கணபதி துணை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்

சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்


1.பதி இயல்



1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.

3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன?

நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர்.

4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.

5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ?

தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.]

6. படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

7. காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல்.

8. அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்

9. மறைத்தலாவது யாது?

ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதல்.

10. அருளலாவது யாது?

ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.

11. தனு கரண புவன் போகம் என்றது என்னை?

தனு = உடம்பு; கரணம் = மன முதலிய கருவி; புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம். போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.

12. ஒரு காரியத்திற்கு காரணம் எத்தனை?

முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்றாம். குடமாகிய காரியத்துக்கு முதற் காரணம் மண், துணைக் காரணம் திரிகை, நிமித்த காரணம் குயவன். திரிகை - சக்கரம்.

13. தனு கரண புவன் போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்திற்கு முதற்காரணம் துணைக்காரணம் நிமித்த காரணம் எவை?

முதற் காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று. துணைக்காரணம் சிவசக்தி; நிமித்த காரணம் சிவபெருமான்.

14. சிவசத்தியாவது யாது?

அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.

15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?


அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.

16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?

அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.

17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா?

ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.

18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?

சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார். [அதிட்டித்தல்=நிலைக்களமாகக் கொண்டு செலுத்துதல்]

19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?

சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து சமயதீ¨க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.

20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?

பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி; உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய சத்தி மனோன்மணி.

21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?

பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி, இலிங்கஞ் சிவம்.

22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?

படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது [லிங்க=சித்திரித்தல்]

23. மகேசுர வடிவம் எத்தனை?

சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷ¡டனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ¢ணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்துமாம்.



திருசிற்றம்பலம்


2. பசுவியல்


24.  ஆன்மாக்களாவார் யாவர்?

    நித்தியமாய், வியாபகமாய்ச், சேதனமாய்ப், பாசத்தடையுடையோராய்ச், சார்ந்ததன் வண்ணமாய்ச் சரீரந்தோறும் வெவ்வேறாய், வினைகளைச் செய்து வினைப் பயன்களை அநுபவிப்பேராய்ச், சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையோராய்த், தமக்கு ஒரு தலைவனை உடையவராய் இருப்பவர்.  (சேதனம் - அறிவுடைப் பொருள்)

25.  ஆன்மாக்கள் எடுக்கும் சரீரம் எத்தனை வகைப்படும்?

   தூல சரீரம், சூக்கும சரீரம் என இரண்டு வகைப்படும்.

26.  தூல சரீரமாவது யாது?

    சாதி, குலம், பிறப்பு முதலியவைகளால் அபிமானஞ் செய்தற்கு இடமாய்ப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து பூதமும் கூடிப் பரிணமித்த உருவுடம்பு.  (பரிணமித்தல் - உருத்甜ிரிதல்)

27. சூக்கும சரீரமாவது யாது?

    சத்த ஸ்பரிச ரூப ரச கந்தம் என்னும் காரண தன்மாத்திரையைந்தும், மனம் புத்தி அகங்காரம் என்னும் அந்தக்கரண மூன்றுமாகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு, ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அநுபவித்தற்குக் கருவியாய், ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு.

28.  ஆன்மாக்கள் எப்படிப் பிறந்திறந்து உழலும்?

   நல்விணை, தீவிணை என்னும் இருவினைக்கும் ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், ஏழுவகைப் பிறப்பையும் எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப், பிறந்திறந்து உழலும்.

29. நால்வகைத் தோற்றங்களாவன யாவை?

    அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம்.  அண்டசம் = முட்டையிற் தோன்றுவன.  சுவேதசம் = வேர்வையிற் தோன்றுவன.  உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன.  சராயுசம் = கருப்பையிற் தோன்றுவன.

30. எழுவகைப் பிறப்புக்களாவன யாவை?

    தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பவைகளாகும்.  இவ்வெழுவகையினுள்ளும், முன் நின்ற ஆறும் இயங்கியற் பொருள்கள்; இறுதியில் நின்ற தாவரங்கள் நிலையியற் பொருள்கள்.  இயங்கியற் பொருளின் பெயர் சங்கமம், சரம்; நிலையியற் பொருளின் பெயர் தாவரம், அசரம்.

31.  கருப்பையிலே பிறப்பன யாவை?

   தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளுமாம்.

32. முட்டையிலே பிறப்பன யாவை?

   பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவுமாம்.

33. வேர்வையிலே பிறப்பன யாவை?

   கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளுமாம்.  (கீடம் - புழு)

34. வித்தினும் வேர், கொம்பு, கொடி, கிழங்குகளிலும் பிறப்பன யாவை?

    தாவரங்கள்.

35. எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் எவை?

 1. தேவர்  11,00,000 யோனி பேதம்
 2. மனிதர்   9,00,000 யோனி பேதம்
 3. நாற்கால் விலங்கு  10,00,000 யோனி பேதம்
 4. பறவை  10,00,000 யோனி பேதம்
 5. ஊர்வன  15,00,000 யோனி பேதம்
 6. நீர்வாழ்வன  10,00,000 யோனி பேதம்
 7. தாவரம்  19,00,000 யோனி பேதம்
ஆக மொத்தம்  84,00,000 யோனி பேதம்

   

36. ஆன்மாக்கள் வினைகளைச் செய்தற்கும் வினைப் பயன்களை அநுபவித்தற்கும் இடம் எவை?

   இருவினைகளைச் செய்தற்கும் இருவினைப் பயன்களை அநுபவித்தற்கும் இடம் பூமி; நல்வினைப் பயனை அநுபவித்தற்கு இடஞ் சுவர்க்க முதலிய மேலுலங்கள்; தீவினைப் பயனை அநுபவித்தற்கு இடம் இருபத்தெட்டுக் கோடி நரகங்கள்.

37. பூமியிலே பிறந்த ஆன்மாக்கள் சரீரத்தை விட்டவுடனே யாது செய்யும்?

   நல்வினை செய்த ஆன்மாக்கள், தூல சரீரத்தை விட்டவுடனே, சூக்கும சரீரத்தோடு பூதசார சரீரமாகிய தேவ சரீரத்தை எடுத்துக்கொண்டு, சுவர்க்கத்திலே போய் அந்நல்வினைப் பயனாகிய இன்பத்தை அநுபவிக்கும் தீவினை செய்த ஆன்மாக்கள், தூல சரீரத்தை விட்டவுடனேயே, சூக்கும சரீரத்தோடு பூத சரீரமாகிய யாதனா சரீரத்தை எடுத்துக்கொண்டு, நரகத்திலே போய் அத்தீவினைப் பயனாகிய துன்பத்தை அநுபவிக்கும்.  இப்படியன்றி, ஒரு தூல சரீரத்தை விட்டவுடனே பூமியிலே தானே ஒரு யோனி வாய்ப்பட்டு, மற்றொரு தூல சரீரத்தை எடுப்பதும் உண்டு.

38. சுவர்க்கத்திலே இன்பம் அநுபவித்த ஆன்மாக்கள் பின் யாது செய்யும்?

    தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து மனிதர்களாய்ப் பிறக்கும்.

39. நரகத்திலே துன்பம் அநுபவித்த ஆன்மாக்கள் பின்பு யாது செய்யும்?

    தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து முன்பு தாவரங்களையும் பின்பு நீர்வாழ்வனவாயும், பின்பு ஊர்வனவாயும், பின்பு பறவைகளாயும், பின்பு விலங்குகளாயும் பிறந்து, பின்பு முன் செய்த நல்வினை வந்து பொருந்த மனிதர்களாய்ப் பிறக்கும்.

40. எழுவகைப் பிறப்பினுள்ளும் எந்தப் பிறப்பு அருமையுடையது?

    பசுபதியாகிய சிவபெருமானை அறிந்து வழிபட்டு முத்தியின்பம் பெற்றுய்தற்குக் கருவியாதலால் மனிதப் பிறப்பே மிக அருமையுடையது.

41. மனிதப் பிறப்பை எடுத்த ஆன்மாக்களுக்கு எப்பொழுது அம்முத்தி சித்திக்கும்?

    அவர்கள், தங்கள் தங்கள் பக்குவத்துக்கு ஏற்பப் படிமுறையினாலே, பிறவிதோறும் பெளத்தம் முதலிய புறச்சமயங்களில் ஏறி, ஏறி, அவ்வச் சமயத்துக்கு உரிய நூல்களில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே வைதிக நெறியை அடைந்து, வேதத்தில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே சைவ சமயத்தை அடைவர்கள்; சைவ சமயத்தை அடைந்து, சிவாகமத்தில் விதிக்கப்பட்ட சரியை கிரியை யோகங்களை விதிப்படி மெய்யன்போடு அநுட்டித்தவருக்குச் சிவபெருமான் ஞானாசாரியரை அதிட்டித்து வந்து சிவஞானம் வாயிலாக உண்மை முத்தியைக் கொடுத்தருளுவர்.

42. புறச்சமயங்களின் வழியே ஒழுகினவர்களுக்கு யாவர் பலங் கொடுப்பார்?

    புறச்சமயிகளுக்கு, அவ்வவரால் உத்தேசித்து வழிபடப் படுந் தெய்வத்தைச் சிவபெருமானே தமது சத்தியினாலே அதிட்டித்து நின்று, அவ்வவ் வழிபாடு கண்டு, பலங் கொடுப்பார்.

43. சரியையாவது யாது?

சிவாலயத்துக்குஞ் சிவனடியார்களுக்குந் தொண்டு செய்தல்.

44. கிரியையாவது யாது?

    சிவலிங்கப் பெருமானை அகத்தும் புறத்தும் பூசித்தல்.

45. யோகமாவது யாது?

    விடயங்களின் வழியே போகாவண்ணம் மனத்தை நிறுத்திச், சிவத்தைத் தியானித்துப், பின்பு தியானிப் போனாகிய தானுந் தியானமுந் தோன்றாது தியானப் பொருளாகிய சிவம் ஒன்றே விளங்கப் பெறுதல்.

46.  ஞானமாவது யாது?

    பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடல்.

47. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினாலும் அடையும் பலங்கள் யாவை?

    சரியையினால் அடையும் பலஞ் சிவசாலோக்கியமும், கிரியையினால் அடையும் பலஞ் சிவசாமீப்பியமும், யோகத்தினால் அடையும் பலஞ் சிவசாரூப்பியமுமாம்.  இம்மூன்றும் பதமுத்தி; ஞானத்தினால் அடையும் பலஞ் சிவசாயுச்சியமாகிய பரமுத்தி.

திருச்சிற்றம்பலம்.


3. பாசவியல்


48. பாசமாவன யாவை?

    ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகளாம். (பந்தித்தல் - கட்டுதல், பாசம், மலம் என்பவை ஒருபொருட் சொற்கள்.)

49. பாசம் எத்தனை வகைப்படும்?

ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும்.  இம்மூன்றோடு, மாயேயம், திரோதயி என இரண்டுங் கூட்டிப் பாசம் ஐந்து என்று கொள்வதும் உண்டு.

50.  ஆணவமாவது யாது?

   செம்பிற் களிம்புபோல ஆன்மாக்களின் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையுந் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால வெல்லையிலே நீங்கும் அநேக சக்திகளையுடையதாய்ச், சடமாய் இருப்பது.

51. கன்மமாவன யாது?

    ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலே செய்த புண்ணிய பாவங்கள், இவை, எடுத்த பிறப்பிலே செய்யப்பட்ட பொழுது, ஆகாமியம் எனப் பெயர் பெறும்.  பிறவி தோறும் இப்படி ஈட்டப் பட்டுப் பக்குவப்படும் வரையும் புத்தித்தத்துவம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனப் பெயர் பெறும்.  இச்சஞ்சித கன்மங்களுள்ளே பக்குவப்பட்டவை, மேல் எடுக்கும் உடம்பையும் அது கொண்டு அநுபவிக்கப்படும் இன்ப துன்பங்களையுந் தந்து பயன்படும் பொழுது, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

52. மாயை எத்தனை வகைப்படும்?

 சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என மூன்று வகைப்படும்.  இவைகளுள்ளே, சுத்தமாயை அசுத்தமாயை இரண்டும் நித்தியம்; பிரகிருதிமாயை அசுத்த மாயையினின்றுந் தோன்றியதாதலால் அநித்தியம்.

53. சுத்தமாயையாவது யாது?

   நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ச் சொல்வடிவமுஞ் சுத்தமாகிய பொருள் வடிவுந் தோன்றுதற்கு முதற்காரணமாய், மயக்கஞ் செய்யாததாய் இருப்பது.

54. அசுத்தமாயையாவது யாது?

   நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ப், பிரளய காலத்திலே ஆன்மாக்களுடைய கன்மங்களுக்கு உறைவிடமாய், ஆன்மாக்களுக்குச் சுத்தா சுத்தமும் அசுத்தமுமாகிய தனு கரண புவன போகங்கள் தோன்றுதற்கு முதற் காரணமாய், மயக்கஞ் செய்வதாய் இருப்பது.

55. மாயேயமாவன யாவை?

மாயையால் ஆகிய தத்துவங்களும், அவைகளால் ஆகிய தனு கரண புவன போகங்களுமாம்.

56. திரோதாயியாவது யாவை?

  ஆணவங் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையுந் தொழிற்படுத்திப் பாசம் வருவிக்குஞ் சிவசக்தி.  இது மலத்தைச் செலுத்துதலினாலே, மலம் என உபசரிக்கப்பட்டது.

57. மாயாகாரியமாகிய தனு கரண புவன போகங்களைச் சிவபெருமான் ஆன்மாக்களுக்குக் கொடுப்பது எதன் பொருட்டு?

  ஆன்மாக்களைப் பந்தித்த ஆணவ மலமுங் கன்ம மலமுமாகிய நோய்களைத் தீர்த்துச் சிவானந்தப் பெரும் பேற்றைக் கொடுக்கும் பொருட்டு.

58. தனு கரண முதலியவைகளும் மலமன்றோ? மலமென்பது அழுக்கன்றோ? ஆணவமாகிய அழுக்கை, மாயா மலமாகிய அழுக்கினாலே எப்படிப் போக்கலாம்?

 வண்ணான், கோடிப் புடவையிலே சாணியையும் உவர் மண்ணையும் பிசிறி, மிகக் கறுத்தது என்னும்படி செய்து, முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக்கையும் போக்கி, அப்புடைவையை மிக வெண்மையுடையதாகச் செய்வன்; அது போலவே சிவபெருமான் ஆன்மாவினிடத்தே மாயா மலத்தைக் கூட்டி, அநாதி பந்தமாகிய ஆணவ மலத்தோடு ஆதிபந்தமாகிய மாயா மலத்தையும் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வுடையதாகச் செய்வார்.

திருச்சிற்றம்பலம்.


4. வேதாகமவியல்


59. சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச் செய்த முதனூல்கள் எவை?

   வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாம்.  வேதத்தின் பெயர் சுருதி, நிகமம். ஆகமத்தின் பெயர் தந்திரம், மந்திரம், சித்தாந்தம்.

60. வேதம் எத்தனை?

     இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம்.

61. சிவாகமம் எத்தனை?

   காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம

62. வேதம் நான்கும் எங்கே தோன்றின?

    சதாசிவமூர்த்தியுடைய தற்புருட முகத்தினின்றும் இருக்கு வேதமும், அகோர முகத்தினின்றும் யசுர் வேதமும் வாமதேவ முகத்தினின்றுஞ் சாம வேதமும், சத்தியோசாத முகத்தினின்றும் அதர்வ வேதமுந் தோன்றின.

63. சிவாகம மிருபத்தெட்டும் எங்கே தோன்றின?

  சதாசிவமூர்த்தியுடைய உச்சி முகமாகிய ஈசானத்தினின்றும் தோன்றின.

64. வேதம் நான்கும் எத்தனை சாகை யுடையன?

    இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர்வேதம் நூறு சாகையும், சாமவேதம் ஆயிரஞ் சாகையும் அதர்வவேதம் ஒன்பது சாகையும் உடையன (சாகை பிரிவு)

65. வேதம் நான்கும் தனித்தனி எத்தனை காண்டமுடையன?

    பிரமகாண்டமும், பிரமகாண்டத்துக்கு நிமித்தமாகிய கருமகாண்டமும், என இரண்டு காண்டமுடையன.  பிரமகாண்டத்தின் பெயர் பிரபல் சுருதி, வேதாந்தம், வேதசிரசு, உபநிடதம், கரும காண்டத்தின் பெயர் அற்பகருதி.

66. வேதத்துக்கு அங்கமாகிய நூல்கள் எவை?

 சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் ஆறுமாம்.

67. சிக்ஷையாவது யாது?

      வேதங்களை உதாத்தம் அநுதாத்தம் முதலிய சுர வேறுபாட்டினால் உச்சரிக்கும் முறைமையை அறிவிப்பது.

68. கற்பமாவது யாது?

வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுட்டிக்கும் முறைமையை அறிவிப்பது.

69. வியாகரணமாவது யாது?

வேதங்களில் எழுத்துச் சொற் பொருளிலக்கணங்களை அறிவிப்பது.

70. நிருத்தமாவது யாது?

   வேதங்களின் சொற்களுடைய பொருளை அறிவிப்பது.

71. சந்தோவிசிதியாவது யாது?

   வேதமந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரையும் அவ்வவைகளுக்கு எழுத்து இவ்வள வென்பதையும் அறிவிப்பது.

72. சோதிடமாவது யாது?

    வேதத்தில் விதிக்கப்பட்ட கருமங்களைச் செய்தற்கு உரிய கால விசேஷங்களை அறிவிப்பது.

73. வேதத்துக்கு உபாங்கமாகிய நூல்கள் எவை?

    புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்குமாம்.

74. புராணமாவது யாது?

    பரமசிவன் உலகத்தைப் படைத்தல், அழித்தல் முதலியவைகளைக் கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது.  உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும் மனுவந்தரங்களும், பாரம்பரியக் கதைகளுமாகிய இவ்வைந்தையும் கூறுதலால், புராணம் பஞ்சலக்கணம் எனவும் பெயர் பெறும்.  இதிகாசமும் புராணத்துள் அடங்கும்.

75. நியாயமாவது யாது?

    வேதப் பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமாகிய பிரமாணம் முதலியவைகளை அறிவிப்பது.

76. மீமாஞ்சையாவது யாது?

   வேதப் பொருளினுடைய தாற்பரியத்தை அறிதற்கு அநுகூலமாகிய நியாயங்களை ஆராய்ச்சி செய்து அறிவிப்பது.  அது பூருவமீமாஞ்சை, உத்திர மீமாஞ்சை என இரண்டு வகைப்படும்.  பூருவ மீமாஞ்சையின் பெயர் கருமமீமாஞ்சை, உத்திர மீமாஞ்சையின் பெயர் பிரமமீமாஞ்சை, வேதாந்த சூத்திரம்.

77. மிருதியாவது யாது?

அவ்வவ் வருணங்களுக்கும் ஆச்சிரமங்களுக்கு உரிய தருமங்களை அறிவிப்பது.

78. உபவேதங்கள் எவை?

ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம் அருத்தவேதம் என்னும் நான்குமாம்.

79. ஆயுர்வேதமாவது யாது?

   எல்லாவற்றையும் அநுட்டித்தற்குச் சாதனமாகிய சரீரத்தை நோயின்றி நிலைபெறச் செய்தற்கு வேண்டப்படுபவைகளை அறிவிப்பது.

