுக்கப் படுவீர்கள்.

உங்களை எச்சரிக்கிறோம். எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவாக எமது மண்ணை விட்டு வெளியேறுங்கள்.

நோர்வே நூர்மனுக்கே!

நோட்டீஸ’ன் வாசகங்களிலே நால்வரும் திருப்திப் பட்டார்கள். கம்ப்யூட்டரில் வாசகங்களை மீண்டும் வாசித்தார்கள். தலைப்பு முப்பது 'பாயின்ற்' பெருப்பத்தில் இருந்தது. உள்ளடக்கம் இருபதில் அமைந்தது. 'நோர்வே நூர்மனுக்கே!' என்பது இருப்பத்தைந்தில் வடிவமைக்கப்பட்டது. லேசர் றைட்டர் துணை செய்தது. மொத்தம் நூறு படிகள் பிறிண்ட் அவுட் எடுக்கப்பட்டது.

எல்லோர் முகத்திலும் சந்தோஷமும் ஒருவகைப் பரபரப்பும் காணப்பட்டது. மணி பன்னிரண்டு. மேலும் ஒரு மணிநேரம் காத்திருந்தனர். இருவர் கொண்ட கோஷ்டியாகச் செயற்பட வசதியாக நோட்டீஸை பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பொழுது இரவின் இருள் பரவி இருந்தது. எந்த நடமாட்டத்தையும் வீதியில் காணவில்லை.

அல்பிரேட்டும் ஜோனும் ஒரு திசையில் நடக்கத் துவங்கினர். செல்லும் காறால்ட்டும் மறுதிசையில் நடந்தனர்.

இலங்கையில் இருந்து ஏதாவது கடிதம் வருகிறதா என்று தினமும் தபால் பெட்டியைத் திறந்து பார்ப்பது தமிழருடைய வழக்கம். அன்று தபால்களைப் பார்த்த போது, இந்தத் துண்டுப் பிரசுரமும் அவர்களுடைய கைகளிலே கிடைத்தது.

நித்தியாயினிக்குத் துண்டுப் பிரசுரத்தை வாசித்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கையில் ஆயுதம் இருந்தால், இதனை எழுதியவனைச் சுட்டுக் கொன்றால் மட்டுமே ஆத்திரம் அடங்கும் என்கின்ற வகையிலே ஆவேசப்பட்டான். இந்த முனிவின் உச்சம் ஒரு கணந்தான். பிறகு ஒருவகைத் துக்கமும் இயலாமையும் அவளை வளைத்துக் கொண்டன.

அவள் வேலைக்குப் புறப்பட்டு நின்றாள். தேவகுரு வீடு வந்ததும், அவள் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அவர் வந்ததும் 'இந்த நோட்டீஸ’ல அந்த அறுவான்கள் என்ன எழுதியிருக்கிறாங்கள் என்டதை வாசிச்சுப் பாருங்கோ' என்று நோட்டீஸைக் கொடுத்துவிட்டு, அவள் வேலைக்குப் புறப்பட்டாள். தேவகுரு நோட்டீஸை வாசித்த பின்னர், மிக அமைதியாக அதன் வாசகங்களை அசைபோட்டார்.

துண்டுப் பிரசுர வாசகத்திலே கோபம் இருந்தது. அறியாமையும் இருந்தது. குறுகிய எண்ணம் மட்டுமல்ல, வலோற்காரமான ஒரு கோட்பாடும் பின்னிப் பிணைந்திருந்தது. தமிழர்களை மரியாதைக் குறைவாக நடத்தி, அவர்களைப் பயமுறுத்தி அடிபணியச் செய்யும் குயுக்தி அந்த வாசகத்தின் மறைவில் பதுங்கியிருந்தது. இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதையும், அவர்களுடைய எண்ணிக்கைப் பலம் எத்தகையதாக இருக்கும் என்பதையும் அவரால் நிதானிக்க முடியவில்லை. ஆனாலும், இந்தத் துண்டுப்பிரசுரம் ஏற்படுத்தக் கூடிய பரப்பரப்பும் எதிர்வினையும் அவருக்கு கவலை அளித்தன.

தேவகுரு எதிர்பார்த்தது போலவே, அங்கு வேலை செய்த தமிழர்கள் மத்தியிலே அந்தத் துண்டுப் பிரசுரம் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. பலதரப்பட்ட கருத்துக்கள் அவர்கள் மத்தியிலே அடிபடுவதாகவும் அறிந்தார்.

'இது அவன்ர நாடு. இதைத்தான் அவன் சொல்லுறான்.'

'இது சில வம்புகள் செய்யிற கூத்து. நோட்டம் விட்டுப் பார்க்கிறாங்கள்.'

'ஜெர்மனியில நடக்கிறதுபோல இங்கையும் நடந்தால்? இங்க இருந்து கிலிசகேடு படுறதைப் பார்க்கிலும் ஊருக்குப் போறதுதான் புத்தி...'

'இந்த நாட்டுக்காரங்கள் அன்பானவர்கள். மனித நேயம் மிக்கவர்கள். சில குசும்பர் செய்யிற போக்கிரித்தனங்களுக்கு அவங்கள் செய்வாங்கள்?'

'என்ன இருந்தாலும் இதை முளையில கிள்ளி எறிய வேணும். எதையும் வளரவிட்டால் ஆபத்துத்தான்.'

இத்தகைய பலதுபட்ட அபிப்பிராயங்கள் மத்தியிலே, தமிழர் கூட்டமைப்புக் கூட்டப்படவேண்டும் என்கின்ற கருத்து வலுவடைந்தது. இதனைச் செயற்படுத்தும் வகையிலே அதன் தலைவர் சற்குணம் சனி மாலை கூட்டமைப்பின் கூட்டம் ஒன்று நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கு வாழும் எல்லாத் தமிழ்க் குடும்பங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது போல நிறையப் பேர் கூடியிருந்தார்கள். பலரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாகக் காணப்பட்டார்கள். இளைஞர்கள் ஆத்திரத்தின் வசப்பட்டவர்களாக, 'ஒரு கை பார்க்க வேணும்' என்கின்ற மோஸ்தரில் வந்திருப்பதையும் அவர் அவதானிக்கத் தவறவில்லை. இந்தக் கூட்டம் அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமையலாம் என்று எண்ணினார். இருப்பினும், தமது இருப்பினை ஒரு புறத்தில் ஒதுங்கி அமர்ந்து கொண்டார்.

கூட்டம் துவங்கியது.

'இன்றைய பிரச்சினைகளுக்கு தேவகுரு அவர்கள் தலைமை தாங்க வேண்டும் என நான் பிரேரிக்கிறேன்' என்று யாரும் எதிர்பார்க்காத சடுதியில் சற்குணம் எழுந்து சொன்னார்.

'நான் இதனை ஆமோதிக்கிறேன்' என்று ரகு எழுந்து சொன்னான். தேவகுரு மிகவும் நிதானமானவர் எனப் பெயர் எடுத்திருந்தார். அத்துடன், அவர்கள் பிரச்சினைகளை ஆழமாகவும் நுட்பமாகவும் பார்க்கக் கூடியவர் என்று சற்குணம் நம்பினார்.

தேவகுருவுக்குச் சங்கடமாக இருந்தது. தயங்கினார்.

'போங்கள் - போங்கள்' என்று சபையோர் பலரும் உற்சாகமாகக் கத்தினார்கள். மக்கள் வைத்துள்ள மரியாதையையும் நம்பிக்கையையும் உதாசீனப்படுத்த விருப்பம் இல்லாதவராக, சற்குணரின் பக்கத்திலே காலியாக இருந்த ஆசனத்திலே சென்றமர்ந்தார்.

'இந்தப் பிரச்சனைக்கு என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டமைக்கு நன்றி. நாங்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட, மேலும் பாதிக்கக் கூடிய விஷயம் இது. உணர்ச்சிக்கு இடம் கொடுக்காது. அறிவுக்கும் நியாயத்துக்கும் முதலிடம் அளித்துப் பிரச்சனையை அணுகும்படி கேட்டுக் கொள்கிறேன். பகை சின்னதாகவும் இருக்கிறது. ஆரம்பக் கட்டத்திலும் இருக்கிறது. இதையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறித் தேவகுரு அமர்ந்தார்.

'பகையில சின்னன் பெரிசு எண்டு இல்லை. இப்பிடித் தான் ஜெர்மனிலையும் எங்கட சனம் விட்டிட்டு இருந்தவை. பிறகு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்' என்ற அமுதன் எழுந்து நின்று வெடித்தான். அவன் எதிலும் அவசரக்காரன். தீவிரவாதி என்று பெயர் பெற்றிருந்தான்.

'அமுதன் சொல்லுறது சரி. நாங்களும் எதாவது நடவடிக்கை எடுக்க வேணும். குனிஞ்சால் குட்டிக் கொண்டே இருப்பாங்கள். இதுதானே எங்கள் தாயக மண்ணிலே நடந்தது?' என்று அர்ஜுன் சொன்னான். அவன் துணிந்தவன்; செயல்வீரன் என்று தமிழர் மத்தியிலே மதிப்புப் பெற்றிருந்தான்.

'முதலிலை போலிஸ் நடவடிக்கை எடுத்தால் என்ன? எங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் செயல் இது. எங்களுக்குப் பாதுகாப்புத் தருவது போலிஸாரின் கடமை' என்று ரகு சொன்னான்.

'ஓமோம், தாயக மண்ணிலும் எங்களுக்குப் போலிஸார் தாற பாதுகாப்பை நாங்கள் அறியாமலா இருக்கிறம்.' என்று அமர்ந்தபடியே அர்ஜுன் நக்கலடித்தான். ஒழுங்கு மாறிப் பிரச்சினை வளர்வதை அறிந்து சற்குணம் எழுந்தார்.

'தம்பி ரகு போலிஸ”க்குப் போகலாம் என்று நினைக்கிறார் போல. இந்த நோட்டீஸை அச்சிட்டு வெளியிட்டவங்கள் யார் என்று தெரியாது. இந்த நிலையில போலிஸ் என்ன செய்யும்? டயர் களவு போனது என்று முறைப்பாடு செய்தாலும், எடுத்தவன் யார் எண்டு தெரிஞ்சால் வந்து சொல் என்றான் போலிஸ். இந்த நோட்டீஸை போலிஸ’ல கொடுத்தால் என்ன சொல்லுவாங்கள்? இதைச் செய்தவன் யார் யார் எண்டு தெரிஞ்சால் வந்து சொல்லுங்கோ என்று சொல்லப் போறான். பிறகு? வீண் அலைச்சல்; பிரயோசனம் இருக்காது எண்டு நினைக்கிறன்' என்று சொல்லிச் சற்குணம் அமர்ந்தார்.

இந்தப் பேச்சுக்குப் பின்னர் அமைதி நிலவியது. பிறகு சபையோர் மத்தியிலே குசுகுசு என்று தங்களுக்குள் கதைக்கும் பராக்குள் எழலாயின. இந்தச் சந்தர்ப்பத்தில் தேவகுரு எழுந்தார். மிக நிதானமாக ஒவ்வொரு சொல்லாக உச்சரித்துப் பேசத் தொடங்கினார்.

'நாங்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறம். முதலிலே எங்களுடைய மன இறுக்கங்களை இலகு படுத்திக் கொள்ளுவம். அதற்காக நான் ஒரு கதை சொல்லுறன். பாரதியார் என்கின்ற கவிஞரை எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரைப்பற்றி 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்று ஒரு புத்தகம் வந்திருக்கு. பாரதியார் நாட்டு விடுதலையை நேசித்து அதற்காக வாழ்ந்தவர். 'ரௌத்திரம் பழகு' எனப் புதிய ஆத்திச்சூடி எழுதியவர். அவர் வன்முறைக்கு எதிராளி அல்ல. ஒரு தடவை ஓர் ஆங்கில மாது பேசிக் கொண்டிருந்தார். அந்த மாது பாரதியாருக்குச் சொன்ன வசனங்கள் அப்படியே இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன. 'போர் ஒரு நாளும் நன்மை பயக்காது. ஒரு போர் இன்னொரு போருக்கு நியாயமாகிறது. தோல்வி கண்டவர் வெற்றி கொண்டவர் மீது வன்மம் பாராட்டுவார்கள். போரில்லாத அன்பு வழியே உலகில் அமைதியைக் கூட்டும். அகிம்ஸையும் அன்புமே அமைதிக்கு உகந்தவை. அன்பையும் அகிம்ஸையையும் தவிர ஆத்திரமும் போரும் அமைதிக்கு வழி இல்லை...' நிறுத்தி சபையோரை நோட்டமிட்டார். குறிப்பாக அர்ஜுனையும் அமுதனையும் பார்த்தார். அமைதி நிலவவே தொடர்ந்து பேசினார். 'நோட்டீஸை அடிச்சு எங்களுடைய தபால் பெட்டிகளிலே போட்டிருக்கிறாங்கள் என்று கோவப்படுவதில அர்த்தமில்லை. அவர்களுக்கு உள்ள பிரச்சினையை நாங்கள் முதலில் புரிஞ்சு கொள்ள வேண்டும்.

'பகைவனின் மனநிலையைப் புரிஞ்சு நாங்கள் செயற்பட வேண்டும். எடுத்ததும் வன்மம் பராட்டினால் அது தொடர் கதையாக போயிடும். அது தேவையில்லை. வன்மம் பாராட்டினால், எங்களைத் துன்பங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறியளே?

'நாங்கள் மனிசர்கள். எங்களுக்கும் நாகரிகமாக வாழத் தெரியும் என்கின்ற எண்ணத்தை இவர்களுக்கு ஊட்ட வேணும் என்பதுதான் முக்கியம். உங்களுக்குத் தெரிஞ்ச உதாரணத்தை நான் சொல்லுறன். நாய் எங்களைக் கடிச்சுப் போட்டுது என்பதற்காக, நாங்கள் படுத்துக் கிடந்து நாயைக் கடிக்க வேணுமே? அது எங்களைக் கடிக்கிறதுக்கு முன்னர் விலகிறதுதான் புத்தி. அதை இதை அதுக்குப் போட்டு, அதவாலாட்டச் செய்யிறது எங்கட கெட்டித்தனம். விளங்குதுல்லே?

'நான் இந்தக் கூட்டத்தில உங்கள் சார்பாக ஒரு யோசினையை முன்வைக்கிறன். அந்த யோசினையை நீங்கள் பரிசீலனை செய்து பருங்கோ...நாங்கள் நோர்வேயின் நல்லிதயம் கொண்ட மக்களுடைய பார்வைக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுவம். தாயகத்தில் நாங்கள் அடைந்த துன்பங்களையும், பிறந்த மண்ணிலே வாழக்கூட முடியாது இங்கு அகதிகளாக வந்து நிலைபரத்தினையும், சுருக்கமாக விளக்குவம். இங்கிருந்து மக்கள் கடந்த ஒரு காலப் பகுதியில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து சென்றார்கள். அவர்களுக்கு அங்கு வாழ்ந்த மற்றைய அமெரிக்கர் இம்சை செய்திருந்தால் அவர்களுடைய மனோநிலை எப்படி இருந்திருக்கும் என்று அவர்களுடைய மனிதாபிமானத்தினைக் கிளறும் வகையில் கேள்வி கேட்போம். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள நிறபேதங்களுக்கு நாங்கள் காரணர் அல்லர். இதனை அவர்கள் உணருதல் வேண்டும்.

'நாங்கள் இந்த நாட்டிற்கு அவர்களுடைய கருணா சுபாவத்தினை நம்பி விருந்தினர்களாக வந்திருக்கின்றோம். எங்களை இம்சைப் படுத்துவதும், அவமதிப்பதும் அவர்களுடைய பெருந்தன்மைக்கும் நாகரிகத்திற்கும் சற்றும் பொருந்தாது என விளங்கப்படுத்துவோம். நாங்கள் அடையும் துன்பங்களையும் அச்சங்களையும் அவர்களுடைய மனங்களைத் தொடும் வகையில் முன்வைக்க வேண்டும். நாங்கள் சிலபேர் ஒன்றாக அமர்ந்து, இப்படியான ஒரு நோட்டீஸைத் தயாரித்து விநியோகிப்பம். இதற்கு என்ன பயன் கிடைக்கிறது என்பதைப் பார்த்து, அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்கலாம்...'

தேவகுரு அத்தோடு நிறுத்தி, சபையோரைப் பார்த்தார். சற்குணத்திற்கு மகாதிருப்தி. இப்படி ஒரு மணியான யோசனையை அவர் முன்வைக்கக்கூடும், என்பதை எதிர் பார்த்ததுதான் அவர் தேவகுருவைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். பலர் அவருடைய யோசனையை ஏற்றுக் கொள்வது போலத் தலையை ஆட்டினார்கள்.

'இது சரிவருமே? நாங்கள் இப்பிடிச் சின்னனாக விட்டா, அவங்கள் எங்களோட சேட்டை விடாங்களே?' என்று அமுதன் சந்தேகம் கிளப்பினான்.

'இதை முதலில செய்து பார்ப்பம். இதற்கு என்ன Reaction இருக்கிறது என்று கவனித்துப் பார்ப்போம்' என்றார் சற்குணம்.

'இந்த நோட்டீஸ”டன், அவங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தையும் சேர்த்து, ஒட்ட வேணும். அப்பதான் நொஸ்க்குகளுக்கு விளக்கமாகத் தெரியும்' என்றான் அர்ஸ”ன். அந்த யோசினையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இஃது இளைஞர்களைத் திருப்திப் படுத்தியது.

தமிழர் கூட்டமைப்பு தயாரித்த நோட்டீஸ”கள் கடைகளிலும், ரெஸ்டொறண்டுகளிலும் தொங்க விடப்பட்டன. அதற்குக் கீழே அந்த நால்வர் அனுப்பிவைத்த எச்சரிக்கைக் கடிதங்களும் எல்லோர் பார்வைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.

இவை பலராலும் வாசிக்கப்பட்டன. வாசித்தவர்கள் பெரும்பாலானோர் தமிழ் மக்கள்மீது அநுதாபப்பட்டனர். சிலர் இதனை வெளிப்படையாகவே சொன்னார்கள். வெளிப்பார்வைக்கு தேவகுரு முன்வைத்த யோசினை வெற்றி பெறுவதாகத் தோற்றம் அளித்தது.

4

ஈழத்தமிழ் இனத்தின் மீட்பிற்காகவும், இறுதி விடுதலைக்காகவும் பல இயக்கங்கள் இயங்குவதாகத் தேவகுரு கேள்விப்பட்டிருந்தார். எல்லா இயக்கங்களுமே தமிழ் இனத்தின் கௌரவத்திற்காகவே உழைக்கின்றன என்றும், அந்த இயக்கங்களைச் சேர்ந்த போராளிகள் அனைவருக்கும் யாழ் மக்களினால், 'பெடியன்கள்' என் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டனர் என்றும் தேவகுரு அறிந்திருந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் சேர்ந்து கொண்ட இயக்கம் பற்றி அறிந்து, அவர்களுடன் தொடர்பு கொண்டு, அந்த இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.

சில மாதங்கள் எந்தப் பயிற்சியும் இன்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள கோண்டாவில் என்று ஊரிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. கோண்டாவில் மக்கள் ஆதரித்த நேர்த்தி இன்றும் நெஞ்சை உருக வைக்கும் என்றாலும், இந்தக் காலம் மிகவும் அலுப்பான காலம். உண்மையான ராணுவப் பயிற்சி பெற்று, களத்திலே குதித்து செயற்கரியன சாதிக்க வேண்டும் என்று துடித்தார். இந்தியக் கரையை அடைவதற்குப் பயண ஏற்பாடுகளைச் செய்வதிலே சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு, என்று விளக்கினார்கள். பல்லைக் கடித்துப் பொறுமை காத்தார். பொறுமை வளறத் துவங்கி, பயிற்சி முகாம் செல்ல வேண்டும் என்கிற அவர் துடிப்பு நச்சரிப்பாக மாறிய ஒரு கட்டத்திலே, இந்தியாவிலுள்ள பயிற்சி முகாமுக்குச் செல்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்டியது.

அவர் சேர்ந்திருந்த இயக்கத்திற்கு, தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரியதொரு தளம் இருந்தது. அந்தத் தளம் பல பயிற்சி முகாம்களை நடத்தியது. தேவகுரு பயிற்சி முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதனை அடைந்ததும் மகிழ்ந்தார். கண்ணே கருத்தாக அவர்கள் அளிக்கக் கூடிய அனைத்துப் பயிற்சிகளிலும் சிறப்பாகத் தேறி, சிங்களருடைய படைகளை அழிக்கும் வீரப்படையில் முன்னேறிச் சென்று 'உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு' என நிலைக்கும் வீர மரணத்திற்குத் தயாராக இருந்தார். வீர மரணம் என்பது போராளியினுடைய வாழ்க்கையில் மிக இயல்பான ஒன்று என அவர் தனது மனசினைப் பக்குவப்படுத்தியும் இருந்தார்.

பயிற்சிகள் கடுமையானவையாக இருந்தன. விறகுக் கட்டைகளையே துவக்குகளைப் பாவனை செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. துவக்குகள் வந்து சேர்ந்ததும், இந்தப் பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும். என அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக் கொண்டார். இந்தப் பயிற்சிகள் தம்மைத் திறமையுள்ள படைவீரனாக மாற்றி அமைக்கும் என முழுமையாக நம்பினார். முகாமின் ஒழுக்க நெறிகள் - கட்டுப் பாடுகள் மிகவும் கடினமாக இருந்தன. இவை போராடும் குழுவுக்குத் தேவையானவை என அவர் பூண்ட நம்பிக்கைகளிலே காலப் போக்கிலே, சிறிது சிறிதாக ஓட்டைகள் விழத் துவங்கின.

ஒரு நாள். தூக்கக் கலக்கம். அதிகாலை மூன்று மணியிருக்கும். விசில் சத்தம் கேட்டது. 'பிளட்டூன்'களுக்கு நடுவே இருந்த முற்றத்தில் பயிற்சி பெறும் அனைவரும் அணி அணியாக நின்றனர். கணக்கெடுப்பு துவங்கியது. பலமுறை சரிபார்க்கப்பட்ட பொழுது, இருவர் காணாமற் போய் விட்டார்கள் என்பது நிரூபணமாயிற்று. தேர்வு செய்யப்பட்ட சிலர் காணாமற் போனவர்களைத் தேடிப் பிடித்து வருமாறு அனுப்பப்பட்டார்கள்.

அன்று ஏழு மணிபோல் பயிற்சி இடை நிறுத்தப் பட்டது. எல்லோரையும் முற்றத்தில் அணி திரண்டு நிற்குமாறு பணிக்கப்பட்டது. அங்கே காணாமற்போன இருவரும் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் தலை கவிழ்ந்து நின்றார்கள். விருப்புடன் இயக்கத்திலே சேர்ந்த அவர்கள் ஏன் சொல்லிக் கொள்ளாமல் ஒளிந்து ஓட வேண்டும்? என்ன காரணங்கள்? இவற்றை விசாரணை செய்து அறிய வேண்டாமா? ராணுவப் பயிற்சியிலே ஜனநாயக முறைக்கு இடமில்லை என்பதைத் தேவகுரு விளங்கிக் கொண்டார். ஆனால் குற்றவாளிக்கு விசாரணை இன்றித் தண்டனை வழங்குவதா?

முகாம் பொறுப்பாளர் வெறி கொண்ட நாய்போல குரைத்தார். பயிற்சி பெறும் அனைவரும் சிலையாக நின்றனர். அந்த இருவரும் முற்றத்தைச் சுற்றி ஓடும்படி பணிக்கப்பட்டார்கள். ஓடியவர்களை இடைவெளி விட்டுவிட்டுப் பொல்லால் தாக்கினார். அவர்களுக்கு விழுந்த ஒவ்வொரு அடியும் தேவகுருவின் நெஞ்சிலே சம்மட்டி அடி விழுவதைப் போன்று நோவினை ஏற்படுத்தியது. சமிக்ஞையின் பேரிலே, தோழன் என்பவன் அவர்களைத் துவக்குப் பிடியால் பலங்கொண்டு தாக்கினான். அவர்களுள் ஒருவன் "அம்மா" என்று பயங்கரமாக அலறிக் கொண்டு வீழ்ந்தான். பயிற்சி பெறுபவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். 'நேவிக்காரன் ஊரிலே என்னை அடித்ததிற்கும், இவர்கள் துவக்குப்பிடியால் அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? கதாபாத்திரங்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் இரண்டினதும் உக்கிரமும் கொடூரமும் ஒன்றுதான்' என்று தேவகுருவின் மனம் நினைத்துக் கொண்டது. அடிபட்ட இருவரும் உருக்குலைந்து 'சிக் கேம்பில்' படுத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் தேவகுரு அந்த இடத்தைக் கடக்கும் பொழுது நெருப்பில் விழுந்த புழுவாய் அவர் மனசு துடிக்கும்.

சில இயக்கங்கள் தாயக மண்ணிலே சிங்களப் படைக்கு எதிரான சண்டைகளில் ஈடுபட்டு வெற்றி சாதித்த செய்திகள் பத்திரிகை வழியாகக் கசியத் துவங்கின. 'ஆயுதம் வருகின்றது; வந்ததும் களம் செல்வோம்; அவர்களிலும் பார்க்க அரியன சாதித்து அனைவரையும் மிரள வைப்போம்!' என்கிற சமாதானம் சொல்லப்பட்டது. அவர்களுக்கு வந்து சேர வேண்டிய ஆயுதங்கள் வந்து சேர்ந்து இந்திய அதிகாரி ஒன்றும் பரவியது. அந்த ஆயுதங்களுக்குப் பதிலாக இந்திய ஆயுதங்கள் கொடுக்கப்பட்டது என்று மாற்றுக் கதை ஒன்றும் பரவியது. இந்தக் கதைகளின் உண்மை பொய்கள் இதுவரை தேவகுருவுக்குத் தெரியாது.

'சில குழுக்கல், வீணான விளம்பரங்கள் தேடிக் கொள்வதற்காக, தங்கள் போராளிகளைக் களம் இறக்கி உள்ளார்கள். இந்தச் சில்லறைத் தாக்குதல்கள் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. நமது குழு சக்தி மிக்கது. அனைத்து வளங்களும் நமக்கு உண்டு. இந்தப் போராட்டத்தை, சிங்கள ஆட்சியாளருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவோம். இதற்கான செயல் திட்டங்களை முன்வைத்து இலங்கையில் கணிசமான ஆதரவும் பெற்றுவிட்டால், முழுப்படை யெடுப்பு! அதற்காக காத்திருக்கிறோம்' என்று உற்சாகமாக விளக்கினார்கள். சித்தாந்த விளக்கங்களிலே ஒரு பாரிய ஆசை பரவிக் கிடந்தது. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் எனத் தேவகுரு குழம்பினார்.

இந்திய உளவுஸ்தாபனம் 'றோ' (Raw)வின் செயற்பாடுகள் பற்றி அவர் கேள்விப்பட்டன அனைத்தும் அவரை உற்சாகம் இழக்கச் செய்தன. மண் மீட்புப் போரினையே இலட்சியமாகக் கொண்டு பயிற்சிகளிலே ஈடுபட்டிருந்த குழுக்களுக்கிடையில், 'றோ' சேவகர்கள் தந்திரமான முறையிலே, பிரிவினையையும் கோஷ்டிப் பூசல்களையும் உண்டாக்கினார்கள். பாகிஸ்தானைப் பிரித்து, சுதந்திர வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில் ஒரு சுதந்திர ஈழத்தினைத் தோற்றுவிக்க இந்திரா அம்மையார் உதவுவார் என்கின்ற வகையிலேதான் இந்திய மண்ணிலே அகதிகளாக வந்து சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் பேசினார்கள். ஆனால், இதற்கு முரணாகவே 'றோ' செயற்பட்டது. தமிழ் மக்களுடைய சுதந்திர எழுச்சிகள் கவனத்திலே எடுக்கப்படுவதாக இல்லை. போராட்ட குழுக்களைப் பகடைக் காய்களாக வைத்து இலங்கை ஆட்சியாளரை அடிபணிய வைப்பதையே முதல் இலட்சியமாகக் கொண்டு 'றோ' இயங்குவதாக தேவகுரு நினைத்துக் கொண்டார். 'றோ' வைக் கும்பிட்டு வந்தனை செய்யும் குழுக்களைச் செல்லப்பிள்ளைகளாக நடத்தினர். ஏனைய குழுக்களை வலுவிழக்கச் செய்து, தமது அடியாட்களை வளர்க்கும் வியூகங்களை வளர்த்தனர். குழுக்களுக்கு இடையே உருவான பகைமைகள் தேசவிடுதலையின் உறுதியை ஆட்டம் காணச் செய்வதாக தேவகுரு வருந்தினார். 'றோ' அளிக்கும் உளவுச் செய்திகளின் அடிப்படையிலேயே தில்லியின் வியூகங்களும் அமைக்கப்பட்டதினால், 'றோ' வால் போராட்டக் குழுக்களின் உயிர்த்துவத்தை கட்டுப் படுத்தி வைக்கவும் முடிந்தது. 'றோ' வின் கண்ணுக்குப் புலனாகாத ஆரிய மேட்டிமையும், போராட்டக் குழுக்களின் முதுகுப் புறமாக நீண்டு கையைக் குலுக்கிக் கொள்வதாகச் சிலர் விமர்சனங்கள் முன்வைத்தனர். (வட இந்தியரும் தில்லிப் பேச்சாளர்களுடன் உறவு முறை பாராட்டினார்கள்.) இந்த விமர்சனங்களை நம்புவதா, நிராகரிப்பதா என்பதை அறியாது திகைத்தார்.

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் ஆதாயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, சிலசில குழுக்களின் தலைவர்களுக்குக் கொம்பு சீவும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததும் தேவகுருவின் மனநிலையைப் பாதித்தது. இவை அனைத்திலும் பார்க்க, அவர் சார்ந்திருந்த குழுவுக்குள் நடைபெற்ற கோஷ்டிச் சண்டைகளும், தலைமைப் பதவிகளுக்காக நடைபெற்ற மல்யுத்தங்களும், அவரைச் சோர்வடையச் செய்தன. பிரிந்த கோஷ்டிகளிடையே இப்பொழுது துப்பாக்கிகளும் உபயோகத்திற் வந்திருந்தன. பிரதான அலுவலகமாக இருந்த இடத்திற்கு முன்னாலேயே ஆயத்தமாயினர். உள்ளூர் பிரமுகர்கள் சரியான சமயத்தில் தலையிட்டதினால், அன்று சிந்தவிருந்த ரத்தக்களரி தவிர்க்கப்பட்டது. குழுவின் பணமும் தலைவர்களினாலே தவறான முறைகளிலே முதலீடு செய்யப்படுவதான வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. குழுவுக்கு நன்கொடைகளாகக் கிடைத்த நிதிகளில் ஒரு பகுதி தலைவரின் தனிப்பட்ட கணக்கிலே சுவிஸ் வங்கியிலே முடக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி. குழுவுக்கு நம்புதிறனையும், ஆரோக்கியத்தையும் ஊட்டுவதற்காக இந்தக் கணக்குகள் பற்றிக் கேள்வி எழுப்பிய சில தலைவர்கள் அரசியல் குழப்பங்கள் செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, கொலையும் செய்யப்பட்டதாக அறிந்தார். 'காணாமற் போவதும்' 'கொலை செய்யப் படுவதும்' ஒன்றேதான் என்கின்ற அவலநிலையும் உருவாகியது.

போர்ப்பயிற்சி, மண்மீட்புப் போர், வீரமரணம் என்பனவெல்லாம் கானல் நீராகத் தோன்றியது. பொறுமையின் விளிம்புக்குத் தேவகுரு வந்திருந்தார். மனித மிருகங்களின் தனிப்பட்ட விரோதங்களுக்காகவும், தலைமைப் போட்டிக்காகவும், தன் உயிரை வீணே பலியிடுவது மகா முட்டாள் தனம் என்கின்ற ஞான விடிவு மெதுமெதுவாக அவருடைய உள்ளத்திலே சடைத்து வளரலாயிற்று. இத்தகைய ஆக்கினைகளின் குருநிலமாக அவர் மனசு தவித்துக் கொண்டிருந்த பொழுது, இவர் கொடுத்திருந்த நண்பனின் மேற்பார்வையில் ஒரு கடிதம் அவர் வீட்டில் இருந்து வந்து சேர்ந்தது. அது அவருடைய அண்ணன் எழுதியிருந்த கடிதம். தேவையான பணம் சென்னையிலுள்ள மண்ணடி கடை ஒன்றிற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அங்கு சென்றால் முழுவிபரமும் கிடைக்கும் என்பதும் கடிதத்தின் சாரம்.

இந்தக் கட்டத்திலே, இயக்கம் இரண்டாக உடைந்திருந்தது. இரண்டு குழுக்களும், இரண்டு தலைமைத்துவங்களும் தோன்றின. இத்தகைய ஒரு குழப்ப நிலையில் சென்னைக்குப் பயணத்தை மேற்கொள்ளுவதில் தேவகுருவுக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.

சென்னை வாசம் அவரை முற்று முழுதுமாக மாற்றி அமைக்கப் போகின்றது என்பது அவருக்குத் தெரியாது. தான் சார்ந்த குழுவுக்கு எக்காரணம் கொண்டும் துரோகம் செய்யலாகாது; போட்டிக் குழு ஒன்றிலே, அது எவ்வளவு இலட்சிய வேட்கையுடன் நடத்தப்பட்டாலும் சேர்வதில்லை; இந்தத் தீர்மானங்களுடனேயே அவர் சென்னை வந்தார்.

வளரிளம் பருவத்துக் கனவுகள் ஏசியா சைக்கிளிலே வட்டமடித்ததுடன் கலைந்தன...

தமிழர் மண்ணின் மீட்புப் போரிலே உயிர் விடுதல் என்கிற இலட்சியக் கனவுகளை தஞ்சாவூர் மண்ணிலே மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தான் சென்னைக்குப் பயணமானார்...

அடுத்த சனிக்கிழமை.

நீல வீட்டிலே செல், அல்பிரேட், ஜோன், காறால்ட் ஆகிய நால்வரும் கூடியிருந்தார்கள். வீட்டிலே பல திக்குகளிலும் தொட்டந் தொட்டமாகக் காலியான பியர் போத்தல்கள் கிடந்தன. அவர்கள் நன்றாகக் குடித்திருந்தார்கள். தமிழர்கள் வெளியிட்ட நோட்டீஸ் அவர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. தங்களுடைய ஒரு செயற்பாட்டினைத் தமிழ்ப் பன்றிகள் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார்கள் என்பது போன்ற ஒரு வெப்பிசாரத்திலே அவர்கள் கொதித்தார்கள். நோர்வே நாட்டின் சமாதான விரும்பிகளைத் தமது அணியில் சேர்த்துக் கொள்ளும் ஒருவகைத் தந்திரத்திலே தமிழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் எனக் கறுவிக் கொண்டார்கள். தமிழர்களுடைய இந்தத் தந்திரத்தினை எவ்வாறு முறியடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காகத்தான் அவர்கள் கூடியிருந்தார்கள். இத்தகைய பிரச்சினைகளிலே தீர்மானங்கள் எடுப்பதற்கு மது போதை உதவியாக இருக்கும் என அவர்கள் நம்பினார்கள்.

'பன்றிகள் என்ன செய்திருக்கிறாங்கள் பார்த்தீர்களா?' என்று செல் ஆத்திர வசப்பட்டவனாகக் கத்தினான்.

'நாங்கள் எழுதினம். ஆனால், அவங்கள் பயப்பிட்டது போலத் தெரியவில்லை.'

'ஓமோம். அவங்களுக்குத் தாங்கள் பெரிய புத்திசாலிகள் என்கிற நினைப்பு. எங்களுக்கு புத்தி சொல்லப் புறப்பட்டிருக்கினம்...'

'எழுத்தெல்லாம் இவங்களுக்குச் சரிப்பட்டு வராது...'

'நான் சொன்னன். இவங்களுக்கு அடிதான் சரி...இருட்டடி! மரண அடிக்குக் கொஞ்சம் குறைஞ்சது. அந்த பாஷைதான் இவங்களுக்கு விளங்கும்' என்று ஜோன் ஆத்திரத்துடன் கத்தினான்.

'என்ன ஜோன் சொல்லுறாய்?' என்று செல் கேட்டான்

'அடிபோட வேண்டியதுதான். பயப்பட்டுப் பிர யோசனம் இல்லை. அவங்களுக்கு மரணபயம் ஏற்படுத்த வேணும்.'

'யாருக்கு எப்படிச் செய்யிறது? இதில நிறைய ஆபத்து இருக்குது. போலிஸார் மூக்கை நுழைப்பதற்கு இடம் வரும்' என்று அல்பிரேட் தயக்கம் தெரிவித்தான்.

'காறால்ட் கா‘ போறான். நாலு பேரும் காரில திரியலாம். தனியாக வாற பன்றிகளைப் பார்த்து அடிபோட வேண்டியதுதான்...'

'பிரச்சினைகள் வராமமல் செய்ய வேணும். பிடிபட்டால் எங்களுடைய நோக்கங்கள் பிழைச்சுப் போகும்...'

'பயப்பிடாத அல்பிரேட், பிரச்சினை வராமல் காரியங்களைச் செய்யலாம். நாங்கள் என்ன மடையரோ?'

பிறகும் பியர் போத்தல்களைத் திறந்து குடியைத் தொடர்ந்தார்கள். காறால்ட் கார் வாங்கவும், குளிர்காலமும் துவங்கியது. நோர்வேயின் வடக்கில் இருக்கும் வார்டோவில் (VARDO) குளிர்காலம் மிகவும் கொடூரமானது. நாள் முழுவதிலும், ஒரு சில மணி நேரம் மட்டுமே சூரிய ஒளி தெரியும். மற்றைய நேரமெல்லாம், நீள் இரவோ என்கின்ற பிரமை தந்து, மிக நீண்டிருக்கும். பகலையும் இரவையும் கடிகாரத்தின் துணையினால் மட்டுமே நிதானித்துக் கொள்ளலாம். ஆரம்ப காலத்தில், இத்தகைய குழலுக்குத் தம்மைப் பழக்கி எடுப்பதில் தமிழர்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், குளிர்காலத்திலே, கடுங்குளிர் காற்று புயலின் வேகத்தில் வீசிக் கொண்டிருக்கும். சாவு குளிர்க் கரங்கள் நீட்டிக் கழுத்தை நெரிப்பது போன்ற அவஸ்தை ஏற்படும். இந்தக் குளிரையும் அதன் கொடூரத்தையும், பனை வடலிகளின் மத்தியிலே வளர்ந்த யாழ்ப்பாண மக்கள் வசப்படுத்தி வாழப் பழகிக் கொண்டமையைத் தேவகுரு ஒரு சாதனையாகவே பாராட்டினார்.

இன்று தேவகுருவுக்கு இரவு வேலை. வேலைக்கு புறப்படும் பொழுது பலமான காற்று வீசியது. காற்றுடன் மல்யுத்தம் செய்தே வேலைக்கு வந்தார். வேலை சீக்கிரம் முடிந்து விட்டது போன்று தோன்றியது. அவர் எதிலும் ஒன்றிவிடுவார். அது அவர் சுபாவம். தேவகுருவுக்கு இன்று 'லிப்ட்' தர எந்தக் காரும் வாய்க்கவில்லை. அதற்காக காத்திருப்பதும் அவர் இயல்பல்ல. இந்தக் குளிர்காலத்தில் உபயோகப்படுத்துவதற்கான விசேஷத் தொப்பியைக் கொண்டு வந்திருந்தார். அதனை அணிந்து செவிகளுக்குள் குளிர் நுழையாதவாறு இறுக்கிப் பொருத்தினார்.

வீதி வெறிச்சோடிக் கிடந்தது. குளிரும் இருட்டும் மனித நடமாட்டத்தை ஒடுக்கி விட்டதாக நினைத்துக் கொண்டார். தூரத்தில் ஓரிரு வாகனங்கள் தெரிந்தன. 'இந்த நேரத்தில் வானத்திலே பயணிப்பது சுகமானது. உள்ளே தேவைப்பட்ட வெப்பநிலையை வைத்துக் கொள்ளலாம் அல்லவா?' என்று நினைத்தார். விஞ்ஞானம் ஏற்படுத்தித் தரும் வசதிகளை தாம் இச்சிப்பதாக தனது மனசைக் கடிந்து கொண்டார்.

தேவகுருவுக்கு நித்தியாயினியின் நினைவு வந்தது. பல விஷயங்களிலே அவள் புதிய சூழ்நிலைகளையும் தேவைகளையும் அனுசரித்து வாழப் பழகிக்கொண்டாள். வேறு சிலவற்றிலே இன்னமும் யாழ்ப்பாண மண்ணின் சடங்கு சப்பிரதாயங்களைத் துறந்து விடுவதாகவும் இல்லை. நேரம் எவ்வளவு என்றாலும், அவள் சாப்பிடாமல், அவருக்காக காத்திருப்பது அவள் வழக்கம். இது தேவையற்ற சம்பிரதாயம் என்று எத்தனையோ தடவைகள் சொல்லியுள்ளார். பெண்ணியம் பற்றித் தமிழ்ப் பெண்கள் மத்தியிலே தோன்றிவரும் நவபுத்திசாலிகள் ஏதோவெல்லாம் எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஆனால் நித்தியாவோ, புருஷன் வரும் வரையிலும் சாப்பிடாமல் காத்திருப்பதிலே ஒருவித அன்புச் சுகம் இருப்பதாகவும், அது தனது உரிமை என்றும் வாதிடுகின்றாள்!

நித்தியா பற்றிய இனிமையான நினைவுகள் நெஞ்சினை அளைந்து கொண்டிருக்க நடந்தவருக்கு, திடீர் அதிர்ச்சியாக இருந்தது! சடுதியாக அவருக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது. யார் எவர் என்று நிதானிப்பதற்கிடையில் இரண்டு மூன்று பேர் காரில் இருந்து 'தடதட' வெனக் குதித்தார்கள். அவர்களுடைய முகம் தெரியவில்லை. கம்பளி முகமூடி அணிந்திருந்தார்கள். முகமூடியின் பொந்துகளிலிருந்து விரோத அக்கினி உமிழும் விழிகள் மட்டுமே தெரிந்தன. நிதானம் பெறுவதற்கு முன்னரே அவர் முகத்தில் குத்து விழுந்தது. அந்த ஒரு குத்தே அவரை நிலைகுலையச் செய்தது. இயந்தர கதியில் செயற்படுவது போல...மீண்டும் மீண்டும் குத்துகளும் அடிகளும் விழுந்து கொண்டே இருந்தன.

அவர் வாய் 'ஆண்டவா...' என்று முணு முணுத்துக் கொண்டே, இருந்தது. இறைவனைத் தவிர அந்தச் சமயத்திலே தமக்கு வேறு எந்தத் துணையும் இல்லை என்று மட்டும் நம்பினார். அந்த நம்பிக்கையை மட்டும் நெஞ்சிலே சுமந்து நினைவுகள் இழந்து நிலத்திலே விழுந்தார்.

தேவகுரு மயங்கி வீதியிலே விழுந்ததும் அவரைத் தாக்கியவர்கள் உசாராகினார்கள். காரைப் பின்னுக்கு எடுக்க, தாவி ஏறிக்கொண்டார்கள். கார் குச்சுப்பாதையால் திரும்பி ஓடி மறைந்தது.

தேவகுரு தெருவில் கிடந்தார்.

குளிர் அவர் உடற் சூட்டை மெதுவாக விழுங்கத் துவங்கியது...

தூக்கத்திலே கிடந்த அனிதா யாரோ தட்டி எழுப்பியது போன்ற உணர்ச்சியுடன் விழித்துக் கொண்டாள். யாரோ பலமாக முனகியது போலக் கேட்டது. யாருக்கோ அடித்து இம்ஸைப்படுத்துவது போன்று இருந்தது. விழித்தவள், கனவா மனப்பிரமையா என நிதானிக்க முயன்றாள். கார் ஒன்று உறுமிக் கொண்டு ஓடியது நிஜம் என்பதை அவள் நிதானித்தாள். கட்டிலிலிருந்து எழுந்து ஜன்னல் திரைச் சீலையை ஒதுக்கி வீதியைப் பார்த்தாள்.

மங்கலான ஒளியிலே யாரோ NORDRE LANG GATA வில் அலங்கோலாமாகக் கிடப்பது தெரிந்தது. யாரோ அந்த மனிதரைத் தாக்கியிருக்கிறார்கள். மூச்சுப் பேச்சு இல்லை. உயிரற்ற பிரேதமாக இருக்குமோ? இந்த எண்ணம் எழுந்ததும், அவளாலே தாங்கிக் கொள்ள இயலவில்லை. கீழே விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள். அப்பா அம்மாவை உலுக்கி எழுப்பினாள். விழித்து மலங்கப் பார்த்தவர்களுக்கு விஷயத்தைச் சொன்னாள்.