80. தனுர்வேதமாவது யாது?

    பகைவர்களாலே நலியாது உலகத்தைக் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலப் பயிற்சியை அறிவிப்பது.

81. காந்தருவ வேதமாவது யாது?

  கடவுளுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் இசை முதலியவைகளை அறிவிப்பது.

82. அருத்த வேதமாவது யாது?

இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுவாகிய பொருள்களைச் சம்பாதிக்கும் உபாயத்தை அறிவிப்பது.

83. சிவாகமம் இருபத்தெட்டுந் தனித்தனி எத்தனை பாதங்களுடையன?

    ஞானபாதம், யோகபதம், கிரியாபதம், சரியாபாதம் என நான்கு பாதங்களுடையன.

84. சிவாகமங்களுக்கு வழிநூல் எவை?

    நாரசிங்கம் முதல் விசிவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழுமாம். நாரசிங்கத்துக்கு மிருகேந்திரம் என்றும் பெயர்.

85. சிவாகமங்களுக்குச் சார்பு நூல் எவை?

தத்துவப்பிரகாசிகை, தத்துவசங்கிரகம், தத்துவத் திரயநிர்ணயம், போககாரிகை, மோஷகாரிகை, நாதகாரிகை, பரமோஷநிராசகாரிகை, இரத்தினத்திரயம என்னும் அட்டப்பிரகரணம் முதலியவைகளாம்.

86. வேதத்தை ஓதுதற்கு அதிகாரிகள் யாவர்?

    உபநயனம் பெற்றவராகிய பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் முதன் மூன்று வருணத்தார்.

87. சூத்திரரும், நான்கு வருணத்துப் பெண்களும் எதற்கு அதிகாரிகள்?

    இதிகாச புராணம் முதலியவைகளை ஓதுதற்கும், வேதத்தின் பொருளைக் கேட்டற்கும் அதிகாரிகள்.

88. சிவாகமத்தை ஓதுதற்கு அதிகாரிகள் யாவர்?

சிவாகமத்திற் கிரியாகாண்டம் ஓதுதற்கு விசேஷதீக்ஷை பெற்ற நான்கு வருணத்தாரும்.  ஞான காண்டம் ஓதுதற்கு நிருவாணதீக்ஷை பெற்ற நான்கு வருணத்தாரும் அதிகாரிகள்.

89. பிராமணர் முதலிய முதன் மூன்று வருணத்தாருக்கு எக்கிரியைகள் செய்யத் தக்கன?

    உபநயனம் மாத்திரம் பெற்றவருக்கு வைதிகக் கிரியைகள் மாத்திரஞ் செய்யத்தக்கன.  உபநயனத்தோடு சிவதீக்ஷையும் பெற்றவருக்கு வைதிகக் கிரியைகளும்.  ஆகமக் கிரியைகளும் கலந்து செய்யத்தக்கன.  ஆகமக் கிரியைகள் செய்யா தொழியின், அவர் பெற்ற சிவதீக்ஷையினால் ஒரு சிறிதும் பயனில்லை.

90. சூத்திரர் முதலாயினாருக்கு எக்கிரியைகள் செய்யத் தக்கன்?

சிவதீக்ஷை பெற்ற சூத்திரருக்கும் அநுலோமருக்கும் ஆகமக் கிரியைகள் செய்யத்தக்கன. சிவதீக்ஷை பெறாத சூத்திரர் முதலானவருக்குப் பிரணவமின்றி நமோந்தமாகிய தேவ தோத்திரங்களைக் கொண்டு கிரியைகள் செய்யத் தக்கன.

91. வேதத்தின் ஞானகாண்டப் பொருளைச் சிவாகமத்துக்கு மாறுபடாவண்ணம் உள்ளபடி அறிவிக்குந் தமிழ் வேதங்கள் எவை?

தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.

92. தேவாரம் அருளிச் செய்தவர் யாவர்?

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.

93. திருவாசகம் அருளிச் செய்தவர் யாவர்?

  மாணிக்கவாசக சுவாமிகள்.

94. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய இந்நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவர்?

சைவ சமய குரவர் எனப் பெயர் பெறுவர்.

95. சிவாகமத்தின் ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்குந் தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை?

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாவிருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்குமாம்.

96. திருவுந்தியார் அருளிச் செய்தவர் யாவர்?

உய்யவந்ததேவ நாயனார்.

97. திருக்களிற்றுப்படியார் அருளிச் செய்தவர் யாவர்?

திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்; இவர் திருவுந்தியார் அருளிச் செய்த உய்யவந்த தேவ நாயனாருடைய சீடராகிய திருவியலூர் ஆளுடைய தேவ நாயனாருடைய சீடர்.

98. சிவஞானபோதம் அருளிச் செய்தவர் யாவர்?

திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவர்.  இவருக்கு சுவேதனப் பெருமாள் என்பது பிள்ளைத் திருநாமம்.

99. சிவஞானசித்தியார், இருபாஇருபஃது என்னும் இரண்டும் அருளிச் செய்தவர் யாவர்?

சகலாகம பண்டிதர் என்னுங் காரணப்பெயர் பெற்ற திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியர்; இவர் மெய்கண்டதேவருடைய சீடர் நாற்பத்தொண்பதின்மருள்ளே தலைவர்.

100. உண்மை விளக்கம் அருளிச் செய்தவர் யாவர்?

திருவதிகை மனவாசகங்கடந்தார்; இவர் மெய்கண்டதேவருடைய சீடர்களுள் ஒருவர்.

101. எஞ்சி நின்ற சிவப்பிரகாசம் முதலிய எட்டும் அருளிச் செய்தவர் யாவர்?

கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியர்; இவர் தில்லைவாழ்ந்தணர்களுள் ஒருவர்; இவர் அருணந்தி சிவாச்சாரியருடைய சீடராகிய திருப்பெண்ணாடக மறைஞானசம்பந்த சிவாச்சாரியருடைய சீடர்.

102. மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியர், மறைஞான சம்பந்த சிவாச்சாரியர், உமாபதி சிவாச்சாரியர் என்னும் நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவர்?

திருக்கைலாச பரம்பரைச் சந்தான குரவர் எனப் பெயர் பெறுவர்.

103. மெய்கண்டதேவருக்கு ஆசாரியர் யாவர்?

திருக்கைலாச மலையினின்றுந் தேவ விமானத்தின் மேற்கொண்டு எழுந்தருளி வந்த பரஞ்சோதி மகாமுனிவர்.

104. பரஞ்சோதி மகாமுனிவருக்கு ஆசாரியர் யாவர்?

சத்தியஞான தரிசனிகள்.

105. சத்தியஞான தரிசனிகளுக்கு ஆசாரியர் யாவர்?

சனற்குமார மகாமுனிவர்.

106. சனற்குமார மகாமுனிவருக்கு ஆசாரியர் யாவர்?

திருநந்திதேவர்.

107. திருநந்திதேவருக்கு ஆசாரியர் யாவர்?

ஸ்ரீ கண்டபரமசிவன்.

 

திருச்சிற்றம்பலம்.


5. சைவபேதவியல்


108. சிவபெருமானைச் சிவாகம விதிப்படி வழிபடுதற்கு யோக்கியதையைப் பிறப்பிப்பது யாது?

    சிவ தீக்ஷை.

109. சிவ தீக்ஷை பெற்ற பின் ஆவசியமாக அநுட்டிக்கப்படும் கருமங்கள் எவை?

இயமநியமங்களும், சந்தியாவந்தனம் சிவலிங்க பூசை, தேவார திருவாசக பாராயணம், சிவாலய கைங்கரியம், சிவாலய தரிசனம், குருவாக்கிய பரிபாலனம், இயன்றமட்டும் மாகேசுர பூசை முதலியவைகளுமாம்.  (கைங்கரியம் = தொண்டு)

110. இயமம் என்பன யாவை?

கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரையும் பொதுமகளிரையும் விரும்பாமையாகிய ஆண்டகைமை, இரக்கம், வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, மனங் கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை என்னும் பத்துமாம்.

111. நியமம் என்பன எவை?

தவம், மனமுவந்திருத்தல், கடவுள் உண்டென்னும் விசுவாசம், பாவத்துக்குப் பயந்து தேடிய பொருளைச் சற்பாத்திரமா யுள்ளவருக்குக் கொடுத்தல், தன்னின் மூத்தோரை வழிபடுதல், உயிர்க்கு உறுதி பயக்கும் உண்மை நூல்களைக் கேட்டல், குலஞ்செல்வம் அதிகாரம் முதலியவைகளினாலே கெருவம் இன்றி அடங்கி யொழுகுதல், தக்கனவுந் தகாதனவும் பகுத்தறிதல், செபம், விரதம் என்னும் பத்துமாம்.

112. அநுட்டிக்கலாகாத கருமங்கள் எவை?

சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திரநிந்தை, தேவத்திரவியங்களை உபயோகஞ் செய்தல், உயிர்க்கொலை முதலியவைகளாம்.

113. அநுட்டானத்தில் வழுகிய பாவங்கள் எப்படி நீங்கும்?

  அறியப்பட்ட பாவங்கள் பிராயச்சித்தங்களினாலே நீங்கும்; அறியப்படாத பாவங்கள் அந்தியேட்டிக் கிரியையினாலே நீங்கும்.

114. தீக்ஷை பெற்றுந் தத்தமக்கு விதிக்கப்பட்ட சைவாசாரங்களை அநுட்டியாது விடுத்தவர் யாது பெறுவர்?

பைசாச புவனத்திற் பிசாசுகளாய் அங்குள்ள போகங்களை அநுபவிப்பர்.

115. சிவதீக்ஷை பெற்றுச் சிவபெருமானை வழிபடுவோர்கள் யாது பெயர் பெறுவார்கள்?

சைவர் என்னும் பெயர் பெறுவார்கள்.

116. சைவர்கள் சாதிபேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?

 ஆதிசைவர்; மகாசைவர்; அநுசைவர்; அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகைப்படுவார்கள்.

117. ஆதிசைவராவார் யாவர்?

  அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய ஐந்து திருமுகங்களினுந் தீக்ஷிக்கப்பட்ட இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய சிவப்பிராமணர். (இருடி = முனிவர்)

118. மகாசைவராவர் யாவர்?

பிரமாவினுடைய முகங்களிற் றோன்றிய இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய வைதிகப் பிராமணருள்ளே சிவதீக்ஷை பெற்றவர்.

119. அநுசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற க்ஷத்திரியரும், வைசியரும்.

120. அவாந்தரசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற சூத்திரர்.

121. பிரவரசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற அநுலோமர்.

122. அந்நியசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற பிரதிலோமர் முதலிய மற்றைச் சாதியார்.

123. சைவர்கள் தீக்ஷா பேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?

சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், நிருவாண தீக்ஷிதர், ஆசாரியர் என நால்வகைப்படுவார்கள்.

124. சமயதீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனத்தை மாத்திரமேனும், சந்தியாவந்தனம் சிவாலயப் பணி என்னும் இரண்டுமேனும் அநுட்டிப்பவர்.

125. சந்தியாவந்தனம் மாத்திரம் அநுட்டிக்குஞ் சமயிகள் யாது பெயர் பெறுவர்?

சந்தியோபாஸ்திபரர் என்னும் பெயர் பெறுவர். (உபாஸ்தி = வழிபாடு)

126. சந்தியாவந்தனம், சிவாலயப் பணி என்னும் இரண்டும் அநுட்டிக் குஞ்சமயிகள் யாது பெயர் பெறுவர்?

சிவகர்மரதர் என்னும் பெயர் பெறுவர்?

(ரதர் = விருப்பமுடையவர்)

127. விசேஷ தீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, என்னும் இரண்டும் பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டும் அநுட்டிப்பவர்.

128. நிருவாண தீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேக்ஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என்னும் மூன்றும் பெற்றுக்கொண்டு, சந்தியா வந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டனோடு ஞான பூசையும் அநுட்டிப்பவர்.

129. ஞானபூசை யென்பது என்ன?

ஞான நூல்களாகிய சைவ சித்தாந்த சாத்திரங்களை விதிப்படியே ஓதல், ஓதுவித்தல், அவைகளின் பொருளைக் கேட்டல், கேட்பித்தல், கேட்டதைச் சிந்தித்தல் என்னும் ஐந்துமாம்.

130. ஆசாரியராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை, ஆசாரியபிஷேகம் என்னும் நான்கும் பெற்றுக் கொண்டு, நித்திய கருமங்களோடு தீக்ஷை, பிரதிட்டை முதலிய கிரியைகளுஞ் செய்பவர்.

131. ஆசாரியராதற்கு யோக்கியர் யாவர்?

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருள்ளும், மனக்குற்றங்களும், உடற்குற்றங்களும் இல்லாதவராய், நிகண்டு கற்று, இலக்கியவாராய்ச்சி செய்து இலக்கணமுந் தருக்கமும், நீதிநூல்களுஞ் சிவபுராணங்களும் படித்தறிந்தவராய், தேவார திருவாசங்களைப் பண்ணோடு ஓதினவராய், சைவாகமங்களை ஓதி அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அறிந்தவராய், சீடர்களுக்கு நல்லொழுக்கத்தையுஞ் சைவ சமயத்தையும் போதித்தலின்கண் அதிசமர்த்தராய் உள்ளவர்.

132. ஆசாரியராதற்கு யோக்கியரல்லாதவர் யாவர்?

நான்கு வருணத்துக்குட்படாதவன், கணவன் இருக்கக் கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், வியபிசாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், முடவன், சொத்திக் கையன், உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், தீரா வியாதியாளன், பதினாறு வயசுக்கு உட்பட்டவன் எழுபது வயசுக்கு மேற்பட்டவன், கொலை களவு முதலிய தீயொழுக்க முடையவன்,  சைவாகமவுணர்ச்சியில்லாதவன் முதலானவர். (சொத்தி = ஊனம்).

133. இக்குற்றமுடைய ஆசாரியரைக் கொண்டு தீக்ஷை பிரதிட்டை முதலியன செய்வித்தவர் யாது பெறுவர்?

அவைகளால் ஆகும் பயனை இழந்து, நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.  ஆதலினாலே, குருலக்கணங்கள் அமையப் பெற்ற ஆசாரியரைக் கொண்டே தீக்ஷை, பிரதிட்டை முதலியன செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.

134. இன்ன இன்ன வருணத்தார் இன்ன இன்ன வருணத்தாருக்கு ஆசாரியராகலாம் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; பிராமணர், பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருக்கும், க்ஷத்திரியர், க்ஷத்திரியர் முதலிய மூன்று வருணத்தாருக்கும், வைசியர், வைசியர் முதலிய இரண்டு வருணத்தாருக்கும், சூத்திரர், சூத்திரருக்குஞ் சங்கரசாதியருக்கும் ஆசாரியராகலாம்.  இந்நியமங் கிரியாகாண்டத்தின் மாத்திரமேயாம;  ஞான காண்டத்திலோ வெனின், நான்கு வருணத்துள்ளும் உயர்ந்த வருணத்தாருக்குத் தாழ்ந்த வருணத்தாரும் ஆசாரியராகலாம்.

135. சிவஞானத்தை அடைய விரும்பி சீடன் தான் அடைந்த ஆசாரியரிடத்தே சிவஞானம் இல்லையாயின், யாது செய்தல் வேண்டும்?

வண்டானது தான் அடைந்த பூவினிடத்தே தேன் இல்லையாயின், அதனை விட்டுத் தேன் உள்ள பூவைத் தேடி அடைவது போலச், சீடன் தான் அடைந்த ஆசாரியரிடத்தே சிவஞானம் இல்லையாயின், அவரை விட்டுச் சிவஞானம் உள்ள ஆசாரியரைத் தேடியடையலாம்; அடையினும், மூன்று சந்தியினும், கிரியை உபதேசித்த முந்திய ஆசாரியரைத் தியானஞ் செய்து கொண்டே, ஞானம் உபதேசித்த பிந்திய ஆசாரியரைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

136. இன்ன இன்ன வருணத்தார் இன்ன இன்ன தீக்ஷை பெறுதற்கு யோக்கியர் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; நான்கு வருணத்தாரும், அநுலோமர் அறுவரும் ஆகிய பத்துச் சாதியாரும் ஒளத்திரி தீக்ஷை பெறுதற்கு யோக்கியர்.  மற்றைச் சாதியார் ஒளத்திரி தீக்ஷைக்கு யோக்கியரல்லர்.  ஒளத்திரி தீக்ஷைக்கு அங்கமாகிய நயன தீக்ஷை, பரிச தீக்ஷை, வாசக தீக்ஷை, மானச தீக்ஷை, சாத்திர தீக்ஷை, யோக தீக்ஷை என்னும் ஆறனுள்ளுந் தத்தஞ் சாதிக்கும் பரிபக்குவத்துக்கும் ஏற்ற தீக்ஷை பெறுதற்கு யோக்கியர்.  ஆசாரியர் தமது பாதோதகத்தைக் கொடுத்தலும் ஒரு தீக்ஷையாம்; சீடர் அதனைச் சிரத்தையோடும் ஏற்றுச் சிரசின் மீது புரோக்ஷித்து ஆசமனஞ் செய்யக் கடவர்.

137. ஒளத்திரி தீக்ஷையாவது யாது?

ஓமத்தோடு கூடச் செய்யப்படும் தீக்ஷை. (ஹோத்திரம் = ஓமம்)

138. ஒளத்திரி தீக்ஷை எத்தனை வகைப்படும்?

ஞானவதி, கிரியாவதி என இரண்டு வகைப்படும்.

139. ஞானவதியாவது யாது?

குண்டம், மண்டலம், அக்கினி, நெய், சுருக்குச்சுருவ முதலியவைகளெல்லாம் மனத்தாற் கற்பித்துக் கொண்டு, விதிப்படி அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்து, சீடனது பாசத்தைக் கெடுக்குந் தீக்ஷையாம்.  இது சத்தி தீக்ஷை எனவும் பெயர் பெறும்.

140. கிரியாவதியாவது யாது?

குண்ட மண்டலங்களைப் புறத்தேயிட்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்து, சீடனது பாசத்தைக் கெடுக்குந் தீக்ஷையாம்.  இது மாந்திரி தீக்ஷை எனவும் பெயர் பெறும்.

141. ஞானவதி, கிரியாவதி என்னும் இரண்டுந் தனித்தனி எத்தனை வகைப்படும்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என மூன்று வகைப்படும்.

 

திருச்சிற்றம்பலம்.


 6.விபூதி இயல்



142. சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?

விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.

143. விபூதியாவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய திருநீறு, விபூதியின் பெயர்: பசிதம், பசுமம், க்ஷ¡ரம், இர¨க்ஷ.

144. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெண்ணிற விபூதியே தரிக்கத் தகும்; கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.

145. விபூதியை எப்படி எடுத்து வைத்துக்கொள்ளல் வேண்டும்?

புது வஸ்திரத்தினாலே வடித்தெடுத்துப் புதுப் பாண்டத்தினுள்ளே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பகம் முதலிய சுகந்த புஷ்பங்களை எடுத்து அதனுள்ளே போட்டுப், புது வஸ்திரத்தினாலே அதன் வாயைக் கட்டி வைத்துக்கொள்ளல் வேண்டும்.

146. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக் குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும். குடுக்கைகளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைத் தரிக்கலாகாது.

147. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.

148. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழிவிரல்களினால் இடப்பக்கந் தொடுத் திழுத்துப் பெருவிரலிரலினால் வலப் பக்கந் தொடுத் திழுத்துத் தரித்தலுமாம். வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.

149. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்து விட்டு, அந்தத் தலத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

150. எவ்வெவர் முன் எவ்வெப்பொழுது விபூதி தரிக்கலாகாது?

சண்டாளர் முன்னும், பாவிகண் முன்னும், அசுத்த நிலத்தும், வழிநடக்கும் போதும், கிடக்கும் போதுந் தரிக்கலாகாது.

151. எவ்வெக் காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?

சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயனத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ¨க்ஷ யில்லாதவர் தீண்டிய போதும், பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.

152. விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் சமமாகும்?

சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித்துக்கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.

153. ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல மீட்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

154. எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?

ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீ¨க்ஷயில்லாதார் தந்த விபூதியுந் தரிக்கலாகாது.

155. சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

156. சுவாமிக்குச் சாத்தப்பட்ட விபூதிப் பிரசாதம் யாவராயினுங் கொண்டுவரின், யாது செய்தல் வேண்டும்?

கொண்டு வந்தவர் தீ¨க்ஷ முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் வேண்டும்; அப்படிபட்டவரல்லராயின், அவ்விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.

157. விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
( உத்தூளனம் = திருநீறுபூசுதல்)

158. திரிபுண்டரமாவது யாது?

வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல வளவினாதாகத் தரித்தல் வேண்டும்.

159. திரிபுண்டரம் எப்படி தரித்தல் வேண்டும்?

வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல வளவினாதாகத் தரித்தல் வேண்டும்.

160. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங் கொள்வதும் உண்டு.

161. திரிபுண்டரந் தரிக்குமிடத்து இன்ன இன்ன தானங்களில் இவ்வளவு இவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெல்லை நீளமும், மார்ப்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வொரங்குல நீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டும். இவ்வெல்லையிற் கூடினும் குறையினுங் குற்றமாம்.

162. எல்லோரும் எப்பொழுதும் விபூதியைச் சலத்திற் குழைத்துத் தரிக்கலாமா?

தி¨க்ஷயுடையவர் சந்தியாகால மூன்றினுஞ் சலத்திற் குழைத்துத் தரிக்கலாம்; மற்றைக் காலங்களிற் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும். தீ¨க்ஷ இல்லாதவர் மத்தியானத்துக்குப் பின் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும்.

163. விபூதிதாரணம் எதற்கு அறிகுறி?

ஞானாக்கினியினாலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்குஞ் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி.


திருச்சிற்றம்பலம்


7.உருத்திராக்ஷவியல்



164.  உருத்திராக்ஷமாவது யாது?

தேவர்கள் திரிபுரத்தசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பஞ் செய்து கொண்ட பொழுது, திருக்கைலாசபதியுடைய மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரிற்றோன்றிய மணியாம்.

165. உருத்திராக்ஷந் தரித்தற்கு யோக்கியர் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசார முடையவராய் உள்ளவர்.

166. உருத்திராக்ஷந் தரித்துக்கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் யாது பெறுவர்?

தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

167. எவ்வெக் காலங்களில் உருத்திராக்ஷம் ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?

சந்தியாவந்தம், சிவமந்திரசெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலயதரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணங் கேட்டல், சிராத்தம் முதலியவை செய்யுங் காலங்களில் ஆவசியகமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்; தரித்துக்கொள்ளாது இவை செய்தவருக்குப் பலம் அற்பம்.

168. ஸ்நான காலத்தில் உருத்திராக்ஷதாரணங் கூடாதா?

கூடும்; ஸ்நானஞ் செய்யும் பொழுது உருத்திராக்ஷ மணியிற் பட்டு வடியுஞ் சலம் கங்கா சலத்துக்குச் சமமாகும்.

169. உருத்திராக்ஷத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

ஒருமுக மணி முதற் பதினாறுமுக மணி வரையும் உண்டு.

170. உருத்திராக்ஷ மணியை எப்படிக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்?

பொன்னாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும் முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு, முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்.

171. உருத்திராக்ஷந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், பூணூல் என்பவைகளாம்.

172. இன்ன இன்ன தானங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; குடுமியிலும் பூணூலிலும் ஒவ்வொரு மணியும், தலையிலே இருபத்திரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணி அல்லது அவ்வாறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும். குடுமியும் பூணூலும் ஒழித்த மற்றைத் தானங்களிலே அவ்வத்தானங் கொண்ட அளவு மணி தரித்தலும் ஆகும்.

173. இந்தத் தானஙக ளெல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்ஷந் தரித்துக்கொள்ளலாமா?

குடுமியிலும், காதுகளிலும், பூணுலிலும் எப்போதுந் தரித்துக்கொள்ளலாம்; மற்றைத் தானங்களிலோ வெனின், சயனத்திலும் மலசல மோசனத்திலும், நோயினும், சனனாசெளச மரணாசெளசங்களிலுந் தரித்துக்கொள்ளலாகாது..

174. உருத்திராக்ஷதாரணம் எதற்கு அறிகுறி?

சிவபெருமானுடைய திருக்கண்ணிற் றோன்றுந் திருவருட்பேற்றிற்கு அறிகுறி.


திருச்சிற்றம்பலம்



8. பஞ்சாக்ஷரவியல்



175. சைவசமயிகள் நியமமாகச் செபியக்கற்பாலதாகிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).

176. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ¨க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

177. ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை எப்படிப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்?

தத்தம் வருணத்துக்கும் ஆச்சிரமத்துக்குந் தீ¨க்ஷக்கும் ஏற்பக் குருமுகமாகவே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

178. மந்திரோபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?

குருவை வழிபட்டு, அவருக்கு வருடந்தோறும் இயன்ற தக்ஷணை கொடுத்துக்கொண்டே செபித்தல் வேண்டும்.

179. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே நியமமாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டுருவாயினும், ஐம்பதுருவாயினும், இருபத்தைந்துருவாயினும், பத்துருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

180. செபத்துக்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?

செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். (விரலிறை=கட்டைவிரல்)

181. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?

உருத்திராக்ஷமணி கொண்டு செய்வது உத்தமம்.

182. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?

இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியுங் கொள்ளத் தகும். இல்வாழ்வான் நூற்றெட்டுமணி ஐம்பத்து நான்கு மணிகளாலுஞ் சபமாலை செய்து கொள்ளலாம்.

183. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?

இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டுமுக மணியும், பதின்மூன்று முக மணியுஞ் செபமாலைக்கு ஆகாவாம்; அன்றியும், எல்லாமணியும் ஒரே விதமாகிய முகங்களையுடையனவாகவே கொள்ளல் வேண்டும்; பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை குற்றமுடைத்து.

184. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழிழையினா லாக்கிய கயிற்றினாலே கோத்தல் வேண்டும்.

185. செபமாலையை எப்படிச் செய்தல் வேண்டும்?

முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு என்றும் பெயர்.

186. செபமாவது யாது?

தியானிக்கப்படும் பொருளை எதிர்முக மாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.

187. மந்திரம் என்பதற்குப் பொருள் யாது?

நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே, மந்திரம் என்னும் பெயர், நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்குஞ் சிவசத்திக்குமே செல்லும்; ஆயினும், வாச்சியத்துக்கும் வாசகத்துக்கும் பேதமில்லாமை பற்றி, உபசாரத்தால் வாசகத்துக்குஞ் செல்லும்; எனவே, மந்திரம் வாச்சிய மந்திரம், வாசகமந்திரம் என இரு திறப்படும் என்ற படியாயிற்று. [மந்=நினைப்பவன்; திர=காப்பது]

188. மந்திரசெபம் எத்தனை வகைப்படும்?

மானசம், உபாஞ்சு, வாசகம் என மூவகைப்படும்.

189. மானசமாவது யாது?

நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருத்தி மனசினாலே செபித்தலாம்.

190. உபாஞ்சுவாவது யாது?

தன் செவிக்கு மாத்திரங் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்றும் பெயர்.

191. வாசகமாவது யாது?

அருகிலிருக்கும் பிறர் செவிக்குங் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

192. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசங் கோடி மடங்கு பலமுந் தரும்.

193. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

வடக்குமுக மாகவேனும் கிழக்குமுக மாகவேனும், மரப்பலகை, வஸ்திரம், இரத்தின கம்பளம், மான்றோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்ற தொன்றிலே, முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத் தொடையினுள்ளே வலப் புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்த்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

194. எப்படி இருந்து செபிக்க லாகாது?

சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கெளபீனந் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரந் தரியாதும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றையும், புலையர் முதலாயினோரையும் பார்த்துக் கொண்டுஞ் செபிக்கலாகாது. செபஞ் செய்யும் போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்பல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாவாம்.

195. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

பிறர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகக் செபிக்கிற் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனசிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயக மணிக்கு அடுத்த முகமேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும் முத்தியின் பொருட்டு மேனோக்கித் தள்ளியுஞ் செபித்து, பின்பு நாயகமணி கைப்பட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும் போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படிற் பாவமுண்டாம்.

196. இன்ன இன்ன பொழுது செபித்தவர் போக மோக்ஷங்களுள் இன்னது இன்னது பெறுவர் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; பிராணவாயுவானது இடப்பக்க நாடியாகிய இடையிலே நடக்கும் போது செபித்தவர் போகத்தையும், வலப்பக்க நாடியாகிய பிங்கலையிலே நடக்கும் போது செபித்தவர் மோக்ஷத்தையும், நடுநிற்கு நாடியாகிய கழுமுனையிலே நடக்கும் போது செபித்தவர் போகம் மோக்ஷம் என்னும் இரண்டையும் பெறுவர்.

197. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபம் எவ்வெக் காலங்களிலே விசேஷமாகச் செய்யத் தக்கது?

அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், பன்னிரண்டு மாதப்பிறப்பு, கிரகணம், சிவராத்திரி, அர்த்தோதயம், மகோதயம் முதலாகிய புண்ணிய காலங்களிலே புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து, தியானஞ் செபம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும். சித்திரை, ஐப்பசி என்னும் இவ்விரண்டு மாதப் பிறப்பும் விஷ¤ எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறத்தற்கு முன்னெட்டு நாழிகையும் பின்னெட்டு நாழிகையும் புண்ணிய காலம். ஆடி மாதப் பிறப்பு, தக்ஷ¢ணாயனம் எனப்படும்.

இதிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு உத்தராயணம் எனப்படும்; இதிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி என்னும் இந்நான்கு மாதப் பிறப்பும் விட்டுணுபதி எனப்படும்; இவைகளிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். ஆனி, புரட்டாதி, மார்கழி, பங்குனி என்னும் இந்நான்கு மாதப்பிறப்பும் சடசீதிமுகம் எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். சூரிய கிரகணத்திலே பரிசகாலம் புண்ணிய காலம்; சந்திர கிரகணத்திலே விமோசன காலம் புண்ணிய காலம். அர்த்தோதயமாவது தை மாதத்திலே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும் விதிபாத யோகமுங் கூடிய காலம். மகோதயமாவது தை மாதத்திலே திங்கட்கிழமையும் அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும், விதிபாத யோகமுங் கூடிய காலம்.

198. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபத்தாற் பயன் என்னை?

ஸ்ரீ பஞ்டாக்ஷரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நிங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித் தருளுவர்.



திருச்சிற்றம்பலம்



9.சிவலிங்கவியல்



199. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?

சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும். [சைலம்=சிலையாலாகியது]

200. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?

மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.

201. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் இருவகைப்படும்.

202. பரார்த்த லிங்கமாவது யாது?

சிவபெருமான் சங்கார காலம் வரையுஞ் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அநுக்கிரக்கப் பெறும் இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம்=அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல், தாவரம் எனினும், திரம் எனினும், நிலையியற் பொருள் எனினும் பொருந்தும்.

203. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?

சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கமாவது தானே தோன்றியது. காண லிங்கமாவது விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவிக லிங்கமாவது விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கமாவது இருடிகளாற் றாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினாற் றாபிக்கப்பட்டதும் அது. மானுடலிங்கமாவது மனிதராற் றாபிக்கப்பட்டது.

204. இவ்வைவகை யிலிங்கங்களும் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; மானுட லிங்கத்தின் உயர்ந்தது ஆரிட லிங்கம்; அதனின் உயர்ந்தது தைவிக லிங்கம்; அதனின் உயர்ந்தது காணலிங்கம்; அதனின் உயர்ந்தது சுயம்பு லிங்கம்.

205. பரார்த்த லிங்கப் பிரதிட்டை, பரார்த்த பூஜை, உற்சவம் முதலியவை செய்தற்கு அதிகாரிகள் யாவர்?

ஆதிசைவர்களுக்குள்ளே, சமயதீ¨க்ஷ, விசேஷதீ¨க்ஷ, நிருவாணதீ¨க்ஷ, ஆசாரியாபி§க்ஷகம் என்னும் நான்கும் பெற்றவர்களாய்ச் சைவாகமங்களிலே மகாபாண்டித்திய முடையவர்களாய் உள்ளவர்கள்.

206. திருக்கோயிலுள் ளிருக்குஞ் சிவலிங்கம் முதலிய திருமேனிகள் எல்லாரலுமே வழிபடற் பாலானவா?

ஆம்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும் மார்க்கத்தாராலும் வழிபடற் பாலனவேயாம்; ஆயினும், அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும்; படவே, அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.

207. சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

சரியையாளர்கள் பகுத்தறித லில்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வர்.

208. கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினிபோல, அவ்வம் மந்திரங்களினாலும் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.

209. யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

யோகிகள், யோகிகளுடைய இருதய மெங்கும் இருக்குஞ் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும் இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம் மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று அருள் செய்வர்.

210. ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்/ அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக், கருணை மிகுதியினால் அவ்வன்பே தாமாகி, எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.

211. சிவபெருமானுடைய திருவுருவஞ் சிவசக்தி வடிவம் என்று முன் செல்லப்பட்ட தன்றோ: இங்கே அவர் திருவுருவம் மந்திர வடிவம் என்றது என்னை?

சிவபெருமானுக்கு வாச்சிய மந்திரமாகிய சிவசத்தியே உண்மை வடிவம்; அச்சிவசத்தி, கரியினிடத்தே அக்கினி போல வாசக மந்திரத்தினிடத்தே நின்று சாதகருக்குப் பயன் கொடுக்கும். ஆதலினாலே, சிவபெருமானுக்குச், சிவசத்தியினால், வாசக மந்திரத்தோடு சம்பந்தம் உண்டு. அச்சம்பந்தம் பற்றி வாசக மந்திரஞ் சிவபெருமானுக்கு உபசார வடிவமாம்.

212. மந்திரநியாசம் என்றது என்ன?

வாச்சிய மந்திரங்களாகிய சிவசக்தி பேதங்களை உள்ளத்தில் சிந்தித்து, அவைகளை அறிவிக்கும் வாசக மந்திரங்களை உபசரித்துச், சிவபெருமானுக்கு உபசார வடிவத்தை அம்மந்திரங்களினாலே சிர முதலாக அமைத்தலாம். [நியசித்தல்=வைத்தல், பதித்தல்]

213. இட்டலிங்கமாவது யாது?

ஆசாரியர் விஷேதீ¨க்ஷயைப் பண்ணி, சீடனைப் பார்த்து, "நீ உள்ளளவுங் கைவிடாது இவரை நாடோறும் பூசி" என்று அநுமதி செய்து, "அடியேன் இச்சரீரம் உள்ளவரையுஞ் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளேன்" என்று பிரதிஞ்ஞை செய்வித்துக்கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம். இது ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் எனவும் பெயர் பெறும்.

214. இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?

வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், லோகஜ லிங்கம், சைல லிங்கம், க்ஷணிக லிங்கம், எனப் பலவகைப்படும்.

215. இட்டலிங்கம் பூசைக்கு அதிகாரிகள் யாவர்?

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் அநுலோமர் அறுவருமாகிய பத்துச் சாதியாருள்ளும், அங்ககீன ரல்லாதவர்கள் இட்டலிங்க பூசைக்கு அதிகாரிகள்; இவர்களுள்ளும், பிணியில்லாதவராய், இடம் பொருளேவல்கள் உடையவராய்ச், சிவபூசா விதி, பிராயச்சித்த விதி, மார்கழி மாதத்துக் கிருதாபி§க்ஷகம் முதலாகப் பன்னிரண்டு மாதமுஞ் செய்யப்படும் மாதபூசாவிதி, சாம்பவற்சரிகப் பிராயச் சித்தமாகச் சாத்தப்படும் பவித்தர விதி முதலியவைகளை நன்றாக அறிந்தவராய், அறிந்தபடியே அநுட்டிக்க வல்லவராய் உள்ளவர் மாத்திரமே, வாண முதலிய சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்டு பூசை பண்ணலாம். மற்றவரெல்லாரும் க்ஷணிக லிங்க பூசையே பண்ணக் கடவர். அவர் குளிக்கப் புகுந்து சேறு பூசிக்கொள்வது போலச் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளப் புகுந்து பாவந் தேடிக்கொள்வது புத்தி யன்று.

216. எவ்வகைப்பட்ட சிவலிங்கம் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்?

சிவாகம விதிவிலக்குகளை ஆராய்ந்து, சிவலிங்கங்களைப் பரீ¨க்ஷ செய்து, யாதொரு குற்றமும் இல்லாததாய் நல்லிலக்கணங்கள் அமையப்பெற்றதாய் உள்ள சிவலிங்கத்தையே பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.

217. க்ஷணிக லிங்கமாவது யாது?

பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாம்.

218. க்ஷணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?

மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்ஷம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பமாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.

219. மேலே சொல்லப்பட்ட பத்துச் சாதியாருள் அங்ககீனரும் மற்றைச் சாதியாருஞ் சிவபூசை பண்ண லாகாதா?

தங்கள் தங்கள் அதிகாரத்திற் கேற்ப ஆசாரியர் பண்ணிய தீ¨க்ஷயைப் பெற்றுத் தூல லிங்கமாகிய தூபியையேனுந் திருக்கோபுரத்தையேனும் பத்திர புஷ்பங்களால் அருச்சித்துத் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதே அவர்களுக்குச் சிவபூசை; சூரிய விம்பத்தின் நடுவே சதாசிவமூர்த்தி அநவரதமும் எழுந்தருளி யிருப்பர் என்று நினைந்து அவருக்கு எதிராகப் புட்பங்களைத் தூவித் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதும் அவர்களுக்குச் சிவபூசை.

220. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது புசிக்கின் என்னை?

பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம் புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்குஞ் சமம்; அப்படிப் புசித்தவனைத் தீண்டல் காண்டல்களும் பாவம். ஆதலால், ஒரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவன், ஆசாரியரை அடைந்து அதற்குப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.

221. ஞானநிட்டை யுடைவர் சிவபூசை முதலிய நியமங்களைச் செய்யாது நீக்கிவிடலாமா?

நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவர் அறியாமற்றானே நீங்குதல் போல, ஞானநிட்டையுடையவருக்குச் சிவபூசை முதலிய நியமங்கள் தாமே நீங்கிற் குற்றமில்லை; அப்படி யன்றி அவர் தாமே அவைகளை நீக்குவாராயின், நரகத்து வீழ்தல் தப்பாது.

222. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டவர் சனன மரணா செளசங்களில் யாது செய்தல் வேண்டும்?

திடபத்தி யுடையவர் ஸ்நானஞ் செய்து, ஈர வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, தாமே சிவபூசை பண்ணலாம்; ஸ்நானஞ் செய்தமை முதற், பூசை முடிவுவரையுந் தாமரையிலையில் நீர் போல அவரை ஆசெளசஞ் சாராது. திடபத்தி யில்லாதவர், ஆசெளசம் நீங்கும் வரையும் தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்துகொண்டு, அப்பூசை முடிவிலே புறமண்டபத்தி னின்று புட்பாஞ்சலித்திரயஞ் செய்து, நமஸ்காரம் பண்ணல் வேண்டும். (அந்தரியாகம்-உட்பூசை)

223. வியாதினாலே தங் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது செய்தல் வேண்டும்?

தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.

224. சிவபூசை யெழுந்தருளப் பண்ணிக்கொண்ட பெண்கள் பூப்பு வந்தபோது யாது செய்தல் வேண்டும்?

மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர ஸ்நானஞ் செய்து கொண்டு, அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்; நான்காம் நாள் ஸ்நானஞ் செய்து, பஞ்ச கவ்வியமேனும், பாலேனும் உட்கொண்டு; மீட்டும் ஸ்நானஞ் செய்து, சிவபூசை செய்தல் வேண்டும், அம்மூன்று நாளும் அந்தரியாகஞ் செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.

225. பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த ஆசெளசம், வியாதி இவைகள் வரின், யாது செய்தல் வேண்டும்?

வருணத்தாலுந் தீ¨க்ஷயாலுந் தம்மோ டொத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.

226. ஆசெளசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை செய்வித்தவர் யாவரும், ஆசெளச முதலியவை நீங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?

பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறுருச் செபித்துத் தாம் பூசை செய்தல் வேண்டும்.

227. சிவலிங்க காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?

அந்தரியாக பூசை செய்து, பால் பழம், முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல் வேண்டும் அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொருலிங்கத்தை ஆசாரியர் பிரதிட்டை செய்துதரக் கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது பூசை செய்தல் வேண்டும்.

228. சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷபூசை செய்யத்தக்க காலங்கள் எவை?

பஞ்சாக்ஷரவியலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களுஞ் சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாச முழுதினும் நாடோறும் நித்திய பூசையே யன்றி அதற்குமுன் உஷக்கால பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும் (சென்மத்திரயங்களாவன; பிறந்த நக்ஷத்திரமும் அதற்குப் பத்தா நக்ஷத்திர்மும், அதற்குப் பத்தா நக்ஷத்திரமுமாம்.)

229. சென்மத்திரய பூசையால் வரும் விசேஷ பலம் என்னை?

சென்மத்திரயந்தோறும் சிவலிங்கப்பெருமானூக்குப் பதமந்திரங்கொண்டு பாலினாலும் சர்க்கரையினாலும் விசேஷமாக அபிஷேகஞ் செய்து, சுகந்தத் திரவியங்கள் கலந்த சந்தனக் குழம்பு சாத்திப் பாயச முதலியன நிவேதனஞ் செய்துகொண்டுவரின், உற்பாதங்களும், பயங்கரமாகிய கிரக பிடைகளும், சகல வியாதிகளும் நீங்கும்.


திருச்சிற்றம்பலம்



 

10. நித்தியகருமவியல்


230. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?

    சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுவது உத்தமம்; மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம்; உதயத்தில் எழுவது அதமம்.

சிவத்தியானாதி

231. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாக வேனும் இருந்து, விபூதி தரித்துக் கொண்டு, குரு உபதேசித்த பிரகாரஞ் சிவபெருமானைத் தியானித்துச் சிவமூலமந்திரத்தை இயன்றமட்டுஞ் செபித்து, அருட்பாக்களினாலே உச்ச விசையோடு தோத்திரஞ் செய்தல் வேண்டும்.

232. சிவத்தியான முதலியவை செய்த பின் செய்யத் தக்கவை யாவை?

அவசியகருமம், செளசம், தந்ததாவனம், ஸ்நானம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவாலய தரிசனம், சிவசாத்திர பாராயணம், தேவார திருவாசக பாராயணம், மத்தியான சந்தியாவந்தனம், போசனம், சிவசாத்திர படனம், சாயங்கால சந்தியாவந்தனம், சிவாலய தரிசனம், சிவபுராண சிரவணம், சயனம் என்பவைகளாம்.

அவசிய கருமம்

233. மலசலமோசனஞ் செய்யத் தக்க இடம் யாது?

திருக்கோயிலெல்லைக்கு நானூறு முழ தூரத்தின தாய் ஈசானதிக்கொழிந்த திக்கினிடத்ததாய் உள்ள தனியிடமாம்.

234. மலசலமோசனஞ் செய்யத் தகாத இடங்கள் எவை?

வழி, குழி, நீர்நிலை, நீர்க்கரை, கோமயம் உள்ள இடம், சாம்பர் உள்ள இடம், சுடுகாடு, பூந்தோட்டம், மரநிழல், உழுத நிலம், அறுகம்புல்லுள்ள பூமி, பசுமந்தை நிற்கும் இடம், இடி வீழிடம், காற்றுச் சுழலிடம், புற்று, அருவி பாயும் இடம், மலை என்பவைகளாம்.

235. மலசலமோசனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

 மெளனம் பொருந்திப், பூணூலை வலக்காதிலே சேர்த்துத் தலையையும், காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றிப், பகலிலும் இரண்டு சந்தியா காலங்களிலும் வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும், நாசி நுனியைப் பார்த்துக் கொண்டிருந்து, மலசல மோசித்தல் வேண்டும்.  சந்தியாகாலம் இரண்டாவன; இராக்காலத்தின் இறுதிமுகூர்த்தமும், பகற் காலத்தின் இறுதி முகூர்த்தமுமாம். (முகூர்த்தம் - இரண்டு நாழிகை)

செளசம்

236. மலசல மோசனஞ் செய்யின் எப்படிச் செளசஞ் செய்தல் வேண்டும்?

எழுந்து புண்ணிய தீர்த்த மல்லாத சலக்கரையை அடைந்து, சலத்துக்கு ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு, மூன்று விரலால் அள்ளிய மண்ணுஞ்சலமுங் கொண்டு இடக்கையினாலே குறியை ஒருதரமும், குதத்தை ஐந்து தரத்துக்கு மேலும், இடக்கையை இடையிடையே ஒவ்வொரு தரமும், பின்னும் இடக்கையைப் பத்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து; கால்களை முழங்கால் வரையுங் கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரமுங் கழுவிச் சுத்தி செய்து, செளசஞ் செய்த இடத்தைச் சலத்தினால் அலம்பிவிட்டு, அவ்விடத்தினின்று நீங்கி, வேறொரு துறையிலே போய், வாயையும் கண்களையும் நாசியையுங் காதுகளையுங் கைகால்களிலுள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத்தரஞ் சலம் வாயிற் கொண்டு, இடப் புறத்திலே கொப்பளித்துத், தலைக்கட்டு இல்லாமற் பூணூலை முன்போலத் தரித்துக், குடுமியை முடித்து, மந்திரங்கள் உச்சரியாது ஒரு தரமும் மந்திரங்கள் உச்சரித்து ஒரு தரமுமாக இரண்டு தரம் ஆசமனம் பண்ணல் வேண்டும். (ஆசமனம் - உறிஞ்சுதல்)

237. சலமோசனஞ் செய்யின் எப்படி செளசஞ் செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமுங்கொண்டு, குறியை ஒரு தரமும், இடக்கையை ஐந்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து மூன்று தரமும், இரண்டு கால்களையும் ஒவ்வொரு தரமுஞ் சுத்தி செய்து, நான்கு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

238. செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்லையாயின் யாது செய்தல் வேண்டும்?

பாத்திரத்திலே சலம் மொண்டு ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசல மோசித்துச் செளசஞ் செய்துவிட்டுப், பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலம் மொண்டு, வாய் கொப்பளித்துக், கால் கழுவி, ஆசமனம் பண்ணல் வேண்டும்.  சல பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு சலமல விசர்க்கஞ் செய்யலாகாது. (விசர்க்கம் = கழித்தல்)

239. ஆசமனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

கிழக்கையேனும் வடக்கையேனும் நோக்கிக், குக்குடாசனமாக இருந்து, இரண்டு முழங்கால்களுக்கும் இடையே கைகளை வைத்துக்கொண்டு, வலக்கையை விரித்துப் பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.

240. குக்குடாசனமாவது யாது?

இரண்டு பாதங்களையும் கீழே வைத்துக் குந்திக் கொண்டிருத்தல்.

241. தடாக முதலியவற்றில் எப்படி ஆசமனஞ் செய்தல் வேண்டும்?

முழங்காலளவினதாகிய சலத்திலே நின்று, இடக் கையினாலே சலத்தைத் தொட்டுக்கொண்டு, வலக்கையினாலே ஆசமனம் பண்ணல் வேண்டும்.  முழங்காலளவினதாகிய சலத்திற் குறைந்தால் கரையை அலம்பி, அதிலிருந்து கொண்டு ஆசமனம் பண்ணல் வேண்டும்.

தந்ததாவனம்

242. தந்த சுத்திக்குக் கருவியாவன யாவை?

விதிக்கப்பட்ட மரங்களின் கொம்பும் இலையுந் தூளுமாம்.

243. இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

மருது, இத்தி, மா, தேக்கு, நாவல், மகிழ், ஆத்தி, கடம்பு, விளா, நாயுருவி, அசோகு, குருக்கத்தி, பூல், வேல், சம்பகம் என்பவைகளாம்.

244. துறவிக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

பெருவாகை, நொச்சி, பெருங்குமிழ், புன்கு கருங்காலி, ஆயில், மருது என்பவைகளாம்.

245. தந்த காட்டம் எப்படிப்பட்டதாய் இருத்தல் வேண்டும்?

நேரியதாய்த், தோலோடு பசப்புள்ளதாய்க், கணுவுந் துளையும் இடைமுறிதலும் இல்லாததாய், சிறுவிரற் பருமை யுடையதாய் இருத்தல் வேண்டும்.  இல்வாழ்வானுக்குப் பன்னிரண்டங்குல நீளமும், துறவிக்கு எட்டங்குல நீளமும், பெண்களுக்கு நாலங்குல நீளமுங் கொள்ளப்படும். (காட்டம் = குச்சி)

246. தந்த சுத்திக்குக் கருவி யாகாதன யாவை?

பட்டமரம், பாளை, வைக்கோல், கைவிரல், செங்கல், கரி, சாம்பல், மணல் என்பவைகளாம்.

247. தந்த சுத்தி எப்படிச் செய்தல் வேண்டும்?

விதிக்கப்பட்ட தந்த காட்டத்தையேனும், இலையையேனுஞ் சலத்தினாலே கழுவி, மெளனம் பொருந்திக், கிழக்கு நோக்கியேனுங் குக்குடாசனமாக இருந்துகொண்டு, பல்லின் புறத்தையும் உள்ளையுஞ் செவ்வையாகக் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பிளப்பை மும்மூன்று தரம் உண்ணாவளவாக ஓட்டி, நாக்கை வழித்து, இடப்புறத்தில் எறிந்துவிட்டுச் சலம் வாயிற்கொண்டு, பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கைகால்களையுங் கழுவி ஆசமனம் பண்ணல் வேண்டும்.  நின்றுகொண்டாயினும் நடந்து கொண்டாயினும், போர்த்துக்கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாகாது.

ஸ்நானம்

248. ஸ்நானஞ் செய்யத் தக்க நீர்நிலைகள் யாவை?

நதி, நதிசங்கமம், ஓடை, குளம், கேணி, மடு முதலியவைகளாம்.  நதிசங்கமமாவது இரண்டு யாறுகள் சந்தித்த இடமாம்;  யாறுங் கடலுங் கூடிய இடம் எனினும் அமையும்.

249. ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?

கெளபீனத்தைக் கசக்கிப், பிழிந்து, தரித்து, இரண்டு கைகளையுங் கழுவி வஸ்திரங்களைத் தோய்த்து, அலம்பித், தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.

250. ஸ்நானம் எப்படிச் செய்தல் வேண்டும்?

ஆசனம் பண்ணிச் சகளீகரணஞ் செய்து, கொப்பூ ழளவினதாகிய சலத்தில் இறங்கி, நதியிலேயாயின் அதற்கு எதிர்முகமாக நின்றும், குள முதலியவைகளிலாயிற் கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாகவேனும் நின்றும், இரண்டு காதுகளையும், இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு சுட்டுவிரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக்கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து ஸ்நானஞ் செய்ய வேண்டும்.  இப்படி மூடுவது சண்முகி முத்திரை எனப் பெயர் பெறும்.

251. இப்படி ஸ்நானஞ் செய்தவுடனே யாது செய்தல் வேண்டும்?

ஆசமனஞ் செய்துகொண்டு, கரையிலேறி, வஸ்திரங்களைப் பிழிந்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினாலே தலையிலுள்ள ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டிக், குடுமியை முடித்து, ஈரக் கெளபீனத்தைக் களைந்து, உலர்ந்த கெளபீனத்தைத் தரித்து, இரண்டு கைகளையுங் கழுவிச், சுத்தமாய்க் கிழியாதனவாய் வெள்ளியனவாய் உலர்ந்தனவாய் உள்ள இரண்டு வஸ்திரந் தரித்துக் கொண்டு, ஈர வஸ்திரங்களையுங் கெளபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடல் வேண்டும்.  ஒரு கொடியிலே தானே தோய்த்த வஸ்திரமுந் தோயாத வஸ்திரமும் போடுதலும், ஒருவர் வஸ்திரம் போட்ட கொடியிலே மற்றொருவர் வஸ்திரம் போடுதலும் ஆகாவாம்.  நக்கினனாயேனும், கெளபீன மாத்திரமுடையனாயேனும், ஒரு வஸ்திரந் தரித்துக் கொண்டேனும், யாதொரு கமருமுஞ் செய்யலாகாது.

(நக்கம் - அம்மணம்)

252. குளிர்ந்த சலத்திலே ஸ்நானஞ் செய்ய மாட்டாத பிணியாளர் யாது செய்தல் வேண்டும்?

ஸ்நானஞ் செய்தவர் சுத்திசெய்யப்பட்ட தானத்திலே சுத்தி செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்த வெந்நீரை ஒரு பாத்திரத்தில் விடவிட, அவர் எடுத்து ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினால் ஈரத்தைத் துவட்டி, உலர்ந்த வஸ்திரந் தரித்துப், பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம்.

253. வியாதியினாலே ஸ்நானஞ் செய்ய மாட்டாதவர் யாது செய்தல் வேண்டும்?

கழுத்தின்கீழ், அரையின்கீழ், கால் என்னும் இவைகளுள் ஒன்றை, இயன்றபடி சலத்தினாலே கழுவிக் கொண்டு, கழுவாமல் எஞ்சிய உடம்பை ஈர வஸ்திரத்தினால் ஈரம் படும்படி துடைத்து, அவ்வீரத்தைத் துவட்டித் தோய்த் துலர்ந்த வஸ்திரந் தரித்துப் பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம்.  இந்த ஸ்நானங் காபில ஸ்நானம் எனப் பெயர் பெறும்.

254. இராத்திரி ஸ்நானஞ் செய்யலாமா?

யாகம், சந்திரகிரகணம், சிவராத்திரி, மாசப் பிறப்பு, மகப்பேறு என்பவைகளின் மாத்திரம் இராத்திரி ஸ்நானஞ் செய்யலாம்.

255. நியமகாலத்திலன்றி, இன்னும் எவ்வெப்பொழுது ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்?

சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்.

(சர்த்தி = வாந்தி)

256. தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.

257. ஸ்நானஞ் சரீர சுத்திக்கு மாத்திரந்தான் காரணமா?

சரீர சுத்திக்கு மாத்திரமின்றிச் சரீராரோக்கியத்துக்கும், சித்தசோபனத்துக்கும், ஒருப்பாட்டுக்கும், இந்திரிய வடக்கத்துக்கும், யோக்கியத்துவத்துக்குங் காரணமாம்.  விடியற்கால ஸ்நானத்தினாலே பசி உண்டாகும்; நோய் அணுகாது.

சந்தியாவந்தனம்

258. சந்தியாவந்தனம் எத்தனை?

பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி, அர்த்தயாமசந்தி என நான்காம்.

259. இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன சந்தியா வந்தனங்கள் உரியன என்னும் நியமம் உண்டோ?

சமயதீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி யொன்றே உரியது; விசேஷ தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, சாயங்காலசந்தி என்னும் இரண்டு சந்திகள் உரியன; நிருவாண தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி என்னும் மூன்று சந்திகள் உரியன; ஆசாரியருக்கு நான்கு சந்திகளும் உரியன.  சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர்கள் மூன்று சந்திகளுஞ் செய்யலாம் என்று சில ஆகமங்களில் விதிக்கப் பட்டிருக்கின்றது.

260. பிராதக் காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் உத்தமம்; நக்ஷத்திரங்கள் மறைந்தபோது செய்தல் மத்திமம்; சூரியன் பாதி உதிக்கும்போது செய்தல் அதமம்.

261. மத்தியானசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

பதினைந்தாம் நாழிகையாகிய மத்தியானத்திலே செய்தல் உத்தமம்; மத்தியானத்துக்கு முன் ஒரு நாழிகையிலே செய்தல் மத்திமம்; மத்தியானத்துக்குப் பின் ஒரு நாழிகையிலே செய்தல் அதமம்.

262. சாயங்காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

சூரியன் பாதி அத்தமிக்கும்போது செய்தல் உத்தமம்; அத்தமயனமானபின் ஆகாசத்திலே நக்ஷத்திரங்கள் தோன்றுமுன் செய்தல் மத்திமம்; நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் அதமம்.

263. சந்தியாவந்தனம் முதலிய கிரியைகளுக்கு ஆகாத நீர்கள் எவை?

நுரை குமிழி உள்ள நீர், புழு உள்ள நீர், வடித்து எடாத நீர், இழிகுலத்தார் தீண்டிய நீர், கலங்கல் நீர், பாசி நீர், உவர்நீர், வெந்நீர், பழநீர், சொறிநீர் என்பவைகளாம்.

போசனம்

264. போசனபந்திக்கு யோக்கியர் யாவர்?

சமசாதியாராயும், சிவதீக்ஷை பெற்றவராயும், நியமாசார முடையவராயும் உள்ளவர்.

265. போசனஞ் செய்தற்குரிய தானம் யாது?

வெளிச்சம் உடையதாய்ப், பந்திக்கு உரியரல்லாதவர் புகப் பெறாததாய்க் கோமயத்தினாலே மெழுகப் பட்டதாய் உள்ள சாலை.

266. போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?