எல்லோரும் தெருவுக்கு ஓடினார்கள். மூவருமாக ஆளைத் தூக்கி வந்தார்கள். அவருக்கு சுவாசம் சீராக வந்து கொண்டிருந்தது. பிரக்ஞை மீளும் சாங்கமும் தெரிந்தது. ஹோலிலே கிடந்த நீள் சோபாவிலே கிடத்தினார்கள். காற்று வருமாறு ஹோல் ஜன்னலைச் சற்று நீக்கிவிட்டார்கள். துவாய் ஒன்று கொண்டுவந்து, மூக்கால் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை துடைத்து விட்டனர்...அவர் எழுந்து அமர முயன்றார். முடிய வில்லை. மீண்டும் சோபாவில் சரிந்தார்.

அவருடைய செயல் அவர்களுக்கும் புதுமையாகப்பட்டது. அனிதாவின் தந்தையான லார்ஸ் தேவகுருவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அவர் தமிழர் சமூகத்திலே அகிம்ஸை மூலம் சமூகப்பணி செய்ய விரும்பும் இயல்பினர் என்று சமூக சேசையாளன் ஒருவன் பிரஸ்தாபிக்கக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் மூர்க்கமான தாக்குதலின் பின்புகூட, அவர் அழுங்குப் பிடியாக அமைதி பேணியது இப்பொழுது அவருக்கு ஆச்சரியம் தந்தது.

அனிதாவின் அம்மா கோப்பி கொண்டுவந்தாள். 'உங்களுக்கு சிரமம் தரவிரும்பவில்லை' என்று கூறிச் சிரிக்க முயன்றார்.

'அருந்துங்கள். இதில் என்ன சிரமம்? நீங்கள் கோப்பியை...' என்று உபசரித்தனர். அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகக் கோப்பியைக் குடித்தார். முடிந்ததும் எழுந்து நடக்க விரும்பினார். மனசின் ஓர்மத்திற்கு ஏற்ப அவர் உடல் ஒத்துழைக்க மறுத்தது. முழுப்பலத்தையும் மீளப்பெறுவதற்குச் சற்று அவகாசம் தேவைப்படும் என்பதை நிதானித்து மீண்டும் சோபாவில் அமர்ந்தார்.

'ஏன் நீங்கள் போலிஸ் நடவடிக்கை எடுக்கப் பயப்படுறீங்கள்?' லார்ஸ் கேட்டார்.

தேவகுரு சிரித்தார்.

'முகமே உருமாறிக் கிடக்குது. உங்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட தாக்குதல். அவர்கள் பயமில்லாமல் மூர்க்கம் கொண்டு உங்களைப் போன்றவர்களைக் குதறி எறிவார்கள் என நான் அஞ்சுகிறேன். முரட்டுத் தனத்தையும் காடைத்தனத்தையும் நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?' என லார்ஸ் அக்கறையுடன் கேட்டார்.

'இல்லை'என்றார் தேவகுரு.

'அப்படியானால் ஏன்? இந்தக் காடைத்தனத்தை மன்னிப்பதன் அர்த்தம் என்ன?'

'என்னைத் துன்புறுத்த வேண்டும். நான் வேதனைகளை அநுபவிக்க வேண்டும். அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இது அவர்களுக்குத் திருப்தி தரலாம். அந்தத் திருப்தி அவர்களுக்குக் கிடைக்கட்டும். அவர்களுடைய திருப்தியை நான் பறிப்பதினால் எனக்கு என்ன இன்பம் இருக்க முடியும்?'

அவர் சொல்வதை கேட்ட லார்ஸ், அவர் சொற்களுக்குப் பின்னால் மறைந்து நிற்கும் கோட்பாட்டினை முழுமையாகக் கிரகிக்க முடியாது தவித்தார். ஆனால், தேவகுருவின் உறுதி அவருக்கு ஆச்சரியம் தந்தது. அவருடைய அநுபவத்தினைப் பங்கிட்டுக் கொள்ளும் ஆர்வம் அவருக்குப் பிறந்தது.

'நீங்கள் சொல்வது எனக்கு முழுமையாக விளங்கியது என உரிமை பாராட்ட முடியாதிருக்கின்றது...'

'யேசு நாதரின் வாழ்க்கையையும் நான் ஆதர்ஷமாகக் கொண்டுள்ளேன். ஒரு கன்னத்திலே அறைந்தவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டும்படி அவர்தானே போதித்தார்? ஏன்? என்னை அடித்துத் துன்புறுத்தியது வன்முறைச் செயல். வன்முறைக்கு பதில் வன்முறையல்ல என்பது என் நம்பிக்கை...அன்புதான் மனிதநேயத்தின் மொழியென நான் நம்புகிறேன்...'

இந்த விசித்திர மனிதன் தமது விருந்தாளியாக தமது ஹோலிலே அமர்ந்திருத்தல் லார்ஸ”க்குப் பெருமையாக இருந்தது.

'நான் உங்களுக்கு மேற்கொண்டும் சிரமம் தர விரும்பவில்லை. நடுநிசி தாண்டிய நேரம்...நான் வருகிறேன்' என்று தேவகுரு எழுந்து நிற்க முயன்றார்.

லார்ஸ் அவரை மீண்டும் சோபாவில் அமர்த்தினார்.

'மனித நேயத்தின் மொழி அன்பு என்பதை ஏற்றுக் கொண்டவன் நான். நான் ஒரு டாக்டரும், எனவே, உங்களுக்குச் சிகிச்சை அளிக்க என்னை அனுமதியுங்கள்...உங்கள் வீட்டிற்கு நாங்கள் தகவல் கொடுக்கின்றோம்...' என்று லார்ஸ் உறுதியுடன் கூறினார்.

காரிருளில் அவரை வழிமறித்து அடித்துத் துவைத்தவர்கள் நொஸ்குகள், நிறவெறியை வேதமாக பரப்ப விழைந்துள்ள நொஸ்குகள். இந்த அகால வேளையில், வீட்டிலே வசிப்பவர்களுடைய சிரமங்களையும் பாராட்டாமல், மனித நேயத்துடன் சிகிச்சை தருவதற்குத் துடிப்பவனும் நொஸ்கே!

இந்த இரண்டு சாராருள் நோர்வே நாட்டின் ஆன்மாவின் உண்மையான பிரதிநிதி யார்?

லார்ஸ் செலுத்திய ஊசி, நோவினை அகற்றி, தூக்கத்தை வசதி செய்வது போல தேவகுருவுக்குத் தோன்றியது...

'எந்த நிறமிருந் தாலும் - அவை
யாவும் ஒரே தர மன்றோ?
இந்த நிறம் சிறி தென்று - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?'

--என்று பாரதியார், அவர் செவிகளுக்குள் பாடுவது போன்ற மயல். தேவகுரு விழிகளை மூடினார்.

தேவகுரு சென்னை வாசத்தின் போது, சம்பாதித்துக் கொண்டு அரிய நட்பு இராமநாதருடையது...மண்ணடியில் அண்ணா குறிப்பிட்ட கடையில் அதன் சொந்தக்காரர் கோபாலை தேவகுரு சந்தித்தார். அவர் தேவகுருவுக்குப் பணம் கொடுத்ததுடன், அண்ணா நகரிலே தங்குவதற்கு ஓர் அறையும் ஏற்பாடு செய்து தந்தார். இலங்கைக்குத் திரும்புவதை அண்ணா விரும்பவில்லை. புனர் வாழ்க்கையில் ஈடுபட்டுப் புதிய வாழ்வு ஒன்றினை அவர் மேற்கொள்ளுவதற்கு எல்லா வசதிகளையும் செய்து தருவதாக அவர் வாக்களித்திருந்தார். அது வரையிலும், மனக் காயங்களை ஆற்றிக் கொண்டு, வாழ்க்கையைப் புதிய நம்பிக்கையுடன் எதிர் நோக்குவதற்கு ஏதாவது படிக்கும் படியும் ஆலோசனை கூறியிருந்தார்.

கோபாலுக்கு கொழும்பிலும் வர்த்தகத் தொடர்புகள் இருந்ததினால், துண்டிக்கப்பட்ட தொடர்புகள் துளிர்த்தன.

மீண்டும் கல்லூரி ஒன்றிலே சேர்ந்து படித்துப் பட்டம் பெறுதல் வேண்டும் என்கின்ற எண்ணம் தேவகுருவுக்கு வரவில்லை. கல்லூரிகளின் கற்கைநெறி, சிற்றூழியர்களைத் தயார் செய்யும் ஒரு தொழிற்சாலை என்றே அவர் கருதினார். வாழ்க்கையின் அர்த்த சுருதிகளைக் கல்லூரி நாற் சுவர்களுக்கிடையில் கற்றுத் தேற இயலாது என்பதையும் அவர் புரிந்து கொண்டார். வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிந்து கொள்வதிலே, சதா ஒரு தேடலிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்திருந்தார்.

அமைதி தேடித் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்றார். அனாதை போன்றும், அகதி போன்றும் மடங்களிலும் தங்கினார். எதைத் தேடுகிறோம் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவருடைய மன அவதிகளை இனம் கண்டு, அவரை வழி நடத்தக் கூடிய நல்லாசிரியனும் வாய்க்கவில்லை. இருப்பின், சும்மா இருந்த தமது மனசினைச் சாத்தானின் தொழிற்சாலையாக மாற்றாமலிருக்க அவர் பாடுபட்டார்.

திருவண்ணாமலையில் ரமணரிஷ’ ஆஸ்ரமத்திலே தங்கியும் பார்த்தார். சிலவற்றுக்குத் தேவைக்கும் மீறிய விளம்பரங்கள் ஆன்மீக வாதிகள் மத்தியிலே செலவாணி செய்யப்படுவதுதான் உண்மை என்பதையும் உணர்ந்தார்.

சோர்வுற்று, அண்ணாநகர் திரும்பிக் கொண்டிருந்த பொழுது, பேருந்தில் இராமநாதருடைய அறிமுகம் தேவகுருவிற்குக் கிட்டிற்று. அவரும் தேவகுரு இறங்கிய அதே தரிப்பிலேதான் இறங்கினார். அவர் மிக அயலிலே வசிப்பதாகத் தெரிந்து கொண்டார். அவருடைய அழைப்பின் பேரில், அவருடைய அறைக்குச் சென்றார்.

இந்த சந்திப்புத் தொடர்ந்தது. வாரம் ஒரு முறை என்பது சுருங்கி தினசரியாயிற்று.

இராமநாதர் இலங்கையிலும் பணியாற்றி இருக்கிறார். ஆங்கிலத்திலும், தத்துவத் துறையிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். சுதந்திருத்திற்கு முற்பட்ட அரசு சேவையில் கடமையாற்றி, தனிச் சிங்களச் சட்டத்தின் பின்னர் ஓய்வு பெற்று இந்தியா மீண்டவர். அவருடைய பூர்வீகம் மதுரை. தாரம் இழந்தவர். மகன்கள் இருவரும் கம்ப்யூட்டர்த் துறையிலே தேர்ச்சி பெற்று, அமெரிக்காவில் குடியேறி வாழ்கிறார்கள். அமேரிக்கா வந்து தங்களுடன் வசிக்குமாறு வருந்தி அழைத்தும், அவர் போகவில்லை. தமது ஆன்மீக தேடல்களுக்கு பாரத பூமியிலேதான் விடைகள் காணமுடியும் என்று அழுங்குப் பிடிவாதம் பாராட்டி வாழ்கிறார். அவருடைய இளைய மகனைச் சில சாங்கங்களிலே தேவகுரு நினைவு படுத்தினாராம். இதன் காரணமாகவும் இராமநாதர் அவர்மீது தீவிர அன்பு பாராட்டினார். புதியதொரு புத்தக நிலையம் ஒன்றின் ஊடாக ஞானப்பயணம் செய்து மீள்வது போன்ற புளகாங்கிதம் தேவகுருவுக்கு ஏற்பட்டது.

பரமஹம்ஸர், விவேகாநந்தர், மகாத்மா காந்தி, வினோபாஜி ஆகியோருடைய போதனைகள் ஊடாகப் பயணஞ் செய்வதற்கு இராமநாதர் கருணை புரிந்தார். பகவத் கீதை, சுவிசேஷம், புத்தர் போதனைகள் ஆகியவற்றின் சாரங்களை அறிந்து கொள்ள ஊக்குவித்தார். அவர் விரும்பிப் படித்த நூல்கள் பலவற்றைத் தேவகுருவை வாசிக்கும்படி தூண்டினார். இவற்றை வாசிக்கும் பொழுது ஏற்பட்ட சந்தேகங்கள் பலவற்றை இராமநாதர் விளக்கிய பாணி மிகவும் அற்புதம்.

'செல்வநாயகம் அற்புதமான தலைவர். தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய இன்னல்களையும், இடையூறுகளையும் அவர் தீர்க்கத்தரிசனமாக உணர்ந்தார். தமிழ் மக்களை உரிய காலத்தில் எச்சரிக்கை செய்தார். வன்முறை இறுதி ஆயுதமென அவர் நினைத்திருக்கக் கூடும். இதனாலேதான் அவர் சமாதானப்பேச்சு வார்த்தைகள் மூலம் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தார். ஆனால், அவருடைய புரிந்துணர்வையும், நல்ல பரந்த மனப் பான்மையையும், சிறுபான்மையினர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குச் சிங்களத் தலைவர்கள் பயன்படுத்தத் தவறினர். மனித நம்பிக்கைகளிலே உருவான ஒப்பந்தங்களை அவர்கள் அவை எழுதப்பட்ட காகிதத்தின் மதிப்பளவுகூடக் கனம் பண்ணத் தவறினர். அவர் ஏமாற்றப்பட்டமை செல்வாவின் ஏமாளித்தனத்தையல்ல; சிங்களத் தலைவர்களுடைய துரோகச் செயலையே குறிக்கும். இந்தச் சத்திய மீறல்களுக்கு நீண்டகாலத்தில் சிங்கள இனம் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும்' என்று ஒரு சந்தர்ப்பத்திலே கூறினார்.

'செல்வா அவருடைய தொண்டர்களுடைய நிர்ப்பந்த வசமான கைதியாகச் செயல்பட்டதும் உண்டு. அவரை ஈழத்து காந்தி என்று அவருடைய தொண்டர்கள் மேடைதோறும் முழங்கியது தவறு. அஹ’ம்ஸையை செல்வா என்றுமே அரசியல் ஆயுதமாக தரிசிக்கவில்லை. சத்தியாக்கிரகம் என்பது உண்மையில் உறுதி. தனிமனிதனுடைய ஆன்மிக பலத்தை வளர்த்து வளப்படுத்திய பிறகே அதனைப் பயன்படுத்தலாம். அதனைத் தமது ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எத்தனையோ நோன்புகளையும் தவங்களையும் காந்திஜ“ மேற்கொண்டார். காந்திஜ“ அரசியல் பற்றிப் பேசிய ஓர் ஆன் மிகவாதி என்பதை நாம் மறந்துவிடலாகது. செல்வா ஆன்மிகவாதியல்ல. அதனை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமோ, அவகாசமோ செல்வாவுக்கு ஏற்பட்டதும் இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாத தொண்டர்கள் அவரை ஈழத்துக் காந்தியாக உயர்த்துவதற்கு கோஷம் போட்டமை, அவருடைய அரசியல் தலைமைத்துவம் பற்றிய மதிப்பீட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்' என்று செல்வாவை மதிப்பீடு செய்தார்.

'இலங்கையில் நடத்தப்பட்டது சத்தியாக்கிரகம் என நான் சொல்லமாட்டேன். சத்தியாக்கிரகம் என்கின்ற பெயரிலே தமிழ் பகுதிகளிலே 'பந்த்' நடத்தப்பட்டது. இதனால் அரசியல் கோஷங்கள் மக்கள் கவன ஈர்ப்புக்கு முன்தள்ளப்பட்டது. ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தினை சாத்வீகப் போராட்டம் என்று வர்ணிக்க முடியுமா? தார் பூசுவதின் மூலம் என்ன சாதிக்க முனைந்தார்கள்? தாரும் பிரஸ”ம் ஆயுதங்களே. அடிப்படையில் அதிலே வன்முறை கலந்து இருந்தது. கச்சேரிகளுக்கு முன்னால் நடத்தப்பட்டவை ஒருவகை முற்றுகையே. தன்னைத் தண்டித்துக் கொள்ளும், தன்னை வருத்திக் கொள்ளும், அனைத்து இன்னல்களையும் ஆன்மிக பலத்துடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் என்றுமே வளர்த்தெடுக்கப் படவில்லை. எனவே, சத்தியாக்கிரகம் ஓர் அரசியல் உபாயமாக இலங்கையிலே தாழ்வுற்றது என்றே நான் நினைக்கிறேன். இன்னொரு பிழையும் தேர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளரின் எண்ணிக்கை என்ன? இந்திய மக்களின் ஜனத்தொகை என்ன? எண்ணிக்கை பற்றிய சிந்தனையும் வேண்டும். வன்முறையிலும் பலத்காரத்திலும் ஈடுபட்டுள்ள பெரும்பான்மை இனத்தினைப் பணிய வைப்பதற்கு அஹ’ம்ஸை எவ்வளவு தூரம் பயன்பட வல்லது என்பதை பரீட்சித்துப் பார்ப்பதிலே அமேரிக்கக் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் ஈடுபட்டார் என்று தோன்றுகின்றது. ஆனால், அவரும் அதனை அரச வன்முறைகளுக்கு எதிரான உபயோகிக்க வில்லை...' என சத்தியாக்கிரகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பல தளங்களிலே வைத்து விமர்சனம் செய்தார்.

'யூதர்களுக்கு எதிராக ஹ’ட்லர் அரச வன்முறையை உபயோகித்தான். இந்த அக்கிரமத்திற்கு எதிராக நாகரிக உலகமே எதிர்த்துப் போராடியது. இன்று ஹ’ட்லரிலும் பார்க்க மிகக்கொடுமையான முறையிலே, சிங்கள அரசு கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த கொடுமையை இன்று நாகரிக உலகம் முழுவதும் கை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. இந்த கொடுமைக்குத் துணை போகும் செயலை, வரலாறு நாளையும் மன்னிக்க மாட்டாது' என்று பிறிதொரு சந்தர்ப்பத்திலே விளக்கினார். 'இலங்கை ஆட்சியாளர் முதலிலே கொலை செய்தது புத்தரையும் அவருடைய கருணை மயமான போதனைகளையும்தான்! இந்தக் கொலையிலே சீவர ஆடைதாரிகளான பிக்குகள் துணை நின்றனர். அவர்களுடைய கைகளிலே இன்னமும் தமிழருடைய இரத்தக் கறை படிந்து கிடக்கிறது. நான் அஹ’ம்ஸையில் நம்பிக்கை உள்ளவன். அதனை என் வாழ்க்கை முறையாகவும் பயில்வதற்காக வாழ்க்கை முழுவதும் போராடி வருகிறேன். ஆனாலும், ஈழத்துத் தமிழ்ப் போராளிகளை வன்முறையாளர் என அழைப்பதற்கு என் நாக்குக் கூசுகிறது. அவர்களுடைய போராட்டத்தை நான் நியாயப்படுத்தவில்லை. நியாயமும் தர்மமும் ஒன்றல்ல. அனைத்து நியாயங்களையும் நிராகரித்து, நிராயுதபாணிகள் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடும்பொழுது தமிழர்களுக்கு முன்னாலுள்ள தர்மம் என்ன? இந்த நுட்பமான கேள்விக்கு விடை கண்டு பிடிக்க மனித நேயர்கள் தயக்கம் காட்டுவதுதான் மகா சோகமானது. கொலையில் கொல்லாமை பற்றிப் பகவத்கீதை போதனை செய்கிறது. இதனை இரண்டொரு சந்தர்ப்பத்திலே காந்திஜ“யும் பயின்றார். உண்மை. பெருவாரியான கொலைகளைத் தவிர்ப்பதற்குச் செய்யப்படும் கொலை கொலையுமாகாது, வன்முறையுமாகாது என்றுதான் என் மனச்சாட்சி எனக்குக் கூறுகின்றது...' இராமநாதர் தத்துவங்களின் ஊடாக ஆழமாக நுழைந்த பொழுது, அவற்றை விளங்கிக் கொள்ளாது தேவகுரு தத்தளித்துமிருக்கிறார்.

எது எவ்வாறு இருந்த போதிலும் தேவகுருவின் உள்ளத்திலே அன்பு பற்றியும், அஹ’ம்சை பற்றியும், மனித நேயம் பற்றியும் புதிய பார்வைப் பரிமாணங்களை இராமநாதர் வளர்த்தெடுத்தார். நோர்வே நாட்டுக்கு அவர் பயணப்பட்ட பொழுது, அபூர்வமான நூல்கள் பலவற்றைப் பரிசளித்தார். அவர் உயிர் வாழும் வரையில் கடிதங்கள் எழுதினார். தனது மனசிலே எழும் சஞ்சலங்களுக்கும் ஐயங்களுக்கும் விளக்கம் கேட்டால், நிச்சயமாக இராமநாதரிடமிருந்து விரிவான பதில்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன.

அவர் சென்னையில் காலமானார் என்கிற செய்தி அறிந்ததும், தேவகுரு ஒரு வாரம் வரையிலும் உண்ணா நோன்பும் பேசா நோன்பும் அனுஷ்டித்தார். அந்த அநுபவத்திலிருந்து, இராமநாதரின் உண்மைத் தரிசனம் தமக்குக் கிடைத்ததாகத் தேவகுரு மகிழ்ந்தார்.

நோக்களைக் காட்டாது தேவகுரு முறுவலித்தவாறு எழுந்து நடக்கத் தொடங்கியதைப் பார்த்து லார்ஸ் வியந்தார். நடந்து செல்லப் போவதாகத் தேவகுரு வாதாடியும் லார்ஸ் மசியவில்லை. தன் காரில் ஏற்றி அவரை வீட்டிலே சென்று இறங்கினார். அவருடன் கூடவே வீட்டிற்குள் சென்றார்.

நித்தியாயினியும் பிள்ளைகளும் அவரைப் பார்த்ததும் அழத் துவங்கிவிட்டார்கள்.

'எனக்கு ஒன்றும் நடக்கவில்லை. இலேசான காயம். இஞ்ச பாருங்கோ என்னால நடக்க முடியும்' என்று சிரித்தபடி நடந்து காட்டினார். அவர் நடந்து காட்டியது குழந்தைத்தனமாகவும் இருந்தது. 'மூஞ்சை யெல்லாம் வீங்கிக் கிடக்குது. நல்ல அடியென்று டாக்டர் போனிலும் சொன்னவர். உங்களுக்கு என்ன, விஷரே பிடிச்சிருக்குது?' என்று நித்தியா தேம்பினாள்.

'எனக்கு புத்தி நல்லா தெளிவாய் இருக்குது...' என்று சொல்லத் துவங்கியவர், லார்ஸ் நிற்பதைக் கண்டு, அவரைச் சற்றே அமர்ந்து, கோப்பி அருந்திச் செல்லுமாறு வற்புறுத்தினார். அவருடைய குடும்பத்துடன் நட்புணர்வினை வளர்த்துக் கொள்ள விரும்பிய அவர் கோப்பி அருந்திச் செல்லச் சம்மதித்தார்.

'விபத்துக்கள் தவிர்க்க முடியாதன. தவிர்க்க ஏலுமானவை விபத்துகளுமல்ல...எத்தனையோ தற்செயல்களிலும் விபத்துக்களிலிருந்துமே மனிதகுலம் தன் அறிவை வளர்த்திருக்கிறது...டாக்டர், ஆப்பிள் பழம் நிலத்தில் விழுந்ததைப் பார்த்துத்தானே நியூட்டன் புவியீர்ப்புத் தத்துவத்தை உலகிற்கறிவித்தார்?...இருட்டிலே தனிமையில் வந்தால், புவியீர்ப்பின் இன்னொரு பரிமாணமாக முகத்தையும் உடைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்!' என்று தமக்குத் தெரிந்த நொஸ்க் மொழியிலே கூறித் தேவகுரு சிரித்தார்!

'நீங்கள் விசித்திரமான மனிதர்...' என்றால் லார்ஸ்

'மனித நேயம் பாராட்டி வாழ விரும்பும் சாதாரண மனிதன் நான்' என்று தேவகுரு அடக்கமாகக் கூறினார்.

'நானும் சாதாரண மனிதனே! இரண்டு சாதாரண மனிதர்கள் நண்பர்களாக வாழுதல் சாத்தியமே' என்றார் லார்ஸ்.

தேவகுரு ஏதோ சொல்வதற்கு வாயெடுத்தார். அதற்கிடையில் நித்தியாயினி கோப்பி கொண்டு வந்து இருவருக்கும் பரிமாறினாள்.

தேவகுருவைத் தாக்கிய இளைஞர்களுக்குத் தமது இலட்சியப் பயணத்தில் ஏதோ சாதித்து விட்டதாகத் தோன்றியது.

துண்டுப்பிரசுரப் பிரசாரத்திற்கு, தமிழர்கள் துண்டுப் பிரசுர மூலம் பதில் அளித்தார்கள். இருட்டடிக்கு அவர்கள் என்ன தரப்போகிறார்கள்? அடிக்குப் பதில் அடி என்று எங்களைத் தேடித் திரிவாங்களா? அல்லது 'நொஸ்குகள் அடிச்சுப் போட்டாங்கள்' என்று போலிஸ”க்கு ஓடுவார்களா? அப்படியானால் அம்புலன்ஸ், போலிஸ் ஆகிய வாகனங்களின் 'சைரன்' ஓசை கேட்கும். அப்படி ஒரு சத்தத்தையும் காணோமே!

மூன்று மணி நேரமாகியும் ஓர் அசுமாட்டத்தையும் காணோமே? ஒரு வேளை அடிவாங்கிய அந்தப் பன்றி வீதியிலேயே செத்துக் கிடக்கிறானா? அவனைக் கொலை செய்வது அவர்களுடைய நோக்கமாக இருக்கவில்லை. வன்முறை மூலம் தமிழர்களை அச்சுறுத்த வேண்டும். வார்டோவில் இருந்தும், இறுதியாக நோர்வேயிலிருந்தும் இந்தக் கறுப்புப் பன்றிகள் ஓட வேண்டும்...அந்த லட்சியத்தை அடைவதற்கான இயக்கமும் பயணமும்!

காறால்ட்டும் செல்லும் மட்டும் எதிர்வினையை அறிவதற்கு தேவகுருவை அடித்துப் போட்ட இடத்துக்கு மெதுவாகக் காரில் வந்தார்கள். அடிபட்டவனை காணவில்லை. அம்புலன்ஸ் சத்தமும் இல்லை. 'பன்றி களைச் சுட்டுப்போட்டாலும் ஒன்றும் செய்யாதுகள் போல இருக்கிறது' என்று செல் சலித்துக் கொண்டான். அவர்கள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. எதுவுமே நடக்காதது போலத் தமிழர்கள் தங்களுடைய வேலைகளுக்கு வழக்கம் போலச் சென்று வந்தார்கள். 'அப்படியானால் அடுத்த நடவடிக்கை என்ன? அடி இவர்களுக்கு அச்சம் ஊட்டவில்லையா?'

இதைப் பற்றி விவாதிப்பதற்காக அடுத்த வெள்ளிக் கிழமை இரவு அவர்கள் நீல வீட்டிலே கூடினார்கள். வழக்கம் போல மது தாராளமாக பரிமாறப்பட்டது. அவர்களுடைய முகங்கள் இறுகி இருந்தன. எதுவும் பேசப்படவில்லை. மௌனத்தின் அடர்த்தி.

மௌனத்தைத் தாங்க முடியாதவனாய் செல் பேசினான். 'அந்தப் பன்றிகள் உசும்புற மாதிரி இல்லை. முதலாவது நோட்டீஸ்; பிறகு அடி போட்டம். அவங்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கிறாங்கள். ஆத்திரப் படுறாங்கள் இல்லை. இனி, என்ன செய்யலாம்? சொல்லுங்கோ. பேசாமல் ஆளையாள் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி?' கோபத்தில் அவன் கையில் இருந்த மதுப்போத்தல் நடுங்கியது.

'நேற்று பிறம் கிறிஸ்த் கட்சி (Fremeskrittspartiet) மகா நாடு பார்த்தீங்களா? வெள்ளையரைத் தவிர வேற ஆக்கள் இந்த நாட்டில இருக்கக் கூடாது என்று சொல்லுறத்துக்குப் பயம். பல்கலாசாரம் அது இது வென்று பசப்புறாங்கள். எங்களை மாதிரி நேரடியாச் சொல்ல வேணும். நோர்வே நூர்மனுக்கு மட்டும் என்பதை அடிச்சு சொல்ல வேணும். கறுத்தப் பன்றிகள் திரும்பவும் காட்டுக்கு ஓடவேணும். துணிவுடன் அதுகளைத் துரத்த வேணும்..'

'ஒஸ்லோவில இருக்கிற பன்றிகள், துணிஞ்சவங்களாம். அடிக்குப் பதில் அடி என்று திரியிறாங்களாம்...'

'அவங்களில பயங்கரவாதிகளும் கலந்திருக்கிறாங்கள் என்றுதான் நினைக்க வேணும். அண்டைக்கு (Dag bladet) ஒன்று தற்செயலாக எங்கட புத்தகம் எடுக்கப் போகக்கே லைபிரரியில பார்த்தன். அதில இவங்கட வெளிநாட்டமைச்சர் பேட்டி குடுத்திருக்கிறான். அவனே இவங்களைப் பயங்கரவாதிகள் என்றுதான் சொல்லி இருக்கிறான். இதுக்கு மேல அந்த வெளிநாட்டமைச்சர் ஒரு தமிழனாம்.'

'அவன் கிடக்கிறான். எங்களப் பொறுத்தவரையில அவனும் ஒரு பன்றிதானே? ஒஸ்லோ விஷயத்தைக் கடைசியாகப் பார்க்க வேண்டியது.'

'அது சரி இங்க வார்டோவில உள்ள பன்றிகள் பயந்து சாகுதுகள். இதுகள் அதிக காலம் நின்று பிடிக்க மாட்டினம் என்றுதான் நான் நினைக்கிறன்.'

'இப்ப உள்ள நிலையில நாங்கள் கார்ல் ஈ யேகனை (Carl I Hagen) ஆதரித்தால் என்ன?'

'சாய், அவன்ர ஈடுபாடு காணாது. எங்களுக்குச் சின்னம் சுவஸ்திகாதான். ஹ’ட்லர் பாவிச்ச சின்னம். வெள்ளைத் தோலர்களின் ஆதிக்கம். ஆரியர்களுடைய ஆட்சி! உலகம் முழுவதையும் சுவஸ்திகா ஆள வேணும்.'

'ஓமோம். இது நூர்மன் நாடுதான் என்று அடிச்சுக் கலைக்கவேணும். அந்த அளவுக்கு அவங்கள் மாறுகிற வரையில அதில சேர்றதில பிரயோசனம் இல்லை.'

'நான் ஒரு விஷயத்தைத் தெளிவாச் சொல்லுறன். சுவஸ்திகா சின்னத்தைச் சொன்னால், ஆதரவு கிசு கிசு என்று வளரும். வரலாறு என்ன சொல்கிறது? 1920 இல், ஜெர்மனியின் சுவஸ்திகாவுக்கு இரண்டு சதவீதமான ஆதரவுதான் இருந்தது. பதின்மூன்று வருஷத்தில--பதின்மூன்றே பதின்மூன்று வருஷத்தில--44 சதவீதமான மக்கள் சுவஸ்திகாவுக்கு ஆதரவு தெரிவிச்சாங்கள். அப்படித்தான் நாங்கள் வளரவேணும்...

'ஜெர்மன்காரனுக்கு இருந்த நாட்டுப்பற்று எங்களுக்கு இல்லை. இங்கு இருக்கிறவங்கள் தாங்கள் பெரிய புத்திஜ“விகள் என்கிற நினைப்போட திரியுதுகள்...'

'இந்தப் புள்ளி விபரத்தைக் கேளுங்கோ...ஜெர்மனியில் கறுப்பன்கள்--மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பிச்சைக் காரர்கள்--பதினேழுபேர் கொலை செய்யப் பட்டிருக்கிறாங்கள். அவங்கள் வாழுற 380 வீடுகளை எரிச்சிருக்கிறாங்கள். இது 1992 இல் நடந்ததற்கான புள்ளி விபரம். இப்ப இது கூடியிருக்கும்...'

'நோர்வேயுல நாங்கள் என்ன செய்து கிழிச்சிருக்கிறம்? நோர்வேயை விடுங்கோ...வார்டோவில் என்ன செய்திருக்கிறம்?'

'என்ன செய்யவேணும் என்று நினைக்கிறாய்?'

'எத்தனையோ...தொடர்ந்து அடி போடவேணும்...வீடுகளை எரிக்கலாம்...'

'இப்படி அடுக்கடுக்காகச் செய்து கொண்டிருந்தால் போலிஸ் பார்த்துக் கொண்டிருக்காது...'

'எங்கள் கொள்கைக்காக, நூர்மனின் மேன்மைக்காக, ஜெயிலுக்குப் போறது. இதில் என்ன தப்பு? பன்றிக் கூட்டத்தை இங்க இருந்து பாறது. இதில் என்ன தப்பு? பன்றிக் கூட்டத்தை இங்க இருந்து விரட்டினோம் என்கிற சந்தோஷத்தில ஜெயிலில இரு

* * * Nalai 2-ன் தொடர்ச்சி * * *

'எங்கள் கொள்கைக்காக, நூர்மனின் மேன்மைக்காக, ஜெயிலுக்குப் போறது. இதில் என்ன தப்பு? பன்றிக் கூட்டத்தை இங்க இருந்து விரட்டினோம் என்கிற சந்தோஷத்தில ஜெயிலில இருந்திட்டு வாறது...' போலிஸ், ஜெயில் என்கிற வார்த்தைகள் வந்ததும், அங்கே சிறிது அமைதி குடிபுகுந்தது. அந்த அமைதியை மீண்டும் செல்தான் கலைத்தான்.

'ஒஸ்லோவில், போலிஸ் நடத்திய வேட்டையில கம்ப்யூட்டர் எல்லாம் பிடிபட்டிருக்குது. ஆனால், அதைப் பற்றி நாங்கள் பயப்பிடவும் தேவையில்லை. எங்களுடைய பெயர் எதுவும் அதில பதிஞ்சிருக்க வில்லை. நாங்கள் நவநாஜிகள் என்று யாரும் எங்களுக்கு சீல் குத்தவில்லை. வெளிப்படையாக இப்படிக் குத்தப்பட்டால் வில்லங்கம்...இது சின்ன இடம். எங்களைப் போலீஸ் கண்காணிக்கத் துவங்கிவிடும். எங்களுடைய நடவடிக்கைகள் இரகசியமா இருக்கிறதுதான் இப்போதைக்கு நல்லது...அது சரி ஜோன் நீ ஏன் ஒன்றும் பேசாமல இருக்கிறாய்?' என்றான் செல்.

'இல்லை, நீங்கள் பேசுறதைக் கேட்டுக் கொண்டிருக்கிறன். இங்குள்ள தமிழருக்கு Antirasistsenter (நிறவெறிக்கு எதிரான அமைப்பு) உடன் தொடர்பு இருக்கிறதாக தெரியேல்ல...அப்பிடி ஏதும் இருந்தால் அவங்கள் கத்திக் கொண்டு திரிவான்கள். இப்படி இவங்கள் தனிச்சிருக்கிறது எங்களுக்கு வசதியாப் போச்சுது...'என்று கூறி ஜோன் அவர்கள் உரையாடலிலே பங்காற்றுவதாகக் காட்டிக் கொண்டான்.

'ஜோன் சொல்வது முக்கியமானது. இங்கு உள்ள தமிழர் நம்ம ஆக்களோடு ஒட்டுறதில்லை. அவங்கள் தனிச்சிருக்கிறதால, எங்கள் ஆக்கள் அதிகம் அலட்டிக் கொள்ள வரமாட்டாங்கள். அதுதான் எங்களுக்கு நல்ல வாய்ப்பு. முடியுமானால், எங்கட சனங்கள் மத்தியில இவங்களுக்கு வெறுப்பு ஏற்படக் கூடிய வகையில கதைகளைப் பரப்ப வேணும். இவங்கள் சோஷல் பணத்தில் கார் வாங்கிப் பவிசு காட்டுறாங்கள் என்றெல்லாம் கதைகள் கட்ட வேணும்...'

'ஆமா. வெறுப்பு ஏற்றுகிற விதத்தில கதைகள்...'

'நூர்மனையும் இவங்களையும் பிரிச்சு வைக்கிறதுதான் எங்களுடைய இயக்கத்துக்கும் எங்களுடைய வேலைகளுக்கும் நல்லது. நூர்மன் இவங்களை ஆதரிச்சுக் குரல் கொடுக்கத் துவங்கினால் வீண் கரைச்சல்...'

'அது எங்கள் நீண்டகாலத் திட்டம். ஆனால், இப்ப என்ன செய்யப் போறம்?' என்று அல்பிரேட் மது போதையிலே கோபமாகக் கேட்டான்.

'இப்ப ஒன்றும் வேண்டாம். கொஞ்ச நாளுக்கும் பதுங்கியிருக்க வேணும். போலீஸை நோட்டம் பார்க்க வேணும்...'

'கூட்டாகச் செய்தால்தானே கரைச்சல்?' என்று அல்பிரேட் கேட்டான்.

மதுபோதையில் அல்பிரேட் கேட்ட கேள்விக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை.

ஆனால், அவனுடைய கேள்வி ஜோனின் நெஞ்சில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. 'நீங்கள் பேசிக் கொண்டிருங்கோ...எனக்கு அலுப்பாக இருக்கிறது...'என்று ஜோன் எழுந்தான்.

'நாங்களும் புறப்படுவோம். அடுத்த கூட்டத்துக்கு ஏதாவது செய்யத் திட்டத்துடன் வாருங்கள்' என்றான் செல்.

'காத' என்று சொல்லிக் கொண்டே அவர்கள் விடை பெற்றார்கள். தன் வீட்டிற்கு ஜோன் வந்தான். நீல வீட்டிலே பேசிக் கொண்டிருந்த பொழுது, தன் மனசிலே விழுந்த எண்ணப் பொறியைப் பற்றி மீண்டும் ஆழ்ந்து சிந்தித்தான். கூட்டாக செல்வதிலும் பார்க்க, தனியாகவே சில நடவடிக்கைகளைத்தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

தனது மனதிலே உருவான திட்டத்தினைச் செயற்படுத்த எதாவது கிடைக்குமா என வீட்டிலே தேடிப்பார்த்தான். வேட்டைக்கு கொண்டு செல்லும் துப்பாக்கி ஒன்று அவனிடம் இருந்தது. அதையும், அதற்கு உபயோகப்படுத்தப்படும் ரவைகளையும் எடுத்துப் பார்த்தான். அவற்றால் பயனில்லை எனத் தீர்மானித்து, இருந்த இடங்களிலேயே வைத்தான். மேஜையில் 'லைட்டர்' இருந்தது. அதனை எடுத்து வைத்துக் கொண்டான். வீட்டிலே வேறு பொருள்கள் கிடைக்காததினால், வீட்டின் மேஸ்மெண்டிற்குள் இறங்கினான். அதற்குள் உடனடியாக உபயோகத்திற்குத் தேவையில்லாத பொருள்கள் குவிக்கப்பட்டிருந்தன. மிச்சமான பெயின்ட் டின்கள், 'தின்னர்' ஆகியன காணப்பட்டன. 'தின்ன'ரைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு யோசித்தான். அதனைச் சுற்றி எழுந்த எண்ணம் திருப்திகரமாகப் படவில்லை. அதனை வைத்தான். அங்கே அகப்பட்ட ரப்பர் குழாய் ஒன்றினை எடுத்துக் கொண்டு, கராஜுக்குள் நுழைந்தான். அங்கே அவனுடைய சினோ ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்தது. தன் தேடலுக்கு விடை கிடைத்த திருப்தியில் ஸ்கூட்டரை முத்தமிட்டான். வீட்டிற்குள் மீண்டான். கையுறை அணிந்து கொண்டு, போத்தல் ஒன்றை நன்றாகத் துடைத்தெடுத்தான்.

அந்தப் போத்தலிலே, ஸ்கூட்டரிலிருந்து ரப்பர் குழாய் மூலம் பெற்றோல் எடுத்து நிரப்பினான். கராஜ் கதவு மூடியே இருந்தது. தன் திறமைக்கு ஏற்பப் பெற்றோல் குண்டு ஒன்று செய்தெடுத்தான். தொழில் நுட்பமுறையிலே அது செவ்விதாக அமையாவிட்டாலும், தான் எதிர்பார்க்கும் நாசத்தினை அது உண்டாக்க வல்லது என்கின்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது. அதனை சொப்பிங் பையொன்றிலே வைத்துப் பத்திரப்படுத்தி எடுத்தான். லைட்டரைத் தட்டிப் பார்த்தான். பிரச்சினை இன்றி அது இலகுவாக வேலை செய்தது. வீட்டின் கதவைச் சாத்தும் பொழுது நேரத்தைப் பார்த்தான். இரவு இரண்டரை மணி. வீதியை நோட்டமிட்டான். எத்தகைய உயிர் அரவமும் தென்படவில்லை. குண்டைச் செய்தெடுக்கும் பொழுதே, அதன் இலக்கை அவன் மனசிலே தீமானித்துக் கொண்டான்.

தன்வீட்டில் இருந்து ஓரளவு தூரத்தில் இருந்த அந்த வீடு அவனுக்குத் தெரியும். அங்கே ஒரு தமிழ்க் குடும்பம் வசித்து வருவதை அவன் அறிவான். ஏனோ தெரியாது, அந்த வீட்டின் அமைப்புகளை அவன் நுணுக்கமாக அவதானித்திருக்கிறான். அந்த வீட்டின் கராஜ் கதவு மூடமுடியாது இருப்பது விஷேடமாக அவன் கவனிப்பிலே விழுந்தது. அந்தக் கராஜின் கதவினை ஒட்டினாற்போல வீதி அமைந்திருந்தது.

நடந்து கொண்டே, அந்த கராஜ் கதவின் இடுக்கு வழியாக அந்த பெற்றோல் 'பாம்'பை வீசி எரிக்கச் செய்வதிலே சிரமம் இருக்க முடியாது எனத் தீர்மானித்தான். இத்தகைய நாச வேலைகளைச் செய்யப் பயிற்சி பெற்றவன் போன்று, மிகத் துரிதமாகவும் நேர்த்தியாகவும் செயற்பட்டான். வேலை முடிந்ததும், விரைவாகத் தன் வீட்டிற்கு மீண்டான். இடையில் திடீர் வெட்டில் திரும்பிப் பார்த்தான். கராஜிலே புகையும் மெல்லிய தீ ஜுவாலையும் எழும்புவதை அவதானித்தான். தனது திட்டம் கனகச்சிதமான பலனைத் தருகின்றது என்கின்ற திருப்தியுடன், தன் வீட்டிற்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். படுக்கையில் வீழ்ந்தான். தன்முதுகிலே தானே தட்டிக் கொடுக்கும் குள்ளச் சிரிப்புடன் கண்ணை மூடி தூங்கத் துவங்கினான்.

கன்சனும் லயிலாவும் அன்று கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸாராவர். டிஸ்கோ முடிவடையும் நேரமாதலால், அவர்கள் ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாங்கள். அப்பொழுது அந்த வீட்டின் கராஜிலிருந்து புகையும் நெருப்பும் கிளம்பிக் கொண்டிருப்பதையும், அந்தத் தீ வீட்டின்மீது பரவிக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.

வீட்டை நெருங்கியதும் தீயின் வேகம் அதிகரித்தது. உள்ளே யாராவது தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? அந்த வீட்டின் படுக்கை அறைகள் எங்கே இருக்கின்றன? இவற்றை எல்லாம் அறியாது, அவர்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடினார்கள்.

எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலே ராஜமோகன் குடியிருந்தான். தனது மனைவியுடனும் மகளுடனும் தூங்கப் போயிருந்தான். தூக்கத்திலே சுவாசிப்பதற்கு இயலாமல் யாரோ நெஞ்சை அமத்துவது போலத் தோன்றியது. சடுதியாக விழித்தவனுக்கு புகைமணம் மூச்சுமுட்டச் செய்தது. நிதானித்தபொழுது, தமது வீடு தீப்பற்றி எரிவதை உணர்ந்து கொண்டான்.

ஓடிச்சென்று படுக்கையறைக் கதவைத் திறந்தான். புகை ராஜமோகனைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தது. அறைக்கதவைச் சாத்தினான். மனைவி தீபாவையும் மகளையும் உசுப்பிவிட்டான். அவர்களும் துடித்து பதைத்துக் கொண்டு எழுந்தார்கள். ஜன்னலுக்கு வெளியே ஆள் நடமாட்டம் இருப்பதுபோலத் தோன்றியது. ராஜமோகன் ஜன்னலைத் திறந்தான். வெளியே நின்ற போலிஸார் உடனே வெளியேறுமாறு அவசரப்படுத்தியதின் அர்த்தத்தை உணர்ந்தான். பிள்ளையை முதலில் அவர்களிடம் கொடுத்தான். தீபாவை ஜன்னலிலே ஏற்றி விட்டான். அவள் வெளியே குதிப்பதற்குப் போலிஸார் உதவினர். அவனும் ஏறி வெளியே குதித்தவுடன், வீட்டைப் பார்த்தான். கராஜ் பக்கமாக வீடு மிளாசி எரிந்து கொண்டிருந்தது. அப்பொழுது அபாயச் சங்கு ஊதியவாறே தீயணைப்புப்படை வந்து சேர்ந்தது.

ராஜமோகனும் குடும்பமும் ஹோட்டலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்புப்படை வீரமுடன் போராடிய போதிலும், வீட்டுக்கு ஏற்பட்ட சேதங்களை அவர்களாலே தடுத்து நிறுத்த முடியவில்லை.

எரிந்த வீட்டை அநேகர் வந்து பார்த்துச் சென்றனர். 'உள்ளே படுத்திருந்தவர்கள் உயிருடன் தப்பியது தெய்வாதீனமானது' என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். போலிஸார் தடயங்களைப் பரப்பி அந்தத் தீ எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்வதிலே ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது தான் தேவகுருவும் அந்த வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய ஆராய்வுக்கு அவர் உதவுவதுபோல அவர்களுடன் இருந்தார்.

'இது தற்செயலாக ஏற்பட்ட நெருப்பு அல்ல. கராஜிலிருந்து பரவியிருக்கிறது; பெட்ரோல் பாம்' வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்' என்றார் அதிகாரி.

'நம்பமுடியவில்லை...'என்று இழுத்தார் தேவகுரு.

'இந்த வீட்டில் இருப்பவருக்கு யாராவது பகைவர் இருக்கிறார்களா?'

'ராஜமோகனுக்கா? எனக்குத் தெரிந்த வரையில் இல்லை. அவன் யாருடைய ஜோலிகளுக்கும் போகாதவன்...' என்று தேவகுரு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராஜமோகனும் அவ்விடம் வந்து சேர்ந்தான்.

'தம்பி, உனக்கு யாரும் பகைவர்கள் இருக்கிறார்களோ என்று கேட்டினம்...'இல்லை' என்று சொல்லிக் கொண்டிருக்க நீயும் வாறாய்...'

ராஜமோகனை அதிகாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார். வீடு எரிவதற்கு 'பெட்ரோல் பாம்' காரணமாக இருக்கலாம் என்று அதிகாரி மீண்டும் சொன்னார். அத்துடன், நோட்டீஸ் அடித்து தபால் பெட்டிகளிலே போட்டவர்கள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். தனி ஒருத்தனாக அந்த நோட்டீஸ் அடிக்கும் வேலை நடந்திருக்காது. சிறிய கோஷ்டி ஒன்று செயற்படுவதாகத் தாம் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

'இந்தக் கோஷ்டியைக் கண்டுபிடித்தால்தான் தலையிட தீரும்' என்று அதிகாரி தீர்மானித்தாராயினும், அதனை அவர் இவர்களுக்குக் கூறவில்லை.

தேவகுரு இந்த விஷயங்களை அடக்கி வாசிக்கவே விரும்பினார். அங்கு வாழும் தமிழர்கள் மத்தியிலே வீணான பீதி ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. பதற்றப்படுவதனாலே உருப்படியான காரியங்கள் நடக்கமுடியாது என்று அவர் நம்பினார்.

ஆனாலும், ராஜமோகன் ஓரளவு ஓட்டைவாயன். அநுதாபத்துடன் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் எல்லாம் போலிஸ் அதிகாரி தெரிவித்த சந்தேகங்களைப் பெரிதாகச் சொன்னான். இந்தச் செய்திகள் வாட்டோவில் வாழும் தமிழர்கள் மத்தியிலே காட்டுத் தீ போலப்பரவியது. எதனைத் தேவகுரு விரும்பவில்லையோ, அதுவே நடைபெற்றது. இதனால் அவர் மிகவும் வியாகூலம் அடைந்தார்.

அன்று தேவகுரு மாலதிக்குத் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தார். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று திறந்தார். லார்ஸ் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மாலதி துள்ளிக் குதித்தாள். அவள் அனிதாவை தன்னுடைய மிக நல்ல சிநேகிதி எனப் பாராட்டினாள். அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமரச் செய்த பின்னர், 'என்ன குடிக்கிறியள்? கோப்பி?'என்று கேட்டார். லார்ஸ், 'கோப்பி தாருங்கள். நன்றி' என்றார்.

தேவகுரு கோப்பி தயாரிப்பதற்கிடையில் அனிதாவுக்கு 'யூஸ்' கொடுத்து விளையாடத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விட்டாள் மாலதி. நூர்மன் கறுப்புக் கோப்பிப் பிரியர்கள் என்று அறிந்த தேவகுரு, பால் கலக்காது கோப்பி தயாரித்துக் கொண்டு வந்து பரிமாறினார்.

'அந்த வீட்டிற்கு யாரோ திட்டமிட்டு நெருப்பு வைத்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்களாம்...உண்மையா?' என்று கோப்பியை அருந்தியவாறு லார்ஸ் கேட்டார்.

'போலிஸார் அப்படித்தான் நினைக்கிறார்கள்.'

'எங்களால நம்பமுடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய மக்களும் இப்படிச் செய்வார்களா?' என திருமதி லார்ஸ் அங்கலாய்த்தாள்.

'நாலாயிரம் சனங்களில நாலுபேர் வித்தியாசமாகச் செயற்படுவது இயற்கைதானே?' என்று தேவகுரு சமாதானம் சொன்னார்.

'இப்படியும் செய்யிறதே? அதுவும் குழந்தையோட தூங்கிற குடும்பத்துக்கு?' என்று அவள் கோபத்துடன் கேட்டான்.

'சிலருடைய மனங்களிலே அச்சமும் வெறுப்பும் குடியேறி இருக்கும். அவற்றை எப்படி களையிறது என்பதுதான் பிரச்சினை; இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்ப்புக் காணலாம்? இங்குள்ள தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? இங்கள்ள நல்லிதயம் கொண்ட நொஸ்க்குகளின் கடமை என்ன? எரிக்கிறாங்களே என்று விரோதம் பாராட்டாமல், இந்த வன்செயல்களிலே ஈடுபட்டுள்ளவர்களுடைய மன அச்சங்களை அகற்ற வேண்டும், என்று தேவகுரு சொன்னார்.

'நீங்கள் வித்தியாசமான மனுஷர்' என்று திருமதி லார்ஸ் புன்னகைத்தார்.

'மனிதனை மனிதன் வெறுப்பது முட்டாள்களின் செயல். மனிதனை மனிதன் நேசிப்பது--மனிதநேயம்--மகத்தான செயல். மனித நேயம் வளர்ந்தால், வன்முறை அழிந்து போகும்...'

'ப்றா..நான் ஒரு திட்டத்துடன் வந்திருக்கிறேன். நாங்கள் எல்லோரும், தமிழர்களும் நூர்மனும் சேர்ந்து, ஒர் அமைதி ஊர்வலம் நடத்தவேணும். அதிலே அதிகமான நூர்மன் கலந்து கொள்ளுவதற்கு என் மனைவியும் நானும் பாடுபடுவோம். எங்களுக்குள் இந்த ஐக்கிய உணர்வு வெளிப்பட்டால், தீய சக்திகள் ஒடுங்கிப் போக வழியுண்டு' என்றார் லார்ஸ்.

'நல்ல யோசினை. உங்களுடைய அன்புக்கும் அக்கறைக்கும் தமிழர்கள் சார்பாக நன்றி சொல்லுகிறேன்.'

'இது எங்கள் கடமை. உங்கள் ஆக்களுடன் பேசித் தோதான தேதியை எனக்கு அறியத் தாருங்கள்...'

'அடுத்த சனிக்கிழமை, தமிழர் கூட்டமைப்புக் கூட்டம் இருக்கிறது. அதில் தீர்மானிக்கப்படும் தேதியை உங்களுக்கு அறியத் தருகிறேன்....' என்றார் தேவகுரு.

உள்ளே மாலதியுடன் விளையாடிக் கொண்டிருந்த அனிதாவுக்கு, திருமதி லார்ஸ் குரல் கொடுத்தாள்.

7

சனிக்கிழமை ஐந்து மணியளவில் தமிழர் கூட்டமைப்பு கூட்டம் துவங்கியது. தேவகுரு பின்னுக்குப் போய் அமர்ந்தார். அதனைப் பார்த்த தலைவர் சற்குணம், அவரை முன்னுக்கு கொண்டு வந்து அமர்த்தினார். இந்தப் பிரச்சனைகளிலே அவர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். தான் இவற்றை வைத்துக் கொண்டு பிரபல்யம் அடைவதாக இளைஞர்கள் சிலர் தவறாக நினைத்துக் கொள்வார்களோ எனவும் பயந்தார்.

தலைவர் தமது உரையைச் சிறிதாக முடித்துக் கொண்டு, பிரதான உரையைத் தேவகுருவை நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். 'நாம் நினைப்பவற்றை, உண்மையிலே உறுதிபூண்டு, அவர்களுக்குச் சொல்லவேண்டியது தமது கட்டாயம்' என்று நினைத்தார்.

'கடமையைச் செய்; பயனில் பற்று வைக்காதே. கடமை செய்வதினால் கிடைக்கும் பயனையும் ஈசுராப்பணமாக்குதல் வேண்டும்' என்று இராமநாதர் கீதையின் சாரம் பற்றிச் சொல்லும்பொழுது கூறியது அவருக்கு அப்பொழுது நினைவில் மிதந்தது.

தேவகுரு பேசினார்.

'ராஜமோகனின் வீட்டை எரித்தது எங்கள் எல்லோருக்கும் துக்கமே. எங்களைப் போலவே, பல நொஸ்குகளும் இந்தத் துக்கத்திலே பங்குகொள்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த வீடு எரிக்கப்பட்ட வன்முறையை எதிர்த்து ஓர் அமைதி ஊர்வலம் நடந்த நூர்மன் விரும்பிகினம். நாங்களும் அவர்களும் இந்த ஊர்வலத்தைச் சேர்ந்து நடத்த இருக்கிறம். இந்த அமைதி ஊர்வலம், சில நொஸ்குகள் செய்யும் வன்முறைகளைக் கண்டிப்பதற்கான நல்ல துவக்கம் என்றே நான் நினைக்கிறேன்.

'இங்கு வன்முறையின் கோலங்கள் தலைகாட்டுகின்றன. வன்முறையை அகிம்சை மூலம் எதிர்க்கப் போகின்றோம். இதுதான் முக்கியம். இது பாசாங்கு அல்ல. உண்மையிலேயே அன்பு மார்க்கத்திலே நாங்கள் பற்று வைத்துள்ளோம் என்பதை நூர்மன் உணரவேண்டும். எங்களுடைய குடும்பத்திலே தோன்றியுள்ள ஐக்கியம் எதனால் சாத்தியமாயிற்று? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.

'குடும்பத்தின் மொழி அன்பு, பாசம்! இந்த மொழியை நமது சமூக வாழ்க்கைக்கும் விரிவுபடுத்துகிறோம்; அவ்வளவுதான். அன்பு நமது மதம். மன்னிப்பு நமது வேதம். அஹ’ம்சை நமது ஆயுதம். மனித நேயம் நமது நெஞ்சங்களின் கீதாஞ்சலி. இது எல்லோருக்கும் சம்மதமா?'

'ஓம் ஓம்...' என்கிற சபையின் பல பகுதிகளிலிருந்தும் ஒலித்தது.

'இதெல்லாம் சரிவருமே? செமியாக் குணத்தில அன்பு, அஹ’ம்ஸை என்று பேசுறது வடிவாத்தான் இருக்கும். அவன் எங்களைக் குட்டிக் கொண்டிருக்கிறான். நாங்கள் குனிஞ்சு கொண்டே இருக்கிறது? புத்தரிலும் பார்க்க கருணையைப் போதித்தவர் யார்? அவரை வழிபடுறவை எண்டு சொல்லுற பௌத்த சிங்களவர்த்தானே எங்களை ஊரிலை அடிச்சுக் கொல்லுறாங்கள். இல்லாட்டி நாங்கள் இந்தக் குளிருக்குள்ள வந்து, இரவும் பகலும் தெரியா ஒரு இடத்தில வந்து, கிலிசகேடு படுவமே?' என்று விக்னேஸ் ஆக்ரோஷமாகக் கேட்டான்.

'எனக்கொரு சின்னக் கேள்வி. இந்தச் சத்தியாக்கிரகத்தை ஆயுதமாகக் கையாண்டவர் யார்? மகாத்மா காந்தி. இப்ப அந்தக் காந்தி வழி, இந்தியாவில் இருக்கோ? அவருடைய படம் ரூபாய் நோட்டுக்களிலும், நீதிமன்றங்களிலும் கிடக்குது. அவ்வளவுதான். காந்தியைக் கொன்றவன்கள் இப்ப ஆட்சிக்கு வந்திட்டினம். செத்துப் போன காந்தியத்துக்குத் தேவகுரு அண்ணர் வீணாக உயிர் கொடுக்கப் பார்க்கிறார்...' என்று குற்றஞ்சாட்டுபவனைப் போல அர்ஜுன் பேசினான்.

'அகிம்ஸை தாய் மண்ணிலே சரிவரேல்லே. எங்கடை பெடியன்கள் வன்னிக்காட்டில அடிப்பட்டுச் சாகிறாங்கள். இங்க நாங்கள் பெரிய மகாத்மாக்கள் என்கிற நினைப்போட அஹ’ம்ஸா வேதம் பேசுகிறோம்...'என்றான் அமுதன்.

இந்த மூவருடைய குறக்கீட்டுடன் கூட்டம் திசை திரும்பிவிட்டதாக எல்லோரும் அவதிப்பட்டார்கள். என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் சற்குணம் தவித்தார்.

இந்தக் கேள்விகள் தேவகுரு போதிக்கும் அமைதி வழிக்கு எதிராக எழுதப்பட்ட சவால் என்று பலரும் கருதினார்கள். அவர் பேசாமல் மிக அமைதியாக இருந்தார்.

'இதற்கெல்லாம் தேவகுரு அண்ணர் பதில் சொல்ல வேண்டும்!' என்று ரகு கேட்டான். இதனால், தேவகுருவுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலை ஏற்படுவதாக எல்லோரும் நினைத்தார்கள்.

அவர் எழுந்தார். சபையோரை அமைதியாகப் பார்த்தார். பின்னர் ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்து தெளிவாகப் பேசத் துவங்கினார்.

'இந்தத் தம்பிமார் எழுப்பியிருக்கிற கேள்விகள் ரொம்பச் சரி. எனக்கு வாக்குச் சாதுரியம் இல்லை. எதிர்வாதங்கள் சொல்லுறதாக நினைக்கக் கூடாது. தேவதூதர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலே அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது பழமொழி. முகம்மது நபி அவர்கள் கல்லெறிபட்டு அவர் பிறந்த மெக்காவில் இருந்து மதினாவுக்குத் துரத்தப்பட்டார். யேசு பிறந்த மண்ணிலே இன்று கிறிஸ்தவம் இல்லை. அங்கே யூதர்களுடைய மதமே நிலைத்துள்ளது. உலகிலுள்ள ஒரேயொரு இந்து நாடு நேப்பாளம். அங்குதான் புத்தர் பிறந்தார். அவர் பிறந்த மண்ணிலும், அவர் ஞானம் பெற்ற மண்ணிலும் புத்த மதத்திற்கு இடம் இல்லாது போய்விட்டது. ஆனால், இந்த மதங்கள் அனைத்தும் வேறுநாடுகளில் செழித்துள்ளன. காந்தி கூட பிறந்த மண்ணிலேதான் அவர் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்ததாகச் சொல்லப்படும் தீவிர இந்து மதவாதிகள்தான் இன்று ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

'அத்துடன் அணுகுண்டு, ஜலவாயு குண்டுகளை வெடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த இந்துவெறி இந்தியாவுக்கு என்னென்ன நன்மை தரவல்லது என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இன்னொரு காந்தி அனுப்பி வைத்த சமாதானப்படையும், யாழ்ப்பாண மண்ணிலே எத்தனை பெண்களின் கற்புகளைச் சூறையாடியது? எத்தனை மக்களின் உயிரைக் குடித்தது? அந்த மனக் காயங்கள் ஒரு தலைமுறையில் மறைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. சிங்களவர்களுக்கு அன்புமொழி புரியவில்லை என்பதற்காக அன்பும் அகிம்ஸையும், காந்தியக் கொள்கைகளும் அழிந்தொழிந்து விட்டன என்று அர்த்தம் இல்லை.

'தாயக மண்மீட்புப் போரினை நான் என் கனவிலே கூடக் கொச்சைப் படுத்தியதில்லை. அங்கு போராடும் பெடியன்களை நான் கொலையிலே, கொல்லாமை பயிலும் அகிம்ஸாவாதிகளாகவே தரிசிக்கிறேன். அதிலே பங்கு பற்றும் வாய்ப்பினை இழந்தவனும் நான். பழைய கதைகளைக் கிளற நான் விரும்பவில்லை. ஆனால் காலங்களையும் களங்களையும் பொறுத்து நமது தர்மங்கள் மாறும்; மாறவேண்டும். இது சந்தர்ப்பவாதமல்ல. மானிட நேயத்தின் உயிர்புக்கு இந்த சுருதி பேதங்கள் அவசியம். இப்படித்தான் நான் நினைக்கிறேன். தாயக மண்ணின் மீட்புக்கான போர் புனிதமானது. களத்தைவிட்டு, அகதி நிலை கோரி எங்கள் சொந்தங்களின் வளத்துக்காக வாழும் எங்களுக்கு அதனைப் பற்றி பேசும் உரிமைகூட இல்லை என்று நான் கருதுகிறேன். அதிலே நான் பங்களிப்புச் செய்யமுடியவில்லை என்கின்ற குறை என் நெஞ்சிலே ஆறாத வடுவாக இருக்கும். சீழ்வடியும் அந்தப் புண்ணை திறந்து காட்டுவதற்கு இதுவல்ல சமயம்...சந்திரிகாவும் அவருடைய அமைச்சர் கதிர்காமரும் உலக நாடுகள் எல்லாம் சென்று பரப்பும் வேதம் உங்களுக்குத் தெரியுமா?

"தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள். அவங்களுக்கு அகதிகள் அந்தஸ்து கொடுத்து, உங்கள் நாட்டின் அமைதியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்...' என்று போதித்து வருகிறார்கள்...

'நாங்கள் வன்செயல்களில் ஈடுபட்டு, நாம் வாழும் இந்த நாடுகளிலே நாங்கள் பயங்கரவாதிகள் என பெயர் பெற வேண்டுமா? நாங்கள் அஹ’ம்சா வழியை பெரிதும் விரும்புவர்கள் என்பதை நிரூபித்து வாழ்வதினால், தாயக விடுதலைப் போரினைக் கொச்சைப் படுத்தாது வாழும் தமிழர்களாகவும் வாழ்கின்றோம். இது மிகவும் முக்கியம். இதனை மறந்து உணர்ச்சி வசப்பட்டு கோஷங்கள் எழுப்புவது எனக்கு மன வேதனையைத் தருகின்றது.

'நீண்ட விளக்கம் தந்து கொண்டிருப்பதற்கு என்னை மன்னிக்கவும். இன்று எங்கள் முன்னால் உள்ள பிரச்சனைகளும் இவையல்ல. நாங்கள் நொஸ்குகளுடன் இணைந்து அமைதி ஊர்வலம் போகத் தயாரா இல்லையா? இதுதான் கேள்வி. நொஸ்குகள் எங்களுடைய பிரச்சனைகளுக்கு மனிதநேய அடிப்படையிலே தீர்வு காண்பதற்கு நேசக் கரம் நீட்டுகிறார்கள். அந்த அமைதி ஊர்வலம் எங்களுக்காகவே ஒழுங்கு செய்யப்படுகின்றது. அதிலே நாம் எல்லோரும் கலந்து கொள்வதா? இல்லையா?

'ஆம்; இல்லை. எது பதில்? இதை மட்டுமே நாங்கள் தீர்மானிக்கவேண்டும்.'

தேவகுரு அமைதியாக அமர்ந்தார்.

அவர் இவ்வளவு ஆழமானவர்; விஷய ஞானம் உள்ளவர் என்பதை அறிந்து கூட்டத்தினர் உறைநிலை அடைந்த சாங்கத்தில் கேட்டுக் கொண்டிருந்தனர். 'அகிம்€ணு என்கிற ஆயுதத்தினை உண்மையான வீரனாலேதான் பயன்படுத்த முடியும்' என்று அவர் முன்னர் ஒருமுறை சொன்னது சற்குணத்தின் நெஞ்சிலே எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தார்.

திட்டமிட்டு விக்னேஸ் பிரச்சனையை எழுப்பியிருந்தான். இப்பொழுது எதுவும் பேச இயலாது தத்தளித்தான். இந்த சூழ்நிலை எழுவதற்கு தானே காரணம் என்கின்ற குற்ற உணர்வும் அவனை வளைத்துக் கொண்டது. சமாதானம் அடைந்த குரலில், 'யார் நொஸ்குகளைச் சேர்க்கிறது?' என்று கேட்டான்.

'லார்ஸ் என்கின்ற டாக்டரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவருடைய மனைவி ஆஸ்திரி ஒரு சீக்கபிளையர் (நேர்ஸ்). அவர்களுக்கு மொமினிலும் (மாநகர சபை) செல்வாக்கு உண்டு. அவர்கள் அதிகப்படியான நொஸ்குகளைத் திரட்டிக் கொண்டு வருவதாக தேவகுரு அண்ணருக்கு வாக்குத் தந்திருக்கிறார்கள்' என்று தலைவர் சற்குணம் பதில் சொன்னார்.

'இந்த அமைதி ஊர்வலத்திலே தமிழர்கள் எல்லோரும் முழு மனசுடன் பங்கு பற்றுகின்றோம் என்கிற தீர்மானத்தினை நான் பிரேக்கின்றேன்' என்றான் விக்னேஸ்.

'நான் அதை ஆமோதிக்கிறேன்' என்றான் ரகு. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. எல்லோருக்கும் திருப்தியை அளித்தது.

அமைதி ஊர்வலம் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க மிக வெற்றிகரமாக நடந்தது. தேவாலயத்திலே துவங்கி, தேவாலயத்தில் ஊர்வலம் முடிவடையும் எனத் திட்மிடப்பட்டிருந்தது. ஊர்வலத்தின் முடிவிலே, மதகுருவானவர் பூஜை நடத்திப் பிரசங்கமும் செய்தார். யேசுநாதர் தம்மை கொடுமைப் படுத்தியவாகளை மன்னித்தருளினார் என்கிற பைபிள் வசனங்களை மேற்கோள்காட்டி அவர் செய்த பிரசங்கம் அமைதி ஊர்வலத்தின் முத்தாய்ப்பாக அமையலாயிற்று. ஊர்வலம் கலையும் பொழுது, வார்டோ முழுவதும் திரண்டிருந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. அதன் வெற்றிக்காக, எல்லோரும் லார்ஸையும் தேவகுருவையும் மனசாரப் பாராட்டிச் சென்றார்கள். உள்ளூர் வானொலியும் NRK வும் (நோர்வேய அரச ஒளிபரப்புச் சேவை) அவர்கள் இருவரையும் பேட்டிக் கண்டு ஒலி-ஒளி பரப்புச் செய்தது.

'நோர்வே நாடு கடைப்பிடிக்கும் மனிதநேயக் கொள்கைகளின் வெற்றியாக அமைதி ஊர்வலம் அமைந்தது'எனவும் அது விமர்சனம் செய்தது.

அந்த அமைதி ஊர்வலத்தின் வெற்றி, நீல வீட்டிலே கூடித் திட்டமிடும் நவநாஜிகள் நால்வருக்கும் ஆத்திரத்தை ஊட்டியது.

'இந்தக் கறுப்ப பன்றிகளுடன், வெள்ளை பன்றிகளும் சேர்ந்துவிட்டனவே' என்று குமுறினார்கள்.

'ஏய். நாங்கள் உண்மையிலேயே அந்த வீட்டை எரிக்கவில்லை. அப்டி இருக்க, ஏன் இந்தக் கறுத்தப் பன்றிகள் இப்படி ஆட்டம் ஆடுதுகள்?' என்று செல் கத்தினான்.

'யாரோ 'பெட்ரோல் பாம்'எறிந்துதான் வீட்டை எரித்தாகப் போலிஸ் தரப்பு நம்புகின்றதாம்.'

'நாங்கள் அதை எரிக்கவில்லை. வேற யார் இதைச் செய்திருப்பினம்?'

'இந்தத் தமிழ்ப் பன்றிகள்தான் எரித்துப் போட்டு இப்பிடிக் கதையை மாற்றிக் கூத்தாடுதுகளோ?'

'வீடு எரியும்பொழுது உள்ளுக்குள்ள ஆக்கள் இருந்தவையாம்...'

'செய்தவங்களை அறியாட்டில், எங்களுக்கும் ஆபத்து...' அவன்?'

'தெரியேல்லை...'

'தெரியேல்லையோ? அவன்தான் அன்றைக்கு எங்களிட்ட அடிபட்டவன்.'

'அவனே? அவனுக்குப் படிப்பிச்ச பாடம் காணாது.'

'எங்கட சனமும் கனபேர் அவனோடு நிக்கினம். இப்பிடிப் போச்சென்றால், எங்களுக்கு ஆபத்து...'

'நாங்கள் இப்ப எதுவும் செய்யிறது நல்லதில்லை...போலிஸ் சரியான உசாரா இருக்குது. அந்த நோட்டீஸ் ஆர் எழுதினது எண்டு விசாரிச்சுத் திரியிறாங்கள்...நாங்கள் கொஞ்சம் அவதானமாக நடக்க வேணும்...'என்று ஜோன் அவர்கள் உரையாடலிலே குறுக்கிட்டான்.

'நீ பயந்த ஆளடா...' என்று அல்பிரேட் குற்றஞ் சாடடினான். ஜோன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். தன்னை அவர்கள் சந்தேகிக்கவில்லை என்பதில் அவனுக்குத் திருப்தி.

அவர்களுடைய கார் நீல வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

காறால்ட் அதனை ஓட்டிக் கொண்டிருந்தான்.

8

வெள்ளி இரவு ஒன்பதரை மணிக்குத் தம்மை வந்து சந்திக்கும்படி தேவகுருவை லார்ஸ் அழைத்திருந்தார். நேரம் ஒன்பது இருபதைத் தாண்டிவிட்டது. இன்னும் நித்தியாவைக் காணவில்லை. கூட்டம் பற்றி நேற்றி நித்தியாயினிடம் சொல்லி இருக்கிறார்.

'ஒருவேளை மறந்து போனாளோ?' என அந்தரப் பட்டார். நித்தியா மறக்கவில்லை. வந்து கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்ததுமே தேவகுரு புறப்பட்டார். அவரது அவசரத்தைப் பார்த்ததும், 'நல்லவேளை, இந்த மனுஷன் சந்நியாசம் கின்னியாசம் எண்டு நினைக்கேல்லை...இப்பிடியாவது திரிகிறாரே' என்று நினைத்தாள். அவளுக்கு சிரிப்பு வந்தது.

லார்ஸ் வீட்டிலே, மற்றும் நான்கு நொஸ்குகளும் காத்திருந்தார்கள். முன்னர் அவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், நேரில் அறிமுகம் இல்லை. அவர்களை லார்ஸ் சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார். இருவர் ஆசிரியர்கள். ஒருவர் நர்ஸ்ஸாக வேலை பார்ப்பவர். திருமதி ஆஸ்திரி லார்ஸ் கோப்பி கொண்டு வந்து பரிமாறினாள். கூடத்திலே சகஜ நிலை உருவாகியது. உரையாடலில் ஆஸ்திரியும் கலந்து கொண்டார்.

'உங்களுடைய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஒர் அமைப்புத் துவங்கவேண்டும் என்று இவர்கள் விரும்பினார்கள். உங்களையும் அழைத்து இதுபற்றிக் கலந்துரையாடல்கள் செய்யலாம் என்றேன். இதற்காகத்தான் இங்கு கூடி இருக்கிறோம்.' என்று லார்ஸ் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.

'என்னுடைய கொள்கை அல்ல. அன்பு மார்க்கம் என்பது பலரும் போதித்த ஒன்றுதான். புத்தரும் யேசுவும் இதனை அதிகம் வலியுறுத்தினார்கள். மானிட குலம் பண்புடன் முன்னேறுவதற்கு அன்பு எத்தகைய அற்புதமான வாழும் முறையை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் வாழ்ந்தும் போதித்தும் காட்டினார்கள். இருபதாம் நூற்றாண்டிலே, அரசியல் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அகிம்சை என்கின்ற நெறியினை எவ்வாறு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம் என்பதை காந்திஜ“ பயின்று காட்டினார். இங்கு உருவாகி வரும் முரண்பாடுகளை நீக்கி, அமைதியை நிலை நாட்டுவதற்கு இந்த வழி பயன்படும் என்று நான் இங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறேன்.' என்று தேவகுரு தமது தளத்தையும் ஊழியத்தையும் மிகவும் ஆறுதலாக விளக்கினார்.

இதனை தாங்கள் சரியாகவே புரிந்து கொண்ட படியாற்றான் அவரை அழைத்துப் பேசுவதாக அவர்கள் விளக்கினார்கள். நூர்மன் அமைதி விரும்பிகள். உலக சமாதானத்துக்கு, சிறிய நாடாக இருந்தபோதிலும், உச்சப்பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள். அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முந்துகிறார்கள். ஹ’ட்லர் மீள் உயிர்ப்பும் பெற்றது போல, ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே நவநாஜிகள் போன்ற இயக்கங்கள் தோன்றுவது அவர்களுக்கு கவலை தருகின்றது. முன்னர் யூதர்களுக்கு எதிரான கோஷம். இப்பொழுது, அகதிகளாகவும் அபாக்கியவான்களாகவும் ஐரோப்பாவில் வாழத் தலைப்பட்டுள்ள மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு எதிரான கோஷம். இந்தக் கோஷத் தினாலும் இயக்கத்தினாலும், நாகரிகவான்கள் தலையை கவிழ்க்க நேரிடுகின்றது. இங்கு, வார்டோவிலும், இந்த நாஜி இயக்கம் தோன்றியுள்ளதோ என அஞ்சப்படுகின்றது. இந்த அழி பாடுகளைத் தவிர்ப்பதற்கான ஓர் இயக்கம் தேவை என அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

'மிக நல்ல முயற்சி. என் பூரண ஆதரவு உண்டு. இதற்கு ஆதரவு தரும்படி எனக்குத் தெரிந்த தமிழர்களைக் கேட்டுக் கொள்ளுவேன்' என்று தேவகுரு உற்சாகத்துடன் பதிலளித்தார்.

இதற்கு ஒரு பெயர் தேவையென அபிப்பிராயம் நிலவியது. பல பெயர்கள் பரிசிலனைக்கு வந்தன. 'Vardo Ikke-Vold Forum' (வார்டோ அகிம்ஸை அரங்கு) என்கின்ற பெயர் பொருத்தமாக இருக்கலாம், என்று தேவகுரு தெரிவித்த அபிப்பிராயத்தை அவாகள் எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுக் கொண்டார்கள்.

'நீங்கள்தான் அதன் தலைவராகச் செயற்பட வேண்டும்.' என்று ஆசிரியர் ஒருவர் தேவகுருவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார்.

'உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. ஆனால் எந்த இயக்கத்திற்கும் அல்லது மன்றத்துக்கும் நான் தலைவனாக இருப்பது இல்லை என்பது என் கொள்கை.'

'ஏன்?'

'அதுவும் காந்தியக் கொள்கை என்று நினைத்து விடாதீர்கள். தொண்டனாக இருந்து உழைப்பதில் எனக்குத் திருப்தி. கொள்கையை அடிமட்டத்திலிருந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தொண்டனுக்கு வாய்ப்பிருக்கிறது. தலைமை எனக்குச் சுமையாக மாறிவிடும் என அஞ்சுகிறேன். பல விஷயங்களிலும், பல கோணங்களிலும் என்னைப் பார்க்கிலும் தலைமைப் பதவி வகிப்பதற்கு டாக்டர் லார்ஸ”க்கு அதிக தகமைகள் இருக்கின்றன என நான் கருதுகிறேன். அத்துடன் அரச அலுவலர்களுடன் தொடர்பு கொள்ளவும், விஷயங்களை எளிதிற் புரிய வைக்கவும் அவராலே முடியும்,' என்றார் தேவகுரு.

அவருடைய கோரிக்கைக்காக மட்டும் தலைமைப் பொறுப்பினைத் தாம் ஏற்கத் தயாராக இருப்பதாக லார்ஸ் அறிவித்தார்.

'உங்கள் மூலம், தமிழ் மக்களுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் அதிக அளவில் இருக்க வேண்டும்...' என்று அவர்கள் தேவகுருவைக் கேட்டுக் கொண்டார்கள். தமது சக்திக்கு முடியுமான அளவு திரட்டுவதாக அவர் வாக்களித்தார்.

குறித்த நாளில் பாடசாலை மண்டபத்திலே 'Vardo Ikke-Vold Fourm' இன் அங்குரார்ப்பணக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வரவு பதியப்பட்ட ஏட்டிலே, எழுபத்திரெண்டு தமிழர்களின் பெயர்களும், ஐம்பத்தைந்து நொஸ்குகளின் பெயர்களும் பதிவாகி இருந்தன.

அக்கூட்டத்திலே தேவகுரு அற்புதமான உரை ஒன்றினை நிகழ்த்தினார். உலகத்திலே வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு அன்பின் மொழியும், அர்த்தமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது, அவர் பேச்சின் பொருளாய் அமைந்தது. நொஸ்க் மொழியில் அவருக்குச் சரளம் கிடையாது. எனவே, அவர் தமிழிலே பேச, அதன் தொனியும் பாவமும் சற்றும் சிதையாமல நொஸ்க் மொழியில் பெயர்க்கப்பட்டது.

அன்பு நிர்பந்தத்தினை மீறமுடியாது. தேவகுரு செயற்குழு உறுப்பினராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். திங்கட்கிழமையே அந்த அமைப்பு சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டது. செயற்குழு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியது. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் உள்ளூர் நிருபர்கள் உற்சாகத்துடன் பங்கு பற்றினார்கள்.

தொலைக்காட்சி, தேவகுருவை விசேஷமாகப் பேட்டிக் கண்டது. வழக்கம் போலவே, அவர் அன்பு, அகிம்ஸை, காந்தியவழி, மனித நேயத்தின் சக்தி, துவேஷ -குரோத உணர்ச்சிகளினால் ஏற்படும் மானிட வீழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். தமிழ் மக்கள் நோர்வே நாட்டுக்கு அகதிகளாக வருவதற்கான அரசியற் பின்னணியை விளக்கினார். நிற, இன விரோத அடக்குமுறைகளின் அநர்த்தங்களை விளக்கினார். 'நோர்வே மக்களை நேசிக்கிறோம். அவர்களுடைய கருணையை மதிக்கிறோம். அவர்களுடைய அன்பினை தலைமுறை தலைமுறையாக நினைவில் வைத்துக் கொள்வோம். நாங்கள் இந்த நாட்டிற்கும் அதன் முன்னேற்றத்துக்கும் எங்கள் உழைப்பினைத் தருவோம்' என்று மிக உருக்கமாக கூறினார்.

அவருடைய பேட்டி நல்லிதயங் கொண்ட நொஸ்க்குகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அவரை அவர்கள் எல்லாரும் மகத்தான மனிதர் எனப் பாராட்டச் செய்தார்கள். தேவகுருவின் சேவையைத் தமிழர்களும் அதிகமாக மதிக்கத் துவங்கினார்கள்.

'இந்தக் கறுத்தப் பன்றிக்குப் பின்னால், வெள்ளைப் பன்றிகளும் அணி திரண்டு எங்கள் நாட்டைக் குட்டிச் சுவராக்குதுகள்' என்று ஜோன் கறுவிக் கொண்டான்.

கிறிஸ்மஸ் விடுமுறையில் அல்பிரேட்டுடன் மோல்ற்றன் என்பவன் வந்து தங்கினான். அவனுக்கு இவன் தூரத்து உறவினன். அவன் Vidergagende Skole (மேனிலைப் பள்ளி) மாணவன். அவனுக்கு வெளிநாட்டவரை பிடிக்காது. தன் வெறுப்பினை ஒளிவு மறைவின்றிக் கொண்டித் தீர்த்தான்.

'என் பாடசாலையில் சில பெண்கள் கறுத்தப் பன்றிகளைக் காதலிக்குதுகள். இவள்கள் இனிக் கறுத்தப் பன்றிக் குட்டிகளைப் பெற்று வளர்ப்பார்கள்...என்னிடம் மட்டும் துவக்கு இருக்குமானால், அவள்களையும் அந்தக் காதலன்களையும் சுட்டுப் பொசுக்கி இருப்பன்' என்று கத்தினான். அப்படி அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கத்தியபொழுது அல்பிரேட் வீட்டில் செல்லும் இருந்தான். இதனால், நீல வீட்டில் கூடிய அடுத்த கூட்டத்திலே, மோல்ற்றன் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

'எங்கள் விஷயம் பிழைச்சுக்கொண்டு போகுது. எங்களிட்டை அடிவாங்கியவன் இப்ப பெரிய மனுஷன். வேலையில்லாத இந்த பன்றிகளும் அவன்ர மூஞ்சியை டீவியில காட்டுறாங்கள்...இந்த வெள்ளைப் பன்றிகளும் அவனை ஒரு தலைவனாகப் பார்க்கிறார்கள்' என்று ஜோன் கத்தினான்.

'இதுகளை என்ன செய்யலாம்?'

'யார் அந்த வீட்டை எரிச்சவங்கள்? எங்களைப் பார்க்கிலும் தீவிரமான ஒரு குழு இயங்குதோ?'

'எங்களை விடத் தீவிரமாக யார் இருக்கிறார்கள்?'

'சுத்தி சுததி ஒரே கதை தேவையில்லை. இப்ப நாங்கள் என்ன செய்யலாம்?'

'இப்பிடி நீ கேட்டா என்ன செய்யிறது? யோசிக்கச் செய்வம்.'

'யோசிச்சு எப்ப செய்யிறது?'

'ஏய் நீ என்ன கதைக்கிறாய்?'

'ஒகே. அமைதியாய் இருங்கோ. இங்க சண்டை பிடிக்க வாறேல்ல. பிளான் போட்டு எதாவது செய்வோம்.'

'வீடெறிக்கிற மாதிரி ஒன்றும்செய்யேலாது. போலிஸ் சரியான அலேட்டா இருக்கிறாங்கள்.'

'அப்ப என்ன செய்யலாம்?'

'பழையபடி யாராவது ஒருத்தனுக்கு அடிபோடுவது,'

'திரும்பவும் ஊர்வலம் போவாங்கள்...'

'ஊர்வலத்தை இலேசாகக் குழப்பலாம். இதுக்கு நான் பிளான் தாறன்' என்று பெரிய மனுஷன் பாணியில் மோல்ற்றன் சொன்னான்.

'மோல்ற்றனின் அநுபவங்களைப் பிறகு கதைப்பம்.'

'அப்ப, இனி ஆருக்கு அடி போடலாம்?'

'சுத்தித் திரிவம். வசதி வாய்க்கிற மாதிரிச் செய்வம்.'

'இல்ல...அவன் யார் லீட் பண்ணுறது? அந்தக் கறுத்தப் பன்றி யார்?'

'தேவகுருவோ என்னவோ.'

'அவனுக்குத்தான் அடி போடவேணும். இந்தத் தடவை எலும்பு முறிய வேணும்?'

'எப்ப, எங்க செய்யலாம்?'

'அதை அவன்ர அதிர்ஷ்டம்தான் முடிவு செய்யோணும்.'

'அப்ப வேலையைத் துவங்க வேண்டியதுதான்.'

அவர்கள் அலுத்து இருக்கவில்லை. இப்போது முறை வைத்து, அவர்களுள் ஒருவன் குடிப்பதில்லை. குடியாதவன் சாரதி என்பது நியதியாயிற்று. இன்று ஜோன் இப்பொறுப்பை ஏற்றிருந்தான். தேவகுருவைத் தேடி அலைந்தார்கள். அவர் எங்கும் அகப்படவில்லை. ஜோனுக்கு அலுப்பும் கோபமுமாய் இருந்தது.

என்றாலும் பின்வாங்கும் மனதின்றி, 'இன்றைக்கு எப்படியும் ஒரு கறுத்தப் பன்றியின் காலை முறிக்க வேண்டும்' என்று ஜோன் கறுவிக் கொண்டான்.

ஈற்றில் குப்பைக் கொட்டும் இடத்திற்கு காரைச் செத்திவிட்டு அங்கு காத்திருந்தனர். இந்தக் குப்பை கொட்டும் இடம் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. அந்த இடத்திற்கு யாரும் அதிகம் வருவதில்லை. எப்போதாவது இசக்குபிசக்கான குப்பை சேர்ந்தால் மட்டும் யாராவது அங்கு வருவாங்கள்.

காருக்குள் ஒலிபெருக்கி இடி இடி என முழங்கிக் கொண்டிருந்தது. யார் ஹெட்லைட் போட்டபடி தரித்து நின்றது. வெளியே 'கும்'இருட்டாக இருந்தது.

'பேஸ்மெண்டில்' பழைய காலத்து மெத்தை ஒன்று கிடந்தது. அதன் தோற்றம் வயிற்றைக் குமட்டி வாந்தி வரப் பண்ணியது. இது திடகாத்திரமான மெத்தை. குப்பைக்குப் பாவிக்கும் கறுத்த பையினுள் திணிக்க முடியாது. டிக்குக்குள் திணித்து குப்பை கொட்டும் இடத்தில் எறிந்துவிட்டு வருவது நல்லதென விநாயகம் பிள்ளை எண்ணினார்.

ஜோன், ஒரு தமிழன் காரில் போவதைப் பார்த்து விட்டான். இருளில் உள்ளே இருப்பவன் நன்றாகத் தெரியவில்லை. இன்னார் என்பது நிச்சயம் இல்லை. ஆனால், உருவ அமைப்பைப் பார்த்து ஒரு தமிழன் என்று நிச்சயித்துக் கொண்ட அவன், பரபரப்பானான். சகாக்களை உசுப்புவதற்கு தேவகுரு எனச் சொல்வதென உத்தேசித்தான்.

'ஏய், தேவகுரு! அந்தப் பன்றி போறான்! அந்தப் பன்றி போறான்' எனக் கத்தினான். எல்லோரும் துடித்துப் பதைத்து எழும்பினார்கள். ஜோன் காரை உடனே நடுவீதிக்கு எடுத்தான். ஹெட்லைட் போட்டபடியே காருக்குள் காத்திருந்தான். மற்றவர்கள் தங்களுடைய முகத்திற்கு முகமூடி அணிந்து கொண்டார்கள்.

விநாயத்தின் வாகனம் தென்பட, ஜோன் ஆபத்திற்குப் பாவிக்கும் மின் விளக்ககள் அனைத்தையும் ஒளிரச் செய்தான். விநாயத்திற்கு என்ன நடக்கிறதென்பது புரியவில்லை. 'ஏதாவது பிழையாக இருக்க வேண்டும். அதுதான் போகும் போது லையிற்றைப் போட்ட வண்ணம் இருந்திருக்கிறார்கள்' என நினைத்துக் கொண்டார்.

விநாயகத்தின் வாகனம் கிட்ட வந்தது. இரண்டு பேர் போனட்டைத் திறந்து ஏதோ கிண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்கள் தலை நன்றாகத் தெரியவில்லை. போனட் கதவு மறைத்துக் கொண்டிருந்தது.

விநாயகம் வாகனத்தை நிறுத்தினார். அவர்களை நோக்கிச் சென்றார். 'இது முதலில் தரித்து நின்றது. இப்போது எப்படி நடுவீதிக்கு வந்தது?' பொறி தட்டியது. நின்று நிதானிப்பதற்குள், குனிந்து திருத்திக் கெண்டிருப்பதாய் பாவனை செய்தவர்கள் தீடிரென நிமிர்ந்தார்கள்.

விநாயகம் அதிர்ந்தார். 'இவர்கள் ஏன் முகமூடி அணிந்திருக்கிறார்கள்? விடை புரியாது திகைத்தார். மறு கணம் 'நரகல் கறுத்த பன்றி' என்று கத்தலுடன் ஒருவனுடைய இரும்புக் கை அவரது மூக்கில் 'இடி'என இறங்கியது.

விநாயத்திற்கு மயக்கம் வருவது போல இருந்தது. இரண்டு பேராக இருந்தது ஐந்து பேராகக் மாறியதாய் தோன்றியது. அவர்கள் நையப் புடைத்தார்கள். இவர்'ஐயோ அம்மா' என்று கத்தினார். அவரை மயக்கம் முழுமையாகக் கவ்வியது.