வாழையிலை, மாவிலை, புன்னையிலை, தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை, சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரியிலை, பலாசிலை, சுரையிலை, கமுகமடல் என்பவைகளாம்.  வாழையிலையைத் தண்டுரியாது அதனுடைய அடி வலப் பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும்.  கல்லை தைக்குமிடத்துக், கலப்பின்றி ஒரு மரத்தினிலை கொண்டே ஒரு கல்லை முழுதுந் தைத்தல் வேண்டும். (கல்லை = இலைக் கலம்)

267. போசன பாத்திரங்களை எப்படி இடம் பண்ணிப் போடல் வேண்டும்?

போசன பாத்திரங்களைச் சலத்தினாலே செவ்வையாகக் கழுவி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழவளவை சதுரச் சிரமாகப் புள்ளியின்றி மெழுகி அததின் மேலே போடல் வேண்டும்.

268. இலை போட்டபின் யாது செய்தல் வேண்டும்?

அதிலே நெய்யினாலே புரோக்ஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவைகளைப் படைத்தல் வேண்டும்.

269. போசனம் எப்படி பண்ணல் வேண்டும்?

இரண்டு கால்களையும் முடக்கி, இடமுழந்தாளின் மேலே இடக்கையை ஊன்றிக் கொண்டிருந்து, விதிப்படி அன்ன முதலியவற்றைச் சுத்தி செய்து, சிவபெருமானுக்கும் அக்கினிக்குங் குருவுக்கும் நிவேதனம் பண்ணி, அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறாகப் பிரித்துப் பருப்பு நெய்யோடு பிசைந்து, சிந்தாமற் புசித்தல் வேண்டும்; அதன்பின் சிறிது பாகத்தை முன்போலப் பிரித்துப், புளிக்கறியோடாயினும் ரசத்தோடாயினும் பிசைந்து புசித்தல் வேண்டும்.  கறிகளை இடையிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும்.  இலையினுங் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனுந் தண்ணீரேனும் பானம் பண்ணல் வேண்டும்.  உமிழத் தக்கதை, இலையின் முற்பக்கத்தை மிதத்தி, அதன்கீழ், உமிழ்தல் வேண்டும்.

270. போசனம் பண்ணும்பொழுது செய்யத்தகாத குற்றங்கள் எவை?

உண்பதற்கிடையிலே உப்பையும் நெய்யையும் படைத்துக் கொள்ளல், போசனத்துக்குப் உபயோகமாகாத வார்த்தை பேசுதல், சிரித்தல், நாய் பன்றி கோழி காகம் பருந்து கழுகு என்பவைகளையும், புலையர் ஈனர் அதீக்ஷதர் விரதபங்கமடைந்தவர் பூப்புடையவள் என்பவர்களையும் பார்த்தல் முதலியனவாம்.

271. புசிக்கும்போது அன்னத்திலே மயிர், ஈ, எறும்பு, கொசு முதலியன காணப்படின், யாது செய்தல் வேண்டும்?

அவைகளை சிறிதன்னத்தோடு புறத்தே நீக்கி விட்டுக், கை கழுவிக் கொண்டு, சலத்தினாலும், விபூதியினாலும் சுத்திப்பண்ணிப் புசித்தல் வேண்டும்.

272. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, வீட்டுக்குப் புறத்தே போய்க், கை கழுவி விட்டுச், சலம் வாயிற்கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, வாயையுங் கைகளையுங் கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, விபூதி தரித்தல் வேண்டும்.  அன்னமல்லாத பண்டங்கள் புசிக்கின், எட்டு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

273. உச்சிட்டதை எப்படி அகற்றல் வேண்டும்?

இலையை எடுத்து எறிந்து விட்டுக் கை கழுவிக் கொண்டு உச்சிட்டத் தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந் தெளித்து, இடையிலே கையையொடாமலும், முன்பு தீண்டிய விடத்தைப் பின்பு தீண்டாமலும், புள்ளியில்லாமலும் மெழுகிப், புறத்தே போய்க் கைகழுவிவிட்டுப் பின்னும் அந்தத் தானத்திலே சலந் தெளிந்து விடல் வேண்டும்.

274. போசனஞ் செய்தபின் வாக்குச் சுத்தியின் பொருட்டு யாது செய்தல் வேண்டும்?

இல்வாழ்வார் தாம்பூலம ஒரு தரம் மாத்திரம் புசிக்கலாம்.  துறவிகள் கிராம்பு, ஏலம், கடுக்காய், சுக்கு, வால்மிளகு என்பவைகளுள் இயன்ற தொன்றைப் புசித்தல் வேண்டும்.

275. இராத்திரியில் எத்தனை நாழிகையினுள்ளே புசித்தல் வேண்டும்?

எட்டு நாழிகையினுள்ளே புசித்தல் உத்தமம். பதினொரு நாழிகை யளவேல் மத்திமம்; பதினான்கு நாழிகை யளவேல் அதமம்; அதன் மேற் புசிக்கலாகாது.

276. போசன காலத்தில் விளக்கவியின் யாது செய்தல் வேண்டும?

போசனம் பண்ணாது, அவ்வன்னத்தை வலக்கையினாலே மூடி, விளக்கேற்றி வருமளவும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மானசமாகச் செபித்துக் கொண்டிருந்து, விளக்கேற்றியபின், பானையில் அன்னத்தை இடுவித்துக் கொள்ளாது, அவ்வன்னத்தையே புசித்துக் கொண்டு எழும்பல் வேண்டும்.

சயனம்

277. எப்படிச் சயனித்தல் வேண்டும்?

கிழக்கேயாயினும் மேற்கேயாயினுங் தெற்கேயாயினுந் தலை வைத்துச், சிவபெருமானைச் சிந்தித்துக் கொண்டு, வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும், வடக்கே தலை வைக்கலாகாது.  வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும்.  சந்தியா காலத்தில் நித்திரை செய்தவன் அசுத்தன்; அவன் ஒரு கருமத்துக்கும் யோக்கியனாகான்; அவன் தான் செய்த புண்ணியத்தை இழப்பன்; அவன் வீடு சுடுகாட்டுக்குச் சமம்.

278. இரவிலே காலம்பெறச் சயனித்து வைகறையில் விழித்தெழுந்து விடுதலினாற் பயன் என்ன?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகை உண்டென்னுங் காலம் பிராமீமுகூர்த்தம் எனப் பெயர் பெறும்; சிவத் தியானத்துக்கு மனந்தெளிவது அக்காலத்தேயாம்; அன்றியும், அக்காலத்தில் விழிக்கின் நோய்கள் அணுகாவாம்.  இராநித்திரைப் பங்கமும், வைகறை நித்திரையும், பகல் நித்திரையும் பற்பல வியாதிகளுக்கும் காரணம்.

    மந்திரக் கிரியைகளோடு எழுதப்பட்ட ஸ்நான விதி, சந்தியாவந்தன விதி, பூசா விதி, போசன விதி என்னும் நான்குங் குருமுகமாகப் பெற்றுக்கொள்க.

  

திருச்சிற்றம்பலம்.



 

11. சிவாலய கைங்கரியவியல்


279. சிவாலயத்தின் பொருட்டுச் செயற்பாலனவாகிய திருத்தொண்டுகள் யாவை?

   திருவலகிடுதல், திருமெழுக்குச் சாத்துதல், திரு நந்தனவனம் வைத்தல், பத்திரபுஷ்பமெடுத்தல், திருமாலைக் கட்டுதல், சுதந்த தூபமிடுதல், திருவிளக்கேற்றுதல், தோத்திரம் பாடல், ஆனந்தக் கூத்தாடல், பூசைத் திரவியங்கள் கொடுத்தல் என்பவைகளாம்.

திருவலகிடுதல்

280. திருவலகு எப்படி இடுதல் வேண்டும்?

சூரியன் உதிக்குமுன் ஸ்நானஞ் செய்து, சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு, திருக்கோயிலுனுள்ளே புகுந்து, மெல்லிய துடைப்பத்தினாலே கிருமிகள் சாவாமல் மேற்பட அலகிட்டுக் குப்பையை வாரித், தூரத்தே கொண்டுபோய்க் குழியிலே கொட்டிவிடல் வேண்டும்.

திருமெழுக்குச் சாத்துதல்

281. திருமெழுக்கு எப்படிச் சாத்தல் வேண்டும்?

ஈன்றண்ணியதும் நோயை யுடையதும் அல்லாத பசுவினது சாணியைப், பூமியில் விழுமுன், இலையில் ஏந்தியாயினும், ஏந்தல் கூடாதபோது, சுத்தநிலத்தில் விழுந்த சாணியை மேல் கீழ் தள்ளி நடுப்பட எடுத்தாயினும், வாவி நதி முதலியவற்றில் வடித்தெடுத்து வந்த சலத்துடனே கூட்டிச், செங்கற்படுத்த நிலத்தையுஞ் சுண்ணாம்பு படுத்த நிலத்தையும் மண் படுத்த நிலத்தையும் மெழுகல் வேண்டும். கருங்கற் படுத்த நிலத்தைச் சலத்தினாலே கழுவி விடல் வேண்டும்; கருங்கல்லிலே சாணி படலாகாது.

திருநந்தனவனம் வைத்தல்

282. திருநந்தனவனம் வைக்கற்பாலதாகிய தானம் யாது?

சண்டாளபூமிக்குஞ் சுடுகாட்டுக்கும் மலசல மோசன பூமிக்குஞ் சபீபத்தி னல்லாததாய், நான்கு பக்கத்துஞ் சுவரினாலேனும் வேலியினாலேனுஞ் சூழப்பட்டதாய்க், கீழே ஆழமாக வெட்டி எலும்பு முதலிய குற்றங்கள் அறப் பரிசோதிக்கப்பட்டதாய்ப், பசு நிரை கட்டப்பெற்றுக் கோசல கோமயத்தினாலே சுத்தி யடைந்ததாய் உள்ள நிலமேயாம்.

283. இப்படிப்பட்ட நிலத்திலே வைக்கற்பாலனவாகிய மரஞ்செடி கொடிகள் எவை?

மரங்கள்: வில்வம், பாதிரி, கோங்கு, பன்னீர், கொன்றை, புலிநகக்கொன்றை, பொன்னாவிரை, மந்தாரை, சண்பகம், குரா, குருந்து, மகிழ், புன்னை, சுரபுன்னை, வெட்சி, கடம்பு, ஆத்தி, செருந்தி, பவளமல்லிகை, வன்னி, பலாசு, மாவிலிங்கை, நுணா, விளா, முக்கிளுவை, நெல்லி, நாவல், இலந்தை, பலா, எலுமிச்சை, நாரத்தை, தமரத்தை, குளஞ்சி, மாதுளை, வாழை, செவ்விளநீர், சூரியகேளியிளநீர், சந்திரகேளியிளநீர் என்பவைகளாம். மரங்களில் உண்டாகும் பூ, கோட்டுப்பூ எனப்படும். 

செடிகள்: அலரி, நந்தியாவர்த்தம், குடமல்லிகை, வெள்ளெருக்கு, செம்பரத்தை, கொக்கிறகு, மந்தாரை, துளசி, நொச்சி, செங்கீரை, பட்டி, நாயுருவி, கருவூமத்தை, பொன்னூமத்தை, கத்தரி, தகரை, செவ்வந்தி, தும்பை, வெட்டிவேர், இலாமச்சை, தருப்பை, மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணுகாந்தி, மாசிப்பச்சை, திருநீற்றுப்பச்சை, பொற்றலைக்கையாந்தகரை, எள்ளு, பூளை, அறுகு என்பவைகளாம்.  செடிகளில் உண்டாகும் பூ, நிலப்பூ எனப்படும்.

கொடிகள்: மல்லிகை, முல்லை, இருவாட்சி, பிச்சி, வெண்காக்கொன்றை, கருங்காக்கொன்றை, கருமுகை, தாளி, வெற்றிலை என்பவைகளாம்.  கொடிகளில் உண்டாகும் பூ, கொடிப்பூ எனப்படும்.

284. நீர்ப்பூக்கள் எவை?

செந்தாமரை, வெண்டாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், செவ்வாம்பல், வெள்ளாம்பல் என்பவைகளாம்.

285. திருநந்தனவனத்தை எப்படிப் பாதுகாத்தல் வேண்டும்?

புலையர், புறச்சமயிகள், தூரஸ்திரீகள், முதலாயினோர் உள்ளே புகாமலும், யாவராயினும் எச்சில் மூக்குநீர் மலசல முதலியவைகளால் அசுசிப்படுத்தாமலும், அங்குள்ள பத்திர புஷ்பங்களைக் கடவுட் பூசை முதலியவற்றிற் கன்றிப் பிறவற்றிற்கு உபயோகப்படுத்தாமலும், மோவாமலும், அங்குள்ள மரஞ் செடி கொடிகளிலே சலந் தெறிக்கும்படி வஸ்திரந் தோயாமலும், அவைகளிலே வஸ்திரத்தைப் போடாமலும் பாதுகாத்தல் வேண்டும்.

பத்திர புஷ்பமெடுத்தல்

286. கடவுட் பூசைக்குப் பத்திர புஷ்பங்கள் எடுக்க யோக்கியர் யாவர்?

நான்கு வருணத் துட்பட்டவராய்ச், சிவதீக்ஷை பெற்றவராய், நியமாசாரமுடையவராய் உள்ளவர்.

287. பத்திர புஷ்பம் எடுக்க யோக்கியர் ஆகாதவர் யாவர்?

தாழ்ந்த சாதியார், அதீக்ஷிதர், ஆசெளச முடையவர், நித்திய கருமம் விடுத்தவர், ஸ்நானஞ் செய்யாதவர், தூர்த்தர் முதலானவர்.

288. கடவுட் பூசைக்கு ஆகாத பூக்கள் எவை?

எடுத்துவைத்தலர்ந்த பூவும், தானே விழுந்து கிடந்த பூவும், பழம் பூவும், உதிர்ந்த பூவும், அரும்பும், இரவில் எடுத்த பூவும், கைச் சீலை, எருக்கிலை, ஆமணக்கிலை என்பவற்றிற் கொண்டு வந்த பூவும், காற்றினடிப்பட்ட பூவும், புழுக்கடி, எச்சம், சிலந்தி நூல், மயிர் என்பவற்றோடு கூடிய பூவும், மோந்த பூவுமாம்.

திருக்கோயிலுள்ளும் அதன் சமீபத்தினும் உண்டாகிய பத்திர புஷ்பங்கள் ஆன்மார்த்த பூஜைக்கு ஆகாவாம்.

289. இன்ன இன்ன தேவருக்கு இன்ன இன்ன பத்திர புஷ்பம் ஆகா என்னும் நியமம் உண்டோ?

ஆம்.  விநாயகருக்குத் துளசியும், சிவபெருமானுக்குத் தாழம்பூவும், உமாதேவியாருக்கு அறுகும் நெல்லியும், வைரவருக்கு நந்தியாவர்த்தமும், சூரியனுக்கு வில்வமும், விஷ்ணுவுக்கு அக்ஷதையும், பிரம்மாவுக்குத் தும்பையும் ஆகாவாம்.

290. வில்வம் எடுக்கலாகாத காலங்கள் எவை?

திங்கட்கிழமை, சதுர்த்தி, அட்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, மாசப் பிறப்பு என்பவைகளாம்.  இவையல்லாத மற்றைக் காலங்களிலே வில்வம் எடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

291. துளசி எடுக்கலாகாத காலங்கள் எவை?

ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை, திருவோண நக்ஷத்திரம், சத்தமி, அட்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், மாசப்பிறப்பு, பிராதக்காலம், சாயங்காலம், இராத்திரி என்பவைகளாம்.  இவை யல்லாத மற்றைக் காலங்களிலே துளசி எடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.  இரண்டிலை கீழே உள்ள துளசிக்கதிர் எப்போதும் எடுக்கலாம்.

292. இன்ன இன்ன பத்திர புஷ்பம் இவ்வளவு இவ்வளவு காலத்துக்கு வைத்துச் சாத்தலாம் என்னும் நியமம் உண்டோ?

ஆம்.  வில்வம் ஆறு மாசத்திற்கும், வெண்டுளசி ஒரு வருஷத்திற்கும், தாமரைப்பூ ஏழு நாளிற்கும், அலரிப்பூ மூன்று நாளிற்கும் வைத்துச் சாத்தலாம்.

293. பத்திர புஷ்பம் எப்படி எடுத்தல் வேண்டும்?

சூரியோதயத்துக்கு முன்னே ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியா வந்தனம் முடித்து, இரண்டு கைகளையுங் கழுவித், திருப்பூங் கூடையை எடுத்து, ஒரு தண்டு நுனியிலே மாட்டி, உயரப் பிடித்துக் கொண்டாயினும், அரைக்கு மேலே கையிலே பிடித்துக் கொண்டாயினும் திருநந்தனவனத்திற் போய்ச் சிவபெருமானை மறவாத சிந்தையோடு பத்திர புஷ்பமெடுத்து, அவைகளைப் பத்திரத்தினாலே மூடிக் கொண்டு, திரும்பி வந்து, கால்களைக் கழுவிக்கொண்டு, உள்ளே புகுந்து, திருப்பூங் கூடையைத் தூக்கிவிடல் வேண்டும்.

294. பத்திர புஷ்பம் எடுக்கும்போது செய்யத் தகாத குற்றங்கள் எவை?

பேசுதல், சிரித்தல், சிவபெருமானுடைய திருவடிகளிலே யன்றிப் பிறவற்றிலே சிந்தை வைத்தல், கொம்புகள் கிளைகளை முறித்தல், கைகளை அரையின் கீழே தொங்கவிடுதல், கைகளினாலே உடம்பையேனும் வஸ்திரத்தையேனும் தீண்டுதல் என்பவைகளாம்.

திருமாலை கட்டுதல்

295. திருமாலை எப்படிக் கட்டல் வேண்டும்?

திருமாலைக் குறட்டைச் சலத்தினால் அலம்பி இடம் பண்ணித் திருப்பூங் கூடையிலுள்ள பத்திர புஷ்பங்களை எடுத்து அதில் வைத்துக்கொண்டு, மெளனியாய் இருந்து, சாவதானமாக ஆராய்ந்து, பழுதுள்ளவைகளை அகற்றிவிட்டு, இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டு முதலிய பல வகைப்பட்ட திருமாலைகளைக் கட்டல் வேண்டும்.

சுகந்த தூபமிடுதல்

296. சுகந்த தூபம் எப்படி இடுதல் வேண்டும்?

வாசனைத் திரவியங்கள் கலந்து இடிக்கப்பட்ட சாம்பிராணி கொண்டு சுகந்த தூபமிடல் வேண்டும்.

திருவிளக்கேற்றல்

297. திருவிளக்குக்கு என்ன நெய் கொள்ளத் தக்கது?

திருவிளக்குக் கபிலைநெய் உத்தமத்தின் உத்தமம்; மற்றைப் பசுநெய் உத்தமத்தின் மத்திமம்; ஆட்டு நெய், எருமை நெய் உத்தமத்தின் அதமம்; வெள்ளெள்ளினெய் மத்திமத்தின் உத்தமம்; மரக்கொட்டைகளினெய் அதமத்தின் அதமம்.

(கபிலை = கபில நிறமுடைய பசு; கபில நிறம் = சருமை சேர்ந்த பொன்னிறம்).

298. திருவிளக்குத் திரி என்ன நூல் கொண்டு எப்படிப் பண்ணல் வேண்டும்?