அவர்களுக்குச் செத்தப் பாம்பை அடிக்கப் பிடிக்கவில்லை. தங்கள் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டார்கள். மயக்கம் தெளிந்தபோது, காலில் பயங்கர வலி எடுத்தது. தேகம் உறைந்து விட்டதாக உணர்ந்தார். உடல் குளிரால் உறைந்து உயிர் துடிப்பு அடங்கும்முன் காரிற்குள் சென்றுவிட வேண்டுமெனத் துடித்தார். மெதுவாக இழுத்து இழுத்து, அரைந்து அரைந்து வாகனத்தைச் சென்றடைந்தார். உயிர் போய்விடும் வலி; குளிர். காரினுள் தன்னைத் திணித்து உடல் சாய்த்ததும், மீண்டு மயக்கம் வருவதாய்த் தோன்றியது.

சுகாதார நிலையத்திற்கு போலீஸார் வந்து விநாயத்தை விசாரித்துவிட்டுச் சென்றார்கள். அவர்களுக்கு இன்னுமொரு தலையிடி அதிகரித்துள்ள அவஸ்தை. அடுத்த நாள் இந்தச் செய்தி ஊரெல்லாம் காட்டுத் தீயாய்ப் பரவியது. இளைஞர்கள் சினந்தெழுந்தனர். வயதானவர்கள் தவிர்க்க முடியாதென்றனர். பெண்கள் 'இது என்ன கோதாரி' எனப் பயப்பட்டனர். வார்டோ தமிழர்கள் அமைதி பறிபோய் விட்டதாய் அங்கலாய்த்துக் கொண்டனர். எதிர்விளைவு என்ன?...கொலைப் பயம் ஒவ்வொருவருடைய மனசிலும் இடம் கேட்கத் துவங்கியது.

9

வித்தியாயினி பயமின்றி தொழிற்சாலைக்குச் சென்றுவரவேண்டும் என்கிற நோக்கத்தினைப் பிரதானமாகக் கொண்டு, தேவகுரு கார் ஒன்று வாங்கியிருந்தார். அவள் தொழிற்சாலைக்குச் சென்று வருவதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்துவாள். மற்றைய நேரங்களில், தேவகுரு ஓட்டுவார்.

மனைவி கொடுத்த 'லிஸ்ட்'டிலுள்ள பொருள்களை வாங்கிக் கொண்டு, காரைக் கிளப்பினார். தெருவில் ஓரளவு ஜனநடமாட்டம் இருந்தது. தேவாலயத்தின் அயலிலே திரும்பிய பொழுது, செல்லக்கண்ணனின் மகள் விகீனா அழுது கொண்டு செல்வதாகத் தோன்றியது. தாயகத்திலே செல்லக்கண்ணன் அவருடைய ஊரைச் சேர்ந்தவன். சுற்றி வளைத்துத் தேடினால் உறவுங்கூட குழந்தைகள் அழுவது அவருக்கு எப்பொழுதும் பிடிப்பதே இல்லை. அன்றலர்ந்த மலர்களாய் அவர்கள் ஆனந்தக் கூத்தாட வேண்டுமென்று விரும்புபவர். எனவே, கிகீனாவைத் தேற்ற முயன்றார்.

'விகீனா ஏன் அழுகிறாள்?'

இந்தக் கேள்வி அவர் மனசிலே எழுந்ததும் காரை 'ஸ்லோ' செய்தார். அவள் மறுபக்கம் திரும்பினாள். அவர் ஹாரனடித்ததும் திரும்பிப் பார்த்தாள். அவர் வருமாறு சைகை காட்ட, அவள் தயங்கினாள்.

'வா பிள்ளை; வந்து ஏறு. நான் வீட்டை கொண்டு போய் விடுறன்.' அவருடைய அழைப்பின் இதம் அவளை ஈர்ந்தது. அவள் மெதுவாகக் காருக்குள் ஏறினாள். அவள் விசும்பல் தொடர்ந்தது.

'என்னமா நடந்தது? யார் என்ன செய்தது?'

'ம்ம்ம்...'

'நீங்கள் கெட்டிக்காரப் பிள்ளையல்லே? அழாமல், மாமா கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லவேணும்... சொல்லுவியா?'

'ம்...' அவள் விக்கினாள்.

'முதலில் அழுகிறத நிப்பாட்டம்மா.'

'...'

'ப்ளீஸ்'

'...'

'எங்க சிரியுங்கோ பார்ப்பம்...'

'...'

'சிரிக்கிறா...சிரிக்கிறா...சிரிக்கிறா...'

தேவகுரு பெரிசாகச் சிரிக்க, அவளம் சிரித்தாள். சிறிது நேரம் சிரிக்கச் செய்த பிறகு, நடந்ததை அறிய விரும்பினார்.

'விகீனா...'

'ம்...என்னங்கிள்?'

'நான் கேட்டால், அழாமல் பதில் சொல்லுவியா?'

'எதுக்கு?'

'பள்ளிக் கூடத்தில் என்ன நடந்தது?'

'ம்...ம்...'

'அழக்கூடாது...'

'நான் அழல்ல...'

'ம்...சொல்லுங்க...என்ன நடந்தது?'

* * * Nalai 3-ன் தொடர்ச்சி * * *

'நாங்கள் அங்கிள், தனியா நிண்டு விளையாடினனாங்க...அப்ப அந்த நொஸ்க் பெட்டைகள் ரெண்டு வந்து குழப்பினாளவை. அதுக்குப் பிறகு நாங்கள் வேற இடத்தில் போய் விளையாடினம். அப்பவும் வந்து குழப்பினாளவை. அப்பிடிக் குழப்ப நாங்கள் அவையத் தள்ளினம். அதுக்கு 'கல்வத்த சீவாட்' எண்டு, எங்களில உள்ளி மணக்குது எண்டு சொல்லி, மூக்கைப் பொத்தி நக்கலடிச்சவ...நாங்கள் இதை எல்லா பொறுத்துக்கொண்டு விளையாட, எங்களுக்கு மேல துப்பிப் போட்டு, ஓடிட்டனம். ஏன் எங்களைத் துப்பவேணும்? நாங்கள் என்ன எச்சில் தொட்டியே அங்கிள்?'

'இல்லை. நாங்கள் மனுஷர்'

'அதுதானே அங்கிள். ஏன் இவை இப்பிடிச் செய்யினம்?'

'அதுதான் நானும் யோசிக்கிறன்.'

'யாராவது எங்களைப் பற்றிக் கூடாமல் சொல்லிக் குடுக்கினமோ?'

இந்தச் சிறுமியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? இந்தப் பிஞ்சு மனங்களை காயப்படுத்துவதிலே அந்தச் சமுதாயம் என்ன நன்மை அடைய போகின்றது?

'அப்பிடிச் செய்யிறது பிழைதானே அங்கிள்?'

என்ன பதில் சொல்லுவது எனத் தேவகுரு யோசித்தார்,

'நாங்கள் ஊரில குறைஞ்ச சாதிப் பிள்ளைகளோட விளையாடுறதில்லை எண்டு அம்மா சொல்லுறவ...உண்மையே அங்கிள்?'

யாழ்ப்பாணத்திலே, எளிய சாதிகள் என்று நாக்கில் நரம்பில்லாது வக்கணை செய்தவர்களுடைய வாரிசுகள், இங்கே துப்பல் அபிஷேகத்தினாலே அல்லாடுதுகள். இது தர்மவினையா? தெய்வ நீதியா? தேவகுருவின் நெஞ்சு வலித்தது.

நொஸ்க் சிறாரின் நெஞ்சங்களிலே நிறவெறித் துவேஷத்தினை வித்தூன்றுபவர்கள் யார்?

விகீனா வீடு வந்தது. அந்தப் பிஞ்சு மனம் நோகாமல் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டது ஆறுதலாக இருந்தது.

'வாங்க அங்கிள்' என்று கையைப் பிடித்து இழுத்தாள். அந்த அழைப்பை அவரால் நிராகரிக்க முடியவில்லை.

கதவைத் திறக்க வந்த செல்லக்கண்ணன், தேவ குருவைக் கண்டதும் ஒடவந்து வரவேற்றார்.

தேவகுரு தமது ஓய்வு நேரங்களைப் பயனுள்ள முறையிலே செலவழிப்பதை விரும்புபவர். நிறைய வாசிப்பவர். கற்க வேண்டியவை கடலாய் விரிந்து கிடக்க, வீண் வம்பளப்புகளிலே காலத்தை வீணடிக்க விரும்பாதவர். புதிதாக வாங்கிய கார், வீடு, சலவை எந்திரம் போன்ற வீட்டுப் பாவனைப் பொருள்கள் பற்றிய பெருமைகளைப் பேசுவது எரிச்சலைத் தரும். பணம் சம்பாதிப்பதற்கு முதலிடம் அளித்து, ஏனைய அனைத்து மனிதக் கடமைகளையும் துறப்பவர்களை மனிதப் புழுக்கள் என்றும், மானிட குலத்தின் உய்வுக்கும் உயர்வுக்கும் உழைத்தல் தெய்விகப் பணி என்றும் அவர் கருதினார்.

விகீனா அழுது முகம் வீங்கி இருப்பதைக் கண்ணன் அவதானித்தான்.

'விகீனா, பள்ளிக்கூடத்தில் நீ அழுதனியே?'

'ம்...'

'ஏன்?'

'துப்பீட்டுதுகள்.'

'யார்?'

'ரெண்டு நொஸ்க் கெட்டையள்'

'நீ ரீச்சரிட்டை சொல்லேல்லையே?'

'இல்லை.'

'சொல்லி இருக்கலாமே?'

'ம்...'

'நான் என்ன அவர்களை செய்யட்டும்? இதுக்கு இப்படிச் செய்திருக்குதுகள். கொண்டு போய் வகுப்பு டீச்சரோட கதைச்சிட்டு வரட்டே?' என்று ஒருவகை ஏலாமையோட கண்ணன் கேட்டான்.

'இது வகீனாவுக்கு மாத்திரம் இல்லை. இங்க இருக்கிற எல்லாப் பிள்ளைகளுக்கும் இருக்கிற அவமானம். பிரச்சினை...யோசிச்சுச் செய்யவேணும்' என்றார் தேவகுரு அமைதியாக.

பாடசாலை அதிபர் வயதானவர். மூக்கு நுனியிலே தொங்கும் மூக்குக் கண்ணாடி இவர்களைக் கண்டவுடனேயே புன்னகையோடு வரவேற்றார். மேஜையில் பல கடுதாசித் துண்டுகள்; வந்த கடிதங்கள்; போகவேண்டிய கடிதங்கள்; கணினி ஒன்று ஆகியன அடைத்திருந்தன. கணினி தனக்கு ஓய்வில்லை என்பது போல விழித்துக் கொண்டிருந்தது. அதிபர் சுழல் நாற்காலியில் வசதியாக அமர்ந்திருந்தார்.

குனுத்--நல்ல நாள்--கூறியவண்ணம், அவர்களைக் கைகுலுக்கி வரவேற்றார். தேவகுருவும் செல்லக் கண்ணனும் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

'நான் என்ன செய்யவேணும்?'

'நிறையச் செய்யவேணும்...' என்று சொல்லித் தேவகுரு சிரித்தார்.

'ஏலுமெண்டாச் செய்யலாம்' என்று அதிபர் பதிலுக்கு முறுவலித்தார்.

'இவருடைய மகள் விகீனா இங்க படிக்கிறா...'

'ம்..கும்.'

'அவளைத் தொந்தரவு செய்து, பயமுறுத்தி, எச்சில் துப்பியிருக்கினம்'

'அதே வகுப்புப் பிள்ளைகளா?'

'இந்தப் பாடசாலைப் பிள்ளைகள்.'

'நான் வருந்துகின்றேன். நான் அவர்களை விசாரிக்கிறேன்.'

'அதுக்கல்ல நாங்கள் வந்தது...'

'சொல்லுங்கள்...'

'ஓரளவுக்கு வெள்ளைத் தோலல்லாத பிள்ளைகள் எல்லோரும் அநுபவிக்கிற பொதுவான பிரச்சினையாக இது தோன்றிகின்றது.'

'இருக்கலாம்...நல்லதுக்காக ஏதாவது செய்வம்...'

'நடப்பவை இந்த நாட்டு மக்களின் காருண்ய குணத்துக்கு ஏற்றதல்ல. நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயம். பிள்ளைகள் நிறவெறி விரோதங்களுடன் பிறப்பனவல்ல. நிறவெறிக் குரோதம் போன்றவற்றைப் பிள்ளைகள் வளரும் சூழலிலேதான் அறிந்து கொள்ளுகிறார்கள். நாங்கள் உண்மைகளைப் பெற்றோருக்கு விளக்கப்படுத்த வேண்டும். முதலில் அவர்கள் மன நிலைகளிலே மாற்றம் ஏற்படவேண்டும்...'

'நீங்கள் சொல்லுவது சரி. பெற்றோர்கள் ஆசிரியர் கூட்டம் ஒன்றுக்கு நாங்கள் ஒழுங்கு செய்யலாம். ஆனால் அத்தகைய கூட்டங்களிலே தமிழ்ப் பெற்றோர்கள் பெரும்பாலும் வருவதில்லை. நீங்கள் மனவருத்தப்படக் கூடாது. தமிழ் பெற்றோர்கள் பலரும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதுடன் தமது கடமை முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள்...'

'தமிழ்ப் பெற்றோருடன் நான் பேசிப் பார்க்கிறேன். அடுத்த கூட்டத்தில் அவர்களைக் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுவேன்.'

'உங்களுக்கு நன்றி...'

'இது நன்றிக்கல்ல. இது பெற்றோருடைய கடமை என்று நான் நினைக்கிறேன்.'

'இந்தக் கடமை உணர்ச்சி எல்லாப் பெற்றோருக்கும் ஏற்படுமானால், பாடசாலை நிர்வாகத்தில் ஏற்படும் அநேகமான பிரச்சினைகள் சுலபமாகத் தீர்ந்துவிடும்' என்று கூறி எழுந்த அதிபர், கூட்டத்திற்கான நாள் விரைவிலேயே பிள்ளைகள் மூலம் அறிவிக்கப்படும் எனக் கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த தேவகுருவுக்குக் கவலையாக இருந்தது. அதிபர் சொல்வதில் உண்மை இருந்தது. தமிழ் பெற்றோர் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திலும், அவர்களுடைய வளர்ப்பிலும் அதிக அக்கறை எடுப்பவர்களாகத் தெரியவில்லை. செல்லக்கண்ணனும் அவன் மனைவி தீபாவும் விழுந்து விழுந்து உழைக்கிறார்கள். பணம் ஈட்டல் மட்டுமே வாழ்க்கையாகிவிட்டது. இப்படித் திரட்டும் பணம் யாருக்காக? பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையா? பிள்ளைகளை உரிய முறையிலே வளர்க்கத் தவறியதை, மிகக் காலங்கடந்தே உணர்வார்கள். பிறகு...இவர்களை அழைத்துப் பேசினால் என்ன? உழைக்கத் தெரியாதவன் வயிற்றெரிச்சலிலே புலம்புகிறான் என்பார்கள். எல்லாவற்றையும் இவர் தன் தலையிலே போட்டுக் கூத்தாடுகிறார் என்பார்கள். இந்த அவமானங்களுக்கு அஞ்சி நமது சமூகக் கடமையைச் செய்யாமல் இருப்பதா?

'சகல விடயங்களையும் விளக்கும் உண்மையை நேருக்கு நேர் காண விரும்புவோர், எவ்வளவு இழிவான சத்துருவையும், தன்னைப் போலவே நேசிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்த விருப்பம் உடையவர்கள் வாழ்வில் எந்தத் துறையையும் அலட்சியம் செய்யலாகா...' என்கிற காந்தியின் அறிவுறுத்தல் அவர் நெஞ்சில் மிதந்தது.

'சிந்தனையிலே மூழ்கி இருந்தவரை மாலதி உசுப்பினாள்.

'அப்பா...அப்பா...'

'என்னம்மா?'

'தமிழ் பாடத்தில நீங்கள் தந்த வீட்டு வேலையெல்லாம் எழுதி முடிச்சிட்டன் அப்பா...'

'என்ரை மாலதிக் குட்டி கெட்டிக்காரி தானே? கொண்டு வாருங்கோ திருத்துவம்...'

மாலதி தமிழை உறுப்பமைய எழுதுவதில் முன்னேற்றம் காட்டுவது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. தினமும் சாப்பிட மறந்தாலும், அவளுக்குத் தமிழ் கற்பிப்பதற்கு அவர் மறப்பதே இல்லை. தமிழ் கற்பிக்கும் நேரத்தையே அவளுடன் கொஞ்சி மகிழும் நேரமாகவும் அவர் கருதினார்.

'இன்றைக்கு நீங்கள் பாரதி பாடல் ஒண்டு சொல்லித் தாறதாச் சொன்னீங்கள்...'

'ஓம். அப்பா மறக்கவில்லை...' என்று சொல்லிக் கொண்டே பாரதி பாடலை எடுத்துவரச் சென்றார். பாரதி பாடல்களிலே ஒன்றுதல் அவருடைய தலையாய பலவீனம். அது குறித்து அவருக்குப் பெருமையும்.

10

திட்டமிடப்பட்ட வன்செயல் காரணமாகத்தான் வீடு எரியுண்டது என்கிற முடிவுக்குப் போலிஸார் வந்திருந்தனர். இருட்டடி போன்ற சம்பவங்களும் மறைவாக இயங்கும் ஒரு நிறவெறிக் குழுவினாலே நடப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகித்தனர். இந்த விஷயங்களின் விசாரணையிலே உதவுவதற்காக, வேக்டாலும் அஸ்பியோனும் ஒஸ்லோவிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்தனர்.

சேகரிக்கப்பட்டிருந்த தகவல்கள் போதுமானவையாக இல்லை. எங்கேயிருந்து துவங்குவது என்பதுகூடத் தெரிய வில்லை. அவர்களுக்குத் தரப்பட்டிருந்த வெள்ளைநிறப் பிரத்தியேக காரிலே வார்டோவை சுற்றி வந்தனர். வேக்டால் 'கெட்டிக்காரர்' என்று போலிஸ் வட்டாரத்தில் பெயர் பெற்றிருந்தார். நகரை வலம் வரும்பொழுது தற்செயலாக ஏதாவது தடயம் கிடைக்கலாம் என நம்பினார்.

காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு, உள்ளே அமர்ந்தவாறே, வானொலிச் செய்திகளைகேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, இவர்களைத் தாண்டி ஒரு கார் வேகமாகச் சென்றது. அதற்குள்ளிருந்த ஒலிபெருக்கி, பாட்டு ஒன்றினை உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. கார் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது. நகருக்குள் அமுல்படுத்தப்பட்ட உச்ச வேகம் ஐம்பது கிலோமீட்டரே. அந்தக் காரை வழி மறித்து 'ஸ்பீடிங்'ற்காகத் தண்டம் அடிக்கலாம் என்று அஸ்பியோனுக்குத் தோன்றியது.

அவன் வெள்ளைக் காரைக் கிளப்பினான்.

'அஸ்பியோன்.'

'என்ன?'

'பொறு.'

'ஏன்?'

'இவங்களுடைய பாட்டும் போக்கும் வித்தியாசமானவை. வீணான சந்தேகங்களை ஏற்படுத்தாமல், இவர்களைக் கவனிக்கவேணும்...சரி, இப்ப காரை எடு...' என்றான் வேக்டால்.

'அவங்கள் வாலைப் பிடிக்கவா?'

'அவங்கள் இருக்கிற இடத்தை அறிய...'

'பாண்' என்று கெட்ட வார்த்தைகள் உதிர்ந்து முணு முணுவாறே, காரைக் கிளப்பி, ஓட்டினான்.

வேகமாக சென்ற கார், தரிப்பு நிலையில் நின்றது. அதில் வந்தவர்கள் நீல வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். வீட்டு எண்ணை வெக்டால் குறித்துக் கொண்டார். நிறுத்தாது, அதனைக் தாண்டி ஓட்டுமாறு பணித்தார்.

"என்ன செய்யிறதாய் உத்தேசம்?' என்று அஸ்பியோன் கேட்டான்.

'இவர்கள் என்ன கதைகிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்க வேண்டும். இவர்கள் கண்காணிப்புக்குரியவர்கள் என்று என் மனசு சொல்லுது...'

'டெலிபோனா?'

'இவங்கள் டெலிபோனில் கதைக்க மாட்டாங்கள். ஒருநாளைக்க இவங்கள் வீட்டுக்குள் நுழைய வேண்டியது தான்...'

'மைக்கிறோ போனா?'

'யோசிப்பம்.'

இரண்டு நாள்கள் தாமதித்துத்தான் தலைமை அதிகாரியிடமிருந்து அமைதி பெறமுடிந்தது. அன்று மாலை. வெள்ளைக்கார் நீல வீடு நோக்கிப் புறப்பட்டது. குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் பொருள்களை எடுத்துக் கொண்டார்கள். நீல வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளிக் காரை நிறுத்தினார்கள்.

'சிலவேளை நாளைக் காலை வரையிலும் காத்திருக்க நேருமோ தெரியாது...எஞ்சினை நிற்பாட்டு'என்றார் வேக்டால்.

மணித்தியாலங்கள் நகர்ந்தன. நித்திரை கொள்ளும் பைக்குள் புகுந்து காத்திருந்தனர். நள்ளிரவின் பின்னர் நீல வீட்டின் கதவு திறந்தது. மூவர் வெளியேறி வந்தார்கள். ஒருவன் இவர்களை வழியனுப்பி விட்டு, மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டதாகத் தெரிந்தது. வீட்டிலே தங்கியவன் வீட்டின் சொந்தக்காரனாக இருக்கலாம் என வேக்டால் அனுமானித்தார்.

அஸ்பியோன் தூங்கி வழிந்தான்.

'என்ன நித்திரையா?'

'வராதா?...' என்று நீளமான கொட்டாவி ஒன்றை விட்டான்.

'முறை வைத்துக் கண்கானிப்போம். நீ நித்திரைகொள்...நான் பார்த்துக் கொள்ளுகிறேன்...' என்றார்.

அஸ்பியோன் தூங்கினான். வேக்டால் விழித்திருந்தார். இரவு நான்கு மணிவரை யாரும் வரவில்லை. அவருக்குக் கண்கள் கனத்தன. அஸ்பியோனை எழுப்பிவிட்டு, அவர் தூங்கத் துவங்கினார்.

வேக்டாலுக்கு முழிப்பு வந்தபொழுது மணி ஏழு. விழித்தவருக்கு அதிர்ச்சி. அஸ்பியோனும் தூங்கிக் கொண்டிருந்தான். அவர் கோபத்தில் கொதித்தார்.

'ஏய், அஸ்பியோன்' என எழுப்பினார். அவன் துடித்துப் பதைத்து எழுந்தான்.

'என்ன?'

'என்னவா? உன்னை விழித்திருக்கும்படி அல்லவா சொன்னனான்?'

'இரவு முழுவதும் காத்திருந்தது எல்லாம் வீண்.'

இருவரும் ஒருவரை ஒருவர் பாராது மௌனமாக இருந்தார்கள். வேக்டாலுக்கு என்ன சொல்வது என்பது புரியவில்லை. வெந்நீர் போத்தலிருந்து கோப்பியை ஊற்றிப் பருகத் துவங்கினார். இதனைப் பார்த்த அஸ்பியோனும், தன் கோப்பியை ஊற்றிப் பருகினான். அவனுக்குத் தான் செய்த தப்பு உறுத்தியது.

'சொறி. நான் விழித்துத்தான் இருந்தேன். ஆறு மணிக்குப் பிறகு என்னை அறியாமலேர கண்ணயர்ந்து போனேன்.'

'சரி...சரி...'

'இப்ப என்ன செய்யிறது?'

'ஒரு மணி வரையும் காத்திருப்போம்.'

'ஒரு மணி வரையுமா?'

'ஓம்...'

காத்திருந்தார்கள். அந்த நீண்ட காத்திருத்தல் இருவருக்குமே அலுப்பாக இருந்தது. பத்து மணியாகி விட்டது. சூரியன் வெளியே எறித்துக் கொண்டிருந்தது. காருக்குள் வெக்கையாக இருந்தது. தூக்கமின்மையால் விழிகள் கனத்தன. சூரிய ஒளி கண்களைக் கூசச் செய்தது. இருவரும் கறுப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டார்கள்.

மணி பத்துப் பத்து. நீல வீட்டின் கதவு திடீரெனத் திறந்தது. செல் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தான். இவர்கள் காத்திருப்பதைக் கவனிக்காமலே, அவன் காரில் ஏறிச் சென்றான். அவனை இருவரும் நன்றாக அவதானித்தனர். காரைக் கிளப்பி, சந்தியில் நிறுத்தச் செய்தார். அவன் வந்தால் 'வோக்கி டோக்கி'யில் தகவல் வருமாறு கூறி, வேக்டால் நீல வீட்டை நோக்கி நடைபோட்டார்.

ஐந்தாவது சாவியைப் போட்டுத் திருக 'கிளிக்' சத்தம் கேட்டது. வேக்டால் சுறுசுறுப்பானார். உள்ளே சென்று ஒவ்வொரு இடமாகப் பார்த்தார். கணினி, றையிட்டார், ரெலிபோன், பாக்ஸ் இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளே இருந்தன. இந்த வசதிகள் இப்பொழுது அநேகமான வீடுகளிலே உள்ளவையே. ஒவ்வொரு அறையாகப் பார்த்து வந்தவர், ஓர் இடத்தில், தமிழர்களுக்கு எதிராகப் பிரசித்தமான நோட்டீஸ’ன் இரண்டு படிகள் இருப்பதைக் கண்டார். இரண்டு படிகள் மட்டுமே பெரிய சான்றாகாது. இருப்பினும், இந்த வீட்டுக்கும் தமிழர்களுக்கு எதிரான நடிவடிக்கைகளுக்கும் தொடர்பு உண்டு என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.

குளியல் அறையில், வோர்ஷ’ங் மெஷ’னுக்கு மேலே ஐந்து உருட்டுக் கட்டைகள் இருந்தன. பாவித்த உடைகள் போடும் பெட்டி ஒன்று மூலையில் இருந்தது. அதற்குள் முகமூடி போன்று குளிருக்குப் பாவிக்கும் உறைகள் இருந்தன. அதிக அவகாசம் எடுத்துக் கொள்ளலாகாது என்கிற அவசரத்தில், ஹோலில் இருந்த சோபாக்களுக்குக் கீழே இரண்டு மைக்ரோ போன்களைப் பொருத்தினார். பின்பு, படுக்கை அறையில் இருந்த பூச்சாடிக்குள் ஒன்றை வைத்தார். தமது வருகை எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்தார். அஸ்பியோனிடமிருந்து எவ்வித செய்தியும் வராததினால், நிம்மதியாக வெளியேறினார். கதவை இழுத்துச் சாத்த அது பூட்டிக் கொண்டது. நடந்து வீதிக்கு வரவும், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக எதிர்திசையில் செல்லின் கார் வந்து கொண்டிருந்தது. ஒரு கணம் திகைத்தவர், மறுகணமே சுதாரித்து, கோடிப் பக்கம் ஓடி மறைந்து கொண்டார். பின் செல் வீட்டிற்குள் செல்லவும், அவர் நழுவி, தங்களுடைய கார் நிறுத்தப்பட்ட இடத்துக்கு வந்துசேர்ந்தார்.

அன்று வெள்ளிக்கிழமை. செல் வீட்டில் இருந்தான். ஜோன் ஒரு எட்டு மணிபோல வந்து சேர்ந்தான். மற்றவர்களும் வருவார்கள் என்றே செல் எதிர்பார்த்திருந்தான். அவர்கள் வராதது ஏமாற்றமாக இருந்தது.

'என்ன ஜோன், மற்றவர்கள் எங்கே?'

'அவர்கள் மலைக்கு ரூர் போயிட்டாங்க.'

'இவங்கள் இப்படிச் செய்தால், எங்களுடைய பணி எப்பிடித் தீவிரமடையும்?'

'அவங்கள் போலிஸ”க்குப் பயப்படுறாங்களோ தெரியாது.'

'இப்படி விட்டு வைத்தால், அந்தப் பன்றிகளுக்குப் பயம் தெளிஞ்சு போகும்.'

'அதோட, இந்தத் தமிழர் கூட்டம் கூடுது போலவும் இருக்குது.'

'எது செய்தாலும் பன்றியளுக்கு உறைக்கிற மாதிரிக் தெரியேல்லை...'

'ஏதாவது கடுமையாச் செய்ய வேணும்.'

'அப்படி என்ன செய்யலாம்? வீடு எரிச்சது யார் என்று தெரியாது. ஆனால், எங்கள் 'குருப்'என்றுதான் சதேகிக்கிறாங்கள்...'

'ம்...ம்...' என்று இலேசாகச் சிரித்தான் ஜோன்.

'ஏன் சிரிக்கிறாய் ஜோன்?'

'ஒன்றுமில்லை.'

'நீ ஏதோ மழுப்புக்கிறாய்.'

'இல்லை.'

'இன்னும் இரண்டு மூன்று பேருக்கு அடி போட்டால் என்ன?'

'இனி அடிச்சால் சாகிறமாதிரி அடிக்கவேணும்...கால் கை முறியவேணும்.'

'நான் தயார். சுத்தித் திரிஞ்சால் யாராவது மாட்டுவினம்.'

வேக்டாலுக்கு மீண்டும் ஒரு அசம்பாவிதம் அந்த இடத்தில் நடப்பதில் விருப்பம் இல்லை. ஏற்கெனவே நடந்த வன்முறைத் தாக்குதலுக்கு இவர்களே காரணர் என்பதில் சந்தேகமேயில்லை. வீடெரிப்பைப் பற்றித்தான் சரியான விபரம் தெரியவில்லை. ஜோனுக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம். அவன் மறைக்கிறான் போலும். அவர்கள் போலிஸ் நிலையத்திற்குத் திரும்பி, அவர்களைக் கைது செய்வதற்கான அனுமதியைப் பெற்றார்கள்.

அவர்களைத் தேடிய பொழுது, அவர்களுடைய கார் ஒரு சந்திலே திரும்பிக் கொண்டிருந்தது. அவர்களைத் கண்டதுமே வேக்டால் நீல மின்னொளியோடு கூடிய 'அலாம்' சத்தத்தினைப் போட்டார். அவர்கள் காரை நிறுத்தாது. ஓட்டினார்கள். குப்பை கொட்டும் இடத்தைத் தாண்டியதும், இனிக் காரை ஓட்டமுடியாது என்பதைச் செல் உணர்ந்தான். காரை வீதியின் ஓரத்தில் நிறுத்தினான்.

வேக்டாலும்...அஸ்பியோனும் தமது காரை நிறுத்தி அவர்களை நோக்கிச் சென்றார்கள். வேக்டால் சாரதி பக்கமாக இருந்த கண்ணாடியைத் தட்டினான். செல்தான் காரின் கண்ணாடியைத் திறந்தான்.

'நாங்கள் போலிஸ். உங்கள் டிரைவிங் சைசன்ஸ், கார் ரெஜிஸ்ரேஷன் முதலிய 'டொக்குமெ'சைக் காட்டுங்கள்...'

எடுத்துக் கொடுத்தான். அவை சரியாகவே இருந்தன. காரின் பின் சீற்றில் உருட்டுக் கட்டைகளும், முகமூடிகளும் இருப்பதை வேக்டால் அவதானித்து விட்டார்.

'இரண்டு பேரும் காரால இறங்குறீங்களா?'

'ஏன்?'

'பிளீஸ், இறங்குங்க..'

மெதுவாக இறங்கினர்.

'கால்களை அகட்டி, தலையில கையைக் கட்டிக் கொண்டு நில்லுங்கள்.'

ஆட்சேபிக்காது, அவர்கள் கேட்ட வண்ணம் செய்தனர். வேக்டால் அவர்களைக் கவனமாகச் 'செக்'செய்தார். எந்த ஆயுதமும் இருக்கவில்லை.

'நாங்கள் உங்களைக் கைது செய்கிறோம்' என்று சொல்லிய வண்ணம் வேக்டால் அவர்களுடைய கைகளிலே விலங்கை மாட்டினார்.

'எதுக்காகக் கைது செய்கிறீர்கள்?' என்று ஜோன் வெடித்தான்.

'தமிழருக்கு எதிராக, சட்டத்துக்குப் புறம்பாக வன்முறையில் ஈடுபட்டதிற்காக.'

'உங்களிட்ட 'புரூப்'இருக்கா?'

'வாளை மூடு. இல்லாமல் வருவதற்கு நாங்கள் என்ன முட்டாள்களா?'

திங்கள் காலை. பதினொரு மணி இருக்கும். போலிஸ் வாகனங்கள் இரண்டு நீல வீட்டின் முன்பாக நின்றது. அவற்றிலிருந்து வேக்டால், அஸ்பியோன் மற்றும் இரண்டு போலிஸ்காரர்கள் இறங்கினார்கள். மீதமிருந்த உருட்டுக் கட்டைகளும், முகமூடிகளும் கைப்பற்றப்பட்டன. 'கோமோட்'டைக் கழற்றிப் பார்ந்தபொழுது, அதற்குள்ளிருந்து கைத்துப்பாக்கி ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. கணினியை போட்டுப் பார்த்தபொழுது, துண்டுப்பிரசுரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மூலம் இருந்தது. அத்துடன், நவநாஜிகள் பற்றிய பல விபரங்களும், ஒரு 'டாத்தா பாஷை' ஆவணமும் கிடைத்தன. அவற்றை எல்லாம், எடுத்துப் போலிஸ் வண்டிகளிலே ஏற்றினார்கள். வீட்டுக்குச் சீல் வைக்கப்பட்டது.

உள்ளூர்ப் பத்திரிகையிலும், வானொலியிலும் இந்தச் செய்திகள் வெளியாயின.

மலையிலிருந்து காறால்டும், அல்பிரெட்டும் வானொலி மூலம் செய்தியை அறிந்து கொண்டார்கள். செல்லும் ஜோனும் எவற்றைச் சொல்வாங்கள் என நினைத்து ஆரம்பத்திலே பயந்தார்கள். நகரத்திற்குப் போவதா? விடுவதா? என்று கூடத் தடுமாறினார்கள். பின்பு, துணிவை வரவழைத்துக் கொண்டு மலையிலிருந்து நகரத்துக்கு வந்தார்கள்.

தீபா தன் மகன் விகீனாவையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்குப் போகப்போவதாக ஒற்றைக் காலில் நிற்பதாக செல்லக்கண்ணன் வீடு தேடி வந்து தேவகுருவிடம் புலம்பி அழுதான்.

பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நல்ல முறையிலே நடைபெற்றது. தேவகுருவின் தூண்டுதலினால், தமிழ்ப் பெற்றோர்கள் பெருமளவில் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 'நூர்மன் பிள்ளைகளின் மனோநிலையிலே, வீட்டுச் சூழலிருந்தே மாற்றங்களைக் கொண்டுவருதல் வேண்டும்' என்று நொஸ்க்குகள் பலரும் பேசினார்கள். தங்கள் பிள்ளைகளுடைய செயல்களுக்காக தாங்கள் வெட்கப்படுவதாகவும், இவ்வாறு துன்பம் அநுபவித்த பிள்ளைகளின் பெற்றோரிடம் தாங்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்பதாகவும் இரண்டு நொஸ்க் பெற்றோர் பேசியது நெஞ்சைத் தொடுவதாக இருந்தது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு 'பழைய குருடி கதவைத் திறவடி' என்கிற கதைப்போல, உள்ளிமணம் வீசுவதான கிண்டல்களும், துப்பும் சேட்டைகளும் தொடரலாயின. வகீனா மீண்டும் அவமதிக்கப்பட்டிருக்கிறாள். அதன் கொந்தளிப்புத்தான் தீபாவின் செயல் என்பதை அறிந்து கொண்டார்.

தாயகத்தின் மண்மீட்புப் போரின் போக்குகளை மிக நுண்ணியமாக அறிந்து வைப்பதிலே தேவகுரு காட்டும் தீவிரம் பலரும் அறியாதது. அதுபற்றி பகிரங்கமாகத் தமது எண்ணங்களை வெளிக்காட்டியதுமில்லை. நேற்றைய தவறுகளுக்காக, இன்று சிந்தப்படும் இரத்தமாகப் போரை அவர் விளங்கிக்கொண்டார். தற்கொடையாளராகத் தமது இன்றைகளைக் காவு கொடுத்துள்ள போராளிகளைப் பற்றி என்றுமே அவருக்கு உயர்வான அபிப்பிராயம். அதே சமயம், ஆட்சியாளரின் ஆதிபத்திய மமதைப் போக்குகளுக்காகத் தங்கள் இன்றைகளை இழந்து கொண்டிருக்கும் கிராமத்துச் சிங்கள வாலிபர்களின் அநியாயச் சாவுக்காகவும் அவர் மனம் வருந்தினார். தாயக மண் புனிதமானது. அதன் சுதந்திரம் புனிதமானது. வேறு வழியின்றி மண்மீட்புப் போரிலே தமிழ்ப் போராளிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், போரிலே தமது உயிர்களைப் பலியிடும் சிங்கள இளைஞர்களின் இலட்சியம் என்ன? தங்கள் வீட்டில் வாழ்பவர்களின் சோற்றுக்காகவா? அவர்கள் அநேகருக்கு எதற்காகப் போராடுகின்றோம் என்பதுகூடத் தெரியாது. சிங்கள இனத்தின் மண்கொள்ளை அரசியலை நியாயப்படுத்தும் அரசியல்வாதிகள், புத்திஜ“விகள், பரபரப்பு பத்திரிகையாளர், புத்தபிக்குகள் ஆகியோரைச் சிங்கள இளைஞர்கள் பலவந்தமாக இழத்துவந்து போர்முனையில் நிறுத்தவேண்டும். பட்டயம் எடுப்பது நியாயம் என்று நினைப்பவர்கள், பட்டயத்தை தூக்கவேண்டும். அந்தப் பட்டயத்தினாலே சாகவேண்டும். அது நியாயம். ஆனால்..இதெல்லாம் மகா கொடுமை. இந்த எண்ணங்கள் அவர் ஏற்றுள்ள அகிம்ஸா தர்மத்துக்கு மாறானவையா? இது பற்றி அவர் ஆழ்ந்த உள்மனத் தியானங்களிலே ஈடுபட்டதும் உண்டு. அப்பொழுதெல்லாம் மகாத்மாவின் வாக்கியம் ஒன்று அவர் மனசிலே எதிரொலிப்பதுண்டு. 'மிருகங்களைக் கொல்லாமை' என்னும் கொள்கையை என்னால் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இம்ஸை செய்யும் மிருகங்களைப் பெருகும்படி பார்த்துக் கொண்டிருப்பது தவறென்றே கருதுகின்றேன். மனிதருக்கே தீங்கு செய்யும் மிருகங்களைக் கொல்வது மன்னிக்க தகுந்த விடயம்; கடமையாகவும் ஆகிவிடுகின்றது.' அடுத்தது மிருகங்களுக்கான வரவிலக்கணம். இது முக்கியம். பகுத்தறிவு இல்லாதவை மிருகங்கள். அன்பு நெறியைப் புரிந்து கொள்ள முடியாதவை மிருகங்கள். மிருகங்கள் தன் கூட்டத்தை அழிப்பதில்லை. ஆனால், சிலரின் மேட்டிமைக்காகவும், அதிகார சுபீட்சத்திற்காகவும் தன் கூட்டத்தைச் சேர்ந்த உயிர்களையே பலி கொடுக்கும் அரசியல்வாதிகள் எத்தகைய கொடிய மிருகங்கள்?

நாளையின் சுபீட்சத்தினை வென்றெடுப்பதற்கு உண்மையும் அன்பும் உதவவேண்டும். நாளையின் சுபீட்சங்களைப் பற்றி அக்கறைகளைத் துறந்து, இன்றைய வளங்களுக்காகவும், வசதிகளுக்காகவும், பெருமைகளுக்காகவும் வாழ்தல் எவ்வளவு கொடுமை? இன்றைய குழந்தைகளே நாளைய சம்பத்துக்கள். நாளை அவர்களுடையதே! அவர்களைத் தக்கவர்களாக வளர்த் தெடுக்கும் கடமைகளிலிருந்து ஒதுங்குதல் ஓர் இனத்துக்கு ஏற்படக் கூடிய சாபக்கேடு. இந்தக் கடமை பற்றிய பிரக்ஞையை வார்டோவில் வாழும் பெற்றோர்கள் மத்தியில் --குறிப்பாகத் தமிழ் பெற்றோர்கள் மத்தியில் - ஏற்படுத்துவதும் தமது கடமை என்பதைத் தேவகுரு அண்மைக் காலங்களிலே உணர்ந்திருந்தார். விகீனாவின் நிகழ்ச்சி அவருடைய இந்த எண்ணங்களைத் தீவிரப்படுத்தியிருந்தது. தீபாவின் கொந்தளிப்பு இந்தப் பிரச்சினையின் முனைப்பினை அடையாளமிடுவதாக அவர் விளங்கிக் கொண்டார்.

அவர் நன்கு சிந்தித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை, தமிழ்ப் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் பெற்றோருடனான இந்த ஒன்று கூடலின் வெற்றிக்காக கூட்டமைப்புத் தலைவர் சற்குணம், இளைஞன் ரகு, செல்லக்கண்ணன் ஆகியோர் களம் இறங்கி உழைத்தார்கள். எனவே, அந்தக் கூட்டத்துக்கு பிள்ளைகளின் கல்விமுன்னேற்றத்திலே அக்கறை பூண்டிருந்த பெற்றோர்கள் பலரும் வந்திருந்தார்கள்.

'இது ஒரு பொதுக்கூட்டம் அல்ல. பிரசங்கங்களும், போதனைகளும் கிடையாது. எங்களுடைய பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் பற்றிய கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. தங்களுடைய எதிர்காலம் பற்றிச் சரியாக முடிவுகள் எடுக்க முடியாத பிள்ளைகளுக்காகத் தீர்மானங்கள் எடுக்க வேண்டிய கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு. சிலர் தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். எங்கள் முன்பாக உள்ள வழிகளை அறிந்து கொள்வற்கு ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்கள் தேவை. இதனை இந்த ஒன்றுகூடல் சாத்தியப்படுத்தும் என்று நம்புகின்றோம். மற்றவர்களுடைய அநுபவங்களிலிருந்து நாங்கள் நிறையக் கற்றுக் கொள்ளலாம். அத்தகைய அநுபவங்களை ஒளிவு மறைவின்றி இங்கு கூறலாம். அவற்றின் நன்மை தீமைகளை அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்...' என்று தேவகுரு துவக்கி வைத்தார்.

மெதுமெதுவாகக் கருத்துகள் வரலாயின. அவற்றின் சாரமாகப் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரலாயின.

பொருளீட்டலே கதியென்று, பிள்ளைகளுடைய ஆரம்பக் கல்வியை முறையாகத் திட்டமிடவில்லை என்கிற குறைபாடு பெற்றோர்கள் பலரை உறுத்துகின்றது. அவர்களுடைய எதிர்காலத்தினைத் திட்டமிட்டு நெறிமுறைப்படுத்துவதில் எல்லாப் பெற்றோரும் ஆவலாக இருக்கிறார்கள்.

தெரிந்த ஒரு சிலர் -- அதுவும் ஓஸ்லோவில் இருப்பவர்கள் - தங்கள் பிள்ளைகளை இங்கிலாந்துக்கு அனுப்பி படிப்பிக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு மிக நெருங்கிய உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள். அந்த உறவு வசதிபிரதான காரணம். 'இங்கிலாந்தில் படித்தால், ஆங்கிலத்தில் படிக்கலாம். அந்தப் படிப்பின் மூலம் வருங்காலத்தில் பிள்ளைகளை அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலே வேலைவாய்ப்புகள் பெற்றுச் செல்வதற்கு வாய்ப்பு உண்டு. அத்துடன், இலங்கையில் சமாதான நிலைமை உருவானாலும், மீண்டும் ஊருக்குத் திரும்பி நல்ல உத்தியோகங்கள் பெற்று வாழ்வதற்கான வாய்ப்பையும் இழக்கமாட்டார்கள். பயக்காரச் சிங்கள அரசியல்வாதிகளுடைய பிள்ளைகளும் இங்கிலாந்தில் படிக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக நமது பிள்ளைகள் தகுதி பெற்றவர்களாக விளங்குவார்கள்.' இத்தகைய எண்ணங்களே இங்கிலாந்துப் படிப்புக்கு ஊக்கிகளாக அமைகின்றன. பழைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே முகிழ்ந்த எண்ணங்களை அவர்கள் துறப்பதாக இல்லை. இங்கிலாந்தில் படிக்கும் சிங்களப் பிள்ளைகள் சிங்களவர்கள் என்பதையும், அவர்கள் தாய்மொழி சிங்களம் என்பதினால் அவர்களின் நிலை வேறு என்பதையும் அவர்கள் வசதிக்காக மறந்துவிட்டார்கள்.

மேலும், உலகின் வேலை வாய்ப்புச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இங்கிலாந்தின் கல்வி அமைப்பு பெருமளவில் மாற்றமடையவில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் குறிவைக்கும் நாடுகளின் Migration சட்டங்கள் சடுதிசடுதியாக மாற்றப்படுகின்றன. எதிரானவையாகக் கடுமையாக்கப்படுகின்றன. இன்னும் எத்தனையோ மாற்றங்கள் நிகழுதல் சாத்தியம் என்கிற முன்யோசனையும் இல்லை. நேற்றைகளிலே வாழ்ந்து கொண்டு, நாளைகளுக்கான வாழ்க்கை திட்டமிடப்படுகின்றது. இந்த ஏற்பாடுகளின் அவதியிலே குழந்தைகளின் தமிழ்த்துவ அடையாளங்கள் பற்றிய அக்கறைகள் துறக்கப்படுகின்றன என்பதும் இனங்காணப்பட்டது. முதலீட்டுக்குத் தக்க பிரதிபலன் பற்றிய ஐயப்பாடும் உண்டு.

இந்தியாவுக்கு, தமிழ் நாட்டுக்கு அனுப்பி, பிள்ளைகளுடைய படிப்பு முன்னேற்றம் சாதிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள். வார்டோவில் வாழ்ந்த குஞ்சன் குடும்பம் போன்றவையும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டன. பிள்ளைகளுக்குத் தமிழ்ச் சூழலிலே கல்வி புகட்டப்படுவதினால், பிள்ளைகளுடைய தமிழ் அடையாளங்கள் பேணப்படும் என்பது இத்தகைய ஆசையின் அடித்தளமாக அமைகிறது. இந்த ஏற்பாட்டிலே பல நடைமுறைச் சிக்கல்கள் உண்டு என்பது வெளிச்சத்துக்கு வந்தன. அகதிகளை, மனிதநேயமற்ற முறையிலே மிகக் கேவலமாக நடத்துவதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. தீபத்திய-வங்காளிய அகதிகளுக்கு அளிக்கப்படும் வசதிகள்கூட தமிழ் அகதிகளுக்கு மறுக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டிலே கல்வி பயிலும் மோகம் உள்நோக்கத்தை மறைக்கவும் உதவும். தமிழ்நாட்டில் ஆங்கில மொழி மூலம் கல்வி பெறலாம், என்கிற உண்மை அழுத்தி உச்சரிக்கப்படுவதில்லை.

'ஈழத் தமிழர்களுக்கு அநுதாபம்'என்கிற நிலப்பாடு ஒரு காலத்திலே வாக்குகள் பெறுவதற்கான கவர்ச்சிக் கோஷமாக இருந்தது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு இயக்கத்தை முதன்மைப் படுத்த முந்திநின்றன. அந்த நிலமை மாறிவிட்டது. ஈழத்தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதிலே எம்.ஜி.ஆர். போன்ற தலைவர் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்தார். அன்று தமிழ் மானப் பாதுக்காப்பிலே எழுச்சியுடன் செயற்பட்ட பிற்தொரு தலைமைத்துவம், இன்று சுருதி இறங்கி, 'புலிப் பூச்சாண்டி' காட்டியே பதவியைத் தக்க வைத்துக் கொள்ளுகின்தோ, என்கிற சகதி நிலை உருவாகியுள்ளது. பிராமண நலம் பேணும் பத்திரிகை உலகமும், 'றோ'வின் நடவடிக்கைகளும் ஈ‘த் தமிழருக்கெதிரான மனோநிலைகளை வளர்த்தெடுப்பதிலே தீவிரம் காட்டுகின்றன. ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், தமிழ்நாடு மரணவீட்டின் கோலங்களை அப்படியே பேணுவதிலே அரசியல் ஆதாயம் சம்பாதிக்கலாம் என்று கருதுகின்றது. இதனால், அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், போலிஸ் பகுதியாரும், மற்றும் நிர்வாகக் கூறுகளும் ஈழத் தமிழர்களை 'லஞ்சம் கறக்கும்' காமதேனுக்களாகவே கருதுகின்றது. பல்கலைக்கழக மட்டத்திலே படிப்பினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஈழ மாணவர் செலுத்தவேண்டிய லஞ்சம் பிரமிப்பினை ஊட்டும். இத்தகைய செலவுகளுக்கும் மனக் காயங்களுக்கும் மத்தியிலே பெறப்படும் பட்டங்கள் அவர்களுடைய வசதியான நாளைக்கான 'பாஸ்போட்' டாக அமையப் போவதும் இல்லை. விசா கெடுபிடியினால் குஞ்சன் மீண்டும் நோர்வே திரும்ப...இத்தனைக்கும் மேலாக நடுவயசின் குடும்ப வாழ்க்கையின் வசதிகளையும் ஆரோக்கியங்களையும் முற்று முழுக்கத் துறக்க வேண்டி இருக்கின்றது. இந்த மானிட இழப்புகளை ரூபா, சதங்களிலே மதிப்பிடுதல் மகா கடினம்.

இங்கிலாந்து - தமிழ்நாடு ஆகியவற்றின் கஷ்டங்களைப் பார்க்கும்பொழுது, கொழும்புக்குத் திரும்பி, அங்கிருந்து பிள்ளைகளைப் படிப்பிக்கலாம் போலவும் தோன்றுகின்றது. 'சிங்கள ஆமி முன்னம் போல இல்லை. நாலு ராணுவ வீரர்கள் செத்தால், நாற்பது பொதுமக்களைக் கொல்ல வேண்டும் என்று மதம் பிடித்து அலையும் போக்கு இப்ப இல்லை. எத்தனையோ தமிழர்கள் கொழும்பில் வைத்துத் தானே தங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்கினம்' என்கிற சமாதானத்துக்கும் பல பெற்றோர்கள் வருகிறார்கள். தாங்கள் அநுபவித்த அனைத்துத் துன்பங்களையும், கனவாய்ப் பழங்கதையாய் நினைத்து மறக்கவும் தயாராக இருக்கிறார்கள். இத்தகைய செயல்களாலே, 'தமிழர்கள் அரசியல் அகதிகளல்லர், பொருளாதார அகதிகளே'என்கிற வசையை ஈழத்தமிழர் இனத்துக்கு ஏற்படுத்தும் இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் என்பதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதாக இல்லை. எதையெல்லாம் ஏற்க மறுத்து வெளிநாடுகளுக்கு ஓடினோமோ, அந்தக் கொடுமைகளை அநுபவிக்கும் சந்தர்ப்பத்தையும் நிர்ப்பந்தத்தையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகின்றோம் என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள். வளைந்து கொடுக்கும் இச்செயலால் ஏனைய நாடுகளிலேயும் இரண்டாந் தரப் பிரஜைகளாக, சர்வதேசக் குஷ்டரோகிளாக ஈழத்தமிழ் இனம் கணிக்கப்பட ஏதுவாகிறது என்கிற சொரணைகூடச் சிலருக்கு இல்லை.

'வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு' என்று சினிமா வசனம் பேசிய தமிழ்த் தலைவர்களுடைய ஆட்சியிலே, மருந்து வாங்கிச் சேமிப்பபவர்கள்கூட 'புலிச் செயல்' 'சதிச் செயல்' என்று உதைத்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். இதிலும் பார்க்க சிங்களவனிடம் இரண்டாந்தரப் பிரஜை எனச் சரணாகதியடைந்து வாழ்வது கேவலமல்ல என்கிற மனநிலைக்கு சில பெற்றோர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நோர்வே 'பாஸ்போட்' பெற்றிருக்கும் ஈழத் தமிழர்களிலே பலர், தங்களை நூர்மனாகக் கருதிக்கொள்ளும் பக்குவத்தை பெறவில்லை. சட்டப்படி நூர்மமானவர்களும் மனசளவில் தமிழர்களாகவே வாழ்கிறார்கள். மனசளவில் தமிழர்களாக வாழவேண்டும். அது தப்பில்லை. ஆனால், நூர்மன் குடியுரிமையை அவர்கள் தக்க பரிமாணத்திலே பார்ப்பதற்கு அஞ்சுகிறார்கள். தத்தெடுத்துள்ள புதியநாடு என்கிற பாசமும், பிரமிப்பும் பெரும்பாலும் இல்லை. 'தங்கும் மடத்தில் இருப்பதற்கான லைசென்ஸ்' என்கிற ஒரு மாயையிலிருந்து அவர்களாலே விடுதலை பெற முடியவில்லை.

சுதந்திர ஈழத் தாயகம் ஒன்று கிடைத்தால், அவர்களிலே பெரும்பாலானோர் ஓடோடிச் சென்று, கூழோ கஞ்சியோ குடித்தேனும் மண்ணின் உறவுகளுடன் பிணைந்து வாழ்வதிலே நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய ஓர் ஏக்கத்தினை நெஞ்சிலே சுமந்து திரியும் அவர்கள், தமது பிள்ளைகள் தமிழ் மரபையும் தனித்துவத்தையும் இனங்கண்டு பேணிப் பாதுகாத்து வாழவேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் என்கிற பாரிய உண்மைதான் இறுதியிலே மிஞ்சியுள்ளது என்கிற கருத்தினைப் பெற்றோர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஒரு சிலர், புதிய வசதிகளிலே வசமிழந்து, பிச்சைக்காரர் நாட்டுக்குத் (தாயக மண்ணுக்கு இந்த லும்பன் தமிழர் வைத்துள்ள செல்லப்பெயர்!) திரும்புவதில்லை என்று பேசுவதில் புளகாங்கிதம் அடைகிறார்கள் என்பது வேறுவிடயம்.

கலந்துரையாடலின் முடிவிலே, கலந்து கொண்ட பெற்றோருக்கு நன்றி கூறிய தேவகுரு அதனைத் தொடர்ந்து வருமாறு அறிவித்தா‘:

'அடுத்த நூற்றாண்டிலோ, அன்றேல் அதற்கு அடுத்து நூற்றண்டிலோ, ஈழத் தமிழர்களுக்குக் கௌரவத்துடன் வாழும் ஒரு நிலப்பரப்பு--நாடு--கிடைக்கும் என்கிற நம்பிக்கையைச் சுமந்து வாழ்கிறோம். உலகில், தங்களுடைய இனத்தின் தனித்துவ அடையாளமாகத் தங்கள் மொழியை மட்டுமே பிரகடனப்படுத்தியுள்ள பெருமை நம்முடையது. தமிழ் தொன்மையான மொழி மட்டுமல்ல, அது சர்வதேச மொழியும். அதன் மீட்புக்கும், உயர்ச்சிக்கும், ஆட்சிக்கும் போராடுவார்கள் மட்டுமல்ல, சிலுவை சுமப்பவர்களும் ஈழத் தமிழர்களே! ஆனால், தமிழின் தனித்துவ அடையாளங்களை நாளைய சந்ததியார் மத்தியிலும் வளர்த்தெடுத்தல், தமது பிள்ளைகளின் கல்விப் பணியிலே தலையாய இடம் வகிக்கிறது என்பதை மறத்தலோ, துறத்தலோ ஆகாது, எனவே, ஈழத்தமிழன் ஒவ்வொருவனுடைய வீட்டிலும், அவன் வடதுருவத்தின் நாடுகளில் வாழ்ந்தால் என்ன, தென்துருவ நாடுகளில் வாழ்ந்தாலென்ன, சஹராப் பாலைவனத்தில் வாழ்ந்தாலென்ன, தமிழ் அவனுடைய வீட்டு மொழியாகவும், ஜ“வித சுவாசத்துக்கு ஏற்ற மொழியாகவும், வாழையடி வாழையாக வாழச் செய்வதை நமது தவமாகவும், வாழ்க்கையின் தலையாய இலட்சியமாகவும் கொண்டு வாழ்தல் வேண்டும். யூத இனம், நாடற்ற இனமாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக நாடுக்கு நாடு அவமதிப்புகளைச் சுமந்து சென்றது. அவர்கள் தனிநாடு கண்டதுடன், தமது தொன்மை மொழியின் மீளுயிர்ப்பினையும் சாதித்துவிட்டார்கள். சமரசம் செய்து கொள்ளாத நம்பிக்கை! இதுதான் தேவை. நான் என் மகள் மாலதிக்குத் தமிழ் கற்பிக்கின்றேன். அவள் வயதொத்த பிள்ளைகள் அனைவருக்கும் ஞாயிறு தோறும் தமிழ் கற்பிக்க ஆயத்தமாக இருக்கின்றேன். இது ஓர் ஆரம்பம்தான். விருந்துக் கேளிக்கைகள்-வீடியோ படங்கள் ஆகியனவற்றிலும் பார்க்கப் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தல் நமது கடமை என்பதை நாம் உணரவேண்டும். வீட்டிலே ஒரு மணிநேரம், ஒவ்வொரு குடும்பமும் நமது பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதை தமது கடமையாக்கிக் கொள்ளவேண்டும். இது தெய்வாராதனைகளிலே செலவு செய்யும் நேரத்திலும் பார்க்கப் புனிதமானது என்று நான் கருதுகின்றேன்.

'தமிழ்க் கல்வி இயக்கம் ஊர் தோறும், நாடு தோறும் செழித்தல் வேண்டும். பரீட்சார்த்தமாக நான் துவங்கும் இந்தத் தமிழ்ப் பாடசாலை, காலப்போக்கிலே வளர்ந்து நற்பயன் தருதல் வேண்டும் என நான் உங்கள் சார்பாகவும் பிராத்திக்கின்றேன்.'

மனக்காயங்களுடன் சங்கடப்படும் சிறாருக்குத் தமிழ் உணர்வைப் புகட்டும் ஒளடதத்தினைப் பரீட்சித்துப் பார்ப்பதிலே பெற்றோர்கள் ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள்.

'காறால்ட், என்ன செய்யலாம்?'

மலையிலிருந்து நகரத்துக்கு வந்த பின்னர், இதுதான் அவர்கள் கவலையாக இருந்தது.

'இனி ஏதும் செய்ய ஏலாது போல இருக்குதே...' என்று காறால்ட் கவலைப்பட்டான்.

'இனி நாங்கள் இரண்டு பேரும், அடிக்கிற விளையாட்டைச் செய்யேலாது. நோட்டீஸ் வெளியிடுற வசதியும் இல்லை.'

'அப்ப என்ன செய்யலாம்.'

'நாளைக்கு வாட்சோ போய்வருவம்.'

'அங்கே போய்?'

'பெயின்ற் ஸ்பிறே வாங்கி வருவம்.'

'ஏன் இங்கேயே வாங்கலாமே?'

'முட்டாள்.'

'என்ன?'

'இங்கே வாங்கினால், போலிஸ் உடனேயே விசாரிச்சுக் கண்டு போடுவாங்கள்.'

'இங்கே வாங்கிறதிலும் பார்க்க அங்கே வாங்கிறது றிஸ்க் குறைவு என்று சொல்லுகிறாய். நீ சொல்லுறதும். சரியே.'

அடுத்த நாளே அல்பிரேட் வாட்சோ சென்று பெயிற் ஸ்பிரேகளுடன் திரும்பினான்.

இப்பொழுது கோடை காலம். இரவின் பெரும் பகுதியும் சூரிய வெளிச்சம் பெற்றிருக்கும். எனவே, இருளின் பாதுகாப்பினைக் காத்திருந்து தேட வேண்டியதாக இருந்தது.

நிறவெறியாளர் இருவர் கைது செய்யப்பட்டதினால், தமிழர்கள் ஒரு வகைப் பாதுகாப்பான உணர்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

இரவு மூன்று மணிபோல, அல்பிரேட்டுக்கும் காறால்டுக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

தமிழர்களுக்குச் சொந்தமான, புதிதாகத் தோன்றிய கார்கள் இரண்டினைத் தேர்ந்தெடுத்து, இருவரும் தமது கை வண்ணத்தைக் காட்டினார்கள். கை ரேகைகளோ, மற்றும் ஏதாவது 'க்ளூ'வோ கிடைக்காதவாறு மிகவும் சாமர்த்தியமாகச் செயற்பட்டார்கள்.

ஒரு காரிலே பெரிசாகப் பன்றி ஒன்று வரையப்பட்டு, 'கறுப்புப் பன்றியே நாட்டை விட்டு வெளியேறு!' என்கிற வாசகம் ஸ்பிரே செய்யப்பட்டது. மற்றக் காரிலே நாய் ஒன்று வரையப்பட்டு? 'பிச்சைக்கார நாயே, உனக்கு கோஷல் பணம் வேணுமா?' என்ற வாசகம் இடம் பெற்றது.

இந்தச் செயல் தமிழர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தார்கள். அத்துடன், ஜோன் மீதும் செல்மீதும் குற்றம் சுமத்தும் போலிஸாரின் நம்பிக்கைகளும் சிதறும் என மிகவும் நம்பினார்கள்.

அவர்களுடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

அடுத்த நாளே அந்த இரண்டு கார்களும் காட்சிப் பொருள்களாயின.

வேக்டாலுக்கும் அஸ்பியோனுக்கும் மீண்டும் தலையிடி கூடியது. ஏற்கனவே பிடிப்பட்டவர்களிடமிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. அவர்கள் மிகவும் அசங்காதவர்களாக இருந்தார்கள். இப்பொழுது புதிய பிரச்சினை, புதிய கோணத்திலிருந்து, புதுக்கோஷ்டியிடமிருந்து புறப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய பிரச்சினைக்குக் கைதாகாமல் இருக்குக்கூடிய ஜோன், செல் ஆகியோரின் கூட்டாளிகளே காரணராய் இருக்கலாம் என்று வேக்டால் நம்பினார். தமது சந்தேகத்தினை வெளியே சொல்லாது, கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு புதிய வழக்கொன்றினைப் பதிவு செய்தார்.

11

தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பிரமசாரிகளின் வதிவிடமாகக் 'கீபிள்'கள் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் உண்டு. இதனால், அவர்களுடைய பிரேத்தியேகமும் தனிப்பட்ட சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டன. ஆனால், இவர்கள் ஒரு பொதுவான சமையற் கூடத்தையே பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்தக் காலத்திலே யாழ்ப்பாணத்து பிரமச்சாரிய 'கிளாக்கர்கள்' கொழும்பிலே நடத்திய 'சமறிகள்'போல இவர்கள் சமையலுக்கான செலாவினங்களை பங்கிட்டுக் கொண்டார்கள். இத்தகைய 'சமறி' வாழ்க்கையினால், தனித்தனி அறைகளிலே வாழ்ந்த இளைஞர்கள் மத்தியிலே, கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதற்கு வசதியாகவும் இருந்தது. தமிழ் நாட்டில் இருந்தும், இலங்கையிலிருந்தும் பத்திரிகைகள் தருவிக்கப்பட்டன. பொழுதுபோக்கிற்குத் தமிழ் வீடியோக்களும் - பெரும்பாலும் தமிழ்ச் சினிமா சம்பந்தமான வீடியோக்களும் - கிடைத்தன. இதனால், அவர்களுக்கிடையில் ஒரு சமுதாய வாழ்க்கை அமைவது சாத்தியமாயிற்று.

விக்னேஸ் தாயத்திலிருந்து மனைவி வருவதற்காகக் காத்திருந்தான். அர்ஜுன், அமுதன், ரகு ஆகிய மூவரும் இளைஞர்கள். இன்னமும் அவர்கள் கல்யாணத்தைப் பற்றி யோசிக்காதவர்கள். தாயக மண்ணிலே வாழும் அக்கா தங்கைகளின் விடிவுக்காகச் செக்குமாடுகளாக உழைப்பவர்களாகவும் இருக்கலாம். தனிப்பட்ட பிரச்சினைகளை 'கீபி'ளில் அவர்கள் கூடுமான முறையிலே தவிர்த்துக் கொள்ளும் நாகரிகத்தினையே பயின்றார்கள்.

அண்மையில், டிஸ்கோ ஒன்றுக்கு இளைஞர்கள் சிலர் சென்றிருக்கிறார்கள். அதிலே வெள்ளைத் தோலே உந்நதம் என்று நினைக்கும் நொஸ்குகள் சிலருக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது. மது போதையிலிருந்த நொஸ்க்கன் ஒருவன், தமிழர்களை மிகவும் இழிவாகத் தூஷண வார்த்தைகளினாலே திட்டியிருக்கிறான். தாங்க முடியாத அவமானத்திலே கொதித்த தமிழ் இளைஞர்கள், அவனைத் தாக்கியிருக்கிறார்கள். மேற்கொண்டு விவகாரம் பூதாகாரமாவதற்கிடையில், கீபிளுக்குத் திரும்பிவிட்டார்கள். இவர்கள் சற்றும் எதிர்பார்க்காத சடுதியில், நொஸ்குகள் சிலர் ஒன்று கூடிக் கீபிளுக்குப் படையெடுத்திருக்காறர்கள். உள்ளே வந்த நொஸ்க்குகளுடன் அர்ஜுன் சமாதான முறையிலே நியாயம் பேச முன் வந்திருக்கிறான். நியாத்தினைச் செவியில் வாங்கிக் கொள்ள மறுத்த நொஸ்க்குகள் அர்ஜுனைத் தள்ளி அடிக்க முற்பட்டார்கள். அந்தத் தாக்குதலைத் தடுத்து வெளியே பார்த்தால், கீபிளைச் சுற்றி வேறு நொஸ்குகளும் சுற்றி வளைத்துத் திரண்டிருப்பது தெரிந்தது. அமுதனும், விக்னேஸ”ம் புத்தி சாதுர்யத்துடன் செயற்பட்டிருக்கிறார்கள். சமையல் அறையிலே கிடைத்த மிளகாய்ப் பொடியை எடுத்து சூழ நின்று நொஸ்குகள் முகங்களிலே விசிறியடித்திருக்கிறார்கள். அத்துடன், சமையல் அறையில் கிடந்த கத்திகள் போன்ற ஆயுதங்களையும் கைகளிலே எடுத்துக் கொண்டார்கள். முறுகி எழுந்த போர்முனைப்பினை, மிளகாய்ப் பொடியின் உக்கிரம் தணித்தது. நொஸ்குகள் பின்வாங்கி விட்டார்கள்.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர்தான், அல்பிரேட்டும் காறால்டும் கார்கள் மீது எழுதிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் இடையில் முடிச்சுப் போட்டுச் தமிழர்கள் சிலர் பேசியது இளைஞர்களை ஆத்திரமடையச் செய்தது.

இன்னொரு நிகழ்ச்சியும் வார்டோவில் வாழும் தமிழர்களை நிலைகுலையச் செய்தது. ஜோன்-செல் ஆகிய இருவர் மீதும் தொடரப்பட்ட வழக்கு விசாரனைக்கு வந்தது. வேக்டால் அவர்கள் நவநாஜிகள் என்பதைப் பெரிதுபடுத்திக் காட்ட முயன்றார். வீடெரித்த குற்றம் நிரூபணமாகவில்லை. விநாயகம் பிள்ளையை அவர்களே அடித்தார்கள் என்பது சந்தர்ப்பச் சாட்சியங்களினால் நிரூபிக்கப்பட்டது. அந்தக் குற்றத்திற்கு அவர்கள் இருவருக்கும் தலா எட்டு மாதச் சிறைவாசம் எனத் தீர்ப்பாயிற்று. இந்தத் தண்டனைய விரும்பிய காலத்தில் அவர்கள் அநுபவிக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்தத் தீர்ப்பினை நவநாஜிகளுக்குச் சார்பான தீர்பாகவே தமிழர்கள் கருதுவதற்குப் போதிய காரணங்கள் இருந்தன. போலிஸாரின் தீவிர தலையீடுகூடத் தமக்குப் போதிய பாதுகாப்புத் தரப்போவதில்லை எனத் தமிழர்கள் மனம் புழுங்கினார்கள்.

இந்நிலையிலேதான் சற்குணர் தமிழர் கூட்டமைப்புக் கூட்டம் ஒன்று சனிக்கிழமை நடக்க இருப்பதாகவும், இந்தக் கூட்டத்திற்கு அவசியம் வரும்படியும் எல்லோரையும் அழைத்திருந்தார். நோட்டீஸ் அனுப்பியிருந்தது மட்டுமல்லாமல், தொலைபேசியிலும் கூட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தார். 'தேவகுரு அண்ணர்' பேசுவார் என்று சற்குணம் அழுத்திக் கூறியது இளைஞர்களுக்கு எரிச்சலை ஊட்டியது.

தமிழர் கூட்டமைப்புச் கூட்டம், அன்றிரவு, அந்தக் கீபிளில் பாடுபொருளாகியது!

'தேவகுரு அண்ணரை எங்கட சனம் கனபேர் பெரிய மனிஷராக்கிப் போட்டினம். இது ஒரு வில்லங்கமான நிலை' என்று புறுபுறுத்தான் அர்ஜுன்

'அர்ஜுன், நீ புறுபுறுக்கிறது நியாயம் இல்லை. அவர் தன்ர ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை...'என்றான் ரகு.

'நல்லவனுக்கு விஷர் வாறதில்லையே? அவர் எல்லாரையும் விஷராக்கிக் கொண்டிருக்கிறார். இப்ப வந்து அவர் காந்தியப் பற்றிப் பேசச் சனங்கள் வாயைப் பிளந்து கொண்டிருக்குதுகள்...'என்றான் அமுதன்.

'காந்தி பிறந்த தேசத்தில பிறந்த, சமாதானத் தூதர்கள் என்று சொல்லி வந்த, ரஜ“வ் காந்தின் ஜவான்கள் செய்த அட்டூழியங்கள் இப்பவும் இரத்தம் கொதிக்கச் செய்யுது...இருபாலையிலை மச்சான் நாலு பெண்பிள்ளைகள் மூன்று நாள் கோயிலுக்க பூட்டி வைச்சு மாறிமாறிக் கற்பழிச்சிருக்கிறாங்கள்.'

'காந்தி வாழ்க!' என்று சொல்லிக் கொண்டு, லஞ்சம் வாங்கிற பண நோட்டுக்களிலைதான் அவர் படத்தைப் போட்டு வைச்சிருக்கிறாங்கள்...அஹ’ம்ஸைக்கும் அணுகுண்டு வெடிப்புக்கும் என்ன சம்பந்தம்...?' என்று கொதித்தான் அமுதன்.

'நாங்கள் ஏதாவது செய்ய வேணும்!'

'இப்ப போலிஸ் அலேட்டாத் திரியிறாங்கள். ஏன் வீண் றிஸ்க்?' என்று விக்னேஸ் எச்சரித்தான்.

'துப்பினாங்கள்...பியர் ஊத்தினாங்கள்...இருட்டடி போட்டாங்கள்...வீட்டை எரிச்சாங்கள்...பிடிப்பட்டவர்களும் வெளியாலை வந்திட்டாங்கள்...நாங்கள் கண்டிறியாத காந்தியம் பேசுறம்..'

'இல்லை மச்சான்...தேவகுரு அண்ணர் ஒரு ஒரு பேய்க்காய்...அவர் காந்தியம் பற்றிப் பேசுறதுக்கு ஒரு நியாயம் இருக்க வேணும்...போராட்ட குழுக்கள் என்று ஒவ்வொரு திக்கிலும் போனதாலதான் எல்லாம் பழுதாய்போனது...அவரிட்டை நாங்கள் பேசிப் பார்ப்பம். நீங்கள் என்ன சொன்னாலும் அவர் நியாயத்துக்குக் கட்டுப்படுற மனுஷன்...' என்றான் விக்னேஸ்.

'நீயும் ஆள் மாறி வாறாய்?'

'ஆத்திரத்தில கொதிக்கிறதில புண்ணியம் இல்லை. கூட்டத்தில கேட்டுப் பாக்கிறதுதானே?'

'கூட்டத்தில கேட்டால், நாங்கள் குழப்பக்காரர் என்று குறி சுட்டுப் போடுவாங்கள்...'

'இதிலைதான் நாங்கள் பிழைவிடுறம். தேவகுரு அண்ணர் ஏதோ ஓரு நியாயம் பேசுறார். அந்த நியாயத்திலே எங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், நாங்கள் எங்கள் நியாயங்களை எடுத்துச் சொல்லுறதுக்குத் துணிவு வேணும்' என்றான் ரகு.

'மச்சான். நீ ஏண்டா எட்டப்பன் வேலை பாக்கிறாய்? எனக்குத் துணிவு இருக்கோ இல்லையோ என்று பார்கிறியோ?' என்று அர்ஜுன் எழுந்தான்.

'இதென்னடா கூத்து? எல்லாரும் நிப்பாட்டுங்கோ நாலு தமிழன் ஒரு இடத்தில் ஒற்றுமையாக இருக்க மாட்டான் என்பது சரியாதான் கிடக்குது...நாங்கள் என்ன சொந்தப் பிரச்சினையே கதைக்கிறம்? நாளைக்கு உங்கட விருப்பப்படி பேசுங்கோ...இப்ப, எல்லோரும் வாருங்கோ சப்பிடுவம். இறால் பொரியல், சொதி, ஸ்பெஷலாப் புட்டு...' என்றான் விக்னேஸ்.

'உண்மையா அண்ணை. வரப்போற அவ குடுத்து வைச்சவதான்...உங்களைப் போல வுட்டு அவிக்கிறதுக்கு இந்த whole Norway யிலும் ஆள் கிடையாது...' என்று கூறி, அங்கு ஏற்பட்டிருந்த இறுக்கத்தினை ரகு நெகிழ்த்த முனைந்தான்.

சனி ஏழுமணி போலக் கூட்டம் துவங்கியது. கூட்டமைப்புத் தலைவர் சற்குணம் பேசம்பொழுது சபையிலே சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது. இந்தப் பேச்சுகளில் எல்லாம் சபை நம்பிக்கை இழந்துவிட்டது போன்ற கோலம். இந்தப் போக்குத் தேவகுருவுக்கு வேதனையை அளித்தது.

'நியாயம் ஒரு கட்டத்திலே தன் ஆன்மாவை இழந்து விடுகின்றது. கிருஷ்ணன் தூது சென்றபொழுது, பாண்டவர்களுக்கு ஐந்து விடுகள் கொடுத்துச் சமரசம் செய்திருக்கலாம். ஐந்து வீடுகள் கொடுப்பதிலே என்ன இழப்பு? ஏன் மறுத்தான்? ஆணவம்! போலிக் கௌரவம். குருþக்ஷத்திரப் போரை நிறுத்தும் இறுதி வாய்ப்பினையும் துரியோதனன் இழந்தான்...' இத்தகைய சிந்தனைகளிலே மூழ்கியிருந்த போது, தேவகுரு பேசுமாறு அழைக்கப்பட்டார்.

'நவநாஜிகள் விடுதலையாகியது எங்களுக்கு அதிர்ச்சி தருவது. ஆத்திரம் ஊட்டுவது. வன்முறை வெற்றிபெறும் என்பது மாயை. அது வெறும் தோற்றமே. நாஜித் தத்துவத்தின் பிதாமகரான ஹ’ட்லர் ஏன் தோற்றான்? நாடுகள் பிடிப்பதிலே சூரத்தனம் காட்டிய அவன், தன் நாடே துண்டாடப்படுவதுக்கு ஏதுவானான். வன்முறைக்கு மாற்று ஆயுதம் அகிம்ஸை. வன்முறை சமரசத்துகான அனைத்துக் கதவுகளையும் சாத்தி விடுகின்றது. ஆனால், அகிம்ஸை அவ்வாறல்ல.. இதுதான் முக்கியம். அகிம்ஸை வழியை கருணாமூர்த்தி புத்தரே செப்பமான முறையிலே அறிமுகப்படுத்தினார். மகாத்மா காந்தி அதனைப் புதிய சூழ்நிலையிலே பயன்படுத்தினார். அவ்வளவுதான். புத்த சமயத்தின் உலகப் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்ளும் சிங்களவர்களுக்கு, அகிம்ஸையின் மொழி புரியவில்லை என்று சொல்லப்படுகின்றது. ஆனால், சூரியனே அஸ்தமிக்காத அகண்ட சாம்ராஜ்யம் ஒன்றினைக் கட்டியாண்ட வெள்ளைக்காரனுக்குக் காந்திஜ“ பேசிய அகிம்ஸை பற்றிய வலிமை புரிந்தது. இதுதான் சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள அகடவிகடம்.

'இந்த நாட்டிலே வாழ்பவர்கள் வெள்ளைத் தோலர்கள்; எனவே, வெள்ளைக்காரர்கள். இதனை இவர்கள் புரிந்து கொள்ளுவார்கள் என்று நம்புவோமாக. நம்பிக்கை, பொறுமை, அன்பு ஆகியவற்றை நாம் வசப்படுத்தினாற்றான் அகிம்ஸை என்னும் ஆயுதம் நமக்கு வெற்றியீட்டித் தரும். இதனை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளேன். அன்பு என்றும் பண்பு விவாதங்களிலே வென்றெடுக்கப்படுவதில்லை. அது உள்ளத்திலே சுரக்க வேண்டும். அதிகம் பேசி உங்களை 'போர'டிக்க விரும்பவில்லை. அகிம்ஸையும் சமாதானமும் வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அளியுங்கள்...' எனக் கூறித் தேவகுரு அமர்ந்தார்.

'உங்கட புருடாவெல்லாம் இனிச் சரிவராது. எங்கட சனங்களை சும்மா இருங்கோ, சும்மா இருங்கோ என்று சொல்லுறியள். நொஸ்குகள் ஏறிக் குதிக்கிறாங்கள்...நீ போய் லார்ஸ் போன்ற வெள்ளைக்காரக் கூட்டாளிகளுக்குத்தான் அகிம்ஸை பற்றிப் போதிக்க வேணும்' என்று அர்ஜுன் கத்தினான்.

'டேய், மரியாதையாகப் பேசடா!' என்று செல்லக் கண்ணன் எழுந்தான்.

தேவகுரு மரியாதையாகப் பேசடா!' என்று செல்லக் கண்ணன் எழுந்தான்.

தேவகுருது சட்டென்று எழுந்தார்.

'தம்பி செல்லக்கண்ணன், நீங்கள் பேசுறது பிழை. நீங்கள் மரியாதைக் குறைவாகப் பேசிக் கொண்டு, மற்றவரை அதட்டுறது வடிவே? அர்ஜுன் ஓர் அபிப்பிராயம் சொன்னார். கடவுளையே நாங்கள் நீ என்றுதானே அழைக்கிறம்?' என்று மெதுவாகச் சொன்னார்.

'I am sorry. பன்னிச்சுக் கொள்ளுங்கள்', எனச் செல்லக் கண்ணன் தலையைக் கவிழ்த்தார்.

'கதையை மாத்த வேண்டாம். விசயத்துக்கு வாருங்கோ...' அர்ஜுன் வற்புறுத்தினான்.

'தம்பி அர்ஜுன், இதுதான் உண்மை. நொஸ்க்குகள் சிலர் செய்யிற வேலைகள் பிழை. உண்மை. நாங்கள் கோபப்பட வேண்டும் என்பதற்காகத்தான் செய்யிறாங்கள். கோபம் வந்தால் நாங்கள் எங்களுடைய நிதானத்தையும் கட்டுப் பாட்டையும் இழக்கிறம். நாங்கள் அவங்கள் எதிர்பார்ப்பதைச் செய்தால், நாங்கள் எங்கள் சுயகட்டுப்பாடுகளை அவர்களிடம் ஒப்படைப்பவர்களாக ஆவோம். இதுதான் சூக்குமம். நமது சுயாதீனமான செயற்பாடுகளுக்கு இதுதான் அடிப்படை என்பதை நாம் மறந்துவிடலாகாது.' இவ்வாறு அவர் சொன்னபோதிலும், ஏதோ ஒரு விவகாரத்தின் மையத்திலே தாம் சிக்குண்டுவிட்டதை உணரலானார். சமூக ஊழியத்திலே பிரக்ஞையுடன் ஈடுபட்டுள்ளவன் துறவியல்லன். அவன் பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கும் கோழையுமல்லன். எதிர்கொள்ளுவதற்கான அன்பு தமது நெஞ்சிலே சுரத்தல் வேண்டும் என்பது மட்டுமே அவர் பிராத்தனையாக இருந்தது.

சபையில் சிறிது நேரம் மௌனம் நிலவியது. அந்த அமைதியை விரும்பாதவரைப் போல மணவாளன் எழுந்தார். அவர் எழுபதைத் தாண்டிக் கொண்டிருப்பவர். மகன் ஒரவன் இங்கிலாந்தில் வசிக்கிறான். இன்னொருவன் கனடாவில். மகளும் மருமகனும் வார்டோவில். 'உலகம் சுற்றும் வாலிபன்' போலப் பல நாடுகளிலும் சஞ்சாரஞ் செய்வதற்கு வசதி இருந்தது. தாயக மண்ணிலேயே அகிம்ஸை போக்குத் தமிழருக்கு எத்தகைய உரிமைகளையும் வென்று தரப்போவதில்லை என ஒரு காலத்தில் காட்டமாக வாதாடியவர்.

'டேய், போங்கடா போக்கோ...இந்த மடையன்ரை பேச்சைக் கேட்டுக் கொண்டு இருக்கிறியள். ஏற்கவே இப்பிடிக் கதைச்சுக் களைச்சுப் போச்சினம்...இப்ப இவர் வந்திட்டார் கதைக்க. நாங்கள் எல்லாரும் சிரையன்கள்! இவர் மாத்திரம் புத்திசாலி கையாலாகாதவன்களுடைய கதையைக் கேட்டுக் கொண்டு...என்ன வாயைப் பாத்துக் கொண்டிருக்கிறியள்?' என்று முழக்கமிட்டர்.

மணவாளனைத் தவிர ஏனைய அனைவரும் உறைநிலை அடைந்தவர்களைப் போலக் காணப்பட்டார்கள்.

'தேவகுரு! மரியாதையா நீ முதலில வெளியே போ. சனத்தை இப்பிடிப் பெட்டைகளாக்காதை. அகிம்ஸையும் பணியாரமும் எண்டு பேசினா என்னிட்ட அடிவேண்ட வரும்.' கிழச் சிங்கம் போல கர்ஜித்தார்.

தேவகுரு தலையை நிமிர்த்தி, கம்பீரமாக நின்றார். 'காந்திஜ“ சொன்னவை எனக்கு நினைவுக்கு வருகின்றது. பொதுசன ஊழியர் அவதூறு பெறுவது தலைவிதியே. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், அவதூறு கூறுபவரிடம் இரக்கம் காட்டுவதும், அவருக்கு நல்லறிவு உண்டாகுமாறு பிராத்தனை செய்வதுமே எனக்குள்ள வழியாகும்...' என்று ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக உச்சரித்து, தேவகுரு அமைதியாகச் சொன்னார்.

'இவனை அடியுங்கோடா!' என்று மணவாளன் கத்தினார். மணவாளன் தவிர யாரும் எழவில்லை. எதிர்த்து வாதப்பிரதிவாதங்களிலே ஈடுபட்ட இளைஞர்கள் கூட அமைதி காத்தனர். இதனை மணவாளன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

'மணவாளன் ஐயா, என்னை அடிப்பதால் உங்கள் ஆத்திரம் தீர்ந்து, அதனால் வன்முறைமீது உங்களுக்கு இருக்கும் வாஞ்சை குறையுமேயானால், என்னை அடியுங்கள். அத்தனை அடிகளையும் நான் சந்தோசத்தோடு ஏற்றுக் கொள்ளுவேன். மற்றவரைப் புனிதப்படுத்துவதற்காகத் தம்மைத் துன்பத்திற்குள் உள்ளாக்குபவர்கள்தான் உண்மையான அகிம்ஸாவாதிகள்' என்று கூறியவண்ணம் தேவகுரு, மணவாளனை நோக்கி நடந்து வந்தார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத மணவாளன் பின்னுக்கு நகர்ந்தார்.

அவரை அண்மித்ததும், 'அடியுங்கோ. உங்கள் கோபம் தீரும் வரையும் அடியுங்கோ...எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. ம்...இரண்டு கன்னங்களிலும் அறையுங்கள்...' என்று கூறிக் கொண்டே, மணவாளனின் இரண்டு கைகளையும் பற்றி, தமது கன்னங்களிலே, அவர் கைகளாலேயே அறைகளைப் போட்டுக் கொண்டார்.

மணவாளன் தமது கைகளை இழுத்தெடுத்துக் கொண்டார். அவர் வெட்கத்தால் கூசினார். தமது செய்கையில் ஏதோ தவறு இருப்பதாக மணவாளனின் நெஞ்சு உறுத்தியது. தமது தலையைக் கவிழ்த்துக் கொண்டு அவர் சபையை விட்டு மெதுவாக வெளியேறினார்.

சபையில் அமைதி நிலவியது. அதனைக் கலைக்க விரும்பியவரைபோல, 'ஜனநாயகக் கருத்துப் பரிமாற்றங்களிலே இவற்றை எல்லாம் நாம் எதிர்ப்பார்க்கவேண்டும். முரண்பாடுகள் மத்தியிலே சமரசங்களையும் அமைதியையும் காணுவது மனித வாழ்க்கை. ஆனால், இவற்றிலிருந்து நாங்கள் பாடங்கள் கற்று முன்னேறுதல் வேண்டும்...ஒன்றை விளக்கிக் கொள்ளுங்கள். மணவாளன் அண்ணருடன் 'எங்க தொடுங்க பார்ப்பம்' என்று மல்லுக்கு நின்றிருந்தால், விளைவுகள் வேறு விதமா இருந்திருக்கும். நான் அடிவாங்கத் தயாராகிய நிலையிலேதான் இங்கு ஏற்பட்டிருக்கக் கூடிய ரசாபாசம் தவிர்க்கப்பட்டது. நமக்குள் இது சாத்தியமானால், ஏன் நுர்மனுடன் சாத்தியமில்லை? இதை நீங்கள் ஊன்றிச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். வணக்கம்.'

தேவகுரு எல்லோருக்கும் வணக்கம் கூறிவிட்டு, அமைதியாக நடக்கத் துவங்கினார். ரகு அவருடைய அணுக்கச் சீடன் போல பின்தொடர்ந்தான்.

அர்ஜுன், அமுதன், விக்னேஸ் ஆகியோர் காரில் ஏறிக் கொண்டார்கள்.

'ரகு இப்போதைக்கு வரமாட்டான். அவன் தேவகுரு அண்ணர் வீட்டுக்குப் போயிருக்க வேணும்...'

'ஓமோம். அவனும் ஒரு குட்டிக் காந்தியாகப் பார்க்கிறான்.'

'ஏண்டா மச்சான், மணவாளன் அண்ணனோட நீ சேர்ந்திருந்தால், கூட்டத்தைக் குழப்பியிருக்கலாம் அல்லே?'

'கூட்டத்தைக் குழப்புறது அல்ல எங்கள் நோக்கம். எங்களுக்கு - இங்கை வாழும் தமிழர்களுக்கு - ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்குது என்று நாங்களும் நம்புறம். தேவகுரு அண்ணரும் நம்புறார். அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளிலேதான் நாங்கள் மாறுபட்டு நிற்கிறம். ஆனால் தேவகுரு அண்ணரிடம் ஒரு சத்தியம் இருக்குது.'

ம்...உண்மையில், அந்த ஆள் போதிக்கிற ஆள் அல்ல...வாழ்ந்து காட்டுற ஆள்.'

* * * Nalai 4-ன் தொடர்ச்சி * * *


'அதை மறுக்க ஏலாது. எங்கட பிள்ளைகளுக்குத் தமிழ் படிப்பிக்கறதுக்கு அந்த ஆள்படுற கஷ்டம்...உண்மையில, அந்த ஆள் போதிக்கிற ஆள் அல்ல...வாழ்ந்து காட்டுற ஆள்.'

'எங்கட பீத்தலன்கள் மத்தியிலே அப்படி ஒரு மணியான ஆளைக் கண்டுபிடிக்கிறது கஷ்டம்.'

'என்னடா மச்சான், கட்சி மாறீட்டாய்...'

'கட்சி மாறி என்ன எலெக்ஷனுக்கே நிக்கப்போறன்? எனக்கென்னவோ மச்சான், தேவகுரு அண்ணரிலை ஒரு மரியாதை இருக்குது. I think he is a deep and sincere man...0

அவர்கள் அமர்ந்திருந்த கார் 'ஸ்ராட்' எடுத்து, நகரத் துவங்கியது.

12

அன்று ஞாயிற்றுக் கிழமையாயினும் நேரத்துடன் தேவகுரு எழுந்துவிட்டார்.

காலையிலேயே அவர் தமிழ் வகுப்புகள் நடத்தி வந்தார். குளிர் காலத்தில், மாலை வேளைகளில் வகுப்பு நடத்துவது சற்று வசதியானது எனப் பெற்றோர் தெரிவித்த ஆலோசனைகளை ஏற்றிருந்தார். இன்று துவக்கம் மாலையிலேயே வகுப்புகள்.

இதனால், இன்று காலையில் கீபிளுக்குச் சென்று இளைஞர்களைச் சந்திப்பதற்கும் சம்மதித்திருந்தார். இந்தச் சந்திப்பினை ரகுவே மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தான். இந்தச் சந்திப்பின் மூலம், அன்றைய கூட்டத்திலே தோன்றிய பிணக்குகளை சீர்செய்ய முடியும் எனத் தேவகுரு நம்பினார். இதற்கு வருமாறு, கூட்டமைப்புத் தலைவர் சற்குணத்தையும் அழைத்திருந்தார். அவர் வருவதற்குச் சம்மதித்திருந்ததுடன், தாமே வந்து தமது காரிலேயே கீபிளுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியிருந்தார்.