தாமரை நூல், வெள்ளெருக்கு நூல், பருத்தி நூல் என்பவைகளுள் இருபத்தோரிழையாலேனும் பதினாறிழையாலேனும், பதினான்கிழையாலேனும் ஏழிழை யாலேனுங் கர்ப்பூரப் பொடி கூட்டித் திரி பண்ணல் வேண்டும்.

299. மாவிளக்கு எப்படி இடுதல் வேண்டும்?

பகலிலே போசனஞ் செய்யாது, சனிப் பிரதோஷத்திலுஞ் சிவராத்திரியிலுஞ் செஞ்சம்பாவரிசி மாவினாலே அகல் பண்ணிக் கபிலநெய் மூன்று நாழியேனும் ஒன்றரை நாழியேனும் முக்கானாழியேனும் வார்த்துக் கைப் பெருவிரற் பருமையுடைய வெண்டாமரை நூற்றிரியிட்டுத் திருவிளக்கேற்றல் வேண்டும்.

தோத்திரம் பாடல்

300. எந்தத் தோத்திரங்களை எப்படிப் பாடல் வேண்டும்?

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் அருட்பாக்களை மனங் கசிந்துருகக், கண்ணீர் வார, உரோமஞ் சிலிர்ப்பப், பண்ணோடு பாடல் வேண்டும்.

ஆனந்தக் கூத்தாடல்

301. ஆனந்தக் கூத்து எப்படி ஆடல் வேண்டும்?

உலகத்தார் நகைக்கினும் அதனைப் பாராது, நெஞ்சம் நெக்குருகக் கண்ணீர் பொழிய, மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கைகளைக் கொட்டித் தோத்திரங்களைப் பாடிக் கால்களைச் சதிபெற வைத்து, ஆனந்தக் கூத்தாடல் வேண்டும்.

பூசைத் திரவியங்கள்

302. திருமஞ்சனத்திலே போடற்பாலனவாகிய திரவியங்கள் எவை?

பாதிரிப்பூ, தாமரைப்பூ முதலிய சுகந்த புஷ்பங்களும் செங்கழுநீர்க்கோஷ்டம், ஏலம், இலாமச்சம்வேர், வெட்டிவேர், இலவங்கப்பட்டை, சந்தனம், கர்ப்பூரம் என்னும் பரிமளத் திரவியங்களுமாம்.

303. பாத்தியத் திரவியங்கள் எவை?

வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்குமாம். (பாத்தியம் = பாதபூசை)

304. ஆசமநீயத் திரவியங்கள் எவை?

சாதிக்காய், கிராம்பு, ஏலம், பூலாங்கிழங்கு, சண்பகப்பூ மொட்டு, பச்சைக்கர்ப்பூரம் என்னும் ஆறுமாம்.

305. அருக்கியத் திரவியங்கள் எவை?

(அருக்கியம் - மந்திரநீர் இறைத்தல்)

சலம், பால், தருப்பைநுனி, அக்ஷதை, எள், யவம், (கோதுமை) சம்பாநெல், வெண்கடுகு என்னும் எட்டுமாம்.

306. அபிஷேகத் திரவியங்கள் எவை?

எண்ணெய்க்காப்பு, மாக்காப்பு, நெல்லிக்காப்பு, மஞ்சட்காப்பு, பஞ்சகவ்வியம், ரசபஞ்சாமிர்தம், பலபஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, தமரத்தம் பழச்சாறு, குளஞ்சிப் பழச்சாறு, மாதுளம் பழச்சாறு, இளநீர், சந்தனக்குழம்பு என்பவைகளாம்.  தாமிரப் பாத்திரத்தில் விட்ட பாலும் வெண்கல பாத்திரத்தில் விட்ட இளநீருங் கள்ளுக்குச் சமம். இளநீர் முகிழைத் திறந்து, தனித்தனி அபிஷேகம் பண்ணல் வேண்டும். நெய்யபிஷேகஞ் செய்தவுடன், இள வெந்நீரபிஷேகஞ் செய்தல் வேண்டும். இளநீரபிஷேகத்துப் பின் எண்பத்தொரு பதமந்திரம் உச்சரித்துச் சகச்சிரதாரை கொண்டு சுத்தோதகத்தால் அபிஷேகஞ் செய்தல் வேண்டும்.  சந்தனக் குழம்புக்குப்பின் விதிப்படி தாபிக்கப்பட்ட நவகலசத்தினாலும் விசேஷார்க்கியத்தினாலும் அபிஷேகஞ் செய்தல் வேண்டும்.

(சகச்சிரம் - ஆயிரம், சந்தோதகம் - நன்னீர்)

307. அபிஷேகத்தின் பொருட்டு எண்ணெய் எப்படி ஆட்டல் வேண்டும்?

எள்ளை, வண்டு முதலிய பழுதறப் பதினாறு தரம் பார்த்து ஆராய்ந்து, உவர் முதலிய தீய சலங்களை விடாது நல்ல சலத்தைப் புதிய பாண்டத்தில் விட்டு, எள்ளைக் கருந்தோல் போமளவுங் காலினால் மிதியாது கையினாற் பிசைந்து கழுவி, காகம், கோழி, நாய், பன்றி முதலியன வாயிடல் மிதித்தல் செய்யாவண்ணம் உலர்த்தி, கல்லினாலேனும் புளியமரத்தினாலேனுஞ் செய்த, நாய் முதலியன வாயிடாத கைச்செக்கினால் ஆட்டல் வேண்டும்.  சந்தனாதிதைலம் முதலிய சுகந்தத்தைலஞ் செய்து அபிஷேகம் பண்ணுவித்தல் உத்தமோத்தமம்.  தம் வியாதி நீக்கத்தின் பொருட்டுச் சந்தனாதி முதலிய செய்வித்தவர் முதற்கட் சிறிது பாகஞ் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் பண்ணுவிக்கக் கடவர்.

308. பஞ்சகவ்வியமென்பது என்னை?

விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்பவைகளினது தொகுதியாம்; இது பிரமகூர்ச்சம் எனவும் பெயர் பெறும்.  பால் ஐந்து பலமும், தயிர் மூன்று பலமும், நெய் இரண்டு பலமும், கோசலம் ஒரு பலமும், கோமயங் கைப்பெருவிரலிற் பாதியுங் கொள்க.

309. ரசபஞ்சாமிர்தமென்பது என்னை?

விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், தேன், சர்க்கரை என்பவைகளினது தொகுதியாம்.

310. பலபஞ்சாமிர்தமென்பது என்னை?

முற்கூறிய ரசபஞ்சாமிர்தத்தோடு கூட்டி அமைக்கப்பட்ட வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் என்பவைகளினது தொகுதியாம்.

311. கவ்வியத்துக்கு உரிய பசுக்கள் எவை?

வியாதிப் பசு, கிழப் பசு, கன்று செத்த பசு, கன்று போட்டுப் பத்து நாட் சூதகமுடைய பசு, கிடாரிக் கன்றாகிய பசு, சினைப் பசு, மலட்டுப் பசு, மலத்தைத் தின்னும் பசு, என்னும் எண்வகைப் பசுக்களல்லாத மற்றைப் பசுக்களாம். பால் கறக்குமிடத்துப் பாத்திரத்தையும் கைகளையுங் கன்றூட்டிய முலையையுஞ் சலத்தினாற் கழுவிக் கொண்டே கறத்தல் வேண்டும்.  கறந்தபின் பாலைப் பரிவட்டத்தினால் வடித்துக் கொள்ளல் வேண்டும்.

312. சந்தனக் குழம்போடு சேரற்பாலனவாகிய திரவியங்கள் எவை?

குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக்கர்ப்பூரம், புழுகு, சவ்வாது, கஸ்தூரி என்பவைகளாம்.

313. நைவேத்தியங்கள் எவை?

சுத்தான்னம், சித்திரான்ன வகைகள், நெய், காய்ச்சிய பால், தயிர், முப்பழம், தேங்காய்க்கீறு, சர்க்கரை, கறியமுதுகள், அபூப வகைகள், பானகம், பானீயம், வெற்றிலை, பாக்கு, முகவாசம் என்பவைகளாம்.

(அபூபம் = பணிகாரம்)

314. சித்திரான்ன வகைகள் எவை?

பருப்புப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகோதனம், புளியோதனம், ததியோதனம், கருகோதனம், எள்ளோதனம், உழுந்தோதனம், பாயசம் என்பவைகளாம்.

315. பணிகார வகைகள் எவை?

மோதகம், பிட்டு, அப்பம், வடை, தேன்குழல், அதிரசம், தோசை, இட்டலி என்பவைகளாம்.

316. பானீயம் என்பது என்னை?

ஏலம், சந்தனம், பச்சைக்கர்ப்பூரம், பாதிரிப்பூ, செங்கழுநீர்ப்பூ என்பவைகள் இடம்பெற்ற சலம்.

317. முகவாசம் என்பது என்னை?

ஏலம், இலவங்கம், பச்சைக்கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பவற்றின் பொடியைப் பனி நீரோடு கூட்டிச் செய்த குளிகை.

318. மேலே சொல்லப்பட்டவைகளன்றிச் சிவாலயப் பணிகள் இன்னும் உள்ளனவா?

உள்ளன.  அவை, திருவீதியில் உள்ள புல்லைச் செதுக்குதல், திருக்கோபுரத்திலுந் திருமதில்களிலும் உண்டாகும் ஆல், அரசு முதலியவற்றை வேரொடு களைதல், திருக்கோயிலையுந் திருக்குளத்தையுந் திருவீதியையும் எச்சில், மலசலம் முதலியவைகளினால் அசுசியடையாவண்ணம் பாதுகாத்தல், திருக்கோயிலினுள்ளே புகத்தகாத இழிந்த சாதியாரும், புறச் சமயிகளும், ஆசாரம் இல்லாதவரும், வாயிலே வெற்றிலை பாக்கு உடையவரும், சட்டையிட்டுக் கொண்டவரும், போர்த்துக் கொண்டவரும், தலையில் வேட்டி கட்டிக்கொண்டவரும் உட்புகா வண்ணந் தடுத்தல், திருவிழாக் காலத்திலே திருவீதியெங்குந் திருவலகிட்டுச் சலந் தெளித்தல், வாகனந் தாங்கல், சாமரம் வீசுதல், குடை கொடி ஆலவட்டம் பிடித்தல் முதலியவைகளாம்.

 

திருச்சிற்றம்பலம்.


12. சிவாலய தரிசனவியல்


319. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?

   ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியாவந்தனம் முதலியன முடித்துக் கொண்டு, தேங்காய், பழம் பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம் முதலியன வைக்கப்பட்ட பாத்திரத்தைத் தாமே எடுத்துக் கொண்டேனும், பிறரால் எடுப்பித்துக் கொண்டேனும், வாகனாதிகளின்றி நடந்துபோதல் வேண்டும்.

320. திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே யாது செய்தல் வேண்டும்?

கால்களைக் கழுவி, ஆசமனஞ் செய்து, தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துச், சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே போதல் வேண்டும்.

321. திருக்கோயிலுள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

பலிபீடத்தையுந் துசத்தம்பத்தையும் இடப தேவரையுங் கும்பிட்டுப், பலிபீடத்துக்கு இப்பால், வடக்கு நோக்கிய சந்நிதியாயினும் மேற்கு நோக்கிய சந்நிதியாயினும் இடப்பக்கத்திலும், கிழக்கு நோக்கிய சந்நிதியாயினும் தெற்கு நோக்கிய சந்நிதியாயினும் வலப்பக்கத்திலும் நின்று, அபிஷேக சமயம் நிவேதன சமயமல்லாத சமயத்திலே, ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பன்னிரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும்.  நமஸ்காரம் ஒரு தரம், இரு தரம் பண்ணல் குற்றம்.

322. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை யிரண்டு, செவி யிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டவயமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

323. இந்த நமஸ்காரம் எப்படிப் பண்ணல் வேண்டும்?

பூமியிலே சிரசை வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப், பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும், இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்ணிலே பொருந்தச் செய்தல் வேண்டும்.

324. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை யிரண்டு, முழந்தா ளிரண்டு என்னும் ஐந்தவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

325. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, இரண்டு கைகளையும் குவித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் ஏழு தரமாயினும் ஒன்பது தரமாயினும் பதினைந்து தரமாயினும் இருபத்தொரு தரமாயினும் பிரதக்ஷிணம் பண்ணி, மீட்டுஞ் சந்நிதானத்திலே நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

326. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?

முன்பு துவாரபாலகரை வணங்கிப், பின்பு கணநாயகராகிய திருநந்திதேவரை வணங்கித் துதித்துப், "பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்து, அடியேன் உள்ளே புகுந்து, சிவபெருமானைத் தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அநுமதி செய்தருளும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு, உள்ளே போய், முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப்பெருமான் சந்நிதியையும் உமாதேவியார் சந்நிதியையும் அடைந்து, ஆதிசைவரைக் கொண்டு அருச்சனை செய்வித்துப் பழம், பாக்கு, வெற்றிலை முதலியனவற்றை நிவேதிப்பித்துக் கர்ப்பூராராத்திரிகம் பணிமாறப் பண்ணித், தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி தக்ஷிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுஞ் சமய குரவர் நால்வரையுந் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

327. விக்கினேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?

முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.

328. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

பிரதக்ஷிணஞ் செய்து, சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும்பிட்டுத், தோத்திரஞ் செய்து, மூன்று முறை கைகொட்டிச், சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து, இடபதேவருடைய இரண்டு கொம்பினடுவே சிவலிங்கப் பெருமானைத் தரிசித்துப், பலி பீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து, எழுந்து, இருந்து, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூறு தரமும் அகோர மந்திரத்தை நூறு தரமுஞ் செபித்துக் கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

329. அம்மையார் திருக்கோயில் வேறாயிருக்கின் யாது செய்தல் வேண்டும்?

அம்மையார் திருக்கோயிலினுள்ளே போய், முன் சொல்லிய முறை பிறழாழற் பலிபீடத்துக்கு இப்பாலே நான்கு தரம் நமஸ்காரம் பண்ணி, எழுந்து, இரண்டு கைகளையுங் குவித்துக்கொண்டு, நான்கு தரம் முதலாக இரட்டுறு முறையிற் பிரதக்ஷிணஞ் செய்து, மீண்டுஞ் சந்நிதியை யடைந்து, நமஸ்காரம் பண்ணி, எழுந்து, துவாரபாலகிகளைக் கும்பிட்டு, அனுமதி பெற்று, உள்ளே புகுந்து, விக்கினேசுரரைத் தரிசித்துத், தேவியார் சந்நிதியை அடைந்து, அருச்சனை முதலியன செய்வித்துத், தரிசனஞ் செய்து, விபூதி முதலியன வாங்கித் தரித்துக்கொண்டு, மகேசுவரியையும் வாமை முதலிய சக்திகளையும், விக்கினேசுரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுந் தரிசித்துச் சண்டேசுவரி சந்நிதியை அடைந்து, கும்பிட்டு, மூன்று முறை கைகொட்டித், தேவி தரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து சந்நிதியை அடைந்து, நான்கு தரம் நமஸ்கரித்து, எழுந்து இருந்து, தேவியாருடைய மூலமந்திரத்தை இயன்ற மட்டுஞ் செபித்துக்கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

330. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திரகிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, கந்தசட்டி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

331. பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்?

இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே  திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.

332. பிரதோஷ காலத்திலே விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யிற் பயன் என்னை?

கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்கும்.

333. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், பாக்கு வெற்றிலையுண்டல், போசன பானம் பண்ணுதல், ஆசனந் திருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டிருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வஸ்திரந் தரித்துக் கொள்ளுதல், தோளிலே உத்தரீயம் இட்டுக் கொள்ளுதல், போர்த்துக் கொள்ளுதல் சட்டையிட்டுக் கொள்ளுதல், பாதரக்ஷையிட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம், பலிபீடம், இடபம், விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண்வார்த்தை பேசுதல், சிரித்தல், சண்டையிடுதல், விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல், ஒரு தரம் இரு தரம் நமஸ்கரித்தல், ஒரு தரம் இரு தரம் வலம் வருதல், ஓடி வலம் வருதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் இடையே நமஸ்கரித்தல், அகாலத்திலே தரிசிக்கப் போதல், திரை விட்ட பின் வணங்குதல், அபிஷேக காலத்திலும் நிவேதன காலத்திலும் வணங்குதல், முற்பக்கத்தும் பிற்பக்கத்தும் வணங்குதல், திருவிளக் கவியக் கண்டுந்தூண்டாதொழிதல், திருவிளக்கில்லாத பொழுது வணங்குதல், உற்சவங் கொண்டருளும் பொழுது அங்கேயின்றி உள்ளே போய் வணங்குதல் முதலியவைகளாம்.  இக்குற்றங்களுள் ஒன்றை யறியாது செய்தவர் அகோரமந்திரத்தில் ஆயிரம் உருச் செபிக்கின் அக்குற்றம் நீங்கும்.  இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

திருச்சிற்றம்பலம்.


13. குருசங்கம சேவையியல்


334. குரு என்றது யாரை?

    தீஷாகுரு, வித்தியாகுரு, போதககுரு முதலாயினோர் குரு.  ஆசாரியன், தேசிகன், பட்டாரகன் என்பன ஒரு பொருட் சொற்கள்.

335. சங்கமம் என்றது என்னை?

நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் முத்திறத்துச் சிவபத்தர்களை.

336. குருவையுஞ் சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும்?

மனிதர் எனக் கருதாது, சிவபெருமானெனவே கருதி, மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுஞ் சிரத்தையோடு வழிபடல் வேண்டும்.  பிரதிட்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீக்ஷை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்குஞ் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவருந் தப்பாது நரகத்தில் வீழ்வர்.

337. சிவபத்தர்கள் சிவபெருமான் எனக் கருதப்படுதற்குக் காரணம் என்ன?

சிவபெருமான் வேறற அதிட்டித்து நிற்கப்பெறுவன வாய்க் கண்டவுடனே சிவபெருமானை நினைப்பிப்பனவாய் உள்ள திருவேடங்களை யுடைமையும், நாடோறும் ஸ்ரீகண்டநியாசம், பிஞ்சப்பிரம ஷடங்கநியாசம், அஷ்டத்திரிம்சத்கலாநியாசங்கள் வாயிலாகச் செய்யுஞ் சிவோகம்பாவனையும், பிராசாதயோகஞ் செய்தலும், தம்மின் இரண்டற இயைந்த சிவத்தோடு கலந்து நிற்குந் தன்மையுமாம்.  சிவபத்தரைச் சிவமெனக் கண்டு வழிபடுதற்கு வேடம், பாவனை, செயல், தன்மை என்னும் இந்நான்கனுள் ஒன்றே யமையும்.

338. சிவனடியாரை வழிபடாது சிவலிங்கத்தை மாத்திரம் வழிபட லாகாதா?

ஒருவன் ஒரு பெண்ணினிடத்து அன்புடைமை அவளுடைய சுற்றத்தாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும்.  அது போல, ஒருவன் சிவபெருமானிடத்து அன்புடைமை அவருடைய அடியாரைக் கண்ட பொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும்.  ஆதலினாலே, சிவனடியாரிடத்து அன்பு செய்யாது அவமானஞ் செய்துவிட்டுச் சிவலிங்கப் பெருமானிடத்தே அன்புடையவர் போல் ஒழுகுதல், வயிறு வளர்ப்பின் பொருட்டும், இடம்பத்தின் பொருட்டும் நடித்துக் காட்டும் நாடகமாத்திரையேயன்றி வேறில்லை.