அவர் வருவதற்கு எவ்வளவோ நேரம் இருந்தது. தமிழ்நாட்டிலே, ஓர் அவுஸ்ரேலிய பிரஜை, அதுவும் ஒரு பெண், அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரிலே, கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தியை அறிந்து தேவகுரு மிகவும் வேதனையுற்றார். இது பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்ததினால், உண்மை நிலைமைகளை அறிய தமது குருவும் நண்பருமான இராமநாதருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு இராமநாதர் விரிவான பதில் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்குப் பின்னர் இராமநாதர் நோய்வாய்ப் பட்டிருந்ததினால், சுருக்கமான கடிதங்களே எழுதினார். ஈற்றில் அவர் காலமாகியதும், அவருக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான ஞானப்பாலம் தகர்ந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்படலாயிற்று. அவர் எழுதிய அந்தக் கடிதத்தினை அவர் இன்றும் எடுத்து வாசிக்கலானார்:

அன்புள்ள தேவகுரு,

நீங்கள் பல கேள்விகளைக் கேட்டிருந்தீர்கள். அந்த அவுஸ்ரேலியப் பெண்ணும், அவருடன் பேசிக் கொண்டிருந்த மூவரும், உள்ளூர் டாக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்கள் என்பது உண்மை. அவர்கள் தமிழ் ஈழத்துக்கு மருந்து கடத்துவதற்குச் சதி செய்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. மருந்துகள் தடை செய்யப்பட்ட பொருள்கள் அல்ல. கடல் கடந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு - போராளிகளுக்கல்ல, புலம் பெயர்ந்து வன்னிக் காடுகளிலே அல்லற்படும் பொது மக்களுக்கும் முதியோருக்கும் சிறாருக்கும் - மருந்துகள் இல்லை. இந்த மருந்துகள் கிடைக்காது ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக் கணக்கில் அவர்கள் மாண்டொழிய வேண்டும் என்பதுதான் சிங்கள அரசின் திட்டம். இஃது உலக மனிதநேய அக்கறைகளுக்கு அப்பாலான மிலேச் சத்தனம். அந்த அகதிகளுக்கும் அனாதைகளுக்கும் மருந்து அனுப்பி வைக்க யோசிப்பது எத்தகைய மகத்தான சதி என்பதை உலகறியச் செய்துள்ளது தமிழ்நாடு! இத்தகைய ஒரு திவ்விய மண்ணிலே, தேவகுரு, மனிதநேயத்தை எங்கே கண்டுபிடிக்கச் சொல்லுகிறாய்?

தந்தை பெரியார், மனிதம், கட்டுகளிலிருந்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலை பெறல் வேண்டும் என்று விரும்பினார். காலம் காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த மத ஆசாரங்களும், சடங்கு முறைகளும் மனிதத்தைச் சிறைப் பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தார். 'கடவுள் நம்பிக்கைகளைக் கடாசு குப்பையிலே, அப்பொழுதுதான் நீ மனிதனாய் நிமிர்ந்து நிற்கலாம்' என வலியுறுத்தினார். ஆனால், 'ஒன்றே குலர் ஒருவனே தேவன்' என்று பெரியாரின் வெண் தாடியிலே தார்பூசிய பின்னர், அரசியல் விளையாடத் துவங்கியவர்களிடமிருந்து, உண்மையையும் சத்தியத்தையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனை ஜனநாயக முறையிலே விமர்சிக்க முடியுமா? மூச்! தன் 'மான'அரசியலுக்குக் களங்கம் கற்பிப்பதா என வீர சினிமா வசனம் பேசித் தலையைச் சீவிவிட்டுத்தான் மறு வேலை!

'ஆரிய மாயை', 'வடக்கு வளர்கிறது தெற்குத் தேய்கிறது' 'திராவிட பாரம்பரியம்' எல்லாம் கோஷங்களே! கண்ணகி, பூம்புகார், வள்ளுவருக்கான கோட்டம் எல்லாம் அலங்காரங்களே! நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த திராவிட ஆட்சியிலே, அறுவடை செய்த சாதனைகள் என்ன? அண்ணாவின் மறைவுக்கு பின், ஒரு ஜாதிக்கு எதிராக இன்னொரு ஜாதியை உசுப்பிவிடும் சாணக்கியத்துடன் ஜாதியம் வளர்க்கப்பட்டது. இன்று ஜாதிக்கு ஒரு கட்சி உருத்திர தாண்டவமாடும் நிலை. நாற்காலிகள் மீதான ஆசைகள் மட்டுமே சமுதாய வாழ்க்கையாகி விட்டது. சுயநலம் மட்டுமல்ல, அச்சமும் சர்வ வியாபகமாகிவிட்டது. பதவி பறிபோவதற்கு முன்னர் ஏலுமான அனைத்தையும் சுருட்டிவிட வேண்டும் என்கிற அவசரம், சுயநலம் சார்ந்தது மட்டுமல்ல, அச்சம் சார்ந்ததும். அச்சத்திலே வாழ்பவனுக்குப் போதை தேவை. 'கோஷங்கள்', 'பேரணிகள்,' 'சம்பாத்தியம்' அனைத்தும் போதையூட்டும் பொருள்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழ் உணர்வினை விளம்பரப் பலகைகளில் மட்டுமே பார்க்கலாம். மற்றப்படி வேறு உணர்வுகள் - பொதுவாழ்விலே ஒழிக்கப்பட வேண்டிய அனைத்துக் கொச்சத் தனமான உணர்வுகளும் வளர்க்கப்பட்டுள்ளன.

ஒரு தடவை நீ பேசி பொழுது யூ.என்.பி (U.N.p) என்பதற்கு Uncle--Nephew--Party என்று விளக்கம் தந்தாய். இங்கு நிலைமை இன்னமும் அற்புதம்! தந்தை-மகன்-மருமகன் கட்சியாகத் திராவிடம் சுருக்கிக் கொண்டிருக்கின்றது! இந்த ஒரு போக்கினை எதிர்த்துக் தோன்றியுள்ள ஏனைய திராவிடக் கட்சிகள், பார்ப்பனீயத்தை எதிர்க்கப் புறப்பட்ட திராவிடவீரம், அதிதிராவிடத் தலைமையை விட்டால் கதியில்லை என்று அலறுகிறது. திராவிடத்துக்கு அப்பாலான, ஆனாலும் தலைமைதாங்க வல்ல ரத்தத்தின் ரத்தத்தினை அதிதிராவிடம் என்று விளங்கிக் கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். இவற்றின் மத்தியில் தமிழரின் கௌரவத்தை நிலைநாட்டப் போரிடும் இளைஞர்களை 'உலகின் குஷ்டரோகிகள்' எனப் பிரசாரப் படுத்தும் 'றோ'வின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் 'ஜால்ரா' தட்டிக் கொண்டே, 'உலகத் தமிழரின் பாதுகாவலன்' என்று கோஷம் போடுவதற்கு எத்தகைய அடத்தியான அயோக்கிய அறியாமை தேவை? இந்த ஆத்திரங்களை எல்லாம் இங்கு சொல்ல முடியாது. சத்தியமும் உண்மையும் அன்பும் பண்பும் எங்கே கிடைக்கும்? அருங்காட்சி அகங்களிலேகூடத் தேடிப் பார்க்கின்றேன்.

இங்கு எல்லா விழுமியங்களும் செத்துவிட்டன. காந்தி ஒரு மங்கலான நினைவு. இல்லாவிட்டால், அவர் பிறந்த குஜராத் மாநிலத்தில், 0.5 சதவீதம் கூட இல்லாத கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றே துவம்சம் செய்யப்படும் கொடுமை நடக்குமா? மத்திய பிரதேசத்தில் அருள்சார்ந்த மனித சேவை செய்யும் கன்னியாஸ்திரிகளுடைய கற்புக் குதறப்பட்டது.

'கன்னியாஸ்திரிகளுடைய கற்பு விசேடத் தன்மையுள்ளதா?' என்று வீர வசனம் பேசும் இந்துத்துவத் தலைவர்கள் தோன்றியுள்ளார்கள். புத்தமதம் இந்திய மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது போலவே, காந்தியமும் இந்திய மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு விட்டது என்றே எனக்குத் தோன்றுகின்றது. காந்தியைக் கொன்றமையே ஆட்சியேறு வதற்கான அதிகாரமாகச் செயற்படும் இந்துத்துவத்தின் கொடுமையை என்னவென்று சொல்வேன்.?

பகுத்தறிவை வலியுறுத்திய பெரியார் புலன் விசாரணைக்கு அப்பாற்பட்ட நிறுவனமாக நிவேதிக்கப் பட்டுள்ளார். அதனையாவது பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பெரியார் நாமம் அரசியல் வியாபாரத்திற்கான ஒரு 'லே'பாக மாற்றியமைக்கப்பட்டுள்ள கொடுமையை யாரிடம் சொல்வது? பிரஸ்நேவ் சோவியத் நாட்டின் ஆட்சியாளராக இருந்தபொழுது, ஒரு தசாப்தத்திற்கிடையிலேயே அது சிதலமடைந்து சின்னாபின்னமாகும் என்று யாராவது ஆருடங் கூறியிருப்பார்களா? அப்படிக் கூற யாராவது முன் வந்திருந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் , நடந்தது என்ன?

இருபத்தியோரம் நூற்றாண்டில், இந்தியா ஒரே நாடாக இருக்குமா என்பதுதான் கேள்வி. அது ஒரே நாடாகவே இருக்க வேண்டும் என்று நான் தினந்தினம் பிரார்த்திக்கின்றேன். ஆனால், என் பிரார்த்தனைகள் பயனற்றுப் போகவேண்டும் என்கிற மூர்க்கத்துடன் மக்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். ஆனால், அடக்குமுறை என்றுமே ஒரு நாட்டின் ஒருத்துவத்தைப் பாதுகாக்க உதவியிருக்கின்றது என்பதற்கு வரலாறே கிடையாது.

நான் எப்பொழுதும் ஈழத்து விடுதலைப் போராளிகளிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ளுகின்றேன். அதனைக் கொச்சைப்படுத்துவதுதான் தமது தேச பக்தியை வெளியிடுவதற்கான அடையாளம் என்று நினைக்கும் புத்தி ஜ“விகள் தமிழ் நாட்டிலே புழுத்துப் பெருகியுள்ளார்கள். திருப்பதியான் மொட்டையுடன் ஒருவர் செய்யும் தமாஸ”களே புத்தி ஜ“விதத்தின் உச்சம் என்றால் பார்த்துக்கொள்ளேன்! சிங்களப் பேரினவாதமே தமிழ்ப் போராளிகளைத் தோற்றுவித்தது என நான் நம்புகின்றேன். அடக்கு முறைகளின் மூர்க்கம் எவ்வளவுக்கு மூர்க்கம் அடைந்ததோ, அவ்வளவுக்கு அவ்வளவு தியாகம் செய்யும் துடிப்பும், கீழ்ப்படியோம் என்கிற உறுதிப்பாடும் போராளிகளுக்கு ஏற்படத் துணை நிற்கின்றன. இந்த எளிமையான புரிதலைக்கூட 'ஓர் இனம், ஒரு மொழி, ஒரு மதம்' என்று நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு, வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள் சிரத்தையில் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை...

கடிதம் தொடர்ந்தது. ஆனால், கதவின் மணியை யாரோ அடித்தார்கள். கடிதத்தைப் பக்குவமாக மடித்து, தமது ஃபைலில் வைத்துவிட்டு, வாசலுக்கு விரைந்தார்.

நித்தியா கதவைத் திறந்து நின்றாள். சற்குணம் உள்ளே வந்தார். தேவகுருவைக் கண்டதும், 'அண்ணே, சுணங்க நேரமில்லை. பெடியங்கள் காத்திருப்பாங்கள்' என்றார்.

'ஏதாவது குடிச்சிட்டு...'

'அவங்களும் தருவாங்கள். போவம்.'

'நித்தியா, கதவப் பூட்டி வைச்சிடும். ரகு இருக்கிற கீபிளுக்குப் போட்டு வாறம்' என்று கூறித் தேவகுரு புறப்பட்டார்.

'அண்ணை, நாங்கள் வன்முறையை வன்முறைக்காவே விரும்புகிறோம் என்று பிழையா விளங்கிக் கொள்ளாதேயுங்கோ. உங்களுக்குத்தான் முதலில இருட்டடி போட்டவங்களாம். இதை நீங்கள் ஒருத்தருக்கும் தெரியாமல் சடைஞ்சு போட்டியள்...பிறகு, விநாயகம் பிள்ளை...ஆக்களைச் சும்மா விட்டதாலை காருகளை அலங்கோலப்படுத்திறது...இப்பிடியே விட்டு வச்சால், எங்கள் எல்லாரிலும் மிளகாய் அரைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதுதான் அண்டைக்கு நாங்கள் கொதிச்சனாங்கள்...' என்று சொல்லி, தங்களுடைய வலயத்திற்குள் தேவகுருவை அர்ஜுன் இழுத்தான்.

'நீங்கள் ஏதோ நியாயம் பேசுறீங்கள். உங்களுக்கு நல்ல நோக்கம் இருக்குது. அதை நாங்கள் மறுக்கேல்லை. ஆனால், உங்கடை நியாயங்கள் எங்களுக்கு முழுக்க விளங்குதில்லை... நீங்கள் உங்கட ரூட்டில போங்கோ...நாங்கள் எங்கட ரூட்டில போவம்...ஒன்று சரிவராட்டிலும், மற்றது சரிவரும் தானே?...' என்றான் அமுதன்.

'தாயக மண்ணிலும் இந்த இரண்டு ரூட் நியாயந்தான் எல்லாத்தையும் பழுதாக்கினது. பொடியள் யாழ்ப்பாணத்திலை சேட்டை விடட்டும், நாங்கள் கொழும்பிலை அதையும் வைச்சு நியாயம் பேசுவம் என்றுதானே தளபதி அமிர்தலிங்கமும் கணக்குப் போட்டவர். பிறகு என்ன நடந்தது? நான் வெளியரங்கமான மேடைகளிலே தர்மம் மட்டுமே பேசகிறேன். உங்களுடைய கொதிப்புகளை என்னாலே புரிந்துகொள்ள முடிகிறது. இதனாலேதான், இந்த நான்கு சுவர்களுக்கிடையில் நியாயம் பேசலாம் என்று வந்திருக்கிறேன். நீங்கள் அடியுங்கோ...ஆனால் ஒன்று, விநாயகம்பிள்ளையை அடிச்சவங்களைக் அல்லது காருகளிலே பெயின்ற் ஸ்பிரே பண்ணிவைங்களைக் கண்டுபிடிச்சு அடிக்கவேணும்...' என்று கூறி, தேவகுரு நிறுத்தினார்.

அமைதி நிலவியது. ரகு நெளிந்தான்.

'விஷயம் இதுதான். விநாயகம் ஒரு அப்பாவி. அவர் தாக்குப்பட்டதுக்கு வருந்துகிறோம். நீதி வழங்கிறதிலை ஒரு ஒழுங்கு இருக்குது. குற்றவாளிகள் நாலுபேர் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், குற்றமற்றவன் ஒருவன் தண்டிக்கப்படலாகாது. இது மகா முக்கியம். நீங்கள் அடிக்கும் பொழுது, ஒரு அப்பாவி நொஸ்க்கை, எங்களுக்கு அநுதாபமான ஒரு நொஸ்க்கை, காயப்படுத்த மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?...இல்லை, ஒரு நியாயத்துக்காகக் கேட்கிறேன். மற்றவர்களுக்குத் தண்டனை கொடுப்பதற்கு நாங்கள் என்ன கடவுளே?...சட்டத்தின் சக்கரம் மெதுவாகத்தான் சுழலும்...'என்றார் தொடர்ந்து.

'அண்னை, நீங்கள் தாயக மண்ணிலே நடைபெறும் இனமானப் போரை ஆதரிக்கிறீர்களா, இல்லையா?' என்று அர்ஜுன் வெடுக்கெனக் கேட்டான்.

'ஆதரிக்கிறேன். நூறு சதவீதம் ஆதரிக்கிறேன்...' என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் தேவகுரு கூறினார்.

'அங்கு போராட்டத்தை ஆதரிக்கிறீர்கள்...இங்கு போராடுவது தப்பு என்கிறீர்கள். இரண்டு முரண்பாடாக இல்லையா?' என்று கேட்டு விக்னேஷ”ம் உரையாடலிலே நுழைந்து கொண்டான்.

'முரண்பாடாக எனக்குப் படவில்லை. சில உண்மைகளை நாங்கள் ஆத்ம சுத்தத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் அமைதியானவர்கள், அன்பானவர்கள், பாசம் மிக்கவர்கள், நட்புக்கு உகந்தவர்கள். இது எத்தனையோ தமிழர்களுடைய அநுபவம். இதனை நாம் மறந்துவிடலாகாது. இலங்கையில் எழுந்துள்ள போருக்கு அச்சமும் அடக்குமுறையுமே காரணங்கள். தேசப்பற்றைத் துறந்துவிட்ட அரசியல்வாதிகள், புத்தரை மறந்துவிட்ட பிக்குகள், மனச்சாட்சிகளைத் தொலைத்துவிட்ட சிங்கள புத்திஜ“விகள் காலம் காலமாகச் சிங்க மக்கள் மத்தியிலே ஓர் அச்சத்தினை வளர்த்து வந்துள்ளார்கள். வடக்கில், குறுகிய பாக்குநீரிணைக்கு அப்பால், எட்டுக்கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடன் இணைந்து ஈழத்தமிழர்கள் சிங்கள இனத்தை அடக்கி ஆள்வார்கள் என்கிற அச்சத்தினை ஊட்டி படையெடுப்புகளை ஆதாரம் காட்டி, நாளையும் இத்தகைய படையெடுப்புகள் சாத்தியம் என்கிற அச்சத்தினை ஊட்டி வருகிறார்கள். இந்த அச்சத்தினை சிங்களவருடைய மனசுகளிலே மிக ஆழமாகப் பதியும்படி செய்துவிட்டார்கள். இதன் காரணமாகத்தான் அன்பும் பண்பும் உள்ள சாதாரணச் சிங்களவன், அரசியல் பிராணியாகவும், வாக்களானாகவும் மாறும் பொழுது மாயை வசப்பட்டு, பகைமையும் குரோதமும் திரண்ட மனோநிலையில் செயற்படுகின்றான். இது மகா சோகம். இலங்கையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைபெறும் ஜனநாயகம் என்ன? சரித்திர காலத்தில், அநுநாதபுர கோநகராக விளங்கிய காலத்தில், லம்பகர்ணருக்கும் மோரியர்களுக்கும் இடையில் அரசுரிமைப் போட்டி இருந்தது. அதே போல, இரண்டு குடும்பங்களுக்கிடையில், சேனநாயக்க, பண்டாரநாயக்க குடும்பங்களுக்கிடையில், நடைபெறும் அதிகார மல்யுத்தமே கடந்த ஐம்பது ஆண்டு இலங்கையின் ஜனநாயக அரசியலாக நிலைத்துள்ளது. இதற்கு, தமிழர் 'பூச்சாண்டி' மந்திரமாக உச்சாடனம் செய்யப்படுகின்றது. யுத்தம் ஆட்சியாளருக்கும் அவர்களுடைய பாதந்தாங்கிகளுக்கும் கொழுத்த வியாபாரம். ஜனநாயகம் என்கிற பெயராலே செய்யப்படும் இந்தப் பிததலாட்டங்களை, ஜனநாயத்தின் பாதுகாவலர்கள் எனப் பெருமை பேசும் உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தல் கொடுமையிலும் கொடுமை!'

'அச்சத்தின் பங்களிப்பு...அக்குமுறை?...' என்று இழுத்தான் ரகு.

'காந்திஜ“ அடக்குமுறை பற்றித் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். 'தீயானது எப்படித் தங்கத்தை ஒளிவிடச் செய்யுமோ, அப்படியே அடக்குமுறை தனி மனிதனையோ, சமூகத்தையோ சிறப்படையச் செய்யும். அடக்குமுறைதான் சக்தி முழுவதையும் உபயோக்கும்படி தூண்டச் செய்கிறது. அபாயம் ஏற்படும்பொழுது தியாகத்தையும் தைரியத்தையும் விளங்கும்படி செய்கிறது...'அடக்குமுறையின் எதிர்வினை தான் போராளிகளின் தர்மம். 1983 க்கு முன் பின் என்று தமிழர் செயற்பாடுகளை நோக்கினால் இந்த உண்மை விளங்கும். அச்சத்தின் எதிர்வினை ஒரு பக்கத்திலும், அடக்குமுறையின் எதிர்வினை மறுபக்கத்திலும் நின்று போராடுகின்றன...இவற்றின் நடுவிலே அன்பின் குரல் ஒலித்தல் நியாயம். உறங்கிக் கொண்டிருக்கும் மனித நேயத்தினைத் தட்டி எழுப்புவதற்கு அன்பில் மொழி பயன்படும் என நான் நம்புகின்றேன். இதன் காரணமாகத்தான் நான் அகிம்ஸையின் பிரசாரகனாகவும், அதன் பரமார்த்த ஊழியனாகவும் வாழ முற்பட்டுள்ளேன்' என்றார் தேவகுரு. எந்த இடத்திலும் கோபப்படாது, ஏற்ற இறக்கமற்ற தொனியிலே அவர் பேசுவது இளைஞர்களுக்குப் புதிய அநுபவமாகவும் இருந்தது.

'தாயக மண்ணிலே நடைபெறும் விடுதலைப் போரைப் பயங்கரவாதம் என்று கூறும் சில தமிழர்கள்கூட தாங்கள் போரை விரும்பாத அகிம்ஸாவாதிகள் என்றுதானே காட்டிக் கொள்ளுகிறார்கள்? நீங்கள் அகிம்சை - அன்பு பற்றிப் பேசும் பொழுது, நீங்கள் அவர்கள் குரலாக ஒலிக்கின்றீர்கள் என்று நாங்கள் ஏன் கருதிக் கொள்ளக்கூடாது?' என்று அர்ஜுன் கேட்டான்.

தேவகுரு கண்களை மூடிச் சிந்திந்தார். அவர் முகத்திலே புன்னகை ஒன்று அலை புரண்டு அமைதி கொண்டது.

'அறம் புறமாகும்பொழுது போருக்கான நியாயம் வாய்க்கிறது. தர்மத்திற்கான அனைத்துக் கதவுகளும் அடைக்கப்படும்பொழுது, போர் மட்டுமே தர்மமாகலாம். அவ்வாறுதான் கீதாசிரியன் போரின் பக்கலில், சங்கார சந்நதனான அர்ஜுனன் பக்கலில் நின்றான். தேரோட்டினான்...போரின் அக்கிரமங்கள் ஐந்தாம் படையை நியாயப்படுத்துகின்றன. அற்ப ஆசைகளினால்...முப்பது வெள்ளிக்காசுகளுக்காகத்தானே யூதாஸ் ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்தான்?...ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால், ஓய்வூதியம் கிடைக்கும். இதற்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொள்ளும் தமிழர்கள் இல்லையா?...'

தொடர்ந்து பேசுவதற்கான வார்த்தைகளைத் தேடும் அவதியிலே, தேவகுரு நிறுத்தியது போலக் காணப்பட்டார்.

'கதிர்காமர் ஓய்வூதியத்துக்கு ஆசைப்பட்டா, உலக மேடைகளில் எல்லாம் தாயகத்தின் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று கொச்சைப் படுத்தி அலைகின்றார்?' என்று அமுதன் கேட்டான்.

'கதிர்காமர் சிங்கள ஆயாவின் முலைப்பால் குடித்து வளர்ந்தவனாக இருக்கலாம்...'என்று நக்கலடித்தான் அர்ஜுன்.

தேவகுரு பேசாமல் இருந்தார்.

அறையில் அமைதி நிலவியது.

'என்ன, அண்ணே! பேசாமல் இருக்கிறியள்...' என்று ரகு கேட்டான்.

'நீங்கள் இளைஞர்கள். உங்களுக்கு ஆத்திரம் இருக்கும். அதை இந்த அறைக்குள் கொட்டித் தீர்த்துக் கொள்ளுங்கள். இளைஞர்களின் ஆத்திரங்களுக்கு ஒரு வடிகால் தேவை...' என்றார்.

'நாங்கள் உங்கள் தம்பிகளைப் போல. நாங்கள் ஏதாவது பிழையாகச் சொன்னால், நீங்கள் எங்களைத் திருத்தவேணும். நாங்கள் மனந் திறந்து பேசுகிறோம். அவ்வளவுதான்!' என்று கெஞ்சும் பாவனையிலே சொன்னான் விக்னேஷ்.

'ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக உணரவேண்டும்! 'தமிழர்கள் பயங்கரவாதிகள்! அவர்களுடன் எந்தப் பேச்சு வார்த்தைகளுக்கும் நாங்கள் தயாராகவில்லை' என்று கதிர்காமர் சொல்லுகின்றார். நாடுதோறும்; மேடைதோறும் இதுதானே? இதன் மூலம் அவர் சொல்லாமற் சுட்டும் அர்த்தங்கள் முக்கியமானவை.

'நான் இலங்கையிலே சமாதானப் பாலும் தேனும் வழிந்தோடுவதற்குப் பாடுபடுகின்றேன். பயங்கரவாதிகளான தமிழர்கள் இதற்கு எதிரான சத்துராதிகள்...' என்று அழுத்திச் சொல்வதின் மூலம் 'நான் தமிழனல்லன்' என்பதை மகா தெளிவாகச் சொல்லுகின்றான். இதற்குப் பிறகு அவன் என்ன பால்குடித்து வளர்ந்தான் என்கிற ஆராய்ச்சி சுவாரஸ்யமற்றது. தமிழர்கள் பயங்கரவாதிகளா, அல்லவா என்பதுதான் முக்கியம்...ஒரு காலத்திலே பல போராட்டக் குழுக்களாகப் பிரிந்து, குழுச் சண்டைகளிலே ஈடுபட்டு எங்களை அழித்துக் கொண்டோம். சில குழுக்கள் பிளவுண்டு, சகோதரத் தோழர்களை அழிக்கும் சண்டைகளிலும் ஈடுபட்டோம். இத்தகைய சண்டைகளிலே நாங்கள் ஈடுபடும்படி வெளியாரும் ஊக்கப்டுத்தினார்கள். இவற்றால் ஏற்பட்ட இழப்புகளும், மனக்காயங்களும் பயங்கரமானவை. அவற்றை நாங்கள் அநுபவபூர்வமாக அறிவேன். இவை அனைத்தையும் நாங்கள் மறந்துதான் ஆகவேண்டும். நேற்றைகளிலே வாழ்ந்து சாம்பியதுபோதும். நாளைகளைத் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஈழத் தமிழர்கள் வரலாற்றின் யுக சந்தியிலே நிற்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமுதாயக் கடமையை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். போராளிகளுடைய கடமைகளும் தர்மங்களும் வேறு. புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழும் தமிழர்களுடைய தர்மங்களும் கடமைகளும் வேறு. இவற்றை மறந்துவிடலாகாது.

'தாயக மண்ணிலே அறுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. ஈழ மண்ணிலே சிங்கள ராணுவத்தினர் ஏற்படுத்திய கல்லறைகள் பலவற்றிலே, ஹ’ட்லரின் படைகளே நாணக் கூடிய அக்கிரமங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம். என்ன இருந்தாலும், தாயக மண்ணிலே இழைக்கப்பட்டு வரும் அக்கிரமங்களைக் காட்டியும், எங்கள் உடன்பிறப்புகளுக்கு ஏற்பட்ட இழப்புகளைக் காட்டியும், எட்டு இலட்சம் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களாகப் பல்வேறு நாடுகளிலே வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிலே ஒரு லட்சம் பேராவது போராடும் வயதினராக இருக்க மாட்டார்களா? அவர்களும் போராளிகளாக மாறியிருந்தால், இன்றைய சமன்பாடுகள் எப்படி மாறியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இவர்களைக் கோழைகள் என்றோ, தாயக மண்மீட்புக்கு எதிரானவர்கள் என்றோ நான் கொச்சைப்படுத்தவில்லை. புலம் பெயர்ந்து வாழ்வதற்கு அவர்களுக்கு நிறைய நியாயங்கள் இருக்கலாம். நான், நீங்கள், அவர்கள் எல்லோருமே மண்மீட்புப் போரிலே ஈடுபடும் உரிமையைத் துறந்தவர்கள் என்பதை மட்டும் மறுக்க ஏலாது!

'ஆனாலும், தாயக நேசிப்பினையும், தமிழ் இனத்துவ அடையாளங்களையும் இன்னும் பலநூற்றாண்டு காலமாயினும் ஆராதிக்கும் கடமை இவர்களுக்கு உண்டு. இந்தக் கடமை யோகம் மூலமே தாயக மண்ணிலுள்ள உரிமையை மீளப் பெறுவர். கனடா-அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே வாழ்பவர்களுடைய நிலைப்பாடுகளை நான் அறியமாட்டேன். ஆனால், இங்கு நோர்வேயிலுள்ள தமிழர்களை எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் எவ்வளவுதான் முயன்றாலும், எங்களுடைய பிள்ளைகளை நொஸ்க்குகளாக்கிவிட முடியுமா? அப்படி ஆக்குவதினால் என்ன பயன்? தாயக மண்ணிலே விடுதலை மலருமாயின், அங்கு மீளச் செல்வார்களா? சென்று புதுவாழ்வு துவங்குவதற்கான இவர்கள் தகைமை என்ன? இவற்றிற்கு நியாயமான விடை கண்டு பிடிப்பதிலேயே நமது பிள்ளைகளின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

'தமிழர்கள் பயங்கரவாதிகள், சண்டியர்கள் என்கிற இமேஜை வளர்ப்பதின் மூலம், சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டுள்ள பிரசாரங்களை மெய்ப்பிப்பவர்களாக வாழுகிறோம் என அர்த்தம் ஆகாதா? பிறிதொரு வகையிலே சொல்வதானால், விடுதலையின் புனிதங்களை கௌரவிக்கும், நன்மக்களாக நாம் வாழ பழகிக் கொள்ளவேண்டும். எனக்கு உண்மையில் ஒரு வேதனை உண்டு. ஜாதியக் கொடுமைகள், சீதனக் கொடுமைகள் ஆகியவற்றைப் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கடைப் பிடிக்கும் பன்னாடைகளும், நாமமது தமிழரெனக் கொண்டு நம் மத்தியிலே வாழ்கிறார்கள். தமிழ் உணர்வையும், இன மானத்தினையும், மொழிப்பற்றையும் துறந்து, புதிய பண வளத்திலே, புதிய மேட்டிமைகள் பேசித் திரிதல் மகா கொடுமை. இவற்றைக் களைவதற்கு, மனசுகளின் சுய சுத்திகரிப்பு என்கிற காந்திய அகிம்ஸை வழி உதவும் என நான் கெட்டியாகவே நம்புகின்றேன். நாம் புலம்பெயர்ந்த நாடுகளிலே அன்பு நெறி பயிலுதல், தாயக மண் மீட்புப் போருக்கு ஆதரவும் அநுதாபவமும் திரட்டும் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது...' என்று அலுப்புப் பாராட்டாது நீளமாகப் பேசி முடித்தார் தேவகுரு.

அர்ஜுனும், அமுதனும் அவருடைய விவாதங்களிலும் விளக்கங்களிலும் ஒளிரும் உண்மைகளை அறிந்து திகைத்தார்கள். தேவகுருவின் மனசிலே இவ்வளவு தூரத்திற்குத் தமிழ் நேசிப்பு வேர்ப்பாய்ச்சி இருக்கும் என்பது அவர்கள் அறியாத ஒன்று. 'இது ஒரு பேய்க்காய்' என்பது போன்ற ஒரு மரியாதை உணர்வும் வளர்ந்தது. மதங்கள் பற்றிய ஆய்வுகளிலும், காந்தியக் கொள்கைகள் பற்றிய மறுபரிசீலனைகளிலும் அவர் ஈடுபாடுடையவர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தமிழர் பிரச்சினைகள் பற்றி நிதானமாகவும் நிறைவாகவும் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டார்கள். அவருடன் விவாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், இப்பொழுது அவர் தங்களுடன் ஞானப்பகிர்வு ஒன்றினை நடத்த வேண்டுமென விரும்பினார்கள். அவரைத் குருவாகச் சம்பாவனை செய்தார்கள்.

'அண்ணே, எங்களுக்குச் சில சந்தேகங்கள்...இவ்வளவு மினெக்கெட்டு வந்திருக்கிறியள்...உங்களுக்கு நேரம் கிடைக்குமோ தெரியாது...' என்று அர்ஜுன் இழுத்தான்.

'தம்பிமாரே, இன்னொரு டீ போடுங்கோவன்...ஊரில குடிக்கிறது போல பிளேன் டீ உங்களோட கதைக்க வேணும் என்றுதானே வந்திருக்கிறார்...' என்று இவ்வளவு நேரமும் அமைதி காத்த சற்குணம் சொன்னார். ரகு தேநீர் தயாரித்து வரச் சென்றான்.

ஓய்வு பெறுபவரைப் போல தேவகுரு அறையைச் சுற்றிப் பார்த்தார். இந்தியாவிலிருந்து வெளிவரும் குறிப்பிடத்தக்க சிற்றிதழ்கள் இரண்டு ரகுவின் மேஜையில் கிடந்தன. அவற்றை இலேசாகப் புரட்டிப் பார்த்தார். ஒன்று தமிழீழப் பிரச்சினைக்கு ஆதரவாக வெளிவருவது. அந்தப் பத்திரிகையுடன் தேவகுருவுக்குத் தொடர்பும் இருந்தது.

ரகுவும் விக்னேஷ”ம் தேநீர் தயாரித்து எடுத்து வந்தார்கள்.

'நல்ல வாசமுள்ள தேயிலை...' என்றார் சற்குணம்.

'இது சிலோன் தேயிலை டீயண்ணை. ரகீம் கடையில வாங்கினது. அங்க நிறையச் சாமான்கள் வந்திருக்கு இப்ப.'

'நாங்கள் வந்தேறு குடிகள் என்று சந்திரிகா தென்னாபிரிக்காவில் பேசியது எங்களுக்குச் சரியான ஆத்திரம்...'அமுதன் பொருமினான்.

'அவ இப்ப விஸ்கி உசாரிலதான் வாழ்றாவாம்...இது ஒரு தலைவர் பேசுற பேச்சே? குடிவெறியில அலம்பிறது போல...' அர்ஜுன் ஆத்திரப்பட்டான்.

அவர்களுடைய குறிப்புகள் மூர்க்கம் அடைவதற்கு முன்னரே தேவகுரு பேசத் துவங்கினார்:

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மந்தம். இது எல்லாருக்கும் பொருந்தும். நாய்க்கும் பூனைக்கும் இடையில் குட்டி பிறக்குமோ? ஆனால், ஒரு மனிஷ’யை ஒரு சிங்கம் வைப்பாட்டியாக வைத்திருந்ததாம். அந்த வைப்பாட்டி ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றாளாம். அந்த அண்ணனும் தங்கச்சியும் கல்யாணம் செய்தார்களாம். அவர்களுடைய சந்ததியார்தான் சிங்களவராம். இந்த ஆபாசங்களையே வேதமாகக் கொண்டாடுபவர்களுடன் என்ன நியாயம் பேசமுடியும்? ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எத்தனை விழுக்காடு தூய சிங்கள இரத்தம் பாய்கிறது என்பது அவருக்கே தெரியாது. சந்திரிகாவின் முப்பாட்டன் ரத்வத்தை திசாவை. கண்டி ராஜ்யத்தின் சுதந்திரத்தை ஆங்கிலேயருக்குத் தாரை வத்துக் கொடுத்தவர்களுள் அவரும் ஒருவர். தாரைவார்த்த ஆவணத்திலே அவர் தமிழிலேதான் கையொப்பம் இட்டார். ரத்வத்தை ஐயா சிங்கள மொழியைப் புறக்கணித்தாரா? அல்லது அவருக்குச் சிங்களம் தெரியாதா? இது பற்றி ஆராய்வதுகூட நல்லது. இலங்கையின் அரசியல் தலைநகராக இன்று திகழ்வது ஜெயவர்த்தனபுர கோட்டை அதன் பெயரை வைத்துக் கொண்டு ஜனாதிபதி ஜெயவர்த்தன ஆடிய கூத்துகள் கொஞ்சமோ? ஜேம்ஸ் இரத்தினம் நடத்திய ஆய்வுகளிலே ஜெயவர்த்தனவின் இரத்தத்திலே முஸ்லீம் இரத்தக் கலப்பு உண்டு என்று நிரூபித்துள்ளார்கள். அவருடைய முப்பாட்டனின் முப்பாட்டன்களே கோட்டையின் சுதந்திரத்தைப் போத்துக்கேயருக்குத் தாரைவார்த்தது! யாழ்ப்பாண மண்ணைச் சிங்களர் படை ஆக்கிரமித்ததும், சந்திரிகாவின் மாமனார், அநுருத்த ரத்வத்தை, ஒரு நொண்டி நாடகம் ஆடினார். செப்புமால் குமாரயாவின் வீர சாகஸத்தினைத் தாம் மீண்டும் சாதித்ததாகப் பிரசாரம் செய்தார். செப்புமால் குமாரயா செண்பகம் பெருமாள் என்னும் சேரர் தமிழன். அவன் சிங்கள அரசனின் தலையைச் சீவி கோட்டை ராஜ்யத்தைக் கைப்பற்றி அரசாண்டான் என்பதை மறந்துவிட்டார். ஜெயவர்த்தனபுர கோட்டையை நிறுவி, அதனைத் தலைநகராக்கியவன் அழகக்கோனார் என்னும் தென்னிந்தியத் தமிழன் என்பதும் மறக்கப்பட்ட ஒன்றாகியது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்றினைக்கூட அறியாது, அன்றேல் மறைத்துக் கூத்தாடும் சிங்களப் புத்திஜ“விகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினை எப்படி எல்லாம் புரட்டிப் பேசுவார்கள் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். சிங்கள நாகரிகத்துக்கு முற்பட்டதாக, இலங்கை பூராகவும், தமிழர் நாகரிகம் பரவியிருந்தது என்பதை அண்மைக்கால அகழ்வாய்வுகள் எண்பிக்கின்றன. இத்ந அறிவை, சரித்திர அறிவை, கல்லறைகளில் வைத்துப் புதைக்கச் சிங்கள புத்தி ஜ“விகள் ஆடும் கூத்துக்கள் கொஞ்சம் அல்ல. இரண்டு மூன்று நொஸ்க்குகளுக்குப் பாடம் படிப்பிக்கவேண்டும் என்கிற துடிப்பினையும் நேரத்தையும், தாயக மண்ணிலே எங்களுக்குரிய தொன்மையான உரிமைகளைப் பற்றிய அறிவினைப் பரப்புவதற்குப் பயன்படுத்தினால் எவ்வளவு நலமாக இருக்கும்? களத்திலே நமது போராளிகள் தற்கொடையாளராய் நாளைகளை மறுதலித்து இன்றைகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், இன்றைய விருந்துகளிலும், உல்லாசங்களிலும் நாளைகளை மறந்து வாழுதல் முறையா? தமிழ்ப் பிள்ளைகளின் தமிழறிவு, வேரடி மண்ணின் கலை--இலக்கியப் பாரப்பரியங்கள் ஆகியவற்றை வளப்படுத்தி உயிர்ப்புடன் வைக்கும் யாகத்திலே ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனும் ஈடுபடுதல் தலையாய கடமையென நான் வலியுறுத்துவேன். இவை ஆக்கப் பணிகள்--அன்புப் பணிகள்!' எனக் கூறிய தேவகுரு மீதமிருந்த தேநீரைப் பருகலானார்.

'இந்திய நிலைப்பாடு மிகவும் கவலை தருவதாக இருக்கிறது அண்ணை. 'நன்மைசெய்யப் பிறந்த நீ நன்மை செய்யாது விடினும் தீமையாவது செய்யாதிருப்பாயாக' என்கிற தத்துவம் பிறந்த மண்...லட்சக் கணக்கான பிரதிகள் விற்பதாகப் பீத்திக் கொள்ளும் பத்திரிகைகள்கூட தாயகப் போரினைக் கொச்சைப்படுத்தும் வகையில் தலையங்கங்கள் எழுதுவது மிகவும் சோகமானது...' என்று தன் மனசினை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு சந்தேகத்தினை ரகு கேட்டான்.

'இந்திய நிலைப்பாடு மிகவும் தெளிவானது. ஈழத் தமிழர்களுடைய அன்றைய அரசியல் தலைவர்களே தவறான நம்பிக்கைகளை ஊட்டிவந்துள்ளார்கள். இந்தியத்துவத்துக்கு ஒரு நிலைப்பாடு உண்டு. ஜனத்தொகையாலும், நிலப்பரப்பாலும் தனக்கு வல்லரசு அந்தஸ்துக் கிடைக்க வேண்டும். என்று அது கருதுகிறது. எல்லாவற்றுக்கும் அச்சமும், அறியாமையும், சுயநலமுமே காரணம். இவை இந்திய ஆன்மீக சுத்தத்துக்கு முரணானவை என்பதைச் சின்னத் தனமான புத்தி ஜ“விதத்துவம் உணருவதில்லை. இந்தியாவுக்கு பாகிஸ்தானை நினைத்து அச்சம்; சீனாவை நினைத்து அச்சம்; அமேரிக்காவை நினைத்து அச்சம். ஆன்மீகம் பற்றிப் பேசும் இந்தியா, தாங்க முடியாத ராணுவச் செலவினங்களைத் தாங்கி அணு ஆயுதத் தயாரிப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த அச்சமே காரணம். 'பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம்' என்கிற அவசரங்கூட இந்த அச்சத்தின் அறிகுறியே! 'வங்கதேசம்' தனியாகத் தோன்றுவது பாகிஸ்தானின் வளத்தைக் குறைக்கும் என்கிற கணிப்பின் பிரதிபலிப்பே. மனிதநேயத்தின் வெளிப்பாடு அல்ல. தமிழீழ ஆதரவு இந்திய ஒருத்துவத்தைக் குலைத்துவிடும், இந்தியாவில் பிரிவினைக் கோஷங்களை வளர்க்கும் என்கிற நியாயம் அறியாமையிலே தோன்றியது. காலிஸ்தான் பிரிவினைக் கோஷம், அஸ்ஸாம் பிரிவினைக் கோஷம் எல்லாம் ஈழப் பிரிவினைக் கோஷத்தின் எதிரொலியா? சிங்களத்துவம் என்பது இந்திய விரோதக் கொள்கைதான் என்பதை அறியாத சவலைகள் தில்லியிலே திட்டமிடுகிறார்கள். தெற்கே சுதந்திர ஈழம் தோன்றுவது, நிச்சயான ஒரு நேசநாட்டினை உருவாக்கும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். திம்புப் பேச்சு வார்த்தைகளைச் 'சொதப்பியவர்' ரமேஷ் பண்டாரி. இதிலே சுயநல அக்கறைகள் எவ்வளவு தூரம் புகுந்தன என்பது விசாரிக்கப் பட்டதா? பன்னிரண்டு இலட்சம் ரூபா மதிப்புள்ள வைர அட்டியலை அவருக்குப் பரிசளித்த பின்னணி என்ன? போஃவேர்ஸ் ஊழலைத் திசை திருப்பலாம் என்கிற கணிப்பு எவ்வளதூரம் ஈழப்படையெடுப்புக்குத் தூண்டியது என்கிற சத்திய ஆய்விலே எத்தனை பேர் ஈடுபட்டார்கள்? சிங்கள இனவாத மேட்டிமைகளுக்காகப் போராடி எத்தனை இந்திய ஜவான்கள் உயிரிழந்தார்கள்? இருப்பினும், சிங்கள அரசியல்வாதிகளாலே அவமதிக்கப்பட்டுத்தானே இந்திய ஜவான்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்? இந்த அவமதிப்புகளுக்குப் பின்னரும் சிங்களருக்குச் சாதகமான கொள்கைகளை வகுப்பவர்கள் யார்? ஏன்? இவற்றைப் பற்றிச் சிந்திக்கும் மனச்சாட்சியுள்ள இந்தியர்கள் எத்தனை பேர்? தமிழ் நாட்டிலே வாழும் பிராமணர்கள் திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கத்தினாலும், ஓங்கு பிரசாரங்களினாலும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். அவர்களுடைய அச்சங்கள் அநுதாபத்துடன் விளங்கிக் கொள்ளத் தக்கன, 'வடக்கு மனதே' என்கிற ஆராதனை எவ்வளவு தூரம் அவர்களுடைய பயங்களைகளையவல்லன? இதனை அவர்கள் மானசீகமான புனர் ஆலோசனைக்கு உட்படுத்துதல் வேண்டும். ராஜாஜி இந்திய நாட்டின் முதலாவது ராஷ்ரபதியாக வருவதற்கான சகல தகைமைகளும் கொண்டிருந்தார். ஏன் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது? வெங்கடேஸ்வரன் என்கிற தமிழர் வெளியுறவுச் செயலராக இருந்தார். இலங்கையின் சிங்கள - தமிழ்ப் பிரச்சினையை நன்றாக அறிந்திருந்தார். என் அவர் பகிரங்க அவமதிப்புகளுடன் வெளியுறவுத் துறையிலிருந்து தூக்கியெறியப்பட்டார்? தமிழ் நாட்டின் பிராமண மூளைகளை வடபுலத்து அரசியல்வாதிகள் கறிவேற்பி€லைகளாகக் கருதுகிறார்களா? இவற்றை எல்லாம் சத்தியமான மறுபரிசீலனைக்கு உட்படுத்த வல்ல புத்திஜ“விகளும் பத்திரிகையாளரும் தமிழ் நாட்டுப் பிராமணர் மத்தியில் இல்லையா? இத்தகைய எத்தனையோ கேள்விகளுக்கு விடை தெரியாது தவிக்கின்றேன். இந்திய நிலைப்பாடு சம்பந்தமாக விடை கிடைக்காத இன்னும் பல கேள்விகளை இந்தச் சந்தர்ப்பத்திலே உங்களுக்குச் சொல்லி விடுகின்றேன். இந்திரா அம்மையார் மூத்தவன் ரஜ“வ் இருக்க, ஏன் இளையவன் சஞ்சேயை அரசியலுக்குக் கொண்டு வந்தார்? இந்திரா அம்மையாரின் அவசரகால ஆட்சியிலும், அதனைப் பின் தொடர்ந்த கெடுபிடி ஆட்சியிலும் ரஜ“வ் எங்கே இருந்தார்? அவருடைய அரசியல் நிலைப்பாடு என்ன? சஞ்சேய் உயிருடன் இருக்கும் வரையிலும், ரஜ“வ் அரசியலுக்கு லாயக்கற்றவர் என்பதுதானே இந்திரா அம்மையாரின் நிலைப்பாடு? மகாத்மா காந்தியின் கொலையிலே தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்? அவரைக் கொலை செய்யச் சதிசெய்த அரசியல் இயக்கம் இன்றும் தடை செய்யப்பட்டிருக்கின்றதா? இந்திரா காந்தியின் கொலையிலே தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? ரஜ“வ் கொலையினை புலி இயக்கத்துக்கு எதிரான கால் நூற்றாண்டு பிரசாரத்திற்கு அடித்தளமாக அமைதல் வேண்டும் எனத் திட்டமிட்டது யார்? அதிலே தமிழ் ஜனாதிபதியான வெங்கட்ராமனுக்கு எவ்வளவு பங்குண்டு? ஏன் ரஜ“வ் காந்தியின் கொலை சம்பந்தமாக ஒரு 'Mani Mass Massacre' நடத்த அதிகாரிகளும் நீதித்துறையும் கச்சை வரிந்து நிற்கின்றன? காந்தி பெயரால், நேரு பெயரால், அம்பேத்கார் பெயரால், இந்திரா பெயரால், கட்சிகள் தோன்றவில்லை. ஏன் ரஜ“வ் பெயராலே ஒரு கட்சி--அது Letter - Pad கட்சியே யாயினும் - நடத்தப் படுகின்றது? விதவை சோனியா காந்தி, நேரு அரச பரம்பரையின் சட்டப்பூர்வமான வாரிசு தானே என்கிற உர்மை கோரலுடன் புயல்வேக அரசியற் பிரசாரங்கள் செய்கின்றார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் ரஜ“வின் மரணவீட்டுச் சோபிதங்கள் கலைக்காமல் பாதுகாக்கப்படுகின்றன. இது ஏன்?'

'அண்ணை, நீங்கள் கேள்விகளாக அடுக்குகின்றீர்கள். நாங்கள் எங்கே பதில் தேடுவோம்?' என்று கேட்டு அர்ஜுன் சிரித்தான்.

'இந்திய நாட்டின் அரசியல் ஆரோக்கியத்திற்காக இந்தியக் குடிமக்களே சரியான விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் அறிவு நாகரிகம். அல்லையேல், அதிகப் பிரசங்கித்தனமாகிவிடும். ஈழத்தமிழர்களுக்கான நிலைபாடுகள் பற்றி தமிழ்நாட்டின் பத்திரிகையாளர் சிலர் முடிவுகள் அறிவிக்க முந்திரிக் கொட்டைகளாக முந்தி நிற்பது எனக்கு எரிச்சலைத் தருகின்றது. ஆனால், அதே தவறினை நானே செய்ய விரும்பவில்லை. ஆனாலும், ஒன்று. மத்திய அமைச்சர்களின் சந்திரிகா தழுவலை விளங்கிக்கொள்ள முடிகிறது. அடுத்த வீட்டிலே வாழும், ஆயுதங்களைத் தொடாத அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். 'இது அவனுடைய வீட்டுச் சண்டை; இதில் நாங்கள் தலையிடக்கூடாது' என்று தர்மம் பேசப்படுகின்றது. அடிவாங்கிறவனுடைய உடல் ரணங்களும், மனக்காயங்களும் மறக்கப்பட்டுவிட்டன. அடிக்கிறவனுடைய கைகளிலே சுளுக்கு ஏற்பட்டால், என்ன மருந்து கொடுக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகின்றது. இந்த நூற்றாண்டின் இந்த மகா சோகம் அடுத்த ஆண்டிலும் நீளும் போலவும் தோன்றுகின்றது. புத்தர்-மகாவீரர்-இராமகிருஷ்ணர்-காந்திஜ“ ஆகியோர் வளர்த்தெடுத்த அன்பு தர்மத்துக்கு என்ன நடந்தது? எத்தகைய இந்தியா! ஒவ்வொரு ஈழத்தமிழனும் தனது அறங்களினதும், அன்புப் பண்பாடுகளினதும் வற்றாத ஊற்றாகச் சம்பாவனை செய்யும் இந்தியா! அந்த மண்ணிலே பாதம் படுவதுதான் வாழ்க்கையின் உச்சப் புண்ணியம் என வணங்கப்பட்ட இந்தியா! அந்தப் புனித மண் எப்பொழுது தொடக்கம் மனித நேயத்தை இவ்வாறு கால்களின் கீழே போட்டுத் துவம்சம் செய்யப் புறப்பட்டது? ஏன்? என் அப்பாவும்-அம்மாவும் சிதம்பரத்தையும் காசியையும் ஒரு தடவை தரிசித்த பின்னர்தான் தமது உயிர் பிரிய வேண்டும் என்று ஆசை ஆசையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய அற்புத புண்ணிய பண்புகளை இந்திய மண்ணிலே கவிய வைத்த அந்த புண்ணியர்களும் பரமஹம்ஸர்களும், மகாத்மாக்களும், மாமனிதர்களும் எங்கே?... தம்பிமாரே, நீங்கள் நம்பமாட்டீர்கள். இந்திய மண் எவ்வாறு, எப்பொழுது மானிட நேயத்தைத் தொலைத்தது என்று விடிய விடிய யோசித்து மனம் கலங்கிய இரவுகள் ஏராளம்...' என்று கூறி, தேவகுரு நிறுத்தினார்.

அவர் குரல் கம்மின்று.

அடர்ந்த நிசப்தம் பரவியது.

'எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். பிழையான விளங்கங்களுடன் நாங்கள் துள்ளிக் குதித்துள்ளோம் என்பதைத் தெளிவாக உணருகிறோம்...' என்றான் அர்ஜுன்.

'நாங்கள் எந்தெந்த வழிகளிலே உபயோகமாகச் செயற்படலாம் என்று நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும்...' என்றான் அமுதன்.

'உங்களிடம் நாங்கள் படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது. வீட்டுக்கு வந்து தொந்தரவு தருவோம்' என்று ரகு அன்புடன் எச்சரித்தான்.

'எந்த நேரமும் வரலாம். ஞானத்தின் கதவும், அன்பின் கதவும் எப்பொழுதும் திறந்து வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். உங்களோட இவ்வளவு நேரமும் கதைச்சது மகிழ்ச்சியாக இருக்கிறது...'

தேவகுரு எழுந்து நடக்கத் துவங்கினார்.

சற்குணமும், இளைஞர்களும் உடன் வந்தார்கள்.

13

வார்டோ அமைதி அநுபவித்தது.

இந்த அமைதி தமிழருக்குச் சந்தோஷத்தை அளித்தது.

கொஞ்சக் காலமாக எல்லாப் பிரச்சினைகளையும் மறந்து தங்களது வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழர்கள் நிம்மதியாக இருப்பது ஜோனுக்குப் பிடிக்கவில்லை. தமிழர்கள் மனதில் நீங்காத பயத்தை ஏற்படுத்த வேண்டும்; அந்தப் பன்றிகளை நோர்வேயிலிருந்து கலைக்க முடியா விட்டாலும், வார்டோவிலிருந்து விரட்டியடிக்க முடியும் என அவன் நம்பினான்.

போலிஸ் தலையீட்டுக்குப் பின்னர், இரண்டு மூன்று தடவைகள் அந்த நால்வரும் இரகசியமாகச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உருப்படியான புதிய திட்டம் எதுவும் தீட்டவில்லை. ஜோன் அவர்களுடைய குழுவிலே இருந்த போதிலும், தனியாகச் செயற்படுவதே பாதுகாப்பானதாக அவனுக்குத் தோன்றியது. தான் தனித்துச் செய்த காரியம் இதுவரையிலும் அம்பலமாகாதது அவனுக்கு மேலும் துணிச்சலைக் கொடுத்தது. இன்னுமொன்றை நன்கு திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

இப்பொழுது கோடை காலம். இரவைப் பகலாக்கிக் கொண்டு சூரியன் எப்பொழுதும் காவலாய் நின்றது. எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. செய்யப் பயமாகவும் இருந்தது. ஜோன் ஒருவாறு தன்னைச் சமாதானம் செய்தான். செய்வதைப் பிடிபடாமல் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டான். அதற்கு இது உகந்த காலம் அல்ல என்பது புரியவே, காலம் கனிவதற்காகக் காத்திருந்தான்.

கோடை முடிந்து, குளிர்காலம் துவங்கியது. நாள் முழுவதும் எட்டிப் பார்க்கவே விரும்பாதவனைப் போல சூரியன் தெற்கே சென்றுவிடுவான். இந்த இருட்டும் குளிரும் பலருக்கு-குறிப்பாகத் தமிழர்களுக்கு - வேதனை தந்தாலும், ஜோனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்தத் தமிழ்ப் பன்றிகளுக்கு அதிர்ச்சியும் அச்சமும் ஊட்டுவதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் என நினைத்தான். ஜோன் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டான். தன்னைப் போலிஸ’லே மாட்டிக் கொள்ளாமல் பாதுகாக்கும் அளவுக்குச் சிந்தித்துச் செயலாற்றினான்.

விமானம் எடுத்து சிக்கனெஸ் சென்றான். அங்கு சாஸ் ஹோட்டலில் அறை எடுத்தான். ஆள்மாறாட்டம் செய்யக் கூடிய பத்திரத்தைக் காட்டு எடுத்த சாரதிப்பத்திரம் அவனிடம் இருந்தது. அந்தப் போலிப் பத்திரங்களைக்காட்டி, கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தான். திரும்பி இங்கே வந்து கொண்டிருந்தபொழுது, அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. பனி அதிகம் கொட்டியிருக்கவில்லை. கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். காற்றும் மூர்க்கமாக வீசவில்லை. மலைக்குச் சென்று விட்டு இரவு ஒரு மணிக்கு நகருக்குள் செல்லலாம் என எண்ணிக் கொண்டான். அவன் மலைக்குச் சென்றான். காரைச் சிறிய வீட்டின் பின்புறத்திலே நிறுத்தினான்.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான். அவனுக்கு களைப்பாக இருந்தது. விறகுகளை எரியப் போட்டுவிட்டுப் படுத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவன் தன்னை மறந்து தூக்கத்தில் ஐக்கியமானான்.

கோகிலா காதைப் பொத்திய வண்ணம் அழத் துவங்கினாள். நேரம் செல்லச் செல்ல, அழுகை கூடிக் கொண்டே சென்றது. நித்தியாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. முதலில் காதை மெதுவாகத் துடைத்தாள். துடைத்து முடிப்பதற்குள் பெரும் பாடாகிவிட்டது. தொடவிடவே இல்லை. பெரும் கஷ்டப்பட்டே துடைத்தாள். மாலதி உதவிக்காக கோகிலாவைப் பிடித்துக் கொண்டாள். காதுக்குள் துடைப்பதற்குள் நித்தியா பயந்தாள். மெதுவாகப் பயந்து பயந்தே துடைத்தாள்.

துடைத்து முடித்தபொழுது நித்தியா களைத்துப் போனாள். கோகிலா இன்னமும் அழுதுகொண்டே இருந்தாள். சிறிது நேரத்தில் எல்லாம் மாறிவிடும் எனக் கூறிய சமாதானம் அவளிடம் பலிக்கவில்லை. காதைப் பொத்திய வண்ணம் இன்னமும் வலியால் துடித்தாள். நித்தியாவுக்குப் பொறுக்க முடியவில்லை. அந்தப் பிஞ்சு வேதனைப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது நரகமாய்த் தோன்றியது.

நித்தியா தேவகுருவுக்கு போன் செய்தாள்.

'நான் நித்தியா.'

'ஓ, நான்தான். என்ன விஷயம்?'

'கோகிலா வலியால் துடிக்கிறாள்.'

'அவளுக்கு என்ன?'

'காதைப் பொத்திக் கொண்டு வலியால துடிக்கிறாள்.'

'துடைச்சியே? உப்புத் தண்ணி ஏதாவது விட்டனியே?'

'நான் துடைச்சன். அவள் இன்னமும் வலியால துடிக்கிறாள். உப்புத் தண்ணி விட்டா டொக்டரிட்டைப் போகேக்க பேசினாலும் பேசுவாங்கள். எனக்குப் பயமா இருக்குது. வாறியளே?'

'இதுக்குப் பயந்து கொண்டு...'

'பிளீஸ்...'

'சரி நான் வாறன். நீ அவளை வெளிக்கிடுத்து...'

போமனிடம் போய் விடயத்தைச் சொல்லி, அவசர அவசரமாகப் புறப்பட்டு வீட்டுக்குச் சென்றார். உள்ளே நித்தியாவும் மாலதியும் கோகிலாவை வெளிக்கிடுத்தப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

தேவகுருவைக் கண்டதும் கோகிலா இன்னும் வீறிட்டுக் கத்தினாள். அவர் அவசரமாகக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டார். மீன் நாற்றத்தைக் கழுவிவிட்டு வந்த போதும், கோகிலாவின் கதறல் நிற்கவில்லை.

நேரத்தைச் சுணக்காது, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். மருத்துவர் உடனே பார்க்கவில்லை. காத்திருக்க நேர்ந்தது. மருத்துவர்களுக்கு அதிக வேலை இருந்திருக்க வேண்டும். அங்கும் இங்கும் ஓடித் திரிந்தார்கள். கோகிலா செய்த ஆர்ப்பாட்டங்களைப் பார்த்த பின்னர்தான், மருத்துவர் கவனம் கிட்டுவதாயிற்று. அவளைப் பார்வையிட்ட மருத்துவர், அவளுடைய காதுக்குள் ஏதோ திரவத்தை ஊற்றினார். வைத்தியம் அவ்வளவே. நித்தியாவுக்குத் திருப்தியில்லை. 'உங்கள் வைத்தியம் திருப்திதரவில்லை' என்று சொல்ல முடியுமா?

வீடு திரும்பினார்கள்.

கோகிலா அவர்களைப் படுக்கவிடவில்லை.

இரவு பன்னிரண்டு மணி. கோகிலா அழுவதை நிறுத்தவில்லை. அவளைத் தேற்ற எடுத்த முயற்சியில் நித்தியா களைத்துப்போனாள். அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஏதாவது செய்தே ஆக வேண்டும். லார்ஸ”க்கு போன் செய்வோமோ என முதலில் எண்ணியவர், அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். வழமையாக இரவில் தொடர்பு கொள்ளும் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயன்றார். அப்பொழுதும் ஒரு பெண் மருத்துவருடன் மோபைல் போனில் தொடர்பு கொள்ள முடிந்தது. தேவகுரு நிலைமையையும் அதன் கடுமையையும் விளங்கப்படுத்த, மறுமுனை உடனே புறப்பட்டு வருமாறு கூறியது.

மாலதி நன்றாகத் தூங்கிவிட்டாள். நேரத்தைப் பார்த்தார். பன்னிரண்டு நாற்பது. அவள் தூங்கினால், எழுப்ப முடியாது. அணுங்கிக் கொண்டும் சிணுங்கிக் கொண்டும் அவதிப்படுவாள். தூக்கத்திலே எழும்பும் வழக்கம் அவளிடம் கிடையாது. அவளை எழுப்புவதா விடுவதா என்று தேவகுரு சங்கடப்பட்டார்.

'மாலதியை எழுப்ப வேண்டாம். அவள் தூங்கட்டும். நாங்கள் சுறுக்கா வந்திடலாம்தானே?" என்று நித்தியா சொன்னாள்.

மருத்துவமனையில் இப்பொழுது ஒரு -ண் மருத்துவர் இருந்தார். அவர் கோகிலாவைக் கனிவோடும் கவனத்தோடும் பரிசீலனை செய்தார். காதைச் சுத்தப்படுத்தி, மீண்டும் ஏதோ மருந்தினைப் போட்டார். இரண்டு வகைக் குளிசைகளைக் கொடுத்துடன், தன் கைப்படவே ஒவ்வொன்றை உடனே விழுங்கச் செய்தார். ஒன்று நித்திரை குளிசையாக இருக்க வேண்டும். கோகிலா களைத்துப் போனாள். குளிசைகளை விழுங்கியதும் தூங்கத் துவங்கினாள். அவள் வேதனை துறந்து துங்குவது நித்தியாவுக்கு ஆறுதல் தந்தது.

லார்ஸ் கூறியவற்றிலிருந்து தேவகுருவின் ஊழியத்தைப் பற்றி அந்தப் பெண் மருத்துவர் அறிந்திருந்தார். அவரைப் பார்க்கவும் விரும்பியிருந்தார். பார்ப்பதற்கு வேறு நோயாளிகளும் இருக்கவில்லை. எனவே, அவர் தேவகுருவுடன் ஆறுதலாக உரையாடினார். லார்ஸ”டன் சேர்ந்து தானும் நிறவெறிக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட விரும்புவதாகவும் கூறினார். அவர்களுடைய பேச்சு காந்தியம் பற்றியும் திரும்பியது. நேரம் போவது தெரியாமல் மருத்துவரும் தேவகுருவும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நித்தியா அவர்களுடைய உரையாடலில் குறுக்கிடவில்லை.

நேரத்தைப் பார்த்த நித்தியா திடுக்குற்றாள். மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிவிட்டது.

'மாலதி நித்திரையால எழும்பினால், பயந்து அழுதாலும் அழுவாள்...'

'ஓ...ஓ...சுறுக்காப் போவம்.'

'உங்களுக்கு விருப்பமான கதை கிடைச்சோடனை எல்லாத்தையும் மறந்து போனியள்...'

மருத்துவர் விளங்காது விழித்தார். நாகரிகம் கருதி, தங்களுக்கிடையில் நடைபெற்ற உரையாடலின் பொழிப்பினை நொக்ஸ’லே சொன்னார்.

'ஓ...சொறி. பிள்ளையைத் தனிய விட்டுட்டு வரக்கூடாது...'

'அவசரத்தில் வேறு வழியும் தெரியவில்லை...'

'விரைவில் வீடு போய்ச் சேருங்கள்...காத.'

'காத.'

ஜோன் தான் தயாரித்து எடுத்த பெற்றோல் குண்டுடன் காருக்குள் ஏறிய பொழுது, நேரம் ஒன்றேகால் இருக்கும். கையுறை போட்டு கொண்டான்.

வெளியே இருட்டாக இருந்தது. வீதியில் நடமாட்டமும் இல்லை.

தான் தயாரித்த குண்டினை யார் வீட்டில் எறிவது என்பது பற்றி பகல் பொழுதே தீர்மானித்திருந்தான். 'இந்தப் பன்றி ஒன்றுதான் எல்லாத் திட்டங்களையும் கெடுக்கிறது. இவன்ர பேச்சை நம்பித்தான் எங்கட பிசாசுகள் சிலவும் அவனோட சேர்ந்து கூத்தாடுதுகள். இந்தப் பன்றி இல்லாவிட்டால், தமிழர்கள் கொதித் தெழுந்து ஏதாவது செய்வார்கள். அப்ப எங்கள் சனத்திடமிருந்து தமிழ்ப் பன்றிகளைப் பிரிக்கலாம்...எங்கள் பிளான் வேலை செய்யும்...' என்று தீர்மானித்திருந்தான்.

'இப்பொழுது நல்ல தூக்கத்திலே படுத்துக் கிடப்பான். இந்தக் குண்டு நல்ல பவர்வுள். தனித் தயாரிப்பு. சட்டென்று பற்றி எரியும். எங்கும் ஓடமுடியாது. இந்த அரைக் கிழட்டுப் பன்றி தப்ப முடியாது. இத்தோடு இந்தப் பன்றிக் கூட்டம் ஓடித் தொலையும்...' இப்படி மனசுக்குள் எண்ணிய வண்ணம் ஜோன் காரை ஓட்டினான்.

வீடு வந்துவிட்டது. அது தேவகுருவின் வீடுதான். இவருடைய தலைமை உடைய வேண்டும் என்பதில் ஜோன் குறியாய் இருந்தான். முழுக் குடும்பமும் உள்ளே தங்கியிருக்கும் என எண்ணிக் கொண்டான். ஏனோ அவனுக்குப் பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது. மறுகணம், நிறவிரோத வெறி அவனை ஆட்கொண்டது.

காரை நிறுத்தியதும் முகமூடியை விறுவிறு எனப் போட்டுக் கொண்டான். பாய்ந்து இறங்கினான். கொண்டு வந்திருந்த இரும்புக் குழாயால் தூர நின்றே சமையல் அறைக் கண்ணாடியை ஒரு தட்டுத் தட்டினான். பெரிய ஓட்டை சமைந்தது. மீதிக் கண்ணாடிகள் குத்திக் கொண்டிருந்தன. இரவின் நிசப்தத்தில் சத்தம் பெரிதாக ஒலித்ததாகத் தோன்றியது. அதைப் பற்றிக் கவலை இல்லை. பெற்றோல் குண்டைக் கொளுத்திச் சமையல் அறைக்குள் இருந்த அடுப்பை நோக்கி எறிந்தான். போத்தல் சிதற கபகப என நெருப்புப் பற்றியது. ஜோன் காரை வேகமாக்கினான். இவற்றை எல்லாம் ஒரு முப்பது செக்கனுக்குள் செய்து முடித்திருப்பான். இதனைக் கச்சிதமாக முடிப்பதற்கு அவன் யாருக்கும் தெரியாமல் பலநாள் பயிற்சி செய்து பார்த்திருக்கிறான்.

எல்லாமே முடிந்த பிறகுதான் ஒன்றைக் கவனித்தான். அந்தப் பன்றியின் காரைக் காணவில்லை. அது அவனுக்கு உறைத்தது. இனி மினக்கெடுவது ஆபத்து. ஜோன் அதற்கு மேல் நகருக்குள் நிற்கவில்லை. அவனுடைய கார் அதிவேகத்தில் சிக்கனெஸ் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

வீடு கபகப வெனப் பற்றிக் கொண்டு எரிந்ததால் பக்கத்து வீடுகள் விழித்துக் கொண்டன.

தீயணைப்புப் படைக்கு அறிவித்ததும், சில நிமிடத்தில் தீயணைப்புப் படையும் காவலர்களும் தலத்துக்கு விரைந்து வந்தார்கள்.

வீட்டுக்கு அருகே நெருங்க முடியாதவாறு நெருப்பு மிளாசி எரிந்தது. உள்ளேயிருந்து படபடவென வெடிக்கும் ஓசை கேட்டது. விட்டிற்குள் யார் இருக்கிறார்கள் என்பது புரியாது இருந்தது. இருந்தும் தீயணைப்புப் படை வீரர்களுள் இருவர், உள்ளே, மறுகரையால் கண் இமைக்கும் நேரத்திற்குள் புகுந்து கொண்டார்கள்.

கோகிலா தூங்கிப் போனாள். 'அவளைப் படுக்க வைக்க வேண்டும்; எப்பொழுது வீட்டுக்குப் போவோம்' என நித்தியாவின் மனசு துடிக்க, தேவகுரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் மருத்துவர் பேசியவற்றை அவர் மனசு அசைபோட்டது. இன-நிற பேதங்களுக்கு எதிராக, நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் வளர்ப்பதற்காகத் தாம் எடுத்த எத்தனங்கள் நோர்வே மக்களிடம் வரவேற்கப்படுதல் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அந்த விபரீதத்தினை முதலில் உணர்ந்தவள் நித்தியாதான்.

'அங்க பாருங்கோ, எங்கட வீடு பற்றி எரியுது' என்று நித்தியா கத்தினாள்.

வீட்டுக்கு முன்னால், மக்களின் பாதுகாப்புக் கருதி, போலிஸார் தடைகள் எழுப்பி இருந்தார்கள். எங்கும் நெருப்பும் அதன் ஜுலையும்! தீயணைப்புப் படையினர் மேலெழும் தீநாக்குகளை அடக்கத் தண்­ர் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

தேவகுரு காரை நிறுத்தி, வீட்டை நோக்கி ஓடினார். கோகிலாவைக் காருக்குள் கிடத்திவிட்டு, நித்தியா அவர் பின்னால் ஓடினாள். வீடு எரிவதைப் பார்த்து அதிர்ந்த அவள், உள்ளே மாலதி படுத்திருக்கிறாள் என்கிற நினைவு பளிச்சிடவே, நிக்பிரமை பிடித்தவள் போலானாள்.

'ஐயோ, என்ரை பிள்ளை மாலதி வீட்டுக்க. ஓடுங்கோ...ஓடுங்கோ...அவள் இல்லாட்டி நான் செத்துப் போயிடுவேன்...' என்று கூச்சலிட்டாள்.

உள்ளே நுழைந்திருந்த தீயணைக்கும் படைவீரர்கள் இருவர் மாலதியைத் தூக்கிக் கொண்டு, நெருப்பைப் பிளந்து வெளியே வந்தார்கள். உடனடியாக வெளியே காத்துநின்ற அம்புலன்சில் ஏற்றினார்கள். பிள்ளையைப் பார்க்கத் திமிறிய நித்தியாவையும், தேவகுருவையும் போலிஸார் பிடித்துக் கொண்டனர்.

'நேரம் முக்கியம். நீங்கள் மருத்துவமனையிலே சென்று பார்க்கலாம்...' என்று அவர்கள் சமாதானம் கூறினார்கள்.

எரியும் வீட்டுக்கு முன்னால் நிறைய ஆள்கள் கூடிவிட்டார்கள். தமிழர்கள் நின்றார்கள். நோர்வேயரும் நின்றார்கள். எரியுண்ட பிள்ளையின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்வதற்கான வார்த்தைகளைத் தொலைத்து விட்டவர்களைப் போல அவர்கள் மௌனமாகவே நின்றார்கள்.

தேவகுரு காருக்கு விரைந்தார். நித்தியா பின் தொடர்ந்தாள். இருவரும் காருக்குள் ஏறிகொண்டார்கள். அவருடைய கார் மறைந்து விட்ட அம்புலன்சைத் தொடர்ந்து, மருத்துவ மனைநோக்கி விரைந்தது.

தீயணைப்புப் படை தீயிலிருந்து கட்டடத்தை மீட்கும்போரிலே ஈடுபட்டிருந்தது.

'எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...உங்கள் பிள்ளைக்கு எங்களாலே உதவ முடியவில்லை...'

அவர்களைப் பார்த்து மருத்துவர் சொன்னார்.

'என்ன?'

'அனுமதிக்கும் பொழுதே உயிரில்லை...'

'ஐயோ, இல்லை...என்ரை மாலதி உயிரோடு இருக்கிறாள்! இவர் என்ன சொல்லுறார்?' என்று நித்தியா கத்திய வண்ணம், தேவகுருவின் சேட்டைப் பிடித்து உலுக்கினாள்.

எதனையும் ஏற்க முடியாது தேவகுரு சிலையாக நின்றார். அந்தச் சிலையின் கண்கள் மட்டும் கசிந்து உருகிற்று...

14

ரகுவுக்கு ஏன் தேவகுரு அண்ணன் தன்னை அழைத்திருந்தார் என்று புரியவில்லை. அவர் குளித்துக் கொண்டிருப்பதாக நித்தியா சொன்னாள். அவனைக் கதிரையில் அமரும்படி கேட்டுக் கொண்டாள். அவன் அமர்ந்து, நித்தியாவைப் பார்த்தான். அவ உருவந் தெரியாது போய் விட்டதாக அவனுக்குத் தோன்றியது. மாலதி வாழ்ந்த காலத்தில், அவள் ரகுவைக் கண்டதும் 'மாமா' என்று அழைத்துக் கொண்டு மடியில் வந்து அமர்ந்து கொள்ளுவாள். இன்று...? கோகிலா தரையில் இருந்து தனிமையில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் போட்டி போட யாரும் இல்லை. சண்டை போட யாருமில்லை. வாழ்க்கையின் கலகலப்பில் சண்டையும் ஒரு பகுதியா?

'எப்பிடியக்கா இருக்கிறியள்?'

'ஏதோ இருக்கிறம்.'

'ஊருக்குப் போகப்போறதாகச் சொன்னியள்...'

'சொன்னன்.'

'ஏன்? அண்ணருக்கு விரும்பமில்லையோ?'

"விருப்பமில்லை' எண்டு ஒரு வசனத்தில சொன்னா விளங்கும். அவர் ஏதேதோ சொல்லுறார்...'

'என்ன சொல்லுறார்?'

அப்பொழுது தேவகுரு குளியலறையிலிருந்து வந்தார்.

'இந்தா, அவரே வந்திட்டார். அவரிட்டையே கேட்டுத் தெரிஞ்சு கொள் தம்பி...நான் இரண்டு பேருக்கும் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்...' என்று கூறி, நித்தியா குஷ’னிப் பக்கம் சென்றாள்.

'ஏன் அண்ணை...'என்று ரகு இழுத்தான். அவன் என்ன கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்தது. விளையாடிக் கொண்டிருந்த கோகிலாவைத் தூக்கி ஆதரவுடன் தமது மடியிலே வைத்துக் கொண்டார்.

'மாலதியை இழந்து அக்கா உக்கிப் போனா...எனக்கு விளங்குது. இத்தகைய இழப்புகளை கால ஓட்டத்திலேதான் மறக்கப் பழகவேணும்...உணர்ச்சிகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து எடுத்த முடிவுகளாலே நான் அடைந்த துன்பங்கள் பல...பக்குவமின்மை காரணம். ஆனால், இப்பொழுது உண்மையிலே உறுதி பூண்டு வாழ விரும்புகிறேன்...இது என் வழி. என் வழிதான் சரியென்று நான் நித்தியா மீது திணிக்கவும் மாட்டேன்...என் மனைவி சுயாதீனமானவள். அதனை அங்கிகரிக்கும் பொழுதுதான் என்னால் முழு மனிதனாகவும் வாழ ஏலும்...'

'அக்கா என்ன சொல்லுறா?'

நித்தியா இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து பரிமாறினாள்.

'தம்பி ஏதோ கேட்கிறான், நீ சொல்லு...'

'நான் என்னத்தைச் சொல்லுற தம்பி? பொத்திப் பொத்தி வளர்த்த ஒரு குஞ்சை இந்த நாட்டில பறிகொடுத்திட்டு இருக்கிறன்...இவள் கோகிலாவை ஆதல் நல்ல முறையில் வளர்ப்பது எண்டுதான்...'

'எங்கபோய் வளர்க்கப் போறியள்?'--ரகு ஆவலுடன் கேட்டான்.

'முதலில இந்தியவில--தமிழ் நாட்டில--போய் வாழலாம் எண்டு சொன்னனான்.'

'ஓம் அக்கா...ஒஸ்லோவிலுள்ள ஐஞ்சாறு பேர், ஏன் டொன்மார்க்கிலுள்ள மூன்று நாலுபேர் மனைவிகளையும் பிள்ளைகளையும் அங்க வாழும்படி விட்டிட்டு, இங்க இருந்து இவையள் காசு அனுப்பிக் கொண்டிருக்கினம்...பெடியளும் நல்லாப் படிக்கிறதாச் சொல்லுகினம்.'

'நான் அதுக்கு மறுப்புச் சொன்னனானே?...விருப்பம் எண்டாக் கொண்டுபோய் விட்டிட்டு வாறன் என்று சொன்னனான்.'

'பிறகு என்னக்கா?'

'இவர் இங்க தனிய இருந்து கஷ்டப்பட வேணும். குளிரை உறிஞ்சிக் கொண்டு வேலை செய்யவேணும். மாசாமாசம் பணம் அனுப்பவேணும். நான் பிள்ளையை வளர்க்கிறன் எண்ட சாட்டிலை அங்க சோக்குப் பண்ண வேணும். இது எனக்கு வேண்டாம். கஷ்ட--நஷ்டம், இன்பம்--துன்பம் என்கிற எல்லாத்தையும் ஒன்றா இருந்து அநுபவிக்க வேணும் தம்பி. 'நீங்கள் உங்கட பாட்டை இங்க பாரு7ங்கோ' என்று சொல்லி, நான் போகத் தயாரில்லை. குடும்ப வாழ்க்கையில், சாகும் வரை கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சில மனைவிக்கு உண்டு. நான் பழங்காலத்தவளாகச் சிந்திக்கலாம். என்ரை கடமைகளையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க மாட்டன்...அதை நான் வடிவாச் சொல்லிப்போட்டன்...'

'உங்களையும் கூட வரட்டாம். அதுதான் விஷயம்...'

'இதிலைதான் பிரச்சினை இருக்குது. உலக நாடுகளை எடுத்துக்கொள். மனித உரிமைகளின் அடிப்படையிலும், மனித நேயக் காரணங்களுக்காகவும் நம்மவர்களுக்குப் பல நாடுகளில் அகதி வாழ்க்கையும், பின்னர் குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. நாகரிக உலகம் கடைப்பிடிக்கும் பொது விதி இது. ஆனால், இந்தியா? தமிழ் நாடு? ஒவ்வொரு ஈழந்தமிழனையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். ஆதாரங்கள் எதுவுமின்றி 'புலி ஆதரவாளன்' என்று சீல் குத்தி வதைக்கின்றார்கள். புலி எதிர்ப்பே பத்திரிகா தர்மமாகியுள்ளது. அது அரசாங்க ஊழியர் பலருக்கு நினைத்தவுடன் பால் கறக்கும் காமதேனுவாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு நாற்காலிகளைத் தக்க வைக்கும் அரசியலே சாணக்கியமாகியுள்ளது. 'வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு' என்று வீர சினிமா வசனம் பேசிய மண், இன்று அகதிகளுக்கு நரகலோகம் அமைக்கும் மாயாபஜாராகியுள்ளது. ஒரு காலத்தில் தமிழ் நாட்டு மண்ணின் விருந்தோம்பலைச் சுகித்தவன் நான். அதனை மறந்து நான் பேசவில்லை. ஆனால், இன்று என் சுய கௌரவங்கள் அனைத்தையும் சரணாகதியாக்கி, தன்மான உணர்வுகள் அனைத்தையும் சோரம்போக்கி, பாராமுகம் காட்டும் ஓர் அந்நிய மண்ணிலே, தினம் தினம் அவமதிப்புகளைச் சந்தித்து வாழ நான் தயாராக இல்லை...என் வாழ்க்கையின் சத்தான பகுதியை என் குடும்பத்தின் மேன்மைக்காகச் செலவு செய்யத் தயார். ஆனால், என்ன விலையில்? இதுதான் ரகு கேள்வி...'

'தம்பி ரகு, நான் இவன்ரை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுகின்றேன். இப்ப கொழும்விலை பிரச்சினையில்லை என்று சொல்லுகினம்...அங்க போய் வாழ்றதுக்கும் இங்க சிலபேர் அடுக்குப் பண்ணுகினம் என்று கேள்வி. இதையும் நான் சொல்லிப் பார்த்தனான்...'

'சிங்களவங்களோட அண்டலிக்க ஏலாது என்று சொல்லித்தானே நாங்கள் அகதி நிலை கோருகிறம். இல்லையே? அப்ப நாங்கள் பொய்யன்களே? 'ஈழத்தமிழர்கள் அரசியல் அகதிகள் இல்லை; அவர்கள் பொருளாதார அகதிகள்' என்று தானே பிரசாரம் செய்யிறாங்கள். அதை எங்கட செயலால மெய்பிக்க வேணுமே? 1958 ஆம் ஆண்டில், அடிவாங்கி, உத்தரிப்புப்பட்டு, 'இனிக் கொழும்புக்கு வாறேல்ல' என்று சொல்லித்தானே கப்பலேறி யாழ்ப்பாணம் போனனாங்கள்...பிறகு, அவர்களிலே எத்தனைபேர் 'நிலைமை இப்ப சரி' என்று கொழும்புக்குப் போனவர்கள்? அவர்களிலே எத்தனைபேர் கொழும்பிலே வீடு வளவுகள் வாங்கினவை? பிறகு, 1983 இலே இப்படி எல்லாமே பிழைச்சுப் போனது? இன்னும் எத்தனை விஷேத்திலே எல்லாம் பிழைச்சுப் போகும்? இப்ப கொழும்பு நிலை சரி என்பது எத்தனை ஆண்டுகளுக்கு சாஸ்வதமானது? இந்தச் சரியான நிலைக்கு உள்ள அரசியல் உத்தரவாதம் என்ன? போகட்டும்...இலங்கைப் பிரஜா உரிமையை உதறித்தானே, இங்கு குடியுரிமை பெற்றோம்? குடியுரிமை என்பது எங்களுடைய வசதிக்கான ஒன்றா? ஆன்மீகக் கடமைகளை நமது வசதிகளுக்காகவோ, வருத்தங்களுக்காவோ துறப்பது மனித வாழ்க்கைக்கு அழகா? இப்பவும் நான் ரெடி! நாங்கள் வன்னிக் காட்டுக்குப் போய் வாழ்வோம். எங்களுடைய விடுதலை வேட்கையையும் நம்பிக்கையையும் அந்த மண்ணே அடையாளப் படுத்துகின்றது. அங்குள்ள மக்களுடைய இழப்புகள் மிகமிகப் பெரியது. அந்த இழப்புகளின் படுதாவிலே, எங்கள் இழப்புகளுக்கு மன ஆறுதல் தேடுவோம். யாரோவும், யாருடைய பிள்ளைகளும் எங்கள் மண்ணின் விடுதலைக்குப் போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு சுயநலம்? அவர்களுடைய இன்னல்களை மறந்து, புலம்பெயர்ந்த நாடுகளிலே உல்லாசம் கொள்ளுகிறார்களே?...மாலதி இழப்புப் பெரியது. தாங்க முடியாதது. ஆனாலும், ஆர அமர யோசிக்கும் பொழுது, ஈழத்தமிழர் தமது இனத்துவ அடையாளங்களைத் தக்க வைக்கும் நீண்ட போரிலே, தற்கொடை யாளராக வாழும் ஈழத் தமிழ் வீரத்தினை அவள் ஏதோ வகையில் அடையாளப் படுத்துகின்றாள் என்பதை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்...' தேவகுருவின் குரல் கம்மிற்று. மடியிலிருந்து கோகிலாவை இறக்கிவிட்டார்.

அது மாநகர சபை கொடுத்திருந்த வீடு. ஜன்னலை நோக்கி நடந்தார். அதனைத் திறந்துவிட்டார். ஜில்லென்று காற்று உள்ளே வந்தது. அவருடைய நெஞ்சின் வெப்பத்தைக் குறைக்க அந்தக் குளிர் தேவைப்பட்டது போலும்!

நித்தியாயினி, கோகிலாவைக் கட்டியணைத்தபடி, யாருக்கும் கேட்காதவாறு, இரகசியமாக விசும்பிக் கொண்டிருந்தாள்.

வாழ்க்கையென்பது கொள்கைகளுக்கும் பாசங்களுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டமா?

ரகு தேவகுருவைச் சமீபித்தான்.

'நீ எப்படி இங்க வந்தனீ?' என்று தேவகுரு கேட்டார்.

'விக்னேஸ் drop பண்ணினது. ஏன்?'

'இல்லை. நான் உன்னைக் கொண்டுபோய் கீபிளில் விட்டிட்டு வாறன். அக்கா கொஞ்சம் அழுவது அவளுக்கு நல்லது...'

'தேவகுரு அண்ணர் எப்பொழுதும் வித்தியாசமானவர்; தனித்துவமானவர். அவர் கற்பனை உலகிலே வாழ்கிறாரா? அல்லது அவருடைய அற்புதங்களாலும், ஊழியத்தினாலும் புதிய அமைதிகள் தோன்றுமா?' என்று நினைத்தவாறு நின்றான்.

இடையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கோகிலாவை வாரிச் சுருட்டியெடுத்து, நித்தியா படுக்கை அறைக்குள் விரைந்தாள். தேவகுரு நகர்வதற்கு முன்னர், 'நான் திறக்கிறன்' என்று சொல்லி ரகு விரைந்தாள்.

கதவைத் திறந்த பொழுது லார்ஸ் வெளியே நின்றார். ரகு அவரை வரவேற்றான்.

'காய்.'

'காய்.'

'வாங்க உள்ளே.'

'தேவகுரு?'

'இருக்கார்.'

உள்ளே வந்த லார்ஸ் அமைதியாக இருந்தார்.

'நித்தியா எங்கே?' மெதுவாகக் கேட்டார்.

'கூப்பிடவா?'

'வேண்டாம்...மருந்து?'

'நான் அதில் கவனம்.'

'நல்லது. ஏதாவது ஒரு நாட்டுக்குக் குடும்பமாப் போய்வாறது மிகவும்...'

'உங்கள் ஆலோசனைப்படி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறன்...இரண்டு மாசமாவது செல்லும். நித்தியாவின் மச்சாள் ஒருத்தி பிரான்சில் வாழுகிறாள். நாங்கள் பிரான்ஸ”க்கும் போனதில்லை.'

'பிரான்ஸ’ல் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. பார்த்து மகிழக்கூடிய நாடு. ஒரு கேன்ஜ் மிகவும் உதவும்.'

'புரிகிறது டொக்டர்.'

'நேற்றைய டி.வி.நிகழ்ச்சி பார்த்தீர்களா?'

'புண்படுத்துவதாக இருந்தது....'

'எனக்குந்தான். என் மனைவி அதனைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டாள். வெளிநாட்டுக்காரர் கிறிமினல் என்றும், அதனாலேய சுதேச மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள் என்றும் வாதாடுவது மிகவும் அபத்தம். வெளிநாடுகளில் தமிழ் மக்களுக்கு எதிராகத் திணிக்கப்படும் துன்பங்கள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன...'

'எந்த நாட்டிலும் கடுங் கோட்பாளர்களும் இருக்கிறார்கள். இறந்துபோன ஹ’ட்லருக்கு மறு ஜ“விதம் அளிக்கும் முயற்சியும் நடை பெறுகின்றது.'

' நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. ஆஸ்திரி NRK நிலையத்துடன் உடனேயே தொடர்பு கொண்டு பேசினாள். அது மகா மோசமான நிகழ்ச்சி என்று அவள் விமர்சனஞ் செய்தாள். நமது வார்டோ அகிம்ஸை அரங்கு ஒரு மாற்று நிகழ்ச்சியை நடத்த அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதிலே இரண்டு தமிழர்களும் இரண்டு அல்லாதோரும் பங்குபற்றலாம் என நான் விரும்புகின்றேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?'

'நல்லது. ஆனால், விஷய ஞானமுள்ளவர்கள் கலந்து கொள்வது பயனுள்ளது.'

'முற்றிலும் சரி...அதில் நிச்சயமாக நீங்கள் பங்குபற்ற வேண்டும்...'

'என் நொஸ்க் சரளமானதல்ல...'

'மொழியல்ல; சத்தியமே முக்கியம்...இன்னொரு தமிழர் யார்?'

'சற்றே இளமையான குரல் நல்லது...'

'உங்கள் விருப்பம். மூன்றுநாள் அவகாசத்தில் பெயர் தருவீர்களா?'

'ஆம்.'

'இன்னும் ஒன்று.' என்று வாயெடுத்த லார்ஸ், ரகுவின் முன் பேச விரும்பாதவர் போல, தயங்கினார்.

'ரகு நம்பிக்கையானவன்...'

'செல்லக்கண்ணன் வீட்டை எரித்த அதே கோஷ்டிதான் உங்கள் வீட்டையும் எரித்திருக்கலாம் என்று வேக்டால் சந்தேகப்படுகிறார்...'