339. சிவபத்தர்களோடு இணங்குதலாற் பயன் என்னை?

காமப்பற்றுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அக்காமத்தை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அக்காமத்தைக் கெடுத்தலால் அவ்விணக்கத்தில் வெறுப்பு மிகுதியும் உண்டாகும்.  அது போலச் சிவபத்தி யுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அச்சிவபத்தியை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அச்சிவபத்தியைக் கெடுத்தலால் அவ்விணக்கத்த்ல் வெறுப்பு மிகுதியும் உண்டாகும்.

340. சமய தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?

ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதரையும், சமய தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.

341. விசேஷ தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?

ஆசாரியரையுந், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.

342. நிருவாண தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?

ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதருள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.

343. ஆசாரியர் யாரை வணங்குதற்கு உரியர்?

ஆசாரியர்களுள்ளே தம்மின் மூத்தோரை வணங்குதற்கு உரியர்.

344. வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும்?

அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்குதலுஞ் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும்.  அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர்.  சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம் முதலியவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும்.  எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர் பெரியபுராணத்தினாலே தெளியப்படும்.

345. குருவையும் சிவனடியாரையும் எப்படிப் போய்த் தரிசித்தல் வேண்டும்?

வெறுங்கையுடனே போகாது, தம்மால் இயன்ற பதார்த்தத்தைக் கொண்டுபோய், அவர் சந்நிதியில் வைத்து, அவரை நமஸ்கரித்து, எழுந்து, கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் "இரு" என்றபின் இருத்தல் வேண்டும்.

346.  குருவாயினுஞ் சிவனடியாராயினுந் தம் வீட்டுக்கு வரின், யாது செய்தல் வேண்டும்?

விரைந்து எழுந்து, குவித்த கையோடு எதிர்கொண்டு, இன்சொற்களைச் சொல்லி, அழைத்துக் கொண்டு வந்து ஆசனத்திருத்தி, அவர் திருமுன்னே இயன்றது யாதாயினும் வைத்து, அவர் திருவடிகளைப் பத்திர புஷபங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் "இரு" என்றபின் இருத்தல் வேண்டும்.  அவர் போம்பொழுது அவருக்குப்பின் பதினான்கடி போய் வழிவிடல் வேண்டும்.  இராக் காலத்திலும், பயமுள்ள இடத்திலும், அவருக்கு முன் போதல் வேண்டும்.

347. ஒருவர் தாம் பிறரை வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும்?

"இவ்வணக்கம்; இவருக்கன்று; இவரிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்" என்று புத்தி பண்ணல் வேண்டும்.  அப்படிச் செய்யாதவர் அவ்வணக்கத்தாலாகிய பயனை இழப்பர்.

348. ஒருவர் தம்மைப் பிறர் வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும்?

"இவ்வணக்கம் நமக்கன்று, நம்மிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்" என்று புத்தி பண்ணல் வேண்டும்; அப்படிச் செய்யாதவர் சிவத் திரவியத்தைக் கவர்ந்தவராவர்.

349. குருவுக்குஞ் சிவனடியாருக்குஞ் செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

கண்டவுடன் இருக்கைவிட்டெழாமை, அவர் எழும்பொழுது உடனெழாமை, அவர் திருமுன்னே உயர்ந்த ஆசனத்திருத்தல், காலை நீட்டிக்கொண்டிருத்தல், சயனித்துக் கொள்ளுதல், வெற்றிலை பாக்குப் புசித்தல், போர்த்துக் கொள்ளுதல், பாதுகையோடு செல்லல், சிரித்தல், வாகனமேறிச் செல்லல், அவராலே தரப்படுவதை ஒரு கையால் வாங்குதல், அவருக்குக் கொடுக்கப்படுவதை ஒரு கையாற் கொடுத்தல், அவருக்குப் புறங்காட்டல், அவர் பேசும்போது பராமுகஞ் செய்தல், அவர் கோபிக்கும்போது தாமுங் கோபித்தல், அவருடைய ஆசனம், சயனம், வஸ்திரம், குடை, பாதுகை முதலியவைகளைத் தாம் உபயோகித்தல், அவைகளைத் தங்காலினாலே தீண்டுதல், அவர் திருநாமத்தை மகிமைப் பொருள்படும் அடைமொழியின்றி வாளா சொல்லல், அவரை யாராயினும் நிந்திக்கும் பொழுது காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்று நீங்கிவிடாது கேட்டுக் கொண்டிருத்தல் முதலியவைகளாம்

350. குரு முன்னுஞ் சிவனடியார் முன்னும் எப்படி விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்?

வஸ்திரத்தை ஒதுக்கிச், சரீரத்தைச் சற்றே வளைத்து, வாய் புதைத்து நின்று, அவரை "சுவாமீ" என்பது முதலிய சொற்களினாலே உயர்த்தியும், தன்னை "அடியேன்" என்பது முதலிய சொற்களினாலே தாழ்த்தியும், மெல்ல விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்.

351. கடவுளையும் குருவையுஞ் சிவனடியாரையுந் தாய் தந்தை முதலாயினரையும் நமஸ்கரிக்கும்போது கால் நீட்டத் தக்க திக்குகள் யாவை?

மேற்குந் தெற்குமாம்.  கிழக்கினும் வடக்கினுங் கால் நீட்டி நமஸ்கரிக்க லாகாது.

352. குருவையுஞ் சிவனடியார் முதலாயினாரையும் நமஸ்கரிக்கலாகாத காலங்களும் உண்டா?

உண்டு, அவர் கிடக்கும் போதும், வழி நடக்கும் போதும், பத்திர புஷ்பம் எடுக்கும்போதும், வெற்றிலை பாக்கு உண்ணும்போதும், ஸ்நானம், சந்தியாவந்தனம், பூசை, ஓமம், சிரார்த்தம், போசனம் முதலியன பண்ணும் போதும், இராச சபையிலே போய் இருக்கும்போதும் அவரை நமஸ்கரிக்கலாகாது.

353. தீக்ஷாகுரு, வித்யாகுரு முதலாயினார் திருமுகம் விடுத்தருளின், அதை யாது செய்தல் வேண்டும்?

பீடத்தின் மீது எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, இரண்டு கைகளாலும் எடுத்து, இரண்டு கண்களிலும் ஒற்றிச், சிரசின்மேல் வைத்துப், பின்பு திருக்காப்பு நீக்கி வாசித்தல் வேண்டும்.

354. தான் வழிபட்டு வந்த ஆசாரியன் பெரும் பாவங்களைச் செய்வானாயின் அவனை யாது செய்தல் வேண்டும்?

தானே பூசித்து வந்த சிவலிங்கம் அக்கினியினாலே பழுதுபடின், அதனை இகழாது மனம்நொந்து கைவிட்டு வேறொரு சிவலிங்கத்தைக் கைக்கொள்வது போலத், தான் வழிபட்டு வந்த் ஆசாரியன் சிவநிந்தை, சிவத்திரவியாபகாரம் முதலிய பெருங் கொடும் பாதகங்கள் செய்து கெடுவானாயின், அவனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறோராசாரியனை அடைந்து வழிபடல் வேண்டும்.

355. குருவினிடத்தே சிவசாத்திரம் எப்படிப் படித்தல் வேண்டும்?

நாடோறும் ஸ்நானம் முதலிய நியதிகளை முடித்துக் கொண்டு, கோமயத்தினாலே சுத்தி செய்யப்பட்ட தானத்திலே பீடத்தை வைத்து, அதன் மீது பட்டுப் பரிவட்டத்தை விரித்து, அதன் மீது சிவசாத்திரத் திருமுறையை எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்துப் பின்பு ஆசாரியருடைய திருவடிகளையும் அருச்சித்து, நமஸ்கரித்து, அவர் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருக்க, அவருக்கு எதிர்முகமாக  இருந்து படித்தல் வேண்டும்.  படித்து முடிக்கும் பொழுதும் அப்படியே நமஸ்கரித்தல் வேண்டும்.  இப்படிச் செய்யாது படித்தவர், படித்ததனால் ஆகிய பயனை இழப்பர்; அம்மட்டோ! நரகத்திலும் விழுந்து வருந்துவர்.

356. சிவசாத்திரம் படிக்கலாகாத காலங்கள் எவை?

பிரதமை, அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரை விஷு, ஐப்பசி விஷு, சந்தியா காலம், ஆசெளச காலம், மகோற்சவ காலம் என்பவைகளாம்.

357. எடுத்துக்கொண்ட சிவசாத்திரம் படித்து முடித்தபின் யாது செய்தல் வேண்டும்?

சிவலிங்கப் பெருமானுக்கும், சிவசாத்திரத் திருமுறைக்கும் வித்தியாகுருவுக்கும் விசேஷ பூசை செய்து அவர் திருமுன் இயன்ற தக்ஷிணை முதலியன வைத்து நமஸ்கரித்து அவரையுந் தீக்ஷா குருவையும் மாகேசுரர்களையும் குருடர், முடவர் முதலானவர்களையும் பூசித்து அமுது செய்வித்தல் வேண்டும்.

358. சிவசாத்திரத்தைக் கைம்மாறு கருதிப் படிப்பிக்கலாமா?

அச்சம், நண்பு, பொருளாசை என்பவை காரணமாகச் சிவசாத்திரத்தை ஒருவருக்கும் படிப்பிக்கலாகாது.  நல்லொழுக்கமுங் குருலிங்கசங்கம பத்தியும் உடைய நன்மாணாக்கர்களுக்கு அவர்கள் உய்வது கருதிக் கருணையினாலே படிப்பித்தல் வேண்டும்.  அவர்கள் விரும்பித் தருந் தக்ஷிணையைத் தாஞ் செய்த உதவிக்கு கைம்மானெறக் கருதி ஆசையால் வாங்காது, அவர்கள் உய்யுந் திறங் கருதிக் கருணையால் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

359. மாணாக்கர்கள் தாங்கள் குருவுக்குக் கொடுக்குந் தக்ஷிணையை அவர் செய்த உதவிக்குக் கைம்மாறெனக் கருதலாமா?

தாங்கள் குருவுக்கு எத்துணைப் பொருள் கொடுப்பினும், தங்களை அவருக்கு அடிமையாக ஒப்பித்து விடுதல் ஒன்றையே யன்றி, அப்பொருளை கைம்மாறெனக் கருதிவிட லாகாது.

360. தீக்ஷா குரு, வித்தியா குரு முதலாயினார் சிவபதமடைந்து விடின், யாது செய்தல் வேண்டும்?

வருஷந்தோறுந் அவர் சிவபதமடைந்த மாச நக்ஷத்திரத்திலாயினும் திதியிலாயினும் அவரைக் குறித்துக் குருபூசை செய்துகொண்டு வரல் வேண்டும்.

361. இன்னும் எவ்வெவருக்குக் குருபூசை செய்வது ஆவசியகம்?

பல அற்புதங்களைச் செய்து தமிழ் வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளியுஞ் சைவ சமயத்தைத் தாபித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சமயக்குரவர் நால்வருக்கும்; அறுபத்து மூன்று நாயன்மாருடைய மெய்யன்பையும் அவ்வன்புக்கு எளிவந்தருளிய சிவபெருமானுடைய பேரருளையும் அறிவித்து அவரிடத்தே அன்புதிக்கச் செய்யும் பெரியபுராணத்தைத் திருவாய் மலர்ந்தருளிய சேக்கிழார் நாயனாருக்கும்; பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் இலக்கணங்களை அறிவிக்குஞ் சைவ சித்தாந்த நூலுணர்ச்சியை வளர்த்தருளிய மெய்கண்டதேவர் முதலிய சந்தான குரவர் நால்வருக்கும்; தமிழ் வழங்கும் நிலமெங்கும் நல்லறிவுச்சுடர் கொளுத்தியருளிய தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாருக்கும் இயன்றமட்டுங் குருபூசை செய்து கொண்டே வருவது ஆவசியகம்.

362. இந்நாயன்மார்களுடைய குருபூசைத் தினங்கள் எவை?

 1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்...............வைகாசி - மூலம்

 2. திருநாவுக்கரசு நாயனார்.......................................சித்திரை - சதயம்

 3. சுந்தரமூர்த்தி நாயனார்..........................................ஆடி     -  சுவாதி

 4. மாணிக்கவாசகர் சுவாமிகள்..............................ஆனி    -  மகம்

 5. சேக்கிழார் நாயனார்.................................................வைகாசி -  பூசம்

 6. மெய்கண்டதேவர்.....................................................ஐப்பசி   - சுவாதி

 7. அருணந்தி சிவாசாரியர்..................................... புரட்டாசி - பூரம்

 8. மறைஞானசம்பந்த சிவாசாரியர்.................ஆவணி  - உத்தரம்

 9. உமாபதி சிவாசாரியர்..........................................சித்திரை  - அத்தம்.

10. திருவள்ளுவ நாயனார்......................................மாசி      - உத்திரம்.

363. குருபூசைக்குத் தக்க பொருளில்லாதவர்கள் யாது செய்தல் வேண்டும்?

குருபூசை செய்யப்படுந் தானத்திலே தங்கள் தங்களால் இயன்ற பதார்த்தங்கள் கொண்டுபோய்க் கொடுத்துத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.  அதுவும் இயலாதவர்கள் கறி திருத்துதல் முதலிய திருத்தொண்டுகளேனுஞ் செய்தல் வேண்டும்.

364. குருபூஜை எப்படிச் செய்தல் வேண்டும்?

திருக்கோயிலிலே சிவலிங்கப் பெருமானுக்கும், அந்நக்ஷத்திரத்திலே சிவபதம் அடைந்த நாயனார் திருவுருவம் உள்ளதாயின் அதற்கும் விசேஷ பூசை செய்வித்துத் தரிசனஞ் செய்துகொண்டு, தம்மிடத்துக்கு அழைக்கப்பட்டும், அழைக்கப்படாதும் எழுந்தருளி வந்த சிவபத்தர்களை அந்நாயனராகப் பாவித்துப் பூசித்துத் திருவமுது செய்வித்துச் சேஷம் புசித்தல் வேண்டும்.  (சேஷம் - எஞ்சியது)

365. சேஷம் எத்தனை வகைப்படும்?

பாத்திரசேஷம், பரிகலசேஷம் என இரண்டு வகைப்படும். (பரிகலம் - குருமார் உண்கலம்)

 

திருச்சிற்றம்பலம்.


 

14. மாகேசுர பூசையியல்


366. மாகேசுர பூசையாவது யாது?

  ஆசாரியர், நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் நால்வகை மாகேசுரர்களையும் விதிப்படி பூசித்துத் திருவமுது செய்வித்தலாம் (மாகேசுரர் = மகேசுரனை வழிபடுவோர்)

367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா?

ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.

368. மாகேசுர பூசைக்குப் பாகஞ் செய்பவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்?

சம சாதியார்களாய்ச், சிவதீக்ஷை பெற்றவர்களாய், நித்தியகருமந் தவறாது முடிப்பவர்களாய், சுசியுடையர்களாய், மாகேசுர பூசைக்கு உபயோகப்படுமவைகளை மாகேசுர பூசை நிறைவேறுமுன் புசிக்க நினைத்தலுஞ் செய்யாதவர்களாய் இருத்தல் வேண்டும். இவ்வியல்பில்லாதவர்களாலே சமைக்கப்பட்டவை தேவப்பிரீதியாகா, இராக்ஷதப் பிரீதியாகும்.

369. மாகேசுர பூசைக்கு விலக்கப்பட்ட பதார்த்தங்கள் யாவை?

உள்ளி, வெள்ளுள்ளி, உருண்டைச் சுரைக்காய், கொம்மடிக்காய், செம்முருங்கைக்காய், தேற்றாங்காய், அத்திக்காய், வெண்கத்தரிக்காய், பசளை, வள்ளி, கொவ்வை என்பவைகளாம்.

370. மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும்?

மாகேசுரர்களைத் தூரத்தே கண்டவுடனே, சிரசின் மீது அஞ்சலி செய்து, விரைந்தெதிர் கொண்டு அழைத்து வந்து, அவர்களுடைய திருவடிகளைத் தீர்த்தத்தினால் விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, அவர்களைப் பந்தியாக இருத்தி, ஓதுவார்கள் தேவாரம் பண்ணுடன் ஓத, அன்னங்கறி முதலியவற்றைப் படைத்து, பத்திரபுஷ்பங்களால் அருச்சனை செய்து, தூப தீபங் கொடுத்து, அவர்களெதிரே பூக்களைத் தூவி, நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, ஆசிர்வாதம் முற்றிய பின் திருவமுது செய்வித்தல் வேண்டும்.  அவர்கள் திருவமுது செய்து கரசுத்தி செய்து கொண்டபின், அவர்களெதிரே இயன்ற தக்ஷிணை வைத்து நமஸ்காரஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, மீட்டும் நமஸ்காரஞ் செய்து, சேஷம் புசித்தல் வேண்டும்.

371. மாகேசுர பூசைப் பந்திக்கு யோக்கியரல்லாதவர் யாவர்?

சிவநிந்தகர், குருநித்தகர், சங்கமநிந்தகர், சிவசாத்திரநிந்தகர், சிவத்திரவியாபகாரிகள், அதீக்ஷிதர், நித்தியகருமம் விடுத்தவர் முதலாயினர்.

372. மாகேசுர பூசையிலே மாகேசுரரை யாராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும்?

மாகேசுர பூசை எந்தத் தேவரைக் குறித்துச் செய்யப் படுகின்றதோ, அந்தத் தேவராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும்.

373. பூசை செய்யப்படும்போது மாகேசுரர்கள் யாது செய்தல் வேண்டும்?

பூசிப்பவன் எத்தேவரைக் குறித்துப் பூசிக்கின்றானோ அத்தேவரைத் தாம் இடையறாது மெய்யன்போடு தியானித்துக் கொண்டிருந்து அப்பூசையை அவருக்கு ஒப்பித்தல் வேண்டும்.

374. பந்தி வஞ்சனை செய்து புசித்தவரும், படைத்தவரும் படைப்பித்தவரும் யாது பெறுவர்?

கண்டமாலையால் வருந்துவர்; ஊர்ப் பன்றிகளாய்ப் பிறந்து மலத்தைத் தின்பர்; நரகங்களில் விழுந்து நெடுங்காலம் வருந்துவர். ஆதலினால், வஞ்சனை ஒரு சிறிதும் இன்றி எல்லாருக்குஞ் சமமாகவே படைத்தல், படைப்பித்தல் வேண்டும். பந்தி வஞ்சனை செய்து படைக்கப்பட்டவைகள் பிசாசுகளுக்கும் இராக்ஷதர்களுக்கும் அசுரர்களுக்குமே பிரீதியாகும்; தேவப் பிரீதியாகா.

375. மாகேசுர பூசா காலத்திலே மாகேசுர ரல்லாதவரின், யாது செய்தல் வேண்டும்?

குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர் என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து, அவர்களுக்கும் அன்னங் கொடுத்தல் வேண்டும்.  வறியவருக்குக் கொடுத்தலே கொடை; செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதற் பொருட்டுக் கடன் கொடுத்தல் போலும்.

376. மாகேசுர பூசை ஆவசியமாக எவ்வெக் காலங்களிலே செய்தல் வேண்டும்?

தீக்ஷை பெற்றுக்கொண்ட பொழுதும், சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்ட பொழுதும், விரதம் அநுட்டிக்கும் பொழுதும், உபவாசஞ் செய்து பாரணம் பண்ணும் பொழுதும், சிவசாத்திர சிவபுராணங்கள் படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும், புண்ணிய ஸ்தல யாத்திரைக்குப் புறப்படும் பொழுதும் புண்ணியஸ்தலத்தை அடைந்த பொழுதும், யாத்திரை செய்து திரும்பி வீடு சேர்ந்த பொழுதும், திருக்கோயிலிலே பிரதிட்டை, சம்புரோக்ஷணம், மகோற்சவம் முதலியவை நடக்கும் பொழுதும், வியாதியினாலே பீடிக்கப்பட்டு மருந்து உட்கொள்ளத் தொடங்கும் பொழுதும், வியாதி நீங்கிய பொழுதும், மாகேசுர பூசை ஆவசியமாகச் செய்தல் வேண்டும்.  (பாரணம் - உபவாசத்துக்குப்பின் செய்யும் போசனம்)

377. அவ்விசேஷ தினங்களின் மாகேசுர பூசை செய்பவர்களும், மாகேசுர பூசையிலே அருச்சனையேற்று அமுது செய்யப்புகும் மாகேசுரர்களும் அத்தினத்திலே எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்?

மாகேசுர பூசைக்கு முன்னே யாதொன்றும் புசிக்கலாகாது.  அன்றிரவிலே பசித்ததாயின், அன்னம் புசியாது பால், பழம் முதலியவற்றுள் இயன்றது உட்கொண்டு சுத்தர்களாகிச் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நித்திரை செய்தல் வேண்டும்.  முதனாளி ராத்திரியும் அப்படியே செய்தல் வேண்டும்.

378. முன் செய்த பாவங்களினால் வந்த மகாரோகங்களினாலே பீடிக்கப்படுவோர் மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும்?

ஒரு மண்டலமாயினும், பாதி மண்டலமாயினும், விதிப்படி சிரத்தையோடு புண்ணிய ஸ்தலத்திலே புண்ணிய தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்து, சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷ பூசை செய்வித்து, மாகேசுர பூசை பண்ணிச் சேஷம் புசித்துக் கொண்டு வரல் வேண்டும்.  அதன் பின்னரே மருந்து உட்கொள்ளல் வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.


15.விரதவியல்


379. விரதமாவது யாது?

    மனம் பொறி வழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுங் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல்.

சிவ விரதம்

380.  சிவ விரதம் எத்தனை?

    சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேசர விரதம், சிவராத்திரி விரதம், கேதார விரதம், கலியாணசுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம் என எட்டாம்.  பிரதோஷ விரதமுஞ் சிவ விரதம்.

381. சோமவார விரதமாவது யாது?

    கார்த்திகை மாச முதற் சோமவாரத் தொடங்கிச் சோமவாரந்தோறுஞ் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் ஒரு பொழுது இரவிலே போசனஞ் செய்யக்கடவர்; அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர்.  இவ்விரதம் வாழ்நாளளவாயினும், பன்னிரண்டு வருஷ காலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும், அநுட்டித்தல் வேண்டும்.  பன்னிரண்டு மாசத்திலும் அநுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாசத்தின் மாத்திரமேனும் அநுட்டிக்கக் கடவர்.  (உபவாசம் - உணவின்றியிருத்தல்).

382.  திருவாதிரை விரதமாவது யாது?

    மார்கழி மாசத்துத் திருவாதிரை நக்ஷத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.  இவ்விரதஞ் சிதம்பரத்தில் இருந்து அநுட்டிப்பது உத்தமோத்தமம்.

383. உமாமகேசுர விரதமாவது யாது?

    கார்த்திகை மாசத்துப் பெளர்ணிமியிலே உமாமகேசுர மூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர்; இரவிலே பணிகாரம், பழம் உட்கொள்ளலாம்.

384. சிவராத்திரி விரதமாவது யாது?

    மாசிமாசத்துக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியிலே சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில், உபவாசஞ் செய்து, நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவபூசை செய்தல் வேண்டும்.  நன்கு யாம பூசையும் அவ்வக் காலத்திற் செய்வது உத்தமம்.  ஒரு காலத்திற் சேர்த்துச் செய்வது மத்திமம்.  பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி, நான்கு யாம பூசையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமாஸ் கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை.  பரார்த்தத்திலே மகாலிங்கம் முதலிய மூலமூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்துக்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர்.  பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம்.  சண்டேசுர பூசை நான்கு யாமமுஞ் செய்தல் வேண்டும்.  சிவ பூசையில்லாதவர், நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாக்ஷர செபமுஞ் சிவபுராண சிரவணமுஞ் செய்து, நான்கு யாமமுஞ் சிவாலய தரிசனம் பண்ணல் வேண்டும்.  இதில் உபவாசம் உத்தமம்; நீரேனும் பாலேனும் உண்பது மத்திமம்; பழம் உண்பது அதமம்; தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம்.  சிவராத்திரி தினத்திலே இராத்திரியிற் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் லிங்கோற்பவ காலம்.  நான்கு யாமமும் நித்திரை யொழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரை யொழித்தல் வேண்டும்.  இக்காலத்திலே சிவ தரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம்.  இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் ஆவசியகம் அநுட்டிக்கத் தக்கது.

385.  கேதார விரதமாவது யாது?

    புரட்டாதி மாசத்திலே சுக்கிலபக்ஷ அட்டமி முதற் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி யீறாகிய இருபத்தொரு நாளாயினும், கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதற் சதுர்த்தசி யீறாகிய பதினான்கு நாளாயினும், கிருஷ்ண்பக்ஷ அட்டமி முதற் சதுர்த்தசி யீறாகிய ஏழு நாளாயினும், கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்ப ஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும்.  உபவசிக்க இயலாதவர் கேதார நாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர்.

386. கலியாணசுந்தர விரதமாவது யாது?

    பங்குனி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே கலியாண சுந்தரமூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒருபொழுது இரவிலே பரமான்னமும் பழமும் உட்கொள்ளல் வேண்டும்.

387. சூல விரதமாவது யாது?

    தை யமாவாசையிலே இச்சா ஞானக் கிரியா சத்தி வடிவாகிய சூலாயுதத்தைத் தரித்த சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்; இராத்திரியில் ஒன்றும் உட்கொள்ளலாகாது.

388. இடப விரதமாவது யாது?

    வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷ அட்டமியிலே இடப வாகனாரூடராகிய சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

389. பிரதோஷ விரதமாவது யாது?

    சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுட்டித்தல் வேண்டும்.  பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும்.  பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது.  பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்.  அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம்.    (அவமிருந்து = அகாலமரணம்)

தேவி விரதம்

390. தேவி விரதம் எத்தனை?

    சுக்கிரவார விரதம், ஐப்பசி உத்திர விரதம், நவராத்திரி விரதம் என மூன்றாம்.

391. சுக்கிரவார விரதமாவது யாது?

    சித்திரை மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

392. ஐப்பசி உத்திர விரதமாவது யாது?

    ஐப்பசி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

393. நவராத்திரி விரதமாவது யாது?

    புரட்டாசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதல் நவமி யீறாகிய ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம், பழம் முதலியவை உட்கொண்டு, மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

விநாயக விரதம்

394. விநாயக விரதம் எத்தனை?

    சுக்கிரவார விரதம், விநாயக சதுர்த்தி விரதம், விநாயக சட்டி விரதம் என மூன்றாம்.

395. சுக்கிரவார விரதமாவது யாது?

    வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதிலே பழம் முதலியன இரவில் உட்கொள்ளல் வேண்டும்.

396. விநாயக சதுர்த்தி விரதமாவது யாது?

    ஆவணி மாசத்துச் சுக்கிலபக்ஷ சதுர்த்தியிலே விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்து, இரவிலே பழமேனும் பணிகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும்.  இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

397.  விநாயக சட்டி விரதமாவது யாது?

    கார்த்திகை மாசத்துக் கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதல் மார்கழி மாசத்துச் சுக்கிலபக்ஷ சட்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் இருபத்தோ ரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சட்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

சுப்பிரமணிய விரதம்

398. சுப்பிரமணிய விரதம் எத்தனை?

    சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம்.

399. சுக்கிரவார விரதமாவது யாது?

    ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர்.  அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர்.  இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும்.

400. கார்த்திகை விரதமாவது யாது?

    கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக் கடவர்.  இவ்விரதம் பன்னிரண்டு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும்.

401. கந்த சட்டி விரதமாவது யாது?

    ஐப்பசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதற் சட்டியீறாகிய ஆறு நாளுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஆறு நாளும் உபவாசஞ் செய்வது உத்தமம்.  அது கூடாதவர் முதலைந்து நாளும் ஒவ்வொரு பொழுது உண்டு, சட்டியில் உபவாசஞ் செய்யக் கடவர்.  இவ்விரதம் ஆறு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும்.  மாசந்தோறுஞ் சுக்கிலபக்ஷ சட்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.

வைரவ விரதம்

402. வைரவ விரதம் எத்தனை?

    மங்கலவார விரதம், சித்திரைப் பரணி விரதம், ஐப்பசிப் பரணி விரதம் என மூன்றாம்.

403. மங்கல வார விரதமாவது யாது?

    தை மாசத்து முதற் செவ்வாய்க்கிழமை தொடங்கிச் செவ்வாய்க்கிழமைதோறும் வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பலகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

404. சித்திரை பரணி விரதமாவது யாது?

    சித்திரை மாசத்துப் பரணி நஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

405. ஐப்பசிப் பரணி விரதமாவது யாது?

    ஐப்பசி மாசத்துப் பரணி நக்ஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

வீரபத்திர விரதம்

406. வீரபத்திர விரதம் எத்தனை?

    மங்கலவார விரதம் என ஒன்றேயாம்.

407. மங்கலவார விரதமாவது யாது?

    செவ்வாய்க்கிழமைதோறும் வீரபத்திரக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.  இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

408. விரதம் அநுட்டிப்பவர் அவ்விரத தினத்தில் எவ்வெவைகளை நீக்கி எவ்வெவைகளைச் செய்தல் வேண்டும்?

    காமங் கோபம் முதலிய குற்றங்களெல்லாவற்றையும் பற்றறக் களைதல் வேண்டும்; தவறாது வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும்; புண்ணிய தீர்த்தத்தை அடைந்து, விபூதி, வில்வத்தடி மண், தருப்பை, கோமயம், திலம் என்பவைகளைச் சிரசிலே வைத்துக் கையிலே பவித்திரஞ் சேர்த்துச், சங்கற்பஞ் சொல்லி, ஸ்தானஞ் செய்தல் வேண்டும்.  தியானம், செபம், பூசை, ஆலய தரிசனம், பிரதக்ஷிணம், புராண சிரவணம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும்; திருகோயிலிலே இயன்றமட்டும் நெய் விளக்கேற்றல் வேண்டும்; அபிஷேகத் திரவிய நைவேத்தியத் திரவியங்கள் கொடுத்தல் வேண்டும்; போசனம் பண்ணுமிடத்துச் சிவனடியர் ஒருவரோடாயினும் போசனம் பண்ணல் வேண்டும்; நித்திரை செய்யுமிடத்து, இரவிலே, கோமயத்தினாலே மெழுகப்பட்ட தரையிலே, தருப்பையின் மேலே, கடவுளைச் சிந்தித்துக் கொண்டு, அதிசுத்தராய் நித்திரை செய்து, வைகறையில் எழுந்துவிடல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு முதற்றினத்திலே ஒரு பொழுது அபாரணத்திலே போசனஞ் செய்தல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு மற்றை நாட் காலையிலே நித்திய கருமம் இரண்டும் முடித்துக் கொண்டு, மாகேசுர பூசை செய்து, ஆறு நாழிகையுள்ளே சுற்றத்தாரோடு பாரணம் பண்ணல் வேண்டும்.  பாரணம் பண்ணியபின் பகலிலே நித்திரை செய்யாது, சிவபுராணங்களைக் கேட்டுக் கொண்டிருத்தல் வேண்டும்; நித்திரை செய்தவர், சற்பிராமணர் நூற்றுவரைக் காரணமின்றிக் கொன்ற மகா பாதகத்தை அடைவர். (அபாரணம் - பிற்பகல்)

409. எவ்விதமாயினுஞ் சங்கற்பித்த காலவெல்லை வரையும் அநுட்டித்து முடித்த பின் யாது செய்தல் வேண்டும்?

    விதிப்படி உத்தியாபனஞ் செய்தல் வேண்டும்; தொடங்கிய விரதத்தை இடையே விடுவோரும், உத்தியாபனஞ் செய்யாதோறும் விரத பலத்தை அடையார். (உத்தியாபனம் = நிறைவு செய்தல்.)

திருச்சிற்றம்பலம்.


16. அன்பியல்


410. அன்பாவது யாது?

    ஒருவருக்குத் தம்மொடு தொடர்புடையவராய்த் தமக்கு இனியவராய் உள்ளவரிடத்தே நிகழும் உள்ள நெகிழ்ச்சியாம்.

411. உள்ளபடி ஆராயுமிடத்து நம்மோடு தொடர்புடையவராய் நமக்கு இனியவராய் உள்ளவர் யாவர்?

    அநாதியே மலத்தினாலே மறைக்கப்பட்டுள்ள அறிவுந் தொழிலும் உடையவர்களாய்த் தம்வயத்தரல்லாதவர்களாய் உள்ள பசுக்களாகிய நம்மோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று, நமக்கெல்லாம் நித்தியானந்தப் பெருஞ் செல்வத்தைத் தந்தருள விரும்பி, தந்தொழில்களெல்லாந் தம் பயன் சிறிதுங் குறியாது, நம் பயன் குறித்த தொழில்களாகவே கொண்டு, பெத்தநிலையிலே தாம் நம்முள்ளே அடக்கித் தாம் நமக்கு முன்னாகியும், இப்படியே என்றும் உபகரிக்கும் இயல்புடைய பெருங்கருணைக் கடலாகிய பசுபதி, சிவபெருமான் ஒருவரே.  ஆதலினால் அவரொருவரே நம்மோடு என்றுந் தொடர்புடையவராய், நமக்கு நம்மினும் இனியவராய் உள்ளவர்; அவருக்கே நாமெல்லாம் உடைமைப் பொருள்; அவருக்கே நாமெல்லாம் மீளா அடிமை.  ஆதலினால் அவரிடத்திற்றானே நாமெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்.

412. நாம் சிவபெருமானிடத்து எப்பொழுது அன்பு செய்தல் வேண்டும்?

   இம்மனித சரீரம் பெறுதற்கு அரியதாதலாலும் இது இக்கணம் இருக்கும், இக்கணம் நீங்கும் என்று அறிதற்கு அரிதாகிய நிலையாமையுடையதாதலாலும் நாம் இடையறாது எக்காலமும் அன்பு செய்தல் வேண்டும்.

413. சிவபெருமான் இம்மனித சரீரத்தை எதன் பொருட்டுத் தந்தருளினார்?

   தம்மை மனசினாலே சிந்திக்கவும், நாவினாலே துதிக்கவும், தம்மால் அதிட்டிக்கப்படுங் குருலிங்கசங்கமம் என்னும் மூவகைத் திருமேனியையுங் கண்களினாலே தரிசிக்கவும், கைகளினாலே பூசிக்கவுங் கும்பிடவும், தலையினாலே வணங்கவும், கால்களினாலே வலஞ்செய்யவும், தமது பெருமையையுஙந் தமது திருவடியார் பெருமையையுங் காதுகளினாலே கேட்கவுமே இம்மனித சரீரத்தைத் தந்தருளினார்.

414. சிவபெருமானிடத்து அன்பு எப்படி விளையும்?

   பசுக்களாகிய நம்முடைய இலக்கணங்களையும், நம்மைப் பந்தித்த பாசங்களின் இலக்கணங்களையும், பசுபதியாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும், எத்துணையும் பெரிய சிவபெருமான் எத்துணையுஞ் சிறிய நமக்கெல்லாம் இரங்கி, எளிவந்து, ஓயாது என்றும் உபகரிக்கும் பெருங்கருணையையும், இவ்வியல்பின் அநந்தகோடியில் ஒரு கூறாயினும் உடையவர் பிறரொருவரும் நமக்கில்லாமையையும் இடையறாது சிந்திக்கச் சிந்திக்க, நமக்கு அச்சிவபெருமானிடத்து அன்பு விளையும்.

415. சிவபெருமானிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்கள் யாவை?

   அவருடைய உண்மையை நினைக்குந்தோறும், கேட்குந்தோறுங்ம் காணுந்தோறுந் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்தவருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும் பிறவுமாம்.

416. இல்வாழ்க்கை முதலியவைகளிற் புகுந்து அவ்வவைகளுக்கு வேண்டுந் தொழில்கள் செய்வோருக்கு இடையறாத வழிபாடு எப்படிக் கூடும்? அவர் யாது செய்வார்?

   கழைக்கூத்தன் கூத்தாடும் பொழுதும் அவன் கருத்து உடற்காப்பிலே வைக்கப்பட்டிருத்தல் போல, நாம் லெளகிக கருமஞ் செய்யும் பொழுது நமது கருத்துச் சிவபெருமானிடத்தே வைக்கப் பட்டிருத்தல் வேண்டும்; இப்படிச் செய்யாதொழியின், மரண காலத்திலே சிவத்தியானஞ் சிந்திப்பது அரிதரிது.

417. சிவபெருமானை வழிபடுவோர் மரிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?

  சுற்றத்தாரிடத்தும், பொருளினிடத்துங் சற்றாயினும் பற்று வையாது, சுற்றத்தாரைத் தூரத்தே இருத்தி விட்டுத், தாம் விபூதி தரித்து, மனங் கசிந்துருகக், கண்ணீர் பொழிய, உரோமஞ் சிலிர்ப்பச் சிவபெருமானைத் தியானித்து, வேத சிவாகமங்களையேனுந் தேவார திருவாசகங்களையேனுஞ் சிவ பக்தர்கள் ஓதக் கேட்டல் வேண்டும்.

418. அவர் மரிக்கும் பொழுது அவருக்கு யாது செய்தல் வேண்டும்?

    அவருடைய புத்திரர் முதலானவர்களுள்ளே சிவதீக்ஷையுடையவர், மனம் ஒரு சிறிதுங் கலங்காது, அவர் நெற்றியிலே சிதம்பரம் முதலிய புண்ணிய ஸ்தலத்து விபூதி சாத்தி, அவருடம்பிலே வில்வத்தடி மண் பூசி, அவர் வாயிலே கங்காதீர்த்தம் விட்டு, அவர் தலையைத் தமது மடிமீது கிடத்தி, அவர் செவியிலே அருமருந்தாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உபதேசித்தல் வேண்டும்.

தேவாரம்

உற்றா ராருளரோ உயிர்கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்மைக்
குற்றார் ஆருளரோ.

                    -திருநாவுக்கரசர்-திருமுறை-4
                       -திருஅங்கமாலை.

   

திருச்சிற்றம்பலம்.

சைவவினாவிடை இரண்டாம் புத்தகம்
முற்றுப்பெற்றது.

மெய்கண்ட தேவன் திருவடி வாழ்க!