'அந்தச் சந்தேகம் எனக்கும் உண்டு...அவர்களுடன் நான் பேசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.'

'கிரிமினல் மூளையுடன் செயற்பட்டிருக்கின்றார்கள். உங்களை மதித்து உங்களுடன் பேசுவார்கள் என்று நினைக்கிறீர்களா?...அவர்களுடைய குறி நீங்கள்தான் என்று சந்தேகப்படுகிறேன்...இந்நிலையில்...?'

'உண்மைக்கும் அகிம்சைக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்று நான் நம்புகின்றேன். அவர்கள் அறியாதவர்களாக இருக்கலாம். அவர்கள்கூட தங்களுடைய அறியாமையையும் அச்சத்தையும் புரிந்துகொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கலாம்...'

'தேவகுரு, உண்மையில் நீங்கள் வித்தியாசமான மனிதர். உங்கள் எண்ணங்கள் மிக உணர்வானவை. அனிதா உங்களைப் பார்க்க ஆசைப்படுகின்றாள். ஓய்வு கிடைக்கும்பொழுது வீட்டுக்கு வாருங்கள். டின்னருக்கு வந்தால் மிகவும் மகிழ்வோம்' என்று கூறி எழுந்தார்.

அவருடைய கார் வரை, தேவகுரு மரியாதை நிமித்தம் நடந்தார்.

'ஹலோ, நான் அர்ஜுன்.'

'அண்ணன்தான், சொல்லடா தம்பி...'

'அவங்களை இப்ப பார்த்தனான். வீடும் தெரியும். அது அல்பிரேட் இருக்கிற வீடு. அங்கதான் போனவங்கள்.'

'என்ன செய்யலாம்?'

'உடன போனாக் கதைக்கலாம். இண்டைக்கு வெள்ளிக் கிழமை...குடிக்கத் துவங்கினால், உங்கள் பேச்சைச் செவியிலே ஏத்தமாட்டாங்கள்...'

'எங்கை இருந்து பேசுறாய்? கீபிளிருந்தே?'

'இல்லை. வழியில..பத்து நிமிஷத்தில உங்கட வீட்டில நிற்பன்...'

'அப்பா வா. அதுக்கிடையில நான் கோகிலாவைக் கொண்டுபோய் செல்லக்கண்ணன் வீட்டில விட்டிட்டு வந்திடுறன். அவை வீட்டிலதான் நிற்கினம்.'

'அப்பிடிச் செய்யுங்கோ அண்ணன்.'

'தம்பி, சொல்லுறன் என்று குறை நினைக்கக்கூடாது. நீ ஒன்றும் கதைக்கூடாது...'

'என்னை, நீங்கள் விளங்கிக் கொண்டது அவ்வளவு தானா அண்ணை? தலையிருக்க வால் ஆடாது...'

'தலையுமில்லை வாலுமில்லை...இது ஒரு ச்த்தியசோதனை...அதுதான் கவனமாய் இருக்கவேணும்...சரி, சரி, சீக்கிரம் வா...'

அவர்கள் தேவகுருவின் காரிலேயே பயணித்தார்கள். அர்ஜுன் காட்டிய சிறிய மஞ்சள் வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்தினார்.

இது அல்பிரேட்டின் வீடு. இப்பொழுது அவன் 'சாரத்த' வைத்திருந்தான். (சாரத்த என்பது சட்டப்படி கல்யாணம் செய்யாமல், ஆனாலும், சமூகத்தில் கணவன்--மனைவியாக ஒரு வித ஒப்பந்தத்தில் வாழ்தல்) அவள் பெயர் லேனா.

வீட்டில் மங்கலான வெளிச்சம் தெரிந்தது. இப்படியான மங்கல் வெளிச்சத்தில் மது குடித்தல் இங்குள்ளவர்களுக்குப் பிடித்தமான ஒன்று.

அவர்கள் காரை விட்டு இறங்கினார்கள். ஒரு கணம் தேவகுரு தயங்கினார். ஒரேயொரு கணந்தான். அந்த மாயையை விரட்டித் தெளிவு பெற்றார்.

கதவு சாத்தி இருந்தது. அழைப்பு மணியைத் தேவகுரு மெதுவாக ஒருமுறை அழுத்திவிட்டார். திறப்பதற்காகக் காத்திருந்தார்கள். இவர்கள் எதிர்பார்த்த யாரும் தோன்றவில்லை. பதிலுக்கு லேனா வந்தாள்.

அவள் இவர்களை எதிர்பார்த்திருக்க மாட்டாள். போலும். அவள் முகத்தில் ஆச்சரியம் நெளிந்தது. இருப்பினும், சுதாரித்துக் கொண்டு, 'என்ன வேண்டும்?'என்று கேட்டான்.

'நான் அல்பிரேட், செல்...என்று சில நண்பர்கள். பார்த்தால் தெரியும். அவர்கள் கொஞ்சம் பேசவேணும்...உள்ளே இருக்கிறாங்களா?'

தேவகுருவை அவள் அறிந்திருந்தாள். அல்பிரேட்டுக்கு அவர்மீது நல்லபிப்பிராயம் இல்லை என்பதும் தெரியும். இருப்பினும், வீடு தேடி வந்தவரை, முகத்திலே கதவைச் சாத்தி அனுப்புவது பண்பல்ல என்பதை உணர்ந்தாள்.

'கொஞ்சம் பொறுங்க...அவர்கள கேட்டிட்டு வாறன்.'

'நன்றி. நாங்கள் காத்திருக்கிறம்.'

உள்ளே சென்ற லேனாவை, 'ஆரது' என்று கேட்டான் அல்பிரேட்.

'தமிழர்...அந்தப் பிரசங்கி. உங்களோட கதைக்க வேணுமாம்.'

'அந்தப் பன்றி இங்கேயும் வந்திட்டுதா?' என்று செல் கத்தினான்.

'செல் பேசாமல் இரு. வீடு தேடி வந்திருக்கிறாங்கள். அடிப்படை நாகரிகம் ஒன்று இருக்கிறது. எங்களுக்கு எதுவும் தெரியாது போல நடந்தாப் போச்சுது. ஜோன் நான் சொல்றது சரியே?' என்று சொன்னாள்.

'நீ சொல்றதுதான் சரி. அவங்க உள்ளே வரட்டும்...' என்றான் ஜோன்.

ஜோன் தான் செய்த விஷயங்களைப்பற்றி யாரிடமும் கூறவில்லை. இரண்டு வீடுகளும் ஒரே பாணியில் எரிக்கப்பட்டுள்ளதாகப் போலீஸார் நம்புகின்றனர். இரண்டினையும் ஒரே குழு அன்றேல் ஒருவனோ எரித்திருத்தல் சாத்தியம் என்கிற தடத்திலே அவர்கள் யோசிப்பதாக அறிந்திருந்தான். எல்லா விஷயங்களிலும் மற்றும் மூவருடனும் கூட்டுச் சேர்ந்திருந்த அவன், இவை பற்றி நண்பர்களிடம் மூச்சு விடவில்லை. இரண்டாவது சம்பவத்திலே ஒரு சிறுமி வெந்து இறந்தது பலருடைய கண்டனத்துக்குரிய ஒன்றாக மாறியுள்ளதையும் அறிந்தான். சுவரிலே எறியப்பட்ட பந்து போல, தேவகுரு தங்களை நோக்கி வந்திருப்பது அவனைக் குறுகச் செய்தது. தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதையும் பிரசித்தப்படுத்தாத ஆவதானத்துடன் தான் நடந்து கொள்ளவேண்டும் என அவன் நிச்சயித்துக் கொண்டான்.

'நரகல்கள்' என்று அல்பிரேட் முணுமுணுத்தான்.

'அல்பிரேட், அமைதியாக இரு.'

'எஜமானி அம்மா உத்தரவு' என்று நளினம் மௌனமானான்.

லேனா மீண்டும் வாசற்பக்கம் வந்தாள்.

அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள் .

'வாங்க..உள்ளே வரட்டாம்.'

'நன்றி.'

'நல்வரவு.'

இருவரும் ஜக்கட்டுகளைக் கழற்றி ஸ்ராண்டிலே கொழுவிவிட்டு உள்ளே சென்றார்கள். உள்ளே அமைதி நிலவியது. எதர்பாராத விருந்தினராலே ஏற்பட்ட அமைதி என்பதை தேவகுரு நிதானித்தார்.

தேவகுருவுக்கும் அர்ஜுனுக்கும் வசதியாக இடம் விட்டு, ஒதுக்குப்புறமாக இருந்த நாற்காலி ஒன்றிலே ஜோன் சென்று அமர்ந்து கொண்டான்.

'குறி இது; மாண்டது குழந்தை' திடீரென முள் ஒன்று அவன் நெஞ்சிலே ஆழப் பதிந்தது.

'எங்களை உள்ளே அநுமதித்ததற்கும், உங்களுடன் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்புத் தந்ததிற்கும் எங்கள் நன்றியைக் கூறிக் கொள்ளுகிறோம். இதனை உங்களுடைய விசாலித்த உள்ளங்களைப் பிரதிபலிப்பதாக நான் அர்த்தப்படுத்திக் கொள்ளுகின்றேன். உங்களுடன் பேச ஆசைப்படுறன். உங்கள் நேரத்தில் ஓர் ஐந்து நிமிஷத்தினை எடுத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா?'

'பேசுங்கள்' என்று காறால்ட் கூறினான்.

'எனக்கு நொஸ்க் அவ்வளவு வராது. நீங்கள் அதைப் பாராட்டக் கூடாது. நான் உங்களைக் குறை கூறுவதற்காகவோ, கண்டிக்கிறதுக்காகவோ இங்கு வரவில்லை. சக மனிதர்களிடம் எங்கள் கஷ்டங்களைச் சொல்லி மன ஆறுதல் பெறுவதற்காக மட்டுமே வந்திருக்கிறேன். இங்குள்ள சிலர் எங்களை வெறுக்கிறார்கள். எங்கள்மீது நிறத் துவேஷம் பாராட்டி வெறுக்கிறார்கள். இதனை நீங்கள் அறிவீர்கள். அதனாலேதான் பேசுகிறேன். எனக்கு யாரையும் துன்பப்படுத்துவதில் இஷ்டம் இல்லை. மற்றவர்களுடைய நலனுக்காக என்னைத் துன்பப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளும் இயல்பினன். நான் ஓர் அகிம்ஸாவாதி. அன்பிலும் உண்மையிலும் நம்பிக்கையுள்ளவன். இது என்னைப் பற்றிய அறிமுகம்.'

தேவகுரு நிறுத்தினார். யாரும் எதுவும் பேசவில்லை. தம்மை உற்றுக் கேட்பதாக அவருக்குத் தோன்றியது. அவர் தொடர்ந்தார்.

'வேலையிலிருந்து திரும்பும்பொழுது, என்னை மறித்து, அடித்துத் துன்புறுத்தித் தெருவிலே வீசினார்கள். நான் ஏற்றுக் கொண்டேன். போலிஸ’லே செல்லாது ஏற்றுக் கொண்டேன். என்னை அடித்துக் துன்புறுத்துவதன் மூலம் ஒரு கருத்தினைப் புரிய வைக்க முனைந்திருக்கின்றார்கள் என விளங்கிக் கொண்டேன். உங்கள் கருத்தினை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு நிச்சயமாகப் பூரண உரிமை உண்டு. ஆனாலும், அதனைச் சொல்லக் கையாண்ட முறை தவறானது என நான் எண்ணுகின்றேன். என்னால், நான் வாழ்வதினால், எந்த மனிதனும் துன்பம் அடையக்கூடாது. நான் துன்பப்படுவதினால், மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் என்றால், அந்தத் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கின்றேன். நான் கிறிஸ்தவனல்லன். ஆனால் யேசுநாதரின் வாழ்க்கையிலிருந்தும், ஊழியத்திலிருந்தும் இந்த மேலான போதனைகளைக் கற்றுக் கொண்டேன். பிறருடைய பாவங்களுக்காக அவர் உத்தரப்புகளையும் பாடுகளையும் ஏற்றுக் கொண்டார். நான் புரிந்து கொண்டுள்ள அளவுக்குக் கூட யேசுநாதருடைய போதனைகளிலே விசுவாசம் கொள்ளாதவர்கள் ஞாயிறு தோறும் தேவாலயத்திற்குச் செல்வதினால் என்ன பயன்? கிறிஸ்தவ நாகரீகம் இவ்வளவு தாழ்ந்து போனதற்காக நான் மிகமிகத் துக்கப்படுகின்றேன். இயேசுநாதர் உங்களுக்காக மட்டும் இரத்தம் சிந்தவில்லை. எங்களுக்காகவும் சிந்தினார். உலக மக்கள் அனைவருடைய பாவங்களுக்காகவும் இரத்தம் சிந்தினார்.

'நோர்வே நாட்டின் குடியுரிமை பெற்று, இந்த மண்ணின் காருண்யம் மிக்க அமைதிச் சூழலிலே வாழ்ந்த பெற்றோருக்கு மகளாக என் மாலதி பிறந்தாள். இந்த மண்ணிலே அவள் பிறந்தாள் என்பதில் நான் அடைந்த பூரிப்புக் கொஞ்சம் அல்ல. உலக நாசகாரத்திற்கு எதிராக மனித நேயம் வளர்த்தது இந்த மண். ஏழை-பயக்கார மேடுகளை அழித்து சமூக நீதியை நிலைநாட்ட முந்தியது இந்த மண். உலக நாடுகளின் அமைதியை நேசிக்கும் அற்புதர்கள் வாழும் நாடு என்று இந்த மண் போற்றப்படுகின்றது. விளையாட்டுக் களத்திலேகூட மனிதர்கள் உடல் ரீதியான துன்புறுத்துதல்களை அநுபவிக்கலாகாது என்கிற நான்னோக்கிலே குத்துச்சண்டை விளையாட்டினையே சட்ட விரோதமாக்கிப் புகழ் பூத்தது இந்த மண். இந்நாட்டிலே பூத்துள்ள சமத்துவ நெறிகளை உலகின் ஒவ்வொரு நாட்டிலும் எழச் செய்தல் வேண்டும் என்று உலகப் புத்திஜுவிகள் ஆவலாதிப்படுகின்றார்கள். இந்த மண்ணிலேதான் கறுப்பன் என்கிற காரணத்திற்காக என் வீடு எரிக்கப்பட்டது; அந்த வீட்டின் நெருப்புக் காட்டிலே என் மகள் வெந்து கருகிச் செத்துப்போனாள் என்று முறையிடுவதற்கு என் நாக்குக் கூசுகின்றது. அவள் சாகும்பொழுது எத்தகைய துன்பங்களை அநுபவித்திருப்பாள்? உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவள் கருகிச் செத்திருந்தால், உங்களுடைய மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? நிறத்துவேஷம் என்கிற மாயையைத் தூக்கி எறிந்துவிட்டு, மனித நேயத்துடன் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்...? தமது குரலிலே ஏற்பட்ட பிசிறினை மறைப்பதற்குத் தேவகுரு மிகவும் பிரயாசைப்பட்டார்.

'நீ பிழையான இடத்திற்கு வந்திருக்கிறாய்!' என்று அல்பிரேட் கத்தினான்.

'அல்பிரேட்!' லேனா அதிர்ந்தாள். குரலைத் தாழ்த்தி, அவர் தமது மனக் கஷ்டங்களைச் சொல்லி முடிக்கட்டும். அமைதியாகக் கொஞ்ச நேரம் கேட்பதற்குக்கூட நமக்குப் பொறுமை இல்லையா?' எனச் சொன்னாள்.

'சாத்தான்' என முணுமுணுத்துக் கொண்டே அல்பிரேட் அமைதியானான்.

* * * Nalai 5-ன் தொடர்ச்சி * * *

'பிழையான இடத்திற்கு வந்திருந்தால், நான் சந்தோஷப்படுகின்றேன். மனித நேயம் மிக்கவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன் என ஆறுதலடைகின்றேன். நான் உங்களுடன் பேச வந்தது, நீங்கள் குற்றவாளிகள் எனக் குற்றஞ் சுமத்துவதற்காக அல்ல. என் வீட்டை எரித்தவர்களைக்கூட, என்பிள்ளையைச் சாகடித்தவர்களைக்கூட, நான் குற்றவாளிகள் என வசைபாடமாட்டேன். அவர்கள் அறியாமல் தப்புச் செய்திருக்கிறார்கள். உங்கள் மூலம், தப்புச் செய்தவாகளுடைய மனச் சாட்சிகளை என் குரல் எட்ட வேண்டும் என ஆசைப் படுகின்றேன்.

'நாய், பூனை, மாடு போன்ற மனைவாழ் மிருகங்களை நீங்கள் நேசம் பாராட்டி வளர்க்கும் விதத்தினைப் பார்த்து நான் புளகாங்கிதம் அடைவதுண்டு. அந்த மிருகங்கள் தங்களுக்குள் நிறபேதங்கள் பாராட்டுவதை நாம் அறியோம். கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்பதை நீங்களும் நம்புகின்றீர்கள்; நானும் நம்புகின்றேன். நிறபேதங்களுடன், மதபேதங்களுடன், இனபேதங்களுடன், மொழி பேதங்களுடன் மனிதன் பிறந்தது யார் குற்றம்? வெள்ளை தோல் மேலானது அதற்கு முன்னர் தோன்றிய நாகரிகங்கள் பலவற்றுக்கு என்ன நேர்ந்தது? வெள்ளைத் தோலர்களுடைய ஆதிபத்தியம் சாஸ்வத மானதா? அடுத்த நூற்றாண்டிலே மஞ்சள் தோல் இனத்தின் அதிகாரங்கள் மேட்டிமைப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

'கடைசியாக ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். நான் பிறந்த இலங்கைத் தீவு மகா அழகானது. சொர்க்கத்திலிருந்து ஒழுகி விழுந்த ஒரு நிலத்துண்டோ என மயக்கும் அழகுடையது. நாற்புறமும் கடல் அலைகளின் தாளம்; வருடம் முழுவதும் வற்றாத நதிகள்; நிமிர்ந்து நிற்கும் குன்றுகள்; சோலைகள்; காடுகள்; வயல் வெளிகள் என அதன் அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம். மனித நேயத்தையும், அன்பு நெறியையும், மனித சமத்துவத்தையும் போதித்த கௌதம புத்தர், காலத்தால், யேசநாதருக்கும் ஐந்து நூற்றாண்டுகள் மூத்தவர். உயிர்வதைக்கு எதிரானவர். பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு எதிரானவர். மனிதன் லோப-துவேச-மோக (இச்சை - துவே சம்-அஞ்ஞானம்)ஆகியவற்றை வென்று வாழ வேண்டும் என்று போதித்தவர். மனித சமுதாயத்திலே அலோப -அதுவேச-அமோக, அதாவது அருள், காருண்யம், ஞானம் ஆகியன வளர்ந்தால் சாந்தியும் சமாதானமும் நிலவும் எனப் போதித்தவர். அவரைப் பின்பற்றுவதாக விரதம் ஏற்க வேண்டிய பிக்குகளே, தமிழர்களுடைய பிண மலைகள் குவிக்கப்படுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வாழ்கிறார்கள். இது எத்தகைய கொடுமை? புத்தர் இரத்தக் கண்­ர் வடிக்கும் அந்த நாட்டிலே வாழமுடியாத அவதியாலேதான் நான் இந்த நாட்டிலே அகதியாகத் தஞ்சம் புகுந்தேன். இந்த மண்ணிலே தேவாலங்களிலே சுவிசேஷம் போதிக்கும் பாதிரியார்களே, பிள்ளைகளை உயிருடன் எரித்துச் சாகடிக்கும் இயக்கத்திற்குத் தலைமை தாங்கினால்...இது உண்மையல்ல. ஆனால், ஒரு தடைவை கற்பனை செய்து பாருங்கள்...இந்த மண்ணின் மனித நேயத்திலே இன்னமும் நாங்கள் நம்பிக்கை பூண்டு வாழ்கிறோம். இந்த நம்பிக்கையைச் சிதைத்தல் ஒரு வகையில் தேசத் துரோகம் என் நான் கருதுகின்றேன்...

'இப்பொழுதும் புனிதர் யேசுவின் வாக்கியங்களே எனக்கு ஞாபகம் வருகின்றன. "அந்நியனாய் இருந்தேன். நீங்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை. வஸ்திரம் இல்லாது இருந்தேன். நீங்கள் எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை. வியாதி உள்ளவனாயும் காவலில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன்; நீங்கள் என்னை விசாரிக்க வில்லை... மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாது இருந்தீர்களோ அதை எனக்கே செய்யாது இருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகின்றேன்." இயேசுநாதரின் திவ்விய அன்பிலே வாழும் ஒரு சலுகையை எங்களுக்குத் தாருங்கள்...'

தேவகுரு எழுந்து அங்கு அமர்ந்திருந்த எல்லோரையும் பார்த்துக் கைகூப்பி வணங்கினார்.

அர்ஜுனும் எழுந்து கொண்டான்.

லேனா முன்னே வந்தாள்.

'மன்னிக்க வேணும். ஒரு நிமிஷம்.'

'சொல்லுங்கோ.' நின்றபடியே தேவகுரு செவி மடுத்தார்.

'நீங்கள் வந்த இடம் பிழை. நீங்கள் நினைக்கிற மாதிரி யாரும் இங்கே இல்லை.'

'ரொம்ப சந்தோஷம். நான் சொன்ன கருத்துக்கள் தப்பா?'

'இல்லை; நிச்சயமாக இல்லை.'

'இந்தக் கருத்துக்களை நான் பிரசாரம் செய்வதை ஆட்சேபிக்க மாட்டீர்களே?'

'இல்லை.'

'நான் அதற்கே வந்தேன். நன்றி.'

'உங்க மனசிலே, உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்களுக்குத் தொடர்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். எங்களுக்குத் தொடர்பில்லை. அந்த கேஸ’லே நீதிமன்றம் பிழையான தீர்ப்புக் கூறி இருக்கிறது.'

'எனக்கு யார்மீதும் எத்தகைய சந்தேகமும் இல்லை. அந்நியனாய் நுழைந்தேன். நண்பர்களாய் பிரிவோம்.'

'உங்கள் ஆர்வம் எனக்குப் பிடிச்சிருக்கு...நன்றி.'

'காத.'

'காத.'

"ஏதாவது வாக்கு வாதங்களிலே முடியுமோ என்று பயந்தனான் அண்ணே...' என்று விக்கினான் அர்ஜுன்.

கார் ஓடிக் கொண்டிருந்தது.

'அன்புக்கும் நியாயத்துக்கும் வாதாடும் பொழுது, ஓர் அதிசக்தி அவனுக்குத் துணை நிற்கும்.'

'அதிசக்தியா?'

'ஆமாம். இன்று அந்த அதிசக்தி லேனாதான். அவன் இருந்ததுதான் நிலைமைகளை சகஜமாகியுள்ளது...நடந்தவற்றின் விமர்சனங்களைப் பார்க்கிலும், நடக்க வேண்டியவற்றைப் பற்றிய திட்டமிடல் முக்கியம்.'

'வார்டோ அகிம்ஸை அரங்கு (Vardo lkke vold forum) நடத்தும் டிவி நிகழ்ச்சியிலே நீயும் கலந்து கொள்ளுகிறாய் தம்பி.'

'ஏன் அண்ணே, என்ர பெயரைச் கொடுத்தனீங்க?...'

'உனக்கு விருப்பமில்லையோ?'

'அதில்லை. நான் இவ்வளவு காலமும் உங்களுக்கு முரணாகத்தான்...'

'தம்பி. முரண்படுவது நல்லது. கொள்கைகளை மறு பரிசீலனை செய்வதற்கு அது உதவும். எனக்கு ஒன்று தெரியும். நீ எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் குரல் கொடுப்பவன். இன்னொன்று நொஸ்க் உனக்குச் சரளமாக வரும். கலை-இலக்கிய ஈடுபாடும் உள்ளவன். NRK (Norsk Rikskringkating A/S; (நோர்வே ஒலி-ஒளி பரப்புக் கூட்டுத் தாபனம்) இன்னொரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப ஒப்புக் கொண்டுள்ளார்கள். எங்களுடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கு, டாக்டர் லார்ஸ் தமது நண்பர் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். எவ்வளவு நேரம் என்பது அவர் திங்கள் சொல்லுவார். அர்ஜுன் நீதான் அதன் பிரதியாக்கம்...'

'அண்ணே, உங்களுடைய நல்ல மனசுக்கு...' என்று அர்ஜுன் தடுமாறினான் வார்த்தைகளுக்கு...

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்' என்றார் வள்ளுவர். அவ்வளவுதான்...' என்று அமைதியாகக் கூறிய தேவகுரு, வீதி மீது கவனஞ் செலுத்தினார்.

16

அந்த நிகழ்ச்சியை அர்ஜுன் கலைநயத்துடனும் ஆத்ம ஈடுபாட்டுடனும் தயாரித்தளிப்பான் என்று தேவகுரு நம்பியதற்குப் பல காரணங்கள் இருந்தன. ரூபவாஹ’னியிலே அவன் சில நிகழ்ச்சித் தயாரிப்பிலே உதவியிருக்கிறான். அத்துடன், நொஸ்க் மொழியை மிக அக்கறையுடன் கற்றுத் தேறியுமிருந்தான். எடுத்த காரியத்தினை, ஒரு சவாலாக ஏற்று, திறமையாக முடித்தல் அவன் சுபாவம்.

நிகழ்ச்சியைக் கலந்துரையாடலாக அமைக்க அவன் விரும்பவில்லை. பட்டிமன்றம் சுயவித்துவப் பெருமிதம் சாற்றும் ஒருவிதப் பொழுது போக்கு என அவன் நம்பினான். புதிய உண்மைகள் மக்கள் மன்றத்திலே சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என அவன் விரும்பினான். அத்துடன், தமிழருடைய இசை வடிவத்தையும் இலேசாக இணைத்தல் வேண்டும் எனவும் தீர்மானித்தான். நொஸ்க் மொழிமூலம் தயாராகும், பல்லினக் கலாசாரத்திற்கு வழிவகுக்கும் ஓர் எத்தனமாகவும் அந்நிகழ்ச்சி அமைதல் வேண்டுமெனவும் ஆசைப்பட்டான்.

அந்த நிகழ்ச்சிக்குக் கலா வடிவம் கொடுக்கும் முயற்சியில் அலுப்புச் சலிப்பு பாராட்டாது ஆவணக் காப்பகங்களிலே அதிக நேரம் செலவிட்டான். ஹ’ட்லரின் கொடுமைகளை நேரிலே பார்த்த முதிய குடிமக்களுடன் மணிக்கணக்கிலே உரையாடினான். சில தகவல்களையும், சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளையும் பெறத் தனது சொந்தச் செலவிலேயே இரண்டு மூன்று தடவைகள் ஒஸ்லோவுக்குப் பயணங்கள் மேற்கொண்டான். நிகழ்ச்சித் தயா‘ப்பு வேலைகளை முழுமையாகக் கவனிப்பதற்காக ஒரு மாத விடுப்பும் எடுத்திருந்தான். தமிழ் மக்கள் பலருடைய இதுவரை பிரசித்தமாக உள்ளுறை ஆற்றல்களை இனங்கண்டான். இத்தகைய பாரிய முயற்சி தேவைதானா என்று தேவகுரு சில சமயங்களிலே யோசித்தார். ஆனால், அவனுடைய சத்தியமான ஈடுபாட்டினை கண்டு அவர் உளம் மகிழ்ந்தார். அவன் தமிழ் மக்களுடைய பூரண ஆதரவினை வசீகரித்தான். ஒஸ்லோவில் வாழும் புகழ்பூத்த நொஸ்க் கலைஞர்களுடன் கலந்தாலோசித்துப் பிரதியாக்கத்திலே மாற்றங்களையும் செப்பங்களையும் புகுத்தினான். நொஸ்க் புத்திஜ“விகளும், கலைஞர்களும் இணைந்து கொண்டதினால், இந்த நிகழ்ச்சி பற்றி பெரிய எதிர்பார்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. பத்திரிகைகள் மட்டுமன்றி, நிகழ்ச்சி முன்னோட்டமும் எதிர்பார்ப்பினைத் தூண்டுவதாக அமைந்தது.

கடைசியாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளும் நேரமும் வந்தது.

அந்தச் சிறிய மஞ்சள் வீடு பரபரப்படைந்தது. முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அல்பிரேட்டும் லேனாவும் நடத்திய 'சாரத்த' தொடர்ந்தது. அல்பிரேட்டின் நண்பர்களான செல், ஜோன், காறால்ட் வந்து சென்றார்கள். மாலதி எரியுண்டு இறந்த பின்னர் அவர்கள் அமைதி காத்தார்கள். அத்துடன் தேவகுரு அவர்களுடைய வீட்டுக்கு வந்து சென்றதிலிருந்து லேனா இங்கு வாழும் அகதிகளுடைய நிலைமை பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் நாட்டமுடையவளாக மாறினாள். தேவகுருவின் குரல் சத்தியத்தின் ஒலியாக அவளுக்குத் தோன்றியது. ஜோன் முன்னர் போல அல்ல. விவகாரங்களிலே பட்டும் படாமலுமே அபிப்பிராயம் சொன்னான். செல்லும் அல்பிரேட்டும் கடுங்கோட்பாளர்களுடைய குரலாகவே செயற்பட்டார்கள். அர்ஜுன் பிரதியாக்கத்தில் ஈடுபட்டிருந்ததாகப் பிரசாரம் செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடாது என்று செல் வாதிட்டான். 'இந்தக் கறுத்தப் பன்றிகள் எங்களுக்குப் போதிக்கவா?' என்று அல்பிரேட் வக்கணை பேசினான். லேனாவின் வற்புறுத்தலுக்காக அவர்கள் அந்த நிகழ்ச்சிக்காக டிவியை 'டுயூன்' செய்திருந்தார்கள். எல்லோரும் மது அருந்தத் துவங்கினார்கள். லேனாகூட பியர் குடித்தாள். ஆனால், ஜோன் மதுவில் நாட்டம் செலுத்தவில்லை.

லார்ஸ் குடும்பத்தினர் அதிலே சில பாத்திரங்களிலே நடித்ததினால், மிகுந்த ஆவலுடன் டிவிக்கு முன்னால் அமர்ந்திருந்தார்கள். அனிதா தன் தோழியின் இழப்பினை மிகவும் உணர்ந்திருந்தாள். இதனால், அவளுடைய டிவி தோற்றம் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளதாக அர்ஜுன் சொல்லியிருந்தான்.

வித்தியாகூடத் தான் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்கத் தேவகுரு சங்கடப்பட்டார். அவர் சற்குணத்துடன் கீபிள் சென்றிருந்தார். அர்ஜுன்கூட இருந்து பார்ப்பதை அவர் விரும்பினார். தமிழர் வாழ்க்கையிலே ஒரு புதிய ராகத்தினை மீட்க அது உதவாதா என்பது அவர் ஆதங்கம்.

ரோஜா மலர் ஒன்று தீயிலே பொசுங்கிக் கொண்டிருப்பதான குறியீட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதுவே மனசிலே பல உணர்ச்சி மோதல்களைக் கிளறுவதாக இருந்தது. தயாரிப்பு விபரங்கள் காட்டப்பட்ட பொழுது, மிகச் சோகமான குரலிலே, ஏற்ற பக்க வாத்தியங்களுடன், பல்லவி ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சி மாறி கடல் அலைகளிலும், வானவெளியிலும் ஒரு ரோஜா அலைக்கழிவதைக் காட்டியது.

பொங்கும் கடலாய்
நெஞ்சம் பொங்க
எங்கே எங்கே பயணம்?

இங்கே தொலைத்த
புன்னகை தேடி
இதயம் முழுவதும் சலனம்.

மின்னல் கீற்றுகள் வானத்தைப் பிளக்க, வெள்ளை-கறுப்புப் படமாக நாஜி ஜெர்மனியின் எழுச்சி காட்டப்பட்டது. சுவஸ்திகா சின்னம் பெரிதாகத் தெரிய, ஹ’ட்லரின் அதிகாரம் மிக்க ஆணவ முகம் மங்கலாள, super-impose ஸாகி பின்னணியிலே தெரிய, அவன் உருவாக்கிய யூத இனத்திற்கான 'இறுதித் தீர்வின்' நிறைவேறுதலிலே, யூதர்கள் படும் அவஸ்தைகள் அனைத்தும் துண்டு துண்டாகக் காட்டப்பட்டன. யூதர்கள் அனுபவித்த அனைத்து இன்னல்களும், நெஞ்சைக் கிளறும் வகையிலே, யுத்த காலச் செய்திப் படங்களிலிருந்து கல்லியெடுக்கப்பட்டு, கலை நுணுக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. மனித மனச் சாட்சியிலே சாட்டையைச் சொடுக்கும் சடுதியிலே அவை மறைந்தன. பேர்லின் நகர் வீழ்ச்சி அடைய, தீ நாக்குகள் வெள்ளை-கறுப்பு நிறத்திலிருந்து மாறி, நிகழ்ச்சியை வண்ணப்பட இயல்பிற்குள் கொண்டு வந்து சேர்த்தது.

மக்களின் அழுகை
யுத்தமானது
மறுபடி ஹ’ட்லரின்
சத்தமானது

என்கிற சரணம் பாடப்படும் பொழுது தீ நாக்குகளின் ஊடாகச் சிங்கக்கொடி மங்கலாகப் பின்னணியிலே தெரிகின்றது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலையின் கோரம் காட்டும் காட்சிகள், புகைப்படங்களின் தொகுப்பாகக் காட்சியாயின. அரிதான புகைப்படங்கள். அரிதிலே முயன்று இணைக்கப்பட்டிருந்தன. 'ஆரிய இனத்தின் ஆதிக்க ஆசை ஹ’ட்லருடன் அழிந்துவிடவில்லை...அந்தக் கோட்பாட்டின் புதியதொரு வேதம் இலங்கை மண்ணிலே பரவிக் கொண்டிருக்கின்றது' என்று நொஸ்க் மொழியிலே திருமதி லார்ஸ’ன் குரல் துல்லியமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சோகத்தைக் கனக்கச் செய்யும் விதத்திலே நொஸ்க் மொழிப் பாடல் ஒன்று மெல்லிதாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அது மங்கி மறைய, கடற்கரைக் காட்சி. இலங்கைக் கடற்கரை. பனைமரங்கள் மிக மங்கலாகத் தூரத்திலே தெரிகின்றன. அகதிக் குடும்பங்கள் அவசர அவசரமாகப் படகுகளிலே ஏறிக் கொண்டிருக்கும் காட்சி . இருளிலே தமிழ் அகதிகளுடைய முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான கும்பல்கள். படகுகள் கடல் அலைகளிலே தத்தளித்துச் சென்று கொண்டிருக்கின்றன.

உதிரும் எங்கள்
கண்­ர் துளிகள்
கடலை உப்பாய் மாற்றியதோ...
இருளில் எங்கள்
வாழ்க்கை என்ன?
இறைவன் எழுதிய சாத்திரமோ

படகுகள்மீது குண்டுகள் வீசப்படுகின்றன. படகுகள் தத்தளிக்கின்றன. ஒரு படகு நீரிலே தாழ்ந்து போகின்றது. பாடலை ஊடறுத்து, குழந்தை ஒன்றின் அவலக் குரல் வீறிட்டுக் கேட்கின்றது. கடல் அலைகள் மட்டுமே. ஒற்றை ரோஜா ஒன்று அலைக்கழிக்கப்படும் காட்சி உறைநிலை அடைகின்றது.

நீலக்கடல் மங்க, நீல வானம். பறவைகள் ஒலி எழுப்பி வானத்திலே பறந்து செல்கின்றன. வானம் நோர்வே வானம். தூரத்தில் ஒஸ்லோ-நகர் தெரிய, விமானம் இறங்கிக் கொண்டிருக்கின்றது. SCANDINAVIAN AIRLINES SYSTEM விமானம் தரை தட்டுகின்றது. ஒஸ்லோவின் விமான நிலையத்தின் முகப்புத் தெரிகின்றது. ஒரு இளம் தமிழ்க் குடும்பம்--தாய், தந்தை, சிறுமி, கைக்குழந்தையான சிறுவன்--முகங்களிலே புதிய எதிர்ப்பார்ப்புகளும் மகிழ்ச்சியும் தெரிய வந்து கொண்டிருக்கிறது.

தொலைந்த தெங்கோ
தொலைந்த தெங்கோ
புன்னகை தேடிப் போகிறோம்-ஒரு
புன்னகை தேடிப் போகிறோம்.

சிறுமிகளின் சிரிப்புக் குரல் ஒலிக்க, கோடை காலத்தின் நோர்வே காட்சிகள். ரோஜாத் தோட்டத்தின் ஊடாக, சிறுமிகள் ஆனந்தமாக ஆடித் திரிகிறார்கள். நொஸ்க் சிறுமிகளும், தமிழ்ச் சிறுமிகளும் இயற்கையிலே ஆனந்தமான உலவும் காட்சி. ஒரு நொஸ்க் சிறுமியும், ஒரு தமிழ்ச் சிறுமியும் சிரித்து மகிழ்ந்து, ஓடித் திரிவது திரை முழுவதும் வியாப்பி, மகா சந்தோஷமான சூழ்நிலையைச் சித்திரிக்கின்றது.

நோர்வேயின் கடற்கரைக் கிராமம் ஒன்று தெரிகின்றது. நொஸ்க் நாடோடிப் பாடல் ஒன்றின் பின்னணியில், அதன் அழகுக் காட்சிகள் விரிகின்றன. காட்சி நகர்ந்து, ஒரு சிறிய வீட்டினைக் காட்டி, அந்த வீட்டின் வரவேற்பறையைக் காட்டுகின்றது. தமிழ்க் குடும்பம் (ஒஸ்லோ விமான நிலையத்தில் காட்டப்பட்ட குடும்பம்.) தந்தை மகளுக்கு பாரதி பாடல் ஒன்றினை இசைத்துக் காட்டுகின்றார். 'பாரதி கவிதைகள்' என்கிற புத்தகம் விரித்தபடி கிடக்கின்றது. குஷ’னியில் தாய் சமைத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. சிறுவன் ஒடி ஓடிக் குறும்பு செய்கின்றான். அழைப்பு மணி ஒலிக்கின்றது. வீட்டுத் தலைவன் கதவைத் திறக்கின்றார். டாக்டர் லார்ஸ் குடும்பம் உள்ளே வருகின்றது. மிக அன்பாகச் சிரித்து மகிழ்ந்து, கோப்பி அருந்துகிறார்கள். அனிதாவும் தமிழ்ச் சிறுமியும் விளையாடுவது தெரிகின்றது. அந்தச் சிரிப்பொலி தூரம் தூரமாக...வெறிச்சோடிக் கிடக்கும் சுவர் மீது, சுவஸ்திகா சின்னம் ஸ்பிரே பெயின்றினால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுவரும், சின்னமும், அதை ஸ்பிரே செய்யும் கையும் மட்டுமே தெரிகின்றன. மீண்டும் சந்தோஷமான அந்தக் குடும்பத்தின் சூழல். 'இந்த நாட்டு மக்களின் காருண்யத்தினால் எங்களுக்கு இந்தப் புது வாழ்க்கையும் அமைதியும் கிட்டியிருக்கின்றது. உங்கள் கருணையை எங்கள் பிள்ளைகள் என்றும் நன்றியுடன் பாராட்டுவார்கள். இந்த நாட்டின் மேன்மைக்கும் வளத்துக்கும் என்றும் இவர்கள் உழைப்பார்கள்...' என்று நொஸ்க் மொழியிலே கூறுகின்றார். பின்னர், விருந்தினருக்காக ஒரு பாட்டுப் பாடும்படி தமது மகளைக் கேட்கின்றார்.

தமிழ்ச் சிறுமி நொஸ்க் பாடல் ஒன்றினை மிக அழகாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். அந்தக் காட்சி கரைந்து மாற, மீண்டும் சுவஸ்திகா வரையப்பட்ட சுவர் காட்சியாகின்றது. பன்றி ஒன்று ஸ்பிரே மூலம் வரையப்பட்டுக் கொண்டிருக்க, கம்பளி முகமூடி அணிந்த மூன்று நொஸ்குகள் காட்சியாகிறார்கள். பன்றியின் பக்கத்திலே, 'கறுத்தப் பன்றிகளே, எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என்கிற வசனம் நொஸ்க் மொழியில் பெரிதாக எழுதப்பட்டிருப்பது தெரிய, அதனை எழுதியவர்களுடைய உருவங்கள் மறைகின்றன. 'இந்தக் கறுத்தப் பன்றிகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்' என்று முரட்டுக் குரல் ஒன்று கத்திக் கொண்டிருக்கிறது. குறியீடாகப் பன்றி ஒன்று முழுமையாக வாட்டி எடுக்கப்படுவது புலானாகின்றது. காட்சி மாற, கலகலப்பான சிறுமியரின் சிரிப்புக் குரல்கள். ரோஜா தோட்டத்தில் ஓடி மகிழ்கிறார்கள். நொஸ்க் மொழியில் பாடிய தமிழ்ச் சிறுமியும், அவளுடைய நொஸ்க் தோழியும் தெரிகிறார்கள். நொஸ்க் பாடல் பின்னணியில் ஒலிப்பதினால், அவர்கள் பேசி மகிழும் உரையாடல் கேட்கவில்லை. இருவரும் ஒவ்வொரு ரோஜா மலர்களைப் பறித்து எடுக்கிறார்கள். அவர்கள் ரோஜா மலர்களைத் தமது கன்னங்களிலே வைத்துக் கொள்ளும் காட்சி close-up இல் மாறி மாறிக் காட்டப்படுகின்றது. பின்னணிக் காட்சி தூரந் தூரமாகப் போகின்றது. தோழிகள் இருவரும் முன்னுக்கு முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச் சிறுமியின் வீட்டுக்கு முன்னால் நின்று நொஸ்க் சிறுமி விடைபெறுகின்றாள். இருவர் கைகளிலும் ஒற்றை ரோஜாக்கள் காணப்படுகின்றன.

தமிழ்ச் சிறுமி அந்த ரோஜா மலருக்கு முத்தம் கொடுத்து, தலையணையின் ஓரத்திலே வைத்து, கண்களை மூடுகிறாள். பின்னணியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கக் காட்சிகள் நகருகின்றன.

ரோஜா மலரில்
முட்களுண்டு;
முள்ளே ரோஜா வாகியதோ?

வாடும் பூக்கள்
வாழ்வில் உண்டு;
வாழ்வே வாடிப் போகிறதோ?

அவள் தூங்குவது out of focus ஆக மாற, கம்பளி முகமூடி அணிந்தவர்கள் கைகளிலே தீப் பந்தங்கள் தாங்கி பேயாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஒருவனுடைய கையிலே எரிந்து கொண்டிருக்கும் தீப்பந்தம் மட்டும் திரைக்கு வந்து, அது பின்னேகும் பொழுது வீடு தீப்பற்றி எரிவது தெரிகின்றது. தீயணைப்புப் படை தீ பற்றி எரியும் அந்த வீட்டினை அணைக்கும் போராட்டம் காட்டப்படுகிறது. மூர்க்கம் தணியும் ஜுவாலைகளின் ஊடாக, தீயணைக்கும் படைவீரன் ஒருவன் கைகளிலே, கருகிக்கிடக்கும் தமிழ்ச் சிறுமியை ஏந்திக் கொண்டு வருகின்றான்...'இனவெறிக்கும் நிறவெறிக்கும் இன்னும் எத்தனை இளம் ரோஜாக்கள் கருக வேண்டும்' என்கிற கேள்வி பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சி முற்றுப் பெற்றது.

தேவகுருவின் உதடுகள் உணர்ச்சியிலே துடித்தன. விழிகளிலே தேங்கி நின்ற கண்­ரை ஏனையோர் பார்க்கக் கூடாது என்பதற்காக, யன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினார். அதனை மிக அழகிய முறையிலே தயாரித்த அர்ஜுனை பாராட்ட வார்த்தைகளைத் தொலைத்துவிட்ட நிலையிலே, கீபிளில் கூடியிருந்த அந்தக் கூட்டம் மௌனம் சாதித்தது.

லேனா தன் விழிகளிலே உருண்டோடிய கண்­ரை மறைக்கவில்லை. அழுது தீர்த்தால் மட்டுமே தனது மனப்பாரம் இறங்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

டிவியில் அடுத்த நிகழ்ச்சியைக் காட்டத் துவங்கினார்கள். யாரும் எதிர்பாராத சடுதியிலே, ஜோன் எழுந்து சென்று டிவியை நிறுத்தினான். அதனை ஒரு ஜெப மேடையாகச் சம்பாவனை செய்து, அதன் முன்னால் மண்டியிட்டான்.

'கர்த்தரே! இந்த ரோஜாக்கள் என்றென்றும் சிரித்து மகிழும் நாளைகளைத் தாரும்' என்று ஜெபம் செய்யத் துவங்கினான். லேனா அவனுடைய ஜெபத்திலே சேர்ந்து கொண்டாள்.

* * * முற்றும் * * *